Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

இன்றைய தகவல் தொழிநுட்ப உலகில் பொழுதுபோக்கு  ஊடகங்கள் மலிந்து கிடக்கின்றன. வேலை / வகுப்பு முடிந்து வீடு வந்து தான் தொலைக்காட்சியில் அல்லது கணினியில் நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க வேண்டும் என்ற நிலை மாறி யூடியூப் (YouTube), முகநூல் (Facebook) போன்ற சமூக ஊடகங்களின் அபரிமிதமான வளர்ச்சியாலும், ஸ்மார்ட்போன்களின் (smartphones) உதவியுடனும் நாம் எங்கு சென்றாலும் எந்த நேரத்திலும் விரும்பிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கக் கூடியதாக இருக்கிறது. கடைக்காரர் கொத்துரொட்டி போடும் ஓர் பத்து நிமிட  இடைவெளியில் வடிவேலுவின் பழைய பகிடி ஒன்றை யாழில் கள உறவு ஒருவர் பகிர்ந்ததை கைத்தொலைபேசியில் பார்த்துச் சிரிப்பதை ஓரிரு தசாப்தங்களுக்கு முன்னர் நினைத்திருப்போமா?!

இவ்வாறு கேளிக்கை ஊடகங்கள் நம் வாழ்வுடன் இரண்டறக் கலந்த இக்காலத்தில், நாம் முன்பொருகாலத்தில்  பொறுமையாக நல்லதோர் திரைப்படத்தை நண்பர்கள், உறவினருடன் கண்டு ரசித்த அனுபவத்தை நம்மில் பலர் மறந்திருப்போம். தற்போதும் கூட சினிமாவுக்குச் சென்றோ அல்லது வீட்டிலிருந்தோ திரைப்படங்களை கண்டு களிக்கிறோமே என்கிறீர்களா? இந்தச் சமூகவலை உலகில் நாம் திரைப்படங்களை ரசிக்கும் அனுபவ உணர்வும் மாறிவிட்டது. உதாரணத்துக்கு நாகேஷ், கவுண்டமணி - செந்தில், வடிவேலு, விவேக் போன்ற சிறந்த நகைச்சுவையாளர்களை ரசித்த நாம் இன்றைய திரைப்படங்களில் வரும் மொக்கையான நகைச்சுவைகளை வேறு வழியின்றி ரசிக்கப்பழகிவிட்டோம். அழுத்தங்கள் நிறைந்த, எந்திரத்தனமான வாழ்க்கைச்சூழல் எதற்கெடுத்தாலும் சிரிக்கப் பழகவேண்டும் என்று கற்றுக்கொடுத்துவிட்டதோ தெரியவில்லை,  இன்றைய காலத்தில் இது தான் 'Trend' என்கிறார்கள்.  

ஆக, பொழுதுபோக்கிற்குப் பல தெரிவுகள் உள்ள (அத்துடன் குப்பைகளும் நிறைந்த)  இன்றைய காலத்தில் நாம் இளைப்பாறி  சிறந்த தமிழ்த் திரைப்படம்  பார்க்கும் அனுபவத்தைப் பெறுவது எப்படி? இதற்கு சிறந்த திரைப்படங்களைத் தெரிந்தெடுக்கும் திறன் மட்டுமல்ல பல சந்தர்ப்பங்களில் ஒரு திரைப்பத்தில் நாம் எவற்றை எதிர்பார்க்கின்றோம் / எதிர்பார்க்கலாம் என்ற தெளிவும் நமக்குத் தேவை. இது பற்றி கீழ்வரும் பகுதிகள் விளக்கும்:

படத் தெரிவு

புதிதாக வெளியாகும் திரைப்படங்களைத் திரையில் பார்க்கும் முன்னர் அது வெளியானவுடன் வரும் விமர்சனங்களை முதலில் படிப்பேன் / யூடூபில் (YouTube) பார்ப்பேன். நண்பர்களின் முகநூல் நிலைத்தகவல்கள், செவி வழியான கருத்துக்களைக் கேட்டறிந்தாலும் அது அவர்களின் தனிப்பட்ட அபிப்பிராயம். ரஜினி, விஜய், அஜித் என அவர்களின் அபிமான நடிகர்களின், அல்லது சங்கர், மணிரத்னம் என தம் மனம் கவர்ந்த இயக்குனர்களின்  படத்தை அநேகமாக விட்டுக்கொடுக்க மாட்டார்கள் தானே! (இதையே பிடிக்காத திரைக்கலைஞர்களின் திரைப்படமென்றால் எதிராகவும் சொல்வார்கள்).

