Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாட்சியமற்ற களத்தை வைத்து கதை வரையும் சட்டாம்பிகள்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் சாட்சியமற்ற களமாக மாற்றப்பட்டது உலகிற்கு நன்கு தெரிந்தே நடந்தது. விடுதலைப்புலிகள் எதற்காக இராணுவ ரீதியல் பலவீனமான ஒரு கடற்கரைக்குள் மக்களையும் போராளிகளையும் கொண்டு சென்றார்கள் என்பது பற்றி.. யாருக்கும் எதுவும் தெரியாது..! முள்ளிவாய்க்கால்.. புதுக்குடியிருப்பை தக்க வைத்தபடி இருந்த புலிகளுக்கு காடு சார்ந்த பல பிரதேசங்களை தக்க வைத்துக் கொள்ள தெரியவில்லையா.. அல்லது அத்துணை முக்கியத்துவம் அறியாதவர்களாக புலிகள் இருந்தார்களா என்பதும் கேள்வி..!

வெளி உலகத் தொடர்பிற்காக கடற்கரையை புலிகள் தெரிவு செய்தார்கள் என்பது அத்துணை ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம் அல்ல. ஒரு லட்சம் இந்தியப் படைகள் சூழ்ந்து நிற்க மணலாறை அதனை அண்டிய காடுகளை கடற்கரையை தேர்வு செய்த புலிகளுக்கு 50 ஆயிரம் சிங்களப் படைகளை எதிர்கொண்டு ஒரு காட்டுப் பிரதேசத்தை தக்க வைத்து தங்களை போராட்டத்தை காப்பாற்றத் தெரியாமலா இருந்திருக்கும்..???!

அதுமட்டுமன்றி 2006 இல் மூதூர் வரை சென்றும்.. அதன் பின்னர் மண்டைதீவு, மண்கும்பான் வரையும் போய் திடீர் என திரும்பி வந்தனர் புலிகள். திரும்பி வரும்போது அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு போகும் போது இருக்கவில்லை. ஏன் இத்தனை இழப்புகளோடு திரும்பி வந்தனர்..???!

அது இருக்க.. பெருமளவு ஆயுதங்களும் தளபாடங்களும் போராளிகளும் கையில் இருந்தும்.. ஏன் புலிகள் பின்வாங்குதலை செய்து கொண்டிருந்தனர்..??! ஒரு காடு சார்ந்த பிரதேசத்தை தானும் அல்லது பிரதேசங்களை தக்க வைத்துக் கொண்டு போராட அல்லது தம்மை பாதுகாக்க முயலவில்லை..???!

வளங்களை பாதுகாக்க என்று, பூநகரியில் இருந்து சிறீலங்கா இராணுவம் பரந்தன் நோக்கி புறப்பட்டதும் உடனடியாக படையணிகளை பின்வாங்கிக் கொண்ட புலிகள்.. அதுவும் வட போர்முனையில் அதுகாள் வரை எதிரியை நகரவிடாது தடுத்த உறுதிமிக்க பலமான படையணிகளை நகர்த்திய புலிகள் ஏன் அந்தப் படையணிகளைக் கொண்டு இன்னும் இன்னும் இராணுவ நகர்வுகளை தாமதப்படுத்தி.. தமக்கான சாத்தியமான பிரதேசத்துக்குள் நுழைய முயலவில்லை..?!

நடேசன் அண்ணா கிளிநொச்சி விழுந்த கையோடு பிபிசிக்கு சொன்னது "எங்களால் இதனைப் போல பல நகரங்களை உருவாக்கிச் செயற்பட முடியும்.. நாம் ஒரு போதும் சரணடையமாட்டோம்" என்று. அதுமட்டுமன்றி இன்னொன்றையும் சொன்னார் "புலிகளின் காலத்துக்குப் பின்னாலான அரசியல் என்ற ஒன்று உருவாக வாய்ப்பில்லை" என்றார். அந்தளவுக்கு தமது இயக்கத்தை பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்து வைத்திருந்தவர்கள்... எதற்காக அந்தக் கடற்கரை வெளிக்குள் தம்மை அடக்கிக் கொண்டார்கள்.. ஏன் எதற்காக..????!

இறுதிக்கட்ட ஈழப்போர் முழுவதுமே புலிகளின் செயற்பாடுகள் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு வகைக்குள் இருந்ததற்குக் காரணம் என்ன..??! மடுவை படைகள் கைப்பற்றிய போது இளந்திரையன் சொன்னார் "நாம் மடுவில் இருந்து விலகிக் கொண்டதன் பின்னணியில் தான் அது கைப்பற்றப்பட்டதாக. எம்மால் மடுவில் இருந்து விலக முடிந்தது போல் மதவாச்சி வரை நகரவும் முடியும்" என்று. அத்துணை பலமிக்க நம்பிக்கைகளை புலிகள் எப்போதும் வெளிப்படையாக பிற சந்தர்ப்பங்களில் மக்களுக்குச் சொன்னதில்லை.

1987 இல் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் ஆயுதக்கையளிப்பு என்று வந்த போதே புலிகள் இந்தியாவை நம்பவில்லை. அதன் பின்னர் கூட தலைவரை பணிய வைக்க இந்தியா எடுத்த நகர்வுகள் புலிகளுக்கு புலப்படாத விடயமும் அன்று. 1991 ராஜீவ் துன்பியல் என்பதும் அதன் பின்னால் இருக்கப் போகும் விளைவுகளும் புலிகளால் ஆராயப்படாததும் அல்ல..!

இவற்றை எல்லாம் கடந்து புலிகள் அதிகம் அச்சம் கொண்டது செப் 11 2001 இற்குப் பின்னர் தான். அதன் பின்னர் தான் புலிகள் ஆயுதப்போராட்டத்தின் மீதான நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி அமைதிப் பேச்சு மூலம் தீர்வு என்ற நிலைப்பாட்டை நோக்கி தீவிரம் காட்ட ஆரம்பித்தனர். அதற்குக்காரணம்.. அமெரிக்காவினது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற அறிவிப்பிலான.. அமெரிக்க நகர்வுகள் தெற்காசியாவில் மையம் கொண்டது தான். பல சீண்டல்கள் மத்தியிலும் புலிகள் போரை விரும்பாது இருந்ததும்.. இதன் காரணமாகத்தான்.

