Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொடிக்கவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு ஏன் இந்த முழி முழிக்கிறியள் வசி .

அன்று தான் எமது நிலத்திற்கான கடைசி போராட்டம் .....

அது பல சோகத்தை தந்த நாள் .

  • Replies 50
  • Views 13k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

:wub:

ஆறுமுகநாவலர் எழுதுவது என்ன மொழி தமிழா?

சிறி உங்களுக்கு விளங்குதா அந்த பாசை?!

45 % தமிழ் வசி , ஆனால் மிச்சத்தை கூட்டிக் கழித்து விழங்கி கொள்வேன் .

ஒரு பிரச்சினையும் இல்லாத தலைப்பு என்ற படியால் இங்கு அமைதியாக இருந்து வாசிப்பேன் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆறுமுகம் அய்யா அவர்களுக்கு வணக்கம்!

தாங்கள் எழுதி வரும் கருத்துக்கள் நல்லவையே. ஆனால், இந்த சமயத்தில் இது தேவையா என்று எனக்கு சந்தேகமாய் இருக்கிறது.

தங்கள் எழுத்துக்களை பார்த்தால் சைவ சித்தாந்தத்தில் நல்ல பரிச்சயம் உள்ளவர் என்று தெரிகிறது. ஆனாலும், சுவாமி விவேகானந்தர் அவர்களை காட்டிலும் தாங்கள் இறையனுபூதி பெற்றவர் அல்ல என்று நான் திடமாக நம்புகிறேன். ஏனெனில் ஏதாவது புத்தகத்தை பார்த்து அதை அப்படியே இணையத்தில் இணைப்பதற்கும், தன் எண்ணம், சொல், செயல் மூன்றிலும் கடவுள் தன்மை வெளிப்படுபவர் சொல்லும் ஒரு சிறு சொல்லுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை காணலாம்.

சுவாமி விவேகானந்தர் , "எப்போதும் மாதிரம் சொல்லுவதிலும், பூஜை செய்வதிலும் நேரத்தை செல்வவிடும் நீங்கள், 'நான் யார், நான் எங்கிருந்து வந்தேன், என் பணி என்ன?' என்று எப்போதாவது சிந்தனை செய்திருக்கிறீர்களா? நீங்கள் செய்ய வேண்டிய மகத்தான பணிகள் காத்து கொண்டிருக்கின்றன. முதலில் உங்கள் பூஜையறையில் உள்ள அனைத்து சுவாமி படங்களையும் தூக்கி ஆற்றில் போடுங்கள். வெளியில் வாருங்கள். கடவுள் ஏழைகளின் வடிவில் உங்கள் சேவைகளை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார். அவர்களின் கண்ணீரை துடையுங்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறுங்கள். உங்களால் முடிந்தவரை உதவுங்கள். இந்த உடல் எடுத்தது வெறும் சிற்றின்ப போகத்தில் ஆழ்ந்து போவதற்கல்ல என்று உணருங்கள். எவன் இன்னொரு உயிரின் துன்பத்தை தன் ஆன்மாவில் உணர்கிறானோ அவன் கடவுளே." என்று சொல்லியிருக்கிறார்.

மேலும் என் சிறு மனத்தால் நினைவில் வைத்து கொள்ள இயலாத அளவில் ஆழ்ந்த கருத்துக்களையும் தெரிவித்துள்ளார். அவரது "கர்ம யோகம்" என்ற புத்தகத்தை சமயம் கிடைத்தால் படியுங்கள்.

தமிழர் தாயக நிலை தெரியும்தானே? தமிழர் தாயகம் வஞ்சனையினால் சுடுகாடாய் மாற்றப்பட்டுள்ளது தெரியும் தானே? புலம் பெயர் தமிழர்கள் தாங்கவொண்ணாத மனசுமையில் அவதிப்படுகிறார்கள் என்று தெரியும்தானே? தாயக தமிழர்களும் பிச்சசைகாரர்களை போன்று நடத்தப்படுவதும், குழந்தைகளை இழந்த பெற்றவர்களும், பெற்றவர்களை இழந்த குழந்தைகளும் கண்ணீருடன் சகிக்கவொண்ணாத சூழலில் வாழ்வது தெரியும்தானே?

இவர்களில் யாராவது ஒருவர் வாழ்விலாவது நிம்மதியினை கொடுக்க தங்களால் இயன்றதை செய்யலாமே? அதன் பின், உங்கள எண்ணங்களையும், பக்தியினையும், அவர்களுக்கு ஊட்டலாமே?

செய்வீர்களா?

அன்புடன்,

சென்னப்பன் சீனிவாசன். .

உயிருக்குச் சத்திநிபாதம் படி முறையால் நிகழும் மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என்பன அம் முறை. அவற்றிற்கேற்ப உயிர் சரியையாதிகளைச் செய்யும். சமய தீக்கையுற்றுச் சரியை நெறியிலும், விசேட தீக்கையுற்றுக் கிரியை நெறியிலும் யோக நெறியிலும், நிர்வாண தீக்கையுற்று ஞான நெறியிலும் நிற்க வேண்டும். அத் தீக்கைகளின்றி அந் நெறிகளில் நின்றாற் கிடைப்பது அற்பப் பயனே. அத்தீக்கைகளை யுற்றுப் பத்திவாயிலாக அம்மார்க்கங்களை ஆதரிப்பதே முழுப்பயனையுந் தரும். அத்தீக்கைகளும், சரியையாதிகளும், பத்தித் திறன்களும் உயிருக்கு ஞானத்தைக் கொடுத்தல்லது நேரே வீடு பேற்றைத் தரா. அவையனைத்தும் ஞானத்துக்கு அங்கம். ஞானமொன்றே வீடு பேற்றை நேரே யருளும்.

யோவ் ஆறுமுக நாவலரிண்ட மண்டையில கொட்டனால ஆமிக்காரன் அடிச்சவனாம் எங்க எண்டு கேக்காதையுங்கோ யாழ்.இந்துக்கல்லூரில 2005 ஆம் ஆண்டு. ஏனெண்டு கேட்டதுக்கு சொன்னானாம் புத்தகத்தை கையில கொடுத்து கிட்டுவுக்கு சிலை வச்சிருக்குறாங்கள் எண்டு... என்னத்தைச்சொல்லி என்னத்தைக்காண :D:rolleyes::unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்தால் தானும் தன்ற பாட்டுக்கு எழுதுது என் வீனா அவரட்ட போய் சன்டைக்கு இழுக்கிறியல் விடுங்கையா அவர

  • தொடங்கியவர்

இரண்டாம் பாட்டு

பொருளாம் பொருளேது போதேது கண்ணே

திருளாம் வெளியே திரவே - தருளாளா

நீபுரவா வையமெலா நீயறியக் கட்டினேன்

கோபுர வாசற் கொடி.

