Jump to content

வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு... 06.10.2023 அன்று காலமானார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1134498.jpg

தமிழர்களின் கடல்சார் தொன்மையை வெளிகொணர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு மறைவு.

சென்னை: கடலியல் தமிழ்சார் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார். அவருக்கு வயது 60. திருச்சி உறையூரில் பிறந்த இவரின் உண்மையான பெயர் சிவ பாலசுப்ரமணியன். பல ஆண்டுகள் ஒரிசாவில் பணிபுரிந்ததால் ஒரிசா பாலு என அழைக்கப்பட்டார். தமிழர்களின் கடல்சார் தொன்மை தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்ட இவர், தமிழர் வரலாற்றின் மரபுசார் அறிவை நவீன தொழில்நுட்பங்கள் மூலமாக வெளிக்கொண்டு வந்தார். ஆமைகள் மூலம் நீரோட்டத்தை அறிந்து, பழங்கால தமிழர்கள் கடற்பயணம் மேற்கொண்டதை கண்டறிந்தவர் இவர்தான்.

மேலும், குமரிக்கண்டம், கடலில் மூழ்கிய பூம்புகார் உள்ளிட்ட கடல் சார்ந்த ஆய்வுகளில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானதாக அறியப்படுகிறது. இதனிடையே, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அதற்கான சிகிச்சை பெற்றுவந்தார். இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவு வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“பண்டைய கால தமிழர்களின் கடல் அறிவை உலகுக்கு வெளிப்படுத்திய கடல்வழி ஆராய்ச்சியாளரும், தமிழ்சார் ஆய்வாளருமான ஒரிசா பாலு, உலக வரலாற்றில் தமிழர்களின் மதிப்பை உயர்த்துவதற்காக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். அவரது மறைவு பேரிழப்பு” என சமூக வலைதளங்களிலும் அஞ்சலிக் குறிப்புகள் பகிரப்பட்டு வருகின்றன.

கடந்த 2020-ல் பெரும்பாக்கம் அரசு கல்லூரியில் ஒரிசா பாலு பேசியதன் சிறிய தொகுப்பு: "தமிழர்கள் பண்டைக் காலம் தொட்டே நாகரிக வளர்ச்சி அடைந்தவர்கள். தங்களது வணிகத்தின் மூலமாகவும் படையெடுப்புகளின் வாயிலாகவும் பல நாடுகளுக்குப் பரவி இருக்கிறார்கள். அங்கெல்லாம் தமிழ் அடையாளத்தை பதித்திருக்கிறார்கள். அந்த வகையில் பல சுவடுகள் நமக்கு கிடைத்திருக்கின்றன. குறிப்பாக, உலகின் பல நாடுகளில் பல ஊர்ப் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக உள்ளன. பல பழங்குடி இனங்கள் பண்டைய தமிழ்ச் சொற்களை அப்படியே பயில்கிறார்கள்.

நாம் மறந்து போன சங்ககால சொற்களை அவர்கள் இன்னமும் பயன்படுத்துகிறார்கள். பண்டைத் தமிழரின் கடல் அறிவு என்பது மிகவும் வியக்கத்தக்கது. பல்வேறு வகையான கப்பல்களை பண்டைக் காலம் தொட்டே தமிழர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். கடலின் நீரோட்டம் அறிந்து கலங்களை செலுத்தி இருக்கிறார்கள். கடல்வாழ் உயிரினமான ஆமைகள் கண்டம் விட்டு கண்டம் இடம்பெயரும் வழித்தடங்களை அறிந்து கடல் பயணத்துக்காக அந்த தடங்களை பயன்படுத்தி இருக்கக்கூடும் என்று தெரியவருகிறது. ஆழ்கடலில் நான் பல இடங்களில் ஆய்வு செய்து இருக்கிறேன்.

தரையில் இருக்கும் பண்டைய தமிழரின் சுவடுகளைவிட கடலில் தமிழர்களின் சுவடுகள் அதிகமாக இருக்கக்கூடும். அவற்றை இன்னும் விரிவாக ஆய்வு செய்து வெளிக்கொணர வேண்டும். நமது மரபுச் செல்வங்களை மீட்டெடுக்க வேண்டும்."

https://www.hindutamil.in/news/tamilnadu/1134498-historian-orisa-balu-passes-away-1.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரிசா பாலு

Orissa Balu: கடல்சார் தமிழரின் நம்பிக்கை ஒளி - ஒரிசா பாலுவின் கதை!

தமிழரின் தொன்மையான வரலாறு தொடர்பாக விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு தமிழர் வரலாற்றின் மரபுசார் அறிவை நவீன தொல்லியல் நுட்பங்கள் மூலமாக வெளிக்கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.

