கொக்கிளாய் இராணுவ முகாம் மீதான புலிகளின் தாக்குதல்
தமிழர் தாயகத்தின் எல்லைகளில் உருவாக்கப்பட்டு வந்த சிங்கள குடியேற்றக் கிராமங்களினால் பல எதிர்பாராத , விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாயின. இவற்றுள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை இக்குடியேற்றங்களை எப்படியாவது தடுத்தே தீருவது என்கிற தமிழ்ப் போராளி அமைப்புக்களின் உறுதியான நிலைப்பாடு, போராளிகளின் நிலைப்பாட்டிற்கு எதிராக இராணுவத்தினர் தமிழ் மக்கள் மீது நடத்திய படுகொலைகள், இராணுவத்தினர் மேற்கொண்ட படுகொலைகளினால் ஏற்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் பாரிய இடப்பெயர்வுகள், தமிழ் மக்கள் சர்வதேசமெங்கிலும் அகதிகளாக அடைக்கலம் புகுந்தமை, தமிழர் பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டமை, போராளி அமைப்புக்களில் இணையும் இளைஞர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்தமை என்பவற்றோடு, சிங்களக் குடியேற்றவாசிகளை எப்பாடுபட்டாவது பாதுகாத்தே தீருவோம் என்று அரசும் இராணுவமும் சிங்கள மக்களுக்கு உறுதிவழங்கியமையினையும் குறிப்பிட முடியும்.
தமிழ்ப் போராளி அமைப்புக்களின் தலைவர்களால் அக்காலத்தில் வெளியிடப்பட்டு வந்த அறிக்கைகள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகளில் ஏற்பட்டு வந்த நுட்பங்கள், அவர்களின் போராட்டக் களத்தின் விரிவாக்கம் ஆகியவை சிங்களக் குடியேற்றங்களுக்கெதிராகப் போராடுவது எனும் அவர்களின் உறுதிப்பாட்டினை எடுத்தியம்பியிருந்தது.
1984 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இந்தியாவிலிருந்து வெளிவந்த தி ஜென்டில்மேன் எனும் பத்திரிகைக்கு பிரபாகரன் வழங்கிய செவ்வியில் குடியேற்றங்களுக்கெதிரான தனது உறுதியான நிலைப்பாடு குறித்து அவர் பேசியிருந்தார்.
கேள்வி : தமிழர்களின் மாவட்டமான திருகோணமலையிலிருந்து தமிழ மக்களை விரட்டியடித்துவிட்டு அப்பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்ற அரசாங்கம் முனைந்துவருவதாகக் கூறப்படுகிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் உங்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?
பிரபாகரன் : இதனை எதிர்த்துப் போராடுவதைத்தவிர வேறு வழிகள் எமக்கு இல்லை. அவர்களின் திட்டங்களைத் தோற்கடிக்க எம்மால் ஆன அனைத்து வழிகளிலும் போராடுவோம்.
1984 ஆம் ஆண்டின் மூன்றாம் வாரத்தில் சென்னையில் தங்கியிருந்த தமிழ்ப் போராளி அமைப்புக்களின் தலைவர்களை சட்டர்டே ரிவியூ பத்திரிக்கையின் ஆசிரியரான காமிணி நவரட்ண சந்தித்தபோது, சிங்களக் குடியேற்றங்களுக்கெதிராகப் போராடுவது எனும் தமது உறுதிப்பாடு குறித்து அவர்கள் தெளிவாகக் கூறியிருந்தனர். புலிகள், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ், டெலோ மற்றும் புளொட் ஆகிய அமைப்புக்களின் தலைவர்களைத் தனித்தனியாகச் சந்தித்த காமிணி நவரட்ண, அரசாங்கத்திற்கும் போராளித் தலைவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தையினை ஒழுங்குசெய்வதனூடாக தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வொன்றை உருவாக்க முனைந்திருந்தார். கொழும்பில் ஜெயவர்த்தனவையும், லலித் அதுலத் முதலியையும் சந்தித்து விட்டே அவர் சென்னைக்குப் பயணமாகியிருந்தார். ஜெயாரின் விருப்பத்தின்பேரிலேயே நவரட்ணவின் பயணம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்ததாக அரசியல் அவதானிகள் அன்று தெரிவித்திருந்தனர்.
