Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    26
    Points
    3061
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33600
    Posts
  3. nunavilan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    53011
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    31977
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/05/24 in Posts

  1. ஆதி அறிவு ------------------- இப்பொழுது வரப்போகும் புகைவண்டி மூன்றாவது தடத்தில் வந்து கொண்டிருக்கின்றது. முதலாவது மேடையில் நிற்பவர்கள் மேம்பாலத்தில் ஏறி அடுத்த பக்கம் போகவும் என்ற அறிவிப்பு தலைக்கு மேலேயிருந்து வந்து கொண்டிருந்தது. அங்கு முதலாவது தடம், இரண்டாவது தடம், மூன்றாவது தடம், முழு நிலையத்திற்கும் சேர்த்து நான் ஒருவனே முதலாவது மேடையில் நின்று கொண்டிருந்தேன். மனிதர்களின் குறுக்கீடுகள் எதுவும் இல்லாமல், இது செயற்கை நுண்ணறிவு கொண்ட ஒரு இயந்திரம் செய்யும் அறிவிப்பாகக் கூட இருக்கலாம். சுற்றிவர மெல்லிய இருட்டு கவிழ்ந்து கொண்டிருந்தது. இப்பொழுது திடீரென ஒருவர் முன்னால் தோன்றி, எனக்கு ஏதாவது சில்லறைகள் கொடு என்று கேட்கக்கூடும். கேட்பதைக் கொடுத்தால், தோன்றியது போலவே மறைந்தும் விடுவார்கள். ஆனால் ஒரு டாலர் கூட கையிலோ, பையிலோ இல்லை. கடன் மட்டைகள், காசு மட்டைகள் செல்லாத இடம் இது. வந்து கேட்பவர் என் வங்குரோத்து நிலை கண்டு கோபப்படவும் கூடும். இந்த நிலையில் 'நோ இங்கிலீஸ்' என்று சொல்வது தான் உசிதம். முழுதும் துறந்து தெருக்களில் வாழும் இந்த மனிதர்களிடம் மொழிப்பற்று, தீவிரம் இருக்க சாத்தியமில்லை. இங்கு எவரும் எவரையும் ஆங்கிலம் தெரியாது என்பதற்காக அடித்ததாகவோ அல்லது சுட்டதாகவோ நான் இதுவரை கேள்விப்பட்டதும் இல்லை. மூன்றாம் மேடைக்குப் போக முன், முதலாம் மேடையின் பின்புறம் பிரயாணச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என்று இன்னும் ஒரு அறிவிப்பு மேலிருந்து என் மீது இறங்கியது. தனி ஒரு மனிதனுக்காக அரசு இயந்திரம் கடுமையாக வேலை செய்து கொண்டிருந்தது. அறிவிக்கும் குரல் இருமி, கம்மி, புகைவண்டி நிற்கப் போகும் அடுத்த அடுத்த தரிப்பிடங்களைச் சொன்னது. உலகில் செயற்கை நுண்ணறிவு இன்னமும் இருமத் தொடங்கவில்லை, ஆதலால் இந்த இடத்தில் இன்னும் ஒரு சாதாரண மனிதனும் என்னுடன் இருக்கின்றார் என்ற அந்த நினைப்பே ஆறுதலாக இருந்தது. இன்னும் ஒருவர் அவசரமாக வந்தார். வீடு வேண்டாம் என்று வீதியில் வாழ்பவர்களை அடையாளம் காண்பது மிகவும் இலகு. இவர்கள் ஒரு வீட்டுச் சாமான்களை தங்களுடன் எப்போதும் சுமந்து கொண்டு திரிவார்கள். சுமக்கும் தள்ளு வண்டி கூட அருகில் இருக்கும் பெரிய கடைகளில் ஒன்றினுடையதாக இருக்கும். வந்தவர் கடகடவென்று என்னைத் தாண்டி, உயர்த்தியில் ஏறி, அவசர அவசரமாக உயர்த்தியின் கதவை மூடி, மேம்பாலத்தில் ஓடி நடந்து, மறுபக்க உயர்த்தியால் இறங்கி, மூன்றாவது மேடையில் உயர்த்தியின் பின்பக்கம் ஒளித்து நின்றார். புகைப்பதைத் தவிர, செயல்கள் என்று இவர்கள் வேறு எதுவும் செய்வதில்லை. பல புகைத்தல்கள் இங்கே சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டும் உள்ளது. ஒளித்து நின்று புகைக்க வேண்டிய கட்டாயமும் இவர்களுக்கு இல்லை. இலங்கையில் 28 கோடி ரூபாய்கள் பெறுமதியான ஆணிகளை ஒரு பாலத்தில் இருந்து சிலர் திருடிச் சென்றுள்ளனர் என்ற சமீபத்திய செய்தி நினைவில் மின்னி மறைந்தது. பார்த்துக் கொண்டே இருக்க, நீளம் பாய்தலுக்கு ஓடி வருபவர் போன்று ஒரு பெண்மணி ஓடி வந்தார். நின்றார். 'ஜேக்கப், உன்னை எனக்கு அக்கு வேறு ஆணி வேறாகத் தெரியும். (தடை செய்யப்பட்ட வார்த்தை). (தடை செய்யப்பட்ட வார்த்தை). நீ அந்த உயர்த்தியின் பின்னால் ஒளிந்து நிற்கின்றாய். (இரண்டு தடை செய்யப்பட்ட வசனங்கள்). ஜேக்கப் வெளியில் வரவேயில்லை. புகைவண்டி வந்து கொண்டிருந்தது. ஜேக்கப் அங்கே தான் ஒளித்து இருக்கின்றார் என்று அந்தப் பெண்ணுக்கு எப்படித் தெரியும் என்று எனக்கு விளங்கவில்லை. வாழ்க்கை வீடோ வீதியோ, ஜேக்கப்பிற்கும் இது என்றும் விளங்கப் போவதில்லை.
  2. இந்தின் இளம்பிறை -------------------------------- ஒரு உறவினர்களின் திருமண விழா மெக்ஸிக்கோவில் உள்ள ஒரு இடத்தில் நடந்தது. இப்பொழுது சில பிள்ளைகள் வேறு தேசம் ஒன்று போய், அங்கு விழா வைப்பதையே விரும்புகின்றனர். திருமண விழா முடிந்து அடுத்த நாளும் நான் அந்த விழா நடந்த இடத்திற்கு போயிருந்தேன். அன்று அந்த இடம் மிகவும் பரிதாபமாக இருந்தது. ஆதலால், நான் அந்த இடத்தை இரண்டு படங்கள் எடுத்தேன், இன்று நானாவது எடுப்போமே என்று. நேற்று ஒரு சோடி செருப்பு அங்கே காணாமல் போயுள்ளது, அதைக் கண்டால் எடுத்து வரவும் என்ற தகவலையும் கையோடு வைத்திருந்தேன். கடலோர மணல் மேல் போட்டிருந்த மேடை இன்னமும் அங்கேயே இருந்தது. ஆனால் கடற்கரை வெள்ளை மணல் திட்டு திட்டாக மேடையெங்கும் ஏறி ஒழுங்கில்லாமல் பரவிக்கிடந்தது. மேடை மேலே கட்டியிருந்த முக்கால்வாசி அலங்காரத் துணிகள் விழுந்து அங்கங்கே குவியலாகக் கிடந்தன. இன்னும் விழாமல் இருந்தவை இனிமேல் விழுவதற்காக கடல் காற்றில் பறந்து கொண்டிருந்தன. ஒரு கிரேக்கச் சிலையில் இருந்து அதன் கடைசி உடுபுடவையும் காற்றில் பறக்கத் தயாராக இருப்பது போல. நான் படமெடுக்கும் போது இரண்டு உல்லாசப் பயணிகள் அந்த மேடையின் ஓரத்தில் அமர்ந்து அருந்திக் கொண்டிருந்தனர். இதற்கு முந்தைய நாள், திருமண நாளன்று, மேடையில் இவர்கள் இருவரும் இருந்து அருந்திக் கொண்டிருக்கும் இடத்திற்கு கொஞ்சம் உள்ளே புரோகிதர் அமர்ந்திருந்தார். அவருக்கு முன் சிறிய நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. இந்த இரு பயணிகளின் இடத்தில் நான் அமர்ந்திருந்தேன். புரோகிதர் குஜராத்தை சேர்ந்தவர் என்றும், அவர் இப்பொழுது மெக்ஸிக்கோவில் வசிப்பதாகவும் அங்கே சொல்லியிருந்தனர். புரோகிதர் ஒரு கையில் தேங்காயையும், இன்னொரு கையில் கல் ஒன்றையும் கொடுத்து, அந்தத் தேங்காயை சரியாக அவர் சைகை செய்யும் நேரத்தில் என்னை உடைக்கச் சொன்னார். தேங்காயை சரி வட்டப் பாதிகளாக உடைக்க வேண்டும் என்ற அழுத்தம் இலங்கை மீதான சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தம் போன்ற தவிர்க்க முடியாத ஒன்றாக இரண்டு மூன்று நாட்களாக என்னை தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. புரோகிதர் கொடுத்த கல்லுக்கு நிகரான கல்லை நான் ஊரில் மயிலியதனைப் பக்கம் இருக்கும் மண்டபக்கிடங்கு பகுதியில் சிறு வயதில் பார்த்திருக்கின்றேன். எல்லாப் பக்கமும் கூரான, எங்கே பிடிப்பது எங்கே அடிப்பது என்பதைக் கண்டுபிடிக்க முடியாத ஒரு மர்மக்கல் அது. மயிலியதனைக்கும், மெக்ஸிக்கோவிற்கும் 'ம' வரிசையில் ஆரம்பிக்கின்றன என்ற ஒற்றுமையுடன், கல்லிலும் இன்னொரு ஒற்றுமையும் இருந்தது. புழுக்கொடியலுக்கு தோதான சில்லுச் சில்லாக தேங்காய் சிதறப் போவது திண்ணம் என்று தெரிந்தது. முக்கிய பார்வையாளரான என் துணைவி மற்றும் இதர பார்வையாளர்களுக்கு மண்டபக்கிடங்கு கல் தான் என் கையில் இருக்கும் ஆயுதம் என்று தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. நடப்பவை நடந்த பின் முழுப்பழியையும் சுமக்க வேண்டியது தான். இயேசு பிறப்பதற்கு முன், அவர் பிறந்த தேசத்தில், ஆடுகள் மீது மனிதர்களின் பாவங்களும் பழிகளும் ஏற்றப்பட்டு, அவை பாலைவனத்திற்குள் துரத்தி விடப்பட்டன என்று சொல்கின்றனர். பின்னர் எல்லோருடைய பாவங்களையும் ஏற்க பாலன் இறங்கி மனிதனாக வந்தார். இன்று சனத்தொகை எக்கச்சக்கமாக எகிறி ஏறி விட்டதால், தேவபாலன் தனியாக எல்லாவற்றையும் சுமக்க முடியாமல் திக்குமுக்காடிப் போய் நிற்கின்றார். இந்த தேங்காய் உடைப்பதில் ஏதும் பிழை, பாவம் வந்தால் நானே தான் சுமக்கவேண்டும் ஓங்கி அடிக்கின்ற அந்தக் கணத்தில் தேங்காய் முழுதாக கையை விட்டுப் பறந்தது. அன்று புரோகிதரின் இடுப்பு எலும்பு தப்பியது ஒன்பதாவது அதிசயம். மயிரிழையில் தப்பினார். புரோகிதர் என்ன நடந்தது என்று கூட்டிப் பெருக்கி உணர்வதற்குள், நான் தேங்காயை பாய்ந்தெடுத்து சில்லுச் சில்லாக குத்தி தட்டில் போட்டுவிட்டேன். மிக அருமையாக தேங்காயை உடைத்ததற்காக எல்லோரையும் கை தட்டுமாறு புரோகிதர் சொன்னார். மறுபேச்சில்லாமல் கூட்டமும் தட்டியது, ஐயர் சொல்லிவிட்டாரே. எல்லாம் முடிந்த பின், தனியாக இருந்த புரோகிதரிடம் மெதுவாகக் கேட்டேன். 'குஜராத்தில் கல்யாண வீட்டில் தேங்காயை கல்லால் தான் குத்துவீர்களா?' 'குஜராத்தா, அது எங்கேயிருக்கின்றது?' 'அப்ப நீங்கள் இந்தியர் இல்லையா?' 'மெக்ஸிகன்.' இங்கு ஏற்கனவே பல அர்த்தங்கள் ஏற்றப்பட்டு விட்ட ஒரு கனமான சொல் இது. அந்தச் சொல்லுக்கு இருக்கும் அர்த்தங்களை மீறி புதிதாக எதையும் சிந்திக்க முடியவில்லை. எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சமூகநீதிச் சட்டம் தமிழ்நாட்டில் இருப்பது தெரியும். ஆனால் பழைய அர்ச்சகர்கள் கோயில் நடையைப் பூட்டுவதும், நீதிமன்றம் மீண்டும் திறப்பதும் என்று, அங்கே அதுவே இன்னும் ஒரு இழுபறியில் தான் போய்க் கொண்டிருக்கின்றது. இது இன்னுமொரு பரிமாணம். 'அப்ப இந்த மந்திரங்கள், சுவாஹா, ராதா, கிருஷ்ணா, பிரபஞ்சம்,....' 'நான் சில காலம் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கூட்டத்தில் இருந்தேன்.' 'அ.....' 'இந்த மாதிரி சிலவற்றை அங்கே கேட்டிருக்கின்றேன். இப்ப எல்லாம் ஃபோனிலும் இருக்குது தானே. அப்படியே பார்த்து வாசிக்க வேண்டியது தான்.' 'ம்.....' அப்படியே தொலைந்து போனதாகச் சொன்ன சோடிச் செருப்பை தேடத் தொடங்கினேன்.
  3. இலங்கையின் ஒருபகுதி ஒவ்வொன்றாய் கட்டி எழுப்பப்பட்டுக்கொண்டிருந்தபோது தமிழர் பகுதியில் பத்து பத்தாய் தகர்க்கப்பட்டுக்கொண்டிருந்தது, தமிழர் பிரதேசங்களுக்கு தமிழ் அரசியல்வாதிகளும் எதுவும் செய்யபோவதில்லை, சிங்கள அரசியலும் பெரிதாய் கண்டுகொள்ள போவதுமில்லை, கையில் காசு உள்ளவர்கள் அவரவர் தனிப்பட்ட முறையில் தமது வளர்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், இடிந்து தகர்ந்து போயிருந்து படிப்படியாக உருப்பெற முனையும் எம் மண்ணுக்கு எவர் வந்து உதவி பண்ணினாலும் நன்றியுடன் கைப்பற்றுவோம். வெளிநாட்டிலிருந்து வந்து கல்கிசை பீச்சிலும், கண்டி தெப்ப குள பக்கமும் திரியாமல் எம் தாயக பிரதேசத்திற்கு தம்மால் முடிந்ததை செய்த இவர்கள் நன்றிக்குரியவர்கள். இது உதவி என்ற ஒரு கோணத்தை விட்டு மறு கோணத்தில் பார்த்தால், இவர்களுக்குள்ள தொடர்புகளும் சர்வதேச ஊடக பார்வையும் நாம் ஆயிரம் செய்தாலும் கவன ஈர்ப்பை பெறாத இலங்கையின் வடபுலத்தின் மீதான சர்வதேச விழிப்புணர்வு. எமக்குள் நாமே வசனங்கள் விவாதங்கள் கண்ணீர் அஞ்சலிகள் நடத்தியதால்தான் இறுதிபோர்வரை சர்வதேச கவனத்தை ஈர்க்க முடியவில்லை, அந்நாளில் சிறு அளவுகூட எமக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை, முடிந்ததெல்லாம் முடிந்தாயிற்று இதுபோன்ற நிகழ்வுகளால் சிறுதுளியாயினும் எதாச்சும் நாம் கவனம் பெற்றால் மகிழ்ச்சியே.
