Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு சாமத்திய வீட்டால் வந்து இந்தப் பதிவு

Featured Replies

பொதுவாக கலியாணவீடு சாமத்தியவீடு என்று செல்லும்போது நேரவிரயம் சார்ந்து ஒரு உள்ளுளார்ந்த ஒவ்வாமை எழுவதை மறைப்பதற்கில்லை. எனினும் இத்தகைய விழாக்களில் சுவாரசியங்கள் இல்லாமல் இல்லை. ஒரு குழந்தையினைப் பார்த்துக்கொள்வதைப் போல முற்றுமுழுதாகக் கவனத்தை விழாவிற்குள் போட்டு இயல்பாக இருந்தால் ஏகப்பட்ட சுவாரசியங்கள் இலகுவில் விரியும்;. அண்மையில் ஒரு சாமத்திய வீட்டிற்குச் சென்றபோது அவதானித்தவற்றை நான் பார்த்தபடியே பகிர்ந்துகொள்கிறேன்.

எனக்கு அவர்களோடு அறிமுகமில்லை. இருந்தும் அழைப்பை மறுக்கமுடியாத நிலை. அழைப்பை மறுக்க முடியாமைக்குக் காரணமானவளோடு சேர்ந்து சென்றேன். ஏனோ உட்சென்றதும் நிகழ்விற்;குள் இலகுவில் நுழைய முடிந்தது. 

குழந்தையினை அலங்கரித்து மணவறையில் நிறுத்தியிருந்தார்கள். குழந்தை ஒருத்தி அம்மாவின் சேலை அணிந்து பெரிய மனிசி போன்று கண்ணாடி முன் நின்று பார்க்கிறாள் என்பதாய்த் தோன்றியது. நிகழ்வின் ஒவ்வொரு நொடியினையும் சலிப்பின்றி அவள் ரசித்துக் கொண்டிருந்தாள். அவள் அவளை ரசிப்பது பார்ப்பவர்களில் முறுவலை உருவாக்கியது.

பெற்றோர்கள் அமைதியே உருவமாய் இருந்தார்கள். மனிதர்களில் இப்போதெல்லாம் அதிகம் என்னால் அவதானிக்க முடியாதிருக்கும் ஊரின் மண் வாசனை அவர்களில் தெரிந்தது. இயல்பாக இருந்தார்கள். தாயாரைப் பார்த்தபோது என்னையறியாது ஊரில் அடர்ந்த மாமரத்தின் கீழான ஒரு முற்றத்திற்கு என் மனம் பறந்தது. அங்கு ஒரு காலைப்பொழுதில் சட்டை அணிந்தபடி முற்றம் கூட்டும் ஒரு இருபதுகளில் இருக்கும் பெண்ணிற்குப் பச்சைச் சேலை அணிவித்து மண்டபத்தில் விட்டதாய்த் தோன்றியது. மாமரத்தின் கீழ் காலையில் முற்றம் கூட்டிக்கொண்டு நின்ற வனப்பான பெண்ணே என்கண்ணில் தெரிந்தாள். 

தந்தை, உயரமும் திடமான உடல்வாகும், நிறைந்த முடியும் மீசையுமாக அக்கா முற்றங்கூட்டி முடிக்கும் வரை துவிச்சக்கர வண்டியில் அவ்வீட்டை வட்டமடிக்கக்கூடிய அண்ணாவாகவே தெரிந்தார். கிட்டத்தட்ட வேணுமானால் சுப்பிரமணியபுரம் படத்தின் ஜெய் பாத்திரம் போன்று வெளித்தோற்றத்திற்கு வைத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த மனிதரிற்கு அநியாயத்திற்க வெட்கம் அதிகம். ஆண்கள் வெட்கப்பட்டு இவ்வாறு இதற்கு முன்னர் நான் பார்த்ததே இல்லை. ஆண் என்ற வரைவிலக்கணத்திற்கமைவான வெளித்தோற்றமுடைய ஒரு மனிதனில் தோன்றிய அடக்கமுடியா வெக்கம் புதுமையாக இருந்தது. அந்த மனிதனின் வெட்கத்தை வைத்து ஒரு முழுநீளப்படமே எடுக்கமுடியும் என்பதாய்ப்பட்டது.

