Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

அது ஒரு நிலாக்காலம். வானத்தில் நட்சத்திரங்களை மேவி நிலா பொழிந்து கொண்டு இருந்தது. குளிர் அடர்ந்த வனமாக வானம் விரிந்து கிடந்தது. பறவைகளின் கூடுகளிற்குள் இருந்து அவற்றின் கலவி ஒலி சங்கீதமாக ஒலித்துக் கொண்டு இருந்தது. நந்தியாவட்டை மொட்டுக்கள் பூப்பதற்கான தன் இதழ்களை அவிழ்த்துக் கொண்டு இருந்தன. தெருவில் பவள மல்லிகையின் வாசம் பரவிக் கிடந்தது. 

என்று இப்படி எல்லாம் வர்ணணைகளுடன் ஒரு கதை எழுதுவம் என்று யோசித்தால், இந்த சொந்தக் கதை, சோகக் கதையைத் தான் முதலில் எழுது என்று மனம் அருட்டிக் கொண்டு இருந்தது.

இது போன வருடம் சென்னை சென்று திரும்பும் போது நிகழ்ந்த சோகக் கதை. சோகக் கதை என்பதை விட நான் கிலோக்கணக்கில் அசடு வழிந்த வண்ணம் விமானத்தில் பயணம் செய்த கதை இது.

எப்பவும் விமானப் பயணம் என்றால் பக்கத்தில் ஒரு பருவ மங்கை அமர்ந்து பயணிக்கும் அதிஷ்டம் கிடைக்கலாம், அவர் என்னை பார்த்த முதல் வினாடியிலேயே சொக்கிப் போய் விட வேண்டும் என்று நல்ல ஆடையை தேர்ந்தெடுத்து அணிவது வழக்கம்.

அன்றும் அப்படி தான் சென்னைக்கு அக்கா குடும்பத்தை பார்க்க போய் 10 நாட்கள் நின்று விட்டு மீண்டும் ரொரண்டோ திரும்பு நாள். 

சென்னை - எப்ப நினைத்தாலும் என் மனசுக்குள் இனிக்கும் நகரம்! 

அங்கு போனவுடன் ஒரு பழைய பாட்டா (Bata) செருப்பை மாட்டிக் கொண்டு, அரைக்காற்சட்டையுடன், ரொரண்டோவில் 10 டொலருக்கு வாங்கிய ஷேர்ட் போட்டுக் கொண்டு ஆட்டோவில் (Auto) வெளியே சுற்றுவது பிடித்த விடயங்களில் ஒன்று. பத்து நாட்கள் நின்றால் 5 நாட்களாவது அங்குள்ள சைவ கடைகளான சரவணபவனிலோ அல்லது அடையார் ஆனந்தபவனிலோ ஒரு நேரச் சாப்பாடாவது சாப்பிடுவன். 

ஊருக்கு சென்றாலோ அல்லது சென்னைக்கு சென்றாலோ "வெளிநாட்டு மிதப்பை " காட்டக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதுண்டு. எனவே எப்பவும் சாதாரண உடுப்பும் பாட்டா செருப்பும் தான்.

ஆனால் விமானப் பயணத்தில் அப்படிச் செய்ய முடியுமோ? தச்சுத்தவறி பக்கத்து சீட்டில் ஒரு அழகி வந்து அமர்ந்து விட்டால் என்ன ஆவது? அதுவும் தனியாக பயணம் போகும் போது... சொல்லி வேலை இல்லை...!

எனவே அங்கு கொண்டு போய், ஒரு நாளும் போடாத நல்ல முழுக்கை ரீஷேர்ட் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டு, ஒன்றுக்கு பல தடவை கண்ணாடியில் என்னை நானே அழகு பார்த்து "நீ மன்மதன் தாண்டா.. " என்று திருப்தி பட்டுக் கொண்டு, அக்காவிடம் "நான் நல்ல வடிவா இருக்கின்றேனா" என கனக்க தரம் கேட்டு வெறுப்பேற்றி விட்டு, விமான நிலையம் வந்தேன்.

என்னைப் பொறுத்தவரைக்கும் சென்னை விமான நிலையம் ஒரு கரைச்சல் இல்லாத விமான நிலையம்.  நல்ல வசதியான விமான நிலையம் (இன்னும் 100 வரிகளிற்குள் இதை நான் மாற்றிச் சொல்ல போகின்றேன் என்று எனக்கே தெரியாது அப்ப). 10 வயது சின்னப் பிள்ளை கூட குழப்பம் இல்லாமல் பயணிக்கலாம் .
வாசலில், கடவுச் சீட்டையும் விமான சீட்டையும் பரிசோதிக்கும் வேறு மானிலத்தை சேர்ந்த பொலிஸ்காரர் மேல் மட்டும் தான் குறை சொல்ல முடியும். ஒவ்வொரு முறையும், வேண்டும் என்றே தாமதித்து விட்டு, முறைத்து பார்த்து விட்டு தான் உள்ளே செல்ல அனுமதிப்பார். 

தமிழனை தமிழன் ஆள வேண்டும் என்று தொண்டைத்  தண்ணீர் வற்ற பேசும் தம்பி சீமான் , தமிழர் விமான நிலைய வாசலில் தமிழர் தான் நின்று பரிசோதிக்க வேண்டும் என்ற உப கோரிக்கையையும் வைத்து பேசினால் புண்ணியம் கிடைக்கும் என எண்ணிக் கொண்டு உள்ளே சென்றேன்.