"திரை கடலோடி திரவியம் தேடு" என்ற ஔவையின் வாக்கு தமிழர்கள் மத்தியில் எந்த அளவு நிலைப்பெற்று இருந்தது என்பதனை தன் வாழ்நாள் முழுவதும் ஆராய்ந்து செயல்பட்ட ஒரிசா பாலு, தன்னுடைய திரவிய தேடல் பயணத்தை முடித்துக் கொண்டு விண்ணுலகை அடைந்துள்ளார்.

1963-ம் ஆண்டு திருச்சி உறையூரில் பிறந்த இவர் கடலியல் தமிழரின் தொன்மையான வரலாறு தொடர்பாக விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு தமிழர் வரலாற்றின் மரபுசார் அறிவை நவீன தொல்லியல் நுட்பங்கள் மூலமாக வெளிக்கொண்டு வருவதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். குமரிக்கண்டம் கடலில் மூழ்கிய பூம்புகார் உள்ளிட்ட கடல் சார்ந்த ஆய்வுகளில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானது. தமிழர் வரலாற்றை புவியியலை அடிப்படையாகக் கொண்டு நவீன தொல்லியல் நுட்பங்களையும் பண்டைய மரபுசார் அறிவை பின்புலமாகக் கொண்டும் ஆய்வு செய்தவர்.

ஒரிசா பாலு

1989-ம் ஆண்டு ஒரிசாவின் கலாசாரத்தைத் தீர ஆராய்ச்சி செய்ததால் இவர் ஒரிசா பாலு என்று அழைக்கப்பட்டார். கடல் வழியாகத் தமிழர்கள் பயணம் செய்ததை அறியப் பல நாடுகளுக்குப் பயணம் செய்து அங்கு இருக்கும் தமிழர்களுடன் உரையாடி தனது ஆய்வினை தொடர்ந்த இவர், "சிந்து நாகரிகம், கிரேக்க நாகரிகம், சீன நாகரிகம் எகிப்து நாகரிகம் என எல்லாவற்றிலும் தமிழருடைய ஊடுருவல் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். கொரியாவைப் பார்க்கும் போது கொரிய மொழியில் 4000 சொற்கள் தமிழிலிருந்து எடுக்கப்பட்டதாக இருக்கிறது. இது மட்டுமில்லாமல் சீனா, பர்மா, தாய்லாந்து, மலேசியா என வெகுவான மரபுகளில் தமிழர்களுடைய மரபு கலந்திருக்கிறது.

கிரேக்க இலக்கியத்தைப் பார்த்தால் பாண்டியன் என்ற ஒரு அரசன் வாழ்ந்திருக்கிறான் என்பது தெரிய வருகிறது. சீனாவில் இன்றளவும் பாண்டியன் என்ற பெயர் கொண்ட ஊர்கள் இருப்பதை அறிகிறோம்" என்று தமிழர்கள் சார்ந்து நமக்குத் தெரியாத பல செய்திகளைத் தனது ஆய்வுகளின் மூலம் முன்னிறுத்தி இருக்கிறார். கடல் ஆமைகளின் இடப்பெயர்வை அடிப்படையாகக் கொண்டு அதனைத் தமிழ் மாலுமிகளின் பயன்பாட்டிலிருந்த நுட்பமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். கடலில் ஆயிரக்கணக்கான மைல்கள் இடம்பெயர்ந்த பிறகும் ஆமை தனது சொந்த தரைக்குத் திரும்பும் திறன் கொண்டது, அவை கடலில் நீந்தாமல் கடல் நீரோட்டங்களில் மிதக்கின்றன.

ஒரிசா பாலு

இதே போலத் தான் மாலுமிகளும் தாங்கள் எங்குச் சென்றிருந்தாலும் தங்கள் இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கும் யுத்தியைப் பெற்றிருக்கின்றனர் என்று தனது ஒரு ஆய்வின் வழி நிலை நிறுத்தியிருக்கிறார். தற்போதைய காலத்தில் நிலையான வாழ்க்கைக்கு வரலாற்று உண்மைகளைப் பயன்படுத்துவதே எனது எண்ணம் என்று பேட்டி ஒன்றில் இவர் கூறியிருக்கச் சென்னையில் ஒருங்கிணைந்த கடல் கலாசார ஆராய்ச்சி மையம் என்ற அறக்கட்டளையையும் நடத்தி வந்திருக்கிறார். இதில் 72 கடல் சார்ந்த துறைகளைச் சேர்ந்தவர்கள் பல்வேறு விஷயங்களில் ஆராய்ச்சி செய்ய, கடல் பொறியாளர்கள் மற்றும் கப்பல் கட்டுபவர்கள் முதல் மீனவர்கள் வரை எனக் கடலின் பங்குதாரர்களுக்கு இடையே ஒரு இணைப்பை உருவாக்கிச் செயல்பட்டு வந்திருக்கிறார்.