சாமத்தியவீடு என்பது என்ன என்பதனை மண்டபத்தின் நிர்வாகியே நெறிப்படுத்திக்கொண்டிருந்தார். குழந்தைக்கு, அதன் பெற்றோர்க்கு, மாமா மாமிக்கு, தாத்தா பாட்டிக்கு, நண்பிகளிற்கு மற்றும் நெருங்கிய உறவினர்களிற்கு எல்லாம் நிகழ்வில் மண்டப நிர்வாகியால் பாத்திரங்கள் வழங்கப்பட்டன. அனைத்துப் பாத்திரங்களின் காட்சிகளிலும் வாஞ்சையினையும் அழகியலையும் அவதானிக்க முடிந்தது.

அம்மா அப்பா தம்பி சேர்ந்து ஆண்டாள் மாலையினைக் குழந்தையில் போட்டார்கள். மாலை அவள் பாதம் வரை வந்தது. மாலை அணிவிக்கப்பட்டதும் நிர்வாகி பெற்றோரை இருபுறமும் நின்று குழந்தையினை முத்தமிடச் சொன்னார். தாயார் குழந்தையின் கன்னத்தில் மூக்கால் உறிஞ்சி முத்தமிட்டு அது ஒரு சர்வசாதாரணமான நிகழ்வென்பதாய்க் கடந்துபோனார். தந்தை முந்தமிட முயன்றமைக்குள் ஓராயிரம் காட்சிகள் விரிந்தன. குழந்தையில் இருந்து இரண்டடி தூரம் தள்ளி நின்றபடி தனது உயர்ந்த தலையினைச்; சரிவாயக் குனிந்து குழந்தையின் கன்னத்தருகே தனது மூக்கை வைத்தபடி, முகத்திற்குப் பொருந்தாத வகையில் வாயை இறுக்க மூடியபடி கமராவைப் பார்த்தார். அவரது வெட்கம் ஒரு அருவிபோல் முகத்தில் பரவ வெட்கப்பட்டுச் சிரித்தார்.

அந்தத் தந்தைக்கு அந்தக்குழந்தைமீது இருக்கும் கட்டற்ற அன்பும், பெருமையும் தடையின்றித் தெரிந்தது. அந்த மனிதனிற்குள் அந்தக் குழந்தையினை அதன் தாயார் முத்தமிட்டதைப் போல் முத்தமிடவேண்டும் என்ற ஆசை ஒரு தந்தையின் வாஞ்சையோடு பிரவாகிப்பதை அன்பை அனுபவித்த எந்த மனிதனாலும் சந்தேகத்திற்கிடமின்றிப் புரிய முடிந்தது. ஆனால், தனது குழந்தையினைக் கட்டித் தழுவி முத்தமிடும் பருவத்தை அவன் குழந்தை கடந்து விட்டதாக அவனிற்கு யாரோ சொல்லி வைத்திருக்கிறார்கள் என்பதை அவன் உடல் மொழி வெளிப்படுத்தியபோது சபையில் எழுந்து நின்று இந்தச் சமூகத்தைக் கத்தித் தள்ளவேண்டும் போலிருந்தது. ஆரம்பத்தில் ஏனோ உறுத்திய மண்டப நிர்வாகிக்கு இப்போது நன்றி சொல்லத் தோன்றியது—அந்த நிர்வாகியால்த் தான் இந்த அப்பனிற்கு அவன் குழந்தையினை முத்தமிடும் அனுமதி கைகூடியது. தனது குழுந்தையினை முத்தமிட்டுத் தனது வாஞ்சையினை வெளிப்படுத்த முடிந்தமை மட்டுமே அவன் இந்த விழாவிற்குச் செலவழித்த் அனைத்துச் செலவுகளையும் துச்சமாக்கப் போதுமானது.