விமான நிலையம் சென்று 30 நிமிடங்களில் பரிசோதிப்புகள் எல்லாம் முடிந்து, போர்டிங் பாஸ் (Boarding pass) எல்லாம் எடுத்து விமானத்துக்காக காத்திருக்கும் அறைக்குள் சென்று விட்டேன். பாஸ்போர்ட்டை செக் பண்ணிய, நல்ல கறுத்த தமிழர் ஒருவர் "...அங்கம் முழுதும் பொங்கும் இளமை இதம் பதமாய் தோன்ற.. அள்ளி எடுத்த கைகள்" என்று "இளமை எனும் பூங்காற்று" பாடல் வரிகளை முணு முணுத்துக் கொண்டே செக் பண்ணினார். ஆள் வேலைக்கு வர முன்னர் வீட்டில் என்ன செய்து விட்டு வந்திருப்பார் என்று ஊகித்துக் கொண்டேன்.

உள்ளே இருக்கும் ஒரு பெரிய கண்ணாடியில் மீண்டும் என்னை பார்த்து... "அழகண்டா நீ" என்று மனசுக்குள் நினைத்து விட்டு மேலும் உள்ளே சென்றேன்.

அக்கா வீட்டில் இரவுச் சாப்பாட்டை 8 மணிக்கே முடித்து இருந்தேன். சாமம் 3 மணிக்கு கிளம்பும் விமானத்தை பிடிக்க நடு இரவு 11:30 இற்கே விமான நிலையம் வந்து விட்டேன். எப்பவும் 4 மணித்தியாலங்கள் முன்னதாக விமான நிலையம் வந்து விடுவேன். ( ஒரு முறை தாமதமாக போய் அருந்தப்பில் விமானத்தை தவற விட  பார்த்த பின் ஏற்பட்ட ஞானத்தால் வந்த பழக்கம் இது)

8 மணிக்கே சாப்பிட்டதால் லைட்டாக பசி எடுக்க ஆரம்பித்தது. 

சரி என்ன விற்கின்றார்கள் என்று பார்த்து வருவதற்காக எழும்பி மெதுவாக விமான நிலையத்துக்குள் நடக்க ஆரம்பித்தேன்.

ஒரு இடத்தில் அழகான சின்ன சின்ன சிலைகளுடன் பெரிய நடராஜர் சிலையையும் வைத்து இருந்தார்கள். நவராத்திரி காலம் அப்பதான் முடிவடைந்தமையால் கொலுவும் வைத்து இருந்தார்கள்.

337249582_524814683133283_2539192114861364896_n.jpg

ஒன்றிரண்டு படங்களை கிளிக்கி விட்டு என்ன சாப்பாட்டுக் கடை இருக்கு என்று பார்க்கத் தொடங்கினேன்.

ஒரு இடத்தில் இட்டலியும் சட்னியும் வைத்து இருந்தார்கள். ஆஹா, இட்டலி என்று நினைத்து வாங்க போகும் போது "உதை  சாப்பிட்டால் உழுந்து சில நேரம் 'பின்' விளைவுகளை வேகமாக்கும்" என்று மனம் எச்சரித்தது. சரி இட்டலி வேண்டாம் என்று அங்கிருந்து நகர்ந்து இன்னொரு பக்கம் போனால், நல்ல சுடச் சுட பால் கோப்பியும், சமோசாவும் விற்றுக் கொண்டு இருந்தார்கள். ஐரோப்பியர் ஒருவர் அவற்றை வாங்கி நல்ல ஸ்ரைலாக சமோசாவை சாப்பிட்டுக் கொண்டு இருந்ததை பார்க்க எனக்கு வாயூறியது.

சமோசாவை சாப்பிட்டு விட்டு கோப்பியை குடித்தால் இந்த சாமத்தில் நல்ல தெம்பாக இருக்கும் என்று அவற்றை வாங்கினேன்.

இப்படி உணவை வாங்கியவர்கள் நின்றபடியே சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள்.

"என்ன இப்படி நின்றபடி சாப்பிடுகின்றார்கள்... நாகரீகம் தெரியாதவர்கள்... ஐ யாம் ப்றோம் கனடா.. இப்படி நின்று சாப்பிட்டால் சரியாக இருக்காது" என்று நினைத்துக் கொண்டு, வசதியாக எங்காவது அமறலாமா என தேடத் தொடங்கினேன்.

ஒரு கையில் சில்லு இருக்கும் சூட்கேஸ் (Hand luggage). மற்ற கையில் கோப்பியும் சமோசாவும் உள்ள ஒரு சிறு Tray. கோப்பி வாசனை நாக்கில் உள்ள சுவையரும்புகளை மீட்டிக் கொண்டு இருந்தது.

கதிரைகள் வரிசையாக இருக்கும் ஒரு இடத்தில் நாலு ஐந்து கதிரைகள் காலியாக இருந்தன. ஒருத்தரும் அந்த வரிசையில் இல்லை.

அப்பாடி, ஒருத்தரும் அருகில் இல்லை...ஆற அமர இருந்து சமோசாவை சாப்பிட்டு கோப்பியை குடிப்பம் என்று போய் ஐந்து கதிரைகள் கொண்ட வரிசையில் நடு நாயகமாக போய் இருக்கும் கதிரையில் போய் அமர்ந்தேன்.

