Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தின் மாபெரும் இடப்பெயர்வு நடந்து இன்றுடன் 18 வருடங்கள் நிறைவு ..!

Featured Replies

ஈழத்தமிழர்களின் வரலாற்று துயரங்களில் ஒன்றான யாழ்ப்பாணத்தின் மாபெரும் இடப்பெயர்வு நடந்து இன்றுடன் 18 வருடங்கள் நிறைவு @ 30.10.1995 மழையுடன் கூடிய கொடிய இரவை நேரடியாக அனுபவித்தவன் சிறீலங்கா அரசுக்கு எவ்விதத்திலும் வால் பிடிக்க மாட்டான்.நன்றி பேஸ்புக் .

 

12815_439018129469091_1359617795_n.jpg

 

Edited by அஞ்சரன்

மிகவும் துயரமான நாள் இது.

 

இந்த நாள் யாழ்ப்பாண தமிழ் மக்களுக்கு மட்டும் துயரமான நாள் அல்ல. 

 

யாழில் இருந்து தமிழ் மக்கள் இடம்பெயர்ந்த நாளுக்கு சரியாக 5 வருடங்களுக்கு முன்னர்  1990 ஆம் ஆண்டு இதே அக்டோபர் 30 அன்றுதான் யாழ்ப்பாணத்தினை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் புலிகளினால் பலவந்தமாக  வெளியேற்றப்பட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் மட்டுமல்ல 1995 ல் எனது ஒன்றுவிட்ட தாத்தா 85 வயதானவர். மனைவி 78 வயது. பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில், தம்பியவை செத்தாலும் பரவாயில்லை என்னை என் வீட்டில் இருக்க விடுங்கோ என்று கதறியதையும் கேட்க்காமல் வரணிக்கு வலுக்கட்டாயமாக டிரக்க்டரில் இடம் பெயர்க்கப்பட்டார்.

யாரிடம் கையேந்தாமல் வாழ்ந்த மனிதர். வரணியில் பட்டபாடு இருக்கே. இடம்பெயர்வால் மனைவிக்கு புத்தியும் பேதலித்து விட்டது.

1997 ல் அவரை சந்தித்த போது தீவிர சந்திரிக்கா ஆதரவாளராய் மாறி இருந்தார்.

இதே அவலம் 2009 இலும் கிளிநொச்சியில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி இடம்பெயர்ந்த போது நடந்தது.

அதிகாரம் முழுவதும் ஒரே இடத்தில் குவிந்திருந்தால் என்னாகும் என்பதற்க்கு இவை நல்ல படிப்பினைகள்.

Power corrupts. Absolute power corrupts absolutely.

எல்லோரும் வேண்டுமென்றே இடம் பெயர்க்க படவில்லை 90% சுயவிருப்பில் இடம் பெயர்ந்திருக்கலாம். ஆனால் 10% ஆனவர்கள் கட்டாயமாக இடம்பெயர்க்கப் பட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிலர் எழுதுவது முழு..பட்டறிவற்ற..மொக்குத்தனமான வாதம். 1995 இடம்பெயர்வின் போது இருந்தவர்கள் என்ற வகையில்.. இவர்களின் மொக்குத்தனத்தை இதில் காண முடிகிறது. அன்று அப்படி ஒரு இடம்பெயர்வு நடந்திராவிட்டால்.. அன்றொரு முள்ளிவாய்க்கால் யாழ் மண்ணில் நிகழ்ந்து முடிந்திருக்கும்..! இந்த ஆக்கிரமிப்பின் பின் கூட செம்மணியில் எம் உறவுகள் வெட்டிப்புதைக்கப்பட்ட வரலாறை மறந்துவிட்டு வரணியில் பட்ட பாட்டுக்காக அழுபவர்களை ஷெல் மழைக்கும்.. விமானத் தாக்குதலுக்கும் இரையாக்கி.. பாடையில் ஏற்றி இருந்தால் நல்லா இருந்திருக்கும். நன்றி கெட்ட ஜென்மங்களாக எம் மக்களில் சிலர்..!

 

அன்றைய இடம்பெயர்வு என்பது தமிழர்கள் பலரை தப்பி.. இன்று அசைலம் அடிக்க வைத்துள்ளதை மறந்து சிலர் பிதட்டித் திரிகிறார்கள்..! 

 

முஸ்லீம்களின் வெளியேற்றம் என்பது மிகவும் பாதுகாப்பானதாக இருந்தது. ஆனால்.. இந்த வெளியேற்றத்தின் போது நாவற்குழியில் வைத்து விமானங்கள் மூலம் செல்கள் மூலம் சிங்களம் தாக்குதல் நடத்தியது. அதையும் தாண்டி போராளிகள்.. மக்களுக்காக குறிப்பாக வயது போனவர்களுக்காக சிரத்தை எடுத்து செயற்பட்ட விதம்.. அதுவும் மழைக்குள் சகதிக்குள் மக்கள் பட்டபாட்டை விட போராளிகள் பட்டதே அதிகம்..! அப்போது தான் போராளிகள் காட்டிய மக்களின் அக்கறையை புரிந்து கொள்ளவும் முடிந்தது..!

 

அன்று எம்மை எல்லாம் தங்கள் உயிர் தந்து காத்த மாவீரர்களுக்கு இந்த நேரத்தில் நெஞ்சார்ந்த பிரார்த்தனைகளை வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.


 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் மட்டுமல்ல 1995 ல் எனது ஒன்றுவிட்ட தாத்தா 85 வயதானவர். மனைவி 78 வயது. பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில், தம்பியவை செத்தாலும் பரவாயில்லை என்னை என் வீட்டில் இருக்க விடுங்கோ என்று கதறியதையும் கேட்க்காமல் வரணிக்கு வலுக்கட்டாயமாக டிரக்க்டரில் இடம் பெயர்க்கப்பட்டார்.

யாரிடம் கையேந்தாமல் வாழ்ந்த மனிதர். வரணியில் பட்டபாடு இருக்கே. இடம்பெயர்வால் மனைவிக்கு புத்தியும் பேதலித்து விட்டது.

1997 ல் அவரை சந்தித்த போது தீவிர சந்திரிக்கா ஆதரவாளராய் மாறி இருந்தார்.

இதே அவலம் 2009 இலும் கிளிநொச்சியில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி இடம்பெயர்ந்த போது நடந்தது.

அதிகாரம் முழுவதும் ஒரே இடத்தில் குவிந்திருந்தால் என்னாகும் என்பதற்க்கு இவை நல்ல படிப்பினைகள்.

Power corrupts. Absolute power corrupts absolutely.

எல்லோரும் வேண்டுமென்றே இடம் பெயர்க்க படவில்லை 90% சுயவிருப்பில் இடம் பெயர்ந்திருக்கலாம். ஆனால் 10% ஆனவர்கள் கட்டாயமாக இடம்பெயர்க்கப் பட்டனர்.

 

 

நீங்கள்

தமிழரது போராட்டத்தை  எவ்வாறு பார்க்கின்றீர்கள் என்பதை இது புலப்படுத்தி  நிற்கிறது.

 

வலியைக்கொடுத்தவனை  மறந்துவிட்டு

வலியைத்தணிக்க  நாலாபக்கத்தாலும் ஓடியவனிடம் தத்துவம் ஓதும் தங்களது வாதம் பொன் எழுத்தக்களால் பொறிக்கப்படவேண்டியவை.............

தொடருங்கள்

அடி சக்கை .

என் தூரத்து உறவு முறையான அதே நேரம் நெருங்கிப் பழகிய மாமா ஒருவரின் வயோதிகத் தந்தை கடைசி வரைக்கும் 1995 இல் இடம்பெயர் மறுத்து விட்டார். புலிகள்  எவ்வளவு கட்டாயப்படுத்தியும் மனுசன் டிமிக்கி கொடுத்து விட்டு வீட்டில் நின்று விட்டார்.

 

பின் மாமா தன் வீட்டுக்கு மீண்டும் திரும்பிப் (தென்மராட்சியையும் ஆமி பிடிச்ச பிறகு) போகும் போது அவரது தந்தையின் அழுகிப் போன உடலத்தினைத் தான் காண முடிந்தது. அதில் 5 மேற்பட்ட துவக்குச் சூடு. மனுசன் ஆமிக்கு பயந்து குசினிக்குள் இருந்த உரலுக்கு பின்னால் ஒழித்து இருந்து இருக்கு போல, அங்க வந்தும் ஆமி சுட்டுக் கொன்று இருக்கு.

 

அன்று புலிகள் மக்களை இடம்பெயர்ச் சொல்லி இருக்காவிடின் முள்ளிவாய்க்கால் அவலத்தினை அன்றே யாழ் நகரில் பார்த்து இருப்போம்.

முள்ளிவாய்காலுக்கு புலிகளுடன் போகாதவர்களுக்கு என்ன நடந்தது ,அல்லது போய் தப்பி ஓடி வந்தவர்களுக்கு என்ன நடந்தது ?

வரலாற்று இடம் பெயர்வில் இடம் பெயராதவர்கள் அனைவரும் கொல்ல பட்டார்களா ?

 

நான் இப்படி எழுத இந்திய கூலி அல்லது இலங்கை எடுபிடி என்பீர்கள் ,

இந்திய ,இலங்கை இராணுவத்திற்கு சளைத்தவர்கள் அல்ல புலிகளும் தமிழர்களை பலி எடுப்பதில் அதுதான் உண்மை .

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே தான் நாம் தவறு விடுகிறோம்.

இடம் பெயருங்கள் என்று சொல்லலாம். வாகன இதர ஏற்பாடுகளை செய்யலாம். ஏன் வீடு வீடாய் போய் பிரச்சாரமும் செய்யலாம்.

ஆனால் பிடிவாதமாய் இருக்கும் அந்த சில பேரையும் தூக்கியே போவோம் என்பது தான் எதேச்சதிகாரம்.

இப்படி வெளியேற்றப்பட்ட பலர் 1996 இலே தென்மராட்சி விழ மீண்டும் யாழ்போனாதும் நாம் அறிந்ததே. இந்த 10% எக்கேடு கெட்டாலும் போங்கள் என்று விட்டிருந்தால், பின்னாளில் மக்களை கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என்ற பிரச்சாரம் சர்வதேச ரீதியில் பெரிதாக எடுபட்டிராது.

இதே தளர்வற்ற அணுகுமுறையே 2009 இலும் கடைப்பிடிக்கப்பட்டு, மனித கேடயங்கள் எனும் பிரச்சாரத்துக்கு வலுச்சேர்த்தது.

1987 வடமராட்ச்சி நடவடிக்கைக்கு பெயர், ஒப்பரேசன் லிபரேசன். லிபரேசன் ஒப்பரேசன் இல்லை.

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறி லங்கனை நம்பினோர் சிதறினார்கள்.

பாவம், முள்ளிவாய்க்காலில் கைவிடப்பட்ட 15,000 க்கும் மேற்பட்ட போராளிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இடப்பெயர்வு ஒக்ரோபர் 30,1995 - 18 வருடங்கள் -

31 அக்டோபர் 2013

 

dis_CI.jpg

(அக்டோபர் 30 உடன் யாழ்ப்பாண இடப்பெயர்வு நடந்து 18 வருடங்கள் ஆகின்றன. ஈழத் தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத அந்த இடப்பெயர்வு அவலத்தை பற்றிய இந்தப் பதிவு மீள் பிரசுரம் செய்யப்படுகிறது)

அன்று கந்தசஷ்டி விரதத்தின் கடைசி நாள். விடிந்த போது சாதாரணமாத்தான் விடிந்தது. பலாலி இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணத்தினை கைப்பற்ற இராணுவத்தினர் தாக்குதலை நடாத்தி வருவதும், அன்றைக்கு சில நாட்கள் முன்பாக அந்த நடவடிக்கையை முறியடிக்க புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றியைத் தராமல் போனதும் அப்போதைய பரபரக்கும் செய்திகள்.

 

யுத்த முனையில் இராணுவத்தினரின் கைகள் ஓங்கியிருப்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் புலிகளின் இராணுவ நகர்வுகள் பற்றி யாருக்கும் எதிர்வு கூற முடியாதென்கிற நிலையில் எந்த ஒரு யாழ்ப்பாண குடிமகனும் தானும் உறவும் ஒட்டுமொத்தமாய் இந்த நிலத்தை விட்டுப் பிரிவோம் என்று நினைத்திருக்க வில்லை.

காலையில் பாடசாலைக்கு புறப்படுகின்றவன் மாலையில் சிலவேளைகளில் நான் திரும்பி வராது இருக்க கூடும் என்று நினைத்திருப்பான். குண்டு வீச்சு விமானங்களின் இரைச்சல் கேட்டவன் இந்த விமானங்கள் வீசும் ஏதாவது ஒரு குண்டில் நான் செத்துப் போகலாம் என்று நினைத்திருப்பான். ஷெல் வீச்சுக்கள் அதிகமாகும் போது ஏதாவது ஒரு ஷெல் என் தலையில் விழுந்து யாரேனும் என்னைக் கூட்டி அள்ளிச் செல்லக் கூடும் என நினைத்திருப்பான். ஆனால், ஒரே இரவில் ஒன்றாய்க் கூடி வாழ்ந்த மண்ணைவிட்டு தூக்கியெறியப்படுவோம் என எவரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

ஆனால் இன்றைய மாலை அத்தனைபேரும் தங்கள் வேர்களைப் பிடுங்கி நடந்தார்கள். எங்கே போவது, என்ன செய்வது என்னும் எந்தச் சிந்தனையும் இன்றி உயிர் பிழைக்க வேண்டும் என்ற நோக்கோடு மட்டும் நடந்தார்கள்.

