Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts
  2. Justin

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    7053
    Posts
  3. மெசொபொத்தேமியா சுமேரியர்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    8557
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    7
    Points
    46793
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/18/24 in Posts

  1. சிலர் "கடந்து போ, பேசாமல் போ, மறையும்" என்கின்றனர் - இதெல்லாம் கடந்து போன காலங்கள் இருந்தன. இவர்களின் தியரி சரியானால் இப்போது சாதி ஒரு பொருட்டில்லாமல் போயிருக்க வேண்டும், அப்படியா போய் விட்டது? இல்லையல்லவா? ஜே.பி.சி மெசின் தேர் முதல் (2023 இல்) தீவகத்தின் அதிபர் பதவி வரை சாதி மீண்டும் மூர்க்கமாக எழும்பி நடமாடுகிறதல்லவா? பிறகேன் இந்த இத்துப் போன "வைக்கோல் போருக்குள் மறைச்சு விட்டால், எல்லாம் கிளீனாகி விடும்" என்ற வாதம் இன்னும் தொடர்கிறதெனத் தெரியவில்லை. எனவே, வெளிப்படையாகப் பேசும் துணிவில்லாதவர்கள், பேசத் துணிந்தவர்களையாவது நையாண்டி செய்யாமல் மௌனமாக இருங்கள் - உங்கள் மௌனம் சில நேரங்களில் சாதி வாதத்தை ஒழிக்க உதவலாம்!
  2. நான் இந்தியா செல்வது இது ஐந்தாவது தடவை. முதல் தடவை சென்றது என் பதினைந்தாவது வயதில் என் அம்மா மற்றும் தம்பியுடன். இணுவிலில் இருந்த சண்முகலிங்கம் என்பவர் ஆட்களை குழுவாக இந்தியாவின் பல தலங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் கூட்டிச் செல்பவர். அந்தமுறை என் அம்மா கற்பித்த ஆரம்பப் பள்ளியின் ஆசிரியர்கள் சேர்ந்து ஒரு பத்துப்பேர் சேர்ந்து இந்தியச் சுற்றுலாவுக்குத் திட்டமிட்டிருந்தனர். என் வயதின் காரணமாக என்னைத் தனியே விட்டுச் செல்ல என் அம்மா விரும்பவில்லை. அதனால் எனக்கு அடித்தது அதிட்டம். எனக்குப் பின் பிறந்த ஒரு தம்பியையும் இரு தங்கைகளையும் அம்மாவின் பெற்றோர் சகோதரிகளுடன் விட்டுவிட்டு ஆறே வயதான என் கடைக் குட்டித் தம்பியையும் எம்மோடு அழைத்து வந்திருந்தார். முதலில் ஊரில் இருந்து கிளம்பி தலை மன்னார் சென்று அங்கிருந்து கப்பலில் இராமேஸ்வரம் சென்று அங்கிருந்து தொடருந்தில் பயணம் எது பின்னர் எமக்காக ஒழுங்கு செய்திருந்த மகிழுந்தில் ஒவ்வொரு ஊராகச் சென்று மீண்டும் ஒரு மாதத்தின் பின்னர் ஊர் வந்து சேர்ந்தோம். முதலாவது அந்தக் கப்பல் பயணமே எனக்கு எத்தனையோ அனுபவங்களையும் மகிழ்ச்யையும் தந்தது என்றாலும் அதுபற்றி எழுதும் ஆர்வம் எனக்கு இதுவரை எழுந்ததில்லை. அதன் பின் பதினாறு ஆண்டுகளின் பின்னர் திருமணமாகி கணவர் பிள்ளைகளுடன் சென்றபோது என் தந்தையும் கணவரின் பெற்றோரும் எம்முடன் வந்தனர். அப்போது என் நண்பியின் தமக்கை போர் சூழல் காரணமாக இந்தியா சென்று அங்கு ஒரு சொந்த வீட்டையும் கட்டி மேல்மாடியில் உள்ள மூன்று அறைகளை இந்தியாவுக்கு வருபவர்களுக்கு வாடகைக்கு விடுவார். எமக்கும் அது பாதுகாப்பு என்று கருதியதால் நாமும் மகிழ்வாகவும் நிம்மதியுடனும் அங்கு இருக்க முடிந்தது. அடுத்த நாளே அவரிடம் கதைத்தபோது அவரே ஒரு டாடா சுமோ ஜீப் ஒன்றை எங்களுக்காக ஒழுங்குசெய்து தந்தார். ஒருமாதம் மீண்டும் கோவில்கள் அரண்மனைகள் முக்கிய இடங்கள் என்று அதில் திரிந்தபோதும் பார்த்த இடங்களை மீண்டும் பார்த்தபோதும் எனக்குச் சலிக்கவில்லை. ஆனால் ஜீப்புக்கு செலுத்திய தொகைதான் தலைசுற்ற வைத்தது. ஆனாலும் அதுபற்றி என் கணவரைத் தவிர யாரும் கவலைப்படவில்லை. ஆனாலும் மீண்டும் இனி இந்தியா போவதே இல்லை என்று என் கணவர் கூற எனக்கோ மீண்டும் போய் இந்தியா முழுவது திரிந்துவிட்டு வர வேண்டும் என்னும் அவா கூடியது. எல்லோரும் இருந்து இதுபற்றிக் கதைத்துக்கொண்டிருந்தபோது அந்த எம்மூர் அக்கா “நீர் இங்கை ஒரு பாங்க் ஏக்கவுண்ட் திறந்துபோட்டுப் போனால் வருஷா வருஷம் கொஞ்சக் காசை அனுப்பினால் உமக்கு ஊர் சூத்திப் பாக்க காசும் சேர்ந்திடும்” என்று சொல்ல எனக்கும் அது நல்ல யோசனையாகத் தெரிய ஒருவாறு கணவரை சம்மதிக்க வைத்து வங்கிக் கணக்கொன்றை எங்கள் இருவரின் பெயரிலும் திறந்தாச்சு. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு ஐநூறு டொச் மாக்குகள் மட்டும் அனுப்பி அதன்பின் 2001 இல் கணவரின் தம்பியின் திருமணத்துக்குச் சென்றபோது இன்னும் ஒரு ஆயிரம் என்று போட்டாலும் மனிசன் மட்டும் எங்கட நாடும் இல்லை. உன்ர விசர் கதையைக் கேட்டு எக்கவுண்டில காசைப் போட்டாச்சு. திரும்பக் கிடைக்குமோ இல்லையோ என்று எப்பவும் எதிர்மறையாக ஏச, கடைசிவரையும் போகாது என்று மனிசனுக்குக் கூறினாலும் எனக்கும் ஒரு வீதப் பயம் இருந்தது என்னவோ உண்மை. அதன்பின் 2014 இல் என் நூல் வெளியீட்டுக்குச் சென்றபோது மனிசன் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் கேளாமல் இன்னும் ஒரு இரண்டாயிரம் பவுண்சுகளையும் கொண்டுசென்று முன்னர் போட்டவைகள் எல்லாவற்றையும் சேர்த்து மூன்று ஆண்டுகள் நிரந்தர வாய்ப்பில் இட்டுவிட்டு வந்தாச்சு. மூன்று ஆண்டுகளின் பின்னர் தானாகவே புதுப்பிக்கப்படும். அப்போது உங்களுக்குக் கடிதம் மூலம் அறியத் தருவோம் என்றதுடன் சரி. எந்தக் கடிதமும் வரவில்லை. இப்ப மனிசன் எதுவும் சொல்லாமலே எனக்குப் பயம் எழ, வங்கி முகாமையாளருடன் தொலைபேசியில் கதைக்க அவரும் நீங்கள் பயம் கொள்ள வேண்டாம். உங்களுக்கு நான் மெயில் ஒன்று போடுகிறேன் என்று சொன்ன கையோடு அதுவும் வந்து சேர, அதன் பின்தான் எனக்கு நிம்மதி வந்தது. அது நடந்து படிக்கட்டு ஆண்டுகளாகியும் மீண்டும் இந்தியா செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. ஏனெனில் என் கணவருக்கு இந்தியா என்றாலே வேப்பங்காயாகவே இருந்ததும் பிள்ளைகள் கல்வி, திருமணம் என்னும் சுழலும் இந்தியாவைப் பற்றி நினைக்கவே நேரம் இல்லை என்றானது. கடந்த ஆண்டு நான் ஆறு மாதங்கள் இலங்கை சென்ற போது எனது சுவிஸில் இருக்கும் நண்பி ஒருத்தியும் நானும் உன்னுடன் வர ப்போகிறேன் என்றதும் உடனே எனக்கு அவளுடன் இந்தியா செல்ல வேண்டும் என்னும் அவா எழ அவளிடம் கேட்கிறேன். அவள் இதுவரை இந்தியா சென்றதில்லை. இனிச் செல்லும் ஆர்வமும் தனக்கு இல்லை என்று கூற சரி இலங்கையிலாவது இருவரும் சேர்ந்து திரிந்து இடங்கள் பார்க்கலாம் என்றதுடன் நான் எங்கெங்கு செல்லலாம் ஆவலுடன் பட்டியலிட்டயபடி காத்திருக்க, அவளோ கடைசி நேரத்தில் தான் தனிய இலங்கை வருவது தன் கணவருக்குப் பிடிக்கவில்லை என்று கூறி வாராமலே விட்டது வேறு கதை. இம்முறை என் வளவில் மேலதிக மரக்கன்றுகள், செடி கொடிகள் எல்லாம் வைப்பதற்கு ஏற்ற காலம் ஒக்டோபர் என்பதால் நான் விமானச்சீட்டு முதலே எடுத்து வைத்தபடி காத்திருக்க, வாங்கிய வீட்டையும் வளவையும் நான் வடிவாப் பார்க்கவே இல்லை. நானும் உன்னுடன் வாறன் என்று மனிசன் சொல்ல சரி என்று அவருக்கும் பயணச் சீட்டு எடுக்க வெளிக்கிட இப்ப நான் வர ஏலாது. டிசம்பர் அல்லது தை மாதம் போவம் என்று கூற நான் ஏற்கனவே ஒக்டோபருக்கு எடுத்திட்டனே என்கிறேன். பரவாயில்லை மாத்து என்று சொல்ல, டிசம்பரில் விலை ஆயிரம் தாண்டியது. சரி தை மாதம் போடுவோம் என்று இணையத்தில் தேடினால் எல்லா 23-30 kg மட்டுமே கொண்டுபோகலாம் என்று காட்ட 40kg பொதிகள் கொண்டுபோகக் கூடிய விமானம் எமிரேட்ஸ் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இரண்டும் தான். அதில் என் தேர்வு எமிரேட்ஸ் தான். ஏனெனில் உணவும் கவனிப்பும் நன்றாக இருக்கும் என நான் எண்ணினேன். எல்லாம் எதிர்மாறாக இருந்தது வேறுகதை. வரும்
  3. மணி(யம்)வீடு ——————— வந்து வரைபடம் கீறி வடிவாய்க் கட்டிய வசதியான வீடு ஹோலின் நடுவே குசினி குசினிக்கடுத்து குளியலறை பேசிய படியே பெரியறை எங்கோ சின்னறையானது நீரும் நெருப்பும் மேலும் கீழும் பாரும் இது பழுதாகலாம் யாருமொரு சாத்திரி பார்த்தால் பறவாயில்லை பக்கத்து வீட்டவர் பலமுறை சொன்னார் மூன்று கோடி முழுதாய் முடிந்ததாம் கடைசிமகன் பிரான்சும் கனடா மகளும் கடைமணியத்தார்க்கு கட்டிக்கொடுத்த வீடு குடிபூரல் என்று குடும்பத்தோடு வந்து கூத்தும் கும்மாளம் ஆறறை மேலே ஐந்தறை கீழே வேறறையிரண்டு வெளியில் போறறையெல்லாம் போக்கிடம் தொடுப்பு விளக்குகள் பற்றி விளக்கவே வேண்டாம் ஏறினால் எரியும் இறங்கினால் அணையும் கூறினால் என்ன? குழப்படி வீடு மாதங்கள் மூன்றாய் மகனும் மகளும் கீதங்கள் போட்டு கிடாயையும் போட்டு விருந்துகள் வைத்து மகிழ்ந்தது வீடு கழிந்தன நாட்கள் கடனைக்கட்ட கனடாவும் பிரான்சும் பறந்தன மீண்டும் விளக்குமில்லை விழாவுமில்லை மனையில் மணியம் தனியாய்ப்போனார் கூட்டித்துடைக்க ஆளில்லாமல் கூடைக்கதிரை ஒன்றுக்குள்ளே குசினி லைற்றின் சுவிச்சைத் தேடி களைத்து மனிசன் சோர்ந்து போனார் மூன்று கோடி முடிந்த வீடு முனிவீடாய் மாறிப் போச்சு மணியத்தாரின் தனிமைப்பரப்பு அறைகள் கணக்கில் அகலமாய்ப் போச்சு மணியம் உணர்ந்தார் Money யில் இல்லை மகிழ்ச்சியென்று. வாட்ஸ் அப்பில் வந்தது.
