Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும்

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும்

இந்த ஆண்டின் நடுப்பகுதியில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறும் என ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

சீனாவில் 1,425.7 மில்லியன் சனத்தொகை காணப்படுவதாகவும் இருப்பினும் இந்தியாவின் மக்கள் தொகை 1,428.6 மில்லியனை எட்டும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 2011 க்குப் பிறகு நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லாததால், இந்தியாவின் மக்கள்தொகை எண்ணிக்கை ஒரு ஊகம் என்றும் கூறப்படுகின்றது.

இதேநேரம் தங்கள் மதிப்பீட்டில் சீனாவின் இரண்டு சிறப்பு நிர்வாகப் பகுதிகளான ஹாங்காங் மற்றும் மக்காவ் – மற்றும் தாய்வான் மக்கள் தொகையும் இல்லை என்றும் அறிவித்துள்ளது.

எனினும், தாய்வான் தனது சொந்த அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுடன் சீன நிலப்பரப்பில் இருந்து வேறுபட்டதாகக் கருதுகிறது.

கடந்த வருடம் நவம்பரில், உலக மக்கள் தொகை 8 பில்லியனைத் தாண்டியது. எனினும், வளர்ச்சி முன்பு போல் வேகமாக இல்லை என்றும்1950க்குப் பிறகு இப்போது மிகக் குறைந்த வேகத்தில் இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் தங்கள் கருவுறுதல் விகிதத்தில் சரிவைக் கண்டுள்ளதாக ஐ.நா. தரவுகள் காட்டுகிஞ்சரான.

https://athavannews.com/2023/1330438

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தொகையில் சீனாவை முந்தும் இந்தியா; சாதகங்கள், பாதகங்கள் என்னென்ன?

மக்கள்தொகை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

மக்கள் தொகையில் விரைவில் சீனாவை இந்தியா முந்தவிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படும் நெருக்கடி போக, இதனால் ஏற்படக்கூடிய வேறு தாக்கங்கள் என்ன?

2023ஆம் ஆண்டின் மத்தியில் உலகில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த ஆண்டு ஜூன் மாதவாக்கில் சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடியாக இருக்கும்போது இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடியாக இருக்கும். அந்தத் தருணத்தில் சீனாவைவிட இந்தியாவில் 29 லட்சம் பேர் அதிகம் இருப்பார்கள்.

34 கோடியுடன் மக்கள் தொகையில் மூன்றாவது இடத்தில் அமெரிக்கா இருக்கும். 70 ஆண்டுகளுக்கு உலக மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பகுதியினர் ஆசிய நாடுகளில்தான் இருப்பார்கள்.

இந்திய மக்கள் தொகை இந்த அளவுக்கு அதிகரிக்கும் எனச் சொல்லப்படுவது ஒரு உத்தேசமான கணிப்புதான். காரணம், கடந்த 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

 

இந்தியாவில் கடந்த 140 ஆண்டுகளாக ஒவ்வொரு பத்தாண்டிற்கும் இடையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுவந்தது. 2021ல் இருந்த கோவிட் பரவல் காரணமாக இது 2022ஆம் ஆண்டிற்கு தள்ளிப்போடப்பட்டது. தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு 2024ல் நடக்குமென அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஐ.நாவின் மக்கள் தொகை நிதியம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த ஆண்டு நவம்பரில் உலக மக்கள் தொகை 800 கோடியைத் தாண்டியது. ஆனால், வளர்ச்சி விகிதம் என்பது முன்பிருந்ததைப் போல அதிகமாக இல்லை என்பதோடு, 1950களில் இருந்த அளவுக்கு குறைவாகவும் இருக்கிறது.

இந்தியாவிலும் சீனாவிலும் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனாலும், அதன் வளர்ச்சி விகிதம் வெகுவாகக் குறைந்திருக்கிறது. சீனாவில் அமலில் இருந்த ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற கொள்கை 2016லேயே கைவிடப்பட்டுவிட்டது என்றாலும், அடுத்த ஆண்டு முதல் சீனாவின் மக்கள் தொகை எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பது, பெண்கள் அதிக அளவில் வேலைக்குச் செல்வது ஆகியவை சீனாவின் மக்கள் தொகை குறைவதற்குக் காரணமாக சொல்லப்படுகிறது.

இந்தியாவில், 1950ல் ஒரு பெண்ணுக்கு 5.7 குழந்தை பிறக்கும் என்ற நிலை இருந்தது. அது தற்போது ஒரு பெண்ணுக்கு 2.2 குழந்தை என்ற விகிதத்திற்குக் குறைந்துள்ளது.

இந்தியா சுதந்திரமடைந்தபோது, வேகமாக அதிகரித்துவந்த மக்கள் தொகை நாட்டின் மிகப் பெரிய கவலைகளில் ஒன்றாக இருந்தது. 70களில் இந்தக் கவலை உச்சத்தைத் தொட்டு, மிக பெரிய அளவில் மக்கள் தொகை கட்டுப்பாட்டுப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்திய மக்கள் தொகை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா உலகில் அதிக மக்கள் வசிக்கும் நாடாக மாறிய பின் என்ன நடக்கும்?

இந்தியா உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடாக மாறிய பிறகு, மக்கள் தொகையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இடைவெளி தொடர்ந்து அதிகரிக்கும். உலகம் தோன்றியதிலிருந்து அதிக மக்கள் வசித்த ஒரு நாடாக இந்தியா உருவெடுக்கும்.