ஒவ்வொரு தடவையும் பேச்சுக்களை சிங்கள அரசு முறிக்கப் போகிறது என்று அறிந்து முன் கூட்டியே போரை ஆரம்பித்தவர்கள் புலிகள். பிரேமதாச அரசு திட்டமிட்டு புலிகளுள் ஊடுவி காய் நகர்த்தி அவர்களை அழிக்க முற்பட்ட போதும் தந்திரமாக அதில் இருந்து வெளிவந்து அவரின் திட்டத்தை முறியடித்தவர்கள் புலிகள்.

இத்துணை அனுபவம் மிக்க ஓர் இயக்கம்.. எதற்காக முள்ளிவாய்க்கால்லுக்குள் முடங்கியது..??!

சாட்சியமற்ற களத்தில் யாரையும் குற்றவாளி ஆக்குவது சிரமமில்ல..! ஆனால் தமிழ் மக்களின் ஒரே பாதுகாப்புக் கவசமாக விளங்கிய புலிகளை முடக்கியவர்கள்.. எவ்வாறு முடக்கினார்கள்.. என்பதை நாம் தகுந்த ஆதாரத்தோடு ஆராயாமல் விட்டு வைப்பதும் தமிழ் மக்களின் இனத்தின் எதிர்கால பாதுகாப்பிற்கு நலனிற்கு நன்மை அன்று..!

சாட்சியமற்ற களத்தை வைத்து புனை கதைகளை வரையும் சட்டாம்பிகள்.. நிலையை மாற்றி ஆதாரங்களோடு உண்மையை ஆராய்வது அவசியம். எதனால்.. எப்படி.. புலிகளுக்கு இந்த நிலை வந்தது..???! இதனை ஆராயாமல் இருப்பது தான் புனை கதைகளின் புத்துயிர்ப்புக்கும் ஒரு காரணம். இவை மக்களை பெருதும் விசனப்படுத்தவும் செய்கின்றன.போராட்டம் பற்றிய அவநம்பிக்கைகளையும் போராட்ட ஆதரவாளர்கள் பற்றிய சந்தேகங்களையும் கூட்டி வருகின்றன. சந்தேகங்களை திட்டமிட்டு பரப்பி.. போராட்ட ஆதரவுச் சக்திகளை சிதறடிக்கும் திட்டங்களும் இதில் அடங்கி இருக்கலாம்.

எனவே சாட்சியமற்ற களத்தைப் பற்றி வரும் கதைகள் கட்டுரைகள் தொடர்பில் அதீத விளிப்போடும் அவதானத்தோடும் இருப்பதோடு.. உண்மைகளை கண்டறியும் தேடலையும் செய்ய வேண்டும். அதனை தமிழீழத்தை போராளிகளை போராட்டத்தை நேசிப்பவர்கள் செய்ய வேண்டும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கேட்ட ஒரு கேள்விக்கும் ஒருத்தருக்கும் பதில் தெரியாது...உரியவர்கள் வர வேண்டும் பதில் சொல்ல...கடைசி 2 நாட்களும் என்ன நட‌ந்தது என்று கட‌வுளுக்கு தான் தெரியும்...நல்லதொரு பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு. நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான விடைகளை அறிய முற்படல் வேண்டும் இல்லையேல் மீண்டுமோர் முயற்சியில் தோல்வியே ஏற்படும்.

இங்கு விவாதிக்கப்பட்டு இருக்கிற கருத்துக்கள் பற்றி அபிப்பிராயம் சொல்லக்கூடிய மனநிலை இல்லை. நெடுக்காலபோவான் நன்றாக எழுதி இருக்கிறீங்கள். பாராட்டுக்கள். இதை சொல்லவே இதில எழுதவேண்டி இருக்கிது.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெடுக்கு!

பல விடயங்களை அறியும் ஆர்வத்திலா? அல்லது மக்களுக்கு உண்மையை தெளிவு படுத்தவேண்டும் என்ற ஆதங்கத்திலா? இல்லை எதிர்காலத்தை மக்கள் எப்படி அணுகவேண்டும் என்ற பரந்த நோக்கத்திலா இந்த கேள்விக்கணைகளை வீசியுள்ளீர்கள் என்று புரியவில்லை.

இருப்பினும் உண்மையான தமிழ்த்தேசியவாதிகளின் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றார்கள், அவர்கள் இப்போதைக்கு மீண்டுவந்து தங்களது கருத்துக்களை தெரிவிக்கவோ அல்லது உங்களது இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க அதிகாரமுள்ளவர்கள் இப்போதைக்கு வெளிவரவும் சந்தர்ப்பமில்லை என்பது தான் எனது கருத்து.

இதில் ஏதாவது அறிந்திருந்தால் நீங்கள் சொல்லுங்கள் எல்லோரும் அறிய ஆர்வமாக இருப்பார்கள்.

உங்கள் இணைப்புக்கு நன்றி!

Edited by Valvai Mainthan

நீங்கள் போர் தொடங்கிய நாட்களில் இருந்து டிfஎன்ஸ்.எல்.கே இணையத்தை தினமும் பார்த்து வந்திருந்தால் இதற்கு பதில் தெரியும்.எதிரியை எப்பவும் இலகுவாக எடை போடக்கூடாது.

இதற்கு உதாரணமாக நண்பர்களுக்கு ஒரு கிறிக்கெட் கதை சொல்லுகின்றனான். போதம் எதிர் அவுஸ்திரேலியா என ஒரு சீரிசை சொல்வார்கள்.அந்த வருடம் மாத்திரம் நம்பமுடியாத மாதிரி தனியாளாக போதம் அந்த சீரிசை வெல்லவைத்தார்.பின்னர் நடந்த சீரிஸ்களிலும் அப்படி நடக்கும் என எதிர்பார்த்து மக்கள் ஏமாந்துபோனார்கள்.போய்கொட் அடிக்கடி இதை நினைவு படுத்துவார்.அது அந்த முரை மட்டும்தான்,அது மாதிரித்தான் எமது போராட்ட வெற்றிகளும் அவை அந்தந்த முரைகள் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

பல கேள்விகளுக்கு விடை தெரியவில்லை. ஆனால், ஒன்றுமட்டும்தெரியும். தென்பகுதியிலிருந்து கிளிநொச்சி நகர் நோக்கியும், முல்லைத்தீவை நோக்கியும் ராணுவம் நெருங்கி வந்திருந்தபோதும் வடமுனையில் முகமாலை முன்னரங்கில் ராணுவம் அடைபட்டுத்தான் கிடந்தது. இது பரந்தன் சந்தி வீழும் சந்தர்ப்பத்தில் புலிகளாகவே விலகிக்கொண்டபடியால் ராணுவம் உள்நுழைந்தது. அதுவே புலிகளுக்கு விழுந்த பெரிய அடி. வடக்கில் குவிந்திருந்த 40,000 படைகளும் தென்பகுதியிலிருந்து முன்னேறிவந்த 50,000 இற்குமதிகாமான படைகளுடன் இணைந்துகொண்டதாகத்தான் செய்திகள் வந்தன.

