அக்கினிக் கரங்கள் புத்தகத்தின் முற்பக்கங்களில் உள்ள விடயங்களையும் இணைத்திருக்கின்றேன்.
21.10,1987 .அன்று இந்திய அமைதிப் படையினரால் யாழ். போதனா வைத்திய சாலையில் கொலை செய்யப்பட்ட வைத்தியர்கள், தாதியர், ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கும் இந்நூல் காணிக்கை!
பதிப்புரை
ஈழத் தமிழரின் இனப்பிரச்சினையைப் பகைப்புலமாகக் கொண்ட உண்மை நிகழ்வுகளை கலாபூர்வமாகப் பதிவு செய்து வைக்கும் பணியிலேயே, திரு.நாவண்ணனின் இலக்கிய வாழ்வின் பெரும் பகுதி கழிந்திருக்கின்றது. எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்து இன்றுவரை அவர், படைத்த இலக்கியங்கள் அதற்குச் சாட்சி. இந்த வகையில், உண்மை நிகழ்வுகளை இலக்கியப் படைப்புக்களாக உருவாக்கும் பணியில், தமிழீழ இலக்கிய வரலாற்றில் திரு. நாவண்ணனுக்கு தனித்துவமான ஓரிடம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
அக்கினிக் கரங்கள் என்ற இந்தக் குறுநாவலும் அந்த வகைக்குள்ளேயே அடங்குகின்றது!
1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21 ஆம், 22ஆம் திகதி களில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் இந்தி யப்படை புரிந்த படுகொலையை மையமாக வைத்தே இக் குறுநாவல் எழுதப்பட்டுள்ளது.
உலகின் கண்களில் இருந்து கணிசமான அளவுக்கு மறைக்கப்பட்டிருந்த இந்த வைத்தியசாலைப் படு கொலையின்போது, அதிற் சிக்கி உயிர் தப்பிய .... சாட்சிகளிடமிருந்து பெற்ற தகவல்களைக் கொண்டு நாவண்ணன் இந்தக் குறுநாவலைப் படைத்துள்ளார்!
போராட்ட நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் இத்தகைய இலக்கிய முயற்சிகளுக்கு நூலுருக் கொடுத்து வெளியிடுவதில் நாம் மன நிறைவடைகின்றோம்.
தமிழ்த்தாய் வெளியீட்டகம்
அணிந்துரை
இது ஒரு 'குறுநாவல்' என்கின்ற பரிமாணத்தையும் மீறி ஒரு காலத்தின் 'வரலாற்றுப் பதிவாகவே" அமைந்திருக்கின்றது. இந்தக் குறுநாவலைப் படிக்கின்ற போது எமது சரித்திரத்தின் அந்தக் கொடூரமான கால கட்டத்தில் வாழ்ந்து - அந்தக் கொடுமையான சம்பவங்களைக் கண்டு உயிர் தப்பிய என்போன்றவர்களுக்கு, இந் நிகழ்வுகள் திரைப்படமாகவே மனதில் வந்து செல்லும். இந்த நூலில் ஆக்கிரமிப்பாளர்களின் சுயரூபம் மிக அழகாக எடுத்துக்காட்டப்படுகின்றது.
உலகில் மிகப் பெரிய 'ஜனநாயக நாடு' இந்தியா என்று தம்மைப் பற்றித் தம்பட்டம் அடிப்பவர்கள் - மிகப் பெரிய இராணுவக் கட்டமைப்பைக் கொண்டவர்கள்; "ஒரு யுத்த களத்தில் காயப்பட்டவர்களுக்கு உதவி செய்கின்ற தொண்டர் கூட, நடு நிலையாளராகக் கருதப்பட்டு மதிக்கப்படல் வேண்டும்' என சர்வதேசச் சட்டங்களும் தர்மங்களும் கூறுகின்ற வேளையில் ஒரு மருத்துவமனை, அதனுள் சீருடைகளில் தாதிகள், ஊழியர்கள், டொக்ரர்கள், காயத்துடனும், வேறு நோய்களுடனும் இருக்கின்ற நோயாளிகள் என்கின்ற மனிதநேயம் இல்லாமல்' அங்கு அத்துமீறி நடாத்திய அநர்த்தங்கள் யாவினையும் ஆசிரியர் மிக அழகாக எடுத்துக் காட்டியுள்ளார்.