எனவே, இவ்வாறு பிரபலங்களின் திரைப்படம் பற்றிய அவர்களின் விமர்சனத்தை மூளையின் ஒரு பகுதியில் போட்டுவிட்டு, யூடூபில் நமது 'தலை' 'நீலச்சட்டை' மாறனின் (Tamil Talkies) விமர்சனத்தை பார்ப்பேன். அவரது விமர்சனம் பார்ப்பதே எனக்கு ஒரு கேளிக்கை தான்! ஆனால், அவர் படத்தின் கதையையும் சொல்வார். எனவே அப்பகுதிகள் நீங்கலாக முழு விமர்சனத்தையும் கேட்பேன். நான் பார்த்ததில் மிகவும் நேர்மையான விமர்சனங்கள் என்று மாறனுடையதை அடித்துச் சொல்வேன். அவர் 'வழக்கம் போல ஹீரோ....., 'வழக்கம் போல லூசுத்தனமான ஹீரோயின்', 'வழக்கம் போல கதை...' என்று தொடங்கினாலே அந்தப் படத்தை பார்க்கவேண்டியதில்லை என்று அர்த்தமெடுக்கப் பழகிவிட்டேன்!  அவர் சிறந்த படங்கள் என்று கூறியவை என்னை ஏமாற்றியதில்லை.  தவிரவும் இந்துவின் கார்த்திக்கும் ஓரளவுக்கு நம்பகமான விமர்சனங்களைக் கொடுக்கிறார். எனவே என்னதான் நல்ல விமர்சனங்கள் நண்பர்கள், முகநூல் மூலம் கேட்டறிந்தாலும் அநேகமான வேளைகளில் இந்த இரு விமர்சகர்களின் தீர்ப்புத் தான் ஒரு புதிய திரைப்படத்தை சினிமாவில் பார்ப்பதா, அல்லது ஆறுதலாக வீட்டில் பார்ப்பதற்கு நல்ல பிரதி வரும் வரை காத்திருப்பதா அல்லது பார்ப்பதே இல்லையா என்ற முடிவை எடுக்கவைக்கும். நல்ல கதை, திரைக்கதை, சிறந்த நடிப்பு, லாஜிக் மீறல்கள் இன்மை என்று மிகத்தரமான திரைப்படத்தைத் தேர்ந்தெடுத்துப் பார்ப்பவர்கள் இவர்களின் விமர்சனத்துடன், IMDB வலைப்பக்கத்தில் திரைப்படம் பற்றிய மதிப்பீடு, விமர்சனங்களை வாசித்தறியலாம்.

இன்னொரு பக்கம் இன்றைய காலத்தில் குறைந்த பட்ஜெட்டில் உருவான, பிரபலமற்ற நடிகர்கள், இயக்குனர்களின் தரமான திரைப்படங்களுக்கும் வாழ்வு கிடைத்துள்ளது. மசாலா படங்களையே பார்த்துச் சலித்தவர்களுக்கு ஒரு மாறுதலாக வித்தியாசமான கதைக்களம், திரைக்கதை கொண்ட இப்படங்கள் ஆறுதலாக அமையும். உதாரணமாக கடந்த வருடம் வெளியான 'பரியேறும் பெருமாள்', 'மேற்குத் தொடர்ச்சி மலை' போன்ற திரைக்கவியங்களைச் சொல்லலாம். எனினும் பிரபலமற்றவர்களின் திரைப்படம் என்பதால் புலத்தில் உள்ள பலருக்கு இவற்றைத் திரையில் கண்டு களிக்கும் அனுபவம் கிட்டாது என்பது துரதிஷ்டம் தான். பலருக்கு இவ்வாறான திரைப்படங்கள் வெளியானது கூடத் தெரியாமல் இருக்கலாம் அல்லது தெரிய நீண்ட நாளாகலாம். Tamil Talkies மாறன் போன்றோர் இப்படியான தரமான திரைப்படங்களை விமர்சனம் செய்வதால் அவர்களின் YouTube பகுதில் சென்று அறிந்து கொள்ளலாம். (கடந்த காலங்களில் வெளியான புதிய, பழைய திரைப்படங்களுக்கும் இது பொருந்தும்). இவ்வாறான திரைப்படங்களின் எழுச்சி இனிவரும் காலங்களிலும் இருக்கும் என்பது எனது நம்பிக்கை. இது நீண்ட காலத்தில் தமிழ் சினிமாவின் தலைவிதியையே மாற்றுமா எனப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

