Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜனி திராணகம: நெருக்கடிக்கு மத்தியில் அறிவும் செயற்பாடும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜனி திராணகம: நெருக்கடிக்கு மத்தியில் அறிவும் செயற்பாடும்

on September 22, 2023

 
rajani-1200x550-1.jpg?resize=1200%2C550&

“என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி என்னை அமைதியாக்கிவிடும். ஆனால், அது வேற்று மனிதன் ஒருவனால் ஏந்தப்படும் ஒரு துப்பாக்கியாக இருக்காது. மாறாக எனது வரலாற்றைப் பகிர்ந்துகொள்ளும், இச்சமூகத்தில் வாழும் ஒரு பெண்ணின் கருவறையில் இருந்து பிரசவிக்கப்பட்ட ஒரு புத்திரனால் ஏந்தப்படும் துப்பாக்கியாகவே அது இருக்கும்.”

1989-09-15ஆம் திகதி ராஜனி தனது நண்பர் ஒருவருக்கு இறுதியாக எழுதிய கடிதத்திலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் உடற்கூற்றியற் துறையின் தலைவராகவும், மனித உரிமைச் செயற்பாட்டாளராகவும் 1980களில் யாழ்ப்பாணத்தில் இருந்தவாறு செயற்பட்ட ராஜனி திராணகம படுகொலை செய்யப்பட்டு செப்டெம்பர் 21ஆம் திகதியுடன் 34 வருடங்கள் ஆகின்றன. 1989ஆம் ஆண்டு, தனது 35 ஆவது வயதில், பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தில் தனது மாணவர்களுக்கு வாய்மொழி மூலப் பரீட்சை ஒன்றினை நடாத்திய பின், துவிச்சக்கர வண்டியிலே வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, தனது வீட்டுக்கு அருகாமையில் வைத்து ராஜனி படுகொலை செய்யப்பட்டார்.

இந்திய இராணுவத்தினரின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மருத்துவ பீடத்திலே கற்றல் நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்புவதற்காகவும் போரின் போது வன்முறையினால் பாதிக்கப்பட்டோரின் அனுபவங்களைப் பதிவு செய்வதிலும், போராட்டக் குழுக்களாலும், இராணுவத்தினாலும் பல்கலைக்கழக மாணவர்கள் துன்புறுத்தப்பட்ட சமயங்களில் அவர்களைப் பாதுகாப்பதிலும் ராஜனி உன்னிப்பாகச் செயற்பட்டார். மனித உரிமைகளுக்கான யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினை ஸ்தாபிப்பதிலும் ராஜனியின் பங்கு முக்கியமானது. வட இலங்கையிலே அச்சுறுத்தல், நெருக்கடிகள் நிறைந்த போர்ச்சூழலிலே அநாதரவாக விடப்பட்ட பெண்களின் நல்வாழ்வுக்காக ‘பூரணி’ என்கின்ற பெண்கள் இல்லத்தினை யாழ்ப்பாணத்தில் தோற்றுவிப்பதில் ராஜனி முன்னின்று பாடுபட்டார்.

ராஜனி திராணகமவினை நினைவுகூருகின்ற அதேநேரத்தில், ராஜனி திராணகம, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே கற்பித்து வந்த ராஜன் ஹூல், கோபாலசிங்கம் சிறீதரன், தயா சோமசுந்தரம் ஆகியோருடன் இணைந்து எழுதிய ‘முறிந்த பனை’ என்ற நூல் பற்றியும் நாம் சிந்திக்கலாம். 1980களின் இறுதி வருடங்கள் இனப் பிரச்சினையின் வரலாற்றில் முக்கியமான ஒரு காலப் பகுதி. ஆயுதப் போராட்டக் குழுக்கள் ஒன்றையொன்று தாக்கிக் கொண்ட காலம். இதே காலப்பகுதியில் இலங்கை இந்திய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, இந்திய அமைதிக் காப்புப் படை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைக் களைவது என்ற பெயரில் நாட்டின் வட கிழக்கில் வன்முறையில் ஈடுபட்டிருந்தது.

யாழ்ப்பாணத்திலே இருந்த தமிழ் மக்கள் தம்மைச் சார்ந்தோரினாலும், வெளிச் சக்திகளாலும் அடக்குமுறைக்கு உள்ளானார்கள். இந்த நிலையிலே வன்முறையின் பாதிப்புக்கள் பற்றி விபரமாகவும், ஆதாரபூர்வமாகவும் எழுதிய ‘முறிந்த பனை’, இனப்பிரச்சினை, இலங்கை அரசு, தேசிய விடுதலைப் போராட்டத்தின் இலக்குகள் மற்றும் மார்க்கங்கள், இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியாவின் தலையீடு என்பன பற்றி வரலாற்று ரீதியாக ஆராய்ந்து விமர்சனங்களை முன்வைத்தது. இங்கு முறிந்த பனை தமிழ்ச் சமூகத்தின் அரசியல் தலைமைகளின் போதாமைகள் குறித்தும், விடுதலைப் போராட்டத்தினைப் பற்றியும் தமிழ்ச் சமூகத்தினுள் இருந்தவாறு வைத்த விமர்சனங்கள் தனித்துவமானவை. இந்த விமர்சனங்களே ஆயுதம் தரித்த பல தரப்பினரும் இந்த நூல் தமது சிந்தனைகளுக்கும், செயற்பாடுகளுக்கும் அச்சுறுத்தலினை ஏற்படுத்துவதாக உணர்ந்தமைக்கான காரணம்.

இதுவே ராஜனி திராணகம படுகொலை செய்யப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. நான் யாழ்ப்பாணத்திலே பாடசாலை மாணவனாக இருந்த காலத்திலே இந்த நூலினைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். எனினும், 2005ஆம் ஆண்டிலே பேராதனைப் பல்கலைக்கழகத்திலே முதல் வருட மாணவனாக இருந்தபோதுதான் இந்தப் புத்தகத்தினை வாசிப்பதற்கான சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.

அரசியல் ரீதியான உறுதியான பிரக்ஞை எதுவுமில்லாத நிலையில், ஒரு விதமான பற்றுறுதி அற்ற தமிழ்த் தேசிய மனநிலையுடன் வளர்ந்து, யாழ்ப்பாண நடுத்தர வர்க்கக் குடும்பமொன்றிலிருந்து பல்கலைக்கழகம் சென்ற நான் இந்த நூலினை வாசித்த போது, முதலிலே என்னை ஈர்த்த விடயம் இந்த நூலின் அரசியல் நிலைப்பாடு அல்ல; மாறாக இந்த நூலினை எழுதியவர்கள் சமூகத்தின் மீது கொண்ட அக்கறையும், அன்பும், நேர்மை மீதான பற்றுறுதியும், அதற்காக அவர்கள் துணிச்சலுடன் எதிர்கொண்ட சவால்களுமே ஆகும்.

யாழ்ப்பாண வைத்தியசாலையின் மீது இந்திய இராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களினைப் பற்றி ராஜனி எழுதியுள்ள விரிவான குறிப்புக்கள் எனது மனதினை உருக்குபவையாக இருந்தன. விடுதலைப் புலிகள், இந்திய இராணுவம் என்ற இரண்டு தரப்புக்களைப் பற்றி மாத்திரமல்லாது, ஏனைய ஆயுதப் போராட்ட இயக்கங்கள், இலங்கை அரசாங்கம், அதன் படைகள் போன்ற பல்வேறு சக்திகள் தமிழ் மக்கள் மீது இழைத்த வன்முறைகளையும் இந்த நூல் ஆவணப்படுத்தியது. போராட்டத்தினையும், அதன் வன்முறைகளையும், அவை சமூகத்தின் மீது ஏற்படுத்திய பாதிப்புக்களையும் பற்றி எழுதுவதனைத் தானும் முறிந்த பனை நூலின் ஏனைய ஆசிரியர்களும் எவ்வாறு நோக்குகிறோம் என தான் இறப்பதற்கு சில காலங்களுக்கு முன்னர் ராஜனி எழுதிய 1989ஆம் ஆண்டு நடுப்பகுதி நிகழ்ச்சிகள் என்ற பிற்குறிப்பு, நேர்மை, உண்மை, அறம், ஆழமான அறிவு சார் விசாரணை என்பவற்றினால் கட்டப்படும் அரசியலினைத் தேடிக்கொண்டிருக்கும் பலருக்கும் ஓர் உந்து சக்தியாக அமைகிறது:

“பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக துப்பாக்கியின் நீண்டதொரு நிழலின் கீழ், எந்த விதமான அர்த்தமோ நோக்கமோ இல்லாமல், சகல முனைகளிலிருந்தும் எழும் வன்முறையின் ஆதிக்கத்திலிருந்து நம் குழந்தைகளைக் காப்பாற்றிக்கொண்டு விடுவதற்காக, நம்பிக்கைக்கு மேல் நம்பிக்கை வைத்துக்கொண்டு, நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இன்னொரு பக்கத்தில், பதுங்கி ஒதுங்கி நின்று, இவை எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு விட்ட மக்கள் முகங்களையும் நாம் பார்க்க முடிகிறது. நோய்வாய்ப்பட்டு மோசமான நிலையில் இருக்கின்ற தருணத்திலே ஒருவர் உடல் ரீதியில் எதையாவது செய்து பார்க்க முயற்சி செய்வதைப் போலவே, இன்றைய சூழ்நிலையில் தெளிவான பார்வையுடன் அல்லது ஆராய்ச்சி மனப்பாங்குடன் நாம் எதையாவது செய்வது என்பது இருக்கின்றது.

எமது முன்னைய விவரணங்கள் ‘ஏதோ ஒரு நூலிழையைப் பற்றிக்கொள்ள’ முயல்வதாகத் தோன்றுவதாக யாரோ ஒருவர் குறிப்பிட்டார். எமது பகுப்பாய்வில் ஒருங்கிணைந்த பூரணத்துவத்தினை வெளிக்கொணரவும், ஒரு புரிதலைத் தேடிக் கொள்ளவும், ஒதுங்கிப் போய் நிற்கும் நிலைமைகளுக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கும் எமது சமூகத்திற்கு மீண்டும் புத்துயிர் ஊட்டவும், அதனை ஒழுங்குறச் செய்வதற்கான சில வழிகளைத் தேடவும் நாங்கள் அதனைச் செய்ய வேண்டி இருந்தது. புறநிலை ஆய்வு என்பதனை வெறும் கல்வி வளாக ஆராய்ச்சிக்கான ஒரு பயிற்சியாக மட்டும் நாம் கருதவில்லை. புறநிலை நோக்கும், சத்தியத் தேடலும், விமர்சன பூர்வமான நேர்மையான நிலைப்பாடுகளை எடுத்து விளக்குவதும், எமது சமூகத்துக்கு இன்று மிகவும் அவசியமாக உள்ளது. இதற்கு விலையாக எம்மில் சிலரின் உயிரும் பறிபோகலாம். இதனைவிட்டால் எமது சமூகத்திற்கு வேறு மார்க்கம் இல்லை என்ற ரீதியிலேயே நாம் இதைக் கைக்கொண்டுள்ளோம்.”

இந்த நூலினை நான் திரும்பத் திரும்ப வாசிக்கின்ற சந்தர்ப்பங்களிலே அது எனது அரசியற் பார்வையினை செழிமைப்படுத்துவதனை நான் உணர்ந்தேன். காலனித்துவ எதிர்ப்புக் காலத்திலே உருவாகிய பௌத்த சிங்கள தேசியவாதத்தின் அடிப்படையில் அமைந்த இலங்கை அரசின் உருவாக்கத்தின் பின்னணியில் தமிழர்களும் ஏனைய சிறுபான்மை இனத்தவரும் சந்தித்த ஒடுக்குமுறைகளையும், வன்முறைகளையும் முறிந்த பனை மிகவும் ஆழமாக அலசுகிறது.

