Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலர் தினத்தில் ஒரு காதல் பரிசு...

Featured Replies

அலாரச் சத்தத்தில் திடுக்கிட்டு விழித்தேன். அசதியுடன் எழுந்து நேரத்தைப் பார்த்தேன். மணி ஐந்தரை என்றது கடிகாரம். எழும்ப மனமில்லை. எரிச்சலாய் உணர்ந்தேன். உலகமே இருட்டுப் போர்வைக்குள் சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தது. எப்படியும் எழும்பித்தானாக வேண்டும். வேறு வழியில்லை. மெதுவாக எழுந்தேன். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேலைக்கு விழுந்தடித்துக்கொண்டு பஸ் பிடிக்க ஓடத்தேவையில்லை. அண்ணாவுடன் வாகனத்தில் செல்லலாம். சற்றே நிம்மதியாக உணர்ந்தேன். அப்படியே பல் தேய்த்து முகம் கழுவி தயாரானபோதும், அண்ணா எழுந்திருக்கவில்லை. நேரம் போய்விட்டது. இனி அண்ணாவை எழுப்ப வேண்டியதுதான். ஏனோ தெரியவில்லை..!! வழமைக்கு மாறாக, இன்று அண்ணாவை எழுப்புவது அவ்வளவு சுலபமாயில்லை. நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு அண்ணாவை எழுப்புவதில் வெற்றி கண்டேன். இருவருக்கும் தேநீர் தயாரித்து முடித்தபோது, அண்ணா போவதற்கு ஆயத்தமாக வந்துவிட்டார். தேநீரை அருந்திவிட்டு, வாசலைத் தாண்டி வெளியில் கால்வைத்தபோது உறைய வைக்கும் குளிர் உடம்பை ஊடுருவிச் சென்றது. கால் கையெல்லாம் மரத்துப் போனது. இன்னும் பதின்நான்கு மணித்தியாலங்கள் இந்தக் குளிரில்தான் வேலை என்று நினைத்தபோது, மீண்டும் வீட்டுக்குள் ஓடிவிடலாமா என்று எழுந்த எண்ணத்தை வலுக்கட்டாயமாக அடக்கிக்கொண்டு அண்ணாவுடன் கிளம்பினேன்.

இவ்வளவுக்கும், இன்று பெப்ரவரி 14, காதலர் தினம் என்பது சுத்தமாக மறந்து போயிருந்தது. நமக்குத்தான் யாரும் காதலி கிடையாதே...? பிறகு எப்படி ஞாபகம் வைத்திருப்பது..? அப்படியே வேலைக்கு வந்துவிட்டேன். அப்படியொன்றும் கவர்னர் வேலை கிடையாது. கடையொன்றில் எடுபிடி வேலை. கடையை (shutter) திறந்துவிட்டு பால், பாண் என்று ஒவ்வொன்றாக அடுக்கி முடித்து கடையை கூட்டி மொப் அடித்து ஒழுங்குபடுத்தி என்று வேலை சூடுபிடிக்கத்தொடங்கியது. தாங்கமுடியாத குளிர் என்றபோதும், வேலை ஒவ்வொன்றாக நடந்து கொண்டேயிருந்தது.

