Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையறாஜா நிகழ்வால் வந்து ஒரு பதிவு

Featured Replies

இசையோ, இலக்கியமோ அதை அனுபவிப்பது என்பது எம்முள் அது வியாபிக்கும் போது தான் சாத்தியப்படும். நாமிருக்கும் உலகில் இருந்து மட்டுமல்ல, எம்மில் இருந்துகூட எமது அகவெளியில் ஒரு தனி உலகு கோதி எடுக்கப்பட்டு அதற்குள் நாம், அந்த இசையினதோ இலக்கியத்தினதோ பூரண கட்டுப்பாட்டில் திளைத்துக் கிடக்கவேண்டும். அப்போதுதான் அந்த பூரண இனிமை எமக்குக் கைகூடும். இனிமை திணறும். இந்தத் தனியுலகைக் கைப்படுத்துவதற்கு மிகவும் ஏதுவான நிலைமை தனிமை. இதுவே எனது நிலைப்பாடு என்பதால் நான் பொதுநிகழ்வுகளிற்குச் செல்வது அருமை. படைப்பாளியைக் காட்டிலும் படைப்பில் தான் அதிகம் அக்கறை என்பதால், படைப்பாளியைப் பார்க்கவேண்டும் கைகுலுக்கவேண்டும் என்று தோன்றுவதில்லை. அவன் தான் தனது ஆன்மாவைப் பிழிந்து படைப்பாக்கி அந்தப் படைப்பையே எம்மிடம் கொடுத்துள்ளானே அதற்குமேலால் என்னத்தை அவனில் பார்க்கப்போகின்றோம் என்பது எனது எண்ணம் (சில எழுத்தாளர்கள் சார்ந்து அரிதாக சந்திக்கும் ஆவல் ஏற்பட்டிருக்கிறது தான், ஆனால் வெகு வெகு அரிது.) இதனால் இளையறாஜா நிகழ்ச்சிக்கு நான் போவதாய் இருக்கவில்லை.
 
வெள்ளிக்கிழமை காலை வேலைக்குப் புகையிரதத்தில் சென்றுகொண்டிருந்தேன். புத்தகம் ஏதும் இருக்கவில்லை. அதனால் கனேடிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை (C.B.C) காதுக்குள் ஒலிக்கவிட்டபடி சென்று கொண்டிருந்தேன். நான் சற்றும் எதிர்பார்க்காத வகை ஒரு தமிழர் பற்றிய ஒலிப்பேளை ஒலிபரப்பாகியது. றாஜீவ் என்ற இயற்பெயரும், Prophecy என்ற புனைபெயரும் கொண்ட ஒரு கனேடிய ஈழத்தமிழ் இ;ளைஞன்பற்றியது அது.
 
"அப்பா இல்லை. அம்மா தனித்து என்னை வளர்த்ததால் வாடகை வசதிப்பட்ட ஆபத்தான இடத்தில் குடியிருப்பு. அப்போது எனக்குப் பதின்மூன்று வயது. சும்மா பலரும் சொல்வது போலன்றி, என் அம்மா உண்மையில் மூன்று வேலை செய்து தான் தினம் ஒரு நேர உணவை எம்மால் உண்ண முடிந்தது. வாடகை போன்ற இதர செலவுகள் போக, நாளைக்கு ஒரு உணவிற்கே அம்மாவின் மூன்று வேலை ஊதியம் போதியது. அம்மா கடினமாக உழைப்பதைச் சகிக்க முடியவில்லை. ஏதேனும் வேலை செய்யவேண்டும் என்று நினைத்தேன். உழைப்பதற்கான வயதில்லை என்று வேலை கிடைக்கவில்லை. ஒரு தந்தை அடையாளத்திற்காக என் மனம் ஏங்கியது. அப்போது தான் எனது சுற்றாடலில் அவர்களைக் கண்டேன். விலையுயர் கார்களில் நாகரிக உடை அணிந்து திரிந்தார்கள். பணம் பண்ண வயது பிரச்சினை இல்லை என்றார்கள். என்னைத்; துவட்டிய நான் ஏங்கிய அப்பா வெற்றிடத்தை அண்ணாக்களாக நிறைத்தார்கள். அவர்கள் கனேடிய தமிழ் வன்முறைக்குழுவினர். அவர்களால் ஏகப்பட்ட சிக்கல்களில் நான் மாட்டி, காவல்துறையால் சிறையனுப்பப்பட்டேன். தினம் ஒரு உணவிற்கு மட்டுமே காசு சரிப்பட்ட அம்மா, இல்லாத காசை எவ்வாறோ புரட்டி என்னை பெயிலில் எடுத்தார். அப்போது தான் ஒரு மாமா துணைக்கு வந்தார். என்னையும் என் அன்னையையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். பாதுகாப்பான அவரது மிசிசாகா வீட்டுச் சூழலில் வாழ்வில் முதன்முறையாகப் பயமின்றி பாதுகாப்புணர்வுடன் நான் பள்ளி சென்றுவந்தேன். என் மாமா என் இசையார்வத்தை நான் தொடர்வதற்காக தன்காசில் உபகரணங்கள் வாங்கித் தந்தார். அவ்வாறு நான் ஒலிப்பதிவு செய்த "I have a dream" ('எனக்கொரு கனவிருக்கிறது') என்ற மாட்டின் லூத்தர் கிங்கின் பாதிப்பில் உருவான ஒரு சொல்லிசைப்பாடல் எனது சமூகத்தின் பலத்த வரவேற்பைப் பெற்றது. முள்ளிவாய்க்காலிற்குச் சற்று முந்திய இந்தக் காலப்பகுதியில் எனது பாடல் மக்களிற்கு மருந்தானது. நான் பிரபலமானேன்.
 
மேடைகள் எனக்குச் சாதாரணமாகின. எவருமே கவனிக்காது கிடந்து பழகிய எனக்கு இந்த வெற்றி புதிதாக இருந்தது. நான் தலைக்கனமிக்கவனானேன். என் நண்பர்களோடு சண்டையிட்டேன். எனது காதலியைத் தூக்கியெறிந்தேன். குடித்துக் கும்மாளமிட்டேன். தலைகால் தெரியாது நடந்துகொண்டேன். என் வாழ்வு மீண்டும் சரியத் தொடங்கியது. மீண்டும் சட்டம் என்னைநோக்கிச் சாட்டை வீசியது. நான் வெறும்பயலாயப் படுத்துக் கிடந்தேன். மதியம் தாண்டி ஒரு மணிக்குப் பின் தான் தூக்கத்தால் எழுவேன். இலக்கின்றிக் கிடந்தேன். அப்போது என் அம்மா இரண்டாம் முறையாக இல்லாத பணத்தை எவ்வாறோ புரட்டினார். என்னைப் பார்த்துச் சொன்னார். இந்த உலகில் நீ பிறந்ததில் இருந்துஇந்தச் சமூகம் உன்னை மனிதனாய்ப் பார்த்தது நீ இசையோடு சேர்ந்தபோது தான். அது மட்டும் தான் உன்னிடம் உண்டு. அதைப்பற்றித் தான் நீ எழவேண்டும். வெளிக்கிடு இந்தியாவிற்கு என்று எனது தாயார் மீண்டும் என்னைத் தூக்கிவிட்டார். நான் சென்னை சென்றேன். அமீர் என்னை அடையாளங்கண்டார். இன்று ஆதிபகவனில் எனது பாடல் வருகிறது.
 
ஆனால் எனக்கினித்தலைக்கனம் வராது. எனது இசை மட்டும் அன்றி நான் ஒரு மனிதனாகவும் வளர்ந்துவிட்டேன். எனக்கு வாழ்வில் இப்போது ஒரு நம்பிக்கை தெரிகிறது. போற்றவேண்டிய விடயங்கள் புரிகின்றன. என் அன்னையின் அர்ப்பணிப்புப் புரிகிறது. கடவுளை நான் அதிகம் நம்புகிறேன். வாழ்வு இனிச் சீராகச் செல்லும் என்று தோன்றுகின்றது. என்னைப்போன்ற ஒரு தமிழன் இசையினால் பிளைக்கணும் என்றால் அது தமிழகத்தில் தான் சாத்தியம். அந்தத் தமிழகம் எனக்கு இப்போது ஒரு பாதையினைத் தந்துள்ளது"
 
ஏறத்தாள அந்த இளைஞனின் பேட்டியின் சாராம்சம் அப்படித் தான் இருந்தது. எனது மண்டையில் யாரோ சுத்தியலால் தாக்கியது போலிருந்தது. எனது தாயகம் தொடர்பில் எனது மசாட்சிக்கு எந்த உழல்தலையும் கொடுக்காதவகை எனது வாழ்வு நகர்ந்தது. முள்ளிவாய்க்காலின் பின்னரும் எனது மனசாட்சி நிம்மதியாய் உறங்கும் வகை மனிதாபிமானம் தொடர்கிறது. ஆனால் நான் வாழும் அதே மாகாணத்தில் எனக்குச் சிலமணிநேர தூரத்தில் ஒரு தமிழ்ச்சிறுவன் நாளைக்கு ஒருநேர உணவு மட்டுமே உண்ண முடிந்து பசியோடு கிடந்தான் என்ற செய்தியினை எனது காதிற்குள் சி.பி.சி அறைந்தபோது மனசு பிசைந்தது. அப்போது அந்த ஒலிப்பேளை சொன்ன ஒரு உதிரித் தகவல் மனதின் முற்புறத்திற்கு வந்தது. அந்த இளைஞன் இன்று நம்பிக்கையோடு பயணிப்பதற்குத் தென்னிந்திய திரையுலகு தான் வழி செய்தது என்பது மட்டுமன்றி, புலம்பெயர் சமூகத்தில் இரண்டாம் தலைமுறைக்குக் கூட கோடம்பாக்கம் ஒரு பற்றிக்கொள்ளக் கூடிய கிளையாய் இருக்கிறது என்பது தெரிந்தது. அந்த இளைஞனிற்கு அந்த நம்பிக்கைக் கீற்றை வழங்கிய அந்தத் திரையுலகிற்கு ஒரு நன்றி செலுத்தத் தோன்றியது. இளையறாஜா நிகழ்விற்குப் போக முடிவெடுத்தேன்.
 