நண்பிகளை அழைத்து வந்து, மண்டப நிர்வாக இரு நிரையாய் நிரைப்படுத்தி நிறுத்திவைத்தார். அவர்களிற்கு ஏதோ பாத்திரம் காத்திருக்கிறது என்பது புரிந்தது. நண்பிகளும் குழந்தைகளாகவே இருந்தார்கள். அவர்களில் துருதுருவென்ற இளமையும் சுட்டித்தனமான குழந்தைத் தனமும் வெளிப்பட்டது. அதில் ஒருத்தில மற்றைய நிரையில் நின்ற இன்னுமொருத்தியினைச் சுரண்டி, பின் இருவரும் வாத்து முகத்தை வரவழைத்து, இடுப்போடு இடுப்புச் சேர்ந்து நின்று முகநூலிற்காக மண்டப புகைப்பிடிப்பாளரை வைத்து ஒரு படம் எடுத்துக் கொண்டார்கள். பின்னர் பாரதிராஜா படத்தில் வரும் கதாநாயகி போல, காட்டுப் பூக்கள் போல, தடையின்றி அத்தனை பற்களையும் காட்டிக் கலகலவெனச் சிரித்தாhர்கள். அழகாய் இருந்தது. நிர்வாகி ஓடி வந்து அவர்கள் சிரிப்பை அடக்கி அர்வகளின் பாத்திரத்தை அவர்களிற்கு நினைவுபடுத்தினார். அவாகள் சாமத்தியவீட்டுக் குழந்தையினை அழைத்துச் சென்று ஊஞ்சலில் வைத்து ஆட்டினார்கள்.

டீ.ஜே. சின்னத்தம்பியில் தொடங்கி ஏதேதோ சிற்றுவேசன் பாடல்களை ஒலிக்க விட்டுக்கொண்டிருந்தபோது மண்டப நிர்வாகி தனது இயக்தில் ஒரு திருப்பத்தினை ஏற்படுத்தினார். குழந்தையினை எழுப்பி ஊஞ்சலின் பின்னால் அழைத்துச் சென்று நிறுத்தியபின் ஊரில் முற்றம் கூட்டிய அக்காவையும் அவரது சுப்பிரமணியபுர ஜெய்யினையும் ஊஞ்சலில் அமரச்சொன்னார். அண்ணைக்கு அஞ்சும் கெட்டும் அறிவும் கெட்ட நிலை. நிர்வாகி இருத்தியதோடு மட்டும் நிற்காது அண்ணையிடம் அ;ககாவை அணைத்துக் கொள்ளும் படி சொல்லிவிட்ட அதே நேரம் ஊஞ்சல் பின்னால் நின்ற குழந்தையினையும் அவள் தப்பியினையும் ஊஞ்சலை ஆட்டச் சொன்னார். வெட்கத்தால் ஒரு மனிதனிற்குக் ஹாட்அட்டாக் வந்துவிடுமோ என்று எண்ணும் வகை  ஊஞ்சலில் அந்த மனிதனின் முகம் இருந்தது. அவர் முகத்தில் நகவரசங்களும் வந்து போயின. பாறையில் முளைத்திருந்த ஒரு சின்னச் செடியில் பூத்திருந்த வெள்ளைப் பூவில் காலைச் சூரியனின் ஒளியில் நீர்த்துளி தெரிவதைப் போன்ற மென்மை அந்த கரடுமுரடான ஆணின் முகத்தில் தெரிந்த போது எதிர்பாராது ஒரு நல்ல படத்தைப் பார்த்த உணர்வு பிறந்தது. 

சாமத்திய வீடு சார்ந்து சமூகத்தில் யார் யாரோ எதைஎதையோ விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு இந்நிகழ்வால் கிளம்பியபோது தோன்றியது, உண்மையில் இது அப்பாக்களிற்கான நிகழ்வு. அதாவது, உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது ஏற்றுக்கொள்ளப்படும் என்று சமூகம் வரையறுக்கும் வழிகளில் மட்டும் வெளிப்படுத்தும், ஆண் என்றால் உணர்வுகள் பற்றி அலட்டிக்கொள்ளக்கூடாது என்ற பத்தாம்பசலி;தனத்தை நம்பும், பெண் குழந்தை பெற்ற, வாஞ்சை நிறைந்த ஒரு அப்பனிற்குத் தனது குழந்தையினை அது பிறந்தபோது அள்ளி எடுத்துக் கொஞ்சிக் கொட்டிய வாஞ்சையினையினை அவள் வளர்ந்ததன் பின் வெளிக்காட்ட இந்தக் கடுமையான சமூகம் அனுமதித்திருக்கும் ஒரு அருமையான சந்தர்ப்பமாகவே இவ்விழா பதிந்து கொண்டது. பெண்குழந்தையோடு மட்டுமல்ல மனைவியிடம் கூட வாஞ்சையினை வெளிச்சத்தில் இத்தகைய அப்பாக்கள் இத்தகைய ஒருசில சந்தர்ப்பங்களிலேயே காட்டிக்கொள்கிறார்கள் போலும். சாமத்தியவீடு சார்ந்து ஒரு புதிய பார்வை எனக்குள் பதிந்து கொண்டது.