இனப் பிரச்சினையினை தமிழ் சிங்களப் பிரச்சினையாக குறுகிய இருமைகளினூடாக நோக்கும் அணுகுமுறைகளுக்கு ஒரு மாற்றினை வழங்கும் இந்த நூல், ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை சமூகங்களின் விடுதலையில் மிகுந்த கரிசனையினைக் கொண்டிருக்கிறது. தமிழ் அரசியலின் வெவ்வேறு காலகட்டங்களை உரிய இடங்களிலே விமர்சன ரீதியாகவும், அனுதாபத்துடனும் ஆராய்கின்ற முறிந்த பனை, உன்னதமான நோக்கங்களுக்காகத் தொடங்கப்பட்டு பல்வேறு மேன்மையான தியாகங்களைப் புரிந்த ஆயுத ரீதியிலான விடுதலைப் போராட்டம் மக்களிடம் இருந்து தன்னைத் துண்டித்து, ஆயுதக் குழுக்கள் ஒன்றை ஒன்று அழித்துச் செயற்படுவதனை நோக்கிச் சென்று, இந்தியா போன்ற வல்லரசுகளின் தயவிலே எமது விடுதலையினை விட்டுச்சென்றுள்ளதனை மனம் வருந்தி எழுதியது.

ஆரம்பத்திலே விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்ட ராஜனி திராணகம பின்னர் அந்த இயக்கத்தினை விட்டு வெளியேறிமைக்கு இந்தக் காரணங்களில் சில முக்கியமானவையாக இருந்தன. தேசியவாதத்தினையும், இடதுசாரி அரசியலின் சில வரட்டுத்தரமான அடிப்படைகளினையும் ராஜனி தனது அரசியல் சிந்தனைகளிலும், செயற்பாடுகளிலும் கேள்விக்குட்படுத்தி வந்துள்ளார் என்பதனையும் இவை எடுத்துக்காட்டுகின்றன.

இராணுவ பலத்தினை மையமாகக் கொண்ட விடுதலைப் புலிகளின் அரசியல், மக்களை எங்கே கொண்டு சென்று விடும் என்பதனை ஆராய்ந்த ராஜனி திராணகம, முள்ளிவாய்க்கால் துயரத்திற்கான முக்கியமான சில காரணிகளை 25 வருடங்களுக்கு முன்னரே தீர்க்கதரிசனமாகக் கூறிச் சென்றுள்ளார்:

“புலிகளின் வரலாறு, அவர்களது தத்துவ வறுமை, காத்திரமான அரசியற் பார்வை இன்மை, சகிப்புத் தன்மையின்மை, வெறித்தனமான அர்ப்பணிப்பு போன்றனவே, அவர்களின் உடைவுக்கு, இறுதிக் காரணமாக அமையப் போகிறது. புலிகளின் காவிய நாயகர்கள் தங்களின் தவறுகளால் பலியாகிப் போனவர்களின் கண்ணீராலும், ரத்தத்தினாலும் பூசப்பட்ட காவியங்களைச் சுமந்தவாறே மடிவர். இந்தச் சாம்பலில் இருந்து புதிய புலிகள் எழுந்து வரப் போவதில்லை. இந்த முழுச் சரித்திரத்திலிருந்தும், அதன் மேலாதிக்கக் கருத்தியலில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளும்போது தான் விடுதலைக்கான ஒரு புதிய பார்வை பிறக்க முடியும்.”

தான் சார்ந்த சமூகத்தின் விடுதலையினை மாத்திரம் மையப்படுத்திய தமிழ்த் தேசிய அரசியலின் குறுகிய மனநிலையினையும், தமிழ் மக்கள் மத்தியில் நிலவிய சாதி, வர்க்க, பால் மற்றும் பிராந்திய வேற்றுமைப்படுத்தல்களைச் சமூக ரீதியாகக் களைவதில் இருந்து தமிழ்த் தேசியவாதம் தவறியமையும் சுட்டிக்காட்டிய முறிந்த பனை, சிங்கள தமிழ் மக்களிடையே நல்லுறவினை வளர்ப்பதின் ஊடாகவும், நாட்டின் எல்லா சமூகங்களினையும் அரசியல் உரையாடல்களில் பங்குபெறச் செய்வதன் ஊடாகவுமே, எமது பிரச்சினைகளுக்குப் பிற சக்திகளின் தலையீடு இன்றி ஒரு தீர்வினை நாம் பெறமுடியும் என்பதனை வலியுறுத்தியது.

தென்னிலங்கை அரசியலிலே இடதுசாரிகள் பலவீனப்பட்டுப் போனமையினையும், அவர்கள் சிங்களத் தேசியவாத நிகழ்ச்சிநிரலில் தம்மை இணைத்துக்கொண்டமையினையும் தீவிரமாக விமர்சனம் செய்யும் முறிந்த பனை, இனங்களுக்கு இடையிலான நல்லுறவினை ஏற்படுத்துவதிலுள்ள சவால்களைப் பற்றி நன்கு அறிந்திருந்தது. எனினும், இணைந்து செயற்படுவதிலே இருந்த சிரமங்களுக்கு மத்தியிலும் அதனை ஒரு இலக்காக முன்னிறுத்தி, அரசியல் சிந்தனையிலும், செயற்பாட்டுத் தளத்திலும், எது முடியும் என்பதற்கு அப்பால், எந்த இலட்சியத்தினை நோக்கி நாம் பயணிக்க வேண்டும் என்பதனை முறிந்த பனை கோடிட்டுக்காட்டியது.

முறிந்த பனை எழுதப்பட்டு இருப்பத்தைந்து வருடங்கள் கடந்து சென்றாலும், அந்த நூலிலே முன்வைக்கப்பட்டுள்ள இவ்வாறான சில கருத்துக்கள் இன்றைய எமது அரசியற் சூழலுக்கும் மிகவும் பொருந்துகின்றன. போர்க்காலத்திலே பெண்கள் எதிர்நோக்கிய பொருளாதார, கலாசார ரீதியிலான சவால்களை அவர்களின் அனுபவப் பதிவுகளாக முறிந்த பனையில் ராஜனி திராணகம விபரிக்கிறார்.

அன்றைய நாட்களில் இந்திய இராணுவத்தின் பாலியல் துன்புறுத்தல்கள் ஒரு புறமாகவும், துன்புறத்துல்களை எதிர்நோக்கிய பெண்கள் மீது சமூகம் கொண்டிருந்த ஆணாதிக்கப் பார்வை மறுபுறமாகவும், பெண்களைப் பல்வேறு மட்டங்களில் ஒடுக்கியது என்பதனை ராஜனி விளக்குகிறார். தங்கள் குடும்பங்களின் தனிப்பட்ட மதிப்பும் மரியாதையும் சமுதாயத்தின் பார்வையில் குறைந்து விடக்கூடாது என்று கருதியமையால், நடுத்தர வர்க்க, உயர் சாதிப் பெண்கள் தாம் எதிர்கொண்ட பாலியல் அச்சுறுத்தல்கள் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கும், துன்புறுத்தல்களை மேற்கொண்ட இராணுவத்தினரை எதிர்கொள்வதற்கும் தயங்கினர் எனக் கூறும் ராஜனி திராணகம, மீனவக் கிராமம் ஒன்றினைச் சேர்ந்த தொழிலாளர் வர்க்கப் பெண்கள் தமது சமூகத்தினைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான போது, ஒரு குழுவாகத் திரண்டு சென்று, தமது பிரதேசத்துக்குப் பொறுப்பான இந்திய இராணுவ அதிகாரியிடம் முறையிட்டு, துன்புறுத்தலில் ஈடுபட்ட படைவீரர்களை அடையாளம் காட்டிய ஒரு சம்பவத்தினைக் குறிப்பிடுகிறார்.

இந்தச் சம்பவத்தின் ஊடாக, ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவினர் கூடிய சமூக உணர்வு கொண்டவர்களாக இருந்தனர் என்பதனையும், அவர்களிடம் காணப்பட்ட கூட்டு எதிர்ப்பு மனநிலையினையும் ராஜனி வெளிக்கொணர்கிறார். நெருக்கடிகள் நிறைந்த ஒரு சூழலிலே ஓர் அறிவுஜீவியின் சமூகப் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ராஜனி திராணகம எடுத்துக்காட்டாக அமைகிறார்.

ஒடுக்குமுறை அதிகரிக்கும் போது, விடுதலைக்காக முன்வைக்கப்படும் சிந்தனைகளையும், மார்க்கங்களையும் பற்றி எவரும் கேள்வி கேட்பது இல்லை. எவை எல்லாம் எம்முன் தீர்வுகளாக எழுச்சி பெற்று நிற்கின்றனவோ, அவற்றினை மாத்திரம் முன்னிறுத்தி, அவை காட்டுகின்ற பாதையினையே பின்பற்றி, விடுதலையினைத் தேடுவது எமது பழக்கமாக இருக்கிறது. இங்கு புத்தாக்கச் சிந்தனைக்கும், அரசியல் அறத்துக்கும் அதிக இடம் இல்லை. எம்மைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றி, மற்றையவர்களைப் பற்றி எல்லாம் நாம் சிந்திப்பதில்லை.

எமது விடுதலைக்காக நாம் முன்வைக்கும் கருத்துக்கள், கோட்பாடுகள், எமது விடுதலைப் பாதை என்பன, எம்மத்தியில் வாழும், எம்மைச் சுற்றி வாழும் மற்றைய சமூகங்களை எப்படிப் பாதிக்கும் என்பது பற்றி நாம் ஆராய்வதில்லை. இவ்வாறான ஒரு சூழலிலே ஓர் ஆய்வாளனின் பணி என்ன என்ற கேள்வி எழுகிறது. எம்முன் எழுச்சி பெற்று நிற்கின்ற, எமது அரசியல் எதிர்காலம் குறித்து முடிந்த முடிவாக தெரிகின்ற தீர்வுகளை மாத்திரம் ஒரு ஆய்வாளர் வலியுறுத்த வேண்டும் என்ற கருத்து அபத்தமானது.

நெருக்கடியான தருணங்கள் எம்மிடம் இருந்து புதிய சிந்தனைகளையே கோருகின்றன. இந்தத் தருணங்களிலே, ஆய்வாளனின் கடமை, சமூகத்திலே பிரபலமாக இருக்கின்ற அல்லது செல்வாக்குப் பெற்று இருக்கின்ற கருத்துக்கள் எந்த அளவுக்கு நியாயத் தன்மை கொண்டுள்ளன என்பது பற்றி ஆராய்ந்து, அவ்வாறான கருத்துக்களுக்கு அறம் சார்ந்த, நீதி சார்ந்த பதில்களை முன்வைப்பதாக இருக்கிறது. இதனுடைய அர்த்தம் ஆய்வாளர் சமூகத்தில் இருந்து தன்னைத் துண்டித்துக்கொள்கிறார் என்பது அல்ல; மாறாக, சமூகம் தன்னைத் தனது கூட்டுச் சுயநல மனப்பான்மையில் இருந்து விடுவித்து, சமூகத்திலுள்ள எல்லோரும் அறிவுஜீவுகள் என்ற நிலையில் இருந்து சிந்திக்கவும், செயற்படவும், விடுதலையினைத் தேடவும் ஊக்கப்படுத்தும் ஒரு முயற்சியே இதுவாகும்.