பதவுரை

பொருள் - பொருள்களிலே

ஆம் பொருள் ஏது - உள் பொருளாகிய சிவம் ஏது? (இல்லை)

போது ஏது -கிரணத்தை உவமையாக உடைய சத்தி ஏது? (இல்லை)

கண் ஏது - கண்ணை உவமையாக உடைய உயிர் ஏது? (இல்லை)

இருள் ஆம் - அஞ்ஞானமாகிய

வெளி ஏது - சகலாவத்தை ஏது (இல்லை)

இரவு ஏது - கேவலாவத்தை ஏது (இல்லை)

என்று சொல்லும் மந்த மதியினருக்கு நல்லறிவு கொளுத்தும் பொருட்டு அத்தனை பொருள்களும் உள்ளவையே என்று உறுதி கூறி)

அருளாளா - திருவருள் நிறைந்த சிவபெருமானே!

நீ புரவு ஆ வையம் எல்லாம் - நீ ஆண்டருளுதல் பொருந்திய உலக முழுவதும்

(அறிய) தெரிந்துகொள்ளும்படி

நீ அறிய - நீயே சாக்ஷ¢யாக

கோபுர வாசல் - திருக்கோபுர வாசலிலே

கொடி கட்டினேன் - (நான்) துவசங் கட்டினேன்

  • தொடங்கியவர்

கருத்து

பொருள்கள் பல. அவற்றுட் சிவம், சத்தி, உயிர், சகலம், கேவலம் என்பன முக்கியம். அவையெல்லாம் இல்லாதன என்பர் மூடர். சிவபிரானே! நீ ஆண்டருளுதலை யுடையது உலகம். அது சாட்சி. நீயுஞ் சாட்சி. அவ்வனைத்தும் உள்ளனதா னென்று நான் சத்தியஞ் செய்து உன் கோபுர வாசலிற் கொடி கட்டினேன்.

விளக்கம்

ஆம் பொருள் ஏது:- வேத சிவாகமங்களே முழுமுதல் நூல்கள். அவை சிவத்தையே முழுமுதற்பொருளென்னும். அதனை யுடன்படுஞ் சமயம் சித்தாந்த சைவம். ஆகலின் அ·தொன்றே சர்வத்ர ஆஸ்திகம். அச்சிவம் முப்பத்தாறு தத்துவங்களுக்கும் அதீதமானது. அகச்சமயங்கள் ஆறு. அவை பாடாணவாத சைவம் முதலியன. லயபோக அதிகார சிவன்களே அவற்றிற்குப் பரம்பொருள். ஆகலின் அவை சித்தாந்த சைவத்துக்கு அணுக்கமாகிய ஆஸ்திகங்களாம். அச்சிவன்களுக்குரிய தத்துவங்கள் ஐந்து. அவை சுத்தம். அவ்வைந்தும் போக எஞ்சியுள்ளன முப்பத்தொன்று. அவற்றுள்ளும் ஒவ்வொரு தத்துவத்துக்கும் ஒவ்வோ ரதிபதியாகப் பலருளர். அவருள் ஒவ்வொருவரை ஏனைச் சமயங்களுள் ஒவ்வொன்று பரம்பொருளெனக் கொள்ளும். அது உடையனல்லாதானை உடையனெனக் கொள்வதாகும். உடையன் - பரம்பொருள். ஆகலின் அச்சமயங்களை ஒருசேர நாஸ்திகங்களெனக் கூறிவிடலாம். சிவபரத்துவத்தில் நிச்சய புத்தி நூலறிவால்மட்டில் சித்தியாது. அதற்குத் திருவருட் கண்ணும் வேண்டும். வியாதன் வேத பண்டிதன்றான். ஆயினும் அவனுக்கு ஞானக்கண் இல்லாது போயிற்று. ஆகலின் வேதப்பொருளாவார் விட்டுணுவேயென அவன் பொய்யுரைத்துத் துயரெய்தினான். 'விச்சை நூல் பல கற்பினுஞ் சிவனருள் விரவாக், கொச்சையோர் தமை விடுவதோ கொடுமலஞ் செருக்கு' என்றது காஞ்சிப்புராணம், 'ஆம் பொருள் ஏது?' என்ற அடி உள்பொருளாகிய அச்சிவத்தை யில்லை யென்றபடி. இது ஒரு சாரார் கூற்று.

போது ஏது:- உயிர் அறிகின்றது. அதற்குக் கருவிகளா யுதவுவன எட்டு. அவை ஆன்மதத்துவம், தாத்துவிகம், கலையாதியன காலம், நியதி, உடம்பு, பிரமாணம், நால்வகை வாக்கு என்பன. அக்கருவிகளெல்லாஞ் சடம் (உயிரற்ற பொருள்). அவ்வுயிரும் அறிவிக்க அறியும் இயல்புடையது. ஆகவே உயிர் அக்கருவிகளைக்கொண்டு அறிதற்கு ஒரு சேதனப் பொருளின் (உயிருள்ளபொருளின்) சகாயமும் வேண்டும். அச்சகாயந்தான் சிவசத்தியாகிய திரோதான சத்தி. அது உயிருக்குக் கருவிகளைக் கூட்டியும், உள்நின்று அறிவித்தும் வருகிறது. அவ்வுபகாரத்தால் உயிர் முதலில் ஏகதேச அறிவைப் பெறும்; அதனால் சிறுபோகங்களை நுகர்ந்து பிறவிகளிற் படும். காலாந்தரத்தில் அது பக்குவ மடைதலுஞ் சித்தம். அதுவும் அச்சத்தியால் உளதாவதே. அப்போது அச்சத்தி அருட்சத்தியாக மாறி அவ்வுயிரின் வியாபக அறிவை விளக்கும். அவ்வுயிருக்குப் பரபோகங் கிடைப்பது அப்போதுதான். என்னே சிவசத்தியின் மகோபகாரம்! ஆயினும் அதை அயர்த்து நிற்பார் எத்தனைபேர்! உயிர்க்குத் தன்னளவில் அறியுஞ் சத்தியுண்டென்பர் மீமாம்சகர். உயிர்க்குக் கருமமே அறிவைக் கொடுக்கு மென்பர் ஆருகதர். மேற்காட்டிய தத்துவ தாத்துவிகங்களே உயிரறிவை விளக்கத்துக்குச் சிவசத்தியி னுபகாரத்தை யுடன்படார். நன்றி கொன்றலே அது. 'போதேது' என்ற தொடர் அச்சிவசத்தியை யில்லை யென்றபடி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆறுமுகநாவலர் உங்களை பாராட்டியே ஆகவேண்டும்.......இப்படி உங்களை எல்லாரும் கேவலமா விமர்சனம் செய்த பின்பும் சூடு,சுரணை இல்லாமல் இன்னும் சைவசமயத்தை போதிப்பதற்கு.