ஒரு கிளிக் சத்தம்.. .சின்ன கிளிக் சத்தம்... அவ்வளவு தான்.

அந்த 5 கதிரைகளும் அப்படியே சற்று பின்னால் சரிந்தன. 

அமரப் போகும் போது, கதிரைகள் பின்னால் சரிந்ததால், நிலை தடுமாறினேன். 

முதலில், முதலாவது சமோசா Tray யில் இருந்து வழுக்கி, என் மூக்கில் மோதி கீழே வீழ்ந்தது.

இரண்டாவது சமோசா நெஞ்சில் வீழ்ந்து, நிலத்தில் கலந்து, இரண்டாக பிழந்து தரையில் வீழ்ந்தது.

இவை எல்லாம் இப்படி சரிய முன்னரே.. 

கோப்பையில் இருந்த நல்ல சூடான பால் கோப்பி, முழுதுமாக என் மேல் கவிண்டு, என் அழகான, வடிவான, மெல்லிய உடலாக என்னைக் காட்டிய என் அருமை ரீஷேர்ட் மேல் முழுதுமாக கொட்டி,  தெப்பலாக என்னை நனைத்து உருண்டோடி சற்று தள்ளி கிடந்து என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தது.

என்ன நடந்தது என்று நான் உணரும் போது பால் கோப்பி என்னை முழுதுமாக நனைத்து விட்டது. பாலாபிஷேகம் போல், பால் கோப்பி அபிசேகம்!

எவராவது இந்த கோலத்தை பார்க்கின்றார்களா என சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒருவரும் கவனித்து இருக்கவில்லை. "ஆஹா.. இந்த கதிரைகளின் நிலை தெரிந்து தானா இந்த சனம் இந்த கதிரை வரிசைக்கு கிட்ட கூட வரவில்லை" என்பதை அப்போது தான் புரிந்து கொண்டேன்.

"சரி இப்படி கோப்பி நாற்றத்துடன் (வாசம் நாற்றமாகியது இந்த வரியில் இருந்து தான்) போக முடியாது, கோப்பியில் ஊறிய நனைந்த  உடுப்பை உடனடியாக மாற்ற வேண்டும் என ஹாண்ட் லக்கேஜ் (Hand luggage) இனை திறந்து பார்த்தேன்.

வழக்கமாக இப்படி அவசரத்துக்கு தேவைப்படும் என்று இரண்டு செட் உடுப்பும் சறமும் ஹாண்ட் லக்கேஜ் ஜில் வைப்பது வழக்கம். கிட்டத்தட்ட 60 தடவைகளாவது விமானப் பயணம் செய்து உள்ளேன். ஒவ்வொரு முறையும் கண்டிப்பாக எடுத்து வைப்பேன்.

ஹாண்ட் லக்கேஜ் ஜினை திறந்து பார்க்கின்றேன்... அதில் மனுசிக்கு வாங்கிய சாறியும், துவாயும், போன் சார்ஜரும்,  தான் இருக்கு. என் உடுப்பு ஒன்றையும் காணவில்லை..

மாற்றிக் கொள்ள ஒரு உடுப்பும் இல்லை... 

இனி நான் என்ன செய்வேன்...

 

(மிகுதி தொடரும். அதில் நான் புது உடுப்பு வாங்க இந்த வசதி ஒன்றும் இல்லாத விமான நிலையம் எங்கும் கோப்பியில் ஊறிய, பால் கோப்பி நாற்றத்துடன் கடை கடையாக ஏறி இறங்கிய கதையையும் எனக்கு வாய்த்த ரீஷேர்ட் பற்றியும் எழுதுகின்றேன்.)

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வித்தியாசமான அனுபவ பகிர்வு..! தொடருங்கள், நிழலி..!

வயது மனிதர்களில் ஒரு சின்ன மாற்றத்தையாவது ஏற்படுத்துவது இல்லையா?😊

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கோ எழுதுங்கோ எல்லாம் வெல்லலாம்......நல்லா கரைச்சல் பட்டாச்சுது போல........!  😂

  • கருத்துக்கள உறவுகள்

25அகவையில்  நமது பதிவையும் ஏதாவது பதிவு செய்வம்  என்றால் சிங்கன் நமக்கு முதல் கோப்பியுடன்  உருண்டுபிறழ்கிறாரர் இனியும் வேநுண்ம கன்னடா  பசையிலிலோ படித்து புரிந்து கொள்க .😀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

எப்பவும் விமானப் பயணம் என்றால் பக்கத்தில் ஒரு பருவ மங்கை அமர்ந்து பயணிக்கும் அதிஷ்டம் கிடைக்கலாம், அவர் என்னை பார்த்த முதல் வினாடியிலேயே சொக்கிப் போய் விட வேண்டும் என்று நல்ல ஆடையை தேர்ந்தெடுத்து அணிவது வழக்கம்.

நான்எப்போது பயணித்தாலும் கிழுகிழுப்பானவர்கள் அருகில் வரக் கூடாதென்றே எண்ணுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய கதை என்றாலும்… வாசிப்பவர்களுக்கு சிரமம் கொடுக்காமல அழகாக பந்தி பந்தியாக 
பிரித்து எழுதியமை வாசிக்க சுலபமாகவும், சுவராசியமாகவும் இருந்தது.

