"போதும் இந்த நரகம்..!"
குடிப்பவர்களிடம் ஒரு கவலையும் இல்லா பேரின்ப மனோநிலையை ஏற்படுத்தக் கூடியதாக [a blissful mood… with joy in the [innards][and] happy liver] அதை நீ தயாரித்து எமக்கு அளிக்கிறாய்" என கி மு 1800 ஆம் ஆண்டை அல்லது அதற்கும் முற் பட்ட சுமேரியன் துதி பாடல் [Sumerian Hymn to Ninkasi ] ஒன்று குடியை போற்றுகிறது. அதேபோல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியமும் புறநானுறு 235 இல், "சிறியகட் பெறினே, எமக்கீ யும் மன்னே; பெரிய கட் பெறினே யாம்பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே;" என்று பெண் புலவரான ஒளவையார் புகழ்ந்து கூறுகிறார்.
அப்படி என்றால் "போதும் இந்த நரகம்..!" என, என் மனைவி என்னை திட்டுவது எனக்கு புரியவில்லை? ஒருவேளை அவள் ஒளவையார் ஆக இருந்து இருந்தால், அவளும் என்னுடன் சேர்ந்து குடிப்பாளோ, பட்டிணப்பாலை [106-110] சில அடிகளும் சேர ஒரு கற்பனை, எங்கள் அத்தியடி வீட்டின், முன் விறாந்தையில் இருந்த குந்தில் சாய்ந்த படி வந்தது.
"துணைப்புணர்ந்த மடமங்கையர்
பட்டுநீக்கித் துகிலுடுத்தும்
மட்டுநீக்கி மதுமகிழ்ந்தும்
மைந்தர்கண்ணி மகளிர் சூடவும்
மகளிர்கோதை மைந்தர் மலையவும்"
அதாவது,தம் கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர், தாம் முன்பு அணிந் திருந்த பட்டாடைகளைத் தவிர்த்து நூலாடைகளை உடுத்தினர். இன்பத்தின் மயக்கத்தால், தாம் அருந்தும் மயக்கம் தராத கள்ளினைக் [மட்டினைக்] கைவிட்டு, மதுவினை குடித்தனர். மதுவுண்ட மயக்கத்தில் கணவர் அணியும் மாலைகளை மகளிர் அணிந்து கொண்டனர். மகளிர் அணியும் கோதையினை (மாலை) ஆடவர் சூடிக் கொண்டனர் என ஒரு கூத்தே கனவில் வந்தது. கண்ணை திறந்து பார்த்தேன், அருகில் மனைவி, ஒரு திருக்குறள் ஒன்றை தூக்கி என் கண்முன் எறிந்தார். இதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதியதே . சத்தப் போட்டு “துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.” (குறள் 926) என்று பாடி காட்டினார்.
உறங்கினவர் இறந்த வரை விட வேறு பட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவு மயங்குதலால் நஞ்சு உண்பவரே என்று அவர் என்னை திட்டுவது எனக்கு அப்பத்தான் மெல்ல மெல்ல புரியத் தொடங்கியது. என்னை எதுக்கும் தொட்டுப் பார்த்தேன். நான் இன்னும் சாகவில்லை என்பதை உறுதி படுத்திக் கொண்டேன். எனக்கு வள்ளுவரின் மேல் கோபம் தான் வந்தது. இவருக்கு ஏன் இந்த வேலை ?
நேரம் போக ஒரே பசி, மனைவி அறை கதவை மூடிக்கொண்டு உறங்கி விட்டாள். இது மார்கழி முன்பனி காலம். குளிரும் என்னை வாட்ட தொடங்கிற்று. மெல்ல அடுப்படி கதவை திறந்து உள்ளே பார்த்தேன். அடுப்பு வெறிச்சோடி இருந்தது. சட்டி , பானை எல்லாம் கவுண்டு இருந்தன. என்ன செய்வது என்று புரியவில்லை. கிணற்றடிக்கு போய் , வாளியால் தண்ணீர் அள்ளி வயிற்றை கொஞ்சம் நிரப்பினேன். பின், எம் வீட்டுக்கு முன் நின்ற பாண்டி மாங்காயை தட்டி வீழ்த்தி, அதை கடித்துக்கொண்டு, அதே குந்தில், போர்க்கவும் துணி இன்றி கூனிக்குறுகி படுத்துவிட்டேன்.
