Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    19
    Points
    3061
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    19129
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    38770
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/25/24 in Posts

  1. வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு…. இலங்கைப் பயணகட்டுரை ஹீத்துரோவில் விமானம் ஏறும் போது ஏதோ இனம்புரியாத ஒரு உணர்வு மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இலங்கையும் புதிதில்லை, விமானப்பயணமும் புதிதில்லை. ஆனாலும் கொவிட் பெருந்தொற்றுக்கு பின்னான முதல் இலங்கைப்பயணம். ஒதுங்கி வாழ்வதே வாழ்க்கை என ஆகி விட்ட அந்த இரு வருடங்களில் இப்படி ஒரு பயணம் இனி ஒரு முறை அமையுமா என்பதே நம்பிக்கை இல்லாமல் இருந்தது. அந்த நிலை கடந்து, கொஞ்சம் கொஞ்சமாக குட்டி போட்ட பூனை போல் ஐரோப்பாவையே சுற்றி வந்த நிலையும் கடந்து….இதோ இலங்கைக்கான நெடு-நாள் பயணம் ஆரம்பமாக போகிறது. கடந்த முறை கட்டுநாயக்காவில் இருந்து வெளியேறும் போது சுவரில் மைத்திரிப்பால சிரிசேன சிரித்து கொண்டிருந்தார். அப்போ, மீண்டும் இலங்கை மீள, இப்படி ஒரு நீண்ட இடைவெளி விழும் என எதிர்பார்த்திருக்கவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில்தான் நாட்டில் எத்தனை மாற்றங்கள். ஒரு தொடர் குண்டு வெடிப்பு, ஒரு ஆட்சி மாற்றம், பெருந்தொற்று, பொருளாதர நெருக்கடி, ஒரு அற(ம்)(ர)களை, இன்னொரு ஆட்சி மாற்றம்…. நாட்டில் மட்டும் அல்ல, இந்த இடைவெளியில் என் மனதில் கூட பல போபியாஃக்கள் வந்து குடியேறி, ஆட்சி அமைக்கவும் உரிமை கோரிக்கொண்டிருக்கிறன. தெனாலி கமல் போல, வைரஸ் எண்டால் பயம், டெங்கு எண்டாலும் பயம், ரேபீஸ் நாய்க்கடி என்றால் மெத்த பயம் எனக்கு என்பதாக இந்த போபியா லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. என்னதான் ஒரு காலத்தில் அந்த நாட்டில் நுளம்புகளோடு தாம்பத்தியமே நடத்தி இருந்தாலும், போரின், இடப்பெயர்வின், சாவின் வடுக்களை அனுபவித்திருந்தாலும், சில தசாப்த புலம்பெயர் வாழ்வின் ஒப்பீட்டளவிலான பாதுகாப்பு, மனதை மென்மையாக்கியே விட்டுள்ளது. உண்மையில் இந்த பயணம் பல மட்டங்களில் எனக்கு ஒரு மீள் வருகைதான். நான் பிறந்த நாட்டுக்கான சில வருடங்களின் பின்னான பெளதீக மீள் வருகை மட்டும் அல்ல, உள ரீதியில் ஒரு தென்னாசியனாக என் இயற்கை வாழ்விடத்துக்கும், முன்னர் எனக்கு பழகி இருந்த அந்த வாழ்விடத்தின் அசெளகரியங்களுக்கும் கூட, இது ஒரு மீள் வருகைதான். இந்தத்தடவை தமிழ் நாடு போய், கப்பல் அல்லது விமானம் மூலம் யாழை சென்றடைய முயற்சித்தாலும் அது கை கூடவில்லை. புலம் பெயர் நாட்டில் இருந்து இந்த பயணங்களை இந்த தடத்தில் ஒழுங்கு செய்வது கொஞ்சம் கடினமாக, மிகவும் அயர்ச்சி தருவதாக இருந்தது. கப்பல் போக்குவரத்து இந்திய அரச கப்பல் நிறுவனம் செய்வதாக சொல்லி இருந்தாலும் அதன் இணைய தளத்தில் அந்தமான் சேவை பற்றி மட்டுமே அறிய கிடைத்தது. ஒரு வாட்சப் நம்பரை தேடி எடுத்து தொடர்பை ஏற்படுத்த முனைந்தும் பதில் ஏதும் இல்லை. அதே போல் விமான சேவை செய்யும் அலையன்ஸ் ஏர் டிக்கெட் விற்கும் இணையதளம் செயல்பட்ட வேகமும், முறையும் நம்பிக்கை தருவதாக இருக்கவில்லை. மேலும் எத்தனை கிலோ எடுத்து போகலாம் என்பது பற்றிய நிச்சயமின்மை, சென்னையில் இடைத்தரிக்கும் நேர அளவு, self transfer என்பதால் ஏற்பட கூடிய அனுகூல இழப்புகள், யாழிற்கு நேரே போனாலும் எப்படியும் கொழும்புக்கு வர வேண்டி இருந்தமை, இந்தியன் வீசா கட்டணம் இப்படி பலதை கருத்தில் எடுத்தபோது, இந்த முறையும் நேரே கொழும்புக்கு போவதே உசிதமான தெரிவாக இருந்தது. ஹீத்துரோவில் தானியங்கி செக்கின் முறையில் ஏதோ குளறுபடி என ஒரு முப்பது நிமிடம் அளவில் தாலியை அறுத்தாலும், இந்த குளறுபடியில் நாற்பது கிலோவுக்கு பதிலாக நாற்பத்தைந்து கிலோவை லெகேஜில் தள்ளி விட முடியுமாக இருந்தது ஒரு சின்ன வெற்றியே. அதுவும் அந்த ஒயிலான இந்திய வம்சாவழிப் பெண் ஊழியை உதவிக்கு வந்தமை, இன்னொரு முப்பது நிமிடம் தாமதித்தாலும் பரவாயில்லை என்றே எண்ண வைத்தது. ஒரு வழியாக போர்டிங் வெட்டி, ஏழு கிலோவுக்கு பதில் பதினொரு கிலோ ஹாண்ட்லெகேஜுடன் விமான இருக்கையை வெற்றிகரமாக அடைந்து, முதல் ஆளாக போய் துப்பராவான கழிவறையை பாவித்து விட்டு, இருக்கை பட்டியை அணிந்து, விமான இருக்கை முன் உள்ள சின்ன திரையை நோண்ட ஆரம்பிக்க, விமானத்தின் சக்கரங்கள் ஓடுபாதையில் மெதுவாக உருள ஆரம்பித்தன. (தொடரும்)
  2. காந்தி கணக்கு ------------------------- 'ஓஷோவைத் தெரியுமா?' அந்தப் பெயரில் ஒரு ஆள் இந்தச் சுற்று வட்டாரத்தில், இந்தக் கூட்டத்தில், என்னுடைய இருபதுக்கும் மேலான வருட பழக்கத்தில் இருந்ததாக ஞாபகம் இல்லை. கால்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், கிரிக்கெட் இப்படி எந்த விளையாட்டிலும் இந்தப் பெயரில் எவரையும் நினைவில் இல்லை. 'ஓஷோ என்ன விளையாடுகிறவர்?' 'இல்லை, இல்லை, ஓஷோ விளையாடுகிறவர் இல்லை. ஓஷோ ஆசிரமம் வைத்திருந்தார். தாடி வைத்திருந்தார். தத்துவப் புத்தகங்கள் எழுதியிருக்கின்றார்.....' அந்த ஓஷோவா, அந்த தாடி வைத்த ஓஷோ இங்கே இப்பொழுது எதற்காக வருகின்றார் என்று முன்னுக்கு நின்ற புதிய பஞ்சாபி நண்பரை உற்றுப் பார்த்தேன். எனக்குத் தெரிந்த பஞ்சாபி நண்பர்கள் ட்ரக் ஓடுவார்கள், பெரிய தோட்டங்கள் செய்வார்கள், எல்லா விளையாட்டுகளிலும் அசத்துவார்கள். இரவில் நித்திரைக்குப் போகும் முன் தவறாமல் ஒரு கலன் பால் குடிப்பார்கள். இதைவிட மகாத்மா காந்தியைப் பற்றிய பேச்சு வரும் போதெல்லாம் கெட்ட கெட்ட வார்த்தைகளால் அவரை திட்டுவார்கள். இல்லையப்பா, அவர் அது செய்யவில்லை என்று நான் காந்திக்காக ஒவ்வொரு முறையும் ஆஜராகி, அந்த வழக்கு இன்னும் ஒரு முடிவில்லாமல் போய்க் கொண்டிருக்கின்றது. ஓஷோவைப் பற்றிய விசாரணை இதுவே முதல் தடவை. ஜலியான்வாலா பாக் படுகொலை, பகத்சிங் அவர்களின் தூக்கு தண்டனை மற்றும் இன்னும் சில விடயங்களால் காந்திக்கும் சீக்கியர்களுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருந்து வருகின்றது. காந்தி காலனிய ஆட்சியாளர்களை கண்டிக்காதது மட்டும் இல்லாமல், வெள்ளை இன ஆட்சியாளர்களுக்கு இந்த விடயங்களில் ஆதரவாக இருந்தார் என்ற கோபம் சீக்கிய மக்களிடையே சாம்பல் மூடிய தணலாக இன்றும் தகித்துக் கொண்டிருக்கின்றது. 'ஆ, தெரியும் ஓஷோவை. சில புத்தகங்கள் வாசித்திருக்கின்றேன்.......' ஓஷோவைப் பற்றித் தொடர்ந்தார் புதிய நண்பர். ஓஷோ வாழ்க்கையை அனுபவிக்க சொல்லியிருக்கின்றார், அழகை ரசிக்க சொல்லியிருக்கின்றார், சிரிக்கச் சொல்லியிருக்கின்றார், சிந்திக்கத் தேவையில்லை என்றிருக்கின்றார், இப்படியே வரிசை நீண்டது. நண்பருக்குத் தெளிவான ஆங்கிலம், மன்மோகன்சிங் குடும்பமாக இருப்பாரோ என்றும் ஒரு நினைப்பு வந்தது. 'எங்கேயும் எப்போதும் எப்படி இருந்தாலும், ஆனந்தமாய் இருங்கள்' என்று ஓஷோ சொல்லியிருக்கின்றார் என்றார் புதிய நண்பர். 'மகனே, இப்ப நடந்து கொண்டிருக்கும் இந்தப் போட்டியில் உங்கள் அணி தோற்றால், நீங்கள் நடுவரை படுத்தப் போகும் பாடு இருக்குதே, அது தான் உங்களின் ஆனந்தம்' என்று மனதிற்குள்ளேயே நினைத்துக் கொண்டேன். விளையாட்டில், போட்டியில் தோற்பவர்கள் முதலில் நடுவரைத்தான் குற்றம் சொல்வார்கள், அது கிட்டத்தட்ட ஒரு பொதுவான உலக வழக்காக ஆகிவிட்டது. 'அங்கே பார்' என்றார். அவர் காட்டின திசையில் ஒரு பெண் ஓடிக் கொண்டிருந்தார். கோடைகால இரவு, இன்னும் வெக்கை குறையாத நேரம், அந்தப் பெண் மிகக்குறைந்த, கண்டிப்பாகத் தேவையான உடைத் துண்டுகள் மட்டுமே அணிந்திருந்தார். நண்பர் பார்த்துக் கொண்டேயிருந்தார். தன்னையும் மறந்து, என்னையும் மறந்து விட்டார். நண்பரை மெதுவாகத் தட்டினேன். 'என்ன......' என்று திரும்பினார். 'மகாத்மா காந்தியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?' என்று கேட்டேன்........ ஓஷோவாலும் காந்தியை காப்பாற்ற முடியவில்லை. சில ரணங்கள் தலைமுறைகள் தாண்டியும், தத்துவங்கள் தாண்டியும் காயாமல் காயமாகவே நீடிக்கும் போல.
