Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரும்பிலே.. உதிர்ந்து மலர்ந்த என் மகள்!‏

Featured Replies

இரவு வேளையில்.. எனக்கு பரப்புரைக் கூட்டங்கள் இல்லாத வேளையில், நான் வீட்டில் இருந்து கவிதையோ கட்டுரையோ எழுதிக் கொண்டிருப்பேன்.. அந்த வேளைகளில் அவள் என் காலடியில்தான் அனேகமாக இருப்பாள்!

 

உடனே நீங்கள் கற்பனைக் குதிரையை தட்டி விட்டு, நான் ஏதோ என் பழைய காதலியைப் பற்றி எழுதப் போகிறேன் என்று நினைத்தால்… ஏமாறப் போவது நிச்சயம் நீங்கள்தான்!

 

அவள் ஓர் சிறுமி..! தூரத்து.. உறவு முறையில் அவள் எனக்கு மகள்தான்..!

 

அப்போது ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்..! நிறம் கறுப்புத்தான்.. ஆனால்.. அவளிடம் எனக்கு எப்போதுமே பிடித்தது அவளது அந்த கருவிழிகளும் கூரிய நாசியும் நீண்ட கூந்தலும்தான்.. “சித்தப்பா”.. என்றுதான் எப்போதும் என்னை கூப்பிடுவாள்!.. வகுப்பில் கொஞ்சம் மக்கு!.. அதனால், தாய் தகப்பன் யோகண்ணையிடம் போய் படியடி.. என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள்..!..

 

வெளியில் எல்லோரும் என்னை எப்படியோ எல்லாம் அழைப்பார்கள்.. ஆனால்.. அவளோ சித்தப்பா என்றுதான் அழைப்பாள்..!

 

அவள், கணக்கில் ஏதும் தவறு விட்டுவிட்டால், அவளின் காதைப் பிடித்துக் கிள்ளும்போது.. “ஆ..” என்று சொல்லிவிட்டு பேசாமல் இருப்பாள்.. புத்தகங்களை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு போகும்போது மட்டும் “நோவெண்ணை”.. என்று சொல்லிக் கொண்டு ஒடிவிடுவாள்!.. அவளின் அந்த துறு துறுக்கும் மீன் விழிகளும்.. அந்த துடுக்குத் தனமும்தான் எப்போதும் எனக்குப் பிடிக்கும்!

 

படிக்க வரும்போது எனக்கு கொய்யாக் காயோ, அல்லது இலந்தைப் பழமோ கொண்டுவந்து தருவாள்.. எல்லாம் அவள் மரத்தில் ஏறிப் பிடுங்கியதாகவோ.. அல்லது நிலத்தில். விழுந்தவைகளாகத்தான் இருக்கும்.. எனக்கு தரும்போது மட்டும் என் கண்முன்னாலேயே அவற்றை கழுவித்தான் தருவாள்.. இல்லையென்றால் நான் சாப்பிடமாட்டேன் என்று அவளுக்கு தெரியும்!

 

என் மகள்.. என்னருகே .. இல்லாத வெற்றிடத்தை நிரப்பிய ஓர் குட்டித் தேவதை அவள், என்றுதான் நான் அந்த நாட்களில் நினைத்திருந்தேன்..!..

 

நாட்கள் போகப் போக அவளை ஒருநாளைக்கு காணாவிட்டாலும் கூட எனக்கு மனம் வேப்பங் காய்போல்.. வெறுத்துவிடும்.. எனது வீட்டு விறாந்தையில் அமர்ந்து, நான் எழுதிக் கொண்டிருக்கும்போது.. அவள் படிக்க வந்தால், என்னைக் குழப்பக் கூடாது என்று நினைத்து.. என் காலடியில் ஒரு குப்பி விளக்கை வைத்துக் கொண்டு, படித்துக் கொண்டிருப்பாள்..நான் கற்பனை உலகத்துக்குள் இருந்து திரும்பியதும்தான் என் காலடியில் அவள் இருந்து எழுதிக் கொண்டிருப்பதை கவனிப்பேன்..!

 

எனக்கு அவள் கொய்யாக் காயையோ, இலந்தைப்பழத்தையோ தருவதை கவனித்துக் கொண்டிருக்கும் என் மனைவி.. “அடியே.. நாங்கள் இஞ்சை இருக்கிறது உன்ரை கண்ணுக்கு தெரியாதோ.. அவருக்கு மட்டும் ஒழிச்சுக் கொண்டுவந்து குடுக்கிறாய்.. என்ன..?” என்று கேட்பார்..  “நீங்களும் அவரும் ஒண்டா..?” என்று அதற்கு ஏதோ ஓர் வார்த்தை அம்பை எய்து விடுவாள்..!