இரவு நெருங்குகிறது. இன்றைக்கும் புத்தூர்ப் பகுதிகளில் சண்டை நடந்தது என பேசிக்கொள்கிறார்கள். மின்சாரம் இல்லாத அந்தக் காலத்து யாழ்ப்பாணம் மிகச் சீக்கிரமாக நித்திரைக்கு சென்று விடும்.

8 மணியிருக்கும். பரவலாக எல்லா இடங்களிலும் ஒலிபெருக்கி கட்டிய வாகனங்களில் அறிவிப்பு செய்கிறார்கள் புலிகள்.

யாழ்ப்பாணத்தை கைப்பற்றி பாரிய இன அழிப்பு நடவடிக்கையை இராணுவம் மேற்கொள்ள இருக்கின்றதனால் உடனடியாக பாதுகாப்பான பிரதேசங்களான தென்மராட்சி வடமராட்சி வன்னிப் பகுதிகளுக்கு சனத்தை இடம்பெயருமாறு கோரியது அந்த அறிவிப்பு.

யாழ்ப்பாண குடாநாட்டில் அப்போதிருந்த அண்ணளவான மக்கள் தொகை 5 லட்சம். யாழ் குடாநாட்டினை வடபகுதியின் மற்றைய பிரதேசங்களுடன் இணைத்திருந்த வெறும் இரண்டு வீதிகளினூடாக 5 லட்சம் மக்கள் ஓர் இரவு விடிவதற்குள் கடந்து செல்ல வேண்டும் என்பதனை கற்பனை செய்தும் பார்க்க முடியாது.

ஆனால் மக்களுக்கு அதற்கெல்லாம் நேரமிருக்க வில்லை. மூட்டை முடிச்சுக்களை கட்டி எல்லோரும் வீதிகளில் இறங்க இறுகிப்போனது வீதி.

இப்போது நினைத்துப்பார்த்தால், புலிகள் அந்த வெளியேற்றத்தை திட்டமிட்டு நடாத்தி முடித்திருக்கலாமோ என தோன்றுகிறது. ஏனெனில் அந்த இடப்பெயர்வு முடிந்து அடுத்த இரண்டு மாதங்கள் வரை யாழ்ப்பாணம் புலிகளின் கைகளில் தான் இருந்தது. இடப்பெயர்வின் பின்னர் ஒரு பத்து பதினைந்து நாட்கள் வரை இடம் பெயர்ந்தவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சென்று பொருட்கள் எடுத்துவர அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.

ஆனால் எந்த விதமான முன் தீர்மானமும் இன்றி நெருக்கடியான நிலையிலேயே புலிகளும் இந்த முடிவினை எடுத்திருந்தார்கள் என்பதற்கு மக்களோடு மக்களாக இடம் பெயர்ந்த புலிகளின் படையணிகளும், காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போராளிகளும் சான்று.

அந்த இரவு மிகப்பெரும் மனித அவலத்தை சுமந்தது. இனி வீடு வருவோமோ என்று உடைந்து போனவர்கள், எங்கே போவது என்ற திசை தெரியாதவர்கள், வயதான அம்மா அப்பா இவர்களை வீட்டிலே விட்டு வந்தவர்கள், நிறைமாத கர்ப்பிணிகள், முதியவர்களைச் சுமந்தவர்கள் என வீதியில் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு ஒரு மணி நேரம் ஆயிற்று.

தண்ணி கேட்டு அழுத குழந்தைகளுக்கு பெய்த மழையை குடையில் ஏந்தி பருக்கியவர்கள், லொறிகளில் றேடியேற்றருக்கென வாளிகளில் தொங்கும் தண்ணீரை எடுத்து குடித்தவர்கள், வீதியில் இறந்த முதியவர்களை அந்த சதுப்பு நிலத்தில் குழி தோண்டி புதைத்தவர்கள் – உலகம் என்ற ஒன்று பார்த்து ‘உச்’ மட்டும் கொட்டியது.

அடுத்த காலையே வானுக்கு வந்து விட்ட விமானங்கள், நிலமையை இன்னும் பதற்றப்படுத்தியது. அந்த வீதிக்கு அண்மையாக எங்கு குண்டு வீசினாலும் ஆயிரக்கணக்கில் பலியாக மக்கள் தயாராயிருந்தனர்.

24 மணிநேரங்களிற்கும் மேலாக நடக்க வேண்டியிருந்தது. நடந்தும் தங்க இடமெதுவும் இன்றி ஆலயங்கள், தேவாலயங்கள், பஸ் நிலையங்கள் என கண்ணில் பட்ட இடங்களில் மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தூக்கிப்போட்டனர்.

காலங்காலமாய் வாழ்ந்த மண்ணை விட்டு ஒரே நாளில் நிர்ப்பந்தங்களால் தூக்கியெறியப்படின் அந்த வலி எப்படியிருக்கும் என்பது அன்றைய நாளுக்கு மிகச்சரியாக 5 வருடங்களிற்கு முன்பு யாழ்ப்பாணத்தை விட்டு முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்ட போது எனக்கு தெரியவில்லை. ஆனால் அன்று புரிந்தது.

குறிப்பு: முஸ்லீம் மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டு இன்று 15 ஆண்டுகளும் முஸ்லீம்கள் அல்லாத யாழ்ப்பாண மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறி இன்று 10 ஆண்டுகளும் நிறைகின்றன. முஸ்லீம்கள் வெளியெற்றத்திற்கு காரணமாயிருந்த புலிகள் பின்னர் பகிரங்க மன்னிப்பும் கவலையும் தெரிவித்து முஸ்லீம்களை மீளவும் யாழ்ப்பாணத்தில் குடியெற தடையேதும் இல்லை என சொல்லியிருக்கிறார்கள் 

நன்றி ‐  சாரல்

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98334/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

1995ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முப்பதாம் திகதி

1995-oct-30.jpg?w=500

ந்த நாட்களை எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. என் பாட்டியின் வீட்டிற்கு எப்போதாவது பின்னேரங்களில் சென்று வருவேன்.அப்படித்தான் அந்த 1995 ஐப்பசி மாதம் 30 ஆம் திகதியும்  கொழும்புத்துறையில் இருக்கும் பாட்டியைச் சந்தித்து வரச் சென்றேன்.ஆமி முன்னேறி வருவதாகச் சொல்லப்பட்டது.அப்போதெல்லாம் அந்தப் பக்கம் விமானம் குண்டு போட்டுவிட்டுப் போனால் இந்தப் பக்கத்து ஒழுங்கையால் ஓடிப் போய் என்ன நடந்தது என்று பார்க்குமளவு யுத்தமும் சத்தமும் எனக்குப் பழகிப் போயிருந்தது. மேலே எது வட்டமிட்டுக் கொண்டிருந்தாலும் அது பற்றிக் கவலையின்றிக் கீழே றோட்டில் சைக்கிளில் நானும் சுற்றிக் கொண்டிருப்பேன். ஆனால் இப்போது அந்த நிச்சயமற்ற நாட்களில் வாழ்ந்ததை நினைத்துப் பார்க்க பயமாக இருக்கிறது.வேறு வழியில்லை வருவது வரட்டும் என்ற துணிச்சலில்லை.என் போன்ற சனங்களுக்கு அதை எதிர் கொண்டு வாழ்வது தவிர வேறு வழியிருக்கவில்லை.

சில நாட்களாக ஒரே ஷெல்லடிச் சத்தமும் வானிலிருந்து குண்டுகள் விழும் சத்தங்களும் தூரத்தில் கேட்டுக் கொண்டிருந்தன.இனி மேல் ஷெல்லடி அறம்புறமாக இருக்கப் போகுதெனச் சனங்கள் கதைத்துக் கொண்டனர்.ஆகவே தனியாக இருக்கும் பாட்டியைப் பார்த்து விட்டு வரலாமென்று சென்றேன்.சில நிமிடங்களில் உறவினரான நிமலராஜனும் அங்கு வந்தார்.அவர் அப்போது ஈழநாதம் பத்திரிகையில் அரசியல் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்தார்.அவர் வந்த படியால் ஏதாவது முக்கிய நியூஸ் இருக்குமென எதிர்பார்த்தோம். அவரும் அவசரஅவசரமாகத் தான் வந்ததாகவும் மக்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.நீங்களும் ஏதாவது வழியைப் பாருங்கள் என்றார். ‘ஈழநாதத்தில் இருந்த அச்சு இயந்திரங்கள் ஏற்கனவே கிளிநொச்சிக்கு ஏற்றிச் செல்லப்பட்டுவிட்டன’ என்ற போது தான் அதை உண்மை என நம்பினோம். தீவுப்பகுதி முக்கியமற்ற பிரதேசமென்று கைவிட்டதாகச் சொன்னவர்கள். யாழ்ப்பாணத்தையும் கை விட்டுச் செல்வார்கள் என என்னால் நம்ப முடியாமல் இருந்தது.யாழ் மக்களும் ஒட்டு மொத்தமாக இடம்பெயர்வதை நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்கள்.

உடனடியாக இதை என் பெற்றோருக்குச் சொல்ல வேண்டுமெனப் புறப்பட்டேன். வழியில் பாண்டியன்தாழ்விலிருந்த அன்ரன்பாலசிங்கத்தின் காம்பில் ஏதும் அசுமாத்தம் தெரிகிறதா? என சைக்கிளிலிருந்து எழும்பி நின்று பார்த்தேன்.அப்படி எட்டிப்பார்த்தும் தெரியாதளவு உயரத்தில் அஸ்பெஸ்டாஸ் சீற்றுகளால் மிக உயரமாக வளவு அடைக்கப்பட்டிருந்தது.அதிகாலைகளில் அன்ரன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் நாய்க்குட்டியுடனும் பாதுகாவலர்களுடனும் வெளியே வருவதைப் பார்த்திருக்கிறேன்.ஆதலால் அங்கே அவர்கள் வசிப்பதாக நம்பினேன்.

வீதிகளில் மக்கள் பொருட்களைச் சைக்கிள்களில் வைத்துக் கட்டியபடி நடந்து வந்து கொண்டிருந்தார்கள். கூட்டங்கூட்டமாகப் போகிறார்கள்.குழந்தைகளும் வயோதிபர்களும் அந்த இருட்டில் நடக்கிறார்கள்.நான் வேகமாக வீட்டுக்குள் போன போது அப்பா என்னைத் திட்டினார். ‘ஊர்ச்சனமெல்லாம் ஓடுதுகள் நீயெங்க உலாத்திப் போட்டுவாறாய? உடனடியாகச் சாப்பிட்டுப் போட்டு வா நாங்களும் எங்கையாவது போவம்’என்றார்.அம்மா சாறி உடுத்தி மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டிருக்கிறார். சில மணிநேரங்களில் எல்லாமே மாறிப்போயிருந்தது. -இன்றிரவு நாவற்குழிப்பாலம் உடைக்கப்படும்.அதற்கு முன்னர் மக்கள் அனைவரும் வெளியேற வேண்டும்.-என்ற அறிவிப்பு வீதியில் செய்யப்பட்டதாகச் சொன்னார்கள்.

இருள்.மழை தூறிக் கொண்டிருந்தது.சனங்கள் இரவுக்கிடையில் நாவற்குழிப் பாலத்தைத் தாண்டிவிட வேண்டுமென்று ஓடிக்கொண்டிருந்தார்கள்.நாங்களும் அந்த மக்கள் திரளில் சைக்கிள்களைத் தள்ளியபடி சென்றோம்.ஆனால் அரியாலை மாம்பழம்சந்தியை விட்டு ஒரடி எடுத்து வைக்க முடியவில்லை. சனக்கூட்டம்.வாகன நெரிசல்.

அப்போது பொதுமக்ளிடமிருந்ததெல்லாம் சைக்கிள் மட்டும் தான்.பெற்றோல், டீசல் கிடைக்காது. இயக்கமும் பாதிரியார்களும் தான் மோட்டார் சைக்கிள் வைத்திருப்பார்கள்.அப்போது வாகனங்கள் இயக்கத்திடம் மட்டுமே இருந்தன.அவர்கள் தமது பொருட்களையும் ஆட்களையும் ஏற்றிக் கொண்டு விரைகிறார்கள்.மழை கொட்டத் தொடங்கியது.தண்ணீர் கேட்டு அழுத குழந்தைகளுக்கு குடையில் மழை நீரை ஏந்திக் குடிக்கக் கொடுத்தனர்.500 000க்கு மேற்பட்ட மக்கள்  உள்ள ஒரேயொரு வீதியால் ஓரிரவில் எப்படி வெளியேறுவது?

 

ஐந்து வருடங்களுக்கு முன்னர் இதே ஐப்பசி30 இல் தான் முஸ்லிம் சனங்களும் மழை பெய்து கொண்டிருக்க அழுதுகொண்டு போனார்கள். அந்தப் பழிபாவம் தான் எங்களைத் துரத்துகிறது என்று சிலர் கதைத்தனர். நாங்களும் இன்னும் சிலரும் திரும்பிச் சென்று ஏதாவது பாதுகாப்பான பொது இடத்தில் இருப்பதென முடிவெடுத்தோம்

ஆயர் இல்லத்தில் யாழ்ப்பாண பிஷப் இருக்கிறார்.நாங்கள் மறைக்கல்வி நிலையத்தில் தங்கப் போவோம் என்று சொன்னவர்களுடன் சேர்ந்து கொண்டோம்.ஏற்கனவே அங்கும் மக்கள் கூடியிருந்தனர்.  இடம்பிடித்து நித்திரை செய்தோம்.இடையிடையே ஷெல் சத்தங்கள் கேட்டன.விடிந்ததும், ஆமிநடமாட்டம் இருக்குமோ இரவில் வந்து விட்டிருப்பார்களோ என்று யோசித்துத் தான் அவரவர் வீடுகளுக்குச் சமைக்கச் சென்றோம்.இயக்கம் பின்வாங்குகிறோம் என்று அந்தப் பிரதேசத்தை விட்டு விட்டுப் போனால் இராணுவமும் விடியற்காலையில் சத்தம் போடாமல் வந்து படலையில் நிற்கும் என்பது என் அல்லைப்பிட்டி அனுபவம்.

