Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பீட்டர் மற்றும் வெர்ட்டிக்கோ - சின்ன கதை

Featured Replies

அவர்கள் அவரை பீற்றர்  என்று சத்தமாக அழைத்தமையால் தான் அவர் இருக்கும் திசையை நான் பார்க்க தொடங்கினேன். அதுவரைக்கும் நான் புத்தகம் வாசித்து கொண்டு இருந்தமையால் அவரை கவனிக்கவில்லை.

அங்குள்ள பாதுகாப்பு உத்தியோகத்தவர்களுக்கு அவர் நன்கு பரிச்சயமானவர் போல அவர்கள் தோழமையுடன் அவரை அணுகிக் கொண்டு இருந்தனர்.

இப்படியானவரை எப்படி இங்கு அனுமதிக்கின்றார்கள் என புரியவில்லை.  மனசுள் கொஞ்சம் கோபமும் எழத் தொடங்குகியது.

நேரம் நடு இரவு 10 மணியை தாண்டி சென்று கொண்டு இருந்தது.

8 மணிக்கே அருகில் இருக்கும் பொது மருத்துவமனையின் அவசர பிரிவுக்கு சிகிச்சைக்காக வந்து விட்டேன். எல்லாம் பார்த்து என்ன பிரச்சனை என்று சொல்ல  இன்னும் நான்கு மணி நேரமாவது செல்லும் சில வேளைகளில் என்னை மறிச்சு வைத்து சில நாட்கள் சிகிச்சை அளித்தாலும் அளிப்பார்கள். அப்படி தங்க வேண்டி வந்தால் லப் டொப்பை (Laptop) கொண்டு வர மனைவிக்கு சொல்ல வேண்டும்.

சில தினங்களுக்கு முன்னர் வேலையில் இருக்கும் போது பகல் 10 மணி இருக்கும்,  திடீர் என்று தலை சுற்றியது. கண்ணுக்குள் நட்சத்திரங்கள் பறந்தன. உடல் தன்   சமநிலையை தொலைத்து விட்டது போன்று இருந்தது. எல்லாம் மூன்று வினாடிகள் தான். பிறகு சரியாகி விட்டது. 

பிறகு பின்னேரம் 5 மணி இருக்கும் அதே மாதிரி ஒரு தலை சுற்றல், நட்சத்திரங்கள் பறப்பு, சமநிலை குழம்புதல்.. எல்லாம் மூன்று வினாடிகள் தான், பிறகு சரியாகி விட்டது

அடுத்து வந்த சனி ஞாயிறு தினங்களில் தலை சுற்றல் வர வில்லை. இடையில் ஒருக்கால் பிரஷர் செக் பண்ண வேண்டும் என்று நினைத்தும் நேரம் கிடைக்கவில்லை. திங்கட் கிழமை வேலைக்கு வந்த பிறகும் பிரச்சனை ஒன்றும் இருக்கவில்லை. பின்னேரம் வேலையில் இருந்து வீட்டுக்கு காரில் ஹை வேயில் 120 கிலோ மீற்றர் வேகத்தில் போய்க் கொண்டு இருக்கின்றேன். திடீர் என்று மீண்டும் அதே தலை சுற்றல், கண்கள் இருட்டிக் கொண்டு வந்தமாதிரி இருக்கின்றது, வெள்ளிக் கிழமை வந்த அதே நட்சத்திரங்க்கள் திரும்பவும் வந்து மின்னிக்கொண்டு நின்றன.. பாதை ஒரு சுழட்டு சுழற்றியது...ஆனால் எல்லாம் மூன்று வினாடிகள் தான்.

அடுத்தது என்ன செய்வது என யோசித்தேன். காரை ஓரமாக நிப்பாட்டிட்டு கொஞ்ச நேரம் பொறுத்து பார்ப்பமா என நினைத்தேன். ஆனால் ஒரு அசட்டு தைரியம் (அல்லது முட்டாள் தனம்). காரை நிறுத்தாமல் வீட்டுக்கு அதே வேகத்தில் வந்து சேர்ந்து விட்டேன். வீட்டை வந்தும் ஒன்றும் சொல்லாமல் மனைவியை வோல் மார்ட்டுக்கு (Walmart) வா என்று கூட்டிக் கொண்டு போய் அங்கு பிரஷரை செக் பண்ணினால் அது தாறு மாறாக 182/120 என்று காட்டியது.