 

இப்படி சில வருடங்கள் ஓடியபோதுதான்.. சில நாட்களாக அவள் படிக்க வரவில்லை.. என்ற எண்ணம் எனக்கு உறைத்தது! அந்தக் காலத்தில் நான் பெரும்பாலும் இரவு பன்னிரண்டு மணிக்கு பின்னர்தான் வீட்டுக்கு பரப்புரை முடிந்து வருவது வழக்கம்..!.. அப்படியான வேளைகளில் மாலையிலேயே சில நிமிடங்கள் என்னிடம் வந்து, தமிழ் படித்துவிட்டுப் போவாள்!.. இப்போதோ, மாலையிலும் ஆள் இல்லை.. இரவிலும் இல்லை.. “எங்கே அந்த செம்பகம்..”? என்று என் மனைவியிடம் கேட்டேன்..

 

“அவளா.. குண்டு போட்டுவிட்டாள் “.. என்று சொல்லி சிரித்தார்!.. எனக்கு உண்மையிலேயே அது புரியவில்லை..!..

அந்த ஊரில் புழக்கத்தில் உள்ள வக்கணையான வார்த்தை.. அது என்று பின்னர்தான் அறிந்து கொண்டேன்!.. ஆனால் அது.. உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்! ஆயினும், எண்ணி ஒரு மாதத்துக்கு பின்னர் மீண்டும் புத்தகங்களோடு வந்து விட்டாள்.!.. கூடவே டன் கணக்கில், நாணம்.. அச்சம்.. மடம் பயிர்ப்பு என்று சுமந்து கொண்டு வந்தாள் !

 

எங்கே அந்த குட்டித் தேவதை..? என்று நான் தேடவேண்டியிருந்தது! எனினும், என் மீது உள்ள அந்தப் பாசம் மட்டும் அவளுக்கு குறையவே இல்லை..! இப்படியே நாட்கள் போய்க் கொண்டிருந்தவேளை.. ஒருநாள்.. என் மகளைக் காணவில்லை என்று எல்லோரும் தேடத் தொடங்கினர்..! ஒரு நாள் முழுதும், தேடுதல் வேட்டையின் பின். அவர்களின் முடிந்த முடிவு.. என்ன தெரியுமா..?

 

குருவி.. இயக்கத்தை நோக்கி பறந்துவிட்டது.. என்பதுதான்!.. ஆயினும் அது எனக்கு மனத்தில் சிறிது வலியை ஏற்படுத்தினாலும் கூட.. சில நாட்களின் பின்னர், கடற்புலிகளின் மகளிர் அணிக்கு பாடம் எடுக்க போயிருந்தபோது.. செண்பகம் ஒன்று தலையை.. மறைத்துக் கொண்டு அமர்ந்திருப்பதை சற்று தூரத்தில் கண்டேன்.!

 

ஒ.. எனக்கு தெரியாமல் ஒரு.. ஈ. எறும்புகூட கடற்புலிகள் அணிக்குள் வரமுடியாது என்பது, அன்றுதான் என் மகளுக்கு தெரிந்திருக்கும் என்று நினைத்தேன்.. ஆயினும், அன்று வகுப்பு முடிந்து நான் போகப் புறப்பட்டபோது….

“சித்தப்பா..” என்ற குரல் என் பின்னால் இருந்து கேட்டது!

 

அவள்தான்!.. பயிற்சி இராணுவ உடையில் அற்புதமாக நின்று கொண்டிருந்தாள்..!

 

“வீட்டில சொல்லி விடாதங்க சித்தப்பா.. நான் இஞ்சை இருக்கிறன் எண்டு”.. என்று என்னிடம் கெஞ்சினாள் ..!

“சரி..” என்று சொல்லிவிட்டு, நான் வந்து முதல் சொன்னது பக்கத்துவீட்டில்.. என்ன தெரியுமா..?

“உங்கட மகள் கடற் புலிகளின் மகளிர் அணியில் பயிற்சி பெறுகிறாள்”.. என்பதுதான்!. பொய் சொல்லக் கூடாது பாப்பா!..