"கதிரவன் காலில் ஒளி வீச,
காற்று கொஞ்சம் முகத்தை வருட,
வயிறு மெல்ல பசி எழுப்ப
குந்தில் இருந்து எட்டி பார்த்தேன்!"
அறைக்கதவு திறந்து இருந்தது, ஆனால் அவளைக் அங்கு காணவில்லை. அடுப்படி இன்னும் அவள் திறக்கவில்லை. ஆனால் கிணற்றடியில் குளித்த அடையாளம் கண்டேன். அப்படி என்றால் எங்கே ? அப்பத்தான் ஞாபகம் வந்தது, இன்று சனிக்கிழமை. அவள் சனிபகவானை எண்ணி விரதம் இருப்பது வழமை. பொதுவாக காலை எனக்கு சமைத்து தந்து விட்டு தான் ஆலயம் போவாள். இன்று எனோ நேற்றைய கோபம் போல்!
நான் தினம் தினம் குடிப்பவன் அல்ல, கொண்டாடம்களில் மட்டும், அல்லது பொதுவாக வெள்ளிக் கிழமைகளில் நல்லாக குடித்து, என் கவலை தீர ஆடுவேன். அதில் என்ன தவறு. என் அறிவுக்கு புரியவில்லை, தேன் மதுவை விடவும் காட்டமான சுரா, சோம பானங்களை தயாரித்து அந்த காலத்திலேயே ஒரு கிளர்ச்சியூட்டியவர்கள் வேதாதி ரிஷிகள் ! அது போகட்டும், ”ஊக்கமளிப்பதும், உற்சாகமளிப்பதுமான இந்த சோமத்தை இந்திரனுக்கு அளியுங்கள்” என அன்று அறை கூவல் விட்டதையும் காண்கிறோம். ”சோமனே, நீ பல பாண்டங்களில் வைக்கப்பட்டிருக்கிறாய், பகல் வேள்வியில் பாலோடும், மாலை வேள்வியில் தயிரோடும் கலக்கப்படுகிறாய், நீ தீரனுக்கு மிக்க மதமளிக்கும் பானமாயிருக்கிறாய்”என்ற வரி எனக்கு நல்லாகவே பிடிக்கும். கொண்டாட்டங்களில் நான் முன்னின்று தீரனாய் இருப்பதும் அதனாலேயே! இது எல்லாம் எங்கே மனைவிக்கு புரியப் போகிறது?
"போதை கொள்ளும் அழகை ரசிக்க
பேதை உன்னை தினம் நாடி
கோதை புனைந்த கூந்தல் வருட
கீதை சொல்லி விரதம் இருப்பவளே!"
"காதை பொத்தி கண்ணை மூடி
கதை கதையாய் புராணம் சொல்லி
புதைத்து விடுவாய் ஆசை எல்லாம்
பதைத்த உள்ளம் தேடுதே போத்தலை!"
போதும் இந்த நரகமென போத்தலில் வாழ்வு நான் காண, போதும் இந்த நரகமென ஆலயம் போகிறவளே, கொஞ்சம் நில் ! யாரால் யாருக்கு நரகம் ? ஏன் சிந்திக்க மாட்டாய்! இருவரின் வாழ்வும் புரிந்துணர்வு இல்லாமல் அழிகிறதே ! நரகம் நாடி போகிறதே!!
இந்த உலகில் வாழ்வதே எவ்வளவு சிக்கலாக இருக்கிறது ? எத்தனை பிரச்சனைகள் ? ஒரு நாள் போல் இன்னொரு நாள் இல்லை. ஒரு நாள் மகிழ்ச்சியாக இருக்கிறது... இன்னொரு நாள் துன்பம் வருகிறது. இந்த உலக வாழ்வே இப்படி என்றால் நரக வாழ்வு எப்படி இருக்கும் ?