இவ்வாறான ஒரு சிந்தனையினைத் தமிழ்ச் சமூகத்தின் மத்தியிலிருந்தவாறு மேற்கொண்ட ஒரு புத்திஜீவியே ராஜனி திராணகம. முறிந்த பனை தமிழ் சமூகத்தின் மீது கொண்டுள்ள கரிசனை இவ்வாறான பரந்துபட்ட ஒரு மனிதநேயத் தளத்திலிருந்தே எழுகின்றது. இந்தக் கரிசனையே மனித உரிமைகளுக்கான யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினர்களாகிய ராஜன் ஹூலையும், கோபாலசிங்கம் சிறீதரனையும், ராஜனியின் மறைவின் பின்னர் 20 வருடங்களாகத் தலைமறைவாக இருந்து போரின் போது இலங்கையிலே இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை பக்கச்சார்பற்ற முறையில் வெளிக்கொண்டு வருவதற்குத் தூண்டியது.

முறிந்த பனை எழுதப்பட்டு 34 ஆண்டுகள் கடந்து விட்டன. சமத்துவம், சமூக நீதி என்பவற்றின் அடிப்படையில் இனப் பிரச்சினைக்கான அரசியற் தீர்வு எதுவுமே நாட்டின் சிறுபான்மை இனங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. தமிழ் சமூகங்களின் மத்தியிலே பால்,வர்க்க, சாதி வேற்றுமைப்படுத்தல்கள் தொடர்ந்தும் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன. போரினால் ஏற்பட்ட வடுக்களில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் மீளவில்லை. சிறுபான்மையினரும், பொருளாதார ரீதியில் நலிவுற்றோரும் வாழ்ந்து வந்த நிலங்கள் நாட்டின் பல பகுதிகளில் இராணுவத் தேவைகளுக்காகவும், அபிவிருத்தி என்ற பெயரிலும் சுவீகரிக்கப்பட்டு வருகின்றன. தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகள் அரசின் அனுசரணையுடன் சிங்கள பௌத்த மயமாக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கானோர் காணாமற்போன தமது உறவுகளைக் கண்ணீருடன் தேடிக் கொண்டிருக்கிறார்கள். வட கிழக்கில் இராணுவத்தின் தலையீடு எமது எல்லா விதமான செயற்பாடுகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது. மக்கள் தமது அரசியல் உரிமைகள் குறித்துப் பேசவும், அவை தொடர்பாகச் செயற்படுவதற்காகவும் உள்ள வெளிகள் இராணுவத்தின் தீவிர கண்காணிப்பின் கீழே இருக்கின்றன.

இந்த சூழலிலே தமிழ் அரசியற் தரப்புகள் வெளிச்சக்திகளின் ஆதரவுடன் தான் தீர்வினைப் பெறுவதில் மேலும் மேலும் ஆர்வம் காட்டிவருகின்றனர். தமிழ்த் தேசியவாதம் தென்னிலங்கையில் உள்ள முற்போக்கான சக்திகளுடன் உறவு கொள்வது பற்றிச் சிந்திப்பது இல்லை. அதேநேரம், தென்னிலங்கையிலும் முற்போக்கு சக்திகள் சிங்கள தேசியவாதத்தினால் விழுங்கப்பட்டு வருகின்றன. தற்போது முஸ்லிம் மக்கள் சிங்கள பௌத்தத் தேசியவாதத்தின் அடக்குமுறையினைத் தீவிரமாக உணரத் தொடங்கியிருக்கிறார்கள். அரசாங்கத்தின் வெற்றுத் தேசியம் பொருளாதார ரீதியில் ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றி வருகிறது.

வெவ்வேறு வடிவங்களில் ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்களாகிய நாம் பல துருவங்களாகிப் போய், ஒருவரை ஒருவர் எதிர்ப்பதில் எமது நேரத்தினையும், சக்தியினையும் செலவிடுகிறோம். இதன் மூலம் எமது பொது எதிரியான அரசு பொறுப்புக் கூறலில் இருந்து தப்பிப்பதற்கு நாமே வழி செய்கிறோம். இவ்வாறான விரக்தியூட்டும் சூழலில் இணைந்து செயற்படுவது எவ்வாறு என்ற கேள்விக்கு முறிந்த பனை காட்டும் வழி, இணைந்து செயற்படுவதில் உள்ள ‘கஷ்டங்களை விசுவாசத்தோடு எதிர்கொள்வது’ என்பதாகும்.

இந்த விசுவாசத்தினைக் கட்டியெழுப்பவும், இணைந்து செயற்படுவது பற்றிய உரையாடல்களினை மேற்கொள்ளவும், அதற்கான செயற்றிட்டங்களை உருவாக்கவும், அவற்றினை முன்னெடுப்பதில் உள்ள கஷ்டங்களை வெற்றிகொள்ளவும் நாட்டில் செயற்படும் முற்போக்கு சக்திகள் நாடு முழுவது தளங்களை உருவாக்க வேண்டும். எமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நாமே தேடிக் கொள்ளவும், எம்மிலும், சமூகத்திலும், அரசிலும் ஆரோக்கியமான மாற்றங்களை நாம் ஏற்படுத்தவும், ராஜனி திராணகமவும், முறிந்த பனையும் எமக்குக் காட்டியிருக்கின்ற பாதை இதுவே.

Mahendran-Thiruvarangan.jpg?resize=110%2மகேந்திரன் திருவரங்கன்

(ராஜனி திராணகம கொல்லப்பட்டு நேற்றோடு 34 வருடங்களானதை முன்னிட்டு ராஜனியின்  25ஆவது ஆண்டு நினைவுதினத்தன்று எழுதப்பட்ட கட்டுரையை [அப்டேட்] மீள்பிரசுரம் செய்கிறோம்.)
 

 

https://maatram.org/?p=11051

  • Replies 100
  • Views 8.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, கிருபன் said:

“புலிகளின் வரலாறு, அவர்களது தத்துவ வறுமை, காத்திரமான அரசியற் பார்வை இன்மை, சகிப்புத் தன்மையின்மை, வெறித்தனமான அர்ப்பணிப்பு போன்றனவே, அவர்களின் உடைவுக்கு, இறுதிக் காரணமாக அமையப் போகிறது. புலிகளின் காவிய நாயகர்கள் தங்களின் தவறுகளால் பலியாகிப் போனவர்களின் கண்ணீராலும், ரத்தத்தினாலும் பூசப்பட்ட காவியங்களைச் சுமந்தவாறே மடிவர். இந்தச் சாம்பலில் இருந்து புதிய புலிகள் எழுந்து வரப் போவதில்லை. இந்த முழுச் சரித்திரத்திலிருந்தும், அதன் மேலாதிக்கக் கருத்தியலில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளும்போது தான் விடுதலைக்கான ஒரு புதிய பார்வை பிறக்க முடியும்.”

புலிகள் இன்று இல்லாமையினால் ஒவ்வொருவரும் தமக்குச் சரியென்கிற பார்வையில் தமது நியாயங்களை முன்வைத்து, அவற்றினைப் பின்பற்றாமமையினாலேயே புலிகள் அழிக்கப்பட்டனர் என்று சொல்வது வாடிக்கையாகிவிட்டது. புலிகளுக்கு அரசியல் அறிவு இருக்கவில்லை, ஆயுதத்தில் நம்பிக்கை வைத்தார்கள், அரசியல் சித்தார்ந்தம் தெரிந்திருக்கவில்லை....இப்படியே பல தசாப்த்தங்களை அவர்களைக் குற்றஞ்சொல்லிச் சொல்லியே கடந்துவிட்டோம். 

இப்போது புலிகள் இல்லை. இன்று பேசும் மனிதவுரிமைவாதிகளும், இடதுசாரிச் சிந்தனையாளர்களும், மிதவாதிகளும், புலிகளின் போராட்டத்தை தவறென்று விமர்சிப்போரும் தாம் எதிர்பார்த்த, விரும்பிய விடுதலையும், சுதந்திரமும் கொண்ட வெளியொன்று கிடைத்திருக்கின்றது என்று திருப்திப்பட்டுக்கொள்ளலாம். ஆகவே, அவ்வெளியினைப் பாவித்து தெற்கில் இருந்து தமிழர்களுக்கான விடுதலையினைப் பெற்றுத்தரலாம். எவரும் மறிக்கப்போவதுமில்லை, ஏன் என்று கேட்கப்போவதுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரஞ்சித் said:

புலிகள் இன்று இல்லாமையினால் ஒவ்வொருவரும் தமக்குச் சரியென்கிற பார்வையில் தமது நியாயங்களை முன்வைத்து, அவற்றினைப் பின்பற்றாமமையினாலேயே புலிகள் அழிக்கப்பட்டனர் என்று சொல்வது வாடிக்கையாகிவிட்டது. புலிகளுக்கு அரசியல் அறிவு இருக்கவில்லை, ஆயுதத்தில் நம்பிக்கை வைத்தார்கள், அரசியல் சித்தார்ந்தம் தெரிந்திருக்கவில்லை....இப்படியே பல தசாப்த்தங்களை அவர்களைக் குற்றஞ்சொல்லிச் சொல்லியே கடந்துவிட்டோம். 

இப்போது புலிகள் இல்லை. இன்று பேசும் மனிதவுரிமைவாதிகளும், இடதுசாரிச் சிந்தனையாளர்களும், மிதவாதிகளும், புலிகளின் போராட்டத்தை தவறென்று விமர்சிப்போரும் தாம் எதிர்பார்த்த, விரும்பிய விடுதலையும், சுதந்திரமும் கொண்ட வெளியொன்று கிடைத்திருக்கின்றது என்று திருப்திப்பட்டுக்கொள்ளலாம். ஆகவே, அவ்வெளியினைப் பாவித்து தெற்கில் இருந்து தமிழர்களுக்கான விடுதலையினைப் பெற்றுத்தரலாம். எவரும் மறிக்கப்போவதுமில்லை, ஏன் என்று கேட்கப்போவதுமில்லை.

இன்னும் தனி நாடு கேட்பது உங்களை போல் ஒரு சிலர் தான் ...ஊரில் இருப்பவர்கள் கேட்டால் உங்களை அடிக்க வருவார்கள் ...அப்பவே இப்படி தான் போராட்டம் முடிய போகிறது என்று தெரிந்து தான் பலர் விலகினார்கள் என்று நினைக்கிறேன் ...நான் இன்னும் இந்த கட்டுரையை வாசிக்கவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ரஞ்சித் said:

புலிகள் இன்று இல்லாமையினால் ஒவ்வொருவரும் தமக்குச் சரியென்கிற பார்வையில் தமது நியாயங்களை முன்வைத்து, அவற்றினைப் பின்பற்றாமமையினாலேயே புலிகள் அழிக்கப்பட்டனர் என்று சொல்வது வாடிக்கையாகிவிட்டது. புலிகளுக்கு அரசியல் அறிவு இருக்கவில்லை, ஆயுதத்தில் நம்பிக்கை வைத்தார்கள், அரசியல் சித்தார்ந்தம் தெரிந்திருக்கவில்லை....இப்படியே பல தசாப்த்தங்களை அவர்களைக் குற்றஞ்சொல்லிச் சொல்லியே கடந்துவிட்டோம். 

இப்போது புலிகள் இல்லை. இன்று பேசும் மனிதவுரிமைவாதிகளும், இடதுசாரிச் சிந்தனையாளர்களும், மிதவாதிகளும், புலிகளின் போராட்டத்தை தவறென்று விமர்சிப்போரும் தாம் எதிர்பார்த்த, விரும்பிய விடுதலையும், சுதந்திரமும் கொண்ட வெளியொன்று கிடைத்திருக்கின்றது என்று திருப்திப்பட்டுக்கொள்ளலாம். ஆகவே, அவ்வெளியினைப் பாவித்து தெற்கில் இருந்து தமிழர்களுக்கான விடுதலையினைப் பெற்றுத்தரலாம். எவரும் மறிக்கப்போவதுமில்லை, ஏன் என்று கேட்கப்போவதுமில்லை.

