இரானை எளிதாக வீழ்த்த முடியாதது ஏன்?
பட மூலாதாரம்,Getty Images
கட்டுரை தகவல்
லூயிஸ் பார்ருச்சோ
பிபிசி உலக சேவை
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
கடந்த 1979-ஆம் ஆண்டு புரட்சி, இரானின் ஆட்சியாளர்களை அதிகாரத்திற்குக் கொண்டு வந்து நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், அவர்கள் இப்போது தங்களுடைய மிக மோசமான தருணத்தை எதிர்கொள்கின்றனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு வான்வழித் தாக்குதல்களில் அதிஉயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி மற்றும் பிற உயர்மட்ட ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டனர். மேலும் முக்கிய உள்கட்டமைப்புகளும் சேதமடைந்தன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுமே ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகச் சமிக்ஞை அளித்துள்ளன. மேலும் இரானியர்கள் தங்கள் ஆட்சியை தூக்கியெறியுமாறு இருநாடுகளும் வலியுறுத்துகின்றன.
ஆயினும், இரானின் ஆட்சியானது நீடித்திருக்கக்கூடிய மற்றும் எளிதில் வீழ்த்தப்பட முடியாத ஓர் அதிகாரக் கட்டமைப்பைத் திட்டமிட்டு உருவாக்கியுள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் அதன் வலிமைக்கு என்ன காரணம்? மத்திய கிழக்கின் பிற நாடுகளில் இருந்து அது எவ்வாறு வேறுபடுகிறது?
பட மூலாதாரம்,Morteza Nikoubazl/NurPhoto via Getty Images
படக்குறிப்பு,மொஜ்தபா காமனெயி, தனது தந்தையின் கடுமையான ஆட்சியைத் தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'அழிக்க முடியாத அமைப்பு '
இரானின் முடியாட்சியை வீழ்த்தியதில் இருந்து, இஸ்லாமியக் குடியரசு அதிர்ச்சிகளைத் தாங்கி நீடித்து நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஓர் அரசியல் அமைப்பைப் படிப்படியாகக் கட்டியெழுப்பியுள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இறுக்கமாகக் கட்டுப்படுத்தப்பட்ட நிறுவனங்கள், கருத்தியல் போதனைகள், தலைமைகளின் ஒற்றுமை மற்றும் சிதறிக் கிடக்கும் எதிர்க்கட்சிகள் ஆகியவை இதற்கு காரணமாகும்.
"இது அழிக்க முடியாத அமைப்பு. நீங்கள் ஒரு தலையை வெட்டினால் புதிய தலைகள் மீண்டும் வளரும்," என்கிறார் பெல்ஜியத்தில் உள்ள ஐரோப்பிய உலக அரசியல் நிறுவனத்தின் மத்திய கிழக்கு ஆய்வாளர் செபாஸ்டியன் பூசோயிஸ்.
ஞாயிற்றுக்கிழமையன்று, அலி காமனெயியின் மகன் மொஜ்தபா காமனெயி, அவரது தந்தை கொல்லப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் இரான் அதிஉயர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் தனது தந்தையின் தீவிரமான மற்றும் கடுமையான ஆட்சியைத் தொடருவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
பட மூலாதாரம்,Majid Asgaripour/WANA (West Asia News Agency) via REUTERS
'பன்முனை சர்வாதிகாரம்'
துனிசியா, எகிப்து மற்றும் சிரியா போன்ற பிற நாடுகளில் தலைவர்கள் தூக்கியெறியப்பட்டதைப் போலல்லாமல், இரான் அதன் கருத்தியல் ரீதியிலான பாதுகாப்பு கட்டமைப்பின் காரணமாக அழுத்தங்களை சிறப்பாக எதிர்கொள்ள முடிந்தது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இரான் ஒரு தனி நபரை மையமாகக் கொண்ட ஒரு பொதுவான சர்வாதிகாரத்தின் கீழ் இயங்குவதற்குப் பதிலாக, ஒரு 'பன்முனை சர்வாதிகாரத்தைக்' கொண்டுள்ளது.