  • தொடங்கியவர்

போது:- சிவம் நிர்க்குணம் என்னும்வேதம். நிர்க்குணம் - குணமில்லாதது. நிர்க்குணம் என்பதற்கு எவ்வகைக் குணமு மில்லாமை யென்றனர் மாயாவாதியர். குணங்கள் இரு வகை. ஒன்று மாயா குணம். சத்துவம் இராசதம், தாமதம் என்பன அது. இன்னொன்று இறைமைக் குணம். தன் வயத்தனாதல், தூய வுடம்பின னாதல், இயற்கையுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களி னீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பி லின்ப முடைமை யென்பன அது. சிவத்தினிட மில்லாதது அம்மாயா குணம். அதனால் அச் சிவம் நிர்க்குணமெனப்பட்டது. தன்வயத்தனாதல் முதலிய 1 எட்டுக் குணங்களும் சிவத்தோ டபின்ன மானவை. அவை அச்சிவப் பொருட்குத் 2 தாதான்மிய சத்தியாகும். நிர்க்குணமென்ற சொல்லே பற்றி அவ்விறைமைக் குணங்களையும் இல்லையென்றல் தவறு. 'முதல்வன் இம் முக்குணங்களும் கடந்தவனாகலான் இவற்றுளொன்றாக அறியப்படா னென்பார் 'நிர்க் குணனாய் என்றும்', 'நிர்க்குணன் என்பது ஒரு குணமு மில்லான் என்றுரைப்பின் அது தன்வயத்தனாதல் முதலிய எண் குணங்களை இயல்பாக வுடைய முதல்வனுக் கேலாமையின் மாயாவாதி முதலியோர் கூற்றாய் முடியுமென் றொழிக' என்றது ஸ்ரீ பாஷ்யம். மாயாவாதியர் கூறுவது கொடிது. 'போதேது?' என்றதிலுள்ள போது என்பது அவ்விறைமைக் குணங்கள்.

கண் ஏது:- சிவம் முழுமுதற் பொருள். அதன் அருட்சத்தி உபகரிப்பது. அவ்வுபகாரத்தை யனுபவிக்கும் உரிமையுடையது உயிர். சிவம் மன்னவன் போல்வது. உயிர் அவன் குமரன் போல்வது. மன்னவ குமாரன் அறியாப் பருவத்திலிருந்து வேடர் சேரியில் வளர்வானாயின் தன்னியல்பை மறந்து அவ்வேடரியல்பையே தன்னியல்பாகக் கொண்டு அலமருவான். மன்னவனே அப்பிள்ளைக்கு அவ்விழிவை யுணர்த்த வேண்டும். பரிவால் அவன் அதனை யாற்றுவான். அப்பிள்ளை தெளிந்து அவ்வேடரைவிட்டு விலகித் தனக்கு உரிய அரசை நோக்கித் திரும்புவான். அப்படியே உயிர் ஐம்புல வேடரிடை வளர்ந்து தன்னியல்பை யயர்த்தது அது உண்மையிற் சிவானுபவத்துக்கே யுரியது. சிவம் அவ்வுயிர்க்கு அவ்வயர்ச்சியை நீக்கி அவ்வனுபவத்தைக் கொடுக் கருணை செய்துள்ளது. ஆனால் அந்தோ எத்தனைபேர் உயிரெனவொருபொருளே யில்லையென்கிறார்! உடல், பொறி, கரணம், உயிர்ப்பு, பிரமம் முதலியவற்றையே தனித்தனி உயிரென மயங்கிக் கொண்டு தற்கொலை செய்துகொள்கிறாரவர். தன் உண்மையை மறுப்பவன் பிறர் செய்யும் உபகாரத்தை நினைப்பனா? அப்பிணம் அச்சிவசத்திகளையும் மறுப்பதியல்பே. பேரின்ப நுகர்ச்சிக்குச் சேயனாகிறா னவன். அவனுக்கு ஐயோ! கவியிற் 'கண் ஏது?' என்றதிலுள்ள 'கண்' என்பது உயிர்.

  • தொடங்கியவர்

இருளாம் வெளி ஏது? இரவு ஏது?:- உயிருக்கு அவத்தைகள் மூன்று. அவை கேவலம், சகலம், சுத்தம் என்பன. உயிர் ஆணவ மலத்தோடு மாத்திரையே கூடி நிற்பது அதற்குக் கேவலம். அவ்வுயிர் உடலினையெடுத்துக், கலையாதி போககாண்டத்தைக் கொண்டு, புத்தியாதி போக்கிய காண்டத்திற்பட்டு, இச்சை அறிவு செயல்கள் சிறிதே விளங்கப் பெற்றுச் சத்தாதி விடயங்களைப் புரிந்து போகத்தை நுகர்ந்து பிறப்பிறப்புக்களிலுழன்று, புவனந்தோறும் புடை பெயர்ந்து திரிவது அதற்குச் சகலம். அச்சகலம் நீங்கி உயிர் திருவருளைக் கூடும். அது அவ்வுயிர்க்குச் சுத்தம். கேவலம் இரவு போல்வது. அதனை நோக்கச் சகலம் பகலாகும். ஆயினும் சுத்தத்தை நோக்க அ·து இரவை (இருளை) யே நிகர்க்கும். ஆகலின் அது கவியில் 'இருளாம் வெளி' யெனப்பட்டது. இருளாம் வெளி யென்றதால் ஒளியாம் வெளியுண்மை கருதிக்கொள்ளப்படும். அதுவே சுத்தம்.