  4. காதல் கடை மண்ணெண்ணை, பெற்றோல் வித்தவனும் , சைக்கிள் வித்தவனும் முதலாளியா மாறின காலம் அது, அதே பவுசு மோட்டச் சைக்கிள் சைக்கிள் திருத்திற ஆக்களுக்கும் வந்திச்சுது. பவுண் வித்து பாண் வாங்கின நிலமை அப்ப . ஆசுபத்திரிக்கு போறதை கூட அடுத்த மாசம் தள்ளிப்போட்டிட்டு ஓடிறதுக்கு ரெடியா உடுப்பெல்லாம் கட்டி வைச்சிருந்த காலம். எல்லாருக்கும் அடிக்கடி அவசரத்துக்கு இடம்பெயர்ந்து ஓடிப்போக ஒரே போக்குவரத்து சைக்கிள் எண்ட படியால் மருந்துக்கடையிலும் பாக்க இருக்கிற ஒரே வாகனமான சைக்கிள் கடைக்கு உடன ஓடிப் போய் காட்டின நிலமை இருந்த நாட்கள் அவை. மோட்டச் சைக்கிள் பேருக்கு ஏத்த மாதிரி மோட்டுச் சைக்கிளாத்தான் இருக்கும்; ஒரு நாள் ஓடினா ஒரு கிழமை கராஜ்ஜில இருக்கும். ஆட்டிறைச்சிக்கடையில ஒண்டும் மிச்சம் இல்லாமல் காலில இருந்து தொங்கிற வால் வரை வித்து முடிக்கிற மாதிரி, சைக்கிள் கடையிலேம் கிழிஞ்ச ரயர் , நசிஞ்ச rim, அறுந்த chain எண்டு எல்லாம் சொல்லிற விலைக்கு “ விருப்பம் எண்டால் வாங்கு“ எண்டு வித்த நிலமை இருந்திச்சுது. திடீர் திடீரெண்டு இந்தா வெளிக்கிடிறன் எண்டு கோட்டையில இருந்து அடிக்கிற செல்லுக்கு ஆக்கள் கொஞ்சம் முதல் ஓட , பிறகு ஆசுபத்திரியும் இடம் பெயர , இனி இருக்ககேலாது எண்டு அதுக்குப் பின்னால நாங்களும் ஓடிப் போக வேண்டி இருந்தது. இதால சைக்கிள் கட்டாயம் தேவை எண்டதால ஆக்களிலும் பாக்க அதைக் கழுவித் துடைச்சு கவனமாப் பாக்க வேண்டி இருந்திச்சுது. அடிக்கடி அடிக்கிற செல்லுக்கு இப்பிடியே போக்கும் வரவுமாய் இருந்த படியா எப்பவும் ஓட ரெடியா சைக்கிளை வைச்சிருக்கிறனாங்கள். ஒயில் ஓடிக்காஞ்சு போன கறுத்த மண், எண்ணையில வழுக்கிற உடைஞ்சும் உடையாத சீமெந்து தரை, ஆண்டாண்டு காலமா தடீல தொங்கிற பழயை ரயர்கள், குமிச்சு அடுக்கின கறள் கட்டின rims, ஆணிகள் அடிச்ச பக்கீஸ்பெட்டீல தொங்கிற ஆறாம், எட்டாம் , பத்தாம் , பன்ரெண்டாம் சாவி , பழைய மரப் பெட்டீக்க குறடு ,சுத்தியல் ,ஸ்பனர் எண்டு கையால தொட்டாலே ஏற்பூசி போட வேண்டிய நிலைமையில கறள் கட்டின சாமாங்கள் , குறுக்கால வெட்டின பழைய பரல் ஒரு மாதமா மாத்தாத தண்ணியோட , ஓட்டு தீராந்தீல இருந்து தொங்கிற ரெட்டைப்பட்டுச் சைக்கிள் செயின் நுனியில வளைஞ்ச ரெண்டு கம்பி அதில முன்காலைத் தூக்கின குதிரை மாதிரி ஏத்தி விட்ட சைக்கிள், நிலத்தில விரிச்ச சாக்கில ; வால் பிளேட், கத்திரிக்கோல் , பாதி தேஞ்ச அரம், வடிவா வெட்டின வெவ்வேறு சைஸ் சதுர ரியூப் துண்டு , பினாட்டு மாதிரி கறுப்பா உருட்டின கொம்பவுண்ட் , பிங் கலர் சொலூசன் , ஒட்டுப் போட்டாப் பிறகு வல்கனைஸ் பண்ண (அவிக்கிறதுக்கு ) ஒரு செட்டப் இவ்வளவும் இருந்தால் இது சைக்கிள் கடை. கடையில ஒரு பெரிய bossம் மற்றது வேலை பழகிற சின்ன boss எண்டு ரெண்டு பேர் தான் இருப்பினம். கடை இப்பிடி இருக்கிறதால கடைக்காரரை சில்லறை ஆள் எண்டு நெக்கக்கூடாது. சில Senior citizens ன்டை கடைகள் இருக்கும் அவைகளுக்காக, என்ன அவை திறந்திருக்கிறதிலும் பாக்க பூட்டி இருக்கிறது தான் கூட. எங்களுக்க ஏத்த மாதிரி கடையைத் தான் தேடிப் போறது. எங்கடை வயதுக்காரர் ஆனால் அவை boss. நாங்கள்சைக்கிளை உருட்டிக் கொண்டு போய் கடையில விட எங்களைக் கண்டாலும் busy மாதிரி கவிட்டு வைச்ச பழைய wheel spoke க்குள்ள சில்லை வைச்சு பக்கிள் எடுக்கிறவங்கள் , காத்தடிக்கப் பொம்பிளைப் பிள்ளைகள் வந்தால் எழும்பி ஓடிப்போய் உடனயே கவனிப்பாங்கள் . கவனிப்பு சைக்கிளுக்கும் ஆளுக்கும் பலமாய் இருக்கும் . அடிக்கடி இந்த கதை நடக்கும்; “ என்ன கனநாளா காணேல்லை “ “ ஏன் சும்மா சும்மா வாறதே “ “அண்டைக்கு ஆரோ பெடியன் பின்னால வந்தான்” “ எனக்கு அப்பிடி ஒருத்தரும் இல்லை“ ( confirmation) காத்தடிச்சிட்டு ,பக்கத்தில நிண்ட சைக்கிளில இருந்து வால்கட்டையின்டை capபைக் கழற்றி பூட்டீட்டு “ இது இல்லாட்டி மண் போய் அடைச்சிடும் “ எண்டு சொல்லி, அதோட பிறேக்கையும் சரிபாத்திட்டு விட; “ எவ்வளவு” “சீ காசு வேணாம் , அடுத்த முறை பாப்பம் “ சொல்லாத thank you சிரிப்பை வாங்கிக் கொண்டு வந்து எங்களைக் கவனிக்காமல் திருப்பியும் buckle எடுக்கத் தொடங்குவாங்கள். இதை கவனிச்சும் இல்லாத மாதிரி, “ கழுவிப் பூட்டேக்க எதையும் மாத்திப் போடுவான்“ எண்டு அம்மா சொன்னதால, நாள் முழுக்க கடையிலயே இருந்து; லாபம் பாத்து சாமாங்களை வேண்டித் தாறம் எண்டு சொல்லி , ஒரு போத்தில் மண்ணெண்ணை , இருவது ரூவாக்கு கிறீஸ், ரெண்டு சைசில ஐம்பது சைக்கிள் போள்ஸ் எல்லாம் வாங்கிக் குடுத்து , கழட்டி வைக்கிறதை கவனமாப் பாத்துக் கொண்டிருந்து, கழுவிப்பூட்டிறவருக்கு கேக்காமலே ஒத்தாசையும் செய்தாத் தான் சைக்கிள் கெதியாக் கிடைக்கும். புதுசா வாங்கின சைக்கிள் ஆருக்கு நேந்ததோ தெரியேல்லை வாங்கி ஒரு வருசத்திலயே காணாமல் போக , ரெண்டு வருசமா பஸ்ஸில அலையவிட்டு வாங்கித்தந்தது தான் கழுவிப் பூட்டக் கொண்டந்த இந்தப் பழசு. இதாலயே பட்டப்பேரும் பழசு எண்டு வந்திச்சுது. நிண்டு கால் நோக இருக்க இடமில்லாமல் பெரிய கரியர் ஓட நிண்ட சைக்கிளை central ஸ்டாண்டில விட்டிட்டு அதில இருந்தபடி சாடயா கண்ணயர்ந்து விழப்பாக்க , “ தம்பி போய்ச்சாப்பிட்டிட்டு வாரும்” எண்டு சைக்கிள் கடைக்காரர் சொன்னார். ,“ இல்லை பரவாயில்லை இருந்து எடுத்துக்கொண்டே போறன்” எண்டு நம்பிக்கையில்லாமல் சொல்ல , அப்ப கொஞ்ச நேரம் இரும் நான் சாப்பிட்டிட்டு வாறன் எண்டு ஒரு மணிக்குப் போனவர் திருப்பி வர மூண்டு மணி ஆச்சிது. என்னை வைச்சு அடிக்கடி சின்னச்சின்ன வேலையும் வாங்கீட்டு பின்னேரம் வரை விடாக்கண்டனா என்னை சைக்கிள்கடைக் கொடாக்கண்டன் “ஆறு மணியாயீட்டுது இருட்டீட்டுது நாளைக்குப் பாப்பம் “ எண்டு சொல்லீட்டு சாமாங்களை உள்ள எடுத்து அடுக்க வேற வழியில்லாமல் வீட்டை போனன். ஒருமாதிரி அடுத்த நாள் சைக்கிளை எடுத்து உழக்கிக் கொண்டு போக செயின் கவரோட முட்டிற சத்தம் கேக்க ஒரு தட்டுத் தட்ட நிண்டிட்டுது சத்தம். எத்தினை சைக்கிள் ரோட்டில போனாலும் எங்கடை வேண்டிய ஆரும் சைக்கிளி்ல வாறதை தூரத்தில வரேக்கையே கண்டு பிடிக்கலாம். ஒவ்வொருத்தன்டை சைக்கிளுக்கும் ஒரு சத்தம் இருக்கும் வாறதை கண்டு பிடிக்க , மணி அடிக்கிற சத்தம் , பிரேக் பிடிக்கேக்க வாற சத்தம் , செயின் உரஞ்சிற சத்தம் எண்டு எல்லாச் சத்தங்களும் உதவி செய்யும் அதோட அவன் அரைக்குண்டீல ஓடிறானா, சீட் நுனீல இருந்து ஓடிறானா, காலை அகட்டி ஓடிறானா எண்டு ஓடிற ஸ்டைலிலேம் கண்டு பிடிக்கலாம். ரியூசன் வகுப்புகள் முடிஞ்சு பின்னேரம் எண்டால் பிரவுண் ரோட்டில குமரன் வீட்டு ஒழுங்கை முடக்கில சாத்தீட்டு நிக்க ஒவ்வொருத்தரா வருவாங்கள். வந்து வழமை போல அரட்டை தொடங்கும் . கடைசீல் நேற்றைக்க அடிச்ச செல் விண் கூவினதையும், யாரை யார் பாக்கிறாங்கள் எண்ட update ஓட கூட்டம் கலையும். ஒருநாள் இப்பிடித்தான் தேடிப்போனா குமரனைக் காணேல்லை. அவன் உங்களோட தானே வந்தவன் எண்டு அம்மா சொல்ல, “டேய் அவன் நேற்றைக்கு சேகரோட ஒளிஞ்சு ஒளிஞ்சு கதைச்சவன் ஒரு வேளை இயக்கத்துக்குப் போட்டானோ” எண்டு பிரகாஸ் கேக்க “விசரே உனக்கு இவனாவது போறதாவது , வா கபிலன் வீட்டை போய்ப் பாப்பம்” எண்டு நவாஸ் சொல்ல போய்ப்பாத்தால் அங்கையும் இல்லை. காணேல்லை எண்டு ரோடு ரோடாத் தேட, கலட்டீக்க புதுசாத் திறந்த சைக்கிள் கடையில காத்துப் போகாத tyreக்கு காத்து அடிச்சும் வந்தவனுக்கெல்லாம் அடிச்சு விட்டு சமூக சேவை செய்து கொண்டு நிண்டான். ஏனெண்டு கேக்க அண்டைக்கு ரோட்டால போகேக்க பாத்துச் சிரிச்ச பிள்ளை இந்த இடத்தில தான் எங்கேயோ இருக்குதாம் எண்டான். கடைசீல இண்டைக்கு காணேல்லை நாளைக்கு ஒருக்கா வந்து பாப்பம் எண்டு எங்களோட வந்தான். இவனுக்கு அவனுக்கு மட்டும் இல்லை எங்கள் எல்லாருக்கும் சுழற்றித் திரிஞ்ச காலத்தில ஒண்டிறதுக்கு எண்டு ஒரு சைக்கிள் கடை இருந்தது. முதலில அந்தப் பிள்ளை இருக்கிற ஏரியாவில ஒருத்தனை friend பிடிச்சு , அவனோட போய் அவளின்டை வீட்டிக்கு கிட்ட இருக்கிற சைக்கிள் கடைக்காரனை friend பிடிச்சு , பிறகு ரியூசன் கொப்பியோட வெளிக்கிட்டு நேராச் சைக்கிள் கடையில போய் இறங்கினதும் உண்டு. தப்பித்தவறி தெரிஞ்ச ஆக்கள் வந்து கேட்டால், சைக்கிள் காத்துப் போட்டுது எண்ட பொய்யோட சமாளிக்கலாம். கடைக்காரனிற்கும் காத்தடிச்சு விட , சாவியை எடுத்துத் தர எண்டு காசில்லாமல் உதவி செய்ய ஒருத்தன் கிடைக்கிறதால பேசாம இருந்திடுவான். அப்ப சைக்கிள் கடை தான் கன பேரின்டை காதலை develop பண்ண உதவி செய்யிற கடையா இருந்திச்சுது. இப்ப சைக்கிளும் குறைஞ்சு , சைக்கிள் கடையும் குறைஞ்ச படியால் இப்பத்தைப் பெடியள் என்ன செய்யிறாங்களோ தெரியேல்லை. Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்.