நவரட்ணவுடன் பேசிய போராளிகளின் தலைவர்கள் அரசியல்த் தீர்வுகுறித்து ஜெயாருடன் பேசுவதற்குத் தாம் தயாராக இருப்பதாகக் கூறினர். இதன்பின்னர் சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய காமிணி நவரட்ண, ஜெயவர்த்தனவுடன் அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதற்கு எந்தப் போராளித் தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவிப்பதாக நான் நினைக்கவில்லை, ஆனால் அவ்வாறான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கான உகந்த சூழல் ஏற்படுத்தப்படவேண்டும் என்று அவர்கள் கேட்கின்றனர் என்று கூறினார்.
தமிழர்களுக்கான தீர்வினை இராணுவ ரீதியில் வழங்கவே ஜெயவர்த்தன முழுமூச்சுடன் முயன்றுவருவதாக நவரட்ணவிடம் தெரிவித்த போராளிகள், ஜெயார் விரும்பியபடி தாமும் அதே பாணியிலேயே அவருக்குப் பதிலளிக்கக் காத்திருப்பதாகக் கூறினர். நவரட்ணவுடனான சந்திப்பின் பின்னர் பத்திரிக்கையாளர்களுடன் பேசிய பாலசிங்கம், "எம்மை இராணுவ ரீதியில் தோற்கடிக்க முடியாது எனும் யதார்த்தத்தினை அரசாங்கம் உணர்ந்துகொள்ளும்வரை அதன் மீதான இராணுவத் தாக்குதல்களை நாம் தீவிரப்படுத்துவோம்" என்று கூறினார்.
மாசி 13 ஆம் திகதி போராளிகளின் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அன்றிரவு இலங்கை இராணுவத்தின் முகாம் ஒன்றின்மீது புலிகள் தாக்குதல் தொடுத்தனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாம் மீது ஆர்.பி.ஜீ க்கள், மோட்டார்கள் மற்றும் கிர்ணேட்டுக்கள் கொண்டு சுமார் 100 போராளிகள் அடங்கிய புலிகளின் அணி தாக்குதலில் ஈடுபட்டது. சுமார் நான்கு மணித்தியாலங்கள் நீடித்த இத்தாக்குதலில் இராணுவத்தினரில் 106 பேரைத் தாம் கொன்றுவிட்டதாகவும், தமது தரப்பில் 16 போராளிகள் வீரமரணம் எய்தியதாகவும் சென்னையில் புலிகள் அறிவித்தனர். இத்தாக்குதலினால் சிங்களவர்கள் அச்சமடையக் கூடும் என்று அஞ்சிய அரசாங்கம் இத்தாக்குதலை மூடி மறைக்க எத்தனித்தது. ஆகவே இத்தாக்குதல் குறித்து பாதுகாப்பு அமைச்சு விடுத்த அறிக்கையில் நான்கு இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் பயங்கரவாதிகளில் 14 பேரைத் தாம் கொன்றுவிட்டதாகவும் கூறியிருந்தது.
ஆனால் கொக்கிளாய்ச் சண்டையின் முக்கியத்துவம் குறித்து இராணுவ ஆய்வாளர்களும், விமர்சகர்களும் பேசியிருந்தனர். இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கெதிராகப் போராடுவது எனும் தமிழ்ப் போராளிகளின் உறுதிப்பாட்டை, குறிப்பாக புலிகளியகத்தின் உறுதிப்பாட்டையே கொக்கிளாய் இராணுவ முகாம் மீது அவர்கள் நடத்திய தாக்குதலின் வீரியமும், அவர்கள் பயன்படுத்திய உத்திகளும் சுட்டிக் காட்டுவதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் கொக்கிளாய்ச் சமரை முழு அலவிலான ஆயுத மோதல் என்றும் அவர்கள் கணித்தனர். மிக அண்மையில் உருவாக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் கட்டியமைக்கப்பட்டிருந்த கொக்கிளாய் இராணுவ முகாமையே தமது இலக்காக புலிகள் தேர்ந்தெடுத்திருந்தனர் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.