"கொள்ளேன் புரந்தரன், மால், அயன் வாழ்வு; குடி கெடினும்,
நள்ளேன் என் மனைவியோடு அல்லால்; நரகம் புகினும்,
எள்ளேன் அவள் அன்பாலே இருக்கப் பெறின்; தேவியே
உள்ளேன் பிற மகளீர் உன்னை அல்லாது; என் உத்தமியே !"
தேவியே, இந்திரன், திருமால், பிரமன் வாழ்வு எனக்கு வேண்டாம். என் குடியே (குடும்பமே) கெட்டாலும், வேறு ஒருவளுடன் உறவு கொள்ள மாட்டேன். என் மனவியைத் தவிர. நரக வாழ்வே கிடைக்கும் என்றாலும், அதற்காக வருத்தப் படமாட்டேன், அவள் அன்பு இருக்கப் பெற்றால். தேவியே, உன்னைத் தவிர, வேறு மங்கையரை நினைக்க மாட்டேன், எ ன் உத்தமியே என கத்த வேண்டும் போல் இருந்தது, அவள் காதில் விழும் என்றால் ?
அப்பொழுது தான் அவள் ஆலயத்தால் வந்துகொண்டு இருந்தாள்!
'சஷ்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்' என்பது பழமொழி. இந்தப் பழமொழி நாளடைவில் மருவி 'சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்' என்று மாற்றம் பெற்றுவிட்டது என்று நம்புபவள் என் மனைவி. சஷ்டி திதியிலே விரதமிருந்தால், ‘அகப்பை’ எனப்படும் கருப்பையில் குழந்தை உருவாகும் என்று ஒரு பிரசாங்கமே செய்வாள். பாவங்கள்! இவளிடம் கேட்கும் நண்பர்கள்? இப்படி எத்தனையோ விரதங்கள். சொல்லுவாள். ஆனால் நான் 'சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்' என்பதைத்தான், இப்படி ஏமாற்றி பிழைக்கிறார்கள் என்பேன். சட்டியும் அகப்பையும் சேர்ந்தால் தானே அதில் செய்ததை [விளைந்ததை] வெளியே எடுக்கலாம் என்பேன். இவன் குடித்து விட்டு உளறுகிறான் என, "போதும் இந்த நரகம்..!" என்பது போல, என்னை விட்டு போய் விடுவார்கள்?
ஆமாம். எனக்கும் போதும் இந்த நரகம்..!, என்றவாறு ஒரு உயிரியல் புத்தகத்தை , அவள் வரும் காலடியில் விழும்படி தூக்கி எறிந்தேன். எனக்கு வேறு இனி இருப்பதாக தெரியவில்லை. புத்தகத்தை காலடியில் எறிவது பாவம் என்று குனிந்து எடுத்தவள், அவள் எடுத்த பக்கத்தின் படத்தினதும் அதன் விளக்கத்தையும் பார்த்தவுடன் , அப்படியே நின்று விட்டாள். எனக்கு ஒரே ஆச்சரியம்.. எட்டிப் பார்த்தேன். வெட்கத்தில் தலை குனிந்தபடி, காலால் எதோ தரையில் கிறுக்கினபடி, போதும் இந்த நரகம்..! என , அர்ச்சனை தட்டை , குந்துக்கு அருகில் உள்ள தூண் அருகில் வைத்துவிட்டு என்னையே கண்கலங்கி பார்ப்பதை கண்டேன்!
"யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே."
என்னுடைய தாயும் அவளுடைய தாயும் யார் யாரோ? என் தந்தையும் அவள் தந்தையும் எந்த முறையில் உறவினர்? நானும் அவளும் எவ்வாறு முன்பு அறிந்தோம்? செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல, அன்புடைய எம் நெஞ்சம் தாமாக முதல் முதல் ஒன்றுபட்டனவே! இதுவரை நிலவிய இருவரின் நரகமும் எங்கே என்று இருவருக்கும் தெரியவில்லை?
"போதும் இந்த நரகம்..!" இருவரின் வாயும் ஒரே நேரம் ஒலித்தது!!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]