Jump to content

ஈழப்போர்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தளபதி சொர்ணத்தின் இறுதிக்கணங்கள்: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 58

balraj_ts_sor-1-696x456.jpg
 
 

பீஷ்மர்

மட்டக்களப்பிலிருந்து வன்னிக்கு வந்து சேர்வதற்குள் கிழக்கு படையணிக்கு போதும்போதுமென்றாகி விட்டது. கிழக்கை கைவிட்ட அழுத்தத்திற்கு அப்பால் வழியெல்லாம் இராணுவம் கொடுத்த தொல்லை, கொலரா பாதிப்பென போராளிகள் மரணத்தின் எல்லைவரை சென்றுவிட்டனர். பத்திற்கும் அதிகமானவர்கள் கொலராவினால் மரணமடைந்தார்கள். அவர்களை வழியில் புதைத்துவிட்டு அணிகள் நகர்ந்தன.

வன்னிக்கு வந்து சேர்ந்ததும் கிழக்கிலிருந்து வந்த அணிகளிற்கு விசேட மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

 
அந்த சமயத்தில் போராளிகள் மத்தியில் சொர்ணத்தின் நகர்வுகள் குறித்த நிறைய நகைச்சுவைகள் உலாவ ஆரம்பித்தன. மாவிலாற்றை பூட்டி யுத்தத்தை ஆரம்பித்து கைவசமிருந்த கிழக்கையும் கைவிட்டாயிற்று என்ற ரீதியில் அந்த நகைச்சுவைகள் இருந்தன.

இதன்பின்னர் மணலாறு கட்டளை தளபதியாக சொர்ணம் நியமிக்கப்பட்டார். வன்னிமீதான இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தபோது இராணுவம் புதிய உத்தியொன்றை கையாண்டது. இதுவரையான நடவடிக்கைகளில் பிரதான வீதியை மையமாக கொண்டு நடவடிக்கையை செய்த இராணுவம், இம்முறை முதலில் காடுகளை கைப்பற்றியது. காடுகளை கைப்பற்றினாலே புலிகளை தப்பிக்க முடியாமல் வளைக்கலாமென்பது இராணுவத்தின் திட்டம்.

major-pasilan.jpg மேஜர் பசீலன்

மன்னாரில் நடவடிக்கையை ஆரம்பித்த படையினர், புலிகளின் ஆளணியை சேதமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயத்தில், மணலாற்று நடவடிக்கையை ஆரம்பித்து விட்டனர். மணலாறு பெருங்காடு. புலிகளின் இதயம் ஒருகாலத்தில் அங்குதான் பேணப்பட்டது.

இந்தியப்படைகளுடனான மோதல் ஆரம்பிக்கவிருந்த சமயத்தில் பிரபாகரனை பாதுகாக்க மணலாற்று காட்டை புலிகள் தேர்வு செய்தனர். அப்போது முல்லைத்தீவு தளபதியாக இருந்த மேஜர் பசீலன் மணலாற்று காட்டுக்குள் முகாம்களை அமைத்தார். பெண்புலிகளிற்கு செஞ்சோலை என்ற முகாமும், ஆண்களிற்கு ஜீவன், உதயபீடம் என பல முகாம்களும் அங்கு அமைக்கப்பட்டன.

இந்தியப்படைகளின் வெளியேற்றத்தின் பின் அங்கு இன்னும் நிறைய முகாம்கள் அமைக்கப்பட்டன. காட்டுக்குள் ஒரு குடியிருப்பு தொகுதியை போல அவை ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட வலைப்பின்னலுடன் இருந்தன.

மணலாற்று காட்டுக்கு அப்பால் மண்கிண்டிமலை இராணுவ முகாமிருந்தது. அங்கிருந்து மணலாற்றின் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளிற்கு இராணுவத்தின் ஆழஊடுருவும் படையணி தாராளமாக வரத் தொடங்கியது. மணலாற்றின் காடு ஆழஊடுருவும் படையணியின் நகர்வுகளிற்கு வாய்ப்பாக அமைந்தது. மணலாற்றிற்குள் அடிக்கடி கிளைமோர் தாக்குதல்களை நடத்தி புலிகளிற்கு பேரிழப்பை ஏற்படுத்த தொடங்கினார்கள். மணலாறு காடு புலிகளின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. ஆனால் ஆழ ஊடுருவும் படையணியின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் இரண்டு பகுதியின் ஆதிக்கமும் நிறைந்த பகுதியென்றே அதை சொல்ல வேண்டியிருந்தது.

அந்த சமயத்தில் முழு வன்னியும் ஆழ ஊடுருவும் படையணியின் நெருக்கடியையும் உணர்ந்தது. மணலாறு மட்டும் தனித்து என்ன செய்ய முடியும்?

ஆழஊடுருவும் படையணி, அது ஏற்படுத்திய நெருக்கடிகளை அடுத்து வரும் வாரங்களில் விரிவாக பார்க்கலாம்.

Colonel-Sornam-300x225.jpg

சொர்ணத்தாலும் மணலாற்றை பாதுகாக்க முடியாமல் போனது. மணலாற்றை விரைவிலேயே இராணுவம் முழுமையாக கைப்பற்றிக் கொண்டது.

சொர்ணத்தின் சறுக்கிய இரண்டு தாக்குதல்கள் பற்றி சொல்வதாக குறிப்பிட்டோம். சம்பூரை பற்றி ஏற்கனவே குறிப்பிட்டோம். அடுத்தது மாங்குளம்.

இறுதி யுத்த சமயத்தில், மாங்குளத்தை கைப்பற்ற இராணுணுவத்தின் 57வது படையணி கடுமையான முயற்சிகள் செய்து கொண்டிருந்தது. ஏ9 வீதி மற்றும் மல்லாவி வீதி, இரண்டுக்கும் இடையிலான காட்டுப்பகுதியென பலமுனை நகர்வை மேற்கொண்டது. அப்போது கிளிநொச்சியிலிருந்து ஏ9 வீதியூடான விநியோகத்திலும் புலிகள் சிக்கலை எதிர்கொண்டபடியிருந்தனர். மாங்குளத்திற்கு பின்பக்கமாக ஏ9 வீதியையும் இராணுவ அணிகள் அச்சுறுத்திக் கொண்டிருந்தன. மாங்குளத்திலிருந்து ஒட்டுசுட்டான் செல்லும் வீதிதான் புலிகளிடம் ஓரளவு பாதுகாப்பாக இருந்தது. அதை தவிர்ந்தால், சில சிறிய வீதிகள்.

மாங்குளம் கேந்திர முக்கியத்துவம் மிக்க பகுதியென்பதால் அந்த பகுதி கட்டளை தளபதியாக சொர்ணம் நியமிக்கப்பட்டார். நீண்டகாலத்தின் பின்னர் உக்கிர மோதல் களமொன்றில் சொர்ணம் தளபதியாக நியமிக்கப்பட்டார். அப்போது தளபதிகளை களமுனைக்கு கொண்டு செல்ல பவள் கவச வாகனங்களைத்தான் புலிகள் பயன்படுத்தினார்கள். ஆழஊடுருவும் படையணியின் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இந்த ஏற்பாடு.

சொர்ணம் பதவியேற்றதும் அந்த பகுதியில் நிறைய அதிரடி மாற்றங்களை செய்தார். வரையறுக்கப்பட்ட அணிகளே இருந்ததால் அவசியமில்லாத பகுதிகள் என கருதிய இடங்களிலிருந்து அணிகளை எடுத்து, சில இடங்களில் நிலைகளை பலப்படுத்தினார். அது பலனளிக்கவில்லை. மாங்குளம் நகரத்திற்குள் ஒரு விடிகாலை இராணுவம் நுழைந்து விட்டது.

இராணுவத்தின் இரகசிய நகர்வால் மாங்குளத்தில் நிலைகொண்டிருந்த புலிகளால் சுதாகரிக்க முடியவில்லை. கணிசமான பொருட்களை கைவிட்டு பின்வாங்க வேண்டியதாகிவிட்டது. அப்படி கைவிடப்பட்டவற்றில் ஒன்றுதான், சொர்ணத்தின் பயணத்திற்கு வழங்கப்பட்டிருந்த பவள் கவசவாகனம். வாகனத்தையும் கொண்டுவர முடியாத நெருக்கடி நிலை புலிகளிற்கு.

வாகனத்தில் போய், நடந்து திரும்பி வந்தார் என போராளிகள் மட்டத்தில் சொர்ணம் குறித்த ஒரு நகைச்சுவை உலாவ ஆரம்பித்தது. எவ்வளவு நெருக்கடியென்றாலும் நகைச்சுவைதானே போராளிகளை உயிர்ப்போடு வைத்திருந்தது. இப்படியான நகைச்சுவைகள் தமது தளபதிகள் குறித்த எதிர்மறை உணர்வுடன் பரவுபவை அல்ல. ஒரு சுவாரஸ்யமான  “கலாய்ப்பு“ என்று எடுத்துக் கொள்ளலாம்.

யாழ்ப்பாண தாக்குதலின் பின்னர் சொர்ணம் இரண்டு தாக்குதலில்தான் கலந்து கொண்டார் என முன்னர் குறிப்பிட்டிருந்தோம். அவை இரண்டையும் மேலே குறிப்பிட்டு விட்டோம். ஆனால் இன்னொரு தாக்குதலும் உள்ளது. இதிலும் சொர்ணத்தின் முக்கிய பாத்திரம் உள்ளது. இந்த தாக்குதலை பற்றி இந்த பகுதியில் இன்னும் சற்று தாமதமாகத்தான் பேச வேண்டும். ஏனெனில், இதுதான் விடுதலைப்புலிகள் முழுமையாக ஒருங்கிணைத்து செய்த பெரிய தாக்குதல்களில் இறுதியானது.

1996 இன் பின்னர் களமுனையில் சொர்ணம் ஜொலிக்கவில்லை. மாறாக தீபன் பெருந்தளபதியாக வளர்ந்தார். அதைவிட லோரன்ஸ், குணம், ஆதவன், வேலவன், குமரன், கீர்த்தி, நாகேஸ், நகுலன் என இளநிலைத் தளபதிகள் பலர் வளர்ச்சியடைந்தனர். இதைவிட, பால்ராஜ் இருந்தார். யுத்தம் ஆரம்பித்த சமயத்திலேயே இவர் மரணமானார். இறுதிக்காலத்தில் பால்ராஜ் மற்றும் பிரபாகரன் இடையேயான உறவு சுமுகமாக இருக்கவில்லை. இருந்திருந்தால் பால்ராஜ் களமுனையில் பெரும் தளபதியாக இருந்திருப்பார். அவரது உடல்நிலையும் ஒத்துக்கொள்ளவில்லை.

இவர்கள் எல்லாம் இருந்தபோதும் சொர்ணத்தை முக்கிய களங்களிற்கு பிரபாகரன் அழைத்தார். சொர்ணம் மீது வைத்திருந்த நம்பிக்கை அவ்வளவு. பிரபாகரன் குடும்பத்தில் சொர்ணம் வைத்திருந்த விசுவாசமும் அப்படி. அதை நிரூபிப்பதை போலவே அவரது மரணமும் இருந்தது.

316007_108377422611887_100003188896868_4

 

ஏப்ரல் மாதத்தில் தேவிபுரத்தின் மீது புலிகள் நடத்திய வலிந்து தாக்குதலில் சொர்ணம் கால் தொடையில் காயமடைந்தார். அவரது தொடை எலும்பு உடைந்து நடக்க முடியாத நிலைமைக்கு வந்தார். போதிய மருத்துவ வசதிகள் கிடைக்காத நிலையிலும் முள்ளிவாய்க்காலில் பராமரிக்கப்பட்டு வந்தார்.

மே மாதம் 14ம் திகதி. அவரது முகாமில் எறிகணையொன்று வீழ்ந்தது. அதில் மீண்டும் சிறிய காயமடைந்தார். விடுதலைப்புலிகள் அமைப்பின் முடிவு அந்த திகதிகளில் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பேராச்சரியங்கள் நடந்தாலும் புலிகளை யாரும் காப்பாற்ற முடியாதென்பது எல்லோருக்கும் தெரிந்து விட்டது.

நடமாட கூடியவனாக இருந்தால் இறுதிவரை சண்டையிட்டு பிரபாகரனிற்கு முன்னதாக மரணமடைபவராக சொர்ணம் இருந்தார். அது முடியவில்லை. “அண்ணைக்கு ஒன்று நடக்கும்வரை உயிரோட இருந்து பார்த்துக் கொள்ள விரும்பவில்லை“ இதுதான் தன்னுடனிருந்த போராளிகளிற்கு சொர்ணம் சொன்ன இறுதி வசனம்.

மே 14ம் திகதியன்று சயனைட் குப்பியை அருந்தி சொர்ணம் மரணமானார். அவரது உடலை அந்த முகாமிலேயே போராளிகள் புதைத்தார்கள்.

(தொடரும்)

 

 

http://www.pagetamil.com/37235/

Link to comment
Share on other sites

  • Replies 315
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

‘நவம் இல்லாவிட்டால் நான் இப்போது இருந்திருக்க மாட்டேன்’: நெகிழ்ந்த பிரபாகரன்!- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 59

February 16, 2019
389975_286240058080594_100000838051682_7 நவம்
 

பீஷ்மர்

கடந்த பாகங்களில் தளபதி சொர்ணம் குறித்த தகவல்களை பார்த்தோம். அப்பொழுதே குறிப்பிட்டிருந்தோம், சொர்ணத்தை தொடர்ந்து விடுதலைப்புலிகளின் பெருந்தளபதிகளில் ஒருவரான பால்ராஜ் தொடர்பான தகவல்களை தரப்போவதாக. ஆனால் அதற்கு முன்னர் ஒரு இடையீட்டு நிகழ்வை குறிப்பிட்டாக வேண்டும். இந்த தொடரில் அதை பேச பொருத்தமான சமயம் இதுவாகத்தான் இருக்கும்.

மணலாற்று காட்டை பற்றி கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். ஒரு வரியில் கடந்து செல்லும் காடு அல்ல அது. விடுதலைப்புலிகளின் வரலாற்றில் தவிர்க்கப்பட முடியாத ஒரு காடு அது. இந்த வாரம் காடு, அதில் செல்வாக்கு செலுத்திய தளபதிகள், காட்டின் எழுச்சியும் வீழ்ச்சியும் பற்றி பேசலாம்.

மணலாறு காடு எனப்படுவது முல்லைத்தீவின் செம்மலைக்கு அப்பால் நாயாற்று பாலத்தின் முடிவிலிருந்து ஆரம்பிக்கிறது. கடற்ரையோரமாக கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் கிராமங்கள் மண்கிண்டிமலை, தண்ணிமுறிப்பு காடு என்பவற்றை எல்லையாக கொண்டது. வடக்கில் உள்ள இயற்கையான பெருங்காடுகளில் முதன்மையானது மணலாறு.

1985 களிலேயே மணலாற்று காட்டில் விடுதலைப்புலிகள் தலைமறைவு வாழ்க்கையை ஆரம்பித்து விட்டனர். அப்போது முல்லைத்தீவு தளபதியாக இருந்தவர் பசீலன். அவரது அணியில் பால்ராஜ், நவம், வெள்ளை முதலான சுறுசுறுப்பான போராளிகள் இருந்தனர். பால்ராஜ், நவம் இருவரும் கொக்குத்தொடுவாய் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காடு பற்றிய பரிச்சயம் அதிகமாக இருந்தது. இதில் நவம்தான் பிரதானமானவர். திசையறி கருவி இல்லாமல் காட்டின் ஒவ்வொரு துண்டு நிலத்தையும் நினைவில் வைத்திருந்தார்.

அப்போது இலங்கை இராணுவத்தின் முகாம் ஒன்று முல்லைத்தீவில் இருந்தது. அவர்களிடமிருந்து தப்பிக்க மணலாற்று காட்டுக்குள் சில தற்காலிக கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்தனர். அதுபோல தண்ணிமுறிப்பு காட்டிலும் தங்கியிருந்தனர்.

இந்திய-இலங்கை உடன்படிக்கையின் பின் இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்தது. இந்திய இராணுவம் வந்ததுமே, புலிகள் செய்தது- மணலாற்று காட்டுக்குள் மறைவிடங்களை உருவாக்கியதுதான். இந்திய இராணுவம் எதிர்பார்க்காத இடமாக இருக்க வேண்டுமென சிந்தித்ததில் முல்லைத்தீவை பிரபாகரன் தேர்வு செய்தார். முல்லைத்தீவில் மணலாற்று காட்டை பசீலன் தேர்வு செய்தார்.

28166326_1837802776272586_37502879364324 மணலாற்று காட்டில் பிரபாகரன்

உடனடியாக காட்டுக்குள் சீமெந்தாலான முகாம்கள் அமைக்கப்பட்டன. இப்படி இரண்டு முகாம்கள் காட்டின் மையத்தில் உருவாக்கப்பட்டன. அதில் முதன்மையான முகாமில் சீமெந்தாலான பதுங்குகுழியும் அமைக்கப்பட்டது.

இந்தியா- புலிகள் மோதல் ஆரம்பித்தபோது பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் இருந்தார். பிரபாகரனின் இருப்பிடத்தை குறிவைத்து 1987 இல் சீக்கியபடைகள் கொக்குவிலில் ஹெலிகொப்ரரில் ஒரு தரையிறக்கம் செய்தன. பிரபாகரனை உயிருடன் அல்லது பிணமாக பிடிப்பதே அவர்களின் நோக்கம். ஆனால் அவர்கள் தரையிறங்கியபோது பிரபாகரன் வேறு இடத்திற்கு மாறிவிட்டார். தரையிறங்கிய அணியையும் புலிகள் அழித்தார்கள்.

இதன்பின் பிரபாகரன் வன்னிக்கு சென்று மணலாற்று காட்டுக்கு சென்றுவிட்டார். பிரபாகரன் எங்கே இருக்கிறார் என்ற குழப்பம் இந்திய இராணுவத்துக்கு. யாழ்ப்பாணத்திலா, கிழக்கிலா, வன்னியிலா என தலையை பிய்த்து கொண்டிருந்தனர். பிரபாகரனின் இருப்பிடத்தை அறிய ஒரு சூழ்ச்சிகரமான திட்டம் போட்டனர்.

புலிகளுடன் ஒரு இரகசிய பேச்சை ஆரம்பித்தனர். இந்தியாவின் சூழ்ச்சியை புலிகள் அறியவில்லை. பேச தொடங்கினார்கள். இந்தியா ஒரு சமரச திட்ட வரைபை கொடுத்தது. அதை தலைவருடன் ஆலோசித்துதான் பதிலளிக்கலாமென புலிகளின் பிரதிநிதிகள் சொல்லிவிட்டனர். இந்திய இராணுவமும் “ஆஹா… தாராளமாக ஆராய்ந்து வாருங்கள்“ என சொன்னார்கள்.

Lt-Col-Johnny-660x330-300x150.jpg ஜொனி

அந்த திட்டத்துடன் புலிகளின் தளபதி லெப்.கேணல் ஜொனி புறப்பட்டார். (இவர் வடமராட்சியின் 1ம் கட்டை பகுதியை சேர்ந்தவர். நல்ல தொழில்நுட்ப அறிவுள்ளவர். வெடிபொருள் தயாரிப்பிலும் வல்லவர். பின்னாளில் புலிகள் தயாரித்த அதிசக்தி வாய்ந்த மிதிவெடிக்கு ஜொனி என இவரது பெயரையே இட்டனர்)

ஜொனி கிளிநொச்சிக்கு வந்து, பரந்தன் வீதியால் முல்லைத்தீவை நோக்கி திரும்பினார். ஜொனியின் பயணத்தை இந்திய உளவாளிகள் அவரே அறியாமல் பின்தொடர்ந்தனர். ஜொனி விசுவமடுவை நெருங்க, பிரபாகரன் வன்னிக்காட்டுக்குள்தான் இருக்கிறார் என்பதை இந்திய இராணுவம் புரிந்து கொண்டது. இனி ஜொனி தேவையில்லை. விசுவமடுவில் ஜொனியை இந்திய இராணுவம் சுட்டுக்கொன்றது.

மணலாற்று காட்டுக்குள் புலிகளை அழிக்க ஒப்ரேசன் செக்மேற் 1,2,3 என இந்தியா பெருமெடுப்பில் படைநடவடிக்கை செய்தது. இலங்கையில் இந்தியப்படைகளை வழிநடத்தின லெப்.ஜெனரல் கல்கட் நேரடியாக இந்த நடவடிக்கைகளை வழிநடத்தினார். ஒருமுறை அவருக்கே புலிகள் மரணபயம் காட்டினர். நித்திகைகுளத்தில் கல்கட் ஹெலிகொப்ரர் மூலம் வந்திறங்கியபோது, புலிகள் பதுங்கித் தாக்குதல் மூலம் ஹெலியை அழிக்க முயன்றனர். ஆர்.பி.ஜி தாக்குதலில் ஹெலி மயிரிழையில் தப்பியது. கல்கட் பதுங்குகுழிக்குள் பாய்ந்து விட்டார். இந்த ஆர்.பி.ஜி தாக்குதலிற்கு சென்றவர்களில் இருவர் முக்கியமானவர்கள். ஒருவர் சொர்ணம். அவர்தான் ஆர்.பி.ஜியை அடித்தார். மற்றவர் தேவன். கடற்புலிகளில் இருந்தவர். கிட்டு பாவித்த ரிவோல்வரை இறுதிவரை வைத்திருந்தவர்.

இந்திய படைகளில் கூர்கா ரெஜிமென்ற் விசேட பயிற்சிபெற்ற கொமாண்டோக்கள். மணலாற்று காட்டுக்குள் அவர்கள்தான் இறக்கப்பட்டனர். கூர்க்காகள் கத்தியை எடுத்தால் இரத்தம் காணாமல் வைக்க மாட்டார்கள் எனப்படுவதுண்டு. மணலாற்றில் கூர்க்காக்கள் கத்தியை போட்டுவிட்டு தப்பியோடினார்கள்.

x1080-rU1-300x168.jpg நவம்

உணவு, மருந்து, வெடிபொருள் தடையை சமாளித்து புலிகள் போரிட்டனர். அப்போது புலிகளின் களஞ்சியம் மர உச்சிகள்தான். சிறிய சிறிய பொதிகளாக்கி, மரஉச்சியில் கட்டி  தொங்கவிட்டுவிடுவார்கள். பின்னர் உணவுத்தேவைக்கு அவற்றை எடுப்பார்கள். சில சமயங்களில் மரத்தினடியில் இராணுவம் இருக்கும். இரவில் கயிறு கட்டி இராணுவத்திற்கு தெரியாமல் உணவை இறக்குவார்கள்.

சமைக்க முடியாது. புகை எழுந்தால் புலிகளின் இருப்பிடத்தை வானத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் இந்திய ஹெலிகொப்ரர் கண்டுபிடித்துவிடும். இப்படி பெரும் சவாலின் மத்தியிலேயே காட்டுக்குள் புலிகள் போரிட்டனர்.

உணவு, தண்ணீர் பிரச்சனைகளை சமாளித்து புலிகள் தாக்கு பிடித்ததற்கு முக்கிய காரணம்- காட்டை அறிந்த சில போராளிகள் இருந்தது. அந்த சில போராளிகளில் முதன்மையானவர் லெப்.கேணல் நவம். நெடுங்கேணி பாடசாலையில் இருந்த இந்திய இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியதில் காயமடைந்து பின்னர் மரணமானவர். ஏற்கனவே வெடிவிபத்தொன்றில் ஒரு கையை மணிக்கட்டுடன் இழந்தவர். ஒற்றைக்கையுடன்தான் மணலாற்று காட்டுக்குள் நின்று இந்தியர்களிற்கு தண்ணி காட்டினார். நவம், மலையக பின்னணியை உடையவர்.