  4. உள்ளதை மறைத்து உள்ளவரோடே உறவாடும் ஊடக நரிகளின் உஷ்ணப் பேருமூச்சோ . வள்ளலார் வாக்கையே வசைபாடிய - நம் வம்சம் போக்கற்ற போலிச்சாமியார்களின் புகலிடம் ஆனது கண்ட பூமித்தாயின் கனல் முச்சோ மாட்டுக்கே நீதி தந்ததோன் - மண்ணில் மட்டற்ற மாசு புரிந்தார் பணம் செய்யும் மாயத்தால் மண்புளோராய் மாறி மானமின்றித் திரிதல் கண்டு வெட்கித் தன் விழி மறைத்த நீதித் தாயின் சின மூச்சோ சுழலத் தொடங்கிய மின்விசிறி என் சிந்தனைக்கு சுவரிடவே வழமை வாழ்க்கைக்குத் திரும்பியவளாய்...... காருண்யா
  5. யாழ் மக்களை திரும்பி பார்க்க வைத்த வெளிநாட்டவர்கள்...! குவியும் பாராட்டுக்கள் யாழ். மானிப்பாய் வைத்தியசாலையின் வளர்ச்சிக்காக வெளிநாட்டவர்களால் துவிச்சக்கரவண்டி பயணம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்த 30 இற்கும் மேற்பட்டோர், துவிச்சக்கர வண்டிப் பயணம் மூலம் நிதி சேகரித்து அதனை யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கு வழங்கி அதனை சகல வசதிகளுடன் கூடிய வைத்தியசாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர். அதற்கான துவிச்சக்சகர வண்டிப் பயணமானது, கண்டியில் கடந்த புதன்கிழமை ஆரம்பமாகி அங்கிருந்து மாத்தளை ஊடாக தம்புள்ளை வந்து, அங்கிருந்து நேற்றையதினம்(01) வவுனியாவை அடைந்தனர். அதன்பின்னர் யாழ்ப்பாணம் நோக்கி துவிச்சக்கரவண்டி பயணம் ஆரம்பமாகியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த ஆண், பெண் எனப் பலரும் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர். இதேவேளை வெளிநாட்டவர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் துவிச்சக்கரவண்டி பயணத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://samugammedia.com/foreigners-made-jaffna-people-look-back-accumulating-praises-1709350973
  6. What is nationalism easily explained? Nationalism is a strong attachment to a particular country, or nation. It is also called patriotism. In the modern world, many citizens are very loyal to their country or to their ethnic group. Many historians consider nationalism to be one of the most important forces in shaping modern history. Nationalism can have a positive influence by giving people a sense of belonging to a national community. Sometimes, however, nationalist feelings can make people ignore problems in their country or group. It also can make people think that their country or group is better than any other. Beginnings of Nationalism Nationalism is a fairly modern development. It spread throughout Europe in the 1800s. People began to feel strongly about belonging to a group with a shared culture. These feelings led to the creation of nation-states, or countries populated mostly by a single ethnic group. During this time, the modern countries of Germany and Italy took shape. Nationalist feelings also led to successful revolts against the Ottoman and Hapsburg empires, which ruled over many different peoples. https://kids.britannica.com/kids/article/nationalism/602879#:~:text=Nationalism is a strong attachment,forces in shaping modern history. ஈழத்தமிழ் எழுத்தாளர் எஸ்.பொ "தமிழர் தேசியம்: வரலாற்றுத் தேடல்" என்ற தலைப்பில் படித்துறை என்னும் சிற்றிதழின் (சித்திரை 2004) முதல் இதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். கட்டுரையின் முக்கியப் பகுதி இலங்கை என்னும் இன்றைய நாட்டின் நிலப்பரப்பில் தமிழர் தேசியக் கோட்பாட்டின் வரலாறு மற்றும் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தமிழர் தேசியம் எவ்வாறு தடம்புரண்டுள்ளது ஆகியவற்றைப் பற்றி விவரிக்கிறது. என் பதிவுகளைப் பொறுத்தமட்டில் நான் வரிசையை சிறிது மாற்றியமைத்துள்ளேன். முதலில் எஸ்.பொ தேசியத்தையும், (ஈழத்)தமிழ்த் தேசியத்தையும் எவ்வாறு வரையறுக்கிறார் என்று அவரது வார்த்தைகளிலேயே காண்போம். தமிழ்த்தேசியம் என்றால் என்ன? 'தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா' என்று தொண்டை வரளக் கோஷிப்பது அல்ல தேசியம். அலங்கார மேடைப் பேச்சுகளினாலே, தமிழ்த் தேசியத்தை வனைந்தெடுக்க முடியாது. அடிப்படையில், அது நிபந்தனையற்ற தமிழர் சுயாதீனத்தை வலியுறுத்துவது. தமிழ்மொழி மூலம் தமிழருடைய வாழ்வையும், வளத்தையும் அரண் செய்வது; அணி செய்வது. கலை-இலக்கிய வாழ்க்கையிலே தமிழ்ப்படைப்புகள் மூலம் சுகம் பெறுவது. தமிழின் வளத்தையும் ஞானத்தையும் புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்ல உதவும் அந்த மகத்தான உந்துதலுக்கும் உணர்ச்சிக்கும் பெயர்தான் தமிழ்த்தேசியம். அது தமிழர் சமூகத்தை ஊழல்களிலிருந்து மீட்கும் மந்திர சக்தி பெற்றது. அது தமிழர் சமூகத்திற்கு உயிர்த்துவம் அளித்து, புதிய பொற்பங்கள் சாதிக்கப் புதிய திசையும் திறனும் அருளுவது. பிறரைக் காலில் விழுந்து வணங்காத வீரத்தை அளிப்பது. தமிழ் விரோதச் செயல்களை வேருடன் அறுக்கும் மறத்தை அருள்வது. அதுவே வாழ்வின் அனைத்து அறங்களின் ஊற்றாய் நிற்பது. ஈழத் தமிழர்கள் இன்று தங்களை தமிழ்மொழி பேசும் ஓர் இனம் என்றே அடையாளப்படுகிறார்கள். அந்தத் தமிழ் மொழியைப் பேசும் மக்கள் வாழும் பிரதேசத்திற்கு இறைமை உள்ள ஓர் அரசை நிறுவப் போராடுகிறார்கள். போரின் பல்வேறு பட்ட இழப்புகளினாலும் இத்தேசியம் தனித்துவமான மூர்க்கம் பெற்றுள்ளது. எஸ்.பொ இலங்கையில் தமிழ்த் தேசியத்தின் வரலாறாக கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடுகிறார்: * 1505 ஆண்டு போர்த்துக்கீயர் வருகைக்கு முன்னர் வரை நல்லூரைத் தலைமையாகக் கொண்டு யாழ்ப்பாணத் தமிழரசு ஆட்சி செலுத்தி வந்தது. * 17ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத் தமிழரசின் கடைசி மன்னன் சங்கிலியன் வீழ்ந்தான். * போர்த்துகீயர்களைத் தொடர்ந்து ஒல்லாந்தரும் (Hollander - Dutch), ஆங்கிலேயரும் இலங்கைக்கு வந்து கடலோரப் பகுதிகளில் ஆட்சி செலுத்தி வந்தனர். அப்பொழுதும் கண்டி பகுதிகளில் தமிழ் மன்னர்களின் தலைமையில் தமிழாட்சி இருந்து வந்தது. * 1815இல்தான் இலங்கை முழுவதும் ஆங்கிலேயர் வசம் வந்தது. அப்பொழுதும் கூட தமிழ்ப்பகுதிகளும், சிங்களப் பகுதிகளும் தனித்தனி அலகுகளாகப் பிரிந்து இருந்ததால் தமிழ் மொழி, கலை மரபுகள் தனித்துவத்தோடே இருந்து வந்தன. அதனால் தமிழ்த் தேசியமும் தொடர்ந்து இருந்து வந்தது. * 1832இல்தான் இலங்கை முழுவதும் ஒற்றை ஆட்சி முறையின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. இந்தியா பெரிதும் சொல்லிக்கொண்டிருக்கும் 'The sovereignty and territorial integrity' என்னும் கருத்து ஆங்கிலேயர்களாலே சுதேசிகளான சிங்களர் மற்றும் தமிழர்கள் மீது 1832இல்தான் திணிக்கப்பட்டது. * நிர்வாக வசதிக்காக இலங்கை அப்பொழுது வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு, மையம் என்று ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. இதனால் தமிழர்களின் பாரம்பரிய நிலப்பரப்பு தொலைந்து போனது. தமிழர், சிங்களர் இருவருமே தமது தேசியத்தினைத் தொலைக்க நேர்ந்தது. * தமது தற்கால வரலாற்றை எழுதும் சிங்களவர் அநகாரிக தர்மபாலாவை (1864-1933) மையப்படுத்தி மேன்மைப்படுத்துவர். இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள அநர்த்தங்கள் அனைத்துக்குப் அதிபிதா இந்த தர்மபாலாவே. [எஸ்.பொவின் சொற்களை அப்படியே தருகிறேன் இங்கு] * சிங்கள இனவாதக் கோட்பாட்டினை முன்வைத்து தர்மபாலா ஏற்றிவைத்த இனவாதத் தீ 1915இல் கண்டியிலும், கம்பளையிலும் துவங்கியது. முஸ்லிம் மக்களினி சங்காரத்துடன் துவங்கி இன்றுவரை புற்றுநோய் போன்று இலங்கையின் ஆரோக்கியமான அரசியலை அரித்து நிரந்தர நோயாளி ஆக்கிக் கொண்டே இருக்கின்றது. * கைலாசபதி போன்ற சிலர் தர்மபாலாவுக்கு இணையாக ஆறுமுக நாவலர் தமிழர் தேசியத்தை முன்மொழிந்தார் என்கின்றனர். அது உண்மையன்று. ஆறுமுக நாவலர்தமிழ்த் தேசியம் பற்றிய பிரக்ஞை இன்றே வாழ்ந்து மறைந்தார். சைவமும் தமிழும் என்று பேசிய அவரது செய்கை கிறித்துவ மதப்பிரசாரத்துக்குமேதிராக இருந்ததுவே தவிர தமிழர் தேசியத்துக்கு ஆதரவாக இருந்ததில்லை. ஆங்கிலேயருடைய ஆட்சியை ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் அதன் நீட்சியையும் விரும்பினார். ஆங்கிலேயர் அதிகாரத்தில் கார்காத்த சைவ வேளாளரே ஆட்சி அதிகாரம் உடையோராய் இருக்க வேண்டும் என்று மனதார விரும்பினார். தமிழ்த் தேசியம் சிங்கள் இன ஆதிக்கத்தின் எதிர்வினையாகவே ஈழத்தில் உருவானது. வரிசையாக நிகழ்ந்த இனப்படுகொலைகள், 1983 இலே முழு அளவில் தமிழர்கள் மீது அவிழ்த்துவிடப்பட்டபோதுதான் புத்துயிர் பெற்று வெளியானது தமிழ்த் தேசியம். https://tamilnation.org/diaspora/articles/espo ஒரு அறிவுசார் புரிதலுக்காக மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. வேறு நோக்கங்கள் எதுவும் இல்லை.
  7. மயிலிறகு ....... 05. எடேய் ....அப்போது நீ கவனிச்சனியே அவன் தன்ர மோட்டர் சைக்கிள் சைட் பெட்டியில் இருந்து ஒரு மஞ்சள் பை எடுத்து அவளிடம் பணம் பத்திரம், கவனமாய் கொண்டுபோய் பெட்டியில் வை என்று கொடுத்ததை. தோராயமாய் பார்த்தாலும் ஐந்தாறு லட்சங்களாவது இருக்கும் இல்லையா.....அதை சொல்லும்போது சுந்துவின் குரலில் ஒரு அவாவும் தடுமாற்றமும் இருக்கு. ஓமடா .....நானும் கவனித்தனான் ஆனாலும் அதடா என்பவனை இடைமறித்து அதுமட்டும் கிடைத்தால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துடுமடா. பூவனத்தின் கல்யாணம்,என்ர படிப்பு,உன்ர மோட்டார் சைக்கிள் மற்றும் ஊருக்குள் ஒரு மளிகைக் கடை என்று எல்லாம் செய்யலாம்டா...... சுந்துவுக்கு கொஞ்சம் வெறி ஏறீட்டுது. டேய் வாமு அவன்ர சேட்டைக்கு எப்படியாவது அதை அடிச்சுக்கொண்டு வரவேணும். குரல் உசாராய் சத்தமாய் வருகிறது. உனக்கென்ன பைத்தியமாடா சுந்து ....அப்படி ஏதாவது நடந்தால் உடனே அவருக்குத் தெரிந்து போயிடும் நாங்கள்தான் செய்திருப்பம் என்று...... பிறகு உன்ர படிப்பு, தங்கச்சியின் கல்யாணம் எல்லாம் பாழாகிடும்.இப்ப நீ ஒன்றுக்கும் யோசிக்காமல் போய்ப்படு.பிறகு பார்க்கலாம் என்று சொல்கிறான். மயிலம்மா அறைக்குள் தன் அலுமாரியில் எதையோ தேட பூவனம் அங்கு தேநீர் கோப்பைகளுடன் வருகிறாள்.தாயைப் பார்த்து என்னம்மா தேடுகிறாய் .....இல்லையடி இன்று முழுதும் செத்தவீடு, மார்அடிச்சு அழுதது, நடை என்று ஒரே அலுப்பாய் இருக்கு அதுதான் இந்த மருந்துப் போத்தலை இங்கினதான் எங்கேயோ வைத்தனான் காணேல்ல ஓ......அதுவா அதைத்தான் அவங்கள் இரண்டு பேரும் எடுத்து குடிச்சுட்டு அலட்டிக் கொண்டிருக்கிறாங்கள். அப்படியே.....சரி சரி அத விடு, உந்தத் தேத்தண்ணியைத் தா குடிப்பம். நீ அவங்களுக்கு நல்லா இடங் குடுக்கிறாய் சொல்லிப் போட்டன் என்று தாய்க்கும் தேநீரைக் குடுத்துட்டு தனது தேநீரை எடுத்துக் கொண்டு வெளியே போகிறாள் பூவனம். அடுத்தநாள் காலை பத்து மணியளவில் தபால்காரர் சைக்கிளில் மயிலம்மா வீட்டுக்கு முன் வந்து நின்று மணியடிக்க பூவனம் சென்று அவரிடமிருந்து பதிவுத்தபால் ஒன்றை கையெழுத்திட்டு வாங்கி வருகிறாள். வரும்போதே அண்ணா உனக்கொரு கடிதம் வந்திருக்கு வந்து பாரேன் என்று அழைக்கிறாள். அடுக்களையில் இருந்து மயூரியும் சுந்துவும் ஒரே நேரத்தில் வெளியே வருகிறார்கள். சுந்து வந்து தங்கையிடம் இருந்து கடிதத்தை வாங்கிக் கவனமாகப் பிரித்துப் படிக்கிறான்.அதில் அவன் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் படிப்பதற்குத் தேர்வாகி இருப்பதாகவும் வரும் திங்கள் கிழமை குறிப்பிட்ட ஆவணங்களுடன் வந்து சேந்து கொள்ளும்படி தெரிவிக்கப் பட்டிருந்தது.அதை அறிந்ததும் அவர்களுக்கு மிகவும் சந்தோசமாய் இருக்கு. அம்மா நான் இந்த நல்ல செய்தியை வாமனிடம் போய் சொல்லிப்போட்டு வாறன்.இதைக் கேட்டதும் அவன் மிகவும் சந்தோசப்படுவான் என்று சொல்லிவிட்டு தாயைப் பார்க்க அவளும் இருடா வாறன் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று கொஞ்ச பணம் எடுத்துவந்து மகனிடம் குடுக்கிறாள். பணத்தை வாங்கியதும் சுந்து சந்தோசத்துடன் சைக்கிளில் சிட்டாய்ப் பறக்கிறான்.இதை பார்த்த பூவனம் அம்மா இவங்கள் குடிக்கப் போறாங்கள், நீ வேற அவங்களுக்கு காசு குடுக்கிறாய்.... நீ சும்மா இருடி அவங்கள் என்னண்டாலும் செய்யட்டும். அங்க படிக்கப்போனால் இனி எப்ப அவனைப் பார்க்கபோறோமோ....நீ போய் அடுப்பில மா அவிய வைத்தனான் என்னெண்டு போய்ப் பார்....நான் ஒருக்கால் கனகத்தைப் பார்த்துட்டு வருகிறேன்.....பக்கத்து வீட்டுக்கு நடந்து செல்கையில் அவளின் மனம் கணக்குப் போடுகிறது. இன்று வெள்ளி அடுத்து சனி,ஞாயிறு பின் திங்கள் வந்துடும்.இதற்குள் பணத்துக்கு என்ன செய்வது. இப்ப ஒரு இரண்டாயிரம் இருந்தால் கூட போதும் பிறகு பார்த்து நிலத்தை ஈடு வைத்து எண்டாலும் பிள்ளையின் படிப்புக்கு உதவ முடியும். அவன் படித்து ஆளாயிட்டான் என்றால் எங்கட பஞ்சம் தீர்ந்திடும்.அதுக்குள் இவளின் சம்பந்தம் வேற நான் முந்தி, நீ முந்தி என்று நிக்குது.எல்லாவற்றையும் நினைக்க நினைக்க மயூரிக்கு மண்டை விறைக்குது. அங்கு வீட்டு வாசலில் கனகம் நிற்பதைக் கண்டு விரைவாக நடக்கிறாள். வாமு வீட்டை போன சுந்து அங்கு அவனைக் காணாது அவனின் தாயிடம் விசாரிக்க அவவும் அவன் அரசு விதானையார் கூப்பிட்டு போயிட்டான். இப்ப வரும் நேரம்தான் நீ உந்த வாங்கில இரு தம்பி. நான் தேத்தண்ணி போட்டுக்கொண்டு வாறன் என்று உள்ளே போகிறாள். சிறிது நேரத்தில் வாமுவும் சைக்கிளில் வந்து இறங்குகின்றன். அவனைக் கண்டதும் ஓடிச்சென்று வாமுவைக் கட்டிப்பிடித்த சுந்து தனக்கு பல்கலைக்கழகத்துக்கு வரச்சொல்லி கடிதம் வந்திருக்கு என்று சொல்லிவிட்டு சட்டென்று அமைதியாகின்றான்.அவனின் முகவாட்டத்தைப் பார்த்த வாமு என்னடா சொல்லு என்று கேட்க அவனும் வாற திங்கள் போகவேணும் இன்னும் இரண்டு நாள்தான் இருக்கு அதற்குள் பணத்துக்கு என்ன செய்யிறதென்றுதான் யோசிக்கிறன். எட மடையா, அதெல்லாம் வெல்லலாம், நீ ஒன்றுக்கும் யோசிக்காத.நீ இருந்து தேத்தண்ணியைக் குடி நான் உடுப்பு மாத்திக்கொண்டு வாறன் என்று உள்ளே போகிறான்.சிறிது நேரத்தில் இருவரும் தாயிடம் சொல்லிக்கொண்டு சைக்கிள்களில் வெளியே போகின்றார்கள். அந்த ஊரில் இருக்கும் ஒரேயொரு பாரில் சுந்து ஒருபோத்தல் சாராயம் வாங்கப் போக வாமு அவனிடம் கணக்க வேண்டாம் அரைப் போத்தல் வாங்கு போதும் என்று சொல்லி அரைபோத்தல் சாராயமும் இரண்டு பிளாஸ்டிக் கப்பும் அத்துடன் குடல் கறியும் வாங்கிக்கொண்டு வருகிறான். இருவரும் அங்கிருந்த சிறு மேசையில் அமர்ந்து கொள்கிறார்கள். பக்கத்தில் ஒரு மேசையில் நாலுபேர் ஊர் உலகத்தில் நடக்கிற பல விஷயங்களையும் கதைத்து சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். சுந்துவும் போத்தலை எடுத்து உள்ளங்கையில் ரெண்டு குத்து குத்தி மூடியிலும் குத்திவிட்டு மூடியைத்திருக அதுவும் மெல்லிய இழை தளர்ந்து புதுமணப்பெண்போல் முனகிக் கொண்டு திறந்து கொள்கிறது.ஒரு சுகந்தமான வாசனை அவர்களைச் சூழ்ந்து கொள்கிறது. அப்படியே அந்தப் பொன்னிறத் திரவத்தை இரண்டு கிளாஸ்களிலும் பாதி பாதியாக ஊற்ற வாமுவும் பக்கத்து மேசையில் இருந்து தண்ணி வாங்கி அதில் கலந்து விடுகிறான்.இருவரும் ஆளுக்கொரு மிடறு குடிக்கிறார்கள்.பின் வாமு பொக்கட்டில் இருந்து சிகரெட் பெட்டியை எடுத்து அவனுக்கும் ஒன்றைக் குடுத்து தானும் ஒன்றை வாயில் வைத்துக் கொண்டு தீப்பெட்டி தேட பக்கத்து கதிரையில் இருந்தவர் இங்காலுப்பக்கம் திரும்பாமல் தன்னிச்சையாய் தனது சிக்ரெட்டை நெருப்புடன் இவனிடம் தருகிறார். வாமனும் அதை வாங்கி தன் வாயில் இருந்த சிக்ரெட்டைப் பற்றவைத்து சுந்துவிடம் குடுத்துட்டு அவனிடமிருந்த சிக்ரெட்டை வாங்கி தான் பத்தவைச்சுக்க கொண்டு அவரிடம் அவருடையதைக் குடுத்து விடுகிறான். 🦚 மயில் ஆடும் ........!
