Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 15/2/2023 at 23:01, புங்கையூரன் said:

பல வாசிப்புக்களாலும், திரைப் படங்கள் பார்த்ததாலும் தெளிவில்லாமல் அறிந்திருந்த வரலாறு, உங்கள் பதிவுகளை வாசித்த பின்னர் ஒரு தொடுவையாக அமைகின்றது…!

தொடருங்கள், ஜஸ்ரின்…!

இதைத்தான் நானும் சொல்ல விரும்புகிறேன்...  தொடருங்கள் ஜஸ்டின் 👍

  • Replies 80
  • Views 6.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • திரும்பும் வரலாறு - பாகம் 3 – நாசிகள். fபிரிட்ஸ் ஹேபர் (Fritz Haber) ஒரு வித்தியாசமான பேர்வழி. பயிர்கள் வளர நைதரசன் அவசியம். ஆனால், காற்றில் நிறைந்திருக்கும் நைதரசன் வாயுவை எல்லாப் பயிர்களாலும்

  • இணைந்திருக்கிற எல்லோருக்கும் நன்றி - தனித்தனியாக  வந்த கேள்விகளுக்கு பின்னர் பதில் எழுதுகிறேன். ஆனால், கோசானின் கருத்துக்கு இப்பவே எழுத வேண்டும்: உடைந்த றெக்கோர்ட் போல 5 வருடங்களாக போலிச் செய்த

  • உலக நாடுகள் என்ன செய்தன? ஹிற்லரின் நாசிக் கட்சியின் ஆட்சியில் ஜேர்மனி வந்த காலப் பகுதி ஒரு அசாதாரணமான உலகக் சூழல் நிலவிய காலம். முதல் உலகப் போரினால் ஒரு லட்சம் இளைஞர்களையும், அதே காலப்பகுதியில் ஐ

  • கருத்துக்கள உறவுகள்+
On 7/2/2023 at 12:37, Justin said:

சுவியர், 1,100 வரையான நீர்மூழ்கிகளை இரண்டாம் உலகப் போர் காலத்தில் நாசி ஜேர்மனி வைத்திருந்தது. இவற்றுள் 700 வரையானவை எதிரிப் படைகளால் அல்லது விபத்துக்களால் மூழ்கடிக்கப்  பட்டன (ஆனால், எதிரி நாடுகளின் 3000 வரையான கடற்கலங்களை நாசி நீர்மூழ்கிகள் மூழ்கடித்தன!).

எஞ்சிய நூற்றுக் கணக்கானவை ஜேர்மனி சரணடைவதற்கு முன்னராக நாசிகளால் அழிக்கப் பட்டன. சில சரணடைந்தன அல்லது கைப்பற்றப் பட்டன. அவ்வாறு அமெரிக்காவினால் கைப்பற்றப் பட்ட ஒரு ஜேர்மன் நீர்மூழ்கி இன்னும் சிக்காகோவில் பார்வைக்கு இருக்கிறது.

https://www.msichicago.org/press/press-releases/u-505-submarine/

நாசிகளின் ஜேர்மன் நீர்முழ்கிகள்  பற்றி அறிந்து கொள்ள "Das Boot" (The Boat) என்ற திரைப்படத்தைப் பார்க்கலாம்.

Poster for Das Boot

ஒக்கமாக அல்ல. சிலது தென் அமெரிக்க நாடுகளிலும் கரை ஒதுங்கின, தப்பிய நாசி அதிகாரிகளுடன். இது பற்றிய தகவல் அடங்கிய கோப்புகள் 2012இற்குப் பின்னர் வெளியாகி உலக நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன.

--------------------------

நல்ல கட்டுரை... தொடர்ந்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பாகம் நான்கை படங்களுடன் போடுவீர்கள் என்ற நம்பிக்கையில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

பாகம் நான்கை படங்களுடன் போடுவீர்கள் என்ற நம்பிக்கையில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்🙂

நிச்சயமாக, வாரம் இரு முறை போடுவதாகத் தான் திட்டம், இந்த வாரம் வேலை கூடி நேரம் சுருங்கி விட்டதால் நாளை  போடுவேன்! நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

@Justin

எப்போது பார்தாலும் கிட்லரைப் பற்றியே பல பதிவுகள் வருகின்றன.

ஐரோப்பாவை எப்படி கிட்லர் வைத்திருந்தாரோ

அதே மாதிரி ஆசியாவை யப்பானும் வைத்திருந்தது என்கிறார்கள்.

ஆனாலும் யாரும் யப்பானைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.

ஒருவேளை அமெரிக்கா அணுகுண்டு போட்டதால் அவர்கள் பாவமெல்லாம் தீர்ந்துவிட்டதோ என்னவோ?

தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 6/2/2023 at 01:41, Justin said:

சகல அரசியலமைப்பு வழியான மக்கள் உரிமைகளும் ஒரே இரவில் ரத்துச் செய்யப் பட்டன. இந்த உரிமைகள் ரத்தினால், நாசிகளை ஆதரித்த ஜேர்மனியர்களுக்கு ஒரு பாதிப்பும் வரவில்லை

இந்த நவீன உலகிலும் இது நடக்கின்றது. வரலாற்றில் இருந்து மனித குலம் படிப்பினைகளைப் பெற்றுக்கொள்வதில்லை.

தொடர்ந்து முழுமையாக வாசிக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 16/2/2023 at 02:55, Justin said:

ஹேபர், பிரெஞ்சுப் போர் முனைக்கு தனது குளோரின் வாயுச் சிலிண்டர்களை ஜேர்மன் படையினரோடு சேர்ந்து எடுத்துச் சென்று பதுங்கு குழியில், காற்று பிரெஞ்சுப் படைகள் இருந்த பக்கம் வீசும் வரைக் காத்திருந்தார். காற்று வளமாக வந்த வேளையில் குளோரின் வாயுவைத் திறந்து விட்டார். காற்றோடு சேர்ந்து பிரெஞ்சுப் படைகளின் பக்கம் நகர்ந்த குளோரின் வாயு தான் முதலாவது இரசாயன ஆயுதம்

அமோனியாவை உற்பத்தி செய்யும் Haber process பள்ளிப் புத்தகங்களில் உள்ளன. அதில் ஓரிரு வரிகளில் Haber நாஜி ஜேர்மனியின் யுத்தத்திற்கு உதவியது பற்றிய சர்ச்சையும் தொட்டுச் சொல்லப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் அருமையாக நகர்கிறது அண்ணா. 