சீனாவில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்தபோது, அதன் மனித வளத்தைச் சிறப்பாக பயன்படுத்திய சீனா, உலகின் மிகவும் வளர்ந்த பொருளாதாரங்களில் ஒன்றாக உருவெடுத்தது. மக்கள் தொகை அதிகரிப்பு தொடர்பான அச்சத்தை இந்தியாவும் சீனாவும் ஒரே காலத்தில் எதிர்கொண்டன. ஆனால், சீனாவில் மக்கள் தொகை வீழ்ச்சியென்பது மிகப் பெரிய அளவில் ஏற்பட ஆரம்பித்தது. இந்தியாவைப் பொறுத்தவரை மக்கள் தொகை வீழ்ச்சி மிக மெதுவாகவே நடந்துவருகிறது. இதனால், இந்தியாவில் இளம் வயதினர் எண்ணிக்கை தொடர்ந்து நல்ல நிலையிலேயே இருக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 80 சதவீதத்தினர் 50 வயதுக்கு உட்பட்டவர்கள். ஆனால், சீனாவின் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் சற்று குறைவானவர்களே 50 வயதுக்குட்பட்டவர்கள்.

மக்கள் தொகை அதிகரிப்பு என்பது மிகப் பெரிய பிரச்சனையாக பார்க்கப்பட்ட காலம் உலகம் முழுவதும் மாறியிருக்கிறது. இப்போது இது தொடர்பாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. உலகம் முழுவதுமே, குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொகை வளர்ச்சி என்பது கிட்டத்தட்ட நின்றுபோயிருக்கும் நிலையில், மக்கள் தொகை வளர்ச்சி அடையும் நாடுகளைப் பொறுத்தவரை பெரிய சாதகம் இருப்பதாகக் கருதுகின்றன. வேலை செய்யக்கூடிய ஆட்கள் இந்த வளரும் நாடுகளில் இருந்து கிடைப்பார்கள் எனக் கருதுகின்றனர்.

ஆனால், இந்தியாவிற்குள் இதுபற்றி மாறுபாடான பார்வை இருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற தருணத்தில் மக்கள் தொகை வளர்ச்சி வேகமாக இருந்ததோடு, உணவுப் பற்றாக்குறையும் இருந்தது. இந்த இரண்டு பெரும் பிரச்சனைகளையும் அரசு சமாளிக்க வேண்டியிருந்தது. ஒரு பக்கம் மிக தீவிரமான மக்கள் தொகை கட்டுப்பாட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மற்றொரு பக்கம் பசுமைப் புரட்சி போன்ற உணவு உற்பத்தி முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த இரண்டு முயற்சிகளுமே சிறப்பாக பலனளித்திருக்கின்றன.

இந்திய மக்கள் தொகை

பட மூலாதாரம்,AP

மக்கள் தொகை அதிகரிப்பால் இந்தியா எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல் என்ன?

மக்கள் தொகை வளர்ச்சி தொடர்பாக ஒரு சுவாரஸ்யமான போக்கை தனது South Vs North: India's Great Divide நூலில் குறிப்பிடுகிறார் அந்த புத்தகத்தின் ஆசிரியரான ஆர்.எஸ். நீலகண்டன். அதாவது, கெடுபிடிப் போர் காலகட்டத்தில் கம்யூனிசத்திற்கு எதிரான தங்கள் யுத்தத்தின் ஒரு பகுதியாக மக்கள் தொகை கட்டுப்பாட்டை அமெரிக்கா முன்வைத்தது. ஏழை நாடுகளில் மக்கள் தொகை அதிகரித்தால் அது கம்யூனிசப் புரட்சியை ஏற்படுத்தும் என அமெரிக்கா கருதியது. இதனால் தெற்காசியா நாடுகளை மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும்படி அமெரிக்கா வலியுறுத்தியது என்கிறார் அவர்.

"இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்பு என்பது கண்டிப்பாக ஒரு சிக்கல்தான். இந்தியா மக்கள் தொகை அதிகரிப்பை எதிர்கொண்ட விதமும் சீனா எதிர்கொண்ட விதமும் வெவ்வேறானவை. 1991ல் இந்தியாவின் தனிநபர் வருவாயும் சீனாவின் தனி நபர் வருவாயும் கிட்டத்தட்ட ஒன்றாக இருந்தது அல்லது இந்தியாவில் அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது சீனாவில் தனிநபர் வருவாய் இந்தியாவின் தனிநபர் வருவாயைப் போல ஐந்து மடங்கு அதிகம். இதற்கு காரணம், அங்கு ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி.

இரு நாடுகளிலும் மக்கள் தொகை வளர்ந்தது என்றாலும், நம்மால் சீனா அளவுக்கு பொருளாதார வளர்ச்சியை அடைய முடியவில்லை. 2004க்கும் 2014க்கும் இடையில் உயர் பொருளாதார வளர்ச்சி இருந்தபோதே இதுதான் நிலைமை. இப்போது வளர்ச்சி மிகக் குறைவாக இருக்கிறது. இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சிக்கு இணையாக பொருளாதார வளர்ச்சி இருக்க வேண்டுமென்றால் அது 10 சதவீதம் அளவுக்கு வளர வேண்டும். சீனாவில் 2000 முதல் 2014வரை அந்த அளவுக்கு வளர்ச்சி இருந்தது. ஆனால், இந்தியாவில் இப்போது அப்படி வளர்ச்சியில்லை. ஆகவே, மேலும் பலர் ஏழ்மைக்குள்தான் தள்ளப்படுவார்கள்" என்கிறார் புள்ளியியல் நிபுணரும் South VS North நூலின் ஆசிரியருமான ஆர்.எஸ். நீலகண்டன்.

இந்தியாவைப் பொறுத்தவரை மக்கள் தொகைக் கட்டுப்பாடு 1970களில் ஒரு தேசியக் கொள்கையாக வடிவமைக்கப்பட்டது. ஆனால், அதனைச் செயல்படுத்தும் பொறுப்பு மாநிலங்களிடம் விடப்பட்டது. எல்லாக் கொள்கைகளையும் போலவே இந்தக் கொள்கையும் இந்தியா முழுவதும் ஏற்றத்தாழ்வுடன் அமலாக்கப்பட்டது.