இன்னொரு விடை தெரியாக் கேள்வியுமிருக்கிறது. 12,000 போராளிகள் இன்று சரணடைந்திருக்கிறார்கள். அப்படியானால் இவர்களைப் போராட விடாமல் தடுத்த சக்தி எது? எந்த நம்பிக்கையில் இவ்வளவுபேரும் சரணடைந்தார்கள்?? யார் அந்த நபிக்கையைக் கொடுத்தது ? நாம் நம்பவைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டுவிட்டோமா என்றுகூட சிந்திக்கத் தோன்றுகிறது.

தெளிவானது ஒன்றுதான். இனிமேல் ஆயுத ரீதியான போராட்டம் என்பது எம்மைப்பொறுத்தவரையில் சாத்தியமற்றது.இன்னொரு நாடு ராணுவ ரீதியில் தலையிட்டு எமக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தால் ஒழிய எம்மால் அப்படியொன்றை நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால் எந்த நாடுமே அப்படியானதொன்றைச் செய்யப்போவதில்லை.எமதினம் லட்சக்கனக்கில் அழிக்கப்பட்ட பின்பும் கூட எமது போராட்டம் பயங்கரவாதமாகத்தான் இன்றும் பார்க்கப்படுகின்றது என்பது வேதனை.

லட்ச்க்கணக்கில் கொல்லப்பட்ட மக்கள், ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட போராளிகளும், ஒப்பற்ற தளபதிகளும்....இழக்கப்பட்ட எமது சொத்துக்கள், ஆக்கிரமிக்கப்பட்டு அடிமையாகிக்கிடக்கும் எமது தேசம்........

  • கருத்துக்கள உறவுகள்

விடை தெரியாக் கேள்விகள்.சர்வதேசத்தை நம்பியதால் வந்த வினை என்றுதான் நான் நினைக்கிறேன்.தாங்கள் முற்றாக? அழியப் போகிறோம் என்ற நிலையிலும் சிங்களப் பகுதிகளில் எந்தத் தாக்குதலையும் செய்யாமல் இருந்த காரணம்; என்ன? 4 குண்டுகள் கொழும்பில் வெடித்திருந்தால் ஏன் எல்லையோர சிங்களக் கிராமங்களில் வெடித்திருந்தால் கூட யுத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டிய கட்டாயத்தைச் சிங்களத்திற்குக் கொடுத்திருக்கும். கடைசிவரை சிங்களக் கைதிகளைப் பாதுகாப்பாக வைத்திருந்து விடுதலை செய்திருக்கிறார்கள். அப்படிச் செய்யாமல் புலிகளைத் தடுத்தது எது????????????????????????????

  • கருத்துக்கள உறவுகள்

நம்பமுடியாதவை எல்லாம் நடந்து முடிந்துவிட்டன. எதை நம்புவது எதை விடுவது என்று இப்போது தீர்மானிக்கக்கூட முடியவில்லை.

கட்டிக்காத்த நம்பிக்கையெல்லாம் சிறிது சிறிதாகக் கரைந்துகொண்டுபோகிறதே...?

ஆனாலும், எமதினம் உரிமையுடன் வாழ்வேன்டும் என்கிற அவா மட்டும் என்றும்போலவே இன்றும் அணையாது இருக்கிறது. இதைச் சொல்வதாலேயே எத்தனை பேரிடம் வசைபாடல்கள், ஏளனக் கூச்சல்கள், திட்டுக்கள் ...என்று வாங்கியாகிவிட்டது?? ஆனாலும் நாம் ஓய்ந்துவிடப்போவதில்லை. இந்தவுடலில் ஓட்டமிருக்கும்வரை முயற்சிப்போம். எம்மில் ஒருத்தராவது உரிமையுள்ளவனாய் வாழும்வரை.

கண்ணின் மணியான போராட்டமும், தெய்வத்திற்கே நிகரான தலைவரும், உயிரான போராளிகளும், வாசம் சிந்தும் எனது ஊரும் எங்கோ போய்விட்டன. அதை மீளவும் கொண்டுவந்து தருபவர் யார்??

சில கேள்விகளுக்கு விடையில்லை நெடுக்கு. எப்போதுமே தெரியப்போவதில்லை.

நடேசனை சரணடையவைத்து கொன்றது நானே”- ஜெகத்கஸ்பாரின் ஒப்புதல் வாக்குமூலம்!

திருடன் எத்தனை நாள் திட்டம் போட்டுத் திருடினாலும் திருடுகிற இடத்தில் ஏதோ ஒரு தடயத்தை விட்டுத்தான் செல்வான் என்று சொல்வார்கள். விசாரணை நேர்மையாக இருந்தால் சிறிய தடயம் கூட அவனைச் சிக்க வைத்து விடும். நடேசன் வெள்ளைக் கொடியோடு சரணடைந்த நிகழ்வில் அப்படித்தான் சிக்கியிருக்கிறார் ஜெகத் கஸ்பர் என்னும் பாதிரி.

“ஈழம் செத்த பிறகும் இரத்தம் குடிக்கிறார் ஜெகத் கஸ்பர்” என்ற கட்டுரை வினவு தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கும் ஜெகத் கஸ்பர், “மௌனத்தின் வலி” நூல் முழுக்க முழுக்க போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள் சார்பில் கொண்டு வரப்பட்டதுதான் என்றும், கவிதைகள் திருத்தப்பட்டது மற்றும் வாங்கிய கவிதைகளை வெளியிடாமல் தி.மு.க.விற்கு ஆபத்தில்லாத கவிதைகளை வெளியிட்டது எல்லாமே பத்திரிகையாளர்கள்தான் என்று கூறி தப்பித்துக் கொண்டிருக்கிறார். போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்பு பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் தனியே எழுதுவோம்.

மேற்கூறிய குமுதம் ரிப்போர்ட்டர் நேர்காணலில், அதன் நிருபர் கடைசி நேரத்தில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக மூன்று கேள்விகளை கஸ்பரிடம் முன்வைக்கிறார். அந்தக் கேள்விகளையும் அதற்கான ஜெகத் கஸ்பரின் பதிலையும் அப்படியே கீழே தருகிறோம்.