சனிக்கிழமை நிகழ்விற்கு வெள்ளி காலையில் ரிக்கற் கிடைப்பது அரிது என்று தோன்றியது. தெரிந்த சிலரைத் தொடர்பு கொண்டபோது வி.வி.ஐ.பி ரிக்கற்றுக்கள் மட்டும் தான் சாத்தியம் என்றார்கள் (நிகழ்வில் ஏகப்பட்ட இருக்கைகள் சாதார ரிக்கற்றிற்குரிய இருக்ககைகள், காலியாய் இருந்தது வேறுகதை). இரண்டை வாங்கிக்கொண்டேன். இப்போது நிகழ்வால் வந்து தான் இதனை எழுதுகிறேன்.
 
எனக்கு நிகழ்வு 90 வீதம் பிடிக்கவில்லை. பாலசுப்பிரமணியத்தின் மடைதிறந்து, கார்த்திக்கின் இரு பாடல், இளையறாயாவின் சில பாடல், விவேக்கின் நிகழ்வு, இப்படி தொட்டுத்தொட்டாக ஒரு பத்துவீதம் மட்டும் பிடித்தது. பாடல்களை யார் தெரிவுசெய்தார்கள் என்று தெரியவில்லை, இளையறாஜாவைக் கூட்டிவந்து வைத்து ஏதோ கத்தினார்கள். கார்த்திக் திறமை மிக்கவர் தான், ஆனால் 'என் இனிய பொன்நிலாவே' பாடலைக் கார்த்திக் பாடியபோது எழுந்து சென்று கன்னத்தில் ரெண்டு போட்டால் என்ன என்று தோன்றியது. அன்னக்கிளி பாடலைக்கூட சித்திரா கொலைசெய்திருந்தார். வி.வி.ஐ.பி ரிற்கற் என்று காசை வாங்கி விட்டு வாங்கு போலக் கதிரை போட்டிருந்தார்கள். ஐந்து மணிக்கு நிகழ்வென்று, வாங்கில் வந்து குந்தச் செய்துவிட்டு, ஏழு மணிக்கு நிகழ்வு தொடக்கினார்கள். இளையறாஜாவால் ரசிகர்களுடன் connect பண்ண முடியவில்லை. கரகோசத்தையும் எழுந்துநின்று பாராட்டுவதையும் இரந்து பெற்றுக்கொண்டார்கள். இசை நிகழ்ச்சி பார்ப்பதற்கான பக்குவமற்ற பல பீடைகள் வந்திருந்து தண்ணியைப் போட்டுட்டு கத்தி மறைத்துக் கிடந்தார்கள். இசையை இரசிப்பதற்கான உள் உலகத்தைக் கோதி எடுக்க முடியவில்லை. அதற்கான பக்குவம் எனக்குச் சாத்தியப்படவில்லை. ஒரு இருட்டறையில் இருந்து இளையறாஜா பாடல்களை காதுக்குள் ஒலிக்கவிட்டு இந்த 7 மணிநேரத்தைச் செலவிட்டிருப்பின் மிகுந்த மகிழ்ச்சி கிடைத்திருக்கும். அதை விட்டு சொந்தக் காசில் சூனியம் வைத்து வந்தது தான் மிச்சம்.
 
ஒரு இசை நிகழ்விற்குச் சென்று வந்தால் மனது இறகாய்ப் பறக்கணும். ஆனால் இன்று இரும்பாய்க் கனக்கிறது. இத்தனை செலவில் இவர்களை அழைத்து வந்தவர்களிற்கு, நிகழ்வை எவ்வாறு சிறப்புற வடிவமைப்பது என்று சிந்திப்பதற்குத் தோன்றவில்லை என்பது பலத்த ஏமாற்றமாக இருக்கிறது. இளையறாஜாவின் எண்பதுகளின் முத்துக்களை மட்டும், அதைச் சரியாகப் பாடக்கூடியவர்கள் மூலம் பாடவைத்து, அவை பற்றிய இசைநுணுக்கங்களை இளைறாஜா வாயால் சொல்லவைத்துச் சென்றிருந்தால், இன்று பாடப்பட்டதில் அரைவாசிப்பாடல்கள் மட்டுமே பாடப்பட்டிருப்பினும் திருப்த்தி கிடைத்திருக்கும். அதைவிட்டுக், கடமைக்குக் கத்திச் சென்றார்கள்.
 
வாழ்வில் உணர்ச்சிவசப்பட்டு நான் செய்த எந்தக் காரியமும் உள்ளார்ந்த வெறுப்பையே எனக்கு இது வரை சம்பாதித்துத் தந்தன. இந்நிகழ்வு கூட உணர்ச்சிவசப்பட்டுச் செல்லணும் என்று நான் முடிவெடுத்துச் சென்று, நொந்து நூடில்சாகி வீடு வந்துசேர்ந்தது தான் மிச்சம்.

Edited by Innumoruvan

  • Replies 70
  • Views 6.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
வாழ்வில் உணர்ச்சிவசப்பட்டு நான் செய்த எந்தக் காரியமும் உள்ளார்ந்த வெறுப்பையே எனக்கு இது வரை சம்பாதித்துத் தந்தன. இந்நிகழ்வு கூட உணர்ச்சிவசப்பட்டுச் செல்லணும் என்று நான் முடிவெடுத்துச் சென்று, நொந்து நூடில்சாகி வீடு வந்துசேர்ந்தது தான் மிச்சம்.
உணர்ச்சி வசப்பட்டு ஒன்றும் செய்யக்கூடாது என்றீயள்....
  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றிகள், இன்னுமொருவன்!

 

நான் வாழ்கின்ற நகரத்திலும், எத்தனையோ இளங்குருத்துகள் துளிர்க்க விரும்பவில்லை!

 

நானும் விடுதியில் இருந்த காலங்களில், அப்பா என்னைப்பார்க்க வரும்போது இரண்டு ரூபாய்கள் மட்டும் தருவார். பின்பு அடுத்தமுறை வரும்போது, அதற்குக் கணக்குக் கேட்பார். அதன்பின்பு தான், அடுத்த இரண்டு ரூபாய்கள் தரப்படும்.  இதற்கு எங்களது வறுமை காரணமில்லை. அந்த நேரத்தில் அவர் மீது, கோபம் ஏற்பட்டபோதும், பின்பு அதற்க்கான காரணம் புரிந்த போது வருத்தப்பட்டதும் உண்டு! அதே போலத்தான் இங்கேயும் இளசுகள் படிக்க வேண்டிய நேரத்தில், தலைக்கு மையடிச்சுக்கொண்டு திரியுதுகள். போதை வஸ்துப் பாவனை, ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கின்றது என்று, ஒரு அக்கறையுள்ள மருத்துவ நண்பி, அண்மையில் கவலைப்பட்டுக் கூறினார்.

 

சரி, அதை விடுவோம், ஒரு புலியோ, சிங்கமோ அல்லது மயிலோ, அது வாழும் சூழலில் தான் அழகாக இருக்கும். அதுபோலத் தான் தமிழிசையும் என நினைக்கிறேன். தமிழ் நாட்டில் கேட்கும்போது நன்றாக இருக்கும் போல! வியாபாரம் என்று வரும்போது இசையைப் பணம் பின் தள்ளிவிடுமோ தெரியாது! :o

 

ஒரு வேளை வி.ஐ.பி சீட்டு எடுத்ததால், உங்கள் எதிபார்ப்பு அதிகமாக இருந்திருக்கலாம்! :D

நானும் நொந்து நூடில்சாகித்தான் போனேன்.   இத்தனை வருடங்களாக பல நூற்றுக்கணக்கான இசைநிகழ்ச்சிகள் செய்த இளையராஜாவுக்கு இந்நிகழ்ச்சியை மட்டும் ஏன் சிறப்பாகச் செய்ய முடியாமல் போய்விட்டது?  இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்துக் கலைஞர்களும் அவரது குழுவில் வந்தவர்கள்தான்.  இது முழுக்க முழுக்க இளையராஜாவின் பொறுப்பேயன்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் கவனக்குறைவாகத் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் நொந்து நூடில்சாகித்தான் போனேன்.   இத்தனை வருடங்களாக பல நூற்றுக்கணக்கான இசைநிகழ்ச்சிகள் செய்த இளையராஜாவுக்கு இந்நிகழ்ச்சியை மட்டும் ஏன் சிறப்பாகச் செய்ய முடியாமல் போய்விட்டது?  இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்துக் கலைஞர்களும் அவரது குழுவில் வந்தவர்கள்தான்.  இது முழுக்க முழுக்க இளையராஜாவின் பொறுப்பேயன்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் கவனக்குறைவாகத் தெரியவில்லை.