அவ்வளவு தான் அடுத்த வினாடியே அவசர பிரிவுக்கு மனைவி அழைத்துக் கொண்டு வந்து விட்டார்.

கனடாவில் அவசர பிரிவுக்கு வந்தால்  முதலில் தாதி வந்து பிரஷர் / இதய துடிப்பு, உடல் வெப்ப நிலை எல்லாம் செக் பண்ணி பார்ப்பார். ஒன்றும் பெரியளவு பயப்படும் படி இல்லை என்றால் மருத்துவர்களை சந்திக்க ஆகக் குறைந்தது 5 மணித்தியாலங்களாவது காத்திருக்க வேண்டும். சில வேளை 8 மணித்தியாலங்களும் எடுக்கும். இடையில் வருத்தம் கூடுவது போன்று இருந்தால் போய் சொன்னால் கவனிப்பார்கள்.

நேரம் கனக்க போகும் என்று தெரியும் என்பதால் தமிழ் நதியின் 'பார்த்தீனியம்' நாவலை வாசிக்க தொடங்குவம் என்று கையோடு கொண்டு போயிருந்தேன். இரவில் பிள்ளைகள் தனிய வீட்டில் விட கூடாது என மனைவியை வீட்டுக்கு அனுப்பி விட்டு ஆஸ்பத்திரி கதிரையில் இருந்து அங்கும் இங்கும் நோட்டமிட்டேன்.

கண்ணுக்கு குளிர்ச்சியா ஒருத்தியும் இல்லை.  எல்லா கதிரைகளும் நிரம்பி வழிந்தன. ஒவ்வொருவரது முகங்களும் ஒவ்வொரு விதமான வேதனைகளை கேள்விகளை எழுப்பிக் கொண்டு இருந்தன. ஒரு வயதான பெண்மணி தொடர்ந்து இருமிக் கொண்டு இருந்தார். ஒரு குழந்தை தன் அப்பாவுடன் மாத்திரம் வந்து அவரது மடியில் தலை வைத்து படுத்துக் கிடந்தது. என் மகளின் நினைவு வந்தது. நான் திரும்பி போகும் மட்டும் முழித்து இருக்க கூடிய சீவன் அது. ஒருவர் காலில் பெரிய காயத்துடன் வந்து இருந்தார். ஒரு சோடி தம்மை மறந்து முத்தமிட்டுக் கொண்டு இருந்தனர். அதில் இருந்த பெண்மணி இடைக்கிடை தான் முத்தம் கொடுப்பதை மற்றவர்கள் பார்க்கின்றனரா என்று நோட்டம் வேறு விட்டுக் கொண்டு இருந்தார்.

சுவாரசியமாக எதுவும் இல்லாமையால் பார்த்தீனியத்தை வாசிக்க தொடங்கி அதற்குள் மூழ்கி கொண்டு இருக்கும் போது தான் "பீற்றர் பீற்றர்" என்று அவரை கொஞ்சம் சத்தமாக அழைத்தது கேட்டது.

யாரந்த பீற்றர் என நோட்டமிட்டேன்.

ஒன்றுக்கு மூன்று அழுக்கடைந்த உடுப்புகளை அணிந்து கொண்டு, தாடிக்குள் முகத்தின் முக்கால்வாசியை மறைத்துக் கொண்டு ஒருவர் அமர்ந்து இருந்தார். அவர் அருகில் எவரும் அமர்ந்து இருக்கவில்லி. ஒரு நைந்து போன ஸ்கூல் பாக் ஒன்றும் இருந்தது.

அவர் வீடற்ற ஒருவர் என உடனே புரிந்து போனது. அத்துடன் மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று இருந்தார்.

இடைக்கிடை அவர் பெரும் சத்தம் எழுப்பினார். அழுகின்றார் போன்றும் இருந்தது.

திடீர் என்று தனக்கு முன்னால் இருந்த பெரும் இலையான் கூட்டத்தை கலைப்பது போன்று இரண்டு கைகளாலும் எதையோ விரட்டினார். கத்தினார், சத்தமிட்டார், அழுதார், சிரித்தார் பின் அமைதியானார்.