கடலார் என்ற மீனவர்கள் சார்ந்த மாத இதழுக்கு ஆலோசகராக பணிபுரிந்த இவர் மீன் வளம், பாய்மரக் கப்பல், நீர்மூழ்கிகள், மானுடவியல், விலங்கு மற்றும் தாவரம், கடல் சார் தொல்லியல், வரலாறு, பண்பாடுகள், ஆமைகள் பற்றிய ஆய்வு, பாறை ஓவியங்கள், இயற்கை சார்ந்த புவி சுழற்சி தொடர்பாகச் செய்தி குழுமம், கடல் சார் குழுமம் மற்றும் ஏனைய அமைப்புகளில் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். மேலும் தனது ஆய்வுகளின் தொடர்ச்சியாய் கீழடி போலத் தமிழகத்தில் இன்னும் பல்வேறு இடங்கள் அகழாய்வு செய்யப்பட்ட வேண்டியுள்ளது என்று வலியுறுத்திச் சென்றிருக்கிறார். 

ஒரிசா பாலு
 
கடந்த ஓராண்டுக் காலமாக வாய்ப் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் பேசவே முடியாத நிலையிலிருந்து கடைசியாகச் சென்னை குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வர எதிர்பாராத விதமாக நேற்று உயிரிழந்துள்ளார். 
 
வரலாற்றாசிரியர், ஆய்வாளர், விஞ்ஞானி, எழுத்தாளர் எனத் தனது வாழ்வில் பல பரிமாணங்களைத் தமிழிற்காகவே தொட்டிருந்த ஒரிசா பாலு இன்று நம்முடன் இல்லை. தமிழ் ஆராய்ச்சி உலகத்திற்கு இது மிகவும் பெரியதொரு இழப்பே!

https://www.vikatan.com/science/history/an-article-about-tamil-historian-orissa-balu

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ப்பாட்டம் இல்லாத நல்லதொரு தமிழ் ஆய்வாளரை தமிழினம் இழந்து நிற்கின்றது.
ஆழ்ந்த அனுதாபங்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!

அமைதியாக உறங்குங்கள் அய்யா.

Link to comment
Share on other sites

இவரது மரணச்சடங்கின் காணொளி ஒன்றைப் பார்த்தேன். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்குத்தான் ஆட்கள் வந்திருந்தனர். இதுவே ஒரு நடிகரின் மரணச்சடங்காக இருந்திருந்தால்... என ஒப்பிட்டு பார்த்தேன்.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரிசா பாலு

ஒரிசா பாலு என்ற பெயரில் அறியப்படும் சிவ பாலசுப்பிரமணி (7 ஏப்ரல் 1963 – 6 அக்டோபர் 2023) தமிழக ஆய்வாளர். தமிழ் தொன்மையை உலகளவில் கடல் வழியாகத் தேடி வந்தவர்.[1]

 

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சிவ பாலசுப்பிரமணி திருச்சி உறையூரில் பிறந்தவர். பின் தமிழகத்தின் விழுப்புரம், புதுவை, நெய்வேலி, சென்னை போன்ற இடங்களில் வளர்ந்து இயற்பியலில் தேர்ச்சி பெற்றார். சுரங்கம் மற்றும் வெளிநாட்டுக் கருவிகளை பழுது பார்க்கும் வேலைகள் தொடர்பான பொறியியல் துறையில் பல ஆண்டுகள் ஒரிசாவில் பணிபுரிந்து, இந்தியா முழுவதும் சுற்றி வந்தவர்.

பணி[தொகு]

ஆர். ஏ. ஆர். என்ற பன்னாட்டு நிறுவனத்தில் உயிரி மருந்தியல் மற்றும் மாற்று எரிபொருள் துறையில் இயக்குநராக பணிபுரிந்து வந்தார். ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நடுவத்தை நடத்தி வந்தார். ஒரிசாவில் கனிம வளக் கண்டுபிடிப்பு ஆய்விற்காக ஆஸ்திரேலிய புவி இயற்பியல் நிறுவனத்தின் செய்மதிகளின் உதவியுடன் விமான மூலமான ஆய்வுகளில் தேர்ச்சி பெற்று அந்த ஆய்வுகளைக் கள ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யும் குழுவில் பணி புரிந்தவர். தமிழர்களின் கடல்சார்தொன்மை தொடர்பான ஆய்வுகளை தொடர்ந்து செய்து வந்தார். ஒரிசா புவனேசுவர தமிழ் சங்கத்தில் துவக்க உறுப்பினராகச் சேர்ந்து, பல பொறுப்புகளில் இருந்து 2002-2003 ஆண்டுகளில் செயலர் ஆகப் பணியாற்றி, தமிழர்களை ஒரிசாவில் ஒருங்கிணைத்தார். அவர்களை உலக ஏனைய தமிழ் மக்களோடு நெருங்கி பழக வைத்தார். உலக தமிழ் அமைப்புகளை ஒன்று சேர்க்க ஆர்வம் காட்டி வந்தார்.