  5. ஒருவர் 40 கிலோ கொண்டு செல்லலாம் என்றதில் இருவருக்கும் 80 கிலோ அனுமதி. அதைவிட 7 கிலோ கையில் கொண்டுபோகலாம். இரு பெரிய சூட்கேஸ் முழுதும் அங்குள்ளவர்களுக்குக் கொடுப்பதற்கான ஆடைகள், சொக்களற், ஓட்ஸ், கப் சூப்பக்கற், பிஸ்கட் இப்படி கண்டதை எல்லாம் வாங்கி நிரப்பி அதிலும் கிலோ கூடி ஒரு நான்கு கிலோ சொக்ளற்றும் மடிக் கணனியும் மகளிடன் திரும்பக் கொடுத்து ஒருவாறு விமானத்தில் ஏறி அமர்ந்தாயிற்று. மிகப் பெரிய விமானத்துள் ஆயிரம் பேருக்கும் அதிகமாக இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். வலது பக்கமாக உணவு கொடுத்து முடிந்த பின் ஒரு மணி நேரத்தின் பின்னரே எமக்கான உணவு வந்து சேர்ந்தது. பக்கத்து இருக்கைக்கு உணவு வரும்போது வயிறும் மனமும் தயாரானாலும் உணவு வராத கடுப்பும் ஏமாற்றமும் சேர்ந்து இன்னும் பசியை அதிகரிக்க நன்றி கூடச் சொல்லாமல் உணவை வாங்கி உண்டு கோபத்தைக் குறைத்துக்கொண்டேன். முன்னர் எமிரேட்ஸின் கவனிப்பு மிகையாகவும் உணவும் தரமாக இருக்கும். இம்முறை மிகுந்த ஏமாற்றம்தான். இம்முறை எனது தம்பியும் எம்முடன் வந்திருந்தான். அவன் 39 ஆண்டுகளாக தாயகம் செல்லவில்லை. முன்னர் ஆனையிறவில் கைதாகி ஒருவாரம் சிறையில் இருந்தவன். தடைசெய்யப்பட்ட பட்டியலில் அப்பாவின் பெயர் போட்டபோது இலங்கை பாதுகாப்புப் பிரிவினரின் இணையத்தளத்தில் அவனும் நானும் லண்டனில் இருக்கிறோம் என்பது வரை பெயர் விபரங்களுடன் போட்டிருந்தார்கள். அதைப் பார்த்ததில் இருந்து அந்தப் பக்கமே போகமாட்டேன் என்று இருந்தவனை, நான் உன்னோடு வாறன். எது நடந்தாலும் நான் பார்த்துக் கொள்ளுவன் என்னும் நம்பிக்கையில் என்னோடு வந்திருந்தான். விமானத்தை விட்டு இறங்கி ஒன்லைன் விசாப் படிவத்தைக் காட்டி எனக்கும் கணவருக்கும் ஒருமாத விசா வழங்கியபின்னும் எமக்கு முன்னால் போனவனை நிறுத்திவைத்துவிட்டு உள்ளே ஒரு அறைக்கு அழைத்துப் போக நானும் கணவரும் சேர்ந்தே போக, எம்மை இருக்கச் சொல்லிவிட்டு தம்பியை மட்டும் அழைத்து அவனின் பாஸ்ட்டை திரும்பத்திரும்பப் பார்ப்பதும் வெளியே போவதும் வருவதுமாக இருக்க, எதனால் பிந்துகிறது என்கிறேன். “இவர் 39 ஆண்டுகளாக இந்தப் பக்கம் வரவில்லை. இவரின் பழைய கடவுச்சீட்டு இருக்கிறதா” அது அவனிடம் இல்லை என்றாலும் வெளியே காட்டிக்கொள்ளாது “எதற்காக நாம் பழைய கடவுச் சீட்டை கொண்டுவரப் போகிறோம்” என்கிறேன். கணவர் காதுக்குள் கொஞ்சம் நைசா கதை என்கிறார். “அது இல்லாமல் இவர் எப்பிடி இந்த நாட்டை விட்டுப் போனார் என்று எங்களுக்குத் தெரியணும் இல்லையா. அதோட இத்தனைகாலம் ஏன் வரவில்லை” என்கிறார். உடனே நான் “எங்கள் குடும்பத்தவர் எல்லோருமே வெளிநாட்டில் தான். அதனால் தம்பி வரவில்லை. இம்முறை எமது ஊரையும் நாட்டையும் பார்க்கத்தான் வந்தவன்” என்கிறேன். “இந்த நாட்டை விட்டுப் போறவைக்கு இங்க பதிவிருக்கோணும்” “இதுக்கு முதல் நிறையப்பேர் பதிவே இல்லாமல் வந்திருக்கினமே” “அது முந்தி. இப்ப கட்டாயம் பதிவு இருக்கவேணும்” நான் எதுவும் பேசாமல் இருக்கிறேன். ஒரு ஐந்து நிமிடம் அவர் கணனியைப் பார்த்துக்கொண்டு இருக்க எனக்குப் பொறுமை போகிறது. “எங்களை அழைத்துப் போக வந்து வெளியே காத்துக்கொண்டிருக்கிறார்கள்” “இவரை நாங்கள் வடிவா விசாரிக்க வேணும். ஒரு ஐந்து ஆறு மணித்தியாலம் செல்லும்” “சரி என்ன செய்யலாம் சொல்லுங்கள்” நான் இறங்கிப் போய் கேட்கிறேன். அவமானமாக இருந்தாலும் வேறு வழி தெரியவில்லை. “கொஞ்சம் பொறுங்க” என்றுவிட்டு யாருக்கோ போன் செய்ய ஒருவன் வருகிறான். பார்த்தால் தமிழன் போல இருந்தாலும் ஆங்கிலத்தில் கதைக்கிறான். இதில யார் கூட கதைக்கிறது என்கிறான். என்னோடு கதையுங்கள் என்று நான் கூற “வாங்க” என்று தமிழில் சொல்ல நான் எழுந்து செல்கிறேன். அறைக்கு வெளியே வந்ததும் கொஞ்சம் பணம் கொடுத்தா எல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார் என்கிறான். நாங்கள் லீகலா விசா எடுத்துத்தானே வந்தது என்கிறேன். “எவ்வளவு வச்சிருக்கிறீங்க” என்கிறான். நாம் பணம் ஒன்றும் கொண்டுவரவில்லை. பாங்க் காட் தான் இருக்கு என்கிறேன். “ஒரு நாற்பது எடுத்துத் தாங்க” “எங்கே எடுப்பது? “நான் கூட்டீற்றுப் போறன்” நான் கணவரிடம் சென்று காட்டை எடுத்துக்கொண்டு வர, என்னைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று வெளியே இருக்கும் ATM இல் பணம் எடுத்தபின் உள்ளே அழைத்து வர அறைக்குள் போக முன்னரே பணத்தை வாங்கிக்கொண்டு உள்ளே சென்று அவரிடம் கூற அவர் உடனே தம்பியின் கடவுச் சீட்டை அவனிடம் கொடுக்க அவனே எம்மை அழைத்துச் சென்று தம்பிக்கு விசாவைக் குத்தி வெளியே விடுகிறான். கோபம் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையை எண்ணி மனதை அடக்கிக்கொண்டு வெளியே வர வேறு வழியில்லை என்று மனம் தெளிகிறது. எமக்காக வந்த வான் ஓட்டுனர் வெளியே காத்திருக்க மனம் நிம்மதியடைகிறது. போன இரண்டு நாட்களில் நெருங்கிய உறவினர்களிடம் சென்று பின் எமது வீட்டை சுற்றி கமரா பூட்டி, எனது செடிகளுக்கு சொட்டுநீர் பாசனக் குழாய்கள் பூட்டி முடிய ஒன்றரை வாரங்கள் போய்விட, அதன்பின்னர்தான் இந்தியா போனால் அந்த வங்கி அலுவலையும் ஒருக்காப் பார்க்கலாம் என்று நான் நினைவுபடுத்த, சரி நானும் வாறன். எனக்கும் சேர்த்து டிக்கற் போடு என்று மனிசன் சொல்ல எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகின்றது. பலாலியால் போவோமா என்று மனிசன் கேட்க, கொழும்பு போய் போவதே அதிக கிலோ கொண்டு வரலாம் என்கிறேன். பாலாலியால் போனவர்கள் உளவு இயந்திரத்தில் போனதுபோல் இருந்ததாகக் கூறியதும் ஒரு காரணம். அடுத்த நாளே விமானச் சீட்டுப் பெற்றுக்கொண்டதும் அடுத்த மூன்று நாட்களில் சென்னை செல்ல ஆயத்தம் ஆயாச்சு. ஒருவருக்கு போகவர 69 ஆயிரம் ரூபாய்கள். ஒன்லைனில் சென்னை T நகரில் ஒரு நாளுக்கு 3000 இந்திய ரூபாய்களுக்கு கோட்டல் புக் செய்து ஒருவாறு போய் இறங்கியாச்சு. அந்தக் கோட்டலுக்கு அண்மையில் சில உணவகங்களும் இருந்ததில் மூன்று நேரமும் மிகச் சுவையான உணவுகள் உண்டுவிட்டு கடைகளை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு ஒன்றுக்கு இரண்டு தேநீரும் குடித்துவிட்டு மனநிறைவுடன் இரவு ஏசியைப் போட்டுவிட்டுப் படுத்தால், சிறிது நேரத்தில் கால் கைகளில் கடி. மூட்டைப் பூச்சியாக்குமென்று துடித்துப் பதைத்து எழுந்தால் சில நுளம்புகள் பறக்கின்றன. இரவு பத்துமணி. இந்த நேரத்தில் எங்கே வேறு இடம் மாறுவது? ஏசியைக் கூட்டி விடுறன். உது மொத்தப் போர்வை தானே. இழுத்துப் போர்த்திக்கொண்டு படு என்கிறார் கணவர். பிரையாணக் களைப்பில் ஒருவாறு தூங்கி காலை எழுந்து பல் விளக்கக் குளியலறைக்குச் சென்றால் கண்ணாடியில் தெரிந்த என் முகத்தைப் பார்த்து நானே பயந்துவிட்டேன்.
  6. புரின் பெறுமதி தெரிந்த ஒரே அமைப்பு உலகில் நேட்டோ தான்!😎 70 ஆண்டுகளாக அயல் ஸ்கண்டினேவிய நாடுகளால் கூட இயலாமல் போன காரியத்தை செய்தவர் புரின் என்ற "ஸ்லீப்பர் ஏஜென்ற்": சுவீடனையும், பின்லாந்தையும் வெள்ளித் தட்டில் வைத்து நேட்டொவில் ஒப்படைத்தார்😂!
  7. மிகுதி 12 வீத வாக்குகளுக்கு என்ன நடந்தது, செல்லாதவை ஆகியிருக்குமோ....😀
  8. எனது மகளிடம் இத்தேர்தல் பற்றி கேட்டேன். தன்னுடன் படிக்கும் இரு ரசிய பிள்ளைகள் சொன்னார்களாம் அது தேர்தலே அல்ல வெறும் நாடகம் என்று.
  9. தாய் மொழி பேசுவது காலால் நடப்பது போல.... அடுத்த மொழி பேசுவது தலைகீழாக கையால் நடப்பது போல.....
  10. தம்பி நீ கனடாவோ? வருடங்கள் உருண்டு விட்டன வயது போகுமுன் வருவேன் ஊருக்கென்று வாக்குக் கொடுத்தேன் வந்து இறங்கியும் விட்டேன்… வடிவான ஊராகிவிட்டது நம்மூரு.. வலம் இடம் தெரியவில்லை… வடிவான வீடும் ஆட்களும் வசதியாக வாழும் நம் சனத்தையும் கண்டு வாய் நிறைந்த சிரிப்புடன் வணக்கமும் சொன்னேன்.. வந்தார் கந்தையா அண்ணர் வயதும் வட்டுக்கை போயிட்டுது வந்தவுடன் கேட்ட கேள்விதான் வயித்தை கலக்கிப் போட்டுது விசிட்டர் விசாவில் வந்த பேரப் பொடியன் கனடாவில் நிக்கிறான் கண்டனியோ… போத்தல் தண்ணி குடித்து தவண்டை அடித்த வாய்க்கு… கோயில் கிணத்தில் தண்ணி குடிக்கப் போக…. கைமண்டையில் தண்ணி ஊத்திய ஆச்சி கேட்டா.. ஆறுமுகத்தின்ரை மருமோன் விசிட்டர் விசாவிலை வந்தவர்…. வேலை கீலை ..செய்யிறாரோ…. பொட்டுக்கடை பொன்னையர் வீட்டடியால் போகையில் பொன்னற்றை…பூட்டப் பொடியனாம் தான் அண்ணை ..அண்ணை… அண்ணன் விசிட்டர் விசாவில் வந்தவர் வன்கூவரில்தான் ..இருக்கிறார்… அவர் எப்படி அண்ணை இருக்கிறார்.. பந்தடி வெட்டைக்குப் போகவும் பயமாக்கிடக்கு.. படிச்ச பள்ளிக்குடப் பக்கம் போகவும் கூச்சமாக் கிடக்கு பள்ளித் தோழரையும் காணப் போகவும் பயமாக்கிடக்கு.. பலகால ஆசை….சொந்தங்கள் பந்தங்கள் ….காணுகின்ற ஆசை கனடா விசிட்டர் விசாவால். பாதியில் முடிந்ததுவே… ஏனென்று…கேட்பியள் முப்பது வருசம் முந்தி வந்த என்னிடம்.. மூத்தவனின் பேரனைத்தெரியுமோ மருமோனைத் தெரியுமோ வன்கூவர் அண்ணனைத் தெரியுமோ என்றால் நான் என்ன சொல்லமுடியும்… தம்பி நீ கனடாவோ என்ற கேள்வி வருமுன்… பாதியில் பயணத்தை முடித்துவிட்டேன்..
  11. உஸ்ஸ்ஸ் எங்க அப்பா பெரிய வாத்தியார் அம்மா ரீச்சர் சின்னம்மா ரீச்சர் மாமனார் ரீச்சர் உறவினர்கள் பலர் ஆசிரியர்கள்
  12. விட்டு விடலாம் தான், விசுகர்..! ஆனால் மு. தளையசிங்கம் மாஸ்ரர் கிணத்தடியில் அடி வாங்கியதை நேரில் கண்டவன் என்ற முறையில், இப்படியானவைகளைக் கடந்து செல்ல மனம் விடுகுது இல்லை…!
  13. தம்பி பவனீசன், சாதீயம் என்பது கோழைகளினதும், துணிவில்லாத பலவீனமானவர்களினதும் கடைசி ஆயுதமாகும்...! நீங்கள் இதனைப் பகிர்ந்து கொண்டதே....உங்கள் தன்னம்பிக்கையைக் காட்டுகின்றது...! நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடருங்கள்..! நீங்கள் உங்கள் பயணத்தை நிறுத்தினால்...அதுவே சாதீயத்தின் வெற்ற்றியாகும்....!
