Jump to content

“ஆதியில் தமிழர்கள் பின்பற்றிய மதம் பௌத்தம்” – கௌதம சன்னா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“ஆதியில் தமிழர்கள் பின்பற்றிய மதம் பௌத்தம்” – கௌதம சன்னா

by வல்லினம் • February 1, 2018 • 8 Comments

 

தமிழகத்தில் மிக நீண்ட காலம் விமர்சனத்திலும், ஆய்வுகளிலும் ஈடுபட்டு வரும் எழுத்தாளர் கௌதம சன்னாவைச் சந்திக்கும் வாய்ப்பு மலேசியாவில் கிடைத்தது. தமது ஆய்வுகளைக் களபணிகளின் மூலமே சரிபார்த்துக் கொள்ளும் நோக்கமுடைய அவரது ‘குறத்தியாறு’  இலக்கியச் சூழலில் பெரும் கவனத்தை ஈர்த்த காப்பியம். மாணவர் பருவம் தொட்டு இடதுசாரி இயக்கத்தின் இணைத்துக் கொண்டு பணியாற்றியதுடன், சங்கம் என்னும் அமைப்பையும், பின்பு தலித் மாணவ-மாணவியர் பேரவை என்னும் அமைப்பை உருவாக்கியவர். அதே காலக்கட்டத்தி அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு எனும் அமைப்பிற்கு அடித்தளமிட்டவர். இந்த அமைப்பு தர்மபுரி மாணவியர் எரிப்பு கொடுமை மற்றும் இடஒதுக்கீடு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடியது. (பின்பு ஈழ ஆதரவுப் போராட்டங்களை முன்னெடுத்து)

தொடர்ந்து தலித் நிலவுரிமை இயக்கம், தென்னிந்திய தலித் எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளின் உருவாக்கத்திலும் செயல்பாட்டிலும் முக்கிய பங்காற்றினார். தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

கௌதம சன்னாவின் எழுத்துக்கள் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. மார்க்சியம், அம்பேத்கரியம், பௌத்தம் குறித்து இவர் தொடர்ந்து எழுதி வருகிறார். மதமாற்றத் தடைச் சட்டத்தின் வரலாறும் விளைவுகளும், பண்டிதரின் கொடை, க.அயோத்திதாசப் பண்டிதர் வாழ்க்கைச் சுருக்கம் என குறிப்பிடத்தக்க நூல்களையும், குறத்தியாறு என்னும் காப்பியத்தையும் எழுதியுள்ளார். மகேந்திரவர்ம பல்லவன் எழுதிய மத்தவிலாஸ பிரஹசனம் என்னும் நாடக நூலுக்கு இவர் எழுதிய மறுப்பு விரைவில் வெளிவர இருக்கிறது.

இவ்வாறு பல்வேறு ஆளுமைகளைக் கொண்ட அவரிடம் உரையாடலை ஒன்றைத் தொடங்க திட்டமிட்டோம்.கோலாலம்பூர்,செந்தூலில் கலை மையமாக மாற்றப்பட்டுள்ள ரயில்நிலைய ஊழியர்களின் பழைய குடியிருப்பில் ஒரு மாலை வேளையில் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. மா.சண்முகசிவா,  டாக்டர் சுபாஷினி, தயாஜி ஆகிய நண்பர்களின் இணைவில் இந்த உரையாடல் தொடங்கியது. பௌத்தத்தை மையமாக வைத்து இவ்வுரையாடலை வடிவமைத்துக்கொண்டோம்.

கேள்வி: எங்கிருந்து யார் மூலம் உங்களுக்கு பௌத்தத்தில் ஈடுபாடு ஏற்பட்டது?

கௌதம சன்னா: அடிப்படையில் எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் இந்திய கலாச்சாரத்தில் வளர்வதற்கு ஒரு மதம் தேவைப்படுகின்றது. கடவுளற்ற மதம் பற்றி தற்கால மனித இனத்திற்கு குறிப்பாக இந்தியர்களுக்கு புரிதல் இல்லை. எனவேபெரும்பாலோர் கடவுள் நம்மை மேலிருந்து கண்காணிக்கின்றார் என்று  நம்புகின்றார்கள். ஆனால் பௌத்ததில் அப்படி இல்லை. யாரும் நம்மை வானத்தில் இருந்து கவனிக்கவில்லை. தன்னைத்தானே ஒருவன் கண்காணித்தல்தான் பௌத்தம்.

பௌத்தத்தின் அடிப்படையே விழிப்புணர்வுடன் இருத்தல்தான். புத்தர் பொய் சொல்லாதே, திருடாதே, முறையற்ற காமம் கொள்ளாதே, மனதை மயக்கும் மதுவை குடிக்காதே, கொலை செய்யாதே என ஐந்து நெறிகளைச் சொல்கிறார். இவை சாதாரணமான ஒன்றுதான். பிறந்த குழந்தையிடமும் இந்தக் குணம் இருக்கிறது. இந்த ஐந்து தவறுகளையுமே அது செய்யாது. அதற்காக குழந்தையை பௌத்தன் என சொல்லிவிட முடியாது. மிருகம் எந்தத் தவறும் செய்யாதுதான் அதற்காக அதனை சுத்த பௌத்தன் என சொல்ல முடியாது. ஆனால் இவையனைத்தையும் மனிதனால் செய்ய முடியும். இதனை செய்யக்கூடாது என அவனுக்கு சொல்லக்கூடியது அவனது விழிப்புணர்வுதான். இந்த விழிப்புணர்வை உருவாக்கத்தான் புத்தர் பல கோட்பாடுகளை வைத்திருக்கிறார். இந்த விழிப்புணர்வை பண்பாட்டிற்குள் கொண்டு வந்து அதை மத ரீதியாக கட்டமைத்து  உளவியல் ரீதியாக செயல்படுத்தியதில் பௌத்ததிற்குப் பெரும் பங்குண்டு.

கேள்வி: விழிப்புணர்வு மட்டும் போதுமானதா?

கௌதம சன்னா: இல்லை. ஒரு கொலையை விழிப்புணர்வு நிலையிலும் செய்யலாம். ஆனால் பேரன்பு இருந்தால்தான் உயிர்வதையைத் தடுக்க முடிகிறது. பேரன்புடன் இணைந்த விழிப்புணர்வே உலகுக்கு உபயோகமாகிறது. இவை இரண்டையும் அடிப்படையாக வைத்து அதன் மீது  கட்டமைக்கப்பட்ட மதம் எனக்கு பிடித்துள்ளது. நான் பல மதங்களை பின்பற்றியுள்ளேன். அவை எனக்கு தற்காலிக நிம்மதியைக் கொடுத்தது. ஆனால் பிரக்ஞையை எனக்கு போதித்தது பௌத்தம் மட்டுமே. நான் யார் மூலமாகவும் பௌத்தத்துக்குள் வரவில்லை. என்னிடம் தீவிரமான வாசிப்பு இருந்தது. அம்பேத்காரின் புத்தரும் அவர் தம்மமும் என்ற நூலினை வாசித்தப்பின்பு எனக்கு அதன் மேல் ஈடுபாடு வந்தது. ஆனால் கோயிலில் சென்று புத்தரை வணங்கும் வழக்கமான சடங்குகளைப் பின்பற்றுபவன் அல்ல நான்.

கேள்வி: ஆனால் நீங்கள் பௌத்தத்தை வெகுமக்களின் நம்பிக்கையாக உருவாக்கும் எண்ணம் கொண்டுள்ளது தெரிகிறது. அதன் காரணம் என்ன?

கௌதம சன்னா: ஒரு சுதந்திரமான மனிதன் அடிமையை அருகில் வைத்துக்கொள்ள மாட்டான். நான் பௌத்தத்தை அல்லது தம்மத்தை உணர்ந்த பின்பு என்னை அதிகமே சுதந்திரமானவனாக நினைக்கிறேன். அதோடு அனைவரும் சுதந்திரமானவர்களாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அதனால் பௌத்தத்தை அவர்களிடம் கொண்டு சேர்க்க நினைக்கிறேன்.

கேள்வி: பௌத்தம் குறித்து பேசும்போது அண்மையில் திருமாவளவன் இந்து கோயில்கள் ஒருகாலத்தில் பௌத்த ஆலயங்களாக இருந்ததைப் பற்றி பேசியதும் அது சர்ச்சையானதும் நினைவுக்கு வருகிறது.

கௌதம சன்னா: தமிழகத்தில் இருக்கக்கூடிய பெரும்பாலான பெரிய கோவில்கள், பத்தாம் நூற்றாண்டுக்கு பிறகு வந்தவை. அதற்கு முன் உள்ளதெல்லாமே சிறியவைதான். ஆனால் பெரிய கோவில்களாக இருக்கும் எல்லாவற்றிலும் ஒரு பௌத்த அடிப்படை இருக்கிறது. ஒன்று பௌத்த விகாரங்களை இடித்துவிட்டு உருவாக்கப்பட்ட புது கோவில்கள் இருக்கும். அல்லது அதிலிருக்கும் புத்தர் சிலையை அகற்றிவிட்டு பெருமாள் அல்லது லிங்கத்தை சிலையாக வைத்திருப்பார்கள்.

நாகப்பட்டிணத்தில் ஒரு கோவில் கட்டியிருந்தார்கள். அந்த புத்தர் சிலை முழுவதும் தங்கத்திலானது. அதனை மலேசியாவின் கடாரத்தில் இருந்து கொண்டு சென்று அங்கு வைத்திருக்கிறார்கள். பிற்காலத்தில் சைவ எழுச்சியும் வைணவ எழுச்சியும் உருவாகிய சமயம் அந்த சிலையை எடுத்து உருக்கி ஶ்ரீ ரங்கத்திற்கு கொண்டுவந்துபெருமாள் கோவில் கட்ட பயன்படுத்தியிருக்கிறார்கள்.

பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு பிக்குகள் பெரிய மத ஜாம்பவான்களாக மாறி  அமர்ந்த இடத்திலேயே மக்களிடம் காணிக்கைகள் வாங்கி சொத்து வாங்கிக்கொண்டார்கள். விகாரங்கள் நிறைய சொத்து உள்ள இடமாக மாறிவிட்டன. இது அரசர்களை உறுத்திக்கொண்டே இருந்தது. வரும் போகும் வியாபாரிகள் எல்லாம் அங்குப் பணத்தைப் போட்டுவிடுகிறார்கள். சொத்து அப்படியே சேர ஆரம்பித்தது. சொத்து எங்கு சேருகிறதோ அங்கு எல்லாருடைய கண்களும் இருக்கும்தானே. அரசனுக்கும் இருக்கும், கொள்ளைக்காரனுக்கும் இருக்கும். சொத்துகளை அபகரிக்க ஆரம்பிக்கிறார்கள். எதிர்த்த துறவிகளின் தலைகளைத் துண்டிக்கிறார்கள். இதற்கான ஆதாரங்கள் நிறையவே உள்ளன. மயிலை.சீனி வெங்கடசாமி எந்தெந்த கோவில்கள் பௌத்த கோவில்களாக இருந்து பின்னர் மாறின என எழுதியிருக்கிறார். திருப்பதி கோவில் முன்னர் பௌத்த ஆலயம் என்பதை நிரூபிக்கும் ஆய்வுகள் வந்திருக்கின்றன. மதுரை அழகர் ஆலயம் பௌத்த ஆலயம் என தொ.பரமசிவம் ஆய்வேடு நூலாக வந்துள்ளது.

கேள்வி: பௌத்தம் அளவுக்கு இந்தியாவில்  வேறு வலுவான மதங்கள் இருந்தனவா? சமணத்தை அவ்வாறு வரையறுக்க இயலுமா?