அவர் குறிப்பிட்ட இடைவெளி விட்டு மீண்டும் மீண்டும் கத்திக் கொண்டும் எதையோ / எவரையோ விரட்டிக் கொண்டும் இருந்தார். அப்படி ஒவ்வொரு முறை செய்யும் போதும் பாதுகாப்பு உத்தியோகத்தவர்கள் அவரை கொஞ்சம் கண்டிப்புடன் "பீற்றர் பீற்றர்" என அழைத்து அதட்டினர். ஒவ்வொரு அதட்டலின் பின்பும் அவர் அமைதியானார்..

ஏற்கனவே சனம் வருத்தத்துடன் வந்து இருக்கு, இவர்கள் ஏன் இவரை விரட்டாமல் உள்ளே வைத்து அனுமதிக்கின்றார்கள் என எரிச்சல் வந்தது.

"ஏன் இப்படியானவர்களை விரட்டி விட்டு உன்னை மாதிரி ஆக்களுக்கு மட்டும்தானா இந்த உலகம் மிஞ்ச வேண்டும்" என்று இன்னொரு மூலையில் இருந்து புத்தி கேள்வி கேட்டது

என்னால் அதன் பின் புத்தகம் மீது கவனத்தை செலுத்த முடியவில்லை. ஏதோ ஒன்று அவர் பால் ஈர்த்துக் கொண்டே இருந்தது. அவர் என்ன செய்கின்றார், எப்படி கண்களை மூடுகின்றார், எப்ப கைகளை ஆட்டி ஆட்டி விரட்டுகின்றார்" என அடிக்கடி பார்த்துக் கொண்டே இருந்தேன். அதுவும் சுவாரசியமாக இருந்தது

 'க்ளக்' என்று ஒரு சத்தம்

அருகில் இருந்த சோடி தாம் ஆளாளுக்கு பருக்கிக் கொண்டு இருந்த கோப்பியை தவறுதலாக சிந்தி விட்டார்கள். தரையெல்லாம் கோப்பி. .

'ஒரு கோப்பியை கூட ஒழுங்காக ஆளாளுக்கு பருக்க தெரியவில்லை...உதுக்குள ஆளாளுக்கு முத்தம் வேற...மூதேசிகள்'

சிந்திய கோப்பியில் இருந்து வந்த மணம் வயிற்றை புரட்டுவது போல இருந்தது.

கொஞ்சம் அங்கால பார்த்தால் ஒருவர் தான் சாப்பிட்டுக் ககொண்டு இருந்த பொப் கோர்னை சிந்தி விட்டு இருந்ததும் தெரிந்தது. நடு இரவையும் தாண்டி பலர் காத்திருப்பதால் பலர் பசிக்கு ஏதாவது வாங்கி உண்டு கொண்டு இருந்தனர். சிந்திய உணவு பலரது இருக்கைகளின் கூழ் இருந்தது.

'சாப்பாட்டை கூட சிந்தாமல் சாப்பிட தெரியாத சனம்".  நேரம் போக போக எதுக்கெல்லாமோ மனம் எரிச்சலடைந்து கொண்டு இருந்தது.

பீற்றரின் இருக்கையின் கீழ் எதுவும் இருக்கவில்லை. சுத்தமாக இருந்தது.

சில நிமிடங்களில்  என் பெயரை சொல்லி உள்ளே அழைக்கின்றார்கள்.

டொக்டர் என்ன நடந்தது எனக் கேட்டு லைட்டை அணைத்தார் (ரேப் பண்ண போறாரோ) பின் கண்களை அங்கால இங்கால உருட்டி பிரட்டி பார்க்க சொன்னார் (மாறி கண் வைத்தியரிடம் வந்து விட்டேனா). மூக்குக்கு முன்னால் நேராக விரலை வைத்து அதையே உத்து பார்க்க சொன்னார். தன் தலையை சிலுப்பி கொண்டார்.

"பிரஷர் கூடவா டொக்டர்" எனக் கேட்டேன்.

"இல்லை, பிரஷர் கூடினால் ஒரு நாளும் தலை சுற்றல் வராது. நீ தலை சுற்றியதால் பயந்து போய் விட்டாய், அதுதான் உன் பிரஷர் கூடக் காட்டியது. ஆனால் 182/120 எல்லாம் அதிகமாக பயப்படும் அளவுக்கானது இல்லை." என்றார் (அப்ப பிரசர் கூடி நெஞ்சு பிளந்தால் தான் அடுத்த முறை வர வேண்டும் போல)

"எதுக்கும் இரத்தம் சோதித்து பார்க்க வேண்டும்" என்று தாதியை கூப்பிட வந்த தாதியும் வஞ்சகம் இல்லாமல் நாலு சிறு போத்தல்களில் இரத்தம் எடுத்துக் விட்டு "ரிசல்ட்ஸ் வரும் வரைக்கும் வெளியே காத்திரு" என்றார்

"எவ்வளவு நேரம் எடுக்கும்"

"ஒன்றரை மணித்தியாலமாவது எடுக்கும்'

மணி 12:30 தாண்டி விட்டு இருந்தது.