ரஞ்சித், நீங்கள் கூறியது போல் ஒரு விடுதலையும் சுதந்திரமும் கொண்ட இடைவெளி கிடைக்க வில்லை.  விடுதலைப்புலிகள் ஆயுதரீதியில் தோற்கடிக்கப்பட்டதானது தமிழ் மக்களின் போராட்டத்தை பல தலைமுறைகளுக்கு பின்தள்ளி இன்று அதல பாதாளத்தில் உள்ளது என்பதே உண்மை.

இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் தலைமுறையால் போராடுவதை பற்றி நினைக்கக் கூட முடியாத அளவுக்கு மக்களுன் மனோபலம் சிதைந்து கிடப்பதை நாட்டு நடப்பு அறிந்த சாதாரண மக்களாலே கூட உணர்ந்து கொள்ள முடியும். இந்நிலையில் தற்போது எவராலும்  விடுதலையை பெற்று தர முடியது. அந்த வல்லமை எவருக்கும் இல்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, island said:

ஒரு விடுதலையும் சுதந்திரமும் கொண்ட இடைவெளி

புலிகள் இருக்கும்போது சுவாசிக்க முடியவில்லை, சுதந்திரமாக இயங்கமுடியவில்லை, விமர்சிக்க முடியவில்லை என்று பலர் ஏங்கிக்கொண்டிருந்தார்கள். அவ்வாறு ஏங்கியவர்களுக்கான இடைவெளி இன்று கிடைத்திருக்கிறது என்கிற அர்த்தத்திலேயே நான் எழுதினேன். அவர்கள் எதிர்ப்பார்க்கும் அந்தச் சுதந்திர இடைவெளிக்கும் தமிழர்கள் எதிர்ப்பார்க்கும் சுதந்திர இடைவெளிக்கும் இடையே நீண்ட வேறுபாடு இருக்கிறது என்பது எனக்குத் தெரியாதது அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்

திராணகம, ராஜன் ஹூல், தயா சோமசுந்தரம் ...இப்படி பலர் சேர்ந்து எழுதிய முறிந்த பனை அந்தக் காலப்பகுதியின் எங்களுடைய "மக்கள் வரலாறு" என்பது என் அபிப்பிராயம். மக்கள் வரலாற்றிற்கும் "வரலாற்றிற்கும்: என்ன வேறு பாடு?

டேவிட் மக்கலோ எழுதிய "1776" என்ற அமெரிக்க சுதந்திரப் போர் வரலாற்றில், தலைமைகள் என்ன செய்தன, படைகள் என்ன செய்தன என்பது மட்டும் தான் விபரிக்கப் பட்டிருக்கும், இடையிடையே எப்போதாவது தான் அந்தக் கால அமெரிக்க பொதுமகன்/மகள் எட்டிப் பார்ப்பார்கள். ஹோவார்ட் சின் எழுதிய "அமெரிக்க மக்கள் வரலாறு" என்பது தனியே அமெரிக்க பொதுமக்களின் அன்றாட அனுபவங்கள் பற்றியதாக இருக்கும். ஒரு சமூகத்தின் வரலாற்றை பதிவு செய்ய இந்த இரு வகை வரலாறுகளும் முக்கியமானவை.

நாம் செய்ததோ, முறிந்த பனையில் இருந்த மக்கள் வரலாறு எமக்கு உவப்பாக இல்லை என தட்டிக் கழித்து அதை இன்று வரை மூலையில் வைத்திருப்பது தான். அதில் இருக்கும் தீர்க்க தரிசனமான கருத்துகளில் ஒன்றைக் கூட ஒருவர் - மேலே திருவரங்கன் செய்திருப்பது போல - மேற்கோள் காட்டினால், முதல் துலங்கலாக "கோபம்" வெளிவருகிறது. பின்னர், "இப்ப இதை மேற்கோள் காட்டுவோர் எதை சாதித்து விட்டார்கள்?" என்ற இளக்காரம் இரண்டாவதாக வெளிவருகிறது. அதைத் தாண்டி யாரும் செல்வதில்லை - அந்த உணர்ச்சியிலேயே முட்டுப் பட்டு நிற்கிறோம்.

பி.கு: அவரைக் கொன்றவர்களின் எதிர்ப்பார்ப்பிற்கு மாறாக, அமரர் திராணகம இன்னும் இலங்கை பற்றிப் பேசப்படும் இடங்களிலெல்லாம் பின்னணியில் உயிர்வாழ்கிறார். 2022 இல் புக்கர் பரிசு பெற்ற செஹான் கருணாதிலகவின் The Seven Moons of Maali Almeida" நாவலில், 'ராணி சீதரன்" என்ற பாத்திரமாக திராணகம பேசுகிறார். அதில் அவர் சொல்லும் ஒரு வசனம் "என்ன பிரயோசனம் வந்து விட்டது உயிரைக் கொடுத்தும்? எல்லாம் வீண்வேலை!" என்பதாக இருக்கிறது!

 

  • கருத்துக்கள உறவுகள்

முறிந்த பனை மட்டுமே மக்களின் அவலங்களை வெளிக்கொண்டுவந்தது, ஏனையவை எல்லாம் போர்ப்பரணியே பாடின என்கிற விளக்கத்தினை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்களின் அன்றாட வாழ்வில் போர் ஏற்படுத்திய அவலங்களை சாதாரண பத்திரிக்கைகள் முதல் மாதாந்த சஞ்சிகைகள், சர்வதேச ஊடகங்கள் ( அரச தரப்பு வாதம், புலிகள் தரப்பு வாதம் என்கிற தொனியில்) என்று பலவும் வெளிக்கொண்டுவந்திருந்தன. 

ஆனால், இவை எல்லாவற்றிற்கும் முறிந்த பனைக்கும் இடையிலான வித்தியாசம் என்னவெனில் நடந்த அவலங்களை மட்டுமல்லாது நடத்தியவர்கள் பற்றியும் முறிந்த பனை பேசியது. புலிகள், இலங்கை இராணுவம், இந்திய இராணுவம், இந்திய இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய ஏனைய ஆயுதக் குழுக்களின் மனிதவுரிமை மீறள்கள் குறித்தும் அது பேசியது. அதிகார பலத்திற்கெதிராக கேள்விகேட்டு விமர்சித்த முதலாவது ஆவணம் முறிந்த பனை.இதற்காகவே ரஜிணி கொல்லப்பட்டார். அவரைப் புலிகள் கொன்றிருப்பதாகப் பலர் கூறுகிறார்கள், இருக்கலாம், இதுகுறித்து விவாதிப்பதில் பயனில்லை, ஏனென்றால் கொல்லப்பட்டதை நியாயப்படுத்த நான் முயலப்போவதில்லை. நான் தலைகீழாக நின்றாலும் தவறு தவறுதான். நண்பர் ஒருவரிடம் நேற்று பேசிக்கொண்டிருந்தேன். தனது வாழ்நாளின் பெரும்பகுதியில் ஒரு ஆயுதம் தரித்த போராளியாகவே வலம்வந்து இறுதி 11 நாளில் மட்டும் காந்தியவாதியாக‌  உண்ணாவிரதம் இருந்து மரணித்த திலீபனை காந்தியின் ரேஞ்சுக்குப் பேசுகிறீர்கள், ஆனால் தனது வாழ்நாள் முழுதும் மனிதவுரிமை வாதியாக வலம்வந்து ஈற்றில் அதற்காகவே கொல்லப்பட்ட ரஜிணியைப் பற்றி நீங்கள் பேசுவதில்லை என்று கூறினார். அவர் கூறுவது சரியென்றே பட்டது. திலீபனின் தியாகத்தை போற்றும் நாம் ரஜிணியின் தியாகத்தையும் போற்றுதல் அவசியம். 

முறிந்தபனை பற்றி எவர் எப்போது பேசினாலும் இயல்பாகவே வரும் குற்றவுணர்ச்சியே என்னை இதற்கெதிராக எழுதத் தூண்டுகிறது. அது ரஜிணியைக் கொன்றது புலிகளாக இருக்கலாம் என்று என் உள்மனது உணர்வதால் எனக்கு நானே கூறும் சாட்டு, சமாதானம் என்றே வைத்துக்கொள்ளலாம். ஆனால், எனது சமாதானம் எதனையுமே மாற்றப்போவதில்லையென்பதும் எனக்குத் தெரியும். 

ரஜிணியைக் கொன்றது புலிகளே என்று நானே கூறிவிட்டு பின்னர் முறிந்தபனையினை விமர்சிப்பதில் எந்த விளைவும் இருக்கப்போவதில்லை. ஆனாலும், இன்னமும் என்மனதில் இதுகுறித்து நெருடிக்கொண்டிருக்கும் ஒரு சில விடயங்களை மட்டும் கூறிவிட்டுச் செல்கிறேன். அதையும் நான் எழுதினாலன்றி இதுகுறித்த சுயசமநிலையினை என்னால் அடையமுடியாது. 

ரஜிணியுடன் கூடவே இந்த ஆவணத்தை எழுதிய சிலர் குறித்தும் அவர்கள் சார்ந்த அமைப்புக் குறித்தும் எனக்கு விமர்சனங்கள் இருக்கின்றன. குறிப்பாக அந்த அமைப்பு ரஜிணியின் காலத்தின் பின்னர் நடந்துகொண்ட விதம். தமிழினம் மீதான படுகொலைகளின்போது அவ்வமைப்பு வெளியிட்ட அறிக்கைகள தமிழினத்திற்கெதிராகவும், தமிழர்களின் பிரதிநிதிகளுக்கெதிராகவும் (இப்படிக் கூறுவதால் பலருக்குக் கசக்கும் என்பதும் எனக்குத் தெரியும், அதற்காகக் கூறாமலும் இருக்க முடியாதல்லவா?) பாவிக்கப்பட்டன. போராட்டம் பயங்கரவாதமாகச் சித்திரிக்கப்பட இந்த ஆவணத்தை எழுதியவர்களின் பிந்நாளைய அறிக்கைகள் உதவின என்பதையும் மறுப்பதற்கில்லை. 

புலிகளை விமர்சிப்பதற்காகவும், போராட்டத்தைப் நீதியற்ற பயங்கரவாதமாகச் சித்தரிப்பதற்காகவும் சிங்கள ஊடகங்களும், அதிகாரவட்டங்களும் தமிழர்களுள் இருந்த ஜனநாயகவாதிகள்  என்கிற போர்வையினுள் ஒளிந்திருந்த புலியெதிர்ப்பாளர்களும்  ரஜிணியை ஒரு அடையாளமாகப் பாவித்தார்கள். நியாயமான போராட்டம் ஒன்றிற்கெதிராக அச்சமூகத்திற்குள்ளிருந்தே வரும் விமர்சனத்தை வெளியுலகு வராது வந்த மாமணியாகப் போற்றி மேடையமைத்துக்கொடுத்து அழகுபார்த்தது என்பது நாம் அறியாதது அல்ல. தான் எழுதிய ஆவணம் தனது இனத்திற்கெதிராக பாவிக்கப்படும் என்பதை ரஜிணி எதிர்ப்பார்த்தே எழுதியிருப்பார் என்று நான் நினைக்கவில்லை. தமிழர்களிடையே இருந்து தமிழரின் போராட்டத்தை விமர்சிக்கும் எந்த ஆவணமும் சிங்களத்தாலும், போராட்டத்திற்கு எதிரான சக்திகளாலும் வானளவாகப் போற்றப்படும் என்பதை புரிந்துகொள்வது கடிணமாக இருக்கப்போவதில்லை. அத்துடன், போராட்டத்தின் நியாயத்தனமையினையும், மக்களின் அவலங்களையும் மூடிமறைத்து,இந்த ஆவணத்தையும், ரஜிணியையும் மட்டுமே முன்னிறுத்தி "ஜனநாயகம்" என்கிற போர்வையில் வரையப்படும் சிங்களவர் ஒருவரின் ஆக்கம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறும் என்பதும் ஆச்சரியமில்லை. 