கோப்பி அபிஷேகம் முடிந்த பின்.. கையில் மாற்று உடுப்பும் இல்லாத நிலையில்..
இருக்கும் குறுகிய நேர இடைவெளியில் என்ன செய்திருப்பீர்கள் என்பதை அறிய ஆவலாக உள்ளது.

நிழலியின்… வயிறு, சொல்வழி கேளாமல்…
சமோசா கடைக்கு இழுத்துக் கொண்டு போனதை நினைக்க சிரிப்பாக உள்ளது. 😂

விமான நிலையத்துக்கு… நாலு மணித்தியாலம் முந்திப் போயும்…
நாக்கும்,  வயிறும்  நாறப் பண்ணிப் போட்டுது. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

கோப்பையில் இருந்த நல்ல சூடான பால் கோப்பி, முழுதுமாக என் மேல் கவிண்டு, என் அழகான, வடிவான, மெல்லிய உடலாக என்னைக் காட்டிய என் அருமை ரீஷேர்ட் மேல் முழுதுமாக கொட்டி,  தெப்பலாக என்னை நனைத்து உருண்டோடி சற்று தள்ளி கிடந்து என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தது.

நினைத்து பார்க்கவே சிரிப்பாக உள்ளது.

3 hours ago, நிழலி said:

என்ன நடந்தது என்று நான் உணரும் போது பால் கோப்பி என்னை முழுதுமாக நனைத்து விட்டது. பாலாபிஷேகம் போல், பால் கோப்பி அபிசேகம்!

இது ஒன்று போதும் இந்த கதையை நினைவில் வைத்திருக்க.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஈழப்பிரியன் said:

நினைத்து பார்க்கவே சிரிப்பாக உள்ளது.

இது ஒன்று போதும் இந்த கதையை நினைவில் வைத்திருக்க.

எனக்கும்…. அந்த இடத்தில் நிழலியின் நிலைமையை கற்பனை பண்ணிப் பார்க்க சிரிப்பாக இருந்தது. வேறு சந்தர்ப்பம் என்றாலும் பரவாயில்லை.  இது விமான நிலையம்… அதே உடுப்புடன் தொடர்ந்து பல மணித்தியாலங்கள் பயணிக்க வேண்டிய தர்மசங்கடமன நிலை. 😇

  • கருத்துக்கள உறவுகள்

என் அழகான, வடிவான, மெல்லிய உடலாக என்னைக் காட்டிய என் அருமை ரீஷேர்ட் மேல் முழுதுமாக கொட்டி,  தெப்பலாக என்னை நனைத்து உருண்டோடி சற்று தள்ளி கிடந்து என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தது.

 ஐயோ மன்மதனை அந்தக் கோலத்தில் யாரும் படம் எடுக்க வில்லையா ? 😀
டூட்டி பிரீ யில் ஒரு டீ ஷர்ட் வாங்கி போடடீர்களா ?  

 

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

அதில் மனுசிக்கு வாங்கிய சாறியும்,

இது மனிசிக்கு வாங்கிய மாதிரி தெரியலையே.

பக்கத்தில அம்சமா யாரும் வந்தா லபக் கென்று எடுத்து கொடுக்க வசதியாக வைத்திருந்த மாதிரியல்லவா இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

இது மனிசிக்கு வாங்கிய மாதிரி தெரியலையே.

பக்கத்தில அம்சமா யாரும் வந்தா லபக் கென்று எடுத்து கொடுக்க வசதியாக வைத்திருந்த மாதிரியல்லவா இருக்கு.

ஓம்......ஆர்வத்தில சாறி வாங்கியபடியால்தான் தனது உடுப்புகளை வைக்க மறந்து போனார்.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது அனுபவக் கதை. தலைப்பை இப்ப இருப்பது போல அல்லாமல் "அழகன்டா நீ!"😎 என்று வைத்திருந்தால் தூக்கலாக இருந்திருக்குமென்பது என் கருத்து!

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Justin said:

அழகன்டா நீ!"😎 

மனதுக்குள் அப்படி தான் நினைத்து அலைந்து திரிந்ததால்த் தான் முறிந்த கதிரையையும் பார்க்காமல் உட்கார்ந்திட்டார்.

6 hours ago, suvy said:

ஓம்......ஆர்வத்தில சாறி வாங்கியபடியால்தான் தனது உடுப்புகளை வைக்க மறந்து போனார்.......!  😂

59 தடவை தனது உடுப்புடன் போனவர்

60 வது தடவை கொண்டு போகமல் போயிருக்கார்.

கடவுள் இருக்கிறான் குமாரூ.

  • தொடங்கியவர்
19 hours ago, புங்கையூரன் said:

 

வயது மனிதர்களில் ஒரு சின்ன மாற்றத்தையாவது ஏற்படுத்துவது இல்லையா?😊

வயசு உடம்புக்கும் பொறுப்புகளுக்கும் தான். மனசுக்கு இல்லை தானே..! 

19 hours ago, suvy said:

......நல்லா கரைச்சல் பட்டாச்சுது போல........!  😂

அதையேன் கேட்பான்... சீய் என்று ஆயிட்டு!

19 hours ago, பெருமாள் said:

25அகவையில்  நமது பதிவையும் ஏதாவது பதிவு செய்வம்  என்றால் சிங்கன் நமக்கு முதல் கோப்பியுடன்  உருண்டுபிறழ்கிறாரர் இனியும் வேநுண்ம கன்னடா  பசையிலிலோ படித்து புரிந்து கொள்க .😀

 கன்னட சொல்லை என்னெவென்று அறிய, கூகிள் ஆண்டவர் கூட உதவி செய்கிறார் இல்லை,

18 hours ago, ஈழப்பிரியன் said:

நான்எப்போது பயணித்தாலும் கிழுகிழுப்பானவர்கள் அருகில் வரக் கூடாதென்றே எண்ணுவேன்.