25659612_1529390140514330_73200828407946 மணலாற்று காட்டுக்குள் வைகோ

இந்திய இராணுவத்தின் முற்றுகைக்குள்ளால் அவர்களே அறியாமல் சென்று உணவு, தண்ணீர் எடுத்து வருவார். மணலாற்று காட்டில் பிரபாகரனுடன் நிலை கொண்டிருந்த அணிகளிற்கு நவம்தான் கட்டளையதிகாரி. பால்ராஜூம் ஒரு அணியை வழிநடத்தினார். அது காட்டோரமாக இராணுவத்துடன் மோதிக்கொண்டிருந்தது.

யுத்தத்தில் அங்கங்களை இழந்த புலிகளிற்கு ஒரு கல்விக்கூடம் அமைத்து அதற்கு லெப்.கேணல் நவம் அறிவுக்கூடம் என பிரபாகரன் பெயர் சூட்டினார்.

மணலாற்று காட்டில் இந்தியர்களின் முற்றுகையை உடைத்ததில் நவத்தின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை பிரபாகரனே சொன்னார். 2000 ஆம் ஆண்டு, நவம் அறிவுக்கூட ஆண்டு நிறைவு விழாவில் விருந்தினராக கலந்து கொண்டார் பிரபாகரன். மேடையில் பிரபாகரன் உரையாற்ற ஆரம்பிப்பதற்கு முன்னர், பின்பக்கமாக திரும்பி நவத்தின் உருவப்படத்தை நன்றாக பார்த்தார். பின், ஒரு வரியில் நவத்தின் முக்கியத்துவத்தை சொன்னார். “நவம் மட்டும் இல்லாவிட்டால் நான் இப்போது இந்த மேடையில் நின்றிருக்க மாட்டேன்“.

(தொடரும்)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 60

February 19, 2019
28166326_1837802776272586_37502879364324
 

பீஷ்மர்

மணலாற்று காட்டை பற்றி கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். இந்த பாகத்தில் மாணலாற்று காட்டை கலக்கிய தளபதிகளை பற்றிய சில தகவல்களை தருகிறோம்.

இந்தியப்படைகள் வெளியேறிய சமயத்தில் துரதிஷ்டவசமாக நவம் மரணமாகி விட்டார். இல்லாவிட்டால் மணலாறு சிறப்பு தளபதியாக அவர்தான் நியமிக்கப்பட்டிருப்பார். நவம் மரணமான பின்னர், அவரது பெயரில் கல்விக்கூடம் ஒன்றை ஆரம்பித்து யுத்தத்தில் காயமடைந்த, அங்கங்களை இழந்த போராளிகளை கல்விகற்க வைத்தார் பிரபாகரன்.

இந்தியப்படைகள் வெளியேறிய பின்னர் 1990 இல் முதன்முறையாக முல்லை- மணலாறு மாவட்ட தளபதி என்ற பொறுப்பை விடுதலைப்புலிகள் உருவாக்கினார்கள். அதற்கு முன்னர் வரை முல்லைத்தீவு மாவட்ட தளபதிகளே இருந்தனர். முல்லை- மணலாறு மாவட்ட தளபதியாக அன்பு நியமிக்கப்பட்டார்.

விக்டர், பசீலனின் கீழ் வளர்ந்த போராளிகளில் அன்புவும் முக்கியமானவர். இவர் மன்னாரை சேர்ந்தவர். 1990களில் முல்லை- மணலாறு மாவட்ட தளபதியாக பொறுப்பேற்றார்.

1990 மார்ச் மாதத்தில் இந்தியப்படைகள் இலங்கையை விட்டு முழுமையாக வெளியேறின. இதன்பின் பிரமேதாசாவுடன் புலிகள் பேச்சில் ஈடுபட்டனர். இது தோல்வியில் முடிய, 1ம் கட்ட ஈழமப்போர் வெடித்தது. இரண்டாம் கட்ட ஈழப்போரின் தொடக்கத்தில் மண்கிண்டிமலை இராணுவ முகாமிலிருந்து புறப்பட்ட இராணுவம் மணலாற்று காட்டில் ஆதிக்கம் செலுத்தியது. அன்பு அதனை முறியடித்தார். இராணுவம் மீது தொடராக தாக்குதல்கள் நடத்தி மணலாற்று காட்டை முழுமையாக புலிகளின் பிடியில் வைத்திருந்தார்.

 

அப்போது முல்லைத்தீவு மக்களை கொண்டு துணைப்படை என்ற துணை இராணுவப்பிரிவையும் உருவாக்கினார். மணலாற்று காட்டுக்குள் வழிகாட்டிகளாக செயற்பட வேட்டைக்காரர்களின் உதவி தேவைப்பட்டது. அப்படி இணைக்கப்பட்டவர்கள் சிலரது பங்களிப்பு அதிகரித்து, துணைப்படை உருவாக காரணமானது. மணலாறு காட்டுக்குள் வழிகாட்டியாக செயற்பட்ட துணைப்படை வீரர்களுள் மயில்குஞ்சு என்பவர் முக்கியமானவர். போராளிகளால் அதிகமாக நேசிக்கப்பட்டவர்.

மயில்குஞ்சு கொக்குத்தொடுவாயை சேர்ந்தவர். காட்டின் ஒவ்வொரு அடியையும் தெரிந்தவர். புலிகளின் காட்டு நடவடிக்கைகளிற்கு பெரும் துணையாக இருந்தவர். பின்னாளில், மணலாற்று அணிக்கு மட்டுமல்ல, விசேட வேவு அணிக்கும் பாதை வழிகாட்டியாக இருந்தார். 1998 இல் மணலாற்று காட்டில் தவறுதலான துப்பாக்கி சூட்டில் மரணமானார். அவருக்கு புலிகள் மேஜர் தர நிலை வழங்கினார்கள்.

Sri-Lankan-Army-north-300x202.jpg

 

இப்படியானவர்களை இணைத்து துணைப்படையை உருவாக்கி, இருந்த சொற்ப போராளிகளுடன் மணலாற்று காட்டை அன்பு பாதுகாத்தார். மணலாற்று காட்டுக்குள் புலிகளின் முகாம்களை விஸ்தரித்து, அங்கு பெரும் படையணிகள் தங்கியிருக்கும் வசதியை அவர்தான் ஏற்படுத்தினார். அப்போது மணலாற்று காட்டை கட்டுப்பாட்டில் கொண்டுவர படையினர் மேற்கொண்ட மின்னல் படைநடவடிக்கையையும் புலிகள் முறியடித்தனர். முறியடிப்பு தளபதியாக சொர்ணம் செயற்பட்டாலும், அன்புவும் முக்கிய பங்காற்றினார்.

 

அப்போதுதான் மணலாற்று காட்டிற்குள் இரண்டு துயிலுமில்லங்கள் கட்டப்பட்டன. ஜீவன், கமல் முகாம்களில் இந்தியப்படைகளுடனான மோதலில் மரணமான போராளிகளின் உடல்கள் புதைக்கப்பட்டிருந்தன. அந்த பகுதி முறையான துயிலுமில்லங்களாக அமைக்கப்பட்டன.

1993 இல் மண்கிண்டிமலை படைமுகாம் மீது இதயபூமி 1 என பெயரிட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 100 இற்கும் அதிக படையினர் கொல்லப்பட்டு, பெருமளவு ஆயுதங்களையும் புலிகள் கைப்பற்றினர். பால்ராஜ், அன்பு ஆகியோர் இந்த தாக்குதலை வழிநடத்தினர்.

1993 இல் பூநகரி இராணுவ முகாம் மீதான புலிகளின் தவளை இராணுவ நடவடிக்கையில் அன்பு மரணமானார். அன்புவின் இழப்பு புலிகளிற்கு மட்டுமல்ல, மணலாற்றின் அவர்களின் ஆளுகைக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது.

அன்பை தொடர்ந்து வெள்ளை/றொபேர்ட் மணலாறு தளபதியாக நியமிக்கப்பட்டார். இவர் நெடுங்கேணியை சேர்ந்தவர். இம்ரான் பாண்டியன் படையணியில் இருந்தவர் வெள்ளை. சொர்ணத்திற்கு அடுத்த நிலையில் கடாபியும், வெள்ளையும் இருந்தனர். வெள்ளை நிர்வாக பொறுப்பாளராக இருந்தார். சிறப்பான நிர்வாகத்தின் மூலம் பெயரெடுத்தவர். அன்புவின் வெற்றிடத்திற்கு, தனது கண்முண் இருந்த திறமைசாலியை பிரபாகரன் நியமித்தார்.

1995 இல் மண்கிண்டிமலை இராணுவ முகாம் மீது புலிகள் ஒரு பெரும் தாக்குதலை நடத்தினார்கள். இது பெருந்தோல்வியில் முடிந்தது. பெண்புலிகளின் சடலங்களை இராணுவம் கைப்பற்றி பெண்ணுறுப்புகளில் மரக்கட்டைகளை செருகி அட்டூழியம் செய்து, சடலங்களை புலிகள் ஒப்படைத்தனர். சுமார் 150 பேர்வரையில் புலிகள் இழந்தனர். இது பிரபாகரனை கோபங்கொள்ள வைத்தது.

இராணுவத்திற்கு பதிலடி கொடுப்பதற்கு முன்னர், தமது தரப்பில் தோல்விக்கு காரணமானவர்களிற்கு வழக்கம் போல “காற்று இறக்கி“ தண்டித்தார்.

images-2.jpg தளபதி அன்பு

இந்த தோல்விக்கு முக்கிய காரணம்- துணைப்படையினர். துணைப்படையினர் மூலமே திட்டம் கசிந்தது. இராணுவத்துடன் தொடர்பில் இருந்ததாக சில துணைப்படையினர் கைதாகினர். பின்னர் அவர்களிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. துணைப்படையே கலைக்கப்பட்டது. வெள்ளையும்  சிறப்பு தளபதி பொறுப்பிலிருந்து அகற்றப்பட்டார்.

பின்னர் 1995 இல் யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்ற இராணுவம் மேற்கொண்ட இடிமுழக்கம் இராணுவ நடவடிக்கையில் புத்தூர் பகுதியில் 150 பேர் கொண்ட அணியுடன் இருந்த வெள்ளை, மீண்டும் இராணுவ முற்றுகைக்குள் சிக்கினார். அந்த முற்றுகையை உடைத்துக் கொண்டு அவர்களால் வெளிவர முடியவில்லை. அந்த சமரில் சுமார் 160 போராளிகள் மரணமானார்கள். வெள்ளையும் மரணமானார்.

 

வெள்ளை சிறந்த நிர்வாகி. சிறந்த போர்த்தளபதியா இல்லையா என்பதை அறுதியிட முடியாதபடி இரண்டு களங்களிலும் வேறுவேறு காரணங்களால் தோல்வியடைய வேண்டியதாகி விட்டது. அவருக்கு லெப்.கேணல் தரநிலை வழங்கப்படுமென எதிர்பார்க்கப்பட்டபோதும், மேஜர் தரநிலையே அறிவிக்கப்பட்டது. இது மணலாறு மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. மக்கள் பகிரங்கமாக தமது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக சொல்லப்பட்டபோதும், அதை உறுதி செய்ய முடியவில்லை.

அதேவேளை, வெள்ளையின் காலத்தில் மணலாற்று காட்டின் ஆதிக்கத்தை இராணுவம் அதிகரித்திருந்தது. இராணுவத்தின் வேவு அணிகள் புலிகளின் முகாம்களிற்கு வந்து வேவு பார்த்தனர். தனிமையிலிருந்த சில போராளிகள் கழுத்து வெட்டப்பட்டனர். புலிகளின் மூத்த புலனாய்வுத்துறை தளபதி லெப்.கேணல் மல்லி நெடுங்கேணியில் வைத்து இந்த காலப்பகுதியிலேயே கழுத்து வெட்டி கொல்லப்பட்டார்.

அன்புவை போன்ற ஒருவர் தளபதியானால்தான் மணலாற்று காட்டை மீண்டும் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாமென்ற நிலைமை.

வெள்ளையின் பின்னர் மணலாறு தளபதியாக யார் நியமிக்கப்படுவதென்ற கேள்வி எழுந்தபோது, பிரபாகரன் எடுத்தது அதிரடி முடிவு. 20 வயதான இளைஞனிடம் அந்த பெரும் பொறுப்பு வழங்கப்பட்டது. அந்த இளைஞனும் இம்ரான் பாண்டியன் படையணியில் இருந்தவர்தான். பிரபாகரனின் மெய்பாதுகாவலர் அணியின் தலைவராக, 20 வயதிற்குள் முன்னேறியவர். அவரது பெயர் குமரன். இறுதி யுத்தத்தில் படையினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்களில் பட்டியலில் இருக்கிறார்.

தளபதி பால்ராஜின் நெருங்கிய உறவினர். கொக்குத்தொடுவாயை சேர்ந்தவர்.

Untitled20130520025904-300x177.png தளபதிகள் வெள்ளை- பால்ராஜ் (1990)

குமரன் தளபதி பொறுப்பை ஏற்றபோது மணலாறு அணியிலிருந்த மூத்தவர்கள் பலர் அவரை பொருட்படுத்தியிருக்கவில்லை. ஆனால் சில மாதங்களிலேயே, மணலாற்று காட்டை முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். அன்புவை போன்ற திறமைசாலியென எல்லோரது பாராட்டையும் பெற்றார். குமரன் சிறந்த போர்த்தளபதியாக வளர்ந்தார். இளவயதிலேயே தன் முன்னாலிருந்த எல்லா சவால்களையும் வெற்றிகொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் துரதிஸ்டவசமாக ஓயாதஅலைகள் 1 நடவடிக்கையில்- அவர் தளபதியாகி இரண்டு வருடங்களில்- வயிற்றில் ஏற்பட்ட பெருங்காயத்தால் அடுத்த பத்து வருடங்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டியதாகி விட்டது. களத்திற்கு அவரால் திரும்ப முடியவில்லை. பெருமளவு காலத்தை வைத்தியசாலையிலும், பின்னர் வைத்திய சிகிச்சைகளுடனும் கழிக்க வேண்டியதானது. பின்னர் இறுதி யுத்த சமயத்தில்தான் களத்திற்கு திரும்பினார்.

அதன் பின்னர் அன்ரன் மணலாறு தளபதியானார். அதன் பின்னர், இம்ரான் பாண்டியன் படையணியிலிருந்து ராஜேஷ்  மணலாறு (மணலாறு தனியாகப்பட்டது) தளபதியாக நியமிக்கப்பட்டார். இருவரும் அந்தப் பொறுப்பிலிருந்து ஏன் விலக்கப்பட்டார்கள் என்பதை சில வாரங்களின் முன் குறிப்பிட்டிருந்தோம்.

கிழக்கை புலிகள் கைவிட்ட பின்னர் மணலாறு போர்முனை கட்டளை தளபதியாக சொர்ணம் பதவியேற்றார். 2008 இறுதியில் மணலாற்று காட்டை இராணுவம் முழுமையாக கைப்பற்றியது.

(தொடரும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனிற்கும், பால்ராஜூக்குமிடையில் கெமிஸ்ற்ரி சரியில்லையா?- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 61

February 23, 2019
22_05_08_03_68550_445.jpg பால்ராஜின் உடலிற்கு இறுதி அஞ்சலி செலுத்தும் பிரபாகரன்
 

பீஷ்மர்

இந்தவாரத்தில் இருந்து விடுதலைப்புலிகளின் தலைசிறந்த தளபதி பால்ராஜின் அத்தியாயத்தை பார்க்க போகிறோம். விடுதலைப்புலிகள் அமைப்பில் நீண்டகாலம் கோலோச்சிய தளபதிகள் பால்ராஜூம் சொர்ணமுமே. இதில் சொர்ணத்தின் முக்கியத்துவத்திற்கு பிரபாகரனுடன் இருந்த தனிப்பட்ட நெருக்கம் காரணமாக அமைந்தது. பால்ராஜின் கதை வித்தியாசமானது.

விடுதலைப்புலிகள் அமைப்பில் மிக முக்கிய தளபதியாக இருந்தவர்களில் பிரபாகரனுடன் நெருக்கம் குறைந்த ஒரே தளபதி பால்ராஜ்தான். இது நிறையப்பேருக்கு அதிர்ச்சியாக இருக்கும். இது மட்டுமல்ல, பால்ராஜின் வரலாற்றில் இன்னும் நிறைய அதிர்ச்சிகள் உங்களிற்கு காத்திருக்கிறது. நம்பச் சிரமப்படுவீர்கள் என்பது தெரியும். ஆனால் வரலாற்றை யாராலும் திரித்து எழுத முடியாது. வரலாறு கசப்பானதாகத்தான் இருக்கும்.

பிரபாகரனிற்கும் பால்ராஜிற்குமிடையில் இடைவெளி இருந்ததென குறிப்பிடுவதை மோதலாக நீங்கள் புரிந்து கொள்ள கூடாது. என்ன அர்த்தத்தில் குறிப்பிட்டோம் என்பதை புரிய வைக்கிறோம்.

கடந்த வாரங்களில் மணலாறு காட்டின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் குறிப்பிட்டோம். மணலாற்றின் முதலாவது தளபதியை விட்டால் மிச்சப்பேர் அத்தனைபேரும் எப்படி நியமனம் பெற்றார்கள் என்பதை குறிப்பிட்டேன். அதாவது, பிரபாகரனின் மெய்பாதுகாவலர் அணியில் இருந்து, அவரது கண்முன்னால் வளர்ந்தவர்கள். அவர்கள் தளபதி பொறுப்பை சரியாக செய்வார்கள் என்ற நம்பிக்கையை பிரபாகரன் பெற்றதும், அவர்களை தளபதியாக்கினார்.

இது புலிகளின் இறுதிக்காலம் வரை நிகழ்ந்தது. புலிகள் அமைப்பிற்குள் இரண்டுவிதமான வளர்ச்சிப்பாதை உண்டு. ஒன்று, பிரபாகரனின் மெய்பாதுகாவலர் அணியிலிருந்து வளர்பவர்கள். மெய்பாதுகாவலர் அணி பொறுப்பாளராக இருப்பவர் குறிப்பிட்ட காலத்தில் மாற்றப்பட்டு, ஏதாவதொரு தளபதி பதவிக்கு செல்வார். வெள்ளை, கடாபி, குமரன், வேலவன், ராஜேஷ், ஆராமுதன், இரட்ணம் என வரிசையான உதாரணங்கள் உள்ளன.

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%இன்னொரு பாதை, யுத்தமுனை. பால்ராஜ், தீபன், வீரமணி, ராஜசிங்கன் என உதாரணங்கள் உள்ளன. இவர்கள் களத்தில் செல்வாக்கு செலுத்துவார்கள். ஆனால் அமைப்பில் அதிகாரம் செலுத்தவோ, களத்திற்கு அப்பால் செல்வாக்கு செலுத்துபவர்களாகவோ இருக்க மட்டார்கள்.

இதில் இரணடாம் வகை- களத்தில் செல்வாக்கு செலுத்துபவர்கள்- ஊடகங்களில் அடிபட்டு, சனங்களிற்குள் அறியப்பட்டிருப்பார்கள். அவர்கள்தான் விடுதலைப்புலிகளின் முகம் என சனங்கள் நினைப்பார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. வெளியில் பெயர் அடிபடாத முதலாம் வகையினர்தான் விடுதலைப்புலிகளின் முகம்.

இந்த தொடர் முடியும் தறுவாயில் வாசகர்கள் அதை தெளிவாக புரிந்து கொள்ளலாம். பால்ராஜ், தீபன் ஆகியோரின் இறுதிக்காலம் பற்றிய அத்தியாயங்கள் கூடுதல் புரிதல் தரும்.

பால்ராஜ் கொக்குத்தொடுவாயை சேர்ந்தவர். 1983ம் ஆண்டு விடுதலைப்புலிகளுடன் இணைந்தார். உள்ளூரிலேயே பயிற்சியை முடித்திருந்தார். 1984 இல் இராணுவத்தின் பதுங்கித்தாக்குதல் ஒன்றில் சிக்கி, தோளில் காயமடைந்து சிகிச்சைக்காக இந்தியா சென்றார். அவருக்கு சிகிச்சை முடிந்த சமயத்தில் இந்தியாவில் 9வது பயிற்சிமுகாம் ஆரம்பித்தது. அதில் இணைக்கப்பட்டார். பயிற்சி முடிந்ததும் முல்லைத்தீவு வந்துவிட்டார். அப்போது முல்லைத்தீவு தளபதியாக இருந்தவர் பசீலன். பசீலனின் அணியில் பால்ராஜ் சிறப்பாக செயற்பட்டு கொண்டிருந்தார்.

பிரபாகரன் அப்போது இந்தியாவிலும், யாழ்ப்பாணத்திலும் இருந்து செயற்பட்டார். அதனால் பால்ராஜை அவர் சரியாக அறிய முடியாமல் போய்விட்டது. இந்திய இராணுவத்தின் வருகையின் பின்னர் மணலாற்று காட்டுக்கு பிரபாகரன் சென்றபோதுதான். பால்ராஜ், நவம் போன்றவர்களுடன் நேரடி பரிச்சயம் ஏற்பட்டது.

இந்தியப்படைகள் வெளியேறிய பின்னர் பால்ராஜ் வன்னி படையணிகளை ஒருங்கிணைத்து தளபதியானார். மற்ற முக்கிய தளபதிகள் தமது ஆரம்ப கட்டத்தில் பிரபாகரனிற்கு முன்பாக வளர்ந்திருப்பார்கள். ஒரே முகாமில் தங்கி, நீண்டநாட்கள் ஒன்றாக இருந்திருப்பார்கள். பால்ராஜிற்கு இது கிடைக்கவில்லை. என்னதான் புலிகளின் தலைசிறந்த போர்த்தளபதியாக அவர் இருந்தாலும், பிரபாகரனுக்கும் அவருக்குமிடையில் “கெமிஸ்றி“ சரியாக அமையவில்லை.

பால்ராஜ் அபரிமிதமான போராற்றல் கொண்டவராக இருந்தாலும், தீர்மானிப்பவராக அவர் இருக்கவில்லை. 1990களின் தொடக்கத்தில் கூட்டுபடை தலைமையகம் என்ற கட்டமைப்பை புலிகள் அறிமுகம் செய்தனர். அதன் முதலாவது தளபதியும் பால்ராஜ்தான். ஆனால் விரைவிலேயே அந்த பொறுப்பு சொர்ணத்திற்கு கைமாற்றப்பட்டது. காரணம், பால்ராஜ் தனது படையணியான சாள்ஸ் அன்ரனி படையணி தளபதியை போல செயற்படுகிறார் என்ற குற்றச்சாட்டு.