முடிவாக, முறிந்த பனையினை எழுதிய ரஜிணியும் இன்று உயிருடன் இல்லை அவரைக் கொன்றவர்களும் உயிருடன் இல்லை. வீரர்களின் மரணங்களைக் கொண்டாடுவதுபோல் வீரர்களை விமர்சித்தவர்களின் மரணங்களையும் நாம் கொண்டாடிக்கொண்டிருப்போம். 

Edited by ரஞ்சித்
spelling

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வரை ரஜனியை புலிகள்தானா கொன்றார்கள் என்பதில் எனக்கு பலத்த சந்தேகமே.

புலிகளை விட அவரை கொல்லும் தேவை இந்திய படைக்கும், அதன் கூட வேலை செய்து, பின்னர் புலிகளால் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் என மகுடம் சூடப்பட்ட அன்றைய கொலைகூட்டங்களுக்கும் இருந்தது.

ரஜீவ் கொலையிலாவது புலிகளை செய்ய வைத்து, பின் மாட்டிவிட்டாகள்.

இங்கே அவர்களே செய்து விட்டு புலிகள் மீது பழியை போட்டார்களோ என எண்ணத்தோன்றுகிறது.

ஆனால் உண்மையில் இதை அவர்கள் செய்யவில்லை எனில் - புலிகள் இதை ஐயத்துக்கு அப்பால் மறுத்திருக்க வேண்டும்.

ஆனால் அவர்கள் ஏனோ தெரியவில்லை பல விடயங்களில் never acknowledge, never deny, never complain எனும் நிலைப்பாட்டை எடுத்தனர். இதுவும் அதில் ஒன்றாகியது - அவர்கள் மீது பழியை தூக்கி போட வசதியாக போய் விட்டதாயும் இருக்கலாம்.

புலிகள் இப்படி என்றால் - அவர்களுக்கு வால் பிடித்தவர்கள் அடுத்த கட்டத்துக்கு போய் ரஜனியை ஏதோ தமிழ் இன துரோகி போல் சித்தரித்தும், முறிந்த பனை ஏதோ புலி/தமிழர் விரோத “சாத்தானின் வசனங்கள்” என்பது போலவும் நடந்து கொண்டது. புலிகள்தான் இதை செய்தார்கள் என்ற கதையாடலுக்கு உரம் சேர்த்தது.

அதேபோல் மறுவழமாக - எஞ்சிய UTHR உறுபினர்களின் நடவடிக்கையும், நிர்மலாவின் செயற்பாடுகளும் கூட, கண்ணை மூடி கொண்டு புலிகளை குற்றம் சுமத்துவதாகவும், தமது பழைய கறளை தீர்ப்பதாயுமே இருந்தது.

புலிகள், ரஜனி, அவரின் சகாக்கள், கொலைகுழுக்கள் எல்லாருமே தமிழர்களே.

இலங்கையும், இந்தியாவும் தமிழர் அல்லாத தரப்புகள்.

இந்த கொலையின் முழு நற்பயனை அடைந்தவை தமிழர் அல்லாத தரப்புகள்.

அப்படியாயின்….இந்த கொலையை யார் செய்திருக்க வாய்ப்பு அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

புலிகள் இப்படி என்றால் - அவர்களுக்கு வால் பிடித்தவர்கள் அடுத்த கட்டத்துக்கு போய் ரஜனியை ஏதோ தமிழ் இன துரோகி போல் சித்தரித்தும், முறிந்த பனை ஏதோ புலி/தமிழர் விரோத “சாத்தானின் வசனங்கள்” என்பது போலவும் நடந்து கொண்டது. புலிகள்தான் இதை செய்தார்கள் என்ற கதையாடலுக்கு உரம் சேர்த்தது.

இதை எழுதும் போது துல்பெனின் முறிந்த பனையை யாழில் மீள் பிரசுரிக்கும் முயற்சியும் - அது வெட்டி வீசப்பட்டதும் நினைவுக்கு வருகிறது.

இங்கே எத்தனை பேர் புத்தகத்தை முழுமையாக வாசித்தார்கள் என்பதை நான் எப்போதும் யோசிப்பேன்.

முல்லாக்கள் பத்வா கொடுத்ததால் அவர்கள் உலகம் பூராவும் கார்டூனை மூர்க்கமாக எதிர்ப்பதை பார்த்து ஏளனம் செய்யும் நாம், எந்த பத்வாவும் இல்லாமலே, இன்றும் அதையே செய்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

இதை எழுதும் போது துல்பெனின் முறிந்த பனையை யாழில் மீள் பிரசுரிக்கும் முயற்சியும் - அது வெட்டி வீசப்பட்டதும் நினைவுக்கு வருகிறது.

இங்கே எத்தனை பேர் புத்தகத்தை முழுமையாக வாசித்தார்கள் என்பதை நான் எப்போதும் யோசிப்பேன்.

முல்லாக்கள் பத்வா கொடுத்ததால் அவர்கள் உலகம் பூராவும் கார்டூனை மூர்க்கமாக எதிர்ப்பதை பார்த்து ஏளனம் செய்யும் நாம், எந்த பத்வாவும் இல்லாமலே, இன்றும் அதையே செய்கிறோம்.

முறிந்த பனை புலிகளுக்கு எதிரானதா?

முறிந்த பனையை  இணைக்கும் முயற்சி ஏன்  யாழ் இணையத்தில் தடுக்கப்பட்டது?

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

ஆனால் உண்மையில் இதை அவர்கள் செய்யவில்லை எனில் - புலிகள் இதை ஐயத்துக்கு அப்பால் மறுத்திருக்க வேண்டும்.

எனக்கிருக்கும் ஆதங்கமும் இதுவே. ஏன் இதனை உறுதிபட சொல்ல முடியவில்லை? சிலவேளை புலிகளால் செய்யப்பட்ட ஏனைய கொலைகளை உரிமை கோராது விட்டதன் மூலம் வேறு யாராவது செய்திருக்கலாம் என்கிற அனுமானத்தினை ஏற்படுத்தியது போல, இதனையும் அவர்கள் சந்தேகத்தின்கீழே விட்டிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. என்னவாக இருந்தாலும் அநியாயமான ஒரு கொலை. அவர் கொல்லப்பட்டதன் பிறகு அவரது கொலையினை வைத்து நடத்தப்பட்ட அரசியலும், அதனால் தமிழின விடுதலைப் போராட்டம் சந்தித்த தடங்கல்களும் , சூடிக்கொண்ட அவப்பெயரும் பன்மடங்காகி உள்நாட்டிலும் சர்வதேசத்தில் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்திவிட்டிருந்தன. 

 

4 hours ago, goshan_che said:

UTHR உறுபினர்களின் நடவடிக்கையும், நிர்மலாவின் செயற்பாடுகளும் கூட, கண்ணை மூடி கொண்டு புலிகளை குற்றம் சுமத்துவதாகவும், தமது பழைய கறளை தீர்ப்பதாயுமே இருந்தது.

இவரது சகோதரி நிர்மலா நித்தியானந்தனின் செவ்விகள் சிலவற்றை சிங்கள இனவாதிகள் காவித்திரிந்ததைப் பார்த்தேன். சீலன் குண்டடிபட்டிருக்கும்போது அவரைப் பார்த்துக்கொண்டவரா இப்படிப் பேசுகிறார் என்று சலித்துப் போனது. உறவை இழந்தவலி அவருக்குத்தான் தெரியும். 

4 hours ago, வாலி said:

முறிந்த பனை புலிகளுக்கு எதிரானதா?

புலிகளுக்கு ஆதரவானவர் பார்வையில் அது புலிகளுக்கும் எதிரானது, அவ்வளவுதான். ஆனால், ஏனைய இயக்கங்கள், இந்திய இராணுவம், இலங்கை இராணுவம் ஆகியவற்றிற்கெதிராகவும் ரஜிணி விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அவைபற்றி எவருமே பேசுவதில்லை. இன்னும் சொல்லப்போனால், அவரது கொலையினை புலிகளின் தலையில் போடுவதிலேயே இவர்கள் குறியாக இருந்தார்கள். 
 

Edited by ரஞ்சித்
தடங்கல்களும்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

எஞ்சிய UTHR உறுபினர்களின் நடவடிக்கை

இவர்கள் யார்? உண்மையாகவே ரஜிணியுடன் இருந்தவர்களா இவர்கள்? அல்லது பின்னாட்களில் அந்த அமைப்பில் சேர்ந்துகொண்டவர்களா? இவர்களின் நடவடிக்கைகள் அரசுசார்பாக, குறிப்பாக சந்திரிக்கா காலத்தில் அரச பிரச்சார இயந்திரமாக அறிக்கைகள் வெளிவர இவர்கள் காரணமானது எப்படி? இதுபற்றிய உங்களின் புரிதல் என்ன? இந்த அமைப்பு பிற்காலத்தில் இரண்டாக பிளவுபட்டது என்று அறிந்தேன், அதுகுறித்த தகவல்கள் ஏதாவது? 
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜூட் (கற்பகதரு) யாழில் எழுதியது :

தினமுரசு என்ற பத்திரிகையில் அற்புதன் என்பவர் இந்த கொலை பற்றி வித்தியாசமான ஆக்கம் ஒன்றை எழுதி இருந்தார். இது பல ஆண்டுகளுக்கு முன்னர் வந்திருந்தது. இந்த பத்திரிக்கை ஈழ மக்கள் ஜனநாயக முன்னணியால் அன்று பிரசுரிக்க பட்டு வந்தது. ரஜனியை இந்திய இராணுவத்தின் இரகசிய பிரிவின் பணிப்பின்படி தமது அமைப்பினரே கொலை செய்தார்கள் என்றும் பின்னர் பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடம் அவர்களே சென்று தாம் விடுதலை புலிகள் இந்த கொலையை செய்ததை கண்டதாக அவர்களே சொன்னதாகவும் இந்த ஆக்கத்தில் வந்திருந்தது. சுரேஷ்குமார் என்ற இந்திய இராணுவ இரகசிய பிரிவு அதிகாரியின் மேற்பார்வையிலேயே இந்த கொலை நடந்ததாக இந்த ஆக்கத்தில் படித்ததாக நினைவு. இந்த ஆக்கத்தை வெளியிட்ட பின் சில மாதங்களில் அற்புதன் கொழும்பில் கொல்லப்பட்டதாகவும் செய்தி வந்ததாக நினைவு.

 

தினமுரசுவில் விலாவாரியாக ராஜினி திரணகமவின் கொலை தரப்பட்டுள்ளது. இந்திய இராணுவ கேர்ணல் சசிகுமாரின் திட்டப்படி, ஈபி ஆர் எல் எவ் இன் ராபிக் நடைமுறைப்படுத்தியது. சுட்டவர் தோமஸ் என்பவர் - வெளிநாட்டில் இருக்கின்றாராம். இன்னொருவர் கார்திக் - தனிப்பட்ட பகையில் கொல்லப்பட்டுவிட்டார்.

http://www.padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The176.pdf

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, கிருபன் said:

ஜூட் (கற்பகதரு) யாழில் எழுதியது

கற்பகதரு , Tulpen  இவர்களின் சிந்திக்கவைக்கும் கருத்துக்கள் முடக்கபட்டது கவலை😟

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

 

ந்திய இராணுவ கேர்ணல் சசிகுமாரின் திட்டப்படி, ஈபி ஆர் எல் எவ் இன் ராபிக் நடைமுறைப்படுத்தியது. சுட்டவர் தோமஸ் என்பவர் - வெளிநாட்டில் இருக்கின்றாராம். இன்னொருவர் கார்திக் - தனிப்பட்ட பகையில் கொல்லப்பட்டுவிட்டார்.