இது ''அரசியல் இஸ்லாத்தின் ஆதரவாளர்களுக்கும் தீவிர இரானிய தேசியவாதத்திற்கும் இடையிலான ஒரு கூட்டணி" என்கிறார் டெஹ்ரானை சேர்ந்த இரானுக்கான பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் பெர்னார்ட் ஹூர்கேட்.
மதகுருமார்களின் அமைப்புகள், ஆயுதப் படைகள் மற்றும் முக்கிய பொருளாதார அமைப்புகள் எனப் பல மையங்களில் அதிகாரம் பரவிக் கிடக்கிறது.
ஒற்றைத் தலைமை கொண்ட சர்வாதிகாரத்தை விட இந்த அமைப்பை வீழ்த்துவதை இது மிகவும் கடினமாக்குகிறது.
சட்டங்களை நிராகரிக்கும் அதிகாரம், தேர்தலுக்கான வேட்பாளர்களை ஆய்வு செய்ய அதிகாரம் கொண்ட பாதுகாவலர்கள் சபை போன்ற பிற அமைப்புகளுக்கு அதிகாரம் உள்ளது.
இது, எந்தவொரு தனிப் பிரிவினரும் அரசுக்கு ஒரு தீவிர சவாலை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.
இரான் எதேச்சதிகார ஆட்சி முறை கொண்ட நாடாக பரவலாகக் கருதப்பட்டாலும், அது இரானியர்களுக்கு அதிபர் தேர்வு உள்ளிட்ட சில தேர்தல்களில் வாக்களிப்பதற்கான அடையாளப்பூர்வ வாய்ப்பை வழங்குகிறது.
இருப்பினும், இந்த செயல்முறை மிகவும் இறுக்கமாக நிர்வகிக்கப்படுகிறது. இஸ்லாமியக் குடியரசின் மீதான அர்ப்பணிப்பு உள்ளிட்ட அளவுகோல்களின் அடிப்படையில் பாதுகாவலர்கள் சபையால் வேட்பாளர்கள் ஆய்வு செய்யப்படுகிறார்கள்.
பட மூலாதாரம்,NurPhoto via Getty Images
புரட்சிகர காவல்படையின் மையப் பங்கு
அரசு நிறுவனங்கள் இந்த ஆட்சிமுறையின் அடிப்படை அமைப்புகளாகச் செயல்படுகின்றன என்றால், பாதுகாப்புப் படைகள் அதன் வலிமையாகக் கருதப்படுகின்றன.
வழக்கமான ராணுவத்துடன் இணைந்து செயல்படும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, பெரும்பாலும் "ஆட்சியின் முதுகெலும்பாக" கருதப்படுகிறது என்று ஹூர்கேட் கூறுகிறார்.
தனது ராணுவப் பங்கிற்கு அப்பாற்பட்டு, இது ஒரு அரசியல் மற்றும் பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ளது.
முக்கியமாக, தொடர்ச்சியான அமைதியற்ற சூழ்நிலைகளின் போதும் பாதுகாப்புப் படைகள் ஒற்றுமையாகவே இருந்துள்ளன. இந்த விசுவாசத்தை கருத்தியலுடன் பூசோயிஸ் தொடர்புபடுத்துகிறார்.
"ஷியாக்கள் [இஸ்லாத்தின் இரண்டு முக்கிய பிரிவுகளில் ஒன்றைப் பின்பற்றுபவர்கள்] மற்றும் ஹமாஸ், ஹெஸ்பொலா போன்ற குழுக்களிடையே காணும் இந்த தியாக கலாசாரம், வாழ்வின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது," என்று அவர் கூறுகிறார்.
தொடர்ச்சியையும் உறுதி செய்வதற்காக ஒவ்வொரு இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தளபதிக்கும் அடுத்து வரக்கூடிய மாற்று தளபதிகள் தயாராக இருப்பதாக இரானின் பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் ரெசா தலையினிக் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்தார்.