அப்போதுதான் , கடைக்கு வருவோர் போவோர் ஒருவருக்கொருவர் காதலர் தின வாழ்த்துச் சொல்வதையும் காதலர் தின வாழ்த்து மடல் வாங்கிச் செல்வதையும் பார்த்தபோதுதான் இன்று காதலர்தினம் என்பது மண்டையில் உறைத்தது. ஓ..! இன்று காதலர் தினமா..? எனது கனவுக் காதலிக்கு கண்ணிமைக்குள் வாழ்த்துச் சொல்லிவிட்டு வேலையில் மூழ்கிப்போனேன். பத்து மணியாகிவிட்டது. பசிக்கத் தொடங்கியிருந்தது. பத்தரையளவில் கடை முதலாளியின் தயவில் கிடைக்கும் ஒரு துண்டு சாண்ட்விச்சை வெறித்தனமாய் முழுங்கிவிட்டு வேலையை தொடர்ந்தபோது கடையில் கூட்டம் அதிகமாகத் தொடங்கியது. வேலையை அப்படியே விட்டுவிட்டு முன்பக்கமாக வந்து நின்றேன். எங்கள் கடைச்சூழலில் களவாணிப்பயல்கள் அதிகம் என்பதால் இந்த ஏற்பாடு. வழமைபோல் கடைக்குள் வந்து குரங்குக் கூத்தாடும் கூட்டங்களை, எருமைக்குப் பிறந்ததுகள் என்று திட்டித்தீர்த்தபடியே CCTV திரையில் ஒரு கண்ணை வைத்தபடி கூட்டத்தையும் கவனித்துக்கொண்டிருந்தேன்.

மெதுவாகக் கூட்டம் குறையத் தொடங்கியது. நான் என்னுடைய வேலைக்கு மீண்டும் செல்ல நினைத்தபோதுதான் அந்தப்பெண் தந்தையுடன் கடைக்குள் நுழைந்தாள். அழகாய் துறுதுறுவென்றிருந்தாள். நான் ஆர்வமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தேன். கையில் அழகான கைப்பை ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. கடைக்குள் வந்ததும் தந்தையை விட்டுவிலகி நேரே மறுபக்கமாகச் சென்றாள். அவளுக்குப் பத்துப்பன்னிரண்டு வயதிருக்கலாம். தந்தை வீட்டுக்குத் தேவையான பொருட்களை எடுத்துவந்து அவற்றுக்குப் பணமும் செலுத்தி முடித்தபோதும் அவளைக்காணவில்லை. தந்தை அவளைக்கூப்பிட்டுப் பார்த்தபோது கடையின் மூலையிலிருந்து பதில் வந்தது. அவளைக்காணவில்லை.

சிறிது நேரங்கழித்தும் அவளைக்காணாததால் பொறுமையிழந்த தந்தை அவளை அழைத்தபடியே குரல் வந்த திசையை நோக்கிச் சென்றார். அவர் ஒருபக்கமாகச் செல்ல, மறுபக்கமாக வெளிப்பட்ட அந்தச் சின்னஞ்சிறிய பெண்ணின் கையில் அழகான விலையுயர்ந்த ஒரு சொக்லெட் பெட்டி இருந்தது. அதைத் தூக்கி மேசைமேல் வைத்துவிட்டு, இதுவரை தன் சின்னஞ்சிறிய விரல்களுக்குள் பொத்தி வைத்திருந்த சில்லரைகளை மேசைமேல் கொட்டினாள். அந்தச் சொக்லெட் பெட்டியை வாங்குவதற்குப் போதுமானதாக அந்தப் பணம் இல்லை. சிறிதளவு குறைவாக இருந்தது. நான் அந்தச் சின்னஞ்சிறிய பெண்ணின் பேராசையை எண்ணி மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.

அப்போது அவளின் தந்தை திரும்பி வந்தார். இவளோ தந்தை அந்தச் சொக்லெட் பெட்டியைப் பார்க்காதவாறு குறுக்கே நின்று மறைத்தாள். எனக்கோ எதுவும் புரியவில்லை. தந்தையிடம் சிறிதளவு பணம் தருமாறு கேட்டாள். அவளுடைய உதடுகள் துடித்தன. இயலாமை அவளுடைய முகத்தை விகாரப்படுத்தியது. அந்த அன்பான தந்தையோ எந்தவித கண்டிப்பும் இல்லாமல் அவள் கேட்ட பணத்தைக் கொடுத்தார். அவள் தந்தையை மறுபுறம் திரும்பி நிக்குமாறு சொன்னாள். அதன்பின் தந்தை தன்னைப் பார்க்கின்றாரா என திரும்பித் திரும்பி பார்த்தவாறே அவர் காணாதவாறு பணத்தைச் செலுத்திவிட்டு அந்தச் சொக்லெட் பெட்டியை எடுத்துத் தன்னுடைய கைப்பைக்குள் போட்டுக்கொண்டாள்.