மீண்டும் காத்திருப்போருக்கான வராந்தாவுக்கு வருகின்றேன். வராந்தா பளிச் என்று இருக்குது. கீழே கொட்டப்பட்ட உணவு, கோப்பி, பொப் கோர்ன் என்று எதுவுமே இல்லை.  எல்லாம் துடைத்து துப்பரவாக இருந்தது.

"இந்த இரவிலும் சுத்தப்படுத்தி இருக்கின்றார்கள்... கனடா கனடா தான்" என நினைத்து கொண்டு பீற்றர் இன்னும் இருக்கின்றாரா என  பார்க்கின்றேன். அந்த சுத்தமான இடத்தில் ஒரு அழுக்கு மூட்டையாக அவர் அமர்ந்து இருந்தார். மீண்டும் எரிச்சலாக இருந்தது.

"ஏன் இன்னும் இந்த மனுசனை விரட்டாமல் விட்டு இருக்கின்றார்கள்"

கொஞ்சம் களைப்பாக இருந்தது. பாவி மகள் 4 போத்தல் இரத்தம் எடுத்ததால் இருக்குமோ என நினைத்து உள்ளே இருக்கும் கோப்பி கடைக்கு போய் ஒரு டபிள் டபிள் கோப்பி வாங்கி வந்து குடிக்க தொட்ங்கினேன்

என் மொபைல் அடித்தது. மனைவி நிலவரம் அறிய தொலைபேசினார். கால்களுக்கு இடையில் கோப்பியை வைத்து விட்டு அவருடன் கதைத்து முடித்தேன். பின் நாளைக்கு வேலைக்கு லேட்டாக வருவன் என்று ஒரு மெயிலையும் மானேஜருக்கு அனுப்பி விட்டு கால்களை மாற்றி வைக்கும் போது கோப்பியை தட்டி விட்டேன்.

நிலத்தில் கோப்பி சிறு உலகப் படம் போல திக்குகள் நீள பரவியது

"இவனுக்கு கோப்பியை கூட ஒழுங்காக குடிக்க தெரியவில்லை" என சனம் நினைக்கும் என்றெண்ணி பார்க்கின்றேன். ஆரும் என்னை கவனித்த மாதிரி தெரியவில்லை. அவரவருக்கான உலகில் அவர்கள் இருந்தனர். கனடா மக்களின் பொதுவான சுபாவம் அது.

எல்லாரும் அமர்ந்த இடங்கள் சுத்தமாக இருக்க என் இருக்கையின் கீழ் கோப்பி சிந்தி அழுக்காக கிடந்தது. பீற்றர் என்னை பார்க்கின்றாரா என கவனித்தேன். அவர் மீண்டும் எதையோ காற்றில் கலைத்து கொண்டு இருந்தார்.

மெதுவாக எழும்பி இன்னொரு இருக்கைக்கு சென்று நல்ல பிள்ளையாக அமர்ந்து விட்டேன். ஒருவரும் கவனிக்கவில்லை.

ஒரு மணித்தியாலம் கழிய என் பெயரை மீண்டும் அழைக்கின்றனர்.

இரத்த பரிசோதனையிலும் ஒரு பிரச்சனையும் இல்லை.

"அப்ப ஏன் டொக்டர் தலை சுற்றியது"?

"உனக்கு வெர்ட்டிகோ (Vertigo) பிரச்சனை.." என்றார்

"அப்படி என்றா;..."?

"காதுக்குள் உடலை சமனிலையில் பேணும் திரவம் இருக்குது..அது சில நேரம் குளம்பிவிடும் ..அதுதான் தலை சுற்றியது உனக்கு"

"அப்ப இதுக்கு மருந்து ஏதும்"

"ஒன்றும் தேவையில்லை..இதில் சொல்லியிருக்கிற இலேசான உடற்பயிற்சியை செய்..அதோட கொஞ்சம் உயரமான தலையணை போட்டு படு" என்றார் டொக்டர்'. அத்துடன் மீண்டும் பிரஷர் செக் பண்ணும் போது அது நல்ல பிள்ளை போல 132/90 என்று காட்டியது..."