கேள்வி: இறுதிக்கட்ட போரின் இறுதி நாட்களில் இந்தியாவுக்கும், புலிகளுக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் இந்தியா சார்பில் நீங்களும் கலந்து கொண்டீர்கள். போரை நிறுத்த புலிகளிடம் என்னென்ன நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டன?

கஸ்பர்: இதில் சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதலைப் பெற்றுக் கொண்டுதான் எதையும் நான் பேச முடியும். அந்த நாள் வரும்போது பேசுவேன். ஆனால், நிச்சயமாக சண்டை நிறுத்தத்திற்கு வாய்ப்பு இருந்தது. 48 மணி நேரத்துக்குள் சண்டை நிறுத்தம் என்று வாய்ப்புத் தரப்பட்டது. ‘தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வு வரும்போது ஆயுதங்களை ஒப்படையுங்கள்’ என்று விருப்பத்தை மட்டுமே கேட்டிருந்தோம். நிச்சயமாக அவர்கள் (புலிகள்) அதை ஏற்கவில்லை.

கேள்வி: ஏன் அதை விடுதலைப்புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை?

கஸ்பர்: அவர்கள் பக்கம் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. மீண்டும் சொல்கிறேன். நிச்சயமாக சண்டை நிறுத்தத்திற்கு வாய்ப்பு இருந்தது. அதற்கு வாக்குறுதியும் தரப்பட்டது. ஆயுதங்களை ஒப்படைக்க விருப்பம் மட்டுமே கேட்டிருந்தார்கள். நிபந்தனை விதிக்கவில்லை.

கேள்வி: வெளிப்படையாகச் சொல்லுங்கள். ஈழ விடுதலைப் போராட்ட அழிவைத் தடுக்க புலிகள் என்ன செய்திருக்க வேண்டும்?

கஸ்பர்: கடைசிக் கட்டத்தில் என்னென்ன நடந்தது என்று முழுமையாக நமக்குத் தெரியாது. எனவே, தீர்மானமான கருத்தைச் சொல்ல முடியாது. என்னளவில், சண்டை நிறுத்தத்திற்கு ஒரு வாய்ப்பு இருந்தது. அது நடக்கவில்லை. அது நடந்திருந்தால் போராட்டம் காக்கப்பட்டிருக்கலாம். எனக்குத் தெரிந்த வரை, ‘தலைவர் (பிரபாகரன்) சரணடைய வேண்டும், பொட்டு அம்மான் சரணடைய வேண்டும்’ என்று எந்த நிபந்தனையும் பேச்சுவார்த்தையின்போது விதிக்கப்படவில்லை. ‘ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருங்கள்’ என்றார்கள். இதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அது ஏன் என்றும் எனக்குத் தெரியாது.’

போர் முடிந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு கடைசி நேர முள்ளிவாய்க்கால் போர் குறித்து இப்போது பதிவு செய்கிற ஜெகத் கஸ்பர், போர் நிறுத்தம் ஒன்றிற்கு இலங்கை அரசு தயாராக இருந்ததாகவும், புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கவோ போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்கவோ இல்லை என்றும் சொல்கின்றார். புலிகளுக்கும், இந்திய அரசுக்குமிடையிலான கடைசிநேரத் தூதராகச் செயல்பட்ட இவரின் பேச்சைக் கேட்டிருந்தால் போராட்டம் காப்பாற்றப்பட்டிருக்கும் என்றும் இப்போது குமுதம் இதழில் சொல்லியிருக்கின்றார் ஜெகத் கஸ்பர்.

இன்றைக்கு இப்படிப் பேசுகிற இதே ஜெகத் கஸ்பர், போருக்குப் பின்னர் மே மாதம் 21ம் தேதி வெளியான நக்கீரன் இதழில் “யுத்த துரோகம்” என்னும் பெயரில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

அக்கட்டுரையில் ஜெகத் எழுதியிருந்தது இதுதான்.

“கடைசி நாளில் அதாவது கடந்த சனிக்கிழமை (16.05.2009) பிரபாகரனும், அதிமுக்கிய தளபதிகள் சிலரும் களத்தை விட்டு அகன்ற பின் காயமடைந்த போராளிகளை அப்புறப்படுத்திக் காப்பாற்றும் முடிவை எடுத்து அதற்காக புலிகளின் கடற்படைத் தளபதி சூசை மதுரையில் ஒருவரோடு தொடர்பு கொண்டதாகவும், அந்த மதுரை நபர் சு.ப.வீயைத் (சு.ப. வீரபாண்டியன்) தொடர்பு கொண்டதாகவும், கடைசியில் கனிமொழியின் உதவியோடு காங்கிரசு கட்சியின் முக்கியப் பிரமுகரோடு பேசி (எதார்த்தமான முடிவு) ஒன்று எடுக்கப்பட்டதாகவும் கூறுகின்றார். “புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக உள்ளோம் என்று பேக்ஸ் மூலமாக உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவைகளை இந்தியா பார்த்துக் கொள்ளும்” என்பதுதான் அந்த முடிவு.

இம்முடிவு எடுக்கப்பட்டு இரவு 10 மணிக்கு லண்டனில் உள்ள ஜெகத் கஸ்பர்ராஜின் நண்பர் மூலம் செல்வராசா பத்மநாதனுக்கு தகவல் சொல்லப்பட, அவரும் மின்னல் வேகத்தில் இயங்கி ‘இந்தியாவிடமே (அதாவது கொழும்பில் உள்ள இந்தியத் தூதரிடம்) ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அது சாத்தியமில்லை என்றால் ஐ.நா ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம்’ என்றும் இரவு 11.50 மணிக்கு முடிவு எடுத்ததாகவும் கஸ்பர் கூறுகிறார்.

உடனே கனிமொழி ஏற்கனவே பேசிய அந்தக் காங்கிரச பெரியவரைத் தொடர்பு கொண்டு இந்தியா, அல்லது ஐ.நா.வின் முன்னிலையில் சரணடைவது என்ற புலிகளின் முடிவைச் சொன்ன போது, ‘கால அவகாசமில்லை. இந்தியாவிடம் சரணடைவதற்கான சாத்தியப்பாடுகள் இப்போது இல்லை. இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது’ என்று அந்த காங்கிரசு பெரியவர் சொன்னதாகவும் கூறுகின்றார்.