திரைப்படங்களைத் தெரிவு செய்யும் போது நாம் எந்த நேரத்தில், என்ன மனநிலையில் இருந்து ரசிக்கப்போகிறோம் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். அழுத்தம் நிறைந்த வேலை நாளின் முடிவில் மாலை வீடு வந்தால் நகைச்சுவையான படங்கள், ரஜினி, விஜய் போன்றோரின் மனதை இலேசாக்கும் திரைப்படங்கள், அல்லது நல்ல பாடல்கள், அழகான காட்சிகள் நிறைந்த திரைப்படங்கள் மன அமைதி தரலாம். மாறாக ஓர் திகில், மர்மம் நிறைந்த அனுபவத்தை வார இறுதி இரவொன்றில் அனுபவிக்க விரும்பின் பரபரப்பான / ஆவிகள் சம்பந்தமான திரைப்படங்களைத் தேர்தெடுக்கலாம். எனினும், அபிமான நடிகரின் திரைப்படத்தை சினிமா சென்று முதற் காட்சியில் பார்ப்பதற்கு நேர காலம் தேவையில்லை தானே! 

எதிர்பார்ப்பும் / கண்ணோட்டமும் 
வாழ்க்கையில் நமக்கு எப்படி நியாயமான எதிர்பார்ப்பு தேவையோ, ஒரு திரைப்படம் பார்க்கும் அனுபவத்திலும் நமது எதிர்பார்ப்பு பற்றிய தெளிவு இருத்தல் அவசியமானது. ஒரு ரஜனி படத்திற்குச் சென்று விஜய் சேதுபதி படங்கள் போன்று கதையம்சம் இல்லையே என வருத்தப்படுவதை விட விஜய் சேதுபதியின் எதாவது படத்தை ரசிப்பதே புத்திசாலித்தனமானது (மறுதலையும் உண்மை!). ரோமாபுரியில் இருக்கும்போது ரோமனாக இரு என்பது போலத்தான், இதுவும் ஓர் எழுதப்படாத விதி. இது மிக வெளிப்படையான உதாரணம். மற்றய படங்களை எப்படி பார்ப்பது? இங்கு தான் நீங்கள் என்ன மாதிரியான அனுபவத்தை பெற விரும்புகிறீர்கள், என்ன மன நிலையில் இருக்கிறீர்கள் என்று உங்களை நீங்களே கேட்டுத் தெளிந்த பின் ஒரு திரைப்படம் பற்றிய தகவல்களை மேலுள்ள பகுதிகளில் கூறியது போல் அறிந்து அது உங்கள் எதிர்பார்ப்புக்கு உகந்ததா என முடிவு செய்ய வேண்டும். பொருத்தமில்லாத திரைப்படத்தை 2,3 மணித்தியாலங்கள் இருந்து பார்ப்பது என்பது இந்தக் காலத்தில் ஓர் வாய்ப்புச் செலவு (opportunity cost) தான்! இதைவிட தரமான பொழுதுகளை உங்கள் குழந்தையுடன் செலவளித்திருக்க முடியுமல்லவா? தரமான திரைப்படங்கள் எனப் பரவலாகச் சொல்லப்படுபவை எல்லாம் நமது எதிர்பார்ப்புக்கு அமையவேண்டிய அவசியமில்லை.தெளிவான எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் திரைப்படத்தை மட்டுமே நல்ல படம் என்கிறோம். 