மனசு நிம்மதியானது. ஐஞ்சு மணித்தியாலம் காத்திருந்தது வீண் என நினைத்தாலும் உடம்புக்கு ஒன்றும் இல்லை என்று மனம் அறிந்து சந்தோசப்பட்டது. வாயில் "ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேகம் நீ தான் " எனும் பாடல்  வந்து ஒட்டிக் கொண்டது.

வராந்தாவுக்கு வந்து வெளியேறும் கதவை அடையும் போது தான் பீற்றரின் நினைவு வந்தது. மீண்டும் வராந்தவுக்குள் வந்து பீற்றர் அமர்ந்து இருந்த இடத்தை பார்க்கின்றேன்

அதில் அவர் இல்லை

எங்கே போயிருப்பார் என சுற்றும் முற்றும் பார்க்கின்றேன்

பீற்றரை காணுகின்றேன்.. .

நான் முன்னர் அமர்ந்து இருந்த இடத்தில் குனிந்து இருந்த படி ஏதோ செய்கின்றார்

என்ன செய்கின்றார் என வடிவாக  பார்க்கின்றேன்

நான் கொட்டிய கோப்பியை ஒரு துணியால் துடைத்து விட்டு எழுந்து கொள்கின்றார்

வராந்தா மீண்டும் பளிச் என்று ஆகின்றது

.

4 hours ago, நிழலி said:

 

ஏற்கனவே சனம் வருத்தத்துடன் வந்து இருக்கு, இவர்கள் ஏன் இவரை விரட்டாமல் உள்ளே வைத்து அனுமதிக்கின்றார்கள் என எரிச்சல் வந்தது.

"ஏன் இப்படியானவர்களை விரட்டி விட்டு உன்னை மாதிரி ஆக்களுக்கு மட்டும்தானா இந்த உலகம் மிஞ்ச வேண்டும்" என்று இன்னொரு மூலையில் இருந்து புத்தி கேள்வி கேட்டது

பலரின் சிந்தனை உங்கள் முதல் வாய்கியத்துடன் முற்றுப்பெறுகின்றது. அவர்களின் தேடல் என்பதும்  அத்தோடு நின்றுவிடுகின்றது. என்னும் சிலர் முற்றுப்புள்ளிக்குப் பதிலாக தொடர்ச்சிக்குறியைப் போட்டு பாவம் என்று இரக்க உணர்வையும் கொள்வார்கள்.. மானுடத்தின் அழகு என்பது இந்த உலகு எனக்கு மட்டுமானதில்லை என்ற பொதுப் புத்தியின் விழிப்பிலேயே உள்ளது.  அதை ஒரு சிறு கதையாக முனவைத்ததும் சிறப்புதான்.

4 hours ago, நிழலி said:

பீற்றரை காணுகின்றேன்.. .

நான் முன்னர் அமர்ந்து இருந்த இடத்தில் குனிந்து இருந்த படி ஏதோ செய்கின்றார்

என்ன செய்கின்றார் என வடிவாக  பார்க்கின்றேன்

நான் கொட்டிய கோப்பியை ஒரு துணியால் துடைத்து விட்டு எழுந்து கொள்கின்றார்

வராந்தா மீண்டும் பளிச் என்று ஆகின்றது

சிந்தனை எதைத் தேடியதோ அது கிடைத்தது.. நீங்கள் குறையில் விட்டதொன்று அவரால் முடித்து வைக்கப்பட்டது ! 

---

நல்லதொரு ஆக்கம்.. கதை எழுதி பரிட்சயம் உள்ளவர் போல் எழுத்து நடை. தன்னிலையை முன்வைப்பதில் நேர்மை. தொடர்ந்து எழுதுங்கள். 

 

  • கருத்துக்கள உறவுகள்

அவசர நோயாளர் பிரிவில் இன்று மதியம்தான் நின்று விட்டு திரும்பினேன். அட இங்கு வந்து அதன் தொடர்ச்சியா???????