எனக்கு நேர் எதிராக இருக்கின்றீர்கள். 

  • தொடங்கியவர்
18 hours ago, தமிழ் சிறி said:

பெரிய கதை என்றாலும்… வாசிப்பவர்களுக்கு சிரமம் கொடுக்காமல அழகாக பந்தி பந்தியாக 
பிரித்து எழுதியமை வாசிக்க சுலபமாகவும், சுவராசியமாகவும் இருந்தது.

கோப்பி அபிஷேகம் முடிந்த பின்.. கையில் மாற்று உடுப்பும் இல்லாத நிலையில்..
இருக்கும் குறுகிய நேர இடைவெளியில் என்ன செய்திருப்பீர்கள் என்பதை அறிய ஆவலாக உள்ளது.

நிழலியின்… வயிறு, சொல்வழி கேளாமல்…
சமோசா கடைக்கு இழுத்துக் கொண்டு போனதை நினைக்க சிரிப்பாக உள்ளது. 😂

விமான நிலையத்துக்கு… நாலு மணித்தியாலம் முந்திப் போயும்…
நாக்கும்,  வயிறும்  நாறப் பண்ணிப் போட்டுது. 🤣

கோப்பி என்னை குளிப்பாட்டிய பின் நான் பட்ட பாட்டை இனித்தான் எழுதப் போகின்றேன். 

வெறும் கோப்பியில் கோப்பி மணம் மட்டும் தான் வரும். இது பால் கோப்பி என்பதால், நேரம் செல்ல செல்ல பால் புளித்து பழைய கள் மாதிரி நாற்றமெடுக்க தொடங்கும். அப்படி நாற்றம் எடுத்தவாறு எப்படி பயணிப்பது என்று நான் பட்ட பாடு. 

17 hours ago, நிலாமதி said:

என் அழகான, வடிவான, மெல்லிய உடலாக என்னைக் காட்டிய என் அருமை ரீஷேர்ட் மேல் முழுதுமாக கொட்டி,  தெப்பலாக என்னை நனைத்து உருண்டோடி சற்று தள்ளி கிடந்து என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தது.

 ஐயோ மன்மதனை அந்தக் கோலத்தில் யாரும் படம் எடுக்க வில்லையா ? 😀
டூட்டி பிரீ யில் ஒரு டீ ஷர்ட் வாங்கி போடடீர்களா ?  

 

 

நல்ல வேளை யாரும் அந்தக் கோலத்தில் படம் எடுக்கவில்லை. அல்லது, யார் கண்டார் சிசி டிவியில் முழு பால்கோப்பி அபிஷேகமும் ரெக்கோர்ட் ஆகி, அதை எத்தனை பேர் பார்த்து சிரித்தார்களோ...!

16 hours ago, ஈழப்பிரியன் said:

இது மனிசிக்கு வாங்கிய மாதிரி தெரியலையே.

பக்கத்தில அம்சமா யாரும் வந்தா லபக் கென்று எடுத்து கொடுக்க வசதியாக வைத்திருந்த மாதிரியல்லவா இருக்கு.

 

9 hours ago, suvy said:

ஓம்......ஆர்வத்தில சாறி வாங்கியபடியால்தான் தனது உடுப்புகளை வைக்க மறந்து போனார்.......!  😂

பொத்தீஸில் மனைவிக்கும், மகளுக்கும் சாறிகளும் லஹங்கா களும் வாங்கி, அதில் விலை கூடிய இரண்டை மட்டும் எடுத்து ஹாண்ட் லக்கேஜில் வைத்து இருந்தேன். நான் பயணம் செய்த காலம், விமானப் பயணத்தில் பயணப் பைகள் அதிகமாக தொலைந்து கொண்டிருந்த காலம் என்பதால் (கொவிட் காலத்தின் பின் ஏற்பட்ட பணியாளர்கள் குறைவு பிரச்சனையால்) எதுக்கும் இருக்கட்டும் என்று அவற்றை எடுத்து ஹாண்ட் லக்கேஜில் வைத்திருந்தேன்.

  • தொடங்கியவர்
3 hours ago, Justin said:

நன்றாக இருக்கிறது அனுபவக் கதை. தலைப்பை இப்ப இருப்பது போல அல்லாமல் "அழகன்டா நீ!"😎 என்று வைத்திருந்தால் தூக்கலாக இருந்திருக்குமென்பது என் கருத்து!

இதுக்கு என்ன தலைப்பு வைப்பது என்று சற்றுக் குழம்பித்தான் இப்படி ஒரு தலைப்பு வைத்தேன். இப்ப பார்க்கும் போது 'அழகன்டா நீ' என்ற தலைப்பு நன்றாக பொருந்துகின்றது.

3 hours ago, ஈழப்பிரியன் said:

 

59 தடவை தனது உடுப்புடன் போனவர்

60 வது தடவை கொண்டு போகமல் போயிருக்கார்.

கடவுள் இருக்கிறான் குமாரூ.