மேலும், ஒருவரது பார்வை காலத்துக்குக் காலம் மாறுபட மாறுபட ஓர் திரைப்படம் பற்றிய பார்வையும் மாறலாம். அதாவது 10 வருடங்களுக்கு முன்னர் ரஜினி படங்களை  ரசித்த ஒருவர் தற்போது கமல் ரசிகராக மாறியிருக்கலாம். அவரது வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள், அறிவு முதிர்ச்சி, வயது என்று இன்னும் பல காரணிகள்  வாழ்வை புதியதொரு கண்ணோடத்தில் பார்க்கவைப்பதைப் போல, திரைப்படங்கள் மீதான பார்வையையும் மாற்றி இருக்கலாம். இன்னும், ஓர் காலத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்கள் இன்று புறக்கணிக்கப்படலாம். உதாரணமாக 80களில் பிரபலமான மோகனின் 'பயணங்கள் முடிவதில்லை' திரைப்படத்தை இன்று பார்த்தால் 'இதையா அன்று கொண்டாடினார்கள்?' என்று தோன்றும். அப்போது பலருக்குப் தெரியாத படங்கள், இப்போது கொண்டாடப்படுவதும் உண்டு. விஜய் சேதுபதி முதலில் கதாநாயகனான 'தென்மேற்குப் பருவக்காற்று' (2010) திரைப்படம் ஓர் எடுத்துக்காட்டு. எனவே, கால ஓட்டத்தில் ஏற்படும் ரசனை மாற்றங்களையும் கருத்தில் கொள்ளல் வேண்டும். 

சுருங்கச் சொல்லின் , பல்வேறு பொழுதுபோக்கு ஊடகங்கள் நம்மை ஆக்கிரமித்திருக்கும் இக்காலத்தில் தரமான   திரைப்படங்களைத்  தெரிவு செய்யும் திறனும், அவற்றில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கிறோம் என்ற தெளிவும் நமக்கிருந்தால் நல்ல திரைப்படங்கள்  பார்க்கும் அனுபவம் நமக்குக் கிடைக்கும்.

(குறிப்பு: எனது அனுபவத்தில் தோன்றியவற்றை எழுதியுள்ளேன். நான் மேலே குறிப்பிட்ட திரைப்படங்கள், நடிகர்கள், இயக்குனர்கள் பெயர்கள் உதாரணத்திற்காக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. சுருக்கம் கருதி நிறைய உதாரணங்கள் குறிப்பிடவில்லை. உங்கள் அனுபவங்களையும் இங்கு பகிர்ந்துகொள்ளலாம். நன்றி 😊)

Related image

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாக எனது  தெரிவுகளும் இப்படித்தானிருக்கும்

சினிமா  என்றாலே அலர்சியாகி வரும் இந்த  காலகட்டத்தில்  நல்ல படம் என  சிலரின்  ஆலோசனைகளை  வாசித்தபின்பே படம்  பார்ப்பது  வழமை

(இதைத்தாண்டி ஒரு  சில  பெரிய  நடிகர்களின் படங்களை  பொழுது  போகாது  விட்டால்  பார்ப்பதுண்டு)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றையகால திரைப்படங்களை பார்ப்பதற்கு முதலில் மனதை ஒரு மனப்படுத்த வேண்டும். ஏனெனில் படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது சிறிது சலிப்பு தட்டினாலும்.....அடுத்த பொழுது போக்கிற்கு தாவ கைவசம் பல வசதிகள் குவிந்து கிடக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மல்லிகை வாசம் said:

புதிதாக வெளியாகும் திரைப்படங்களைத் திரையில் பார்க்கும் முன்னர் அது வெளியானவுடன் வரும் விமர்சனங்களை முதலில் படிப்பேன் / யூடூபில் (YouTube) பார்ப்பேன். நண்பர்களின் முகநூல் நிலைத்தகவல்கள், செவி வழியான கருத்துக்களைக் கேட்டறிந்தாலும் அது அவர்களின் தனிப்பட்ட அபிப்பிராயம். ரஜினி, விஜய், அஜித் என அவர்களின் அபிமான நடிகர்களின், அல்லது சங்கர், மணிரத்னம் என தம் மனம் கவர்ந்த இயக்குனர்களின்  படத்தை அநேகமாக விட்டுக்கொடுக்க மாட்டார்கள் தானே! (இதையே பிடிக்காத திரைக்கலைஞர்களின் திரைப்படமென்றால் எதிராகவும் சொல்வார்கள்).