இப்படியாக மூன்று நாட்களானது. 30 ஆம் திகதி இரவென்று சொன்னதைப் போல நாவற்குழிப் பாலம் இன்னும் உடைபடவில்லை.ஆனால் நெரிசலால் வயோதிபர்கள் ,குழந்தைகள் இறந்தனர்.சிறுவர்கள் பலர் காணாமல் போயிருந்தனர். இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்கள் மீது அந்த இரவு போடப்பட்ட குண்டுகளாலும் பலர் காயமடைந்தனர் , இறந்தனர்.மக்கள் பெரும்அல்லோகலப்பட்டதாகவும் அறிந்தோம்.ஆகவே சற்று கூட்டம் குறைந்ததும் வெளியேறலாம் என முடிவெடுத்திருந்தோம். சமைக்கவோ சாப்பிடவோ இயலாதளவு தொடர்ந்து ஷெல்லடி.

தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறாதவர்களை, ‘எமது அறிவித்தலை மீறி எவராவது யாழ்ப்பாணத்தில் தங்கினால் அவர்கள் இராணுவத்தின் உளவாளிகளாகக் கருதப்படுவர் ‘ என இயக்கம்  சொன்னது.ஆவேசத்துடன் முன்னேறிவரும் இராணுவத்தை எதிர் கொள்வதன் ஆபத்தையும் நாமறிவோம்.வேறு எங்கும் போக மாட்டோம் என அடம்பிடித்தாலும் ஆமிக்கு உளவாளி என எமக்கு எதுவம் நடக்குமெனவும் எமக்குத் தெரியும்.ஆகவே சற்றுச் சனக்கூட்டம் வீதியில் குறைத்திருக்கக் கூடுமென்ற நம்பிக்கையில் நாங்களும் யாழ்ப்பாணத்தை விட்டுப் புறப்பட்டோம்.

இடம்பெயரத் தொடங்கி ,மூன்று நாட்களாகிய போதும் மக்கள் அடிமேல் அடி வைத்தே நகர்ந்து கொண்டிருந்தனர்.நாங்களும் சைக்கிள்களில் கொஞ்சம் உடுப்புகள், பாத்திரங்கள் ,சமையற் பொருட்களென்று வைத்து உருட்டிக் கொண்டு போனோம்.மத்தியானம் நடக்கத் தொடங்கி இரவில் சாவகச்சேரியை அடைந்தோம்.

பள்ளிக்கூடங்கள் ,பொதுக்கட்டடங்கள் அனைத்தும் ஏற்கனவே யாழ்ப்பாண அகதிகளால் நிரம்பியிருந்தன. சாவகச்சேரியில் உறவினர்கள், நண்பர்கள் எவருமில்லை.எவர் வீட்டுக்கும் போக முடியாது. சூசையப்பர்  மரியாளுடன்  குளிர்கால இரவில் தங்க இடம் தேடி அலைந்ததையொத்த காட்சிகளுக்கு அங்கே பஞ்மிருக்கவில்லை. கடைகளில் பிஸ்கட் கூட பல மடங்கு விலை.பிளேன் ரீ வாங்கிக் குடித்துவிட்டு நாள் முழுவதும் நடந்த களைப்பும், இனி என்ன? என்ற மனச்சோர்வுமாகப் படுக்க இடம் தேடினோம். கடைசியாக ஒரு சங்கக்கடை வாசலில் நித்தரை செய்து கொண்டிருந்த மக்களிடையில் ஒரு இடத்தைக் கேட்டு நித்திரையானோம்.

சூரிய வெளிச்சத்தில் கண் கூச எழும்பிப் பக்கத்திலிருந்த வீட்டுக் கிணறொன்றில் தண்ணீரள்ளி முகம் கழுவினோம்.இருக்க வீடில்லை.எங்கே போவதெனத் தெரியாத நிலை.அடுத்த நேரச் சாப்பாடு எப்படி? எல்லா மக்களின் பிரச்சனையும் இவை. அத்துடன் காணாமல் போன குழந்தைகளைத் தேடும் பெற்றோரின் துயரம்.அதற்கான ஒலிபெருக்கி அறிவிப்புகள் சாவகச்சேரி நகரில் கேட்டுக் கொண்டிருந்தன. நோயாளிகளும் குழந்தைகளும் பெருந் துன்பம் அனுபவித்தனர்.அம்மா ,அப்பாவுடன் றோட்டில் நின்று எங்கே இனிப் போவதென்று யோசித்துக் கொண்டிருந்தேன்.மறுபடியும் ஒலிபெருக்கி அறிவிப்பு. சாவகச்சேரியில் சனநெருக்கடி ஏற்பட்டிருப்பதால் மக்கள் வன்னிக்குச் செல்ல வேண்டும் என்று சொல்லப்பட்டது.

இப்போது வன்னிக்குக் கிளாலி கடல் நீரேரியைக் கடந்து செல்வதைப் பற்றி மக்கள் கதைக்கத் தொடங்கினர். நாங்களும் கிளாலி பயணித்தோம். அங்கும் சோகக் கதைகள்.பல நாட்களாகப் படகுப் பயணத்துகுப் பதிந்து விட்டு கொட்டில்களிலும் தென்னைமரங்களின் கீழும் ஏராளமானோர் காவலிருந்தனர். ஒரு கிழமையாகக் கூட காத்துக் கொண்டிருந்தனர்.கடற்படையின் கண்காணிப்பிலிருந்து தப்பித்து அடுத்த கரையை அடைவது உயிரைப் பணயம் வைத்துத் தான்.அங்கு சாப்பாடுகள் விற்கப்பட்டன. கையில் காசிருந்தால் வாங்கலாம். நாளாந்தம் கூலி வேலைக்குப் போய் உழைப்பவர்கள் என்ன செய்வார்கள்?

படகுகளில் மக்கள் பயணிக்க வானிலிருந்து குண்டுகள் விழுகின்றன. ஷெல்கள் வெடிக்கின்றன. காயங்கள் , மரணங்கள்.ஆனாலும் கிளாலிக்கரையில் எத்தனை நாளிருக்க இயலும்?உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மறுகரை அடைகிறோம்.இரவு அங்குள்ள கொட்டகையில் உறங்கி எழுந்து அடுத்து எங்கே போவதென யோசிக்கிறோம்.கிளிநொச்சியில் தூரத்து உறவினர்கள் இருப்பது ஞாபகத்துக்கு வருகிறது.ஆனாலும் இத்தனை வருடங்களாகப் பழகாமலிருந்து விட்டு எந்த உரிமையில் போவதென தயங்கினாலும், வேறு இடமில்லை.ஒரு நாள் முழுவதுமாக சைக்கிளை உருட்டியும் ஓடியும் மெதுமெதுவாக அவர்களின் வீட்டைத் தேடிக் கண்டு பிடித்தோம்.அவர்களின் ஆதரவான வரவேற்பு ஆறுதற்படுத்தியது.எங்களைப் போல இடம்பெயர்ந்து வந்து ஏற்கனவே மூன்று குடும்பங்கள் அங்கு தங்கியிருந்தனர். ஆனாலும் சற்றும் சலிப்பின்றி இங்கு தராளமாக இருக்கலாம் என இடமொன்று ஒதுக்கித்தந்தனர். ஒரு இடம் கிடைத்த மகிழ்ச்சி. பல நாட்களாகச் சோறில்லாமல் இருந்த எங்களுக்குக் குத்தரிசிச்சோறும் முயல் இறைச்சிக்குழம்பும் தீராப்பசியைத் தீர்த்தன.அது ஒரு போதும் உண்ணாத மிகச் சுவையான சாப்பாடாக ருசித்தது.

 

தர்மினி

 

http://thoomai.wordpress.com/2011/10/30/1995-ஆம்-ஆண்டு-ஒக்டோபர்-மாதம்/

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

எமது வாழ்நாளில் நடந்த, துயரங்கள் நிறைந்த துன்பியல் சம்பவங்கள் நிறைந்த காலம்!

 

விட்டுக்கொடுப்புக்களையும், மனிதாபிமானத்தையும், தியாகங்களையும், ஏன் சுயநலங்களையும் கூட, அடையாளம் காட்டிய காலம்!

 

இயலாதவர்களைக் கைவிட்டு, அவர்களின் நினைவுகளை மட்டுமே  சுமந்து நடந்த காலம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செத்தாலும் ஊரிலையே சாவது என்று அப்பா எடுத்த முடிவு. எனது 27 வருடத்தில் நான் இடம்பெயர்ந்து அறியேன்.

இந்தியன் ஆமி வந்த நேரம் வரணிக்கு இடம்பெயர்ந்து போனதாக அம்மா சொன்னா, ஆனால் என் ஞாபகப் பதிவுகளில் இல்லை.

1996 ஆமி வடமராட்சிக்கு வரும் போது புலமைப்பரிசில் பரீட்சை எழுதிக்கொண்டிருக்கிறோம்.

பக்கத்து வீட்டில் எல்லாம் பலர் போயும் எங்கள் சுற்று வட்டாரத்தில் பலர் இடம்பெயரவில்லை.

 

போனவர்களிலும் பலர் கிணறு வெட்டும் போது, காடு வெட்டும் போது என்று பல பிள்ளைகளை பறிகொடுத்து விட்டு வந்தது தான் மிச்சம். பயந்தது போல அப்போது யாழில் பெரிய அசம்பாவிதங்கள் நடந்ததாக நான் அறியேன். இராணுவ பிரசன்னம் அதிகம் இருந்தும், இயல்பு வாழ்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மரணத்துள் வாழ்தல் - யாழ்ப்பாண நாட்குறிப்புகள்

-முரண்வெளி கூட்டுக்கட்டுரை-நன்றி ஹரி இராசலெட்ச்சுமி...

‘எமனைக் கருவேந்தி மருளும் காற்றோடும்

எங்கள் அன்னையர் வயிற்று அக்கினி பெருக்கும்

தணலோடும்

கோடை வந்திறங்கிற்றெம் மண்மீது

மறுபடியும்

-தவ.சஜிதரன்-

‘Corpses have grown

And covered the land….’

‘Earth echoes with alien sounds

Stuttering riffles, weird moans –

And the harsh face of war

Fills the land with abomination’

-Ken Saro Wiwa, Songs in a time of war-

*

மல்ட்டி பரல் குண்டுகள் ஏவப்படும் சத்தத்தில் வீட்டுச் சுற்றுப் புறம் பலமாக அதிர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய ஷெல் சத்த மும்முரத்தைப் பார்த்தால் பிரிட்டோன் போட்டுத்தான் தூங்க வேண்டியிருக்கும் போலிருக்கிறது. இன்றைய நாளின் உள்வாங்கல்களை அலசியபடி அவற்றை கணினியில் பதிவு செய்து கொண்டிருகிறோம், கரண்ட் நின்று விட்டால் டைப் செய்ய முடியாது, தமிழில் டைப் செய்வதென்றால் நாம் அந்த இடத்திலிருந்து விலகி விடவே விரும்புவோம், பௌசரது வேண்டுகோளைப் புறக்கணிக்கவும் முடியாது. விவாதித்து திருத்தங்களையும் சேர்ப்புகளையும் செய்வதற்கு நேரம் கிடையாது. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு வேலைப் பளு. சிதறல்களாய் எழுதியிருந்தவற்றை மீள்-ஒழுங்கு செய்ய வேண்டும். அது ஒரு நீண்ட தலைவலியைக் கொடுக்கும் வேலை. இன்று பத்து மணியளவில் தான் நண்பரொருவர் ஃபோன் செய்து வவுனியாவில் 5மாணவர்கள் கதறக் கதறச் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வை நடுங்கும் குரலுடனும் விபரித்தார். பதிலளித்த தோழரின் பதில் இவ்வாறு அமைந்தது 'ஆ, அப்பிடியே நாங்கள் இன்னும் நியுhஸ் கேக்கேல்ல.. எத்தினை மணிக்கி நடந்தது?” ஃபோனில் கதைத்த நண்பர் அதிர்ந்து போனாராம். உடைந்த கம்மிய அவரது குரலுக்குப் பதிலாக தோழரது சலிப்புக் கூடிய கவலையற்ற குரலும் பதட்டமின்மையும் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும். என்ன செய்வது இதெல்லாம் கொடூரம் என்ற நிலையிலிருந்து சாதாரண நிகழ்வுகளாக மாறி நாட்களாகின்றன என்பதை எப்படி விளங்கும் வகையில் கூறுவது?

---

ஓகஸ்ட் 11ம் திகதி வெள்ளிக்கிழமை பின்னேரம் நாங்கள் நல்லூர் ஆலயச் சூழலில் உள்ள உணவு விடுதி ஒன்றில் இருந்தோம். நல்லூர் திருவிழா என்பதால் அச்சூழலில் பெரிதும் அச்சமின்றித் திரியலாம் என்கிற நிலை காணப்பட்டது. பல நாட்கள் வீடுகளுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்க வேண்டி இருந்த பலருக்கு நல்லூரின் மாலைப்பொழுதுகள் அரிய சந்தர்ப்பமாக இருந்தன. 6.30 மணியளவிலேயே ஷெல் சத்தங்கள் கேட்கத் தொடங்கியிருந்தன. கிளைமோர்களும், கிரனேட்டுகளும் சர்வ சாதரணமாகி விட்டதால் பலரும் ஆரம்பத்தில் ஷெல் சத்தத்தை கிளைமோர் அல்லது கிரனேட் தாக்குதல் அருகில் எங்கேயோ நடந்ததாய் கூறிச் சமாதானப் பட்டுக்கொண்டார்கள். சண்டை தொடங்கி விட்டது என்பதை நம்ப யாருமே தயாராயிருக்கவில்லை. நல்லூர் முடியும் வரைக்கும் எவனும் எதுவும் செய்யமாட்டாங்கள் என்ற அசட்டு நம்பிக்கை மக்கள் மனதில் பெருமளவில் இருந்தது. அதைவிட, மறுநாள் சனிக்கிழமை புலமைப் பரிசில் பரீட்சை நடக்க ஏற்பாடாகியிருந்தது. கல்விச்செயற்பாடுகளைக் குழப்புவதில் இருதரப்புமே ஏற்கனவே தேவையானளவு கெட்ட பேரைச் சம்பாதித்திருந்தன. ஆகவே புலமைப் பரிசிலுக்கு இடையுhறு விளைவிக்க இருதரப்புமே -முக்கியமாக விடுதலைப் புலிகள்- விரும்பார்கள் என்றொரு நம்பிக்கையும் மக்கள் மத்தியில் இருந்தது.

