கவிஞர் நாவண்ணனுடன் எனக்கு நல்ல தொடர்பு இருந்தது. நான் தாயகத்துக்குப் போகும் போதெல்லாம் அவர் என்னைச் சந்திக்க வந்துவிடுவார்.
2003இல் ஐரோப்பிய நாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்துவதற்கென்று தாயகத்தில் இருந்து வந்த கலைஞர்களுடன் நாவண்ணனும் இணைந்திருந்தார். யேர்மனியிலும் பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். யேர்மனியில் ஸ்ருட்காட் நகரத்திலும் அவரது நிகழ்ச்சி இருந்தது. அந்தக் கலை நிகழ்ச்சி நடந்த பொழுது நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டதுதான் எங்களது கடைசிச் சந்திப்பாக அமைந்தது.
யேர்மனிக்கு வரும் பொழுது அவர் எழுதிய ‘அக்கினிக் கரங்கள்’ என்ற புத்தகத்தை எங்கள் குடும்பத்துக்குத் தருவதற்காகக் கொண்டு வந்திருந்தார். கட்டுநாயக்காவில் இருந்து பயணிப்பதால் பிரச்சினைகள் வந்து விடலாம் என்ற எண்ணத்தில், புத்தகத்தின் அட்டையைக் கிழித்து விட்டு ஒரு பழைய புத்தகம் என்ற வடிவிலேயே ‘அக்கினிக் கரங்கள்’ புத்தகத்தைக் கொண்டு வந்திருந்தார்.
இன்று நாவண்ணன் இல்லை. அவரது நினைவுகள், அவருடன் எடுத்த புகைப்படங்கள்…. என்னுடன் இருக்கின்றன.
1987இல் இந்திய இராணுவம் நடத்திய யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் நினைவு நாளில், நாவண்ணன் எழுதிய ‘அக்கினிக் கரங்கள்’ புத்தகம் திடீரென நினைவில் வந்தது. இந்தப் புத்தகத்தை ஸ்கேன் செய்து நூலகத்தில் பதிந்திருக்கின்றார்கள். என்னிடம் உள்ள புத்தகத்தை படம் பிடித்து அதை எழுத்துருவாக்கி யாழில் இணைக்கிறேன். படத்தை எழுத்துருவாக்குவதில் (image to text) சில வேளைகளில் எழுத்துப் பிழைகள் இடம் பெற்றிருக்கலாம். அது என் தவறாக இருக்குமே தவிர நாவண்ணனின் தவறல்ல.
அக்கினிக் கரங்கள்
நாவண்ணன்
இது ஒரு தமிழ்த்தாய் வெளியீடு
நான் சிறியவளாய் இருக்கும்போது, என்னென்ன படம் பார்த்தேன், எத்தனை படம் பார்த்தேன் என்பதெல்லாம் இப்போது நினைவில் இல்லை. ஆனால் எம்.ஜி.ஆர் நடித்த, 'சர்வாதிகாரி,' 'மந்திரி குமாரி * இவையெல்லாம் நல்லாய் நினைவிருக்கு.
ஆபத்துவேளையில் எல்லாம் எம். ஜி. ஆர் வாளோடு திடீர் என்று தோன்றுவதும், சிலம்பமாடி எல்லோரையும் துரத்துவதையும் பார்த்து படமாளிகையில் இருந்தவர்கள் விசில் அடித்து கைதட்டுவதைக் கேட்டு நானும் கைதட்டியிருக்கின்றேன்.
ஐம்பத்தெட்டில இனக்கலவரம் நடந்தபோது. பெரியவர்கள் சும்மா கேலிக்காக பேசிக்கொண்ட விஷயமும் ஒன்று."எம்.ஜி. ஆர் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற வாளுடன் கொழும்புத் துறைமுகத்தில் வந்து குதித்து விட்டாராம்!" என்பது. அந்த விஷயத்தை உண்மையென்று அன்று என் மனம் நம்பியது. அப்படி ஒரு அபிமானம் எனக்கு எம்.ஜி.ஆர் மீது.