இந்திய மக்கள் தொகை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதனால் சில மாநிலங்களில் அதீதமான மக்கள் தொகை பெருக்கமும் சில மாநிலங்களில் மிகக் குறைவான அதிகரிப்பும் இருந்தது. உதாரணமாக, இந்தியாவில் 1971க்கும் 2011க்கும் மத்தியில் ராஜஸ்தானில் 166 சதவீத அதிகரிப்பும் உத்தரப்பிரதேத்தில் 138 சதவீத அதிகரிப்பும் இருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் 75 சதவீதமும் கேரளாவில் வெறும் 56 சதவீதமும்தான் அதிகரித்தது. அதாவது ராஜஸ்தானில் 1971ல் 2.57 கோடியாக இருந்த மக்கள் தொகை 2011ல் 6.86 கோடியாக உயர்ந்தது. கங்கைச் சமவெளி மாநிலங்கள் முழுக்கவே இந்த நாற்பதாண்டுகளில் மக்கள் தொகை பெருக்கம் இரு மடங்கிற்கும் அதிகமாக இருந்தது.

ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தை என்ற விகிதம் வந்துவிட்டால் மக்கள் தொகை நிலைபெற ஆரம்பித்துவிட்டதாக அர்த்தம். இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த நிலை வந்துவிட்டது. ஆனால், பிஹார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கருவுறும் விகிதம் இரு மடங்காக இருக்கிறது. பிஹாரில் 3.2ஆகவும் உத்தரப்பிரதேசத்தில் 3 ஆகவும் இது இருக்கிறது. இது இந்தியாவில் புதிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

"அதீத மக்கள் தொகை வளர்ச்சி உள்ள பகுதி மற்றும் மக்கள் தொகை வளராமல் நிலைபெற்றுவிட்ட பகுதி ஆகிய இரண்டு பகுதிகளுமே ஒரே நாட்டில் இருப்பது பெரிய பிரச்சனைதான். மக்கள் தொகையைக் குறைத்த பகுதியினர் அதன் பலனை அடைய நினைப்பார்கள். ஆனால், அவர்களால் அதன் பலனை அடையவே முடியாது. கூடுதலாக வரி பகிர்வு, பிற மாநிலத்தினர் வருகை போன்றவை இதில் சிக்கலை ஏற்படுத்தும். முடிவில் இரு தரப்பு மக்களுக்கும் இடையிலான மோதலில்தான் போய் முடியும்" என்கிறார் அவர்.

2019ஆம் ஆண்டில் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை, 2018-19ஆம் ஆண்டின் எகனாமிக் சர்வே ஆகியவற்றில் இருந்த புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவிலேயே மக்கள் தொகை குறைவது முதலில் தமிழ்நாட்டில்தான் நடக்கும் எனத் தெரியவருகிறது. 2031-41ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி - 0.1ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய மக்கள் தொகை

பட மூலாதாரம்,GETTY IMAGES

நீண்ட நாட்களாகவே தமிழ்நாட்டில் மக்கள் தொகை வளர்ச்சி குறைவதன் அபாயம் குறித்துப் பேசிவரும் பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீநிவாஸன், மக்கள் தொகை வளர்ச்சி நாட்டின் இரு பகுதிகளிலும் வெவ்வேறு பிரச்சனைகளைக் கொண்டுவரும் என்கிறார்.

"பிரதமர் மக்கள் தொகை அதிகரிப்பின் பலன்கள் குறித்துப் பேசுகிறார். மக்கள் தொகை அதிகரிப்பதன் மூலம் பலன் கிடைக்க வேண்டுமென்றால், அந்த மக்கள் படித்தவர்களாக இருக்க வேண்டும். திறன் மிக்கவர்களாக இருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் அப்படியில்லை. ஆகவே, இது மிகப் பெரிய ஏற்றத்தாழ்வைத்தான் கொண்டுவரப் போகிறது. தென் மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்துகொண்டே போகிறது. கேரளாவில் பல பள்ளிகளை மூடுகிறார்கள். தமிழ்நாட்டில் சராசரி வயது 35 என ஆகிவிட்டது. ஆனால், வட மாநிலங்களில் தொடர்ந்து மக்கள் தொகை அதிகரிக்கிறது.

சீனாவோடு நாம் இப்போது பொருளாதார ரீதியில் போட்டியிடவே முடியாது. சீனப் பொருளாதாரத்தின் அளவு 17 ட்ரில்லியன். நாம் ஐந்து ட்ரில்லியனைத் தொடவே போராடிக்கொண்டிருக்கிறோம். தொடர்ச்சியாக நாம் சீனாவைவிட அதிக அளவில் வளர வேண்டும். அப்போதுதான் பத்தாண்டுகளிலாவது அவர்களை எட்டிப்பிடிக்க முடியும். ஆனால், அப்படி நடப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை.

மேலும், 2026ல் தொகுதி மறுசீரமைப்பிலும் இது பெரிய பிரச்சனைகளை உருவாக்கப்போகிறது" என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

தொகுதி மறுசீரமைப்புப் பிரச்சனை

இந்தியா சுதந்திரமடைந்த ஒவ்வொரு பத்தாண்டிற்கும் நாட்டில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை திருத்தப்பட்டது. 1952ல் செய்யப்பட்ட திருத்தத்தின்படி இந்தியாவில் 494 தொகுதிகள் இருந்தன. இதற்குப் பிறகு, 1962ல் தொகுதிகளின் எண்ணிக்கை 522ஆக உயர்த்தப்பட்டது. 1973 இந்த எண்ணிக்கை 543ஆக உயர்த்தப்பட்டது.