கொக்கிளாய்ச் சண்டையில் ஈடுபட்ட புலிகளின் அணி இத்தாக்குதலுக்கென்று பயிற்சிகளை மேற்கொண்டிருந்ததுடன், பலவகையான ஆயுதங்களையும் இத்தாக்குதலின்போது பாவித்திருந்தது. முற்றான இராணுவச் சீருடையில் காணப்பட்ட புலிகள், தம்முடன் உணவுப் பொட்டலங்கள், குடிநீர், மருந்துப்பொருட்கள் என்பவற்றையும் எடுத்து வந்திருந்தனர். இரவுநேரத்தில் பார்க்கும் வசதி கொண்ட கண்ணாடிகள், நவீன ஏ கே 47 வகை இரக தானியங்கித் துப்பாக்கிகள், எம் 16 ரைபிள்கள், மோட்டார்கள், உந்துகணைச் செலுத்திகள் போன்ற ஆயுதங்கள் புலிகளால் பாவிக்கப்பட்டன. மேலும் சண்டையின்போது எதிரியைத் தேடுவதற்கான தேடும் விளக்குகளையும் அவர்கள் கொண்டுவந்திருந்தனர்.
சண் பத்திரிக்கை இத்தாக்குதலை பத்தோடு பதினொன்றாவதாக கூறிக் கடந்து செல்லவில்லை. மாறாக பாரிய இராணுவ முகாம் ஒன்றினை நேருக்கு நேர் எதிர்த்து அழிக்க புலிகள் நடத்திய தாக்குதல் என்று வர்ணித்தது. தேசிய பாதுகாப்புச் சபைக்கு இத்தாக்குதல் குறித்து விளக்கமளித்த ரவி ஜயவர்த்தன புலிகளின் இத்தாக்குதல் மிகவும் மூர்க்கத்தனமான நேரடிச் சண்டையாக இருந்ததாகவும், இதன்மூலம் அவர்கள் மிகவும் திறமையான எதிரியாக வளர்ந்திருப்பது தெளிவாகிறது என்றும் கூறியிருந்தார். மாசி 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசிய ஜெயார், கொக்கிளாய் தாக்குதலின் மூலம் இலங்கையின் ஆயுதப்போரின் குணாதிசயம் மாற்றப்பட்டிருக்கிறது என்று கூறினார்.
அன்றிலிருந்து தொடர்ச்சியாகப் போராடிவரும் புலிகள் இயக்கம், 2000 ஆம் ஆண்டில் ஜெயாரினால் 1985 ஆம் ஆண்டிலிருந்து சிறிது சிறிதாக ஆக்கிரமிக்கப்பட்ட தமிழரின் தாயகத்தின் குறிப்பிடத்தக்களவு பிரதேசத்தினை விடுவிக்கும் வல்லமையினைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. 2002 இல் பிரபாகரனின் தளபதியாகவிருந்த கருணா குறிப்பிடும்போது, பதவியாவரை எம்மால் செல்லக்கூடிய பலம் இருந்தது ஆனால் தலைவர் அதனைச் செய்யவேண்டாம் என்று கூறிவிட்டார் என்று கூறியிருந்தார். தமது போராடும் அணிகளைப் பரவலாக்கி, செறிவைக் குறைப்பதை விரும்பாததானாலேயே தலைவர் அதனைச் செய்யவில்லை என்றும் கருணா ஊடகவியலாளர்களிடம் கூறினார். சில தமிழ் இராணுவ ஆய்வாளர்கள் இன்னும் சில விடயங்களைக் கூறியிருந்தனர். வெலி ஓயவில் இராணுவத்தினரின் ஒரு பகுதியை முடக்கிவைத்திருப்பதன் மூலம் அரசாங்கத்தின் பாதுகாப்புச் செலவீனத்தை அதிகரிக்கவைப்பதும் பிரபாகரனின் நோக்கமாக இருக்கலாம் என்று அவர்கள் கருதினர்.