இரானின் பரவலாக்கப்பட்ட இந்த கட்டமைப்பு, 2003-இல் அமெரிக்க தலைமையிலான கூட்டணிப் படைகளின் படையெடுப்பின்போது இராக் படைகள் சரிந்ததிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களால் உருவானது என்று 'அணுசக்தி இரானுக்கு எதிராக ஒன்றுகூடல்' அமைப்பின் காவல்படை ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவர் கஸ்ரா ஆராபி கூறுகிறார்.
மேலும், இந்த ஆட்சி நீடித்தால், "காவல்படையினர் இன்னும் முக்கியமான பங்கைக் கொண்டிருப்பார்கள்." என்று அவர் கருதுகிறார்.
பட மூலாதாரம்,Morteza Nikoubazl/NurPhoto via Getty Images
படக்குறிப்பு,இரானின் அதிகாரக் கட்டமைப்பு, அந்த ஆட்சிமுறை தொடர்ச்சியான பல அதிர்ச்சிகளைத் தாங்கி நிற்பதற்கு வழிவகுத்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஆதரவு வலையமைப்புகள் மற்றும் உயரடுக்கு ஒற்றுமை
இரான் பொருளாதாரத்தின் பெரும்பகுதிகள் 'போனியாட்ஸ்' போன்ற அரசுடன் தொடர்புடைய அமைப்புகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
இவை பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான நிறுவனங்களைச் சொந்தமாகக் கொண்ட அறக்கட்டளைகளாக உருவெடுத்துள்ளன.
இந்த வலைப்பின்னல்கள் ஆட்சிக்கு விசுவாசமாக இருக்கும் பிரிவினருக்கு வேலைகளையும் ஒப்பந்தங்களையும் வழங்குகின்றன.
காதம் அல்-அன்பியா கூட்டு நிறுவனம் உள்ளிட்ட இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் வணிக சாம்ராஜ்யம், இந்த வணிக "ஆதரவு" முறையை வலுப்படுத்துகிறது.
மேற்கத்திய நாடுகளின் தடைகள் இரானின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதித்துள்ள போதிலும், இந்த வலைப்பின்னல்கள் முக்கிய உயரடுக்கினரைப் பாதுகாக்கவும், இந்த ஆட்சிமுறை நீடிப்பதில் அவர்களுக்குள்ள பங்கினை உறுதிப்படுத்தவும் உதவுகின்றன என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த அமைப்பு "மிகவும் உறுதியானது, இதில் பிளவுகள் ஏற்பட்டு வெளியேறுபவர்களை நாம் காண்பதே இல்லை," என்று பூசோயிஸ் கூறுகிறார்.
சித்தாந்தமும் புரட்சியின் மரபும்
அதிகாரத்தைத் தக்கவைப்பதில் மதமும் ஒரு வலிமையான பங்கினை வகிக்கிறது.
இரான் புரட்சியானது மத, அரசியல் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஒரு நிலையான வலைப்பின்னலை உருவாக்கியது. இது இன்றும் அரசின் உலகளாவிய பார்வையை வடிவமைத்து வருகின்றது.
"கருத்தியல், அதிகாரத்துவ மற்றும் நிர்வாக ரீதியான இந்த மிகப்பழமையான, மிகவும் சக்திவாய்ந்த கட்டமைப்பு இந்த அமைப்பை வலுவாக்குகிறது," என்று கூறும் பூசோயிஸ், இந்தக் கருத்தியலானது "ஒற்றுமை, தொழில்முறை அர்ப்பணிப்பு மற்றும் ஆள்சேர்ப்புக்கான உண்மையான ஆதாரமாகச் செயல்படுகிறது," என்றும் குறிப்பிடுகிறார்.
பட மூலாதாரம்,KHOSHIRAN/Middle East Images/AFP via Getty Images
பிளவுபட்ட எதிர்க்கட்சி
வரலாற்று ரீதியாக, இரானின் எதிர்க்கட்சிகள் பிளவுபட்டு காணப்படுகின்றன.