இதன் படி வேறு அமைப்புகளால் கொல்லப் பட்ட ஒருவருக்கு எப்பொழுதும் புலிகள் அறிக்கை விடாதபோது இவருக்கு மட்டும் அறிக்கை விட்டு இருக்க வேண்டும் என்று நாம் எப்படி எதிர் பார்க்கலாம்???

@ ரஞ்சித் 

@ goshan_che

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ஜூட் (கற்பகதரு) யாழில் எழுதியது :

தினமுரசு என்ற பத்திரிகையில் அற்புதன் என்பவர் இந்த கொலை பற்றி வித்தியாசமான ஆக்கம் ஒன்றை எழுதி இருந்தார். இது பல ஆண்டுகளுக்கு முன்னர் வந்திருந்தது. இந்த பத்திரிக்கை ஈழ மக்கள் ஜனநாயக முன்னணியால் அன்று பிரசுரிக்க பட்டு வந்தது. ரஜனியை இந்திய இராணுவத்தின் இரகசிய பிரிவின் பணிப்பின்படி தமது அமைப்பினரே கொலை செய்தார்கள் என்றும் பின்னர் பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடம் அவர்களே சென்று தாம் விடுதலை புலிகள் இந்த கொலையை செய்ததை கண்டதாக அவர்களே சொன்னதாகவும் இந்த ஆக்கத்தில் வந்திருந்தது. சுரேஷ்குமார் என்ற இந்திய இராணுவ இரகசிய பிரிவு அதிகாரியின் மேற்பார்வையிலேயே இந்த கொலை நடந்ததாக இந்த ஆக்கத்தில் படித்ததாக நினைவு. இந்த ஆக்கத்தை வெளியிட்ட பின் சில மாதங்களில் அற்புதன் கொழும்பில் கொல்லப்பட்டதாகவும் செய்தி வந்ததாக நினைவு.

 

தினமுரசுவில் விலாவாரியாக ராஜினி திரணகமவின் கொலை தரப்பட்டுள்ளது. இந்திய இராணுவ கேர்ணல் சசிகுமாரின் திட்டப்படி, ஈபி ஆர் எல் எவ் இன் ராபிக் நடைமுறைப்படுத்தியது. சுட்டவர் தோமஸ் என்பவர் - வெளிநாட்டில் இருக்கின்றாராம். இன்னொருவர் கார்திக் - தனிப்பட்ட பகையில் கொல்லப்பட்டுவிட்டார்.

http://www.padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The176.pdf

நன்றி கிருபன். 

5 minutes ago, விசுகு said:

இதன் படி வேறு அமைப்புகளால் கொல்லப் பட்ட ஒருவருக்கு எப்பொழுதும் புலிகள் அறிக்கை விடாதபோது இவருக்கு மட்டும் அறிக்கை விட்டு இருக்க வேண்டும் என்று நாம் எப்படி எதிர் பார்க்கலாம்???

@ ரஞ்சித் 

@ goshan_che

 

தெரியேல்லை அண்ணை,

இதனைப் புலிகள் செய்திருக்கக் கூடாது என்று விரும்புகிறேன். ஆகவேதான் அவர்கள் இல்லையென்று உறுதியாக மறுப்புத்தெரிவித்திருக்கலாம் என்று கூறினேன். நீங்கள் கேட்பதும் சரிதான். எதற்காக இன்னொருவரின் குற்றத்தை அவர்கள் தமதென்று உரிமை கோரவேண்டும்? 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

2014 இல் இதே திரியில் ஜூட் அண்ணா எழுதியது,

 

கொல்லப்பட்ட அன்று "இதை நாங்கள் செய்யவில்ல. புத்தகம் எழுதுவதற்கு எல்லாம் நாம் இப்படி செய்ய மாட்டோம். தயவு செய்து எம்மை நம்புங்கள்" என்று ஒரு பிரசுரம் யாழ் பல்கலைகழக நூல்நிலைய வாயிலில் ஒட்டி இருந்தது. நான் அதை படித்தேன்.

 

புலிகளுக்கு அரசியல் தெரியாது, ராஜதந்திரமும் தெரியாது என்று சொல்வார்கள். அதற்கான ஆதாரங்களில் ஆலால சுந்தரம், தர்மலிங்கம், ரஜினி போன்றவர்களின் கொலைகளுக்கு கண்டனம் தெரிவிக்காததும், அவர்களுக்கு அஞ்சலி செலுத்தாததும் அடங்கும்.

 

ஏன் புலிகள் இவர்களுக்கு அஞ்சலி செலுத்தவில்லை? ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை?

அதற்க்கு காரணம் இவர்கள் புலிகளின் நேரடி ஆதரவாளர்கள் அல்ல. உண்மையில் ரஜினி புலிகளுக்கு பல வகையில் உதவி இருக்கிறார். அவரே திலீபனின் உடலை நிரந்தரமாக பேண பதப்படுத்தி கொடுத்தவர் என்று அறிந்தேன். அப்படி இருக்க ஏன் அஞ்சலி செலுத்தவில்லை?

 

அதற்கு காரணம் ரஜினியின் மறைவுக்கு பிறகு அதை அரசியல் ஆக்கியவர்களின் பின்னணி என்பதே எனது கருத்து. ரஜினியின் சகோதரி லண்டனில் உள்ள நிர்மலா நித்தியானந்தன். இவர் விடுதலை புலிகளின் மேல் மட்டத்தில் சம்பந்தப்பட்டு இருந்தவர். பின்னர் கருத்து வேறுபாடுகளால் புலிகளுக்கு எதிராகி இன்று வரை அந்த அரசியல் ஈடுபாடு கொண்டவர். ரஜினியை கொன்றது புலிகள் என்று சர்வதேச மயப்படுத்திய விரிவுரையாளார் ஸ்ரீதரன் ஈ பி ஆர் எல் எப் அமைப்பை சேர்ந்தவர். ஆகவே இந்த பின்னணியின் பலத்துடன் அரசியல் மற்றும் ராஜதந்திர ரீதியில் ரஜினியின் கொலை பற்றி மோதும் நிலையில் இந்திய ராணுவ காலத்தில் புலிகள் இருக்கவில்லை.

 

நூல்நிலையத்தில் நான் பார்த்த புலிகளின் மறுப்பு பிரசுரம் கையால் எழுதப்பட்டு இருந்தது. மதியம் அது அகற்ற பட்டுவிட்டது.

 

இவ்வாறாக மனித உரிமையாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் கொலைகள், உரிமை மீறல்கள் பற்றி கண்டனம் மற்றும் அஞ்சலி செலுத்துதல் போன்ற ராஜதந்திர செயற்பாடுகளில் மிகவும் பலவீனமானவர்களாக, பலவீனமான கலாச்சாரத்தை வளர்த்து விட்டவர்களாக புலிகள் இருந்தார்கள். அவர்களின் அழிவுக்கு இது பெருமளவில் பங்களித்திருக்கிறது.

 

ராஜீவ் காந்தியின் கொலையை புலிகள் காலம் பிந்தியே மறுத்திருந்தார்கள்/ அதை உடனேயே செய்து, கண்டனம் தெரிவித்து ஆண்டாண்டு அஞ்சலி செய்திருக்க வேண்டும். வடஇந்திய ஜெயின் கொமிசன் கூட இந்த கொலையில் வேறு சக்திகள் சம்பந்தப் பட்டு இருக்காலாம் என்று சந்தேகம் தெரிவித்து இருந்தது.

 

பிளாட் மாலைதீவு அரசை கவிழ்க்க ஆயுத புரட்சி செய்ய போகும் என்று யார் கண்டார்கள்? சிவாராசனுக்கு யார் பணம் கொடுத்து ராஜீவ் கொலை நடந்தது என்று யாருக்கு தெரியும்?

ரஜினியை யார் ஏன் கொன்றார்கள் என்று இன்றுவரை ஒரு விசாரணையும் இல்லை. ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

 Tulpen  இவர்களின் சிந்திக்கவைக்கும் கருத்துக்கள் முடக்கபட்டது கவலை😟

எனது ஞாபகத்துக்கு உட்பட வகையில்....

Tulpen இது பற்றி தான் ஒரு தொகுப்பை செய்து இங்கே இணைக்க முயற்சித்தார். அவருடைய அரசியல் நிலைப்பாடு யாழ் களத்தின் விதிமுறைகளுக்கு மாறாக இருந்தபடியால் அத்தொகுப்புக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. அந்த விடயத்தில் எனது நிலைப்பாடும் அப்படித்தான் இருந்தது 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

😟

இது ஒரு முகநூல் பதிவு.

1. புலிகள் புனிதர்களா?புலிகளுக்கு வெள்ளையடிக்கிறீர்களா? புலிகள் பயங்கரவாதிகள் இல்லையா?

2. ரஜினியின் கொலையை நியாயப்படுத்துகிறீர்களா?

3. ஏன் ரஜினிக்கு அஞ்சலி செலுத்தவில்லை?

,4. தயா சோமசுந்தரம் எவ்வளவு பெரிய பேராசிரியர் தெரியுமா? அவரை விமர்சிக்கும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா?

5.அதிபர் ஆனந்தராஜா கொலையை புலிகள் செய்யவில்லையா? செய்தனர் என்றால் எப்படி புலிகளை விமர்சிக்காமல் இருக்க முடிகிறது?

6. மீண்டும் வன்முறை அரசியலை தூண்டுகிறீர்களா? தீர்வு வர விருப்பமில்லையா? 

 

7. நீங்கள் அரசியல் அடிப்படையில் வெல்லும் தத்துவத்துடன் உள்ளீர்களா?உங்கள் அரசியல் வெல்லுமா?

8. மாற்றுக் கருத்துகளை ஏற்கும் பக்குவம் இல்லாத அரசியல் வெல்லுமா?

தொலைபேசி ஊடாக, வடஸ் அப், வைபர், மெசஞ்சர் ஊடாக நேரில் என்னை நோக்கி கேட்கப்பட்ட கேள்விகளில் சில இவை.

 

அரசியல் கேள்விகள் என்பதால் பதில்களை பொதுவெளியில் சொல்வதே சரியானது.

 

1. புலிகள் புனிதர்கள் அல்லர். சாதாரண மனிதர்கள். ஒடுக்கப்படும்போது அதற்கு எதிராக கிளர்ந்து எழும் இயல்பான சமூக நடத்தையை வெளிப்படுத்தியவர்கள். புலிகளுக்கு வெள்ளையடிக்கத் தேவையில்லை. அவர்களை அவர்களது அரசியல் கொண்டு அளவிடுவதே தேவை. பயங்கரவாதம் என்பதற்கு உள்ள வரையறை இங்கே பயன்படுத்தப்படுவதில்லை. அரசபயங்கரவாதிகளின் பார்வையில் புலிகள் பயங்கரவாதிகள் என்பதே சரியானது.

 

தமிழர்களின் இனப்பிரச்சனையின் மூலகாரணமான ஒற்றையாட்சி நீக்கப்பட்டு சிங்கள பௌத்த முதன்மை நீக்கப்பட்டு சம உரிமை கிடைத்த பிறகு புலிகளை விமர்சிப்போம்.