தொடருங்கள்.

On 24/2/2023 at 16:09, ஈழப்பிரியன் said:

ஆனாலும் யாரும் யப்பானைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.

பின்லாந்து, ஜேர்மனி…அடுத்து ஜப்பானை எழுதுவார் என எதிர்பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 24/2/2023 at 17:09, ஈழப்பிரியன் said:

@Justin

எப்போது பார்தாலும் கிட்லரைப் பற்றியே பல பதிவுகள் வருகின்றன.

ஐரோப்பாவை எப்படி கிட்லர் வைத்திருந்தாரோ

அதே மாதிரி ஆசியாவை யப்பானும் வைத்திருந்தது என்கிறார்கள்.

ஆனாலும் யாரும் யப்பானைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.

ஒருவேளை அமெரிக்கா அணுகுண்டு போட்டதால் அவர்கள் பாவமெல்லாம் தீர்ந்துவிட்டதோ என்னவோ?

தொடருங்கள்.

போட்டுக் கொடுக்கிற பழக்கம் என்டு இதைத்தான் சொல்லுறது 😀.நீங்கள் தொடருங்கள் ஜஸ்ரின் தொடர்ந்து வாசிக்க ஆவல்.

  • கருத்துக்கள உறவுகள்
On 24/2/2023 at 17:09, ஈழப்பிரியன் said:

@Justin

எப்போது பார்தாலும் கிட்லரைப் பற்றியே பல பதிவுகள் வருகின்றன.

ஐரோப்பாவை எப்படி கிட்லர் வைத்திருந்தாரோ

அதே மாதிரி ஆசியாவை யப்பானும் வைத்திருந்தது என்கிறார்கள்.

ஆனாலும் யாரும் யப்பானைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.

ஒருவேளை அமெரிக்கா அணுகுண்டு போட்டதால் அவர்கள் பாவமெல்லாம் தீர்ந்துவிட்டதோ என்னவோ?

தொடருங்கள்.

ஜப்பான் கிற்றலரை போல் நாடுகளை பிடித்தாலும் மக்களை இனரீதியில் வதை முகாம்களில் வைத்து படுகொலை செய்யவில்லை என்று நினைக்கிறேன். அப்படி நடந்ததா என்று தெரியவில்லை. @Justin இன் அடுத்த பதிவில் விளக்கம் தருவார் என்று நம்புகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, island said:

ஜப்பான் கிற்றலரை போல் நாடுகளை பிடித்தாலும் மக்களை இனரீதியில் வதை முகாம்களில் வைத்து படுகொலை செய்யவில்லை என்று நினைக்கிறேன். அப்படி நடந்ததா என்று தெரியவில்லை. @Justin இன் அடுத்த பதிவில் விளக்கம் தருவார் என்று நம்புகிறேன். 

நிச்சயம் நடந்தது. ஜப்பானியர்கள் சீனாவை கைப்பற்றி அங்கே சீன இனத்தவரை சொல்லொணா கொடுமைக்கு ஆளாக்கினார்கள். 

குறிப்பாக comfort women என்று வகை தொகையின்றி சீன பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருந்தார்கள்.

அதே போல் பர்மாவில் இருந்து கிழக்கு நோக்கி death railway என அழைக்கப்படும் ரயில்பாதையை கட்டும் பணியில் பல போர்குற்றவாளிகளை அடிமைகளாக நடத்தி உள்ளார்கள். பலர் இறந்தனர்.

நான் போய் பார்த்துள்ளேன். தாய்லாந்தின் காஞ்சனாபுரி என்ற ஊரில் இன்றும் இந்த ரயில் பாதை, பாலம் எல்லாம் உள்ளது.

இதில் இறந்தவர்கள் பலர் இந்தியா, சிங்கப்பூரில் பிடிக்கப்பட்ட தமிழர்கள்.

தாமே உயர்ந்த இனம் - சூரிய புத்திரர்கள் என்ற இனதுவேச, இனத்தூய்மைவாதம் இன்றும் ஜப்பானியர்களிடம் உண்டு.

ஜப்பானியர் வேற்று இனத்தவரை திருமணம் முடிப்பதும் குறைவு. இன்றளவும் டோக்கியோவில் கூட ஒரு கறுப்பர் நடந்து போனால் ஆச்சரியமாக பார்க்கும் சமூகம்.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, island said:

ஜப்பான் கிற்றலரை போல் நாடுகளை பிடித்தாலும் மக்களை இனரீதியில் வதை முகாம்களில் வைத்து படுகொலை செய்யவில்லை என்று நினைக்கிறேன். அப்படி நடந்ததா என்று தெரியவில்லை. @Justin இன் அடுத்த பதிவில் விளக்கம் தருவார் என்று நம்புகிறேன். 

கொரியர்களை அடிமைகளாக வைத்து இருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

போட்டுக் கொடுக்கிற பழக்கம் என்டு இதைத்தான் சொல்லுறது 😀.நீங்கள் தொடருங்கள் ஜஸ்ரின் தொடர்ந்து வாசிக்க ஆவல்.

 

2 hours ago, island said:

ஜப்பான் கிற்றலரை போல் நாடுகளை பிடித்தாலும் மக்களை இனரீதியில் வதை முகாம்களில் வைத்து படுகொலை செய்யவில்லை என்று நினைக்கிறேன். அப்படி நடந்ததா என்று தெரியவில்லை. @Justin இன் அடுத்த பதிவில் விளக்கம் தருவார் என்று நம்புகிறேன். 

சீனர்கள் ஜப்பானியரை கொடூரமானவர்களாக சொல்வார்கள்.