வையமெலாம் அறிய:- ஐக்கியவாத சைவர் (இலிங்கங்க் கட்டிகள்) ஆணவ மல முண்டெனக் கொள்ளார். ஆகலின் கேவலாவத்தை அவரால் மறுக்கப்படும். அவரோ டினப்பட்டவர் மாயாவாதியர். அவர் உயிரின் சகலத்தை மித்தை யென்பர். அங்ஙனம் கேவல சகலங்களாகிய பந்தத்தை யுடன்படாத அவ்விருவகையினரும் சுத்தத்தைப் பெறுதல் யாங்ஙனம்? 'நோய் நாடி நோய் முதனாடி யதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்' என்ற குறளை அவ ரறிக. தம் மதங்களிலும் முத்தி யுண்டென அவர் கூறுவது ஆரவாரமே. கட்டியது, கட்டப்பட்டது, விடுவிப்பது ஆகிய மூன்றில் ஒன்றன் உண்மையையில்லை யென்பவனும் மெய்யான விடுதியை யாண்டும் பெறான். விடுதி - முத்தி. அவனுக்கு அப்பேற்றின்கண் மனவெழுச்சி செல்லாது. கேவல சகலங்களிலும் உயிருக்குச் சிவசத்தி உபகரித்துக்கொண்டிருக்கும். அவ்வுபகாரம் சூக்கும வைந் தொழிலும், தூல வைந்தொழிலுமாம். அவ்வவத்தைகளை மறுப்பது அவ்வுபகாரத்தையே மறுப்பதாகும். அம்முகத்தால் அம்மதத்தவர்க்கு உயிரு மின்றாம், சிவசத்திகளும் புறகாம்.

அந்நாத்திக ரெல்லாந் தவஞ் செய்க. அதன் பயனாய்ச் சித்தாந்த சைவ சாத்திரங்களைக் குருமுகத்தால் ஆராயு முரிமை அவர்க்குக் கிட்டும். அப்போது அம்மறுப்புப் பொருள்களெல்லாம் உடன்பாட்டுப் பொருள்கெளென அவரால் தெளியப்படும். அவ்வுண்மை உலகின்மேல் ஆணையிட்டுக் கூறப்படுகிறது. 'வைய மெலாம் (அறிய)' என்றது கவி.

'நீ யறிய' என்றது சிவத்தின்மேல் ஆணை யென்றபடி.

ஏது என்னும் வினா இல்லை யென்னும் பொருளுடையது.

  • தொடங்கியவர்

மூன்றாம் பாட்டு

வாக்காலு மிக்க மனத்தாலு மெக்காலுந்

தாக்கா வுணர்வரிய தன்மையனை - நோக்கிப்

பிறித்தறிவு தம்மிற் பிர்¢யாமை தானே

குறிக்குமரு ணல்கக் கொடி.

பதவுரை

எக்காலும் - எந்தக் காலத்திலும்

வாக்காலும் - வாக்கினாலும்

மிக்க - பொல்லாத

மனத்தாலும் - மனத்தினாலும்

தாக்கா - எட்டப்படாததும்

உணர்வு அரிய - ஆன்ம அறிவால் அறிந்துகொள்ளுதற்கு முடியாததும்

தன்மையனை - (ஆகிய) தன்மைகளையுடைய சிவத்தினது (நிலையை)

பிரித்து - வேறாக எடுத்து

நோக்கி - ஆராய்ந்து பார்த்து (அது)

அறிவு தம்மில் - அறிவாகாரமான ஆன்மாக்களோடு

பிரியாமைதானே - பிரியாமற் கலந்து ஒன்றாயிருக்கும் உண்மை

குறிக்கும் - (உலகத்தார்) தெரிந்துகொள்ளும்படி (யைத்தானே)

அருள் நல்க - (கடவுள்) அருள் சுரக்கும் பொருட்டு

கொடி - துவசங் (கட்டப்பட்டது).

கருத்து

எக்காலத்திலும் சிவம் வாக்குக்கும் மனத்துக்கும் ஆன்ம அறிவுக்கும் எட்டாதது. அப்பொருளைத் தனித்தெடுத்து ஆராயின் அது ஆன்மாக்களின் அறிவோடு பிரியாமற் கலந்து ஒன்றாயிருப்பது அறியப்படும். அதை உலகத்தார் தெரிந்துகொள்ளவேண்டும். அதற்காக அச் சிவமே அருள் சுரக்குமாறு கொடி கட்டப்பட்டது.

விளக்கம்

வாக்காலும் மிக்க மனத்தாலும் தாக்கா:- ஞானம் மூன்று வகை. ஒன்று பாசஞானம். அது வாக்கெனவும் படும். இன்னொன்று பசுஞானம். அது மனமெனவும் படும். பின்னொன்று பதிஞானம். அது திருவடி ஞானமெனவும் படும். 3நான்கு வாக்குக்களும் சொற்பிரபஞ்சம். பிருதிவிமுதல் நாத மீறாய முப்பத்தாறு தத்துவங்களும் பொருட்பிரபஞ்சம். அவ்விரண்டையும் பற்றி நிகழும் உயிரின் ஏகதேச ஞானமே பாசஞானம். பாசம் வாயிலாக நிகழும் பசுஞானமே அது. பளிங்கென்பது ஒரு பொருள். அதற்குச் சொந்த வியல்பு உண்டு. ஆனால் அப்பளிங்கோடு சிவப்புப் பொரு ளொன்று சேர்க்கப்படுகிறது. அப்போது அப்படிகத்தி னொளி தனித்தறியப்படாது. அப்படிகம் அச்செந் நிறத்தையே தன்னிறம் போற் காட்டும். அதன் சொந்த நிறம் அதற்குத் தன்னியல்பு. தன்னியல்பு - சிறப்பியல்பு. அதனைச் சார்ந்து அதனுடையதுபோல் தோன்றும் வேற்றுப் பொருளின் நிறம் அதற்குப் பொது வியல்பு. பளிங்கு (படிகம்) போல்வது உயிர். அவ்வேற்று நிறப் பொருள் போல்வன அப்பாச வகைகள். வேற்றுநிறப் பொருளின் 4 கூட்டரவாற் படிகத்தின் தன்னியல்பு விளங்காது. அதுபோல உயிருக்கும் பாசக் 5 கூட்டரவால் தன்னியல்பு விளங்காமற் போம். அப்போது உயிரின்பாலுள்ளது சுட்டறிவு.