இத்தனை விமர்சனங்களும் கேட்டு அறிந்து படம் பார்க்க போக அந்த படம் ஓடி முடிந்து அடுத்த படம் வந்திருக்கும்.முன்னர் வருடக் கணக்காக ஓடிய படங்கள் இப்போ மாதக் கணக்கிலேயே ஓடுதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, மல்லிகை வாசம் said:

ஒருவரது பார்வை காலத்துக்குக் காலம் மாறுபட மாறுபட ஓர் திரைப்படம் பற்றிய பார்வையும் மாறலாம்.

ஒரு வயசில காதால் படங்களை மிகவும் ர‌சித்து பார்த்தேன்....இப்பொழுது காதல் பட‌ங்களை பார்ப்பதற்க்கு மனசு வ‌ருதில்லை  ....அந்த காலத்தில் ஆர்ட் படங்களையும் பொறுமையாக இருந்து ரசித்து பார்ப்பேன் .....ஆனால் இப்பொழுது அரசியல்,பொலிஸ் மற்றும் கீரோயிசம் படங்களை தான் பார்க்க மனம் இடம் கொடுக்கின்றது....பொழுது போக்கு படம் தானே என்று பார்ப்பேன் அடுத்த நாள் மறந்தும் போவேன் ...ஒரு காலத்தில பார்த்த படங்கள் இன்னும் மனதில் நிற்கின்றது....

  • கருத்துக்கள உறவுகள்

நான் எந்தப்படத்தையும் தெரிந்தெடுத்து பார்ப்பதில்லை.....பரிசுக்கு போகும்போது எந்த படம் ஓடுதோ அதை பார்ப்பது.......நாங்கள் எல்லாம் தெரிந்து படம் பார்த்தால் மோசமான படம் எடுத்தவர்களின்  மனநிலை மோசமாகாதா....இப்ப யூப்டிவியில் வரும் படங்களையும் பார்ப்பதுண்டு. தலைகீழா நின்றாலும்  தமிழ் ராக்கர்ஸில் மட்டும் பார்ப்பதில்லை, வேறொன்றுமில்லை அதை எடுத்து பார்க்க தெரியாது ..!  😁

  • தொடங்கியவர்
17 hours ago, விசுகு said:

(இதைத்தாண்டி ஒரு  சில  பெரிய  நடிகர்களின் படங்களை  பொழுது  போகாது  விட்டால்  பார்ப்பதுண்டு)

 

நேரத்தை ஓட்டுவதற்கு மட்டுமே பெரிய நடிகர்களின் படம் பார்க்கும் நிலை வந்துவிட்டது, தரமான படங்களின் வருகையால்! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, suvy said:

தமிழ் ராக்கர்ஸில் மட்டும் பார்ப்பதில்லை, வேறொன்றுமில்லை அதை எடுத்து பார்க்க தெரியாது ..!  😁

  இப்பிடி உள்ளதை போட்டுடைக்கிற பக்குவம் எல்லாருக்கும் வராது கண்டியளோ....😄

  • தொடங்கியவர்
14 hours ago, குமாரசாமி said:

இன்றையகால திரைப்படங்களை பார்ப்பதற்கு முதலில் மனதை ஒரு மனப்படுத்த வேண்டும். ஏனெனில் படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது சிறிது சலிப்பு தட்டினாலும்.....அடுத்த பொழுது போக்கிற்கு தாவ கைவசம் பல வசதிகள் குவிந்து கிடக்கின்றன.