பின்னர் மக்களைக் காப்பாற்றும் பொருட்டு, இலங்கை ராணுவத்திடமே சரணடைவது என்ற முடிவை அதே சனிக்கிழமை நள்ளிரவு புலிகள் எடுத்ததாகவும், திங்கள் கிழமை அதிகாலை அதாவது 2.30 மணிவரை களத்தில் நின்ற நடேசன், பத்மநாதனுடன் உரையாடி விட்டு காலையில் வெள்ளைக் கொடியோடு சரணடையச் சென்ற போது, நடேசனையும் தளபதி ரமேஷையும் போராளிகளையும் இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்று விட்டதாகவும் ஜெகத் கஸ்பர் தனது வாக்குமூலக் கட்டுரையில் எழுதியிருந்தார்.

அன்றைய சூழலில் இக்கட்டுரையை மேலோட்டமாகப் படித்தவர்கள், பிரபாகரனையும் போராளிகளையும் காப்பாற்ற ஃபாதர் வேலை செய்திருக்கிறார் என்றே நினைத்தார்கள். வாசித்ததைத் தாண்டி யோசிக்கவில்லை. ஆனால் இன்று இக்கட்டுரையைப் படிக்கும் போது எழுகின்ற கேள்விகளுக்கு ஜெகத் கஸ்பரோ அதோடு தொடர்புடையவர்களோ பதில் சொல்வார்களா?

அதே மே மாத இறுதியில் இது போன்ற இன்னொரு வாக்குமூலக் கட்டுரையும் இணையங்களில் உலவியது. லண்டன் டைம்ஸ் இதழில் வெளிவந்த மேரி கொல்வினின் கட்டுரைதான் அது. அவரும் ஜெகத்தைப் போலவே புலிகளுக்கும் மேற்குலக அரசுகளுக்குமிடையில் இறுதி நேர தூதுவராகச் செயல்பட்டவர். தவிரவும் மேரி கொல்வின் 2001இல் வன்னிக்குச் சென்றிருந்த போது இராணுவத்தின் ஷெல்லடியில் ஒரு கண்பார்வை பாதிக்கப்பட்டவர். அவரது வாக்குமூலக் கட்டுரையில் என்ன இருக்கிறது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

“நாங்கள் எமது ஆயுதங்களைக் கீழே வைக்கிறோம்’ என்று ஞாயிற்றுக்கிழமை (17.05.2009) அன்று பின்னிரவில் கடைசியாக நடேசன் என்னிடம் கூறினார். ஆனால் ஒபாமா நிர்வாகத்திடமிருந்தும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்தும் பாதுகாப்புக்கான உத்திரவாதத்தை நாம் எதிர்பார்த்துள்ளோம்’ என்றும் கூறியிருந்தார். வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் இலங்கை ராணுவத்திடம் சரணடைவது 26 ஆண்டு கால உள்நாட்டுப் போரில் மிகவும் அபாயகரமான தருணம் என்பதை அவர்கள் (அதாவது புலித் தலைவர்கள்) நன்கு உணர்ந்திருந்தனர் என்று லண்டன் டைம்ஸ் நிருபரான மேரி கொல்வின் குறிப்பிடுகின்றார்.

மேலும் புலிகளின் சமாதானச் செயலகத்தைச் சார்ந்த சீவரத்தினம் புலித்தேவனையும், நடேசனையும், சமாதானச் செயலகத்தைச் சார்ந்த 300 போராளிகளையும் காப்பாற்றுவதே அவர்களின் (புலிகளின்) நோக்கமாக இருந்தது என்று எழுதுகின்ற மேரி கொல்வின், முக்கியமாக மூன்று விசயங்களை ஐ.நா.விற்கு தெரிவிக்குமாறு நடேசன் தன்னிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறுகின்றார். ஒன்று புலிகள் ஆயுதங்களைக் கீழே வைப்பார்கள், இரண்டு அமெரிக்கர்கள் அல்லது பிரிட்டிஷாரிடமிருந்து பாதுகாப்புக்கான உத்திரவாதம் வழங்கப்பட வேண்டும். மூன்று தமிழ் சிறுபான்மையினரின் உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் அரசியல் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் இணங்கவேண்டும். இந்த உறுதிமொழிகளை புலிகள் கோரியிருந்தனர்.”

புலிகள் வைத்த இம்மூன்று கோரிக்கைகளையும் சுட்டிக் காட்டுகிற மேரி கொல்வின், “ஞாயிற்றுக்கிழமை 17.05.2009 இரவுக்குப் பின்னர் புலிகளிடம் இருந்து மேலதிகமான அரசியல் கோரிக்கைகளோ, படங்களோ வரவில்லை. சரண் என்ற வார்த்தையை உபயோகிக்க நடேசன் மறுத்தார். என்னிடம் அவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது அந்த வார்த்தையைப் பிரயோகிக்க மறுத்திருந்தார்” என்றும் கூறுவது மிக முக்கியமானது. மேரி கொல்வின் எழுத்திலிருந்து இறுதிப் போரின் போது புலிகளின் மனநிலை என்னவாக இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. ஒருவேளை, வேறு வழியில்லாமல் சரணடையும் சூழல் எழுந்தால் கூட, அது மூன்றாம் தரப்பு நாடு ஒன்றிடம்தான் என்று நடேசன் தெரிவித்ததாகவும் மேரி கொல்வின் எழுதுகின்றார்.

அப்போது நியூயார்க்கிலிருந்த ஐ.நா. அலுவலகம், ஐ.நா.வின் ஆசியாவுக்கான தூதர் விஜய் நம்பியாருடன் மேரி கொல்வினுக்கு தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. புலிகள் ஐ.நா.வின் உத்திரவாதத்தில் ஆயுதங்களை ஒப்படைக்கும் முடிவை எடுத்திருப்பதை மேரி கொல்வின் விஜய் நம்பியாரிடம் சொல்கிறார். விஜய் நம்பியாரோ, “நடேசனும், புலித்தேவனும் சரணடையும் போது பாதுகாப்பாக இருப்பார்கள்” என்று தனக்கு இலங்கை தரப்பில் உத்திரவாதம் அளிக்கப்பட்டதாக கொல்வினிடம் கூறுகிறார். கடைசியில் திங்கள் கிழமை காலை 6.20 மணிக்கு அந்த இறுதிச் சமாதான முயற்சியில் ஈடுபட்ட இன்னொரு நபரான சந்திர நேரு என்ற இலங்கை எம்.பி, நடேசனுடன் பேசியிருக்கிறார். (இவர் இப்போது அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்குச் செல்ல முடியாமல் லண்டனில் வாழ்கிறார்) என்றும் மேரி கொல்வின் தனது வாக்குமூலக் கட்டுரையில் எழுதியிருக்கின்றார்.