கூட்டுபடை தலைமையகம் என்பது போருக்கான கட்டமைப்பு. அதன் தளபதியாக நியமிக்கப்படுபவர், போரிடும் படையணி தளபதிகளிற்கு முன்னுரிமை கொடுப்பார் என்ற ரீதியிலும் இதனை பார்க்கலாம். பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் அணி முக்கியஸ்தர்களை பால்ராஜ் அவ்வளவாக அறிந்திருக்கமாட்டார். பரிச்சயமிருந்தாலும் ஆளுமை, திறமை மதிப்பீட்டிற்கு வாய்ப்பிருக்காது. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இதன்பின் யாழ்ப்பாணத்தில் நடந்த பெரிய தாக்குதல்கள் அனைத்தையும் சொர்ணம்தான் வழிநடத்தினார். மிக நெருக்கடியான கட்டத்தில் முன்னேறிப்பாய்தலிற்கு எதிராக புலிகள் 1995 இல் மேற்கொண்ட புலிப்பாய்ச்சல் நடவடிக்கையை சொர்ணம், பால்ராஜ் இருவரும் இணைந்து வழிநடத்தினர். அதன்பின் சொர்ணமே யாழ்ப்பாண சண்டையை வழிநடத்தினார். புலிகள் யாழ்ப்பாண குடாநாட்டையே இழக்கும் நிலையேற்பட்டதை இந்த தொடரில் முந்தைய பகுதிகளில் குறிப்பிட்டோம்.

br5-300x203.jpg

 

சொர்ணம் தாக்குதலிற்கு சரிவர மாட்டார் என்ற பின்னர், 1996 முல்லைத்தீவு மீதான ஓயாத அலைகள் 1 பால்ராஜின் தலைமையில் நடந்தது. இதன்பின்னர் 1997 இல் ஆனையிறவு மீதான நடவடிக்கை பால்ராஜின் தலைமையில் நடந்தது. அது வெற்றியளிக்கவில்லை. இதுதான் பால்ராஜ் பெருமளவில் தலைமைதாங்கிய இறுதி நடவடிக்கை. அதன்பின் தீபன் யுத்தத்தில் எழுச்சிபெற, அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன் பின்னர் பால்ராஜின் முத்திரை பதிந்தது குடாரப்பு தரையிறக்கத்தில். இடைப்பட்ட காலத்தில் அவர் கடுமையான போராட்டத்தை சந்திக்க வேண்டியிருந்தது.

1997 இல் படையினர் ஜெயசிக்குறு நடவடிக்கையை ஆரம்பித்தனர். மாங்குளத்திற்கு அண்மையில் மோதல் நடந்து கொண்டிருந்தது. அந்த பகுதி பொறுப்பாளராக இருந்தவர், பின்னாளில் மட்டக்களப்பு தளபதியாக இருந்த ரமேஷ். ஆனையிறவு தோல்வியின் பின்னர் ரமேஷின் கீழ் 150 பேர் கொண்ட அணித்தலைவராக பால்ராஜ் நிறுத்தப்பட்டார். அந்தநாட்களில் பால்ராஜ் சிரித்தபடியே களத்தில் நின்றார். தனக்கு பின்னால் வந்தவர்களின் கீழ் சிறிய அணியுடன் நிறுத்தப்பட்டது அவருக்கு பிரச்சனையாக இருக்கவில்லை. ஆனால் அவருக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டவர்களிற்குத்தான் சங்கடம். இயக்கம் என்ன சொன்னாலும் செய்ய தயாராக இருக்க வேண்டும் என அடிக்கடி சொல்லி, அவர்களின் சங்கடத்தை களைய முயற்சிப்பார் பால்ராஜ்.

1996 இன் பின்னர் வன்னியில் ஏராளம் இராணுவ நடவடிக்கைகளை இருதரப்பும் செய்தன. இதில் ஓயாத அலைகள் 1, சத்ஜெய முறியடிப்பு, 1997 ஆனையிறவு தாக்குதல், ஜெயசிக்குறு எதிர்முனைகளில் சிறிய பகுதி, 1999 இல் ஒட்டுசுட்டானை கைப்பற்றிய ரிவிபல இராணுவத்திற்கு எதிரான முன்னரண் பாதுகாப்பு, ஓயாத அலைகள் 3 இல் சில முனை, குடாரப்பு தரையிறக்கம் என்பனதான் பால்ராஜ் பங்குபற்றிய தாக்குதல்கள். இதில் பின்னாளில் அவரது முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, ஒரு பகுதி வழிநடத்துபவராகவே இருந்தார்.

இதற்கு காரணம்தான், முன்னரே சொன்ன பிரபாகரனுடன் கெமிஸ்ற்ரி சரியில்லாதது.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/39592/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தளபதி பால்ராஜ் கேட்ட 5 கோடி ரூபா!: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 62

March 8, 2019
UNSET-1.jpg
 

பீஷ்மர்

விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி பால்ராஜ் குறித்த சில தகவல்களை கடந்த பாகங்களில் குறிப்பிட்டிருந்தோம். போர்க்களங்களில் வல்லவரான பால்ராஜ், எப்பொழுதும் யுத்தகளங்களை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதாலேயே, அவர் அப்படியொரு புகழை பெற்றார்.

தனது இறுதிக்காலத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்திலும், அவர் போரைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். வரைபடங்களுடன், இராணுவம் எந்த முனையில் நகர்ந்தால், எப்படி எதிர்கொள்ள வேண்டுமென திட்டங்கள் வகுத்தபடியே இருந்தார்.

அரசுடன் போர் ஒன்றை தொடங்கினால் எப்படியான சூழ்நிலை ஏற்படும் என்பதை பால்ராஜ் துல்லியமாக கணித்து வைத்திருந்தார். முகமாலையில் இருந்து இராணுவம் முன் நகராது. காரணம் புலிகளின் பலமான முன்னரண். 2002 இல் இருந்து இராணுவம் அதற்கான முயற்சியை செய்து பார்த்து விட்டது. 2006 இலும் முயற்சித்து கையை சுட்டுக் கொண்டு விட்டது.

அடுத்தது வவுனியா முனை. ஏ9 பாதையால் 1997 இல் இராணுவம் பெரிய நகர்வொன்றை ஜெயசிக்குறு என்ற பெயரில் ஆரம்பித்தது.

“சிக்குறு சிக்குறு ஜெயசிக்குறு- வந்து

சில்லெடுக்குது ஜெயசிக்குறு“ என புலிகள் பாட்டு வெளியிடுவதில் முடிந்தது. ஏ9 பிரதான பாதை, இதனால் புலிகளுடன் சுலபமாக யுத்தம் செய்ய முடியாது. முகமாலையை ஒத்த மூர்க்கத்தை புலிகள் காண்பிப்பார்கள். மற்றும், என்னதான் யுத்தம் செய்தாலும் வன்னிக்கான தரைப்பாதையை மூடி யுத்தம் செய்கிறார்கள் என்ற வீண்நெருக்கடி ஏற்படலாமென்பதை அரசு கணக்குப் போடும்.

இதைவிட்டால் மணலாறு. மணலாறு இராணுவத்திற்கு உகந்த போரிடும் பிரதேசமல்ல. நீண்டகாடு. இங்கிருந்து யுத்தத்தை ஆரம்பிப்பது, ஆரம்பத்திலேயே பொறியில் சிக்குவதாக அமைந்துவிடும். இப்படி பலதையும் யோசித்து, மன்னாரிலிருந்தே யுத்தத்தை அரசு ஆரம்பிக்கும் என்பது பால்ராஜின் கணக்கு.

அரசு- புலிகள் சமாதானப் பேச்சுக்கள் நெருக்கடியான கட்டத்தை சென்று கொண்டிருந்த 2006 இன் மத்தியகாலம். அப்போது புலிகளின் உயர்மட்ட தளபதிகளிற்கிடையிலான ஆலோசனை கூட்டமொன்று விசுவமடுவில் இருந்த பிரபாகரனின் சந்திப்பு முகாமில் நடந்தது. அந்த சந்திப்பில் பிரபாகரன் கலந்து கொள்ளவில்லை. இந்த பகுதியின் ஆரம்பத்தில் ஒரு விடயத்தை குறிப்பிட்டிருந்தோம். நான்காம் ஈழப்போரை தீர்மானிப்பவராக இருப்பதிலிருந்து பிரபாகரன் ஒதுங்க ஆரம்பித்திருந்ததை. அடுத்த தலைமுறையிடம் போரை கையளிக்க ஆரம்பித்திருந்தார். அது வெற்றியளித்திருந்தால் இயக்கத்தையும் கையளித்திருந்திருப்பார்.

சாள்ஸ் அன்ரனியின் எழுச்சி, இயக்கத்தை பல்வேறு கட்டமைப்பாக்கி அதற்கு பொறுப்பானவர்களே முடிவெடுப்பவர்களாக மாற்றியது, தளபதிகளையே முடிவெடுப்பவர்களாக மாற்றியது என பிரபாகரன் மெல்லமெல்ல ஒதுங்க தொடங்கியதை இந்த தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

விசுவமடு சந்திப்பில் பொட்டம்மான், தமிழேந்தி, சாள்ஸ் அன்ரனி, தீபன், வேலவன், பானு, ஜெயம், சொர்ணம், சூசை, தமிழ்செல்வன், ரேகா, கடாபி, நடேசன், கஸ்ரோ ஆகியோருடன் இன்னும் சிலரும் கலந்து கொண்டிருந்தனர். தமது வலிந்த தாக்குதலை இராணுவம் தாக்குப்பிடிக்காதென புலிகள் தீவிரமாக நம்பிக்கொண்டிருந்த காலம். ஆயுதக்கப்பல்கள் கடலில் மூழ்கிக் கொண்டிருந்தது குமரன் பத்மநாதனின் ஆதரவாளர்கள் சிலரின் தகவல்களால்தான், அடுத்தடுத்த கப்பல்கள் வரும்போது சிக்கலில்லாமல் முல்லைத்தீவை வந்தடையலாமென தளபதிகள் நம்பினார்கள்.

இவையெல்லாம் சேர, யாழ்ப்பாணத்தை இலகுவாக தாக்கலாமென்ற எண்ணம் தளபதிகளிடம் இருந்தது. அந்த கூட்டத்தில் பால்ராஜ் வேறுவிதமாக பேசினார்.

1_024-300x203.jpg

யாழ்ப்பாணத்தில் மீது தாக்குதல் நடத்துவது அவ்வளவு சுலபமானதல்ல. கடினமான காரியம். அதேவேளை, இராணுவம் தொடுக்கும் தாக்குதலும் பிரமாண்டமாக இருக்கும். இராணுவத்திற்கு அந்த வாய்ப்பை நாம் வழங்ககூடாது. இராணுவம் யாழ்ப்பாணம், வவுனியாவிலிருந்து தாக்குதலை ஆரம்பிக்காது. மன்னாரிலிருந்துதான் ஆரம்பிக்கும். நாங்கள் யாழ்ப்பாண தாக்குதலை செய்யாமல் மன்னார் தள்ளாடி மீது தாக்குதல் நடத்துவோம். வன்னி தாக்குதலுக்காக தள்ளாடியில் 58வது டிவிசன் உருவாக்கப்பட்டு, தீவிர பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. தள்ளாடியை தாக்கினால் அந்த டிவிசனை மொத்தமாக கூண்டோடு அழிக்கலாம். வன்னி மீதான நடவடிக்கையை நீண்டநாளுக்கு தள்ளிவைக்கலாம். அப்படி நடந்தால் தெற்கில் அரசு நெருக்கடியை சந்திக்கும். இதுதான் பால்ராஜ் சொன்னது.

இதை அவர் ஏன் சொன்னார் என்றால், தள்ளாடியில் இராணுவத்தின் தயார்படுத்தல்களை பால்ராஜ் அறிந்திருந்தார். அதனடிப்படையில் பால்ராஜ் இன்னொரு திட்டத்தையும் முன்வைத்தார்.

வன்னியில் மணலாறு தொடக்கம் மன்னார் கடற்கரை வரை மிகப்பெரிய மண்அணை அமைக்கலாம். மணலாற்றில் தொடங்கி வவுனியா ஊடாக வந்து முழங்காவிலிற்கு சற்று மேலாக அந்த அணை செல்லும். வன்னியின் எந்த பகுதிகள் போரிட சாதகமானவை என்பதை கணித்து, அந்த பகுதிகளினூடாக முன்னரணை அமைப்பது திட்டம். 20 அடி உயரத்தில் மண்அணை அமைத்து, அதற்கு முன் கண்ணிவெடிகள், அகழிகள், பொறிவெடிகள் என முகமாலையை ஒத்த முன்னரண் திட்டத்தை பால்ராஜ் சொன்னார்.

இதை சொன்னதும் சில தளபதிகள் எதிர்த்தனர். இப்பொழுது மன்னார் உயிலங்குளத்தில் நிற்கிறோம், முழங்காவில் வரை பின்வாங்குவதா, அவ்வளவு இடத்தையும் விட்டுவிட்டு என்ன செய்வதென்பது அவர்களின் கேள்வி. மன்னாரில் இராணுவத்தின் எல்லையிருந்த தள்ளாடிக்கு அண்மையான கிராமங்களிலிருந்து வெள்ளாங்குளம் வரையான பகுதிகளை சும்மா இழப்பதா, இது முட்டாள்தனம் என அந்த தளபதிகள் கருத்து சொன்னார்கள். இராணுவத்துடனான யுத்தம் அவ்வளவு சிரமமாக இருக்காது, எதற்காக இவ்வளவு பிரதேசங்களை விட்டுக்கொடுக்க வேண்டும் என்பது அவர்களின் கருத்து.

தீபன், சூசை தவிர்ந்த மற்றையவர்கள் இதேவிதமான அபிப்பிராயத்தில் இருந்தனர். தீபன் யாழ்ப்பாண மோதலை ஆதரித்தார். ஆனால், மன்னார் மோதலை எதிர்க்கவில்லை. சூசை இந்த கலந்துரையாடலில் ஆர்வமாக இருக்கவில்லை. இவர்கள் இருவரை பற்றியும் பின்னர் தனியாக பேச வேண்டும். இறுதியுத்த சமயத்தில் இருவரது மனநிலை என்ன, அவர்கள் போர் பற்றி சொன்னவை என்னவென்பது துரதிஸ்டவசமாக பதிவுசெய்யப்படவில்லை. நிச்சயம் அது பதிவு செய்யப்பட வேண்டும். அதை இந்த பகுதிகளின் பின்பகுதிகளில் பார்க்கலாம்.

பால்ராஜின் திட்டம் அங்கு எடுபடவில்லை. அப்பொழுது தமிழேந்தி அமைப்பில் செல்வாக்கானவர். அவர்தான் பண முடிவுகளை எடுக்க வேண்டும். பால்ராஜின் திட்டத்திற்கு அண்ணளவாக ஐந்து கோடியாவது தேவையென கூட்டத்தில் சொன்னார். 5 கோடியை செலவழித்து, மன்னாரின் கிராமங்களையும் கைவிட்டு பின்வாங்க வேண்டுமா என்பது பெரும்பாலானவர்களின் கேள்வி.

ஐந்து கோடியை செலவழித்து பின்வாங்குவதை விட, அதற்கு ஆயுதம் வாங்கினால் இராணுவத்தை வடக்கிலிருந்தே கலைத்துவிடலாம் என கஸ்ரோ அபிப்பிராயம் சொன்னார். இந்த சமயத்தில் பொட்டம்மான், கஸ்ரோ இருவரும்தான் வெளிநாட்டு ஆயுதக் கொள்வனவு விவகாரத்தை கையாண்டார்கள். குமரன் பத்மநாதன் (கே.பி) மீதான அதிருப்தி பிரபாகரனிற்கு ஏற்பட்டதையடுத்து அவருக்கு மாதாந்தம் ஒரு தொகை பணம் வழங்கப்பட்டு, ஒதுங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தார். அந்த சமயத்தில் அவருக்கு கப்பல் ஒன்று கட்டுவதற்கும் பணம் கிரமமாக வழங்கப்பட்டு வந்தது. (இந்த கப்பலைதான் யுத்தம் முடிந்த பின்னர் கோத்தபாய கொழும்பிற்கு கொண்டுவந்து, புலிகளின் ஆயுதக்கப்பல் என கண்காட்சி நடத்தினார்)

thamilenthi-231x300.jpg தமிழேந்தி

ஐந்து கோடி தேவையில்லாத பணம் என ஆயுதக்கொள்வனவிற்கு பொறுப்பாக இருந்தவர்களும் சொல்ல, தமிழேந்தியும் அதையே சொன்னார். பால்ராஜின் திட்டத்தை விட்டுவிட்டு, ஆயுதக்கப்பலை கொண்டு வரலாம் என சொன்னார். பால்ராஜின் திட்டம் எல்லோராலும் நிராகரிக்கப்பட்டது.

மற்றைய முக்கிய தளபதிகளிடம் இப்படியொரு திட்டமிருந்து, அதை தளபதிகள் கூட்டத்தில் அங்கீகரிக்கப்படவில்லையெனில் அவர்கள் தனிப்பட்ட ரீதியில் பிரபாகரனை சந்தித்து அதை கூறுவார்கள். அது பொருத்தமான திட்டமெனில் தளபதிகளின் முடிவை மாற்றவைப்பார் பிரபாகரன். ஆனால் பால்ராஜிற்கு அந்த வாய்ப்பும் இல்லை. காரணம், இறுதிக்கட்டத்தில் பிரபாகரன், பால்ராஜை தனிப்பட்டரீதியில் சந்திப்பதை  தவிர்த்தே வந்திருக்கிறார்.

பால்ராஜ் இறப்பதற்கு முன் கடைசி மூன்று வருடங்கள் வரை பால்ராஜை தனிப்பட்டரீதியில் பிரபாகரன் சந்திக்கவில்லை. சில நிகழ்வுகளில் எதிர்ப்பட்டதற்கு அப்பால், தனிப்பட்டரீதியில் நெருக்கமாக- மனம் விட்டு- பேச்சுவார்த்தை நடக்கவில்லை. வேறுயாருமெனில் பிரபாகரனிற்கு முன்பாக அடிக்கடி சென்று முகத்தை காட்டி, வழிய வருவார்கள். பால்ராஜிடம் அந்த இயல்பு கிடையாது. பிரபாகரனும் அழைக்கவில்லை, பால்ராஜூம் போகவில்லை.

காரணம், ஒரு திருமண பிரச்சனை.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/41929/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இரண்டு போராளிகள் சரணடைந்திருக்கா விட்டால் யுத்தம் வேறுவிதமாக திரும்பியிருக்குமா?: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 63

March 15, 2019
balraj-23-696x466.jpg
 

பீஷ்மர்

பால்ராஜிற்கும் பிரபாகரனிற்குமிடையிலான உறவில் கணிசமான விரிசலை ஏற்படுத்தியது பால்ராஜின் திருமணப் பிரச்சனை என்பதை கடந்த வாரம் குறிப்பிட்டோம். நேரடியாக அந்த விவகாரத்திற்குள் நுழையாமல், வேறொரு விடயத்தை குறிப்பிட வேண்டும்.

மன்னார் முனையையும் மணலாற்றையும் இணைத்து மண்அரண் அமைக்கும் திட்டத்தை பால்ராஜ் முன்வைத்தபோது, கணிசமான தளபதிகள் அதை நிராகரித்ததை குறிப்பிட்டோம். இதேகாலப்பகுதியில் இன்னொரு விடயமும் நடந்தது.

புலிகளுடனான சமாதான பேச்சுக்கள் குழம்ப ஆரம்பித்ததும் அரசு நீண்டபோருக்கு தயாரானது. இராணுவத்தின் கட்டமைப்பில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. இலங்கை படைக் கட்டுமாணத்தில் தனித்தனியாக இயங்கிய புலனாய்வு சேவைகளை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து, புலனாய்வு தகவல்களை நிரல்படுத்தி, ஒவ்வொரு புலனாய்வுசேவைக்கும் கடமைகள் பிரித்து கொடுக்கப்பட்டன. முப்படைகளும் நவீனமயப்பட்டுத்தப்பட்டது. இதன் ஒரு கட்டமான 58வது டிவிசன் உருவாக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளிற்கு கோத்தபாய தலைமைத்துவம் கொடுத்தார். சரத் பொன்சேகா நடைமுறைப்படுத்தினார்.

58வது டிவிசன் படையினருக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டன. முழுமையான ஒரு தாக்குதல் டிவிசனாக உருவாக்கப்பட்டது. பிரிகேடியர் சவேந்திர சில்வா அதன் கட்டளை தளபதியாக நியமிக்கப்பட்டார். இந்த படையணி மன்னாரின் தள்ளாடி முகாமில் நிலைகொண்டிருந்தது.

வன்னி யுத்தமுனையை மன்னாரில் இருந்துதான் இராணுவம் ஆரம்பிக்கப் போகிறது, 58வது டிவிசன்தான் யுத்தத்தின் பிரதான பாத்திரம் வகிக்கப் போகிறதென்பதை பால்ராஜ் முன்னரே கணித்தார். வெளிப்படையாக சொன்னால், விடுதலைப்புலிகளின் உயர்மட்ட தளபதிகளில் வேறு யாரும் இதை கணித்ததாக தெரியவில்லை. தனது திட்டங்களை அமைப்பு ஏற்றுக் கொள்ளுகிறதா இல்லையா என்பதை பற்றி பால்ராஜ் கவலைப்படவில்லை. தனது கடமையை செய்ய வேண்டுமென விரும்பினார்.

32-300x203.jpg

இந்த இடத்தில் இன்னொரு தகவலையும் குறிப்பிட வேண்டும். மன்னாரில்தான் தாக்குதலை நடத்த வேண்டுமென திட்டமிட்ட பால்ராஜ், தலைமைத்துவத்தின் அனுமதி பெறாமல், தள்ளாடி படைமுகாமின் வேவுத் தரவுகளை திரட்டத் தொடங்கினார். முன்னர் விசேடவேவு அணியென ஒரு பிரிவு இருந்தது. மூன்றாம் ஈழப்போரின் இறுதிக்காலங்களில் அந்தப்படையணி செயலிழந்து விட்டது. இந்த சமயத்தில் புலிகள் ஆயுதங்களையே நம்பியிருந்தனர். மூன்றாம் ஈழப்போரின் இறுதியின் நினைத்த இடத்தில், நினைத்த நேரத்தில் இராணுவத்தை அடித்து விரட்டும் வல்லமையை புலிகள் பெற்றிருந்தார்கள். அதற்கு காரணம்- புலிகளின் சூட்டு வலு. எறிகணைகள், தரையில் பாவிக்கப்பட்ட கனரக ஆயுதங்களால் இராணுவத்தை விட சூட்டு வலுவில் புலிகள் மேலோங்கியிருந்தனர். இதனால் முன்னரைப் போல, வேவுத்தரவுகள் திரட்டியே தாக்குதல் நடத்த வேண்டுமென்ற நிலைமையிருக்கவில்லை.

விசேடவேவு அணி செயலிழந்ததும், அந்த அணியில் இருந்தவர்கள் தீபன், பால்ராஜ் ஆகியோரின் அணிக்கு சென்றுவிட்டனர். காரணம், அது வன்னி படையணியின் கணிசமான போராளிகளால் உருவாக்கப்பட்டிருந்தது. வன்னி படையணி போன்ற தோற்றத்தையே கொண்டிருந்தது.

அந்த அணியிலிருந்து வந்தவர்களை பால்ராஜ் பயன்படுத்தினார்.