ஷெல் சத்தங்களும், ஹெலிகளின் தொடர் உலாவுகையும் போர் தொடங்கிவிட்டதை உறுதி செய்தன. அனைவரும் அச்சத்துடன் எதிர்பார்த்திருந்த யுத்தம் இறுதியாகத் தொடங்கி விட்டது என்பதை மிகச் சோர்வுடன் மெல்ல மெல்ல உணர்ந்தோம். அன்றிரவு மின்சாரம் சிறுது நேரத்திடன் நின்றுவிட்டது. கைத்தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன. யாரும் யாருடனும் தொடர்புற முடியாத நிலை தோன்றியிருந்தது. தனியார் பண்பலை வானொலிகள் இயங்கவில்லை. பொய்யைத் தவிர வேறெதுவும் சொல்லியறியாத இலங்கை வானொலியின் யாழ்சேவை மாத்திரம் 'மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஊரடங்கு அமுல்படுத்தப் பட்டிருப்பதாக' யாழ் படைத் தலமையகத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி 15 நிமிடங்களுக்கு ஒரு தடவை அலறிக் கொண்டிருந்தது.

யாருமே தயாராயிருக்கவில்லை. மண்ணெண்ணையோ மெழுகுதிரிகளோ பற்றறிகளோ அற்ற நிலையில் அன்றைய இரவு இருளில் கழிந்தது. அயலில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பல்கலைக் கழக மாணவர்கள் மிகவும் பயந்து போயிருந்தனர். எல்லோரும் ஒன்றாக முன்முற்றத்து பெஞ்சுகளில் கூடியிருந்து கதைத்தவாறேயிருந்தோம். யாருமே உறங்குவதற்ற்குத் தயாராயிருக்கவில்லை. தாம் எப்படி உயிரோடு வீடு போய்ச்சேருவது என்பது அவர்களுடைய பெருங்கேள்வியாக இருந்தது.

மறுநாள் காலையும் ஊரடங்கு தளார்த்தப் படவில்லை. மின்சாரம் இல்லாததால் தண்ணீர்த் தாங்கிகளில் நீர் நிரப்பிக் கொள்ள முடியவில்லை. குளிப்பதற்காக கிணற்றடிகளில் லைன் போடவேண்டியிருந்தது. யாழ்ப்பாணத்தில் பல இடங்கள் பங்குக் கிணறுகள் தான். கிணற்றடிச் சண்டைகள் பெரிய பிரச்சனையாக மாறிவிட்டன. பல்கலைக் கழக மாணவர்களுக்கு உணவு ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கப் போகிறது. ஒன்பது மணியளவில் இராணுவப்பிரசன்னம் அற்ற உள்வீதிக் கடைகளில் ஒற்றைக்கதவு-வியாபாரம் நடப்பதாக செய்தியறிந்து எல்லோரும் ஆளுக்கொரு பைகளை எடுத்துக்கொண்டு கடைகளை நோக்கி படையெடுத்தோம். மெழுகுதிரி, அரிசி, பால்மா, சீனி, பருப்பு, சோயாமீற் போன்ற பொருட்கள் சற்று விலை கூட்டப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விற்கப்பட்டன. பல்கலைக் கழக மாணவர்களது கைகளில் நிறைய நூடில்ஸ் பாக்கெட்டுகளையும் சமபோஷ பாக்கட்டுகளையும் கண்டேன். சமபோஷவுடன் தண்ணீரை முண்டி விழுங்குவதாக அவர்கள் கூறியபோது என்னவோ செய்தது.

அடுத்தடுத்த நாட்களில் ஊரடங்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தளர்த்தப் பட்டிருப்பதாய் யாழ் சேவை அறிவித்ததும் வீடுகள் வெறிச்சோடின. அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேகரம் பண்ணி விட வேண்டுமென்கிற அந்தரம் மக்களை சிடுமூஞ்சிகளாகவும் சண்டைக்காரர்களாகவும் மாற்றி விட்டிருந்தது. அனைவரினதும் கால்களில் சக்கரங்கள் முளைத்திருந்தன. பனடோல் கார்ட்டுகள், மா, சீனி பருப்பு எனப் பொருட்களை வாங்கிக் குவிப்பதற்கு மத்திய தர வர்க்கத்துக்கு இயலுமாயிருந்தது. எங்கு பார்த்தாலும் கியுh. மீண்டும் கியூ வாழ்க்கை எம்மீது திணிக்கப் பட்டிருப்பதை வெறுப்புடன் உணரவேண்டியிருந்தது. கம்பி வழித் தொலைபேசி இணைப்புகள் ஓரளவுக்கு சீர் செய்யப் பட்டதும், தொலைபேசி அழைப்புகளை எற்படுத்துவதும் பெற்றுக்கொள்வதற்கும் மக்கள் பட்ட பாடு சொல்லி மாளாது. 'உங்கட பக்கம் எப்பிடி?” விசாரிப்புகளுக்கு மேலாக தவறிப்போய் வன்னியிலும் வவுனியாவிலும் கொழும்பிலும் சிக்கிக் கொண்ட உறவினர்களுக்கு தொலைபேசி செய்வதற்கு அரும்பாடு படவேண்டியிருந்தது.

எனது அயலவர்களில் ஒருவரது அப்பா கிளிநொச்சிக்கு சென்றிருந்தார். அக்குடும்பத்தினர் 2001 யுத்ததில் தென்மராட்சிப் பக்கமிருந்து துரத்தப் பட்டு இங்கு வந்து குடியேறி, பின்னர் கல்வித் தேவைகளுக்காக தங்கிவிட்டவர்கள். தகப்பனும் மகளும் மாத்திரம் தான். தாயார் 90களின் ஷெல் வீச்சு ஒன்றில் கொல்லப் பட்டிருந்தார். தந்தையார் திடீரென ஏ-9 மூடப்பட்டதால் யாழ் திரும்பமுடியாத நிலையிலிருந்தார். அவரது மகள் அவ்வீட்டில் தனியாக இருந்தார். முதல் ஊரடங்கு இரவின் போது அந்தப் பெண் எங்கள் வீட்டில் தான் தங்கியிருந்தார். தனது தந்தை எவ்வாறெல்லாம் கஷ்டப்படக்கூடும் என்பது பற்றிய மிகக் கொடூரமான ஊகங்களை வெளியிட்டுக்கொண்டிருந்தார். அவருடைய தந்தை நீரிழிவு நோயால் அவதிப் படுபவராம். ஆஸ்த்துமா வேறாம். ‘ஒவ்வொரு நாளும் 7 குளிசைகள் இன்றி உயிர்வாழ முடியாதவர், எப்படி றெயினிங் எடுக்கப் போப்போறாரோ தெரியேல்லை……………………. (தணிக்கை). அவரை எங்களுடன் வந்து விடும்படி கூற அம்மா தயாராயிருக்கவில்லை. 'தேத்தண்ணிக்கு மா இல்லை, புட்டுக்கு மாவில்லை” என்கிற கணக்கில் சாக்குக் கூறினாள். அடுத்த நாள் இரவு அம்மா பிளாஸ்க்கினுள் தேனீரும் உணவுப் பொதியுடனும் அவ்வீடு சென்று தங்கி விடியற்காலமை வந்து முழுகினாள். அடுத்தடுத இரவுகளில் வேறு சில அயல் பெண்கள் உணவுப் பார்சலுடனும் பிளாஸ்குடனும் அங்கு சென்று வந்து கொண்டிருந்தனர். பிளாஸ்குகளுக்கான காரணம் அம்மா முழுகுவதில் தெரிந்தது. மிகவும் அசிங்கமாய் உணர்ந்தேன். (சாதி தெரியாது, கதையைப் பாத்தா எங்கட ஆள் மாரித்தான் தெரியுது, நல்ல பெட்டை ஆனா எத்தினையாம் செம்போ எங்கெங்க கலப்போ ஆர் கண்டது? இந்த நேரம் கேக்கவும் ஏலா..)

யாழ்ப்பாணத்தின் சாதி அமைப்பின் கோர முகத்தையும் மத்தியதர முதலாளித்துவ மனப்பாங்கையும் நான் இன்னொருமுறை கண்டு அதிர நேர்ந்தது பல்கலைக் கழகத்தில். அவர் விரிவுரையாளர். அனுபவமுள்ளவர். பலவழிகளிலும் மார்க்ஸிஸ்ட்டாக தன்னைப் பாவனை பண்ணிக் கொள்ள முனைபவர். அவர் கூறினார் 'இந்த என்.ஜி.ஓ அறுவாங்களால தான் தங்கச்சி இவ்வளாவும்.., இவங்கள் வேணுமெண்டே செயற்கைத் தட்டுப் பாட்டை எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறாங்கள். அகதிச் சனத்துக்கு தேவைப்படுமெண்டு எல்லா அத்தியாவசியப் பொருட்களையும் அவங்கள் கொள்வனவு செய்ததால தான் எங்களுக்கு இந்தக் கெதி.” (நாம் இங்கு என்,ஜி.ஓவினை நியாயப்படுத்தவில்லை, ஆனால் அவை இல்லாவிடின் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை இன்னும் மோசமாகவிருந்திருக்கும். ஆனால் விரிவுரையாளர்களும் உயர்பதவிகளுலிருப்போரும் தமது சுருட்டிக் கட்டி எடுத்த பண வலுவினைப் பயன் படுத்தி இன்னும் நன்றாய் குளிர்காய முடிந்திருக்கும்.) உயர் பதவிகளில் இருப்போரில் ஒரு சில விதி விலக்குகளைத் தவிர அனைவருக்கும் இக்காலப் பகுதி ஓர் சிறந்த விடுமுறையாகக் கழிந்து கொண்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு வடக்கில் நிலவவில்லை என்று தனது முட்டாள்தனமான பொய்யை திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருக்கும் அரசை விட அபாயகரமான நபர்கள் இவர்கள். இந்த நபர்களுக்காகத் தான், யாழ் மின்சார சபை கிரிக்கெட் மச் நேரங்களில் மின் வழங்கி உதவி செய்தது, பரீட்சை எதிர் நோக்கும் ஏழை மாணவர்களின் நிலை பற்றிக் கவலைகள் ஏதுமற்று.... (ஆதாரம்: உதயன் பத்திரிக்கை செய்தியும் ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல் ஒன்றும்)

ஊரடங்கு மட்டுப்படுத்தப் பட்ட அளவில் தளர்த்தப் பட்ட போது 15-40 வயதுக்குழுமத்து ஆண்கள் தவிர்ந்த அனைவரும் கியுhக்களில் நின்றனர். மா கையிருப்புத் தீர்ந்து போன குடும்பங்களில் பெரிய இடர் நிலவியது. பல குழந்தைகளாலும் சிறுவர்களாலும் திணிக்கப் படும் புதிய சூழ் நிலையை சீரணிக்க முடியவில்லை. அவர்கள் தொடர்ந்து அழுது கொண்டுதானிருக்கின்றனர். ஏன், எதுக்காக என்ற அவர்களது கேள்விகளுக்கு எந்த ஒரு அரசியல் தலமையாலும் பதிலிறுக்க முடியுமென நான் நம்பவில்லை. எனது வீட்டிலும் ஏழு கிலோ மாவே மீதமிருந்தது. பாண் வாங்குவதற்காக ஆறு மணிக்கு ஊரடங்கு தளர்த்தப் பட்ட சில நிமிடங்களிலேயே அம்மா பேக்கரி வாசலுக்கு சென்று விடுவாள். அவ்வாறு சென்றே எழாம் எட்டாம் ஆளாகத்தான் வரிசையில் இடம் கிடைக்கிறது என்று அலுத்துக் கொள்வாள். ஏழு மணி அளவில் தான் பாண் வினியோகம் ஆரம்பமாகும். பல வீடுகளில் காலைச் சாப்பாடு பத்து மணிக்குத்தான். பாடசாலை செல்லும் பிள்ளையொன்றின் கதியை இங்கு நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். கப்பலில் பொருட்கள் அனுப்பப் படுவதற்கு முன், ‘அங்கு பாண் கொடுக்கிறார்களாம் இங்கு பாண் கொடுக்கிறார்களாம்’ என்று பல மைல்கள் நடந்து சென்று பாண் இல்லை என்ற அறிவிப்புப் பலகையைப் பார்த்து ஏமாற்றத்துடன் மக்கள் திரும்பினார்கள்.