(மேரி கொல்வினின் இக்கட்டுரையைப் பிரசுரித்த இணையதளங்கள் பலவும் புலிகள் சரணடைவதற்காகவே மேரி கொல்வினிடம் கோரியதாகத் தலைப்பிட்டு அதைப் பிரசுரித்திருந்தன. மேரி கொல்வினின் அக்கட்டுரை கீழ்க்கண்ட தளத்தில் வாசிக்கலாம். http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6350563.ece

புலிகளின் அரசியல் பிழைகளை ஆதரிப்பதோ, ராணுவ வாத சகதிக்குள் சிக்கி அவர்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தூக்கி நியாயப்படுத்துவதோ நமது நோக்கமல்ல. ஆனால், அவர்களிடம் எப்படியான நபர்கள் ஊடுருவி, அவர்களைக் கடைசி நேரத்தில் கழுத்தறுத்திருக்கின்றார்கள் என்பதை நிரூபிக்கவே இந்த விடயங்களையெல்லாம் குறிப்பிடுகின்றோம்.

சூரியன் வெளுக்காத அந்த அதிகாலையில் முள்ளிவாய்க்காலில் பெரும் ரத்த ஆறு ஓடியது. ப.நடேசன், புலித்தேவன், தளபதி ரமேஷ், தளபதி இளங்கோ, பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆன்டனி, அவரின் உதவியாளர் சுதர்மன், தாமஸ், லக்ஷ்மன், தளபதி சிறிராம், இசை அருவி, கபில் அம்மான், அஜந்தி, வார்தா புதியவன், ஜெனார்த்தன் எனப் புலிகளின் முக்கியத் தளபதிகளும் சமாதானச் செயலகத்தைச் சார்ந்த 300 போராளிகளும் வெள்ளைக் கொடியோடு இலங்கை ராணுவத்திடம் சரணடைய, அவர்கள் குடும்பம் குடும்பமாகக் கொடூரமான முறையில் கொன்றொழிக்கப்பட்டார்கள். இதை ஒரு நாள் முழுக்க நடந்த கொடிய நரவேட்டை என்கிறார்கள்.

இங்குதான் நடேசனின் இந்த சரணடைதல் தொடர்பான மர்மம் ஒன்று நமது நெஞ்சைச் சுடுகிறது. புலிகள் கடைசி வரை சொன்னது ஆயுதங்களை மவுனிக்கச் செய்கிறோம் என்பதைத்தான். அதற்கு மிகச் சரியான உதாரணமாக புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி.யின் சேனல் 4 நேர்காணல். அதே 17.05.2009 அன்று புகழ்பெற்ற பிரிட்டிஷ் தொலைக்காட்சியான சேனல்4 க்கு கே.பி அளித்த நேர்காணல் இப்படிப் போகிறது:

சேனல்4: புலிகளின் இப்போதைய நிலைப்பாடு என்ன?

கே.பி.: எமது அமைப்பு ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சமாதானப் பேச்சுக்களில் பங்கேற்பதற்குத் தயாராகவிருக்கின்றது.

சேனல்4: எவ்வளவு போராளிகள் அங்கு இருக்கின்றார்கள்?

கே.பி.: 2 ஆயிரத்திற்கும் குறைவான போராளிகள்தான் அங்குள்ளனர். நாம் போரை நிறுத்திக் கொள்ளத் தயாராகவிருக்கின்றோம். எமது மக்கள் செத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு மணித் தியாலமும் நூற்றுக்கும் அதிகமானவர்கள் மரணமடைந்து கொண்டிருக்கின்றார்கள். நேற்றிலிருந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். 25 ஆயிரம் பேர் படுகாயமடைந்திருக்கின்றார்கள்.

சேனல்4: நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்… விடுதலைப் புலிகள் கொரில்லாப் போர் முறைகளில் தமது சண்டையைத் தொடர்வார்களா?

கே.பி.: நான் நினைக்கின்றேன், கடந்த 28 வருட காலமாக நாம் போராட்டத்தை நடத்தி வருகின்றோம். நாளாந்தம் மனித உயிர்கள்தான் இதில் பலியாகி வருகின்றன. இன்னும் 30 வருடங்களுக்கு இது தொடர்ந்தால்… நான் அதனை நம்பவில்லை. தமிழ் மக்களுக்கு சமாதான வழிமுறைகளில் தீர்வைக் காண வேண்டும் என்றே நாம் நம்புகின்றோம்.

சேனல்4: பிரபாகரன் இப்போதும் அந்தப் பகுதியில் இருக்கின்றாரா?

கே.பி.: ஆம்.

சேனல்4: நீங்கள் அவருடன் பேசியுள்ளீர்கள். அவர் சரணடையத் தயாராகவிருக்கின்றாரா?

கே.பி.: சரணடைவதல்ல. நாம் ஆயுதங்களைக் கீழே போடுவோம். கையளிக்கப் போவதில்லை.

சேனல்4: ஆயுதங்களை ஏன் கையளிக்க மாட்டீர்கள்?

கே.பி.: உண்மையில் இது பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது. நாம் எமது தாயக விடுதலைக்காகவே ஆயுதங்களைத் தூக்கினோம். அவற்றை ஏன் நாங்கள் கையளிக்க வேண்டும்?

சேனல்4: போர் முடிவுக்கு வந்துவிட்டதா அல்லது மாற்றமடைகின்றதா?

கே.பி.: போர் முடிவடையலாம் அல்லது அரசியல் பாதையில் மாற்றமடையலாம். அடுத்த ஒரு சில மணி நேரங்களில் என்ன நடைபெறுகின்றது என்பதிலேயே இது தங்கியிருக்கின்றது. நாங்கள் சொல்வதெல்லாம் இதுதான். ஆயுதங்களை நாங்கள் கீழே போட விரும்புகின்றோம். எமது தேசத்துக்கு ஒரு அரசியல் தீர்வைக் காண விரும்புகின்றோம். ஆமாம் எமது மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்று அவசியம் – என்று கே.பி. பேசுகின்றார்.

கே.பி.யின் பேச்சில் நமக்கு அரசியல் ரீதியாக பல முரண்கள் இருந்தாலும், அவை குறித்துப் பேசுவது இக்கட்டுரையின் நோக்கத்தை திசைமாற்றி விடும் என்பதால் அது பற்றிப் பேசுவதை இங்கே தவிர்க்கின்றோம்.