நாங்கள் அறியாத பக்கங்கள் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

சீனர்கள் ஜப்பானியரை கொடூரமானவர்களாக சொல்வார்கள்.

நாங்கள் அறியாத பக்கங்கள் இருக்கலாம்.

ஜப்பானியர்களும் ஆங்கிலேயர்களும் கொடூரமானவர்கள். நாஷிகளும் குறைந்தவர்கள் அல்ல.
ஆனாலும்  நாஷிகளின் கொடுமைகளையும் அழிவுகளையும் மட்டுமே பாடசாலை புத்தகங்களில் அரசியல் பாடமாக தரவேற்றி விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

ஜப்பானியர்களும் ஆங்கிலேயர்களும் கொடூரமானவர்கள். நாஷிகளும் குறைந்தவர்கள் அல்ல.
ஆனாலும்  நாஷிகளின் கொடுமைகளையும் அழிவுகளையும் மட்டுமே பாடசாலை புத்தகங்களில் அரசியல் பாடமாக தரவேற்றி விட்டார்கள்.

ஜப்பானியர்களும், ஆங்கிலேயரும் மட்டும் அல்ல, தெனமரிக்காவில் ஸ்பானியரும், கிழக்கிந்தியாவில் பிரான்ஸ், போச்சுகல், டச்சுகாரரும்…ஆபிரிக்காவில் பெல்ஜியம், ஜேர்மனியும், மத்திய ஆசியா, ஐரோபாவில், சொந்த மக்களின் மீதே ஸ்டாலினின் ரஸ்யர்களும் கொடூரத்தையே புரிந்தார்கள்.

ஆனால் நாஜிகள் மட்டும்தான் அதை யூதர் விடயத்தில் அங்கீகரிக்கப்பட்ட கொள்கை முழக்கமாக்கி செய்தார்கள்.

அத்தோடு அநீதி இழைக்கபட்ட இனமும் அதை மிக தெளிவாக தொடர்ந்தும் வலியுறுத்துகிறது.

இதனால்தான் நாஜிகள் தனியாக பேசப்படுகிறனர்.

ஏனைவர்கள் சுரண்டும் இனவாதிகளாக இருந்தார்கள். 

நாஜிகள் யூத இனத்தை சுவடின்றி அழிப்பதை கொள்கையாக்கி செயல்பட்ட இன தூய்மைவாதிகளாக இருந்தார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரும்பும் வரலாறு -பாகம் 4

போர்மேகமும் இடிமுழக்கமும்

நாசி ஜேர்மனி 1938 இலேயே அயல் நாடுகளை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விட்டதை முன்னைய பாகத்தில் பார்த்தோம். இந்த ஆக்கிரமிப்புக்கள் பாரியளவு எதிர்ப்புகளின்றி நிகழ்ந்தன. முதலில் ஆஸ்திரியா பின்னர் செக்கோஸ்லோவாக்கியாவின் எல்லைப் பகுதிகள் என்பன வீழ்ந்தன. இந்த நாடுகளின் இயற்கை வளங்களை நாசி ஜேர்மனி தன் இராணுவ மயப்படுத்தலுக்கும், பொருளாதாரப் பலத்திற்கும் பயன்படுத்திக் கொண்டது. அதே வேளையில், ஜேர்மனியின் யூதர்களுக்கெதிரான கொள்கைகளும் ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்குப் பரவின. ஐரோப்பாவில் யூத மக்களுட்பட்ட ஆரியல்லாத மக்களுக்கு எதிர்காலம் கேள்விக் குறியானது. இருண்ட எதிர்காலத்தை எதிர்கொள்ள முடியாத யூதர்கள் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டார்கள்.

இன்னும் பல்லாயிரம் பேர், அத்திலாந்திக்கைத் தாண்டி அமெரிக்கக் கண்டத்து நாடுகளில் அடைக்கலம் தேடினர் - எல்லோருமே இந்த விடயத்தில் அதிர்ஷ்டசாலிகளாக இருக்கவில்லை. உதாரணமாக, கியூபாவை நோக்கியும், கனடாவை நோக்கியும் யூத அகதிகளை ஏற்றிக் கொண்டு சென்ற கப்பல்கள் சில திருப்பி விடப் பட்டன. அந்தக் கப்பல்களில் இருந்து இறக்கப் பட்ட யூத அகதிகள் வதை முகாம்களுக்கு அனுப்பப் பட்டனர், அவர்களுள் பலர் உயிரோடு மீளவில்லை! யூத அகதிகளுக்கு நடந்த இந்த அவலம், மீள நிகழாமல் இருக்க பிற்காலத்தில் .நா எடுத்துக் கொண்ட முயற்சிகளில் ஒன்று தான் ஐக்கியநாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் (UNHCR) என்ற பதவியின் உருவாக்கம். இந்த அமைப்பினால் பயனடைந்தவர்களுள் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களும் அடங்குகின்றனர். அதே வேளை ஈழத்தமிழர்கள் போல அதிர்ஷ்டம் கிட்டாத றோஹிங்கியா அகதிகளும் கூட ஓரளவுக்கு இந்த அமைப்பினால் தான் பாதுகாக்கப் படுகின்றனர். (இன்னொருவரின் கல்லறையின் மீது கட்டியெழுப்பப் பட்ட சமூகக் கட்டமைப்புகள் தான் இன்று எங்களுக்கு நிழல் தருகின்றன என்பதை புலம்பெயர் ஈழவர்கள் உணர்ந்தாலே இந்தத் தொடரின் பாதி நோக்கம் நிறைவேறி விடும்!)

ஹிற்லரைக் குளிர்வித்தல்!