1975ல் இந்தியாவில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. அப்போதுதான் மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டன. அந்தத் தருணத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 42வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுவருவதால், தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளக்கூடாது என இந்தத் திருத்தம் கூறியது. ஏனென்றால், மக்கள் தொகை கட்டுப்பாட்டை ஒழுங்காகச் செயல்படுத்திய மாநிலம் இதனால் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

2001ல் இந்த 25 ஆண்டு காலம் முடிவுக்கு வந்தபோது, 2002ல் தொகுதி மறுசீரமைப்பு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 84வது திருத்தத்தின் மூலம் இது மேலும் 25 ஆண்டுகளுக்கு தள்ளிப்போடப்பட்டது. இந்த 25 ஆண்டு 2026ல் முடிவுக்கு வருகிறது. அப்போது தொகுதிகள் மக்கள் தொகையின் அடிப்படையில் மறுசீரமைக்கப்பட்டால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.

நிதி ஒதுக்கீட்டு, அதிகாரப் பகிர்வு போன்ற எல்லாமே மக்கள் தொகையின் அடிப்படையில்தான் இருக்கும் ஒரு நாட்டில், ஒரு பகுதியில் மட்டும் மக்கள் தொகை அதிகரிப்பது ஆரோக்கியமான விளைவுகளுக்கு இட்டுச் செல்லாது என்கிறார்கள் நிபுணர்கள்.

https://www.bbc.com/tamil/articles/c3gpn6r3m06o

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு பகுதியில் இருந்து தேத்திற்கே இருக்கும் மாநிலங்களுக்கு சனத்தொகை  குடிபெயர்வதத்திற்கான வாய்ப்புகள் கூட.

தமிழ் நாடு  இப்போதே, உள்ளக குடிபெயர்வு, குடி வரவு, குடி அகல்வு போன்ற அதிக்ரங்கள் , சட்டங்ககளை சிந்திக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

வடக்கு பகுதியில் இருந்து தேத்திற்கே இருக்கும் மாநிலங்களுக்கு சனத்தொகை  குடிபெயர்வதத்திற்கான வாய்ப்புகள் கூட.

தமிழ் நாடு  இப்போதே, உள்ளக குடிபெயர்வு, குடி வரவு, குடி அகல்வு போன்ற அதிக்ரங்கள் , சட்டங்ககளை சிந்திக்க வேண்டும். 

ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளதாக தமிழ்நாட்டு செய்திகள் கூறுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளதாக தமிழ்நாட்டு செய்திகள் கூறுகின்றன.

இதுக்குள்ள கோடிக்கணக்கா தாரோ ஆட்டையப் போட்டிருக்கினம் எண்டுறார் பிஜேபி அண்ணாமலை!!🥲

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நன்மைக்கே, கிந்தியாவின் வல்லரசு கனவு மக்கள் பெருக்கதில் மட்டும்தான், அவர்களின் அடிப்படை வசதிகளில் அல்ல, முதலில் தன் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வுகண்டால் மிகச் சிறந்த நாடாக மாறலாம், அதற்கு வாய்ப்பேயில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
On 19/4/2023 at 10:30, தமிழ் சிறி said:

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும்

ஏதாவதொன்றில் வல்லரசாக இருந்தால் சரி தானே.

  • கருத்துக்கள உறவுகள்

கணக்கே எடுக்கவில்லை இதில் முதலாவது வரிசையில்..???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

ஏதாவதொன்றில் வல்லரசாக இருந்தால் சரி தானே.

அதுக்காக... பிள்ளை பெறுவதில்,  வல்லரசு தெம்பை காட்டலாமா? 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people and text that says 'ஒரே ஒரு ஊரடங்கு தான். உலக மக்கள் தொகைல சைனாவையே மிஞ்சிட்டோம். 186 459'

போன வருசம், கொரோனாவுக்கு... ஒரே ஒரு ஊரடங்குதான்,
உலக மக்கள் தொகையில், சீனாவையே... மிஞ்சிட்டோம். 
😂  🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அதுக்காக... பிள்ளை பெறுவதில்,  வல்லரசு தெம்பை காட்டலாமா? 🤣

அவனவனுக்கு முடிந்ததைத் தானே செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

கணக்கே எடுக்கவில்லை இதில் முதலாவது வரிசையில்..???

BRIC கில் முக்கியமானவர் எல்லோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில தினங்களுக்கு முன் சனத்தொகையில் இந்தியா முன்னணியில் நிற்பதாக ஜேர்மனிய ஊடகங்களில் செய்தியாக வாசித்தார்கள்.

மக்கள் செல்வம் பெரும் செல்வம்.அதற்கு ஈடு இணையேதுமில்லை. எமது நிலத்தில் ஏனைய இனத்தவர்களின் ஆக்கிரமிப்பிற்கு எம்மவர்களின் சனத்தொகை பற்றாக்குறையும் ஒரு காரணம் என்பதை சந்தர்ப்பத்திற்கேற்ப பலர் மறந்து விடுகின்றார்கள்.

இந்தியாவில் இன்றும் மனிதனே மனித மலம் அள்ளும் முறை இருந்தாலும் மேற்குலகு வியாபார நலனிற்காக அங்குதான் படையெடுக்கின்றார்கள்.ஏனெனில் மக்கள் வலு அங்கு அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மக்கள் தொகை பெருக்கம் பற்றிய நாகேஸ் மனோரமா விழிப்புணர்வு நகைச்சுவை காட்சி. படம் சர்வர் சுந்தரம். 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக இந்தியர்கள் தொடர்பில் எமது புரிதல் மிக மோசமானதாகவே இருக்கிறது.

ஆனால் அவர்களிடம் உள்ள தனித்துவமான பண்புகளினால் பொருளாதார அடிப்படையில் குறுகிய கால எல்லைக்குள் ஆபார வளர்ச்சியினை அடைகிறார்கள்.