 

2.மனிதனுக்கு மனிதனால் ஏற்படுத்தப்படும் மரணங்கள் தவறானவை. நியாயப்படுத்த முடியாதவை. ரஜினியின் கொலையும் அவ்வாறே.

 

3. கொலைகள் நியாயப்படுத்த முடியாதவை. யார் கொன்றாலும் தவறு. வன்முறையும் பதில் வன்முறையும் ஒன்றல்ல. ரஜினி சிங்களவர்களால் செய்யப்பட்ட படுகொலைகளை இயல்பான உணர்வு வேகத்தால் நிகழ்ந்த எதிர்வினையாகவும் தமிழர்களின் பதில் வன்முறையை கொடிய திட்டமிட்ட மனித குலத்திற்கு எதிரான செயலாகவும் பரப்புரை செய்தார். அவரது கொலைக்கு வருந்துகிறேன். அஞ்சலி செலுத்துமளவுக்கு அரசியல் வறுமைக்குள் செல்லவில்லை. எனது பாட்டனார், சிறிய தந்தை ஆகியோர் கொல்லப்பட்டமையை அவர் இயல்பான உணர்ச்சி வேகத்தால் நடந்தது என கடந்து போனார். உண்மையில் 1956 முதல் நிகழும் அனைத்து தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளும் அரச இயந்திரத்தால் திட்டமிடப்பட்டு நடத்தப்படுபவையே. இந்தளவு தவறான அரசியல் பரப்புரை செய்தவருக்கு அஞ்சலி செலுத்துவது அரசபயங்கரவாதம் காரணமாக உயிரிழந்தவர்களையும் அதற்கு எதிராக போராடி உயிர் துறந்தவர்களையும் கேவலப்படுத்துவதாகும். அவரது இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கும் உற்றார் நண்பர்களுக்கும் எனது துயர்பகிர்வு இருக்கும் ஒரு மனித இழப்பு என்ற வகையில்.

 

4.தயா சோமசுந்தரம் உளநலத்துறையில் ஒரு பேராசிரியர். அவ்வளவுதான். அவரது உளநலத்துறை தொடர்பாக எதுவும் பொதுவெளியில் விமர்சிக்கப்படவில்லை. அவரது கபடத்தனமான நேர்மையற்ற கீழ்மையான அரசியல் நிலைப்பாடுகளும் செயற்பாடுகளுமே விமர்சிக்கப்படுகிறன. அறம், மனச்சாட்சி இல்லாத ஒருவரது அரசியல் பொதுவெளியில் கேள்விக்குட்படுத்தப்படுவது தேவையானது. பெரியோர் என ஒருவரையும் விதந்தோதாமலும் சிறியோர் என எவரையும் மிதிக்காமலும் இருத்தலே தமிழரது புறநானூறு கூறும் அறம்.

 

5. ஆனந்தராஜாவை புலிகள் சுட்டனர். தவறுதான். சிலநாட்கள் முன்புவரை குமுதினிப்படகு கொலை, மானிப்பாய் பஸ் படுகொலை, திருநெல்வேலி, கந்தர்மடம் படுகொலைகள் என செய்த இராணுவத்தினரை அவர்களது கொலைக்குற்றத்தை மறந்து மன்னித்து கைகுலுக்கி அரவணைத்த ஆனந்தராஜா சேரின் வழியைப் பின்பற்றி அரசியல் கொலைகள் செய்திருந்தாலும் சரியான வகையில் மக்களுக்கான அரசியலை சுயநலமற்று அர்ப்பணிப்புடன் முன்னெடுத்த மாவீரத்தை மதிப்பளிப்பது சரியானதே.

 

6. தமிழர்கள் வன்முறை அரசியலை முன்னெடுக்கவில்லை. வன்முறை அவர்களது கைகளில் திணிக்கப்பட்ட ஒன்று. தீர்வு என்பது பிரச்சனைக்கு ஏற்பவே வழங்கப்பட வேண்டும். சிங்களவர்களுக்கு சகல வழிகளிலும் சமனான அரசியல் உரிமைகள் வழங்கப்படுவதே சரியான தீர்வு.

 

7. வெற்றி தோல்வி என்பது அல்ல. சரியான அரசியல் தத்துவத்துடன் நிற்கிறோமா என்பதே முக்கியம். சரியான தத்துவத்துடனேயே நிற்கிறோம்.

 

8. மாற்றுக் கருத்து என்ன என்பதை பொறுத்து. உண்ண உணவு வேணும் என்பது கருத்தாக இருக்கும்போது உணவு தேவையில்லை. செத்துப்போ என்பது மாற்றுக் கருத்தாக இருக்க முடியாது. ராஜன் ஹூல், சிறீதரன் போன்றோர் சந்திரிகாவின், மகிந்தவின், பிரேமதாசவின், JR இன் இனப்படுகொலையை ஆதரித்தவர்கள். அதை எதிர்த்து குரல் கொடுத்தவர்களை( சிங்களவரான சுனந்த தேசப்பிரியவை கன்னத்தில் அறைந்தவர்கள். முறிந்த பனை எழுதும்போது இந்தியப் படைகளின், ஈபிஆர்எல்எஃப் இன் வன்முறைகளை முறையாக ஆவணப்படுத்தியவர்கள் மீது எரிந்து விழுந்தவர்கள்) விமர்சித்தனர். எனவே மாற்றுக் கருத்தை ஏற்காதவர்கள் என்பது 🤗🤗🤗🤗.ரஜினியின் கொலை ஒரு false flag attack என்பதுவும் ஒரு மாற்றுக் கருத்து. அதை ஆராயுங்கள். அவ்வளவுதான்.

TID யிடம் சொல்ல வேண்டும் CID இடம் சொல்ல வேண்டும். தூக்க வேண்டும் என்பது மாற்றுக் கருத்தை எதிர் கொள்ளும் வழியல்ல😁😁😁😁😁😁

https://www.facebook.com/564189140/posts/pfbid02RnYDUs12hndDwQTYbDpQQ6uWFh9pvwpWzTz8TVnHh2VbYL1WZCLLXBVkVNsb7xLDl/

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வாலி said:

முறிந்த பனை புலிகளுக்கு எதிரானதா?

முறிந்த பனையை  இணைக்கும் முயற்சி ஏன்  யாழ் இணையத்தில் தடுக்கப்பட்டது?

 

முறிந்த பனை சமரசம் இல்லாமல் அந்த காலத்தில் நிகழ்ந்த படுகொலைகளை பட்டியல் இட்டது.

நம்மில் பலர் 87-89 வேறுபட்ட வயதுகளில் ஊரில் இருந்தோரே. ஏட்டிக்கு போட்டியாக ஆதரவாளர்கள் இரு தரப்பிலும் கொல்லப்பட்டார்கள் என்பதை நாம் எல்லாரும் வாழ்ந்து அனுபவித்தோம். இதையும் இதைப்போல இன்னும் சில புலிகளின் நடவடிக்கையையும் அந்த புத்தகம் சமரசம் இல்லாமல் பட்டியல் இட்டது.

அதே போல் புலிகள் மீது ஒரு பாலியல் குற்றச்சாட்டையும் வைக்காது ஆனால் இந்திய படைகளின் பல பாலியல் வன்முறைகளையும் பதிவு செய்தது.

83 இல் இலண்டனில் வைத்தியராக, தீவிர புலி ஆதரவாளராக அறியப்பட்ட ஒரு புத்திசீவி நாடு திரும்பி - கள யதார்த்தம் அறிந்து அதன் பின் அதை உலகுக்கு எடுத்து சொன்ன முயற்சி என்றே அதை நான் பார்க்கிறேன்.

புத்தகம் ஆதரவாயோ, எதிராகவோ இல்லை. 

யாழ் களம் தடை செய்த காரணம் கண்மூடித்தனமான பத்வா மனநிலை. துல்பன் எழுத தொடங்கும் போதே சொன்னேன். உழைப்பை வீணடிக்க வேண்டாம் என.

@விசுகு @ரஞ்சித்  திட்டமிட்டு ஒரு கொலையை எதிர்கள் செய்து விட்டு  மெளனம் சம்மதம் என்பதை பயன்ப்டுத்தி எம் மீது பழியை போடுகிறார்கள் எனில் நிச்சயம் மறுக்க வேண்டும்.

எந்த ஒரு அமைப்பும், நிறுவனமும் தமது reputation ஐ இட்டு இவ்வளவு அசிரத்தையாக இருக்க கூடாது.

ஆனால் இது அசிரத்தை அல்ல. இவர்கள் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை என “கடந்து போகும் அணுகுமுறை”. அது profile இல்லாத நபர்களுக்கு ஓக்கே. ரஜனி அப்படி அல்ல. அவர் கொலையை மிக லாவகமாக எதிர் தரப்பு weaponize பண்ணுவது தெரிந்தும் மெளனமாக இருந்தது சறுக்கல்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரஞ்சித் said:

இவரது சகோதரி நிர்மலா நித்தியானந்தனின் செவ்விகள் சிலவற்றை சிங்கள இனவாதிகள் காவித்திரிந்ததைப் பார்த்தேன். சீலன் குண்டடிபட்டிருக்கும்போது அவரைப் பார்த்துக்கொண்டவரா இப்படிப் பேசுகிறார் என்று சலித்துப் போனது. உறவை இழந்தவலி அவருக்குத்தான் தெரியும். 

சகோதரியை இழந்த வலியில் இருந்தவரை இதை புலிகள் செய்தார்கள் என நம்பவைக்கின் - இந்த எதிர்வினையை அவர் செய்ததில் நியாயம் இருக்கிறது.

ஆனால் நிர்மலா, ராகவனோடு இயக்கத்தை விட்டு நீங்கிய பின், இருவரும், இன்றுவரை ரஜனி கொலைக்கு முன்பாக இருந்து கூட, கடும் புலி எதிர்ப்பு நிலையிலேயே இருந்தனர். இதைத்தான் தனிப்பட்ட கறள் என்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரஞ்சித் said:

இவர்கள் யார்? உண்மையாகவே ரஜிணியுடன் இருந்தவர்களா இவர்கள்? அல்லது பின்னாட்களில் அந்த அமைப்பில் சேர்ந்துகொண்டவர்களா? இவர்களின் நடவடிக்கைகள் அரசுசார்பாக, குறிப்பாக சந்திரிக்கா காலத்தில் அரச பிரச்சார இயந்திரமாக அறிக்கைகள் வெளிவர இவர்கள் காரணமானது எப்படி? இதுபற்றிய உங்களின் புரிதல் என்ன? இந்த அமைப்பு பிற்காலத்தில் இரண்டாக பிளவுபட்டது என்று அறிந்தேன், அதுகுறித்த தகவல்கள் ஏதாவது? 
 

இங்கே இந்த குழுவில் நானும் ஏதோவகையில் சம்பந்தபட்டவன் என @Maruthankerny  முன்னர் ஒருதரம் துப்பு துலக்கி இருந்தார் (முறிந்த பனை வந்த போது, TNA எனப்படும் கட்டாய இராணுவத்தில் இழுத்து கொண்டு போய் சேர்க்க கூட எனக்கு வயது காணாது என்பதுதான் உண்மை🤣).

இவர்கள் அனைவரும் ஸ்தாபக உறுப்பினர் என நினைக்கிறேன். ஆனால் அவர்களின் அரசியல் நிலைப்பாடுகள் கூட வேறானவை என்றே கருதுகிறேன்.

நான் அவதானித்ததில், ரஜனி கொஞ்சம் தமிழர் உரிமை சார்பானவராகவும், ராஜன் ஹூல் (ஜீவன் அல்ல) உள்ளதை உள்ளபடி சொல்பவராயும் தெரிகிறார்கள்.