  8. மஞ்சள் சிவப்பு வர்ணத்தில் துவிச்சக்கர வண்டிகளில் கொடி கட்டவில்லை. இல்லாவிட்டால் கருத்துக்கள் கூறும் சிலருக்கு புகையாது. சிலவேளைளில் தம்மைவிட கற்றவர்கள், முன்னேறியவர்கள் ஏதும் நல்லது செய்து பெயர் எடுக்கின்றார்கள் என்று புகையிதோ தெரியாது. இளனி குடித்து பார்க்கலாமே. மானிப்பாய் வைத்தியசாலை மீது ஒரு காலத்தில் விமான குண்டு வீசப்பட்டது. குண்டு வீசப்பட்ட சில தினங்களில் அழிவை பார்த்தேன். மீண்டும் நல்ல நிலைக்கு வர எடுக்கப்படும் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்!
  9. பொருநைக் கரையினிலே - 1 - சுப.சோமசுந்தரம் காவ்யா பதிப்பக நிறுவனர் பேரா.சு.சண்முகசுந்தரம் அவர்கள் தமது புதினங்களான பொருநை, கூவம் இவற்றில் முறையே தமது நெல்லை, சென்னை வாழ்க்கையினைச் சொல்லோவியமாய் வரைந்துள்ளார். இத்தலைப்புகளால் ஈர்க்கப்பட்ட அடியேன், "என் வாழ்க்கையைச் சித்தரிக்கப் பெரிதாக ஏதுமில்லையெனினும், பொருநைக் கரையிலேயே அநேகமாக வாழ்நாள் முழுதும் கழிக்கும், களிக்கும் பேறு பெற்ற நான் இங்கு கற்றதையும் பெற்றதையும் குறைந்தபட்சம் ஒரு கட்டுரையாய் அல்லது கட்டுரைத் தொடராய்ப் பதிவு செய்யலாமே என எண்ணியதன் வெளிப்பாடே இந்த என் எழுத்து. அக்காலத்தில் (ஓரளவு இக்காலத்திலும்) தலைப்பிள்ளை தாயாரின் ஊரில் பிறக்க வேண்டும் என்ற வழக்கத்தின்படி நான் நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணிக் (பொருநை) கரையிலுள்ள அரியநாயகிபுரம் எனும் அழகிய கிராமத்தில் பிறவி எடுக்கும் பேறு பெற்றேன். பிறந்த ஊர் என்பதும் பள்ளிப் பருவத்தில் நீண்ட விடுமுறை நாட்களில் அங்கிருந்த ஆச்சி - தாத்தா வீட்டிற்குச் செல்வேன் என்பதுமே எனக்கும் அந்த கிராமத்துக்குமான தொடர்பு. மற்றபடி எனது தந்தையாரின் ஊரான பாளையங்கோட்டையே நான் வளர்ந்த, வாழ்ந்த ஊர். அதுவும் பொருநையின் கரையில் அமைந்த ஊர் என்பது எனக்கான பெரும்பேறு. தந்தையார் நெல்லை மாவட்டத்தில் அரசுப்பணியில் இருந்ததால், எனது சிறார் பருவத்தில் அவர்கள் வேலை பார்த்த கிராமத்தில் ஒரு பள்ளியில் சேர்த்தார்கள். செய்தி அறிந்த என் ஆச்சி (இந்த ஆச்சி என் அப்பாவின் தாயார்) உடனே அங்கு வந்து, "எங்கெங்கெல்லாமோ இருந்து நம்ம ஊரைத் தேடி வந்து பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள். நீ என்ன இந்தப் பட்டிக்காட்டில் (!!) பிள்ளையைச் சேர்த்து இருக்கிறாய் ?" என்று என் அப்பாவைக் கடிந்து, என்னைப் பாளையங்கோட்டையில் படிக்க வைக்கத் தூக்கி வந்து விட்டாள். திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியதும் மேற்கொண்டு அன்று பேருந்து எதுவும் ஓடாது என்றதும் (அப்போதுதான் பிரதமர் நேரு இறந்த செய்தி வெளிவந்திருந்தது), என்னைத் தூக்கிக்கொண்டு சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாளை வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தாள். வரும்போது பாலத்தில் நின்றபடி எனக்குத் தாமிரபரணியைக் காண்பித்தாள். என் வாழ்க்கையில் விவரம் தெரிந்து நான் முதன் முதலில் பொருநையைக் கண்ணுற்ற தருணம் அது. நாங்கள் நின்ற அந்தப் பாலம் வரலாற்றுப் புகழ்பெற்ற சுலோச்சன முதலியார் பாலம் என்பதெல்லாம் பின்னர் என் ஆச்சி கதையாகக் கூறியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஓரளவு இறுதியில் கட்டப்பட்டது இந்தப் பாலம். அதற்கு முன் பொருநையாற்றின் கிழக்கில் உள்ள பாளையங்கோட்டைக்கும் மேற்கில் உள்ள திருநெல்வேலிக்கும் இடையே போக்குவரத்து, பரிசல் மூலமாகவே நடைபெற்று வந்துள்ளது. பரிசலில் இடம் கிடைக்க அவற்றை இயக்குவோருக்குக் கையூட்டு தரவேண்டிய சூழல் நிலவியபோது, பரிசல் குழாமில் அடிக்கடி தகராறுகளும் வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்று வந்துள்ளன. எனவே மாவட்ட ஆட்சியரின் பல பரிந்துரைகளுக்குப் பின் அங்கு ஒரு பாலம் அமைக்க ஆங்கில அரசால் ஒத்துக் கொள்ளப்பட்டது. எனினும் அதற்குரிய திட்டச் செலவான ஐம்பதாயிரம் ரூபாயை அதன் பயனாளிகளான மக்களிடமே நன்கொடையாகப் பெறத் திட்டமிடப்பட்டது. தங்களுக்குப் பெரிதும் பயனில்லாத திட்டங்களுக்கு ஆங்கிலேய அரசு (அன்றைய கம்பெனி அரசு) வரி வருவாயில் இருந்து செலவு செய்வதில்லை. அக்காலத்தில் செல்வந்தரும் நல்லுள்ளம் படைத்தவருமான திரு. சுலோச்சன முதலியார், அவருக்குக் கௌரவப் பதவியாக அளிக்கப்பட்டிருந்த சிரஸ்தார் பொறுப்பில் இருந்தார். மக்களிடம் நன்கொடை பெற்றுப் பாலம் கட்டும் பொறுப்பை அவரிடமே அளித்தது கம்பெனி அரசு. செல்வந்தரான அவர் பிறரிடம் நன்கொடை கேட்பதில் ஏற்பட்ட தயக்கத்தின் காரணமாகத் தமது சொந்தச் செலவிலேயே பாலம் கட்டித் தரத் தீர்மானித்தார். சில சொத்துக்களை விற்றது போக எஞ்சிய தொகைக்குத் தமது துணைவியாரின் இசைவுடன் அவர்தம் நகைகளையும் விற்றுக் கட்டினார். லண்டனில் தேம்ஸ் நதியின் மீது உள்ள 'வெஸ்ட் மினிஸ்டர்' பாலத்தின் மாதிரியில் கட்டப்பட்டது இப்பாலம். பின்னர் இயல்பாக சுலோச்சன முதலியார் பெயராலேயே இப்பாலம் வழங்கலாயிற்று. இப்பாலத்தையொட்டிய ஆற்றுப்பகுதியில் நான் கண்டவையும் கேட்டவையும் படித்தவையும் சில எப்போதும் நெஞ்சில் நிழலாடுகின்றன. பாலத்திலிருந்து பார்த்தால் தெரிகிறதே தைப்பூச மண்டபம் ! 1908 ல் 'திருநெல்வேலி எழுச்சி' எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க, மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்திற்குச் சில நாட்கள் முன்பு வங்காளப் புரட்சியாளர் விபின் சந்திரபாலின் விடுதலையைக் கொண்டாடும் வகையில் வ.உ.சிதம்பரனாரும் சுப்பிரமணிய சிவாவும் ஆங்கில ஆட்சியரின் தடையை மீறி இதே தைப்பூச மண்டபத்தில் வீர எழுச்சியுரை நிகழ்த்தினர் என்பது தோழர் இரா.வேங்கடாசலபதியின் 'திருநெல்வேலி எழுச்சி'யில் வாசித்து அறிந்தது. நெல்லை சந்திப்பில் அப்போது செயல்பட்ட ம.தி.தா. இந்துக் கல்லூரி வளாகத்தில் ஆரம்பித்த ஊர்வலம் தபால் நிலையம், நகராட்சி வளாகம் போன்றவற்றைத் தீக்கிரையாக்கிய திருநெல்வேலி எழுச்சியும், அதைத்தொடர்ந்து ஆங்கிலேயரின் அடக்கு முறையும் வாசித்து அறிந்தவை. நெல்லைக்காரனாக என்னைத் தலைநிமிரச் செய்பவை. 1970 களின் ஆரம்பத்தில் தூய சவேரியார் கல்லூரிப் பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் காவல்துறையினரால் அநியாயமாகத் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட பெருங் கொந்தளிப்பில் மாணவர் லூர்துநாதன் காவல்துறையின் தடியடிக்குப் பலியானது சுலோச்சன முதலியார் பாலத்திற்குக் கீழேதான். லூர்துநாதனை ஆற்றில் இருந்து மக்கள் தூக்கிய காட்சியை ஒரு பள்ளி மாணவனாக நான் பார்த்தது நேற்று நடந்தது போல் தோன்றுகிறது. 1999 ல் கூலி உயர்வு உட்பட நியாயமான காரணங்களுக்காகப் போராடிய மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் காவல்துறையால் ஓட ஓட விரட்டப்பட்டதும், உயிரைக் காத்துக் கொள்ள ஆற்றில் இறங்கியவர்களையும் விடாமல் அடித்ததில் பெண்கள், கைக்குழந்தை உட்பட பதினேழு பேர் உயிர்நீத்ததும் பொருநைக் கரைக்கு ஏற்பட்ட நீங்காத கறை. முதலாளிகளுக்குச் சேவகம் செய்வதில் ஜனநாயக (!) அரசுகள் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல போலும் ! தினமும் பாலத்தைக் கடந்து அலுவலகம் செல்லுகையில் இரத்தவாடை அடிக்கிறதே, அது என் போன்றோர்க்கு ஏற்பட்ட மனநல பாதிப்போ ! 1992 லும் தற்போது 2024 லும் பாலத்தை மூழ்கடித்துப் பொருநை ஆடிய கோரத்தாண்டவமும் மக்களுக்கு ஏற்பட்ட பெருஞ்சேதமும் என்றென்றும் நெஞ்சைப் பதற வைப்பவை. சுலோச்சன முதலியார் பாலத்தைக் காட்டிய ஆச்சி அதனைக் கடந்து சிறியதொரு பாலத்தின் கீழே ஓடுகிற ஒரு ஓடையைக் காட்டினாள். அதன் பெயர் 'பிள்ளையைப் போட்டுப் பலாப்பழம் எடுத்த ஓடை' என்றாள். பிற்காலத்தில் சுருக்கமாக 'பலாப்பழ ஓடை' என்றாகி தற்போது யாருக்கும் பெயரே தெரியாத ஓடையாகி விட்டது. ஒன்பதாம் நூற்றாண்டின் நடுவில் நிகழ்ந்ததாக ஒரு கதை சொன்னாள். அந்த ஓடையில் மிதந்து வந்த ஒரு பெரிய பலாப்பழத்தை எடுக்க ஆசைப்பட்ட தாய் ஒருத்தி தனது குழந்தையைக் கரையில் விட்டு விட்டுப் பலாப்பழத்தை விரட்டிச் சென்றிருக்கிறாள். குழந்தை மெதுவாகத் தவழ்ந்து ஆற்றில் மூழ்கி விட்டது. எனவே அந்த ஓடைப்பாலத்திற்கு அப்பெயர். இப்படி எத்தனையோ கதைகள் ஊரைச் சேர்ந்த பலர் சொல்வதால் அவற்றில் சில ஓரளவு உண்மையாய் இருக்க வேண்டும். எது எப்படியோ சில செவிவழிக் கதைகள் சுவாரஸ்யமானவை. பழைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் புகழ்பெற்ற தாமிர சபையான நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோயில், சித்திர சபையான குற்றாலநாதர் - குழல்வாய்மொழி அம்மை திருக்கோயில், நவ திருப்பதி, நவகைலாய திருத்தலங்கள், குற்றாலம் மற்றும் பாபநாச நீர்வீழ்ச்சிகள், திருநெல்வேலி அல்வா, பத்தமடைப் பாய் என நெல்லையின் சிறப்புகள் எண்ணிலடங்கா. ஐவகை நிலங்களையும் தன்னகத்தே கொண்டது நான் சிறுவனாய்ப் பார்த்த பழைய திருநெல்வேலி மாவட்டம். இவையெல்லாம் பெரும்பாலும் அனைவரும் அறிந்தமையின், வெகுசனம் அறியாத சிலவற்றைத் தொட்டுச் செல்வது இங்கு பொருந்தி அமைவது. நானே கண்டுணர்ந்த எனது எண்ணவோட்டத்தைப் பகிர்ந்து அளித்தல் அதுவேயாம். இன்றைய பாளையங்கோட்டை நகரின் நடுப்பகுதிக்கு மேற்கே 'மேலக்கோட்டை வாசல்' உள்ளது. அதன் மேல் தளத்தில் 'மேடைப் போலீஸ் ஸ்டேஷன்' இருந்தது. இப்போது காவல்துறை சார்ந்த தகவல் கட்டுப்பாட்டு நிலையம் உள்ளது. கிழக்கே 'கீழக்கோட்டை வாசல்' உள்ளது. அதில் தற்போது தமிழ்நாடு அரசு அருங்காட்சியகம் இருக்கிறது. கோட்டையின் வடபக்க மதிற்சுவர் இன்றைய வடக்குக் கடைவீதி வழியாகச் சென்றது; தென்புறத்து மதிற்சுவர் சவேரியார் கல்லூரியின் முன்புறம் தற்போது செல்லும் முக்கிய சாலையின் மீது அமைந்திருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப்பகுதி வரை பாளையங்கோட்டை ஒரு கோட்டை நகரமாக இருந்துள்ளது. அது ஒரு கற்கோட்டை. பதினெட்டாம் நூற்றாண்டிலேயே சிதிலமடையும் நிலையில் இருந்த கோட்டையின் மதிற் சுவர்கள் மக்களின் பாதுகாப்பு கருதி ஒரு சட்ட வரைவின் மூலமாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயரால் தகர்க்கப்பட்டது. கோட்டையின் கிழக்கு, மேற்கு வாசல்கள் உறுதியானவையாக வீரர்கள் தங்கும் வசதியுடன் இருந்தன. அவை மட்டும் இடிபடாமல் மேற்கூறியவாறு இன்றும் பயன்பாட்டில் உள்ளன. நான் சிறுவனாக இருக்கும்போது அக்கோட்டை பற்றி என் ஆச்சி உட்பட சுற்றாரும் உற்றாரும் சொன்ன தவறான பாடம், அது வீரபாண்டிய கட்டபொம்மனால் கட்டப்பட்டது - அதாவது, பாளையக்காரர்களின் கோட்டை - என்பது. அதற்கேற்றாற் போல் சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கோட்டை இருந்த இடத்தின் தென்மேற்கு மூலையில் (பாளை பேருந்து நிலையம் அருகில்) கட்டபொம்மன் சிலை நிறுவப்பட்டிருந்தது. இக்கோட்டை நகரத்துக்கு 'பாளையங்கோட்டை' என்பது ஒரு தவறான பெயர் (misnomer) என்பதை என் குருநாதர் பேரா. தொ.பரமசிவன் அவர்களிடமே தெரிந்து கொண்டேன். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் திருநெல்வேலி ஆட்சியராயிருந்த ஜாக்ஸன் துரை பாஞ்சாலங்குறிச்சி பகுதியில் ஆட்சி புரிந்த வீரபாண்டிய கட்டபொம்மனை, வரி கட்டாமல் தவறியமைக்காக பாளையங்கோட்டை (அப்போது ஸ்ரீ வல்லப மங்கலத்தின் ஒரு பகுதி) கிழக்கு வாசலில் அக்காலத்தில் அமைந்திருந்த கச்சேரியில் (நீதிமன்றத்தில்) ஆஜராகுமாறு பணித்திருந்தார். அதன்படியும், தமது அமைச்சர் தானாபதிப் பிள்ளையின் ஆலோசனையின்படியும் கட்டபொம்மன் ஆஜரானார். மக்களால் பரவலாகப் பேசப்பட்ட இந்நிகழ்வு இவ்வூருக்கும் பாளையக்காரர்களுக்கும் உள்ள ஒரு தொடர்பு (ஆஜரான கட்டபொம்மனை ஜாக்ஸன் சந்திக்காமல் குற்றாலத்திற்கும் ராமநாதபுரத்திற்கும் பாளையக்காரர் படையினை அலைய விட்டதும், ராமநாதபுரத்தில் ஆங்கிலேய கம்பெனி படையினரோடு மோதல் ஏற்பட்டதும் தனிக்கதை). மற்றுமொரு தொடர்பு உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பியான ஊமைத்துரை, முதல் பாளையக்காரர் போரில் கம்பெனிப் படையினரால் பிடிக்கப்பட்டு பாளையங்கோட்டையின் (அன்றைய ஸ்ரீ வல்லபமங்கலம்) கிழக்குக்கோட்டை வாசலின் கீழ்த் தளத்தில் சிறை வைக்கப்பட்டார். பின்னர் 1801 ல் அச்சிறையில் இருந்து தப்பினார் (சிறிது காலத்திற்குப் பின்னர் வேறு பாளையக்காரர்களாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டு, ஆங்கிலேயரிடம் மீண்டும் சிறைப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார் என்பதுவும் தனிக்கதை). இவ்விரண்டு நிகழ்வுகளும் மக்களால் பரவலாகப் பேசப்பட்டன. இக்கதைகளை மக்களிடம் பிற்காலத்தில் வாய்மொழியாகத் திரட்டிய ஒரு ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளர் (அவரது பெயர் தொ.