அமெரிக்காவில் இன அடிப்படையில் இந்தியர்கள் வருமானத்தில் முதல் நிலையில் உள்ளார்கள் இவர்களது வருமானம் வெள்ளையின இன அமெரிக்கர்களின் சராசரி வருமானத்தினை விட சராசரியாக கிட்டதட்ட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.

எனது பல வட இந்திய நண்பர்கள்(குறிப்பாக குயராத்தியர்கள்) ஆரம்பத்தில் பல குடும்பம் ஒரே வீட்டில் இருப்பவர்களாக இருப்பார்கள்(சேமிப்பு), பின்னர் நண்பர்களினுடன் கூட்டு வியாபாரத்தில் ஈடுபடுவார்கள்(மூலதன திரட்சி), அந்த கூட்டு வியாபாரத்தினை வளர்ப்பதற்காக ஆரம்பத்தில் தமது முதல் வேலையிலே தொடர்வார்கள் அதன் மூலம் அவர்களது சொந்த வியாபரம் வளர்வதற்கான கால அவகாசத்தினை வழங்குவார்கள்(Breathing time), பின்னர் அதனை விரிவு படுத்துவர்(Scale up).

இதனால் அவர்கள் அடுத்த தலைமுறையினை தாம் புதிதாக வந்த  நாட்டில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகின்றனர்.

இதே எமது சமூகத்தில் எப்படி மற்றவரை ஏமாற்றி பணத்தினை சுருட்டலாம் என எண்ணுவார்கள் அதனால் எமது சமூகம் இரண்டாம் தலைமுறையிலும் பிந்தங்கி காணப்படுகிறோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'மக்கள் தொகையில் சைனாவை முந்தியது இந்தியா. இதற்காக ராத்திரி பகலாக உழைத்த அனைவருக்கும் நன்றி....'

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, vasee said:

பொதுவாக இந்தியர்கள் தொடர்பில் எமது புரிதல் மிக மோசமானதாகவே இருக்கிறது.

ஆனால் அவர்களிடம் உள்ள தனித்துவமான பண்புகளினால் பொருளாதார அடிப்படையில் குறுகிய கால எல்லைக்குள் ஆபார வளர்ச்சியினை அடைகிறார்கள்.

அமெரிக்காவில் இன அடிப்படையில் இந்தியர்கள் வருமானத்தில் முதல் நிலையில் உள்ளார்கள் இவர்களது வருமானம் வெள்ளையின இன அமெரிக்கர்களின் சராசரி வருமானத்தினை விட சராசரியாக கிட்டதட்ட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.

எனது பல வட இந்திய நண்பர்கள்(குறிப்பாக குயராத்தியர்கள்) ஆரம்பத்தில் பல குடும்பம் ஒரே வீட்டில் இருப்பவர்களாக இருப்பார்கள்(சேமிப்பு), பின்னர் நண்பர்களினுடன் கூட்டு வியாபாரத்தில் ஈடுபடுவார்கள்(மூலதன திரட்சி), அந்த கூட்டு வியாபாரத்தினை வளர்ப்பதற்காக ஆரம்பத்தில் தமது முதல் வேலையிலே தொடர்வார்கள் அதன் மூலம் அவர்களது சொந்த வியாபரம் வளர்வதற்கான கால அவகாசத்தினை வழங்குவார்கள்(Breathing time), பின்னர் அதனை விரிவு படுத்துவர்(Scale up).

இதனால் அவர்கள் அடுத்த தலைமுறையினை தாம் புதிதாக வந்த  நாட்டில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகின்றனர்.

இதே எமது சமூகத்தில் எப்படி மற்றவரை ஏமாற்றி பணத்தினை சுருட்டலாம் என எண்ணுவார்கள் அதனால் எமது சமூகம் இரண்டாம் தலைமுறையிலும் பிந்தங்கி காணப்படுகிறோம்.

உங்கள் அவதானிப்பு கவனத்திற்கு உரியது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

சனத்தொகையில்... இந்தியா, சீனாவை முந்தியதை இட்டு... 
ஜேர்மன்  இதழில் வந்த அசத்தலான கருத்தோவியம்.

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா மக்கள்தொகையில் உலகிலேயே முதலிடம் - இது வரமா, சாபமா?

மக்கள்தொகை, இந்தியா, சீனா
3 மணி நேரங்களுக்கு முன்னர்

உலக மக்கள்தொகையில் இதுநாள்வரை முதலிடம் வகித்து வந்த சீனாவை பின்னுக்குத் தள்ளி, உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது இந்தியா.

பிறப்பு, இறப்பு விகிதம் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் ஐ.நா. அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் மக்கள்தொகை 142 கோடியே 57 லட்சத்து 75 ஆயிரத்து 850 ஆக உள்ளது. இந்தியாவும், சீனாவும் தலா 140 கோடிக்கு மேல் மக்கள்தொகையை கொண்டிருக்கும் நாடுகளாக, அதாவது உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள்தொகை இவ்விரு நாடுகளிலுமே இருந்து வந்த நிலையில், 142 கோடியை தாண்டி இந்த விஷயத்தில் சீனாவை விஞ்சி நிற்கிறது இந்தியா.

மக்கள்தொகையில் உலகின் நம்பர் ஒன் நாடு என்பது இந்தியாவுக்கு மகிழ்ச்சிகரமான செய்தியா அல்லது பீதியடைய செய்யும் தகவலா? என்பதை விவரிக்கிறது இக்கட்டுரை.

இந்தியாவுக்கு இனியும் ஏறுமுகம்தான்!