பனங்கட்டியுடன் பிளேன் ரீ குடிப்பதற்கும் வெறும் பிளேன் ரீ குடிப்பதற்கும் பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் என அம்மா கூறினாள். ஏற்கனவே எனது தேனீரிலும் மாற்றம் தெரியத் தொடங்கியிருந்தது. நெஸ்கஃபேக் குப் பதிலாக சங்கம் கொடுத்த ஏதோ ஒன்றை மாஞ்சருகுப் புகை மணத்துடன் விழுங்க வேண்டியிருந்தது (காஸ் தீர்ந்து நாளாகிறது). வெதுப்பகங்களில் தரும் பாண் வேகாமல் பச்சையாய் இருந்தது. ரோஸ்டர் இருந்தால் தப்பித்தேன். எனக்கு இவற்றைப் பாவித்து உண்ணுகையில் பெரும் சஞ்சலமாகவும் ஏதோ குற்றத்தைச் செய்வது போலவும் இருக்கிறது. மரக்கறிகளை மெலிதாக அவித்து உப்பும் சோஸ்உம் சேர்த்து மதிய உணவை முடித்துக் கொள்ளும் எனக்கு அதிக சிக்கல் கள் இருக்கவில்லை. ஆனால், மீன் முட்டையின்றி உணவு உள்ளிறங்காத பல நண்பர்கள் மிகவும் அவதிப் பட்டுக் கொண்டிருந்தனர்.

சவர்க்காரங்களுக்கும் டிடர்ஜன்ட் தூள்களுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. விலை எகிறிக் கொண்டேயிருக்கிறது. அவற்றில் எதையாவது ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் வாங்கி விடுவது பெரிய சாகச நிகழ்வு போல மாலை நேர சந்திப்புகளில் அம்மாமார்களால் அலசப் படும். இவ்வாறே மத்திய தர மற்றும் உயர்தர வகுப்பின் பிரச்சனைகள் ஒப்பீட்டளவில் சிக்கலற்று இலகுவில் கடந்து போகக்கூடியதாக காணப்படுகின்றன. மத்திய வர்க்க மக்களுடைய சிக்கல்களையும் துலங்கல்களையும் அறிந்து கொள்ளமுடிந்தாலும் விளிம்பு நிலை மக்கள் குறித்து நாம் என்னத்தை தெரிந்துவைத்திருக்கிறோம் என்ற கேள்வி எம்மைக் கொன்று கொண்டிருந்தது. போர் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய புரிதலை எமக்குள் சரியாக ஏற்படுத்தி கொள்வதற்கான எத்தனிப்பின் ஒரு பகுதியாகவும் குற்றவுணர்விலிருந்து விடுபடுவதற்காகவும் நாம் இடைத்தங்கல் முகாமொன்றுக்கு செல்ல முடிவெடுத்தோம்.

-------

அல்லைப்பிட்டியின் கண்ணீரும் குருதியும் ஓகஸ்ட் 11க்கு சற்று முன்பு தான் சர்வதேச ஊடகங்களில் இடம்பிடித்திருந்தது. அவற்றின் ஈரம் காய்வதற்குள்ளாகவே மீண்டுமொருமுறை அம்மக்கள் தமது நிலத்தில் இருந்து பிடுங்கியெறியப்பட்ட கோரம் நிகழ்ந்திருந்தது.. மண்டைதீவு அல்லைப்பிட்டி மற்றும் பாஷையுhர் ஆகிய இடங்களிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட மக்கள் தஞ்சம் புகுந்திருந்த இடம்தான் ஓ.எல்.ஆர் தேவாலய இடைத் தங்கல் முகாம். 61 குடும்பங்கள் 324 பேர், சிறிய மண்டபமொன்றில்.

நாம் அங்கு சென்ற காலை மழை பெய்து ஓய்ந்திருந்தது. அந்த மக்கள் யாருமே எங்களுடன் கதைப்பதற்குத் தயாராக இல்லை என்பதற்கு மேலாக அவர்களுடன் கதைக்க நாம் மிகவும் பயந்து கொண்டிருந்தோம். தலையில், கையில், எதிர்ப்படும் ஒவ்வொருவருமே மருந்துக் கட்டுகளோடிருந்தார்கள். மூக்குச் சளி வழிய வழிய கெந்தித் தட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்குழாம் ஒன்றுடனேயே எம்மால் தொடர்புற முடிந்தது. உடுப்புகள் காய்ந்து கொண்டிருந்தன. ஒருவித துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தது. எந்த ஒரு கணத்திலும் முகஞ்சுழிக்கக் கூடாது என்பதில் கவனமாயிருந்தோம். தேங்கியிருந்த மழைநீரின் நடுவில் நாய் மலம். (நண்பி சேலையை நிலத்தில் முட்டவிடாது உயர்த்திப் பிடிக்க வேண்டியதாயிற்று. எனது டெனிம் ஜீன்ஸ் பற்றி நான் கவலைப் பட ஆரம்பித்திருந்தேன். என்ன செய்வது..எவ்வளவு தான் முயன்றாலும் கொள்கைகளுக்கு விசுவாசமாய் இருக்க முடிவதில்லை பல நேரங்களில். பலரும் இதை எதிர்கொள்கிறார்களா இல்லையா என்று ஒரே குழப்பமாகவிருக்கிறது.)

நீண்ட ஹோல், 64 குடும்பங்கள். துணிகளைக் கட்டி மறைப்புகளை ஏற்படுத்தியிருந்தார்கள். அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று பிறிம்பாக சமைக்குமிடத்தை அமைத்துக் கொடுத்திருந்தது. குறிப்பேடுகளை மறந்தும் தொடுவதில்லையென முன்கூட்டியே முடிவெடுத்திருந்தோம். அங்கு நின்றிருந்த சிறுவர்களிடம் பேச்சுக் கொடுத்தோம். அவர்களில் சிலர் தாயை, தந்தையை, சகோதரர்களை அல்லது ஒருசேர அனைவரையுமே பறிகொடுத்தவர்கள். அவர்களுடன் எதைப் பேச, சிறுவர்களின் அனர்த்த நிவாரண சிகிச்சை அரங்குகள் குறித்து நாம் கற்ற எவையுமே உதவவில்லை. உளவியலைத் தூக்கி குப்பையில் எறிந்துவிடலாமா என்றிருந்தது... எங்களில் சிலருக்கு இருந்த முன்முடிவுகளுக்கு அதிர்ச்சியுhட்டும் விதத்தில் அச் சிறுவர்கள் கெந்தித் தட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். தமக்கு நடந்தவற்றை ஒரு சாகசக் கதை போல விவரிக்குமளவுக்கு யுத்தத்திற்கு அவர்கள் இசைவாக்கமடைந்திருப்பது உண்மையிலேயே அதிர்ச்சியூட்டுகிறது.

கல் பணிஸ் பாக்கெட்டுகளை வாங்கி 6 உள்ள சிறிய பொட்டலங்களாக அவற்றைப் பிரித்துப் பாக் செய்து கொண்டு மறுநாள் காலை 10 மணிக்கு மீண்டும் அங்கு சென்றோம். எமக்கு அல்லைப்பிட்டியைச் சேர்ந்த ஒரு மாணவனுடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. அம்மாணவன் இந்த மார்கழியில் ஒ.எல் பரீட்சை எழுத இருப்பவர். பதிவு செய்யப்பட்டு பின் வெட்கத்துடன் எம்மால் தணிக்கை செய்யப் பட்ட பகுதிகள் நீங்கலாக அவரது உரையாடல் பின்வருமாறு:

“நாங்கள் இஞ்சை வரேக்கை இந்த ஃபாதரும் தொண்டு நிறுவனங்களும் நல்லாத்தான் கவனிச்சவை. வேள்ட் விசன் கிட்டடில இருகிறதாலை பரவால்லை..தொடக்கத்தில சமைச்ச சாப்பாடு தந்தாங்கள்..போட்டோ எடுத்திச்சினை. பிறகு ஒண்டையும் காணேல்லை. இப்ப நாம தான் சமைக்கிறது.. சமைக்கிறதுக்கு பிறம்பா இடம் போட்டுத் தந்திருக்கிறாங்கள்..

முந்திக் கொஞ்ச நாள் ஃபிரீயாச் சாமான் தந்தாங்கள்.. இப்ப நிலமை தலை கீழ். கோப்பிரட்டியில காசுக்குத்தான் சாமான் தந்தவை - அல்லைப்பிட்டிச் சனங்கள் எண்டு தெரிஞ்சும்.

'.........'

'இல்லை.. பிறகு ஆராரோவெல்லாம் போய் கதைச்சு ஒருமாரி பில்லைக் கொண்டு வந்தால் காசு திருப்பித் தாறம் எண்டாங்கள். ஒண்டுமே இல்லாம வந்திருக்கிறம் இவேன்ர பில்லையே காப்பாத்தி வச்சிருக்கி.. (பதிவில் தடங்கல்) பில்லையே காப்பாத்தி வச்சிருக்கிறம்...ஆ. பிறகு ஒருமாரி காசு தந்தாங்கள்..ஒரே அலைச்சல்"

இஞ்சை கரையூர்ச் சனங்களும் தீவிலருந்து வந்த நாங்களும் இருக்கிறம். இரவில ஒரே நுளம்பு. இப்பான் கொஞ்ச நாள் முந்தி நுளம்பு நெற்று தந்தாங்கள். ஆம்பிளையள் எல்லாம் அந்த மேடையிலதான் படுக்கிறது. ஒண்டுக்கு இரண்டுக்குப் போறதெண்டதுதான் பிரச்சனை.

பெம்பிளையளும் பிளையளும் ஏலாவாளியளும் தான் பாவம். அங்கை பாருங்கோ.. அந்த அம்மா செத்துப் போச்சுதெண்டா நல்லது... ஒரு பிரச்சனையும் இல்லை.. பிள்ளை போட்டுது. ஆள் தனிக்கட்டையாப் போனா காட்டியிருக்கிற சாறன் கூட நான் குடுத்து ஒரு அன்ரா கட்டிவிட்டதுதான்.

எல்லாத் தொண்டர் நிறுவனக்களுமே சாமான் தர வந்தாலும் எங்களுகுள்ள அடிபிடியளப் பாத்திட்டு திரும்பிப் போட்றாங்கள். உம்மையில, நாங்களும் (அல்லைப்பிட்டி) மண்ண்டைதீவுச் சனமுந்தான் உடுத்த உடுப்போட ஓடி வந்த சீவன்கள். கரையூர்க் காரரைக் கர்த்தர் காப்பாத்திப் போட்டார். அவைக்கு சாமான் சக்கட்டுகளோட எழும்புறதுக்கு நேரமிருந்தது. எங்களுக்குத்தாறதெல்லாம் தங்களுக்கும் தா எண்டு அவங்களோட மல்லுக் கட்டி ஏலுமே.. எல்லாரும் அடிபடுங்கோ எண்டு விட்டிட்டாங்கள் போல.. பின்னேரங்கள்ள ஊருக்குள்ளால போய்க் கசிப்படிக்கிறது தான் இஞ்ச கொஞ்சத்துக்கு வேலை.. குடிச்சிட்டு வந்தா ஒரே தூஷணமும் கத்துப்படுகையுந்தான்.

ஃபாதருக்கும் பிடிப்பு விட்டுப் போச்சு, எங்களைக் கலைச்சாக் காணும் எண்ட பொசிசனில தான் ஆள் இப்ப..

பள்ளிக்கூடம் ஒரு நரகமண்ணை.. என்ர தம்பி--ஆள் கொஞ்சம் உருளை-- இப்ப மெலிஞ்சு போனான். காச்சட்டை வழுகி விழுது. பள்ளிக் கூடத்தில வாத்தி எழுப்பிக் கேட்டானாம் “என்னடா தோப்ளாஸ் வீட்டில பட்டினியே?" எண்டு. இவன் தான் முகாமில இருக்கிறதைச் சொன்னகொண்ண எல்லாப் பெடியளும் திரும்பிப் பாத்தாங்களாம். ஆள் வீட்ட வந்து பள்ளிக்கூடம் போமாட்டன் எண்டு ஒரே சிணுக்கம். நான் முகாமில இருகிறதை பள்ளிக் கூடத்தில சொல்லேல்லை. சேர் மார் கேட்டிச்சினம் முகாம் பிள்ளையள் கையுயத்துங்கோ எண்டு.. நான் உயத்தேல்லை. என்ர இடம் அல்லைப்பிட்டி எண்டு மிஸ்ஸ்உக்குத் தெரியும்.. மிஸ் கேக்க நான் சொந்தக் காரர் வீட்டில இருக்கிறதாச் சொல்லிப் போட்டன். எனக்கு பேரை பதிவமெண்டும் சாதுவா ஆசை.. எதுவாவது தருவினை.. சரியா அந்தரப் பட்டுட்டன்.. (கண் கலங்குகிறது.)

இங்கிலிசைத் தவிர எல்லாப் பாடத்துக்கும் 60க்கு மேல எடுப்பனண்ணை. ஸயன்ஸ் நல்லச் செய்வன். சேர் ஏயில பாஸ் பண்ணுவன் எண்டு சொன்னவர். இப்ப பயமாயிருக்கண்ணை. அப்பிளிக்கேசன் போட்டாச்சு. மெடிகல் குடுப்பமோ எண்டும் யோசிச்சன். அப்பா கத்துவார். காலம் பிந்தப் பிந்தப் படிப்புச் செலவு கூடுமாம். ஓடேக்க அப்பா முதல்ல கட்டித் தூக்கினது தம்பீன்ரயும் என்ரயும் புத்தகங்களைத் தான். எல்லாம் மறந்து போச்சு இஞ்சை இருந்து படிக்கேலா.. பேர்சனல் கிளாசுக்கு கன பெடியள் போறவங்கள்.. நாங்கள் கஞ்சிக்கே வழியில்லாமல் இருக்கிறம்.. இரவில கரண்ட் பத்து மணி மட்டும் தான். அதுக்கையும் இஞ்சை பெரிசுகள் லைட்ட நூர் நித்திரை கொள்ளோணும் எண்ணுங்கள்;: லைட் சுவிச்சை வேள்ட் விசன் கன்ரோல் பண்ணுறதால ஒருமாரிப் படிக்கலாம். சத்தியமா உங்களுக்கு விளங்குமோ என்னவோ, என்னால இந்தச் சோதினை பாஸ் பண்ணேலா.. இண்டைக்கு எண்ட இங்கிலிசு வாத்தி சொன்னான் படிப்பில கள்ளம் வந்துட்டுதாம்.. மீசை எங்கெங்கயோ முளைக்க படிப்பும் எங்கெங்கயோ பறக்குதாம்..