இன்னுமொருவன் கனடாவில் பார்க்கும் முதலாவது சாமத்தியவீடோ? 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் ,நாங்கள் பூணூல் போட்ட வெள்ளைக்கார பிராமணனையே கண்டிட்டோம்...விளக்கத்தோடு கலியாணம் நடத்தி வைக்கின்றார் என்று அவருக்கு எம்மவர்கள் புகழாரம் வேறு..

  • கருத்துக்கள உறவுகள்

//வாஞ்சை நிறைந்த ஒரு அப்பனிற்குத் தனது குழந்தையினை அது பிறந்தபோது அள்ளி எடுத்துக் கொஞ்சிக் கொட்டிய வாஞ்சையினையினை அவள் வளர்ந்ததன் பின் வெளிக்காட்ட இந்தக் கடுமையான சமூகம் அனுமதித்திருக்கும் ஒரு அருமையான சந்தர்ப்பமாகவே இவ்விழா பதிந்து கொண்டது. //

சாமத்தியச் சடங்கை,  உன்னிப்பாக அவதானித்து.... வித்தியாசமான கோணத்தில் எழுதப்பட்டுள்ளது.
அதிலும்... அந்தக் கடைசி வரி, நெஞ்சை தொட்டது.

அருமையான எழுத்து வளம்!

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து செல்லுங்கள்.இன்னும் பல விடையங்கள் காத்திருக்கு.நன்றி உங்கள் பதிவிற்க்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் மிகவும் கவனமாகத்தான் நிகழ்வு மேடையை அவதானித்துள்ளார். பழமைக் கலாச்சாரத்தில் இருக்கும் அப்பாக்களுக்கு சொந்த மகளின் கன்னத்தில் பட்டும்படாமல் முத்தம் கொடுக்க சாமத்தியவீடுதான் சந்தர்ப்பம் கொடுக்கின்றது என்பது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் உள்ளது.

சாமத்திய வீட்டுக் களியாட்டக் கலாச்சாரத்தின் அடிப்படையை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், தாங்களும் சாறி உடுத்தி உறவினர்கள், நண்பர்களுடன் மகிழ்வாகக் கொண்டாடவேண்டும் என்று சிறுமிகளே விரும்பும்போது ஒன்றும் செய்யமுடியாது.

நானும் எனது கொள்கைகளை விட்டுக்கொடுத்து மருமகள்கள் சிலருக்கு பல்லாக்கும் தூக்கியிருக்கின்றேன். ஆனால் எமது கலாச்சாரத்தின் அடையாளம் என்று சொல்லி மானாட மயிலாட போன்று புதுமைகளைப் புகுத்தும்போதும், பகட்டையும், ஆடம்பரத்தையும் காணும்போதும் இப்படியானவை தேவையா என்று கருதுவது உண்டு.

  • தொடங்கியவர்

கலைஞன், புத்தன், தமிழ்சிறி, போல், சுவைப்பிரியன் மற்றும் கிருபன். நன்றி உங்கள் கருத்திற்கு.