ஒரு வேவு அணியை உருவாக்கி தள்ளாடிக்குள் அக்குவேறு ஆணிவேறாக வேவுத் தரவுகளை திரட்டினார். வேவுத்தரவுகள் திரட்டுபவர்கள், தாக்குதலிற்கு சற்று முன்னர்வரை அதை நிறுத்த மாட்டார்கள். வேவுத்தகவல்களை இறுதி செய்தபின் முகாமின் வரைபடத்தை தயார் செய்வார்கள். அதன்பின், தாக்குதல் திட்டத்தை வரைந்து, அணிகளிற்கு பணிகளை பிரித்து வழங்குவார்கள். பின்னர் பயிற்சி ஆரம்பிக்கும். பயிற்சி நடந்து கொண்டிருந்தாலும் வேவு அணிகள் தமது பணியை நிறுத்தமாட்டார்கள். ஏனெனில், இராணுவத்தின் நிலைகளில் மாற்றம் ஏற்பட்டு, திட்டம் குழம்பிவிடக்கூடாதென்பதற்காக இப்படி செய்வார்கள்.

பால்ராஜூம் வேவுக்கு அணிகளை இறக்கி, வரைபடம் தயாரித்து, தாக்குதல் திட்டமொன்றை தயார்செய்தார். இதன் பின்னர்தான் தலைமையிடம் விடயத்தை கொண்டு சென்றார். பால்ராஜின் திட்டத்தில் உறுதியான முடிவெடுக்க முடியாத நிலைமையில் தலைமையிருந்தது. காரணம், யாழ் தாங்குதலிற்காக புலிகள் பெருமளவு மனரீதியாக தயாராகி விட்டார்கள். யாழ் தாக்குதலே அதிக பலன் தருமென பெரும்பாலான தளபதிகள் நினைத்தார்கள்.

இந்த இழுபறிக்குள் ஒரு துரதிஸ்டவசமான சம்பவம் நடந்து விட்டது.

இந்த சமயத்தில், வேவுக்கு சென்ற சமயத்தில் இரண்டு போராளிகள் தப்பிச்சென்று இராணுவத்தினரிடம் சரணடைந்து விட்டனர். அவர்களை இராணுவம் கைது செய்ததா அல்லது சரணடைந்தார்களா என்பது சரியாக தெரியாது. ஆனால், சரணடைந்திருக்கவே அதிக வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.

இப்படி வேவுப்பணிக்காக செல்வர்கள் இராணுவத்திடம் சிக்கும் சம்பவங்கள் நடப்பதுண்டு. தமது முகாமிற்குள் புலிகளின் வேவு அணிகள் நடமாடும் தடயங்களை இராணுவம் கண்டால், அவர்களும் பொறி வைத்து பிடிக்க முயற்சி செய்வார்கள்.

இந்த இடத்தில் ஒரு சுவாரஸ்யமான தகவலை குறிப்பிட வேண்டும்.

இராணுவ முகாமிற்குள் புலிகளின் வேவு அணிகள் இரவில் நுழையும்போது, மிகமிக இரகசியமாக- காவல்கடமையில் உள்ள சிப்பாய்களிற்கு தெரியாமல்தான் உள்நுழைவார்கள். எல்லா விடயத்திலும் மறுசாத்தியம் உண்டல்லவா. சில சமயங்களில் ஏதாவது வில்லங்கமாகி, வேவு அணிகளை சிப்பாய்கள் கண்டுவிடுவதுண்டு.

காவல் கடமையிலுள்ள சிப்பாய் கண்டுவிட்டார் என வேவு போராளி உணர்வதும், வேவுப்போராளி அவதானித்துக் கொண்டிருப்பதை காவல் கடமையிலுள்ள சிப்பாய் உணர்வதும் மிக குறைந்த கணத்தில் நிகழும் சம்பவம். அப்போது, இருவரும் பொறுமையாக இருந்தால்- பல சந்தர்ப்பங்களில் சிப்பாய்கள் பேசாமலேயே இருந்து விடுவார்கள். தாக்குதலிற்கு வரவில்லை, வேவுக்கு வந்திருக்கிறார்கள், சண்டைபிடித்து வில்லங்கப்படாமல் தெரியாததை போல இருந்து விடுவோம் என சிப்பாய்கள் இருந்து விட்ட சந்தர்ப்பங்கள் பல உள்ளன.

வேவு அணிகளை கண்டதும், காணாததை போல பெரிதாக பாடியபடியோ, சீட்டியடித்தபடியோ சற்று விலகி சென்றுவிட்ட பல சுவாரஸ்ய சம்பவங்கள் உள்ளன.

ltte-leaders-kuyilan-300x218.jpg

 

அதேபோல, முகாமிற்குள் நுழைந்த புலிகளின் அணியை விரட்டி விரட்டி வேட்டையாடிய சம்பவங்களும் உள்ளன. இரண்டும் வெவ்வெறானவை. குறிப்பாக? ஆனையிறவு பெருந்தளத்திற்குள் புலிகளின் வேவு அணிகள் நீண்டகாலமாக செயற்பட்டன. ஆனையிறவை வேவு பார்ப்பதற்கு என்றே செம்பியன் விசேட வேவு அணியென்ற அணியை புலிகள் உருவாக்கியிருந்தனர். அந்த அணியின் சில போராளிகள், ஆனையிறவிற்குள் இராணுவத்திடம் உயிருடன் சிக்கியிருந்தனர்.

தள்ளாடிக்குள் இரண்டு போராளிகள் சரணடைந்ததும், மன்னார் தாக்குதல் திட்டத்தை புலிகள் கைவிட்டனர்.

இதன்பின்னர், அமைப்பிற்குள் இந்த தகவல் பரவி, பெரும்பாலானவர்கள் இதை அறிந்திருந்தார்கள்.

பால்ராஜ் மன்னார் களமுனையை மையப்படுத்தி இரண்டு திட்டங்களை பரிந்துரைத்தார். இரண்டையுமே புலிகள் கணக்கில் கொள்ளவில்லை. ஒருவேளை பால்ராஜின் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், இன்று எப்படியான நிலைமை இருந்திருக்கும்?

பால்ராஜின் திருமண விவகாரத்தை இந்த வாரம் எழுதுவதாக சொல்லியிருந்தோம். ஆனால் அது எழுதப்படவில்லையே என யோசிக்கிறீர்களா? அடுத்த வாரம் வரை காத்திருங்கள்.

(தொடரும்)

http://www.pagetamil.com/41933/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தளபதி பால்ராஜின் திருமண வாழ்வில் வந்த குழப்பம் என்ன?: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 64

March 26, 2019
32-1-696x470.jpg
 

பீஷ்மர்

விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவு பொறுப்பாளரான பொட்டம்மான், அந்த பிரிவை பெரும் அணியாக வளர்த்தெடுத்திருந்தார். பல பிரிவுகள், அணிகள், பிரதேசங்கள், பணிகளின் அடிப்படையில் பல அணிகளை உருவாக்கியிருந்தார். அவற்றை ஓரளவு சுயாதீனமான அமைப்பாகவும் உருவாக்கினார். அணிகளை வழிப்படுத்துவது, ஒருங்கிணைப்பது, பெரிய திட்டங்களை தீட்டுவது போன்றவற்றைத்தான் பொட்டம்மான் செய்தார். பிரிவுகளின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டதில்லை.

இதே காலப்பகுதியில் புலிகளின் இரண்டாவது தலைவர் என்ற உத்தியோகப்பற்றற்ற பொறுப்பும் பொட்டம்மானிடம் இருந்தது. இதனால் அவரின் கீழ் செயற்பட்டவர்களை சற்று சுயாதீனமாக செயற்படும் விதமான பொறுப்புக்களை வழங்கினார் பிரபாகரன்.

இந்த புள்ளியில், ஒரு பெரும் சறுக்கல் ஒன்று விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவில் நடந்தது. இதில் குறிப்பிட வேண்டிய விடயம்- பொதுமக்களுடன் தொடர்புடைய அந்த சறுக்கலை பகிரங்கமாக ஏற்று, புலிகள் மன்னிப்பு கோரினர். பலர் அறிய வாய்ப்பில்லாத அந்த தகவல்களை இந்த பகுதியில் தருவோம்.

புலிகளின் அந்த சறுக்கல், காந்தி என்ற புலனாய்வு பிரிவு பொறுப்பாளரின் வடிவில் ஏற்பட்டது. புலிகளின் உள்ளக புலனாய்வு பொறுப்பாளராக இருந்த காந்தியின் செயற்பாடுகள், எப்படி அவரது வீழ்ச்சி அமைந்தது என்பதை இந்த பகுதியின் பின்பகுதிகளில் பார்க்கலாம்.

உள்ளகப் புலனாய்வு பிரிவின் பொறுப்பு வன்னியை பாதுகாப்பது. வன்னிக்குள் நுழையும் இராணுவ புலனாய்வு செயற்பாட்டாளர்களை அடையாளம் கண்டு கைது செய்வது, இராணுவ புலனாய்வு முகவர்களை கைது செய்வது, வன்னிக்குள் நடக்கும் தாக்குதல்களை முறியடிப்பது, பாஸ் நடைமுறை, சிறைச்சாலை, விசாரணை என புலனாய்வுதுறையின் மிக முக்கிய செயற்பாடுகளை அந்த பிரிவு கையாண்டது.

22_01-300x182.jpg

 

இந்த இடத்தில், உள்ளக புலனாய்வு பிரிவு பற்றிய தகவல்களிற்கு சிறிய இடைவெளி விட்டு, பால்ராஜ் பற்றிய தகவல்களிற்கு செல்கிறோம்.

எவ்வளவு புகழ்பெற்ற மனிதர்கள் என்றாலும் தனிப்பட்ட வாழ்வில் சில கறுப்பு பக்கங்கள் இருக்கும். அந்த பக்கள் மட்டுமே அந்த ஆளுமையின் அடையாளம் அல்ல. அந்த ஆளுமையின் புகழை தகர்ப்பவையும் அல்ல. மனிதர்களாக பிறந்த எல்லோரிடமும் ஏதோ ஒரு பலவீனம் இருக்கும். மனிதர்களை புரிந்தவர்களிற்கு, பலவீனம் ஒரு விவகாரமாக தெரிவதில்லை. இதை ஏன் குறிப்பிடுகிறோம் எனில், பால்ராஜ் தொடர்பான சில பலவீனமான பக்கங்களிற்குள் நுழையப் போகிறோம்.

அதை இங்கு குறிப்பிடுகிறோம் என்றால், வரலாற்றை யாராலும் திரிக்க முடியாது. மாபெரும் தளபதியான அவரைப்பற்றிய முழுமையான வரலாற்றை எழுத வேண்டுமெனில், எல்லா விடயங்களையும் பேச வேண்டும். அப்படியானால்தான் அவரை முழுமையாக புரிந்து கொள்ள முடியும். பால்ராஜை இழிவு செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் இதை பதிவு செய்யவில்லை. மாறாக, பால்ராஜ் என்ற ஆளுமையை புரிந்துகொள்ள இது உதவும்.

பால்ராஜ் நீண்டகாலமாக திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணமே செய்து கொள்வதில்லையென்ற முடிவில் இருந்தார். எனினும், பின்னர் வரதா என்ற விடுதலைப்புலிகளின் மகளிர் அணியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தார். இவர் மகளிர் தாக்குதலணி, கடற்புலி, நிதித்துறை பிரிவுகளில் செயற்பட்டவர். பிரபாகரனின் நெருக்கமான உறவுப்பெண். அவர் கடற்புலிகளில் இருந்த சமயத்தில் பால்ராஜூடன் திருமணம் செய்தார்.

எனினும், திருமணமான சிறிதுகாலத்திலேயே இருவருக்குமிடையில் கசப்பு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

பிரபாகரனின் உறவுப்பெண்ணான பாலராஜின் மனைவி வரதா, சூசையுடன் நீண்டகாலம் பணிபுரிந்தவர். இருவருக்குமிடையில் அறிமுகமும் இருந்தது. பின்னர் ஒருநாள் சூசையிடம் சென்ற வரதா, சில மனக்கசப்பான தகவல்களை சூசையிடம் சொன்னார். அப்பொழுது கண்ணீர் விட்டு அழுதார். இனிமேல் தன்னால் பால்ராஜூடன் சேர்ந்து வாழவே முடியாதென சொல்லி, நிதித்துறை கடமைக்கு சென்றார்.

சூசை இந்த விவகாரத்தை பிரபாகரனிடம் சேர்ப்பித்தார். வரதா பிரபகரனின் உறவுக்கார பெண். நல்ல அறிமுகம் உடையவர். உறவுமுறைக்கு அப்பால், அமைப்பில் இணைந்து கொண்டவர்கள், திருமண வாழ்வில் புரிந்துணர்வுடனும், முன்னுதாரணமாகவும் நடக்க வேண்டுமென நினைப்பவர் பிரபாகரன். ஆனால் மனிதர்களின் மன இயல்புப்படி, மணமுறிவும், மனமுறிவும் இயல்பு. ஆனால் ஒப்பீட்டளவில் புலிகளின் தம்பதிகளிற்குள் அது வந்தது குறைவு. தினேஷ் மாஷ்டர், சு.க.தமிழ்செல்வன், பால்ராஜ் போன்ற முக்கியஸ்தர்கள் சிலர் உள்ளிட்ட சிலருக்குத்தான் அமைப்பிற்குள் இந்த சிக்கல் வந்தது.

LTTE-leader-pays-last-respects-to-Comman

தம்பதிகளிற்குள் பிரச்சனை ஏற்படும் சம்பவங்களில் பிரபாகரன் கடுமையான எதிர்வினையாற்றுவார். சு.ப.தமிழ்செல்வனிற்கும் மனைவிக்கும் மனமுறிவு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்தபோது, தமிழ்ச்செல்வனை நேரில் சந்திப்பதையே பிரபாகரன் தவிர்த்தார். தனக்கு நெருக்கமானவர்கள், தளபதிகள் இந்த விடயத்தில் முன்னுதாரணமாக வாழ வேண்டுமென்பது பிரபாகரனின் நிலைப்பாடு. தமிழ்ச்செல்வன் தம்பதி ஒற்றுமையான பின்னரே, தமிழ்செல்வன் மீண்டும் பிரபாகரனை சந்தித்தார். அந்த சந்திப்பு நடந்த சிறிதுநாளிலேயே அவர் விமானத் தாக்குதலில் மரணமாகி விட்டார்.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/44914/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணீர் பௌசர் சாரதியாக இருந்த துவாரகா: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 65

March 31, 2019
22196213_822735664574719_702024522219998
 

©பீஷ்மர்

தளபதி பால்ராஜின் குடும்ப வாழ்வில் சில குழப்பங்கள் வந்திருந்தது என்பதை கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். இது தனி மனித விவகாரம்- அந்த பெரிய ஆளுமையை மதிப்பிடும் விவகாரமல்ல- என்பதால், அந்த பகுதியை அதிகம் பேசாமல் கடந்து செல்கிறோம்.

குடும்ப உறவுகள் தொடர்பில் பிரபாகரனிடம் எப்படியான பார்வை இருந்தது என்பதையும் கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். தனி மனித ஒழுக்கத்தில் ஒரு மகானாகவே வாழ்ந்தவர் பிரபாகரன். அவரது தனி மனித ஒழுக்கத்தை பற்றி ஒரு சிறு வதந்திகூட எழுந்ததில்லையென்பதிலிருந்தே, அவரது தனி மனித ஒழுக்கத்தை புரிந்து கொள்ளலாம். தனது அமைப்பிலுள்ள அனைவரும் அப்படியே இருக்க வேண்டுமென்றும் பிரபாகரன் விரும்பினார். குறிப்பாக தளபதிகள்.

சு.ப.தமிழ்செல்வனின் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டபோது, பிரபாகரன் எப்படி நடந்து கொண்டார் என்பதை பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்.

பால்ராஜ் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம், பிரபாகரனை கோபமடைய வைத்தது. தளபதிகள் முன்னுதாரணமாக இருக்க வேண்டுமென்பது பிரபாகரனின் நிலைப்பாடு.

பால்ராஜ் குடும்பத்திற்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தை கையாளுவதற்கு வசதியாக, அவரை ஒரு இடத்தில் தங்க வைக்க முடிவெடுத்தார் பிரபாகரன். அந்த பொறுப்பு வழங்கப்பட்டது- உள்ளக புலனாய்வு பிரிவு பொறுப்பாளர் காந்தியிடம்!

பால்ராஜை உங்களிடம் தருகிறோம், சில தளபதிகள் அவரை தொடர்ந்து சந்திப்பார்கள் என காந்திக்கு சொல்லப்பட்டிருந்தது. இந்த சமயத்தில் ஒரு குழப்பம் ஒன்று நேர்ந்தது.

காந்தியின் கீழிருந்த உள்ளக பாதுகாப்பு பிரிவின் பிரதான சிறைச்சாலை, வள்ளிபுனத்தில் அமைந்திருந்தது. யுத்தத்தின் பின்னர் படையினர் கைப்பற்றிய பின்னர் அதன் படங்கள் வெளியாகியிருந்தன. அதேவேளை, போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தான பின்னர், சர்வதேச நியமங்களிற்குட்பட்ட சிறைச்சாலையொன்றை விசுவமடு- தொட்டியடிக்கு அப்பால் அமைத்திருந்தனர்.

வள்ளிபுனம் சிறைச்சாலைக்கு சற்று வெளியில், சிறைச்சாலை நிர்வாகத்திலுள்ள போராளிகள் தங்கியிருக்கும் வீடொன்று இருந்தது. அந்த வீட்டில் பால்ராஜ் தங்க வைக்கப்பட்டார். புலிகளின் மூத்த உறுப்பினர்கள் நடேசன், யோகி, தமிழேந்தி, பேபி சுப்ரமணியன், பரா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சிலர் தினமும் பால்ராஜை சந்தித்து பேசி, கவுன்சிலிங்கை ஒத்த முறைமையொன்றை பிரபாகரன் ஏற்பாடு செய்தார்.

சமநேரத்தில் வரதாவுடனும் மூத்த பெண் போராளிகள் பேசி, இருவரையும் இணைத்து வைக்க விரும்பினார்கள்.

எனினும், வரதா மனரீதியாக காயமடைந்திருந்தார். மீண்டும் இணைந்து வாழ அவர் உடன்படவேயில்லை. அதேவேளை, மீண்டும் வரதாவுடன் இணைவது குறித்து பால்ராஜ் எப்படியான நிலைப்பாட்டில் இருந்தார் என்பதை இந்த கட்டுரையாளரால் உறுதிசெய்ய முடியவில்லை. அதனால் இந்த விவகாரத்தை இத்துடன் முடித்து கொள்ளலாம்.

img_0401-03-300x207.jpg விடுதலைப்புலிகளின் விசுவமடு சிறைச்சாலை

நடந்த விவகாரங்கள் பால்ராஜை பெருமளவு பாதித்து விட்டது. உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற உடல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். எனினும், அவர் உடலில் அக்கறை கொள்ளவில்லை. மருத்துவ சிகிச்சை பெற்றாலும் மாத்திரைகளை சீராக பாவிப்பதில்லை, உணவுக்கட்டுப்பாடு இல்லையென வைத்தியர்கள் முணுமுணுத்தார்கள். ஆனாலும் அவரை கட்டுப்படுத்த யாராலும் முடியாது.

ஒரு பிக்கப். இரண்டு மூன்று போராளிகள். ஒரு வசதிக்குறைவான தங்குமிடம். உணவு வசதிகளிற்காக செலவு செய்யவோ, இதர வசதிகளை பெறவோ அவர் கட்டாயமாக மறுத்து வந்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட வசதிகளையே அவர் பெறவில்லை.

உடல்நிலை மோசமாகி சில தடவை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தார். எங்கிருந்தாலும், என்ன உடல்நிலையிலிருந்தாலும் போராட்டம் பற்றியே அவர் சிந்தித்து கொண்டிருந்தார். இதற்கு ஒரு சுவாரஸ்யமான உதாரணம் உள்ளது.

விடுதலைப்புலிகள் சுயநிர்ணய உரிமைபற்றி பேச ஆரம்பித்த சமயம். அன்ரன் பாலசிங்கம் வன்னிக்கு வரும் சமயங்களில் உள்ளக சுயநிர்ணயம், வெளியக சுயநிர்ணயம் பற்றி போராளிகளிற்கு வகுப்பெடுப்பார். தொடர்ச்சியாக படையணிகளிற்கு அந்த வகுப்பு நடந்து வந்தது.

அப்போது புதுக்குடியிருப்பில் இருந்த பொன்னம்பலம் வைத்தியசாலையில் பால்ராஜ் அனுமதிக்கப்பட்டிருந்தார்.நீரிழிவு உச்சமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

குறிப்பிட்ட பிரிவின் போராளிகள் சிலர் பால்ராஜை பார்க்க வைத்தியசாலைக்கு சென்றனர். உடல்நலமில்லாத பால்ராஜ் நன்றாக ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார் என்றுதான் போன போராளிகள் நினைத்தனர். அவருக்கு எப்படி ஆறுதல் செல்லலாமென திட்டமிட்டபடி போனார்கள்.

அவர்கள் போனபோது சிறிய குறிப்பு புத்தகத்தில் எதையோ குறித்தபடியிருந்தார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்திலும் புதுபுது யோசனைகளை குறிப்பு புத்தகங்களில் எழுதியபடிதான் இருப்பார். செய்திகளை கவனித்து அமைப்பு செய்ய வேண்டிய நடவடிக்கைகளையும் குறித்து வைப்பார். இந்த போராளிகள் போனதும், சாதாரண சிரிப்புடன் வரவேற்ற பால்ராஜ், அவர்களை உட்காரச் சொல்லிவிட்டு, தலைமாட்டில் இருந்த ஒரு குறிப்பு புத்தகமொன்றை எடுத்து, உள்ளக சுயாட்சி பற்றி அவர்களிற்கு நடந்த வகுப்பை விமர்சிக்க ஆரம்பித்தார். பால்ராஜை அறிந்தவர்களிற்கு தெரியும், அவரது பேச்சு பாணி. ஊரில் கிரந்தம் கதைப்பது என்பார்கள். அதை அவர் அடிக்கடி பாவிப்பார்.

leema-4-1-300x196.jpg

 

“ம்… உள்ளக சுயநிர்ணம் பற்றியெல்லாம் கதைக்கிறியளாம்.. ம்.. இனியென்ன நீங்கள் எல்லாரும் உள்ளக சுயநிர்ணய உரிமையை எடுத்து சுதந்திரமாக இருக்கப் போறியள். இயக்கமும் ஆரம்பத்திலயிருந்து உள்ளக சுயநிர்ணயத்தைதானே கேட்டது. மாவீரர் எல்லாரும் அதுக்காகத்தானே வீரச்சாவடைந்தவை“ என ஆரம்பித்து ஒரு கட்டத்தில் கோபத்துடன் சொன்னார்- “இவையெல்லாம் என்ன விளையாடிக் கொண்டிருக்கினம். உள்ளக சுயாட்சி எடுக்கிறதுக்காகவா இத்தனை ஆயிரம் பொடியளை களத்தில சாகக் குடுத்தனான்“ என. இதை சொன்னபோது அவர் முகம் சிவந்து போயிருந்தது.

கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் அந்த போராளிகள் பால்ராஜூடன் இருந்தனர். இடையில் அவர்கள் வாய்திறந்து, உடம்பு எப்படி என ஒரு வார்த்தை கேட்க முடியவில்லை. பால்ராஜே பொரிந்து தள்ளினார். இதுதான் பால்ராஜின் இயல்பு.