  14. ஒரு கொய்யா மரத்தின் விவரம் ----------------------------------------------- நான்கு சிறு துளிர் இலைகளுடன் நிற்கும் போதே அது ஒரு கொய்யா மரம் என்று தெரிந்துவிட்டது. ஊரில் மரங்களோடும், நிலங்களோடும், கடலோடும் ஒட்டி ஒட்டியே வாழ்ந்ததால் கிடைத்த பயன் இது. மரங்களும், மண்ணும், கடலும் நன்கு பழகினவையாக, எது எது என்று தெரிந்தவையாக இருக்கின்றன. ஒரு சிசு போல பரிசுத்தமாக, எந்தப் பயமும் இல்லாமல் அது அங்கே நின்று கொண்டிருந்தது. ஒவ்வொரு பறவையும் ஐந்நூறு மரங்களை உண்டாக்குகின்றன என்று சொல்வர். ஒரு பறவையின் ஐநூறில் ஒன்று இது. முன்னும் பின்னும் கான்கிரீட் சூழ்ந்த ஒடுக்கமான ஒரு மண் கீலத்தில் பறவை ஒன்று போட்ட வித்தில் இருந்து முளைத்திருந்தது. எல்லாக் கொய்யா மரங்கள் போலவும் இதன் இலைகள் கூராக இல்லாமல், இதன் இலைகள் அகன்றதாக வந்து கொண்டிருந்தன. இளமரத்திலேயே பட்டைகள் உண்டாகி, அவை உரிந்து வீழ்ந்தன. அதனால் மரம் எப்போதும் வழுவழுப்பாக இருந்தது. அதன் காலம் வர, அது பூக்கத் தொடங்கியது. மற்றவை போலவே பூக்கள் வெள்ளையாகவே இருந்தாலும், ஓரிரு நாட்களிலேயே பூக்கள் கருகிப் போயின. பூக்களின் காம்புகள், கொஞ்சம் வித்தியாசமாக, சின்ன விரல் அளவு தடிப்பில் இருந்தன. சில மரங்கள் பூப்பதில்லை. சில மரங்கள் வெறுமனே பூக்கும், காய்க்காது. இந்த மரம் பூக்கும், காம்புகள் வரும், பின்னர் கருகி விடும், அவ்வளவுதானாக்கும் என்று விட்டுவிட்டேன். சில நாட்களின் பின் எதேச்சையாக அந்தப் பக்கம் எட்டிப் பார்த்தால் ஒவ்வொரு காம்பிலும் இரண்டு மூன்று காய்கள். நல்லையா மாஸ்டர் கீறும் வட்டங்கள் போல ஒழுங்கான உருவங்களில் நேர்த்தியான உருண்டையாகக் காய்த்திருந்தன. காய்கள் கடும் பச்சையிலிருந்து வெளிர் பச்சையாகி, பின்னர் இளமஞ்சளாகி, கடைசியில் கடும் மஞ்சள் ஆகின. பழத்தின் வாசம் வீடெங்கும் பரவியது. அங்குதான் பிரச்சனையும் ஆரம்பம் ஆகியது. ஒருவருக்கு வாசம் என்பது இன்னொருவருக்கு மணமாகவோ அல்லது நாற்றமாகவோ ஆகலாம். இங்கு ஆகியது. வேறு கொய்யா மரங்களும் வீட்டில் இருப்பதால் இந்த மரத்தை வெட்டி எறிவதென்ற முடிவு எடுக்கப்பட்டது. வீரம், விவேகம், அறம், தர்மம் என்று சதாகாலமும் படிப்பிக்கப்பட்டு, பலவீனமானவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்ற பாடப்புத்தக முடிவுடன் இருந்த என்னால், அதுவாகவே முளைத்து ஆளான அழகான ஒரு கொய்யா மரம் அநியாயமாக வெட்டப்படுவதை தடுக்க முடியவில்லை. ஆகக் குறைந்தது, அன்றைய முதல்வர் கருணாநிதி செய்தது போல ஒரு அடையாள உண்ணாவிரதம் கூட நான் இருக்கவில்லை. வெட்டினாலும் அடி மரத்திலிருந்தும், அதன் வேர்களிலிருந்தும் மீண்டும் மரம் முளைக்கும் என்று ஒரு கறுப்பு இரசாயனம் அதன் அடிக்கட்டை மேல் கவிழ்த்து ஊற்றப்பட்டது. பல வல்லுநர்கள் சேர்ந்து இந்த முடிவை எடுத்து நடைமுறைப்படுத்தினர். பின்னர் இந்த ஊரில் நான்கு வருடங்கள் மழையே இல்லை. எங்கும் புழுதி எழும்பிப் பறக்கும் நிலங்கள். இரசாயனம் ஊற்றா விட்டால் கூட, அந்த மரம் வெட்டிய பின் பிழைத்திருக்கும் என்று நான் நம்பவில்லை. ஐந்தாவது வருடம் சேர்த்து வைத்தது போல மழை கொட்டியது. ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வழிந்தன. புழுதி பறந்த நிலங்களை பச்சை புற்கள் மூடி வளர்ந்தன. மீண்டும் ஒரு நாள் எதேச்சையாக அந்தப் பக்கம் பார்த்தால், அதே அழகுடன், அகன்ற இலைகளுடன் அந்தக் கொய்யா மரம் மீண்டும் வளர்ந்து கொண்டிருந்தது. மொட்டும், பூவும் கூட இருந்தன. அருகே சென்றேன், 'நானும் தான் இங்கே வாழ்ந்து விட்டுப் போகின்றேனே' என்று சொல்வது போல அதன் சிறு கிளைகள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன.
  15. உச்ச அளவாம் வெப்ப உயர்வு.. 1.5 பாகை செல்சியஸ் தொட்டாச்சு 2040 இல் வர வேண்டியது 2023 இல் வந்தாச்சு.. பூமித் தாய்க்கும் அடிக்குது குலப்பன்.. யாருக்கென்ன கவலை..!! விண்ணில கொஞ்சம் வி(வீ)ணாகுது நிலவில கொஞ்சம் குப்பையாகுது உக்ரைனில் கொஞ்சம் உருகிப் போகுது காசாவில் கொஞ்சம் கரி(ரு)கிப் போகுது இப்படி யாகுது டொலர் கணக்கு யாருக்கென்ன கவலை..!! கார் ஓட்டமும் குறையல்ல காற்றில கலந்த அந்த சுவட்டுக் காபனும் குறையல்ல.. கக்கும் புகைக்கு வரிதான் வருகுது கரியமிலையின் அளவுக்கோ வீழ்ச்சியில்லை யாருக்கென்ன கவலை...!! மின்சாரத்தில் இயக்கினால் வரி விலக்கு என்டாங்கள் மின்சாரத்தை பெற இப்ப பாட்டரி கெமிக்கலுக்கு பற்றாக்குறையாம்... புதுக்கதையாய் கிண்டக் கிண்ட பாட்டரி கெமிக்கலால் பாழாகுதாம் பூமி யாருக்கென்ன கவலை..!! எங்கும் ஒரு கூட்டம் எதிலும் வியாபாரம் தனக்கு மட்டும் வேண்டும் இலாபம் இதையே சிந்தனையாக்கி இருப்பதால் பூமி தாய்க்கும் அடிக்குது குலப்பன் யாருக்கென்ன கவலை..!! எதிர்கால சந்ததியோ தொடுதிரையில் மயங்கிக் கிடக்குது 'ரீல்' விட்டே பழகிப் போனதால்.. தொடும் தூர ஆபத்துப் புரியவில்லை.. யாருக்கென்ன கவலை..!! இப்படியே போனால்.. பூமிக்கு அடிக்கும் அனல் குலப்பனில் அழியப் போவது மொத்த உயிர்களொடு தாமும் தான் மனிதப் பதர்களுக்கு புரியும் வேளை ஆபத்து வெள்ளம் அணை தாண்டி ஓடி இருக்கும்..! -------------------------------------- நெடுக்ஸ் (யாழுக்காக.. பூமி தாய் சார்ப்பாக) மாசி/2024.
  16. உண்மை. இந்திய மீனவர்கள் இலங்கை கரைக்கு வந்துவந்து களவு எடுப்பது தான் பிரச்சனை. தேவையில்லாமல் கச்சதீவை கொண்டுவந்து தமிழ்நாட்டுமக்களை ஏமாற்றி தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் பிரதமரும் அரசியல் செய்கின்றார்கள்
  17. கடந்த இரண்டு உலக யுத்தத்திலும் ஜேர்மனி - இத்தாலி - ஜப்பான்.. இவை எதிரிகளாகவும்.. அமெரிக்காவும் மிச்ச மேற்கும்.. நேச நாடுகளாகவும் இருந்தன. ரஷ்சியா அப்பவும் தனியாத்தான் சண்டை போட்டது. ஆனால் 3ம் உலகப் போரின் பரிமானம் வேறுபட்டதாக இருக்கும். ரஷ்சியாவோடு.. நேரடியாக நேட்டோ மோதினால்.. ரஷ்சியா.. கிழக்கு ஜேர்மனியில் நிற்காது.. பிரிட்டனிலும்.. அலஸ்கா வழியாக நியுயோர்க்கிலும் நிற்கும். ஏனெனில்.. கடந்த இரண்டு உலகப் போரின் போதும் அமெரிக்கா ரஷ்சியாவை எதிர்த்து சண்டை செய்யவில்லை. ஜேர்மனி தான் செய்தது. புட்டின் ஒரு உலகப் போருக்கு தானாகப் போகும் அளவுக்கு புத்திசாலித்தனமற்றவரல்ல.. ஆனால் போர் திணிக்கப்பட்டால் எதிர்கொள்வார். தேர்தலில் வெற்றி பெற்ற அதிபர் புட்டினுக்கு வாழ்த்துக்கள். ரஷ்சியாவின் பொருண்மிய வளர்ச்சி.. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி இவைகளே.. எதிரிகளுக்கு சரியான அடியாக இருக்கும். அதனை நோக்கி புட்டின் செயற்படுவார் என்று எதிர்பார்க்கலாம். சுவீடனும்.. பின்லாந்தும் ஏலவே அமெரிக்காவின் வால் தான். அது ஏலவே நேட்டோ ஆயுதங்களை தான் வைச்சிருக்கின்றன. இப்போ வெறும் பேப்பர்களில் கையெழுத்து போட்டிருக்கினம்..! அவ்வளவே. ஏலவே அவை நேட்டோ ஒத்துழைப்பு நாடுகள் தான்.
  18. புட்டினுக்கு உண்மையான ஆதரவாளர்கள் இருக்கிறார்களா?? இந்த யாழ் களத்தில், ஒருவர் கூட இல்லையே?? மேற்க்கையும் அமெரிக்காவையும். எதிர்கிறார்கள். ....அதாவது மேற்கின் அமெரிக்காவின் எதிரி. புட்டினை ஆதரித்து .. வேறு சிறந்த காரணிகள் இல்லை ....புட்டினிடமும் இல்லை அவர்கள் என்ன செய்ய முடியும்??? மேற்க்கையும் அமெரிக்காவையும். எதிர்க்க வேறு மார்க்கம் இல்லை .. ...அவர்களின் இருப்பிடம். ஒருபோதும் மாறாது உறுதியானது
  19. 😃 அன்னம் போன்ற அலகுடன் (வாய் ))
  20. நிச்சயமாக, கற்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால் சேகர் போன்றோரும் நல்லாகவே வந்திருப்பார்கள். சேகரை கிணற்றுகுள் தள்ளி விட்டது போல, நாங்கள் பலரும் வாழ்க்கையில் ஏதோ ஒரு தவறை நிதானம் இழந்து செய்து விட்டு, அந்தக் குற்ற உணர்வை வாழ்க்கை முழுவதும் உணர்ந்து, குறுகிக் கொண்டேயிருக்கின்றோம். எல்லாவற்றையும் விட பெரிய தண்டனை இது.
  21. இப்ப முகப் புத்தகமும், சமூக ஊடகங்களும் நேரடித் தொடர்பை ஏற்படுத்துவதால அவை தேவையில்லை.
  22. அதை அவர் கையிலை வைத்திருக்கிறார்...சொச்சக் கணக்கு கேட்டால் போட்டுக் காட்டுவார்..🙃
  23. 'இலங்கையின் முதல் மதம் இந்துமதமே. இந்து மதம் நிலைகொண்ட பின்னரே இலங்கைக்குள் பௌத்தம் கொண்டுவரப்பட்டது. இதுவே வரலாற்று உண்மை' என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித் துள்ளது கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு. 'வரலாற்றுக்கு முற்பட்ட இந்துமதம், எவ்வாறு பௌத்தத்தை ஆக்கிரமிக்க முடியும்?' என்றும் அந்த ஆணைக்குழு கேள்வியெழுப்பியுள்ளது. நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆல யத்தில், சிவராத்திரி வழிபாடுகளின்போது பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பில் கண்டனங்கள் நாளுக்குநாள் குவிந்துவரும் நிலையில், கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு விடுத் துள்ள கண்டனக் குறிப்பு தனித்துவமானது என்ப துடன், 'குன்றின் மேல் ஏற்றிவைத்த தீபம் போன்று' அமையவேண்டியதாகவும் இருக்கின்றது. ஒரு கத்தோலிக்க அமைப்பான, கத்தோலிக்க மறைமா வட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் இந்த அறிக்கையானது, மத சகிப்புத்தன்மையென்பது எவ்வாறு அமைய வேண்டும் என்பதை இலங்கைத் தீவுக்குக் காலக்கண்ணாடியாகவும் பறைசாற்றி நிற்கின்றது. முல்லைத்தீவு குருந்தூர்மலையாக இருக்கட்டும் அல்லது நெடுங்கேணி வெடுக்குநாறிமலையாக இருக்கட்டும் அல்லது கிழக்கிலுள்ள கேந்திரப்பகுதி களாக இருக்கட்டும், அங்கு மேற்கொள்ளப்படும் பௌத்த பேரினவாத அடக்குமுறைச் சிந்தனையின் பாற்பட்ட செயற்பாடுகள் வெறுமனே இந்து சம யத்துக்கு மட்டுமானவையல்ல. இந்த அடக்கு முறைகளை எதிர்கொள்ளும் மதமாக இந்து மதமும், இந்துக்களும் இருந்தாலும் இதை அனைத்துத் தமிழர்களுக்கும் எதிரான அடக்குமுறையாகவே கொள்ளவேண்டும். அது ஏன் என்பதைத்தான் வெளிப்படையாகவும் பட்டவர்த்தனமாகவும் பேசியிருக்கின்றது கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு.காணாமலாக்கப்பட் டவர்களின் விவகாரம், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, பௌத்த பேரினவாதத்தின் நிலவிழுங்கல் செயற்பாடுகள் என அனைத்தும் எவ்வாறு தமிழர்களின் பொதுப்பிரச்சினையாக உள்ளனவோ அதுபோன்றுதான், இந்து வழிபாட்டுத்தலங்கள் மற்றும் இந்து ஆலயங்கள் மீதான ஆக்கிரமிப்பையும் எடுத்துக்கொண்டு அதற்கேற்ப வினையாற்றவேண்டும். ஆனால், இந்தப் புரிதல் தமிழர்தாயகத்தில் அநேகமானவர்களிடத்தில் இல்லை என்பதே கசப்பான உண்மை. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர், மதத்தலங்கள் மீதான ஆக்கிரமிப்பை பொதுப்பிரச்சினையாக எடுத்துக்கொள்ளும் மனப் பாங்கு தமிழ் மக்களிடம் அருகியே வருகின்றது. உண்மையில் இந்த நிலை மாற்றப்படவேண்டும். எதிரி பிரித்தாளும் தந்திரத்தைக் கைக்கொள்வதற்கு 'பொதுப்பிரச்சினையாக'சில விடயங்களை தமிழர்கள் அணுகாதிருப்பதுதான் முதன்மைக் காரணம். இங்குள்ள தமிழ்த் தலைமைகளும் தத்தம் கட்சிக் கொடிகளைப் பலப்படுத்துவதில்தான் காலம் கடத்துகின்றனரே அன்றி, அதற்கு அப்பாற்பட்ட 'ஒன்றி ணைப்புச் செயற்பாடுகளையோ', செயற்றிட்டங்களையோ அவர்களும் முன்னெடுப்பதாயில்லை. இந்தச் சபிக்கப்பட்ட போக்குக்கு விரைவாக வைக்கப்படும் முற்றுப்புள்ளியே தமிழர்களின் நிலங்களை, வழிபாட்டுத் தலங்களை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும். இதேவேளை, கத்தோலிக்கத் தமிழர்களுக்கு எதிராக நடுவீதியில் நின்று கூப்பாடுபோடும் சிலர், சிங்கள - பெளத்த பேரினவாதத்தின் கொடூரத்தனங் களுக்கு எதிராகக் கைகட்டி, வாய்மூடி இருக்கும் இடம் தெரியாமல் காட்டும் விசுவாசத்தையும் தமிழர்கள் கவனித்து வைத்திருக்க வேண்டிய காலமிது. (16.03.2024 - உதயன் பத்திரிகை). https://newuthayan.com/article/வெடுக்குநாறிமலை_பொதுப்பிரச்சினை
  24. அமோக வெற்றியீட்டிய ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு வாழ்த்துக்கள். 🥰
  25. இதுவரை ஒருவரும் மூச்சு விடவில்லை. மக்களிடம் போணியாகாது (🤣) என்று புரிந்துகொண்டனர் போலத் தெரிகிறது.