அதே.. அதே தான் அண்ணை! :)

  • தொடங்கியவர்
9 hours ago, ஈழப்பிரியன் said:

இத்தனை விமர்சனங்களும் கேட்டு அறிந்து படம் பார்க்க போக அந்த படம் ஓடி முடிந்து அடுத்த படம் வந்திருக்கும்.முன்னர் வருடக் கணக்காக ஓடிய படங்கள் இப்போ மாதக் கணக்கிலேயே ஓடுதில்லை.

இப்போது தானே நிறைய விமர்சனங்கள் சுடச்சுட வருகின்றனவே, ஈழப்பிரியன் அண்ணை...  😊எல்லாவற்றையும் பார்க்கத்தேவை இல்லை. மாறன் போன்ற ஒரு சிலரின் 5, 10 நிமிட விமர்சனமே போதும் முடிவெடுக்க. தற்போது தான் வெளியான கார்த்தியின் 'தேவ்' படத்துக்கான நீலச்சட்டை மாறனின் விமர்சனம் ஏற்கெனவே யூடியூபில் வெளியாகிக் கலக்கலாக உள்ளது! 😃 (Tamil Talkies review) 

3 hours ago, putthan said:

ஒரு வயசில காதால் படங்களை மிகவும் ர‌சித்து பார்த்தேன்....இப்பொழுது காதல் பட‌ங்களை பார்ப்பதற்க்கு மனசு வ‌ருதில்லை  ....அந்த காலத்தில் ஆர்ட் படங்களையும் பொறுமையாக இருந்து ரசித்து பார்ப்பேன் .....ஆனால் இப்பொழுது அரசியல்,பொலிஸ் மற்றும் கீரோயிசம் படங்களை தான் பார்க்க மனம் இடம் கொடுக்கின்றது....பொழுது போக்கு படம் தானே என்று பார்ப்பேன் அடுத்த நாள் மறந்தும் போவேன் ...ஒரு காலத்தில பார்த்த படங்கள் இன்னும் மனதில் நிற்கின்றது....

எனது ரசனையும் கிட்டத்தட்ட உங்களது போலத்தான் மாறிவிட்டது, புத்தன்... ('96' போன்ற காவியங்கள் விதிவிலக்கு)😊
வயசு போகுது என்று தான் அர்த்தமோ?! 🙄

  • தொடங்கியவர்
2 hours ago, suvy said:

நாங்கள் எல்லாம் தெரிந்து படம் பார்த்தால் மோசமான படம் எடுத்தவர்களின்  மனநிலை மோசமாகாதா....இப்ப யூப்டிவியில் வரும் படங்களையும் பார்ப்பதுண்டு. தலைகீழா நின்றாலும்  தமிழ் ராக்கர்ஸில் மட்டும் பார்ப்பதில்லை, வேறொன்றுமில்லை அதை எடுத்து பார்க்க தெரியாது ..!  😁

 

நியாயமான கவலை தான் சுவி அண்ணா! 🤣 மோசமான படங்களைப் பார்த்த சலிப்புணர்வு தான் இப்படி 
சல்லடை போட்டுத் தெரிவு செய்து பார்க்க வைக்குது. 😊

நீங்கள் சொன்னது போல யூடுபிலும் நிறைய நல்ல படங்கள் உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்

நான் குறுகிய காலத்தில் பார்த்த படங்களுள் பரியேறும் பெருமாள் மேற்குத்தொடர்ச்சி மலை போன்ற கருத்தான படங்கள் என் மனதுக்குப் பிடித்தவை. இவை தவிர 96 பவர்பாண்டி போன்ற படங்களும் பார்த்து ரசித்தேன். இப்ப வாற படங்கள் வெட்டு கொத்து அடி துப்பாக்கிச்சூடு என்று இரத்தம் கொட்டக் கொட்ட ஓடிக் கொண்டிருப்பதைப் பார்க்க எனக்குப் பிடிப்பதில்லை. சில படவிமர்சனங்கள் பார்த்து திரைப்படங்களைத் தெரிவுசெய்வதுமுண்டு. சில புதிய படஇயக்குனர்கள் குறைந்த செலவில் சிறந்த படங்கள் எடுக்கிறார்கள் ஆனால் அவை வந்த வேகத்தில் மறைந்து விடுகின்றன. இந்த வாரம் கனடாவில் ஒருத்தி என்றொரு படம் வெளியிடுவதாக அறிந்தேன். பார்க்க காலநிலை இடம் கொடுக்குமோ தெரியாது. முன்பெல்லாம் படம் பார்த்தால் அதன் பாடல்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கும். இப்ப கேட்டதும் மறந்து விடுகிறது. வயதா?அல்லது பாடல் இசையா? அல்லது பாடல் வரிகளா?