அவற்றில் சீர்திருத்தவாதிகள், முடியாட்சி ஆதரவாளர்கள், இடதுசாரி குழுக்கள், இரானின் தேசிய எதிர்ப்பு கவுன்சில் போன்ற புலம்பெயர்ந்தோர் இயக்கங்கள் மற்றும் பல்வேறு இன அமைப்புகள் அடங்கும்.
இந்த பிளவு நீண்டகாலமாக நிலவி வருவதாக பிரிட்டனைச் சேர்ந்த ஐரோப்பிய வெளிநாட்டு உறவுகள் கவுன்சில் என்ற சிந்தனைக் குழுவின் மூத்த கொள்கை ஆய்வாளர் எல்லி கெரன்மயே கூறுகிறார்.
புரட்சிக்குப் பிறகு, அரசியல் கட்சிகளை உருவாக்குவது குறித்த விவாதம் ஓரங்கட்டப்பட்டது என்றும் 1980-இல் துவங்கி எட்டு ஆண்டுகள் நீடித்த இராக் உடனான போர் ஒரு காரணமாக கூறப்பட்டது என்றும் அவர் கூறுகிறார்.
பல்வேறு காலகட்டங்களில் மிதவாத பிரிவினர் ஆட்சி அதிகாரத்தாலும் கடும்போக்காளர்களாலும் "ஒதுக்கப்பட்டனர், இழிவுபடுத்தப்பட்டனர் அல்லது சிறையில் அடைக்கப்பட்டனர்," என்று கெரன்மயே விளக்குகிறார்.
கடந்த காலங்களில் 2009-ஆம் ஆண்டின் கிரீன் மூவ்மெண்ட் மற்றும் 2022-இல் மஹ்சா அமினியின் மரணத்தால் வெடித்த போராட்டங்கள் என ஆட்சிக்கு எதிராகப் பெரிய அளவிலான போராட்ட இயக்கங்கள் தோன்றின.
ஆனால் அந்தப் போராட்டங்களுக்கு ஒரு மையத் தலைமை இல்லை, மேலும் அவை அரசின் கடுமையான ஒடுக்குமுறையை எதிர்கொண்டன.
இருப்பினும், இந்த ஆண்டு இறுதியில் துவங்கிய சமீபத்திய போராட்ட அலைகள், மறைந்த ஷா மன்னரின் வெளிநாட்டில் வாழும் மகனின் "உலகளாவிய செயல்பாட்டு தினத்திற்கான" அழைப்பைத் தொடர்ந்து நிகழ்ந்தன.
இரான் இந்த பிராந்தியத்திலேயே மிகவும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளில் ஒன்றைக் கொண்டுள்ளது. தொடர்ந்து இணைய முடக்கம் செய்தல், செயற்கை நுண்ணறிவு மூலம் கண்காணித்தல் மற்றும் வெளிநாடுகளில் உள்ள செயல்பாட்டாளர்களைக் குறிவைக்கும் இணையப் பிரிவுகள் ஆகியவற்றையும் அது இயக்குகிறது.
பட மூலாதாரம்,Getty Images
எச்சரிக்கை என்ன?
ஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கில் அமெரிக்கத் தலைமையிலான தலையீடுகளின் விளைவுகளைக் கண்ட பிறகு, பல ஆண்டுகளாக பல இரானியர்கள் ஆட்சி மாற்றத்திற்காக அழுத்தம் கொடுக்கத் தயங்கினர் என்று கெரன்மயே கூறுகிறார்.
மேலும், அரபு எழுச்சிகளின் பின்விளைவுகள் இந்த எச்சரிக்கை உணர்வை மேலும் ஆழப்படுத்தியதாகவும் அவர் கூறுகிறார்.