எனக்கு மின்னல் வெட்டியதுபோல் எல்லாம் புரிந்துவிட்டது. அவள் அந்தச் சொக்லெட் பெட்டியை, காதலர் தினப்பரிசாக தனது தந்தைக்கும் தாய்க்கும் தர விரும்புகிறாள். அதை தந்தைக்குத் தெரியாமல் இரகசியமாக எடுத்துச்செல்ல விரும்புகிறாள் என்பது புரிந்தபோது அவளுடைய அந்த அன்பில் அப்படியே உறைந்து போய் நின்று விட்டேன். எனக்குள் ஏதோ இனம்புரியாத ஏக்கம்..! நாட்டை விட்டுப் புறப்பட்டதிலிருந்து பிரிந்துபோன என்னுடைய அன்னை என்கண்முன்னே வந்து நின்றாள்..! எனக்கு நீ என்ன தரப்போகிறாய் என்று என்னைப் பார்த்துக் கேட்டாள்..! என் கண்களில் நீர் திரையிட்டது. முன்னால் எதையோ தேடிக்கொண்டிருந்த வெள்ளையொன்று வித்தியாசமாய் நிமிர்ந்து பார்த்தது. சுதாரித்துக்கொண்ட நான், சினேகமாய் சிரித்துக்கொண்டே இன்று குளிர் கடுமையாய் இருக்கிறது என்று ஆங்கிலத்தில் சொன்னேன். கடுமையான குளிரில் இயல்பாகவே கண்ணில் நீர் வரும் என்பதால், அந்த வெள்ளை அதை ஆமோதித்துக்கொண்டே கெட்ட வார்த்தைகளால் குளிரை திட்டித் தீர்த்துக்கொண்டே தன் வேலையைத் தொடர்ந்தது.

நான் அந்தச் சின்னப்பெண் தன் தந்தையின் கையைப்பிடித்துக்கொண்டே துள்ளிக் குதித்து விளையாடிக்கொண்டு செல்வதை இமைகொட்டாது பார்த்துக் கொண்டிருந்தேன், அவர்கள் என் கண்களிலிருந்து புள்ளியாகி மறையும்வரை...

நன்றி :கரன்

  • கருத்துக்கள உறவுகள்

அழகான எளிமையான நடையில் எழுதப்பட்ட கதை அருமை. வாழ்த்துகள்.

எனக்குள் ஏதோ இனம்புரியாத ஏக்கம்..! நாட்டை விட்டுப் புறப்பட்டதிலிருந்து பிரிந்துபோன என்னுடைய அன்னை என்கண்முன்னே வந்து நின்றாள்..! எனக்கு நீ என்ன தரப்போகிறாய் என்று என்னைப் பார்த்துக் கேட்டாள்..! என் கண்களில் நீர் திரையிட்டது.

பிரிந்த என் தாயின் நினைப்பு கண்களை நனைக்க வைத்தது.

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் உதயம்!

இதை கதை என்று சொல்ல முடியாது, ஒரு உண்மை சம்பவமாகவே உணர முடிகின்றது. எளிமையான வசன நடையில் இதை உருவாக்கியுள்ளீர்கள், அதுமட்டுமன்றி இப்படியான உணர்வு எனக்கு இல்லை என்பதையும் உணர வைத்துவிட்டீர்கள்.

அடுத்த காதலர்தினம் எப்போ வரும், என்னை நேசிப்பவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் தூண்டி விட்டீர்கள்.

Edited by Valvai Mainthan

  • தொடங்கியவர்

நன்றி கறுப்பிஇவல்வை மைந்தன்.. இது எனது கதை இல்லை..நண்பனின் உண்மைச்சம்பவம்

நன்றி உதயம்...அழகான வரிகளால் அப்படியே அந்த சம்பவத்தை எடுத்துவந்தமைக்கு பாராட்டுக்கள்...!