நம்புறியளோ தெரியா, பச்சைத் தண்ணி பல்லில படாமத் தான் பள்ளிக்கூடம் போறது. ஒருமாரி பள்ளிகூடத்துக்குப் போனா இரண்டாம் பாடமே பசிக்கத் தொடங்கீடும். இன்டேவலுக்கு மற்றப் பொடியள் சாப்பாடு கொண்டாறவங்கள். நான் வகுப்புக்கை இருந்தா தந்திடுவாங்கள் எண்டு நூலகத்துக்குப் போயிடுவன். சில நேரம் உப்புத்தூள் பிரட்டின மாங்காய் வாங்கிச் சாப்பிடுவன். இன்ரேவல் முடியத் தான் வகுப்புக்கை வாறது.”

மாணவன் மிகவும் கலங்கிக் கொண்டிருந்தார். அவரிடம் இவ்வாறு துருவுவது பற்றி எமக்குள் பல கருத்து வேறுபாடுகள் இருந்தன, ஆனால் அம்மாணவன் கதைக்க கதைக்க அவரிடம், உரையாடுதலுக்கான ஆர்வம் இருப்பதையும் உரையாடலின் போது அவரது மன இறுக்கம் மெல்ல மெல்ல தளர்வதையும் உணர முடிந்தது. உளவளத்துணையாளர்களின் பங்களிப்பு மிகவும் தேவைப்படுகின்ற நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையோ வேறு பொறுப்புக் கூறவேண்டிய இடங்களோ இதற்கான ஏற்பாடுகளை திருப்தியளிக்கும் வகையில் செய்ததில்லை. ஏதோ ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் சிறுவர்களை ஞாயிற்றுக் கிழமைகளில் விளையாட்டுக்களிலும் அரங்கச் செயற்பாடுகளிலும் ஈடுபடுத்துகிறது. அதுதவிர வேறெந்த உருப்படியான முயற்சிகளும் இல்லை.

தமது சுற்றங்களை இழந்து வந்திருப்போரிடம் கதைத்த போது அவர்களால் கைவிடப்பட்டு அழுக அழுக கவனிப்பாரற்று சிதைந்து இறுதியில் தமது சமயாசாரங்களுக்கு முரணான முறையில் எரியுhட்டப் பட்ட அந்த பாவப்பட்ட உயிர்கள் குறித்த குற்றவுணர்வு மனச்சிதைவின் எல்லைக்கு இட்டுச் செல்லும் அளவிற்கு ஊறியிருந்ததை அறிய முடிந்தது. (அல்லைப்பிட்டி உள்ளிட்ட தீவுப்பகுதிகளில் இருந்து மக்கள் துரத்தப்பட்ட போது கொல்லப்பட்ட உடலங்களைக் கொண்டுசெல்ல இயலவில்லை. அந்த உடலங்களை அடக்கம் செய்வதற்காக பலமுறை படைத்தலைமையகத்திடம் விண்ணப்பித்தும் எந்தப் பலனும் இல்லை. இறுதியில் மாவட்ட நீதிபதியினதும் உயர்மட்டத்தினதும் தலையீட்டால் அழுகிச் சிதம்பிய அச் சடலங்கள் பெறப்பட்டு எரியுhட்டப்பட்டன)

முகாமில் தங்கியிருக்கும் ஒன்றிரண்டு சைவக் குடும்பங்கள் தமது சமய கலாச்சார வழக்காறுகள் தொடர்பில் பல சிக்கல்களை எதிர் கொள்கின்றன.

ஓ.எல்.ஆர் தேவாலயம் இளைஞர் கழகத்தால் ஆளப்படுகிறது. கோயில் நிர்வாகம் இந்த அமைப்பின் மூலமாகவே அகதிகளுக்கு இடைஞ்சல் தந்து வெளியேற்ற முயற்சிக்கிறது. செபமாலை வழிபாடுகளின் போது கிணற்றடியைப் பாவிப்பதும் கழிவறையை பாவிப்பதும் இந்த அமைப்பினால் தடை செய்யப் பட்டிருக்கின்றன. குழந்தைகள் பெண்களும் இத்தடைக்கு உட்பட்டவர்களே. விதி விலக்குகள் கிடையா... ஒருமுறை இளம் பெண்ணொருவர் செபமாலை நேரத்தின் போது கிணத்தடியைப் பாவித்தமைக்காக கடுமையான தொனியில் எச்சரிக்கப் பட்டாராம். (வாளியைப் பறித்து வீசியதாகவும் கூறுகிறார்கள்) தீவகம் ஈ.பி.டீ.பீ அமைச்சின் கோட்டை என குறிப்பிடப் படுவது வழக்கம். ஈ.பீ.டீ.பீ யின் மீது அதிருப்தி கொண்டிருப்பவர்கள் அனைவரினதும் ஏச்சுக்களுக்கு இலக்கு இந்த அகதிகளே. இவர்கள் மீது உள்ளூர் வாசிகள் அடிக்கும் கேலி கிண்டல்களில் இந்த அமைப்பின் பெயரும் இழுபடுவது வழக்கம் என்பதால் இவர்கள் தொடர்ந்தும் மரணபீதியிலேயே இருக்க வேண்டிய நிலை. போதாக் குறைக்கு ஜிம் பிரௌண் அடிகளாரைத் தேடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களென சிப்பாய்களின் கோபக் கண்ணும் இவர்கள் மீது உண்டு. கோயில் நிர்வாகத்துக்கும் அகதிகளுக்கும் இடையிலான முரண்பாட்டில் முக்கிய பங்கு வகிப்பது மதப்பிரிவுகளே என்ற கருத்தும் நிலவுகிறது (ரோமன் கத்தோலிக்கம் எதிர் அ-ரோமன் கத்தோலிக்க மதப் பிரிவுகள்) யு.என்.எச்.சி.ஆர் அமைப்பு தற்காலிக சமையல் கூடமொன்றை அமைத்துக் கொடுக்க முன்வந்த போது கோயில் நிர்வாகம் அந்த திட்டத்தை அங்கீகரிக்கவில்லை. 

பெரிய கொடுமை என்னவெனில், அகதிகளான பெண்பிள்ளைகளைச் சீண்டவென வரும் நகர இளைஞர் கூட்டம் நேரடியாக சமையல் கூடத்துக்குச் சென்று அடுப்பு நெருப்பிலிருந்து சிகரெட் பற்ற வைக்கிறது. கோவில் நிர்வாகம் இது குறித்து அலட்டிக் கொள்வதில்லை. அகதிகளுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கும் விடயத்தில் தேவாலய நிர்வாகம் மிக வெளிப்படையாகவே தலையிடுகிறது. தொண்டு நிறுவனங்கள் வழங்கும் பொருட்களைப் பெற்று பங்கீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மதப்பிரிவு ரீதியான பாகுபாடு பங்கீட்டு நடவடிக்கையின் போது இடம்பெறுகிறது. இதை ஒருவாறு அறிந்து கொண்ட தொண்டு நிறுவனங்கள் தேவாலயத்துக்கு வெளியே வாகனங்களை நிறுத்தி அகதிகளை வெளியில் அழைத்து பொருட்களை பங்கீட்டு விநியோகம் செய்கின்றன.

13-08-2006 இங்கு வந்த இவர்களுக்கு இந்தக் கட்டுரையை மின் அஞ்சல் செய்;யும் விசையை சொடுக்கும் கணம் வரை (22-11-2006 காலை9.30மணி) எந்த மாற்று ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப் படவில்லை. குறித்த இடமொன்றில் 20 குடும்பங்களுக்கென ஒதுக்கப் பட்டுள்ள நிலப்பகுதியில் அமைக்கப் படவிருக்கும் வீடுகளாவது பெருமழைக் காலம் தொடங்குவதற்கு முன்பாக அவர்களிடம் கையளிக்கப் படுமா என்பதும் சந்தேகமே.

இடைத்தங்கல் முகாமின் பிம்பங்கள் என்னுள் மிகுந்த குற்றவுணர்வை ஏற்படுத்தும் வகையில் பதிந்து போயிருந்தன. பிளேன்ரீ டம்ளர் சரிந்து கிடக்க, பரட்டைத் தலையில் எறும்பூர உதடுகளில் இலையான் மொய்க்கும் பிரக்ஞையே அற்று உட்கார்ந்து எம்மை வெறித்த பெண்மணியை என்னால் எப்படி மறக்க முடியும்?

அன்றிரவு தூங்க முடியாதிருந்தது. பிரிட்டோனை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் நல்லதொரு தூக்கத்துக்கும் பிறிதொரு சமயம் தற்கொலைக்கும் அது உதவக் கூடும். 1001 கூல் ஜோக்ஸ் புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். விடிந்த போது குருதி நிறச் சதைக் குவியலாய் சிதறி கிடந்தது சூரியன். திருமாவளவனின் ‘முல்லைத் தீவு’ கவிதை நினைவுக்கு வந்தது.

-----

எனது வீட்டிற்கு வந்து பழைய உடுப்புகளைப் பெற்றுச் செல்லும் செல்லும் ‘மாவிடிக்கிற மனிசி’ (பெயர் தெரியாது) தன் பேரனுடன் ஒருநாள் காலை வீட்டிற்கு வந்திருந்தார். தனது மகனை கடந்த மூன்று நாட்களாக காணவில்லையென்பதைப் பிரலாபித்துக் கொண்டிருந்தார். அம்மா சிறிதளவு புட்டு மாத்திரமே கொடுத்தாள். பாத்துக் கீத்து ஏதாவது தரும்படி அப்பெண்மணி அழத் தொடங்கியதும் என்னால் அங்கு நிற்க முடியவில்லை. அப்பெண்மணியின் பெண்ணின் சேலைத்தலைப்பைப் பிடித்தபடி விரல் சூப்பி ஒண்டி ஒளிந்து நின்ற அக்குழந்தையின் கண்களைப் பார்ப்பதின்னின்றும் நான் தப்பியோட விரும்பினேன். மிகவும் சங்கடமாக இருந்தது. அப்பெண்ணின் அழுகையொலியில் நான் மிகவும் ஆத்திரமடைந்தேன்.. ஏன் இன்னும் இவர்கள் செத்துப் போகவில்லை என்று. அம்மா வாழையிலையில் கொடுத்த புட்டை தின்னும் சிறுவனது வாயின் அசைவு எனக்கு கதற வேண்டும் போன்ற உணர்வை ஏற்படுத்திற்று. நரைத்த தலையுடன், உணவை விழுங்க அசையும் தொண்டை... அப்பெண்மணி ஒரு கவளம் பிட்டிற்கு ஒரு மிடறு குடித்தார். பட்டினியில் தொண்டை வறண்டு போயிருக்கும். சகிக்க முடியாதிருந்தது. கடவுளே.. ஏன் இவர்கள் உயிருடனிருக்கிறார்கள்..

அம்மா சில மாங்காய்களையும் மரவள்ளிக் கிழங்குகளையும் கொடுத்தாள். தணலில் புரட்டி புரட்டி சுட்டெடுத்த மரவள்ளிக் கிழங்குகளை எவ்வாறு உண்ணுகிறார்கள்? வயிற்றைப் பிசைந்தது. ஏதாவது செய்ய வேண்டும் போலிருந்தது. செய்து என்ன என்பது போலவுமிருந்தது.

மெல்ல மெல்ல பேரவலத்துக்கு நான் என்னைத் தயார்ப் படுத்திக் கொள்ள வேண்டும். நாய்க் குரைப்புகளுக்கு பழக்கப் பட்டுப் போனது போல், ஷெல் சத்தத்துக்கு பழக்கப்பட்டது போல், இனிப்பற்ற தேனீருக்குப் பழக்கப்படுத்திக் கொண்டது போல், இந்த உடலை மரணத்துக்கும் சிதைவிற்கும் தயார் செய்வதெப்படி?

ஏதோ சாப்பிட்டு பசியறியாது போர்வைக்குள் முடங்கி - என்னுடைய கவலைகள் இத்துடன் முடிந்து போகையில் நான் மிகவும் குற்றவுணர்வடைகிறேன். வறுமைக் கோட்டுக்குக் கீழ் என்ற அரச வகைப் பாட்டினுள் கீழ் மாதாந்த பிச்சைச் சம்பளம் பெறும் மக்களின் கதி என்னவாய் இருக்கிறது? அது குறித்து என்னால் யாது செய்ய முடியும். வெறும் சீமெந்துத் தரையில் படுத்துப் பார்த்தேன்.. இரண்டு நிமிடங்களுக்கு மேல் தாங்கவில்லை. தணலில் சுட்ட மரவள்ளி, ஈரவிறகுப் புகை, நாய்க் குலைப்பும் இருளும் சூழ்ந்த குடிசைகள்.. கடவுளே இவர்கள் எவ்வாறு உயிர்வாழ்கிறார்கள்..

அவர்களைக் குறித்து எழுத எனக்கு எவ்வித அருகதையுமில்லை. எழுதுவதன் மூலம் பிரதினித்துதுவம் செய்யப் படக் கூடிய பாடுகளல்ல அவை. அவர்களுடைய பாடுகளை அதன் வலியை, கசப்புகளை அவமானங்களை வலியை அவற்றின் அத்தனை பரிமாணங்களுடனும் எழுதிவிட முடியுமென்று நான் நம்பவில்லை.