ஆனால் கே.பி. சுட்டிக்காட்டிய அந்த ஒரு சில மணிநேரத்தில் நடந்தவைதான் இரண்டு விசயங்கள். அந்த 17ஆம் தேதி நள்ளிரவில் “கனிமொழியின் உதவியோடு காங்கிரசு கட்சியின் முக்கியப் பிரமுகரோடு பேசி “புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் கொழும்பிலுள்ள இந்திய தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக உள்ளோம் என்று பேக்ஸ் மூலமாக உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவைகளை இந்தியா பார்த்துக் கொள்ளும்” என்ற முடிவு எடுக்கப்பட்டு இரவு 10 மணிக்கு லண்டனில் உள்ள ஜெகத் கஸ்பர்ராஜின் நண்பர் மூலம் செல்வராஜா பத்மநாதனுக்கு தகவல் சொல்லப்படுகிறது.

அவரும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரிடம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அது சாத்தியமில்லை என்றால் ஐ.நா. ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம் என்ற முடிவை இரவு 11.50 மணிக்கு எடுத்ததாகவும், உடனே கனிமொழி அந்தக் காங்கிரசு பெரியவரை தொடர்பு கொண்டு புலிகளின் முடிவைச் சொன்ன போது அந்த காங்கிரஸ் பெரியவர் ‘இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது’ என்று கூறுகிறார்.

இந்த முடிவு என்பது இந்தியா எடுத்த முடிவு. இந்த முடிவை ஏற்கச் சொல்லி ஜெகத் கஸ்பர் லண்டனில் உள்ள தனது நண்பர் மூலமாக கே.பி.யை நிர்ப்பந்திக்கிறார். இந்தியாவின் விருப்பங்களை மீறி ஐ.நா.வோ, மேற்குலகமோ இலங்கையில் எதையும் செய்துவிடாது என்பது நமக்குத் தெரிந்ததுதான்.

இதே நேரத்தில் மேற்குலக நாடுகள் மூலமாக கே.பி. எடுத்த முயற்சிகளினூடாக 17ஆம் தேதி கொழும்பு வருகிறார் ஐ.நா.வின் விஜய் நம்பியார். இவர் இந்திய அபிமானி. இவருடைய தம்பி சதீஷ் நம்பியார் இலங்கை அரசிடம் ஊதியம் பெற்றுக் கொண்டு ராணுவ ஆலோசகராக இருக்கின்றார். விஜய் நம்பியார் இந்திய வம்சாவளி என்பதெல்லாம் தனிக்கதை. ஆனால் கொழும்பு சென்ற விஜய் நம்பியார் அடுத்த சில மணிநேரங்களில் அங்கிருந்து கிளம்பி நியூயார்க் சென்று விடுகின்றார். அதாவது இந்தியாவின் முயற்சிகளுக்கு இடையூறாக இருக்காமல் அவர் நியூயார்க் சென்று விடுகிறார்.

இலங்கையிடமே சரணடையுங்கள் என்று புலிகளை நிர்ப்பந்திக்கும் முயற்சியை ஒரு பக்கம் எடுத்துக் கொண்டே, மேற்குலகின் தலையீடு கடைசி நேரத்தில் தனது திட்டத்தைக் குழப்பி விடக் கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இருந்திருக்கிறது இந்திய அரசு என்பது தெளிவாகத் தெரிகின்றது.

ஜெகத் கஸ்பர் மூலமாக இந்தியா பார்த்துக் கொள்ளும் என்ற பொய்யான உறுதிமொழி நடேசனுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இவர்களால் வழங்கப்பட்ட உத்திரவாதங்களை நம்பித்தான் வெள்ளைக் கொடியோடு சிங்களப் படைகளிடமே சரணடைந்த நடேசன் கொல்லப்பட்டிருக்கின்றார்.

களத்தில் நின்ற புலிகளோ தூங்கி நெடுநாட்கள் ஆகி விட்டது. தூக்கமின்மை, போதிய உணவின்மை, போராடும் வலுவின்மை, காயமடைதல், வீதியெங்கும் சிதறிக் கிடக்கும் வன்னி மக்களின் பிணங்கள் என்று புலிகள் உளவியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தகர்ந்து போயிருந்திருக்கின்றார்கள். இந்தியாவின் தேர்தல் முடிவுகளும் அவர்களுக்கு இடியாக வந்து இறங்க, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட இந்திய அரசு, “ஆயுதங்களை மவுனிக்கச் செய்கிறோம். காயமடைந்தவர்களைக் காப்பாற்ற உதவுங்கள்” என்ற புலிகளின் கோரிக்கையை ‘சரணடைதல்’ என்று மாற்றுகிறது. இந்தியாவின் இந்த முடிவை ஜெகத் கஸ்பர்ராஜ் செயல்படுத்தியிருக்கின்றார்.

தனது மே மாதக் கட்டுரையில் ‘புலிகள் சரணடையும் முடிவை அறிவித்தார்கள். அதன்படி சரணடைந்தவர்களை இலங்கை ராணுவம் கொன்று விட்டது’ என்று எழுதிய அதே ஜெகத் கஸ்பர், இப்போதோ போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பிருந்தும் புலிகள் அதற்குத் தயாராக இல்லாத காரணத்தால்தான் இவ்வாறு நடந்து விட்டது என்று கொல்லப்பட்டுவிட்ட புலிகள் மீதே பழியைத் தூக்கிப் போடுகின்றார்.

கடற்படைத் தளபதி சூசையின் கோரிக்கையும், அதை சரணடைதலாக மாற்றிய ஜெகத்தின் தந்திரமும்…

ஜெகத்தின் ‘யுத்த துரோகம்’ கட்டுரையில் சூசையின் பேச்சையே தனது முடிவுகளுக்கு ஏற்ப திரித்துக் கூறுகின்றார் கஸ்பர். 16ஆம் தேதி சூசை மதுரைக்காரரிடம் பேசிய நேரத்தில் பிரபாகரனும், முக்கியத் தளபதிகளும் களமுனையை விட்டு அகன்று சென்ற பின்பு பேசியதாக கஸ்பர் சொல்கின்றார். அப்படியானால் சூசை பேசியது எங்கிருந்து? தப்பிச் சென்ற இடத்திலிருந்தா? சூசையின் பேச்சை இணையத்தில் கேட்ட எவர் ஒருவரும், கடும் சண்டை நீடிக்கும் ஐநூறு மீட்டருக்குள் இருந்து கொண்டேதான் அவர் சேட்டிலைட் போனில் பேசியிருக்கின்றார் என்று புரிந்துகொள்ள முடியும்.