 

நாளைக்கு ஆரூம் வந்து,

 

;இளையராஜா பழி வாங்கினாரா?

 

என்று தலையங்கம் போடாதவரைக்கும் சந்தோசம்! :D

 

எதுக்கும் அர்ஜுனையும், நிழலியையும் ஒருக்காக் கேட்டுப்போட்டுச் செய்வம்! :o

Edited by புங்கையூரன்

இன்னுமொருவன் அண்ணா, நடைபெற்ற சம்பவங்களை கோர்த்து தந்திருக்கிறீர்கள். நன்றி பகிர்வுக்கு.

என்னை பொறுத்தவரை தென்னிந்திய சினிமா கலைஞர்களுக்கு நாம் கொடுக்கும் வரவேற்பை எமது கலைஞர்களுக்கு நாம் கொடுப்பதில்லை. அதனால் தான் எமது கலைஞர்களின் திறமைகள் பெரிதாக வெளிவரவில்லை. அவர்கள் வளர்ச்சியும் புலம்பெயர் தேசத்தில் எடுபடவில்லை. போட்டிகள் வைத்து திறமையுள்ளவர்களை தெரிந்தெடுத்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அப்பொழுது தான் எமது கலைகள் வளரும்.

 

ஒரு இருட்டறையில் இருந்து இளையறாஜா பாடல்களை காதுக்குள் ஒலிக்கவிட்டு இந்த 7 மணிநேரத்தைச் செலவிட்டிருப்பின் மிகுந்த மகிழ்ச்சி கிடைத்திருக்கும். அதை விட்டு சொந்தக் காசில் சூனியம் வைத்து வந்தது தான் மிச்சம்.

இது தான் எனது நிலை. எந்த தென்னிந்திய இசைக்கலைஞர்கள் வந்தாலும் அவர்கள் நிகழ்வுக்கு செல்வதில்லை என்பது. அவர்கள் பாடல்களை கேட்பதென்றால் வீட்டிலேயே கேட்கலாம். அதற்கு செலவழிக்கும் பணத்தை வேறு நடவடிக்கைகளுக்கு செலவழிக்கலாம்.

 

வாழ்வில் உணர்ச்சிவசப்பட்டு நான் செய்த எந்தக் காரியமும் உள்ளார்ந்த வெறுப்பையே எனக்கு இது வரை சம்பாதித்துத் தந்தன. இந்நிகழ்வு கூட உணர்ச்சிவசப்பட்டுச் செல்லணும் என்று நான் முடிவெடுத்துச் சென்று, நொந்து நூடில்சாகி வீடு வந்துசேர்ந்தது தான் மிச்சம்.

நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுத்திருந்தாலும், உணர்ச்சிவசப்படாமல் ஏற்கனவே நிகழ்வுக்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்திருந்த தமிழச்சி அக்காவுக்கும் நிகழ்வு பிடிக்கவில்லை. எனவே நிகழ்வு நன்றாக இருந்ததா இல்லையா என்பது உணர்ச்சிவசப்படுவதில் தங்கியில்லை. ஆனால் செல்ல வேண்டும் என்று இறுதியில் முடிவெடுத்த உங்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளித்ததால் செல்லாமல் விட்டிருக்கலாமோ என்று அடிக்கடி தோன்றும். அது இயல்பு...

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு ஆரூம் வந்து,

 

;இளையராஜா பழி வாங்கினாரா?

 

என்று தலையங்கம் போடாதவரைக்கும் சந்தோசம்! :D

 

எதுக்கும் அர்ஜுனையும், நிழலியையும் ஒருக்காக் கேட்டுப்போட்டுச் செய்வம்! :o

அப்படியே எங்கட இசையும் வரட்டும் ஒரு சொல்லு கேட்ப்பம்  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊரில் இளைஞர் விழாவுக்கு வருடாவருடம் நடாத்தப்படும் யாழில் பிரபலமான எம்மவர்களின் இசை நிகழ்ச்சிகள்(கோஸ்டி)

மற்றும் பஜனைகள் தவிர இப்படி எந்த ஒரு நிகழ்வுக்கும் போயிரததால் இன்னுமொருவன் அண்ணாவின் காத்திரமான எழுத்துக்கள் மூலம் தரிசிக்கலாம் என்று பார்த்தால் நேரடியாக இல்லாவிடினும் இன்னொருவர்(வன் அண்ணா) மூலம் பலன் பெறும் சாத்தியக் கூறுகளை இளையராஜா கெடுத்துவிட்டார். :(:rolleyes:

 

இசை நடத்தியவர்களும் சரி,ஒழுங்கமைப்பு செய்தவர்களும் சரி கலை என்பதை மறந்து கடமைக்குச் செய்தார்களோ தெரியாது

அல்லது இதற்கு முதல் ஏற்பாடு செய்த போது எழுந்த விமர்சனங்கள்,கல்லெறிகள்,உள்ளக அரசியல் குறித்து செவிப்புலச் செய்திகளை மட்டும் வைத்து விமர்சனம் செய்வதும் அவ்வளவு உசிதமா என்பதற்கப்பால்,

 

இன்னுமொருவன் அண்ணாவின் இந்த எழுத்துக்கள் இரண்டு,மூன்று தரம் படித்துக் கிரகிக்கும் நிலையில் இல்லாது மிக இலகுவாக இருப்பது " எந்தளவு தூரம் நொந்து நூடில்ஸ்" ஆகியிருப்பார் என்பதை உணர்த்தி நிற்கிறது.

உண்மையில் இந்த வசனநடை உங்களிடம் இருந்து வரும் போது சிரிப்பை அடக்க முடியவில்லை. :D

 

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் இன்னுமொருவன்.

பல்கலையில் படிக்கும் போது எனது சுட்டிலக்கம் 4, எனக்கு முன்னே இருந்தவர்கள்,திறமையானவர்கள் -என்னைவிட- அத்தோடு நல்ல நண்பர்கள். பல்கலை சோதனைகள் தெரிந்திருக்கும்தானே பெரும்பாலும் கேள்வி பேப்பர் வெளியே கொண்டுவர முடியாது, பொதுவில் 20 அல்லது 40 கேள்விகள் கொண்ட கேள்விதாள்கள். எங்களது கனிஷ்ட மாணவர்களுக்காய், ஒவ்வொருவரும் தங்கள் சுட்டிலக்கத்தை கொண்ட கேள்வியை மனனம் செய்து கொண்டு வரவேண்டும். சோதினை முடிந்து வர வெளியே வாசலில், விரிவுரையாளர்கள்/பல்கலை ஊழியர்களின் கண்ணில் படாமல், ஹோரிடோர் வழியே கனிஷ்ட மாணவர்கள் எங்களுக்காக காத்திருப்பார்கள்.அவர்களிடம் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட கேள்வியை சொல்ல வேண்டும். அவர்களும் ராக்கெட் வேகம் என்று சொல்லுவோமே அந்த வேகத்தில் எழுதி ஒரு முழு கேள்வி தாளையே உருவாக்குவார்கள்.

சில சோதனைகளில்/ செய்முறை சோதனைகளில், ஒரு ஐந்து ஐந்து பேராய் , அல்லது பத்து பத்து பேரை மாத்திரமே உள் எடுப்பார்கள், அந்தே நேரத்திலும், நாங்கள் ஒரு நாலைந்து பேர் முழுக் கேள்வியையுமே, சொல்லி விடுவோம்- பிரதானமாக எங்களுது விடைகளை சரி பிழை பார்பதற்காக...மற்றவர்கள் வருவதர்ற்கு முன் புத்தகங்களில் பார்த்தும் வைத்து விடுவோம்..

பிறகு வருபவர்களுக்கு, கேள்வியே சொல்ல வேண்டிய தேவை இருக்காது; அவர்கள் பிரதானமாக பார்ப்பது தங்களது விடைகள் சரியோ என, எங்களுது விடைகளுடன் ஒப்பிடுவதே. -( எனக்கு முன் இருந்த 3 பேரும் வைத்திய நிபுணர்களாக இலங்கையிலும் பிற நாடுகளில் உள்ளார்கள்)

ஏன் இதை சொன்னேன் என்றால்;

எங்களை எல்லாம் நினைத்து, நித்திரை கொள்ளலாமல், இருந்த களைப்புடன் ஒரு முழுமையான பதிவை தந்த இன்னுமொருவனுக்கு ஒருவரியில் பதில் சொல்ல மனம் ஒத்துக்கொள்ளவில்லை.