ப என்னிடம் சொல்லி நான் மறந்தது. தொ.ப இப்போது இல்லை. வாய்ப்பை ஏற்படுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆவணக் காப்பகத்தில் பெயரைத் தேட வேண்டும்) மக்கள் பேசிய மொழியிலிருந்து அரைகுறையாகப் புரிந்து, அக்கோட்டை பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்கள் கட்டியது எனப் பதிவு செய்துவிட்டார். அவர் ஒரு அரைகுறை வரலாற்று ஆய்வாளர் என்பதற்குச் சான்று - ஊர் மக்கள் ஏதோ ஒரு மலபாரி மொழி பேசினர் என்று அவர் குறிப்பது; தொன்மையான தமிழ் மொழி பற்றி ஏதும் அறியாதவர் என்பது. உடனே அப்போது இருந்த அரைவேக்காட்டு மாவட்ட அதிகார வர்க்கம் ஊருக்கு 'பாளையங்கோட்டை' எனப் பெயரிட்டிருக்க வாய்ப்புள்ளது. மற்றபடி அக்கோட்டை ஒன்பதாம் நூற்றாண்டில் வீரநாராயண பராந்தக பாண்டியனால் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது கோட்டைக்கு நடுவே அம்மன்னனால் கட்டப்பட்ட கோபாலசுவாமி கோயிலில் கிடைத்த கல்வெட்டுகளின் தரவுகள் அடிப்படையில் அனுமான விதியாகக் (rule of inference) கொள்ளலாம் என்று பண்பாட்டு அறிஞர் தொ.பரமசிவன் அவர்களிடம் கேட்டிருக்கிறேன். அக்கோயிலின் பெருமாள் அம்மன்னன் பெயராலேயே 'வீரநாராயணர்' (வீரநாராயணர் அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி) என்று முதலில் அழைக்கப்பட்டு, இப்போதிருந்து சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு 'வேதநாராயணர்' (வேத நாராயணர் அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி) எனப் பெயர் மாற்றம் பெற்ற தகவல் அக்கல்வெட்டுகளில் கிடைக்கும் செய்தி. வேதாகமத்தினருக்கு 'வீரநாராயணர்' சரி வரவில்லை போலும். மேலும் வீரநாராயண பராந்தகனின் தந்தை பராந்தக நெடுஞ்சடையன் ஸ்ரீமாறன் ஸ்ரீ வல்லபன் ஆவார்; தனது தந்தையார் பெயரைக் கொண்டே அவ்வூருக்கு 'ஸ்ரீ வல்லப மங்கலம்' எனும் பெயர் சூட்டினான். பின்னர் அது 'பாளையங்கோட்டை' ஆன கதை முன்னம் நாம் பார்த்தது. மேற்கூறிய ராஜகோபாலசுவாமி கோயிலுக்குக் கிழக்கே சற்று தூரத்தில் அமைந்த சிவன் கோயில் (திரிபுராந்தீஸ்வரர் ஆலயம்) சேர மன்னன் உதயமார்த்தாண்ட வர்மன் ஆட்சிக் காலத்தில் (கிபி 16 ஆம் நூற்றாண்டில்) கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோயிலிலும் பதினொரு கல்வெட்டுகள் கிடைக்கப் பெறுகின்றன. கோட்டை மற்றும் இவ்விரண்டு கோயில்கள் பற்றி மேலும் செய்திகளைப் பெற பேரா. தொ.பரமசிவன், பேரா. ச.நவநீதகிருஷ்ணன் எழுதிய "பாளையங்கோட்டை - ஒரு மூதூரின் வரலாறு" என்னும் நூலில் காணலாம். கோட்டையின் மேற்கு வாசலுக்கு அருகில் உள்ள ராமசாமி கோயில் பற்றிய குறிப்பும் அந்நூலில் உள்ளது. இவை தவிர நாட்டார் தெய்வங்களாக சிறிய அம்மன் கோயில்கள் பல உள்ளமை கோட்டை நகரத்தின் மற்றொரு வரலாற்றுச் சிறப்பு. இந்த அம்மன்கள் போர்க்காலத்தின் தாய்த் தெய்வங்கள் ஆகும் (War Deities). கோயில்கள் தோன்றிய வரிசைப்படி இந்த அம்மன்கள் சகோதரிகளாக மக்களால் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். மூத்த அம்மனான ஆயிரத்தம்மன் ஆயிரம் படை வீரர்களைக் கொண்ட பாசறைத் தெய்வமாக இருந்திருக்க வேண்டும். பதினெட்டாம் நூற்றாண்டில் போருக்குச் செல்லுமுன் இக்கோயிலில் வீரன் ஒருவனை நரபலி கொடுக்கும் வழக்கமும், பின்னர் அது எருமைப் பலியாகி, தற்காலத்தில் போர்க்கால விழாவான தசராவில் ஆடு பலியாக உருமாறி உள்ளது என்பது மக்களிடம் உள்ள செவிவழிச் செய்தி. பொருநையாற்றின் கரையில் வண்ணார்பேட்டையில் அமைந்துள்ளது பேராற்றுச்செல்வி அம்மன் கோயில். போருக்குச் செல்லும்போது கோட்டையின் வடக்கு வாசல் வழியாகவே படை கிளம்பி செல்வது வழக்கம். எனவே அவ்வாசலருகில் அமைந்திருக்கும் அம்மனான 'வடக்கு வாசல் செல்வி' இப்போது 'வடக்குவாச் செல்வி'. இப்படியே பல. இப்போது வருடந்தோறும் பாளையில் தசரா எனக் கொண்டாடப்படும் போர்க்கால விழா சுற்று வட்டாரத்தில் மிகப் பிரபலம். சுமார் பதினைந்து அம்மன்கள் சப்பர பவானியாக வருவது மக்களுக்குக் கண்கொள்ளாக் காட்சி. பதினெட்டாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் பாளையங்கோட்டை சிறிது காலம் ஆற்காட்டு நவாபின் தளபதியாய் இருந்த யூசுப் கானின் கட்டுப்பாட்டில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அப்போது இப்பகுதியில் தோன்றிய இஸ்லாமியர்களின் சந்தனக்கூடு ஊர்வலத்திற்கு எதிர்வினையாகவே, யூசுப் கான் ஆங்கிலேயரால் கொல்லப்பட்ட பிறகு, அம்மன் கோயில்களின் சப்பர பவனியோடு தசரா விழா கொண்டாடும் வழக்கம் பாளையில் தோன்றியிருக்கலாம் என்ற தொ.ப வின் ஊகத்தைக் கேட்டிருக்கிறேன். பழைய கோட்டையில் மேலவாசலில் இருந்து வட திசையில் சென்ற மதிலை ஒட்டிய தெரு சிறிது காலம் முன்பு வரை பாடைத் தெரு என வழங்கியது. ஊரில் இறந்தோரைத் தூக்கிச் செல்லும் பாடைகள் மற்ற தெருக்களுக்கு ஊடே செல்லாமல் ஊரின் மேற்குக் கோடியில் இருந்த அத்தெருவின் வழியே சென்று தாமிரபரணியின் வெள்ளக்கோயில் பகுதியைச் சென்றடையும். எனவே அது பாடைத் தெரு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மதிற்சுவர் இடிக்கப்பட்ட பின் அங்கே ஒரு ராணுவ உணவகம் (military canteen) அமைந்திருந்தது. அது பஞ்சாபி மொழியில் 'லங்கர் கானா' என அழைக்கப்பட்டது. சீக்கிய குருத்வாராக்களில் சமையல் செய்யும் இடத்திற்குப் பெயர் லங்கர் கானா. பாடைத் தெருவில் வீடுகள் வர ஆரம்பித்த பின் தெருவின் பெயரை 'லங்கர் கானா தெரு' என மாற்றிவிட்டனர். அங்கு வாழ்ந்த மக்களுக்கு 'பாடை' ஏதோ மனதை உறுத்தியிருக்கலாம். அத்தெருவிற்குக் கிழக்கே அதற்கு இணையாகச் செல்வது பெருமாள் மேல ரத வீதியாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவில் கோட்டை ஆங்கிலக் கம்பெனிப் படை மற்றும் யூசுப் கானின் தலைமையில் ஆற்காட்டு நவாபின் படை கோட்டையைத் தாக்கிய போது இறந்த வீரர்களின் உடல்கள் விழுந்த இடத்தில் சுடலை, கருப்பசாமி முதலிய நாட்டார் தெய்வங்களைத் தோற்றுவித்தனர். மேல ரத வீதியின் மேற்குப் புறத்தில் வீடு கட்டும் போது அத்தெய்வங்களின் பூடங்களை வீடுகளின் பின்புறம் வைத்துக் கட்டினர். வருடத்தில் ஒருமுறை அத்தெய்வங்களுக்குப் படையல் வைக்கும்போது கருப்பசாமிக்கு தோசை மாவில் கருப்பட்டி கலந்து, சுட்டு கருப்பட்டி தோசை படைக்கும் வழக்கம் இருந்தது. அதன் விவரம் மூத்தோரிடம் கர்ண பரம்பரையாக வந்திருக்க வாய்ப்பு இருந்தமையாலும், நான் அந்தத் தெருக்காரன் என்பதாலும் அவ்விவரம் சேகரிக்க பேரா. தொ.ப என்னைப் பணித்தார். கருப்பசாமிக்கும் கருப்பட்டிக்கும் பொதுவில் 'கருப்பு' எனும் வேடிக்கை விளக்கம் தவிர என்னால் வேறு விவரம் சேகரிக்க இயலவில்லை (!). கோட்டையைப் பாதுகாத்த படை பெரும்பாலும் மதுரையிலிருந்து வந்திருந்ததால், இறந்த வீரன் சார்ந்த இடத்தை வைத்து அவன் கருப்பசாமி ஆகியிருப்பான் என்பதும் அவன் வாழ்ந்த இடத்தில் கருப்பசாமிக்கான படையலில் அந்த வழக்கம் இருந்திருக்கலாம் என்பதும் ஒரு ஊகம். இப்படி பல வழக்கங்களும் கதைகளும் ! கருப்பட்டி தோசை கூட பண்பாட்டு அசைவின் ஒரு குறியீடோ ! இவ்வாறு நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுக்கான சிறந்த களமாக பாளையங்கோட்டை திகழ்வதும் இவ்வூருக்கான ஒரு சிறப்பு. ஒவ்வொரு சாதி, சமய, இனக்குழுவின் பங்களிப்பும் உண்டு. உதாரணமாக, விசயநகர ஆட்சிக் காலத்திலும் பின்னர் திருமலை நாயக்கர் காலத்திலும் மதுரைக்குப் புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் பரவிய சௌராட்டிரர்களின் பங்களிப்பினைப் பாளை சிவன் கோயில் சுற்று வட்டாரத்தில் காணலாம் - நெல்லை நகரில் தற்காலத்தில் நெல்லையப்பர் கோயில் சமீபத்தில் மார்வாடி ஜைன சமூகத்தினரைப் போல. நமது பாளையங்கோட்டைச் சித்திரம் இதுகாறும் பெரும்பாலும் கோயில்களையும் சாமிகளையும் சுற்றி அமைந்தது இயல்பான ஒன்றே ! நாத்திகராயிருப்பினும் பேரா. தொ.பரமசிவன் மக்களை வாசிக்க அவர்களின் கோயில்களையும் சமய நம்பிக்கைகளையும் அவை சார்ந்த பழக்க வழக்கங்களையும் வாசிக்க வேண்டுமென்பார். அவரிடம் பாடம் படித்த மாணவன் வேறு எப்படி எழுத முடியும் ? சரி, கோவில்கள், கோட்டை கொத்தளங்கள் மட்டும் இன்றைய பாளையங்கோட்டை ஆகுமா ? கோட்டை இடிந்து போயிற்றே ! அதன் எச்சங்களான மேல, கீழக்கோட்டை வாசல்கள் வரலாற்றுச் சின்னங்கள் ஆகிவிட்டனவே ! பாளையங்கோட்டைக்காரனாகிய நான் 'நான்' ஆக ஆனது 'தென்னகத்து ஆக்ஸ்போர்டு' என்று பெருமையுடன் நிற்கும் பாளையங்கோட்டையில் ஆயிற்றே ! அந்த முகத்தை இவ்வூருக்குத் தந்த கிறித்தவ மிஷனரிகளின் வரலாற்றைக் கூறினால்தானே இவ்வூரின் வரலாறு ஓரளவு முழுமை பெறும் ? பொருநைக்கு அக்கரையில் அமைந்த நெல்லை நகரத்தையும் சிறிதளவு தொட்டுக் காட்டினால்தானே கட்டுரைத் தலைப்பிற்கும், நான் அநேகமாகத் தினந்தோறும் அந்நகரைக் கடந்து சென்றதற்கும் நியாயம் கற்பிப்பதாகும் ? இவற்றை அடுத்த தொடராகப் பார்ப்போமா ?
  10. ஒவ்வொரு முறையும் புது புது அவதாரில் வந்து கரித்து கொட்டுவதுதான் முழு நேர வேலையாக்கும் சாந்தன் 3௦ வருட போராட்டத்தின் கடைசி வித்துக்கள் இனி ஒரு ஆயுத போராட்டம் என்பது கிடையாது ஈழத்தில் இருக்கும் சின்ன குழந்தைக்கும் தெரியும் அந்த விடயம் .ஆனால் உணர்வுகள் செத்து விடவில்லை இதை அறிய இந்திய புலனாய் கூட்டம் வேணுமென்றே சாந்தனை கொலை செய்து அவரின் இறுதி ஊர்வலத்தை பார்த்து உறுதி செய்து கொண்டுள்ளது அவர்களின் கட்டளைக்கு பந்தம் பிடிப்பவர்களுக்கு இந்த செய்தி பிடிக்காது என்பது எங்களுக்கு தெரியும்தானே ?😁 வணக்கம் கந்தப்பு 2022 ஒக்டோpar மாதம் காணாமல் போய் இன்றுதான் காண்கிறேன் மிக்க மகிழ்ச்சி திரும்பி வந்ததில் சுகமாய் இருகிறீர்களா? முகமூடியில் நின்று வகுப்பு எடுப்பது எல்லோருக்கும் ஈசியானது .
  11. அடடே நாம ஏதோ துப்பறியும் கணக்கில் எழுதுகிறீர்கள் என எண்ணிவிட்டேன். நன்றி.
  12. எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகவும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட எம் மண்ணை காக்கவுமே நாங்கள் போராடுகிறோம். இதில் உலக அங்கீகாரம் என்பது அடுத்த கட்டம் மட்டுமே. அது சுயநலத்தால் அல்லது அடிபணிதலால் தான் கிடைக்கும் என்றால் நாம் போராட்டப் புறப்பட்ட நோக்கமே இல்லாமல் போய்விடும்.
  13. ஓரளவு தெரிந்த இடத்துக்கு செல்லம் போது கூகிள் வரைபடத்தை சரிபார்க்காமல் போவதில் அவ்வளவு பிழை நடக்காது. அனால், முற்றாக புதிதான இடத்துக்கு செல்வாதத்திற்கு முதல் சரி பார்க்க வேண்டும். செல்லும் தெருக்கள், ஆங்கங்கே இருக்கும் முக்கிய கட்டிடங்கள், பொது இடங்கள் / புள்ளிகள் , போன்றவற்றை. மற்றது, பொது அறிவான நேரம், காலம், இடம், தூரம், திசை போன்றவற்றை மதிப்பீடு செய்யக்கூடிய தன்மையை அறிய / வளர்க்க வேண்டும். (உண்மையில் இது குறைந்து கொண்டு வருகிறது இளம் சமூகத்தில்).
  14. உஷ் உஷ்..... எனக்கு என்னவோ ஒர் சந்தேகம் நீண்ட நாட்களாக இருக்கு ....தமிழ் சினிமாவில் பெண்கள் ,ஆண்கள் போதைப்பொருள்,சிகர‌ட் மதுபாணம் போன்றவற்றை பாவிக்கும் காட்சிகள் சர்வசாதார‌ணமாக காட்டுகின்றனர்...இது கடந்த சில வருடங்களாக அதிகமாகவே காட்சிப்படுத்தப்படுகிறது ..... தமிழ் நாட்டில் போதைப்பொருள் கலாச்சாரம் குக்கிராமங்களிலும் சர்வசாதாரணமாக நிகழ்கின்றது என ஊடகங்கள் கூறுகின்றன.... பஞ்சாப் மாநிலமும் போதை பொருள் அதிகமாக பாவனையுள்ள மாநிலம் என செய்திகள் கூறுகின்றன.. தனி நபர்கள் தங்கள் வருமானத்தை பெருக்கி கொள்ள செய்கின்றனரா அல்லது சில இனங்களை,சமுகங்களை திட்டமிட்டு அழிக்க செய்யப்படுகின்றதா ?