 

பின்னர் அடிக்கடி நான் அங்கே வகுப்பு எடுக்கப் போகும்போதெல்லாம்.. எனக்கு தேநீர் கொண்டுவர இரண்டு மூன்று பேர் சண்டை பிடிப்பார்கள்..அதில் அவளும் ஒருத்தி..! எண்ணி ஒரு வருடத்துக்கு பின்னர் ஓர் நாள்.. சாதாரண குட்டைப் பாவாடையுடன், கழுத்தில் ஓர் படப் பிடிப்பு கருவி தொங்க, என் முன் வந்து, வீட்டு வாசலில் நின்றாள் ..! எனக்கு ஆச்சரியமாக இருந்தது!

 

“என்னடி..இயக்கத்தை விட்டுவிட்டியா..?” -என்று கேட்டேன்

 

“ச்சீ.. மூணுநாள் லீவு..” என்றாள்..

 

“ஒரு வருசம் கூட ஆகல்ல.. அதுக்குள்ள ஆர் உனக்கு லீவு தந்தது?” என்று கேட்டேன்..

 

“ஆக்கள்தான்..”

 

ஒ.. மீண்டும் அந்த வாய் நீண்டுவிட்டது.. இன்னும் மூன்று நாளைக்கு தொல்லைதான்! என்று நினைத்தேன்..

ஆனால்… என்னுடன் சேர்ந்து படம் எடுப்பதிலேயே பத்து பதினைந்து முறை செலவிட்டாள் ..!

மனைவி நேரடியாக பகிடியாக அவளிடம் இப்படி கேட்டார்!

 

“என்னடி அவரோட சேர்ந்து படம் எடுக்கத்தானோ இந்த கமேறாவை கொண்டு வந்தனி ..”?

 

“ஓம்..”

 

அரிவாள் வீச்சுப்போல் வந்தது அவளிடம் இருந்து பதில்!

 

ஆயினும், அப்போது அவளிடம் நான் காண முடியாமல் இருந்தது.. அவளது அந்த சுருண்ட, நீளமான கூந்தலையும்.. அந்தச் சின்னஞ் சிறு கள்ளமில்லா முகத்தையும்தான்! !

அன்று எங்கள் வீட்டில்தான் படுத்தாள்!.. கடற் புலிகள் அமைப்பில் தான் செய்த வித்தைகள் எல்லாவற்றையும் என்னிடம் சொல்லிவிட வேண்டும் என்பதற்காகவே அங்கே அன்று தங்கினாள் ! …. விறாந்தையில் அமர்ந்திருந்து..

 

சரிசாமம் சேவல் கூவும் வரை.. என்னை தூங்கவிடாமல்.. தான் பங்கு பற்றிய சண்டைகள்.. லெப் கேர்ணல் நளாயினியின் திறமை.. போன்றவற்றை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தபோது.. எனக்கும் தூக்கம் பறந்துபோய் விட்டது..!

 

“போடி.. போ… புழுகாதை..” என்று அறைக்குள் இருந்து வந்த வார்த்தைக்கு, அவள் சொன்ன பதில் என்ன தெரியுமா?

 

“”உங்களுக்கு என்ன தெரியும்?.. போய் சமையுங்கோ ..”

 

ஆம்.. அவள்.. அப்போது கடற் புலிகள் மகளிர் அமைப்புத் தளபதி…. லெப் கேர்ணல் நளாயினியின் முக்கிய மெய்க் காப்பாளர்..!

 

அவள் தரையில் பிறந்து வளர்ந்த முயல்.. இப்போது கடலில் இருபது கிலோ மீட்டர் தூரம் தினமும் நீந்தும் ஓர் சுறா!.. மட்டும் அல்ல.. அவள் ஓர் சிறந்த ஒட்டியும் கூட..!.. சிறந்த ‘எய்மர் ‘..வேறு!

“சாகர வர்த்தனா போர்க்கப்பலை கற்பிட்டிக் கடலில்.. லெப் கேர்ணல் நளாயினியும், ஒரு சில கரும்புலிகளும் மூழ்கடிக்கு முன்னர், கடைசி நிமிடம் வரை நளாயினியோடு, கூட நின்ற வீரக் குயில் அது!

அவள் லீவு முடிந்து முகாம் திரும்பும் போது, என் கண்கள் கலங்கிவிட்டன..! என் பெற்ற மகளைப் பிரியும் வேதனை போல் ஏதோ ஒன்று இதயத்தை வந்து அடைத்தது!