அதேநேரம் அவரும் எங்களைப் போன்ற உணர்வில் தானோ எழுதியிருப்பார் என்றும் யோசித்து பார்த்தேன் ஆதனால் வந்த பதிவே இது.

இசை நிகழ்சிகளை போய் பார்ப்பது ஒரு வித்தியாசமான அனுபவம்; சிலவேளைகளில் இந்த நிகழ்வு மிகவும் மோசமானதொன்றாக இருக்கலாம், ஆனால் பொதுவில் அவை பதிவு செய்து பார்பதிலும் மிகவும் வேறு பட்டவை. - எனக்கு தெரிந்த இசை அறிவின் படி- இன்னுமொரு நல்ல உதாரணம், ஒரு கால் பந்தாட்டத்தை, ஒரு கிரிகெட் போட்டியை நேரே பார்பதர்ற்கும் வீடியோவில் பார்பதர்ற்கும் இடையில் உள்ள வித்தியாசம்.

இது மிகவும் சிக்கலான இடம் என்றாலும்; எனக்கு அருகில் இருப்பவர் குடித்து போட்டு கத்தினால், எனக்கு நிகழ்ச்சி ரசிக்க முடியாது என்றால்; அத்தகைய சந்தர்பங்களை தவிர்க்க வேண்டும்..அதற்க்க காதுக்குள் விசில் ஊதுபவரும் அந்த வரையறைக்குள் வர மாட்டார்.

இன்னுமொருவன் சொன்ன இருட்டில் 7 மணித்தியாலம் இளையராஜாவின் இசையை கேட்பது; ஒன்று பெரும்பாலான சந்தர்பங்களில்சாத்தியமற்றது, மற்றது அப்படி கேட்டாலும் -இன்றைக்கு 7 மணித்தியாளம் கேட்ட்கப்போகிறேன் என்று இருந்தால், ஒரு 6ம் 7ம் பாட்டுக்கு மேல் நித்திரை இளையராஜாவை விட 100 மடங்கு திறமாக இருக்கும்.

நான் இன்னுமொரு நண்பர் ஒருவரின் பதிவும் பார்கிறனான்; அதில் அண்மையில் ஒரு பாடல் இணைத்திருந்தார்-வீடியோ உடன், ஆனால் அடிக்குறிப்பு இட்டிருந்தார் -படத்தை பார்காதீர்கள் அது ஒரு மொக்கை என்று.ஏனெனில் பல சந்தர்பங்களில் பாட்டுக்குரிய நடனமும் பாட்டும் பொருந்துவதில்லை. அதே போலத்தான் மேடைபாட்டு நிகழ்சிகளும். வீட்டில சுடுகிற அப்பத்திற்கும் (5 நட்சத்திர) ஹோட்டலில் தருகிற அப்பதிற்கும் உள்ள வித்தியாசம் என்றும் சொல்லலாம்.

முடிவாக ஏதேனும் பயனான சொல்லி இருக்கிறோனோ தெரியவில்லை;

நன்றி இன்னுமொருவன், நாங்கள் பார்கவில்லை என்ற குறையை, நிறைவாக மாற்றியமைக்கு. ஏனெனில் விளம்பரபடுத்திய போது வாழ்நாள் பாக்கியம் என்றுதான் விளம்பர படுத்தினார்கள் என்று நினைக்கிறேன். ஒன்ட்டாரியோ அதிஷ்ட இலாப நிறுவனத்தின் Motto

Know your limit Play within limit

பணமும் நேரமும் இருந்தால் "வாருங்கள் எங்கேயும் எப்போதும் ராஜா பகுதி 2"

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நிகழ்வுக்கு போவதும் அந்த நிகழ்வை சிறப்படைய வைப்பதும் ஒவ்வொருத்தரதும் தனிப்பட்ட விடையங்கள் அதில் நாங்கள் தலையிட முயாது...யாரையும் குறை சொல்ல வர இல்லை...வருடம் முழுவதும் வேலை,வேலை என்று ஓடித்திருபவர்கள்.அந்த வருடத்தில் ஒரு சிறுமணித்துளிகளையாவது தமக்காக செலவிடுவதற்காக இவ்வாறன நிகழ்வுகளுக்கு செல்பவர்களும் உண்டு..சரி அதை விடுவம்...
 
தென் இந்திய கலைஞர்கள் என்று இப்படி வந்து நிகழச்சிகளை கொடுப்பவர்கள் எப்பவாவது குறிப்பிட்ட நேரத்திற்கு நிகழ்வை ஆரம்பிந்து வைத்தார்கள் அல்லது பங்கு பற்றினார்கள் என்று சொல்ல முடியுமா....

 

 என்னமோ ஆங்கிலத்தையும் தமிழையும் கலந்து அடிச்சாலும் நேரந்தவறாமை என்ற சொல்லின் அர்த்தம் தெரியுமோ தெரியாது.நேற்றைய தினமும் கிட்டத்தட்ட 2,3 மணித்தியாலயங்களை விழுங்கிய பின் தான் ஆடி அசைந்து  மூடிய பொறி வண்டி(லிமோசன்) வாகனத்தில் வந்து இறங்கி இருப்பார்கள்..நேரகாலத்தோடு வந்தால் பார்வையாளர்களாக இருக்க கூடிய மக்கள் பிடித்து விழுங்கி விடுவார்கள் என்ற எண்ணமோ  இரவு 7,8 மணிக்கு மேல் தான் நிகழ்வு நடக்கும் இடத்தை நோக்கி வருவார்கள்...ஒருவேளை நிகழ்சியை ஆரம்பிப்பதற்கு உரிய சுப நேரம் அது தான் போலும்....

 

பல இடத்திலும் இருக்கும் விமசர்னங்கள் மற்றும் விடையங்களை உற்று நோக்கும் போது மக்களுக்கு சரியான ஒரு நிகழ்வை கொடுக்க முடியாமல் போனதற்கு நேரந் தவறி நிகழ்வுகளை ஆரம்பிப்பதும் ஒரு காரணம்....ஆம் ஒரு விதத்தில் அது தான் உண்மை.நேற்று மாலை 6.30 மணிக்கு மேல் ஒரு படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது..அந்த படம் பார்க்கும் வரைக்கும் நிகழ்வு ஆரப்பிக்கபட இல்லை..இதற்குமேல் என்னத்தை எழுதுவது...எவ்வாறு நிகழ்வு அமைந்திருக்கும் என்பதை ஊகித்துகொள்ள வேண்டியது தான்..அடுத்த வருடத்திற்கு உரிய நிகழ்வையாவது நேரத்தோடு திறம்பட நடத்துங்கள் என்ற விமர்சனங்களையும் ஆங்காங்கே காணக்ககூடியதாக இருக்கிறது...ஆகவே அடுத்த வருசமும் பழையன, புதியனவாக உருப்பெற்று வரும் சென்று பார்க்க தவறாதீர்கள்...


 

நான் இன்னுமொரு நண்பர் ஒருவரின் பதிவும் பார்கிறனான்; அதில் அண்மையில் ஒரு பாடல் இணைத்திருந்தார்-வீடியோ உடன், ஆனால் அடிக்குறிப்பு இட்டிருந்தார் -படத்தை பார்காதீர்கள் அது ஒரு மொக்கை என்று.ஏனெனில் பல சந்தர்பங்களில் பாட்டுக்குரிய நடனமும் பாட்டும் பொருந்துவதில்லை. அதே போலத்தான் மேடைபாட்டு நிகழ்சிகளும். வீட்டில சுடுகிற அப்பத்திற்கும் (5 நட்சத்திர) ஹோட்டலில் தருகிற அப்பதிற்கும் உள்ள வித்தியாசம் என்றும் சொல்லலாம்.

 

 

இதற்கு இன்னொரு காரணம் அவர்கள் record பண்ணும் போது பிழையாக பாடினால் திரும்ப பாடும் சந்தர்ப்பம் உள்ளது, அத்துடன் குரலில் தடுமாற்றம் இருந்தாலும் குரலை மெருகேற்றி விடுவார்கள். ஆனால் நேரில் பாடும்போது குரலையோ பாடும் விதத்தையோ சரி செய்ய முடியாது. (சிறந்த பாடகர்கள் ஓரளவு பிழை விடாமல் பாடுவார்கள்.)

ஆனாலும் ஒரு பாடகர் பாடிய பாடலை வேறு பாடகரை கொண்டு நிகழ்ச்சிகளில் பாடுவதையும் கூடியவரை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பலரும் நிஜ பாடலை கொல்லும் சந்தர்ப்பம் அதிகம். அதிலும் பழைய பாடலை இப்போதைய பாடகர்கள் பாடுவதானால் நன்றாக பாடக்கூடியவர்கள் (ஏற்கனவே பாடி பார்த்து தமக்கு அது சரி வருகிறதா என்று பார்த்து விட்டு) நிகழ்வுகளில் பாட வேண்டும்.