கௌதம சன்னா: இந்தியா முழுக்க அரசமதமாக முதன் முதலில் அங்கீகரிக்கப்பட்டது பௌத்தம்தான்.வேறு எந்த மதத்திற்கும் அந்தச் சிறப்பு இல்லை. அதன் முதல் நான்கு மாநாடுகளை நடத்தியவர்களே மன்னர்கள்தான். முதலாவது மாநாட்டை ராஜகிரகத்தில் மன்னர் அஜாதசத்ருவும், இரண்டாம் மாநாட்டை வைசாலியில் மன்னர் காகவர்ணனும், மூன்றாவது மாநாட்டை பாடலிபுத்திரத்தில் சாம்ராட் அசோகரும், நான்காவது மாநாட்டை குண்டலிவனம் எனும் தற்போதைய காஷ்மீரத்தில் கனிஷ்கரும் நடத்தினார்கள். முதல் இரண்டு மாநாடுகளுக்கு பிறகு பௌத்தம் பெருமளவு பரவத்தொடங்கியது. அதன் பிறகு தென்னிந்தியா முழுக்க இலங்கை வரை பௌத்தம் பரவியிருந்தது.

ஆனால் இலங்கை வரை சமணம் செல்லவில்லை. சமணத்திற்குக் கடலைத் தாண்டக்கூடாத என்ற கட்டுப்பாடு இருக்கிறது. அந்தக் கட்டுப்பாடுதான் பின்னர் பிராமணர்களுக்கும் பரவியது. ஆனால் பௌத்தம் அப்படி இல்லை. உலகத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்பதுதான் அதன் நோக்கம். இன்னும் சொல்வதென்றால் உண்மையான பௌத்தன் உலகத்தின் குடிமனாக இருக்க வேண்டும். அவனுக்கு மொழி கிடையாது. இனம் கிடையாது. மதம் கிடையாது. உதாரணத்திற்குச் சொல்வத்தென்றால் அசோகர் இந்திரபிரதேசம் முதல் வேலூர் வரை பாதை போட்டிருந்தார். பாடபுத்தகத்தில் என்ன படிக்கின்றோம்? அசோகர் மரம் நட்டார். சாலைகளை அமைத்தார். இரு பக்கங்களிலும் விடுதிகளை அமைத்தார். பயணிகள் தங்கக்கூடிய சத்திரங்களை அமைத்தார் என்றுதான் படித்திருக்கிறோம். ஆனால் அதனை எதற்கு கட்டினார் என்பது குறித்து பாடபுத்தகங்கள் பேசவில்லை. இந்திரபிரஸ்தம் என்பது இன்றைய டெல்லி. வேலூர் என்பது தென்னிந்தியாவின் கடைசி. டெல்லியில் இருந்து வேலூர் வரை ஒரு ராஜபாட்டையை உருவாக்கியிருக்கிறார் அசோகர். அந்த ராஜபாட்டையை உருவாக்கியது பௌத்த துறவிகள் வந்து போவதற்காக. ஏனெனில் அந்த இந்திரபிரஸ்தத்தைத் தாண்டிதான் புத்தர் பிறந்த இடத்திற்கு மேலே செல்லவேண்டும். அந்த நோக்கில்தான் அதனை கட்டியிருந்தார்கள். வணிக நோக்கமும் இருந்ததை மறுப்பதற்கில்லை. சத்திரங்கள் என சொல்லகூடியவை எல்லாமே விகாரங்கள்தான். வேலூருக்கும் காஞ்சிபுரத்திற்கும் அதிக தூரமில்லை. காஞ்சிவரம்தான் தென்னிந்தியாவின் பௌத்த சிந்தனையாளர்களின் மையம். வாரணாசி, நாளந்தா என வடக்கில் பல இடங்கள் இருந்தன. தென்னிந்தியாவில் காஞ்சிபுரம், பாதிரிப்புலியூர் ஆகிய முக்கிய மையங்கள். காஞ்சிவரத்தில் மிகப்பெரிய பௌத்த பல்கலைக்கழகம் இருந்தது. அங்கிருந்துதான் நாலந்தா பல்கலைக்கழகத்திற்கு ஆசிரியர்கள் சென்றிருக்கிறார்கள். காஞ்சிவரத்தை மையமாக வைத்துதான் பௌத்தம் பரவியிருக்கிறது. ஒரு வலுவான பௌத்த பின்புலம் இல்லாமலா இதெல்லாம் சாத்தியமாகியிருக்கும்? ஒரு குறிப்பிட்ட காலத்தில் வரலாற்றில் இருந்து பௌத்தம் துண்டிக்கப்பட்டுவிட்டது. இந்தக் காரணத்தை நாம் ஆராயவேண்டியுள்ளது.

கேள்வி: அப்படியானால், இந்தியா முழுக்க கோலோச்சிய ஒரே மதம் பௌத்தம் எனச் சொல்லலாமா?

கௌதம சன்னா: கடல் கடந்தும் கடல் தாண்டியும் கோலோச்சியது அது மட்டுமேதான். சமணத்துக்கு அப்படி ஒரு தேவை இல்லாமல் போனதற்குக் காரணம் அதன் கொள்கைகள்தான். சமணத்தில் இரண்டு முக்கியமான பிரிவுகள் திகம்பரர்கள் மற்றும் சுவேதாம்பரர்கள். சுவேதாம்பரர்கள் வெள்ளை உடையை மட்டும் அணிந்திருந்தார்கள். திகம்பரர்கள் நிர்வாணமாக இருப்பர். இவர்கள் எண்ணிக்கையில் குறைவு. சுவேதாம்பரர்கள்தான் அப்போது அதிகமாக இருந்தார்கள். ஆனால் ஆச்சாரியர்களாக திகம்பரர்கள்தான் இருந்தார்கள். ஊர் ஊராக சென்று சொல்லிக்கொடுப்பவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கான மையமாக கடலூர் இருந்தது. அங்கு அவர்களுக்கான பல்கலைக்கழகம் இருந்தது. அந்தக் கடிகையை பத்தாம் நூற்றாண்டில் அடித்து நொறுக்கிவிட்டார்கள். அவ்வாறு காஞ்சிபுரத்திலும் அவர்களுக்கு ஒரு கடிகை இருக்கிறது. பள்ளி என்ற வார்த்தை சமணப்பள்ளியையும் பௌத்தப்பள்ளியையும் குறிக்கும். பள்ளிக்கூடத்திற்குச் சென்று அப்போது படிப்பதென்றால் பௌத்த பள்ளிக்கோ அல்லது சமண பள்ளிக்கோதான் செல்வார்கள். இந்துக்களிடம் இப்படியான அமைப்பே கிடையாது. கட்டமைக்கப்பட்ட மதமாக பௌத்தம் இருந்தது. இப்படி இருந்தால் தான் வணிக ரீதியாவும் பண்பாட்டு ரீதியாகவும் மக்களை ஒன்றிணைக்க முடியும்.

புத்தர் தன்னுடைய தம்மத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க சீடர்களிடம் சொல்லிய முக்கியக் கட்டளைகளில் ஒன்று மக்களின் மொழியை கற்கவேண்டும் என்பதுதான். பின்னர் அந்த மொழியை வளமைபடுத்தவேண்டும். மக்களுக்கு வேறு தேவைகள் இருக்கும் பட்சத்தில் அதனை பூர்த்திசெய்து கொடுக்கவேண்டும். கல்வியோ மருத்துவமோ தேவைப்பட்டால் அதனை கொடுத்துவிட்டப்பின்னர்தான் தம்மத்தை போதிக்கவேண்டும். புத்தர் மாகத்திய மொழியில் பேசினார். அதை அப்படியே பொதுமக்களிடம் கொண்டுச்செல்ல முடியாது என்றே இந்தக் கட்டளை இடப்பட்டது. பௌத்தம் சென்ற இடங்களில் எல்லாம் இலக்கியம், மருத்துவம், தற்காப்பு கலை எல்லாம் வளர்ந்தது  இப்படித்தான்.

கேள்வி : புத்தர்  எதைக் குறித்து மையமாகப் பேசினார்?

கௌதம சன்னா: புத்தர் தனது தத்துவங்களை உருவாக்கிய பிறகு, மனிதனின் துன்பங்களுக்கு எது காரணம் என கண்டுபிடித்தார். எல்லோரும் சொல்வதுபோல ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பதெல்லாம் பள்ளி புத்தகங்களில் உள்ளது. அதை தாண்டி புத்தர் விரிவாக பேசியுள்ளார். ‘விசித்திம்மக்கா’ என்ற புத்தகம் இருக்கிறது. ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகம். புரிந்துணர்வு குறித்தே அதில் பேசுகின்றார். புரிதல் என்றால் என்ன? எதனை புரிந்துகொள்வது? எப்படி புரிந்துக்கொள்வது? எத்தனை வகை புரிதல் இருக்கின்றன? என தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார். புரிதலுக்கான அடிப்படை விழிப்புணர்வு எனக் கண்டு கொள்கிறார். அதன் பிறகே அதனை விரிவாக்கிச் செல்கிறார். மக்களிடம் தன் கொள்கைகளை குறித்து சொல்வதற்கு முன் முதலில் ஐந்து பேரிடம் அதனை சொல்கிறார். பின்னர், இதனை பரப்புவதற்கு ஐந்து பேர் போதாது என கண்டு சங்கத்தை உருவாக்குகின்றார். சங்கத்தை உருவாக்கிய பிறகு சங்கத்துக்கான விதிமுறைகளை உருவாக்குகின்றார்.

கேள்வி: சங்கத்தில் யாரெல்லாம் இருக்கலாம்?

கௌதம சன்னா: ஒரு பிக்கு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான கடும் விதிமுறைகள் உள்ளன. இந்த விதிமுறைகளை ஒப்புக்கொண்டவர்கள்தான் பிக்குவாக இருக்க முடியும். ஒருவர் பிக்குவாவதற்குக் குடும்பம் உள்ளிட்ட எந்தத் தரப்பிடம் இருந்தும் எதிர்ப்பு வரக்கூடாது. வந்தால் அவரால் பிக்குவாக முடியாது. துறவியாக இருப்பவர்களுக்குக் கட்டுப்பாடுகள் உண்டு. உடல் ரீதியாக மன ரீதியாக கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்றன. ஒரு வேளை கட்டுப்பாடுகள் தேவையில்லை என்றால் தாராளமாக பௌத்தத்தில் இருந்து வெளியேறிவிடலாம். வர்ணாசிரம அடிப்படையில் இந்தியாவில் பிராமணர்கள், சத்தியர்கள், வைஷியர்கள்,  சூத்திரர்கள் என மக்கள் சமூக அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தார்கள். இதில் பிற்படுத்தப்பட்டவர்கள் சமூக புறக்கணிப்பைத் தாங்க முடியாமல் பிக்குகளாக மாறுகின்றார்கள். வீட்டுக்குப் பயந்து இராணுவத்தில் சேர்த்துவிட்டதாக சொல்வார்களே அவ்வாறு இதனை எடுத்துக் கொள்ளலாம். பிக்குகளாக சேர்கின்றவர்களுக்கு முறையாக பயிற்சி போதனைகளைக் கொடுத்துவிட்டுதான் அனுப்புவார்கள். புத்தரின் நேரடி சீடராய் தமிழகத்தை சேர்ந்தவர்களே இருந்திருக்கிறார்கள்.‘சோபகா’ என்ற ஒருவர் புத்தருடனேயே இருந்துவிட்டார். அவரை தமிழகத்தை சார்ந்தவரா என பார்ப்பதைவிட இந்தியா முழுக்க அப்போது தமிழர்கள் பரவியிருந்தார்கள் என்பதை நாம் உணரவேண்டும். இமயமலை வரையில் தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

இலங்கைக்கு பௌத்தம் தமிழ் நாட்டில் இருந்துதான் சென்றிருக்கும்.தமிழ் நாட்டில் இருந்து சென்றிருந்தாலும் அசோகரின் இரு பிள்ளைகளான சங்கமித்திரையும் மகேந்திரனும் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டபோதுதான் அதற்கான அங்கீகாரம் கிடைத்திருக்கும். ஆனால் மகாவம்சத்தில் புத்தர் அங்கிருந்து மூன்று முறை பறந்து வந்து இலங்கை மக்களுக்கு பௌத்தத்தை சொல்லிவிட்டு மீண்டும் பறந்து வாரணாசிக்கு சென்றுவிட்டார் என புராணத்தைக்  கட்டமைக்கிறார்கள். ஏனெனில் தமிழர்கள் மூலமாக மதம் அங்கு சென்று சேர்ந்தது என சொல்வதில் அவர்களுக்குப் பிரச்சனைகள் உண்டு. இப்படியாக கற்பனைகளைச் சொல்லிவந்தாலும் இலங்கைக்கு தமிழர்கள் மூலமாகத்தான் பௌத்தம் பரவியது. அதே போலத்தான் மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், சீனா, மங்கோலியா, ஜப்பான் வரை தமிழர்கள் மூலமாகத்தான் பௌத்தம் சென்று சேர்ந்திருக்கிறது.