ஆனால் துரதிஷ்டவசமாக அவரது திருமண பிரச்சனை பிரபாகரனுடனான உறவை சிதைத்துவிட்டது. தனிப்பட்ட வாழ்க்கைநெறி பிரதானமானதென நினைப்பவர் பிரபாகரன். தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனையுடையவர்கள் யாருமே எந்தக்காலத்திலும் பிரபாகரனிற்கு அருகில் இருந்ததில்லை. அவரது இயக்க வாழ்க்கையின் ஆரம்பத்தில் உமாமகேஸ்வரனுடன் ஏற்பட்ட முரண்பாடும் இதுதான். உமாமகேஸ்வரனின் காதலை பிரச்சனையானதாக கருதினார். அதனால் உமாவை விட்டு விலகினார்.

32760938_1681668588620443_57960898996018 தளபதி ஜெயமின் திருமணம்

மரபான விவகாரங்களில் பெரும் உடைப்பை செய்வதில் பிரபாகரனிற்கு உடன்பாடில்லை. குறிப்பாக திருமணம். அது ஒரு புனிதமான உறவு என்பதே அவரது நிலைப்பாடு. புலிகளின் முக்கியஸ்தராக இருந்தவர் தினேஷ் மாஸ்ரர். போர்ப்பயிற்சி ஆசிரியர்களை தயார் செய்வது, திட்டமிடுதல் போன்றவற்றில் பொறுப்பானவராக இருந்தவர். அவரது திருமண வாழ்க்கை சீராக அமையவில்லை. மகளிர் தளபதியாக இருந்த ஜானகியை திருமணம் செய்தார். இருவருக்குமிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். ஜானகிக்கும் பிரபாகரனின் மனைவி மதிவதனிக்குமிடையில் நெருக்கமான நட்பிருந்தது. இருவரையும் இணைத்து வைக்க பிரபாகரன் முயற்சித்தார். இப்படியான சமரச முயற்சிகளை பிரபாகரன் செய்ததாக இதற்கு முன் தகவல் இல்லை. ஜானகிக்கும் மதிவதனிக்கும் இடையில் இருந்த நெருக்கம் அதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.

ஆனால் அந்த சமரச முயற்சி வெற்றிபெறவில்லை. பிரபாகரன் அதற்கு பின்னர் தினேஷ் மாஸ்ரரை முக்கிய பொறுப்புக்களில் நியமித்ததுமில்லை, சந்தித்ததுமில்லை.

பிரபாகரனின் இந்த இயல்பை பார்த்து, அவர் பழமைவாத சிந்தனை கொண்டவர் என யாராவது தவறாக சிந்திக்ககூடாது. பெண்களை உயர்வாக மதித்தார், தாழ்வாக மதித்தார் என்ற பேச்சிற்கே இடமில்லாமல், பெண்களை மனிதர்களாக மதித்தார். அவர்களின் வாழ்க்கையை அவர்களே தீர்மானிக்க வேண்டுமென்பதே பிரபாகரனின் நிலைப்பாடு. குடும்பம் என்ற அமைப்பிற்குள் இருவரும் இணைந்தால் பிரியக்கூடாதென நினைத்தாலும், தமக்கான எல்லையை மனைவிகளே தீர்மானிக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார். அதுபோல மகள் துவாரகாவின் வாழ்க்கையிலும் தலையிட்டதில்லை.

இதற்கு ஒரு உதாரணம். 2007 இல் கிளிநொச்சியில் ஒரு ஆசிரியையிடம் பரதநாட்டியம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார் துவாரகா. அதேநேரத்தில் புதுக்குடியிருப்பில் இருந்த சோதியா படையணி போராளிகளிடம் 240 ட்ரக்ரர் ஓட்டி பழகினார். ட்ரக்ரர் ஓட்டி பழகியதும், அந்தபகுதியிலுள்ள முகாம் ஒன்றிற்கான தண்ணீர் பவுசரை அந்த ட்ரக்ரரில் கொழுவி. தானே ஓட்டிச் செல்வார். ட்ரக்ரர் ஓட்டுவதில் அவருக்கு அலாதி பிரியம் இருந்தது.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/43071/

 

Link to comment
Share on other sites

கிருபன் தொடர்ச்சியாக இணைப்பதற்கு நன்றி.

இவற்றை வாசிக்கும்போது எதையாவது சொல்ல தோன்றினாலும் எழுத விரும்புவதில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்தாளர்களின் தொகுப்பு மட்டுமன்றி இயக்கத்தில் மேலோட்டமான/புனையபட்டு வேண்டுமென்றே கசியவிடப்பட்ட கதைகளை உண்மையென்று எழுதுவதில் மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். ("0"/ராதா வான்காப்பு/படையப்புலனாய்வு, வெளிநாட்டு முகவர் அமைப்பு) போன்றவற்றில் பணியாற்றியவர்களின் தொகுப்பாக அமைகிறது.

இருந்தாலும் இதை வாசிக்க ஒரேயொரு காரணம் தான் இருக்கிறது. இதில் இடம்பெறும் சம்பவங்களும், சில புனை கதைகளும் எங்களுக்கு பலவற்றை மீண்டும் நினைவூட்டுவதாக அமைகிறது. ஒழுங்கற்று கிடக்கும் எண்ணங்களை ஒருமைப்படுத்துகிறது.

இந்த கதைகளில் வரும் நாயகர்கள், நாயகிகள்,உருவாக்கப்பட்ட/மிகைப்படுத்தப்பட்ட நாயகர்கள் என பலருடன் பழகிய வாய்ப்புக்கிடைதமை இந்த பிறவியில் கிடைத்த வரமாக கருதுகிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பதிவை ஒட்டும்போது ஏதோ ஒரு உள்ளுணர்வு பகலவன் ஒரு கருத்து வைப்பார் என்று சொல்லியது! அது பலித்தும் விட்டது😯

கோர்வையாக இல்லாமல் கேள்விப்பட்டவற்றை  துண்டுதுண்டாக எழுதுவது போலத்தான் உள்ளது. புலிகளின் வரலாற்றை ஆழமாக எழுதக்கூடியவர்கள் இல்லை என்றுதான் தெரிகின்றது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பால்ராஜின் பெயர் சொன்ன பரந்தன் ஊடறுப்பு தாக்குதல்!: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 66

April 6, 2019
elipant-1.jpg
 

பீஷ்மர்

தனது தளபதிகள்- இயக்கத்தை வழிநடத்துபவர்கள்- தூய நடத்தையுள்ளவர்களாக இருக்க வேண்டுமென்பதில் பிரபாகரன் உறுதியான நிலைப்பாடுடையவர் என்பதை கடந்த பாகங்களில் விளக்கமாக குறிப்பிட்டிருந்தோம். இதற்கு இன்னொரு உதாரணம் கருணா விவகாரம்.

கருணா விவகாரத்தை இந்த பகுதியில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். அதில், கருணா பிளவு விவகாரத்தின் அடிப்படையிலிருந்து குறிப்பிட்டிருக்கிறோம். கருணா பிளவு என்பது தத்துவார்த்தரீதியில் ஆரம்பித்ததல்ல, அது சப்தகியில் இருந்து ஆரம்பித்தது என்பதை விளக்கமாக சொல்லியிருந்தோம்.

மட்டக்களப்பு படையணியான அன்பரசி மகளிர் தளபதியாக, கிழக்கின் மகளிர் தளபதியாக இருந்தவர் சப்தகி (சாளி). கருணா- புலிகள் பிரிவின் முதல் முடிச்சு சப்தகி விவகாரத்தில்தான் ஆரம்பித்தது.

படையினர் வன்னியை இரண்டாக பிளக்க மேற்கொண்ட ஜெயசிக்குறு படைநடவடிக்கைக்கு எதிரான சமரிற்காக வன்னிக்கு வந்த கிழக்கு படையணிகளுடன் சப்தகியும் வந்து வவுனியா முனைகளில் யுத்தத்தில் ஈடுபட்டார்.

அன்பரசி மகளிரணியை அவர்தான் வழிநடத்தினார். அந்த சமயத்தில் சப்தகி மீது பாலியல் பலவீனம் உள்ளவர் என்ற குற்றச்சாட்டு அமைப்பிற்குள் எழுந்தது. இது பின்னர் விவகாரமாகியபோது, சப்தகியை அமைப்பிலிருந்தே நீக்குமாறு பிரபாகரன் கட்டளையிட்டிருந்தார். இதை கருணா செயற்படுத்தவில்லை. சப்தகியை அன்பரசி படையணி தளபதியிலிருந்து நீக்கி, தன்னுடன் வைத்துக் கொண்டார்.

பின்னர், கோபத்துடன் கருணாவை வன்னியை விட்டு மட்டக்களப்பிற்கு அனுப்பியபோது, சப்தகி விடயத்தையும் சுட்டிக்காட்டித்தான் அனுப்பியிருந்தார் பிரபாகரன். ஆனால், தனது தளபதி மீது வேறு நடவடிக்கைகள் எடுக்கவில்லை. தன்னுடன் அன்பாக, விசுவாசமாக வளர்ந்த தளபதிகளை சந்திக்காமல், சற்று தள்ளி வைப்பதே, அவர்கள் தமது தவறை உணர்ந்து திருந்துவதற்காக ஒரு வழிமுறையாக பிரபாகரன் கருதினார். கருணாவிற்கு வேறு தண்டனை அளிக்காமல், அவரை வன்னியை விட்டு அனுப்பியதும், பிரபாகரனின் “மனரீதியான“ தண்டனைதான்.

IMG_487028540734-300x183.jpeg

 

பால்ராஜின் தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சையான பின்னர் அவருடனான தனிப்பட்ட சந்திப்புக்களை பிரபாகரன் தவிர்த்து கொள்ள ஆரம்பித்தார். பால்ராஜிற்கும் நீரிழிவு, இரத்த அழுத்தம், கால்பாதிப்பு என நோய்களும் உச்சமடைய ஆரம்பித்துவிட்டது. இதனால் பால்ராஜ் இயல்பாகவே முன்னணி செற்பாட்டிலிருந்து ஒதுங்க வேண்டியதாகிவிட்டது.

இந்த இடத்தில் பால்ராஜின் சில இயல்புகள் பற்றி குறிப்பிட வேண்டும். அமைப்பில் இருந்த தன்னம்பிக்கைமிக்க, தனது திறனில் நம்பிக்கை அதீதமாக கொண்ட, மிகுதியான திறன் கொண்ட தளபதி அவர்.

விடுதலைப்புலிகளின் தாக்குதல் வீடியோக்களை கூர்ந்து அவதானித்தவர்கள் ஒரு விடயத்தை கவனித்திருக்கலாம். தாக்குதலிற்கு முன்பாக பேராளிகள் மத்தியில் தளபதிகள் உரையாற்றுவார்கள். அப்போது எல்லா தளபதிகளும் “தலைவர் திட்டமிட்டார்… தலைவரின் நுணுக்கமான திட்டமிடல்… தலைவர் எதிர்பார்க்கிறார்“ என்றுதான் பேசுவார்கள். பொட்டம்மான், சொர்ணம், தீபன், பானு என யாராக இருந்தாலும் இதுதான் பேச்சுப்பாணி. பால்ராஜ் மட்டுமே வித்தியாசமானவர். “நாங்கள் திட்டமிட்டுள்ளோம்… நுணுக்கமாக திட்டமிட்டுள்ளோம்… இயக்கம் எதிர்பார்க்கிறது“ என்பார். இதன் அர்த்தம் பிரபாகரனை தவிர்த்து பால்ராஜ் செயற்பட முனைந்தார் என்பதல்ல. பிரபாகரனிற்காக உயிரையும் கொடுக்க பால்ராஜ் தயாராகத்தான் இருந்தார். இதற்கு ஓயாதஅலைகள் 2, குடாரப்பு தலையிறக்கத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் செயற்பட்ட விதங்கள் சான்று.

நிகழ்வுகள் மற்றும் பிரத்தியேக சந்திப்புக்களில் பிரபாகரனுடன் தளபதிகள் கூடும் சந்தர்ப்பங்களில், பிரபாகரன் போகும்வரை அனைத்து தளபதிகளும் காத்திருப்பார்கள். அவர் போனபின்னர்தான் தளபதிகள் கிளம்புவார்கள். பால்ராஜ் மட்டுமே விதிவிலக்கு. எங்கு போனாலும் தனது பணிகள் முடிந்தால் உடனே கிளம்பிவிடுவார். அந்த சந்தர்ப்பத்தில் பிரபாகரன் அங்கு நின்றாலும், தனது பணி முடிந்தது, இனி அவசியமில்லைதானே என்பதை பிரபாகரனிமே உறுதிசெய்துவிட்டு கிளம்பிவிடுவார். அதுபோல சந்திப்புக்கள், நிகழ்ச்சிகளிற்கு முன்னரே சென்று அலட்டிக்கொள்ளும் மனோபாவமும் அவற்றவர். மிகக்குறிப்பிட்ட நேரத்திற்கே செல்வார். சென்றதும், எதிர்ப்படும் தளபதிகளிடம் அப்போதைய களநிலைமைகளை பற்றி ஓரிரண்டு வசனம் மட்டுமே பேசிக்கொள்வார். வேறு எதையும் பேசுவதில்லை.

பிரபாகரனிற்கு அளவிற்கு அதிகமாக ஆராத்தி எடுக்க அவர் விரும்புவதில்லை. விசுவாசமென்பது செயற்பாட்டில் இருக்க வேண்டுமென நினைப்பவர். அதனால்தான் பிரபாகரன் குறிப்பிடும் நெருக்கடியான களங்களை பால்ராஜ் பொறுப்பேற்பார்.

ஓயாதஅலைகள் 2 நடவடிக்கை மூலம் கிளிநொச்சியை புலிகள் கைப்பற்றினார்கள். 1998  செப்ரெம்பரில் இது நடந்தது. இதே வருடத்தின் தொடக்கத்தில்- பெப்ரவரி- கிளிநொச்சி மீது ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் வெற்றியளிக்கவில்லை. இந்த அனுபவத்தில் இருந்து, ஓயாதஅலைகள் நடவடிக்கை திட்டமிடப்பட்டது. கிளிநொச்சிக்கு பின்னால் வால்போல் நீண்டிருந்த பரந்தன், ஆனையிறவு, யாழ்ப்பாணத்திலிருந்து வரும் பின்தள உதவிகளை கட்டுப்படுத்தாத வரை கிளிநொச்சியை வீழ்த்த முடியாதென்பதை உணர்ந்த புலிகள், பரந்தனில் ஒரு பலமான தடுப்பை ஏற்படுத்தி, பின்தள உதவியை தடுக்க திட்டமிட்டனர். அது சாதாரண பணியல்ல. இறுக்கமான இராணுவ அரணிற்குள் இரகசியமாக ஊடுருவி அரண் அமைப்பது, இரண்டு பக்கத்தாலும் நடத்தப்படும் இராணுவ தாக்குதலை முறியடிக்க வேண்டும். அப்படி முறியடித்தால்தான் அந்த அணி உயிர் தப்பலாம். இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக செய்தால்தான் கிளிநொச்சி சமர் வெற்றியடையும்.

தாக்குதல் திட்டமிடப்பட்டு, ஒவ்வொரு நடவடிக்கையும் ஒவ்வொருவரிடம் கையளிக்கப்பட்டது. பரந்தனிற்கு அண்மையில் ஊடுருவி கூறாக்கும் நடவடிக்கையை செய்ய முடியுமா என பிரபாகரன் கேட்க, மறுபேச்சில்லாமல் சிரித்த முகத்துடன் பால்ராஜ் ஏற்றுக்கொண்டார்.

கிளிநொச்சியில் படைமுகாம் மீதான தாக்குதலை தளபதி தீபன் வழிநடத்தினார். பரந்தன் ஊடறுப்பை தளபதி பால்ராஜ் வழிநடத்தினார். யாழ்செல்லும் படையணி, மாலதி படையணி, மற்றும் சில ஆண்கள் படையணி பிரிவுகளுடன் பால்ராஜ் அணி, கிளிநொச்சிக்கும் பரந்தனிற்கும் இடையில் இரவோடு இரவாக ஊடுருவி நிலையெடுத்தது. வெட்டவெளியான பிரதேசம். காப்பு, மறைப்பு எதுவும் கிடையாது. விடிந்தால் செல் அடித்தே இராணுவம் துவம்சம் செய்துவிடும்.

காப்பை தாங்களே உருவாக்கிக் கொள்வதற்காக, உரப்பை, மண்வெட்டிஎன்பவற்றை அந்த அணி கொண்டு சென்றது.

கிளிநொச்சி மீது நள்ளிரவிற்கு பின்னர் தாக்குதல் ஆரம்பிப்பதற்கு முன்னர் உரப்பைகளில் மண்மூட்டை அமைத்து அதை அரணாக்க வேண்டும். அருகிலுள்ள படையினருக்கு சத்தம் கேட்கவும் கூடாது. பால்ராஜின் அணி அதை செய்தது.

18119261_318510781903100_549872810584180

 

கிளிநொச்சி மீது தாக்குதல் ஆரம்பித்ததும் பரந்தனிலிருந்து படையினர் உதவி அணிகளை அனுப்ப முயன்றனர். கிளிநொச்சியிலிருந்து காயமடைந்தவர்களை பரந்தனிற்கு கொண்டு செல்ல முயற்சிக்கப்பட்டது. சமநேரத்தில் இரண்டு முனைகளிலும் புலிகளின் அணி மோதியது. பரந்தனில் இருந்து ஒரு சிப்பாய்கூட கிளிநொச்சிக்கு செல்ல முடியவில்லை.

கிளிநொச்சியில் படைமுகாம் வீழ்ந்து, பரந்தனின் முன்தள படைமுகாமும் வீழ்ந்த பின்னர் எஞ்சிய படையினர் புலிகளின் தடுப்பரணை உடைத்துக்கொண்டு ஆனையிறவுப் பக்கமாக தப்பியோட முயன்றனர். ஆயிரக்கணக்கான படையினர் இறப்பவர் போகட்டும், எஞ்சுபவர்கள் போய் சேர்வோம் என புலிகளின் அரணை நோக்கி ஓடினார்கள். கிளிநொச்சி பக்கத்தில்- அவர்களின் பின்பக்கத்தில் அப்படி அடி. தப்பியோடிவரும் படையினரை குருவி சுடுவதை போல போராளிகள் சுட்டு வீழ்த்தினார்கள். அலைஅலையாக படையினர் தப்பி வருவதால் ஒரு கட்டத்தின்மேல் சுடசுட படையினர் போராளிகளை நெருங்கினார்கள். இருதரப்பும் கைகலப்பிலும் ஈடுபட்டுமளவிற்கு நெருக்கமான மோதல் நடந்தது. புலிகளின் அரணை கைப்பற்ற படையினர் ஓடிவரவில்லை. அரணை கடந்து ஆனையிறவு பக்கமாக தப்பியோடி செல்லவே முயன்றனர்.

லெப்.கேணல் செல்வி ஒரு பகுதியில் அணியை வழிநடத்திக் கொண்டிருந்தார். அவர் வழிநடத்திய பக்கத்தால் படையினர் அதிகமாக தப்பிச்செல்ல முயன்றனர். காரணம், பெண் போராளிகளின் பக்கத்தால் தப்புவது இலகு என நினைத்தனர். பெண்களின் நிலைப்பக்கங்களில் படையினர் “சொறிவது“ வழக்கம்தான்.

blogger-image-119166337-300x225.jpg

 

இந்த நினைப்பே அந்த முனையில் படையினருக்கு பேரிழப்பை கொடுத்தது. செல்வியின் அணி மரணஅடி கொடுத்தது. செல்வி நின்ற நிலையிலும் கடும் மோதல் நடந்தது. ஒருகட்டத்தில் செல்வியின் நிலையில் நின்றவர்களிடம் வெடிபொருள் தீர்ந்து விட்டது. படையினர் நெருக்கமாக வரத் தொடங்கி விட்டனர். தனது நிலையை கடந்து படையினர் தப்பிச்செல்லக்கூடாது என்பதே செல்வியின் ஒரே நோக்கம்.

அந்த சமயத்தில் புலிகளின் குட்டிசிறி மோட்டார் அணி, மணிவண்ணன் ஆட்லறி அணி என்பன சிறப்பாக செயற்பட தொடங்கி விட்டன. களமுனை போராளிகளும், பின்னணி மோட்டார் அணிகளும் தொழில்நுட்ப ரீதியில் இணைக்கப்பட்டு, களமுனைக்கு மோட்டார்செல் தேவையெனில் தேவையான இடத்தில்- ஒரு இஞ்சி நகராமல்- மிக துல்லியமாக எறிகணையால் தாக்கும் வல்லமையை புலிகள் பெற்றிருந்தனர். ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தை பாவித்து புலிகள் இதனை செய்தனர். தமது காவலரணிற்கு எதிராக படையினர் வந்தால், மோட்டார் அணியுடன் இணைப்பை ஏற்படுத்தி, படையினரின் தலையில் எறிகணையை வீழ்த்தும் வல்லமையை புலிகள் பெற்றிருந்தனர். புலிகளின் இந்த வல்லமையை முறியடிக்காத வரை யுத்தத்தில் வெல்ல முடியாதென்பதை உணர்ந்து, புலிகளின் ஆட்லறி எறிகணை கொள்வனவை இறுதியுத்த சமயத்தில் அரசு தடுத்திருந்தது.

(தொடரும்)

 

 

http://www.pagetamil.com/46673/

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

‘எனக்கு மேலேயும் செல் அடியுங்கள்‘… கட்டளை மையத்தை நிலைகுலைய வைத்த செல்வி: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 67

April 11, 2019
Tamil-Tigers_1383026c.jpg
 

 பீஷ்மர்

ஓயாத அலைகள் இரண்டு நடவடிக்கையை வெற்றிகொள்ள வேண்டுமென்றால் கிளிநொச்சியிலுள்ள படையினருக்கு ஆனையிறவு பின்தளத்திலிருந்து உதவி கிடைக்கக்கூடாது. உதவியை தடுக்கும் பொறுப்பு பால்ராஜிற்கு கொடுக்கப்பட்டது என்பதை கடந்தவாரம் குறிப்பிட்டிருந்தோம்.

கிளிநொச்சிக்கும் பரந்தனிற்குமிடையில் இரகசியமாக ஊடறுத்து நகர்ந்து அணியுடன் நிலையெடுத்தார் பால்ராஜ். கிளிநொச்சி மோதலில் தாக்குபிடிக்க முடியாமல் தப்பியோடி வந்த படையினர் ஊடறுத்த போராளிகளுடன் கைகலப்பில் ஈடுபட்டதை கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம்.

லெப்.கேணல் செல்வியின் நிலைக்கருகில் இராணுவம் குழுமிவிட்டது. ஆனமட்டும் சுட்டு படையினரை வீழ்த்தினார்கள் போராளிகள். இறுதியில் போராளிகளின் கையிருப்பில் இருந்த வெடிபொருள் தீர்ந்துவிட்டது. இராணுவம் போராளிகளை சூழ்ந்துவிட்டது. அடுத்து என்ன செய்யலாம்?