  15. மயிலிறகு......... 04. அப்போது கனகம் என்ன மயூரி பூவனத்தின் கல்யாண விடயங்கள் எப்படிப் போகுது என்று கேட்கிறாள். அதுதான் கனகம் நானும் யோசிக்கிறன். ஒரு வழியும் காணேல்ல. மாப்பிள்ளை பொடியன் நல்ல பிள்ளை. அவை சீர்செனத்தி என்று எதுவும் கேட்கேல்ல, அதுக்காக நாங்கள் பிள்ளையை வெறுங்கழுத்தோட அனுப்ப ஏலுமே. ஏதோ அவளுக்கு செய்யவேண்டியதை செய்துதானே அனுப்பவேணும். ஓம் அதுவும் சரிதான் மயூரி, நீ தினமும் கும்பிடுகிற அம்பாள்தான் உனக்கு ஒரு வழி காட்டுவாள். கனக்க யோசிக்காத என்று சொல்கிறாள். பின் இருவரும் நீராடி ஈரஉடுப்புகளையும் எடுத்துக் கொண்டு வருகிறார்கள். அப்ப நான் போட்டு பிறகு வாறன் மயூரி என்று சொல்லி கனகம் செல்ல அவள் பின்னால் கோமளமும் தாயுடன் போகிறாள். மயிலம்மாவும் ஒயிலாக நடந்து படியேறி வீட்டுக்குள் வர முன் அறையில் இருந்து வாமனும் சுந்துவும் போனமாதம் நடந்த ஒரு சம்பவம் பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். சுந்து வாமனிடம், எட வாமு, நாங்கள் அந்த மதகில் இருந்து கதைத்துக் கொண்டிருந்தால் அவருக்கென்ன வந்தது அவற்ர வீட்டுக்குள்ளேயே போனனாங்கள். அது இல்லடா சுந்து நாங்கள் அந்த மாங்காய்க்கு கல் எறிந்ததுதான் பிரச்சினை. திண்ணையில் ஆச்சி இருக்கிறா, இங்கால அவற்ர வைப்பு நிக்குது அதுதான். ஓ....அப்ப அவற்ர வைப்பாட்டிக்கு கெத்து காட்ட எங்களை பேசிபோட்டுப் போறார் என்கிறாய். ஓமடா .....எண்டாலும் நீ ஒண்டைக் கவனிச்சனியே அந்தப் பெண் இஞ்சாலுப் பக்கமாய் வந்து ரெண்டு மாங்காயை மதிலுக்கு மேலால் போட்டுட்டு மற்றதுகளைப் பொறுக்கிக் கொண்டு போனதை. ஓமடா....நானும் பார்த்தனான்.....எண்டாலும் நீ தடுத்திருக்கா விட்டால் அடுத்த கல்லால அவற்ர மண்டையை உடைத்திருப்பன். போடா ....உனக்கு விஷயம் தெரியாது சுந்து....நான் பகுதி நேரமாய் வேலை செய்கிற அரசு விதானையார் இருக்கிறார் எல்லோ அவரிட்ட இவர் ஒருநாள் ஒரு ஆலோசனை கேட்க வந்தவர்.அவரும் இவரோட கதைத்து அனுப்பினாப்பிறகு என்னிடம் சொன்னவர், இப்ப வந்தவர் யார் தெரியுமோ, இவர்தான் வைத்திலிங்கம். ஆனால் எல்லோருக்கும் காசை வட்டிக்கு விட்டு தொழில் செய்கிறவர்.அதால இவருக்கு "வட்டி வைத்தி"என்றுதான் சொல்லுறவை.உவங்களோட வலு கவனமாய் புழங்க வேண்டும்.கொழுவுபட்டால் "பிலாக்காய் பிசின்மாதிரி" லேசில பிரச்சினை தீராது.உவர் கொஞ்ச காலத்துக்கு முந்தித்தான் ஒரு பிள்ளையை அவளின் பெற்றோரிடம் இருந்து உங்கட வட்டிக்கும் முதலுக்குமாய் இவள் என்னோட இருக்கட்டும் என்று சொல்லி கொண்டு வந்திட்டார். அதால அவற்ர மூத்த சம்சாரமும் பிள்ளைகளும் பேச்சுப்பட்டு அடிபாடுகளுடன் இருக்க நான் போய்த்தான் அவர்களின் பிரச்சினையை தீர்த்து வைத்தனான். பிறகு அவளுக்கு தனியாக வீடு வளவும் குடுத்து வைத்திருக்கிறார். அது இதுவாகத்தான் இருக்கும். அவையளுக்கும் நிறைய சொத்து பத்தெல்லாம் இருந்தது எல்லாம் இவரிடம் வட்டிக்கு பணம் வாங்கி வட்டி குடுத்து எல்லாம் பறிபோட்டுது.பத்தாதற்கு பெட்டையையும் கூட்டிக்கொண்டு வந்து வைத்திருக்கிறார் என்று சுந்துவுக்கு வாமு சொல்கிறான். இவர்கள் கதைப்பது தன்பாட்டுக்கு காதில் விழ பக்கத்து அறையில் மயிலம்மா ஈரப்பாவாடையை கால்வழியே கழட்டி விட்டுட்டு வேறு ஆடைகளை எடுத்து அணிந்து கொள்கிறாள்.ஒரு கனம் அங்கிருந்த நிலைக்கண்ணாடியில் தன் பிம்பம் தெரிய தன்னை மறந்து ரசித்தவள்..... ம்.....என்று ஒரு பெருமூச்சு அவளிடம் இருந்து வெளிப்படுகிறது. பொடியங்கள் கதைக்கும் "வட்டி வைத்தி" பற்றி அவளுக்கும் தெரியும்.அவரின் மனைவியுடன் மயிலம்மா நல்ல பழக்கம். அவர்களின் வயல் அறுவடைக்காலங்களில் மயிலம்மாவும் கனகமும் அங்கு சென்று வேலை செய்துவிட்டு கூலி வாங்கிக் கொண்டு வருவது வழக்கம். அவர் வைத்திருக்கும் பொடிச்சியைப் பற்றியும் அவர் மனைவி மயிலம்மாவிடம் மனம்விட்டு கதைக்கும் நேரங்களில் சொல்லி இருக்கிறா. அதுவும் வைத்தி வயல் பக்கம் வந்துட்டு விசுக்கென்று மோட்டார் சைக்கிளை திருப்பி சீறிக்கொண்டு போகும்போது ....ம் ...."சொந்தக் காணிக்குள் உழமுடியாத மாடு வெளியூருக்கு போச்சுதாம் பவிசு காட்ட " என்று ரெண்டு கையையும் விரிச்சு நெளிச்சுக் காட்டுவாள்..... என்னக்கா இப்படிச் சொல்லுறியள் என்று கேட்டால் பின்ன என்னடி, அந்தப் பொடிச்சிதான் பாவம். இது அங்க போய் மூக்கு முட்ட குடிச்சுட்டு சோத்தையும் விரலால அலைஞ்சு போட்டு அப்படியே வேட்டி போனஇடம் தெரியாமல் குப்புறப் படுத்திட்டு சாமத்தில எழும்பி வரும். இதெல்லாம் சும்மா ஊருக்கு பவிசு காட்ட வேறு ஒன்றுமில்லை என்று சொல்லுவாள். அங்கால பூவனம் இருவருக்கும் தேநீர் கொண்டுவந்து தருகிறாள். சுந்து அவளிடம் இப்ப எங்களுக்கு வேண்டாம் எடுத்துக்கொண்டு போ என்று சொல்ல அவளும் எனக்குத் தெரியும் நீங்கள் என்ன குடிக்கிறீங்கள் என்று சொல்லி நெளித்துக் கொண்டு போகிறாள். அப்போது வாமு சுந்துவிடம் டேய் , உன்ர தங்கச்சி பூவனத்தின்ர சம்பந்தம் எந்தளவில இருக்குது என்று கேட்கிறான்.... அதெடா நல்ல சம்பந்தம்தான் ஆனால் நடக்கிறது சந்தேகமாய்தான் இருக்கு......ஏனடா ......வேறை என்ன பணம்தான் பிரச்சினை. உனக்குத்தான் தெரியுமே அப்பா நல்லா சம்பாதித்தவர்தான், அம்மாவையும் வேலை செய்ய விட்டதில்லை.எங்களையும் நல்லா பார்த்துக் கொண்டவர். ஆனால் சொத்தென்று பெரிதாய் எதுவும் சேர்த்து வைக்க வில்லை.அவர் எதிர்பாராமல் இறந்து போனபடியால் எங்களிடம் மிஞ்சியது இந்த வீடும் வளவும் பின்னால் இருக்கும் வயலும்தான். இந்த நிலைமையில் அம்மா எங்களை ஆளாக்கி படிப்பிக்கிறதே பெரிய காரியம். நானும் இனி பல்கலைக்கழகத்துக்கு போகவேணும். அந்தக் கடிதத்தைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறன். அது வந்தாலும் அங்கே போறதுக்கு கூட என்ன வழியென்று தெரியவில்லை. அப்படி கடிதம் வந்தாலும் நீ யோசிக்காத சுந்து. நான் மோட்டார் சைக்கிள் வாங்கவென்று சேர்த்து வைத்திருக்கிற காசை உனக்குத் தருவன். அதுக்கில்லையடா வாமு, சிலரிடம் பணம் தானாய்ப் போய்க் குவியுது, நாங்கள் முயற்சி இருந்தும் கால்காசுக்கு கல்லில நார் உரிக்க வேண்டிக் கிடக்கு. வாழ்க்கை என்றால் அப்படித்தான் சுந்து. நாளைக்கு நீயும் பெரிய ஆளாய் வருவாய்.வறுமையும் இப்படியே நீடிக்காது.........! மயில் ஆடும்.........! 🦚
  16. உச்ச அளவாம் வெப்ப உயர்வு.. 1.5 பாகை செல்சியஸ் தொட்டாச்சு 2040 இல் வர வேண்டியது 2023 இல் வந்தாச்சு.. பூமித் தாய்க்கும் அடிக்குது குலப்பன்.. யாருக்கென்ன கவலை..!! விண்ணில கொஞ்சம் வி(வீ)ணாகுது நிலவில கொஞ்சம் குப்பையாகுது உக்ரைனில் கொஞ்சம் உருகிப் போகுது காசாவில் கொஞ்சம் கரி(ரு)கிப் போகுது இப்படி யாகுது டொலர் கணக்கு யாருக்கென்ன கவலை..!! கார் ஓட்டமும் குறையல்ல காற்றில கலந்த அந்த சுவட்டுக் காபனும் குறையல்ல.. கக்கும் புகைக்கு வரிதான் வருகுது கரியமிலையின் அளவுக்கோ வீழ்ச்சியில்லை யாருக்கென்ன கவலை...!! மின்சாரத்தில் இயக்கினால் வரி விலக்கு என்டாங்கள் மின்சாரத்தை பெற இப்ப பாட்டரி கெமிக்கலுக்கு பற்றாக்குறையாம்... புதுக்கதையாய் கிண்டக் கிண்ட பாட்டரி கெமிக்கலால் பாழாகுதாம் பூமி யாருக்கென்ன கவலை..!! எங்கும் ஒரு கூட்டம் எதிலும் வியாபாரம் தனக்கு மட்டும் வேண்டும் இலாபம் இதையே சிந்தனையாக்கி இருப்பதால் பூமி தாய்க்கும் அடிக்குது குலப்பன் யாருக்கென்ன கவலை..!! எதிர்கால சந்ததியோ தொடுதிரையில் மயங்கிக் கிடக்குது 'ரீல்' விட்டே பழகிப் போனதால்.. தொடும் தூர ஆபத்துப் புரியவில்லை.. யாருக்கென்ன கவலை..!! இப்படியே போனால்.. பூமிக்கு அடிக்கும் அனல் குலப்பனில் அழியப் போவது மொத்த உயிர்களொடு தாமும் தான் மனிதப் பதர்களுக்கு புரியும் வேளை ஆபத்து வெள்ளம் அணை தாண்டி ஓடி இருக்கும்..! -------------------------------------- நெடுக்ஸ் (யாழுக்காக.. பூமி தாய் சார்ப்பாக) மாசி/2024.
  17. அண்மையில் எனது நெருங்கிய நண்பரும் அயலவரும் அவர்களது மைத்துனனின் இறுதிச் சடங்குக்காக சுவிஸ் போனார்கள். அங்கு இறுதிச் சடங்கை நடாத்த ஜேர்மனியில் இருந்து ஒரு இந்தியன் ஐயரும் அவருடன் உதவிக்கு ஒரு பாகிஸ்தானியரும் வந்து கிரியைகளை நடாத்தி முடித்ததாக கூறினார். சோடி அளவாக இருந்தால் கொண்டுபோக வேண்டியது தானே.
  18. இப்ப எந்தச் சோடி எந்தச் சோடியுடன் போய்கொண்டு இருக்குதோ யாரறிவார்......! 😂
  19. அடுத்த தடவை நீங்கள் இந்தப் பக்கம் வரும் போது, நானும் நீங்களும் அந்தப் புகையிரத நிலையத்திற்கு போகிறோம், ஜேக்கப்பை தேடிப் பிடிக்கிறோம், மிகுதிக் கதையைக் கேட்கிறோம்.......😀😀 ஜேக்கப்பும் அந்தப் பெண்ணும் வீதிகளில் வாழ்பவர்கள் (போன்று தெரிந்தார்கள்). ஹோம்லெஸ் ஆக, துணைகளுடன் வாழ்பவர்களிற்கிடையேயும் சண்டை சச்சரவுகள் மிகச் சாதாரணமாகவே அடிக்கடி வரும். பல தடவைகள் தெருவில் பார்த்திருக்கின்றேன். இவர்களுக்கிடையேயும் அன்று ஏதோ ஒரு பிணக்கு ஆகியிருக்கவேண்டும். இவை எல்லாமே ஒரு அனுமானம் தான். ஜேக்கப் எங்கேயும் போயிருக்கமாட்டார். அன்றே பிந்திய இரவிலோஅல்லது அடுத்த நாளோ அந்தப் பெண்ணைத் தேடிப் போயிருப்பார். வாழ்க்கை சொல்லிக் கொடுத்த பாடம் இது....🤣🤣
  20. இந்த குட்டி மாலைதீவு ஈழத்தமிழர்களுக்கு நல்ல பாடம். ஒரே ஹிந்திய விசுவாசத்தில் ஊறிக் கிடந்ததன் பயன் தொடர் முதுகு குத்தல்கள். மாலைதீவு சரியாக கையாள்கிறது.. பூகோள ராஜதந்திரத்தை. ஹிந்தியா என்ற பூதத்திற்கு எதிராக சீன ரகனை இழுத்துக் கொண்டு வந்து விட்டிருக்குது. தனது நலனை அதன் மூலம் பகுதியாக வேணும் சாதிக்கும். சீனாவுக்கும் வலுவான நட்பு சக்திகளை ஹிந்திய பூதத்தை சுற்றி வளைக்க அவசியம். ஆனால் எங்கடையள்...எல்லாம் பாரத் ஜே கூட்டமாவே சாகுவரை ஒரு சதத்திற்கும் உதவாத ஹிந்திய விசுவாச பிடிவாதத்தில் கிடந்து சொந்த மக்களை முழு அடிமையாக்கி சாகுங்கள். நமக்கு சீனா.. ரஷ்சியா.. மேற்கு... லத்தீன்.. மத்திய கிழக்கு.. அவுஸி.. தெற்காசியா.. ஆபிரிக்கா.. கரிபியன்.. யாருமே எதிரியில்லை. ஆனால்.. நாமாக விலக்கி வைச்சிருக்கிறம். ஏனோ புரியவில்லை. எம்மால் மிக நுட்பமான சர்வதேச ராஜதந்திரங்களை வகுக்க வாய்ப்பிருந்தும்.. கன்னை பிரிப்பதிலும் கட்சி அமைப்பதிலும் பிசி...??! எல்லாம் ஈழத்தமிழனின் தலைக்கேறிய அதிபுத்திசாலித்தனம் என்ற போலி வேடத்தின் பிரதிபலிப்பே அன்றி வேறல்ல. முழுமட்டாள் தனம்.
  21. கட்டுரை ஆசிரியரின் வழக்கமான (அன்னாரது பட்டறிவின் அடிப்படையில் எழுதும்) நடையிலிருந்து வேறுபட்டு, கற்றதும், கேட்டதும், உற்றதும், உயிர்த்ததும் கொண்ட பொருண்மையால்,, சற்றே வேகம் குறைந்துள்ள எழுத்துநடை என்னை வியக்க வைத்தது. சுலோச்சனா முதலியார் பாலத்தின் வரலாறு தொட்டு, பாளையம்கோட்டையின் வரலாற்றுச் சுவடுகள் பலவும் ஆசான் தொப-வின் நினைவுகளோடு இழையாடிச் சென்றது மனதுக்கு இன்னும் அணுக்கமாக இருந்தது. மேடைப் போலீஸ் ஸ்டேஷன் என்ற அளவில் பாளையம்கோட்டையை அறிந்த என போன்றோருக்கு பேராசிரியர் சோமசுந்தரம் அவர்களின் இத்தொடர் ஓர் சிறந்த பெட்டகம். இடைவெளி எடுத்துப் படித்தாலும், மீள்வாசிப்புக்குத் தகுதியான சிறந்த படைப்பு என்பதில் ஐயமில்லை. இப்போதே இருமுறை மீள்வாசிப்பு செய்ய வைத்த காந்த சக்தி, இக்கட்டுரையின் வரலாறு சொல்லும் மொழி நடையே. அடுத்த பதிவுக்காகக் காத்திருக்கிறோம்.
  22. இருக்கிற சனத்துக்கு சாப்பாடு போடவே வெளிநாடுகளிடம் இருந்து பிச்சை எடுக்க வேண்டிய நிலைமை... இதற்குள் சனத்தொகை குறைக்கின்றது என கவலைப்படுகினம்.
  23. இங்கு வீட்டை விட்டு வீதிகளில் வாழ்வோரின் எண்ணிக்கை கோவிட் தொற்றுக் காலத்தின் பின் பல மடங்காகிவிட்டது. நீங்களும் இதைப் பார்த்திருப்பீர்கள். தினமும் அவர்களைக் கடந்து போய்க் கொண்டிருக்கின்றோம். 'ஆதி அறிவு' தொடராது.......😀 நாங்கள் என்ன செய்தாலும், எங்கே செய்தாலும், வீட்டிற்கு அது எப்படியோ தெரிந்து விடுகின்றது. இந்த அறிவு/திறமை பெண்களுக்கு மனிதன் தோன்றிய ஆதி நாட்களில் இருந்தே இருக்கின்றது போல..... 😀
  24. சாந்தனைத்தான் இழந்துவிட்டோம்; எஞ்சியோரையாவது காப்பாற்றுங்கள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சட்டத்தரணி புகழேந்தி மன்றாட்டம்.... உயிரோடு தாயிடம் அனுப்பிவைப்போம் என்ற நம்பிக்கையுடன் இருந்த நிலையில் இன்று சாந்தனை நாம் இழந்துவிட்டோம். எஞ்சிய மூவரையாவது காப்பாற்றுவதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் வரவேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த சட்டத்தரணி புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார். உடுப்பிட்டி கற்பகப் பிள்ளையார் ஆலய முன்றிலில் அவ்வூர் பொதுமக்களால் நேற்று நண்பகல் முன் னெடுக்கப்பட்டிருந்த சாந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் தமிழ்நாட்டில் இருந்து வருகைதந்த சட்டத்தரணி புகழேந்தி ஆற்றிய அஞ்சலி உரையின் போது இந்தக்கோரிக்கையை முன்வைத்திருந்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- சாந்தனை எப்படியாவது காப்பாற்றித் தாயிடம் அனுப்பி வைப்போம் என்றே நம்பியிருந்தோம். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்த சாந்தனின் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு நினைவிழந்த நிலைக்குச் சென்றார். அந்த நிலையில் கூட எயார் அம்புலன்ஸ் மூலமாக கட்டுநாயக்கா ஊடாக அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தோம். இருந்தும் அனைத்துப் போராட்டங்களும் பயனற்றுப்போகும் வகையில் அவர் உயிரிழந்தார். ஈழத்தில் இருக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன். நீங்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்கு உடனடியாக வர வேண்டும். திருச்சி சிறப்பு முகாமில் உள்ள எஞ்சிய மூவரும் எவ்வாறான கொடும் சிறையில் இருக்கின்றார்கள் என்பதை நேரடியாகப் பாருங்கள். தமிழ் நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து, எஞ்சிய மூவரும் விரும்பிய இடங்களுக்குச் செல்வதற்கு உரிய அனுமதி கிடைக்கும் வரை அவர்களை தமிழ்நாட் டில் உள்ள உறவுகளிடம் கையளிக்குமாறு கோரிக்கை வையுங்கள். அது நடைபெற்றால் மட்டுமே அவர்களையாவது நாம் காப்பாற்ற முடியும். திருச்சி சிறப்பு முகாமில் உள்ள எஞ்சிய மூவரையும் காப்பாற்றி அவர்கள் விரும்பும் நாட்டுக்குச் சென்று அவர்களுடைய குடும்பத்துடன் நிம்மதியாக வாழவைப்பதற்கான சட்டப்போரட்டத்தை தமிழ்நாடு திரும்பிய கையோடு முழுவீச்சோடு முன்னெடுக்க உள்ளேன் - என்றார். சட்டத்தரணி புகழேந்தி, ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட சாந்தன், முருகன் உள்ளிட்டோரின் வழக்கு விடயங்களை 2005 ஆம் ஆண்டு முதல் எவ் விதக் கட்டணங்களும் வாங்காது இலவசமாக முன்னெடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/சாந்தனைத்தான்_இழந்துவிட்டோம்;_எஞ்சியோரையாவது_காப்பாற்றுங்கள்;
  25. Published By: VISHNU 04 MAR, 2024 | 01:25 AM வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே ஞாயிற்றுக்கிழமை (02) முறுகல் நிலை ஏற்பட்டது. வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்திற்குட்பட்ட கடல் பகுதியில் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு குறித்த சங்கத்தால் தடை விதிக்கப்பட்டது. உடனடியாக உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதை நிறுத்துமாறு வெற்றிலைக்கேணி மீனவர்களின் கையொப்பத்துடன் வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்தினரால் கரைவலை தொழில் சம்மாட்டியிடம் கடிதம் கையளிக்கப்பட்டது. எனினும் தமது அறிவுறுத்தலைப் பொருட்படுத்தாது தொடர்ச்சியாக உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்துவருவதால் நேற்று காலை குறித்த கரைவலை வாடி மீனவர்களால் முற்றுகையிடப்பட்டு உழவு இயந்திரம் மூலம் கரைவலை இழுப்பது நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்தில் அதிகளவான மீனவர்கள் ஒன்று கூடியதால் சிறிது நேரம் பதட்டம் நிலவியதுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி பொலிசாருடனும் மீனவர்கள் முறுகலில் ஈடுபட்டனர். உடனடியாக உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதை நிறுத்தாவிடில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடப்போவதாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/177833
  26. சிலர் சேர்ந்து பலராகி இப்ப ஒரு தெளிவான பல்கோண நெட்வேர்கையே கட்டமைச்சிருக்கிறாங்கள். அதன் வருமானம்.. அமெரிக்கப் பொருளாதாரத்தையும் எகிறுது. நீங்கள் இன்னும்.. கண்ணை மூடிக்கொண்டு பால் குடியுங்க. அது தான் விதிப்பு. அவங்களுக்கு வசதி. அவங்க டேட்டி மனியை எப்படி சினிமா மூலம்.. வைட் பண்ணுறாங்க (இப்படி பல மார்க்கங்கள் உண்டு) என்பது கூட விளங்கல்லையன்னா.. நீங்க இன்னும் அந்த குறுகிய சிலருக்குள்ளே சிந்தித்துக் கொண்டிருப்பது வியப்பல்ல.