  26. எல்லாம் கள்ள ஓட்டுக்கள் எண்டு சொன்னாலும் சொல்லுவினம் 🤣
  27. சா.......எவ்வளவு அழகாக சுரங்களுடன் பாடுகிறார்கள்.........! 💐
  28. கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை சோம. அழகு பிற உயிரின் துயருக்கு நெக்குருகும் கண்ணோட்டம் வாய்க்கப் பெற்ற மனங்களெல்லாம் ஆசீர்வதிக்கப் பெற்றவையா? அல்லது கொடுஞ்சாபத்திற்கு உள்ளானவையா? மிகச் சாதாரண காட்சிகளே போதுமானவையாக இருக்கின்றன, நம்மை மொத்தமாக உருக்குலையச் செய்ய. பரவலான பொருளில் பயன்படுத்தியிருக்கிறேன் எனினும் ‘சாதாரணம்’ என்பதற்கு இங்கு அளவுகோல் என்ன? உங்கள் சாதாரணங்கள் எனக்குப் பெரும்பாலும் ‘ரணங்கள்’. உதாரணமாக, நம் தாத்தா பிறப்பதற்கு முன்பிருந்தே நிற்கும் மரம் ஒன்று ‘சாலை விரிவாக்கம்’, ‘மின்கம்பிக்கு இடைஞ்சல்’… போன்ற அற்பக் காரணங்களுக்காக வெட்டப்படுவதை யாரேனும் நேரில் நின்று பார்த்திருக்கிறீர்களா? சுருங்கிய மனங்களுடன் விசாலமான உலகைக் காண முயலும் விந்தை, ‘மண்ணோ டியைந்த மரத்தனையர்’க்கு மட்டுமே கைவந்த கொலை! யாருக்கும் எத்தீங்கும் இழைக்காத மரத்தோடான மாந்தர்களின் ஒப்பீடே இங்கு தவறு! இது survival of the fittest கோட்பாட்டினுள் வராது; வேண்டுமானால் Survival of the foolest என்று கொள்ளலாம். கண்களுள் சிறையிட முடியாத அளவு பெரிதாக கம்பீரமாக நின்ற மரம் பரிதாபமாகச் சாய்ந்து விழும் போது தரையுடன் சேர்ந்து நம் மனதும் ஒரு கணம் அதிர்ந்து அடங்கும். நிலத்தில் லேசாகக் கிளம்பும் புழுதியில் அம்மரத்திற்காகப் பூமியில் இருந்து எழும் விசும்பல்களைக் கேட்டிருக்கிறீர்களா? காய்ந்து கிடக்கும் நம் மனங்களுக்கும் சேர்த்துத் தன் வேர்களில் சேமித்து வைத்திருக்கும் ஈரத்தைக் காட்சிப்படுத்தி ஒரு அலட்சியப் பார்வையில் கடைசியாக ஒரு முறை நம்மை எள்ளி நகையாடும். எத்தனை மனிதர்களுக்கு நிழல் தந்திருக்கும்! எத்தனை சிறுவர்களின் விளையாட்டுத் தோழனாய் இருந்திருக்கும்! கால சுழற்சியில் மாறிப் போன மனிதர்களுக்கும் அருகிப் போன கருணைக்கும் நின்ற சாட்சி அல்லவோ இப்போது வீழ்த்தப்பட்டுக் கிடக்கிறது! இரை தேடச் சென்று மாலை வீடடையும் பறவைகள் இன்று ஸ்தம்பித்துப் போகாதா? மனசாட்சியே இல்லாமல் ஒறுத்தாற்றுபவர்களிடம் எல்லாம் எப்படி பொறுத்தாற்றும் பண்புடன் நடந்து கொள்வது? இப்படியே நீண்டு கொண்டிருக்கும் சிந்தனையிலிருந்து எங்ஙனம் மீள்வது? ‘நம்ம பொழப்ப பாப்போம்’ போன்ற வழமையான வறட்டுத்தனத்தின் பின் ஒளிந்து கொண்டா? இது போலவே இன்னும் நிறைய… கிழிந்த சட்டையும் கலைந்த தலையும் காய்ந்த வயிறுமாகக் குப்பைத்தொட்டியை நிறைத்திருக்கும் மனிதத்திற்கு இடையே போனகம் தேடி ஆர்வத்தோடு துழாவும் ஒரு சக உயிர்; யாரிடமேனும் இரந்து நிற்கும் வாழ்ந்து கெட்டவர்கள்; உயிருக்கு உயிரான ஒருவரைப் போதிய பண வசதி இல்லாததால் ஒரு கொடூர நோய்க்குக் கண் முன்னரே கொஞ்சம் கொஞ்சமாக இழப்பது கண்டு செய்வதறியாது நிர்க்கதியாகிப் போனவர்கள்; குடும்பத்தினரின் வயிறு காயாமல் இருக்கவென, அவர்களுள் சிலரே தன் மகளை/சகோதரியை/மனைவியை நெறிபிறழ்ந்த வாழ்வுமுறைக்கு வற்புறுத்தும் கொடுமை அரங்கேற, அதை கனத்துக் காய்ந்து வற்றிப் போன உணர்வுகளுடன் ஏற்கத் துணியும் பெண்; விண்ணில் போர் விமானங்களின் விகாரமான சத்தத்தையும் அதனை விஞ்சும் வகையில் மண்ணில் இருந்து கிளம்பும் ஓலத்தையும் மொத்தமாகத் தன்னுள் அடக்கியபடி அமைதியாக நடு சாலையில் கிடக்கும் குருதி தோய்ந்த குழந்தையின் ஷூ (எவ்வளவு கோரமான புகைப்படம்!); பட்டாம்பூச்சியின் வண்ணத்திற்குப் பதில் பணியின் பொருட்டு கரி அப்பிய பிஞ்சு விரல்கள் – இவை போன்ற இன்னும் எத்தனையோ அவலங்களையெல்லாம் கேட்க/காண நேர்ந்த அந்நொடிக்குப் பிறகு கண்கள் காணும் எதுவும் மூளைக்குச் செல்வதில்லை. “ஏன் இவர்களுக்கு இப்படி நிகழ்கிறது? எனக்கு மட்டும் என்ன பெரிய தகுதி இருக்கிறது பாதுகாப்பான சூழலும் ஓரளவு நல்ல பொருளாதார நிலையும் வாய்க்கப் பெற? மனிதனின் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட உலகில் நிலவும் பாரபட்சம் எதன் அடிப்படையில்? இதற்கெல்லாம் சட்டையைப் பிடித்து உலுக்கி வளமான வசவுகளைப் பொழியவாவது அந்தக் கடவுள் என்ற ஒன்று இருந்து தொலைத்திருக்கலாம்……” ஒரு குமிழ் போல என்னுள் பெரிதாகிக் கொண்டே செல்லும் எண்ணவோட்டங்களை உடைக்கும் பொருட்டு ஒவ்வொரு முறையும் சிறிய கல் ஒன்று எறியப்படும் – “என்ன யோசிச்சுட்டு இருக்க?” என்னும் கேள்வியாக. சட்டென நிகழ் உலகத்திற்குத் தரதரவென இழுத்து வரும் இக்கேள்விக்குரியவரிடம் உண்மை பதிலைத் தர நான் என்ன பித்தியா? கொஞ்சம் பித்திதான் என்றாலும் கூட உலகத்தவரின் அளவீட்டில் இன்னும் பிரகடனப்படுத்தும் அளவிற்குச் செல்லவில்லை. உண்மையில் நான் யோசித்தவற்றை அப்படியே சொன்னால் என்னவாகும்? ஏற இறங்க ஒரு பார்வை கிட்டும். மிதமிஞ்சிப் போனால் ஒரு “சரி விடு… அதுக்கு நீ என்ன செய்ய முடியும்? இப்படி எத்தனையோ பேர் இருக்காங்க”. “என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்பதே இங்கு வெட்கக்கேடுதானே? இந்தக் குற்றவுணர்வை எப்படி அநாயசமாகத் தூக்கிப் போடுகிறீர்கள்?” என்றெல்லாம் பதிலுக்குக் கேட்டு வைக்க முடியாது. பின்னர் அக்மார்க் முத்திரையே குத்திவிடுவார்கள். எனவே ஆழ்மனதில் ஒரு நொடி மௌன அஞ்சலி செலுத்தி இந்நுண்ணுணர்வுகளில் இருந்து விடுபட இயலாத தருணங்களில் எல்லாம் Weltschmerz என்னும் வார்த்தைக்கு என்னை ஒப்புக்கொடுக்க முயல்கிறேன். முயற்சி மட்டும்தானே செய்ய முடியும்? இதற்கெல்லாம் ஆறுதல் என்று ஒன்று இருக்கவா செய்கிறது? உச்சகட்டமாக மனம் அழுந்தி பச்சாதாபத்தில் மேலெழும் கோபம் அவர்களை அந்நிலைக்குத் தள்ளிய சூழல்கள், அதற்குக் காரணமாய் அமைந்தவர்கள் ஆகியவற்றின் பக்கம் திரும்பி ஏதோ நெறிப்படுத்தப்பட்டுவிட்டதைப் போல் போலி ஆறுதலடைய முயலும். இல்லையெனில் ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்…’ல் இருந்து ‘நமக்கு இருக்குற பிரச்சனையில இதையெல்லாம்….’க்கு மனம் மடைமாறி கழிவிரக்கத்தில் முற்று பெறும். ‘இப்படியே ஒவ்வொண்ணா பாத்துட்டு இருந்தா நம்ம வாழ்க்கைய வாழவே முடியாது’ – நடைமுறைக்கு ஒவ்வாதவை என வகுக்கப்பட்டுக் கழித்துக் கட்டப்பட்ட ‘ஒவ்வொன்று’களில்தான் நானும் ஒரு ஓரத்தில் ஒண்டிக் கிடக்கிறேன் போலும். உலகம் இப்படித்தான் இயங்கும் என்ற எதார்த்தம் எனக்கும் தெரியாமல் இல்லை. ஆனாலும் ‘கண்ணோட்டம்’ என்னும் இவ்வுணர்வு சில நேரங்களில் மனதளவில் முடக்கித்தான் போடுகிறது. கண்ணில் படுபவர்களுக்கும் ஓரளவுதான் உதவ முடிகிறது. அப்படி அவர்கள் ‘ஒவ்வொருவருக்கும்’ உதவி செய்வதென்பது ஒரு தனியாளாக சாத்தியமில்லை ஆகையால் நான் முழுமையாகச் சூடிக் கொள்ள இயலாத அக்கழிபெருங் காரிகை, நான் ‘உண்மை(உள்ளமை) நிலக்குப் பொறை’ என மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகிறது. மனிதத்திற்கான அச்சாரமே பச்சாதாபம் தானே? உலகின் குரூரங்களை எல்லாம் காணுற்ற பிறகும் அவற்றை மனதின் ஏதோ ஒரு இடுக்கில் அமுக்கி ஆழப் புதைத்த பின் நிகழும் இயல்பான நகர்தலில் மனித மனங்கள்(என்னுடையதும்தான்!) ரொம்பவே பயங்கரமானதாகத் தெரிகின்றன. சோம. அழகு https://puthu.thinnai.com/2024/03/17/கண்ணோட்டம்-என்னும்-கழிபெ/
  29. தமிழ் மக்களின் பாரம்பரிய நிலத்தினை சிதைத்து அவற்றை சிங்கள பௌத்த அடையாளங்களால் உருமாற்றம் செய்து தமிழர் தாயகம் உரிமை கோரிக்கையை சிதைக்க முயற்சி - வெடுக்குநாறி சம்பவங்கள் குறித்து பிரித்தானிய தமிழர் பேரவை Published By: RAJEEBAN 18 MAR, 2024 | 10:43 AM வெடுக்குநாறிமலை ஆலய சிவராத்திரி வழிபாட்டு நிகழ்வில் பொலிஸாரால் ஏற்படுத்தப்பட்ட தடங்கல்கள் தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனம்வெளியிட்டுள்ளது இது தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது சிறிலங்கா அரசும் அதன் இராணுவஇ போலீஸ் நிர்வாகங்களும் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் கைதுகள் நில அபகரிப்பு மற்றும் பொது மக்களின் அன்றாட செயற்பாடுகளில் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்கள் இடையூறுகள் தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது. கடந்த வெடுக்குநாறிமலை ஆலய சிவராத்திரி வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்ட ஆலய பூசகரின் கைதும் பக்தர்களின் கைதும் கண்டனத்துக்கு உரியதுடன் இவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். மேலும் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் விக்கிரகங்கள் மீள கையளிக்கப்பட்டு அவற்றினை அபகரித்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்க வேண்டிய அரச நிர்வாகம் அதற்கு மாறாக பல்லாண்டு காலமாக வழிபட்டு வரும் தமிழ் மக்களின் மீது அரச படைகளை ஏவி விட்டு அச்சுறுத்த முனைகின்றது. அடக்குமுறைகள்தான் எம் மக்களை போராட நிர்ப்பந்தித்தது என்ற யதார்த்தத்தை சிங்கள தேசம் புறக்கணித்தபடியால்தான் இன்று அது கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறன கைதுகளும் தமிழர்களின் வழிபாட்டு உரிமைகளை தடுத்து வழிபாட்டு தளங்களை அபகரிப்பதும் தொல்லியல் திணைக்களம் போன்ற அரச இயந்திரத்தின் அங்கங்களை ஏவி விடுவதும் தமிழ் மக்களின் பாரம்பரிய நிலத்தினை சிதைத்து துண்டம் துண்டமாக்கி அவற்றை சிங்கள பௌத்த அடையாளங்களால் உருமாற்றம் செய்து தொடர்ச்சியான நிலப் பரப்பினை கொண்ட தமிழர் தாயகம் என்ற எம் உரிமை கோரிக்கையை சிதைப்பது சிறிலங்கா அரசின் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பின் திட்டமிட்ட மூலோபாயம் ஆகும். நல்லிணக்கம் பற்றிக் கூறி கொள்ளும் ரணில் அரசு இவ்வாறான செயற்பாடுகள் மூலம் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வது இலங்கை தீவில் நிலையான அமைதி ஸ்திரத் தன்மைஇ வளர்ச்சி ஒரு போதும் சாத்தியப்படாது என்பதனை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சர்வதேச தளத்தில் பன்முனைப்பட்ட முடிவெடுக்கும் சக்திகளிடம் எடுத்துரைக்க வேண்டும் என்பதனை தோழமையுடன் வேண்டிக் கொள்கின்றோம். பிரித்தானிய தமிழர் பேரவை கடந்த பல வருடங்களாக தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படும் இவ்வாறான இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரல் தொடர்பில் சர்வதேச சமூகத்திடமும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையிலும் எடுத்துரைத்து வருவது போன்று இப்பொழுது இடம்பெறும் ஐ.நா.மனித உரிமைக்கழக மார்ச் மாதக் கூட்டத் தொடரிலும் தகமை வாய்ந்த முடிவெடுக்கும் மையங்களுக்கு ஆதாரபூர்வமான தகவல்கள் பதிவு செய்யப்படும். இவ்வாறான தொடரும் நில ஆக்கிரமிப்பு சமூக பொருளாதார அடிப்படைகளில் தமிழர் தேசத்தினை சிதைத்து பலவீனப்படுத்தல்இ தங்குநிலையில் வைத்திருத்தல் தாயகத்தில் தமிழ் மக்கள் வாழ முடியாத சூழ்நிலைகளை உருவாக்கி அவர்களை மண்ணிலிருந்து வெளியேற்றுவது தமிழர் அரசியல் பிரதிநிதித்துவத்தை சிதைப்பதும் செயலிழக்கச் செய்வதுமான செயல்பாடுகளை இடைநிறுத்தி தம்மை தாமே நிர்வகிக்கக் கூடிய இடைக்கால நிர்வாகப் பொறிமுறை ஒன்றினை உடனடியாக உருவாக்குமாறு இந்தியா உட்பட சர்வதேச தளப் பரப்பில் முக்கிய உறுப்பு நாடுகளிடம் எமது இக் கோரிக்கையை முன்வைக்கின்றோம். https://www.virakesari.lk/article/178984
  30. நீங்கள் இப்படி சொலுறீங்கள் அங்கு பின்வருமறு பாடுகின்றார்கள் நாங்க தமிழர்! Visitor visa பொய் என்றுவம். ஆனால் நாங்க போய் சேர முடியாதா என்று ஓடி திரிவம் . நாங்க தமிழர்! கனடா போக வேண்டாம் என்று சொல்லுவம். ஆனால் நாங்க போக என்ன வழி இருக்கிறது என்று பார்ப்பம். நாங்க தமிழர்! கனடா எப்படி visitor visa ஊடாக போனனியள் என்றால் நாங்க வந்த வழியே தெரியாத மாதிரி கதைப்பம். நாங்க தமிழர்!