கலிங்க தமிழ் தொடர்புகள், தமிழ் - கலிங்க தென் கோசல, ஒட்டர தொடர்பான தமிழியல் ஆய்வுகளை மேற்கொண்டார்.

அதே போல் இனப்பெருக்கத்திற்கு தமிழக, ஒரிசா கடற்கரைகளுக்கு வரும் கடல் ஆமைகள் தொடர்பான இடங்கள் பிற்காலத்தில் துறைமுகங்களாக மாற்றப்பட்டதையும், ஆமைகள் தம் கடற்கரைகளை தேடி கடல் நீரோட்டத்தில் வரும் வழிகளை பின்பற்றியே தமிழ் கடலோடிகள் உலகம் முழுவதையும் வலம் வந்தனர் என்ற ஆய்வுக் கருத்தையும் முன்வைத்தார். ஆமைகள் தொடர்பான இடங்கள் நான்கு ஆயிரத்திற்கு மேற்பட்டு தமிழ் பெயராலேயே விளங்குவதை ஆய்வுகள் செய்து உறுதி செய்து வந்தார். அந்த இடங்களில் தமிழ் மொழி மற்றும் பண்பாடுகள் இன்றும் இருப்பதை நிருபித்து வந்தார்.[2] கடலோடிகளை, மீனவர்களை பாய் மரத்தில் மீன்பிடிப்பவர்களாக மட்டும் பார்க்காமல் கடல் சுற்று சூழல் அறிவு பெற்றவர்களாக பார்த்தார். கடல் வள மேலாண்மையின் உலக நடப்புகளை மீனவர்களுக்கு பயிற்சி தந்து வந்தார்.

தமிழர்கள் கடல் சார் மரபு மற்றும் சுற்றுச் சூழலை காக்க வேண்டி, தமிழகம் முழுவதும் காணொளி காட்சிகள் நடத்தியும், முகநூல் மூலமாகவும் விழிப்புணர்வு செய்து வந்தார்.

கடலார் என்ற மீனவர்கள் சார்ந்த மாத இதழுக்கு ஆலோசகராக பணிபுரிந்தார். மீன் வளம், பாய்மரக் கப்பல், நீர்மூழ்கிகள், மானுடவியல், விலங்கு மற்றும் தாவரம், கடல் சார் தொல்லியல், வரலாறு, பண்பாடுகள், ஆமைகள் பற்றிய ஆய்வு, பாறை ஓவியங்கள், இயற்கை சார்ந்த புவி சுழற்சி தொடர்பாக செய்மதி குழுமம், கடல் சார் குழுமம் மற்றும் ஏனைய அமைப்புகளில் உறுப்பினராக இருந்தார். இறுதிக் காலத்தில் சென்னையில் வசித்து வந்த இவர் ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நடுவத்தை துவங்கி உலக மக்களுக்கு தமிழருடைய தீபகற்ப கடல் சார் மேலாண்மை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த இயங்கி வந்தார். 500 இடங்களுக்கு மேலாக சொற்பொழிவுகள் ஆற்றி இருக்கிறார்.

குமரிக்கண்டம் நோக்கிய ஆய்வு[தொகு]

குமரிக்கண்டம் மற்றும் லெமூரியா கடல் ஆய்வுகளில் ஈடுபட்டார். அதன் தொடர்ச்சியாக மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் கடலில் மக்கள் வாழ்ந்த நில பகுதிகள் என்று செய்மதி, நவீன கடல் சார் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் கடலில் கள ஆய்வு செய்து லெமுரியா குமரிகண்டம், கடல் கொண்ட தென்னாடு, தென் புலத்தார் போன்ற கருதுகோள்களை தமிழ் இலக்கியம் சொன்ன கடல்கோள்கள் செய்திகளின் மூலம் ஒப்பிட்டு கடலில் ஆய்வுகள் பல செய்து வந்தார்.

https://ta.wikipedia.org/wiki/ஒரிசா_பாலு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

இவரது மரணச்சடங்கின் காணொளி ஒன்றைப் பார்த்தேன். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்குத்தான் ஆட்கள் வந்திருந்தனர். இதுவே ஒரு நடிகரின் மரணச்சடங்காக இருந்திருந்தால்... என ஒப்பிட்டு பார்த்தேன்.

நாங்கள் ஊரில் தமிழ் பண்டிதர்மாரையே மதிக்காதவர்கள்...🤣  தமிழ் தமிழ் என கத்தினால் தமிழனே மதிக்காத உலகில் வாழ்த்து கொண்டிருக்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழார்வலருக்கு அஞ்சலிகள்!

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.