நல்லதோர் ஆக்கம் வெட்டுக்கிளி. நோயைக்காட்டிலும் மனதின் அலைக்கழிவும், தேடலும், திருப்தியில்லாத்தன்மையும் நோயை அதிகரிக்க வல்லன. இந்த மூளை நரம்புகள்தான் எவ்வளவு சக்தி வாய்ந்தன. சதா ஏதேனும் சிந்தனையில் ஆழ்ந்தும், தேடல்களில் மூழ்கியும் எக்களைப்பும் இன்றி அவற்றிற்குத்தான் இயங்கும் சக்தி எல்லையற்று இருக்கின்றன. உண்மையிலேயே சிறுகதை எழுத எண்ணும்போது எதை எழுத என்ற அங்கலாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது. ஏற்கனவே எல்லோரும் எல்லாவற்றையும் எழுதிவிட்டார்களே. எதை நாம் கருப்பொருளாகக் கொள்வது என்பதில் பெரும் போராட்டமே நிகழ்ந்து விடுகிறது. வெட்டுக்கிளிக்கு அருமையான தளம் கதையை நகர்த்திச் செல்வதில் இயல்பான ஓட்டம். இன்று காலையில் இருந்து மதியம் வரை அங்கு நின்று விட்டு இப்போது கதையை வாசித்து மறுபடியும் அங்கேயே குடிபோய்விட்டதைப்போன்று பிரமை ஏற்பட்டுவிட்டது. வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அவசரப் பிரிவுக்கு போவதை விட  வீட்டிலேயே இருந்து வருவதை எதிர்கொள்ளலாம் என்றுதான் வைத்தியசாலைகளின் மந்தமான சேவைகள் எங்களை நினைக்கச் செய்கின்றன.

என்னதான் சொந்த வீடுகளில் துப்பரவாக்கி சுத்தமாக இருந்தாலும் பொது இடங்களில் தங்கள் அழுக்குகளையே பலர் சுத்தப்படுத்துவதில்லை.  துப்பரவாக்கும் பணியாளர்கள் அதைப் பார்த்துக்கொள்வார்கள் என்று தப்பிக்கும் மனப்பான்மைதான் காரணம். வேலைத் தளங்களில், விமான நிலையத்தில் உள்ள கழிப்பிடங்கள் எப்போதும் நாறிக்கிடப்பதும் இப்படியான சிந்தனையால்தான்.

பீற்றர் போல ஒருவர் இப்படியான இடங்களில் இருப்பதும் வைத்தியசாலைச் சிப்பந்திகளுக்கு வேலைகளைக் குறைக்கும்தானே.

  • கருத்துக்கள உறவுகள்

கன காலத்துக்குப் பிறகு....நிழலியின்... கதை!

நான் வேலை செய்யிற இடத்தில் ஒருத்தி..இருக்கிறாள்! அவளுக்கு...இந்த வெர்டிகோ..பிரச்சனை உள்ளதாம்! அவள் சொன்ன பிறகு தான்...இப்படி ஒரு வருத்தம் இருக்கிறது..எனக்குத் தெரியும்! ஒரு சின்ன வித்தியாசம்...அவளுக்கு நித்திரை கொள்ளும் நேரத்தில் மட்டும் தான் இது ..வந்து போகுமாம்! படுத்திருக்கும் கட்டில்....செங்குத்தாக...ஒரு சில நிமிடங்களுக்குச் சுற்றி விட்டு...நின்று விடுமாம்! பின்னர்...சில மணி நேரங்களுக்குத் தூக்கமே வராமல் ..கட்டிலில் எழும்பிக் குந்திக் கொண்டிருக்க வேண்டி வரும்..என்று சொன்னாள்! அவளது அனுபவத்துடன் ஒப்பிடும் போது...வெறும் நட்சத்திரங்களுடன்..நீங்கள் தப்பியது..அதிர்ஷ்டம் போலத் தான் உள்ளது!

கடும் இரத்த அழுத்தமான நிலையிலும்.....துயர் தோய்ந்த...ஆஸ்பத்திரியின் வெளி நோயாளர் பகுதியிலும்...அழகிய பெண் முகங்களைத் தேடும்..ஆணின் மனது அப்படியே....எந்த ஒளிவு மறைவுமில்லாது...அப்படியே விபரிக்கப் பட்டிருப்பது...கதையின் சிறப்பென்பேன்!

பீற்றர் போன்றவர்கள்..எம்மிடையே நிறையவே வாழ்கின்றார்கள்! நாங்கள் தான்...அவர்கள் போன்றவர்களைக் கணக்கில் எடுக்காதவாறு..எமது மூளைகளைப் பழக்கப் படுத்தி...வைத்திருக்கிறோம்!