உயிர் பாசங்களிலிருந்து நீங்கும். அப்பாசங்கள் அவ்வுயிருக்கு வியாப்பியம். அதனை அவ்வுயி ருணரும். அதனால் அவ்வுயிர்க்கு ஒருவகை மேம்பா டுண்டு. அது சடுதிச்செருக்கு. அச்செருக்கு ஒருவகை மேம்பா டுண்டு. அது சடுதிச்செருக்கு. அச்செருக்கு மலவாதனை பற்றி வருவது. அதனால் அவ்வுயிர் தன்னையே மதித்து அநாதி முத்த சிவம்போல் 'நானுமொரு பிரம மாவேன்' என்று சமவாத ஞானம் பேசும். அதுதான் பசுஞானம். நான் பிரம மென்னும் மாயாவாத ஞானம் பாசங்கள் நீங்கலே முத்தி யென்னும் பாடாணவாத ஞானம். கருவிகளிற் பரந்துசென்ற உயிரறிவு அவை பிரிந்தவழி அவ்வுயிர்மாட்டு வந்து ஒன்றி நிற்றலே முத்தி யென்னும் பேதவாத ஞானம் ஆகிய இவையும் பசுஞானங்களே யாம். பசுஞானம் ஐயப்பட்ட அறிவு. அதுவும், பாசஞான மாகிய சுட்டறிவும் உயிர்க்குச் சிவத்தைக் காட்டா அதனையே 'வாக்காலு மிக்க மனத்தாலும் தாக்கா' என்றது கவி.

உணர்வு அரிய தன்மையன்:- உயிர் பாசத்தோடு கூடிப் பசுவாயிற்று. அப்போது அதனியல்பு பசுத்துவ மெனப்படும். அந்நிலையில் உயிர் ஏகதேசஞான முடையது. பசுத்துவம் நீங்குஞ் சமயம் வரும். அப்போது அவ்வுயிர் வியாபகமாம். அதன்பா லிருப்பதும் சுட்டிறந்த அறிவு. அவ்வறிவுக்குப் பதிப்பொருள் கோசரமா மென்பர் சிலர். அப்படி யன்று. சிவஞானத்தாலேயே சிவத்தைக்காண வேண்டும். அங்ஙனம் காணு முயிர் சிவத்தில் வியாப்பியமா யடங்கி அச்சிவஞானத்தாலேயே தன்னையுங் காணும். அங்ஙனமின்றித் தன்னறிவு கொண்டு அவ்வுயிரால் எந்த நிலையிலும் சிவத்தை யறியமுடியாது. 'உணர்வரிய தன்மையன்' என்ற அடிக்குப் பொருள் அது.

அறிவுதம்மிற் பிரியாமை தானே குறிக்கும் அருள்:- அதனால், உயிருக்கு அயல்போலுஞ் சிவம் என்னலாமா? அதுவுமில்லை. உயிர் வேறு. உடல் வேறு. ஆயினும் உயிர் உடலிற் கலந்து உடலேயா யிருக்கிறது. கண்ணுக்குங் கதிரவனுக்கும் ஒளியுண்டு. ஆனாற் கண் காணும், கதிரவன் காட்டுவான். அவ்வொளிகள் பெயரால் ஒன்று. இயல்பால் வேறு. கண்ணொளி காண்பதற்கு உயிரறிவு உடங்கியைய வேண்டும். அப்படியே சிவம் கலப்பால் உயிரேயாம்; பொருட்டன்மையால் உயிரின் வேறாம்; உயிருக்குயிராதற் றன்மையால் உயிரோ டுடனாம் அச்சம்பந்த விசேடமே அத்துவிதம். ஆகவே சிவம் உயிருக்கு அயலா யில்லை யென்க.

இனித், திருவடி ஞான மாவ தென்னை? அது ஏழு விதம். ஓதல், ஓதுவித்தல், கேட்பித்தல், கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்பன அவை. முதல் ஐந்தற்கும் நூல் வேண்டும். அவை ஞானவேள்வி யெனப்படும். பின் இரண்டற்கும் நூல்வேண்டாம். ஓதல், ஓதுவித்தல், கேட்பித்தல் என்னும் மூன்றாலும் உண்மைஞானம் நிகழாது. அவற்றைப் பொருந்திய உயிர் பதமுத்திகளைப் பெற்று ஆண்டு வைகி மீண்டுவந்து கேட்டலாதிகளாலேயே பரமுத்தியை யடையும் கேட்டல், சிந்தித்தல், தெளிதல் நிட்டை கூடல்களே உண்மைஞானம். கேட்டலாவது தேசிகனுபதேசத்தாற் சிவத்தை உயிர் செவிமடுத் தறிதல். அதனாற் பதி பசு பாசங்களி னியல்புகள் அவ்வுயிர்க்குத் தனித்தனி தோன்றும். அது பேதத் தோற்றம். சிந்தித்தலாவது அவ்வுபதேசத்துக் கனுகூலமான அளவைகளால் சிவத்தை உயிர் கருதியறிதல். அதனால்பதிபசுக்களின் கலப்புநிலை அவ்வுயிர்க்குத் தோன்றும். அது அபேதத் தோற்றம். தெளிதலாவது சிந்திக்கப்பட்ட சிவத்தை உயிர் தன்னறிவிற் சிவஞானத்தால் விளங்க அறிதல். அதனாற் பதியின் பற்றற்ற நிலை அவ்வுயிர்க்குத் தனித்துத் தோன்றும். நிட்டைகூடலாவது அத்தெளிவால் உயிர் பாச நீங்கிச் சிவானந்தானுபூதியில் திளைத்தல். அதனால் அவ்வுயிர் தன் வியாபக அறிவு விளங்கப் பெற்றுப் பதியோ டொத்து நிற்கும். அந்நிலையைப் பதிஞான மொன்றே தரவல்லது. அதனை 'அறிவு தம்மில் பிரியாமைதானே குறிக்கும் அருள்' என்றது கவி.

Edited by ArumugaNavalar

  • கருத்துக்கள உறவுகள்

நான்காம் பாட்டு

அஞ்செழுத்து மெட்டெழுத்து மாறெழுத்து நாலெழுத்தும்

பிஞ்செழுத்து மேலைப் பெருவெழுத்து - நெஞ்சழுத்திப்

பேசு மெழுத்துடனே பேசா வெழுத்தினையுங்

கூசாமற் காட்டாக் கொடி.

பதவுரை

அஞ்சு எழுத்தும் - சி - வ - ய - ந - ம என்னும் ஐந்து எழுத்துக்களையும்.