----

பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக செய்திகள் கிடைத்த போது மக்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அவை குழப்பத்தில் மட்டுமே முடியும் என்பதை மக்கள் வெகு தெளிவாகவே புரிந்து வைத்திருந்தனர். ஆனால் ஒரு நப்பாசையில் அனைவரும் முடிவினை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனாலும் பெருட்களுக்காக அலையும் எமது நாளாந்த விதியிலிருந்து நாம் பிறழ்ந்துவிடவில்லை. ஊரடங்குத் தளர்வு நேரம் காலை 5மணி தொடங்கி மாலை 6மணியாக அதிகரித்த போதும் சரி, மின்சார விநியோக நேரம் கூட்டப் பட்ட போதும் சரி மக்கள் சந்தோஷப் படும் படியாக அவை இருக்கவில்லை. பாடசாலைகள் மீளவும் தொடங்கியிருந்தன. கொலைகளும் நடந்து கொண்டிருந்தன - பயங்கரமான விவரிக்கவே அச்சமூட்டும் கொலைகள். தொழில்நுட்ப நேர்த்தியுடன் லாவகமாக கொலை செய்யப் பட்ட பிரேதமொன்றை காண நேர்வதிலிருந்து தப்பிக்க முடிவதில்லை ஒரு நாளும். ஏதோவோர் சந்தில் அகப்பட்டு விடுகிறது, குருதி வழிய இறந்து கிடக்கும் மனித உடல்.

கப்பலில் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பப் பட்டவுடன் ப.நோ.கூ சங்கக் கிளைகள் தமது வினியோக நடவடிக்கைகளைத் தொடங்கியிருந்தன. கூட்டுறவுச் சங்க கிளை முகாமையாளாளர்களும் உதவியாளர்களும் தெய்வங்களாக தம்மைப் பதவி உயர்த்திக் கொண்டனர். ஏச்சு வாங்கியபடி மக்கள் மந்தைகள் போல வரிசையில் நின்றனர் -- 6,7 மணித்தியாலங்களாகளாக, மழைக் குளிரில் நடுங்கியபடி. நிறுவைகளில் நடக்கும் குளறுபடிகளும் பாரபட்சங்களும் நிகழ்கின்றன என்று தெரிந்தும் மக்கள் தமது தாய் மொழியாம் ‘ம்’மைத் தவிர வேறெதையும் பேசத் தயாராக இருக்கவில்லை. மந்தைகள் போல வரிசையில், குழந்தைகளும் பெண்களும்..

பிற்பாடு விதானைமார்களுடனும் கிளையுடனும் பல பத்திரிக்கையாளர்களும் முற்போக்கு நோக்குடையோரும் முரண்படத்தொடங்கிய பின்னரே இந்த நிலமைகள் ஓரளவு சீராயின. எல்லாளன் படை துண்டுப் பிரசுரங்களில் சங்கக் கடைகளில் சுருட்டும் நபர்களை எச்சரித்ததை அடுத்து குறிப்பிடத் தக்க ஒழுங்கு வந்து சேர்ந்தது.

எல்லா வேலைகளையும் கிடப்பில் போட்டு விட்டு கிளை வாசல்களில் நிற்பதென்பது எல்லாருக்கும் முடிகிற காரியமாக இல்லை. அரசு கிள்ளித் தெளிக்கும் இப் பொருட்களுக்காக நீண்ட நேரம் காத்துக் கிடந்து பின்பே சமையலைத் தொடங்கும் வீடுகளும் உண்டு. மக்கள் மிக மோசமாக ஏமாற்றப் படுவதை தட்டிக் கேட்க முனைந்த புலனாய்வுப் பத்திரிகையாளர் ஒருவருக்கு ப.நோ.கூ சங்கம் தமது பிழைகளை வெளிப்படையாக ஆனால் திமிராக வெளிச்சமிடக் கூடிய கடிதமொன்றை அப் பத்திரிக்கையாளரை இழிவு செய்து அனுப்பியிருந்தது. சங்கக் கடை ஊழியர்களும் தமக்குக் கிடைத்த புதிய முக்கியத்துவத்தை இழக்கத் தயாராக இல்லை. நடைமுறை தொடர்பான மிகக் குழப்பமான அறிவுறுத்தல்களை பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன. 

உயர்- மத்திய வகுப்புக்கே மாத்திரம் விளங்கக் கூடிய மொழியிலமைந்த அவற்றை சாதாரண மக்கள் படித்துப் புரிந்து கொள்ள முடியாது. மக்கள் ஆவலாதி பட்டு ஊரடங்கு தளர்த்தப் பட்டு சில நிமிடங்களுக்குள்ளேயே விடிவதற்கு முன்பே பங்கீட்டு அட்டைகளுடன் கிளை வாசலில் வரிசை கட்டுகிறார்கள். கிளை 9 மணிக்குத் திறந்து 10 மணிக்கு தனது விநியோகத்தைத் தொடங்குகிறது. வரிசையில் நிற்கும் அரைவாசிப் பேருக்கு ஏதோ சிலது கிடைத்து விடுகிறது. கையிருப்பு முடிந்த நிலையில் ஏனையோர் தமது கைகளில் மேலும் கொஞ்ச இருளைக் கொண்டு சொல்கின்றனர் - இருளும் பசியும் நிறைந்த தமது வீடுகளுக்கு. பெரும்பாலும் அரச உத்தியோகத்தர்களது கார்ட்டுகள் செல்வாக்கினால் முதலிலேயே பொருட்களைப் பெரும் விதத்தில் வைக்கப் பட்டுவிடுகின்றன. கையிருப்பு முடிந்ததாய் அறிவிக்கப் பட்டவுடன் இருண்ட முகத்துடன் வெற்று மாட்டுத்தாள் பைகளை அசைத்த படி வீடு செல்பவர்கள் ஏழைப் பெண்களும் சிறுவர்களுமே. இன்னமும் மரவள்ளிக் கிழங்கு தான் அவர்களுக்கு உணவு. அரசு கிள்ளித் தெளிப்பதில் ஏதோ ஒன்றிரண்டைப் பெற்றுக் கொள்ள முடிந்தாலும் அவர்களிடம் உணவைத்தயாரிப்பதற்கான உபபொருட்களோ (உப்பு, தூள்), சமைத்துண்பதற்கான விறகோ அவர்களிடம் இல்லை. 

கொடுத்த கோதுமை மா வேறு மிகவும் பழுதடைந்து பாவனைக் குதவாத நிலையிலிருந்ததாய் முறைப்பாடுகள் கிடைத்தன. அடித்தட்டு மக்களுக்கு இன்னமும் அரிசியும் மாவுமே திருப்திகரமாக வழங்கப் பட்டிருக்காத நிலையில் நல்லை ஆதீனம் (மனிதப் பேரவலத்துக்கான அறிகுறிகள் தோன்றியிருந்த போதும் சரி, சக மதத் தலைவர்கள் அரசியல் தலமைகள் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தொடங்கிய போதும் சரி பேசாமல் உண்டியல் பணத்தில் குளிர்காய்ந்து கொண்டிருந்த அதே ஆதீனம் தான்), கார்த்திகை தீபத் திருநாளுக்கான விசேட பொருட்களை வலியுறுத்துகிறது. யாழ்ப்பாணத்தின் சமூக அமைப்பை விளங்கிக் கொண்டவர்களுக்கு யாழ்ப்பாணத்துக்கு வெளியே சொந்தக் காரர்களை வைத்திருப்பது வெள்ளாள உயர்குடியும், சில மேல்தட்டு கத்தோலிக்கர்களும் தான் என்பது புரியுமென நினைக்கிறேன். அவர்களே அஞ்சல் மூலம் பொருட்களைப் பெற முனைந்தனர். இது அவர்களுக்கு வந்திருந்த பொதிகளின் உள்ளடக்கத்தைப் பார்த்தாலே தெரிந்து விடும். பருப்புகளோ வேறு பாதுகாத்து வைக்கக் கூடிய உலர் உணவுகளோ அவற்றுள் அரிதாகவே தென் பட்டன. கட்டிப் பால் டின்கள், உருளைக்கிழங்கு, கடுகு , சீரகம் இவ்வாறன பொருட்களே அதிகளவிலான பார்சல்களில் இடம்பிடித்திருந்தன. 

குழந்தைகளுக்கான விசேட உணவுப் பொருட்களையும் மருந்து வகைகளும் கணிசமான அளவில் மத்திய தர வர்க்கத்துக்கும் உயர்குழாத்துக்கும் இந்த முறையில் கிடைத்தது. எனினும் பலருக்கு பார்சல்களில் உருளைக்கிழங்குகள் சிதைந்தும் பழுதடைந்தும் வந்தமை குறித்து விமர்சிக்க இடமிருந்தது. இக் குருhர நகைச்சுவையை எங்கு சென்று கூற?

இந்த நிலையில் தான் இராணுவம் தனது உத்திகளில் ஒன்றான கட்டுப்பாட்டு விலைக் கடைகளைத் திறந்தது. சாமான் குடுக்கிறாங்களாம் எண்டு கேள்விப் பட்டகொண்ண ஆவலாதிப்பட்டு பசியுடன் வந்து எப்ப கிளிப் களட்டி எறிவாங்களோ என்ற பயத்துடன் வரிசையில் நின்று அவமானத்துடன் பொருட்களைப் பெற்றுச் செல்லும் பஞ்சமர்களை படம் பிடித்து வெட்கமின்றிப் தனது பிரச்சாரத்துக்குப் பயன்படுத்துகிறது இராணுவம். ‘யாழ்ப்பாணத்தைப் பாதுகாத்து தந்த’ தமக்கு யாழ்மக்கள் நன்றி கூறுவதாக அலங்கார வளைவொன்றையும் நகர் மத்தியில் துளிகூட வெட்கமின்றித் தானே நிறுவிக்கொண்டது. இக்கடைகளுக்கு வந்து பொருட்களைப் பெற்று செல்லும் மக்களுக்கு பல எச்சரிக்கைகள், மிரட்டல்கள் விடுக்கப் படுகின்றன. அதற்கும் மேலாக அவர்களது சமூகப் பெறுமானம் கேள்விக்குள்ளாக்கப் படுகிறது (ஆமீன்ரய ஊம்புற துரோகியள்). உயர் வர்க்கம் வீட்டிலிருந்தபடியே அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.

மத்திய தர வர்க்கம் ப.நோ.கூ சங்கங்களில் செல்வாக்கு மூலம் கிள்ளித் தெளிக்கப்படும் பொருட்களில் கணிசமானதைப் பெற்றுக் கொள்கிறது. இராணுவத்தினரது கடைகளில் இருதலைக் கொள்ளி எறும்புகளாக அவமானத்துடன் நிற்பவர்கள் ஏழைச் சிறார்களே.

(அரசால் கண்துடைப்பாகக் கிள்ளித்தெளிக்கப் படும் பொருட்கள் அறவே போதாத நிலையில் தென்மராட்சிப் பிரதேச சங்கக் கிளைகள் குலுக்கல் முறையில் பங்கீட்டு அட்டைகளைத் தெரிவு செய்து பொருட்களை வினியோகிக்கின்றன. – உதயன்)

----

மாணவர்களிடையே தோன்றத் தொடங்கியிருக்கும் முனைப்புகள் 80களை நினைவுக்கு கொண்டுவருவதாய் அமைகின்றன. வீதிகளில் இளைஞர்களைக் காண்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. எங்கும் இராணுவ நடமாட்டம். வீட்டில் நாய்கள் பூனைகள் போல எமது இளைஞர்கள்.

பல சிப்பாய்களுக்கு மாணவர்களைச் சீண்டி கோபப் படுத்துவது பிடித்தமான பொழுதுபோக்காகவோ மாறிவிட்டது. அடிப்பார்கள்.. காரணம் தெரிவதேயில்லை. மறித்து மிக விஷமத் தனமான கேள்விகளைக் கேட்பார்கள். சேர் போட்டு கதைத்தால் விட்டுவிடுவார்கள். இல்லாவிடில் சைக்கிளைப் பூட்டி திறப்பை எடுத்துக் கொண்டு கையை உயர்த்தியபடி முழந்தாளிட்டு நிற்கச் சொல்வார்கள் வீதியிலேயே... 

மாணவிகள் அவர்களைக் கடக்கும் நேரம் அவர்களைத் துவக்குகளால் தட்டி உரக்கச் சிரிப்பார்கள். அடோ. நாய் இப்பதங்கள் தான் வயது வேறுபாடின்றி அனைத்து தமிழனுக்கும் வழங்கப் பட்டிருக்கும் பெயர். பாடசாலைகளுக்குள் கூடப் புகுந்து அட்டுழியம் செய்கிறார்கள் அவர்களுக்கு எப்போது தான் விளங்கப் போகிறதோ தெரியவில்லை. ‘பொங்கி எழும் படைகளைத்’ உருவாக தாம் துணை புரிகிறோம் என்று.

‘முறிந்த பனை’ தொடங்கி சமீபத்திய புஷ்பராஜாவின் பதிவு வரை வாசித்து நம்முடன் தீவிரமாக கதையாடும் மாணவத் தோழர்களே ஒரு சந்தர்ப்பத்தில் எழுத்து மீதான அதிருப்தியையும் ஆயுதப் போராட்டத்தின் வன்முறை அரசியல் மீதான தமது சாய்வையும் வெளிப்படுத்திய போது ஆயுதக்கலாச்சாரம் தொடர்பான நமது பார்வையை மீள்-பரிசீலனை செய்ய வேண்டியதாயிற்று. இவ்வளவு நீண்ட போர்க் கலாச்சாரத்தின் பின்னான புதிய தலைமுறைக்குக் கூட எம்மிடம் பரிசளிப்பதற்கு யுத்ததைத் தவிர வேறேதுமில்லை. இருதரப்பும் மக்களுக்காக யுத்தம் புரிகிறார்கள். மக்களுக்கான யுத்த்தத்தை மக்களின் மீதே நடாத்துவதைத் தவிர வேறெதையும் இத் தலைமைகள் இதுவரை செய்ததில்லை.