அந்நாளில் பிரபல்யமாக பேசப்பட்ட இன்னுமொருவருடைய பெயர் அறிஞர் அண்ணாவுடையது. இலங்கை யில் இனக்கலவரம் நடந்தபோது, தமிழகத்தில் எங்கேயோ நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில், " ஏய் மத்திய அரசே! இலங்கையில் எமது தமிழ்ச் சகோதரர்கள் படு கொலை செய்யப்படுவதை நீ சும்மா பார்த்துக் கொண்டிருக்காதே! நீ அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறினால் தமிழகத்தில் உள்ள நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம். ஒரு கையில் மண் வெட்டியும் மறுகையில் கூடையும் எடுப்போம். சேது அணையை நிரவி நிரவி அங்கு போய்ச் சேருகின்ற முதல் தமிழன் விடுகின்ற மூச்சே எம் சகோதரர்களின் துன்பங்களைப் பொசுக்கும்." - இப் படிப் பேசியுள்ளதாக பெரியவர்கள் பேசிக்கொண்டார்கள்.
அன்றைய இனக்கலவரம் பற்றிய செய்திகளை, பெரியவர்கள் தமக்குள் பேசிக் கொண்டிருந்தபோது அவைகள் என் செவிகளில் விழுந்திருக்கின்றன. தென் பகுதியில் உள்ள தமிழர்களை சிங்களவர்கள் வெட்டிக் கொன்றது, உயிருடன் தீ மூட்டியது, பிள்ளைகளைக் கொதிக்கும் தார்ப் பீப்பாய்களுக்குள் போட்டது எல்லாம் கேட்க எனக்குப் பயங்கரமாகவே இருக்கும்.
என்னுடைய மாமா முறையான ஒருவர், அந்த இனக் கலவரத்தில் உயிர்தப்பி வந்தவர். தன் கண் முன்னாலேயே அவருடைய மனைவி, சிங்களக் காடையர்களால் கற்பழிக்கப் பட்ட கதையைச் சொல்லி அழுததையும் நான் நேரடியாகக் கேட்டிருக்கிறேன். அப்போ கற்பழிக்கப்படுதல் ' என்றால் என்ன என்பதன் விளக்கம் எனக்குத் தெரியாது. ஆனால், அந்த மாமாவையும் அவர்கள் வெட்டிக் குற்றுயிராய் விட்டுப் போனபிறகு, பக்கத்து வீட்டில் இருந்த இன்னுமொரு சிங்களக் குடும்பம் தான் அவரையும் காப்பாற்றியிருக்கு. அந்த மாமி. சிலநாளா பைத்தியம் பிடிச்ச மாதிரி இருந்து, பிறகு தனக்குத் தானே தூக்குப் போட்டுக் கொண்டாளாம்.
அந்த மாமாவே இவ்வளவு பெரிய வெட்டுக் காயத் தோட உயிர் பிழைச்சிட்டார். ஆனால், அந்த மாமி ஏன் தற்கொலை செய்து கொண்டாள்...... அதுவும் கொஞ்ச நாள் உயிர் வாழ்ந்திட்டு. இந்தக் கேள்விக் கெல்லாம் அந்த நாளில எனக்கு விடை கிடைக்கவில்லை. அதைப்பற்றி பெரியவர்களிடம் யாரிடமாவது கேட்டால், ' சும்மா போ அங்கால' என்று சினப்புத்தான் கிடைத்தது. ஏதோ நாம் அறியக் கூடாத விடயமாக்கும் என்று நான் பேசாது இருந்து விடுவேன்.
ஆனால், இனக்கலவர காலத்தில் எம். ஜி. ஆர் வந்த கதை, அண்ணாவின் பேச்சு எல்லாம் என்னுடைய சின்ன வயசிலேயே நெஞ்சில ஒரு கிளுகிளுப்பையும் தமிழ் நாட் டில் உள்ளவர்கள் மேல் ஒரு பக்தியையும் எனக்கு ஏற்படுத்திவிட்டிருந்தன.