உண்மைதான்... வழக்கமாக செய்யும் ஒன்றை எப்ப நாங்கள் மறந்து விடுகின்றோ அன்று தான் ஆப்பு ரெடியாகி இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 hours ago, நிழலி said:

ஒரு கிளிக் சத்தம்.. .சின்ன கிளிக் சத்தம்... அவ்வளவு தான்.

அந்த 5 கதிரைகளும் அப்படியே சற்று பின்னால் சரிந்தன. 

அமரப் போகும் போது, கதிரைகள் பின்னால் சரிந்ததால், நிலை தடுமாறினேன். 

முதலில், முதலாவது சமோசா Tray யில் இருந்து வழுக்கி, என் மூக்கில் மோதி கீழே வீழ்ந்தது.

இரண்டாவது சமோசா நெஞ்சில் வீழ்ந்து, நிலத்தில் கலந்து, இரண்டாக பிழந்து தரையில் வீழ்ந்தது.

இவை எல்லாம் இப்படி சரிய முன்னரே.. 

தம்பியர் ஆரம்பித்திலயிருந்து ஓவர் பில்டப் குடுக்கேக்கையே யோசிச்சிட்டன்.....இவர் எங்கையோ தடக்குப்பட்டு விழப்போறார் எண்டு......:beaming_face_with_smiling_eyes:

வாழ்க்கையிலை உப்புடி எத்தினை மன்மத குஞ்சுகளை பார்த்திருப்பம் :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா என்றால் விவேக் பகிடிகளில் வருவது போலவே உள்ளது போல.. 🥴

நம்பி விமானநிலையத்தில் உள்ள கதிரையிலேயே உட்கார முடியாது என்றால் கிந்தியன் விமானத்தில் எப்படி பயம் இல்லாமல் ஏறுவது? 😦

  • தொடங்கியவர்

- மிகுதி:


சரி, விமானம் புறப்படுவதற்கு இன்னும் 2 மணித்தியாலங்கள் உள்ளன. அதற்கிடையில் டுயூட்டி ப்றி (Duty Free) கடை ஒன்றில் நல்ல உடுப்பாக வாங்கி ஜம் மென்று போகலாம் என தீர்மானித்துக் கொண்டேன். 

புது உடுப்பாக வாங்குவதால், முதல் போட்ட ரீஷேர்ட் இனை விட, சூப்பராக இருக்க வேண்டும். 
புது உடுப்பாக வாங்குவதால், முதல் போட்ட ரீஷேர்ட் இனை விட அழகாக தோன்ற வேண்டும்
புது உடுப்பாக வாங்குவதால், முதல் போட்ட ரீஷேர்ட் இனை விட, பார்த்தவுடன் இவன் கனடா போன்ற முன்னேறிய நாட்டில் வாழ்பவன், முற்போக்கு வாதி, அறிவானவன் ஆழமானவன், அசராதவன் என்றெல்லாம் மற்றவருக்கு தோன்ற வேண்டும்.

விமானத்துக்கான காத்திருப்பு அறையை விட்டு, மேல் மாடியில் உள்ள டுயூட்டி ப்றி கடைக்கு செல்ல எஸ்கலேட்டரில் (Escalator) ஏறினேன்.

சின்ன குழந்தை சுச்சா போன மாதிரி, என் ரீஷேர்ட் எல்லாம் ஈரமாகி இருப்பதை பார்த்து சிலர் தமக்குள் சிரித்த மாதிரி தோன்றியது (நல்ல வேளை அணிந்திருந்த டெனிம் காற்சட்டை ஈரமாக தோன்றவில்லை)

அதுக்குள் ஒருவர் எஸ்கலேட்டரில் (Escalator) எப்படி இறங்குவது என்று தெரியாமல், ஒரு காலை மேல் படியில் வைத்தவாறு எஸ்கலேட்டரினை கட்டிப் பிடித்தபடி இறங்க முற்பட. அவர் கால்கள் இரண்டும் பப்பரப்பாய் என்று விரிந்து தடுமாறி முழுசிக் கொண்டு இறங்கிக் கொண்டு இருந்ததை பார்த்து "ப்ளடி கன்றி ப்ருட் (country brute)" என் நினைத்தவாறு நமுட்டு சிரிப்புடன் மேலே ஏறினேன்.

முதல் பத்து கடைகளுக்குள் உள்ளே சென்று பார்த்தால், மருந்துக்கும் கூட அங்கு உடுப்புகள் விற்க இருக்கவில்லை.

சரி, அது எப்படி ஒரு உடுப்புக் கடை இல்லாமல், டுயூட்டி ப்றி இருக்கும்.. கட்டாயம் கொஞ்சம் அங்கால இருக்கும் என நினைத்தவாறு எட்டி நோட்டம் இட்டால், வரிசையாக பல கடைகளில் ஆடைகள் தொங்கிக் கிடப்பது போன்று தோன்ற அவற்றை நோக்கி சென்றேன்

அவை பெண்களுக்கான ஆடைகள் விற்கும் கடைகள்.

அப்படியும் இரண்டு கடைகளில் ஆண்களுக்கான உடுப்பு இருக்குது என்று சொல்ல, உள்ளே சென்று பார்த்தால், இருக்கும் ரீஷேர்ட் இல் எல்லாம் இந்தியக் கொடி வரைந்தும், ஐ ல்வ் இந்தியா (I love India) என்ற வசனங்களும் இருந்தன. ஐ லவ் சென்னை / தமிழ் நாடு என்று இருந்திருந்தால் ஒரு கேள்வியும் இல்லாமல் வாங்கி இருக்க முடியும்...ஆனால் ஒரு ஈழத்தமிழனான நான் எப்படி ஐ லவ் இந்தியா என்பதை வாங்க முடியும்? 