மக்கள்தொகையில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக உள்ள சீனாவில் அடுத்த ஆண்டு (2024) முதல் மக்கள்தொகை மெல்ல மெல்ல சரிய தொடங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

கடந்த ஆண்டு (2022) அங்கு 10.6 மில்லியன் பேர் புதிதாக பிறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை இறந்தவர்களின் எண்ணிக்கையை விட சற்றுதான் அதிகம். அதேசமயம், பிறப்பு விகிதம் முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது அதிரடியாக குறைந்துள்ளது.

இதன்படி பார்க்கும்போது, தற்போது 1.4 பில்லியனுக்கு மேலாக உள்ள சீனாவின் மக்கள்தொகை, 21 ஆம் நூற்றாண்டு முடிவதற்குள் 1 பில்லியனுக்கு (100 கோடி) கீழ் வந்துவிடும் என்று ஐ.நா மதிப்பிட்டுள்ளது.

ஆனால், இந்த விஷயத்தில் இந்தியாவின் கதை வேறாக இருப்பதாக சொல்கிறது ஐ.நா. இந்தியாவிலும் பிறப்பு விகிதம் சமீபகாலங்களில் கணிசமான அளவு குறைந்து வந்தாலும், இந்த சரிவின் வேகம் மெதுவாகவே இருப்பதாக கூறுகிறது ஐ.நா.

1950 களில் இந்தியாவில் ஒரு பெண் சராசரியாக 5.7 குழந்தைகளை பெற்றுவந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை இரண்டாக குறைந்துள்ளது.

ஆனாலும் இந்தியாவின் மக்கள்தொகை இன்னும் சில, பல ஆண்டுகளுக்கு ஏறுமுகத்தில்தான் இருக்கும் எனவும், இந்த எண்ணிக்கை 2064 இல் உச்சத்தை அடைந்து, அதன் பின்னரே கணிசமான அளவு குறையத் தொடங்கும் என்றும் ஐ.நா கணித்துள்ளது.

மக்கள்தொகை, இந்தியா, சீனா

மக்கள்தொகை குறைப்பில் வேகம் காட்டிய சீனா

1973 இல் 2 சதவீதமாக இருந்த மக்கள்தொகை பெருக்க விகிதாசாரத்தை 1983 இல் 1.1% ஆக குறைத்தது சீனா. அதாவது 10 ஆண்டுகளில் மக்கள்தொகை பெருக்கத்தை கிட்டதட்ட பாதியாக குறைத்தது.

‘நாம் இருவர் -நமக்கு ஒருவர், இரண்டு குழந்தைகளுக்கு இடையே போதுமான இடைவெளி இருக்க வேண்டியதன் அவசியம் போன்றவை குறித்து கிராமப்புறங்கள் வரை விழிப்புணர்வை ஏற்படுத்தியது, பெண் கல்வி மற்றும் அவர்களுக்கு வேலைவாய்பபை உறுதி செய்தது, பொது சுகாதார துறைக்கு முக்கியத்துவம் கொடுத்தது போன்ற குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளால் மக்கள்தொகை பெருக்க அளவை பத்தே ஆண்டுகளில் பாதியாக குறைத்து உலகை வியப்பில் ஆழ்த்தியது சீனா.

மும்முடங்கு உயர்ந்த இந்தியாவின் மக்கள்தொகை:

1973 -1983 இடைப்பட்ட காலத்தில் சீனாவின் மக்கள்தொகை பெருக்க விகிதம் பாதியாக குறைந்த நிலையில், அதற்கு நேர்மாறாக இந்கியாவின் மக்கள்தொகை 1951 முதல் 2011 வரையிலான 60 ஆண்டுகளில் மும்மடங்கு உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

1951 இல் 361 மில்லியனாக (36 கோடி) இருந்த இந்தியாவின் மக்கள்தொகை, 2011 இல் 1.2 பில்லியனாக (120 கோடி) அதிரடியாக உயர்ந்தது. அதாவது 60 ஆண்டுகளில் நாட்டின் மக்கள்தொகை மூன்று மடங்கு அதிகமாகி இருக்கிறது.

கடந்த 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் நாட்டின் மக்கள்தொகை சராசரியாக ஆண்டுக்கு 2 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்து வந்துள்ளதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

“இந்தியாவில் தனிநபரின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்ததன் காரணமாக இறப்பு விகிதம் குறைந்தது. குறிப்பாக நகர்ப்புறங்களில் தனிநபர் வருமானம் அதிகரித்ததன் பயனாக அவர்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைத்ததுடன், நவீன கழிவுநீர் வசதி போன்ற உள்கட்டமைப்பு வசதிகளும் கிடைக்கப் பெற்றன. இவற்றின் விளைவாக, நாட்டில் இதுநாள்வரை பிறப்பு விகிதம் அதிகமாக இருந்து வருகிறது” என்கிறார் லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிஸ்சை சேர்ந்த மக்கள்தொகை வல்லுநர் டிம் டைசன்.

நாட்டின் மக்கள்தொகை அசுர வேகத்தில் அதிகரித்துவருவதை கருத்தில் கொண்டே 1952 இல் குடும்ப கட்டுப்பாடு திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், தேசிய மக்கள்தொகை கொள்கை 1976 ஆம் ஆண்டுதான் வகுக்கப்பட்டது. அந்த நேரத்தில் எல்லாம் மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் சீனா மிகவும் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருந்தது.

மக்கள்தொகை, இந்தியா, சீனா

கட்டாய கருத்தடை

“நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படட 1975 இல், பல வட்சக்கணக்கான ஏழை மக்கள் கட்டாயம் கருத்தடை செய்துகொள்ள வற்புறுத்தப்பட்டனர். மனித உரிமைக்கு எதிரான இந்த நடவடிக்கை குடும்ப கட்டுப்பாடு திட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தியது என்கிறார் பேராசிரியர் டைசன்.