மேலும் சூசை மன்றாடியதாகக் கூறுகின்றார் கஸ்பர். ஆனால் அவருடைய பேச்சில் எங்குமே சரணடையும் கோரிக்கையோ, கெஞ்சல் குரலோ மன்றாட்டமோ இல்லை. கடுமையான பதட்டமும் கோபமும்தான் அவருடைய பேச்சில் இருந்ததே தவிர, கஸ்பர் சொல்வதைப் போல மன்றாடவில்லை. அப்படி மன்றாடியிருந்தால் அதற்கான ஆதாரத்தைக் கொடுக்க வேண்டியது ஜெகத் கஸ்பர்ராஜின் பொறுப்பு.

“காயமடைந்திருக்கும் போராளிகளையாவது காப்பாற்றுங்கள்” என்று சூசை கோரிக்கை வைத்தது உண்மைதான். ஆனால் காயமடைந்தவர்களை வட்டுவாகல் வழியாக மீட்கும் கோரிக்கையைத்தான் சூசை வைக்கின்றார். இதைத்தான் ‘எதார்த்தமான முடிவு’ என்ற பெயரில் சரணடையும் முடிவாக மாற்றுகின்றார் கஸ்பர்.

இறுதி நேரத்தில் அதிசயங்கள் எதுவும் நடந்தால் ஒழிய இப்போரின் முடிவு என்பது இப்படியாகத்தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. 13ஆம் தேதி சிங்கள ராணுவத்தின் கடற்படையும் தரைப்படையும் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் ஒன்று சேர்ந்ததோடு புலிகளும் மக்களுமாக சுற்றி வளைக்கப்படுகிறார்கள். தப்பிக்கும் வாய்ப்புகளும் தகர்ந்து விடுகின்றன. ஆனால் போர் முடிவுக்கு வரவில்லை. அந்த நேரத்தில் பேச்சு வார்த்தை என்னும் மிகப் பலவீனமான ஆயுதத்தை புலிகள் கையில் எடுக்கிறார்கள். காயமடைந்தவர்களைக் காப்பாற்றுங்கள் என்று ஜெகத் கஸ்பர்ராஜிடமும், கனிமொழியிடமும் கேட்கின்றார்கள். நீடித்துக் கொண்டிருக்கும் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டு வர விரும்பிய இந்தியா, ஜெகத் கஸ்பரைப் பயன்படுத்தி காரியத்தை எளிதாக முடித்துக் கொண்டிருக்கிறது.

மேரி கொல்வின் விஜய் நம்பியாரிடம் புலிகளின் கோரிக்கையை எடுத்துச் சொல்லும்போது, வெள்ளைக் கொடியேந்தி சரணடையும் முடிவு இந்தியாவின் உத்திரவாதத்தின் பேரில் புலிகளால் ஏற்கெனவே எடுக்கப்பட்டு விட்டது. இதைத்தான் மேரி கொல்வினிடம் சொல்கிறார் விஜய் நம்பியார்.

ஆனால் ஜெகத் கஸ்பர், இந்தியா கொடுத்த உறுதிமொழியை மறைத்து, அதனை இலங்கை வழங்கிய உறுதிமொழி என்று மடை மாற்றி, இந்தக் கொலைக் குற்றத்திலிருந்து இந்தியாவைத் தப்ப வைக்கின்றார். கடைசியில் 300 போராளிக் குடும்பங்கள் கொடூரமான முறையில் கொன்றொழிக்கப்படுகின்றார்கள்.

நடேசனும், 300 போராளிகளும் ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்படுவதற்கு ஜெகத் கஸ்பர்ராஜின் முயற்சியே காரணமாக இருந்திருக்கின்றது. ஆகவே டெல்லியில் இருந்து பேசிய அந்த காங்கிரசு பெரியவர் யார் என்பதை கஸ்பர் வெளிப்படையாகக் கூற வேண்டும். அந்த காங்கிரசு பெரியவர் எடுத்த எதார்த்தமான முடிவை ஜெகத் கஸ்பரோ, கனிமொழியோ ஏன் ஆட்சேபிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். செய்வதை எல்லாம் செய்து முடித்து விட்டு, இன்று நக்கீரன் இதழில் பிரபாகரனோடு உண்டு உறங்கியது போல எழுதிக் கொண்டிருக்கும் நாடகத்தைக் கஸ்பர் நிறுத்த வேண்டும்.

எமதருமை புலத்து மக்களே,

இனியும் இந்த சந்தர்ப்பவாதப் பச்சோந்திகளை நம்பி ஏமாறாதீர்கள். ஈழப் போராட்டம் என்பது பிராந்திய வல்லரசுகளிடம் கெஞ்சி பெறப்பட வேண்டிய விசயம் அல்ல; அது நமது ஈழ மக்களின் இறைமை சார்ந்தது. நமக்கான போராட்டங்களை நாமே முன்னெடுப்போம்!

முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்தது ஓர் சோகக்கதையா அல்லது சோகத்தின் நடுவில் தலைநிமிர்வா? பேராசிரியர் தீரன்

1. முள்ளிவாய்க்கால் போரில் விடுதலைப்புலிகள் வெற்றி ஈட்டியிருந்தால், உலகம், தமிழீழம் என ஒரு தனிநாட்டை ஏற்றிருக்குமா?

2. உலகத்தில் இயங்கும் வெளிநாட்டுச் சக்திகள் யுத்தம் முடிந்துவிட்டது என அறிந்த பின்னும் இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் ஆயுதம், படைகள் ஆகியவற்றை வழங்கி வருவதை நிறுத்துவார்களா?

3. உலகநாடுகள் தங்களது இலங்கைக்கான வெளியுறவுக் கொள்கையில் முண்ணுக்குப் பின்னாகப் பேசுவதுபோல் எந்த ஒரு நாடேனும், புலிகள் ஒரு விடுதலை இயக்கமே அன்றி அது பயங்கரவாத இயக்கம் அல்ல என மாற்றச் சொல்ல இயலுமா?

4. முள்ளிவாய்க்கால் போருக்கு முன்னர், தமிழர்களுக்கெதிரான இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களையும், இனஒழிப்பு நடவடிக்கைகளையும், இனம் கண்டு நடவடிக்கை எடுக்க உலகம் தயாரா?

http://meenakam.com/?p=2287

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.