ஏற்கனவே சுட்டிக் காட்டப் பட்டது போல, ஹிற்லர் , நாசிகள் அவர்கள் கொள்கைகள் என்பன உடனடியாக உலகத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பவில்லை. உதாரணமாக, அமெரிக்கா நாசி ஜேர்மனிக்குத் தான் கொடுத்த கடன்களை எப்படிப் பவ்வியமாகத் திருப்பி வசூலிப்பதென மட்டும் யோசித்தது. இந்த நோக்கத்தை நிறைவேற்ற, ராஜதந்திர அனுபவமில்லாத ஆனால் ஜேர்மன் மக்கள் மீது அபிமானம் கொண்ட ஒரு வரலாற்றுத் துறைப் பேராசிரியரை தன் தூதுவராக பேர்லினில் நியமித்தது. நாசி ஜேர்மனியை எதிர்க்கும் வலுவுடன் எஞ்சியிருந்தவை மூன்று நாடுகள்: பிரிட்டன், பிரான்ஸ், சோவியத் ஒன்றியம். பிரான்ஸ், மஜினோ லைன் என்ற ஒரு எல்லைக் கோட்டை பாதுகாப்பு அரண்களுடன் அமைத்து விட்டு போர் வரும் போது பார்க்கலாம் என்று காத்திருந்தது.

பிரிட்டனில் ஆட்சியில் இருந்த நெவில் சம்பர்லின் போரை விரும்பவில்லை. "ஹிற்லர் மரியாதையை எதிர்பார்க்கிறார், அதைக் கொடுத்து விட்டால் அடங்கி விடுவார்" என்று நினைத்த பிரிட்டன் அரசியலாளர்களுள் ஒருவராக இருந்த சம்பர்லின், 1938 இல் ஜேர்மனி சென்று ஹிற்லரை நேரடியாகச் சந்தித்து ஒரு ஒப்பந்தம் போட்டு விட்டு  வந்தார். மியூனிக் (Munich) ஒப்பந்தம் எனப்பட்ட அந்த ஒப்பந்தம், ஜேர்மனியும் பிரிட்டனும் இனி ஒரு போதும் யுத்தத்தில் எதிரிகளாக இருக்க மாட்டா என்றிருந்தது. இத்தகைய "சர்வாதிகாரி எதிர்பார்ப்பதைக் கொடுத்தால் சமாதானம் நிலைக்கும்" என்ற கொள்கையை "குளிர்வித்தல் கொள்கை" (appeasement policy) என்று அழைப்பர். இன்றும் ரஷ்யாவின் புட்டின் கேட்பதைக் கொடுத்தால் உக்ரைனில் அழிவு நிற்கும் என்போர் இதே குளிர்வித்தல் கொள்கையையே வேறு சொற்களில் வெளிப்படுத்துகின்றனர்.

ஆனால், ஹிற்லர் மியூனிக் உடன்படிக்கை உருவாகி சில மாதங்களிலேயே முழு செக்கோஸ்லோவாக்கியாவையும் ஆக்கிரமித்து குளிர்வித்தல் சரிப்பட்டு வராத ஒரு கொள்கையென நிரூபித்தார். இவ்வளவு நிகழ்ந்த பின்னும்  ஹிற்லரை நம்பிய உலக நாடுகளும் தலைவர்களும் இருந்தனர், அவர்களுள் ஒருவர் சோவியத் ஒன்றியத் தலைவர் ஸ்ராலின். ஏற்கனவே பிரான்சுடன் ஒரு எதிர்கால ஒத்துழைப்பை உறுதி செய்யும் ஒப்பந்தத்தை ஸ்ராலின் செய்து, நாசி ஜேர்மனியை எதிர்க்கக் கூடிய அணியில் சோவியத் ஒன்றியத்தை வைத்திருந்தார். ஆனால், 1939 ஆகஸ்ட் மாதம், மின்னாமல் முழங்காமல் நாசி ஜேர்மனியோடு ஒரு பகைமை தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஸ்ராலின் செய்து கொண்டார். மொலரோவ் - றிப்பன்ட்ரொப் உடன்படிக்கை என்ற பெயர் கொண்ட இந்த உடன்பாடு பகைமை தவிர்ப்பு ஒப்பந்தமாக இருந்தாலும், அது உண்மையில் ஐரோப்பாக் கண்டத்தைப் பங்கு பிரித்துக் கொள்ளும் ஒரு ஒப்பந்தமாக இருந்தது. இந்தப் பங்கு பிரிப்பு ஆரம்பித்தது போலந்தில். 1939, செப்ரெம்பர் 1  ஆம் நாள் ஜேர்மனி போலந்தின் மீது ஆக்கிரமிப்பை முடுக்கி விட்டது. அதிகாலை 4.45 மணிக்கு, நாசி ஜேர்மனியின் பீரங்கிக் கப்பலில் இருந்து போலந்தின் வட கரையோர நகரான டான்சிக் (Danzig, தற்போதைய பெயர் கடைன்ஸ்க் - Gdansk) மீது ஏவப்பட்ட முதல் குண்டு தான், இரண்டாம் உலகப் போரின் முதல் வெடியெனக் கருதப் படுகிறது. இரண்டு வாரங்கள் கழித்து, ஸ்ராலினின் சோவியத் ஒன்றியம் போலந்தின் கிழக்குப் பாதியைப் படையெடுத்து ஆக்கிரமித்தது. ஹிற்லர் ஸ்ராலின் கூட்டின் முதற்பலி  போலந்து! 

போலந்தின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, எஞ்சியிருந்த நாசி எதிர்ப்பு நாடுகளான பிரான்சும், பிரிட்டனும் நாசி ஜேர்மனி மீது போர்ப் பிரகடம் செய்தன. ஆனாலும், அடுத்த சில மாதங்களில் நாசி ஜேர்மனியின் இராணுவ வலிமையை இந்த இரு நாடுகளின் தரை, வான், கடற்படைகளால் மழுங்கடிக்க இயலவில்லை. 1940 ஏப்பிரலில், மீண்டும் ஒரு சுற்று ஆக்கிரமிப்பை ஆரம்பித்த நாசி ஜேர்மனி சடுதியாக நோர்வே, டென்மார்க், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளை ஆக்கிரமித்திருந்தது. 1940 மே மாதம் ஆரம்பித்த போது மேற்கில் பிரான்ஸ் மஜினோ எல்லையை நோக்கி நாசிகள் நகர்ந்து கொண்டிருந்தார்கள்.