ஒரு ரீஷேர்ட் இல் ஜிகினா பட்டெல்லாம் வைத்து தைத்து இருந்து வெறுப்பேற்றினர்

இன்னொரு ரீஷேர்ட் இல் சாயிபாபா சயனித்துக் கொண்டிருந்தார்.

இறுதியாக கடை ஒன்றில் ஒரு தொப்பி அணிந்த இஸ்லாமியரிடம் என் நிலையை சொல்லிக் கேட்க, தன்னிடம்  விற்பதற்கு சில ரீஷேர்ட் உள்ளதாக கூறி ஒவ்வொன்றாக காட்ட, அவற்றிலும் ஐ லவ் இந்தியா போன்ற வாசகங்களும் இந்தியக் கொடியும் பொறிக்கப்பட்டு இருந்தன. 

அவர் காட்டியதில் கடைசி கடைசியாக ஒரு நீல நிற ரீஷேர்ட் சதுரங்கள் பொறிக்கப்பட்டு ஐ லவ் இந்தியா என்ற வசனம் இல்லாம் இருந்தது. இதையும் வாங்காமல் விட்டால், இனி ஒன்றும் வாய்க்காது என்று சொல்லிவிட்டு பணத்தைக் கொடுத்து (1000 இந்திய ரூபாய்கள்!) வாங்கி, கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்த மாதிரி சந்தோசத்துடன் அருகில் இருந்த ஆண்களுக்கான வொஷ் ரூமிற்கு (Wash Room) ஓடிச் சென்று, போட்டிருந்த ரீஷேர்ட் இனை கழற்றி குப்பை bin க்குள் திணித்து விட்டு, புது ரீஷேர்ட் இனை அணிந்து கொண்டு வெளியே வந்தேன். 

நான் கடையை விட்டு வெளியே வரவும், Gate open என தகவல் வரவும் சரியாக இருந்தது.

பரபரவென ஹாண்ட் லக்கேஜ்ஜினை இழுத்துக் கொண்டு, புது ரீஷேர்ட் போட்ட தெம்பில் எல்லாரையும் ஒரு 'லெவலகாக' பார்த்துக் கொண்டு போர்டிங் பாஸைக் காட்டி விமானத்துக்குள் வந்து அமர்ந்தாயிட்டு. இடையில் ஒரு சிலர் என்னை சற்று உத்துப் பார்த்ததும் புரிந்தது. "அழகண்டா நீ" என்று மனசுக்குள் நினைத்தவாறு மனசு ரிலாக்ஸ் ஆனேன்.

விமானம் கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலம் 30 நிமிடம் பறந்து Transit டான கட்டாரில் வந்திறங்கியது. 

கட்டாரில் இறங்கி, காலைக் கடனை முடித்து, முகத்தை நீரால் அலம்பி பிரஷ்ஷாக்கி விட்டு வர லேசாக பசித்தது. ஆனால் சென்னையில் ஏற்பட்ட அனுபவத்தால், பச்சைத் தண்ணீர் கூட குடிக்காமல், அங்கும் இங்கும் திரியாமல், நேரடியாக காத்திருப்பு அறைக்குள் சென்றேன்.

அங்கு ஒரு அழகான தமிழ் இளம் பெண், கனடா பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தார். சரியாக அவர் பார்வை என்னில் படும் விதமாக, கதிரை சரியுதா என்று ஒருக்கால் செக் பண்ணி விட்டு போய் அமர்ந்தேன். 

ஒரு முறை என்னை நிமிர்ந்து பார்த்தார். பின் தலையை குனிந்து விட்டு, சடுதியாக மீண்டும் நிமிர்ந்து என்னையே பல வினாடிகள் உற்றுப் பார்த்தார்.

உடலில் இரசாயன மாற்றம் நிகழ தொடங்கியது.

ஒரு இனம்புரியாத சிரிப்புடன், சற்று ஏளனமாக சிரித்த போன்று சிரித்து விட்டு தலையை குனிந்து கொண்டார்.

இன்னும் ஒரு தமிழ் வயதான பெண்மணி என்னை உற்றுப் பார்ப்பதும், பின்னர் எதையோ யோசிப்பதும், மீண்டும் என்னை பார்ப்பதுமாக இருந்தார்.

நான் எழும்பி சற்று நடப்பம் என்று நடக்கும் போது, அங்கு ஒரு பெரிய கண்ணாடி ஒன்று பொருத்தி இருந்ததை அவதானித்து விட்டு அதில் என்று என்னைப் பார்த்தேன்.

அந்த கண்ணாடி முன் நின்று பார்க்கும் போதுதான் அந்த ரீஷேர்ட் இல் என்ன எழுதி இருந்தார்கள் என்பதும், அந்த சதுரங்களில் என்ன பொறித்து இருந்தார்கள் என்பதும் உறைத்தது.

கடும் நீல நிறம்.

நெஞ்சுப் பகுதியில் ஆங்கிலத்தில் ஒரு வரி எழுதி இருந்தது.

அந்த வரி "என் நட்சத்திரம் என்ன சொல்கின்றது (My Star Says...) என்று இருந்தது.