செல்வி ஒரு அதிரடி முடிவெடுத்தார். போராளிகளிற்கு உதவியாக ஆட்லறி தாக்குதல் செய்து கொண்டிருந்த ஆட்லறி அணியை தொடர்பு கொண்டார். தமது நிலை அமைந்துள்ள அமைவிடத்தை கணித்து, அந்த இடத்திற்கு ஆட்லறி செல் அடிக்க சொன்னார். எனினும், ஆட்லறி அணி தயங்கியது. போராளிகள் இருக்குமிடத்தை குறிவைத்து எப்படி செல் அடிப்பதென தயங்கி, மறுத்தார்கள். ஆனால் செல்வி உறுதியாக இருந்தார். தான் அறிவித்த அமைவிடத்திற்கு செல் அடிக்க சொல்லி உறுதியாக இருந்தார். இயன்றவரை பதுங்குகுழிக்குள் இருந்து கொள்வதாக செல்வி கூறினார். பகுதி கட்டளை தளபதியுடன் கலந்துரையாடி செல்வியின் நிலை மீது எறிகணை தாக்குதல் நடத்துவதாக முடிவாகியது.

aanaiyiravu-300x166.jpg குடாரப்பு தரையிறக்கத்திற்கு தயாராகிய சமயத்தில்

இதற்குள் செல்வியின் நிலை வாசல் வரை இராணுவம் வந்துவிட்டது. எஞ்சிய ரவைகளை வைத்து அவர்களையும் போராளிகள் வீழ்த்திக் கொண்டிருக்க, புலிகளின் எறிகணை மழை ஆரம்பித்தது. அந்த பகுதியில் குழுமிய படையினர் பெரும்பாலானவர்கள் வீழ்ந்தார்கள்.

செல்வி இருந்த பதுக்குகுழி “ஐ“ பங்கர் வகையை சேர்ந்தது. அதாவது, மேல்ப்பக்கம் மூடப்படாமல் நான்கு, ஐந்து அடி நீளத்தில் வெட்டப்படும், ஒரே நீளமான பங்கர். அன்று இரவு இராணுவ பகுதிக்குள் நுழைந்து அவசரஅவசரமாக வெட்டிய சிறிய பதுக்குகுழிகள் அவை. நேரடி துப்பாக்கிச் சூட்டிலிருந்து பாதுகாத்து கொள்ளத்தான் உகந்தவை. எறிகணை தாக்குதலிலிருந்து தப்பிக்க உகந்தவை அல்ல.

அந்த எறிகணை தாக்குதலில் ஏராளம் இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். செல்வியும் சில போராளிகளும் மரணமானார்கள். இப்படியான அர்ப்பணிப்புக்களால் அந்த ஊடறுப்பு சமர் வெற்றியடைந்தது. அனைத்திற்கும் முக்கிய காரணம், பால்ராஜின் திட்டமிடல், வழிநடத்தல்.

இதன்பின் பால்ராஜின் பெயர் சொன்ன அடுத்த பெரிய தாக்குதல் குடாரப்பு தரையிறக்கம். விடுதலைப்புலிகளின் பெருங்கனவுகளில் ஒன்று ஆனையிறவை கைப்பற்றல். ஆனால் பன்னிரண்டு வருடங்களாக அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. அதற்கு இரும்புக்கோட்டையென இராணுவம் சும்மா பெயர் வைத்திருக்கவில்லை. உண்மையிலேயே இரும்புக்கோட்டையாகத்தான் இருந்தது.

1991 இல் ஆகாய கடல் வெளி சமர் என பெயரிட்டு பிரமாண்ட தாக்குதல் ஒன்றை ஆனையிறவின் மீது தொடுத்தார்கள். அதில் போராளிகள் மரணமடைந்தார்கள். 53 நாட்கள் நடந்த இந்த சமரில் புலிகள் வெற்றியடைய முடியவில்லை. இப்பொழுதும் ஆனையிறவு பகுதியால் பயணிப்பவர்கள் ஒரு காட்சியை காணலாம். படையினர் ஒரு யுத்த கவச வாகனத்தை காட்சிப்படுத்தி, ஒரு இராணுவவீரனை நினைவு கூர்கிறார்கள். முன்னர் புலிகள் அந்த இடத்தை நினைவுகூர்ந்தனர்.

Screenshot_2-300x178.png குடாரப்பு தரையிறக்கம்

வெட்டைவெளியை கடந்து இராணுவ பகுதியை நெருக்க முடியாமலிருந்து புலிகள் கவச வாகன உத்தியை பாவித்தார்கள். இரும்பு கவசங்களால் டோசர் ஒன்றை மறைத்து, கையெறி குண்டுகளால் தாக்கப்பட முடியாதவாறு நெற் அடித்து வாகனமொன்றை தயார் செய்தனர். அதை லெப்.கேணல் சராவும் (கல்வியங்காட்டை சேர்ந்தவர்) மேஜர் குததாசும் கவச வாகனத்தை நகர்த்தி செல்ல, அதன் மறைவில் போராளிகள் முன்னேறுவது திட்டம். இந்த கவசவாகனத்தை படையினரால் தடுத்து நிறுத்தவே முடியவில்லை. படையினரின் நிலையை நெருங்கிய சமயத்தில் லான்ஸ் கோப்ரல் காமினி குலரத்ன என்ற சிப்பாய் திடீரென கவச வாகனத்தில் ஏறி, அதற்குள் கையெறி குண்டை வீசிவிட, வாகனத்திலிருந்தவர்கள் கொல்லப்பட்டனர். காமினி குலரத்னவும் உயிரிழந்தார். அவரது நினைவிடத்தையே படையினர் தற்போது உருவாக்கி வைத்துள்ளனர்.

அதன்பின் 1998 இலும் ஆனையிறை புலிகள் தாக்கினார்கள். வெற்றியடைய முடியவில்லை. இந்த அனுபவங்களை வைத்து, 2000 இல் ஒரு திட்டம் தீட்டினர். வெட்டைவெளி, மற்றும் கடலால் சூழப்பட்ட இயற்கை பாதுகாப்பை கொண்ட ஆனையிறவை நேரடியாக மோதி வெற்றிபெற முடியாதென்பதை தெரிந்த புலிகள் தீட்டியது, உலகப்போரியல் அறிஞர்களையே மலைக்க வைக்கும் திட்டம்.

வெற்றிலைக்கேணியில் இருந்து புறப்பட்ட புலிகளின் அணி 5 கடல்மைல் பயணம் செய்து குடாரப்பில் தரையிறங்கினார். கடற்படை மற்றும் கரையோர இராணுவ நிலைகளிற்கு தெரியாமல் கடலில் சுமார் 1,200 போராளிகளை கொண்டு செல்வது சாதாரண காரியமல்ல.

குடாரப்பில் தரையிறங்குவதற்கு வசதியாக இராணுவத்தை திசைதிருப்ப புலிகள் ஒரு கரும்புலி தாக்குதல் செய்தனர். பளையில் அமைந்திருந்த ஆட்லறி நிலைகள் மீது ஒரு திடீர் தாக்குதல் நடத்தினர். படையினரின் கவனம் திசைதிரும்பியிருந்த சமயத்தில் குடாரப்பில் தரையிறங்கிய போராளிகள் சுமார் பத்து கிலோமீற்றர் தூரம் மணல், சதுப்பு பகுதிகளை கடந்து இத்தாவிலில் பிரதான வீதியை ஊடறுத்து நிலைகொண்டனர். இதுவே பின்னாளில் பிரபலமான குடாரப்பு தரையிறக்கமும், இத்தாவில் BOXஉம்!

33305579_2178877545676727_15419319354445

 

ஆனையிறவு, யாழ்ப்பாணப் பகுதியில் 40,000 இராணுவம் நிலைகொண்டிருந்தது. இத்தாவிலில் நிலைகொண்டிருந்த 1,200 போராளிகளையும் சுற்றிவளைத்து இராணுவம் மூர்க்கமாக தாக்கியது. டாங்கிகள், கவசவாகனங்கள், ஆட்லறிகள் கொண்டு இராணுவம் மூர்க்கமாக தாக்கியது. கற்பனைக்கெட்டாத பெரும் போர் அது. ஆனையிறவிற்கான உண்மையான யுத்தமுனை அதுதான். பால்ராஜ் அதை வழிநடத்தினர். வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு பகுதியிலுள்ள தளங்களை தாக்கும் முனைகளை தீபன் வழிநடத்தினார். இந்த இடங்களை கைப்பற்றியதன் மூலம் பால்ராஜ் அணிக்கான தரைத்தொடர்பு ஏற்பட்டது.

34 நாட்கள் பால்ராஜ் அணி அங்கு நிலைகொண்டதன் மூலம் ஆனையிறவு படையினருக்கு உணவு, வெடிமருந்து தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையெல்லாம் விட குடிதண்ணீர் பிரச்சனை ஏற்பட்டது. ஏனெனில் ஆனையிறவு படையினருக்கான குடிதண்ணீர் இயக்கச்சி பகுதியில் இருந்துதான் சென்றது. புலிகள் அதை தடைசெய்த பின்னர் படையினரால் ஆனையிறவில் நிற்க முடியவில்லை. கிளாலி கரையோரத்தால் தப்பியோடிவிட்டனர். குடாரப்பு தரையிறக்கம், இத்தாவில் BOX மூலம் பால்ராஜ் இந்த அதிசயத்தை நிகழ்த்தினார்.

குடாரப்பு தரையிறக்கத்திற்கு புறப்படுவதற்குமுன் போராளிகள் மத்தியில் பால்ராஜ் சொன்னது இதைதான்- “கடற்புலிகள் இப்பொழுது எங்களை கொண்டுபோய் இறக்கி விடுவார்கள். ஏற்றுவதற்கு திரும்பி வரமாட்டார்கள். பாதையெடுத்து நாங்கள்தான் திரும்பி வர வேண்டும்“

(தொடரும்)

 

 

http://www.pagetamil.com/47499/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனுடன் முரண்பட்ட தமிழேந்தி: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 68

April 15, 2019
316007_108377422611887_100003188896868_4
 

பீஷ்மர்

ஆனையிறவை வீழ்த்த புலிகள் கையாண்ட உத்திதான், ஆனையிறவை துண்டாடுவது. பால்ராஜ் தலைமையிலான அணி குடாரப்பில் தரையிறங்கி, ஆனையிறவு இராணுவ முகாமிற்கான, யாழ்ப்பாணத்துடனான தொடர்பை துண்டித்தார் என்பதை கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம்.

யாழ்ப்பாணத்துடனான தொடர்பு இத்தாவிலில் துண்டிக்கப்பட்டதும், பின்தளத்துடன் பிரதான பாதை தொடர்பை ஆணையிறவு இழந்தது. கிளாலி முகாமிலிருந்து, சீரற்ற பாதை தொடர்பு ஒன்றின் ஊடாகவே உணவுகள் வந்தன. குடிநீர் இயக்கச்சியில் இருந்து வந்தது.

இயக்கச்சியில் உள்ள குடிநீர் கிணற்றில் இருந்து வடக்கு ஆளுனர் செயலகத்திற்கு நீர் வருவதாக அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியானதை வாசகர்கள் படித்திருக்ககூடும். அந்த கிணற்றை கைப்பற்றித்தான், ஆனையிறவிற்கான குடிநீர் வழங்கலை நிறுத்தினர் புலிகள். அந்த கிணறுதான் அப்போது ஆனையிறவை அண்டிய படைமுகாம்களிற்கான ஒரேயொரு குடிநீர ஆதாரம்.

இன்றும் அந்த கிணற்றில் இருந்துதான் குடாநாட்டின் பெரும்பாலான படைமுகாம்களிற்கு பௌசர்களில் தண்ணீர் அனுப்பப்படுகிறது. பலாலி போன்ற படைத்தளங்களிற்கும் அந்த கிணற்றிலிருந்தே நீர் வழங்கப்படுகிறது. இதொரு இடையீடான தகவல்.

இலங்கைத் தமிழர்களிடம் நீண்ட போர் மரபுத் தொடர்ச்சியில்லை. பண்டைக்காலத்தில் குறிப்பிடும்படியான போராற்றல் மிக்க மன்னர்கள் இருக்கவில்லை. இதற்கு ஒரே காரணம்- நமது இனம் சிறியது. இராச்சியம் குறுகியது. அனுராதபுர, பொலன்னறுவை இராச்சியங்கள் பரந்தளவையாக இருந்ததால், வரலாற்றில் பெயர் சொல்லும் இராச்சியங்களாக அவை மாறின.

பெரிய அந்த சிங்கள இராச்சியங்களிற்கு போர் வரலாறுகள் உண்டு. கலை, கலாச்சார, கட்டிட அமைப்புக்களில் தனித்துவமிக்க அரசுகளாக அவை உருவாகின. நமக்கு அது அவ்வளவாக வாய்க்கவில்லை.

ஐரோப்பியரின் வருகைக்கு பின்னரே சங்கிலியன், வண்டாரவன்னியன் என இருவரின் வீரஞ்செறிந்த வாழ்வை வரலாறாக கொண்டுள்ளோம். அதன்பின் புலிகளின் காலத்திலேயே அப்படியொரு வீரவரலாறு உருவானது. பிரபாகரன் அதை உருவாக்கினார். அவரது வீர இராச்சியத்தில் தலைசிறந்த போர்த்தளபதியாக விளங்கியவர் பால்ராஜ். ஈழத்தமிழர் வரலாற்றில் தலைசிறந்த போர்த்தளபதிகள் பட்டியலில் சந்தேகமேயில்லாமல் முதலிடத்தை அவருக்கு கொடுக்கலாம்.

45t-300x171.jpg ஆனையிறவிலிருந்து தப்பியோடிய இராணுவத்தின் டாங்கியில் புலிகள்

எனினும் அவரது இறுதிக்காலத்தில் அமைப்பிற்குள் சரியாக புரிந்து கொள்ளப்படாமை, அவரது நோய்கள் என்பன இணைந்து அவரை களத்திலிருந்து வெளியில் தள்ளி வைத்திருந்தது. அவர் களத்தில் இல்லாதது வெளிப்படையாக தெரிந்தது. அவர் ஒருவரால் இந்த யுத்தத்தை தலைகீழாக மாற்றியிருக்க முடியும் என்பதல்ல. ஆனால் இந்த யுத்தத்தில் கணிசமான செல்வாக்கை அவர் செலுத்தியிருப்பார் என்பது நிச்சயம்.

நான்காம் ஈழப்போரின் ஆரம்ப நாட்களில் புலிகள் யாழ்ப்பாணம் மீது ஒரு தாக்குலை நடத்தினார்கள். அது சிறப்பான முடிவல்ல என்பது பால்ராஜின் நிலைப்பாடு. மன்னார் தள்ளாடி முகாம்தான் பால்ராஜின் இலக்கு. இறுதியுத்ததில் புலிகளின் முதுகெலும்பை உடைத்த 58வது டிவிசன் அப்போது தள்ளாடியில் உறங்கு நிலையில் இருந்தது. எதிரி விழித்து தாக்குதல் நடத்தியபின் எதிர்கொள்வதைவிட, தயாராகாத சந்தர்ப்பத்தில் எதிர்கொள்வதே ஆளணியில் சிறிய படையணிகளிற்கு உகந்தது. அதைதான் பால்ராஜ் திட்டமிட்டார். இப்படியான நகர்வுகளின் மூலம் வன்னி யுத்தத்தில் அவர் செல்வாக்கை செலுத்தியிருப்பார்.

நீரிழிவு, இரத்த அழுத்தம், காயமடைந்து செயலிழந்த கால் தசைகள் அழுக தொடங்கியதென இறுதிக்காலத்தில் கடுமையான அவஸ்தையை சந்தித்தார். இடையில் ஒருமுறை சிங்கப்பூரிற்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டார். எனினும், அந்த சிகிச்சையும் பலனளிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் பால்ராஜ்தான். அவர் தனது உடலை சரியாக கவனிப்பதில்லை. இதனால்தான் இளமைக்காலத்திலேயே அதிக நோய்க்காளானார். நோய் வந்த பின்னரும் சிகிச்சையில் அக்கறை காட்டுவதில்லை.

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0% பிரபாகரன்- வேலவன்

நீரிழிவை கட்டுப்படுத்த அவர் முயற்சிக்கவில்லை. இதனால் அடிக்கடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். மாத்திரைகளையும் சீராக பாவிப்பதில்லை. தான் பிறந்தது போரிடுவதற்கு என்பதை போல அவரது செயற்பாடுகள் இருக்கும். அமைப்பை பற்றியும், போர்க்களத்தை பற்றியுமே எந்த நேரமும் சிந்தித்தபடியிருப்பார். இதுவே அவருக்கு எமனானது.

2008 மே மாத ஆரம்பத்திலேயே பால்ராஜின் உடல்நிலை சரியாக இருக்கவில்லை. மே மாதம் 20ம் திகதி மதியமளவில் பால்ராஜிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, உயிர்நீத்தார். அவர் உயிர் பிரிந்தபோது, விசுவடு 12ம் கட்டை பகுதியிலுள்ள தனது தளபதிகள் சந்திப்பு முகாமில் பிரபாகரன் இருந்தார். மன்னார் களமுனை தொடர்பான ஒரு ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். அவருடன் அப்போதைய இம்ரான் பாண்டியன் படையணி தளபதி வேலவனும் இருந்தார். அப்பொழுதுதான் பால்ராஜின் மரணச்செய்தியை உதவியாளர் சொன்னார். அப்போது பிரபாகரனின் எதிர்வினை எப்படியிருந்ததென்பதை, வேலவன் பின்னாளில் நெருக்கமான சிலருடன் பகிர்ந்திருந்தார். பிரபாகரனின் எதிர்வினை கொஞ்சம் அதிர்ச்சியளிப்பதாக இருந்ததாக வேலவன் குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவத்தை விலாவாரியாக பின்னர் பார்க்கலாம்.

பால்ராஜ் மரணமடைந்ததன் பின்னர் யுத்தம் விரைவாக வன்னியின் மையத்தை நோக்கி நகரத் தொடங்கியது. பானு, ஜெயம் என மூத்த தளபதிகளை மன்னார் முனைக்கு பொறுப்பாக பிரபாகரன் நியமித்தார். அதற்கு பலன் கிட்டவில்லை. தளபதிகளை மாற்றியபோதும் பெரிதாக பலன் கிட்டவில்லை. முதலில் ஜெயம் மன்னார் முனையை கவனித்தார். ஆனால் படையினரின் நகர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. பின்னர் ஜெயம் மாற்றப்பட்டு பானு நியமிக்கப்பட்டார். இதற்குள் படையினர் மல்லாவிக்கு அண்மையாக வந்துவிட்டனர். இறுதியுத்தம் வாழ்வா சாவா யுத்தம் என்பதை பிரபாகரன் உணர்ந்திருந்தார். இதனாலோ என்னவோ இந்த சமயத்தில் தன்னால் வழங்கப்பட்ட கடமையை வெற்றிகரமாக செய்யாதவர்களை பொறுப்பிலிருந்து அகற்றி, சும்மா உட்கார வைத்தார். ஜெயம் மன்னார் கட்டளைபீடத்திலிருந்து அகற்றப்பட்ட பின்னர், குறிப்பிடத்தக்க பொறுப்பெதுவும் வழங்கப்படவில்லை. அதன்பின் பானுவிற்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டது. பானுவாலும் முடியவில்லை. ஆனால் பானு ஒரேயடியாக தூக்கி வீசப்படவில்லை. அதற்கு காரணம் சாள்ஸ் அன்ரனி.

பிரபாகரனின் மூத்த மகனான சாள்ஸ் அன்ரனி அப்போது அமைப்பின் இரண்டாவது தலைவரை போல செயற்பட்டார். சாள்ஸ் அன்ரனியின் தீர்மானங்களை தளபதிகளும் அனுசரித்து நடந்தனர். இவர்களுள் சாள்ஸ் அன்ரனிக்கும் பானுவிற்குமிடையில் நெருங்கிய உறவிருந்தது. பானு ஐயா என அன்பாக சாள்ஸ் அன்ரனி அழைப்பார். சாள்ஸ் அன்ரனியை பானு அதிகம் அனுசரித்ததால், அவர் தொடர்ந்து ஏதாவதொரு கட்டளைபீடத்தில் இருந்தார்.

பின்னர் நிலப்பரப்பு சுருங்கிய பின்னர், முழுமையான களமுனை தளபதிகளாக யாரும் நியமிக்கப்படாமல் பகுதிகளை பிரித்து ஒவ்வொரு களமுனைக்கும் ஒவ்வொரு தளபதிகள் நியமிக்கப்பட்டனர். ஸ்கந்தபுரத்தை உள்ளடக்கிய பகுதிகளிற்கு தளபதி வேலவன் பொறுப்பாக இருந்தார். பானு, தீபன் முதலியவர்களும் பகுதிகளை கவனித்தார்கள்.

1520667526-300x227.jpg

 

மன்னாரில் யுத்தம் ஆரம்பித்த பின்னர் புலிகள் சொல்லும்படியான வலிந்த தாக்குதல் எதையும் செய்யவில்லை. காரணம் இடைவிடாமல் இராணுவம் முன்னேறிக் கொண்டிருந்தது. புலிகளின் படையணிகளிலும் புதிதாக இணைக்கப்பட்டவர்கள்தான் இருந்தார்கள். போதாக்குறைக்கு ஆயுதப்பற்றாக்குறை வேறு. மன்னாரில் இருந்து சொல்லும்படியான பதிலடியில்லாமல் படையினர் முன்னேறி வந்தனர். இதை மாற்றி சிறிய வலிந்த தாக்குதல்களை இம்ரான் பாண்டியன் படையணியே செய்தது. தம்மிடமிருந்த சிறிய ஆளணியை வைத்து ஆங்காங்கே சிறியளவிலான பதில் தாக்குதல்கள் நடத்தினார்கள். இதில் சொல்லப்படகூடியது ஸ்கந்தபுரம் கரும்புத் தோட்டப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல். சிறிய பரப்பில், சிறிய ஆளணியை கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்றாலும், அதற்குரிய விளைவை கொடுத்தது. இராணுவம் அந்த பகுதியை விட்டு பின்வாங்கியதுடன் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

ஆனால் இதை பெரிய தாக்குதலாக மாற்றும் வாய்ப்பு புலிகளிற்கு இல்லாமல் போய்விட்டது. எல்லா முனைகளிலும் தாக்குதலை இராணுவம் செய்ததால் ஆளணியை புலிகளால் திரட்ட முடியவில்லை. இந்த சவாலை கடக்க பிரபாகரன் பெரியளவில் பிரயத்தனப்பட்டார். முடியவில்லை.

இறுதியில் நிதித்துறை பொறுப்பாளர் தமிழேந்தியை கூட அதற்காக பாவித்தார். முடியவில்லை. இறுதியில் பிரபாகரனுடன் முரண்பட்டு கொண்டு போய் தனிமையில் இருக்கும் நிலைக்கு ஆளானார் தமிழேந்தி.

(தொடரும்)

 

 

 

http://www.pagetamil.com/48081/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்,

நான் தமிழ்ப் பக்கத்திலேயே இத்தொடரை வாசித்து வருகிறேன். ஏனெறால், நீங்கள் இத்தொடரை இங்கே இணைக்கும்போது, மேலும் இரண்டு அத்தியாயங்க்கள் தமிழ்ப் பக்கத்தில் சேர்க்கப்பட்டிருக்கும். 

இப்போது இத்தொடரை நிறுத்திவிட்டார்கள் போலத் தெரிகிறது. கடைசியாக புகழேந்தி தலைவருடன் பிரச்சினைப் பட்டார் என்கிற அத்தியாயத்துடன் நிறுத்தி விட்டார்கள். கடைசியாக வந்த அத்தியாயம் சென்ற மாதம் 15 ஆம் திகதி. ஒரு மாதமாகிவிட்டது. "தொடர்கள்" என்கிற பக்கத்தையும் தூக்கிவிட்டார்கள். என்ன நடக்கிறது ? வேறு யாரும் இந்த இணையத்தை வாங்கிவிட்டார்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தமிழ்ப்பக்கம் இணையத்தில்தான் வாசிப்பதுண்டு. ஆனாலும் உடனடியாக ஒட்டினால் யாழ் இணையத்தின் மீது வழக்குப் போட்டாலும் போடுவார்கள் என்பதால்தான்  இரண்டு கிழமை பிந்தி ஒட்டுவதுண்டு.