காலம் போகப் போக இந்திய சுதந்திரப் போரும் அதில் இந்தியத் தலைவர்களும் மக்களும் காட்டிய உறுதியுடன் கூடிய சகிப்புத் தன்மையெல்லாம் இந்தியாவின் மேல் இனிமேல் இல்லையென்று கூறும் அளவுக்கு அபிமானத்தை ஏற்படுத்தி விட்டன.
நான் படிப்பை முடித்த பின்னர், அரச வைத்தியசாலை யில் தாதியாக (நேர்ஸ்) வேலை பார்க்கத் தொடங்கினேன். பாடசாலை நாட்களிலேயே, நான் ஒரு புத்தகப் பூச்சிதான். இந்தத் தொழிலுக்கு வந்த பின்னர் இன்னும் புத்தகம் வாசிக்கும் வாய்ப்பு அதிகமாயிற்று. அதிலும், இரவு வேலை நாட்களில் ஓய்வாக இருக்கும்போது புத்தகங்களே எனக்கு உறுதுணையாகின.
மகாத்மா காந்தியின், சத்திய சோதனை என்னை மிகவும் கவர்ந்த நூல்களில் ஒன்று. காந்தியைப் போன்று தெய்வீக அம்சம் கொண்ட மகானை தேச பிதாவாகக் கொண்ட அந்த நாடு. சத்தியத்திற்கும் அகிம்சைக்கும் காப்பரணாக விளங்கும் என்று நான் உறுதியாக நம்பினேன்.
இன்னும் பென் கிங்ஸ்சிலியின், 'காந்தி படம் வேறு எனது சிந்தையிலேயே இந்த எண்ணங்களுக்கு நெய் வார்த்து விட்டது. அதிலும் பிரிட்டிஷ் படையினர். ஜாலியன் வாலா பார்க்'கில் சூழ நின்று அப்பாவி மக்களைச் சுட்டுக் கொன்ற அந்தக் காட்சியைப் பார்த்த போது என் இரத்தம் கொதித்தது. ரோமம் எல்லாம் சிலிர்த்து நின்றது. அந்தப் படம் அவுஸ்திரேலியாவில் ஏதோ ஒரு அரங்கில் திரையிடப்பட்டது. அந்தக் கட்டத்தைப் பார்த்த ஒருவர், "நல்ல காலம்! பிரித்தானியனாகப் பிறக்காததையிட்டு நான் பெருமைப்படுகிறேன்." என்று கூறிய தாகப் பத்திரிகை ஒன்றில் வந்த செய்தியை நினைத்துக் கொண்டேன்.
உண்மைதான்! அந்த ஒரு நிகழ்வுக்காகவே பிரித்தானியன் ஒவ்வொருவனும் வெட்கப்படவேண்டுமென்று தான் நினைப்பதுண்டு. ஹிரோசிமா, நாகசாகி மீது அணுகுண்டு பொழிந்து அப்பாவி மக்களைப் பலிகொண்ட அமெரிக்கனுக்கும் இந்தப் பிரித்தானியனுக்கும் என்ன வித்தியாசம் உண்டு என்பதே எனது கேள்வி
இன்றைக்குத் தமிழகத்தில் எத்தனையோ தமிழ் எழுத்தாளர்கள் தோன்றிவிட்டார்கள் என்பது உண்மைதான் ! ஆனால், தான் படிக்கும் காலத்திலேயே என்னுள் நூல்களைப் படிக்க வேண்டுமென்ற வெறியை ஏற்படுத்தியது டொக்ரர் மு. வ. வின் எழுத்துக்கள்தான். பெரும்பாலும் அவருடைய நாவல்களை நான் படித்திருக்கின்றேன். ஒருமுறையல்ல, வசதி கிடைக்கும் பொழுதேல்லாம் ஒரே நூலினை மீளவும் படித்திருக்கின்றேன்.