ஒரு நாள் உலகம் நீதி கேட்கின்ற போது, இது போன்ற உண்மை நிகழ்வுகளை உள்ளடக்கிய குறுநாவல் கள் நிச்சயமாக உண்மையை விளம்பும் மனச்சாட்சிகளாக - உறுதிப் படுத்தப்பட்ட ஆவணங்களாகத் தீச் சுவாலைகளுடன் எழுந்து நிற்கும்.
எதிர்கால சந்ததியினர் ஒரு காலத்தில் இங்கு என்ன நடந்தது ...... சுதந்திரம் பெறுவதற்காக இந்த மண் கொடுத்த விலை என்ன...... நாம் சிந்திய இரத்தம் எவ்வளவு...... என்பதைச் சொல்வதற்கு இந்தக் குறுநாவல் உதவும். இது எங்களுடைய தேசப்பற்றை இன்னும் வளர்த்து இந்த மண்ணிற்கு மேலும் உரமூட்ட உதவும்.
எதிர்காலத்தில் திரைப்படமாக்கப்பட்டு மக்களின் மனங்களில் இவை சரித்திர நிகழ்வுகளாகப் பதிவு செய் யப்படல் வேண்டும்.
இவ் வரலாற்றுப் பணியைச் செய்த நாவண்ணன் அவர்களை, அன்று அநியாயமாக கொல்லப்பட்டவர்களின் ஆன்மாக்களும் அவர்கள் உறவினர்களும் தமிழ் மக்களும் நன்றியுடன் நினைவு கூருவார்கள் என்றே நம்புகின்றேன்.
இவருடைய இலட்சியப் பணி தொடர வேண்டும் என வாழ்த்துவதோடு இது சம்பந்தமாக குறிப்பாக 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21ஆம், 22ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நடந்த கொடூரங்கள் பற்றியும் அன்று அங்கு கொலை செய்யப்பட்டவர்கள், கடமை புரிந்தவர்கள், சிகிச்சை பெற்றவர்கள் பற்றிய மேலும் தகவல்களையும் தரவுகளையும் பெற்று இந்நிகழ்வை சரித்திரப் பெரும் நாவலாக எழுத வேண்டுமெனப் பணிவன்போடு கேட்டு மீண் டும் வாழ்த்துகின்றேன்.
வைத்திய கலாநிதி எஸ். பி. ஆர். சீர்மாறன் 23.12.1994
ஏன் எழுதினேன்?
'யாவும் கற்பனை' என்ற, அடிக்குறிப்புடனே இலக்கியம் படைக்கும் காலம் எமக்கு இன்று இல்லை. கற்பனையை விஞ்சிய அவலங்களும், அதிசயங்களும் நிகழும் யதார்த்தத்தில் நாமின்று வாழுகின்றோம்! எனவே, நாம் வாழுகின்ற காலத்தின் நிகழ்வுகளை உடனுக்குடன் கலைத்துவத்துடன் பதிவு செய்து வருங்காலச் சந்ததிக்கு வழங்கிச் செல்வது எம் போன்றோரின் நிகழ்காலக் கடமையாகும்.
1989 இல் இந்தியஅமைதிப்படையின் ஆக்கிரமிப்பு மூச்சிழுக்கத் தொடங்கிய காலத்திலேயே, நண்பன் பாலநடராஜனின் ஆதரவுடன் 'காந்திய நாட்டின் காட்டுமிராண்டிகள் 'எனும் தலைப்பில் அமைதிப்படை எமக்கிழைத்த அக்கிரமங்களை பதிவு செய்யத் தொடங்கினேன். பாரிய அந்தப் பணியைத் தொடரப் போதிய பொருள் வளம் இன்மையால் ஆரம்ப முயற்சிகளோடு அது கைவிடப்பட்டது.