  31. உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம் - தனது நீண்டகால தோழியை மணமுடித்தார் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் Published By: RAJEEBAN 17 MAR, 2024 | 01:02 PM அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்ச பெனிவொங் தனது நீண்டகாலதோழி சோபி அல்லோச்சசுடன் திருமணபந்தத்தில் இணைந்துகொண்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் இந்த ஒருபால் இனத்தவர்கள் திருமணம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அடிலெய்ட் ஹில்ஸ் பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்ற இந்த திருமண நிகழ்வில் பிரதமர் அன்டனி அல்பெனிஸ் உட்பட தொழில்கட்சியின் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர். சமூக ஊடகங்களில் இது குறித்த தகவல்களை பதிவிட்டுள்ள பெனிவொங் இந்த விசேடமான நாளை எங்களின் பல நண்பர்கள் குடும்பத்தவர்கள் எங்களுடன் பகிர்ந்துகொள்ள முடிந்தமை குறித்து மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார். தனது வாழ்க்கை துணையுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட படத்தையும் பெனிவொங் வெளியிட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சர் 2007 இல் தனது வாழ்க்கை துணையை சந்தித்தார். இவர்களிற்கு இரு பெண்பிள்ளைகள் உள்ளனர். எனினும் இருவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விடயங்களை மிகவும் இரகசியமாக பேணிவருகின்றனர். https://www.virakesari.lk/article/178934
  32. அரபு நாடுகளில் அரபுக்காரர்கள் செய்யும் பாலியல் வன்கொடுமைகள் மறைக்கப்படுகின்றன. வெளிநாட்டு அப்பாவிகள் தான் மாட்டுப்பட்டு கல்லடி படுகிறார்கள். இதுபற்றி எழுதினால் அது நீட்ட கட்டுரையாகிவிடும்
  33. உந்த சாதி பாக்கிறவங்கள் இங்க வெளிநாட்டிலையும் இருக்கிறாங்கள். உவங்கள் எல்லாம் ஆயிரத்திலை ஒருவர். ஐஞ்சியத்திற்கும் பயனில்லாதவங்கள்... உவங்களாலை உது மட்டும்தான் ஏலும். நீங்கள் தொடர்ந்து உங்கட நல்ல வேலையைப் பாருங்கோ. உங்கள் மூலம் பல விடையங்களை நான் அறிந்துள்ளேன். மென்மேலும் பல உயரங்கள் தொட்டு சிகரமடைய மனமார வாழ்த்துகிறேன். நன்றி
  34. வருந்தி அழைத்தாலும் வாராத வாரா பொருந்துவன போமினென்றாற் போகா
  35. 1 point
    ரஞ்சித்துடன் வேலை செய்தவர் இள வயதில் குணப்படுத்தமுடியாத நோயால் இறந்தது மிகவும் கவலையானது. அவர் தொழில் நுணுக்கங்களை துரிதமாகக் கற்று முன்னுக்கு வந்து, எல்லோருடனும் நட்பாக பழகி, அவர்களின் அன்பைப் பெற்றதையும், அவரின் துயரமான இறுதி நிகழ்வையும் கண்முன்னே கொண்டுவந்த ரஞ்சித்துக்கு நன்றி.
  36. மயிலிறகு .......10. வாமன் கிணற்றின் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த அஞ்சலை அவனை கொஞ்சம் சீண்ட நினைத்து என்ன பார்க்கிறாய்....... யார் நானா ......பின்ன இங்கு வேறுயார் இருக்கிறார்கள். உன்னைத்தான் கேட்கிறேன். நீ பார்க்கிறதை பார்த்தால் மோட்டரை லவட்டிக் கொண்டு போற பிளான்போல கிடக்கு. அவளுக்கு அவனது முதலாவது அறிமுகமே மாங்காய்க்கு கல்லெறிந்து ஏச்சு வாங்கிக் சென்ற துடிப்பான வாலிபன் மற்றும் அவளும் இப்பொழுது பலரை வைத்து வேலை வாங்கும் ஒரு முதலாளியாக இருக்கிறாள்.அதனால் அந்த கம்பீரம் அவள் குரலிலும் தொனிக்கிறது. அவனை நீ நான் போடா வாடா என்றே அழைக்கிறாள். அப்படி வேலைகள் செய்கிறதாய் இருந்தால் நாங்கள் ஏன் இப்ப பணத்துக்கு உங்களிடம் வாறம். கிணற்றில் தண்ணி நல்ல தெளிவாக இருக்கு குடிப்பம் என்றால் குழாயில் தண்ணி வரவில்லை. ஓ......அதுவா அடிக்கடி தோட்டத்துக்கு நீர் இறைப்பதால் தண்ணி தெளிவாய் இருக்கு. இது நல்ல ஊற்றுக் கிணறு.இப்ப சில நாளாய் மோட்டர் வேலை செய்யவில்லை. எல்லாம் அவர்தான் பார்க்கிறவர்.இந்த வேலையெல்லாம் அவருக்குத்தான் தெரியும். நான் மின்சார வேலை தெரிந்த ஒரு ஆளுக்கு சொல்லியிருக்கிறன். அவருக்கும் நேரமில்லை நாலுநாள் பொறுங்கோ வாறன் என்று சொல்லி இருக்கிறார். அதுதான் பயிர் எல்லாம் நீரின்றி சோர்ந்து போய் கிடக்கு. அது கிடக்கட்டும் உன்னைப் பற்றி சொல்லு, நீ என்ன செய்கிறாய். என்னைப்பற்றி சொல்ல என்ன இருக்கு. என் பெயர் வாமதேவன். நானும் சுந்தரேசனும் பாலர் வகுப்பில் இருந்து ஒன்றாகத்தான் படித்து வந்திருக்கிறோம்.அவன் நல்லா படிப்பான். நான் சுமாராய் படிப்பன். இப்ப அவன் கம்பசுக்கு தெரிவாயிட்டான். ஆனாலும் நான் படித்துக் கொண்டே எங்கட விதானையாரிடம் பகுதிநேர வேலை செய்கிறேன். அதில் கொஞ்சம் பணம் கிடைக்கும். அதைவிட அவருடன் நாலு இடத்துக்கும் போகும்போது ஒரு கெத்தாய் இருக்கும்..... அவள் உதட்டை பிதுக்கி புருவத்தைத் தூக்கி ....ம் .....பெரிய வேலைதான் (அவருக்கு தான் அடியாள் போல என்பது கூடத் இவனுக்குத் தெரியவில்லை) சரி மேல சொல்லு..... போற இடங்களில் தண்ணிக்கும் விருந்து சாப்பாட்டுக்கும் குறைவில்லை. அதை விட அதிகாரிகளோ போலீசாரே யார் பார்த்தாலும் மரியாதையுடன் பழகுவார்கள். யார் எங்கட அரசு விதானையுடனோ வேலை செய்கிறாய் ....... ஓம்.....உங்களுக்கு அவரைத் தெரிந்திருக்கும்.அவருடன்தான்.....அவர் சொல்லி நானும் கிராமசேவகர் வேலைக்கு விண்ணப்பித்து இருக்கிறேன்.அநேகமாய் ஒரு மாதமளவில் கிடைக்கலாம் என்று விதானையார் சொன்னவர். அது சரி நான் இந்த மோட்டர் அறையைப் பார்க்கலாமா .......அதுக்கென்ன பார் என்று சொல்லி கதவைத் தள்ளி திறந்து விடுகிறாள்.வாமன் உள்ளே செல்ல அவளும் பின்னால் போகிறாள். அவன் மோட்டரை கையால் சுற்றிப்பார்த்து இது சரியாய் இருக்கு என்று சொல்லி பியூஸ் போர்ட்டைத் தேட அது எதிர் சுவரில் இருக்கு.அவன் சேர்ட்டைக் கழட்டி கதவில் கொழுவிவிட்டு சாரத்தை மடிச்சு சண்டிக்கட்டு கட்டிக்கொண்டு அங்கு போகிறான். அந்த இளம் வாலிபனின் மார்பிலும் கால்களிலும் சுருள் சுருளான உரோமங்கள். அவளுக்கு தலைமுடியில் சுருள்கள் கிடையாது, ஆனால் நீளமான நீண்ட முடிகள். தன்னிச்சையாய் தன் கூந்தலை எடுத்து முன்னால் போட்டுக் கொள்கிறாள். அங்கு குவிந்திருக்கும் சாக்குகளை விலத்தி மெயின் சுவிட்சை நிறுத்தி விட்டு பியூஸ் கட்டையை புடுங்கிப் பார்க்கிறான்.அது எரிந்து போய் கிடக்கு. அங்கேயே தேடி வேறு ஒரு பியூஸை எடுத்து அதில் சொருகி அதை சரியான இடத்தில் பொருத்தி விடுகிறான். அங்கே அந்தப் பெட்டிக்கு மேல் ஒரு சாராயப்போத்தல் இருக்க அவன் அதை எடுக்கிறான்....அவன் கேட்காமலே அவளும் அது அவர்தான் வைத்திருக்கிறார். அவர் உங்க போறவாற இடமெல்லாம் தான் குட்டிப்பதற்கு வைக்கிறது வழக்கம். விரும்பினால் நீ எடுக்கலாம் என்கிறாள். அவனும் அதைத் திறந்து மறுபக்கம் திரும்பி நின்று குடிக்கிறான். பின் அவன் மெயின் சுவிட்சைப் போட பைப்பில் முதல் காற்று வந்தது. அவன் அதை பொத்திப் பிடிக்க சற்று நேரத்தில் அவன் கையைத் தள்ளிக்கொண்டு அழுக்குத் தண்ணீர் சீறிப் பாய்ந்தது. அது புஷ்வாணமாய் அறை முழுதும் பாய்கிறது. அவன் பின்னால் நின்ற அஞ்சலா அஞ்சி என்ர அம்மா என்று கத்தியபடி அவனையும் இழுத்துக் கொண்டு தடுமாறிக் கீழே விழுகிறாள். இருவரும் தெப்பலாய் நனைந்து கொண்டு இருக்கிறார்கள். அவளது நீல நைலான் சேலை நன்றாக நனைந்து உடலை சிக் என்று இறுக்கிப் பிடித்திருக்கு. வாமன் தடுமாறி எழ முயற்சிக்க அவள் இடையில் அவன் முகம் பொருந்தி இருக்கிறது. கைகள் அவளை இறுகப் பற்றியிருக்கின்றன.அந்தப் பிடியில் இருந்து விலக அவளும் பிரயத்தனப் படவில்லை.அப்படியே கொஞ்சம் நிதானித்துக் கீழிறங்க அவன்மேல் பருவச்சுமை அழுந்துகிறது. காத்து வாக்கில் பூத்த வாசம் நாசியை நிறைக்கின்றது.கல்லுபோன்ற மாதுளைகள் அவன் கன்னங்களை உரசிக்கொண்டு அவன் வெற்று மார்பில் தஞ்சமடைய இளமையில் இள மயில் உறவு தேடித் தவிக்குது.நிலமையைப் புரிந்து அவனது பிடிகள் தளர்கின்றன. அவள் தன் கைகளால் அவன் தலைமுடியைக் கோதி தன் முகத்துடன் சேர்த்துக் கொண்டு மெல்ல காதுக்குள் கம்மும் குரலில் கிசுகிசுக்கிறாள், உனக்கு என்ன வேணுமோ எடுத்துக்கொள். இதுவரை இதுபோன்ற அனுபவம் அவனுக்கு ஏற்பட்டதில்லை. காலத்தை மறந்து ஓரிரு நிமிடங்கள் அப்படியே இருக்கிறார்கள்.அந்தச் சிறு நேரத்துக்குள் அவன் இந்தமாதிரி அனுபவமில்லாதவன் என்று புரிந்து கொண்டு அவன் தொடைகள் நடுங்குவதை தன் கால்களால் உணர்ந்து கொள்கிறாள். புல்லாங்குழல் வாசிப்பதற்குத் துவாரங்களைக் கையாலத் தெரிய வேண்டும். அவனுக்கோ கையும் ஓடவில்லை காலும் நடுங்குகிறது. குழாயால் அறை முழுதும் சீறிப் பாய்ந்த தண்ணீர் குழாய்க்குள் அடங்கி தொட்டிக்குள் சீராக விழுகின்றது. மெதுவாக அவன் கன்னத்தில் அழுத்தி ஈர முத்தமொன்றைத் தந்துவிட்டு எழுந்து தனது ஆடைகளைச் சரிசெய்து கொள்கிறாள். அவனும் எழுந்து கொள்கிறான். அவள் முகத்தைப் பார்க்க அவனுக்கு கூச்சமாக இருக்கின்றது. நிராயுதபாணியாய் இராவணன் சென்றது போல் எழுந்து சென்று அறைக்குள் எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தி மிச்ச சாராயத்தையும் ஒரு மிடறில் குடித்து விட்டு மோட்டரையும் நிப்பாட்டிவிட்டு நனையாத சேர்ட்டையும் எடுத்துக்கொண்டு இருவரும் ஈரம் சொட்ட சொட்ட வெளியே வருகிறார்கள். அவன் உம் என்று வருவதை பார்த்த அஞ்சலா அவனைக் கலகலப்பாக்க நினைத்து, அவனைப் பார்த்து கண் சிமிட்டிகொண்டே நான் மீண்டும் ஒருமுறை குளிக்க வேண்டி வந்திருக்கும் நல்லகாலம் தப்பீட்டன் என்று சொல்ல அவனுக்கு கொடுப்புக்குள் சிரிப்பு வருகிறது. அவன் சொல்கிறான் இப்ப மட்டும் என்ன அந்த ஈரச்சாக்கு ஊறலுக்குள் உருண்டு பிரண்டு எங்கட உடுப்புகளும் நாறுது, போய் குளிக்கத்தான் வேணும். அப்போது அங்கு மயிலம்மாவும் வருகிறாள். என்னக்கா எல்லாம் சரியா இருக்கா..... ஓம் பிள்ளை.....என்ன இரண்டு பேரும் நனைந்து போய் வருகிறீர்கள் என்று வினவ ..... அதொன்றுமில்லை அக்கா, சில நாட்களாக மோட்டர் வேலை செய்யவில்லை.அதுதான் இவன் அதைத் திருத்தினவன்.அப்போது எதிர்பாராமல் குழாயில் இருந்து தண்ணீர் சீறி அடித்து எங்களை நனைத்துப் போட்டுது..... மயிலம்மாவும் வாமன் வலு கெட்டிக்காரன் ......எல்லா வேலைகளும் தெரியும்....உடனே பிழைகளைக் கண்டு பிடித்து செய்து போடுவான் என்று சொல்லிக்கொண்டு முன்னே செல்கிறாள். அப்போது அஞ்சலா மெதுவாக இவனிடம் ...ம்....எனக்குத்தான் தெரியும் இது இன்னும் "எலி பிடிக்கப் பழகாத பூனை" என்று மெதுவாய் அவன் காதைத் திருகிவிட்டு சொல்கிறாள். உடனே வாமன் உஸ் என்று ஜாடையால் மயிலம்மாவைக் காட்டி கேட்டிருக்கும் என்கிறான்......! 🦚 மயில் ஆடும்.......! 10.