வன்முறை அரசியலின் மீது பூசப்பட்டிருந்த அற முலாம் உதிரத் தொடங்கும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருப்பதாய்ப் படுகின்றது. குருhரம் வெளிக்கிளம்புகிறது. கொலைகள் ரசனை மனோபாவத்துடன் பண்ணப் படுகின்றன. எரியுhட்டிக் கொல்வதும், கதறிக் கதறிக் கும்பிடக் கும்பிடக் கொல்வதும் புதிய கொலைத் தொழில் நுட்பங்கள். மனித விழுமியங்களும், ஜனநாயக உரிமைகளுக்கும் மருந்துக்குக் கூடக் காணக் கிடைப்பதில்லை. இச்சிறையுள் இருந்து நாம் என்னத்தை எழுதி என்னத்தைக் கிழிக்க..

------------------------------------------------------------------------------------------------------------

ஆமிரபாலி எழுதியது போல நிச்சயமாக இது ஓர் சாம்பல் தேசம் தான். ஒவ்வொரு கணத்திலும் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது சடலங்களைத் தயாரிப்போரின் ஆட்சியின் கீழ் என்பதை உணர்ந்து கொள்ளும்படி நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறோம்.

எம்மைப் பணிய வைத்துவிடலாம் எனத் திட்டங்களைத் தீட்டியவாறிருக்கிறது சிங்கள பௌத்த மேலாதிக்க அரசு. மறுபுறம் தமிழ் அரசியல், கருத்தியல் வெறுமைக்குள்ளும் வன்முறைக்குள்ளும் மூழ்கத் தொடங்கியிருக்கும் நிலையில் மக்கள் திக்கற்று நிற்கிறார்கள். தமிழ் அடையாளத் திணிப்பை எதிர்க்கும் முஸ்லிம் முனைப்புகள் கூட அம்மக்களது பாடுகள் பற்றிய உண்மையான அக்கறையுடன் இல்லை. அதனினும் மேலாய், வன்முறையை தேர்ந்தெடுக்கும் முஸ்லிம் தேசம் தமிழ் தேசியவாதத்தின் வரலாற்றிலிருந்து எதையும் கற்றுக் கொள்வதாய்த் தெரியவில்லை. வரலாற்றிலிருந்து எதையும் கற்றுக் கொள்ளாதவர்கள் மீதுதான் வரலாற்றுக் தவறுகளின் மீள் நிகழ்த்துகை சாத்தியமாகிறது.

வரலாற்றின் பெயரால் யுத்தம் மக்கள் மீது தொடர்ந்து நிகழ்த்தப் பட்டவாறிருக்கிறது.

எமக்கான யுத்தத்த்தைப் புரிவதாய், எம்மைப் பாதுகாப்பதாய்க் கூறியபடி அதிகார மையங்கள் பண்ணிக்கொண்டிருப்பது என்ன என்பது பற்றியே நாம் கதையாட விரும்புகிறோம். இந்தக் கதையாடலினூடு அதிகார மையங்கள் தவிர்ந்த விளிம்புகளது பாடுகள் என்றுமே பொதுவான ஒருமைப் பாடுடையவை என்பதையும் இந்த விளிம்புகளிடையே சகவாழ்வு சாத்தியம் என்பது குறித்தும் வலியுறுத்த விரும்புகிறோம்.

வன்முறையைத் தீர்வெனத் திணித்தவாறேயிருக்கின்றன அதிகார மையங்கள். வன்முறையின் மூலம் நாம் எவ்வாறு புரிந்துணர்வை அடையப் போகிறோம்?

-முரண்வெளி-

நன்றி ஹரி இராசலெட்ச்சுமி...

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=106995&hl=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF

  • கருத்துக்கள உறவுகள்

இங்க எனக்கு தெரிந்த ஒருவருக்கு காலில் பிரச்சனை. அவர் நடக்கும் போது நொண்டி நொண்டி தான் நடப்பார். இன்னும் கொஞ்ச காலத்தில அவர் ஓய்வூதியம் எடுக்கும் வயதிற்கு வந்துவிடுவார். 

 

அவரிடம் காலில் அறுவைச்சிகிச்சை செய்துகொள்ளுமாறு மருத்துவர்கள் முதல் உறவினர்கள் வரை சொல்லியாகிவிட்டது. ஆனால் அவரின் மனநிலை இப்படி இருக்கின்றது. இனி அறுவைச்சிகிச்சை பண்ணி என்ன பிரியோசனம். இருக்க போற கொஞ்ச காலத்தில இப்படியே இருந்திட்டு போயிடலாம் என்பதே ஆகும். 

 

அவரை இப்படியே இருக்கு விட முடியுமா? இல்லை கட்டாயப்படுத்தி அறுவைச்சிகிச்சை செய்ய வைக்கிறதா? 

 

அறுவைச்சிகிச்கை செய்து பின்னர் பலனளிக்காவிடில் இங்கே "பெரியவர்களை கட்டாயமாக இடம்பெயர வைத்துவிட்டார்கள்" என்பவர்களின் வாதம் எழும். அதுவே பலனளித்துவிட்டால் "நான் தான் அப்பவே சொன்னேனே" என்று ஆகா ஓகோ என்று புகழுவார்கள். 

 

60வயதை நெருங்கிக்கொண்டிருப்பவர்களின் மனநிலை இது தான். அவர்களின் வாழ்நாள் முடிவை நோக்கியே அவர்கள் காத்திருப்பது போல் எண்ணுகிறார்கள். அதனால் உயிரை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை. 

ஆனால் அவர்களை அப்படி இருக்கவிட முடியாது. கட்டாய இடப்பெயர்வு உயிரைக்காப்பாற்றும் நோக்கத்துடன் எங்கு நடந்தாலும் அது வரவேற்கத்தக்கது. 

 

சிலரிற்கு நடந்த சம்பவத்தை வைத்து புலிகளை குறை சொல்வதில் பலரிற்கு மட்டற்ற மகிழ்ச்சி. 

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண இடம்பெயர்வு நடந்தபொழுது நான் அங்கிருக்கவில்லை. கொழும்பிலிருந்தேன். ஆனாலும் அங்கு நடப்பவை பற்றி ரூபவாகினியூடாக அறிந்துகொண்டிருந்தேன். புலிகள் மக்களைக் கட்டாயப்படுத்தி தம்முடன் அழைத்துச் செல்கிறார்கள் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். என்னால் நம்பமுடியவில்லை. ஆனாலும், இடம்பெயர மறுத்த மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாக சிலர் சொல்லக் கேள்விப்பட்டேன். இது நடந்திருக்கலாம். இதேமாதிரியான சூழ்நிலை 2009 இலும் இருந்திருக்கிறது. 1995 இல் இராணுவம் யாழ்நகரைக் கைப்பற்றும்போகும் வரை யாழ்ப்பாணத்தமிழர் மேல் அது கடும் வெறுப்புடந்தானிருந்தது. பல வருடங்கள் புலிகளின் கோட்டைக்குள் வாழ்ந்துவந்த தமிழர்கள் மேல் இராணுவம் காழ்ப்புணர்சியுடந்தானிருக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. புலிகள் என்ன தேவைக்காக மக்களை இடம்பெயரச் சொன்னார்களோ, அதையெல்லாவற்றையும் விட மக்களுக்கு அங்கிருந்து அகல வேண்டும் என்கிற நோக்கம் நிச்சயம் இருந்திருக்கும் என்பதுதான் எனது எண்ணம். இதற்குச் சாட்சியாக எஞ்சியிருந்தவர்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டமை நடந்தது. 1987 ஆம் ஆண்டில் நடந்த ஒப்பரேஷன் லிபரேஷன் நடவடிக்கையிலும், தெல்லிப்பளையில் நடந்த அநியாயங்களை நான் நேரில்ப் பார்த்தவன். வர்த்தளைவிளான் பகுதியில் இருந்த பல வீடுகளில் வயோதிபர்கள் நகர மறுக்க வீட்டிலிருந்த மற்றையவர்கள் அவர்களை விட்டு விட்டு வெளியேறினார்கள். சில மாத காலத்தின் பின்னர் நாம் மீண்டும் அப்பகுதிகளுக்கு வந்தோம். விட்டுச் சென்ற எவருமே உயிருடனில்லை. கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட அவர்களின் எச்சங்களைத்தான் சேகரித்து எடுத்தோம்.  ஆக முன்னேறிவரும் இராணுவம் நிச்சயம் எப்படி நடந்துகொள்ளும் என்பதற்கு போதுமான சாட்சியங்கள் எப்போதும் இருந்துகொண்டேயிருக்கின்றன.

 

1995 இலும் நடந்தது இதுதான். மக்கள் தாமாகவும் கட்டாயத்தின்பேரிலும் நகர மீதமிருந்தவர்களில் பலர் கொல்லப்பட்டனர். இவை வெளியே தெரியப்போவதில்லை.

 

இங்கு ஒருவர் மேலே குறிப்பிட்டதுபோல யாழ்நகர் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் இடம்பெயர்ந்திருந்த பலர் மீண்டும் யாழ்நகர் திரும்பினர். இது இராணுவத்தின் பக்கம் வருவதால் பாதுகாப்பானது என்பதை விட வன்னியில் பல அசெளகரியங்களுக்கும், உணவுத்தட்டுப்பாட்டிற்கும், நோய்களுக்கும் தொடர்ச்சியான இராணுவத் தாக்குதலுக்கும் முகம் கொடுப்பதை விடவும் ஊருக்கே திரும்பலாம், நடப்பது நடக்கட்டும் என்கிற விரக்தி மனப்பான்மையால் வந்திருக்கலாம். இது இராணுவ சூட்சுமத்திற்குக் கிடைத்த வெற்றியே. ஆனால் இப்படை யாழ்திரும்பிய பலருக்கு நடந்த அகோரங்களை பலரும் அறிந்திருக்கிறோம். 

 

இதே சூட்சுமத்தைத்தான் இராணுவம் 2009 இலும் பாவித்தது. தொடர்ச்சியான ஷெல்மழை, மற்றும் விமானக் குண்டுத்தாக்குதல், திட்டமிட்ட உணவி மற்றும் மருந்துத்தட்டுப்பாடு போன்றவற்றால் மக்களை புலிகளிடமிருந்து பிரிக்கமுடியும் என்று நம்பியது. இதன்படி பிரிந்துபோனவர்கள் போக மீதமிருந்தவர்கள் புலிகளின் அனுதாபிகள்தான் என்று இலகுவாக கதையை முடித்துவிட்டு கூட்டுப் படுகொலை ஒன்றை அரங்கேற்றலாம் என்று அது எண்ணியிருந்தது. அதற்கேற்றாப்போல் இனி வேறெங்கும் இடம்பெயர முடியாத அந்தச்சனம் மிகப்பெரும் விலையொன்றை அன்று கொடுத்தது. 

 

ஆக இடப்பெயர்வென்பது சில வேளைகளில் அவசியமாக இருந்திருக்கிறது. கட்டாயப்படுத்தல்கள் சரியா தவறா என்பதற்கப்பால் இடம்பெயர மறுத்தவர்களுக்கு நடந்த அவலம் சரித்திரம். 

 

இறுதியாக புலிகள் என்கிற இடத்தில் எவர் இருந்தாலும் இதையே செய்திருப்பர். கெரில்லாக்களுக்குத் தொடர்ந்தும் வளங்கள்களைத் தருவது அவர்கள் நம்பியிருக்கின்ற தங்கியிருக்கின்ற மக்கள் கூட்டமே. ஆள்ப்பலமாகவிருக்கட்டும், உணவாக இருக்கட்டும், தார்மீக ஆதரவாக இருக்கட்டும், நிச்சயம் மக்களின் பின்புல ஆதரவென்பது புலிகள் போன்ற கெரில்லா இராணுவத்திற்கு மிகவும் அவசியமானது. இதை அறிந்துதான் இராணுவம் மக்களை அவர்களிடமிருந்து எப்படியாவது பிரிக்கப் பார்த்தது. அப்படிப் பிரிந்து செல்ல மறுத்தவர்களை அது எல்லோருமே புலிகள்தான் என்று போர்வையில் போர்த்துக் கொன்றுதள்ளியது. 

  • கருத்துக்கள உறவுகள்

என் தூரத்து உறவு முறையான அதே நேரம் நெருங்கிப் பழகிய மாமா ஒருவரின் வயோதிகத் தந்தை கடைசி வரைக்கும் 1995 இல் இடம்பெயர் மறுத்து விட்டார். புலிகள்  எவ்வளவு கட்டாயப்படுத்தியும் மனுசன் டிமிக்கி கொடுத்து விட்டு வீட்டில் நின்று விட்டார்.

 

பின் மாமா தன் வீட்டுக்கு மீண்டும் திரும்பிப் (தென்மராட்சியையும் ஆமி பிடிச்ச பிறகு) போகும் போது அவரது தந்தையின் அழுகிப் போன உடலத்தினைத் தான் காண முடிந்தது. அதில் 5 மேற்பட்ட துவக்குச் சூடு. மனுசன் ஆமிக்கு பயந்து குசினிக்குள் இருந்த உரலுக்கு பின்னால் ஒழித்து இருந்து இருக்கு போல, அங்க வந்தும் ஆமி சுட்டுக் கொன்று இருக்கு.

 

அன்று புலிகள் மக்களை இடம்பெயர்ச் சொல்லி இருக்காவிடின் முள்ளிவாய்க்கால் அவலத்தினை அன்றே யாழ் நகரில் பார்த்து இருப்போம்.

 

 

நான் நீண்ட நாட்களாக யாழுக்கு வரவும் இல்லை.பச்சை குத்தவும் இல்லை என்ன என்று என்ட பெயரில் இந்த கருத்துக்கு பச்சை குத்தி இருக்குது என்று தெரியவில்லை.நானே கணணியை 4,5 நாட்களாக திறக்கவில்லை :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.