சென்ற ஆண்டில் 'சுபமங்களா' ஆசிரி யர் திரு. கோமல் சுவாமிநாதன் அவர்கள், தமிழீழத்துக்கு வருகை தந்து சென்ற பின்னர் இலங்கை எழுத்தாளர்களுக்கான, ஈழத்தை நிலைக்களனாகக் கொண்ட குறுநாவல் போட்டியை இலங்கை தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து நடாத்துவதாக விளம்பரம் செய்திருந்தார். ஆரம்பத்தில் இதிற் கலந்து கொள்ளும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை.
ஆனால். 1994 ஜூலை மாத சுபமங்களாவில் வெளியான திரு. கோமல் சுவாமி நாதனின் ‘அதிர்வலைகளை மீட்டும் யாழ்’ கட்டுரையின் சில வரிகள் என் மனதின் அதிர்வலையைத் தட்டிவிட்டன. அந்த வரிகள்…..
"ஒரு காலத்தில் பல கூட்டங்களிலும் மாநாடுகளிலும் உங்கள் பிரச்சினைகள் பற்றிப் பேசப்பட்டன. ஈழத் தமிழர்களுக்கும் பொது அடைப்புகளும் பேரணிகளும் கூட நடந்தன. அரசாங்கம் கூட உங்களுக்கு ஆதரவாகப் பல உதவிகள் செய்தது. இதனை எல்லாம் நீங்கள் அறிவீர்கள்! ஆனால், ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பின் எல்லாமே முற்றிலும் மாறி விட்டது. மக்கள் அந்தச் சம்பவத்தின் மூலம் திகைப்பும் அதிர்ச்சியும் அடைந்தனர். பரிதாப உணர்வு ... கோபமாக மாறியது. இன்று. புலிகளின் இயக்கத்துக்கு தமிழ் நாட்டில் தடை இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் ஈழத் தமிழர் பிரச்சினை அங்கு பேசப்படவில்லை .....!"
மேற் கூறப்பட்ட வசனங்கள் ஓட்டுமொத்தமாக இந்தியர்களின் - இந்தியத் தமிழர்களின் கருத்து என்பதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், நிச்சயமாக இது திரு. கோமல் சுவாமி நாதனின் கருத்து என்பதை மறுப்பதற்கில்லை. தனது கருத்தை. இந்தியர்களின் கருத்து எனக் கூறுவ தன் மூலம் அங்குள்ள தமிழீழ அனுதாபிகளைக் கூடக் கொச்சைப்படுத்த முயலும் செயல் இது என்பதையும் உணர்ந்தேன்.