  37. மயிலிறகு ....... 09. அக்கா நீங்கள் இப்பொழுது எவ்வளவு பணம் எதிர்பார்க்கிறீர்கள் என்று அஞ்சலா கேட்க மயிலம்மாவும் எங்களுக்கு ஒரு ஒரு லட்சம் வரை தேவைப்படும்போல இருக்கு என்கிறாள். உங்களின் நகைகளை நான் பார்க்கலாமா .... அதுக்கென்ன என்று சொல்லி அங்கிருந்த கிணற்றுக் கட்டில் அருகில் அமர்கிறார்கள்.பின் மயிலம்மாவும் நகைப் பையையும் பத்திரப் பையையும் அவளிடம் தருகிறாள். இவர்கள் கதைத்துக் கொண்டிருக்க வாமன் அந்தப் பெரிய கிணற்றையும் அருகிலே மோட்டர் பம்ப் அறையையும் பார்க்கிறான்.கிணற்றுக்குள் இரண்டு பெரிய குழாய்கள் இறங்கி இருக்கின்றன.மிகவும் ஆழமான கிணறு. இந்த வெய்யில் காலத்திலேயே ஒரு ஆள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் இருக்கின்றது. அப்படியே நடந்து வர கிணற்றை ஒட்டி மரக்கறி வகைகள், வெற்றிலைக்கொடிகள் சற்று தள்ளி வாழைத்தோட்டம் கரும்பு எல்லாம் செழிப்பாக இருக்கின்றன. கீரைப் பாத்திகள்தான் நீரின்றி சோர்ந்துபோய் இருக்கு. அவற்றைக் கடந்தால் பெரிய நெல் வயல் பல ஏக்கருக்கு பரந்து கிடக்கு.ஆங்காங்கே கூலியாட்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.கொட்டில்களில் மாடு, ஆடுகள்,பரணில் கோழிகள் மற்றும் தகரக் கொட்டகையில் இரண்டு டிராக்டர்கள் நிக்கின்றன . எல்லாவற்றையும் ஒரு நோட்டம் விட்டுக்கொண்டு வயல் பக்கம் வரும்போது ஒரு வயதான பெண்மணி வரப்போரம் தட்டுத் தடுமாறி நடந்து தள்ளாடி வரப்பில் சரிந்து விழுகிறாள்.வாமன் பதறிப்போய் அங்கு வேலைசெய்து கொண்டிருந்த பெண்ணையும் கூப்பிட்டுக்கொண்டு ஓடிப்போய் அந்த அம்மாவிடம் என்னம்மா செய்யுது என்று கேட்க அந்த அம்மா இடுப்பில் இருந்த பையைகாட்ட அதற்குள் ஒரு சீசாவில் சீனியும் சிறிய போத்தலில் பழச்சாறும் இருப்பதைக் கண்டு அவற்றை எடுத்து உங்களுக்கு சீனி வருத்தமா என்று கேட்டு சீனியை அவவின் வாயில் போட்டு பழசாற்றைக் குடிக்கக் கொடுக்கிறான்.அந்த அம்மாவை நிமிர்த்தி இருக்க வைக்கும்போது அந்தப் பெண்ணும் வந்துவிட்டாள்.அவள் சிறிது சிறிதாக நீரைப் பருக்கிக் கொண்டு மார்பை கைகளால் நீவி விடுகிறாள்.கொஞ்ச நேரத்தில் அந்த அம்மாள் சரியாகி விடுகிறாள்.பின் இருவரும் கைத்தாங்கலாக அவவைக் கொண்டுவந்து வீட்டுத் திண்ணையில் விடுகிறார்கள்.அந்தப் பெண்ணை அவாவுடன் இருக்கச் சொல்லிவிட்டு வாமு அங்கிருந்து கிளம்பி வருகிறான். அஞ்சலா உறுதியை மேலோட்டமாய் பார்த்து விட்டு நகைகளைப் பார்க்கிறாள். எல்லாம் கனமான நல்ல நகைகள்.அதிகம் பாவிக்காது இருந்ததால் பொலிவிழந்து கிடக்கு. புன்னைக்காய் நீரில் ஊறவைத்து பிரசால் தேய்த்தால் புதிதாக மினுங்கும் என்று நினைத்துக் கொண்டு சரி அக்கா நான் முன்பே சொன்னபடி இந்தத் தொழில் இனிமேல் செய்வதில்லை என்னும் முடிவில் தான் இருந்தேன்.ஆனால் உங்களின் நிலமையைப் பார்க்கவும் எனக்கு ஒரு மாதிரி இருக்குது. அதனால் நான் உங்களுக்கு பணம் தருகிறேன்.என்னிடம் பணம் வாங்கியதாக யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொல்லிப் பின் அந்தப் பணத்துக்கு உரிய வட்டிகள் பற்றி கதைத்து விட்டு அவற்றை எடுத்துக் கொண்டு உள்ளே போகிறாள். அங்கு அவர்களின் இரும்புப் பெட்டியைத் சாவி போட்டு திறந்து பல இடங்களில் திருகித் திறந்து அவற்றை வைக்கும்போது பார்க்கிறாள் அதில் அவள் பெற்றோர்களின் காணி உறுதி மற்றும் அவர்களது நகைகள் இன்னும் யார்யாருடையதோ எல்லாம் இருக்கின்றன.அதை அப்பப்ப திறந்து பார்த்து நினைப்பதுண்டு இதற்காகத்தானே எங்கள் குடும்பமும் அழிந்து,எனது படிப்பும் பாழாக்கி, வாழ்க்கைக் கனவுகளையும் இந்த மனிதன் அழித்து விட்டாரே.ஆனால் இப்ப இவையாவும் என் கையில்.என் பெற்றோரும் என்னுடன் வந்து இருக்கிறார்கள். இவர் போகும்போது மக்களின் வயித்தெரிச்சலைத் தவிர வேறு என்னத்தைக் கொண்டு போனவர். இந்தக் காலத்தின் கோலத்தை என்னவென்று சொல்வது. சிறிது நேரம் தன்னிரக்கத்தில் மூழ்கியவள் பின் தன் கையிலிருந்த பைகளை உள்ளே வைத்து விட்டு தேவையான சில பணக்கட்டுகளை எடுத்துக் கொண்டு பெட்டியைப் பூட்டும்போது என்ன நினைத்தாளோ தெரியாது அந்த நகைகள் இருக்கும் பையை மட்டும் எடுத்துக் கொண்டு மயிலம்மாவிடம் வருகிறாள். அவளிடம் பணத்தைக் குடுத்து எண்ணிப்பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு பையுடன் நகைகளை அவளிடம் தந்து அக்கா நான் அந்தக் காணிப் பத்திரத்தை மட்டும் எடுத்து வைத்துள்ளேன், நீங்கள் இந்த நகைகளைக் கொண்டுபோய் மகளின் திருமணத்தை நன்றாக நடத்துங்கள். கூடிய சீக்கிரம் பணத்தைத் தந்து பத்திரத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்ல மயிலம்மாவும் வாஞ்சையுடன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு பிள்ளை இந்த உதவியை நான் ஒருநாளும் மறக்க மாட்டேன், நீ நல்லா இருக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறுகிறாள். என்னக்கா நீங்கள்......அன்று எனக்கு எவ்வளவு பெரிய உபகாரம் செய்தனீங்கள். சரி....சரி....இங்கு காத்தடிக்குது நீங்கள் அங்கு திண்ணையில் போய் இருந்து பணத்தை எண்ணி எடுங்கள் என்று சொல்ல ....அவளும் உன்னை நான் நம்புகிறேன் அஞ்சலா ......அப்படி சொல்லாதையுங்கோ, பணம் சம்பந்தப்பட்ட விசயம் நீங்கள் எண்ணி எடுப்பதுதான் சரி. அங்க அந்தத் திண்ணையில் இருந்து ஆறுதலாய் எண்ணுங்கள் என்று அனுப்பி வைக்கிறாள். பின் மோட்டாரையும் கிணத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும் வாமுவிடம் வருகிறாள். மயிலம்மாவும் பணத்தை எண்ணுவதற்காக அந்தத் திண்ணைக்குப் போகிறாள். அங்கு மயங்கி விழுந்த அம்மா களைப்புடன் இருக்க பக்கத்தில் அந்தப் பெண் பனையோலை விசிறியால் விசிறிக்கொண்டு இருக்கிறாள். மயிலம்மாவும் சென்று கொஞ்சம் தள்ளி அமர்கிறாள். அந்த அம்மாவும் அந்தப் பெண்ணிடம் பிள்ளை அந்தமருந்தை எடுத்துத் தானை என்று சொல்ல அதை புரிந்து கொண்டு அந்தப் பெண்ணும் அங்கிருந்த போத்தல் சாராயத்தை எடுத்து வந்து குவளையில் விட்டு நீர் கலந்து கொடுக்கிறாள். சரி பிள்ளை நீ போய் வேலையைப்பார் இவ இங்கு இருக்கிறாதானே என்று சொல்ல அவளும் அம்மா இவவை கொஞ்சம் பார்த்து கொள்ளுங்கள் அங்கு மயங்கி விழுந்துட்டா என்று சொல்லிவிட்டு போகிறாள். மயிலம்மாவும் அவளிடம் என்ன நடந்தது என்று கேட்க அது பிள்ளை சீனி குறைஞ்சு போச்சு அதுதான் மயக்கமாயுட்டன். நல்ல காலம் ஒரு பொடியன் கண்டுட்டு ஓடிவந்து காப்பாற்றி இங்க கொண்டுவந்து விட்டவன். மயிலம்மா பக்கத்தில் போத்திலைப் பார்க்க அது அப்பப்ப கொஞ்சம் மருந்து குடிக்கிறது. காலம் முழுக்க காணி, பூமியோட கிடந்து உழைஞ்சு உடம்பு களைச்சுப் போச்சு. இரவில நித்திரையும் வருகுதில்லை.நீங்கள் எடுக்கிறனீங்களோ. சீ சீ எப்போதும் இல்லை. நீங்கள் சொன்னமாதிரி வயல் வேலைகள் செய்துபோட்டு வந்தால் உடம்பு அலுப்பாய் இருக்கும். அப்பொழுது கொஞ்சம் எடுக்கிறதுதான். அப்ப அந்த அம்மா தண்ணியையும் தண்ணிப் போத்தலையும் அவள் பக்கம் அரக்கி வைக்கிறாள். மயிலம்மாவும் தங்கள் வந்த வேலை சுலபமாய் முடிந்ததால் மனசுக்குள் ஒரு புளுகம் ஏற்பட அவற்றை எடுத்து சீராகக் கலந்து கொஞ்சம் கொஞ்சமாய் குடித்துக் கொண்டு பணக்கட்டைப் பிரித்து எண்ணுகிறாள்.......! 🦚 மயில் ஆடும்.........! 09.