  • தொடங்கியவர்
6 hours ago, Kavallur Kanmani said:

சில புதிய படஇயக்குனர்கள் குறைந்த செலவில் சிறந்த படங்கள் எடுக்கிறார்கள் ஆனால் அவை வந்த வேகத்தில் மறைந்து விடுகின்றன. 

'மேற்குத் தொடர்ச்சி மலை' கூட சரியான தயாரிப்பாளர் கிடைக்காமல் விஜய் சேதுபதி தானே தயாரிக்க முன் வந்தமையால் தான் வெளியாகக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. அதுவும் எத்தனை நாள் திரையில் ஓடியதோ தெரியவில்லை. வெளிநாடுகளுக்கு இப்படியான படங்கள் வருவது கடினம். பெரிய இயக்குனர், நடிகர்களின் படங்களுக்குச் செய்யப்படும் விளம்பரங்கள் / சந்தைப்படுத்தல்கள் இவ்வாறான படங்களுக்குக் கிடைப்பதில்லை.

வெளிநாட்டு விநியோகஸ்தர்களும் நம்பி எடுக்கப் பயப்படுகிறார்கள். காரணம், ரசிகர்களுக்கும் படம் வெளிவரும் வரை நல்ல படமா எனத் தெரியாது. இப்படிப் பல தரமான பல படங்கள் திரையரங்குகள் கிடைக்காமல் இன்னும் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன. 

 

  • தொடங்கியவர்
7 hours ago, Kavallur Kanmani said:

முன்பெல்லாம் படம் பார்த்தால் அதன் பாடல்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கும். இப்ப கேட்டதும் மறந்து விடுகிறது. வயதா?அல்லது பாடல் இசையா? அல்லது பாடல் வரிகளா?

நானும் இவ்வாறு உணர்கிறேன் அக்கா. வயது போகப்போக புதிய இசை/பாடல்களைப் புரிந்து கொள்வது கடினமானதாக உள்ளது இயல்பான ஒன்று. ஏனெனில், அவை பெரும்பாலும் அந்தந்த காலகட்டத்தில் உள்ள இளையோரை இலக்காக வைத்து உருவாக்கப்பட்டவை. அவர்களின் உணர்வுகள், உலகம் எல்லாம் வேறு.

நேருக்கு நேர் பார்த்து கதைத்துப் பழகிய நமக்கு, இன்றைய சமூகவலைத்தள உலகில் தொடர்பாடல் செய்யும் வாழ்க்கை ஒவ்வாதது போலத்தான் இன்றைய பாடல்களும்!

எனினும், பாடல் வரிகளுக்கான முக்கியத்துவம் குறைந்து கொண்டே வருகிறது. இசைக்குத் தான் முக்கியமா என்று பார்த்தாலும் வெளிநாட்டு இசையை பிரதி செய்வது தான் புதிய முயற்சியாம்?! நமது நாட்டுப்புற, சங்கீத இசையிலேயே நிறைய பரிசோதனை முயற்சிகள் செய்யலாம் (சினிமாவுக்கு வெளியே செய்கிறார்கள்.) சரி, நகரத்துக் கதைக்கு Western இசை பொருந்தும்; குக்கிராமத்தில் நடக்கும் கதைக்கு New York நகரின் எடுப்பில் பின்னணி இசை ஏதற்கு? (தயாரிப்பாளர், ஹீரோ, இசையமைப்பாளர் தலையீடு என்கிறார்கள் புது இயக்குனர்கள்.) கொஞ்சம் கூடப் பொது அறிவு இல்லை.

எது எப்படியோ சில நல்ல பாடல்களும் வரத்தான் செய்கின்றன. அவையே காலம் கடந்து நிலைக்கும். 