கேள்வி : அதன் வீழ்ச்சி பற்றி கூறுங்கள்.

கௌதம சன்னா: ஒரு அரசு நீண்ட காலம் ஆண்டு கொண்டிருக்க முடியாது. எதாவது ஒரு கட்டத்தில் அதற்கு வீழ்ச்சி உண்டு. அந்தச் சமயத்தில் வடநாட்டில் நடந்த  புரட்சி பௌத்தத்தின் வீழ்ச்சிக்குக் காரணமானது.  சுங்கர்கள் என்பது பிராமண சமூகம். அவர்கள் மௌரிய வம்சத்தின் கடைசிமன்னனை கொலை செய்து ஆட்சியைப் பிடிக்கிறார்கள். அதுதான் முதலாவது எதிர்ப் புரட்சி. அன்றிலிருந்து பௌத்தம் அழியத்தொடங்கியது.

பத்தாம் நூற்றாண்டுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஒரு பிரச்சனை வருகிறது. பௌத்தம் உறுதியாக இருந்தாலும் வியாபார சமூகம் ஒன்று உருவானது. அந்தச் சமூகத்துக்கு பௌத்தம் ஒத்துழைக்க முடியவில்லை. அவர்கள் சைவத்தை வளர்க்கிறார்கள். தென்னாடு முழுக்கவே சைவத்துக்கு மாறியது. கர்நாடகா பக்கத்தில் மேலை சாலிக்கியர்கள் சைவமானார்கள். இப்படி ஒரு அரசியல் மாற்றத்தின் மூலமாக ஏற்கனவே இருக்கக்கூடிய அதிகாரத்தை அழித்தார்கள். சைவர்களாக மாறிய பின்னர் பௌத்த ஆலயங்களை  அடித்து நொறுக்கி சிலைகளை எல்லாம் தூக்கி வீசிவிட்டு  சிவன் சிலையையோ விஷ்ணு சிலையையோ வைத்தார்கள். இப்படித்தான் பெரும்பாலான கோவில்கள் மாற்றப்பட்டன. இந்த நிகழ்வுகளிலும் தொடர்ந்து வந்த காலங்களிலும் எங்கெல்லாம் புத்தர் சிலை இருக்கிறதோ, அந்த கற்சிலைகளின் கழுத்தை வெட்டிவிடுவார்கள் அல்லது மூக்கை உடைத்து மண்ணில் புதைத்துவிடுவார்கள்.

அசோகர் அவரின் ஆட்சியில், பௌத்த கொள்கைகளை ஆங்காங்கு தூண்களில் செதுக்கி செதுக்கி வைத்தார். அவ்வாறு செதுக்கி இந்தியா முழுக்கவும் வைத்தார். பிராமண ஆதிக்கம் அதிகமானவுடன் இந்த தூண்களை இடித்து நொறுக்கினார்கள். இப்படியான தூண்கள் இருந்ததற்காக அடையாளமே பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சிகாலம் வரை தெரியவில்லை.அவ்வாறே ‘அஜந்தா எல்லோரா’ முழுக்கவும்  பௌத்த குகைகளே. ஒரு பிரிட்டிஷ்காரர் புலி வேட்டைக்கு போகும்போது அஜந்தா குகைகளை கண்டுபிடித்தார். புலி அந்தக் குகையில் பதுங்கிக்கொள்கிறது, அதனை பிடிக்கும் போதுதான் இப்படி ஒரு  குகை இருப்பது தெரிந்தது. சில ஆண்டுகளுக்கு முன் வடநாட்டுக்கு சென்று, புத்தர் சென்ற வழிகளில் பயணம் செய்தேன். அங்கு எல்லாமே சீரழிந்த காட்சி இன்றைக்கும் அப்படித்தான் இருக்கிறது. தமிழகத்தில் சைவம் பௌத்தத்தை அழித்ததுபோல வடநாட்டில் வைஷ்ணவம் பௌத்தத்தை அழித்தது.

கேள்வி: அயோத்திதாசர் பூர்வபௌத்தம் என சொல்கிறார். அது ஒரு கருதுகோளா? அல்லது நிரூபிக்கப்பட்ட உண்மையா?

கௌதம சன்னா: பூர்வம் என்றால் ஆதி. ஆகவே எல்லோரும்  பௌத்தர்களாக  இருந்தார்கள் என்பதுதான் அதன் அர்த்தம். அது நிரூபிக்கப் பட்டுள்ளது. ஏனெனில் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் மதமென்ற ஒரு அமைப்புமுறையே இல்லை. ஆனால் வழிபாட்டுப் பிரிவுகள் இருந்தன. குறிப்பிட்ட கடவுளை வணங்கினால் இதுவெல்லாம் கிடைக்கும் என  நம்பிக்கைகள் மட்டும் இருந்தன. அதற்கு சிறு சிறு சடங்குகள் இருக்கும் அவ்வளவுதான். வாழ்க்கை நெறிமுறை என்று அதனுள் இருக்காது. அவை நிறுவனப்படுத்தப்படவில்லை. இப்படித்தான் இந்தியா முழுக்க சிறுசிறு வழிபாடுகள் இருந்தன. இதனைத்தான் அம்பெத்கர் ஒரு மதத்துக்கு கடவுள் தேவையில்லை எனச் சொல்கிறார். மதத்தில் பிற்காலத்தில் ஏற்பட்ட புரட்சியாக அவர் சொல்வது மதத்திற்குள் கடவுள் வந்ததுதான். மதமென்பது ஒரு கூட்டு வாழ்க்கை முறை.

புத்தர்தான் இந்தியாவில்  முறையான கட்டமைப்புகொண்ட மதத்தை உருவாக்கி மக்களிடம் கொண்டுச் செல்கிறார். அந்த மதத்திற்குள் செல்வதற்கு சில விதிமுறைகளையும் வகுக்கிறார். துறவிகளுக்கு தனிக் கட்டுப்பாடுகள். சாதாரண மக்களுக்கு  சில கட்டுப்பாடுகள். இந்தக் கட்டுப்பாடுகளை ஒப்புக்கொண்டால் மட்டுமே அந்த மதத்தில் இருக்க முடியும். இதுவெல்லாம் தேவையில்லை என்றால் அந்த மதத்தில் இருக்க முடியாது. இதனை ஏற்றுக்கொள்பவர்களைத்தான் பூர்வ பௌத்தர்கள் என்று பண்டிதர் சொல்கிறார்.

கேள்வி: பௌத்தத்தில் பல பிரிவுகள் இருப்பதற்கான சாத்தியம் என்ன? ஏன் அவ்வாறு அதில் பிரிவுகள் அனுமதிக்கப்படுகின்றன?

கௌதம சன்னா: தமிழகத்தில் இருந்துதான் தெற்காசியா நாடுகளுக்குப் பௌத்தம் சென்றுள்ளது என்று முன்பே குறிப்பிட்டிருக்கிறேன் அந்தந்த நாடுகளில் பரவி பௌத்தம் அந்நாட்டின் பண்பாடுகளுக்கு ஏற்ப தம்மை தகவமைத்துக் கொண்டது. அதனால்தான்  தாய்லாந்து, பர்மா, இந்தோனிசியா, மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள பௌத்ததை அந்நாடுகளின் பெயரை முன்னெட்டாக வைத்து பௌத்தம் என்கிறோம். அதேபோலத்தான் சீன பௌத்தம் என சொல்கிறோம். ஜப்பானில் பார்த்தால் அங்கு மட்டும் சுமார் நானூறு வகையான பௌத்தப் பிரிவுகள் உள்ளன. இப்படி ஆயிரக்கணக்கான பிரிவுகள் பௌத்தத்தில் உள்ளன. இது எப்படி சாத்தியம்? இஸ்லாமியத்தில் இப்படி சொல்ல முடியுமா? கிருஸ்துவத்தில் சில பிரிவுகள் உள்ளன. ஆனால் பௌத்தத்தில் ஆயிரக்கணக்கான பிரிவுகள் இருக்கின்றன. பௌத்ததில் ஒரு ஜனநாயகக் தன்மை இருப்பதுதான் அதற்கான காரணம். பல பிரிவுகளாக இருக்கும் பௌத்ததில் அடிப்படை கோட்பாடு ஒன்றாகத்தான் இருக்கும். மக்கள் அவரவருக்கு ஏற்றார் போல பௌத்தத்தை உள்வாங்கிக் கொள்கிறார்கள்.

கேள்வி: வைதீக மதங்களைப் பற்றி சொல்வதும் பரப்புவதும் எளிது.பௌத்தம் ஒரு கருத்தியலாக இருக்கும் போது அதை எளிய மக்களிடம் எவ்வாறு கடத்த முடிந்தது?அவ்வாறு செய்வது சாத்தியமா?

கௌதம சன்னா: அக்காலத்தில் பௌத்தம் எப்படி மக்களை சென்றடைந்தது என பார்க்க வேண்டும். மக்களுக்கு அப்போது ஒரு தேடல் இருந்தது. குழு வழிபாட்டில் சலிப்பு தோன்றியிருக்கும். பிரச்னைகளுக்கு தீர்வே கிடைத்திருக்காது. தீர்வு கிடைக்க மனிதன்தானே யோசிக்கவும் செயல்படுத்தவும் வேண்டியிருந்தது. அதற்கு பௌத்தம் உதவியது. அதன் அடிப்படையில் நிறைய பேர் பௌத்தத்தை ஏற்றுக்கொள்ள தயாரானார்கள். அதனால்தான் தென் நாடாகா இருக்கட்டும் வட நாடாக இருக்கட்டும் இந்தியாவின் இலக்கியம் பௌத்தத்திற்கு பிறகுதான் செழுமையானது. அறிவார்த்த பல விடயங்கள் பௌத்ததில் இருப்பது மக்களை ஈர்ப்பதற்குக் காரணமாக அமைந்தன. அதோடு சங்கம் மக்களுக்குக் கொடுத்த பாதுகாப்பு கவனிக்கத்தக்கது. உதாரணமாக ஒரு சிற்றரசன் வேறு மதத்தை பின்பற்றுபவனாக இருந்தாலும் சங்கங்களை அவன் மதிக்க வேண்டும். அந்த பாதுகாப்பை அப்போது பௌத்தம் கொடுத்தது.

பௌத்தம் வாழ்வியல் முறையும் கடினமல்ல. துறவும் கட்டாயமில்லை. அது அவரவர் விருப்பம்தான். துறவு நிலை என்பது பௌத்தத்தின் உச்ச நிலை. அது எளிதாக எல்லோருக்கும் கிட்டாது. சீவரம் அணிந்த அனைவரும் துறவிகள் கிடையாது. ஒரு அடையாளமாக அது இருக்கலாமே தவிர முழுமையான பிக்குகளாக அவர்களை அவர்கள் அடையாளப்படுத்த முடியாது. முழுமையான பிக்குகளின் வாழ்க்கை முறை வேறு. ஒரே இடத்தில் அவர்கள் தங்கக்கூடாது. அவர்கள் பயணம் செய்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு பிக்கு என்பவன் மக்கள் சேகவன். ஒரு மடத்தில் அமர்ந்துக்கொண்டு வருகின்றவர்களுக்கு ஆசிர்வாதம் செய்வது அல்ல பிக்குகளின் வேலை. ஒரு பிக்கு கிராமத்தில் தங்குகின்றார் என்றால் மூன்று நாட்களுக்கு மேல் தங்கக்கூடாது. அந்த மூன்று நாளிலும் அனைவரின் பார்வை படும்படியான இடத்தில்தான் தங்க வேண்டும். மறைவாக தங்கக்கூடாது. தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்கவேண்டும். இவ்வாறான கட்டுப்பாடுகள் எல்லாம் நிறைய உள்ளன. இவை எல்லாம் துறவிகளுக்குத்தான். சாதாரண மக்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் இல்லை. அவர்களுக்கான அனுமதிக்கப்பட்ட வாழ்க்கை முறை எதுவோ அதனை வாழ்ந்தாலே போதும்.