  3. கருத்துக்கள உறவுகள் பதியப்பட்டது 2 hours ago கனத்தைப் பேய்க் கவிதை….. இந்துவில் படித்த காலம்.. இருப்பதுவோ நாரகேன்பிட்டி.. இது பொரளை மன்னிங்ரவுன்…. இது நம்ம அண்ணருடன் வாசம் சரித்திரம்..வேண்டா மே ஆடிவேல் விழாக்காலம்.. அடிபட்டு பிடிபட்டு.. அனுமதி பெற்று.. சம்மாங் கோட்டாரிடம் போயுமாச்சு.. இந்துக்கூட்டம் ஒருவம்புக்கூட்டம்.. வெள்ளவத்தை சந்து முந்து ரோட்டெல்லம் போய் கூடப் படிக்கிற பிகருகளின் வீட்டு பூந்தொட்டிகளை ரோட்டில் போட்டுடைத்து தூக்கிவைத்து…. உள்ள கடையெல்லாம் சாப்பிட்டு ஐஸ்கிறீம் குடித்துமுடிய மணி சாமம் ஒரு மணியாச்சு… என்னதான் சுத்து சுத்தினாலும் படுக்கைக்கு கட்டைக்கு வந்திடவேணும்.. இல்லையோ வீட்டிலை நிற்கின்ற மரத்து தடி பாவம்.. சரி ஒரு கரும்பு வாங்கி முழத்தில் .இரண்டாக்கியாச்சு போகும்பாதை திருடர் காடையர் உள்ள பாதையாகையால்..ஆயுதம் 154 இலக்க பஸ் எடுத்து கனத்தை சந்தியில் இறங்கி ஒரு மைல் வடக்கை நடக்கணும் கை இரண்டிலும் கரும்பு நிமிர்ந்த நடை.. கனத்தை பெரும் பேயுலாவும்..சுடலை.. என்பது அறிந்த கதை.. இனி… நடை தொடங்க மெல்லிய சலங்கைச் சத்தம்.. நிற்க கேட்கவில்லை… நடக்க சலங்கை ஒலி நிற்க இல்லை ஏம சாமம்… பேய் என்னோடை வருகுது கரும்பும் கையும் நடுங்குது.. ஓட ..சலங்கைச் சத்தம் துரத்துது நிற்க ..இல்லை. சலங்கைச் சத்தம் கேட்க கேட்க ஓடிவந்து ஒருமாதிரி அறைக் கதவை பூட்டியாச்சு.. சத்தம் இல்லை… சாரம் எடுக்கப் போக மீண்டும் சத்தம்.. கத்தியை கையிலை வைத்தபடி உடுப்பை கழட்டினால்.. சிரிப்பை அடக்க முடியவில்லை உள்ளங்கியில் (ஜட்டி)..தகடு கொழுவுப்படாமல்.. போட்ட கிணு கிணுத்த சத்தம் தான் கனத்தை பேய்… (மன்னிக்கவும்..பெண் பிரசைகள் வாற இடத்தில்…இப்படி ஒரு கிறுக்கல் போட்டதிற்கு…. எல்லாம் சிரிப்பதற்கு மட்டுமே)
  4. சங்கீத கலாநிதி 'சங்கீத கலாநிதி' விருது பெற்ற திரு.டி.எம்.கிருஷ்ணா அவர்களை வாழ்த்துவோம். அவர் பார்ப்பன சமூகத்தில் தோன்றிய முற்போக்குச் சிந்தனையாளர் என்பது அவருக்கான கூடுதல் தகுதி, சிறப்பு; நமக்கான கூடுதல் மகிழ்ச்சி. தமிழ்நாட்டு மக்கள் தொகையில் சுமார் மூன்று சதவீதம் உள்ள பார்ப்பனர்கள், 'மெட்ராஸ் மியூசிக் அகாடமி' யை நிரப்பிக் கொண்டு திரு. டி.எம்.கிருஷ்ணாவுக்கு எதிராகப் பிற்போக்குத்தனமாகக் கொதிக்கிறார்கள், குதிக்கிறார்கள் என்றால் ஒரு காலத்தில் அவர்கள் என்னவெல்லாம் ஆட்டம் போட்டிருப்பார்கள் என்பதை இன்றைய இளைய தலைமுறையினரின் கற்பனைக்கு விட்டு விடுவோம். சுமார் ஐம்பது வருட காலம் அடங்கி இருந்தவர்கள் இப்போது ஒன்றியத்தில் ஒரு மதவாத, பார்ப்பனிய, பாசிச அரசு அமைந்ததும் பண்ணுகிற அலப்பறைகள் எண்ணிலடங்கா. அவர்கள் மொழியில் சொல்வதாக இருந்தால், "வினாஷ் காலே விபரீத புத்தி". இசைத்துறையில் அவர் அந்த விருதுக்கு முழுத் தகுதியுடையவர் என்பது யாவரும் அறிந்ததே. அவர்களது வாழ்வியலுக்கு எதிரான கருத்தியல் கொண்டவர் என்பதே சுருக்கமாக அவர்களது குற்றச்சாட்டு. 'மகா பெரியவா'ளைப் பாடும் பிற்போக்காளர்கள் மத்தியில் தந்தை பெரியாரைப் பாடும் முற்போக்காளர் திரு. டி.எம்.கிருஷ்ணா என்பதே அவர்களது ஆற்றாமை. அதிலும் சில பிரகஸ்பதிகள் 'மெட்ராஸ் மியூசிக் அகாடமி' யில் தாங்கள் பெற்ற விருதுகளைத் திருப்பிக் கொடுப்பார்களாம்; திரு.டி.எம்.கிருஷ்ணா தலைமையில் நடைபெறும் இசை நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார்களாம். *உயிரே போச்சு* என்று அவரோ, இசையுலகமோ *தலை*யில் கைவைத்து உட்காரப் போகிறதா, என்ன ? பார்ப்பனராயிருக்கும் திரு. டி.எம்.கிருஷ்ணாவுக்கே இன்று இந்த நிலைமையென்றால், அன்று மற்றவர்கள் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். இவர் பெரியாரைப் போற்றிய பாடல்களில் ஒன்று கீழே காணொளியில் உள்ளது. இவர் போற்றிய பெரியார் பார்ப்பனர்களை மட்டுமா எதிர்கொண்டார் ? பார்ப்பனியத்தைத் தூக்கிப் பிடித்த மகாத்மா காந்தி போன்ற ஆளுமைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மகாத்மாவின் மரியாதைக்கு எந்தக் குந்தகமும் விளைவிக்காமல் அவரை எதிர்த்து நின்றது பெரியாரின் மகாத்மியம். வைக்கம் கோயில் நுழைவுப் போராட்டத்தில் இறுதி வரை உறுதியாக நின்று வென்றெடுத்தவர் தந்தை பெரியார். அதனால்தான் செத்து ஐம்பது வருடங்கள் ஆன பிறகும் அவாளை மிரட்டுகிறார் பெரியார். சரி, இவ்வளவு பேசியாயிற்று. எந்த மகாத்மாவைப் பெரியார் எதிர்த்தார் என்பதையும் பார்ப்போமா ? அதற்கு வர்ணாசிரமத்தில் எவ்வளவு மூழ்கித் திளைத்தவர் காந்தியார் என்பது தெரிய வேண்டுமே ! 1921 - 22 காலகட்டத்தில் குஜராத்தி பத்திரிக்கையான நவஜீவனில் காந்தியார் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பட்டவை : "(1) பிறப்பை அடிப்படையாகக் கொண்ட வருணாசிரமப் பிரிவுகளில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. (2) வர்ணம் என்பது பிறப்பதற்கு முன்னாலேயே மனிதனுடைய தொழிலை நிர்ணயிப்பதாகும். (3) வர்ணாசிரம முறையில் எந்த மனிதனுக்கும் அவன் விரும்பும் தொழிலை தேர்ந்தெடுத்துக்கொள்ள சுதந்திரம் கிடையாது. (4) ஆரம்பப் படிப்பைப் பரப்ப ஜாதி ஒரு வசதியான அமைப்பாகும். ஒவ்வொரு ஜாதியும் அதனுடைய வகுப்பாரின் பிள்ளைகளைப் படிக்க வைக்கும் பொறுப்பை எடுத்துக் கொள்ளக் கூடும். ஜாதிக்கு ஒரு அரசியல் அடிப்படையும் உண்டு. ஜாதியானது சில முறைகளால் நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்து அவர்கள் அந்த ஜாதியினருக்குள் உண்டாகும் பூசல்களைத் தீர்த்து வைக்க உதவும். ஜாதியின் உதவியால் ஒவ்வொரு ஜாதியும் ஒரு படையைத் திரட்டுவது சுலபமானதாகும். (5) சமபந்தி போஜனமும் கலப்பு மணமும் சமூகத்தின் ஒற்றுமையைப் பலப்படுத்துவதற்குத் தேவையில்லை என நான் நம்புகிறேன். சமபந்தி போஜனம் நட்பை வளர்க்கிறது என்பது அனுபவத்திற்கு மாறானதாகும். இது உண்மையாக இருக்குமானால் ஐரோப்பாவில் ஒரு சண்டை கூட நிகழ்ந்திருக்காது. மலம் கழிப்பதைப் போலவே உண்பதும் ஒரு மட்டமான செய்கையாகும். மலம் கழித்தவுடன் நமக்கு அமைதி ஏற்படுகிறது. ஆனால் சாப்பிட்டவுடன் நமக்குத் தொந்தரவு ஏற்படுகிறது என்பதே இந்த இரண்டுக்கும் உள்ள ஒரே வேறுபாடு ஆகும். மலம் கழிப்பதை நாம் எப்படி ஒதுங்கித் தனித்து செய்கிறோமோ அதேபோல சாப்பிடுவதும் ஒதுங்கித் தனித்தே நடத்தப்பட வேண்டும். (6) இந்தியாவில் சகோதரர் குழந்தைகள் ஒன்றை ஒன்று திருமணம் செய்து கொள்வதில்லை. அதனால் அவர்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காமலா இருந்து விடுகிறார்கள் ? வைஷ்ணவரிடையே பல தாய்மார்கள் மற்ற குடும்பத்தாருடன் கூடி சாப்பிடுவதோ அல்லது பொதுவான ஒரு தண்ணீர்ப் பானையிலிருந்து தண்ணீர் குடிப்பதோ கூட இல்லாத அந்த அளவுக்கு வைதீக உணர்ச்சி உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதனால் அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பில்லாமலா இருக்கிறார்கள் ? சமபந்தி போஜனத்தையும் கலப்பு மணத்தையும் ஜாதி அனுப்புமதிப்பதில்லை என்பதால் ஜாதி கேடானது என்று சொல்லிவிட முடியாது. (7) கட்டுப்பாட்டிற்கு மற்றொரு பெயர்தான் ஜாதி என்பது. அளவு மீறி அனுபவிப்பதற்கு ஒரு எல்லையை உண்டாக்குவது தான் ஜாதி. வசதிகளை அனுபவிக்கும் முயற்சியில் தனது எல்லையைத் தாண்ட ஜாதி ஒருபோதும் அனுமதிப்பதில்லை. சமபந்தி போஜனம், கலப்பு மணம் ஆகியவற்றிற்கு ஜாதி முறை தடை போடுவதன் முக்கியமான கருத்து இதுதான். (8) ஜாதி முறையை ஒழித்து மேற்கு ஐரோப்பிய சமுதாய முறையை கடைப்பிடிப்பதற்கு ஜாதி முறையின் உயிர் நிலையான பரம்பரை ஜாதித் தொழிலைக் கைவிட்டாக வேண்டும். பரம்பரை ஜாதித் தொழில் என்பது எப்போதும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு கொள்கையாகும். அதை மாற்றுவதன் மூலம் குழப்பம்தான் உண்டாகும். என் வாழ்வில் ஒரு பிராமணனை பிராமணன் என்று அழைக்க முடியாவிட்டால் அந்த பிராமணனால் எனக்கு எந்த விதமான பயனும் இல்லையே ! ஒரு பிராமணன் சூத்திரன் ஆகவும் ஒரு சூத்திரன் பிராமணனாகவும் மாற்றப்பட்டால் அது பெரும் குழப்பமாகத்தானே இருக்கும் ? (9) ஜாதி முறை சமுதாயத்தில் இயற்கையான ஒரு அமைப்பாகும். இந்தியாவில் அதற்கு ஒரு மதப்பூச்சு கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்ற நாடுகள் ஜாதி முறையின் பயனைச் சரியானபடி புரிந்து கொள்ளாத காரணத்தால் அந்த நாடுகள் இந்தியா அடைந்த அளவுக்கு ஜாதியால் பல நன்மைகள் அடைய முடியவில்லை. மேற்கூறியவை என்னுடைய கருத்துக்களாக இருக்கின்றமையால் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பவர்களை நான் எதிர்க்கிறவனாக இருக்கிறேன்". இவற்றின் அடிப்படையில் "Beware of Gandhi" என்று அண்ணல் அம்பேத்கரே எழுதினார் என்றால், காந்தியாரை எதிர்த்து நின்ற பெரியார் பெரியார்தானே ! பின்னே சும்மாவா டி.எம்.கிருஷ்ணா பெரியாரைப் போற்றினார் ! பின் குறிப்பு : அவாள்லாம் டி.எம்.கிருஷ்ணாவைத் தாக்க, நாம் பதிலுக்கு அவாளைத் தாக்க crossfire ல் காந்தியார் மாட்டிக் கொண்டாரோ ? சரி, விடுங்க தோழர் ! போர்க்களம்னா அப்படிதான் ரணகளம் ஆகும் ! https://www.facebook.com/share/p/ma32NPCiZiRCgGh4/?mibextid=oFDknk
  5. கோராவில் இது போன்ற கேள்விகளுக்குப் பதில்கள் தேடினால் இதை விட "பைம்பலான" பதில்கள் கிடைக்கும். தந்தை செல்வநாயகம், தெலுங்கு அடி என்று கூடப் பதில் கிடைக்கும்😎! (இதைப் பற்றி யாழில் ஒரு சுவிங்கத் திரி ஓடியது, தேடிப் பாருங்கள்). யாரும் வந்து எதையும் எழுதி விட்டுப் போகும் கோராவை விட, கால்ட்வெல் என்ற ஒப்பீட்டு இலக்கணவியலாளர் எழுதியதையே நீங்கள் வாசித்து "திராவிடக் குடும்ப மொழிகள்" என்று அவர் குறிப்பிடுவதைப் புரிந்து கொள்ளலாம். திராவிட கொள்கைகளை அரசியல் அடையாளமாக தமிழ் கட்சிகள் எடுத்துக் கொண்டதும், அதனால் தமிழ் நாட்டு மக்களுக்கும், ஏனைய சில தென் மாநில மக்களுக்கும் நன்மைகள் விளைந்ததும் அந்த மானிலங்களின் பொருளாதார வளர்ச்சியிலும், ஒப்பீட்டு ரீதியில் ஏனைய மத, இனங்களோடு சகிப்புத் தன்மை என்பன நிலவுவதிலும் தெளிவாக வெளிப்படுகிறது (உதாரணமாக, குஜராத்தில் நிகழ்ந்தது போன்ற பாரிய முஸ்லிம் எதிர்ப்பு வன்முறைகள், இந்த மாநிலங்களில் நினைத்துப் பார்க்க இயலாதவை). 2009 இல் கருணாநிதியின் செயற்பாடுகளோடு தான் புலத் தமிழரிடையே இந்த திராவிட காய்ச்சல் தீவிரமானது. இந்தத் திராவிடக் காய்ச்சலும் அரசியல் நோக்கம் கொண்டது தான். நாம் தமிழர் கட்சி இந்த திராவிட வெறுப்பின் அறுவடையாளர். பின்னணியில், பி.ஜே.பி யும் கொஞ்சம் நன்மையடைய முயற்சிக்கிறது. இதைத் தவிர இந்த திராவிட தமிழர் பிரிவு என்பது ஒரு nothing burger.
  6. ஏழுமலையான் ஏற்கனவே பணக்கார கடவுள் என்று அழைக்கப்படுகிறார், என்னமோ நிறுவன கிளைகள் போன்று பல்வேறு இடங்களீல் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது என்று செய்தியிடுகிறார்கள், ஏற்கனவே கொழும்பில் பிரமாண்டமான பல கோவில்கள் அன்றுதொட்டு உண்டு ,அதையும்மீறி இன்னுமொன்று கட்டி தாருங்கள் என்று இந்தியாவிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். திருப்பதி நிர்வாகத்தினால் கட்டி கொடுக்கப்படும் இந்த கோவிலின் ஒரு பகுதி வருமானம் கண்டிப்பா இந்தியாவுக்கு போக வழி உண்டு. தமிழன் எது கேட்டாலும் செய்து தராத சிங்கள், கோவில் கேட்டால் மட்டும் உடனடி அனுமதி வழ்ங்கிறான், இதன் பின் உள்ள சூட்சுமம் இனிமே வாய் திறந்து வடக்கு கிழக்கில் விகாரைகள் அமைப்பது பற்றி எவரும் எதிர் கருத்து எழுப்பினால் அதற்கு சர்வதேசத்துக்கும் இந்தியாவும் பதில் சொல்ல கைவசம் பதில் தயார் செய்துவிட்டார்கள் என்றே கூறலாம். ஏழுமலையான் கோவில் கொழும்பில் எழுப்பப்படும் ஏக காலத்தில் மட்டு,யாழ்நகரத்தின் நடுவில் இலங்கையின் மிக பிரமாண்டமான விகாரைகள் எழுப்படலாம் எழுப்பப்பட்டால் எவரும் கேள்வி கேட்க முடியாது ஏனென்றால் அவனிடம் பதில் இருக்கிறது.
  7. தமது பிரதேசத்தின் உற்பத்தி வளர்சசி, வர்ததக வளர்சசி அதன்மூலமான வேலைவாய்ப்பு மக்களின் வாழ்ககைத்தர உயர்வு ஆகியவற்றை விட இவ்வாறான கோவில்களுக்கு வாரியிறைப்பதில் ஈழத்தமிழர்கள் (புலம்பெயர் தமிழர்கள் உட்பட) அதிக அக்கறையுடன் இருப்பதை அவதானித்த ஏழுமலையான் இந்த ஏமாளித்தனம் உடைய மக்களே தனது வாடிக்கையாளர்கள் என்பதை துல்லியமாக சந்தைஆய்வு (marketings analysis) செய்து இலங்கைக்கு எழுந்தருளி வருகிறார் போலும்.