அவருடைய 'அந்த நாள் நூலைப் படித்ததன் பின்னர் தான் இந்திய மக்கள், கடந்த காலங்களில் என்னவிதமான துன்பத்தை எல்லாம் சந்தித்திருக்கின்றார்கள் என்று வேதனைப் பட்டதுண்டு.
பர்மாவின் தலைநகர் ரங்கூனில் இருந்து ஜப்பானியரின் குண்டு வீச்சுக்கு இலக்காகி இறந்தவர்கள் இடி பாடுகளுக்கிடையே நசுங்கி மடிந்தவர்கள் அங்கிருந்து இந்தியாவை நோக்கிக் கால் நடையாகவே புறப்பட்ட அகதிகள் பட்ட இன்னல்கள்...... மலேரியா, வாந்திபேதி வருத்தங்களால் மாண்டவர்கள்... அப்படி இறந்தவர்களை அநாதைப் பிணங்களாகவே விட்டு உறவினர்கள் செல்ல, காட்டு மிருகங்களால் உண்ணப்பட்டதும் பிணங்களைப் புதைப்பதற்கு வகை தெரியாமல், ஆற்றிலே தூக்கி எறியப்பட்ட அவலங்கள் அதிலும் தப்பி வந்தவர்களை, காட்டு வழியில் மறித்து பர்மாக்காரர்கள் கொள்ளையடித்த கொடுமைகள் எல்லாம் படிக்கப் படிக்க அந்த இந்தியர்கள் மீது எனக்கு இரக்கத்தையே உண்டு பண்ணின.
இலங்கையை இலங்க வைக்க வந்த இந்தியர்கள் இதே கொடுமைகளைத் தானே அனுபவித்தனர்.
இந்த கொடுமைகளை யெல்லாம் அனுபவித்து கரை கண்டு வந்த பாரத மக்கள் துன்புறும் அயல்நாட்டு மக்களுக்கு அன்புக்கரம் நீட்டுவதில் வியப்பொன்றும் இருக்க முடியாது தான்! அதனால்தான், பாகிஸ்தானின் பிடியில் இருந்து பங்களாதேஷுக்கு, இந்தியா விடுதலையைப் பெற்றுக்கொடுத்தது.
அதனால்தான், இலங்கையில் இருந்து அகதிகளாக தஞ்சம் கோரி அங்கு சென்ற ஈழத் தமிழர்களுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்துள்ளது.
ஒரு பெண் பிரசவ வேதனையால் துடிக்கும் போது ஒரு ஆண் அவள் வேதனையை உணர்வதை விட, பிள்ளைகளைப் பெற்ற ஒரு பெண் நிச்சயமாய் அதிகமாக உணர்வாள்! ஏனென்றால், ஒரு நாளில் அவளும் இதே உபாதையை அனுபவித்தவளாயிற்றே!
அதுபோல அடிமைப் படுத்தப்படும் மக்களின் உணர்வுகளை, ஒரு காலத்தில் அந்நிய ஆதிக்கத்துக்குள் அடிமைப்பட்டிருந்த இந்தியா உணர்ந்து கொள்வதிலும், அடிமை பட்டுக் கிடக்கும் மக்களுக்காகக் குரல் கொடுப்பதிலும் போராடுவதிலும் ஆச்சரியம் எதுவுமில்லை.
சுதந்திரம் பெற்றநாள் முதல், இலங்கையில் தமிழினம் இன்னல்கள் அனுபவித்து வருவதை அனுதாபத்தோடு இந்தியா பார்த்துக் கொண்டிருக்கிறதே என்று நான் வியப்படைந்ததுண்டு. பங்களாதேஷ் அகதிகள் இந்தியா விற்குள் நுழைந்த போது அதைக் காரணமாக வைத்து, பாகிஸ்தானுடன் போராடி பங்களாதேஷுக்கு விடுதலை பெற்றுகொடுத்த இந்தியாவால், இலங்கைத் தமிழர்கள் பாக்கு நீரிணையைக் கடந்து தஞ்சம் கோரிச் சென்ற பின்னரும் எப்படி மௌனமாக இருக்க முடிகின்றது...... என்று எண்ணி நான் வியந்ததுண்டு.