ஆனால் ஒரு பௌத்த துறவி குறிப்பிட்ட ஐந்து பொருள்களுக்கு மேல் வைத்திருக்கக்கூடாது. அதோடு அவர்கள் உடன் கொண்டுச் செல்லும் பொருள்களும் ஐந்துதான் இருக்கும். இரண்டு சீவரம் வைத்துக்கொள்ளலாம். ஊசி வைத்துக்கொள்ளலாம். பிச்சைப்பாத்திரம் வைத்துக்கொள்ளலாம். தலை மழிக்கும் கத்தி வைத்துக்கொள்ளலாம். இவைதான் ஒரு பிக்குவின் சொத்தாக இருக்க முடியும். இப்படி கிராமம் கிராமமாக போகும்போது வெள்ளையாடைகள் அணிந்திருக்க முடியாது. மக்களுக்கு பளிசென்று அடையாளம் தெரியக்கூடிய காவி நிறத்தை அணிந்தார்கள். முதன் முதலாக அந்த நிறத்தை பயன்படுத்தியவர் புத்தர் பின்னர் பௌத்தர்கள்.

இதுபோன்றக் கட்டுப்பாடுகளெல்லாம் பிற மதங்கள் பிற்காலத்தின் பின்பற்றத் தொடங்கின. அதன் விளைவாகவே அவை தம்மை நிறுவனப்படுத்தப் பட்ட மதமாக மாற்றிமைத்தன. எனவே இன்றைக்கு நிலவும் இந்திய மதங்களின் அடிக்கட்டுமானமே பௌத்தின் மீது கட்டப்பட்டதுதான். ஆயினும் தற்கால மக்களுக்கு தேவைகள் தீவிரமாகியுள்ளன. வாழ்வின் மீதான வேட்கை அவர்களை, நிறைவற்ற விருப்பங்களின் ஓட்டம் என ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் ஏதாவது ஒரு சாமியார் தமக்கு தீர்வு சொல்ல மாட்டரா என்று தேடிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தியாவின் நவீன சாமியார்கள் புகலிடம் தருகிறார்கள். அந்த சாமியார்கள் அக்காலத்தில் புத்தரும் அவரது சீடர்களும் என்னவிதமான பயிற்சிகளையும், போதனைகளையும் தந்தார்களோ அவற்றின் பெயர்களை மாற்றியும் சிலவற்றில் அதே பெயர்களையும் தருகிறார்கள். ஆனால் மறக்காமல் அவற்றை கடவுளின் பெயரால் தருகிறார்கள். இது மட்டும்தான் வேறுபாடு. இதில் மக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் விதியையோ அல்லது அந்த பக்தரின் குறைகளையோ அல்லது முன்ஜென்ம கர்மத்தையோ காரணம் காட்டி தப்பித்து விடுவார்கள். ஆனால் ஒரு பௌத்தர் இப்படி செய்ய முடியாது. அவர் மூலக் காரணங்களை புரிய வைக்க வேண்டும். அந்த வகையில் பௌத்தர்களின் போராட்டம் நெடியதுதான்.

கேள்வி :  பௌத்தத்தின் அடையாளங்கள் என்பவை எவை? அவற்றை புரிந்துக் கொள்ள முடியுமா?

கௌதம சன்னா:  நிச்சயம் புரிந்துக் கொள்ள முடியும். பௌத்தத்தின் அடையாளங்களைப் பிற்காலத்தில் இந்து  சக்திகள் தனதாக்கிக் கொண்டன என்கிற புரிதல் இருந்தால் சீர்தூக்கிப் பார்ப்பது எளிது. சனாதன இந்துக்கள் பௌத்த அடையாளங்களை ஒவ்வொன்றாக அவர்களுக்குள்ளாக தமது மத எல்லைக்குள் கொண்டு சென்றார்கள். தற்காலத்திலும் உள்வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள். தாமரை புத்தரின் அடையாளம். காவி பௌத்த அடையாளம். நெற்றியில் மூன்று கோடுகளாக பட்டை வைத்துக் கொண்டாலும், நாமம் இட்டுக்கொண்டாலும் மூன்று என்பது பௌத்ததின் கோட்பாடுதான்.

காஞ்சிவரம் பெயரை எடுத்துக்கொள்ளுங்கள். காஞ்சி என்பது காவி நிறத்தில் இருக்கும் மலரின்  பெயர். சீவரம் என்பது பிக்குகள் அணியும் துணிக்குப் பெயர். காவி சீவிரத்தை அணிந்தவர்கள் அதிகமாக இருந்த காரணத்தால் காஞ்சி சீவரம் என அழைக்கப்பட்டும் பின்னர் காஞ்சிவரமானது. ஆக காவி நிறம் முழுக்க முழுக்க பௌத்தார்களுக்கானது.இன்று பலரும் இந்தியாவில் வெறுக்ககூடிய வண்ணமாக காவி மாறிவிட்டிருக்கிறது.

கேள்வி: தலித்துகள் பௌத்தத்துக்கு மாறுவதன் மூலம் அவர்களுக்கு அந்த அடையாளத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என நம்புகிறீர்களா?

கௌதம சன்னா: பௌத்தத்திற்குள் சென்றுவிட்டால் இப்போது இருக்கிற சமூக சூழல் மாறிவிடுமா என கேட்டால் அது விவாதத்துக்கு உரியதுதான். பௌத்ததில் சேர்ந்துவிட்ட பிறகு ஒருவன் மீதிருக்கும் தலித் அடையாளம் மாறிவிடுமா என்றால் மாறாது. ஏனெனில் இது ரப்பர் போட்டு அழிப்பது அல்ல. ஒருவனை தலித் என இன்னொருவன்தானே நினைக்கிறான். அவனுக்குள் மாற்றம் வரவேண்டுமே. ஆனால் பௌத்ததிற்கு வந்தவனுக்குள் ஒரு விழிப்புணர்வு வருகிறது. ஓர் ஒளி கிடைக்கிறது. அதன் பிறகு பிறர் தன்னை குறித்து கேவலமாக நினைத்தாலும் இவனுக்கு அது குறித்த கவலை இல்லை. ஏனென்றால் இவன் உலகத்தின் குடிமகனாக மாறிவிடுகிறான். தன்னை தலித்தாக பார்ப்பவரின் பார்வையை மாற்றத்தான் இவர் முயல முடியும். தன்னை கேவலமாக நினைப்பவர்களை பரிதாபமாகத்தான் பார்க்க முடியும்.

ஒரு பௌத்தனுக்கான அடிப்படை பணியே அவ்வாறு மனநோயில் இருப்பவர்களுக்குச் சிகிச்சை அளித்து மாற்றுவதுதான். சாதி இந்துக்களின் பார்வை எளிதில் மாறக்கூடியது இல்லை. ஆனால் உடனடி தேவையாக தன் விடுதலை பௌத்தருக்கு கிடைக்கிறது. அதன்மூலம் அவன் சமூகத்தை விடுதலை செய்வதும் உலகத்தை விடுதலை செய்வதும் இரண்டாம் பணிதான். முதலில் தன்னைத்தானே விடுதலையான மனிதனாய் ஒரு பௌத்தன் கருத வேண்டும். அதற்கான அடிப்படை  நம்பிக்கையை பௌத்தம் கொடுக்கிறது. இதை வேறு எந்த மதமும் கொடுக்கவில்லை.கொடுக்காது. தனிமனித சுதந்திரம் பௌத்ததை தவிர வேறெதிலும் இல்லை. பிற மதங்கள் நம்பிக்கையை கட்டாயமாக்கியிருக்கிறார்கள். பௌத்தத்தில் ஒருவர் புத்தர் என்ற ஒருவர் இல்லை என்றுகூட சொல்லலாம். நான்தான் புத்தர் என்றும் சொல்லலாம். அந்த சுதந்திரம் பௌத்ததில் இருக்கிறது. சுய பரிசோதனை செய்யக்கூடிய சுதந்திரம் பௌத்ததில்தான் உள்ளது.

சாதாரணக் கல்வி அறிவு இல்லாத மக்களுக்கு இவையெல்லாம் புரியுமா என்றால், புரியவைக்க வேண்டும் என்றுதான் சொல்லவேண்டும். எது ஒருவரை சாதாரண மனிதனாக காட்டுகிறது. நமக்கு எல்லாம் தெரியும் என்கிற எண்ணத்தில் இருந்துதான் இது வருகிறது. நமக்கும் அவர்களுக்குமான இடைவெளிதான் அவர்களை அவ்வாறு பார்க்க வைக்கிறது. புத்தருடன் இருந்த சன்னா என்பவருக்கு கடைசிவரை  சிறு விடயத்தைக் கூட புரிந்துக்கொள்ள முடியாமல் இருந்திருக்கிறது. அவரும் பிக்குவாக இருக்கிறார். புத்தர் பல சமயங்களில் இவருக்கு தண்டனை கொடுக்கின்றார். ஆனால் புத்தருக்குப் பிறகு இவருக்கு ஞானம் கிடைத்து நிறைய விடயங்களை இவர் செய்ய ஆரம்பிக்கின்றார். எனவே, பயிற்சிதானே எல்லாம்.

கேள்வி:  மதங்களில், வழிபாட்டில் நம்பிக்கை இழந்த புதிய சிந்தனைகள், மதங்களை கேள்வி கேட்கும் விவாதங்கள் உலகம் முழுக்க உருவாகிவரும்போது நீங்கள் பௌத்த மதத்தை முன்வைத்து பேசுவது எந்த அளவுக்குச் சரியாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

கௌதம சன்னா: உண்மையில் இப்போது பௌத்ததின் தேவை இருக்கிறது. ‘சித்தார்த்தா’ எனும் நாவலில் அளவுக்கு அதிகமான அறிவும் கூட பயனற்றதாகிவிடும் எனும் வரி வருகிறது. ஏன் பயனற்றதாகிவிடும் என்றால், அவனால் எல்லாவற்றையும் கலைத்துப்போட முடியும். அப்படி எல்லாவற்றையும் கலைத்துபோட்டுவிட்டால் அவருக்கும் பயன் இருக்காது மற்றவர்களுக்கும் பயன் இருக்காது. ஆக அதனை முறைப்படுத்த ஓர் அமைப்பு தேவை. அமைப்பு ரீதியான சிந்தனை தேவை. அங்குதான் பௌத்தம் தேவைப்படுகிறது. நீங்கள் உங்களை ஒரு பௌத்தனாக சொல்லிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் புத்த சிந்தனையை உள்வாங்கிக் கொண்டு கூட உங்களை நீங்கள் பௌத்தன் இல்லை என்று சொல்லிக்கொள்ளலாம். அந்தச் சிந்தனை உங்களை நெறிப்படுத்தி ஓர் ஒழுங்கிற்குள் கொண்டு வருகிறது என்றால் அந்த வகையில் பௌத்தம் தேவைப்படுகிறது. ஆனால் ஒரு மதமாக தேவையில்லை என்றால் அது தனிமனிதனைச் சார்ந்தது. ஆனால் சாதாரண மக்களுக்கு அது தேவைப்படுகிறது. ஏனெனில் அவர்களுக்கு கருத்தியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பாதுகாப்பு நிறைய தேவை. அப்படி பாதுகாப்பைக் கொடுக்ககூடிய மதமாக பௌத்தம்தான் இப்போது இருக்கிறது.

கேள்வி: பௌத்தத்தை அறிய எங்கிருந்து வாசிப்பைத் தொடங்கலாம்?

கௌதம சன்னா: அம்பேத்கர் எழுதியதை அடிப்படையாக வாசிக்கலாம். ஒரு தொடக்க திறப்பை கொடுக்கும். பிறகு பண்டிதர் எழுதிய ஆதிவேதம். மயிலை.சீனி.வெங்கடசாமியின் சில புத்தகங்கள் உள்ளன. ராகுல் சங்கருத்தியாயன் எழுதிய புத்தகம் உண்டு. இவையெல்லாம் தொடக்க நிலை புத்தகங்கள்தான். ஓஷோவின் தம்மபதம் வாசிக்கலாம். ஓஷோ தனது குருவாக சொல்வது புத்தரைத்தானே. ஓஷோ அவரது எல்லா தத்துவங்களையும் புத்தர் சொல்லும் இரண்டு புள்ளிகளில்தான் கொண்டு வந்து வைப்பார். இருத்தலியல் மற்றும் விழிப்புணர்வு. ஓரளவு புரிந்துணர்வு வந்தபிறகு புத்தரின் நேரடியான நூல்களையே வாசிக்கலாம்.