எட்டு எழுத்தும் - ஓம் - ஹாம் - ஹெளம் - சி - வ - ய - ந - ம என்னும் எட்டு எழுத்துக்களையும்

ஆறு எழுத்தும் - ஓம் - ந- ம - சி - வ - ய என்னும் ஆறு எழுத்துக்களையும்

நால் எழுத்தும் - ஓம் - சி - வ - ய என்னும் நாலு எழுத்துக்களையும்

பிஞ்சு எழுத்தும் - 'வ' என்னும் பிஞ்செழுத்தையும்

மேலை - மேலான

பெரு எழுத்தும் - 'சி' என்னும் பெருவெழுத்தையும்

நெஞ்சு அழுத்தி - மனத்தில் தியானித்து அத்தியான முதிர்ச்சியால்

பேசும் எழுத்துடனே - 'வ' என்னும் பேசும் எழுத்துத் தன்னை யறிவிப்பதோடு

பேசா எழுத்தினையும் - 'சி' என்னும் பேசா எழுத்தினையும்

கூசாமல் - மிகவும் இலகுவாக

காட்ட - பதிவிக்கவுஞ் செய்யும்படி

கொடி - துவசங் (கட்டப்பட்டது).

  • தொடங்கியவர்

கருத்து

அஞ்செழுத்து, எட்டெழுத்து, ஆறெழுத்து, நாலெழுத்து, பிஞ்செழுத்து, பெருவெழுத்து, ஆகியவற்றை மனதில் தியானித்து, அதன் முதிர்ச்சியால் பேசும் எழுத்துத் தன்னை யறிவிப்பதோடு பேசா வெழுத்தையும் சுலபமாக விளக்கஞ் செய்யும்படி கொடி கட்டப்பட்டது.

விளக்கம்

முப்பத்தாறு தத்துவங்களும் பாசக்கூட்டம். ஆசானுபதேசத்தால் உயிர் அதைவிட்டு விலகும். அப்போது அவ்வுயிரின் தன்னியல்பு விளங்கும். அதிற் சிவஞானம் பிரகாசிக்கும். அந்த ஞானத்தைக் கண்ணாகக் கொண்டு அதற்கு மூலமாகிய சிவத்தை அவ்வுயிர் பாசம் நீங்கிய தன்னறிவிற் காணும். ஆயினும் பாசத்தோடு பல்காற் பயின்ற வாசனை அப்போதும் அவ்வுயிரை வந்து தாக்கலாம். அதனையும் விட்டு அவ்வுயிர் விலகவேண்டும். அதற்கு உதவுவதே பஞ்சாக்கர தியானம்.

பஞ்சாக்கரத்திற் பாசம் நீங்கிப் பதியைக் காண்டலென்ற பொருள் அடங்கி யிருக்கிறது. ஆகலின் அந்நிலையில் நிற்குமுயிர் அதனை ஓதவேண்டு மென்பது அவ்வுயிர்க்கு ஆசான் தந்த பணி யென்க. (பணி- விதி)

தியானம் மூவகை 6 உரை, 7 மந்தம், 8 மானதம் என்பன அவை. உரை, வாசகம், பாஷ்யம் என்பன ஒரு பொருட் சொற்கள். மந்தமும் உபாம்சும் ஒரு பொருட் சொற்கள். இங்கே கொள்ளப்பட்டது சுத்தமானதம். அ·தாவது அறிவாற் கணித்த லென்பது. இது அம் மூவகைத் தியானத்திற்கும் அப்பாற்பட்டது.

பஞ்சாக்கரத்தை நிற்கு முறையில் நின்று ஓது முறையில் ஓதவேண்டும். நிற்குமுறையும் ஓதுமுறையும் வேறாயிற் பயனில்லை. சிவமும் உயிரும் பொருளால் வேறு; ஆயினும் கலப்பால் ஒன்றே. ஞாயிற்றி னொளி வியாபகம். கண்ணொளி அதற் கடங்கிய வியாப்பியம். இரண்டொளிகளும் ஒன்றுதல் வேண்டும். அப்போது கண் தனக்குரிய பயனைப் பெறும். பயனாவது கண்ணைப் பீடித்திருந்த இருளின் நீக்கம். அப்படியே சிவம் வியாபகம். உயிர் வியாப்பியம். உயிர் அச்சிவ வியாபகத்து ளடங்கி அச் சிவத்தின் வழித்தாய் நிற்க வேண்டும். அதுவே உயிர் சிவத்துக்கு ஆற்றுங் தொண்டு. நிற்குமுறை யென்பது அதுவே. அதனோடு கூடிய ஓதுமுறையாவது யாது? ஓதல், கணித்தல், உச்சரித்தல், தியானித்தல் என்பன ஒன்று. தியானித்தற் கண் மந்திரங் கிரியை பாவனை வேண்டும். அவை யொழிந்த தியானம் சிறந்ததன்று. அவை நிகழ வேண்டு மிடம் அகம். ஆண்டு இதயம் பூசைத்தானம். அதிற் பஞ்சாக்கரத்தாற் சிவத்துக்குத் திருமேனி யமைத்துக், கொல்லாமை, ஐம்பொறி யடக்கல், பொறுமை, இரக்கம், அறிவு, செபம், தவம், அன்பு என்னும் எட்டுப் பூக்களைக் கொண்டு ப்ஞ்சாக்கரத்தாற் பூசை செய்ய வேண்டும். நகாரம் திருவடி. மகாரம் திருவுந்தி. சிகாரம் திருத்தோள். வகாரம் திருமுகம். யகாரம் திருமுடி. இது தூல பஞ்சாக்கரத் திருமேனி. சூக்கும பஞ்சாக்கரத் திருமேனியாவது துடிக்கரத்திற் சிகாரமும், வீசிய கையில் வகாரம். அபயகரத்தில் யகாரமும், அக்கினிக்கையில் நகாரமும், ஊன்றிய பாதத்தில் மகாரமுமாயிருப்பது. நாபி ஓமத்தானம். அதில் ஞான அனலை யெழுப்பிப் பஞ்சாக்கரத்தால் ஓமஞ் செய்ய வேண்டும். புருவநடு தியானத்தானம். அதிற் சிகார யகார வகாரமுறை கொண்டு பஞ்சாக்கரத்தாற் சிவோகம் பாவனை செய்ய வேண்டும். சிகாரம் தத் பதம். யகாரம் த்வம்பதம். வகாரம் அஸிபதம். தத் - அது. த்வம் - நீ. அஸி - ஆகின்றாய். நிற்குமுறை யென்று முன் சொல்லப்பட்டது இப் பாவனைதான். முன் சொல்லப்பட்ட கலப்புந் தொண்டு மாகியவற்றை வாயிலாகக் கொண்டு சிவம் உயிரினிடம் அத்துவிதமாய் நின்று விளங்கித் தோன்றி மலத்தைக் கெடுக்கும். கவியில் 'நெஞ்சழுத்தி' யென்ற தொடரில் அவை யெல்லா முள.