மேலும், இந்தியாவில் எமர்ஜென்சி அறிவிக்கப்படாமல் இருந்திருந்தாலும், குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை செயல்படுத்துவதில் அரசியல்வாதிகள் இன்னும் கூடுதல் முனைப்புடன் செயல்பட்டிருந்தாலும் நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் வேகமாக குறைந்திருக்கும்” என்கிறார் அவர்.

தென்கொரியா, மலேசியா, தாய்லாந்து, தாய்வான் உள்ளிட்ட கிழக்காசிய நாடுகள், இந்தியாவை விட மிகவும் தாமதமாக குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை கொண்டு வந்தாலும், நாட்டின் பிறப்பு விகிதத்தை வெகுவாக குறைத்தன. அதேபோன்று, தாய்- சேய் இறப்பு விகிதம் குறைப்பு, தனிநபர் வருமானம் அதிகரிப்பு மற்றும் தனிமனித வாழ்க்கை தர மேம்பாடு ஆகியவற்றில் இந்தியாவை இந்த நாடுகள் விஞ்சி நிற்கின்றன.

இந்தியாவுக்கு இனி இந்த அச்சம் தேவையில்லை

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுநாள்வரை இந்தியாவின் மக்கள்தொகை ஒரு பில்லியனுக்கு அதிகமாக (100 கோடி) கூடியுள்ளது. இன்னும் 40 ஆண்டுகளுக்கு நாட்டின் மக்கள்தொகை அதிகரிக்கதான் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், கடந்த பல ஆண்டுகளாக மக்கள்தொகை பெருக்கம் கணிசமாக குறைந்து வருவதாலும், மக்கள்தொகை பெருக்கத்தின் எதிர்விளைவுகள் குறித்த கணிப்புகள் தவிடுபொடி ஆக்கப்பட்டுள்ளதாலும், மக்கள்தொகை பெருக்கத்தை பேராபத்தாக கருதி இந்தியா இனி அச்சப்பட தேவையில்லை என்கின்றனர் வல்லுநர்கள்.

வருவாய் அதிகரிப்பு, பெண்களுக்கான கல்வி மற்றும் சுகாதார மேம்பாடு போன்ற அரசின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளால் இந்தியாவில் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் விகிதம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.

அதாவது 22 மாநிலங்களில், 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு பெண் அதிகபட்சம் இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் அளவுக்கு இந்தியாவில் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது என்கின்றனர் அவர்கள்.

எல்லா மதங்களிலும் குறைந்த பிறப்பு விகிதம்

1951 இல், ஆண்டுக்கு 2.19% ஆக இருந்த மக்கள்தொகை பெருக்க விகிதம், 2020 இல் 0.68% ஆக குறைந்துள்ளதாக பியூ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்து, முஸ்லிம், கிருஸ்துவம், பெளத்தம், சீக்கிய மற்றும் ஜெயின் என பல்வேறு மதங்களை சேர்ந்த பெண்களின் குழந்தை பிறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதையே இது காட்டுவதாக பத்தாண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய குடும்ப நல ஆய்வின் புள்ளிவிவரங்களை மேற்கோள்காட்டி இந்த மையம் தெரிவித்துள்ளது.

மக்கள்தொகை, இந்தியா, சீனா

தென் மாநிலங்கள் தான் முன்னணி

அதேசமயம், வடமாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் குழந்தைகள் பிறப்பு விகிதம் வேகமாக குறைந்து வருவதையும் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

“இந்த விஷயத்தில் தென் இந்தியாவை போல, நாட்டின் பிற பகுதிகள் இல்லாதது மிகவும் வருந்தத்தக்கது எனக் கூறும் பேராசிரியர் டைசன், மக்கள்தொகை பெருக்கம் வடமாநில மக்களின் வாழ்க்கை தரத்தை குறைத்துள்ளது” என்கிறார்.

ஐ.நா-வில் நிரந்தர உறுப்பினராகுமா இந்தியா?

மக்கள்தொகையில் சீனாவை விஞ்சியுள்ளதன் பயனாக, ஐநா பாதுகாப்பு சபையில் நிறுவன உறுப்பினராக மட்டுமே இருந்துவரும் இந்தியா, சீனாவை போல் தம்மையும் நிரந்தர உறுப்பினர் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையை உலக அரங்கில் இனி வலுவாக முன்வைக்கலாம்.

“உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்டுள்ள நாடு என்ற முறையில்,ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கான கோரிக்கை இந்தியாவிடம் உள்ளதாகவே கருதுகிறேன்” என்று ஐநாவின் சமூக, பொருளாதார விவகாரங்கள் துறையின் மக்கள்தொகை பிரிவு இயக்குநர் ஜான் வில்மோத் கூறுகிறார்.

இளமை மிளிரும் இந்தியா:

“ஏழ்மை, கல்வியறிவின்மை போன்ற குறைபாடுகள் இருந்தாலும், குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை திறம்பட செயல்படுத்தி, அதன் பயனாக ஆரோக்கியமான மனித வளத்தை இந்தியா பெற்றுள்ளது. பெரும்பாலான நாடுகள், தங்களது மக்களின் கல்வியறிவு மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திய பிறகே, குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை செயல்படுத்தியுள்ள நிலையில், இந்த விஷயத்தில் இந்தியாவின் செயல்பாடு குறிப்பிடத்தக்கது என்கிறார் பேராசிரியர் ஜேம்ஸ்.

அத்துடன், உலக அளவில் சராசரியாக 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களில், ஐந்தில் ஒருவர் இந்தியராக இருப்பதும், இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 47 சதவீதத்தினர் 25 வயதுக்கு குறைவானவர்கள் என்பதும் ஒட்டுமொத்த உலகிற்கே நல்ல செய்தி” என்று குறிப்பிடுகிறார் ஜேம்ஸ்.