வயது ஏற ஏறப் பழைய பாடல்களின் அர்த்தம் கூடப் புரிகிறது. 80களின் ஆரம்பத்தில் பிறந்த எனக்கு 1930 களின் பாடல்களும் பிடிக்கும். இது இன்றைய இளசுகளுக்கும் எதிர் காலத்தில் புரியும்! 😊 அனுபவம் சொல்லும் பாடம் அப்படி! 😊 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கிரைம்,திரில்லர் தான் சின்னனின் இருந்து பிடிக்கும்...அநேகமான காதல் படங்கள்,குடும்ப படங்கள் ஒரே மாதிரியாக இருப்பதால் பிடிப்பதில்லை(அதற்காக பார்க்காமல் இருப்பதில்லை)...நான் பார்த்த படத்திலேயே பிடித்த காதல் படம் என்டால் "டடுக்கன்DHADKAN]" ...மேலோட்டமாய் கதையை வாசித்தாலே இப்படித் தான் படம் இருக்கும் என்று விளங்கிடும்.ஆனாலும் சில படங்கள் ஏமாற்றத்ததை தந்தது உண்டு...யாழில் அபராஜிதன் எழுதும் விமர்சனத்தை வைத்தும் படம் பார்த்ததுண்டு...அநேகமாய் அவரது விமர்சனம் ஏமாற்றம் அளித்ததில்லை 

  • தொடங்கியவர்
11 hours ago, ரதி said:

எனக்கு கிரைம்,திரில்லர் தான் சின்னனின் இருந்து பிடிக்கும்...அநேகமான காதல் படங்கள்,குடும்ப படங்கள் ஒரே மாதிரியாக இருப்பதால் பிடிப்பதில்லை(அதற்காக பார்க்காமல் இருப்பதில்லை)...

ரதி, நீங்கள் சொன்னது போல் காதல், குடும்பப் படங்கள் மீண்டும் மீண்டும் பழைய கதைகளையே சொல்வதால் த்ரில்லர் படங்களையே நானும் விரும்பிப் பார்த்துள்ளேன், கூடவே குறைந்த பட்ஜெட்டில் புதுமையான படங்களும். அண்மைக் காலமாக இவ்வாறான படங்கள் நிறையவே வெளியாகி உள்ளன. 😊

 

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நான் சங்கர் படங்கள் எல்லாவற்றையும் (நண்பன் தவிர்த்து) அகன்ற வெண்திரையில் பார்த்துள்ளேன். பிரமாண்டமான படங்களை திரையில் பார்க்காமல் சிறு தொலைக்காட்சியில் பார்ப்பது நல்ல அனுபவமாக இருக்காது. 

பிற தமிழ்ப்படங்களை விமர்சங்களைப் படித்துப் பார்த்தபின்னர்தான் பார்ப்பதுண்டு. பேரன்பு இந்த வாரம் பார்த்த நல்ல படம்!

ஆங்கிலப் படங்கள் தினமும் பார்க்கும் வசதி இருந்தும் தெரிவு செய்துதான் பார்ப்பேன். Sci-Fi, Indie படங்கள்தான் பார்ப்பது அதிகம். எனினும் superhero படங்களையும் பார்ப்பதுண்டு. 

  • தொடங்கியவர்
8 hours ago, கிருபன் said:

நான் சங்கர் படங்கள் எல்லாவற்றையும் (நண்பன் தவிர்த்து) அகன்ற வெண்திரையில் பார்த்துள்ளேன். பிரமாண்டமான படங்களை திரையில் பார்க்காமல் சிறு தொலைக்காட்சியில் பார்ப்பது நல்ல அனுபவமாக இருக்காது. 

உண்மை தான் கிருபன். பிரம்மாண்டமான, பெரிய நட்சத்திர நடிகர்களின் படங்களை சினிமாவில் பார்ப்பது தான் சிறந்தது. அண்மையில் பேட்ட படத்தை இணையத்திலும் பார்த்தேன். பல காட்சிகளை - குறிப்பாக பாடற் காட்சிகளை திரையில் ரசித்தது போல் ரசிக்க முடியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.