  8. (குறுங்கதை) ஒரு பொய் ---------------- 'இது மைக்கேல். இன்றிலிருந்து இவர் உங்களுடன் வேலை செய்யப் போகின்றார்' என்று மைக்கேலை ஒரு நாள் வேலையில் எனக்கு அறிமுகப்படுத்தினர். ஆரம்ப நல விசாரிப்புகளின் பின், மைக்கேலை அவனுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த மேசைக்கு கூட்டிச் சென்றேன். மைக்கேல் தனது தோள் பையிலிருந்து ஒரு பெட்டியை வெளியே எடுத்தான். அதனுள்ளே மெல்லிய ஈரமுள்ள கடதாசிகள் ஒரு கட்டாக இருந்தன. மேசை, கதிரை, அவனுக்கு வழங்கப்பட்டிருக்கும் கணினி மற்றும் திரைகள் என்று எல்லாவற்றையும் அழுத்தமாக, சுத்தமாக துடைத்தான். அப்பொழுது தான் ஞாபகம் வந்தது, நாங்கள் இருவரும் இன்னும் கைகுலுக்கவில்லை என்று. நிரந்தரமாக பலர் வேலை செய்யும் அந்த நிறுவனத்தில் சில வேளைகளில் தற்காலிகமாகவும் சிலரை, வேலையின் அளவைப் பொறுத்து, வேலைக்கு எடுப்பார்கள். மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் என்று அவர்களுக்கு வேலை இருக்கும். அதை தாண்டியும் சிலர் இருப்பார்கள். இரண்டு பக்கங்களுக்கும் பிடித்துப் போக, நிரந்தரமாகவே அந்த நிறுவனத்தில் இணைபவர்களும் உண்டு. மைக்கேல் ஆறு மாத வேலைத் திட்டம் ஒன்றிற்காக வந்திருந்தான். வேலையில் அவனின் இடத்தையும், பொருட்களையும் சுத்தப்படுத்துவதற்கு அதிகமாகவே நேரம் எடுத்துக் கொண்டாலும், மைக்கேல் வேலையில் மிகவும் திறமையானவனாக இருந்தான். அவனின் குடும்பம் நீண்ட நாட்களின் முன்னர் சோவியத் ஒன்றியத்தில் இருந்து இங்கு குடி வந்துள்ளனர். அவன் பெரும்பாலான பாடசாலை மற்றும் பல்கலை கல்வியை இங்கே அமெரிக்காவிலேயே கற்றிருந்தான். பொதுவாக என் அனுபவத்தில் நான் கண்ட ரஷ்யர்களுக்கு இருக்கும் அபரிதமான கணித ஆற்றல் அவனிடமும் இருந்தது. ஆனாலும், தான் ஒரு ரஷ்யன் இல்லை என்றும், தான் ஒரு உக்ரேனியன் என்றும் என்னிடம் ஒரு தடவை தெளிவாகச் சொன்னான். அப்பொழுது ரஷ்யா - உக்ரேன் சண்டை ஆரம்பித்திருக்கவில்லை, ஆனால் சோவியத் ஒன்றியம் உடைந்து, இவை இரண்டும் தனித்தனி நாடுகளாக இருந்த காலம் அது. ஒழுங்காக தினமும் நேரத்திற்கு வந்து, மிகவும் நன்றாக வேலை செய்து கொண்டிருந்த அவன் திடீரென இரண்டு நாட்கள் வேலைக்கு வரவில்லை. எங்களுக்கு அறிவிக்கவும் இல்லை. மூன்றாம் நாள் அவனை தொலைபேசியில் கூப்பிட்டேன். உடனேயே தொலைபேசியை எடுத்தவன், தன்னுடைய வீடு எரிந்து விட்டதாக சொன்னான். இங்கு வீடு எதுவும் எரிந்ததாக உள்ளூர் செய்திகளில் நான் பார்க்கவில்லை, ஆதலால் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. எரிந்த எல்லா வீடுகளையும் செய்திகளில் காட்ட வேண்டும் என்றும் இல்லைத்தான். பின்னர் வீடு எரிந்திருப்பதை காட்டும் சில படங்களை எனக்கு அனுப்பினான். அதன் பின்னர் ஒரு வாரம் ஒழுங்காக வேலைக்கு வந்தான். அந்த ஒரு வாரமும் நன்றாக வேலை செய்தான். மீண்டும் இரண்டு நாட்கள் அவனைக் காணவில்லை. தற்காலிகமாக வேலைக்கு வருபவர்கள் வராத நாட்களில் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கத் தேவையில்லை என்றாலும், நாங்கள் செய்து முடிக்க வேண்டிய வேலை நிறையவே இருந்தது. மைக்கேலின் திறமையைப் பார்த்து, அவனை வைத்தே அதில் பெரும் பகுதி ஒன்றை முடித்து விடலாம் என்றும் திட்டமிட்டிருந்தேன். அவன் ஒரு தடவை எங்களின் அடுத்த தளத்தில் ஒரு ரஷ்யர் வேலை செய்வதாகச் சொன்னான். நான் எனக்கு அவரை தெரியாது, உனக்கு எப்படி தெரியும் என்று கேட்டேன். அந்த மனிதனின் கண்களை தான் பார்த்ததாகவும், அதில் ஒரு தீராத கோபம் தெரிந்ததாகவும் அவன் சொன்னான். அந்தக் கோபம் ரஷ்யர்களுக்கு மட்டுமே உரியது என்றான். ரஷ்யாவிற்கும், உக்ரேனுக்கும் என்ன வித்தியாசம் என்று அன்று எனக்கு தெரியாது, இரண்டும் ஒன்றே எனக்கு அன்று. நான் ஏன் நீ வேலைக்கு வரவில்லை என்று கேட்க, இவர்களின் தீராத கோபத்தை என் மீது இறக்கி விடுவார்களோ என்று ஒரு யோசனையாகவும் இருந்தது. இந்த தடவை அவனின் கார் களவு போய் விட்டதாக சொன்னான். சில நாட்கள் தொடர்ந்தும் வேலைக்கு வராமல் தன்னுடைய காரை தேடிக் கொண்டிருப்பதாகச் சொன்னான். அவனின் கார் ஒரு கறுப்பு நிற பிஎம்டபிள்யூ. ஒரு நாள் என்னை தொடர்பு கொண்டு, அவனின் காரை மெக்சிக்கோ எல்லைக்கு அருகே கண்டு பிடித்து விட்டதாகவும், தான் அடுத்த நாளிலிருந்து வேலைக்கு வந்து விடுவதாகவும் சொன்னான். அடுத்த நாளும் அவன் வேலைக்கு வரவில்லை. மீண்டும் அவனே தொடர்பு கொண்டான். இந்த தடவை தான் மருத்துவமனையில் இருப்பதாகச் சொன்னான். என்ன நடந்தது என்றேன். கால் உடைந்து விட்டது என்றான். எப்படி உடைந்தது என்று கேட்டதிற்கு, தான் தன்னுடைய காரை காலால் அடித்ததாகவும், அப்பொழுது வலது கால் பாதம் உடைந்து போய் விட்டதாகச் சொன்னான். இதைச் சொல்லி விட்டு, தனக்கு தன்னுடைய காரின் மேல் கோபம் வந்ததால், காரை உதைத்ததாகச் சொன்னான். இது தான் தீராத கோபம் போல. அவன் இப்படியே ஏதாவது சொல்லி வேலைக்கு வராமலேயே இருந்தான். ஒரு நாள் அவனை வேலையில் இருந்து நிற்பாட்டுவதாக அவனுக்கு செய்தி அனுப்பினோம். சில மாதங்களின் பின்னர், ஒருவர் என்னை தொடர்பு கொண்டார். அவர் தனது பெயர், நிறுவனத்தின் பெயர் மற்றும் தனது பதவி பற்றிச் சொல்லிய பின், 'உங்களுக்கு மைக்கேலை தெரியுமா?' 'ஆ...., நல்லாவே தெரியும்' என்றேன் நான். 'மைக்கேல் எங்களின் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்திருக்கின்றார்.' 'நல்ல விடயம்.' 'உங்களை தான் ஒரு பரிந்துரையாளராக போட்டிருக்கின்றார். நான் உங்களிடம் சில தகவல்களை கேட்கலாமா?' 'நிச்சயமாக, நீங்கள் தாராளமாக கேட்கலாம்.' மைக்கேலின் தொழில்நுட்ப அறிவு, திறமைகள் பற்றியே எல்லா கேள்விகளும் இருந்தன. அதில் மைக்கேலிடம் எந்தக் குறையும் இருக்கவில்லை. உண்மையில் நான் பார்த்தவர்களில் அவன் மிகவும் திறமையானவன். கடைசி கேள்வி: 'மைக்கேல் திரும்பவும் உங்கள் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்தால், நீங்கள் அவனை வேலைக்கு எடுப்பீர்களா?' 'நிச்சயமாக எடுப்பேன்' என்றேன் எந்தத் தயக்கமும் இல்லாமல். இன்றைய உலகில் பொய் கூட ஒரு தயக்கமும் இல்லாமல் வருகின்றது.
  9. ஆனைப்பந்தியில் ஒருமுறை கூட்டத்தில் சாயிபாபாவை துவைத்தெடுத்தார். முன்னால் நின்று பேசியவர் கையை மூடி திறந்தால் கைக்குள் திருநீறு. காருக்குள் இருக்கும் திருநீறை கைக்குள் எடுத்துள்ளேன். இது ஒரு வித்தை. இதையே சாயிபாபா பக்தி என்று உலகை ஏமாற்றுவதாக கூறினார். அவருடைய உறவினர் இங்கு உறுப்பினராக இருந்தார்.ஏனோ விலகிவிட்டார்.
  10. கோவூர் திருமணம் செய்யவில்லை.☺️ எனது காலத்தில் அவரைப்பற்றி நிறைய வாசித்திருக்கிறேன்.
  11. யாழில் வெகு விமர்சையாக இடம்பெற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய கும்பாபிஷேகப் பெருவிழா! யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான பஞ்ச ராஜகோபுர மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று காலை வெகுவிமர்சையாக இடம்பெற்றது. யாழ்ப்பாணம், தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகம் பங்குனி உத்தர நன்னாளில் நடைபெற்றது. இன்று காலை 9.25 மணி தொடக்கம் முற்பகல் 10.33 மணிவரையான சுபமுகூர்த்த வேளையில் துர்க்காதேவிக்கு பெரும் சாந்தி விழா நடைபெற்றது. காலை 6.00 மணி முதல் 7.10 மணிவரை இராஜகோபுர கும்பாபிஷேகமும் காலை 9.25 மணி முதல் 10.33 மணிவரை மூலஸ்தான கும்பாபிஷேகமும் நடைபெற்றது. கடந்த 20 ஆம் திகதி காலை கும்பாபிஷேகத்திற்கான கிரியைகள் ஆரம்பமானனதுடன் நேற்று மாலை 2.00 மணி வரை அடியார்களுக்கு எண்ணெய்க்காப்பு சாத்துவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1374782
  12. என் கடன் பணி செய்து கிடப்பதே'' - சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
  13. "கற்றோரைக் கற்றோரே காமுறுவர்" மைக்கேல் எப்படியும் பிழைத்துக் கொள்வார்........! எனது நண்பரொருவர் இருந்தார் ....... அவர் சிறிதும் யோசிக்காமல் செய்து கொண்டிருக்கும் வேலையை விடுவார்,சில நாட்களில் வேறொரு வேலை எடுத்து விடுவார்......முன்பு செய்த இடங்களில் கூட மீண்டும் வேலை குடுப்பார்கள் .......அவர் தனக்கென்று இருக்கும் விடுமுறைகளை பாவிப்பதைவிட வேலையை விட்டுட்டு வேறு வேலை எடுப்பதுதான் அதிகம்......அதனால் எனக்கு அவர் மேல் பொறாமையும் உண்டு...... நான் அதற்கு நேர்மாறு.....ஒரு இடத்தில் வேலை செய்தால் ஒன்றில் அந்த வேலைத்தளம் பூட்டுப்படவேண்டும் அல்லது 100 கி.மீ அப்பால் மாறிப் போகவேணும்......விடுமுறைகளையும் எடுப்பதில்லை அதுவும் அவர்கள் இந்த ரெண்டு மாதங்களுக்குள் விடுமுறையை கட்டாயம் எடுக்க வேண்டும் என்று வில்லங்கமாய் அனுப்பினால்தான் உண்டு.......! 😁
  14. இது தொடர்பில் தங்களின் இடுகையை வாசித்தேன். இணைப்பை அளித்தமைக்கு நன்றி, தோழர் ரசோதரன் ! எழுத்தாளர்கள் சாரு நிவேதிதா, ஜெயமோகன் போன்றோரது கருத்துகளுடன் பெரும்பாலும் எனக்கு ஒத்துப் போவதில்லை. ஒருவரது எழுத்து பற்றி கருத்துக் கொள்ள ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. அந்த வகையில் இவர்கள் Fashionable non-conformists (being different just for the sake of being different) என்பது எனது முதல் கணிப்பாய் அமைந்தது. அதனைப் பெரிய அளவில் நான் மாற்றவில்லையாயினும், சமீப காலங்களில் இவர்களிடம் வேறு ஒரு பரிமாணத்தையும் பார்க்கிறேன். ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனிய பாசிசத்தின் மொழியை வழிமொழியும் அவர்களின் நிலைப்பாடே அது. திரு. டி.எம்.கிருஷ்ணா சேரிக்கே சென்று கர்நாடக இசை சொல்லித் தருவதைக் கொச்சைப்படுத்தும் எழுத்தைப் படித்ததும், "சாரு நிவேதிதா தம் இயல்பு மாறாமல் எழுதுகிறார்" என்று சிரித்துக் கொள்கிறேன். (இப்போதெல்லாம் (எப்போதும் அப்படிதானோ ?) சமூக வலைத்தளங்களில் ஒருவருக்குப் பிடித்த எழுத்தாளாரையோ, நடிகரையோ, இசையமைப்பாளரையோ விமர்சனம் செய்தால், சம்பந்தப்பட்ட நபர் நம் மீது வன்மத்துடன் தனிநபர் தாக்குதலைத் தொடுப்பது வேடிக்கையான ஒன்று. அவர் கும்பிடுகிற சாமியை விமர்சனம் செய்யவே யாருக்கும் உரிமையுண்டு என்பது எனது உறுதியான எண்ணம். குறைந்த பட்சம் அறிவுலகிலாவது இந்திய தண்டனைச் சட்டம் 295 A ஐத் தூக்கிக் கிடாச மாட்டார்களா என ஏங்குகிறேன். நிற்க. இதனால் அறியப்படுவது என்னவென்றால் மேற்கூறிய எழுத்தாளர்களின் ரசிகர்கள் கொதித்தெழுந்தால், நான் சிரித்துக் கடந்து சென்று விடுவேன்.) மென்மேலும் எனக்கு எழுத வாய்ப்பளிக்கும் ரசோதரன் அவர்களுக்கு மீண்டும் நன்றி.
  15. பிரச்சனை, மொங்கோலியர்களுக்கு முதன்மையான மரக்கறி உணவு கோழி இறைச்சி. மொங்கோலியர்களுக்கு இறைச்சி (முக்கியமாக ஆட்டிறைச்சி) இல்லாமல் வாழ்கை இல்லை. வழமையாக மொங்கோலியாவில், சனத்தொகையை விட விலங்கு தொகை அதிகம், அதனால் தான் இத்தகைய உணவு முறை. அந்த காலத்துக்கு கொடுங்கோல் இல்லை என்றே கருதவேண்டி இருக்கிறது (சோழரின் (பின்) பொற்காலமும், மொங்கோல் பொற்காலமும் கிட்டத்தட்ட ஒன்று). அனால், அந்த நேரம் சிங்கிஸ்ககான் (உண்மையில் உச்சரிப்பு), புதிய யுத்த கலைகளையும் (mobile warfare) உருவாக்கி இருந்தார் . முக்கியமாக, குதிரை படையினால் பிடிக்கப்படும் mobile warfare. இது, மொங்கோலியப் படைகலாய் விட ஆயுத பலம் கூடிய படைகளை சின்னாபின்னப்படுத்தி கைப்பற்றுதலை இலகுவாக்கியது. எந்த அரசுக்கும் (அரச வம்சத்துக்கும்) மொங்கோல் அரசுக்கு கீழ் வருமாறு இடம்,கால அவகாசம் கொடுத்தே தாக்கப்பட்டதாக. அனால், தாக்குதல் கொடுமையாகவே இருந்தது; அப்படியே அந்த காலத்தில் சண்டை நடந்தது (இப்பொதும் பெரும்பாலும் அதுவே, அனால் தெரிவதில்லை)
  16. இவரின் கட்சி சார்பாக எவரும் போட்டியிடவில்லை. இவரின் கட்சிக்கு வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் எந்த தொகுதியும் ஒதுக்கப்படவில்லை. ஒரு ராஜ்யசபா இடம் பின்னர் வழங்கப்படும் என்பதே ஒப்பந்தம். நாட்டு நலனுக்காக தான் இந்த முடிவை எடுத்ததாக கமல் பின்னர் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அரசியலை விட்டு விட்டு, இன்னும் ஒரு நான்கு நல்ல படங்களையாவது நடித்து விட்டு போயிருக்கலாம். அவை நின்று இவர் பெயர் சொல்லியிருக்கும்.....