முடிவிற்கு வந்த குளிர்வித்தல் கனவு

 ஹிற்லரின் சடுதியான இராணுவ வெற்றிக்கு சம்பர்லினின் குளிர்வித்தல் கொள்கை ஒரு காரணம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், 1939 இல் சம்பர்லின் மியூனிக் உடன்படிக்கை மூலம் போரை தற்காலிகமாக ஒத்தி வைத்தாரென சில வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உதாரணமாக, பிரிட்டனின் றோயல் விமானப் படை (RAF) 1939 இல் ஒரு போரை எதிர்கொள்ளக் கூடிய ஆள், தளபாட பலங்களோடு இருக்கவில்ல. ஆனால் 1940 இல் நாசிகள் பிரிட்டன் மீது தொடர் விமானத் தாக்குதல்களை நடத்திய போது, ஓரளவுக்கேனும் தாக்குப் பிடிக்கும் அளவுக்கு றோயல் விமானப் படை வளர்ந்திருந்தது. ஆனால், ஹிற்லரின் வளர்ச்சிக்கு வழி கோலி விட்டார், தொடர் தோல்விகளுக்கு தலைமையாக இருக்கிறார், ஆகிய காரணங்களால் சம்பர்லின் தொடர்ந்து பிரதமராக இருக்கத் தகுதியற்றவர் என்ற எண்ணம் ஓங்கியது. அவரும் உடல் நலக் குறைவால் பதவி விலக, வின்ஸ்ரன் சேர்ச்சில் பிரதமரானது 1940, மே 10 ஆம் திகதி. சேர்ச்சிலின் வரவோடு, சண்டைக்காரனைக் குளிர்விக்க வேண்டுமென்ற குரல்கள் பிரிட்டனில் அடங்க ஆரம்பித்தன.

வின்ஸ்ரன் சேர்ச்சில்

சேர்ச்சில் பற்றி மேலும் எழுதுவதற்கு முன்னர் அவர் அப்பழுக்கற்ற ஒரு பூரணமான அரசியல் தலைவர் அல்ல என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும் (அப்படி யாரும் இன்றும் இல்லை என்பதே உண்மை). பிரிட்டனின் காலனி நாடுகளுக்கு சுதந்திரம் வழங்குவதை எதிர்த்த பிரிட்டன் அதிகார மட்டத்தில் சேர்ச்சில் முக்கியமானவர். உள்ளூரில், அரசியல் கொள்கையை விட தனது அரசியல் முன்னேற்றத்தை ஒரு படி மேலே வைத்திருந்த சேர்ச்சில் ஓரிரு தடவைகள் கட்சியை மாற்றிக் கொண்டார். ஆனால், இந்தக் குறைபாடுகளைத் தாண்டி ஒரு இக்கட்டான காலகட்டத்தில் தலைமையேற்க அவசியமான பல பண்புகளுக்கு சேர்ச்சில் சொந்தக்காரராக இருந்தார்.

  • 1.   சிறந்த பேச்சாளர், எழுத்தாளர் - இதனால் தன் கருத்துகளை இலகுவாக பகிரங்கப் படுத்த முடிந்தது, போர்க்கால இங்கிலாந்தில் இந்தத் தொடர்பாடல் மிகவும் பலன் தந்தது.

  • 2.     பிரிட்டன் கடற்படையில் பணியாற்றிய அனுபவமும், முதல் உலகப் போரில் நேரடியாகப் பங்கு பற்றிய அனுபவமும் சேர்ச்சிலிடம் இருந்தன. எனவே, பிரதமரான சேர்ச்சில் அது வரை இல்லாதிருந்த பாதுகாப்பு அமைச்சை புதிதாக உருவாக்கி, தன்னிடமே வைத்துக் கொண்டு நேரடியாக பிரிட்டனின் படை நடவடிக்கைகளைக் கண்காணித்தார்.

  • 3.      சேர்ச்சில் இறுதி வரை ஒரு வரலாற்று மாணவனாகவே இருந்தார். கடந்த காலங்களின் போர் வரலாறுகளை வாசிப்பதிலும், சமகாலப் போர்களை வரலாறாகப் பதிவு செய்வதிலும் ஆர்வமாக இருந்த சேர்ச்சிலுக்கு, அவரது எழுத்துப் பணிக்காக பிற்காலத்தில் இலக்கியத்திற்கான நோபல் பரிசும் வழங்கப் பட்டது.  

 

large.aircraftspotter.gif.ae2945f8e8c2d6ac664e2715f71e9dc3.gif

நாசி விமானப் படை விமானங்களைத் தேடி தூரநோக்கிக் கண்ணாடியூடாக அவதானிக்கும் றோயல் விமானப் படைத் தொண்டர் - இப்படி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ரேடாருக்கு மேலதிகமாக பணியில் இருந்தனர் (பட உதவி: நன்றியுடன் அமெரிக்க அரசு ஆவணக்காப்பகம்)

நாசிகளை எதிர்க்கும் முயற்சியில், சேர்ச்சில் சில உடனடி  நடவடிக்கைளை எடுத்தார். இது வரை நாசிகளின் தாக்குதல் பாணி, செறிவான விமானக் குண்டு வீச்சுகள் , பீரங்கித் தாக்குதல்கள் மூலம் இலக்கைச் சிதைத்து விட்டு, பின்னர் தரைப் படையை அனுப்பி ஆக்கிரமிப்பது என்பதாக இருந்தது (blitzkrieg - அதிரடி அல்லது செறிவடி எனத் தமிழில் கூறலாம்). எனவே, நாசிகளின் விமானத் தாக்குதலில் இருந்து நாட்டைக் காக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப் பட்டன. பிரிட்டனின் கரையோரங்களில் ரேடார் நிலையங்கள் அமைக்கப் பட்டன. றோயல் விமானப் படைக்கென புதிய விமானங்களை உற்பத்தி செய்வதற்கு தனியான ஒரு அமைச்சு உருவாக்கப் பட்டது - அதன் தலைவராக செயல்திறன் மிக்க ஒருவர் நியமிக்கப் பட்டு, ஆயிரக்கணக்கான புதிய தாக்குதல் விமானங்கள் சில மாதங்களிலேயே பாவனைக்கு வெளிவிடப் பட்டன. பிரிட்டனின் அந்தக் கால விமான இயந்திரவியல் தொழில்னுட்பத்திற்குச் சாட்சியாக ஹரிகேன் (Hurricane), ஸ்பிற்fயர் (Spitfire) ஆகிய சிறந்த சண்டை விமானங்கள் உருவாக்கப் பட்டன.