கேள்வி: தமிழகத்தில் பௌத்தம் குறித்த விழிப்புணர்வு எவ்வாறு உள்ளது?

 

கௌதம சன்னா:  ஈழப்போரினால் இப்போது தமிழகத்தில் எதிர்நோக்கும் சிக்கல் என்னவெனில், பௌத்தம் குறித்து பேசினால் தமிழின துரோகி என முத்திரை குத்துகிறார்கள். யாரெல்லாம் பிக்குகளாக இருக்கலாம் என்கிற விதி இருக்கிறது. பஞ்சசீலத்தை மீறினால் அவன் பௌத்தனே கிடையாது. அப்படி இருக்கும் போது, பிக்குகள் ஒரு கொலையை ஆதரிக்கிறார்கள் எனும்போது அவர்களை எப்படி பௌத்தர்கள் என நாம் சொல்ல முடியும். பர்மிய ரோஹின்யா பிரச்சினை, இலங்கை போன்ற இடங்களில் அவர்களுக்கான விதிமுறைகளை அமைத்துக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்த முயல்கிறார்கள். அதற்கும் பௌத்ததிற்கும் என்ன சம்பந்தம்?

புத்தர் அவர் அரண்மனையை விட்டு வந்ததே அதற்குத்தானே.ரோஹினி நதி பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. கோலியர்களுக்கும் சாக்கியர்களுக்கும் இடையிலான பிரச்சனை. கோலியர்கள் அணையை எழுப்பி ரோஹினி நதியை நிறுத்த சாக்கியர்கள் அதை உடைத்து நதியை ஓடவைக்க நினைக்கிறார்கள். அப்போது சங்கம் கூடி போர் தொடுக்க முடிவெடுக்கிறது. புத்தர் அதற்கு மறுக்கிறார். பேச்சு வார்த்தை மூலமே தீர்க்கவேண்டும் என்கிறார். சங்கம் என்பது குடியரசு போன்றது, சாக்கியர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களின் தீர்மானம் அரசரின் மகனான புத்தருக்கு எதிராக இருக்கிறது. ஆக ஒன்று அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது புத்தருக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என தீர்மானம் போடுகிறார்கள்.

புத்தர், அது போருக்கு எதிரான தன் நிலைபாடு என்றும் அதனால் சங்கத்திற்கு எதிரான நிலைபாட்டில் தான் இருப்பதாகவும் கூறி நாட்டைவிட்டு வெளியேறுகிறார். அவர் பிச்சைக்காரனை பார்த்தார், நோயாளியை பார்த்தார், வயோதிகனை பார்த்தார் என்பதெல்லாம் பின்னால் சேர்க்கப்பட்ட கதைகள். அடிப்படையான காரணம் இதுதான். போரை எதிர்த்து புத்தரே நாட்டைவிட்டு வெளியான பிறகு சிலோனில் இருக்கும் புத்த பிக்குகளோ பர்மாவில் இருக்கும் புத்த பிக்குகளோ அதே காரணத்துக்காகச் சண்டை போடுகிறார்கள் என்றால் அவர்களை பௌத்தர்களாக எப்படி ஏற்றுக்கொள்வது. அவர்கள் தங்களை பௌத்தர்களாக அடையாளம் காட்டிக்கொள்கிறார்களே தவிர அவர்கள் பௌத்தர்கள் அல்ல. அவர்களுக்கான அரசியலை மட்டும்தான் அவர்கள் பார்க்கிறார்கள்.

கேள்வி: சங்கம் எனும் வார்த்தைக்கும் இடைச்சங்கம் கடைச்சங்கம் போன்றவற்றிற்கும் தொடர்புண்டா?

கௌத்தம சன்னா: சங்கம் என்கிற வார்த்தையே தமிழ் கிடையாது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததை செய்தவர்கள் பிக்குகள்தான். பிற்காலத்தில் சைவர்கள் அதனை கழகங்களாக மாற்றினார்கள். சங்கம் என்பது பாலி சொல்.ஒரு வேளை ஆதி தமிழ்ச்சொல்லாககூட நாம் வைத்துக்கொள்ளலாம். அதற்கு உள்ளே இருந்தவர்கள் யாரென்றால் பௌத்தர்கள்தான். முதன் சங்கத்தை சிவன் உருவாக்கியதாகவும்  இரண்டாம் சங்கத்தை முருகன் உருவாக்கியதாகவும்,  மூன்றாம் சங்கத்தை பாண்டியன் உருவாக்கியதாகவும் சொல்லப்படுவது பின்னாளில் உருவாக்கிவிட்ட கதைகள்தான்.

பௌத்தம் தமிழர்கள் ஆதியில் பின்பற்றிய மதம். தமிழர்களால்தான் உலகம் முழுவதற்கும் பௌத்தம் சென்று சேர்ந்தது என்பதையே நம்ப மறுக்கிறார்கள். இதனை மட்டுமாவது தமிழர்கள் புரிந்துக்கொண்டால்தான் இந்த உலகத்துடன் போட்டிப்போட முடியும். ஆசியாவின் பண்பாடு பௌத்ததின் மூலமாக தமிழர்கள் கொண்டு சேர்த்தார்கள். இது எவ்வளவு முக்கியமான ஓர் தகவல்.

கேள்வி: பௌத்தத்தின் தாக்கம் இந்து மதத்தில் அதிகமே இருக்கிறது எனக் கூறலாமா?

கௌதம சன்னா: பௌத்தம் உருவான பிறகு அதன் தாக்கம்  எல்லா மதத்திலும் இருந்தது. அவ்வாறு தாக்கம் இல்லாத மதம் இந்தியாவில் மட்டுமல்ல உலகத்திலும் இல்லை. நிறுவனப்படுத்தப்பட்ட எல்லா மதத்திலும் இருந்தது. புத்தர் விருப்பப்பட்டு ஓர் உயிரை கொல்வது வேறு, தேவைக்காக ஓர் உயிரைக் கொல்வது வேறு என்கிறார். இது நடைமுறைக்கான ஒன்றுதானே. கொல்லுதலே கூடாது என பிற்காலத்தில் இது மாற்றப்பட்டது. கொல்லாமை தீவிரமாக இருந்தது சமணத்தில் மட்டும்தான். இவ்வாறே அடிப்படையான பலவற்றை பௌத்தத்தில் இருந்து எடுத்திருக்கிறார்கள். வள்ளலாரிடத்திலும் அதன் தாக்கம் இருப்பதாக சொல்லலாம்.

கேள்வி: பௌத்தம் குறித்து அறிய நேரடியாக நீங்கள் மேற்கொண்ட பயண அனுபவங்கள் ஏதேனும் உண்டா?

கௌதம சன்னா: நிறைய பயணம் செய்திருக்கிறேன். தமிழகத்தின் பல இடங்களுக்கு மட்டுமன்றி, தென்னிந்தியாவிலும், வடநாட்டிலும் பயணம் செய்திருக்கிறேன். புத்தர் ஞானமடைந்த கயையிலிருந்து வாரணாசிவரை பயணம் செய்திருக்கிறேன். நேரில் பார்க்கும்போது புத்தர் நடந்த பாதைகள்தானே என்று மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவர் தடத்தைப் பின்பற்றும் பக்குவத்தை தற்கால மக்கள் இழந்ததினால் எவ்வளவு பிற்போக்குத்தனமாக மாறியிருக்கிறார்கள் என்பதை நினைத்து வருத்தமாக இருந்தது. வைதீக மதத்தினரும், இசுலாமியர்களும் பௌத்த அடையாளங்கள் மீது நிகழ்த்திய அழிவுகளின் மிச்சங்களை நேரடியாக கள ஆய்வுகள் செய்திருக்கிறேன். இந்தியாவில் வேறு எந்த மதத்தின் மீதும், அன்பை போதித்த ஒரே காரணத்திற்காக ஒரு மதம் கொடூரமாக தாக்கப்பட்ட சிதைவுகளைப் பார்த்திருக்கிறேன்.

தென்னகத்தில் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்ட பல பௌத்த விகாரைகள் இருந்த இடங்களில் பலவற்றை ஆய்வு செய்திருக்கிறேன். ஆனால் அவற்றையெல்லாம் முறையாக நான் தொகுக்கவில்லை. பிற்காலத்தில் வாய்க்குமாயின் நிச்சயம் அதை செய்ய முடியும் என நினைக்கிறேன். எனினும் எனது பயணங்களின் அனுபவத்தில் பார்க்கும்போது நான் புரிந்துக் கொண்டது என்னவென்றால்.பௌத்தத்தை பின்பற்றும் தெற்காசிய நாடுகள் அறிவியலிலும், தொழில் நுட்பத்திலும் முன்னணியில் இருக்கின்றன. ஆனால் பௌத்தத்தின் மையத்தை இழந்த நாடுகள் இன்னும் பிற்போக்கில் உழலுகின்றன என்பதைத்தான்.

கேள்வி: திராவிட அரசியல், இந்துத்துவ அரசியல் என சமகால தமிழக அரசியல் சூழல்களுக்கு மத்தியில் பௌத்தம் எவ்வாறு மக்களுக்கான விடுதலையைக் கொடுக்குமென நினைக்கிறீர்கள்?

கௌதம சன்னா:  திராவிட அரசியல் என்பது ஏறக்குறைய தேங்கிப் போய்விட்டது. அல்லது நீர்த்துப் போய்விட்டது. அதுமட்டுமின்றி கடவுள் மறுப்பு என்னும் அளவிலும் அது சுருங்கிப்போய் விட்டது. திராவிடம் தாக்கம் உள்ளவர்கள் கடவுள் மறுப்பை பேசினாலே புரட்சி என்று நினைக்கும் அளவிற்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகால திராவிட ஆட்சிகளை அவர்கள் மறுபரிசீலனை செய்யவோ அல்லது சீர்தூக்கிப் பார்க்கவோ தயாராக இல்லை.வெறும் பழம் பெருமை பேசுவதில் தீவிரமாக இருக்கிறார்கள். சொல்லப்போனால் திராவிடக் கருத்துக்கள் கூடிய விரைவில் வெறும் குறுங்குழுவாதமாக மாறிவிடுமோ என்கிற ஐயம் எனக்குள் தற்காலம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

அதுமட்டுமின்றி, நடுத்தர வர்க்கத்திலும், இடைச்சாதிகளிலும் வந்திருக்கின்ற இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்கும் பெரியார் ஈவெராவின் பெயரை உச்சரிப்பதில் உள்ள ஆர்வமும், கடவுள் மறுப்பை பேசுகின்ற ஆர்வமும் இருக்கிறதே தவிர, சமூகத்தில் நிலவும் சாதி வெறி கொடுமைகளுக்கு எதிராக போராடும் ஆர்வம் பெரும்பாலும் இல்லை. பேஸ்புக் பதிவுகளையும், சில துண்டறிக்கைகளையும் போட்டு தமது புரட்சிகர நடவடிக்கைகளில் திருப்பி அடைகிறார்கள்.

அதுமட்டுமின்றி சமூக பொருளாதார புரிதல் பற்றி அவர்களுக்கு பெரிய அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. மக்களின் மதத் தேவையின் அறிவியல் பற்றியும் பெரிய புரிதல் இல்லை. மதம் என்றால் அதன் அடிப்படைக்கூட அவர்களுக்கு விளங்கவில்லை. ஏனென்றால் கடவுள் மறுப்பு என்பது அவ்வளவு தூரம் சிந்திக்க விடாமல் செய்கிறது. திராவிடம் வெறும் அரசியல் அதிகாரத்திற்கான போட்டியாக குறுகிவிட்டப் பிறகு மக்களின் மத அல்லது மனத் தேவைகள் அப்படியே நீடித்துக் கொண்டிருக்கின்றன. இந்த இடத்தில்தான் இந்துத்துவம் தனது விஷக்கொடுக்கை நுழைத்துக் கொண்டிருக்கிறது. எனவேதான் மக்கள் இந்த இரண்டுக்கும் நடுவில் ஒரு நடுப்பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது என்று சொல்கிறேன்.