  17. இப்படி ஒன்றை தபால் நிலையத்தில் £ 5.50 ற்கு எடுத்துச் சென்று சிறீலங்காவில் வாகனம் ஓட்டுவது வழமை. உங்கள் வெளிநாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தில் அனுமதிக்கப்பட்ட வாகனங்களை மட்டுமே ஓட்ட முடியும். ஆனால் 2022 இல் இருந்து கொழும்பில் உள்ள AA இன் அலுவலகத்தில் காசு கட்டி மேலதிக சான்றிதழ் ஒன்றும் பெற வேண்டும். நான் நினைக்கின்றேன் இந்த அனுமதியை இப்போது விமானநிலையத்திலேயே வழங்கப் போகிறார்கள். எல்லாம் $$$$ ற்காக.. சிறீலங்காவில் காசைக் கொடுத்தால் மாற்றம் எப்போதும் வரும்…🤣🤣🤣🤣🤣
  18. அப்படித்தானே சொல்லவேண்டும். பிடிபட்டவர்களில் ஒருவரின் காதை ஏற்கனவே அறுத்து சித்திரவதையை ஆரம்பித்துவிட்டார்கள். எப்படியும் அவர்களை ஊடகம் முன்நிறுத்தி ISIS இல்லை, உக்கிரேனும் மேற்குநாடுகளும் சேர்ந்தே படுகொலைகளைத் திட்டமிட்டன என்று சொல்லவைப்பார்கள். ரஷ்ய மக்களையும், ரஷ்யாவின் உக்கிரேன் மீதான ஆக்கிரமிப்பை ஆதரவளிப்போரையும் தொடர்ந்தும் புட்டின் பெருந்தலைவர் என்று நம்பவைக்க இப்படியான spins செய்யத்தானே வேண்டும். யாழ் களத்திலும் இதைச் செய்யத்தானே வேணும் பிலிப்பு!
  19. ISIS அமைப்பு தனது தாக்குதலுக்கு ஆராதமான வீடியோவினை வெளியிட்டுள்ளது. தாக்குதல் நடந்தவுடன் புட்டின் அறிக்கை விடவில்லை அடுத்த நாள் தான் அறிக்கை விட்டார். ISIS உடனடியாகவே இத் தாக்குதலுக்கு உரிமை கோரியபோதும் அவரது அறிக்கையில் ISIS என்ற வார்த்தையே இடம்பெறவில்லை. வேறு ஆதாரங்கள் வெளியாகாததை உறுதிப்படுத்தியபின் புட்டின் தனது புழுகு மூட்டையை அவிள்த்துள்ளார். உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதம் கண்டிக்கப்பட வேண்டியது.
  20. ஆதி அறிவு ------------------- இப்பொழுது வரப்போகும் புகைவண்டி மூன்றாவது தடத்தில் வந்து கொண்டிருக்கின்றது. முதலாவது மேடையில் நிற்பவர்கள் மேம்பாலத்தில் ஏறி அடுத்த பக்கம் போகவும் என்ற அறிவிப்பு தலைக்கு மேலேயிருந்து வந்து கொண்டிருந்தது. அங்கு முதலாவது தடம், இரண்டாவது தடம், மூன்றாவது தடம், முழு நிலையத்திற்கும் சேர்த்து நான் ஒருவனே முதலாவது மேடையில் நின்று கொண்டிருந்தேன். மனிதர்களின் குறுக்கீடுகள் எதுவும் இல்லாமல், இது செயற்கை நுண்ணறிவு கொண்ட ஒரு இயந்திரம் செய்யும் அறிவிப்பாகக் கூட இருக்கலாம். சுற்றிவர மெல்லிய இருட்டு கவிழ்ந்து கொண்டிருந்தது. இப்பொழுது திடீரென ஒருவர் முன்னால் தோன்றி, எனக்கு ஏதாவது சில்லறைகள் கொடு என்று கேட்கக்கூடும். கேட்பதைக் கொடுத்தால், தோன்றியது போலவே மறைந்தும் விடுவார்கள். ஆனால் ஒரு டாலர் கூட கையிலோ, பையிலோ இல்லை. கடன் மட்டைகள், காசு மட்டைகள் செல்லாத இடம் இது. வந்து கேட்பவர் என் வங்குரோத்து நிலை கண்டு கோபப்படவும் கூடும். இந்த நிலையில் 'நோ இங்கிலீஸ்' என்று சொல்வது தான் உசிதம். முழுதும் துறந்து தெருக்களில் வாழும் இந்த மனிதர்களிடம் மொழிப்பற்று, தீவிரம் இருக்க சாத்தியமில்லை. இங்கு எவரும் எவரையும் ஆங்கிலம் தெரியாது என்பதற்காக அடித்ததாகவோ அல்லது சுட்டதாகவோ நான் இதுவரை கேள்விப்பட்டதும் இல்லை. மூன்றாம் மேடைக்குப் போக முன், முதலாம் மேடையின் பின்புறம் பிரயாணச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என்று இன்னும் ஒரு அறிவிப்பு மேலிருந்து என் மீது இறங்கியது. தனி ஒரு மனிதனுக்காக அரசு இயந்திரம் கடுமையாக வேலை செய்து கொண்டிருந்தது. அறிவிக்கும் குரல் இருமி, கம்மி, புகைவண்டி நிற்கப் போகும் அடுத்த அடுத்த தரிப்பிடங்களைச் சொன்னது. உலகில் செயற்கை நுண்ணறிவு இன்னமும் இருமத் தொடங்கவில்லை, ஆதலால் இந்த இடத்தில் இன்னும் ஒரு சாதாரண மனிதனும் என்னுடன் இருக்கின்றார் என்ற அந்த நினைப்பே ஆறுதலாக இருந்தது. இன்னும் ஒருவர் அவசரமாக வந்தார். வீடு வேண்டாம் என்று வீதியில் வாழ்பவர்களை அடையாளம் காண்பது மிகவும் இலகு. இவர்கள் ஒரு வீட்டுச் சாமான்களை தங்களுடன் எப்போதும் சுமந்து கொண்டு திரிவார்கள். சுமக்கும் தள்ளு வண்டி கூட அருகில் இருக்கும் பெரிய கடைகளில் ஒன்றினுடையதாக இருக்கும். வந்தவர் கடகடவென்று என்னைத் தாண்டி, உயர்த்தியில் ஏறி, அவசர அவசரமாக உயர்த்தியின் கதவை மூடி, மேம்பாலத்தில் ஓடி நடந்து, மறுபக்க உயர்த்தியால் இறங்கி, மூன்றாவது மேடையில் உயர்த்தியின் பின்பக்கம் ஒளித்து நின்றார். புகைப்பதைத் தவிர, செயல்கள் என்று இவர்கள் வேறு எதுவும் செய்வதில்லை. பல புகைத்தல்கள் இங்கே சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டும் உள்ளது. ஒளித்து நின்று புகைக்க வேண்டிய கட்டாயமும் இவர்களுக்கு இல்லை. இலங்கையில் 28 கோடி ரூபாய்கள் பெறுமதியான ஆணிகளை ஒரு பாலத்தில் இருந்து சிலர் திருடிச் சென்றுள்ளனர் என்ற சமீபத்திய செய்தி நினைவில் மின்னி மறைந்தது. பார்த்துக் கொண்டே இருக்க, நீளம் பாய்தலுக்கு ஓடி வருபவர் போன்று ஒரு பெண்மணி ஓடி வந்தார். நின்றார். 'ஜேக்கப், உன்னை எனக்கு அக்கு வேறு ஆணி வேறாகத் தெரியும். (தடை செய்யப்பட்ட வார்த்தை). (தடை செய்யப்பட்ட வார்த்தை). நீ அந்த உயர்த்தியின் பின்னால் ஒளிந்து நிற்கின்றாய். (இரண்டு தடை செய்யப்பட்ட வசனங்கள்). ஜேக்கப் வெளியில் வரவேயில்லை. புகைவண்டி வந்து கொண்டிருந்தது. ஜேக்கப் அங்கே தான் ஒளித்து இருக்கின்றார் என்று அந்தப் பெண்ணுக்கு எப்படித் தெரியும் என்று எனக்கு விளங்கவில்லை. வாழ்க்கை வீடோ வீதியோ, ஜேக்கப்பிற்கும் இது என்றும் விளங்கப் போவதில்லை.
  21. இந்தின் இளம்பிறை -------------------------------- ஒரு உறவினர்களின் திருமண விழா மெக்ஸிக்கோவில் உள்ள ஒரு இடத்தில் நடந்தது. இப்பொழுது சில பிள்ளைகள் வேறு தேசம் ஒன்று போய், அங்கு விழா வைப்பதையே விரும்புகின்றனர். திருமண விழா முடிந்து அடுத்த நாளும் நான் அந்த விழா நடந்த இடத்திற்கு போயிருந்தேன். அன்று அந்த இடம் மிகவும் பரிதாபமாக இருந்தது. ஆதலால், நான் அந்த இடத்தை இரண்டு படங்கள் எடுத்தேன், இன்று நானாவது எடுப்போமே என்று. நேற்று ஒரு சோடி செருப்பு அங்கே காணாமல் போயுள்ளது, அதைக் கண்டால் எடுத்து வரவும் என்ற தகவலையும் கையோடு வைத்திருந்தேன். கடலோர மணல் மேல் போட்டிருந்த மேடை இன்னமும் அங்கேயே இருந்தது. ஆனால் கடற்கரை வெள்ளை மணல் திட்டு திட்டாக மேடையெங்கும் ஏறி ஒழுங்கில்லாமல் பரவிக்கிடந்தது. மேடை மேலே கட்டியிருந்த முக்கால்வாசி அலங்காரத் துணிகள் விழுந்து அங்கங்கே குவியலாகக் கிடந்தன. இன்னும் விழாமல் இருந்தவை இனிமேல் விழுவதற்காக கடல் காற்றில் பறந்து கொண்டிருந்தன. ஒரு கிரேக்கச் சிலையில் இருந்து அதன் கடைசி உடுபுடவையும் காற்றில் பறக்கத் தயாராக இருப்பது போல. நான் படமெடுக்கும் போது இரண்டு உல்லாசப் பயணிகள் அந்த மேடையின் ஓரத்தில் அமர்ந்து அருந்திக் கொண்டிருந்தனர். இதற்கு முந்தைய நாள், திருமண நாளன்று, மேடையில் இவர்கள் இருவரும் இருந்து அருந்திக் கொண்டிருக்கும் இடத்திற்கு கொஞ்சம் உள்ளே புரோகிதர் அமர்ந்திருந்தார். அவருக்கு முன் சிறிய நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. இந்த இரு பயணிகளின் இடத்தில் நான் அமர்ந்திருந்தேன். புரோகிதர் குஜராத்தை சேர்ந்தவர் என்றும், அவர் இப்பொழுது மெக்ஸிக்கோவில் வசிப்பதாகவும் அங்கே சொல்லியிருந்தனர். புரோகிதர் ஒரு கையில் தேங்காயையும், இன்னொரு கையில் கல் ஒன்றையும் கொடுத்து, அந்தத் தேங்காயை சரியாக அவர் சைகை செய்யும் நேரத்தில் என்னை உடைக்கச் சொன்னார். தேங்காயை சரி வட்டப் பாதிகளாக உடைக்க வேண்டும் என்ற அழுத்தம் இலங்கை மீதான சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தம் போன்ற தவிர்க்க முடியாத ஒன்றாக இரண்டு மூன்று நாட்களாக என்னை தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. புரோகிதர் கொடுத்த கல்லுக்கு நிகரான கல்லை நான் ஊரில் மயிலியதனைப் பக்கம் இருக்கும் மண்டபக்கிடங்கு பகுதியில் சிறு வயதில் பார்த்திருக்கின்றேன். எல்லாப் பக்கமும் கூரான, எங்கே பிடிப்பது எங்கே அடிப்பது என்பதைக் கண்டுபிடிக்க முடியாத ஒரு மர்மக்கல் அது. மயிலியதனைக்கும், மெக்ஸிக்கோவிற்கும் 'ம' வரிசையில் ஆரம்பிக்கின்றன என்ற ஒற்றுமையுடன், கல்லிலும் இன்னொரு ஒற்றுமையும் இருந்தது. புழுக்கொடியலுக்கு தோதான சில்லுச் சில்லாக தேங்காய் சிதறப் போவது திண்ணம் என்று தெரிந்தது. முக்கிய பார்வையாளரான என் துணைவி மற்றும் இதர பார்வையாளர்களுக்கு மண்டபக்கிடங்கு கல் தான் என் கையில் இருக்கும் ஆயுதம் என்று தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. நடப்பவை நடந்த பின் முழுப்பழியையும் சுமக்க வேண்டியது தான். இயேசு பிறப்பதற்கு முன், அவர் பிறந்த தேசத்தில், ஆடுகள் மீது மனிதர்களின் பாவங்களும் பழிகளும் ஏற்றப்பட்டு, அவை பாலைவனத்திற்குள் துரத்தி விடப்பட்டன என்று சொல்கின்றனர். பின்னர் எல்லோருடைய பாவங்களையும் ஏற்க பாலன் இறங்கி மனிதனாக வந்தார். இன்று சனத்தொகை எக்கச்சக்கமாக எகிறி ஏறி விட்டதால், தேவபாலன் தனியாக எல்லாவற்றையும் சுமக்க முடியாமல் திக்குமுக்காடிப் போய் நிற்கின்றார். இந்த தேங்காய் உடைப்பதில் ஏதும் பிழை, பாவம் வந்தால் நானே தான் சுமக்கவேண்டும் ஓங்கி அடிக்கின்ற அந்தக் கணத்தில் தேங்காய் முழுதாக கையை விட்டுப் பறந்தது. அன்று புரோகிதரின் இடுப்பு எலும்பு தப்பியது ஒன்பதாவது அதிசயம். மயிரிழையில் தப்பினார். புரோகிதர் என்ன நடந்தது என்று கூட்டிப் பெருக்கி உணர்வதற்குள், நான் தேங்காயை பாய்ந்தெடுத்து சில்லுச் சில்லாக குத்தி தட்டில் போட்டுவிட்டேன். மிக அருமையாக தேங்காயை உடைத்ததற்காக எல்லோரையும் கை தட்டுமாறு புரோகிதர் சொன்னார். மறுபேச்சில்லாமல் கூட்டமும் தட்டியது, ஐயர் சொல்லிவிட்டாரே. எல்லாம் முடிந்த பின், தனியாக இருந்த புரோகிதரிடம் மெதுவாகக் கேட்டேன். 'குஜராத்தில் கல்யாண வீட்டில் தேங்காயை கல்லால் தான் குத்துவீர்களா?' 'குஜராத்தா, அது எங்கேயிருக்கின்றது?' 'அப்ப நீங்கள் இந்தியர் இல்லையா?' 'மெக்ஸிகன்.' இங்கு ஏற்கனவே பல அர்த்தங்கள் ஏற்றப்பட்டு விட்ட ஒரு கனமான சொல் இது. அந்தச் சொல்லுக்கு இருக்கும் அர்த்தங்களை மீறி புதிதாக எதையும் சிந்திக்க முடியவில்லை. எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சமூகநீதிச் சட்டம் தமிழ்நாட்டில் இருப்பது தெரியும். ஆனால் பழைய அர்ச்சகர்கள் கோயில் நடையைப் பூட்டுவதும், நீதிமன்றம் மீண்டும் திறப்பதும் என்று, அங்கே அதுவே இன்னும் ஒரு இழுபறியில் தான் போய்க் கொண்டிருக்கின்றது. இது இன்னுமொரு பரிமாணம். 'அப்ப இந்த மந்திரங்கள், சுவாஹா, ராதா, கிருஷ்ணா, பிரபஞ்சம்,....' 'நான் சில காலம் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கூட்டத்தில் இருந்தேன்.' 'அ.....' 'இந்த மாதிரி சிலவற்றை அங்கே கேட்டிருக்கின்றேன். இப்ப எல்லாம் ஃபோனிலும் இருக்குது தானே. அப்படியே பார்த்து வாசிக்க வேண்டியது தான்.' 'ம்.....' அப்படியே தொலைந்து போனதாகச் சொன்ன சோடிச் செருப்பை தேடத் தொடங்கினேன்.