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் ஆறுமுக நாவலரே முடிவோடுதான் இருக்கிறீர் போல் :):D

  • தொடங்கியவர்

அத்தகைய பேருபகாரத்தைச் செய்யவல்லது பஞ்சாக்கரம். அதுவே மந்திர ராஜம். அது பல பேதங்களை யுடையது. அஞ்செழுத்து, எட்டெழுத்து முதலியன அவை. அஞ்செழுத்து சி வ ய ந ம. எட்டெழுத்து ஓம் ஹாம் ஹெளம் சி வ ய ந ம. ஆறெழுத்து ஓம் ந ம சி வ ய. நாலெழுத்து ஓம் சி வ ய. பிஞ்செழுத்து , பெருவெழுத்து என்பவெல்லாம் மந்திர சாத்திர பரிபாஷைகள். ஓங்காரமும் பஞ்சாக்கர மெனப்படும். 'திருவருட் பய'னில் ஐந்தெசுத் தருணிலை கூறவந்த சுவாமிகள் 'இறைசத்தி பாச மெழின்மாயை யாவி யுறநிற்கு மோங்காரத் துள்' என்றருளினார்கள். அப்பேதங்களைத் தனித்தனி யறிய விரும்புவார் பலர். நல்லாசிரியன்பால் உபதேச முகத்தால் அவை விளங்கிக் கோடற்பாலன. ஆயினும் அஞ்செழுத்தளவில் இங்குச் சிறிது சொல்லப்படும். சிகாரத்திற் சிவமும், வகாரத்தி லருளும், யகாரத்திலுயிரும், நகாரத்திற் றிரோதான சத்தியும், மகாரத்தின் மலமும் உள்ளன. நகார மகாரங்களை முதலில் வைத்து உச்சரித்தல் பிறப் பிறப்பிற் படுத்தும். சிகார வகாரங்களையே முதலில் வைத் துச்சரிக்க. வீடு பேற்றைத் தருதற்குக் காரணமா யிருப்பது அதுவே. சூக்கும பஞ்சக்கரம் அது தான். அருள் தன்னை யடுத்து நிற்கும் உயிரைச் சிவத்தோடு சேர்க்கும். அது காரண பஞ்சாக்கர மாகிய சிகார யகார வகார முறை அதில் மலவெழுத்துக்கள் விடப்படும். உச்சரிப்பு முறையில் பஞ்சாக்கரம் தூல சூக்கும காரணமெனப் பலவாம். அவற்றின் நுணுக்கங்களை ஆசானருள் கொண்டு பெரு நூல்களுட் கண்டு நலனெய்துக.

முற்றிற்று

ஸ்ரீமத் உமாபதி சிவந் திருவடி வாழ்க.

ஸ்ரீமத் சிவஞான சுவாமிகள் திருவடி வாழ்க.

  • தொடங்கியவர்

1. "கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை"

என்னும் திருக்குறளில் பொருள் உற்றறியத்தக்கது.

2. தாதான்மிய சத்தி :- எப்பொழுதும் விட்டு நீங்காமல் நிற்குஞ் சத்தி - (தாதான்மியம் - அது தானாதல்). முதல்வனின் ஆணையாகிய் சிற்சத்தி முதல்வனின் வேறின்றி அவனின் வியாப்பியமாய் நிற்றல்), முதல்வன் தனது சிற்சத்தியோடு பேதமும் அபேதமுமின்றி அவ்விரண்டற்கும் பொதுமையாய் நிற்பன், தன்னெல்லையளவும் வியாப்பியாய் நிற்கும் ஞாயிறு தன் கிரணத்தோடு அவ்வாறு நிற்றல் போலும். [சிவஞானபாடியம் - பக்கம் 256]

3. வாக்குகள் நான்கு. சூக்குமை - பைசந்தி - மத்திமை - வைகரி

4,5 - கூட்டரவு - கூட்டம் (அரவு - தொழிற்பெயர் விருதி)

தொழிற்பெயர் விகுதிகள்:-

"தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, உ, தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆனை, மை, து, ஆல், இல் என்பனவும் பிறவுமாம் (நன்னூல் - இலக்கணம்)

9உ-ம்) தேற்றரவு (தேற்றுதல்)

6 அருகிலிருக்கும் பிறர்செவிக்குங் கேட்கும்படி செபித்தல்

7 மந்தம் or உபாம்சு = தன் செவிக்கு மாத்திரம் கேட்கும்படி நாநுனி உதட்டைத் தீண்ட மெள்ளச் செபித்தல்

8 மானதம் - நாநுனி உதட்டைத் தீண்டாமல், ஒருமை பொருந்தி மனசினாலே செபித்தல்.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

1. "கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை"

என்னும் திருக்குறளில் பொருள் உற்றறியத்தக்கது.

மேற் குறிப்பிட்ட குறளின் விளக்கத்தை தயவு செய்து விரிவாக அறியத் தருவீர்களா ஆறுமுகநாவலர் ஐயா .

  • 9 months later...
  • தொடங்கியவர்

lingam_nandi(1).jpg

  • கருத்துக்கள உறவுகள்

Posted 25 July 2009 - 12:24 AM

Quote

1. "கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை"

என்னும் திருக்குறளில் பொருள் உற்றறியத்தக்கது.

மேற் குறிப்பிட்ட குறளின் விளக்கத்தை தயவு செய்து விரிவாக அறியத் தருவீர்களா ஆறுமுகநாவலர் ஐயா .