அதன் கீழ் ஒரு சதுரப் பெட்டி

அந்த சதுரப் பெட்டிக்குள் சில சின்ன சின்ன சித்திரங்கள்.

சதுர பெட்டியின் கீழ் இன்னொரு வரி.

அந்த வரி "நான் தான் அடுத்த பில்கேட்ஸ்" (I will be the next Bill Gates ) என்று இருந்தது.

சதுரத்துக்குள் இருந்த சித்திரங்கள், நான் பில்கேட்ஸ் ஆக வருவதற்கான கிரக நிலைகள்.

முழுக்க முழுக்க சாத்திரம் சம்பந்தமான விடயங்கள் பொறித்த ரீஷேர்ட் அது,

தமிழகத்தில் இருந்து ரொரண்டோவுக்கு சாத்திரம் சொல்ல வரும் சாஸ்திரி கூட இப்படி ஒரு ரீஷேர்ட்டை அணிந்து இருக்க மாட்டார்.

குக்கிராமம் ஒன்றில் இருந்து வரும் பாமரர்கள் கூட இப்படி அணிந்து இருக்க மாட்டார்கள்.

அவ்வளவு ஏன்.. கொலுவில் வைத்து இருக்கும் பொம்மை கூட இதை விட நல்லா உடுப்பு போட்டு இருக்கும்.

அந்த இளம் பெண் பார்த்தது ஏளனப் பார்வை என்று புரிந்தது

அந்த வயதான தமிழ் பெண்மணி பார்த்தது "இவரிடம் சாத்திரம் கேட்டுப் பார்ப்பமா" என நினைத்து என்பதும் புரிந்தது.

அவ்வளவுதான்.

அப்படியே ஒதுக்கு புறமாக நின்று விட்டு, போர்டிங்க் பாஸ் இனைக் காட்டும் இடத்தில் " 2 நாட்களாக சரியாக நித்திரை கொள்ளவில்லை... எனவே ஓய்வெடுக்க கூடிய சீட் தந்தால் நல்லம்" என்று சொல்லிப் பார்க்க, அவர்கள் (சிங்கள இளைஞர்கள் தான் அங்கு வேலை செய்தனர்), உடனே விமானத்தின் ஆகக் கடைசி சீட்டை ஒதுக்கித் தந்தனர். 

இந்த சீட்டில் பக்கத்தில் ஒருவர் மட்டுமே அமர்ந்து வருவர். நல்ல இட வசதி கொண்ட சீட். எனக்கு பிடித்தமான சீட் அது.

அன்று பக்கத்து சீட்டுக்கு ஒருவரும் வரவில்லை என்பதால் மனசுக்குள் ஒரு நிம்மதி. நல்ல வேளை ஒருவரும் இல்லை.

விமானம் புறப்பட்டது

14 மணி நேரம் பறந்து விமானம் ரொரண்டோவில் தரையிறங்கியது.

வேகமாக கடவுச் சீட்டை காட்டி விட்டு வெளியே வர, மனைவி என்னை பிக்கப் பண்ண மகளுடன் வந்து இருந்தார்.

12 நாட்கள் என்னைக் காணததால் கட்டிப் பிடிக்க ஓடிவந்த என் மகள் அருகே வந்ததும் ஓட்ட்டத்தை நிறுத்தி, மூக்கை சுளித்து

"அப்பா...உங்களில் ஏன் இப்படி புளிச்ச பால் மாதிரி Bad smell வருகுது" என்று கேட்டு விட்டு இரண்டடி தள்ளி நகர்ந்தவள் மீண்டும் என்னை பார்த்து 

" Why  you are wearing such an ugly T Shirt"  

எனக் கேட்டாள்

----------------------------

யாவும் மெய் - மெய்யைத் தவிர வேறோன்றுமில்லை பராபரமே
 

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு எல்லா கிரகமும் உச்சம் பெற்றுக் கொண்டிருந்திருக்கு ஆனாலும் என்ன எல்லா கிரகமும் வேறெங்கேயோ வெள்ளி பார்த்துக் கொண்டிருக்கு......இதை படிச்சு சிரித்துக் கொண்டிருக்க மனிசியும் ஒரு மாதிரி பார்த்துக் கொண்டு போகுது.....இது நிஜமா மறக்க முடியாத அனுபவம்தான்......!   😂

Edited by suvy
எ. பிழை திருத்தம்......!

  • கருத்துக்கள உறவுகள்

விடுமுறைக்குப் போகும் போது மனைவி பிள்ளைகளை வீட்டில் விட்டு விட்டு தனியாகப் போகும் உங்களின் போக்கு பிடித்திருக்கிறது

F317-C254-BD07-4989-8-CE4-8-FFB9-A21-F50

  • தொடங்கியவர்

வரலாற்றின் பொன் எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டிய ரீஷேர்ட் இது தான்.

 

337396883_774218580502076_8728090682802423015_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

க‌ட்டாரில் இருந்து எனக்கு கோல் / ஈமைல் பண்னியிருந்தால் நான் நல்ல உடை வாங்கி தந்திருப்பேனே. 

  • கருத்துக்கள உறவுகள்

 மறக்க முடியாத அனுபவம்தான்.வாசிக்கும் போது காட்ச்சி மனதில் 3 டியில் ஓடியது.😄

  • கருத்துக்கள உறவுகள்

அசிங்கப்பட்டார் ஆல் இன் ஆல் அழகு ராஜா!

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.