  22. சினிமாவுடன் வளர்ந்தோம். ஊர் தியேட்டர்களில் எந்தப் படம் வந்தாலும் பார்த்தோம். சில படங்களை, முக்கியமாக பல எம்ஜிஆர் படங்கள், பல தடவைகள் பார்த்தும் இருக்கின்றோம். இதில் சிலருக்கு தியேட்டர் மாடியில் உள்ள புரொஜெக்டர் அறைக்கு போகும் வாய்ப்பு கிடைத்தும் இருக்கும். ******* கார்பன் வெளிச்சம் ------------------------------- வெளிப்பாட்டு முடிந்து உள்பாட்டு ஓடி இரண்டு மணிகள் அடித்த பின் மின் வெளிச்சம் கலைந்து கும்மிருட்டு சூழ பளிச்சென்று வரும் கண்ணைக் கூசும் கார்பன் வெளிச்சம் திரும்பி மாடியைப் பார்த்தால் தூசி எழும்பி மிதக்கும் குவிந்திருந்து விரிந்து வெள்ளித்திரையில் கொட்டி கொட்டிக் கொண்டிருக்கும் கார்பன் வெளிச்சம் 'அபூர்வராகங்கள்' அந்த வயதிலும் அன்றே புரிந்தது ஆனால் விடையில்லை இன்றும் எல்லா காதலும் ஒன்றா நல்ல காதல் நல்லாவே இல்லை காதல் இதை சொல்லுபவர் யார் இரண்டு மனங்களையும் அறிந்த இன்னொரு மனம் இங்கு உண்டா இன்னொரு நாள் 'யாருக்காக அழுதான்' நாகேஷ் யாருக்காகவோ அழ பார்த்த நாங்கள் அவருக்காக அழுதோம் அன்றிலிருந்து இன்றுவரை உண்மை வேறொன்று எப்போதும் அது ஒளித்தே இருக்குது என்ற உண்மை விளங்க திருடனையும் திருடரென்று கள்வனையும் கள்வரென்று வாய் சொல்லுகின்றது இரண்டு புரொஜக்டர்கள் ஒரு மணியில் எரிந்து முடியும் கார்பன் குச்சி முடிய முன் அடுத்த புரொஜக்டரை அண்ணன் தயார் ஆக்கியிருப்பான் என்னைத் தொட விடான் எப்பவுமே சொல்வான் எனக்கு எதுவும் தெரியாது என்று புரொஜக்டர் அறை கொதிக்கும் நெருப்பாய் அப்பப்ப ரீல்கள் அறும் அவர்களும் கொதிப்பர் அரை செக்கனில் வெட்டி ஒட்டுவார்கள் பொசுங்கின ரீல்களை விழுந்த ரீல் துண்டுகள் என்னுடன் வீட்டிற்கு வரும் பெட்டியில் ஒட்டி வீட்டில் நான் படம் வெளியிட்டேன் அங்கேயே வேலை முன்னுக்கு போய் பின்னுக்கு வந்தேன் கார்பன் வெளிச்சம் ஒரு சதுர ஓட்டையால் என்னுடைய கண் மறு சதுர ஓட்டையால் திரையில் விழும் குருவாக கமலும் காளியாக ரஜனியும் அரச கட்டளையும் வசந்த மாளிகையும் துணிவென்று ஜெய்சங்கர் பணிவென்று சிவகுமார் அழகாக ஶ்ரீதேவி ஆர்ப்பாட்டமாக ஶ்ரீப்பிரியா பாவப்பட்டது சுஜாதா என்று என்னுடைய உலகத்தில் உதித்தவர்கள் எல்லோரும் கார்பன் வெளிச்சத்தில் உதித்தார்கள் அன்று திரை மாற்ற கணக்கெடுத்தனர் ஒரு நாள் பைதகரஸ் தேற்றம் அண்ணனும் அவர்களும் அறியாதது அறிந்து கணக்கை சொன்னேன் இன்னொரு கணக்கு சொன்னேன் அதையும் இன்னும் ஒன்று இன்னும் ஒன்று எல்லாம் சரி அதுவே எனக்கு நானே வைச்ச வெடிகுண்டு திரைமாற்ற வந்தவர் அடிக்காத குறை அண்ணனுக்கும் நண்பருக்கும் நல்லா படிப்பானடா படிக்க வையுங்கடா நாசமாய்ப் போனவங்களே திட்டித் தீர்த்தார் படித்தால் படி விட்டால் விடு ஆனால் தியேட்டர் பக்கம் வந்தாய்..... செத்தாய் என்றான் அண்ணன் செய்யக்கூடியவன் அவன் வெளிச்சத்தின் வெம்மை சுடவேயில்லை பின்னர் பின்னர் கார்பனும் நின்று போனது விஞ்ஞானம் வளர்ந்ததால் இந்நாளில் கூட கீற்றாக சூரியன் இலையால் விழ கார்பன் வெளிச்சமே கண்ணில் தெரிகின்றது.
  23. ஓம். சின்ன வயதில் இதனை புனில் / புணில் என்றே அழைத்த ஞாபகம். இவை நடக்கும் போது, தத்தித் தத்தித் தான் நடக்கும். சிறு வயதில் இருக்கும் போது அம்மா இதற்கு ஒரு கதை சொல்லுவா. இராமர் பாலம் கட்டும் போது, இந்தக் குருவி தான் அதிகம் வேலை செய்ததாம். , அணில் ஒரு வேலையையும் செய்யாமல் சும்மா இருந்ததாம். இராமர் எப்படி வேலை நடக்குது என்று பார்க்க வரும் போது, அணில் தானே தான் எல்லா வேலையும் செய்தது என்றும், இந்தக் குருவி வேலை ஒன்றும் செய்யாமல் மண்ணுக்குள் புரண்டு விளையாடினது என்றும் பொய் சொல்லிச்சாம். எனவே, இராமர் அணிலின் முதுகில் "நீ நல்ல பிள்ளை" என்று சொல்லி, தன் மூன்று விரல்களால் தடவிக் கொடுத்தாராம். அதனால் தான் அணிலின் முதுகில் மூன்று கோடுகளாம். இந்தக் குருவியைப் பார்த்து, "நீ வேலை ஒன்றும் செய்யாததால் ஒழுங்காக நடக்க முடியாமல் தத்தித் தத்தி தான் நடப்பாய்" என்று சாபம் கொடுத்தாராம். அதனால் தான் தத்தி தத்தி நடக்குதாம். 😀
  24. நீங்கள் புலினி என்னும் பறவையை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்......! கிராமங்களில் இவை நிறைய இருக்கும்........யாழ் நகரத்துக்குள் நான் காணவில்லை......!
  25. டி.எம்.கிருஷ்ணா அவர்கள் பற்றி பெருமாள்முருகன் இன்று 'அருஞ்சொல்' இதழில் எழுதியிருக்கும் கட்டுரை இது. ******************************************************* சங்கீத கலாநிதி டி.எம்.கிருஷ்ணா பெருமாள்முருகன் 25 Mar 2024 மியூசிக் அகாடமி 1929ஆம் ஆண்டு முதல் கர்நாடக சங்கீதக் கலைஞர்களுக்கு வழங்கிவரும், மிகுந்த மதிப்பிற்குரியதாகக் கருதப்படும் ‘சங்கீத கலாநிதி’ விருதை இவ்வாண்டு (2024) டி.எம்.கிருஷ்ணா பெறுகிறார். மிகச் சிறுவயதிலேயே மேடைக் கச்சேரிகளில் பாடத் தொடங்கிய அவர் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாகப் பாடிவருகிறார். ‘நெடுங்காலமாக மிகத் திறமையான இசைக் கலைஞராக விளங்கும் அவர் இந்த விருதுக்குத் தகுதியானவர்’ என்று விருது அறிக்கை கூறுகிறது. பல்லாண்டுகளாகப் பாடிவரும் அவர் ஒன்றையே தேய்ந்துபோகும் அளவு திரும்பச் செய்யும் இயல்புடையவர் அல்ல. அகத்திலும் புறத்திலும் பல பரிசோதனைகளை முன்னெடுக்கும் தேடல் நிரம்பியவர். எல்லாத் தரப்பினருடனும் இசைக் கலைஞராகத் தம் உரையாடலை நிகழ்த்துவதும் அனைவரின் குரலுக்கும் உரிய மதிப்பு கொடுத்துக் கேட்பதும் அவரது பரிசோதனைகளுக்குப் பெரிதும் உதவுகின்றன. தமிழ்நாட்டுக்கு அப்பால்… தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, தமிழர்கள் வசிக்கும் பகுதியில் என்றில்லாமல் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அவரது இசைக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கேரளத்தின் எந்தக் கலை விழாவும் டி.எம்.கிருஷ்ணா இல்லாமல் நிறைவுறாது என்று சொல்லும் வகையில் அவருக்கு ரசிகர்கள் உண்டு. கேரள மக்களின் பெருவிருப்பத்தை ஏற்று நாராயண குருவின் பாடல்களுக்கு மெட்டமைத்துக் கச்சேரிகளில் பாடுகிறார். நாராயண குருவின் பாடல்களை மட்டுமே பாடும் தனிக் கச்சேரிகளையும் கேரளத்தில் நடத்துகின்றனர். கடம் இசைக் கலைஞரான விக்கு விநாயக்ராம் குழுவுடன் இணைந்து அவர் நடத்தும் இசை நிகழ்ச்சிகள் தனித்துவம் வாய்ந்தவை. ‘ஜோகப்பாஸ்’ என்னும் திருநர் இசைக்குழுவுடன் சேர்ந்து அவர் பாடியுள்ள கச்சேரிகள் பல. காஞ்சிபுரத்தில் இயங்கும் ‘கட்டைக் கூத்துச் சங்கம்’ குழுவுடன் அவர் நிகழ்த்தியுள்ள இசை நிகழ்ச்சிகளும் முக்கியமானவை. நாதஸ்வர இசைக் கலைஞர்களான செய்க் மகபூப் சுபானி – திருமதி கலீசபி மகபூப் குழுவினருடன் இணைந்தும் அவர் பல நிகழ்வுகளை நடத்தியுள்ளார். இத்தகைய இசை நிகழ்வுகளில் தம்மை முடிந்தவரை பின்னிறுத்திக்கொண்டு சககலைஞர்களான அவர்களது திறன் வெளிப்பாட்டுக்கு மிகுதியான வாய்ப்புகளை வழங்குவதைக் காண்போர் உணர முடியும். கர்நாடக இசைக் கச்சேரிகளின் மரபை உடைத்து வெவ்வேறு துறை சார்ந்த கலைஞர்களுடன் இணைந்து அவர் மேற்கொண்ட இத்தகைய நிகழ்ச்சிகள் இசை ரசிகர்களுக்கு இதுவரை கிட்டாத புதிய அனுபவங்களைக் கொடுத்தன. கர்நாடக சங்கீதத்திற்கான இடம் சபாக்களும் கோயில் திருவிழாக்களும்தான் என்றிருந்த நிலையை இவை மாற்றின. இலக்கியத் திருவிழாக்களிலும் பலவகைச் சமூக நிகழ்வுகளிலும் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கூடி இத்தகைய நிகழ்ச்சிகளை ரசிப்பதைப் பார்க்க முடிந்தது. மிகச் சிலருக்கு மட்டுமே புரிபடும் ரகசியம் கர்நாடக சங்கீதம் என்று பொதுவெளியில் இருக்கும் எண்ணத்தை இவை மாற்றின. புதுமையான முன்னெடுப்புகள் டி.எம்.கிருஷ்ணா ஓர் இசைக் கலைஞர் மட்டுமல்ல; களச் செயல்பாட்டாளரும் ஆவார். தம் களச் செயல்பாட்டையும் இசை சார்ந்தே புரிபவர் அவர். எண்ணூர் துறைமுகத்தில் எண்ணெய்க் கழிவுகள் ஏற்படுத்தும் பாதிப்பை மாற்றச் செயல்படும் சுற்றுச்சூழல் அமைப்புகளோடு இணைந்த அவர் தம் பங்களிப்பாகப் ‘பொறம்போக்குப் பாடல்’ பாடி அப்பிரச்சினையைக் கவனத்திற்குக் கொண்டுவந்தார். புறம்போக்கு நிலங்கள் எவர் ஒருவருக்கும் சொந்தமல்ல, அனைவருக்குமான பொதுவெளிகள் அவை என்பதை அப்பாடல் விரிவாக எடுத்துச் சென்றது. ஒருவரைத் திட்டுவதற்குப் ‘பொறம்போக்கு’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவது உண்டு. வசைச்சொல்லாக மாறிவிட்ட அதைத் தம் இசையால் மீட்டெடுத்தார் என்றே சொல்லலாம். அப்பாடலை வெளியிட்ட சுற்றுச்சூழல் குழுவினர் ‘டி.எம்.கிருஷ்ணா ஒரு பொறம்போக்கு’ என்று அழைத்து மகிழ்ந்தனர். அவர் அனைவருக்கும் சொந்தமானவர் என்னும் பொருளில் அந்த அழைப்பு அமைந்தது. துப்புரவுத் தொழிலாளர் நலனுக்காகச் செயல்பட்டுவரும் பெஜவாடா வில்சனுடன் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது ‘கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள்’ பற்றி ஒரு பாடல் உருவாக்கலாம் என்னும் எண்ணம் டி.எம்.கிருஷ்ணாவுக்குத் தோன்றியது. அதை என்னிடம் பகிர்ந்துகொண்டார். ‘மலம் அள்ளலாமா – கைகள் மலம் அள்ளலாமா’ என்னும் பல்லவியைக் கொண்ட கீர்த்தனை ஒன்றை எழுதிக் கொடுத்தேன். அதைப் பல கச்சேரிகளில் அவர் பாடினார். தமிழ்நாட்டில் பெரியார் சிலையை அவமதிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்தபோது ‘எந்தச் சிலையாக இருந்தாலும் அது ஒரு கலைஞனின் கைவண்ணம். அதைச் சிதைக்கும் உரிமை யாருக்கும் கிடையாது’ என்று சொன்னார். அதைப் பொருளாகக் கொண்டு நான் எழுதிய ‘சிலைகள் எல்லாம் கலையின் வடிவம்’ என்னும் பாடலையும் பாடினார். அதைத் தொடர்ந்து பெரியாரைப் பற்றி நான் எழுதிய ‘சிந்திக்கச் சொன்னவர் பெரியார்’ என்னும் பாடலையும் பாடி கடந்த 2023 மார்ச் மாதம் வைக்கம் போராட்ட நூற்றாண்டுத் தொடக்கத்தின்போது வெளியிட்டார். அது பல்லாயிரம் பேரிடம் சென்று சேர்ந்தது. கிறித்தவ, இஸ்லாம் மதப் பக்திப் பாடல்களையும் கச்சேரிகளில் தொடர்ந்து பாடிவருகிறார். வாழ்த்துகள்... சென்னையில் உள்ள ஊரூர் ஆல்காட் குப்பத்தில் அவர் தொடர்ந்து பல்வேறு கலை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார். இவ்வாண்டு பிப்ரவரி இறுதியில் அங்கு நடைபெற்ற அவரது இசைக் கச்சேரியில் ஆறு பாடல்களைப் பாடினார். அவ்வூரைச் சேர்ந்த மீனவர் குடும்பங்கள் பெருந்திரளாக வந்திருந்து அக்கச்சேரியைக் பெருங்கொண்டாட்டம் ஆக்கினர். பாபாசாகேப் அம்பேத்கர் பற்றிய காவடிச் சிந்தை அவர் பாடி முடித்தபோது மக்களின் சீழ்க்கைச் சத்தம் அடங்க வெகுநேரமாயிற்று. கர்நாடக சங்கீதக் கச்சேரியில் இப்படிச் சீழ்க்கைச் சத்தம் ஒலிப்பதை டி.எம்.கிருஷ்ணாவின் நிகழ்ச்சிகளில் மட்டுமே காண முடியும். சமீபத்தில் ‘சங்க இலக்கியக் கீர்த்தனைகள்’ என்னும் இசை நிகழ்ச்சியை அரங்கேற்றியுள்ளார். சங்க இலக்கியத்தை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசேர்க்கும் தம்மாலான முயற்சியாக இதை அவர் காண்கிறார். இசை போன்ற கலைத் துறையில் ஈடுபட்டுச் சாதனை புரியும் கலைஞர்கள் பெரும்பாலும் அத்துறை சார்ந்த அனுபவ அறிவை மட்டுமே கொண்டிருப்பார்கள். அதன் நுட்பங்கள் பற்றி அவர்களால் பேசவோ எழுதவோ இயலாது. டி.எம்.கிருஷ்ணா பேசவும் எழுதவும் செய்கிறார். ஆங்கிலத்தில் அவர் எழுதிய நூல்கள் மிகுந்த கவனம் பெற்றவை. ’கர்னாடக சங்கீதத்தின் கதை’ என்னும் நூலை எழுதியுள்ளார். எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களைப் பற்றி மிகுந்த மரியாதையுடன் விமர்சனப்பூர்வமாக அவர் எழுதிய கட்டுரை முக்கியமானது. அது தமிழில் சிறுநூலாக வெளியாகியுள்ளது. மிருதங்கம் வாசிப்போர் பற்றி மட்டுமே இசை ரசிகர் அறிந்திருப்பர். மிருதங்கம் செய்வோர் பற்றி விரிவாக ஆராய்ந்து ‘செபாஸ்டியன் குடும்பக் கலை’ என்னும் விரிவான நூலை எழுதினார். அது இசையுலகில் இருக்கும் சாதிரீதியான பாகுபாட்டை விரிவாகப் பேசி நல்லதொரு உரையாடலை உருவாக்கியது. இவ்வாறு இசைக் கலைஞர் என்னும் அடையாளத்தை ஒருபோதும் மறவாமல் சமூகத்தின் பல தளங்களில் தம் எதிர்வினைகளை நிகழ்த்திவரும் டி.எம்.கிருஷ்ணாவுக்குச் ‘சங்கீத கலாநிதி’ பட்டம் வழங்கி மியூசிக் அகாடமி பெருமை பெற்றுள்ளது. விருது அறிவிப்பில் ‘சமூக மாற்றத்திற்கு இசையை டி.எம்.கிருஷ்ணா பயன்படுத்துகிறார்’ என்று குறிப்பிட்டுள்ளது வெறும் புகழ்ச்சியல்ல; பேருண்மை. டி.எம்.கிருஷ்ணாவுக்கு வாழ்த்துகள். https://www.arunchol.com/perumal-murugan-article-on-tm-krishna
  26. 🤣🤣.....நல்ல சிரிப்பு, அல்வாயன். அந்த நாட்களில் டாக்டர் கோவூர் என்று ஒருவர் இருந்தவர். நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். பேய் என்பதெல்லாம் சுத்தப் பொய் என்று, பேய்கள் நடமாடும் இடங்கள் என்று சொல்லப்பட்ட இடங்களிற்கு எல்லாம் போய், அவை பொய்கள் என்று நிரூபித்தவர். நீங்கள் தப்பி விட்டீர்கள்.....😀 அவருடைய கதைகள்/சம்பவங்கள் வீரகேசரிப் பிரசுரமாக ஒரு நாவலாகவும் வந்தது என்று ஞாபகம்.