 

எண்ணி ஒரு மாதம் கூட ஆகவில்லை.. வன்னியில் 1996 இல் நான் இருந்தபோது என் காதுகளில் வந்து விழுந்த அந்த கெட்ட செய்தி..

 

வல்வை கடலில் நிகழ்ந்த பாரிய நேரடிச் சமர் ஒன்றில்.. கரும்புலிகளுடன்.. லெப் மகேஸ்வரியும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டாள் என்பதுதான்!

 

ஆம்.. அவள்தான்.. என் பெறாமகள்..! இல்லை நான் பெற்ற மகள் கூட என்மீது இப்படி பாசத்தை பொழிந்திருக்க முடியாது! எத்தனை கனவுகளை நாம் அழித்துவிட்டோம் அந்த மண்ணில்?

எத்தனை கற்பனைக் கோட்டைகளை நாம் இடித்து தகர்த்துவிட்டோம் அந்த மண்ணில்?

ஆயினும், நாம் இன்னும் நம்பிக்கையோடு நிமிர்ந்தே நிற்கிறோம்.. ஒரு நாளைக்காவது மீண்டும் எங்கள் சுதந்திர தமிழீழத்தில் கால் பதித்துவிட்டு மரணிப்போம் என்று!

 

ஈரம் கசியும்.. நெஞ்சின் நினைவில் இருந்து அழியாத நினைவு இது!

 

அரும்பிலே.. உதிர்ந்து மலர்ந்த என் மகள்!

 

– மு. வே. யோகேஸ்வரன்

 

http://www.velichaveedu.com/281152357/

Edited by ராஜன் விஷ்வா

  • கருத்துக்கள உறவுகள்

மகேஸ்வரியின் ஆத்மா எப்பவோ சாந்தியடைந்திருக்கும்...இணைப்பிற்கு நன்றி விஸ்வா

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி, ராஜன் விஷ்வா!

  • தொடங்கியவர்

ஊக்கமளித்த அனைவருக்கம் எனது நன்றிகள் :)

லெப்டினன்ட் மகேஸ்வரி சுண்டிக்குளம் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் கலம் மூழ்கடிப்பின் போது வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

 

இந்த கடற்சமரில் கடற்கரும்புலிகள் மேஜர் ஜெகநாதன் மற்றும் கப்டன் இளையவள் ஆகியோரும் லெப்.மகேஸ்வரி உட்பட 21 கடற்புலிகளும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

 

ராஜன் விஷ்வாவின் பதிவில் உள்ளது போன்று லெப்டினன்ட் மகேஸ்வரி கரும்புலி மாவீரர் அல்ல. கடற்புலி என்பதை மாறி பதிவு செய்து விட்டார் என்று நினைக்கிறேன்.

 

கடற்புலி லெப்டினன்ட் மகேஸ்வரி பற்றிய மேலதிக தகவல்கள்

http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=118&cid=7960

இணைப்புக்கு நன்றி, ராஜன் விஷ்வா!

  • தொடங்கியவர்

தகவலுக்கும் இணைப்பிற்கும் நன்றிகள் மின்னல் அண்ணா திருத்தி விட்டேன், உரியவருக்கும் தெரியபடுத்தி விட்டேன். ஆதவன் அண்ணா வருகைக்கு நன்றி...

Edited by ராஜன் விஷ்வா

  • கருத்துக்கள உறவுகள்

மு.வே.யோகேஸ்வரன்(வாஞ்சிநாதன்) ,இவரின் மகனொருவரும் ஆ.க.வெளி சமரில் வீரச்சாவடைந்திருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி தம்பி ராஜன் விஷ்வா 

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்தலுக்கு நன்றி ராஜன் விஷ்வா

  • தொடங்கியவர்

மு.வ அண்ணனுடன் முகப்புத்தகத்தில் பேசும் வாய்ப்பு கிடைத்தது, அவரின் திலீபனோடு பன்னிரண்டு நாட்கள் தொடரை தொடர்ந்து படிந்து வந்தேன் ஒரு கட்டத்திற்கு மேல் படிக்க முடியவில்லை. முகப்புத்தகத்தில் இவர் எழுதி வந்த வாய்க்கால் கரையோரம் தொடர் விரைவில் நாவலாக வரப்போகிறது... கருத்தும் பச்சையும் இட்ட அனைவர்க்கும் எனது நன்றிகள்...

(யாரேனும் கதையில் வரும் குறித்த மாவீரர் லெப்டினன்ட் மகேஸ்வரியின் படத்தை காண நேர்ந்தால் அறியத்தரவும் )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.