அப்படியே எங்கட இசையும் வரட்டும் ஒரு சொல்லு கேட்ப்பம்  :D

 

இசை அண்ணாவும் இன்னுமொருவன் அண்ணாக்கு like போட்டிருக்கிறார். :icon_idea:  அவர் கருத்தும் இவர்களுடன் ஒத்துப்போகிறது போலிருக்கு.... :rolleyes:

 

  • கருத்துக்கள உறவுகள்

நானும் சென்றிருந்தேன்.. :unsure:

 

வீட்டிலிருந்து அரை மணிநேரத்தில் இசை அரங்கத்துக்குப் போய்விடலாம். இருந்தாலும் மாலை 5:30 நிகழ்ச்சிக்கு 3:45 க்கே வீட்டை விட்டுப் புறப்பட்டோம். முதலில் நான் மட்டும் போவதாக இருந்தேன். பின்னர் அப்பாவும் வர விரும்பியதால் எல்லோருமாகச் சென்றோம்.

 

பனிப்பொழிவு, கார்டினர் நெடுஞ்சாலை மூடல், போக்குவரத்து நெரிசல், வாகனத் தரிப்பிடம் இலகுவில் கிடைக்காமை போன்ற இன்னோரன்ன காரணங்களால் அரங்கத்திற்குள் செல்லும்போது மாலை 6:30 ஆகிவிட்டது. :unsure:

 

எத்தனை பாடல்கள் தவறியதோ என்று நினைத்துக்கொண்டே உள்ளே சென்றால், அபஸ்வரமாகப் பாடும் சத்தங்கள் கேட்டது. :unsure: என்னடா இது.. இளையராஜா நூலிழை சுரம் குறைந்தாலே விடாத ஆளாச்சே என்று எண்ணிக்கொண்டு போனால் பார்வையாளர்களை சும்மா பாட வைத்துக்கொண்டிருந்தார்கள். :( இளையராஜா குழுவினரும் பனிப்புயலில் சிக்கி நேரம் பிந்திவிட்டதாம். :D

 

அவர்களும் ஒருவழியாக வந்துசேர்ந்து நிகழ்ச்சி ஏழுமணிபோல் ஆரம்பமானது. பல நிகழ்ச்சிகளை, பாடல்களை நீக்கிவிடுவார்கள் என்று புரிந்திருந்தது. நூறு டொலர் கொடுத்தது அதிகமோ என்றூ நினைக்க ஆரம்பித்துவிட்டேன். :D

 

இளையராஜா வந்தார். தயவு செய்து விசில் அடிக்காதீர்கள்.. எனக்கு ஒவ்வாமையாக இருக்கும் என்று ஒரு வேண்டுகோளை வைத்தார். அவர் சொல்லி முடித்த பின்பும் விசில் அடித்து தமது ஆதரவைத் தெரிவித்தார்கள் சில இரசிகப் பெருமக்கள். :rolleyes:

 

இசைஞானி ஜனனி, ஜனனி என்று ஆரம்பித்தபோதுதான் நிமிர்ந்து உட்கார முடிந்தது. இந்த வயதிலும் அவரது குரல் கம்பீரமாக இருந்தது ஒரு ஆச்சரியம். வாத்திய இசையை மேலிட்டு தெளிவாகக் கேட்கக்கூடியதாக இருந்தது. பார்வையாளர்கள் பீட்சா வாங்க, கோப்பி வாங்க, பொப்கோர்ன் வாங்க என்று எழுந்து நடமாடிக்கொண்டிருந்தது என்னவோபோல் இருந்தது.

 

பொதுவில், பாடல்கள் தெரிவில் எனக்கும் பெரிதான விருப்பம் இல்லை. பாடிய சில நல்ல பாடல்களையும் கூர்ந்து கவனித்து இரசிக்க முடியவில்லை. அருகில் ஆட்கள் போய்வருவதும், அவர்களின் பூராயமும்தான் கவனத்தில் வந்துகொண்டிருந்தது.

 

தமிழகத்தில் சில இசை நிகழ்ச்சிகளுக்குப் போன அனுபவம் உண்டு. ஆனால் இங்கே வந்ததுபோல் 25,000 பார்வையாளர்களைக் கொண்ட இசை நிகழ்ச்சிகள் அல்ல அவை. ஒரு ஆயிரம்பேர் வருவார்கள். விசில் அடிப்பார்கள்.. பலமாக கரவொலி எழுப்புவார்கள்.. மூன்று மணிநேரம் நடக்கும். பிறகு கலைந்து செல்வார்கள்.

 

இங்கே அனுபவம் வித்தியாசமாக இருந்தது. கரவொலி எழுப்பியவர்கள் ஒரு பாதிப்பேர்தான் இருப்பார்கள். அரங்கம் படு விசாலமானது என்பதால் அதுவும் பெரிதாக கேட்கவில்லை. எனக்கு அருகில் இருந்த பலர்.. ஆ அது முடிஞ்சிது.. அடுத்தது என்ன என்பதுமாதிரி பீட்சாவைக் கொறித்துக்கொண்டிருந்தார்கள்.. :lol:

 

அதைவிடக் கொடுமை.. நிகழ்ச்சி முடிவுறும் முன்னமே அதாவது ஒரு அரை மணிநேரம் முன்னமே மக்கள் எழுந்து போக ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு வாகனத்தை எடுக்க வேண்டும், இரவுநேரம், அடுத்தநாள் பணிகள் என்று பல விடயங்கள் இருக்கலாம். ஆனால் அவர்களின் அந்த சிற்சில செயல்களில் கலைஞர்களை மதிக்காத தன்மையைத்தான் என்னால் உணர முடிந்தது. :unsure:

 

இறுதியாக எனது அனுமானங்கள்.. அதிக பணம் ஈட்டுவதற்கு இப்படி பெரிய மண்டபங்களில் இசை நிகழ்ச்சி நடத்தலாம். ஆனால் அந்த இசையை அனுபவிக்கும் வாய்ப்பை இந்த அமைப்பு பெற்றுத்தராது. இளையராஜாவின் நிகழ்ச்சி என்றால் அதிகபட்சம் ஒரு ஐநூறு பேர்கள் கொள்ளும் ஒரு பிரத்தியேக அரங்கத்தில் செய்ய வேண்டும். ஆனால் இதில் பணம் வராது. :rolleyes: ஆக, இளையராஜா நிகழ்ச்சியை, விஜய் டிவியிலோ அல்லது அவரது இசையை ஐஃபோனிலோ கேட்பதே உசிதம். :D

 

என்ன இருந்தாலும் அந்த மாபெரும் கலைஞனையும், அவரது இசைக்குழுவினரையும் கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி.. :D

ஆனைக்கும் அடி சறுக்கும் அந்த இசை மேதையின் நிகழ்வு சரி இல்லை எண்டவுடன் எனக்கு ரொம்ப கவலை.   குளிர் காலத்தில் நிகழ்வு வைத்தால் பாடகர்களுக்கும் பாடக் கஷ்டம் இதை யாரும் புரிந்து கொள்வதில்லை. வெயில் நாட்டில் இருந்து வரும் பாடகக்ர்களுக்கு கொஞ்சம் குளிர் பட்டாலே பாடக் கஷ்டம். ஆனால் வின்டர் காலத்தில் கூப்பிட்டா இப்பிடி தான்  :icon_idea:

 

http://www.youtube.com/watch?NR=1&feature=endscreen&v=8iJTy8oIlew

Edited by யாழ்அன்பு

  • கருத்துக்கள உறவுகள்

இலண்டனில் சில இசை நிகழ்ச்சிகளுக்கு சென்ற அனுபவம் உள்ளதால் ஏன் ஏமாற்றமாக இருந்தது என்பதை உணரக்கூடியதாக உள்ளது. பல்லாயிரம் மக்கள் முன் இசை நிகழ்ச்சியை வழங்கும்போது அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப கர்நாடக சங்கீத இசை, பழைய காலத்து மெல்லிசை, புதிய துள்ளல் இசை, கானா, டப்பாங்குத்து, மேற்கத்திய பாணிப் பாடல்கள் என்று எல்லாவற்றையும் குழைத்து ஒரு கதம்பமாக/கலவையாகக் கொடுக்கும்போது உண்மையான இசைப் பிரியர்கள் ஏமாற்றத்திற்கு ஆளாவது ஆச்சரியமல்ல.

 

அத்தோடு நம்மவர்கள் இசைக் கச்சேரிகளுக்குப் போய்ப் பழக்கம் இல்லாதவர்கள். எனவே நாம் இசைக் கலைஞர்களுக்கு மதிப்புக் கொடுப்பதை விட்டுவிட்டு திருவிழாவுக்குப் போகும் உணர்வில் செல்கின்றோம்.