ஒருமுறை வள்ளலார் பெருமானிடம் அவறோடிருந்தவர்கள் சிவபுராணத்துக்கு விளக்கம் கூறும்படி கேட்டார்கள். பெருமானும் அவர்களிடம் சுருக்கமாய் கூறவா விரிவாய் கூறவா எனக் கேட்டிருக்கிறார், அவர்களும் இப்போ நிறைய நேரமிருக்கிறது நீங்கள் விரிவாகவே கூறுங்கள் என்றிருக்கிறார்கள். பெருமானும் பெரிய புராணத்தில் முதல் நமச்சிவாய என்ற சொல்லில் "ந" வுக்கு விளக்கம் சொல்லத் தொடங்கினார், பலமணி நேரமாகி மாலையாயிட்டு விளக்கம் முடியவில்லை, அதுபோல் தமிழ்சிறியும் குறளுக்கு பொருள் சுருக்கமாய் கேட்டிருக்கலாம், விரிவாய்க் கேட்டதினால் நாவலர் ஐயாவும் குறளுக்கு பொருள் தேடி எங்கெங்கே அலையுறாரோ தெரியவில்லை.கிட்டத்தட்ட்ட ஒரு வருடம் கொஞ்சம் கூடத்தான்,

Edited by suvy

  • கருத்துக்கள உறவுகள்

மேற் குறிப்பிட்ட குறளின் விளக்கத்தை தயவு செய்து விரிவாக அறியத் தருவீர்களா ஆறுமுகநாவலர் ஐயா .

ஒருமுறை வள்ளலார் பெருமானிடம் அவறோடிருந்தவர்கள் சிவபுராணத்துக்கு விளக்கம் கூறும்படி கேட்டார்கள். பெருமானும் அவர்களிடம் சுருக்கமாய் கூறவா விரிவாய் கூறவா எனக் கேட்டிருக்கிறார், அவர்களும் இப்போ நிறைய நேரமிருக்கிறது நீங்கள் விரிவாகவே கூறுங்கள் என்றிருக்கிறார்கள். பெருமானும் பெரிய புராணத்தில் முதல் நமச்சிவாய என்ற சொல்லில் "ந" வுக்கு விளக்கம் சொல்லத் தொடங்கினார், பலமணி நேரமாகி மாலையாயிட்டு விளக்கம் முடியவில்லை, அதுபோல் தமிழ்சிறியும் குறளுக்கு பொருள் சுருக்கமாய் கேட்டிருக்கலாம், விரிவாய்க் கேட்டதினால் நாவலர் ஐயாவும் குறளுக்கு பொருள் தேடி எங்கெங்கே அலையுறாரோ தெரியவில்லை.கிட்டத்தட்ட்ட ஒரு வருடம் கொஞ்சம் கூடத்தான்,

Edited by putthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேற் குறிப்பிட்ட குறளின் விளக்கத்தை தயவு செய்து விரிவாக அறியத் தருவீர்களா ஆறுமுகநாவலர் ஐயா .

கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்கத் தலை.

அறத்துபால், கடவுள் வணக்கம் , குறள் - 9

உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கிநடக்காதவனின் நிலையும் ஆகும்

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமுறை வள்ளலார் பெருமானிடம் அவறோடிருந்தவர்கள் சிவபுராணத்துக்கு விளக்கம் கூறும்படி கேட்டார்கள். பெருமானும் அவர்களிடம் சுருக்கமாய் கூறவா விரிவாய் கூறவா எனக் கேட்டிருக்கிறார், அவர்களும் இப்போ நிறைய நேரமிருக்கிறது நீங்கள் விரிவாகவே கூறுங்கள் என்றிருக்கிறார்கள். பெருமானும் பெரிய புராணத்தில் முதல் நமச்சிவாய என்ற சொல்லில் "ந" வுக்கு விளக்கம் சொல்லத் தொடங்கினார், பலமணி நேரமாகி மாலையாயிட்டு விளக்கம் முடியவில்லை, அதுபோல் தமிழ்சிறியும் குறளுக்கு பொருள் சுருக்கமாய் கேட்டிருக்கலாம், விரிவாய்க் கேட்டதினால் நாவலர் ஐயாவும் குறளுக்கு பொருள் தேடி எங்கெங்கே அலையுறாரோ தெரியவில்லை.கிட்டத்தட்ட்ட ஒரு வருடம் கொஞ்சம் கூடத்தான்,

ஆறுமுகத்தாரை திட்டிபோட்டு அவரிட்ட விளக்கம் கேட்டா அவர் எப்படி சொல்லுவார்

கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்கத் தலை.

அறத்துபால், கடவுள் வணக்கம் , குறள் - 9

உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கிநடக்காதவனின் நிலையும் ஆகும்

இரண்டு வரி திருக்குறளுக்கு, விளக்கம் பெற ஒரு வருசம் காத்திருக்க வேண்டி வந்திட்டுது.

சிலவேளை...... நாவலர் ஐயாவுக்கும் அதுக்கு பதில் தெரியாது போலை. :D

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு வரி திருக்குறளுக்கு, விளக்கம் பெற ஒரு வருசம் காத்திருக்க வேண்டி வந்திட்டுது.

சிலவேளை...... நாவலர் ஐயாவுக்கும் அதுக்கு பதில் தெரியாது போலை. :D

நாவலர் இணைச்ச சிவலிங்கப் படத்தில வடமொழி எழுத்து இருக்கு..! ஆனால் கீழே "மேன்மைகொள் சைவநீதி" எண்டு வேற எழுதி வச்சிருக்கிறார்..! ஒண்டுக்கொண்டு சின்க் ஆக மாட்டெண்டுதே..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறீ இரண்டு வரியுள்ள திருக்குறளுக்கு ஒரு வருடம் ஆகியும் விளக்கம் கிடைக்கவில்லை!!! இதை எத்தனைபேர் வாசித்துவிட்டோம், இருப்பினும் தெரிந்தவர்கள் யாரும் எழுதிப் புரியவைக்கலாம் அல்லவா.. இசைக்கலைஞன் நீங்கள் தன்னும் பொருள் கூறலாம். அப்படியே நீங்கள் கூறுவது பிழையாக இருந்தால் இங்கு திருத்துனர்களுக்கா பஞ்சம்? :D

இசை நீங்கள்தான் திண்ணையில் நன்றாக திருக்குறள் எழுதுபவர் உங்களைத்தான் கேட்க முடியும். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இக்குறளுக்கு பொருள் கூறத் தெரிந்த பலர் இங்கிருக்கிறார்கள். ஆயினும் இதுவரை யாரும் கூற முன்வர வில்லை. காரணம் விடயம் சப்பென்று முடிந்து விடும் என்பதால்!

புகழுக்கு ஆசைப்பட்டு குறளுக்கு பொருள் கூறிய ம.மச்சானும் ஐம்பொறி யைக் கூறினாரே யொழிய என்குணத்தைக் கூறவில்லை. ஆகவே இதில் குற்றமிருக்கிறது! ஆகவே அவரும் மதுரை பொற்றாமரை குளத்தில் மூழ்கி மீண்டு வந்து சரியாகப் பொருள் கூறி புகழைப் பெற்றுச் செல்லவும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.