  27. 😀... அதில் வந்து இறங்கிய இருவரை ஏற்றிக் கொண்டு நான் வீடு வந்து விட்டேன். ஆனால், கண்டிப்பாக, ஜேக்கப் அதில் ஏறியிருக்கமாட்டார். அப்படியெல்லாம் விட்டிட்டு ஓடிப் போகும் துணிவு ஜேக்கப்புகளுக்கும், எங்களுக்கும் கிடையாது........... 🤣
  28. //அரசியலில் துணிந்து புகுந்து விளையாடும் தரப்புகள்தான் ரிஸ்க் எடுக்கும். ரிஸ்க் எடுக்கும் தரப்புகள்தான் கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைக்கும். தலைமை தாங்கும். துணிந்து புகுந்து விளையாடும் தரப்புகள்தான் வரலாற்றை உருவாக்குகின்றன. உட்கட்சிச் சண்டையை நீதிமன்றத்துக்கு கொண்டு போகும் கட்சிகள் வரலாற்றை உருவாக்குவதில்லை. அதுமட்டுமல்ல தேர்தல் வரும்பொழுது தமிழ்த் திரைப்படங்களில் கடைசி நேரத்தில் விசிலடித்துக் கொண்டு வரும் போலீஸ்போல அறிக்கை விடும் சிவில் சமூகங்களும் வரலாற்றைத் தீர்மானிப்பதில்லை.// இந்தப் பகுதியை வாசிக்கையில் எனக்கு 2009 வரை ரிஸ்க் எடுத்து வரலாறு படைத்த சமூகமாகவும் அதற்குப் பின் பிழை பிடிப்பதைத் தவிர வேறு ஒன்றையும் ஒழுங்காக செய்யாத, சுயநலமான ஒற்றுமையில்லாத ஒரு சமூகமாகவும் யாருக்கு என்ன நடந்தா என்ன இந்தியா என்ன செய்தால் என்ன ஆனால் நாங்கள் இந்திய சினிமாவை/ நட்சத்திரங்களை வளர்த்துவிடுவதை மட்டும் மாற்றமாட்டோம் எனக் கூறும் சமூகமாக மாறிவருகிறோமோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
  29. நாங்களும் நிறைய சந்தர்ப்பங்களில் சரிட்டி நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறோம். வழமையா நிகழ்வின் முடிவில் அன்பளிப்புத் தொகை.. இவ்வளவு இன்ன வைத்தியசாலைக்கு.. இன்ன பகுதிக்கு வழங்குறம் என்று ஒரு அன்பளிப்பு செக் வடிவில்.. காண்பித்து.. பொதுவெளிக்கும் அறிவிக்க செய்து தான் கொடுப்பது. ஏனெனில்.. ஆன்லைனில் காசு கொடுத்தது.. பப்ளிக். அவனுக்கு/அவளுக்கு தெரியனும்.. தனது பங்களிப்பு சரியாத் தான் போய் சேர்ந்திருக்கான்னு. அதை தெரிந்து கொள்வது அவர்களின் உரிமை. வெள்ளைகளும் அப்படித்தான் பெரும்பாலும் செய்யினம். இங்க சைக்கிள் ஓடினவைக்கு ஏதோ ரேஸ் ஓடின கணக்கா பதக்கம்.. மண்ணாங்கட்டி.. உந்த அநாவசிய செலவுகளை குறைச்சு அதனையும் சேர்த்து வைத்தியசாலையை தரமுயற்த்த வழங்கலாம் தானே.
  30. சேர்த்தார்கள் சரி. எவ்வளவு சேர்த்தார்கள். எவ்வளவை கையளித்தார்கள்.. என்ன வேலைத்திட்டம். இதே தனியார் வைத்தியசாலைக்குத் தானோ?. ஆனால் சமூகம் ஏதோ மானிப்பாய் அரசினர் வைத்தியசாலைக்கு செய்வது போன்ற சாயலில்.. நூல் விட்டிருந்தது அதுதான். ஏதோ நன்மைக்கு நடந்தால் சரி. ஆனால்.. மக்களிடம் மருத்துவச் செலவுக்கு என்று தனியார் மருத்துவமனைகளும் அங்கு விசிட் அடிக்கும் வைத்தியர்களும் அடிக்கும் கொள்ளைக்கு யார் தான் முடிவெழுதுவதோ..??! ஒரு வைத்தியரை காண...5000 என்றால்.. அவர் சொல்லுற சோதனைகளை உடன செய்து முடிக்க ஒரு 20,000 பின் மீண்டும் அந்த றிப்போட்டோடு வைத்தியரை காண.. மீள ஒரு 5000 அதன் பின் அவர் எழுதும் மருந்துகள்.. இஸ்தியாதிகள்.. அதுவும் அங்க அந்த மருத்துவனை மருந்தகத்தில் தான் வாங்கனும்.. அதுக்கு தனிய ஒரு 20,000 அதில வைத்திசாலை அன்ட்மின் காசு வேற.. 5000 ஆக.. சிங்கிள் விசிட்டில.. 55,000 காலி . இது பருமட்டானது. இதில ஸ்பெசலிஸ்டு.. கென்சல்ட்டனு.. இன்னும்.. பிசி டாக்டரு.. இவைக்கு விலை தலைக்கு மேல.. விலை வைச்சுத்தான் அழைக்கனும். இவ்வளவு செலவு செய்து.. உள்ளூர் மக்கள் எப்படி நோயை குணமாக்க நினைப்பாங்க. நோயை புறக்கணிச்சு வாழ நினைப்பாங்களா.. இல்லை.. கடன உடன வாங்கி.. காசைக் கொட்டிட்டு.. பின் உடல் நோயோடு மன அழுத்தத்தையும் வாங்கிக்குவாங்களா..??! வெளிநாட்டில் இருந்து விட்டு... போற கொலிடேயோட... சைக்கிள் ஓடி பணம் சேர்த்து ஒரு வைத்தியசாலையை தரமுயற்திறது நல்ல விசயம் தான். ஆனால்.. அதனை நாம் சரியான மக்களுக்கு பயன்படுத்தக் கூடிய வகைக்கு செய்யுறமா என்று சிந்திக்க மாட்டினமோ இவை..?! அந்தளவுக்கு மூளை இல்லை. வெளிநாட்டில.. ஒரு பவுன் முதலீடு என்றாலும் ஆயிரம் யோசிக்கிற வெள்ளை உதெல்லாம் உவைக்கு கற்றுக் கொடுக்காமலா விட்டான்..??! குறைந்தது... வருமானம் குறைந்த மக்களுக்காவது இலவச மருத்துவ சிகிச்சை.. ஆலோசனை.. வழங்குவினமா..???! மானிப்பாய் ஒன்றும் சிட்னி.. ரொரான்டொ.. லண்டன்.. நியோர்க்கில் இல்லை தானே.. என்று நம்புறம்.
  31. மயில் என்றால் ஒயிலாகத்தான் நடக்கும் மேல் வழியாக கழட்டி இருக்களாம் ஆசிரியர் கொஞ்சம் குசும்பு பிடித்தவர் போலே
  32. நம்ம நண்பர்கள் (அவுஸ், கனடா, இங்கிலாந்து) ஓரிரு வருடங்களுக்கு முன்னர் சைக்கிள் ஓடினார்கள். Online மூலமாக பணம் சேர்த்தார்கள். http://www.ride4ceylon.com இந்தமுறை கண்டியில் இருந்து மானிப்பாய் வந்திருக்கின்றனர்.
  33. உண்மையில் சமயபாடத்தை 9 வகுப்போடு நிறுத்தலாம். அதை ஓ எல் வரைக்கும் இழுப்பதில் ஒரு பிரயோசனமும் இல்லை. மொழி கணிதம் விஞ்ஞானம் சமூகக் கல்வி வர்த்தகமும் கணக்கியலும். ஆங்கிலம். இந்த 6ம் போதும்.. பரீட்சைக்கும். நீண்ட மதிப்பீட்டுக்கு 2 போதும். 1. அழகியல் (சித்திரம்.. சங்கீதம்.. பரதநாட்டியம்.. கண்டிய நடனம்.. இஸ்லாமிய நடனம்.. மீண்டும் தெரிவை மாணவர் கையில் விடுங்கள்) 2. தொழில்கல்வி (விவசாயம்/கைத்தொழில்/மின்சாரவியல்/கணனிப்பொறியில்/மின்னணுவியல். (தெரிவை மாணவர் கையில் விடுங்கள்.) மொத்தம் 8 க்குள் தேவையானது எல்லாத்தையும் அடக்கலாம். அதிலும் கடைசி 2 பாடங்களிலும் சித்தி போதும்.. ஏ எல் போக என்றாகனும். குறிப்பாக மதிப்பீட்டு பரீட்சையில்.. பாஸ் அல்லது பெயில் மட்டும் தான் அன்றாகனும்.ஏ பி சி எஸ் வழங்கப்படக் கூடாது. அப்படி வழங்குவது.. ஆசிரியர்களின் பாகுபாட்டுச் செயற்பாட்டை அதிகரிக்கச் செய்யும். அதைவிடுத்து பரீட்சை பாடங்களை 7 ஆக்கி மதிபீட்டு பாடங்களை 3 ஆக்கி.. (மதிப்பீட்டு பாடம் என்றால்.. ரீச்சருக்கு ஜால்ரா போற்ற பார்ட்டிகளுக்கு உயர்புள்ளி.. மேற்கு நாடுகளிலேயே இந்தக் கூத்து.. சொறீலங்கா சொல்லிவேல்லையில்ல..) மொத்தம் 10 பாடங்களின் சுமையை ஓ எல் வரை காவுவது.. அநாவசியமானது. வாழ்க்கையில் சமயத்தில் படிச்ச.. ஒரு தேவாரத்தை தவிர மிச்சம் ஒன்றும் உருப்படியாக ஞாபகமில்லை. அதுக்குக் கூட பண் கிண் எதுவும் ஞாபகமில்லை. அது உனக்குத் தேவையா..??! சொறீலங்கா. எந்த பெளத்த மாணவர் பிரித் ஓதுறான். புத்த பிக்குதானே ஓதுறான். வேணுன்னா அவனைப் படிக்கச் சொல்லுறது... சமயத்தை.
  34. சிறு வயதில், ஊரில் இருந்த நாட்களில், வீட்டிற்கு அப்பாவின் நண்பர்கள் எந்நேரங்களிலும் வருவார்கள். பலர் தேநீர் கேட்பார்கள். கேட்காதவர்களுக்கும் தேநீர் கொடுக்கப்படும், அது ஒரு உபசரிப்பு, மரியாதை போல. சீனியின் அளவு, சாயத்தின் அளவு போன்ற கேள்விகள் கேட்கப்படுவதில்லை. இப்பொழுது காலம் மாறி, இடமும் மாறிவிட்டது. கேட்பதற்கும் தயக்கம், கொடுப்பதற்கும் தயக்கம், அளவுகள் வேறு தனித்தனியாகிவிட்டது. ** ஒரு கோப்பை தேநீர் -------------------------------- வீட்டுத் தவணைக் கட்டணம் வாகன தவணைக் கட்டணம் வீட்டுக் காப்புறுதி பொருள் காப்புறுதி மருத்துவக் காப்புறுதி கண்ணுக்கு தனிக் காப்புறுதி பற்களுக்கு புறம்பாக இன்னொன்று மரணக் காப்புறுதி வரை கட்ட வேண்டும் தண்ணீர் காஸ் கரண்ட் இன்டர்நெட் இரண்டு வகை ஃபோன்கள் குப்பை இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கட்டணங்கள் ஆர்வம் அதிகமானால் நெட்ஃபிளிக்ஸ் பிரைம் ஐபி டிவி பாக்ஸ் கேபிள் சாட்டிலைட் யூடியூப் டிவி ஸ்லிங் இப்படியும் சில செலவுகள் இருக்கும் கோவில்கள் சங்கங்கள் மையங்கள் அமைப்புகள் நிறுவனங்கள் இவையும் கையை எதிர்பார்க்கும் விழாக்கள் கொண்டாட்டங்கள் விருந்தினர்கள் தவிர்க்க முடியாதவை பயணங்கள் கட்டாயப் பயணங்கள் சொந்தங்கள் பொறுப்புகள் கடமைகள் இதில் எதையும் விடவும் முடியாது வழமையான வீட்டுச் செலவுகள் பள்ளிச் செலவுகள் பள்ளிக்கு பின் வரும் செலவுகள் இவை ஒரு தனிக் கணக்கு சாஸ்த்ரிய கலைகள் அரங்கேற்றம் சாமத்திய வீடு என்றால் கட்டுக் கட்டாக வேண்டும் இத்துடன் சேமிக்க வேண்டும் என்றும் சொல்கின்றனர் இவைக்காக கண் முழித்தால் கண் மூடும் வரை ஓடிக் கொண்டிருக்கும் ஒரு மனிதன் வீடு தேடி வந்தால் இருக்க விட்டு ஒரு கோப்பை தேநீர் கொடுங்கள்.
  35. 04 MAR, 2024 | 04:10 PM இவ்வருடத்திற்கான பருவ கால ஆரம்பத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகைக்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) புறா மலை (Pigeon Island) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக உலக வன ஜீவராசிகள் தினமான நேற்று ஆளுநரால் உத்தியோகபூர்வமாக புறா மலை (Pigeon Island) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வுக் கிழக்கு மாகாண சுற்றுலா பணியகம், நிலாவெளி சுற்றுலா அபிவிருத்தி குழு,திருகோணமலை ஹோட்டல் சங்கம் மற்றும் குச்சவெளி பிரதேச சபை ஆகியவற்றின் அனுசரணையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சுற்றுலா பணியக தவிசாளர் மதன்,வனவிலங்கு ஜீவராசி திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். https://www.virakesari.lk/article/177868
  36. நல்ல செயல். இதில் பங்குபற்றியவர் உறவினர் மூலம் அறிந்தேன். சிங்கலவர்களும், அவுஸ்ரெலியா, கனடா, பிரான்ஸ் தமிழர்களும் பங்கபற்றி உள்ளார்கள்.