 

குண்டுமணி விழும் சத்தம் கேட்காத அரங்கில் இருக்கவேண்டும் என்றால் ஒபரா போன்ற நிகழ்ச்சிகளுக்குத்தான் போகவேண்டும். இல்லையேல் குறைந்த மக்களைக் கொள்ளக்கூடிய அரங்கு ஒன்றில் ஒரு குறிப்பிட்ட்ட வகையான பாடல்களை மட்டுமே கொண்டதாக இசை நிகழ்ச்சியைத் தயார் செய்யவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கரியைப் பூசியது விஜய் ரீ.வி வழங்கிய எங்கேயும், எப்போதும் ராஜா!!

Feb 17 2013 07:51:00

 

விஜய் ரி. வி வழங்கிய இசைஞானி இளையராஜாவின் எங்கேயும் எப்போதும் ராஜா நேற்று ரோஜர்ஸ் சென்ரரில் நடந்து முடிந்தது. திரளான மக்கள் ஆர்வத்துடன் நிகழ்விற்காக வந்திருந்தனர் என்ற போதிலும் கூட இது ஒட்டு மொத்தமாக அனைவரையும் ஏமாற்றும் ஒரு நிகழ்வாக அமைந்தது என்று தான் கூற வேண்டும்.

 
நிகழ்விற்கான நுழைவுச் சீட்டுக்கள் இறுதி நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட மிகக் குறைவான தொகைக்கு விற்கப்பட்டது. முன்பே பதிவு செய்து நுழைவுச் சீட்டினை பெற்றவர்களும் இறுதி நேரத்தில் வாங்கியிருக்கலாமோ எனச் சலிக்கும் வகையிலும் , இனி வரும் காலங்களில் தமிழர்களின் இசை நிகழ்ச்சிகள் என்றாலே இறுதி வரை காத்திருந்தே நுழைவுச் சீட்டினை பெற வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுவதாயும் இது அமைந்திருந்தது.
 
இளையராஜாவின் இசை நிகழ்ச்சி மிகப் பிரமாண்டமாக இருக்கும் என்ற எண்ணத்தில் நிகழ்ச்சி தொடங்குவதாய் அறிவிக்கப்பட்டிருந்த 5 :30 மணிக்கு முன்னரே 25000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் திரண்டு வந்து அரங்கத்தை நிறைத்திருந்தனர். ஆனால் அறிவிக்கப்பட்ட படி 5:30 க்கு இளையராஜா குழுவினர் யாரும் வரவில்லை. இது நிகழ்ச்சியினை காண வந்த மக்களுக்கு விழுந்த முதல் அடியாக அமைந்தது.
 
நிகழ்ச்சி தொகுப்பாளர்களான கோபிநாத்தும், வணக்கம் எப். எம் மற்றும் தமிழ் ஒன் அறிவிப்பாளருமான நிதாவுமே அரங்கில் உள்ள மக்களை சமாதானப்படுத்தும் வகையும் 7:30 மணி வரையிலும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர். இருப்பினும் இவர்களின் பேச்சும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. அரங்கத்திற்கு வெளியில் மட்டுமே கனடிய ஊடகங்கள் மட்டும் ட்ரினிட்டி இவன்ட்ஸ் விளம்பரங்களை பார்க்க முடிந்தது. மற்றபடி அரங்கம் முழுவதிலும் விஜய் ரி.வி யின் விளம்பரங்களே நிறைந்திருந்தன. (கடந்த முறை நடைபெற்ற ஆதிபகவன் இசை வெளியீட்டு விழாவின் போது நிதாவினை அறிவிப்பாளராக அறிவித்து விட்டு பின்னர் புறக்கணித்தது நினைவில் வந்தது (அது நம்ம நாட்டு ஊடகசண்டை ) ).
 
ஆக மொத்தம் முழுக்க, முழுக்க விஜய் ரி.வி கனடாவில் கால் தடம் பதிப்பதற்கான வெள்ளோட்ட நிகழ்வாகவே எங்கேயும் , எப்போதும் ராஜா இருந்தது.
 
7 :30 மணிக்கே இளையராஜா குழுவினர் மேடைக்கு வந்தனர். விளம்பரங்களில் அறிவிக்கப்பட்டிருந்த கெளதம் மேனன், மனோ, ஜேசுதாஸ், ஸ்வேதா மேனன், பவதாரணி உள்ளிட்ட பல பாடகர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. யாரும் நிகழ்விற்கு வரவில்லை. இளையராஜாவும் அவர் குழுவினரும் தெரிந்தெடுத்திருந்த பாடல்களின் தொகுப்பும் மக்களின் மனம் கவரக் கூடியதாய் இல்லை. ஏதோ ஒப்புக்கு 7:30 - 11 மணி வரையிலும் நேரம் கடத்த வேண்டும் என்கிற பாணியிலேயே இளையராஜா குழுவினர் பாடிய பாடல்கள் அனைத்தும் இருந்தது.
 
சில பாடல்களின் போது மக்கள் விசில் அடித்ததையும் கூட பொறுக்க முடியாமல் இளையராஜா நடந்து கொண்ட விதம் ராஜாவின் தலைக்கனத்தினையும், தான் என்ற அகங்காரத்தையும் மீண்டும் கனடியத் தமிழ் மக்களிடம் காட்டுவதாகவே இருந்தது. இந்த இசை நிகழ்விற்கான ஊடகவியலாளர் சந்திப்பொன்றுக்கு பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதற்காக கனடா வந்திருந்த போதும் இளையராஜா தன்னை வரவேற்க வந்த தமிழ் மக்களிடம் கை குலுக்கவும், புகைப்படங்களின் போது தன் தோள் மீது கை போட்டவர்களை கடுமையாகச் சாடியது போன்ற போக்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் தமிழ் மக்களை பலரிடையே அதிருப்தியை ஏற்படுத்திய போதிலும் கூட இசை மேதை என்பதால் யாரும் இந்த விடயத்தினை பெரிதுபடுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
நிகழ்ச்சியின் இசை, ஒளியமைப்பு , இளையராஜா, எஸ்.பி பாலசுப்ரமணியம், ஹரிஹரன் , சித்ரா, கார்த்திக், யுவன் ஷங்கர் ராஜா ஆகோயோரின் பாடல்களும் , பார்த்திபன் உள்ளிட்ட மிகச் சிலரின் நகைச்சுவையான பேசும் மட்டுமே நிகழ்ச்சியின் பலம். டிக்கெட்டில் விவகாரங்களில் தொடங்கி இருக்கை அமைப்பு, கோபிநாத், பிரசன்னா, சிநேகா, கார்த்திக் ராஜா, விவேக், மது பாலகிருஷ்ணன் , சாதனா சர்க்கம் உள்ளிட்ட அனைவரின் நிகழ்சிகளும் பெரும் பலவீனம் என்று தான் கூற வேண்டும். கனடியத் தமிழ் ஊடகங்களுக்குள் நிலவி வரும் போட்டியையும் , ஒற்றுமை இன்மையினையும் பகிரங்கமாக எடுத்துக் காட்டும் விதத்தில் அமைந்திருந்தது இந்நிகழ்வு,
 
ஒட்டு மொத்தத்தில் நிகழ்விற்குச் சென்ற தமிழ் மக்கள் அனைவரும் தங்கள் நேரத்தை வீணடித்து விட்டோம் என்றே உணர்ந்தனர். பலர் வெளிப்படையாகவே இதெல்லாம் ஒரு இசை நிகழ்ச்சியென காசையும் , நேரத்தையும் வீணடித்து ஏன் இங்கு வந்தோமோ என சலிப்போடு புலம்பிச் செல்வதையும் காண முடிந்தது.
 
இருப்பினும் இந்நிகழ்வினை ஒழுங்கு செய்வதில் " ட்ரினிட்டி இவன்ட்ஸ் " நிறுவனத்தின் தலைவர்களான Dunstan, கிசான் ஆகியோர் கடும் சிரத்தையுடன் கடந்த சில மாதங்களாக பணிபுரிந்து வந்தனர். இந்த இரு இளைஞர்களின் முயற்சியையும் இகுருவி மனமாரப் பாராட்டுகிறது.
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

சில பாடல்களின் போது மக்கள் விசில் அடித்ததையும் கூட பொறுக்க முடியாமல் இளையராஜா நடந்து கொண்ட விதம் ராஜாவின் தலைக்கனத்தினையும், தான் என்ற அகங்காரத்தையும் மீண்டும் கனடியத் தமிழ் மக்களிடம் காட்டுவதாகவே இருந்தது. இந்த இசை நிகழ்விற்கான ஊடகவியலாளர் சந்திப்பொன்றுக்கு பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதற்காக கனடா வந்திருந்த போதும் இளையராஜா தன்னை வரவேற்க வந்த தமிழ் மக்களிடம் கை குலுக்கவும், புகைப்படங்களின் போது தன் தோள் மீது கை போட்டவர்களை கடுமையாகச் சாடியது போன்ற போக்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் தமிழ் மக்களை பலரிடையே அதிருப்தியை ஏற்படுத்திய போதிலும் கூட இசை மேதை என்பதால் யாரும் இந்த விடயத்தினை பெரிதுபடுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

 

 

ஈகுருவியின் தொல்லை வரவர தாங்கலை.. :D

 