  27. உண்மையாகவா, நான் நினைத்திருந்தேன் இந்தக் கொட்டைப்பாக்கு குருவிகள், அப்படித்தான் இவைகளை ஊரில் சொல்லுவோம், எங்களின் இன்னோரன்ன கொடுமைகளையும் தாங்கி எப்படியாவது வாழ்ந்து கொண்டேயிருக்கும் என்று. சில வருடங்களின் முன் எங்கோயோ வாசித்த ஒரு ஞாபகம். சென்னையில் ஒருவர் தனது மொட்டை மாடியில் பறவைகளுக்கு தானியங்கள் போட ஆரம்பித்துள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக சிட்டுக் குருவிகளும், வேறு சில சிறு பறவைகளும் அங்கு சேர ஆரம்பித்து, பின்னர் நிறைய குருவிகள் நிரந்தரமாக வந்து சேர்ந்தன என்று. இப்படி ஒரு திட்டத்தை இவர்களும் ஆரம்பித்துப் பார்க்கலாம்.
  28. ஒவ்வொரு நாடும் தனக்கென விதிமுறைகளை வகுப்பது தவறல்லவே. கனடா, ஒன்ராறியோ மாகாணம் 👇 Drive in Ontario: visitors Welcome to Ontario! Here’s what you need to know if you are, or will be, visiting Ontario – and want to drive while you’re here. On this page Skip this page navigation Visiting: less than 3 months Visiting: more than 3 months Rules of the road Accessible parking permits for visitors Visiting: less than 3 months If you are visiting Ontario for less than 3 months and want to drive while you’re here, you can use a valid driver’s licence from your own province, state or country. You will also need to: be at least 16 years old have proper insurance coverage for the vehicle you will drive carry an original (or exact) copy of the vehicle ownership permit obey traffic laws, drive safely and avoid collisions when you drive Visiting: more than 3 months If you will be visiting from another country for more than 3 months, you will need an International Driver’s Permit (IDP)from your own country. This is a special licence that allows motorists to drive internationally when accompanied by a valid driver’s licence from their country. You need to have this permit with you when you arrive in Ontario. You cannot apply for one once you are here. Rules of the road As a visitor, you are responsible for knowing Ontario traffic laws. Here are just some: keep to the right of the road obey posted speed limits (e.g., 50 km/hour) do not use handheld devices while driving (e.g., cell phones, tablets or music players) slow down and pull to the right, if an emergency vehicle is driving behind you with their lights and sirens on (e.g., an ambulance, fire truck or police car) If you break a traffic law, you will face a penalty. Penalties range from fines to having your licence suspended or your car taken away (impounded). https://www.ontario.ca/page/drive-ontario-visitors#section-0
  29. யாழில் பதியப்பட்டிருந்த ஷோபா சக்தியின் ‘சித்திரப் பேழை’ வாசித்தேன். 2014இல் யேர்மனியில் நடந்த ஒரு சம்பவத்தை அவரது கதை எனக்கு நினைவூட்டியது. அதைத்தான், “அப்பா அது நீதானா?” என இங்கே தந்திருக்கிறேன் இதற்குமேல் படுக்கையில் புரண்டு கொண்டிருக்க முடியாது என்று அன்றியாவுக்கு புரிந்து விட்டது. ஆனாலும் படுக்கையில்தான் இருந்தாள். அன்றியாவுக்கு அதிகம் பிடித்த இரவுகள் என்றால் அது ஞாயிறு இரவுகள்தான். அந்த இரவுகளில்தான் அடுத்தநாளின் சுமைகள் இல்லாமல் அன்றியா அதிகமாகத் தூங்குவாள். திங்கட் கிழமைகளில், ஏறக்குறைய நண்பகலை பொழுது நெருங்கும் நேரத்தில்தான் படுக்கையைப் பிரிந்து அவள் எழுந்து வருவாள். இந்தத் திங்கட்கிழமை மட்டும் அவளுக்கு சுகமானதாக இருக்கவில்லை. திங்கட்கிழமைகளில் அன்றியாவுக்குச் சொந்தமான, ‘டீ மற்றியோ பிட்ஸா’ ரெஸ்ரோறண்ட்டுக்கு ஓய்வுநாள். வாரம் ஆறு நாட்கள் சுறுசுறுப்பாக ரெஸ்ரோறண்ட்டில் இருக்கும் அவளுக்கு, வாரத்தில் திங்கள் ஒருநாள் மட்டும்தான் ஓய்வு. ‘டீ மற்றியோ பிட்ஸா’ ரெஸ்ரரோறண்ட், அவளது தந்தை அல்போன்ஸோ அவளுக்கு விட்டுப்போன சொத்து. ‘ஒரு உணவு விடுதி பத்து வருடங்கள் நன்றாகப் போகும் அதற்குப் பின்னால் ஆட்டம் காணத் தொடங்கும்’ என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால் டீ மற்றியோ பிட்ஸா ரெஸ்ரோறண்ட் முப்பது வருடங்களாக வளர்ந்து கொண்டேதான் இருந்தது. உழைப்பை மட்டுமல்ல தனது ஆயுளையும் அதற்குத்தான் அல்போன்ஸோ அர்ப்பணித்திருந்தார். ‘அரக்கனின் உயிர் ஏழு கடல்தாண்டி, ஒரு பெரிய மலையில் ஒரு பொந்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது’ என்று சின்ன வயதில் கதைகள் கேட்டிருக்கிறோம். அதுபோல்தான் அல்போன்ஸின் உயிரும், ‘டீ மற்றியோ பிட்ஸா’ ரெஸ்ரரோறண்ட்டுக்குள்தான் அது இருந்தது. அல்போன்ஸுக்கு, பொழுது புலர்ந்து மறைவது எல்லாம் டீ மற்றியோ பிட்ஸா’ ரெஸ்ரரோறண்ட்டுக்குள்தான். ஒருநாள் வேலை முடிந்து நள்ளிரவில் அல்போன்ஸ் வீட்டுக்கு வந்த போது, பத்து வயதான அவனது மகள் அன்றியா தனது கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாள். அவனது மனைவி அஞ்சலிக்கா வீட்டில் இல்லை. அவள் தனக்கான வாழ்க்கையைத் தேடிக் கொண்டு இன்னொருவனிடம் போய்விட்டாள் என்று அல்போன்ஸுக்கு அடுத்த நாள்தான் தகவல் கிடைத்தது. அதற்குப் பிறகு அன்றியாவுக்கு எல்லாமே அல்போன்ஸ்தான். “அப்பா அது நீ இல்லையா? எப்போதும் என்னுடன் இருப்பாய் என்று நம்பினேனே? ஏமாந்து விட்டேனா?” அன்றியாவால் அதற்குமேல் படுக்கையில் புரள முடியவில்லை. எழுந்து கொண்டாள். கட்டிலின் அருகே இருந்த அலுமாரியில் இருந்து அந்தக் குடுவையை எடுத்துக் கொண்டாள். வரவேற்பறையின் ஷோபாவில் அமர்ந்திருந்த அவளது பார்வை கண்ணாடி மேசைமேல் இருந்த அந்தக் குடுவையிலேயே இருந்தது. அந்தப் குடுவைக்குள்தான் அல்போன்ஸ் இருந்தான். அதற்குள்ளேதான் அன்றியாவும் தன் உயிரை வைத்திருந்தாள். இரண்டு வருடங்களுக்கு முன்னர் அல்போன்ஸ் இறந்து போய்விட, அன்றியா தன் பலம் எல்லாம் இழந்து விட்டதை உணர்ந்தாள். எத்தனைபேர் வந்து ஆறுதல் சொல்லி இருப்பார்கள். அத்தனையும் அவளைத் தேற்றவில்லை. அவளது அப்பா இல்லாத வீடு அவளுக்குப் பிடிக்கவில்லை. எங்காவது ஓடி விடலாமா? என யோசித்து, தனியாக, சோகத்தில் விழுந்திருந்த போதுதான், தன் தந்தையின் உடலை அடக்கம் செய்வதில்லை, மாறாக எரித்து விடுவது என்ற எண்ணம் அவளுக்கு வந்தது. நண்பர்கள், உறவினர்கள் எல்லாம், “அடக்கம் செய்து விடு” என்று சொல்லிப் பார்த்தார்கள். அன்றியா, தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. யேர்மனியில், பொதுவாக, இறந்தவரின் சாம்பலை மயானத்தில்தான் புதைப்பார்கள். அது மயானத்தில் உடலத்தைப் புதைப்பது போல ஒரு இடத்தில் புதைக்கப்படும். அதற்கான செலவு சில ஆயிரங்கள் ஆகும். அந்தப் பணத்தைச் செலுத்த வசதியில்லாதவர்கள் அதற்கென்று இருக்கும் குறிப்பிட்ட இன்னொரு மயானத்தில் பலரது சாம்பல் குடுவைகளுடன் ஒன்றாகப் புதைப்பார்கள். இவ்வளவையும் சம்பந்தப்பட்ட அலுவலகர்களே உரியவர்களின் விருப்பத்துக்கேற்ப மேற்கொள்வார்கள். அவர்களே நிர்ணயிக்கப்பட்ட நாளில் சாம்பலைக் கொண்டு வந்து தருவார்கள். அவர்கள் முன்னிலையிலேயே சாம்பல்க் குடுவை அடக்கம் செய்யப்படும். இறந்தவரின் சாம்பலை வீட்டுக்குக் கொண்டு சென்று வைத்திருக்கவோ, கடலிலோ,ஆறுகளிலோ கரைக்கவோ, தோட்டத்தில் தாக்கவோ துளியும் அனுமதிக்க மாட்டார்கள். அது சட்டப்படி பிழையானதொரு செயலாகும். “இது சட்டப்படி பிழையானது. பிடிபட்டால் பெரும் சிக்கலாகி விடும்” இறுதிச் சடங்கு செய்யும் நிறுவனத்தின் முதலாளி ஜோகன், அன்றியாவுக்கு அறிவுரை சொன்னார். “என்னால் உங்களுக்கு ஒரு சிக்கலும் வராது” சொல்லிக் கொண்டே தனது பணப்பையை அன்றியா திறந்தாள். அல்போன்ஸின் உடல் எரிக்கப்பட்டு, அவனது சாம்பல் அழகான ஒரு குடுவைக்குள் அடக்கப்பட்டு அவளிடம் வந்து சேர்ந்தது. அன்றிலிருந்து அன்றியாவின் கட்டிலோடு சேர்ந்திருந்த அலுமாரிக்குள் அவளது தந்தை அல்போன்ஸ் இருந்தார். வெள்ளி,சனிக்கிழமைகளில்தான் டீ மற்றியோ பிட்ஸா ரெஸ்டோரண்ட் நிறைந்திருக்கும். மற்றைய நாட்களில் ஓரளவு வாடிக்கையாளர்கள்தான் உணவருந்த வருவார்கள். ஞாயிற்றுக் கிழமையான அன்றும் வாடிக்கையாளர்கள் பெரும் அளவில் இல்லை. அன்றியா, உணவுகளைப் பரிமாறிக் கொண்டிருக்கும் போதுதான் அந்த செய்தி அவளுக்குக் கிடைத்தது. அவளுக்குச் செய்தியைச் சொன்னவர் உணவருந்த வந்த ஒரு வாடிக்கையாளர். “ கேள்விப் பட்டனீயோ அன்றியா? ஜோகனை அறெஸ்ற் செய்திட்டாங்களாம்” “எந்த ஜோகன்?” “இறுதிச் சடங்கு நடத்துற ஜோகன்” “ஏன்? அவருக்கு என்ன பிரச்சினை?” “தில்லு முல்லுதான். ஏகப்பட்ட விசயங்கள். நூறு யூரோப் படி சவப் பெட்டிகளை வாங்கி, அப்பிடி இப்பி டி சோடிச்சு, ஏமாத்தி ஆக்களைப் பாத்து விலையை ஆயிரம், இரண்டாயிரம் எண்டு கூட்டிக் குறைச்சுக் குடுத்துப் பணம் பாத்திருக்கிறான்..” “இதிலை என்ன பிழை இருக்கு? அது வியாபாரம். வாங்கிறாக்களை அவர் ஒண்டும் கட்டாயப் படுத்த இல்லையே” “இல்லைத்தான். ஆக்களுக்கு நல்ல விலையான சவப்பெட்டிகளைக் காட்டிப் போட்டு, அடக்கம் செய்யிற போது சாதாரண பெட்டியை மாத்திப் போடுவான். சவப் பெட்டிக்கான காசும் கொம்பனிக் கணக்குக்குப் போகாது. அவன்ரை தனிப்பட்ட எக்கவுண்டுக்குத்தான் போகும்” “அப்பிடி இருக்குமெண்டோ? என்னைப் பொறுத்த வரையிலை அவர் ஒரு நல்ல மனுசன்” “ நீ அப்பிடிச் சொல்லுறாய். கனக்க விசயம் இருக்கு அன்றியா. உடலை எரிச்சுப் போட்டு, ஆக்களின்ரை அவசரத்துக்கு, ஆளாளுக்கு சாம்பல்களை மாத்தியும் குடுத்திருக்கிறான். அங்கை வேலை செய்தவன் பொலிஸுக்கு அறிவிச்சுப் போட்டான். ஆள் மாட்டிட்டான்” ஷோபாவில் இருந்த அன்றியாவின் பார்வை கண்ணாடி மேசைமேல் இருந்த அந்தக் குடுவையில் இருந்தது. “அப்பா உள்ளே இருப்பது நீதானா?” இது ஒரு உண்மைச் சம்பவம் “ஸ்வேபிஸ் ஹால் நகரத்தைச் சேர்ந்த, இறுதிச் சடங்கு நிறுவனத்தின் பொறுப்பாளர் ஜோகன் (33), அதிக பணத்தைப் பெற்றுக் கொண்டு, இறுதிச் சடங்குகளில், மலிவான சவப்பெட்டிகளில் இறந்தவர்களை அடக்கம் செய்தார் என்பதும், 60 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு இறந்தவர்களின் சாம்பல்களை மாற்றியும் கொடுத்திருக்கிறார் என்பதும், நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இது மனித நேயம், உணர்வுகள், உறவினர்களின் துக்கம் பற்றியது. இவை அனைத்தும் இங்கே மதிக்கப்படவில்லை, குற்றவாளி உறவினர்களின் நம்பிக்கையை மிக மோசமான முறையில் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார். 102 குற்றங்களை அவர் செய்திருக்கிறார் என்பது நிரூபணமாகி இருக்கிறது. இவற்றுக்காக மூன்று வருடங்களும் எட்டு மாதங்களும் சிறைத் தண்டனை அவருக்கு வழங்கப்படுகிறது” என்று தலைமை நீதிபதி 15.10.2014, புதன்கிழமை தனது தீர்ப்பில் கூறினார்
  30. ஓம், 10 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களைப் பின்னாளில் கொன்ற ஹிற்லர் வந்து கேட்டவுடன் ஒரு நாளில் டென்மார்க் சுருண்டது- பெருமைப் பட வேண்டிய விடயம் தான்😎 மறு பக்கம், முழு ஐரோப்பாவையும் ஹிற்லர் ஆளாமல், இறுதி வரை மரணங்களோடு போராடியது பிரிட்டன் - வெட்கப் பட வேண்டிய முட்டாள்கள் பிரிட்டிஷ் காரர்கள்😂! தாத்தா போலவே இருக்கிறீர்கள் என்று வெளிக்காட்டவே அந்தக் கேள்வியைக் கேட்டேன். "எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை, எனக்கு சுதந்திரம் இருக்கிறது, எனக்கு வருமானம், வாழ்விடம் இருக்கிறது. எனவே எனக்கு வெளியேற வேண்டிய அவசியம் இல்லை"! கேம் எப்பவோ ஓவர், இப்ப முகமூடி-facade மட்டும் தான் மிச்சம்😎!