  37. மயிலிறகு........ 03. அப்போது மயிலம்மாவின் மகன் சுந்தரேசன் என்னும் சுந்துவும் அவன் நண்பன் வாமதேவனும் சைக்கிளில் வந்து இறங்குகின்றனர்.அம்மா வேலர் அப்பா இறந்துட்டாராம்.....உங்களிடம் சொல்லச் சொன்னவை என்று சுந்து சொல்கிறான். எப்படியும் இன்று பின்னேரம் எடுத்து விடுவார்கள். சரியில்லை, எதுக்கும் நாங்கள் நேரத்துக்கு போவம் என்னடி கனகம். ஓம் மயூரி, நான் போய் சீலை மாற்றிக்கொண்டு வருகிறன்.பக்கத்தில் இருக்கும் தன் வீட்டுக்கு போக கிளம்பியவளை நில்லடி நானும் உன் கூடவாறன் என்று சொல்லி விட்டு இரண்டு பொடியலையும் பார்த்து பிள்ளைகள் நான் சமைச்சு வைத்திருக்கிறன், வடிவாய் போட்டு சாப்பிடுங்கோ என்று சொல்லும் போது மயிலம்மாவின் மகள் பூவனமும் கனகத்தின் மகள் கோமளமும் தனித்தனி சைக்கிளில் வந்து இறங்குகின்றனர். அம்மா வேலர் அப்பா செத்துட்டாராம் இண்டைக்கே எடுக்கினமாம் என்று சொல்ல ....ஓம் இப்பதான் அண்ணன்மார் சொன்னவங்கள். சரி, நீங்களும் அண்ணன்மாரோட கொழுத்தாடு பிடிக்காமல் இருக்கிறதை போட்டுச் சாப்பிடுங்கோ. நாங்கள் அங்க போயிட்டு வாறம் என்று வீட்டினுள் போகிறாள். அறைக்குள்ளே கொடியில் கிடந்த பாவாடையை எடுத்து அதில் இருந்த கிழிசலை ஒருபக்கம் மறைவாக விட்டு கட்டிக்கொண்டு இருப்பதிலேயே நல்லதொரு வெள்ளைப் புடவையை எடுத்துக் கட்டிக் கொள்கிறாள். மயிலம்மா மகள் பூவனம் பெரியவளான நாள் தொட்டு தனக்கென ஒரு சீலையோ நகையோ வாங்கியதில்லை.கிடைக்கும் பணத்தில் மிச்சம் பிடித்து அவளுக்கென ஆடைகளும், நகைகளும் வாங்கி விடுவாள். மேலும் சுந்தரேசனின் படிப்புக்கும் காசு தேவையாய் இருக்கும். ஆனாலும் அவை போதாது என்று அவளுக்கும் தெரியும். அவள் வெளிக்கிட்டு வெளியே வரும்போது மயிலம்மாவிடம் ஒரு கம்பீரமும் சேர்ந்து வருகின்றது. இனி அந்த அயலைப் பொறுத்தவரை எங்கும் அவள் பேச்சு செல்லும். அனைவரும் அவளுக்கு மரியாதை குடுத்து நடந்து கொள்வார்கள். கணவன் இருக்கும்வரை அந்த ஊரில் நடக்கும் எல்லா நல்லது கெட்டதுக்கும் அவர்கள் முதன்மையானவர்களாக இருந்திருக்கிறார்கள். ஒருநாள் அவள் கணவன் லொறியால் மோதுண்டு இறந்தபின் அவள் தானாகவே சிலபல நல்ல காரியங்களில் முன்னுக்கு நிற்பதில் இருந்து ஒதுங்கிக் கொண்டாள். மயிலும் கனகமும் தாழ்வாரத்தில் கிடந்த "பாட்டா"வைப் போட்டுக் கொண்டுவந்து படலையைத் திறக்க வெளியே அவர்களின் பசுமாடு கன்றுடன் நிக்கிறது அவற்றை உள்ளே விட்டு சத்தமாய் பிள்ளை லெச்சுமி வருகுது கட்டையில் கட்டிப் போட்டு குண்டானுக்குள் இருக்கும் கழனிய எடுத்து வை என்று சொல்லி படலையை சாத்தி கொழுவிவிட்டு வெளியில் இறங்கி நடக்கிறார்கள்.பக்கத்தில் அம்மன் கோயில் குறுக்கிட அங்கு டேப்பில் சன்னமாய் தேவாரப்பாடல் ஒலிக்கின்றது.அங்கு வந்த மயிலம்மா ஐயரிடம் ஐயா வேலர் மோசம் போயிட்டாராம் என்று சொல்லிவிட்டு, இனி ஐயா பிணம் சுடுகாட்டில் தகனமாகும் வரை நடை திறக்க மாட்டார் என்று கனகத்திடம் சொல்லிக்கொண்டு சுவாமியைப் பார்த்து கன்னத்தில் போட்டுகொண்டு செத்த வீட்டுக்குப் போகிறார்கள். அங்கு சின்ன சின்ன சண்டை சச்சரவுகளுடன் கிருத்தியம் முடிந்து பாடை வேலியைப் பிய்த்துக் கொண்டு போக இவர்கள் இருவரும் கிளம்பி வீட்டுக்கு வருகிறார்கள்.செத்தவீட்டால் வர நாலு மணிக்கு மேலாகி விட்டது. வீட்டில் நாலு பொடியலும் வெகு மும்மரமாய் தாயம் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.ஒரே சத்தமும் கும்மாளமுமாய் இருக்குது.அதைப் பார்த்த கனகம் ஓமனை உந்த மும்மரத்தை படிப்பிலே காட்டினால் எங்கேயோ போயிடுவீங்கள்,இதுக்கு ஒன்றும் குறைச்சலில்லை என்று சொல்ல, விடு கனகம் அதுகளும்தான் என்ன செய்யிறது.சும்மா விளையாடட்டும் நீ வா நாங்கள் குளத்துல தோய்ஞ்சு போட்டு வருவம் என்று கனகத்தையும் கூட்டிக்கொண்டு போகிறாள். போகும்போது எட்டி அடியெடுத்து நடக்க மயிலம்மாவின் பாட்டா செருப்பு அறுந்து விடுகிறது.உடனே அவள் தடுமாறி விழ இருந்து சமாளித்துக் கொள்கிறாள்.பிள்ளைகள் சிரிக்க வாமன் எழுந்து வந்து அந்த அறுந்த செருப்பை எடுத்து யாரிடமாவது ஒரு ஊசி இருந்தால் தாங்கோ என்று கேட்க மயிலம்மாவே தனது சட்டையில் குத்தியிருந்த ஊசியை கழட்டி அவனிடம் தருகிறாள். வாமனும் அதைக்கொண்டு செருப்பை சரிசெய்து அவளிடம் தர அவளும் போட்டுகொண்டு கனகத்தின் பின்னால் போகிறாள். குளத்தில் இருவரும் ஆடைகளைக் களைந்து அலம்பிக் கரையில் வைத்து விட்டு நன்றாக முங்கி நீந்தித் தோய்கிறார்கள்........! மயில் ஆடும்....... 🦚
  38. JVP தமிழர்கள், துவராக தமிழர்கள்,சில முன்னாள் போராளி தமிழர்கள் , தென்னிந்திய திருச்சபை தமிழர்கள்
  39. மனசோ தந்தி அடிக்குது
  40. எனது தகப்பனாரும் ஏகாதசி அன்று தான் காலமானார். தொடருங்கள் சுவி.
  41. தனது தலையீட்டின் மூலம் சிங்கள தேசத்தைக் காப்பாற்றிய இந்தியா தனது கெரில்லா இராணுவத்தை பாரிய தேச விடுதலை இராணுவமாகக் கட்டியெழுப்ப முயன்று வந்த அதேவேளை, தனிநாட்டிற்கான அடிப்படைக் கட்டமைப்புக்களை அமைப்பதிலும் பிரபாகரன் மும்முரமாகச் செயற்பட்டு வந்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல கிராமப் பகுதிகளை இராணுவத்தினதும், பொலீஸாரினதும் பிடியிலிருந்து அவர் விடுவித்திருந்தார். யாழ்க்குடாநாட்டில் இயங்கிவந்த 16 பொலீஸ் நிலையங்களில் வெறும் 7 நிலையங்களே அப்போது இயங்கிவந்தன. இப் பொலீஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள பொலீஸார் முன்வந்த போதிலும், அவைகுறித்த விசாரணைகளை அவர்கள் முன்னெடுக்க விரும்பவில்லை. மேலும், மஜிஸ்ட்ரேட் நீதிமன்றில் புதிய வழக்குகளையும் அவர்கள் தாக்கல் செய்ய விரும்பவில்லை. பழைய வழக்குகளே விவாதிக்கப்பட்டு வந்தன. வீதி ஒழுங்கு நடவடிக்கைகளையும் பொலீஸார் நிறுத்தியிருந்தனர். இராணுவத்தினரின் உதவியுடனேயே பொலீஸாரின் வீதி ரோந்துக்கள் நடைபெறலாயின. இராணுவத்தினரின் கவச வாகனங்களில் பொலீஸாரும் கூடவே வலம் வந்தனர். பொலீஸார் இயக்கமற்று இருந்த இச்சந்தர்ப்பத்தினைப் பாவித்து சில சமூக விரோத சக்திகள் செயலில் இறங்கத் தொடங்கின. களவுகள், அச்சுருத்தல்கள், கப்பம் அறவிடுதல், பாலியல் வன்புணர்வுகள் உள்ளிட்ட பல சமூகச் சீர்கேடுகளை இச்சக்திகள் அரங்கேற்றத் தொடங்கியிருந்தன. புலிகளும், புளொட் அமைப்பும் இச் சமூக விரோத சக்திகளிடமிருந்து மக்களைப் பாதுகாக்கும் செயல்களில் ஈடுபடத் தொடங்கின. 1984 ஆம் ஆண்டு பங்குனியில் புலிகள் வெளியிட்ட அறிவித்தல் ஒன்றில் சமூக விரோத நடவடிக்கைகள் ஈடுபடுவோர் உடனடியாக அவற்றினை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை செய்திருந்தனர். மேலும், தமது எச்சரிக்கைகள் உதாசீனப்படுமிடத்து அவர்கள் கடுமையான தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவ்வெச்சரிக்கையில் கூறப்பட்டிருந்தது. புலிகளின் எச்சரிக்கை வெளியிடப்பட்டு ஒரு சில நாட்களுக்குப் பின்னர் அச்சுவேலிச் சந்தியில் நபர் ஒருவரின் உடல் மின்கம்பம் ஒன்றில் கட்டப்பட்டுக் கிடந்தது, அருகில் ஒரு காகிதத் துண்டும் காணப்பட்டது. உடலின் தலைப்பகுதியில் குண்டு துளைத்த அடையாளம் தெரிந்தது. புலிகளின் இலச்சினையுடன் காணப்பட்ட அக்காகிதத் துண்டில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது, "மக்களைத் துப்பாக்கி முனையில் கொள்ளையிட்டதற்காக இத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது". 28 வயதுடைய பொன்னம்பலம் நடராஜா என்பவரே அந்த சமூக விரோதியாவார். க‌ல்வியங்காட்டைச் சேர்ந்த குணரட்ணம் என்பவரும் புலிகளின் எச்சரிக்கையினை உதாசீனம் செய்திருந்தார். குக்கு என்ற புனைபெயருடைய குணரட்ணம் எனும் 29 வயதுடைய நபர் தொடர்ந்தும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். பகல் வேளை ஒன்றில் நவாலிப் பகுதியிலிருந்த வீடொன்றிற்குள் நுழைந்த குணரட்ணம், அங்கு தனியாகவிருந்த பெண்ணைக் கடுமையாகத் தாக்கியதுடன், அவ்வீட்டில் இருந்த ஒரு லட்சம் ரூபாய்கள் பெறுமதியான நகைகளையும் களவாடிச் சென்றார். இக்கொள்ளைச் சம்பவம் நடந்து இரு நாட்களுக்குப் பின்னர் தேநீர்க் கடையொன்றில் அமர்ந்திருந்த குக்குவை மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் வெளியே வருமாறு அழைத்தனர். வந்திருப்பது யாரென்பதை உடனேயே அடையாளம் கண்டுவிட்ட குக்கு ஓட ஆரம்பித்தார். இளைஞர்களில் ஒருவர் குக்குவின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யவே அவர் இறந்து வீழ்ந்தார். குக்குவின் உடலை அருகிலிருந்த‌ மின்கம்பம் ஒன்றில் கட்டிய இளைஞர்கள் கையால் எழுதப்பட்ட காகிதம் ஒன்றினையும் அருகில் வைத்துவிட்டுச் சென்றனர். புலிகளின் இலச்சினையோடு இருந்த அத்துண்டில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது, "நாங்கள் இவருக்கு மூன்று முறை எச்சரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் அவர் அவற்றை உதாசீனம் செய்திருந்தார். அதனாலேயே அவருக்குத் தண்டனை வழங்கினோம்". புளொட் அமைப்பும் சில சமூக விரோதிகளுக்குத் தண்டனை வழங்கியது. அவர்களில் ஒருவர் சுழிபுரத்தைச் சேர்ந்த 21 வயதுடைய சின்னையா சிவபாலன். துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவரது உடல் சுழிபுரம் சந்திக்கருகில் கிடக்கக் காணப்பட்டது. அவரது குற்றங்களைப் பட்டியலிட்ட துண்டொன்று அருகில் கிடந்தது. சுழிபுர‌ம் பகுதியில் பல வீடுகளில் நகைக்கொள்ளையில் ஈடுபட்டது, இளம் பெண் ஒருவரைப் பாலியல் வன்புணர்வு செய்தது, வாகனங்களைக் கொள்ளையிட்டது ஆகிய குற்றங்களுக்காக அவர் கொல்லப்பட்டுள்ளதாக அத்துண்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. புளொட் அமைப்பின் சங்கிலியன் பஞ்சாயத்து எனும் பிரிவே இத்தண்டனையினை வழங்கியதாகவும் அத்துண்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுவதே புலிகளின் முக்கிய கரிசணையாக மாறியது. பழமையான பஞ்சாயத்து முறைமூலம் குற்றங்களை தீர்க்கும் வழிகளும் ஆராயப்பட்டன. கிராமத்திலிருக்கும் முதியவர்கள், சிவில் மற்றும் சிறிய கிரிமினல்க் குற்றங்களை விசாரித்து தீர்ப்பு வழங்குமாறு புலிகளால் கோரப்பட்டனர். மேலும் சிங்கள அரசினால் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுவரும் மனிதவுரிமை மீறல்களைப் பதிவுசெய்து, விசாரித்து பின்னர் அரச அமைப்புக்களுடன் இணைப்பாளர்களாக‌ இதுகுறித்துப் பேசி நீதியைப் பெற்றுக்கொடுக்கும் முகமாக சிவில் அமைப்புக்கள் செயற்படவேண்டும் என்றும் புலிகள் கோரினர். இதனையடுத்து வடக்குக் கிழக்கின் அனைத்துப் பகுதிகளிலும் பிரஜைகள் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரதேசத்திலும் வசித்த மதிப்பிற்குரியவர்களும், மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களும் இணைந்து பிரஜைகள் குழுவினை அமைத்தனர். இக்குழுக்கள் உருவாவதற்கு புலிகளும் ஆதரவு வழங்கினர். தமிழ்நாட்டில் அக்காலப்பகுதியில் தங்கியிருந்த பிரபாகரன், பிரஜைகள் குழுக்களுடன் புலிகள் சார்பாக தொடர்புகொள்ள தனது உப தலைவரான மாத்தையாவை நியமித்தார். பிரஜைகள் குழுக்கள் இணைந்து யாழ்ப்பாணப் பிரஜைகள் குழு மற்றும் கிழக்கு மாகாண பிரஜைகள் குழு என்று இரு கிளைகளாக இயங்கி வந்தன. பின்னர் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கான பிரஜைகள் குழுவின் ஒருங்கிணைப்புக் குழு உதயம் பெற்றது. யாழ்ப்பாணப் பிரஜைகள் குழுவிற்கு ஓய்வுபெற்ற பேராசிரியர் கே சிவத்தம்பியும், கிழக்கு மாகாணப் பிரஜைகள் குழுவிற்கு எஸ் சிவபாலனும் தலைமை தாங்கினார்கள். இவ்விருவரும் இணைந்து வடக்குக் கிழக்கு பிரஜைகள் குழுவின் ஒருங்கிணைப்புச் சபையின் தலைவர்களாகச் செயற்பட்டு வந்தார்கள். பேராசிரியர் கே சிவத்தம்பி 2003 இப்பிரஜைகள் குழு மக்களாலும், புலிகளாலும், அரசாங்கத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் பிற்காலத்தின் மனிதவுரிமை மீறல்கள் குறித்து அவதானிக்கும் அமைப்பாகவும், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களின் அமைப்பாகவும் மாறலாயிற்று. இதன் உறுப்பினர்கள் இராணுவ முகாம்களிலும், பொலீஸ் நிலையங்களிலும் தடுத்துவைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு வந்த தமிழ் இளைஞர்களைச் சென்று பார்வையிட்டு வந்ததுடன், அவர்கள் மீதான சித்திரவதைகளின் கடுமையினையும் இவர்களால் குறைக்க முடிந்தது. மேலும், சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள், புலிகள் மற்றும் அரசாங்கம் ஆகிய முத்தரப்புக்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பாளராகவும் இவ்வமைப்பு செயற்பட்டு வந்தது. அத்துடன் இடம்பெயர்ந்து வாழ்ந்துவந்த மக்களை வேறு இடங்களில் குடியமர்த்தும் நடவடிக்கைகளிலும், அகதிகளுக்கான பராமரிப்புக்களை ஒழுங்குசெய்யும் நடவடிக்கைகளிலும் முன்னின்று செயற்பட்டு வந்தது. சிங்கள அரசாங்கத்தின் பிடியிலிருந்து பெருமளவு பிரதேசங்கள் புலிகளால் விடுவிக்கப்பட்டதையடுத்து இப்பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள் அரசுக்கு வரிசெலுத்தும் கட்டாயத்திலிருந்து விடுதலை பெற்றனர். இப்பிரதேசங்களைப் பொறுப்பேற்ற புலிகள், மக்களைப் பாதுகாக்கும் கடமையினைச் செய்ததோடு பாதுகாப்பு வரி உள்ளிட்ட அரசு ஒன்று அறவிடும் வரிகளைப்போன்ற வரிகளை இப்பிரதேசங்களில் அறவிடத் தொடங்கினர். இப்பிரதேசங்களில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கான உறபத்திவரி மற்றும் இப்பிரதேசங்களுக்குள் கொண்டுவரப்படும் பொருட்களுக்கான இறக்குமதி வரி ஆகியவை புலிகளால் அறவிடப்பட்டன. புலிகளின் வரி வசூலிப்பினை அறிந்த அரசாங்கம் கொதிப்படைந்தது. வரி அறவிடுவது அரசாங்கத்தின் உரிமையென்றும், புலிகளுக்கு அதில் எந்த உரிமையும் கிடையாது என்றும் அரசு வாதிட்டது. மேலும், மக்களை மிரட்டியே புலிகள் பணத்தினைப் பறிக்கிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டியது. ஆனால், புலிகள் தொடர்ந்து வரிவசூலிப்பில் ஈடுபட்டே வந்தனர். அப்படிச் செய்வதன் மூலம் ஒரு அரசு செய்யும் செயற்பாடான வரி அறவிடுதலை நிழல் அரசுபோன்று செயற்படுத்தி வந்தனர். மக்களுக்கான பாதுகாப்பு, சட்ட ஒழுங்கினை நிலைநாட்டுதல், வரி வசூலித்தல் ஆகிய செயற்பாடுகள் மூலம் ஒரு அரசாங்கத்தின் அத்தியாவசியச் செயற்பாடுகளை பிரபாகரன் கையகப்படுத்திக்கொண்டார். இந்த அரசுக்கான அடிப்படைக் கட்டுமாணங்களைச் சரிவர அமைத்துக்கொண்ட பிரபாகரன், அவற்றை மென்மேலும் பலப்படுத்தி வருகிறார் (2004 இன் படி). எம்.ஜி.ஆர் இனால் வழங்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதியினை பிரபாகரன் அரசியற் செயற்பாடுகளுக்குச் செலவிட்டார். சென்னையில் இயங்கிவந்த புலிகளின் அரசியற் பிரிவு விரிவாக்கப்பட்டதுடன் மேலும் பலப்படுத்தப்பட்டது. புலிகளின் அரசியற் செயற்பாடுகளுக்கு அன்டன் பாலசிங்கமே பொறுப்பாகவிருந்தார். மாதாந்த சஞ்சிகையான விடுதலைப் புலிகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்ட வெளிவரலாயிற்று. இதற்கு மேலதிகமாக புலிகளின் குரல் எனும் பத்திரிக்கையும் அச்சுவடிவில் வெளிவரத் தொடங்கியது. புலிகளின் குரல் வானொலி ஆரம்பிக்கப்பட்டதுடன், போர்க்குரல் எனும் சஞ்சிகை போராளிகளுக்காக வெளிவரத் தொடங்கியது. தனியான பிரச்சாரப் பிரிவு ஒன்றினை புலிகள் உருவாக்கினார்கள். புகைப்படத்துறையிலும், ஒளிநாடாத் துறையிலும் கைதேர்ந்தவர்களைச் சேர்த்து உருவாக்கிய அமைப்பொன்று புலிகளின் இராணுவத் தாக்குதல்களைப் படமாக்கத் தொடங்கியது. தாக்குதல்களின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், ஒளிநாடாக்கள் ஆகியவை பிரச்சாரத்திற்காகவும், இயக்கத்தின் நிதிதேடல்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டன. 1984 ஆம் ஆண்டு மார்கழியின்போது விடுதலைப் போராட்டத்திற்குள் மக்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் புலிகள் இறங்கினார்கள். பொதுவிடங்களில் அறிவித்தல்ப் பலகைகள் வைக்கப்பட்டு அப்பகுதி இளைஞர்கள் மூலம் புலிகளின் செய்திகள் அப்பலகைகளில் பதிவேற்றப்பட்டு வந்தன. மேலும், இராணுவ முகாம்களுக்கும், பொலீஸ் நிலையங்களுக்கு முன்பாக அமைக்கப்பட்டிருக்கும் புலிகளின் காப்பரண்களில் இருந்துகொண்டு இராணுவத்தினரின் நடமாட்டங்களைக் கண்காணிக்கவும் இளைஞர்கள் பழக்கப்பட்டனர். சிலருக்கு வோக்கி டோக்கி எனப்படும் தொலைத்தொடர்புக் கருவியும் புலிகளால் வழங்கப்பட்டது. இராணுவமோ அல்லது பொலீஸாரோ தமது முகாம்களை விட்டு வெளியே வர எத்தனித்தால் அதுகுறித்த தகவல்களைப் புலிகளுக்கு உடனடியாக அறிவிக்கவே இக்கருவிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. இவற்றிற்கு மேலதிகமாக, இராணுவ நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வீதித்தடைகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளிலும் மக்கள் புலிகளுக்கு உதவினர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற எத்தனித்த வேளைகளில் கண்ணிவெடிகளை இயக்கியோ அல்லது குண்டுகளை எறிந்தோ புலிகள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். 1985 ஆம் ஆண்டு தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இன்னொரு முக்கிய ஆண்டாகும். பொலீஸாரும், இராணுவத்தினரும் அவர்களது முகாம்களுக்குள்ளேயே தள்ளி, முடக்கப்பட்டிருந்தனர். இந்தியாவின் தலையீடு நடந்திருக்காவிட்டால் மொத்த வடக்குக் கிழக்குப் பிரதேசங்களுமே தமிழ்ப் போராளி அமைப்புக்களின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் வாய்ப்பிருந்தது. தமிழ்ப் போராளித் தலைவர்களுக்கு இந்தியா இட்ட கடுமையான கட்டளை எதுவெனில், "ஜெயவர்த்தனவை பேச்சுவார்த்தை மேசைக்கு வரப்பண்ணுவதே உங்கள் போராட்டத்தின் நோக்கமாக இருக்க வேண்டும், அதை மீறி எச்செயற்பாட்டிலும் நீங்கள் ஈடுபடுவதை நாம் அனுமதிக்கப்போவதில்லை" என்பதாகும். தனது தலையீட்டின் மூலம், இந்தியா சிங்களவர்களை அச்சந்தர்ப்பத்தில் காப்பாற்றிவிட்டது.