கலைஞன், உங்கள் கேள்வி நியாயம் தான். அனைத்து விழாக்களும் ஒரு ரெம்பிளேற் பிரகாரம் தான் நிகழ்கின்றன. அப்படி இருக்கும் போது இதற்கு மட்டும் ஏன் பதிவெழுதத் தோன்றியது என்றால், அதற்கு இரு காரணங்கள். ஒன்று இந்நிகழ்வில் பல பாத்திரங்கள் பகட்டு என்ற வார்த்தையின் அர்த்தம் தெரியாதவர்களாக, மிகவும் இயல்பான மண்வாசனை மிஞ்சி நின்ற மக்களாக இருந்தார்;கள். நிகழ்வின் பாத்திரங்கள் அனைத்தும் அற்புதமாக ரசிக்கும்வகை இருந்தன. இரண்டாவது, நான் உறவினர்களோடு அதிகம் அடிக்கடி அளவளாவ சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. அதனால் எனது உறவினர் விழாக்களிற்குச் செல்லும் போதெல்லாம், கூட்டம்கூட்டமாக யாராவது வந்து பேசிக்கொண்டே இருப்பார்கள். அதனால் நிகழ்விற்குள் செல்ல முடிவதில்லை. மாறாக இந்நிகழ்வில் யாரையும் எனக்குத் தெரியாது என்பதால் நிகழ்வை மட்டும் அவதானிக்க முடிந்தது. 

மற்றையது இப்போதெல்லாம், முன்முடிவுகள் மற்றும் மதிப்பீடுகள் சார்ந்து சற்று விழிப்புணர்வு கிடைத்திருக்கிறது. ஒருவர் ஒரு விடயத்தைச் செய்வது அறிவீனம் என்றோ முட்டாள்த்தனம் என்றோ எண்ணுவதைக் காட்டிலும், ஒரு படம் பார்ப்பது போல புத்தகம் வாசிப்பது போல பாத்திரங்களை மட்டும் என்னால் இயன்ற கவனத்தோடு அவதானிக்க முயன்றுகொண்டிருக்கிறேன். அனைவரிற்கும் அனைத்திற்கும் காரணங்கள் இருக்கின்றன. நாம் விமர்சிக்கும் பல விடயங்களின் மாறுபட்ட ஏதோ ஒரு வடிவத்தை நாமும் எங்கேயோ செய்துகொண்டு தான் இருக்கிறோம்; என்றே தோன்றுகிறது. அதனால் முந்தியடித்து மற்றையவர் சார்ந்து மதிப்பீடுகளைச் செய்வதைக் காட்டிலும், எம்மால் இயன்றதை காட்சிகளை வாசித்துக்கொள்வது மட்டுமே எமக்கானது என்பது எனது தற்போதைய அபிப்பிராயம். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அப்பாவின் சுகமான அவஸ்தைகளை சில வருடங்களுக்கு முன் நானும் அனுபவித்திருக்கின்றேன்.  யோசித்துப் பார்த்தால் அன்றைக்குப் பின் எனது மகளுக்கு நான் முத்தமிட்டிருப்பேனோ தெரியவில்லை. இப்பொழுது அவளுக்கு மூன்று பிள்ளைகள். பல பிறந்த நாட்கள், கலியாண நாட்கள் எல்லாம் வந்து போயிருக்கின்றன. சில சமயம் சில எமோசனான தருணங்களில் ( தாலி ஏற்றுக்கொண்ட சமயம், பிள்ளைகள் பிரசவித்த நேரம் போன்ற) அவளது உச்சியில் முத்தமிட்டுள்ளேன். உங்களின் இந்தப் பதிவு என் போன்ற அப்பாக்களைப் புளகாங்கிதமடையச் செய்யும்...!  :rolleyes:  tw_blush:

நன்றி இன்னுமொருவன்...!

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை எழுத்து சாதாரணர்களுக்கானதாய் தெளிவாய் இருக்கின்றது. ஆயினும் வரவர உங்கள் எழுத்தில் உள்ள அசாதாரணம் விடுபடுகிறதோ என்று கவலையாகவுமிருக்கிறது இன்னுமொருவன். அந்தத் தந்தையின் மனநிலை, உடல்மொழி என்று நீங்கள் கவனித்திருந்தாலும் ஆண்களுக்கேயுரிய வந்ச்சகமின்மையும் உங்கள் எழுத்தில் தெரிகிறது. பெண்கள் ஒரு பார்வையில் ஒருவரை அளப்பதர்க்க்கும் உங்கள் பார்வைக்கும் வித்தியாசம் நிட்சயமாய் உண்டு. நான் நினைக்கிறேன் இவர் சமூகத்துக்குப் பயப்படும் இருமுகம் கொண்ட ஒரு ஆணாகக் கூட இருக்கலாம். இயல்பான மண்வாசனை மிக்க நிகழ்வு உங்களுக்கு இது முதலானதும், பகட்டான வீடியோக்களைப் பார்த்து இவ்வாறுதான் மற்றவர்களின் நிகழ்வும் என உங்கள் மனதிலும் ஒரு பிம்பம் பதிந்து போயுள்ளமையையும் உங்கள் எழுத்துக் காட்டுகின்றது. 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

அனுபவப் பதிவுக்கு நன்றி.