கடற்படையைப் பொறுத்தவரை, பிரிட்டனை விடப் பலம் வாய்ந்த கடற்படை பிரான்சிடம் இருந்தது, ஆனால் பிரான்ஸ் நாசிகளிடம் தோற்றால் அந்தக் கடற்படையே பிரிட்டனுக்கு ஆப்பாகும் என்பதையும் சேர்ச்சில் உணர்ந்திருந்தார். இதனாலேயே, பிரான்ஸ் சுதந்திரமாக இருக்க வேண்டிய அவசியத்தை அடிக்கடி பிரெஞ்சுத் தலைவர்களிடம் நினைவுறுத்தி வந்தார் சேர்ச்சில். 

 வீழ்ந்தது பிரான்ஸ்

இந்த இராணுவ நிலவரத்தை  மறுகரையில் இருந்த நாசிகளும் உணர்ந்திருந்தனர். எனவே, சேர்ச்சில் பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்ற அன்றே பிரான்சை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையையும் நாசிகள் ஆரம்பித்தனர். பிரெஞ்சுப் படைத்தலைமை தனது மஜினோ கோட்டின் வலிமையை சற்று அளவுக்கதிகமாகவே நம்பியிருந்தது. ஆனால், இந்த மஜினோ எல்லை என்பது ஒரு தொடரான காவலரண் சுவர் அல்ல. தெற்கே பிரான்ஸ் - இத்தாலி எல்லையில் ஆரம்பிக்கும் இந்தக் காவலரண்கள் நிறைந்த கற்பனைக் கோடு, சுவிஸ் எல்லையில் முடிவுற்று, பின்னர் ஜேர்மனியின் எல்லையோடு மீள ஆரம்பித்து, வடக்கில் பெல்ஜியத்தின் எல்லையோடு முடிவுறுகிறது. இந்த பெல்ஜியம்- பிரான்ஸ் எல்லையில் இருக்கும் ஆர்டென் காடுகள் (Ardennes forest) மிக அடர்த்தியான, நதிகளால் நிறைந்த ஒரு கன்னிக் காட்டுப் பிரதேசம். பிரெஞ்சுப் படைகளுக்கு, மஜினோ லைனைத் தாக்குவதாகப் பாசாங்கு காட்டிய நாசிகள், தங்கள் தாங்கிப் படையினரை இந்த ஆர்டென் காடுகளூடாக அனுப்பி பிரான்சின் வட கிழக்குப் பகுதியில் நுழைந்தார்கள். இது வரை எந்தப் படையாலும் ஊடுருவப் படாத ஆர்டென் காட்டினூடாக நாசிகள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பின்றி இருந்த பிரான்ஸ், பாரிய இழப்புகளுடன் அடுத்த ஒரு மாதத்தினுள் நாசி ஜேர்மனியிடம் சரணடைந்தது. 

 தற்போது பிரிட்டனின் நிலைஅபாயகரமானதாக மாறி விட்டது. நிச்சயம் பிரிட்டன் நாசிகளின் இலக்காக இருக்கும். "பிரெஞ்சுக் கடற்படையை தான் கைப்பற்றப் போவதில்லை" என ஹிற்லர் உத்தரவாதம் வழங்கியிருந்தாலும், அவ்வுறுதியின் நம்பகத் தன்மையை உலகம் அறிந்திருந்தது. எனவே, சேர்ச்சில், பிரான்சுக்கு வெளியே அதன் காலனிகளில் தரித்திருந்த பிரெஞ்சுக் கடற்படையினருக்கு மூன்று தெரிவுகளைக் கொடுத்தார். ஒன்று: பிரிட்டனுக்கு அல்லது பிரிட்டன் காலனிகளுள் ஒன்றுக்கு கப்பல்களோடு வந்து விடுங்கள், உங்களை இணைத்துக் கொள்கிறோம், இரண்டு: எங்களிடம் சரண்டையுங்கள், கப்பல்களை வைத்துக் கொண்டு உங்களை விட்டு விடுகிறோம், மூன்று: கரீபியன் தீவுகளுக்குச் சென்று அமெரிக்காவிடம் கப்பல்களை ஒப்படையுங்கள், அமெரிக்கா யுத்தம் முடியும் வரை கப்பல்களை வைத்திருக்கும்.

சில நாட்கள் அவகாசம் கொடுக்கப் பட்ட பிறகும் இந்த மூன்றில் ஒன்றுமே நடக்காமையால், பிரிட்டன் கடற்படை பிரெஞ்சுக் கடற்படையின் கப்பல்களைக் கைப்பற்றும் நடவடிக்கைளை எடுக்க ஆரம்பித்தது. இத்தகைய ஒரு நடவடிக்கையின் போது ஆயிரம் பிரெஞ்சுக் கடற்படையினர் அப்போது பிரெஞ்சுக் காலனியாக இருந்த மொரொக்கோவின் துறைமுகமொன்றில் பிரிட்டனின் தாக்குதலில் கொல்லப் பட்டனர்.       

இந்தக் காலப்பகுதியில், ஹிற்லரும் அவரது உள்வட்டத்தினரும் அடுத்த கட்ட நகர்வுகளைத் திட்டமிட ஆரம்பித்து விட்டிருந்தனர். ஹிற்லர் இன்னும் பிரிட்டனை ஆக்கிரமிக்கும் உத்தரவை வழங்கவில்லை. இதற்கு ஒரு காரணம் இருந்தது. அந்தக் காரணத்தை அடுத்த பாகத்தில் நாம் பார்க்கும் போது, ஏன் சேர்ச்சிலும், 1940 களில் வாழ்ந்த பிரிட்டன் மக்களும் உலகத்தை பேரழிவிலிருந்து காத்த புண்ணியவான்கள் என்பது புலப்படலாம்.