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சை தொடும் கதை . எளிமையான வார்த்தைகளால் அலங்கரிக்க பட்டு

நிஜத்தை சொல்லும் கதை. பாராடுக்கள்.

அம்மாவின் முகம் கனத்த கண்களுக்குள் வந்து சென்றது.எல்லோரையும் ஒரு முறை மனதிற்குள் நினைத்தேன்.

பாராட்டுக்கள் உங்களுக்கும், உங்கள் நண்பருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் உதயம் அவர்கள் யாழில் எழுதிய கதைகளில் முதலாவதாக இதனைப் படித்தேன். நன்றாக எழுதுகிறீர்கள். பாராட்டுக்கள். உங்கள் பழைய கதைகளை நேரம் கிடைக்கும் போது தேடி தேடி வாசிப்பேன். மீண்டும் பாராட்டுக்கள். நெஞ்சைக் கொள்ளை கொன்ற இனிய படைப்பு இது.

  • தொடங்கியவர்

நன்றி ஈழமகள்,நிலாமதி,யாழ்கவி மற்றும் கந்தப்பு உங்கள் ஆதரவுக்கு நன்றி.. இது எனது ஆக்கம் இல்லை.. எனது நெஞ்சை கொள்ளை கொண்ட நண்பனது உண்மை சம்பவம்..

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு அனுபவத்தை வைத்து கதை எழுதியுள்ளீர்கள்...பாராட்டுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை வாழ்த்துக்கள்....

அதை தந்தைக்குத் தெரியாமல் இரகசியமாக எடுத்துச்செல்ல விரும்புகிறாள் என்பது புரிந்தபோது அவளுடைய அந்த அன்பில் அப்படியே உறைந்து போய் நின்று விட்டேன்
.

இந்த வெளிநாட்டில செப்ரைஸ் ஆக பரிசு கொடுக்கிர என்றால் இந்த சிறிசுகள் பெரிசுகளுக்கு ஒரு திரில்

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் ஏக்கங்கள் பல...அதில் உண்மையான அன்பும் ஒன்று...இக்கதையை படிக்கையில் ஏனோ இனம்புரியாத உணர்வு ...புகுந்த நாட்டுக் கலாச்சாரத்தில் பிள்ளை இதனைச் செய்தாலும் மனதில் இடம்பிடித்த கதை... நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

மனதை தொட்ட கதை.இணைப்புக்கு நன்றி.

உதயன் உங்களுக்குள்ளே நல்லதோர் பேனா இருக்கின்றது, உண்மையாகவே கற்பனையானால் இதில் கொஞ்சம் கூடிய கவனம் செலுத்துங்கள்.எளிமையான நடை அற்புதம்.வாழ்த்துக்கள்.

  • 3 weeks later...

அழகான ஓர் அனுபவப் பகிர்வு.

  • கருத்துக்கள உறவுகள்

உதயம் இன்றுதான் இதைப்பார்த்தேன்

எனக்கு என் சின்ன மகளின் நினைவு வருகின்றாள்.

அவள் எனது ஒவ்வொரு தினங்களுக்கும் (பிறந்ததினமாக இருக்கலாம் அப்பா தினமாக இருக்கலாம் வருடப்பிறப்பாக இருக்கலாம் வேறு விசேச தினங்களாக இருக்கலாம்)தன் கையால் ஏதாவது படம் வரைந்து அதில் Je t'aime papa - I love you papa என்று இரு மொழிகளிலும் எழுதித்தருவாள்.

ஆனால் அதை நான் எங்கு வைத்திருக்கின்றேன் என்று இப்போ யோசித்தேன்.தெரியவில்லை. கண்கள் குளமாகிறன.

இனி கவனமாக இருப்பேன்

இது எமது இன்னொரு பக்கம்

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.