  31. நவீன உலகின் குப்பை கிடங்கு சொறிலங்கா இப்படி பறவைகளும் மிருகங்களும் பாதுகாப்பற்ற இரசாயன உரங்களை எந்த கட்டுப்பாடும் இன்றி பாவிப்தால் அழிந்து போகின்றன என்றால் அதே தாக்கம் அங்குள்ள மனிதருக்கும் மட்டும் அன்றி புலம்பெயர் தமிழரையும் விட்டு வைக்கபோவதில்லை ஏனென்றால் கொழும்பு மரக்கறி எனும் போர்வையில் எமது கிச்சனுக்குள் வந்து எமன் போல் உட்கார்ந்து இருக்கிறது .
  32. நீங்க இல்லாதது றோ வுக்கே பயம் விட்டுப்போச்சுன்னா பாருங்களேன்.
  33. 👍சாரு அவர்களின் கருத்தைப் பார்த்தேன். வில்லாய் வளைந்து (உள்ளூர் பாசையில் குத்தி முறிந்து"😂) ஒரு தரப்பிற்கு முட்டுக் கொடுப்பது போலவும் இருக்கிறது அவர் கருத்து. "கிருஷ்ணா சங்கீத செயல்களினால் தகுதியானவர் தான்" என்கிறார் (அதற்குத் தான் விருது என்று விருது கொடுத்த அமைப்பும் சொல்லி விட்டது). பின்னர் பல்ரி அடித்து "உவர் கிருஷ்ணா ஏன் இவ்வளவு நல்லவரா இருக்கிறார்? நோபல் பரிசு வாங்கவா? இது மேற்கின் சதிகளில் ஒன்று!" என்று சிறு பிள்ளைத் தனமாக அலம்பியிருக்கிறார். சாரு எல்லாம் எழுத்தாளர் என்ற அடையாளத்தோடு வலம் வருவது தமிழ் எழுத்துலகின் துரதிர்ஷ்டம் என நினைக்கிறேன்.
  34. மேலே உள்ளது கூட உண்மையான அகழ்வாய்வுப் பொருள் இல்லை என்று நினைக்கிறேன். மாதிரிக்காகச் செய்து வைத்துள்ளனர். நன்றி வருகைக்கு பின்னை என்ன மிக்க நன்றி ஏராளன்
  35. இணைப்புக்கு நன்றி ஐயா .......!
  36. கேள்வியும் விடையும் ( தவறான) உங்களின் கருத்தில் உள்ளதே! ஆம் வெளிநாட்டவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். https://www.gov.uk/government/publications/hospitalisation-in-sri-lanka-information-pack/information-for-british-nationals-hospitalised-or-in-need-of-medical-help-in-sri-lanka ஆனால் மேற்கு நாடுகளில் ஏற்படும் செலவிற்கு ஏற்ப அறவீடு செய்ய வேண்டும் என்பது நகைப்பிற்கு உரியது. வெள்ளை தூசணத்தினால் தான் பேசும். அதன் பிறகு எட்டியும் பார்க்க மாட்டார்கள் ……
  37. எங்களுக்கும் தான்.
  38. உண்மைதான். ஆனால், மனிதர்கள் இப்படி மிருகங்களாகத் தோன்றுவது யார் செய்த பாவம்? அப்பாவிகள் அழிக்கப்படுவது யார் செய்த பாவம்? எல்லாவற்றையும் படைப்பது இறைவன் என்றால், எதற்காக மனித வடிவில் அரக்கர்களைப் படைத்து உலவ விடுகிறார்? அண்ணை, 2009 வரை கடவுள் என்றொரு சக்தி இருக்கிறதென்று நம்பியவன் நான். ஆனால், எதுவுமே அறியாத பச்சிளம் பாலகர்களும், வயோதிபர்களும், தாய்மார்களும் அடங்கலாக ஒன்றரை லட்சம் பேரைத் துடிக்கத் துடிக்கக் கொன்றபோது இந்த தெய்வங்கள் எல்லாம் எங்கே போய்விட்டன என்கிற கேள்வி எழுந்தது. அதன்பின்னர் கடவுளைத் தேடிச் செல்வதில்லை.
  39. இலங்கை வரும் வெளிநாட்டு குடிமக்களுக்கு அரச வைத்தியசாலைகளில் இலவச சிகிச்சை இப்பொழுதும் வழங்கப்படுகின்றதா? அப்படி இல்லை எனில் அதற்கும் மேற்கு நாடுகளில் ஏற்படும் செலவு அளவுக்கு அறவீடு செய்யலாமே? மருத்துவக் காப்புறுதி இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டு நபருக்கு அது பெரிய பிரச்சனையாக இருக்காது அல்லவா? அண்மையில் மெக்ஸிக்கோ போய் இருந்த பொழுது எனக்கு சளி தடிமலுக்கு மருந்துக்கே 320 அமெரிக்கன் டாலர் வரைக்கும் அறவிட்டார்கள். இலங்கைக்கு வரும் உல்லாசப் பிரயாணிகள் அரச வைத்தியசாலைகளில் ஒரு சதம் கொடுக்காமல் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
  40. பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொள்ளும் ISIS என்றுதான் எழுதியுள்ளேன். வாசிப்பதிலும் பிரச்சனையா ? அல்லது விபு களைத் தேவையில்லாமல் இழுத்து விட்டதற்குக் கிடைத்த வரவேற்பினால் ஏற்பட்ட குழப்பமா ?
  41. சுலபமான சுவையான ஆம்லட் ........செய்து சாப்பிட்டுப் பாருங்கள்.......! 👍
  42. உங்களுடைய சாரதி அனுமதிப் பத்திரத்தைக் காட்டித்தான் அதில் இருக்கும் அளவுகோளின்படி (எந்தெந்த வாகனங்கள் ஓட்டலாம் என்று) குடுப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன்.......! 😁
  43. வி பு க்களை நான் அவமதிக்கிறேன் என்று கருதத் தேவையில்லை. அவர்களது அர்ப்பணிப்பிற்கு நான் எப்போதும் தலை வணங்குபவன். ஆனால், அவர்களது பெயர்களைத் தாங்கி நிற்பவர்களுக்கு ஒன்று புரிய வேண்டும். அதாவது நாங்கள், ஈழத் தமிழர்களா, எமக்கு எதிரி நாடுகள் என்று எவையுமே இல்லை என்பதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். எந்தக் காரணமும் இன்றி, மேற்குலகுடன் போட்டி போடும் ஒரே காரணத்திற்காக உலக வல்லரசுகளையும் ஏனைய நாடுகளையும் பகைக்கும் எண்ணத்தை மூட்டை கட்ட வேண்டும்.
  44. நல்லவர்களை சம்பாதித்து வைத்திருக்க வேண்டும் கெட்டவர்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும் அப்போது தான் நல்லது கெட்டது நமக்கு தெரிய வரும்.
  45. ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து இருந்தேன். என்ன பார்ட்டி இது,? எதுக்கு அப்பா இதை ஏற்பாடு செய்கிறார்? அப்பா ஏன் ரிஸ்க் எடுக்கிறார்? இது கொஞ்சம் வேறு மாதிரி மாறிவிடும் அல்லவா? என்று மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டாலும் அப்பா சரியாக செய்து முடிப்பார் என்று பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தார்கள். அப்பாமாருக்கு பிடித்த சாப்பாடுகள் மற்றும் குடிவகைகள் அனைத்தும் மேசையில் இருக்கவேண்டும் என்றும் சொல்லியிருந்தேன். எனது மக்கள் மருமக்களுடன் மருமக்களின் தகப்பனார்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம் என்று கண்டிப்பாக சொல்லி விட்டிருந்தேன். அவரவர் மாமனார்களை அழைத்து வரவேண்டியது அந்தந்த மக்களின் வேலை என்றும் பிரித்துக் கொடுத்து இருந்தேன். பார்ட்டி ஆரம்பிக்கும் நேரம் எல்லோரும் வந்து அமர்ந்தார்கள். மேசையில் மக்கள் மற்றும் மருமக்கள் எமக்கு பிடித்த பல உணவுகளை தாமே சமைத்து கொண்டு வந்து வைத்திருந்தார்கள். அத்துடன் பலவகையான குடிவகைகளும் வைக்கப் பட்டிருந்தன. பார்ட்டி ஆரம்பித்தது. இங்கே யாரும் எதுவும் சொல்லக் கூடாது. போதும் என்று கையை காட்டுவது கண் சிமிட்டுவது என்று எதுவும் எவரும் சொல்ல வேண்டாம். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் குடிக்கலாம். மக்களிடம் கேட்டேன் கேள்வி ஏதாவது இருந்தால் கேளுங்கள் பதில் சொல்கிறேன் என்று. சாப்பிட குடிக்க இந்த பார்ட்டி செய்யவில்லை என்று தெரியும் அப்பா. அப்படியானால் ஏதோ வேறு காரணம் இருக்கும் அது என்ன என்று மகன் கேட்டான். அப்பாக்கள் தமக்கு என்று எதுவும் கேட்கமாட்டார்கள். நாங்கள் இறந்த பின்னர் நீங்கள் எங்களுக்கு என்ன செய்தும் பிரயோசனம் இல்லை எனக்கு அவற்றில் நம்பிக்கையும் இல்லை. இன்றைக்கு நீங்கள் விரும்பி உங்கள் கைகளால் சமைத்து பரிமாறி இருப்பதும் எமக்கு என்ன பிடிக்கும் என்று பார்த்துப்பார்த்து வாங்கி மேசையில் வைத்திருப்பதும் தான் எமக்கான படையல். இருக்கும் போது கொடுக்கப்படுவது மட்டுமே சாலச்சிறந்தது. அதுவே தேவையும் கூட. நன்றாக குடித்து வயிராற சாப்பிட்டு சந்தோசமாக விடைபெறும் போது சொன்னார்கள் மறக்க முடியாத அனுபவம் என்று. கலந்து கொண்டவர்கள் என் சம்பந்திமார் மூவர். பார்ட்டியின் பெயர் சம்பந்தி பார்ட்டி. 🙏
  46. போதமும் காணாத போதம் – 17 பூதவராயர் கோயிலுக்குப் பின்பாகவுள்ள குளத்தில் மஞ்ஞை தனியாக குளித்துக் கொண்டிருந்தாள். மத்தியானத்தின் பலகோடி மலர்கள் நீரில் மலர்வதைப் போலொரு தரிசனம். என்னைக் கண்டுவிட்டாள். வடலிக் கூடலில் அமர்ந்திருந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். இருவரின் பார்வையும் சந்திக்கையில் இமைகொட்டாது யுகம் குளிர்ந்தது. சூரியனுக்கு அருகிலிருப்பது போல சரீரம் தகித்தது. என்னில் ஊற்றுக்கொண்டு நிரம்பித் ததும்பினாள் மஞ்ஞை. குளித்து முடித்து கரையேறி மறைப்பில் புகுந்தாள். இன்று சந்திப்பதாக திட்டமிருக்கவில்லை. விழிப்புலனற்ற கலைஞன் மடியில் கிடக்கும் புல்லாங்குழல் துளைகளில் காற்று நுழைந்து கீதம் நிறைப்பதைப் போல இந்தச் சந்திப்பு நிகழ்கிறது. காற்றில் படபடக்கும் அரச மரத்து இலையின் நிழலென மஞ்ஞை நடந்து வந்தாள். வரலாற்றின் புதிய சொல்லென ஈரத்தோடு விரிந்திருந்த கூந்தல். பறக்க எத்தனிக்கும் ஜோடிப்புறாவின் அசைவுடனும் வடிவுடனும் கொங்கைகள். பிரபஞ்சமே அருந்தவம் செய்து ஏந்திய காற்றுச்சுடரின் அபிநயம் இவள்தான். எண்ணெய்க் கிண்ணக் கண்களில் திரியேற்றி என்னருகில் வந்தாள். எளிதில் மூண்டுவிடும் தீ என்னிடமிருப்பது மஞ்ஞைக்கு நன்றாகவே தெரியும். வடலிக்கூடலுக்குள் அலை பெருத்து மூர்க்கம் கொண்டோம். தஞ்சம் கோரும் தாகத்திற்கு அருந்துவதற்கு சுனைகள் பிறப்பித்தோம். மணல் ஒட்டிய சரீரங்கள் களைப்பில் மூச்செறிந்தன. வானத்தில் கனத்த மழைக்கான நிமித்தங்கள் தெரிந்தன. ஒரு துளி மஞ்ஞையின் தொப்புளில் விழுந்தது. அடுத்த துளியும் அங்குதான் நிறைந்தது. “எனக்கெண்டு மட்டும் தான் மழை பெய்யுது” என்றாள் மஞ்ஞை. எதுவும் சொல்லாமல் வானத்தையே உற்றுக் கவனித்திருந்தேன். நினைத்தது சரியாகவிருந்தது. வேவு விமானமிரண்டு வன்னி வான்பரப்புக்குள் பறந்தபடியிருந்தது. “என்ன வண்டு சுத்துதோ” என்று மஞ்ஞை கேட்டாள். ஓமென்று தலையை ஆட்டினேன். “நானிப்ப சுட்ட பழமாய் இருக்கிறேன். கொஞ்சம் ஊதி விடுங்கோ. சட்டையைப் போட்டுக்கொண்டு வெளிக்கிடுகிறேன். வேவு விமானம் வேற சுத்துது” என்றாள். கலவிக்குப் பின் கனியும் பெண்ணின் சரீரத்தில் ததும்பும் வாசனைக்கு இரையாகுபவன் பாக்கியவான். மலரினும் மெலிது காமம் சிலரதன், செவ்வி தலைப்படுவார் என்றால் நானும் மஞ்ஞையும் சிலரே. விடைபெற்றாள். வடலியிலே கள் வடியுமா! வடியட்டுமே! மஞ்ஞைக்கு செவித்திறனில் சிரமமிருந்தது. பக்கத்தில் நின்று அழைத்தாலும் சிலவேளைகளில் கேட்காது. வன்னிக்குள்ளிருந்த சர்வதேச தொண்டுநிறுவனமொன்று பரிசோதித்து வழங்கிய செவிப்புலனூட்டும் கருவியை பயன்படுத்துவதில்லை. ஏனென்று