பௌத்தம் என்பதே நடுப்பாதைதானே. திராவிடம் தவறவிட்ட இடத்தில் இந்துத்துவம் நுழைய முற்படும்போது, ஒரு மதமாகவும், அதே நேரத்தில் முற்போக்காகவும் இருக்கும் பௌத்தத்தை ஏன் தமிழர்கள்  முன்னெடுக்கக்கூடாது என்கிற அடிப்படையில்தான் எனது கருத்து இருக்கிறது. மற்றபடி மக்கள் முன் பௌத்தத்தின் அடிப்படைகளை கொண்டுச் செல்லும்போது அவர்களுக்கு ஒளி கிடைக்கும். கடவுளால் கிடைக்காத ஒன்று மனிதனின் முயற்சியாலே கிடைக்கும். அதுதான் பௌத்தத்தின் அடிப்படை அல்லவா.

கேள்வி: மலேசியாவில் பயணம் செய்த நீங்கள் இங்கிருக்கும் தமிழர்களுக்கும், தமிழகத்தின் தமிழர்களுக்கும் சொல்ல நினைப்பது என்ன?

கௌதம சன்னா: நிச்சயம் இருக்கிறது. நான் பௌத்தத்தை பிரச்சாரம் செய்ய வரவில்லை. அதை எனது வேலையாகவும் நினைக்கவில்லை. ஆனால் நான் உணர்ந்த சுதந்திரத்தை உலகத்திற்கு சொல்ல நினைக்கிறேன். அதை செவிமடுப்பவர்கள் கேட்கலாம். பிடிக்காதவர்கள் விலகிக் கொள்ளலாம். ஏனெனில் ஒருவன் அடிமையாக இருக்கிறான் என்பதை சொல்லத்தான் முடியும். விடுதலை என்பது அவரவர் முயற்சி சார்ந்தது. வெளிப்படையான சிறையிலிருந்து ஒருவரை விடுவிப்பது எளிது. ஆனால் அவரே விரும்பும் மனச்சிறையிலிருந்து விடுவிப்பது விருப்பம் சார்ந்தது அல்லவா. அதனால் அப்படி சொல்கிறேன்.

இன்னொன்றையும் வலியுறுத்தி சொல்ல நினைக்கிறேன். உலகிற்கு பௌத்தத்தை கொண்டு சேர்த்தவர்கள் பெரும்பாலும் தமிழர்கள் என்பதை நினைவுக் கொள்ளுங்கள். அது உங்களிடமிருந்துதான்  உலகின் பல நாடுகளுக்கு போய் சேர்ந்திருக்கிறது. தீபாவளி என்பதே தமிழ் பௌத்தர்களின் கொடை. தெற்காசிய நாடுகள் முழுமைக்கும் தீபாவளி கொண்டாடப்படுகிறது என்றால் அதற்கான காரணம் தமிழ்நாடுதான். உலகிற்கு ஒளி அனுப்பிவிட்டு இன்றைக்கு இருளிலில் இருப்பதைப் போல நினைக்கிறோம். பௌத்தம் அந்நிய மதம் என்று இந்து அடிப்படைவாதிகள் போதித்ததை அப்படியே நம்பிக் கொண்டிருக்கிறோம். பௌத்தர்கள் நமக்கு தமிழ் இலக்கியங்களைப் படைத்தார்கள். ஆனால் இந்துத்துவவாதிகள் இன்னும் வடமொழியை நமது தலையில் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

உலகிற்கு பௌத்ததை கொண்டு சேர்த்த பேரினம் இன்று அதை தனது எதிரியாக பார்ப்பது காலம் செய்த சதியல்ல. அது இந்துத்துவ அடிப்படைவாதிகள் செய்த மோசடி என்பதை காலம் உணர்த்தும்.

 

நேர்காணல் : ம.நவீன்
எழுத்து: தயாஜி

http://vallinam.com.my/version2/?p=4973

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியரின் பல கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆயினும் ஒரு நல்ல நேர்காணல்....!  tw_blush:

 கொழும்பில் பஸ்ஸில் ஸ்டிக்கர் போட்டு வைத்துக் கொண்டு வந்த ஒரு பெண் குங்குமப் பொட்டு வைத்திருந்த ஒரு பெண்ணைப் பார்த்து "இப்ப நீங்களும் எங்களை மாதிரி பொட்டு வைக்கிறீர்கள்" என்பதுபோல் கதை போகிறது.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெளத்த மத ஈடுபாடு கொண்ட ஒருவரால் வேறு எப்படி எழுத முடியும் கிருபன்.அதையெல்லாம் கொண்டுவந்து இங்கு இணைக்கும் உங்களை என்ன சொல்ல.

கிறித்துவுக்கு முன்னர் ஐநூறு ஆண்டளவில் தோன்றிய பெளத்த மதம் தோன்றுவதற்கு முன்னரே சங்கம் என்ற சொல் தமிழர்களிடம் இருந்திருக்கே. பெளத்த மதத்தை இந்தியாவில் பரப்பிய அசோக மன்னர் போரின் பின்னாலேயே பெளத்த மதத்தைத் தழுவினார் என்ற வரலாறு நீங்கள் படிக்கவில்லையா????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒரு பெளத்த மத ஈடுபாடு கொண்ட ஒருவரால் வேறு எப்படி எழுத முடியும் கிருபன்.அதையெல்லாம் கொண்டுவந்து இங்கு இணைக்கும் உங்களை என்ன சொல்ல.

கிறித்துவுக்குப் பின்னர் ஐநூறு ஆண்டளவில் தோன்றிய பெளத்த மதம் தோன்றுவதற்கு முன்னரே சங்கம் என்ற சொல் தமிழர்களிடம் இருந்திருக்கே. பெளத்த மதத்தை இந்தியாவில் பரப்பிய அசோக மன்னர் போரின் பின்னாலேயே பெளத்த மதத்தைத் தழுவினார் என்ற வரலாறு நீங்கள் படிக்கவில்லையா????

பௌத்த மதத்தை மட்டுமல்ல! எந்த மதத்தையும் அன்னியமாகப் பார்க்க வேண்டிய தேவை தமிழுக்குக் கிடையாது என்று பல தடவைகள் சொல்லி வருகிறேன். தமிழரின் அடையாளம் இது தான் என்று பின்னர் வந்த மத அடையாளங்களுக்கெல்லாம் தமிழின் மீது சவாரி செய்ய ஆதரவு கொடுத்தோருக்கு, இப்ப கீழடி அகழ்வின் முடிவுகள் வயிற்றில் புளி கரைத்திருப்பதாகத் தெரிகிறது. மெல்லவும் விழுங்கவும் முடியா நிலை தான்!

Link to comment
Share on other sites

8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒரு பெளத்த மத ஈடுபாடு கொண்ட ஒருவரால் வேறு எப்படி எழுத முடியும் கிருபன்.அதையெல்லாம் கொண்டுவந்து இங்கு இணைக்கும் உங்களை என்ன சொல்ல.

கிறித்துவுக்குப் பின்னர் ஐநூறு ஆண்டளவில் தோன்றிய பெளத்த மதம் தோன்றுவதற்கு முன்னரே சங்கம் என்ற சொல் தமிழர்களிடம் இருந்திருக்கே. பெளத்த மதத்தை இந்தியாவில் பரப்பிய அசோக மன்னர் போரின் பின்னாலேயே பெளத்த மதத்தைத் தழுவினார் என்ற வரலாறு நீங்கள் படிக்கவில்லையா????

பௌத்தம் தோன்றியது கி.பி 500 ஆண்டளவில் அல்ல.

அசோகர் பிறந்ததே கி.மு 304 இல். அசோகரின் ஆட்சிக்காலம் கி.மு 273 - கி.மு 232.

கலிங்கப்போர் இடம்பெற்றது கி.மு 261 இல். 

கலிங்கப்போருக்கு முன் அசோகர் சைவ சமயத்தவராக இருந்தார். பின் பௌத்தத்தை தழுவி அதை பரப்பினார். (இந்தியாவுக்கு மட்டுமல்ல, இலங்கை உட்பட பல நாடுகளுக்கும்).

சங்க கால இலக்கியங்கள் சிலவும் பௌத்தம் சார்ந்து எழுதப்பட்டன. ஆனால் சைவம் பற்றிய குறிப்புகளும் அதில் உள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒன்றும் புதிய விடயமல்லவே. 

ஐம்பெருங்காப்பிய காலங்களில் மணிமேகலையில் புத்த மதம் பற்றி வருகிறது.

புத்தர் இந்துவாகவே பிறந்து வளர்ந்து வாழ்ந்தார்.

புத்தர் சமயத்தைப் பரப்பவில்லை. தத்துவத்தை தான் வரைந்தார்.

இப்போ.. சுவாமி விவேகானந்தரை தத்துவவாதியாகப் பார்ப்பார்களா.. கடவுளாகப் பார்ப்பார்களா...?!

புத்தர் தமிழர்களுக்கு புதியவர் அல்ல. தமிழர்கள் புத்தரை வெறுக்கவும் இல்லை.

ஆனால்.. பெளத்த சிங்களப் பேரினவாதத்தின் தமிழர்களை அடிமைப்படுத்தும் கோட்பாட்டுக்கு பெளத்தம்.. குறிப்பாக தேரவாத பெளத்தம் பாவிக்கப்படுவதனால்... தான்..தமிழர்கள்.. பெளத்த சிங்கள மேலாதிக்கத்தை வெறுக்கிறார்கள்.. பகை கொண்டு பார்க்கிறார்கள். 

அதற்காக புத்தர்.. அவர் பரப்பிய புத்த கொள்கைகள் தமிழர்களுக்கு புதிதல்ல. தமிழர்கள் கடந்த காலங்களில் கடைப்பிடித்தவை தான். இன்றும் தமிழர்கள் பலரின் வீடுகளில் புத்தரைக் காணலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

பௌத்த மதத்தை மட்டுமல்ல! எந்த மதத்தையும் அன்னியமாகப் பார்க்க வேண்டிய தேவை தமிழுக்குக் கிடையாது என்று பல தடவைகள் சொல்லி வருகிறேன். தமிழரின் அடையாளம் இது தான் என்று பின்னர் வந்த மத அடையாளங்களுக்கெல்லாம் தமிழின் மீது சவாரி செய்ய ஆதரவு கொடுத்தோருக்கு, இப்ப கீழடி அகழ்வின் முடிவுகள் வயிற்றில் புளி கரைத்திருப்பதாகத் தெரிகிறது. மெல்லவும் விழுங்கவும் முடியா நிலை தான்!

இதை இன்னொரு வகையில் சொல்வதானால்,

“எமக்கு எம்மதமும் சம்மதம், ஆனால் எந்த மதமும் எம்மதமில்லை”.

கீழடி போன்ற ஆய்வுகள் இன்னும் வலுப்பட, வலுப்பட, சைவமும், பெளத்தமும் தமிழுக்கு எவ்வளவு தூரமான சிந்தனைகள் என்பதும் வெளி வந்தே ஆகும்.

சங்கிகள் சும்மாவா, கிண்டிய கிடங்கின் மீது மண்ணை போட்டு மூடினார்கள் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

thavaraaka

2 hours ago, Lara said:

பௌத்தம் தோன்றியது கி.பி 500 ஆண்டளவில் அல்ல.

அசோகர் பிறந்ததே கி.மு 304 இல். அசோகரின் ஆட்சிக்காலம் கி.மு 273 - கி.மு 232.

கலிங்கப்போர் இடம்பெற்றது கி.மு 261 இல். 

கலிங்கப்போருக்கு முன் அசோகர் சைவ சமயத்தவராக இருந்தார். பின் பௌத்தத்தை தழுவி அதை பரப்பினார். (இந்தியாவுக்கு மட்டுமல்ல, இலங்கை உட்பட பல நாடுகளுக்கும்).