விசில் அடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட பிறகும் விசில் அடித்தால் அதை என்ன என்பது? ஒன்றில் அவர்களுக்கு தமிழ் விளங்காததாய் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இவர் என்ன சொல்லுறது.. நாங்கள் என்ன கேட்கிறது என்கிற தலைக்கனமாக இருக்க வேண்டும். :wub: எனக்குப் பின்னால் சற்றுத் தள்ளி நின்றிருந்த ஒரு பணிஸ் தலையர் கடைசிவரையில் தன் இரு விரல்களையும் உபயோகித்து விசில் அடித்தபடியே இருந்தார். :D

 

இரண்டாவது தோளில் கை போடுவது. முன்னைப் பின்ன சந்தித்திராதவர்களை இவ்வாறு தொடுவதே முதலில் அநாகரிகமானது. இந்த இங்கிதம்கூட ஈகுருவியின் பத்தி எழுத்தாளாருக்குத் தெரியவில்லை. இவரும் நின்று விசில் அடித்த ஆளாகத்தான் இருக்க வேணும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா மற்றும் சில பாடகிகள் கிட்டத்தட்ட இரண்டு மாதம் ரொரண்டோ இசைக்கச்சேரிக்கு மட்டும் பயிற்சி எடுத்ததாக கூறினார்கள்.கடைசியில் ஏன் இசைக்கச்சேரி இப்படி நடந்து முடிந்தது?

இசை அண்ணா, நன்றி இவ்வளவும் எழுதியதற்கு. இளையராஜா இசை என்பதால் உங்கள் கருத்தை அனைவரும் ஆவலாக எதிர்பார்த்திருந்தோம்.. :)
 

அதைவிடக் கொடுமை.. நிகழ்ச்சி முடிவுறும் முன்னமே அதாவது ஒரு அரை மணிநேரம் முன்னமே மக்கள் எழுந்து போக ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு வாகனத்தை எடுக்க வேண்டும், இரவுநேரம், அடுத்தநாள் பணிகள் என்று பல விடயங்கள் இருக்கலாம். ஆனால் அவர்களின் அந்த சிற்சில செயல்களில் கலைஞர்களை மதிக்காத தன்மையைத்தான் என்னால் உணர முடிந்தது. :unsure:

 

இதற்கு அவர்களை மட்டும் குறை சொல்ல முடியாதென்று நினைக்கிறேன். சிலவேளை சொன்ன நேரத்திற்கே நிகழ்வு ஆரம்பித்திருந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்காது. பனிப்பொழிவு நடக்கும் என்று முன்னரே தெரிந்தமையால் அவர்கள் அதற்கு முன்னேற்பாடாக வேளைக்கே வர முயற்சித்திருக்கலாம். :unsure:

 

 


விசில் அடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட பிறகும் விசில் அடித்தால் அதை என்ன என்பது? ஒன்றில் அவர்களுக்கு தமிழ் விளங்காததாய் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இவர் என்ன சொல்லுறது.. நாங்கள் என்ன கேட்கிறது என்கிற தலைக்கனமாக இருக்க வேண்டும். :wub: எனக்குப் பின்னால் சற்றுத் தள்ளி நின்றிருந்த ஒரு பணிஸ் தலையர் கடைசிவரையில் தன் இரு விரல்களையும் உபயோகித்து விசில் அடித்தபடியே இருந்தார். :D

 

இரண்டாவது தோளில் கை போடுவது. முன்னைப் பின்ன சந்தித்திராதவர்களை இவ்வாறு தொடுவதே முதலில் அநாகரிகமானது.

நீங்கள் சொன்னது சரி...

 

சிலவேளை தலைக்கனம் காரணமாக தான் விசிலடிக்க வேண்டாம் என்று சொல்கிறார் என்று கூட்டத்திலிருந்த மக்கள் நினைத்தார்களோ தெரியவில்லை. அப்படி நினைத்திருந்தாலும் வேண்டுமென்றே விசிலடித்திருப்பார்கள். சிலர் ஆர்வ கோளாறு காரணமாகவும் விசிலடித்திருப்பார்கள். :rolleyes: விசிலடித்ததை பார்த்து இளையராஜா அப்படி என்ன தான் சொன்னார்? :D


 



 

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

இசை அண்ணா, நன்றி இவ்வளவும் எழுதியதற்கு. இளையராஜா இசை என்பதால் உங்கள் கருத்தை அனைவரும் ஆவலாக எதிர்பார்த்திருந்தோம்.. :)

 

 

இதற்கு அவர்களை மட்டும் குறை சொல்ல முடியாதென்று நினைக்கிறேன். சிலவேளை சொன்ன நேரத்திற்கே நிகழ்வு ஆரம்பித்திருந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்காது. பனிப்பொழிவு நடக்கும் என்று முன்னரே தெரிந்தமையால் அவர்கள் அதற்கு முன்னேற்பாடாக வேளைக்கே வர முயற்சித்திருக்கலாம். :unsure:

 

 

நீங்கள் சொன்னது சரி...

 

சிலவேளை தலைக்கனம் காரணமாக தான் விசிலடிக்க வேண்டாம் என்று சொல்கிறார் என்று கூட்டத்திலிருந்த மக்கள் நினைத்தார்களோ தெரியவில்லை. அப்படி நினைத்திருந்தாலும் வேண்டுமென்றே விசிலடித்திருப்பார்கள். சிலர் ஆர்வ கோளாறு காரணமாகவும் விசிலடித்திருப்பார்கள். :rolleyes: விசிலடித்ததை பார்த்து இளையராஜா அப்படி என்ன தான் சொன்னார்? :D

 

 

 

பணம் ஈட்ட வேண்டுமென்றால் பல்லாயிரம் மக்களைத் திரட்ட வேண்டும். ஆனால் அவ்வாறு திரட்டினால் எல்லோரும் இசையை ரசிக்கத்தெரிந்தவர்களாக இருப்பார்கள் என்று அர்த்தம் இல்லைதானே. :rolleyes:

வந்தவர்களில் கணிசமானவர்கள் ஏதோ ஒரு பொழுதுபோக்கு என்று வந்திருப்பார்கள். அவர்களுக்குப் போதும் என்று ஆனவுடன் எழுந்து போயிருப்பார்கள். அவர்களுக்கும் ஆயிரம் வேலைகள் இருக்கும். இதில் விழா அமைப்பாளர்கள், பார்வையாளர்கள் என்று இருவரிலுமே தவறு உள்ளது என நினைக்கிறேன். :unsure:

 

விசில் அடித்ததை இளையராஜா பின்னர் கண்டுகொள்ளவில்லை என நினைக்கிறேன். பல இரசிகர்கள் இதைச் செய்யவில்லை. ஓரிரு சபை குழப்பிகள் மட்டுமே செய்து கொண்டிருந்தார்கள்.

ஆம், நீங்கள் சொல்வதும் சரி தான் இசை அண்ணா. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

பனிவிழும் மலர் வனம் என்று வெளியே பொழியும் பனியையும் மக்கள் மனதையும் இணைத்து வசனம் பேசியபடி இசைவனத்திற்கள் புகுந்த இசைஞானி இளையராஜாவின் இசைக்கச்சேரிக்கு செல்லும் வாய்ப்பு எதிர்பாராத ஒரு நிகழ்வாகத்தான் எனக்குக் கிடைத்தது. 4.30க்கு பின் எடுத்த திடீர் முடிபினால் வீதியில் பொழியும் பனிமழையினால் ஏற்பட்ட வாகன நெரிசல்களையும் தாண்டி 5.30க்கு மண்டபத்துள் நுழைந்தேன். அங்கு கோபிநாத் வந்திருந்த மக்களுக்கு 2மணி நேரம் அல்வா கொடுத்தது அனைவருக்கும் ஆரம்பத்திலேயே எரிச்சல் ஏற்படுத்தியது. நிகழ்ச்சி நேரத்தை மனதில் கொண்டு கலைஞர்கள் தமது நேரத்தை நெறிப்படுத்த ஏன் தவறினார்கள்? பாடல்களைப்பற்றியும் கலைஞர்களைப்பற்றியும் நிகழ்ச்சியின் தரம் பற்றியும் ஏற்கனவே பலர் எழுதிவிட்டனர். ஒருசில பாடல்களைத் தவிர மற்றவை மனதில் ஒட்டவில்லை. எங்கள் வீட்டு மல்லிகைக்கும் மணம் உண்டு என்று எப்பொழுது நாம் ஏற்றுக்கொள்ளப் போகிறோம்.? ஏன் நாம் மாறவில்லை? அல்லது மாற முடியாதபடி எது எம்மைத் தடுக்கிறது? இறுதியில் மண்டபத்தை விட்டு வெளியேறும் போது எமது மகனுக்கும் எனது பெறாமகனுக்கும் நடைபெற்ற உரையாடலின் சுருக்கம் '25 ஆயிரம் ஈழத்தமிழர்கள் ஏமாந்து விட்டார்கள்"