கேட்டால், பிடிக்கவில்லை என்பாள். எனக்கும் மஞ்ஞைக்கும் நடுவில் உறவு தோன்றிய தொடக்க நாட்களில் சந்திப்பு இடமாகவிருந்தது குன்று மரத்தடிதான். ஆளரவமற்ற பகுதியது. ஊரிலிருந்து கொஞ்சத்தூரத்தில் பிரிந்து செல்லும் ஒற்றையடிப்பாதையும் திடுமென அழிந்து போகும், அதன் பிறகு மூடிய காடு. அந்தக் காட்டிற்குள்தான் குன்று மரமிருந்தது. பெரியப்பாவுடன் பன்றி வேட்டைக்கு போகையில் அங்கு இளைப்பாறுவோம். மஞ்ஞை சைவ அனுட்டானங்களில் தீவிரம் கொண்டவள். மாமிசம் உண்பதில்லை. என்னை எதன்பொருட்டு சகித்துக்கொண்டாள் என்று அறியேன். மீன், கணவாய், முட்டை சாப்பிட்டால் அவளைப் பார்க்கப் போவதில்லை. முத்தமிடாமல் அருக்களிப்பாள். ஐயோ, வெடுக்கடிகுதென முகம் சுழிப்பாள். பன்றிகளை வேட்டையாடுவது அவளுக்குப் பிடிப்பதில்லை. தெய்வத்தின்ர அவதாரமென பிரசங்கிப்பாள். இனிமேல் வேட்டைக்குப் போகப்போவதில்லையென உறுதியளிப்பேன். “உங்கட கதையை நம்பமாட்டன். உருசையான இறைச்சியைப் பார்த்தால் மஞ்ஞை நீ ஆரெண்டு கேப்பியள்” என்பாள். ஒருநாள் மஞ்ஞையின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவளுடைய தாயார் பசுப்பால் கொடுத்தாள். பெரியளவில் குங்குமம் தரித்திருந்த அவளது முகத்தில் எண்ணற்ற எண்ணங்கள் ஓடின. “நீங்கள் எந்தவூரில இருந்து இடம்பெயர்ந்து வந்திருக்கிறியள் தம்பி” என்று கேட்டாள். “முகமாலை தெரியுமோ” கேட்டேன். “யாழ்ப்பாணம் போகேக்க பார்த்திருக்கிறேன்” என்றாள். கடைக்குச் சென்று திரும்பியிருந்த மஞ்ஞை, என்னைக் கண்டதும் திடுக்குற்றாள். ஆனாலும் உள்ளூர அதனைப் புதைத்துக்கொண்டு “என்ன, இஞ்சால் பக்கம் வந்திருக்கிறியள்” என்று கேட்டாள். “சும்மாதான்” என்றேன். அம்மா தருவித்த பசுப்பாலை முழுவதும் குடித்துமுடித்தேன். மஞ்ஞையின் தாயார் வந்த விஷயம் என்னவென்று சொல்லு என்று எனக்கு முன்னாலேயே நின்று கொண்டிருந்தார் என்பது விளங்கியது. “எங்கட வீட்டில வடகம் போட்டு விக்கிறம். அதுதான் ஒவ்வொரு வீடாப்போய் ஓர்டர் எடுக்கிறேன். உங்களுக்கு எதுவும் தேவைப்படுமோ” என்றேன். தாய் என்ன சொல்லப்போகிறாள் என்பதை மஞ்ஞை திகிலுடன் பார்த்தாள். நான் கதிரையிலிருந்து எழுந்து நின்றேன். “நீங்கள் இடம்பெயர்ந்து வரேக்கை, உங்கட ஊரிலயிருந்து வேப்பம் பூ கொண்டு வந்தனியளோ” என்று தாயார் கேட்டாள். நான் இல்லையென்றோ ஓமென்றோ சொல்லாமல் படலையைத் திறந்து வெளியேறினேன். மஞ்ஞை எனக்குப் பின்னால் ஓடிவந்து மன்னித்துக்கொள் என்றாள். “இதுக்கெல்லாம் மன்னிப்புக் கிடைக்குமாவென்று அவளிடமே கேட்டேன். நான் நெடுந்தூரம் நடந்து வந்ததன் பின்னரும் வயலுக்குள் தனித்திருந்த வீட்டின் வாசலிலேயே மஞ்ஞை நின்று கொண்டிருந்தாள். ஏழடி உயரமிருக்கும் குன்றின் மேலே வளர்ந்து நிற்கும் காட்டுப்பூரவசு மரத்தில் மஞ்ஞை ஏறியிருந்தாள். குன்றின் கீழே பதுங்கி அமர்ந்தேன். என்னுடைய எந்த அரவமும் அவளுக்கு கேட்கவில்லை. காத்திருந்து சலித்திருக்கலாம். அந்தியின் புற்றிலிருந்து கருக்கல் தலைநீட்டியது. மரத்திலிருந்து கீழே இறங்கி குன்றிலிருந்து மெல்லக் கால்வைத்து கீழே இறங்கினாள். எதிர்பாராத ஷணத்தில் அவளை ஏந்தினேன். உதிரும் மலரொன்றை கிளை ஏந்துமா? ஏந்தும்! மஞ்ஞை உதிரும் மலரல்ல. என்னை இறுக அணைத்து முத்தமிட்டு நனைத்தாள். எடை கூடிய பொழுதை எந்தப் பாடுமற்றும் என்னால் சுமக்கமுடியுமென ஆசிர்வதிக்கும் அருகதை அவளிடமிருந்தது. குன்று மரத்தடியில் பரவசத்தின் சங்கீத ஸ்வரங்கள் கிளைபிரிந்து அசைந்தன. ஓசைகள் அற்ற காட்டின் நடுவே, ஆதியின் முயக்கவொலி மூப்படைந்து நிறைகிறது. குன்றெழுந்து நிற்கும் காட்டுப்பூவரசில் வீசத்தொடங்குவது காற்று அல்ல. மஞ்ஞையின் மூச்சு. அவள் கண்களில் வழிவது கண்ணீரா! எனக்குள் அதிரும் தந்திகளை இவளே இயக்குகிறாள். ஒரு எழுத்துப்பிழையின் பிடிபடாத அர்த்தமென காமம் பொங்குகிறது. அழித்து அழித்துச் சரியாக எழுதும் அன்பின் ஈரச்சுவடுகள் குன்று மரத்தடியில் ஆழமாய்ப் பதிந்தன. கூவிக் கூவி அழைக்கும் தன் தொல்மரபின் பழக்கத்தை விட்டு குயில்கள் ரெண்டு எம்மையே பார்த்தபடியிருந்தன. “எப்போது தனியாகப் பார்த்தாலும் சேர்ந்து பிணைகிறோம். ஏதோவொரு பதற்றந்தான் நம்மை வழிநடத்துகிறதா” மஞ்ஞை கேட்டாள். நதியின் ஆழத்தில் அசையும் கூழாங்கல்லென குளிர்ந்ததொரு உச்ச நொடி. அப்படியே என் நெஞ்சில் சரிந்தாள். கொங்கைகள் அழுந்த கண்களை மூடியபடி கழுத்தின் வியர்வை குடித்தாள். தொலைவில் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது. கண்கள் வளர்ந்திருந்த மஞ்ஞையை தட்டியெழுப்பினேன். அவள் விழிப்புற்று என்னவென்று கேட்டாள். “ஆரோ வருகினம். கதைச்சுத் சத்தம் கேட்கிறது” சொன்னேன். காதைத் தீட்டி காட்டின் தாளில் வைத்தாள். நான் சில மாதங்களுக்கு முல்லைத்தீவில் வதியவேண்டியிருந்தது. எதற்கென்று யாரிடமும் சொல்லக்கூடாது. மஞ்ஞையை விட்டுச்செல்லும் துயரைச் சந்திக்கவியலாது முகத்தை திருப்பினேன். தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் அவளைச் சந்தித்தேன். பூதரவராயர் குளத்தடி, வடலிக்கூடல், குன்றுமரத்தடி, ஊஞ்சலாடி கட்டிடமென கூடிப்புணர்ந்தோம். “ஒரு வேலையாய் முல்லைத்தீவுக்கு போகவேண்டியிருக்கு, திரும்பிவர ரெண்டு மாசம் ஆகும்” என்றேன். மஞ்ஞை முகத்தில் தீப்பெருக்கு. “ரெண்டு மாசம் அங்க நிண்டு என்ன செய்யப்போகிறியள்” கேட்டாள். “சொந்தக்காரர் ஒருவர் படுத்த படுக்கையாகிவிட்டார் அவரை பராமரிக்கும் வேலைக்காகச் செல்லவிருக்கிறேன்” சொன்னதும், சின்ன வெறுப்புடன் “ ரெண்டு மாசத்தில அவர் செத்துப்போய்டுவாரா” என்று கேட்டாள். மேற்கொண்டு எதனைக் கதைத்தாலும் நான் உண்மையைச் சொல்ல வேண்டி வருமென்பதால் அமைதியாக இருந்தேன். “நான் இங்கேயிருந்து உங்களைப் பார்ப்பதற்காக முல்லைத்தீவு வருவேன். விலாசத்தை தந்துவிட்டுச் செல்லுங்கள்” என்றாள். தருவதாகச் சொன்னேன். ஊஞ்சலாடி கட்டிடத்திற்குள் நாமிருவரும் நிறைந்திருந்தோம். கூரைகளற்ற கட்டிடத்தின் மேலே வானம் கறுத்திருந்தது. அன்றைக்கும் முதல் துளி அவளது தொப்புளில் விழுந்தது. ஒரே மாதிரித்தான் ஒவ்வொரு துளியுமா என்றாள். ஒவ்வொரு துளியும் வேறு வேறானவை. ஒவ்வொரு துளிக்குள்ளும் எவ்வளவோ துளியல்லவா! என்றேன். “சரி. நாங்கள் இன்னொரு தடவை இந்த மழையை பெய்ய வைக்கலாம். ஆனால் நான் மேலிருப்பேன்” “இரு. உன்னுடைய மழை. உன்னுடைய துளி” என்றேன். “எங்கட நாட்டில இந்த தரித்திரம் பிடிச்ச சண்டையெல்லாம் முடிஞ்சு, ஒரு நல்ல காலம் வந்தால் எவ்வளவு சந்தோசமாய் இருக்கலாமெண்டு நினைக்கவே ஆசையாய் இருக்கு” என்றாள். “நல்ல காலம் வரும் மஞ்ஞை” கோலமயில் என்மீது அகவியது. மழை பொழியும் கார்த்திகையின் கானக வாசனை ஊஞ்சலாடி கட்டிடமெங்கும் ஊர்ந்து வந்தது. நான் முல்லைத்தீவுக்கு வந்து சேர்ந்தேன். வன்னியன் தொலைத்தொடர்பு நிலையத்திலிருந்து மஞ்ஞையிடம் தகவல் சொல்லிவிடுமாறு கூறினேன். நான் கொடுத்துவந்த விலாசத்திற்கு கடிதம் வந்தால், அதனை வாங்கி வைக்குமாறு சொல்லியிருந்தேன். பிறகான நாட்களில் எந்த தொடர்பும் இருக்கவில்லை. மூன்று மாதங்கள் கழித்து அவளிடமிருந்து வந்த கடிதங்களைப் பெற்றுக்கொள்ள விலாசம் கொடுக்கப்பட்ட வீட்டிற்குச் சென்றேன். அங்கு எந்தக்கடிதங்களும் வரவில்லையென சொன்னார்கள். கேட்கவே திகைப்பாகவிருந்தது. தொலைத்தொடர்பு நிலையம் சென்று மஞ்ஞையிடம் பேசவேண்டும் அவருடைய வீட்டிற்கு தகவல் சொல்லி வரச்சொல்லுங்கள் என்றேன். சரி என்றார்கள். நீண்ட நேரமாகியும் பதில் அழைப்பு இல்லை. மீண்டும் அழைத்தேன். அவள் வீட்டில் இல்லை என்றார்கள். நான் அவசர அவசரமாக அங்கிருந்து புறப்பட்டு கிளிநொச்சிக்கு வந்தடைந்தேன். நாம் சந்திக்கும் ஒவ்வொரு இடங்களுக்கும் ஓடிச்சென்றேன். எங்குமில்லை. அன்றிரவு பூதவராயர் குளத்தில் குளித்துவிட்டு நடந்து வந்தேன். மஞ்ஞை என்னை வழிமறித்து தன்னுடன் வருமாறு அழைத்துச் சென்றாள். ஈரம் துடைக்கவேண்டும் என்றேன். “இல்லை வா, நானே துடைக்கிறேன்” என்றாள். அவள் என்னை ஊஞ்சலாடி கட்டிடத்திற்குள் அழைத்துச் சென்றாள். “மஞ்ஞை இரவில இஞ்ச வந்து இருக்கிறது ஆபத்து. பாம்பு பூச்சிகள் கடிச்சுப் போடும்” என்றேன். அதொண்டும் கடிக்காது. வா… என்றாள். இரவின் சீவாளியை காற்றுச் சரிபார்த்தது. ஒவ்வொரு துளைகளையும் மூடித்திறந்த விரல்கள் மல்லாரி இசைத்தன. காற்றை ஊதும் தொண்டைப்பை விரிந்து சுருங்குகிறது. மூச்சு இழைந்து ராகமென தவிக்கிறது. ஸ்வரநீர் அணைசின் வழியாக இறங்கி நனைக்கிறது. அகவுகிறாள். தோகையென உடல் விரித்து அகவுகிறாள் மஞ்ஞை. “நீ ஏன் என்னை விட்டுச் சென்றாய்” கேட்டாள். “நான் எங்கே விட்டுச்சென்றேன். அதுதான் வந்து விட்டேனே” “இல்லை, நீ என்னை விட்டுச் சென்றிருக்கக் கூடாது” “மஞ்ஞை நான் என்ன செத்தாபோனேன். திருப்ப திருப்ப இதையே சொல்லிக்கொண்டே இருக்கிறாய்” வானத்தைப் பார்த்தபடி ஊடல் ஆடினோம். அவள் தொப்புளில் முதல் மழைத்துளி விழுந்ததும் “அய்யோ குண்டு விழுகுது” என்றாள். “உங்களுக்கு என்ன விசரே அது மழைத்துளி தான்” என்றேன். “இல்லை குண்டு விழுந்து கொண்டேயிருக்கு” என்றாள் அதிகாலையில் ஊஞ்சலாட்டு கட்டிடத்தில் கண்விழித்தேன். ஆடைகளை அணிந்து கொண்டு புறப்பட்டேன். மஞ்ஞை எனக்கு முன்பாகவே எழுந்து சென்று விட்டாளே, அவளுடைய வீட்டிற்கு சென்றுவிட்டு போகலாமெனத் தோன்றியது. படலையத் திறந்து கொண்டு உள்ளே போனேன். வீடு பூட்டிக்கிடந்தது. கதவைத் தட்டினேன். தாயார் வந்து கதவைத் திறந்தார். மஞ்ஞை இன்னும் வரவில்லையோ என்று கேட்டேன். அவள் இனிவரமாட்டாள் தம்பி என்றார். “நேற்று இரவு என்னுடன் தானிருந்தாள். சாமத்தில் தான் எழுந்து வந்திருக்கிறாள்” என்றேன். தாயார் வீட்டின் கதவை அகலத் திறந்தபடி கதறியழுதார். மஞ்ஞையின் சிறிய புகைப்படமொன்றுக்கு முன் அசைந்தாடிக் கொண்டிருந்தது சுடர். பிரபஞ்சமே அருந்தவம் செய்து ஏந்திய காற்றுச்சுடரின் அபிநயம் அணையுமோ! https://akaramuthalvan.com/?p=1702

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.