நாளுக்கு நாள் சிறீலங்காப் படைகளின் கொடுமைகள் அதிகரித்து வரும் பொழுதெல்லாம் காங்கேசன்துறை (கே.கே.எஸ்) யில் எனது வீட்டுக்கு அண்மையில் இருக்கும் கடற்கரையில் நின்று கொண்டு, இந்தியா இருக்கும் திசையை நோக்கிக் கூவி அழைக்க வேண்டும் போல் இருக்கும். அதிலும், எங்கள் வைத்தியசாலையின் வைத்தியரான டொக்ரர் விஸ்வரஞ்சன் ஒரு நாள் கடமை முடிந்து யாழ்ப்பாணத்தில் இருந்து, கே.கே எஸ். வந்து தன் வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தபோது அவரை விசாரித்து, அடையாள அட்டையைப் பார்த்து அவர் ஒரு டொக்ரர் தான் என்பதை அறிந்து கொண்டபின்னர், அவரை முன்னே போகவிட்டு பின்புறமாக நின்று சுட்டுக் கொன்றனர். அவர் பல உயிர்களைக் காப்பாற்றும் டொக்ரர் என்பதையும் நினைக்காமல் நடு வீதியிலே, அவரைச் சுட்டுக்கொன்ற
அந்த கொடுமைக்குப் பின்னர், "இந்தியாவே! நீ எப் பொழுது எங்கள் மண்ணில் காலெடுத்து வைக்கப் போகின்றாய் .....?" என்று நான் அழுதேன்.
கே.கே.எஸ் சந்தியில், காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்த அந்த இளம் குடும்பத் தலைவன் 'திபோ' இலங்கை இராணுவத்தால் சுடப்பட்டு, இடுப்புக்குக் கீழே இயங்க முடியாத நிலையில் இன்று யாழ்ப்பாண வைத்திய சாலையில் படுத்த படுக்கையாகக் கிடக்கின்றானே....... அதை எண்ணும்போது......!
இவைமட்டும் தானா.....? இலங்கை இராணுவத்தின் துப்பாக்கிகளுக்கும் எறிகணைகளுக்கும் இலக்காகி தினம் தினம் நோயாளிகளை கையிழந்து. காலிழந்து சில வேளைகளில் உயிரிழந்து வெறும் சடலங்களாய் கொண்டு வரும் போது என் இரத்த மெல்லாம் கொதிக்கும். ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கிற நான் இந்தத் தொழி லையே விட்டுவிட்டு, துப்பாக்கி ஏந்தட்டுமா......? என்று கூட நினைப்பேன்.
அந்த வேளையில் எல்லாம் எங்கள் வைத்தியசாலை வாசலில், நித்திய புன்னகையுடன் நிற்கும் காந்தி அண்ணலின் சிலை எனக்கு ஆறுதல் கூறுவது போல் இருக்கும். அந்த மகானின் புன்னகையில் அத்துணை காந்த சக்தி!
பாவம் அந்தக் காய்கறி வியாபாரி திபோ! அவனுக்கு இரண்டு குழந்தைகள். அவனது இளம் மனைவியோ, கணவனே கதியென்று அவன் வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்ட நாள் முதல் அங்கேயே பழிகிடக்கின்றாள். சில வேளைகளில் அவனது பிள்ளைகள் உறவினருடன் வந்து பார்த்துச் செல்வதுண்டு!
திபோ மீண்டும் எழுந்து நடமாடுவானா......? அந்தக் குடும்பத்துக்கு உழைத்துக் கொடுத்து மீண்டும் தன் குடும்பச் சுமையை ஏற்றுக் கொள்வானா? என்னுடைய இந்த இருபத்திரண்டு வருட வைத்தியசேவை அனுபவத்தில் அது நடை பெறாது என்றுதான் நான் நினைத்தேன். ஆனால், தெய்வம் என்று ஒன்றிருக்கின்றதே...... ! அது இரங்கினால் நடக்க முடியும்!