ஆனால், வேலை வாய்ப்பு முதல் சுத்தமான குடிநீர் வரை அடிப்படைத் தேவைகளைக் கூட அரசால் இனி வழங்க முடியாது என்றும், அதே சமயம் எதிர்ப்பை ஒடுக்க மிருகத்தனமான சக்தியைப் பயன்படுத்துவதாகவும் பல இரானியர்கள் கருதுவதால், இப்போது இந்த கணக்கீடு மாறியுள்ளதாக அவர் கூறுகிறார்.
புதியதாக உருவான போராட்ட அலைக்கு எதிராக ஜனவரியில் நடைபெற்ற கடுமையான அடக்குமுறையும், நாட்டில் இதுவரை காணப்பட்ட மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்றாக இருந்த அந்த ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதும், இந்த மாற்றத்தை மேலும் வேகப்படுத்தியது என்று அவர் கூறுகிறார்.
உயர் கல்வி கற்றவர்கள், உலகளாவிய தொடர்புகளைக் கொண்டவர்கள் மற்றும் சமூக ஊடகங்களால் ஈர்க்கப்பட்ட இளைய தலைமுறை இரானியர்கள், இந்த ஆட்சிமுறையை "ஊழல் நிறைந்தது, ஒடுக்குமுறையானது மற்றும் தங்கள் கனவுகளுக்கு தொடர்பற்றது" என்று கருதி நிராகரிக்கிறார்கள் என்று அவர் குறிப்பிடுகிறார்.
பட மூலாதாரம்,EPA
படக்குறிப்பு,அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்கள் இரானின் முக்கிய உள்கட்டமைப்பு தளங்களைக் குறிவைத்துள்ளன.
'ஒவ்வொரு ஆட்சியும் இறுதியில் முடிவடைகிறது'
மக்கள் திரள் போராட்டம், ஆளும் உயரடுக்கினரிடையே பிளவு மற்றும் பாதுகாப்புப் படைகளின் விலகல் ஆகிய மூன்று நிலைகளும் ஒன்றிணையும் போதுதான் சர்வாதிகார ஆட்சிகள் வீழ்ச்சியடையும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த காலங்களில், இரான் பெரும்பாலும் முதல் நிலையை அனுபவித்துள்ளது, ஆனால் மற்ற இரண்டையும் சந்திக்கவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இஸ்லாமியக் குடியரசின் முடிவு தவிர்க்க முடியாதது, ஆனால் அது உடனடியானது அல்ல என்று ஹூர்கேட் கருதுகிறார்.
"ஒவ்வொரு ஆட்சிமுறையும் இறுதியில் முடிவுக்கு வரும். உண்மையான கேள்வி அதன் காலம்தான்." என்று கூறும் அவர், காமனெயியின் மரணம் இந்த ஆட்சிமுறைக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவு என்று குறிப்பிடுகிறார்.
"அவரைப் போன்ற ஒருவர் இனி இருக்க மாட்டார். அவருக்குப் பின் வருபவருக்கு காமனெயிக்கு இருந்த அதிகாரம் ஒருபோதும் இருக்காது" என்கிறார்.
ஆனால் இஸ்லாமியக் குடியரசின் வீழ்ச்சி என்பது உறுதிப்படுத்த முடியாத ஒன்று என பூசோயிஸ் கூறுகிறார்.
ஒருவேளை அது நிகழ்ந்து, அதற்கு வெளிநாட்டு ராணுவத் தலையீடு காரணமாக இருந்தால், அதன் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கலாம் என்று அவர் விளக்குகிறார்.
முன்னாள் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா சிறைபிடித்தது போன்ற ஒரு "சரியான சூழலே" இரானுக்கும் அமையும் என்று டிரம்ப் முன்பு நியூயார்க் டைம்ஸிடம் கூறியிருந்தார்.
ஆனால், இதற்கு நேர்மாறாக "வடகொரியா அல்லது கியூபாவில் இருப்பது போல ஆட்சி மேலும் வலுவடையலாம்.'' என்கிறார் பூசோயிஸ்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/c78xg6l52v7o
By
ஏராளன் ·
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.