  • தொடங்கியவர்
 
இசைக்கலைஞன் சொல்லும் விடயங்களோடு பூரணமாக உடன்படுகிறேன். இந்தப் பெரிய நிகழ்வு இளையறாஜா நிகழ்விற்குச் சரிவராது. இருக்கைகளே இன்றி, நடனமாடி, கழியாட்டமாக பாட்டி பண்ணும் இசைக்குத் தான் இந்தப் பிரமாண்டம் சரிவரும். உண்மையில் மேற்கின் இசைநிகழ்வுகள் அவ்வாறு தான் நடப்பது வழமை. இசை ஆத்மார்த்தமாகவும் அறிவுசார்ந்தும் ரசிக்கப்படவேண்டிய நிகழ்வுகள் குண்டுமணிவிழுந்தால் கேட்கும் அழவு அமைதியான விதத்தில் குறைந்த மக்களோடு தான் நடக்கும். பல்லாயிரக்கணக்கான மக்களுடன் நடக்கும் கொன்சேர்ட்டுக்கள், உள்ளும் வெளியும் மிதப்பதற்கான ஊக்கிகளுடன் நடக்கும். அங்கு, எவரேனும் விசில் அடிக்கிறார்கள் என்றோ எழுந்து திரிகிறார்கள் என்றோ, போதையில் இருக்கிறார்கள் என்றோ எவரும் சொல்வதில்லை. அதற்கு இரு காரணங்கள், ஒன்று ரசிகரின் கூச்சலை மீறி இசை அதிரும். இரண்டு, அதற்கு அந்த மனவமைப்பில் தான் ரசிகர் செல்வர். இளையறாஜா நிகழ்ச்சியில் நடந்த முதல் குழப்பம் என்னவெனில் பின்னையபாணி நிகழ்வாய் முன்னைய பாணி இசை இசைக்கப்பட்டது தான். இசை சொல்வதுபோல், பொருளாதாரம் என்று வரும் போது இது தவிர்க்கமுடியாதது தான்.
 
அடுத்து, இளையறாஜா எப்பேர்ப்பட்ட இசைஞானி என்பது ஏற்கனவே எமக்குத் தெரிந்தது. அவரின் பாடல்கள் நினைத்தமாத்திரத்தில் கேட்கும்வகை எம் கைவசம் உள்ளது. நாம் நிகழ்ச்சிக்குச் செல்வது, மேடையில் எமது ஐபொட்டில் உள்ளது போன்று அவர்களால் அச்சுப் பிசகாமல் வாசிக்கமுடியுமா என்று பரிசோதிப்பதற்காக அல்ல. பதிவு செய்யப்பட்ட இசையில் இருந்து ஒரு நூலளவு தன்னும் பிசகாமல் அவர்கள் வாசிப்பது அல்ல அங்கு முக்கியமானது. எம்மிடம் தான் பதிவுசெய்யப்பட்ட இசை கைவசம் இருக்கிறதே. நிகழ்விற்குப் போவது, ஒரு அனுபவத்திற்காக. அந்தப் பெரும் இசைஞானி அவரது அலைவரிசையில் ஆர்ப்பரிக்கும் போது, எமது மண்டைக்குள் எங்கேனும் அந்த ஆவர்த்தனம் எதையேனும் அதிரப்பண்ணாதா என்ற ஏக்கம் ரசிகனுடையது. எந்த ஒரு இசைக்கலைஞனும் மேடை நிகழ்வு என்பதை perfection என்பதற்கு மேலால் passionனை கட்டவிழ்க்கும் விதத்தில் நிகழ்த்தவேண்டும். அதற்கு, ஜாம்பவான்கள் முதற்படி ரசிகனுடன் connectறாக வேண்டும். அவர்கள் இசையைப் பத்தி மேதாவிகளுடன் தான் கதைக்க விரும்பின் அதற்கு அவர்களிற்கு ஏகப்பட்டவர்கள் இருக்கிறார்கள். இரசிகன் கேட்பது, ஒலிநாடாவில் தான் பெற்ற அனுபவத்தை, அந்த மஜிக்கை புரிய வைக்கும் படியும், தன்னைப் புல்லரிக்க வைக்கும்படியும் தான். உண்மையில் நேற்றைய நிகழ்வில் உபகரணங்கள் அதியுச்சமாய் ரியூன்பண்ணப்பட்டிருந்தன, ஆனால் இசைஞானி ரசிகனைக் கட்டிப்போடும் ஆவர்த்தனம் கொண்டு ரசிகனைக் கட்டி வைக்கவில்லை. ஒரு காரணம் பாடல் தெரிவுகளின் தவறு. ஏற்கனவே தான் தனக்குள் ரசித்துப் பித்துப் பிடித்த பாடல்கள் ரசிகனைத் தானகாகக் கட்டி வைக்கும். மேலால் இசைக்கலைஞன் கொஞ்சம் செய்தால் போதும். 
 
உதாரணத்திற்குத், 'தந்தனதந்தன தாளம் வரும்' என்ற பாடலை மாற்றியமைத்திருப்பதாகக் கூறி வாசித்து, முடிவில் கரகோசம் விண்ணைப்பிளக்கும் என்று குழந்தை தாயைப் பார்த்தது போல் இசைஞானி பார்த்தார். ரசிகன் கொட்டாவி விட்டபடி இருந்தான். இருவரைப்பார்க்கவும் பாவமாக இருந்தது. நூலிழை பிசகாது பதிவுசெய்ததைப் போன்றே வாசிப்பது முக்கியமில்லை, பாஷன் கொட்டவேண்டும், அதை ரசிகன் காணவேண்டும். பாடறியேன் படிப்பறியேன் பாடல் சீன் நிகழவேண்டும். இதில் ரசிகரின் ரகழைகள் முதலியன காரணம் தான் என்றபோதும், எனது ஆதங்கம், ரசிகனை வசப்படுத்துவது அவசிம் என்ற தோற்றப்பாடே மேடையில் தெரியவில்லை. (விவேக்கிற்கு மட்டும் இதற்குப் புள்ளி வழங்கலாம்).
 
இன்னுமொன்றைக் கூறவேண்டும், இசைஞானி விசில் அடிக்காதீர்கள் என்று சொன்னபோது அது அவரது தலைக்கனம் என்று துளியும் எனக்குப் படவில்லை. ஏனெனில் அந்தக் கூட்டம் சக ரசிகர்கள் பற்றிக் கிஞ்சித்தும் அக்கறையற்று, தாம் பொதுநிகழ்வில் இருக்கிறோம் என்ற எண்ணமே இன்றி, வெறுப்பேற்றிக்கொண்டிருந்தார்கள். இசைரசிகர் அனைவரிற்குமே அந்தச் சபைகுழப்பிகளைக் கட்டிப்போடவேண்டும் என்ற ஆற்றாமை இருக்கவே செய்தது.
 
நிறைவுகளில், என்னை மிகவும் கவர்ந்த ஒருவர் பெயர் தெரியாப் பாடகர். மலேசியா வாசுதேவன் ஜெயராமன் குரலில் பாடிய பாடலைக்கூட அற்புதமாய்ப்பாடினார். ஐயர் ஓதும் மந்திரங்களை அவர் இசைத்தபோது அவையும் இனித்தன. என்ன குரல்வளம் அந்த மனிதரிற்கு. யாரிற்காவது அவரின் பெயர் தெரியுமா.
 
இன்னுமொரு நிறைவு, இசைஞானி, தனது வாயினை எவ்வாறு வாத்தியமாக்குகிறார் என்று பார்த்து வியக்க முடிந்தது. உதடுகள், தொண்டை, உடலின் கோணம் என அந்த மனிதர் தன்னையே ஒரு வாத்தியமாக்கிக்கொண்டிருந்தார்;.
 
எனக்கொரு அவா, எவராவது இளைஞறாஜாவுடன் எப்படியேனும் சில மாதங்கள் கால்சீட் பெற்று, தனியே அருடன் இருந்து உரையாடி அவரது முத்தான பாடல்கள் அனைத்தையும் பற்றி அவரிற்குள் இருந்து புதையலை விடயங்களாகச் சுவாரசியமாக வெளியே கொணர்ந்து அதனை வீடியோவாக வெளியிடணும் ஆவணப்படுத்தணும். கமல்காசன் போன்ற ஒருவர் அவ்வாறு விடயங்களை வெளிக்கொணர்வதற்குப் பொருத்தமானவர் என்பது எனது அபிப்பிராயம்.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

 

இசைக்கலைஞன் தன்னைப் பற்றி, பாலசுப்பிரமணியம் பாடிய பாடலை தேடிப் பிடித்து போட்டமைக்கு நன்றி. :D  :lol:

இப்போதெல்லாம் இப்படியான நிகழ்சிகளுக்கு போவதை தவிர்த்தே வருகின்றேன் .ரகுமான் ,ஹரிகரன்,எஸ் பி.பி எல்லாம் முன்னர் பார்த்தேன் ,ரகுமானின் கச்சேரி மட்டும் சிறப்பாக இருந்தது ஆனால் அவர் நாலு ஐந்து தமிழ் பாட்டுகள் தான் பாடினார் .

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.