சங்க கால இலக்கியங்கள் சிலவும் பௌத்தம் சார்ந்து எழுதப்பட்டன. ஆனால் சைவம் பற்றிய குறிப்புகளும் அதில் உள்ளன.

அவசரத்தில் எழுதும்போது தவறு நேர்ந்துவிட்டது  லாரா. திருத்தியுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

இது ஒன்றும் புதிய விடயமல்லவே. 

ஐம்பெருங்காப்பிய காலங்களில் மணிமேகலையில் புத்த மதம் பற்றி வருகிறது.

புத்தர் இந்துவாகவே பிறந்து வளர்ந்து வாழ்ந்தார்.

புத்தர் சமயத்தைப் பரப்பவில்லை. தத்துவத்தை தான் வரைந்தார்.

இப்போ.. சுவாமி விவேகானந்தரை தத்துவவாதியாகப் பார்ப்பார்களா.. கடவுளாகப் பார்ப்பார்களா...?!

புத்தர் தமிழர்களுக்கு புதியவர் அல்ல. தமிழர்கள் புத்தரை வெறுக்கவும் இல்லை.

ஆனால்.. பெளத்த சிங்களப் பேரினவாதத்தின் தமிழர்களை அடிமைப்படுத்தும் கோட்பாட்டுக்கு பெளத்தம்.. குறிப்பாக தேரவாத பெளத்தம் பாவிக்கப்படுவதனால்... தான்..தமிழர்கள்.. பெளத்த சிங்கள மேலாதிக்கத்தை வெறுக்கிறார்கள்.. பகை கொண்டு பார்க்கிறார்கள். 

அதற்காக புத்தர்.. அவர் பரப்பிய புத்த கொள்கைகள் தமிழர்களுக்கு புதிதல்ல. தமிழர்கள் கடந்த காலங்களில் கடைப்பிடித்தவை தான். இன்றும் தமிழர்கள் பலரின் வீடுகளில் புத்தரைக் காணலாம். 

70949573_10212776022428991_1500635932267

என் வீட்டில் கூட நன் அவரை வைத்திருக்கிறேன் 😃

சித்தார்த்தர் பிறந்தது கி மு 563 ல் நேபாளில் உள்ள லும்பினி என்னும் கிராமத்தில்
80 ஆண்டுகள் வாழ்ந்து கி மு 483 இல் இறந்தார் என்றும் கூறுகின்றன வரலாறு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

ஒரு பெளத்த மத ஈடுபாடு கொண்ட ஒருவரால் வேறு எப்படி எழுத முடியும் கிருபன்.அதையெல்லாம் கொண்டுவந்து இங்கு இணைக்கும் உங்களை என்ன சொல்ல

 

கெளதம சன்னா சொல்லுவது எல்லாம் சரியாகத்தான் இருக்கு. அசோகனின் மகன் மகேந்திரனின் பெயரில்தானே முன்னாள் ஜனாதிபதி, எதிர்கால ஜனாதிபதி எல்லாம் இருக்கின்றனர்.

பெளத்த மதத்தை இலகுவாகப் பரப்ப உள்ளூர் மொழிகளை கற்றதுதான் பிக்குகள் விட்ட பெரிய பிழை. முதலில் மொழியைப் பரப்பி அதன் மூலம் மதத்தைப் பரப்பியிருந்தால் தென், தென்கிழக்காசியா எல்லாமே தமிழாகத்தான் இருந்திருக்கும்! சிங்கள மொழியே இல்லாமல் போயிருக்கும்!! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

70949573_10212776022428991_1500635932267

என் வீட்டில் கூட நன் அவரை வைத்திருக்கிறேன் 😃

சித்தார்த்தர் பிறந்தது கி மு 563 ல் நேபாளில் உள்ள லும்பினி என்னும் கிராமத்தில்
80 ஆண்டுகள் வாழ்ந்து கி மு 483 இல் இறந்தார் என்றும் கூறுகின்றன வரலாறு.

 

அவ்வளவும் தங்கமே? 😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அவ்வளவும் தங்கமே? 😂

 

இவரைத் தங்கத்தில வச்சு நான் என்ன செய்யிறது ????😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூசை?

நமோதஸ்தோ, பகவதோ சமாதோ,

சம்மோ சங்க சாது.

பானாதிபானா வேதமதி பிக்கா பதங் சமாதியாமி.

உனங் வாதா வேதமி பிக்காபதங் சமாதியாமி.

புத்தங் சரணங் கச்சாமி,

சங்கங் சரணம் கச்சாமி,

தம்மம் சரணம் கச்சாமி.

46 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இவரைத் தங்கத்தில வச்சு நான் என்ன செய்யிறது ????😊

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 9/24/2019 at 3:37 PM, goshan_che said:

பூசை?

நமோதஸ்தோ, பகவதோ சமாதோ,

சம்மோ சங்க சாது.

பானாதிபானா வேதமதி பிக்கா பதங் சமாதியாமி.

உனங் வாதா வேதமி பிக்காபதங் சமாதியாமி.

புத்தங் சரணங் கச்சாமி,

சங்கங் சரணம் கச்சாமி,

தம்மம் சரணம் கச்சாமி.

 

இது பாளி மொழியா அல்லது சிங்களமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர்
அன்பான புத்தரா வந்தால் வரவேற்போம் 
ஆனால் ஆக்கிரமிப்புப் புத்தராக வந்தால் எதிர்ப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Jude said:

இது பாளி மொழியா அல்லது சிங்களமா?