சிறிதரன் புளொட்/ஈபி போன்றவற்றோடு நெருக்கமானவராயும், முறிந்த பனைக்கு முன்பே புலிகளுக்கு எதிராக எழுதுவது மட்டும் அன்றி, பல்கலை கழகத்தில் வேலைகள் சிலதையும் செய்தார் என்பதை அவரின் சுய சரிதை போல் எழுதிய தொடர் காட்டி நிற்கிறது.

ஆனால் ஒரு பல்கலை கழக குழுவாக இவர்கள் ஒன்றாக வந்து ஒரு பக்கம் சாரா, உண்மை, தரவு விளம்பும் அமைப்பை ஸ்தாபித்தார்கள் - முறிந்த பனையை எழுதினார்கள்.

இவர்கள் ஆளை ஆள் நம்பிய ஆத்மார்த்த நண்பர்கள் என நான் நினைக்கவில்லை.  ஒருமித்த ஒற்றை கொள்கையில் இணைந்தவர்கள் எனவும் நான் நினைக்கவில்லை.

நான் எப்போதும் நினைப்பேன் - புலிகள் கொல்லுவதாயின் ரஜனியை விட அவர்களுக்கு உவப்பல்லாத சிலர் இந்த குழுவில் இருந்தனர்.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை, ஓரளவு புலி ஆதரவு நிலைப்பாட்டில், மிக கடுமையான இந்திய விமர்சன நிலைப்பாட்டில், இந்தியாவை மேற்கில் அம்பலபடுத்த கூடிய தொடர்புகளோடு இருந்த ரஜனியின் கொலையின் பின் இந்த அமைப்பு தன் பக்க சார்பின்மையை முற்றாக இழந்தது. கண்மூடித்தனமாக இதை புலிகள் மீது போடுவதில் குறியாக இருந்தது. கிட்டதட்ட புலி-எதிர் ஊதுகுழலாகவே மாறியது.

இது ரஜனியை கொல்வதன் மூலம் யார் ஒரு கல்லில் இரெண்டு மாங்காய் அடித்தார்கள் என சிந்திக்க வைக்கிறது.

பிகு

மேலே எழுதியவை எல்லாம் நான் வாசித்ததும், யோசித்ததும் மட்டுமே. எதுவும் உள்வீட்டு தகவல்கள் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சில கருத்துக்களைப் பார்க்கையில், ரஞ்சித் மேலே எழுதிய "இப்போது விமர்சிக்க வெளி இருக்கிறது தானே? ஏன் இன்னும் செயல்படாமல் இருக்கிறார்கள் விமர்சகர்கள்?" என்ற கேள்விக்கான மறைமுகமான விடை கிடைக்கிறது.

ஒரு கல்லைக் கூட ஆயுதமாகப் பாவிக்காத அமரர் திராணகம உட்பட, பல புத்தி ஜீவிகளும், ஒவ்வாத கருத்துகளுடையோரும் கொல்லப் பட்டார்கள். அவர்கள் பற்றி பேசும் போதெல்லாம், கொலையில் சந்தேக நபர்களாக இன்றும் இருக்கிற தரப்புகளை வெள்ளையடிக்க வெவ்வேறு வர்ணப் பெயின்ற் வாளிகளோடு நாம் வரிசை கட்டி வருவது வழமையாகி விட்டது.

பல தியரிகள், "யாருக்கு அதிக நன்மை? அவர் தான் குற்றவாளியாக இருக்கக் கூடும் என்கிற teleological reasoning, இன்னொரு பக்கம்,"அவையள் ஏன் புலிகளைக் குற்ற வாளியாக அடையாளம் காட்டினவை? எனவே அவர்கள் தான் இதற்குக் காரணம்" என்கிற இறுமாப்பு- defiance, இது தான் ரஞ்சித்தின் கேள்விக்கான பதில் என நான் நினைக்கிறேன்.

இவையெல்லாம், நாம் ஒரு கொலையானவரின் நினைவு தினத்தில் கூட, சந்தேக நபர்களுக்கு ஆதரவாக ஆஜராவோம், இதன் மூலம் தப்பி வாழும் கொலையானவரின் உறவுகளின் ஆறாத காயங்களில் மேலும் உப்புத் தடவுவோம் என்பதைத் தான் காட்டுகிறது? ஏன்?

குறைந்த பட்சம் எம்மிடையே உரத்துப் பேசும் குரல்கள், 1989 இல் இருந்ததை விட  மாறவேயில்லை என்பதே என் அபிப்பிராயம். இன்றைக்கும் "நான் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொள்ளவில்லை!" என்று பகிரங்கமாகச் சொல்லும் தமிழ் அரசியல் வாதி சிங்கள அதிரடிப்படையின் பாதுகாப்பில் தான் ஊரில் வலம் வர வேண்டியிருக்கிறது. புலம் பெயர் நாடுகளில், பொலிஸ், வாயில் காவலர்கள் இல்லாமல் உரையாற்ற முடியாமல் இருக்கிறது. "மனித உரிமை" என்பதை தன் மையத் தூணாக வரித்துக் கொண்ட ஒரு பெண்மணி, தமிழ் தேசியக் கட்சியில் வேட்பாளராகக் கூட இணைய எதிர்ப்பு இருக்கிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்தெழுதிய அநேகமானவர்கள் புலிகள் இவரை கொலை செய்து இருக்க கூடாது என்று விரும்புகிறார்கள் ...புலிகளில் ஒரு பகுதியினர் தான் இவவையும் கொலை செய்தனர்...ராஜீவ் கொலை மாதிரி தான் இதுவும் ...இந்தியா பின்னுக்கு நின்று இருக்கலாம். ஆனால் செய்தது புலிகள் தான். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இங்கே சில கருத்துக்களைப் பார்க்கையில், ரஞ்சித் மேலே எழுதிய "இப்போது விமர்சிக்க வெளி இருக்கிறது தானே? ஏன் இன்னும் செயல்படாமல் இருக்கிறார்கள் விமர்சகர்கள்?" என்ற கேள்விக்கான மறைமுகமான விடை கிடைக்கிறது.

ஒரு கல்லைக் கூட ஆயுதமாகப் பாவிக்காத அமரர் திராணகம உட்பட, பல புத்தி ஜீவிகளும், ஒவ்வாத கருத்துகளுடையோரும் கொல்லப் பட்டார்கள். அவர்கள் பற்றி பேசும் போதெல்லாம், கொலையில் சந்தேக நபர்களாக இன்றும் இருக்கிற தரப்புகளை வெள்ளையடிக்க வெவ்வேறு வர்ணப் பெயின்ற் வாளிகளோடு நாம் வரிசை கட்டி வருவது வழமையாகி விட்டது.

பல தியரிகள், "யாருக்கு அதிக நன்மை? அவர் தான் குற்றவாளியாக இருக்கக் கூடும் என்கிற teleological reasoning, இன்னொரு பக்கம்,"அவையள் ஏன் புலிகளைக் குற்ற வாளியாக அடையாளம் காட்டினவை? எனவே அவர்கள் தான் இதற்குக் காரணம்" என்கிற இறுமாப்பு- defiance, இது தான் ரஞ்சித்தின் கேள்விக்கான பதில் என நான் நினைக்கிறேன்.

இவையெல்லாம், நாம் ஒரு கொலையானவரின் நினைவு தினத்தில் கூட, சந்தேக நபர்களுக்கு ஆதரவாக ஆஜராவோம், இதன் மூலம் தப்பி வாழும் கொலையானவரின் உறவுகளின் ஆறாத காயங்களில் மேலும் உப்புத் தடவுவோம் என்பதைத் தான் காட்டுகிறது? ஏன்?

குறைந்த பட்சம் எம்மிடையே உரத்துப் பேசும் குரல்கள், 1989 இல் இருந்ததை விட  மாறவேயில்லை என்பதே என் அபிப்பிராயம். இன்றைக்கும் "நான் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொள்ளவில்லை!" என்று பகிரங்கமாகச் சொல்லும் தமிழ் அரசியல் வாதி சிங்கள அதிரடிப்படையின் பாதுகாப்பில் தான் ஊரில் வலம் வர வேண்டியிருக்கிறது. புலம் பெயர் நாடுகளில், பொலிஸ், வாயில் காவலர்கள் இல்லாமல் உரையாற்ற முடியாமல் இருக்கிறது. "மனித உரிமை" என்பதை தன் மையத் தூணாக வரித்துக் கொண்ட ஒரு பெண்மணி, தமிழ் தேசியக் கட்சியில் வேட்பாளராகக் கூட இணைய எதிர்ப்பு இருக்கிறது.

 

நான் மேலே எழுதும் போதே இதற்கு இப்படி ஒரு எதிர்வினை வரும் என்று நான் எதிர்பாத்தே எழுதினேன்.

இதே நான் - ஆனந்தராஜ போன்ற நிச்சயமாக புலிகள் செய்தது என்று கருதப்படும் கொலைகளில் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை.

ஆனால் ரஜனியின் கொலை நடந்த அன்றே இதை இந்திய சார்பு இயக்கங்களே செய்ததாக யாழில் குசு குசுக்கப்பட்டது.

இங்கே நீங்களும், கீழே ரதி அக்காவும், ஏன் நிர்மலாவும் கூட இதுவரை ஒரு iota of evidence ஐ கூட இதை புலிகள்தான் செய்தார்கள் என காட்ட முன்வைக்கவில்லை.

1. புலிகளை போல அல்லது ஒரு படி மேலாக சகிப்புதன்மை அற்றவர்களாகவே அன்று இந்த இயக்கங்கள் இருந்தன.

2. இரெண்டு பகுதியிலும் கடை நிலை போராளி கூட பிஸ்டலை எடுத்து, ஒருவரை போட்டு தள்ளிவிட்டு போகும் நிலையில்தான் 87-89 யாழ்பாணம் இருந்தது.

3. இரெண்டு பகுதியும் ஆயுத வன்முறையில் நம்பிக்கை வைத்தோராகவே இருந்தனர்.

4. முறிந்த பனையில் சொல்லப்பட்டதுதான் கொலைக்கான காரணம் எனில் புலிகளை விட, இந்திய படைகளைத்தான் அந்த புத்தகம் அதிகம் அம்பலபடுத்தியுள்ளது.

இந்தியா இலங்கையில் போர்குற்றம் இழைத்தது என்பதை இந்த புத்தகம் ஆதாரத்தோடு நிறுவியது.

இந்த பின்புலத்தில் - வழமையாக a man who goes where the evidence takes him என அறியப்படும் நீங்கள் கூட, எந்த முகாந்திரத்தில் இதை செய்தது, புலி, புலி, புலியேதான் என சொல்கிறீர்கள் என்பதுதான் புரியவில்லை.

வழமையாக இங்கே ஆதரவாளர்கள் கேட்பது போல ஒரு மர்மக்கொலைக்கு நான் கையும் களவுமான caught red handed ஆதாரத்தை கேட்கவில்லை. சந்தர்ப சாட்சியமாவது உள்ளதா?

இருப்பின் - எழுதுங்கள்.

ரஜனிக்கு செய்யும் அதிகபட்ச நினைவாஞ்சலியாக அதுவே இருக்கும்.

1 hour ago, ரதி said:

இங்கு கருத்தெழுதிய அநேகமானவர்கள் புலிகள் இவரை கொலை செய்து இருக்க கூடாது என்று விரும்புகிறார்கள் ...புலிகளில் ஒரு பகுதியினர் தான் இவவையும் கொலை செய்தனர்...ராஜீவ் கொலை மாதிரி தான் இதுவும் ...இந்தியா பின்னுக்கு நின்று இருக்கலாம். ஆனால் செய்தது புலிகள் தான். 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.