ஈஸ்டர் குண்டுவெடிப்புக்களோடு வாசகர்கள் பிஸி என்பதால் தொடர் நின்றுவிட்டது என்று நினைக்கின்றேன். இந்தப் பரபரப்புமுடிய மீண்டும் பீஸ்மர் எழுதுவார் என்று நினைக்கின்றேன்

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பக்கம் வர,வர ஜேவிபி ,தமிழ்வின் மாதிரி போய்க்  கொண்டு இருக்குது...நல்ல அடி  குடுத்திட்டங்கள் போல 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/14/2018 at 11:03 PM, கிருபன் said:

கருணாவின் பிளவு பற்றி இந்தத் தொடரில் புதிய விடயங்கள்  வருமா தெரியாது. ஆனால் தலைவர் கருணாவை அளவுக்கு அதிகமாக நம்பியிருந்தார் என்றுதான் நினைக்கின்றேன்.

க‌ருணாவை தலைவ‌ர் அள‌வுக்கு அதிக‌மாய் ந‌ம்பின‌து  நூற்றுக்கு நூறு உண்மை , அந்த‌ உண்மைக‌ள் 2004ம் ஆண்டே வெளியில் வ‌ந்து விட்ட‌து /

க‌வுசெல்லிய‌ன் அண்ணா தான் , க‌ருணாவின் துரோக‌ங்க‌ளை பொட்டு அம்மானுக்கு தெரிவித்து , பொட்டு அம்மான் அத‌ த‌லைவ‌ருக்கு சொல்ல‌ த‌லைவ‌ர் ந‌ம்ம‌ வில்லை , 

பிற‌க்கு உண்மைக‌ள்  வேறு த‌ள‌ப‌திக‌ள் மூல‌ம்  தெரிய‌ வ‌ர‌ க‌ருணாவை வ‌ன்னிக்கு அழைத்தார் த‌லைவ‌ர் , ஆனா க‌ருணா வ‌ன்னி வ‌ர‌ ம‌றுத்து விட்டான் / 

க‌வுசெல்லிய‌ன் அண்ணாவை 
சுட்டு  கொன்ற‌து  க‌ருணாவின் கும்ப‌ல்க‌ள்  / 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பால்ராஜ் அண்ணாவின்
ப‌திவில் ஒருசில‌ விடைய‌ம் ந‌ம்பும் ப‌டியா இல்லை ம‌ற்றும்  அந்த‌ ப‌திவில்  உட‌ன் பாடும் இல்லை 😉😠

எத்த‌ன‌ த‌ள‌ப‌திக‌ள் எம் போராட்ட‌த்தில் இருந்து இருக்கின‌ம் ( ஆனா இன்றும் ப‌ல‌ரின் ம‌ன‌சில் நீங்கா இட‌ம் பிடிச்ச‌ த‌ள‌ப‌தி என்றால் அது பால்ராஜ் அண்ணா தான் ) 

ப‌ய‌ம் என்ன‌ என்று தெரியாம‌
வ‌ள‌ந்த‌ வீர‌ம்மிக்க‌ த‌ள‌ப‌தி பால்ராஜ் அண்ணா /

அந்த‌ மாபெரும் த‌ள‌ப‌தியை
மேல் சிகிர்சைக்காக‌ சிங்க‌ப் 
பூர் கூட்டி சென்ற‌வை / இதை எல்லாம் ஏன் அந்த‌ ப‌திவில்
எழுத‌ வில்லை / 
த‌லைவ‌ரில் இருந்து ம‌ற்ற‌ த‌ள‌ப‌திக‌ளில் இருந்து பொதும‌க்க‌ள் வ‌ர‌ பெரிதும் நேசிக்க‌ ப‌ட்ட‌   த‌ள‌ப‌தி தான் பால்ராஜ்  அண்ணா 

பால்ராஜ் அண்ணாவுக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் 😓🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பையன்26 said:

பால்ராஜ் அண்ணாவின்
ப‌திவில் ஒருசில‌ விடைய‌ம் ந‌ம்பும் ப‌டியா இல்லை ம‌ற்றும்  அந்த‌ ப‌திவில்  உட‌ன் பாடும் இல்லை 😉😠

எத்த‌ன‌ த‌ள‌ப‌திக‌ள் எம் போராட்ட‌த்தில் இருந்து இருக்கின‌ம் ( ஆனா இன்றும் ப‌ல‌ரின் ம‌ன‌சில் நீங்கா இட‌ம் பிடிச்ச‌ த‌ள‌ப‌தி என்றால் அது பால்ராஜ் அண்ணா தான் ) 

ப‌ய‌ம் என்ன‌ என்று தெரியாம‌
வ‌ள‌ந்த‌ வீர‌ம்மிக்க‌ த‌ள‌ப‌தி பால்ராஜ் அண்ணா /

அந்த‌ மாபெரும் த‌ள‌ப‌தியை
மேல் சிகிர்சைக்காக‌ சிங்க‌ப் 
பூர் கூட்டி சென்ற‌வை / இதை எல்லாம் ஏன் அந்த‌ ப‌திவில்
எழுத‌ வில்லை / 
த‌லைவ‌ரில் இருந்து ம‌ற்ற‌ த‌ள‌ப‌திக‌ளில் இருந்து பொதும‌க்க‌ள் வ‌ர‌ பெரிதும் நேசிக்க‌ ப‌ட்ட‌   த‌ள‌ப‌தி தான் பால்ராஜ்  அண்ணா 

பால்ராஜ் அண்ணாவுக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் 😓🙏

மே 18 முடிந்தவுடன் பல புலிமுகமூடிகளுக்கு கொடுக்கபட்ட வேலை மக்களை புலிகளிடம் இருந்து பிரித்து புலியை கொடூரமானவர்களாய் உருவகபடுத்தனும்  அதில் தமிழ் பேச்சும் பீஸ்மர் எனும் புனைபெயரில் சொறிஞ்சு பார்க்குது பால்ராஜ் கதை மட்டுமல்ல வேறுபல முக்கிய சம்பவங்களையும் திசைமாற்றி உள்ளார்கள் . மறைந்த சிவத்தம்பி (பேராசியர் )அவர்களின் புனைபெயர் பீஸ்மர் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

மே 18 முடிந்தவுடன் பல புலிமுகமூடிகளுக்கு கொடுக்கபட்ட வேலை மக்களை புலிகளிடம் இருந்து பிரித்து புலியை கொடூரமானவர்களாய் உருவகபடுத்தனும்  அதில் தமிழ் பேச்சும் பீஸ்மர் எனும் புனைபெயரில் சொறிஞ்சு பார்க்குது பால்ராஜ் கதை மட்டுமல்ல வேறுபல முக்கிய சம்பவங்களையும் திசைமாற்றி உள்ளார்கள் . மறைந்த சிவத்தம்பி (பேராசியர் )அவர்களின் புனைபெயர் பீஸ்மர் .

ச‌ரியாய் சொன்னீங்க‌ள் , அத‌ எம் க‌ண்ணூடாக‌ பார்க்க‌ முடியுது / 
என்ன‌ தான் உவ‌ பூச்சாண்டி விளையாட்டு காட்டினாலும் , உண்மையும் நேர்மையுமா எம் போராட்ட‌த்த‌ நேசித்த‌ ம‌க்க‌ள் இப்ப‌டியான‌ போலி ப‌திவுக‌ல‌ ஒரு போதும் ந‌ம்ப‌ மாட்டின‌ம் /

2000ம் ஆண்டு ஆனையுற‌வை மீட்ட‌ போது , தேசிய‌ த‌லைவ‌ரே ( பால்ராஜ் அண்ணாவை புக‌ழ்ந்த‌ வ‌ர‌லாறு உண்டு ) 
அதெல்லாம் இந்த‌ போலி
ப‌திவில் இல்லை ,

மாதிமுக்க‌ க‌ட்சி த‌லைவ‌ர் ( வைக்கோவை , அவ‌ள‌வு குண்டு ம‌ழைக்குள்ளும் அவ‌ர‌ கீழ‌ கிட‌த்தி போட்டு பால்ராஜ் அண்ணா வைக்கோவுக்கு மேல‌
ப‌டுத்து வைக்கோவுக்கு சிறு
காய‌ம் கூட‌ வ‌ராம‌ல் ப‌த்திர‌மாய்
த‌மிழ் நாட்டுக்கு அனுப்பி வைச்ச‌தே பால்ராஜ் அண்ணா தான் ) 

இப்ப‌டி சொல்லிட்டே போக‌லாம் 
பால்ராஜ் அண்ணா த‌மிழீழ‌ ம‌ண்ணில் சாதிச்ச‌த‌ /

அப்ப‌டி ப‌ட்ட‌ மாபெரும் த‌ள‌ப‌தியை இப்ப‌டி கொச்சை ப‌டுத்தி எழுதின‌த‌ பார்க்க‌ ர‌த்த‌ம் 
கொதிக்குது / 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பையன்26 said:

ச‌ரியாய் சொன்னீங்க‌ள் , அத‌ எம் க‌ண்ணூடாக‌ பார்க்க‌ முடியுது / 
என்ன‌ தான் உவ‌ பூச்சாண்டி விளையாட்டு காட்டினாலும் , உண்மையும் நேர்மையுமா எம் போராட்ட‌த்த‌ நேசித்த‌ ம‌க்க‌ள் இப்ப‌டியான‌ போலி ப‌திவுக‌ல‌ ஒரு போதும் ந‌ம்ப‌ மாட்டின‌ம் /

2000ம் ஆண்டு ஆனையுற‌வை மீட்ட‌ போது , தேசிய‌ த‌லைவ‌ரே ( பால்ராஜ் அண்ணாவை புக‌ழ்ந்த‌ வ‌ர‌லாறு உண்டு ) 
அதெல்லாம் இந்த‌ போலி
ப‌திவில் இல்லை ,

மாதிமுக்க‌ க‌ட்சி த‌லைவ‌ர் ( வைக்கோவை , அவ‌ள‌வு குண்டு ம‌ழைக்குள்ளும் அவ‌ர‌ கீழ‌ கிட‌த்தி போட்டு பால்ராஜ் அண்ணா வைக்கோவுக்கு மேல‌
ப‌டுத்து வைக்கோவுக்கு சிறு
காய‌ம் கூட‌ வ‌ராம‌ல் ப‌த்திர‌மாய்
த‌மிழ் நாட்டுக்கு அனுப்பி வைச்ச‌தே பால்ராஜ் அண்ணா தான் ) 

இப்ப‌டி சொல்லிட்டே போக‌லாம் 
பால்ராஜ் அண்ணா த‌மிழீழ‌ ம‌ண்ணில் சாதிச்ச‌த‌ /

அப்ப‌டி ப‌ட்ட‌ மாபெரும் த‌ள‌ப‌தியை இப்ப‌டி கொச்சை ப‌டுத்தி எழுதின‌த‌ பார்க்க‌ ர‌த்த‌ம் 
கொதிக்குது / 

பையன், மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி. நான் இந்தப் பகுதியை வாசித்த போது பால்ராஜைப் பற்றி நன்றாக எழுதியிருப்பதாக நினைத்தேன். எங்கே கொச்சைப் படுத்தியிருக்கிறார் எழுதியவர்?அவரது  தனிப்பட்ட வாழ்வில் நடந்த  மணமுறிவு போன்ற பிரச்சினைகளைக் குறிப்பிட்டதையா சொல்கிறீர்கள்? இது போன்ற தனிப்பட்ட பிரச்சினைகள் பால்ராஜ் போன்ற ஒருவரின் வாழ்வை வரையறை செய்து விட முடியாது என்பது என் அபிப்பிராயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

பையன், மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி. நான் இந்தப் பகுதியை வாசித்த போது பால்ராஜைப் பற்றி நன்றாக எழுதியிருப்பதாக நினைத்தேன். எங்கே கொச்சைப் படுத்தியிருக்கிறார் எழுதியவர்?அவரது  தனிப்பட்ட வாழ்வில் நடந்த  மணமுறிவு போன்ற பிரச்சினைகளைக் குறிப்பிட்டதையா சொல்கிறீர்கள்? இது போன்ற தனிப்பட்ட பிரச்சினைகள் பால்ராஜ் போன்ற ஒருவரின் வாழ்வை வரையறை செய்து விட முடியாது என்பது என் அபிப்பிராயம்.

வ‌ண‌க்க‌ம் அண்ணா
உங்க‌ளை க‌ண்ட‌தும் ம‌கிழ்ச்சி 👏 /

த‌லைவ‌ரோடு பால்ராஜ் அண்ணாவுக்கு நெருக்க‌மான‌ உற‌வு பெரிசா இருந்த‌து இல்லையாம் / ம‌ற்ற‌ த‌க‌ப‌திக‌ள் த‌லைவ‌ர் அருகில் எப்போதும் நெருங்க‌ முடியுமாம் க‌தைக்க‌ முடியுமாம் / அது பால்ராஜ் அண்ணாவால் முடியாதாம் /


த‌மிழ் செல்வ‌ன் அண்ணாவையும் த‌லைவ‌ர் த‌ள்ளி வைச்ச‌வ‌ராம் , இத‌ எழுதின‌வ‌ர் யாரை முட்டாள் ஆக்க‌ பார்க்கிறார் /

த‌ன்ர‌ சொந்த‌ த‌ம்பி போல‌ த‌ன‌க்கு அருகில் த‌மிழ் செல்வ‌ன்
அண்ணாவை த‌லைவ‌ர் வைச்சு இருந்த‌து தான் உண்மை வ‌ர‌லாறு /

2007ம் ஆண்டு மாவீர‌ர் நாளில் 
த‌லைவ‌ர் பேசின‌த‌ ஒரு க‌ண‌ம் திருப்ப‌ கேலுங்கோ அண்ணா அதில் விடை கிடைக்கும் த‌மிழ் செல்வ‌ன் அண்ணாவுக்கும் த‌லைவ‌ருக்குமான‌ ந‌ல் உற‌வு எப்ப‌டி இருந்த‌து என்று /

கொழும்பையே அதிர‌ வைச்ச‌ 
பொட்டு அம்மானுக்கு கீழ‌ இய‌ங்கிய‌  ( சாள்ஸ் அண்ணா ) 2008ம் ஆண்டு ம‌ன்னாரில் ந‌ட‌ந்த‌ கிளை 
மோர் தாக்குத‌லில் கொல்ல‌ ப‌ட்டார் )  சாள்ஸ் அண்ணாவின் இறுதி ச‌ட‌ங்கில் கூட‌ த‌லைவ‌ர்
க‌ல‌ந்து கொள்ள‌ வில்லை / 
( சாள்ஸ் அண்ணாவை யார் அந்த‌ பாது காப்பு இல்லாத‌ இட‌த்துக்கு அனுப்பின‌து என்று கோவ‌த்துட‌ன் கேட்டு விட்டு , த‌லைவ‌ர் சொன்ன‌து இது தான் ( சாள்ஸ் அண்ணாவை தான் க‌ட‌சியா எப்ப‌ பார்த்தேனோ அந்த‌ முக‌மே என்னில் இருக்க‌ட்டும் என்று சாள்ஸ் அண்ணாவின் இறுதி ச‌ட‌ங்கில் த‌லைவ‌ர் க‌ல‌ந்து கொள்ள‌ வில்லை ( பொட்டு அம்மான் சாள்ஸ் அண்ணாவின் இறுதி ச‌ட‌ங்கில் க‌ல‌ந்து கொண்டு மாலை போட்டு அஞ்ச‌லி செய்து விட்டு சாள்ஸ் அண்ணாவின் பெருமைக‌ள‌ போராளிக‌ள் முன் எடுத்து சொன்னார் /

த‌மிழ் செல்வ‌ன் அண்ணா
பால்ராஜ் அண்ணா இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரின் இறுதி ச‌ட‌ங்கில்
த‌லைவ‌ர் க‌ல‌ந்து கொண்டு மாலை போட்டு மெள‌வுன‌ அஞ்ச‌லி செய்தார்/ பால்ராஜ் அண்ணாவுக்கு ம‌ற்ற‌ த‌ள‌ப‌திக‌ளுக்கும் போராளிக‌ளுக்கும் செய்யாத‌ ஒன்றை த‌லைவ‌ர் பால்ராஜ் அண்ணாவின் இறுதி ச‌ட‌ங்கில் செய்த‌வ‌ர் 😓🙏 /  

விதைத்த‌வ‌ன் உற‌ங்கினாலும் விதைக‌ள் உற‌ங்குவ‌தில்லை /

வாழ்க‌ த‌லைவ‌ர் புக‌ழ் 🙏

Link to comment
Share on other sites

18 hours ago, பையன்26 said:

வ‌ண‌க்க‌ம் அண்ணா
உங்க‌ளை க‌ண்ட‌தும் ம‌கிழ்ச்சி 👏 /

த‌லைவ‌ரோடு பால்ராஜ் அண்ணாவுக்கு நெருக்க‌மான‌ உற‌வு பெரிசா இருந்த‌து இல்லையாம் / ம‌ற்ற‌ த‌க‌ப‌திக‌ள் த‌லைவ‌ர் அருகில் எப்போதும் நெருங்க‌ முடியுமாம் க‌தைக்க‌ முடியுமாம் / அது பால்ராஜ் அண்ணாவால் முடியாதாம் /


த‌மிழ் செல்வ‌ன் அண்ணாவையும் த‌லைவ‌ர் த‌ள்ளி வைச்ச‌வ‌ராம் , இத‌ எழுதின‌வ‌ர் யாரை முட்டாள் ஆக்க‌ பார்க்கிறார் /

த‌ன்ர‌ சொந்த‌ த‌ம்பி போல‌ த‌ன‌க்கு அருகில் த‌மிழ் செல்வ‌ன்
அண்ணாவை த‌லைவ‌ர் வைச்சு இருந்த‌து தான் உண்மை வ‌ர‌லாறு /

2007ம் ஆண்டு மாவீர‌ர் நாளில் 
த‌லைவ‌ர் பேசின‌த‌ ஒரு க‌ண‌ம் திருப்ப‌ கேலுங்கோ அண்ணா அதில் விடை கிடைக்கும் த‌மிழ் செல்வ‌ன் அண்ணாவுக்கும் த‌லைவ‌ருக்குமான‌ ந‌ல் உற‌வு எப்ப‌டி இருந்த‌து என்று /

கொழும்பையே அதிர‌ வைச்ச‌ 
பொட்டு அம்மானுக்கு கீழ‌ இய‌ங்கிய‌  ( சாள்ஸ் அண்ணா ) 2008ம் ஆண்டு ம‌ன்னாரில் ந‌ட‌ந்த‌ கிளை 
மோர் தாக்குத‌லில் கொல்ல‌ ப‌ட்டார் )  சாள்ஸ் அண்ணாவின் இறுதி ச‌ட‌ங்கில் கூட‌ த‌லைவ‌ர்
க‌ல‌ந்து கொள்ள‌ வில்லை / 
( சாள்ஸ் அண்ணாவை யார் அந்த‌ பாது காப்பு இல்லாத‌ இட‌த்துக்கு அனுப்பின‌து என்று கோவ‌த்துட‌ன் கேட்டு விட்டு , த‌லைவ‌ர் சொன்ன‌து இது தான் ( சாள்ஸ் அண்ணாவை தான் க‌ட‌சியா எப்ப‌ பார்த்தேனோ அந்த‌ முக‌மே என்னில் இருக்க‌ட்டும் என்று சாள்ஸ் அண்ணாவின் இறுதி ச‌ட‌ங்கில் த‌லைவ‌ர் க‌ல‌ந்து கொள்ள‌ வில்லை ( பொட்டு அம்மான் சாள்ஸ் அண்ணாவின் இறுதி ச‌ட‌ங்கில் க‌ல‌ந்து கொண்டு மாலை போட்டு அஞ்ச‌லி செய்து விட்டு சாள்ஸ் அண்ணாவின் பெருமைக‌ள‌ போராளிக‌ள் முன் எடுத்து சொன்னார் /

த‌மிழ் செல்வ‌ன் அண்ணா
பால்ராஜ் அண்ணா இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரின் இறுதி ச‌ட‌ங்கில்
த‌லைவ‌ர் க‌ல‌ந்து கொண்டு மாலை போட்டு மெள‌வுன‌ அஞ்ச‌லி செய்தார்/ பால்ராஜ் அண்ணாவுக்கு ம‌ற்ற‌ த‌ள‌ப‌திக‌ளுக்கும் போராளிக‌ளுக்கும் செய்யாத‌ ஒன்றை த‌லைவ‌ர் பால்ராஜ் அண்ணாவின் இறுதி ச‌ட‌ங்கில் செய்த‌வ‌ர் 😓🙏 /  

விதைத்த‌வ‌ன் உற‌ங்கினாலும் விதைக‌ள் உற‌ங்குவ‌தில்லை /

வாழ்க‌ த‌லைவ‌ர் புக‌ழ் 🙏

பையன் இந்த இடத்தில் ஒரு விடயத்தை பதிவு பண்ண விரும்புகிறேன். சாள்ஸ் புலனாய்வுத்துறையுடன் முரண்பட்டு வெளியேறி தலைவரின் கீழ் இயங்கிய படையப்புலானாய்வு பொறுப்பாளராக இருந்த சமயத்தில் தான் மன்னாரில் இடம்பெற்ற கிளைமோரில் வீரச்சாவை தழுவிக்கொண்டார்.

அது மட்டுமல்லாமல் மன்னார் முன்னரங்கிற்கு போகும் முடிவை அவரே எடுத்தார். 

கட்டுநாயக்கா தாக்குதல் (புலானாய்வுபிரிவில் இருந்தபோது), ஹபறண தாக்குதல் சாள்ஸின் பெயரை எப்பவும் பதிவு பண்ணும். 

பொட்டு அம்மான் சாள்சை பற்றிய ஒரு நீண்ட கட்டுரை ஈழநாதத்திலும் எழுதியிருந்தார். 

முரண்பாடுகள் இருந்தாலும் சாள்சை பொட்டு அம்மான் கடைசி வரை நேசித்தார்.

சாள்சுடன் சுலக்சன், சிந்து போன்ற ஆற்றல் உள்ளவர்கள் இருந்தாலும் சிரஞ்சீவி போன்ற ஒழுக்கமற்றவர்களும் கூடவே இருந்தது சாள்ஸின் பலவீனம்.

இன்னும் நிறையவே எழுதலாம். ஆனால் மனம் இடம் கொடுக்கவில்லை. இருப்பினும் வரலாறை பதிவு பண்ணும் போது தவறுகளை காணும்போது மட்டும் எனக்கு தெரிந்தவற்றை எழுத தோணுகிறது.

சாள்ஸ் எனக்காக வைத்திருந்த 97 ரக M16 கடைசி வரை எனக்கு கிடைக்க முதலே சாள்ஸ் மறைந்துவிட்டார். ஒரு தலைசிறந்த வீரன்.நண்பன்.சகோதரன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பகலவன் said:

பையன் இந்த இடத்தில் ஒரு விடயத்தை பதிவு பண்ண விரும்புகிறேன். சாள்ஸ் புலனாய்வுத்துறையுடன் முரண்பட்டு வெளியேறி தலைவரின் கீழ் இயங்கிய படையப்புலானாய்வு பொறுப்பாளராக இருந்த சமயத்தில் தான் மன்னாரில் இடம்பெற்ற கிளைமோரில் வீரச்சாவை தழுவிக்கொண்டார்.