அதேவேளையில், ஒரு ராஜீவ் காந்தியின் மரணம் இந்திய மக்களிடையே தமிழீழ மக்களுக்கு எதிரான உணர்வை இந்த அளவுக்கு ஏற்படுத்தியிருக்குமானால் ராஜீவ் காந்தியின் பணிப்பின் பேரில் இந்திய ஆக்கிரமிப்புப் படை இங்கு செய்த கொலைகளும் அட்டூழியங்களும் தமிழீழ மக்களுக்கிடையே எத்தகைய எதிர்ப்புணர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் என்பதை உணர்த்தவே இந்தக் குறுநாவலை எழுதவேண்டிய கடமைப்பாட்டை உணர்ந்தேன்
1987 இல் "கிறிஸ்துமஸ் நாளிலாவது யாழ்ப் பாணத்தில் யுத்த நிறுத்தமொன்றை மேற்கொள்ளலாமே!" என்று ராஜீவ் காந்தியிடம் கேட்கப் பட்டபோது."கிறிஸ்துமஸ் நாளில் யுத்த நிறுத்தம் மேற்கொள்ள சிறிலங்கா ஒரு கிறிஸ்தவ நாடு அல்ல." என்று ராஜீவ் காந்தி திமிருடன் கூறிய பதிலை அன்றைய நாளிதழ்களில் படித்தபோது தமிழர்களைத் திட்டமிட்டு அடக்கி அழிப்பதில் ராஜிவ் காந்தி கொண்டிருந்த வெறியைக் கண்டு மனம் நொந்தவர்களில் நானும் ஒருவன்! எனவே தான், இந்திய ஆக்கிரமிப்புப் படையின் ஆக்கிரமங்களில் ஒரு துளியான யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலைகளை, தீபாவளித் தினத்தன்று அவர்கள் யாழ்ப்பாணத்தில் கொலை வெறியாடியதைப் பகைப்புலமாகக் கொண்டு இக் குறுநாவலை எழுதி அனுப்பினேன். கூடவே திரு. கோமல் சுவாமிநாதனுக்கு ஒரு குறிப்பும் அனுப்பியிருந்தேன்...
"நீங்கள் எனது இந்தக் குறுநாவலுக்குப் பரிசு தரமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால். 'சுபமங்களா 'ஆசிரியரும், பரிசுக்குரிய நாவலைத் தெரிவு செய்யும் நடுவர்குழுவும், இதைப் படித்தாலே போதும் ! நான் இந்த நாவலை எழுதியதன் நோக்கம் நிறைவேறியதாகக் கொள்வேன்." என்பதே அது.
அந்த நோக்கம்கூட, முழுமையாக நிறைவேறியிருக்கும் என்பதில் எனக்கு ஐயப்பாடு உண்டு.
யாழ். போதனா வைத்தியசாலைப் படு கொலைகளின் எட்டாவது ஆண்டு நினைவு நாளில் நூல்வடிவில் இதனை வெளியிடுவது என்று நான் முயற்சி செய்துகொண்டிருந்த போது தான், 'தமிழ்த்தாய் வெளியீட்டகம்" குறிப்பிட்ட நாளில் இந்நூலை வெளியிடுவதற்கு முன்வந்தது ! காலத்தின் தேவை கருதி இந்நூலை வெளியிடும் தமிழ்த்தாய் வெளியீட்டகத்தினருக்கு என் இதய நன்றிகள்.
வைத்தியசாலைப் படுகொலை அவலத்தில் சிக்கி தாம் பட்ட அனுபவங்களை என்னோடு பகிர்ந்துகொண்டு இதனை எழுதி முடிக்க உதவியவர்களை நன்றியோடு நினைவு கூருகின்றேன்.
இந்தப் படுகொலை ஏனைய வைத்தியர்கள், நிகழ்வின் போது ஊழியர்களுடன் 'எக்ஸ் - றே 'பிரிவினுள் ஒளிந்து நின்று உயிர் தப்பியவரான வைத்திய கலாநிதி எஸ். பி. ஆர் சீர்மாறன் அவர்களிடம், அணிந்துரை பெற்ற தன் நோக்கமே. நான் எழுதியுள்ள உண்மைச் சம்பவங்களுக்கு அவரும் ஒரு சாட்சி என்பதால் தான்! மனமிசைந்து இந்நூலுக்கு அணிந்துரை தந்தமைக்கு என் நன்றிகள்.
போட்டிக்காக எழுதப்பட்ட பிரதியில் தவிர்க்கப்பட்டிருந்த சில விடயங்கள் பின்னர், திருத்தி எழுதப்பட்டு கதையோடு இணைக்கப்பட்டுள்ளன.
எனது முன்னைய நூல்களுக்குக் கிடைத்தது போன்ற ஆதரவு இந்நூலுக்கும் கிடைக்கும் என்பதால் வாசகர்களை அன்புடன் நினைவு கூருகின்றேன்.
நன்றி.
நாவண்ணன்