-தொடரும்..

  • கருத்துக்கள உறவுகள்

மிக ஆவலுடன் வாசிக்கின்றேன்..!

தொடருங்கள், ஜஸ்ரின்…!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, goshan_che said:

ஜப்பானியர்களும், ஆங்கிலேயரும் மட்டும் அல்ல, தெனமரிக்காவில் ஸ்பானியரும், கிழக்கிந்தியாவில் பிரான்ஸ், போச்சுகல், டச்சுகாரரும்…ஆபிரிக்காவில் பெல்ஜியம், ஜேர்மனியும், மத்திய ஆசியா, ஐரோபாவில், சொந்த மக்களின் மீதே ஸ்டாலினின் ரஸ்யர்களும் கொடூரத்தையே புரிந்தார்கள்.

ஆனால் நாஜிகள் மட்டும்தான் அதை யூதர் விடயத்தில் அங்கீகரிக்கப்பட்ட கொள்கை முழக்கமாக்கி செய்தார்கள்.

அத்தோடு அநீதி இழைக்கபட்ட இனமும் அதை மிக தெளிவாக தொடர்ந்தும் வலியுறுத்துகிறது.

இதனால்தான் நாஜிகள் தனியாக பேசப்படுகிறனர்.

ஏனைவர்கள் சுரண்டும் இனவாதிகளாக இருந்தார்கள். 

நாஜிகள் யூத இனத்தை சுவடின்றி அழிப்பதை கொள்கையாக்கி செயல்பட்ட இன தூய்மைவாதிகளாக இருந்தார்கள்.

இன்று அதே பாதிக்கப்பட்ட யூத இனம் பலஸ்தீனத்தில் என்ன செய்கின்றார்கள் என உங்களுக்கு தெரியுமா தெரியாதா?
ஹிட்லர் வருகைக்கு முன் யூதர்கள் ஜேர்மனியில் என்னென்ன அநியாய அக்கிரமங்கள் செய்தார்கள் என்பதும் உங்களுக்கு தெரியுமா தெரியாதா?

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

இன்று அதே பாதிக்கப்பட்ட யூத இனம் பலஸ்தீனத்தில் என்ன செய்கின்றார்கள் என உங்களுக்கு தெரியுமா தெரியாதா?
ஹிட்லர் வருகைக்கு முன் யூதர்கள் ஜேர்மனியில் என்னென்ன அநியாய அக்கிரமங்கள் செய்தார்கள் என்பதும் உங்களுக்கு தெரியுமா தெரியாதா?

வரலாறு என்றும் கறுப்பு வெள்ளையாக இல்லை. யூதர்களோ எந்த இனமுமோ 100% சுத்தமானவர்கள் இல்லை. 

அதே போல் ஒரு இனத்தின் மீதான நியாயமான விமர்சனம் அந்த இனத்தை வழித்து துடைக்கவேண்டும் என்ற கொள்கை முடிவுக்கு வரவைத்தது பிழையே.

பலஸ்தீனம் என்ற பெயரை விட பழையது இஸ்ரேல் என்ற நாடு.

ஆகவே இரெண்டு தேசங்கள் என்பதுதான் அங்கே நியாயமான முடிவு. அதை தீவிர சயனிஸ்டுகளும், ஹிஸ்பொல்லா, ஹமாசும் ஏற்றால் நாளைக்கே தீர்வு வரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 24/2/2023 at 11:09, ஈழப்பிரியன் said:

@Justin

எப்போது பார்தாலும் கிட்லரைப் பற்றியே பல பதிவுகள் வருகின்றன.

ஐரோப்பாவை எப்படி கிட்லர் வைத்திருந்தாரோ

அதே மாதிரி ஆசியாவை யப்பானும் வைத்திருந்தது என்கிறார்கள்.

ஆனாலும் யாரும் யப்பானைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.

ஒருவேளை அமெரிக்கா அணுகுண்டு போட்டதால் அவர்கள் பாவமெல்லாம் தீர்ந்துவிட்டதோ என்னவோ?

தொடருங்கள்.

ஜப்பான் வர இன்னும் மூன்று நான்கு பாகங்கள் இருக்கு. ஆனால், நுணாவும் கோசானும் சுட்டியது  போல, இம்பீரியல் ஜப்பான் இராணுவம் நாசிகளுக்கு சளைக்காத கொடூரர்களே!

11 hours ago, புங்கையூரன் said:

மிக ஆவலுடன் வாசிக்கின்றேன்..!

தொடருங்கள், ஜஸ்ரின்…!

நன்றி!

On 26/2/2023 at 05:18, கிருபன் said:

இந்த நவீன உலகிலும் இது நடக்கின்றது. வரலாற்றில் இருந்து மனித குலம் படிப்பினைகளைப் பெற்றுக்கொள்வதில்லை.

தொடர்ந்து முழுமையாக வாசிக்கின்றேன்.

நன்றிகள்! ஆம், அதனால் தான் இடையிடையே நாசிகளுக்குப் பிந்திய காலங்களையும் சுட்டிக் காட்டி எழுதுகிறேன். கேட்கச் செவியுள்ளவர் கேட்கட்டும்!😎

3 hours ago, குமாரசாமி said:

இன்று அதே பாதிக்கப்பட்ட யூத இனம் பலஸ்தீனத்தில் என்ன செய்கின்றார்கள் என உங்களுக்கு தெரியுமா தெரியாதா?
ஹிட்லர் வருகைக்கு முன் யூதர்கள் ஜேர்மனியில் என்னென்ன அநியாய அக்கிரமங்கள் செய்தார்கள் என்பதும் உங்களுக்கு தெரியுமா தெரியாதா?