அது மட்டுமல்லாமல் மன்னார் முன்னரங்கிற்கு போகும் முடிவை அவரே எடுத்தார். 

கட்டுநாயக்கா தாக்குதல் (புலானாய்வுபிரிவில் இருந்தபோது), ஹபறண தாக்குதல் சாள்ஸின் பெயரை எப்பவும் பதிவு பண்ணும். 

பொட்டு அம்மான் சாள்சை பற்றிய ஒரு நீண்ட கட்டுரை ஈழநாதத்திலும் எழுதியிருந்தார். 

முரண்பாடுகள் இருந்தாலும் சாள்சை பொட்டு அம்மான் கடைசி வரை நேசித்தார்.

சாள்சுடன் சுலக்சன், சிந்து போன்ற ஆற்றல் உள்ளவர்கள் இருந்தாலும் சிரஞ்சீவி போன்ற ஒழுக்கமற்றவர்களும் கூடவே இருந்தது சாள்ஸின் பலவீனம்.

இன்னும் நிறையவே எழுதலாம். ஆனால் மனம் இடம் கொடுக்கவில்லை. இருப்பினும் வரலாறை பதிவு பண்ணும் போது தவறுகளை காணும்போது மட்டும் எனக்கு தெரிந்தவற்றை எழுத தோணுகிறது.

சாள்ஸ் எனக்காக வைத்திருந்த 97 ரக M16 கடைசி வரை எனக்கு கிடைக்க முதலே சாள்ஸ் மறைந்துவிட்டார். ஒரு தலைசிறந்த வீரன்.நண்பன்.சகோதரன்.

உங்களின் உணர்வு புரிகிற‌து உற‌வே , உங்க‌ளின் ப‌திவை வாசித்த‌ பிற‌க்கு என் ம‌னதிலும் ஏதோ ஒரு வ‌லி தெரிகிற‌து 😓

சாள்ஸ் அண்ணாவுட‌ன் நெருங்கி ப‌ழ‌கிய‌வ‌ர்க‌ளுக்கு தான் அவ‌ரின் பிரிவின் வ‌லி தெரியும் , அந்த‌ வ‌லி உங்க‌ளின் ப‌திவில் தெரியுது உற‌வே 😓


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பகலவன் said:

பையன் இந்த இடத்தில் ஒரு விடயத்தை பதிவு பண்ண விரும்புகிறேன். சாள்ஸ் புலனாய்வுத்துறையுடன் முரண்பட்டு வெளியேறி தலைவரின் கீழ் இயங்கிய படையப்புலானாய்வு பொறுப்பாளராக இருந்த சமயத்தில் தான் மன்னாரில் இடம்பெற்ற கிளைமோரில் வீரச்சாவை தழுவிக்கொண்டார்.

அது மட்டுமல்லாமல் மன்னார் முன்னரங்கிற்கு போகும் முடிவை அவரே எடுத்தார். 

கட்டுநாயக்கா தாக்குதல் (புலானாய்வுபிரிவில் இருந்தபோது), ஹபறண தாக்குதல் சாள்ஸின் பெயரை எப்பவும் பதிவு பண்ணும். 

பொட்டு அம்மான் சாள்சை பற்றிய ஒரு நீண்ட கட்டுரை ஈழநாதத்திலும் எழுதியிருந்தார். 

முரண்பாடுகள் இருந்தாலும் சாள்சை பொட்டு அம்மான் கடைசி வரை நேசித்தார்.

சாள்சுடன் சுலக்சன், சிந்து போன்ற ஆற்றல் உள்ளவர்கள் இருந்தாலும் சிரஞ்சீவி போன்ற ஒழுக்கமற்றவர்களும் கூடவே இருந்தது சாள்ஸின் பலவீனம்.

இன்னும் நிறையவே எழுதலாம். ஆனால் மனம் இடம் கொடுக்கவில்லை. இருப்பினும் வரலாறை பதிவு பண்ணும் போது தவறுகளை காணும்போது மட்டும் எனக்கு தெரிந்தவற்றை எழுத தோணுகிறது.

சாள்ஸ் எனக்காக வைத்திருந்த 97 ரக M16 கடைசி வரை எனக்கு கிடைக்க முதலே சாள்ஸ் மறைந்துவிட்டார். ஒரு தலைசிறந்த வீரன்.நண்பன்.சகோதரன்.

அப்படியே  பால்றாஜ் அண்ணாவுக்கும்,தலைவருக்கும் இருந்த உறவை பற்றியும் பையனுக்கு கிளியர் பண்ணி விடுங்கோ...பாவம் என்னும் சின்னப் பயனாகவே இருக்கிறார் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • @goshan_che உங்களுக்கு ஊரிலிருந்து வரும் பொருட்கள் Food Grade bags இல் பொதி செய்யப்பட்டனவா? நிச்சயமாக இல்லை. இவை கூட நோய்களுக்கான காரணியாக அமையலாம். மேலும் சிறீலங்காவில் ஓர்கானிக் பயிர்ச் செய்கை என்றால்  இரசாயனக் கிருமிநாசினிகள் பாவனையற்று விவசாயம் செய்தால் போதும் என்ற நிலையே காணப்படுகிறது. ஆனால் மாட்டு எரு பயன்படுத்தப்பட்டால் மாட்டின் உணவு கூட ஓர்கானிக் ஆக இருத்தல் வேண்டும். அதேபோல் தாவரக் கழிவுகள் பயன்படுத்தப்படும் போது அந்த தாவரங்கள் ஓர்கானிக் முறையில் வளந்திருக்க வேண்டும். இது ஓர் சங்கிலித் தொடர்…. 100% ஓர்கானிக் உங்களுக்கு பாரிய விவசாயத்தில்  கிடைக்காது.  
    • மிக்க நன்றி, உங்கள் ஆழமான கருத்துக்கு  "அறை வாங்கினேன் மறு கன்னத்திலும் ஏசுவே இனி என்ன செய்ய? குறை கூறும் சமூகத்தில் இருக்கும் வரை  ஏசுவே இனி என்ன செய்ய? கறை பிடித்த வம்பு பேசு பவர்களால்  ஏசுவே  நிம்மதி இழந்தாளே என்னவள்? சிறை வாழ்வு கொண்டு நான் இங்கு  ஏசுவே நிம்மதியைத் தேடுகிறேன்?"    
    • "The House of Representatives voted overwhelmingly to legalize same-sex marriage. The bill now goes to Thailand’s Senate. This would make Thailand the first country or region in Southeast Asia to pass such a law and the third in Asia, after Taiwan and Nepal. Mar 27 / 28, 2024 [CBC News, The new york times, The diplomat ::Asia, : AL JAZEERA .. etc ]" "ஒருபால் திருமணம்" / பகுதி 04  [நீங்கள் வேறு கருத்துகள் / நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம். நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன். நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கையையும் திறனாய்வு செய்யவில்லை. இதில் கூறியுள்ள கருத்துக் களின் தவறுகளை ஆக்கபூர்வமாக அறிவியல் கண்ணோட்டத்துடன்  விமர்சியுங்கள், அத்துடன் இதில் காணப்படும் கேள்விகளுக்கான, சந்தேகங்களுக்கான பதில்களை தரவுகளுடன் கூறுங்கள்]   விவசாய சமுதாயம் உலகில் முதல் எழுச்சி பெறும் பொழுது, உதாரணமாக, சுமேரியாவில், சமுதாயம் ஒரு நிலையான, ஓர் இடத்தில் தொடர்ந்து வாழக்கூடிய அமைப்பாக மாறியது. அதனால், குடும்ப வரிசையின் தொடர்ச்சியை உறுதிசெய்து, நிலையான சமூக அமைப்பை அந்த சமூகம் கோரவேண்டிய சூழ்நிலை உருவாகியது [the society demanded for stable arrangements because it ensured the continuation of the family line and provided social stability]. அதாவது திருமணத்தின் முதன்மை நோக்கம் உயிரியல் ரீதியாக அது அவரின் குழந்தை என்பதை உறுதிப் படுத்துவதே ஆகும் [to ensure that the man’s children are biologically his].   எனவே, சுமேரியாவின் தொடர்ச்சியான பண்டைய பாபிலோனில் [Babylon] பாலியல் உண்மையில் மிகவும் தாராளமாக பரந்த கொள்கையுடன் இருந்தாலும், அது ஒற்றை நபர்களுக்கு [single persons] மட்டுமே அங்கு காணப்பட்டது. ஆனால், திருமணம் ஒரு சமூக செயல்பாடாக, கடுமையாக, நெகிழ்வு தன்மையற்று கட்டுப்படுத்தப்பட்டது [marriage was rigidly stiff and controlled, as a social function]. சுமேரியன் காதல் பாடல்கள் இவ்வற்றை உறுதி படுத்துகின்றன. உதாரணமாக, கிமு 2000 ஆண்டுகளுக்கு முன் செய்யுள் வடிவத்தில் களிமண் பலகைகளில் எழுதப்பட்ட, உலகில் தோன்றிய முதல் இலக்கியமான கில்கமெஷ் காப்பியத்தில் [Epic of Gilgamesh/ written c. 2150 - 1400 BCE], முக்கிய கதாபாத்திரம் அங்கு கூறிய ஒன்றை ஒரு மேற்கோளாக காட்டலாம்.   “உங்கள் வயிறு நிரம்பட்டும் , உங்கள் உடைகள் சுத்தமாகட்டும் , உங்கள் உடல், தலை கழுவட்டும்; இரவும் பகலும் மகிழுங்கள், ஆடி பாடி மகிழுங்கள்; உங்கள் கைபிடிக்கும் குழந்தையை பாருங்கள், உங்கள் மனைவி உங்கள் மடியில் மகிழட்டும் ! இதுதான் மனிதர்களின் விதி”   “Let your belly be full, your clothes clean, your body and head washed; enjoy yourself day and night, dance, sing and have fun; look upon the child who holds your hand, and let your wife delight in your lap! This is the destiny of mortals.”   இந்த பாடல் வரிகள் பாபிலோனியர்களின் காதல் பற்றிய எண்ணத்தை எமக்கு படம் பிடித்து காட்டுகிறது. ஆனால் இந்த 5000 ஆண்டு எண்ணம், இன்றைய எண்ணத்தில் இருந்து பெரிய வேறுபாடு ஒன்றையும் காட்டவில்லை. உதாரணமாக அன்றைய இன்னும் ஒரு பாடல் ஒன்று :   “தூக்கமே களைந்து விடு என் கைகள் காதலியை தழுவட்டும் ! நீ என்னுடன் பேசுவதால், நான் மடியும் மட்டும் இதயம் பூரிக்கும்! என் அன்பே, உன்னை நினைத்து நேற்று இரவு இமைகள் மூட மறுத்ததால் இரவு முழுவதும் விழித்திருந்தேன்!"   “Sleep, begone! I want to hold my darling in my arms! When you speak to me, you make my heart swell till I could die! I did not close my eyes last night; Yes, I was awake all night long, my darling, thinking of you.”   என்று கூறுகிறது. குழந்தைகளின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்து, அதை உறுதிப்படுத்த வேண்டிய, ஒரு அமைப்பு ஒன்றை எவராவது வடிவமைக்க வேண்டின் அது கட்டாயம் அதிகமாக இரு பெற்றோர் அமைப்பு ஒன்றுக்கே வர நேரிடும். இது குழந்தைகளுக்கு இரண்டு பெரியவர்களின் நேரம் மற்றும் பணம் போன்றவற்றை அடையக்கூடிய வசதி இருப்பதை உறுதி செய்வது மட்டுமல்ல, தரமான பெற்றோர்சார்ந்த இயல்புகளையும் அவர்கள் அனுபவிக்கக் கூடிய ஒரு பொருத்தமான சூழ்நிலையையும் அவர்களுக்கு வழங்குகிறது [it also would provide a system of checks and balances that promoted quality parenting].   இங்கு நீங்கள் கவனிக்கக் கூடிய தன்மை என்னவென்றால், இரு பெற்றோர்களும், அந்த பிள்ளையின் உயிரியல் பெற்றோர் என்பதால், கட்டாயம், அதிகமாக, அவர்கள் குழந்தையுடன் நெருக்கமாக உறவு வைத்திருப்பதுடன், அந்தக் குழந்தைக்காக தியாகம் செய்யவும் தயாராக இருப்பார்கள். அது மட்டும் அல்ல, யாராவது ஒரு பெற்றோர் குழந்தையை துஷ்பிரயோகம் செய்யக்கூடிய சாத்தியத்தை குறைக்கிறது. நீங்கள் மனித வரலாற்றை நுணுக்கமாக பார்த்தால், பழமையான கலாச்சாரத்தில், திருமணம் என்பது, மனித இனப்பெருக்கத்தின், ஒரு தர்க்கரீதியான நீட்டிப்பாகும் [Further in Primitive culture, marriage was a logical extension of human reproduction]. எனவே, குடும்பமும் குடும்பங்களை சுற்றி அமைக்கப்பட்ட சமுதாயமும் நிலைத்து உயிர்வாழ்வதற்கு இது உதவுகிறது.   எப்படியாகினும், கடந்த நூறு ஆண்டுகளில் எம் மனித இனம் வியத்தகு மாற்றம் அடைந்துள்ளது. நாம் இன்று வேட்டுவ உணவுதிரட்டிகள் அல்லது விவசாய அடிப்படை சமூகங்கள் [hunter-gatherers or agriculturally based communities] அல்ல. நாங்கள் உயர் தொழில்நுட்பம் கொண்ட சமூகமாக இருக்கிறோம். இன்று எம்மிடம் தொலைபேசி, வானொலி, தொலைகாட்சி, விமானங்கள், ரயில்கள், கார்கள், மேம்பட்ட மருந்துகள், மரபணுப் பொறியியல் [genetic engineering], இணையம், பிறப்பு கட்டுப்பாடு, கருக்கலைப்பு, குளோனிங் அல்லது நகலி [cloning], சோதனைக் குழாய் குழந்தைகள், மற்றும் பல இருக்கின்றன.   நாம் இன்று கூடிய ஆண்டு உயிர் வாழ்கிறோம். பல காரணங்களால் இன்று மனித இனம் முன்னதை காட்டிலும் வேறு பட்டுள்ளது. அந்த வேறுபாடுகள் இன்று திருமணம் என்ற கட்டுக்கோப்பை பாதிக்கிறது அல்லது மாற்றுகிறது. உதாரணமாக, எம்மை இறப்பு பிரிக்கும் மட்டும் ["till death do us part"] என்ற அர்ப்பணிப்பு இன்று இல்லை. மேலும் அவர்கள் குடும்பமாக இருந்தாலும், தனித்தனியாக அல்லது வெவேறாக பல விடயங்களை கையாள முடியும். எனவே உங்கள் துணையை பெரிய கட்டுப்பாடுகள் அற்று தேர்ந்து எடுக்க முடியும். உதாரணமாக ஒரு பால் துணை.   ஆனால் என்னை பொறுத்த வரையில், ஒரு பால் கூட்டுக்கும் 'திருமணம்' என்று அழைப்பது தவறு என்று எண்ணுகிறேன். ஏன் என்றால் அதற்கு ஒரு தனித்துவமான நீண்ட காலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட கருத்து உண்டு.   மேலும் marriage என்ற ஆங்கில சொல்லை எடுத்தால், அதில் உள்ள "MARRY" என்ற சொல் லத்தீன் சொல்லான maritus (married) ஆகும். இந்தோ ஐரோப்பியன் மூல சொல் mari இளம் பெண்ணை (young woman) குறிக்கிறது. “mother” [தாய்] க்கான பிரெஞ்சு சொல் mere or Matri , மேலும் திருமணத்திற்கான சொல் matrimony, இது matri+mony , என்று பிரிக்கலாம்.   இதில் mony , செயல், நிலை அல்லது நிபந்தனையை குறிக்கிறது. எனவே ஒரு பெண் தாய்மை அடைவதற்கான துவக்கத்தை உண்டாக்கும் நிலையை தெரியப்படுத்தும் சடங்கு எனலாம் [matrimony = matri + mony, Here, mony, a suffix indicating “action, state, or condition. ”Hence Matrimony refers to that that rites wherein a woman enters the state that inaugurates an openness to motherhood].   பொதுவாக ஒரு இல்லறவாழ்வு அல்லது மண வாழ்க்கைக்குரிய உறவு [conjugal relations], பெண் தாய்மை அடைதல் ஆகும். அதனால் தான், ஒருபால் உறவை சட்டபூர்வமாக வலுப்படுத்தி, தெரிவிக்கும் சடங்குக்கு ஒரு பால் கூட்டு அல்லது அது மாதிரி இன்னும் ஒரு சொல்லை தேர்ந்து எடுக்கலாம் என்கிறோம்.   அல்லாவிட்டால் ஒரு குழப்ப நிலை மட்டும் அல்ல மனித சமுதாயமே தேங்கும் நிலைக்கு வரலாம் ?     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]  முற்றிற்று   "same-sex marriages" / Part 04     [You may have different opinions / beliefs from me. Your "comments" / "Answers" for any of my questions with facts and statistics as well as reasons concerning relevant issues are welcome. This will improve our understanding / knowledge further as well as correct our thoughts / actions. Please note that, I am not criticised any particular person / belief, only sharing my thought.]     With the introduction of agricultural civilisation, Such as Sumeria, the society demanded for stable arrangements because it ensured the continuation of the family line and provided social stability, in other words the primary purpose of the marriage is to ensure that the man’s children are biologically his. So, While sexuality in ancient Babylon was actually extremely liberal, that was only for single persons, and marriage was rigidly stiff and controlled, as a societal function.   `Sumerian love songs’ also attests to the commonality of deep romantic attachment between couples. In The Epic of Gilgamesh (dates back to Ancient Sumer), one of the first surviving written works of the human race itself, the main character can be quoted as saying:   “Let your belly be full, your clothes clean, your body and head washed; enjoy yourself day and night, dance, sing and have fun; look upon the child who holds your hand, and let your wife delight in your lap! This is the destiny of mortals.”   This line from The Epic of Gilgamesh paints a clearer picture of what the Babylonians thought of love. But love in Ancient Mesopotamia wasn’t at all that different from what it is today, also, as so writes a poet nearly 5,000 years ago:   “Sleep, begone! I want to hold my darling in my arms! When you speak to me, you make my heart swell till I could die! I did not close my eyes last night; Yes, I was awake all night long, my darling, thinking of you.”   Again during the third Tamil Sangam. We found marriage as a System in the ancient Tamil Grammar Book, Tholkappiyam, written by Tholkappiar, around 700 BC. Here he say "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் யர் யாத்தனர் கரணம் என்ப (1091)", meaning: He states that the society was being ruined by indiscriminate copulation, involving Lies, frauds. Hence the learned organised the system of marriage.   The historian Bertman writes, Among both the Sumerians and the Babylonians marriage was fundamentally an arrangement designed to assure and perpetuate an orderly society. Its prime intent was not only companionship but procreation; not only personal happiness in the present but communal continuity for the future. So marriage, as man & woman come together to form a family, is part of the culture more than 5000 years. Above all, Sumerians [ancestors of Tamils ?] were the first inventor of marriage system, as other first inventions such as writings,The Wheel, plow, sailboat, Agriculture and Irrigation.   A large and growing body of scientific evidence indicates that the intact, married family is best for children. If we were asked to design a system for making sure that children's basic needs were met, we would probably come up with something quite similar to the two-parent ideal. Such a design, in theory, would not only ensure that children had access to the time and money of two adults, it also would provide a system of checks and balances that promoted quality parenting.   The fact that both parents have a biological connection to the child would increase the likelihood that the parents would identify with the child and be willing to sacrifice for that child, and it would reduce the likelihood that either parent would abuse the child.   Further in Primitive culture, marriage was a logical extension of human reproduction and that society organised around the family to survive and for society to survive. It created a recognition of the idea of couples committing for life and raising children together and sharing the struggles of survival.   In general, these social rules had more benefits to society and helped our cultures and species survive. However in the last 100 years, the human race has dramatically changed. No longer we are tribes of hunter-gatherers or agriculturally based communities. We are a society of high technology. Now have telephones, radio, TV, airplanes, trains, cars, advanced medicine, genetic engineering, the Internet, birth control, abortion, cloning, test tube babies, and other things that affect society in general. We live twice as long as people did 200 years ago. In many significant ways, we are not really the same species of human as we were then.   Yes, genetically we are almost identical compared to 200 years ago, but with our new technologies, and the resulting cultural changes, there are a lot of significant differences. And those differences have made changes that directly affect marriage. For example, "till death do us part" is a lot longer commitment than it used to be. Also there is nothing that restricts individuals from committing to each other and deciding between themselves, that they are a couple, and that they intend to share their lives together. This includes people of the same sex as well as marriages between more than two people. These personal commitments are between individuals and we have freedom to choose whom we live with and whom we commit to without the State or society interfering in our personal lives.   Having said all this, my personal belief is that the title of marriage, and the word marriage, refers to the union of one man and one woman and that the word properly belongs to the heterosexual community. I base this on the biological fact of sexual reproduction and thousands of years of tradition and the biological family as the basis for my opinion.   If we open up the definition of marriage to include same sex union, then why limit it to two people? Why not three, four, or five people. Why not let people marry their pets? After all, your cat is much more likely to make a life long commitment to you than a human will and can be trusted to be more loyal and respectful of the relationship. Whatever two women / men choose to do in their private lives is nobody’s business but their own. Married love is not the same as the love between parent and child, or the love and affection between brother and sister, or other deep and lasting friendships. Sexual intercourse — not simply sexual stimulation — remains an essential element of marriage.   Where sexual intercourse is not possible in principle, marriage cannot exist. Same-sex partnerships, like friendships, can be deep and lasting, but they cannot be marriages because they lack the capacity for conjugal union. We see this truth clearly in the very etymology of the word marriage.   The word "MARRY" is from Latin maritus (married), from Indo-European “root” mari (young woman). French word for “mother” is mere or Matri [matrimony=matri+mony, Here, mony, a suffix indicating “action, state, or condition. ”Hence Matrimony refers to that that rites wherein a woman enters the state that inaugurates an openness to motherhood.].   The natural outcome of conjugal relations is that the woman becomes a mother, thus the connection between the words “conjugal” and “marriage.”   That is why we have no problem with civil partnerships, a new institution with a new purpose for same sex couples and any others.     [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]   Ended         
    • முத‌ல் 5 இட‌த்தின் நிக்கும் அணிக‌ளில் 4அணிக‌ள் உள்ள‌ போகும்  மீத‌ம் உள்ள‌ அணிக‌ள் வெளிய‌..............................   ஜ‌பிஎல்ல‌ கோப்பை தூக்காத‌ அணிக‌ள் என்றால்   வ‌ங்க‌ளூர் ப‌ஞ்சாப் டெல்லி ல‌க்னோ இந்த‌ 4 அணிக‌ள்......................................    
    • வாழ்க்கை என்பது அவ்வளவு இலகுவானதல்ல. நாங்கள் இருவர் தான். எந்த மூன்றாவது நபருடைய உட்புகுதலும் கருத்துக்களும் வாழ்வை திரிபு படுத்திவிடும். அடுத்த வீட்டை பார்த்து எப்பொழுது நாம் எம் வாழ்வை அமைத்துக் கொள்ள முயல்கிறோமோ அத்துடன் எம் வாழ்வு கலைந்து விடும். அவனவன் கவலைகளை அவரவர் தலையணைகளே அறியும். நன்றி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.