ஒரு விதத்தில் இந்தச் சமூகம் பெண்களை நேரடியான ஒடுக்குமுறைக்குள் உட்படுத்தி அவர்களுக்கு பல கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியிருப்பதுபோல் ஆண்களுக்கு அவன் கணவனகவோ இல்லை தகப்பனாகவோ இருக்கின்றபோது உணர்வுகளை வெளிப்படுத்த முடியாத இறுக்கமான இயல்புநிலையை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஆணும் அவனது சுபாவமும் இவ்விறுக்கத்தை ஆணாதிக்கத்தை நிலைநிறுத்தும் பொருட்டு நிலுவையில் வைத்திருக்கவே விரும்புகின்றது என்றே எண்ணத்தோன்றுகின்றது. தமிழ்சினிமா போன்று கணவன் மனைவி அல்லது காதலன் காதலி கனவிலேயே ஆடிப்பாடி இயல்பாக ஆனந்தமாக தமது உணர்வுகளை வெளிப்படுத்துவதுபோன்று இவ்வாறான நிகழ்வுகளே சில உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய இடமாக இருக்கின்றது. ஏன் என்ற கேள்விக்கு விடைகொடுக்க விரும்பாமல் சமூகம் பல தலமுறைகளை தாண்டி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. இவ்வாறான முரண்பாடுகளே இச் சமூகத்துக்குரிய அடிப்படை அடயாளமாக இருக்கின்றது. 

  • தொடங்கியவர்

நன்றி சுவி, சுமேரியர் உங்கள் கருத்திற்கு. 

சுகன் உங்கள் கருத்தோடு உடன்படுகின்றேன். 

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

இன்றை காலத்தில் புலம்பெயர்ந்தவர்கள் எந்த நிகழ்வானாலும் ஒன்றில் வீடியோ பதிவாளர் அல்லது இப்படியான டிஜே சின்னத்தம்பிகளின் ஆட்டத்திற்குத் தலையாட்டுவதே பெற்றோரின் கதியாகிவிட்டது-

ஆழமான கவனிப்பின் நிமித்தம் எழுதப்பட்டிருக்கின்றது. நன்றாக இருக்கும் வர்ணனையில்...

ஊரில் மாமரத்தின் கீழே..... முற்றம் கூட்டும் பெண்மணி.....

படம் பிடித்துப் போடாத குறையாக  அலாதியாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, Innumoruvan said:

சாமத்தியவீடு என்பது என்ன என்பதனை மண்டபத்தின் நிர்வாகியே நெறிப்படுத்திக்கொண்டிருந்தார்

ஊரிலும் பெரியவர்கள் அல்லது விடயம் தெரிந்தவர்கள் தான் ஒரு நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவார்கள். அது சாமத்தியவீடாகட்டும் அல்லது செத்தவீடாகட்டும் ஒருவரின் மேற்பார்வையிலேயே நடக்கும்.

21 hours ago, Innumoruvan said:

பெண் குழந்தை பெற்ற, வாஞ்சை நிறைந்த ஒரு அப்பனிற்குத் தனது குழந்தையினை அது பிறந்தபோது அள்ளி எடுத்துக் கொஞ்சிக் கொட்டிய வாஞ்சையினையினை அவள் வளர்ந்ததன் பின் வெளிக்காட்ட இந்தக் கடுமையான சமூகம் அனுமதித்திருக்கும் ஒரு அருமையான சந்தர்ப்பமாகவே இவ்விழா பதிந்து கொண்டது.

மனிதர்களில் வயதும் பருவங்களும் மாறும் போது பழக்க வழக்கங்களும் இயற்கையாகவே மாறுகின்றது. ஆனால் மிருகங்களிடம் அப்படியில்லை.

இன்னுமொருவன் உங்கள் பகிர்வுக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.