நான் வாசித்த வரலாற்றின் படி, பேர்லின் உட்பட்ட ஐரோப்பிய நகரங்களில் வர்த்தகம், கலை, விஞ்ஞானம், அரசியல் என எல்லப் பரப்புகளிலும் வெற்றிகரமாக வாழ்ந்தது தான் ஐரோப்பிய யூதர்கள் செய்த "அக்கிரமம்"! 😂. அந்தக் காலத்தில்  கள்ள மட்டை போடுதல், களவாக வேலை, போன்ற "அக்கிரமங்கள்" கூட இருந்திருக்கவில்லை! நீங்கள் என்ன அறிந்து கொண்டீர்கள் என்று சொன்னால் அறிந்து கொள்கிறோம்! 

 

20 hours ago, சுவைப்பிரியன் said:

போட்டுக் கொடுக்கிற பழக்கம் என்டு இதைத்தான் சொல்லுறது 😀.நீங்கள் தொடருங்கள் ஜஸ்ரின் தொடர்ந்து வாசிக்க ஆவல்.

நன்றி!

 

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் நன்றாக போகிறது, தொடருங்கள்...........!  👍

ஒரே மூச்சில் 3, 4 பாகங்களை வாசித்து விட்டேன்.

பொதுவாக எனக்கு வரலாறு பிடித்தமான ஒன்று அல்ல. வரலாறு சார்ந்த புனைவு நாவல்களைக் கூட விரும்பி வாசிப்பதில்லை. ஆயினும், ஜஸ்ரினது எழுத்து நடையும், அவர் சொல்ல வரும் மையக் கருத்தை (இன்றைய ரஷ்யா - உக்ரைன் ஆக்கிரமிப்பு தொடர்பான) நோக்கிய துல்லியமான நகர்வும் வாசிப்பை சுவாரசியமாக்கியுள்ளன.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, Justin said:

நான் வாசித்த வரலாற்றின் படி, பேர்லின் உட்பட்ட ஐரோப்பிய நகரங்களில் வர்த்தகம், கலை, விஞ்ஞானம், அரசியல் என எல்லப் பரப்புகளிலும் வெற்றிகரமாக வாழ்ந்தது தான் ஐரோப்பிய யூதர்கள் செய்த "அக்கிரமம்"! 😂. அந்தக் காலத்தில்  கள்ள மட்டை போடுதல், களவாக வேலை, போன்ற "அக்கிரமங்கள்" கூட இருந்திருக்கவில்லை! நீங்கள் என்ன அறிந்து கொண்டீர்கள் என்று சொன்னால் அறிந்து கொள்கிறோம்! 

அகில அக்கிரமங்கள் தெரிந்த தங்களுக்கு தொப்பியுடனான பின்னல் தலைமுடியினரின்  அக்கால அக்கிரமங்களும் நிச்சயம்  தெரிந்திருக்க வேண்டும்.இல்லையேல் தேடி வாசியுங்கள். அதனுடன் ஜேர்மனிய மக்கள் ஏன் ஹிட்லரை தேர்ந்தெடுத்தார்கள் என்பதனையும் அறிய முயலுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

அகில அக்கிரமங்கள் தெரிந்த தங்களுக்கு தொப்பியுடனான பின்னல் தலைமுடியினரின்  அக்கால அக்கிரமங்களும் நிச்சயம்  தெரிந்திருக்க வேண்டும்.இல்லையேல் தேடி வாசியுங்கள். அதனுடன் ஜேர்மனிய மக்கள் ஏன் ஹிட்லரை தேர்ந்தெடுத்தார்கள் என்பதனையும் அறிய முயலுங்கள்.

நீங்கள் வாசித்து விட்டுத் தான் கருத்து சொல்கிறீர்களென தவறாக நினைத்து விட்டேன்😂.

ஹிற்லரின் கூட்டை ஏன் ஜேர்மனியர்கள் தேர்ந்தார்களென முதல் பாகத்திலேயே எழுதியாகி விட்டது (அதே போல இனப்படுகொலையாளர் குடும்பமான பக்ஷக்களை ஏன் சிங்களவர்கள் தேர்ந்தார்களென நீங்களும் தேடிப் பார்த்து அதன் பின்னாலுள்ள நியாயங்களையும் புரிந்து கொள்வீர்களென நம்புகிறேன், அப்படியா?😎 )

ஜேர்மனிய யூதர்கள் ஹிற்லருக்கு முன்னர் செய்த அக்கிரமங்களை நீங்கள் தான் சொல்ல வேண்டும்! ஏனெனில் ஒழுங்கான ஒரு வரலாற்று நூலிலும், ஆவணத்திலும் யூதர் செய்த அக்கிரமங்களைக் காணவில்லை. நீங்கள் பார்க்கும் சதிக் கோட்பாட்டு வீடியோக்களில் மட்டுமே அவை இருக்கின்றன என நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நிழலி said:

ஒரே மூச்சில் 3, 4 பாகங்களை வாசித்து விட்டேன்.

பொதுவாக எனக்கு வரலாறு பிடித்தமான ஒன்று அல்ல. வரலாறு சார்ந்த புனைவு நாவல்களைக் கூட விரும்பி வாசிப்பதில்லை. ஆயினும், ஜஸ்ரினது எழுத்து நடையும், அவர் சொல்ல வரும் மையக் கருத்தை (இன்றைய ரஷ்யா - உக்ரைன் ஆக்கிரமிப்பு தொடர்பான) நோக்கிய துல்லியமான நகர்வும் வாசிப்பை சுவாரசியமாக்கியுள்ளன.

 

நன்றி, இணைந்திருங்கள். வரலாற்றை கதை போல (ஆனால் புனைவல்லாத உண்மைகளை வைத்து) எழுதி வாசகர்களை ஈர்க்கும்  இருவர் எரிக் லார்சனும் (Erik Larson), பில் ஒ றைலியும் (Bill O'Reilly) . இவர்களுள் எரிக் லார்சன் எனக்குப் பிடித்த எழுத்தாளர்.

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.