சில...மணித்துளிகளுக்குள்...பீற்றரின்....நிலைக்கு நாம் வந்து விடக்கூடும் என்பதை..நாம் ஒரு போதும்...கணக்கில் எடுப்பதில்லை!

அண்மையில் எடுக்கப் பட்ட ஒரு கணக்கெடுப்பில்...அவுஸ்திரேலியாவில்...அறுபது வீதமானோருக்கு...மனநோய் பிரச்னை உள்ளது! இது தொடர்ந்தும் அதிகரித்தப் படியே செல்கின்றது!  மனித மனம் என்பது....ஒரு தளமான தரையில் உள்ள பந்தைப் போன்றது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்! ஒரு மெல்லிய அசைவு..கூட...அந்தப் பந்தை..நிலை தடுமாறச் செய்து விடுமாம்!

பீற்றர் கொஞ்சம்.....மன நோயின்...தாக்கங்களை..வெளிப்படுத்தும் நிலைக்கு வந்துள்ளார்! ஆனாலும்...ஒருகாலத்தில்..நல்ல தூய்மையான வாழ்வை ..வாழ்ந்தவராக இருக்கும் போல உள்ளது!

தொடர்ந்தும் ..எழுதுங்கள்...நிழலி!

  • தொடங்கியவர்
11 hours ago, சண்டமாருதன் said:

பலரின் சிந்தனை உங்கள் முதல் வாய்கியத்துடன் முற்றுப்பெறுகின்றது. அவர்களின் தேடல் என்பதும்  அத்தோடு நின்றுவிடுகின்றது. என்னும் சிலர் முற்றுப்புள்ளிக்குப் பதிலாக தொடர்ச்சிக்குறியைப் போட்டு பாவம் என்று இரக்க உணர்வையும் கொள்வார்கள்.. மானுடத்தின் அழகு என்பது இந்த உலகு எனக்கு மட்டுமானதில்லை என்ற பொதுப் புத்தியின் விழிப்பிலேயே உள்ளது.  அதை ஒரு சிறு கதையாக முனவைத்ததும் சிறப்புதான்.

சிந்தனை எதைத் தேடியதோ அது கிடைத்தது.. நீங்கள் குறையில் விட்டதொன்று அவரால் முடித்து வைக்கப்பட்டது ! 

---

நல்லதொரு ஆக்கம்.. கதை எழுதி பரிட்சயம் உள்ளவர் போல் எழுத்து நடை. தன்னிலையை முன்வைப்பதில் நேர்மை. தொடர்ந்து எழுதுங்கள். 

 

நான் உட்பட ஏனையவர்கள் பார்வைக்கு அழுக்கற்று இருந்தோம், ஆனால் பீற்றர் பார்வைக்கு அழுக்காக இருந்தார். எது அழுக்கு என்பது நாம் வளரும் சமூகம் சொல்லிக் கொடுத்த பொதுவான  சூத்திரத்தை வைத்து கொண்டு எடுக்கப்படும் அளவீடுகள். அந்த அளவீடுகள் எவ்வளவு முரணானவை என்பதை பீற்றர் உணர்த்திய தருணத்தில் இந்த கதையின் கரு கிடைத்தது.

இதற்கு முதல் 2 சிறுகதைகள் யாழிலும் ஒரு சிறு கதை சரிநிகரிலும் இன்னொன்று 22 வயதில் தினமுரசிலும் எழுதி இருக்கின்றேன். இறுதியாக 2014 மார்ச்  இற்கு பிறகு  எழுதிய கதை இது,

பின்னூட்டத்துக்கு நன்றி

  • தொடங்கியவர்
12 hours ago, வல்வை சகாறா said:

அவசர நோயாளர் பிரிவில் இன்று மதியம்தான் நின்று விட்டு திரும்பினேன். அட இங்கு வந்து அதன் தொடர்ச்சியா???????