பொருளாதார நிபுணரான ஸ்ருதி ராஜகோபாலன் கூறும்போது, “ இந்திய மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பேர், தாராளமயமாக்கல் பொருளாதார கொள்கை கொண்டு வரப்பட்ட 1990 களில் பிறந்தவர்கள். இந்த இளைஞர்கள் பட்டாளம் தங்களுக்கென தனித்துவமான திறன்களை கொண்டுள்ளனர். இவர்களின் தொழில்நுட்ப மற்றும் நுகர்வு கலாசாரம் சார்ந்த அறிவு, சர்வதேச அளவில் இந்தியா போட்டி போடுவதற்கான வாய்ப்பை அளித்துள்ளது” என்கிறார் அவர்.

மக்கள்தொகை, இந்தியா, சீனா

இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள்:

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தகவல்படி, இந்தியாவில் உழைக்கும் திறன்கொண்ட வயதில் உள்ள மக்களில் வெறும் 40 சதவீதம் பேருக்கு மட்டுமே இங்கு பணிவாய்ப்பு உள்ளது அல்லது அவர்கள் வேலைக்கு செல்ல விரும்புகின்றனர்.

மேலும், பணிபுரியும் வயதில் உள்ள பெண்களில் வெறும் 10 சதவீதம் பேர் மட்டும் இந்தியாவில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை சீனாவில் 69 சதவீதமாக உள்ளது என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், வேலைவாய்ப்பின்மை , குறைந்த ஊதியம் போன்ற காரணங்களால், கிராமப்புறங்களை சேர்ந்த இந்தியர்கள் சுமார் 20 கோடி பேர் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்குள் இடம்பெயர்ந்துள்ளனர். இதன் விளைவாக இங்கு நகரமயமாதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

“பணிநிமித்தமாக குடிபெயர்ந்து வரும் கிராமப்புற மக்களால் இந்திய நகரங்கள் வளர்ச்சி அடையலாம். ஆனால், இங்கு குடியேறும் மக்கள் எல்லோருக்கும் தரமான வாழ்க்கையை உறுதிப்படுத்த இயலுமா என்பது தான் நம்முன் உள்ள மிகப்பெரிய கேள்வி.

கிராமங்களில் இருந்து நகர்ப்புறங்களில் குடியேறுவோருக்கு தரமான வாழ்க்கை தரமுடியாமல் போனால் அது மேலும் சேரிகள் உருவாவதற்கும், புதிய நோய்கள் உண்டாவதற்கும்தான் வழிவகுக்கும் என்று அச்சம் தெரிவிக்கிறார்” குடிபெயர்வு நிபுணர் இருதய ராஜன்.

குழந்தை திருமணங்கள், இளம்வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய அவசியம் இந்தியாவில் இருப்பதாக கூறுகின்றனர் மக்கள்தொகை வல்லுநர்கள்.

 

ஒருவரின் பிறப்பு -இறப்பை முறையாக பதிவு செய்ய வேண்டிய தேவையும் இங்கு இன்னமும் இருப்பதாக தெரிவிக்கும் அவர்கள், பெண் குழந்தைகளைவிட ஆண் பிள்ளைகளின் பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பது குறித்தும் கவலை தெரிவிக்கின்றனர்.

 

பியூ ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, ‘‘மக்கள்தொகை கட்டுப்பாடு’ எனும் அரசியல் சொல்லாடல் இங்கு நாட்டின் மிகப்பெரிய சிறுப்பான்மையினரான முஸ்லிம்களை இலக்காக கொண்டதாக தெரிகிறது” என கூறப்படுகிறது.

முதுமை மீது தேவைப்படும் அதிக கவனம்:

1947 இல் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 5% பேர் 60 வயதை கடந்தவர்களாக இருந்தனர். ஆனால் இன்று 10 சதவீதம் பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களாக உள்ளனர். அதாவது கடந்த 75 ஆண்டுகளில் நாட்டில் முதியோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில், 2023 முதல் 2050 வரையிலான காலகட்டத்தில் சீனாவில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை சுமார் இரண்டு மடங்காகவும், இந்தியாவில் முதியோரின் எண்ணிக்கை இரண்டு மடங்கைவிட அதிகரிக்கக்கூடும் என்றும் ஐ.நா. மதிப்பிட்டுள்ளது.

இதன் விளைவாக முதியோர் ஆரோக்கியம் மற்றும் அவர்களுக்கான சமூக காப்பீடு திட்டங்களை செயல்படுத்துவது அரசுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று ஐநா எச்சரித்துள்ளது.

“உழைக்கும் வயதினரின் எண்ணிக்கை குறைந்து வருவதால், முதியோரை காப்பது அரசுக்கு பெரும் சுமையாக மாறி வருகிறது என்கிறார் ஆசி்ரியர் ருக்மணி.

முதியோர் தனிமையில் வாழும் அவலநிலை அதிகரித்து வருவது வருந்தத்தக்க விஷயம் என குறிப்பிடும் அவர், இந்த அவலநிலை மாற இந்தியாவில் குடும்ப கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்துகிறார்.

https://www.bbc.com/tamil/articles/c0xdzv9x9xno

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஏராளன் said:

இந்தியா மக்கள்தொகையில் உலகிலேயே முதலிடம் - இது வரமா, சாபமா?

இது இந்தியாவிற்கு கிடைத்த வரம்.

என் இனம் சார்பாக இந்திய அரசியலை நான் வெறுத்தாலும் அவர்களின் நோக்கங்கள் வெற்றியின் மேல் வெற்றிதான்.

உலக அரசியல் மற்றும் வணிபத்தை கவனித்தால் இந்தியாவின் கரம் இல்லாத இடங்களே இல்லை எனலாம்.

எனவே......

இந்தியாவை மீறி ஈழத்தமிழருக்கு ஒரு தீர்வு???????
சும்மா காமெடி பண்ணாதீங்க சார் :rolling_on_the_floor_laughing:


 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.