  38. பாம் ஸ்பிறிங் பயணத்தின் போது இரு நாட்கள் இந்த தேசிய பூங்காவுக்கும் போனோம்.இந்த தேசிய பூங்கா 795000 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது.முழுக்க முழுக்க பாலைவனமாகவே காட்சியளிக்கிறது. ஒரு வருடத்துக்கு 6 அங்குல நீர்வீழ்ச்சியே கிடைக்கிறது.எனவே தண்ணீரில்லாமல் வளரக் கூடிய ஜோசுவா என்கிற மரமே 90 வீதம் நிற்கிறது.இந்தமரம் ஏறத்தாள எமது ஊர் தாளமரம் மாதிரியே இருந்தது. ஜோசுவா மரம் இந்தமரத்திலிருந்து வரும் பழங்களை கூடுதலாக மிருகங்களும் எஞ்சியிருக்கும் சிலதை அங்குள்ளவர்களும் உண்ணுகிறார்கள்.ஒரு வருடத்துக்கு 1-3 அங்குலம் தான் வளருகிறது.ஆனாலும் நீண்ட ஆயுள் உள்ளதாக சொல்கிறார்கள்.ஏறத்தாள 150-200 வயதுவரை வாழக் கூடியது. ஜோசுவா மர பழங்கள். அமெரிக்க தேசிய பூங்காவுக்கு உள்நுழைவதற்கு 30 டாலர்களில் இருந்து பலவிதமான கட்டணங்கள் அறவிடுகிறார்கள். இதில் ஒரு விசேட சலுகையும் தருகிறார்கள்.மூத்த குடிமக்களுக்கென்று வாழும்வரை உபயோகிக்கக் கூடிய மாதிரி 80 டாலருக்கு தருகிறார்கள்.பல வருடங்களுக்கு முன்பே நானும் உறுப்பினராகியுள்ளேன்.இதை உபயோகப்படுத்தும் போது என்னுடன் வாகனத்தில் இருக்கும் அத்தனை பேருமே இலவசமாக உள்நுழையலாம்.இந்த அனுமதி சீட்டு ஒரு கடனட்டை வடிவில் இருக்கும். மகளுக்கு நடைப்பயணம் ரொம்பவும் பிடிக்கும்.எனக்கும் இது சவாலாக இருந்தாலும் பிடிக்கும்.சன்பிரான்ஸ்சிஸ்கோவை சுற்றி ஒரே மலைகளாகவே உள்ளதால் நேரம் கிடைக்கும் போது நடைப்பயணம் தான். ஜோசுவாவிலும் நிறைய நடைபாதைகள் நிறைய உள்ளன.பேரக் குழந்தைகளையும் கொண்டு போனதால் பெரியபெரிய இடங்களை தவிர்த்துக் கொண்டோம்.இளம் பெடிபெட்டைகள் செங்குத்தாக உள்ள மலைகளில் ஏறிக் கொண்டிருந்தனர்.பார்க்கவே கால் கூசியது. இப்படியாக இரண்டு நாட்கள் தேசியபூங்காவில் பொழுதைப் போக்கினோம். முற்றும். https://en.m.wikipedia.org/wiki/Joshua_Tree_National_Park மேலதிக விபரங்களுக்கு மேலே உள்ள சுட்டியை அழுத்தவும்.
  39. சிந்திப்போம் செயல்படுவோம் களியாட்டத்தில் கலாட்டாவா அனைவருக்கும் வணக்கம். அண்மையில் யாழ்நகரில் நடைபெற்ற நிகழ்வின் பொழுது நடந்த ஒர் அசம்பாவிதத்தை பற்றி பல வாத பிரதிவாதங்கள் இடம் பெறுவதை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். இந்த அசம்பாவிதத்தை ஊதி பெருப்பித்த பெறுமை நெட்டிசன் மாரை சேரும் .அதாவது சமுக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவு செய்யும் நபர்கள்..அநேகமான நபர்கள் தங்களுக்கு அதிக பார்வையாளர்கள்,மற்றும் லைக் வேணும் என்ற காரணத்தால் கவர்ச்சிகரமான தலையங்கங்களை எழுதி தங்களது கற்பனைக்கு எட்டியவற்றை கூறினார்கள் ..அவர்களில் அனேகமானவ்ர்கள் போட்ட படம், அதாவது சனம் தடுப்பு கம்பிகளை உடைத்து கொண்டு முன்னுக்கு செல்லும் காட்சி...இந்த ஒரு காட்சியை ஏதோ ஒரு மூலத்தில் கொப்பி பண்ணி அதை தாங்கள் எடுத்த காட்சி போல பிரசுரித்து கருத்துக்களை அள்ளி வாரி இறைத்தனர். யாழ்ப்பாணத்தவன் உலகத்திலயே சிறந்த பிறவியாக இருக்க வேணும் என்ற கருத்து பட சிலர் எழுதினர்.இன்னும் சிலர் இந்த அசம்பாவிதத்தினால் யாழ்ப்பாணத்தானின் மானம் கப்பல் ஏறிவிட்டது என முதலை கண்ணீர் விட்டனர்.. இந்த யூ டியுப் விண்னர்கள் முழுக்க முழுக்க நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தொழிலதிபர் இந்திரன்,மற்றும் நடன தயாரிப்பாளர் கலா மாஸ்டர் மற்றும் தமன்னா மீது குற்றங்களை சாட்டுகிறார்கள் அல்லது அவர்களை வசை பாடுகிறார்கள். அவர்களின் ஒழுங்கமைப்பில் தவறுகள் இருக்கின்றது அதை சுட்டி காட்டுங்கள் இனி வரும் காலங்களில் இப்படியான தவறுகள் வராமல் செயல் பட உதவியாக இருக்கும்...இவர்களுக்கு மட்டுமல்ல எந்த ஒழுங்கமைப்பாளர்களுக்கும் அது உதவியாக இருக்கும் அதாவது பொது மனபான்மை ... தொழிலதிபர் தனது கல்வி நிறுவனத்தின் விளம்பரத்திற்காக நிகழ்ச்சியை நடத்தியதாக குற்றம் சாட்டுகிறீர்கள் அதில என்ன தப்பு இருக்கின்றது? தாயகத்தில் இன்று புலம்பெயர்ந்த மண்ணில் வாழும் தொழிலதிபர்கள் பலர் தொழில் முதலீடு செய்ய முன் வருகின்றனர் ,ஈடுபடுகின்றனர்.அவர்கள் புலம் பெயர்ந்த மண்ணிலயோ, இந்தியா,அல்லது ஏனைய ஆசிய நாடுகளில் தங்கள் முதலீடுகளை இலகுவாக செய்யலாம் இருந்தும் தாயகத்தில் இருக்கும் தங்களது பற்று காரணமாக அங்கு முதலீடு செய்ய முன்வருகின்றனர். அவர்களை ஊக்கபடுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் தாயக மக்களுக்கு உண்டு என்பதை மறந்து விடாதீர்கள் .சில யூ டியுப் நபர்கள் இந்த விடயத்தில் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றனர் .அவர்கள் உண்மையிலயே பாராட்ட பட வேண்டியவர்கள் தொழிலதிபர் இந்திரனின் அரவணைப்பால் தாயக மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் அதிமாக இருக்கும்..இந்த இசை நிகழ்ச்சியின் பொழுது நடை பெற்ற அசம்பாவிதத்தினால் பாதிப்பு பொருட்களுக்கு மட்டுமே...எனவே எந்த தொழிலதிபர்கள் முதலீடு செய்ய வந்தாலும் அரவணைத்து ஊக்க படுத்த வேண்டியவர்கள் மண்ணின் மைந்தர்களே.. யாழ் மாநகர சபையினர்,மற்றும் பொலிசார்,அரசு போன்ற துறையினரும் இந்த அசம்பாவித் நிகழ்வுக்கு பொறுப்பாளிகள் ..இவர்களை கேள்வி கேட்க வேண்டிய மண்னின் யூ டியுப் விண்ணர்கள்,சமுக வலைத்தள ஜாம்பவாங்கள் எல்லாம் பணத்தை முதலீடு செய்ய முன்வரும் தொழிலதிபர் மீது குற்றம் சாட்டுகின்றனர். காவாலி கூட்டங்கள் உலகில் எல்லா நாடுகளிலும் உண்டு இவர்களை திறுத்த முடியாது .ஆனால் கட்டுப்படுத்த முடியும் அதை சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொலிசார் செய்ய வேண்டும் . மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் போதைப்பொருள் பாவிப்பவர்கள் நடமாடுவதை பொலிசார் தடை செய்திருக்க வேணும் .மாநகர சபை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அனுமதி கொடுக்கும் பொழுது சில கட்டுப்பாடுகளை விதித்திருக்க வேணும் .. ஒர் அரசியல்கட்சியின் எதிர்ப்பு ஊர்வலத்திற்கு மக்களை விட கலகம் அடக்கும் பொலிசார் அதிகமாக நிற்பார்கள் இங்கு அப்படியான எதுவும் ஒழுங்கு செய்ய படவில்லை.. பாதுகாப்பு செய்ய வேண்டியவர்கள் இங்கு தவறு செய்து விட்டார்கள் .. ஏற்கனவே மக்கள் கொந்தளிப்பு நிலையில் இருக்கும் பொழுது மக்களை அமைதி படுத்த வேண்டிய பொலிஸ் அதிகாரி சிங்கள மொழியில் அமைதி காக்கும் மாறு கோருகின்றார் இது இன்னும் மக்களின் மனவேதனையை தூண்டும் செயல் ...அடுத்து தமிழில் பேசிய அதிகாரி கூறியவை எதுவும் மக்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பு இல்லை.. இன்று தொழிலதிபர் இந்திரன் தனது சார்பில் அறிக்கை விடுத்துள்ளார் அதைப்பற்றி எவரும் பெரிதாக அலட்டி கொள்ளவில்லை...அதை மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டிய கடமையும் இந்த யூ டியுப் விண்ணர்களுக்கு உண்டு... இளைய வயதில் பிரபல தொழிலதிபராக வந்து தாயக மக்களின் கல்வி வளர்ச்சிக்கு குறிப்பாக வடமாகாண மக்களுக்கு ஒர் கல்வி நிறுவனத்தை தொடங்குவது என்பது உண்மையிலயே பாராட்டபட வேண்டிய ஒன்று ..கல்வி அறிவே எவராலும் அழிக்க முடியாத சொத்து...எம் மக்கள் இதை பாரம்பரியமாக கடைபிடித்து வருகின்றனர். இப்படி எழுதிய காரணத்தால் நானும் இந்திரனிடம் பணம் வாங்கி எழுதுகிறேன் பதிவுகளை போட சிலர் நினைக்கலாம் எனக்கு அவர் யார் என தெரியாது என்பதையும் சொல்லி கொள்ள விரும்புகிறேன்.. எல்லோரையும் குற்றம் சாட்டி, எம் மண்ணின் மைந்தர்கள் தொழில் செய்ய விடாமல் தடுக்க பல முயற்சிகள் திரைமறைவில் நடை பெறுவது கசப்பான உண்மை... நலன் விரும்பி
  40. நிச்சயமாக. மக்கள் நலன் என்று வரும்பொழுது அதனை ஆதரிக்க வேண்டும். மதகுருமார் என்ன எவருக்கும் அஞ்ச தேவை இல்லை.
  41. யாழில் நிகழ்ந்த நிகழ்வின் மறுபக்கத்தை அலசியுள்ளீர்கள் நல்ல விடயம். பந்திகளை சரியான முறையில் பிரித்து (இடைவெளி இல்லை) இருந்தால் வாசிப்பவர்களுக்கு இலகுவாக இருக்கும். அத்துடன் எழுத்துப்பிழைகளையும் கவனித்திருக்கலாம் 😄
  42. Putthan, உங்களின் இந்த ஆதங்கம் என்னிடத்திலும் இருக்கிறது. பேனை பெரிதாக்கி பெருச்சாளியாக்கி பேயாகவும் காட்டியிருக்கிறார்கள். “நிகழ்ச்சியில் குழப்பம் ஏற்பட்டது கவலை அளிக்கிறது. ஆனலும் நிலமையைச் சீராக்கி, நிகழ்ச்சி தொடர்ந்தது” என்று தென்னிந்திய கலைஞர்களும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், சில தென்னிந்திய ஊடகங்களும் அறியத்தந்திருக்கிறார்கள். இதற்குள் எம்மவர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து இழிந்த அரசியலும் செய்திருக்கிறார்கள். பொலிஸ் அதிகாரி சிங்களத்தில் வேண்டுகோள் விடுத்த போது, “தமிழில் கதை” என்று கத்தினார்கள். அவர் தமிழில் வேண்டுகோள் விடுத்த போதும் எம்மவர்களுக்குப் புரியவில்லை என்பது வேதனை. புலம் பெயர்ந்தவர்கள், தாயகத்தில் வந்து முதலீடு செய்துதான் பணம் பார்க்க வேண்டிய நிலையில் இல்லை. அவர்கள் பொது நலன் கருதியோ, தங்கள் புகழ் விரும்பியோ தாயகத்துக்கு உதவ முன் வரலாம். அதை தங்களுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளும் திறன் அங்கு இல்லை என்பதைத்தான் நடந்த சம்பவம் காட்டியிருக்கிறது. வீழ்ந்திருந்து கொண்டு இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் வீரம் பேசப் போகிறோம்?
  43. மணித்துளிகள் கரையக் கரைய மலரிதழும் வாடிப் போகும்🤔
  44. காயும் பழமுமாய் கண்கவர் வண்ணங்களுடன் கண்சிமிட்டும் காதலி.......! 😂
  45. The Whispers!!! - பெயருக்கேற்றவாறு அவர்களின் குரல் இன்னமும் மெதுவாகத்தான் உள்ளது. சிட்னி Obera House இருக்கும் இடத்தில் அவுஸ்ரேலிய பூர்வீக குடிகளின் இந்த Whispers உள்ளது. இந்த இடத்தில் முன்பு வாழ்ந்த அவர்களுடைய உணர்வை, நம்பிக்கையை இந்த Whispers குறிக்கிறது..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.