  42. இந்தியாவின் நலன்களும், எமது இலட்சியமும் வேறுவேறானவை, நாம் இந்தியாவின் கைக்கூலிகள் அல்ல ‍- பிரபாகரன் 1984 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியிலேயே தமக்கென்று ஆயுதங்களைக் கொள்வனவு செய்யவேண்டும் என்று பிரபாகரன் சிந்திக்கத் தொடங்கினார். சர்வகட்சிக் குழு கூட்டத்தை ஜெயவர்த்தன கூட்டியிருப்பது தனது இராணுவ இயந்திரத்தைப் பலப்படுத்தி தமிழரின் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வொன்றைக் காண்பதற்கே என்று இந்தியா உணர்ந்துகொண்டபோது, 1984 பங்குனியில் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்குவது என்று அது முடிவெடுத்தது. இச்செய்தி கேட்டு மகிழ்வடைந்த புலிகளின் சில போராளிகள் இதனை பிரபாகரனுக்கு அறியத் தந்தார்கள். இதனைக் கவனமாகச் செவிமடுத்த பின்னர் பிரபாகரன் பின்வருமாறு கூறினார், "நாம் வெளியாரிடமிருந்து உடனடியாக ஆயுதங்களை வாங்கத் தொடங்க வேண்டும்". பிரபாகரனின் கூற்றைக் கேட்டு அச்சரியமடைந்த போராளிகள், "இந்தியா ஆயுதம் தருவதாகக் கூறுகையில் நாம் வெளியாரிடமிருந்து ஆயுதங்களை வாங்கவேண்டிய தேவை என்ன?" என்று வினவினார்கள். அதற்குப் பதிலளித்த பிரபாகரன், "இந்தியா எமக்கு ஆயுதங்களைத் தருவதே நம்மைத் தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கத்தான். தனது நோக்கங்களை அடைந்துகொள்வதற்காகவே அது எமக்கு ஆயுதங்களைத் தருகிறது. நாம் இந்தியாவின் கூலிப்படைகளாக இருக்க முடியாது. எமது கால்களில் நாம் நிற்கவேண்டுமானால் எமக்கென்று ஆயுதங்களை வெளியாரிடமிருந்து கொள்வனவு செய்வதைத் தவிர வேறு வழியில்லை" என்று கூறினார். பின்னைய நாட்களில் போராளிகளுடனான கலந்துரையாடல்களில் தனது கருத்தினை மீளவும் முன்வைத்தார் பிரபாகரன். தமது இலட்சியத்திற்கும் இந்தியாவின் நலன்களுக்கும் இடையே இருக்கும் பாரிய பிணக்கினை அவர் விளங்கப்படுத்தினார். "எமது இலட்சியம் இலங்கைக்குள் தமிழருக்கென்று சுதந்திரமான தனிநாடொன்றினை உருவாக்குவதே" என்று கூறிய அவர், "இந்தியா இதனை ஒருபோதும் ஆதரிக்காது" என்று கூறினார். "இந்தியாவுக்குத் தேவைப்படுவதெல்லாம் இலங்கையை தனது செல்வாக்கு வட்டத்திற்குள் வைத்திருப்பது மட்டும்தான். சிறிமா ஆட்சியில் தற்போது இருந்திருப்பின், தமிழ்ப் போராளிகளுக்கு ஆயுதங்களையோ, பயிற்சிகளையோ தருவதை இந்தியா ஒருபோதும் நினைத்துப் பார்த்திருக்காது" என்றும் அவர் கூறினார். "இப்போதே ஜெயார் தனது அமெரிக்கச் சார்பு நிலைப்பாட்டிலிருந்து விலகி, அணிசேராக் கொள்கையினைக் கடைப்பிடித்து, இந்தியாவை இப்பிராந்தியத்தின் வல்லரசாக ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறுவாராகில், இந்தியா தமிழ் மக்களின் அவலங்களை ஏறெடுத்தும் பார்க்கப்போவதில்லை" என்றும் அவர் கூறினார். "இந்தியாவின் நலன்கள் குறித்து ஜெயாரை அக்கறைகொள்ளவைக்க, தமிழ்ப்போராளிகளூடாக அழுத்தம் கொடுக்க இந்தியா முனைகிறது. இந்த அழுத்தத்தினைக் கொடுப்பதற்குத் தேவையான ஆயுதங்களை மட்டுமே இந்தியா எமக்கு வழங்கவிருக்கிறது. ஆனால், தமிழர் தாயகத்திலிருந்து இராணுவத்தை முற்றாக அகற்றத் தேவையான எந்த ஆயுதங்களையும் இந்தியா ஒருபோதும் எமக்குத் தரப்போவதில்லை. இந்தியா எமக்குத் தரவிரும்பும் ஆயுதங்களை நாம் ஏற்றுக்கொள்வோம், ஆனால், இராணுவத்தை எமது தாயகத்திலிருந்து அகற்றத் தேவையான ஆயுதங்களை நாம் வெளியாரிடமிருந்து பெற்றுக்கொள்வோம்" என்று பிரபாகரன் கூறினார். இந்தியாவால் போராளிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் போதுமானவையாக இருக்கவில்லை. எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிகக் குறைவான் ஆயுதங்களையே இந்தியா வழங்கியது. அவற்றில் பெரும்பாலானவை மிகப் பழமையானவையாகக் காணப்பட்டன. தனது போரும் சமாதானமும் எனும் புத்தகத்தில் எழுதும்போது அன்டன் பாலசிங்கம் பின்வருமாறு குறிப்பிடுகிறார், "வழங்கப்பட்ட ஆயுதங்கள் குறித்து பிரபாகரன் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருந்தார். வழங்கப்பட்ட ஆயுதங்களில் இருந்த ரைபிள்கள், இயந்திரத் துப்பாக்கிகள், 60 மி.மீ மோட்டார்கள் என்பன மிகவும் பழமையானவை, பாவனைக்கு உதவாதவை. எமக்குத் தேவையான நவீன, திறனுள்ள ஆயுதங்களைத் தருவதை இந்திய அதிகாரிகள் விரும்பவில்லை என்பதை நாம் நன்கு உணர்ந்துகொண்டோம். தமிழ்ப் போராளிகளின் ஆயுத வல்லமை மட்டுப்படுத்தப்பட்டு இருக்கவேண்டும், அவர்களின் போர்வல்லமை ஒரு அளவிற்கு மேல் விருத்தியடையக் கூடாது என்பதற்காக மிகவும் திட்டமிட்ட வகையிலேயே பழமையான ஆயுதங்களை இந்தியா எமக்கு வழங்கியது. நவீன ஆயுதங்களைப் பாவிக்கும், திறனுள்ள போர்ப்படையினைக் கட்டியெழுப்ப விரும்பும் பிரபாகரனுக்கு இந்தியா கொடுத்த ஆயுதங்கள் எவ்விதத்திலும் போதுமானவையாகவோ தரமுள்ளவையாகவோ இருக்கவில்லை" என்று கூறுகிறார். தனது அமைப்பிற்குத் தேவையான நவீன ஆயுதங்களை உலகச் சந்தையில் இருந்து கொள்வனவு செய்ய பிரபாகரன் விரும்பினார். ஆனால், அதற்கு அதிகளவு பணம் தேவைப்பட்டது. எம்.ஜி.ஆர் அதற்கான பணத்தினை வழங்கியிருந்தார். அப்பணத்தைக் கொண்டு நவீன ரக ஆயுதங்களை லெபனனின் சட்டவிரோத ஆயுதச் சந்தையிலிருந்து பிரபாகரன் கொள்வனவு செய்தார். இவ்வாறான ஆயுதக் கொள்வனிற்காக இரகசிய ஆயுதக் கொள்வனவு அமைப்பொன்றை உருவாக்கிய பிரபாகரன் அதற்குப் பொறுப்பாக கே.பி என்றழைக்கப்பட்டும் குமரன் பத்மனாதனை நியமித்தார். அவர் இன்றுவரை அப்பணியில் செயற்பட்டு வருகிறார் (2005 இன்படி). உலகின் அனைத்துச் சட்டவிரோத ஆயுதச் சந்தைகளுக்கும் பயணம் செய்த கே.பி, மலிவான சந்தையென்று தான் கண்டறிந்த லெபனின் ஆயுதச் சந்தையிலிருந்து புலிகளுக்கான ஆயுதங்களை வாங்குவதென்று முடிவெடுத்தார். அவ்வயுதங்கள் மலிவானவை மட்டுமல்லாமல், திறனுள்ளவையாகவும் காணப்பட்டன. இதனையடுத்து கே,பி இன் பெயர், அவரது புனைபெயர்கள், அவரின் மறைவிடங்கள் போன்ற பல விடயங்கள உலகின் பல புலநாய்வு அமைப்புக்களின் கோப்புக்களுக்கு வந்து சேரத் தொடங்கின. அவரிடம் ஒரு இலங்கைக் கடவுச் சீட்டும், இரு இந்தியக் கடவுச் சீட்டுக்களும் காணப்பட்டன. புலிகளுக்கான ஆயுதக் கொள்வனவிற்காக பல கறுப்புச் சந்தைகளுக்கும் அடிக்கடி பயணித்தவர் என்கிற வகையில் கே.பி யின் பெயர் பலவிடங்களில் பிரபலமாகிப் போனது. புலிகளுக்காக கே.பி முதன் முதலாக கொள்வனவு செய்த ஆயுதக் கொள்கலனில் ஏ.கே - 47 ரக ரைபிள்கள், ஆர்.பி.ஜி க்கள், ஸ்னைப்பர் ரைபிள்கள், வெடிபொருட்கள், இரவு பார்வைக் கருவிகள், தாங்கியெதிர்ப்பு ஆயுதங்கள், நவீன தொலைத் தொடபு உபகரணங்கள் மற்றும் பெருமளவு துப்பாக்கி ரவைகள் போன்றவை இருந்தன. வெளிநாட்டுக் கப்பல் ஒன்றின் மூலம் இவ்வாயுதங்கள் சென்னை துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டன. அக்கொள்கலனை வெளியே எடுத்துவிட புலிகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைந்தன. அதுவரை புலிகளுக்கு உதவி வந்த சென்னைச் சுங்க அதிகாரிகள் இம்முறை உதவி செய்ய மறுத்தனர். இதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் உமா மகேஸ்வரனுக்காகக் கொண்டுவரப்பட்ட ஒரு கொள்கலன் ஆயுதங்களை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தமையினால், இக்கொள்கலனை வெளியே விடுவது குறித்து அதிகாரிகள் அஞ்சினர். இறுதியாக, எம்.ஜி.ஆர் இன் தலையீட்டினையடுத்து புலிகளின் கொள்கலன் வெளியே வந்தது. இச்சம்பவம் குறித்த விபரங்களை இனிவரும் அத்தியாயங்களில் பார்க்கலாம். ஆர்.பி.ஜி உந்துகணையுடன் புலிகளின் போராளி ஒருவர் நான் முன்னர் குறிப்பிட்டது போல, பிரபாகரன் தமிழ்க் கடவுளான முருகன் மீது அதிக பற்று வைத்திருப்பவர். தனது அமைப்பிற்கென்று கொண்டுவரப்பட்ட கொள்கலன் சென்னை சுங்க அதிகாரிகளால் பிரச்சினைகளின்றி விடுவிக்கப்படுமிடத்து பழனி முருகன் ஆலயத்திற்கு வந்து வழிபடுவதாக அவர் வேண்டியிருந்தார். அவ்வாறே, கொள்கலன் புலிகளின் மறைவிடத்தை அடைந்ததும், தான் வேண்டிக்கொண்டவாறு பழனிக்குச் சென்று தனது வேண்டுலை நிறைவேற்றிக்கொண்டார். அந்நாள் முழுதும் உண்ணா நோன்பிருந்து, முருகனை வேண்டிக்கொண்டதுடன், தனது கொள்கலனை வெளியே எடுத்துத் தந்தமைக்காக நன்றியும் கூறினார். மறவாது எம்.ஜி.ஆர் இற்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். பழனி முருகன் ஆலயம் மூத்த போராளியொருவர் என்னுடன் பேசும்போது, புலிகளின் கொள்கலன் மடக்கப்பட்டபோது எம்.ஜி.ஆர், சுங்க ஆணையாளர் மற்றும் பொலீஸ் டி.ஐ.ஜி ஆகியோருடன் தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டார். இதனையடுத்து சுங்க அதிகாரிகள் அக்கொள்கலனை விடுவித்தது மட்டுமன்றி, பொலீஸ் பாதுகாப்புடன் அதனை புலிகளின் இரகசிய மறைவிடத்திற்கு இரவோடு இரவாக எடுத்துச் சென்று இறக்கியதாகவும் கூறினார். கொள்கலன் இருந்த ஆயுதங்கள் முழுவதையும் புலிகளின் மறைவிடத்தில் சேமிக்க முடியவில்லை. மேலதிக ஆயுதங்களை பாலசிங்கத்தின் வீட்டிற்கு எடுத்துச் சென்று மறைத்து வைத்தார்கள். தனது சுதந்திர வேட்கை எனும் புத்தகத்தில் எழுதும் அடேல், "ஒரு கட்டத்தில் நாம் வசித்து வந்த வீட்டின் ஒரு அறை முழுவதும் ஏ.கே - 47 ரைபிள்களும் ஆர்.பி.ஜி க்களும் குவிந்து காணப்பட்டன" என்று குறிப்பிடுகிறார். பின்னர் விரைவாக அவ்வாயுதங்கள் அனைத்தும் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் புலிகளுக்கு இருந்த ஆயுத மறைவிடங்களுக்கு மாற்றப்பட்டன. இதற்கு மேலதிகமாக கற்பாறைகளை உடைக்கப் பயன்படும் வெடிபொருளான ஜெலட்டினை பெருமளவில் தமிழ்நாட்டிலிருந்து புலிகள் கொள்வனவு செய்தனர். இயக்கத்திற்குள் கொண்டுவரப்பட்ட பெருமளவு நவீன ஆயுதங்களைக் கொண்டு தனது அமைப்பை மறுசீரமைப்புச் செய்தார் பிரபாகரன். தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கை ஐந்து வலயங்களாக வகுத்து அவை ஒவ்வொன்றிற்கு ஒரு தளபதியை அவர் நியமித்தார். அதன்படி யாழ்க்குடாநாட்டிற்குப் பண்டிதரும், வன்னிக்கு மாத்தையாவும், மன்னாருக்கு விக்டரும், திருகோணமலைக்குச் சந்தோசமும் நியமிக்கப்பட்டனர். ஐந்தாவது வலயமாக மட்டு அம்பாறை விளங்கியது.
  43. ஊறல் எனறால் எல்லா மூலிகைகளும் சேரத்த ஒரு பை அதை வாங்கி சுடுதண்ணியில் வேக வைத்து ஆறிய பிறகு குடிததால் உடல் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்
  44. சில அமைப்புக்கள்,தனிநபர்கள் செய்கின்றனர்..... ஐங்கரநேசனின் பசுமை புரட்சி அமைப்பு மற்றும் சில யூ டியுப் இளைஞர்கள் செய்கின்றனர் ... யாழ்கள புத்தன் என்ற இளைஞனும் வருடத்திற்கு 75 மரம் என்ற வகையில் கடந்த 3 வருடங்களாக செய்து வருகிறார் என்று யாழ் களத்தில் பார்த்த ஞாபகம்😃 *****
  45. நன்னியவர்களே பாராட்ட வார்த்தைகள் இல்லை. சிறப்பாக அனைவற்றையும் நிரலாக்கம் செய்து பதிவிடுகின்றீர்கள். உங்கள் முயற்சி தொடரட்டும். எமது அடுத்ததலைமுறைக்கு இவை சென்றடைய வேண்டும். நீங்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இன்று இந்திய, சிங்கள மற்றும் உலக வல்லாதிக்க சக்திகளுக்குக் கடுப்பேற்றும் விடயமாக இருப்பது எமது மக்கள், எமது தேசியத் தலைமைமேல் கொண்டுள்ள மதிப்பும் பாசமும் விருப்புமாகும். அதனைத் தவிடுபொடியாக்க எடுக்கும் முயற்சிகளால் பயனில்லை என்பதை இவர்கள் உணராமலும் இல்லை. ஆனாலும் தொடர்வர். காலம் ஒரு புள்ளியில் 'பிரபாகனிஸம்' குறித்து உச்சரிக்கும் என்பது மெய்நிலையாகும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.