பாளி என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "இப்பொது Neanderthals (Homo neanderthalensis) இன் மரபணு இப்போதுள்ள மனித வர்க்கத்தில் 2 - 2.5% இருக்கிறது என்பது பின்னைய முடிவு" ஆம் , அது சரி , ஏனென்றால்,     Though Modern humans and Neanderthals lived in separate regions evolving along separate evolutionary lineages for hundreds of thousands of years, Neanderthals are still our closest currently known relative. Because of that evolutionary proximity, despite being recognized as different species, it is still possible that members of our two species exchanged genetic information. This exchange of DNA is called introgression, or interbreeding. Neanderthal-Homo sapiens interbreeding Neanderthals are known to contribute up to 1-4% of the genomes of non-African modern humans, depending on what region of the word your ancestors come from, and modern humans who lived about 40,000 years ago have been found to have up to 6-9% Neanderthal DNA (Fu et al., 2015).  ............................................................... "சிங்கமும், மனிதனும் species அடிப்படை யில் மிக தொலைவு என்பதால் சாத்திய கூறுகள் மிக, மிக  குறைவு என்பதே இப்பொது நம்ப கூடியது" ஆம், அது முற்றிலும் சரியான வாதம்  ................................................................... "மகாவம்சம்  சிங்கம் என்ற சொல்லை மிருகத்தை குறிக்க பயன்படுத்தியதா அல்லது அந்த தன்மை மனிதன் (போன்ற) குறிக்க பயன்படுத்தியதா. " கட்டாயம் சிங்கத்தைக் [மிருகத்தைக்] குறிக்கத்தான் பயன்படுத்தப் பட்டுள்ளது தெளிவாக அங்கு தெரிகிறது  ஆறாம் அத்தியாயம் / விஜயன் வருகையில் [CHAPTEE VI / THE COMING OF VIJAYA ]  "மற்றவர்கள் அங்கும் இங்குமாக ஓடி விட்டனர். ஆனல் அவள் [விஜயனின் தாய்], சிங்கம் வந்த அதே பாதையில் ஓடினாள் .... தூரத்தில் அவளைப் பார்த்தது. உடனே காமவெறி சிங்கத்தைப் பற்றிக்கொண்டது. வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது ....  அவளைத் தனது முதுகின் மீது சுமந்து கொண்டு வேகமாகத் தனது குகையைச் சென்றடைந்தது. அங்கு சிங்கம் அவளுடன் கூடியது. இந்தக் கூடலின் விளவாக ராஜகுமாரி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். ஒன்று ஆண் [சீகபாகு / சிங்கபாகு /Sihabahu / Sinhabahu] ; ஒன்று பெண் [சிங்கசீவலி / சீகவலி / Sinhasivali or Sihasivali]. [the other folk fled this way and that, but she fled along the way by which the lion had come ...  love (for her) laid hold on him, and he came towards her with waving tail and ears laid back ...  took her  upon his back and bore her with all speed to his cave, and there he was united with her, and from this union with him the princess in time bore twin-children, a son and a daughter.]   "வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது" [he came towards her with waving tail and ears laid back]   என்ற வரி தெளிவாக மிருகம் என்று சொல்லுகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை  ..................................................................... மகாவம்சம் அத்தக்கதா [Aṭṭhakathā - Buddhist Commentarial Literature / The word aṭṭhakathā is a general term, meaning exposition of the sense (aṭṭha = attha, Skt. artha), explanation, commentary.] Buddhist monks of Mahavihara, maintained this historical record of the Sri Lankan history starting from 3rd century B.C., some what similar to a modern day diary. These records were combined and compiled into a single document in the 5th century CE by Buddhist monk Mahathera Mahanama. There is evidence as per Wilhelm Geiger, there was another compilation prior to this known as “Mahavamsa Atthakatha” and Mahathera Mahanama relied on this text. Earlier document known as “Dipavamsa” also come down to us which is much simpler and contain less information than Mahavamsa, probably compiled using previously mentioned “Mahavamsa Atthakatha”?   ........................................... "சிங்களத்தில் இருந்த அத்தக்கதாவை  புத்தகோச பாளியில் எழுதிவிட்டு, சிங்கள மூலத்தை எரித்து விட்டததாகவும், ஏனெனில் சிங்களம் தெய்வ மொழி இல்லை என்றும் கருதப்படுகிறது' It is observed two groups of people in the 5th century A.D. – Hindus, speaking Tamil and the converts (Buddhists) speaking the new language (Sinhala).  There is a popular here say, emerged from the Later Burmese Biographical Text Buddhaghosuppatti ( perhaps as early as the 15th century) that Buddhaghosa Thera burnt ancient Sihala Atthakathas after he translated them into  Pali, introducing the Mula Bhasha [first language, primary language; epithet for Pali, the liturgical language of Theravada Buddhism. /  பாளி மொழியை வழிபாட்டு அல்லது தெய்வீக மொழியாக தேரவாத பௌத்தத்தில் கருதப்படுகிறது]  Please note that The Buddhaghosuppatti, a later biographical text, is generally regarded by Western scholars as being legend rather than history. So the text is not very reliable. Also It is not stated in Culavamsa [The Cūḷavaṃsa is a continuation of the Mahavamsa. But unlike the Mahavamsa it was written by different authors at different periods. / இதுவும்  பாளி மொழியில் தான் எழுதப்பட்டது / கிபி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 1815 ஆம் ஆண்டு இலங்கைத்தீவின் கடைசி இராசதானியான கண்டி பிரித்தானியர் வசம் செல்லும் வரையான காலப்பகுதியின் இலங்கை அரசர் பற்றி இந்நூல் குறிப்பிடுகிறது] that he burned the scriptures , Though it contains the main account of Buddhaghosa’s life. ஆகவே உண்மையில் அவர் எரித்தாரா என்பதும் ஒரு கேள்விக்குறியே? Tradition regarding the Aṭṭhakathā [Buddhist Commentarial Literature by L. R. Goonesekere, BPS / Buddhist Publication Society, Kandy • Sri Lanka] The Ceylonese tradition regarding the aṭṭhakathā is that they were composed (in Pali, it is to be presumed) at the First Council (Saṅgīti) and rehearsed at the two following Councils. They were introduced to Ceylon by Mahinda who also, it is said, translated them into Sinhala. The earliest record of this tradition is contained in the introduction in Buddhaghosa’s commentaries. [“For explaining the meaning, the Commentary was originally recited by the 500 Masters (i.e. the Arahats assembled at the First Council) and was later rehearsed (at the two following Councils). Then it was brought to the island of the Sinhalese by the great Mahinda, the master (of Dhamma), and was rendered into the Sinhala language for the benefit of the island dwellers.”] It recurs in the accounts of Buddhaghosa contained in the Mahāvaṃsa  and the Saddhammasaṅgaha.  According to the Dīpavaṃsa  and the Mahāvaṃsa,  the commentaries (the Sinhala version, it is to be inferred) were put into writing in Ceylon along with the Pali canon in the reign of Vaṭṭagāmaṇī Abhaya in the first century B. C. The Mahāvaṃsa,  and Saddhammasaṅgaha  further state that, at the time of Buddhaghosa, the aṭṭhakathā (the original Pali) had disappeared in India. It is not known how far this statement was correct, but the original Pali aṭṭhakathā were not recorded in writing and no trace of them exists today. As will be seen, the Sinhala aṭṭhakathā put into writing in Vaṭṭagāmaṇī Abhaya’s time have also disappeared.
    • இலங்கையரசாங்கம் முன்வைத்த தீர்வுத்திட்டத்தினை முற்றாக நிராகரித்து, நான்கு அம்சக் கோரிக்கையின் அடிப்படையிலான தீர்வினை கோரிய தமிழ்த் தரப்பு   நான்காம் நாள் பேச்சுக்கள் பெரும் குழப்பத்திற்குள் நுழைந்தன. ஜெயவர்த்தன இன்னொரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றினார். பொலீஸாரைக் கொண்டு அரங்கேற்றப்பட்ட இச்சதியில் கொழும்பில் குண்டுத்தாக்குதலில் ஈடுபட வந்திருந்த ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தாம் கைதுசெய்திருப்பதாக ஜெயார் தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையாக சுற்றித்திருந்த இரு இளைஞர்களைக் கைதுசெய்து விசாரித்தவேளை அவர்கள் ஜனாதிபதியைக் கொல்வதற்காக ஈரோஸ் தலைமைப் பீடத்தால் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொண்டதாக பொலீஸார் அறிவித்தனர். ஜெயாரின் திட்டத்தின்படி, கொழும்பு ஊடகங்களும் இச்செய்தியை பெரும் எடுப்பில் வெளியிட்டிருந்தன. இதனைச் செய்தியாக்கும்போது டெயிலி நியுஸ் காரியாலயத்தில் இருந்த உற்சாககத்தினை நேரடியாக நாண் கண்டேன். மறுநாள் ஆசிரியர்த் தலையங்கம் "முறியடிக்கப்பட்ட ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சி" என்று வெளியாகியிருந்தது. தன்மீதான இந்தப் பழியை சோடிக்கப்பட்ட புரளி என்று ஈரோஸ் தலைமைப்பீடம் அறிவித்தது. பொதுத் தபாலகத்திற்குச் சென்றுகொண்டிருந்த இரு அப்பாவிகளைக் கைதுசெய்து, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் பொய்யான வாக்குமூலம் ஒன்றினை கொடுக்க வைத்தே பொலீஸார் இந்த நாடகத்தினை ஆடுகிறார்கள் என்று ஈரோஸ் அமைப்பு விளக்கியிருந்தது.  நான்காம் நாள் பேச்சுக்கள் ஆரம்பமாகிய வேளை, அரசாங்கத்தின் பொய்யான வதந்திகுறித்து ஈரோஸ் அமைப்பினரும் ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளும் தமது ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள். "இது ஜெயாரின் புரளி" என்றும் அதனை அழைத்தார்கள். அன்றைய நாளின் பெரும்பகுதி யுத்தநிறுத்த மீறல்கள் குறித்து ஒருவரையொருவர் சாடுவதிலேயே கழிந்தது. யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த வாக்குவாதங்கள் முடிவடைந்த பின்னர் பேசிய ஹெக்டர் ஜெயவர்த்தன தான் முன்வைத்துள்ள யோசனைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படையாக வைத்து செயற்பட முடியும் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த தமிழ்த் தரப்பு, அதிகாரங்கள், அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு, அரசாங்கத்தின் கட்டமைப்பு என்பன குறித்த சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், தமிழர்கள் எதிர்பார்க்கும் அதிகாரங்களுக்கும், அரசால் முன்வைக்கப்படும் அதிகாரங்களுக்கும் இடையே பாரியளவு இடைவெளி காணப்படுவதாகவும் விமர்சித்தனர்.  பேச்சுக்கள் முறிவடைவதைத் தவிர்ப்பதற்காக இந்திய அரசாங்கம் தனது வெளிநாட்டமைச்சர் ரொமேஷ் பண்டாரியை திம்புவிற்கு அனுப்பியது. இரு தரப்பினருடனும் ரொமேஷ் பண்டாரி ஒன்றன் பின் ஒன்றாக பல சந்திப்புக்களை நடத்தினார்.தமிழர் தரப்புடன் பேசிய பண்டாரி, அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வு ஆலோசனையினை நிராகரிப்பதாகவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்கக்கூடிய புதியதொரு தீர்வுத்திட்டத்துடன் அரசு வரவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்து அறிக்கையொன்றினை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். இதன்மூலம் அன்று முறிவடைய‌ இருந்த பேச்சுக்களை அவரால் நீட்டிக்க முடிந்தது. பேச்சுவார்த்தையின் ஐந்தாம் நாளான ஆடி 12 ஆம் திகதி தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசு முன்வைத்திருக்கும் தீர்வுக்கான ஆலோசனைகளை நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டனர். அறிக்கை வெளியிடப்பட முன்னர் தமிழ் மக்களைஅவமானப்படுத்தும் விதமாக இலங்கைஅயரசாங்கம் தனது தீர்வு யோசனையினை முன்வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். அமிர்தலிங்கம் ஒருபடி மேலே சென்று, அரசு முன்வைத்திருக்கும் யோசனைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார்.  தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பாக டெலோ அமைப்பின் சார்ள்ஸ் அறிக்கையினை சமர்ப்பித்தார். தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களுக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த எமது கோரிக்கைகளை ஜனநாயக வழியில் புரியப்படுத்த முடியாமையினாலேயே நாம் ஆயுதம் தூக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். மேலும், எமது தேசியம் மீதான சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறையும், எம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதமும், எம் மக்கள் மீதான இனவழிப்பும் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் எம் மக்களுக்கான தர்க்கரீதியான ஒரே தீர்வு தனிநாடுதான் என்கிற நிலைமைக்கு எம்மைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இதன் தர்க்கரீதியான வெளிப்பாடே ஆயுதப்போராட்டம் என்றால் அது மிகையில்லை. ஆனாலும், இலங்கையரசாங்கம் நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் அமைதியான அத்தீர்வினை பரிசீலிக்க தமிழ் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஏனென்றால், தமிழ் மக்கள் அமைதியினை விரும்பும் ஒரு மக்கள் கூட்டமாகும். சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வு ஆலோசனைகள் எந்தவிதத்திலும் நேர்மையானதாகவோ, அமைதியை ஏற்படுத்தும் முகாந்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதை எம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. முதலாவதாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவின் தலைவர் தனது உரையில், இந்தத் தீர்வு ஆலோசனைகள் கடந்த வருடம் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் இலங்கையரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட ஆலோசனைகள் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால், பின்வரும் காரணங்களுக்காக சர்வகட்சி மாநாட்டினை நாம் முற்றாக நிராகரித்திருக்கிறோம், முதலாவதாக, சர்வகட்சி மாநாட்டில் பங்குகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சர்வகட்சி மாநாடு குழப்பகரமான நிலையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டவுடன் வெளியிட்ட அறிக்கையில் அதிகாரம் மிக்க பிராந்தியம் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்விற்கு அருகில்க் கூட சர்வக‌ட்சி மாநாட்டில் அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வு வரவில்லை என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தது. இரண்டாவதாக, ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்கிற வகையில், நவ பாஸிஸ இலங்கையரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இராணுவ ரீதியில் தீர்வினை வழங்கவே சர்வகட்சி மாநாட்டினை போர்வையாகப் பாவித்தது என்பதனை ஐயம் திரிபுற  நம்புகிறோம். மேலும், ஈழத்திற்கான தேசியப் பிரச்சினையினை இலங்கையரசாங்கம் இதுவரையில் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு சுட்டிக் காட்டுகிறது. அதற்கான காரணங்களை நாம் முன்வைக்கிறோம்,   1. அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், தமிழ் மக்களால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மாவட்ட ரீதியிலான அதிகாரப் பரவலாக்க அலகினை அரசு முன்வைத்திருக்கிறது. 2. அரசு முனைத்திருக்கும் தீர்வு, தமிழ் மக்களினதோ அல்லது சிங்கள மக்களினதோ சுயநிர்ணய உரிமையினை புறக்கணித்திருப்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ அல்லது அதையொத்த இன்னொரு வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ தீர்வினை மக்கள் முன் கொண்டுசெல்லும் வழிவகையினைக் கொண்டிருக்கவில்லை. மக்களின் விருப்பினை நிராகரித்திருக்கும் அரசாங்கம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு அரசியல் சட்டத்தில் திருத்தத்தினைச் செய்யலாம் என்று கூறுகிறது.இப்படிச் செய்வதனூடாக மக்கள் மீது அரசியல் யாப்பின் அடைப்படையில் உருவாக்கப்படவிருக்கும் சர்வாதிகாரத்தைத் திணிக்க முயல்கிறது.  ஆகவே, இந்த நிலையில் மேற்கொண்டு பேச்சுக்களில் ஈடுபடுவதில் பயனில்லை என்கிற நிலைப்பாட்டிற்கு நாம் வந்திருப்பதுடன், நாடு இன்றிருக்கும் இக்கட்டான நிலைக்குக் காரணமாகியிருக்கும் அரசாங்கமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நேர்மையானதும், அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதுமான தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.    நிரந்தர சமாதானத்தினைக் கருத்தில்க் கொண்டு, தமிழ் மக்களால் பரிசீலித்துப் பார்க்கக் கூடிய தீர்வொன்றுடன் மீண்டும் இலங்கையரச பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பவேண்டும் என்கிற தீர்க்கமான கோரிக்கையினை நாம் முன்வைக்கிறோம். ஜனாதிபதி ஜெயாரைப் படுகொலை செய்ய எத்தனித்ததாக தம்மீது முன்வைக்கப்பட்ட அரசின் குற்றச்சட்டிற்கெதிரான தனது அதிருப்தியினை ஈரோஸ் அமைப்பு எழுத்துமூல அறிக்கையொன்றின் ஊடாக வெளியிட்டது. இந்தியாவின் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தைக்குழுக்களுக்கான விருந்துபசராம் ஒன்றினை வழங்கினார். பேச்சுவார்த்தையின் இறுதிநாளான ஆடி 13 ஆம் திகதி அரச தரப்புப் பிரதிநிதிகளுடன் பேசிய தமிழ்த் தரப்பு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய‌ தீர்வொன்றுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வு அமையவேண்டிய அடிப்படைகள் குறித்து தனது நிலைப்பாட்டினையும் முன்வைத்தது.   பேச்சுவார்த்தைக் குழுக்கள் இணைந்து வெளியிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திம்புப் பிரகடணம் இவ்வாறு அமைந்திருந்தது, தமிழ்த் தரப்பு முன்வைத்த பிரகடணம்,   தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான அரத்தபுஷ்ட்டியான தீர்வு பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று நாம் கருதுகிறோம்,   1. இலங்கைத் தமிழர்களைத் தனியான தேசமாக அங்கீகரிப்பது 2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான தாயகம் இருப்பதை அடையாளம் காண்பதும் அதனை அங்கீகரிப்பதும் 3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பது 4. இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களினதும் குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பது   பல்வேறு நாடுகள் தமக்கு உகந்த செயற்திட்டங்கள் ஊடாக இந்த அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே அதற்குத் தீர்வாக தனிநாட்டினை முன்வைத்துப் போராடி வருகிறோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக இலங்கையரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வினை எம்மால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறோம். ஆகவே, 1985 ஆம் ஆண்டு ஆடி மாதம் 12 ஆம் திகதி நாம் வெளியிட்ட அறிக்கையின்படி இலங்கையரசாங்கம் இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு யோசனைகளை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். ஆனாலும், அமைதிக்கான வழிகளைத் தேடும் மக்கள் கூட்டம் எனும் அடிப்படையில், நாம் மேலே குறிப்பிட்ட நான்கு அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய புதிய தீர்வு யோசனைகளை இலங்கையரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசீலிர்த்துப் பார்க்கத் தயாராக இருப்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.