நல்லதோர் ஆக்கம் வெட்டுக்கிளி. நோயைக்காட்டிலும் மனதின் அலைக்கழிவும், தேடலும், திருப்தியில்லாத்தன்மையும் நோயை அதிகரிக்க வல்லன. இந்த மூளை நரம்புகள்தான் எவ்வளவு சக்தி வாய்ந்தன. சதா ஏதேனும் சிந்தனையில் ஆழ்ந்தும், தேடல்களில் மூழ்கியும் எக்களைப்பும் இன்றி அவற்றிற்குத்தான் இயங்கும் சக்தி எல்லையற்று இருக்கின்றன. உண்மையிலேயே சிறுகதை எழுத எண்ணும்போது எதை எழுத என்ற அங்கலாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது. ஏற்கனவே எல்லோரும் எல்லாவற்றையும் எழுதிவிட்டார்களே. எதை நாம் கருப்பொருளாகக் கொள்வது என்பதில் பெரும் போராட்டமே நிகழ்ந்து விடுகிறது. வெட்டுக்கிளிக்கு அருமையான தளம் கதையை நகர்த்திச் செல்வதில் இயல்பான ஓட்டம். இன்று காலையில் இருந்து மதியம் வரை அங்கு நின்று விட்டு இப்போது கதையை வாசித்து மறுபடியும் அங்கேயே குடிபோய்விட்டதைப்போன்று பிரமை ஏற்பட்டுவிட்டது. வாழ்த்துக்கள்

காலமும் அதன் அனுபவங்களும் மாற மாற எழுதிய கதைகளை விட இன்னும் எழுதாத கதைகள் என்று கோடி கணக்கில் இருக்கும் என நினைக்கிறேன்.

கடந்து போகும், நிகழ்ந்து முடியும், நிகழ இருக்கும் எல்லா விடயங்களிலும் ஒன்றுக்கு மேற்பட்ட 'கதைகள் ' ஒளிந்து கிடக்கின்றன. அதை கதையாக சொல்ல ஆயிரம் கைகளும் கோடி எழுத்துக்களும் இன்னும் தேவைப்படுகின்றன

பின்னூட்டத்துக்கு நன்றி சகாறா

  • தொடங்கியவர்
7 hours ago, கிருபன் said:

அவசரப் பிரிவுக்கு போவதை விட  வீட்டிலேயே இருந்து வருவதை எதிர்கொள்ளலாம் என்றுதான் வைத்தியசாலைகளின் மந்தமான சேவைகள் எங்களை நினைக்கச் செய்கின்றன.

பீற்றர் போல ஒருவர் இப்படியான இடங்களில் இருப்பதும் வைத்தியசாலைச் சிப்பந்திகளுக்கு வேலைகளைக் குறைக்கும்தானே.

இங்கே இருப்பது மந்தமான சேவை என்று சொல்லிவிட முடியாது. Ambulance இல் ஒருவர் வரும் நிலை ஏற்பட்டால் உடனடியாக கவனிப்பார். விபத்தில் சிக்கியவர் என்றாலும், மாரடைப்பு, நெஞ்சு வலி போன்ற அதிகம் பயப்படும்படியான விஷயங்கள் என்றாலும் உடனடியாக கவனிப்பார். அப்படி இல்லாவிட்டால் first come first serve தான். கூடியவரைக்கும் தேவையான அனைத்து test களும் எடுத்து results வந்த பின்னர் தான் வீட்டுக்கு அனுப்புவர்.

  • தொடங்கியவர்
7 hours ago, புங்கையூரன் said:

கன காலத்துக்குப் பிறகு....நிழலியின்... கதை!

நான் வேலை செய்யிற இடத்தில் ஒருத்தி..இருக்கிறாள்! அவளுக்கு...இந்த வெர்டிகோ..பிரச்சனை உள்ளதாம்! அவள் சொன்ன பிறகு தான்...இப்படி ஒரு வருத்தம் இருக்கிறது..எனக்குத் தெரியும்! ஒரு சின்ன வித்தியாசம்...அவளுக்கு நித்திரை கொள்ளும் நேரத்தில் மட்டும் தான் இது ..வந்து போகுமாம்! படுத்திருக்கும் கட்டில்....செங்குத்தாக...ஒரு சில நிமிடங்களுக்குச் சுற்றி விட்டு...நின்று விடுமாம்! பின்னர்...சில மணி நேரங்களுக்குத் தூக்கமே வராமல் ..கட்டிலில் எழும்பிக் குந்திக் கொண்டிருக்க வேண்டி வரும்..என்று சொன்னாள்! அவளது அனுபவத்துடன் ஒப்பிடும் போது...வெறும் நட்சத்திரங்களுடன்..நீங்கள் தப்பியது..அதிர்ஷ்டம் போலத் தான் உள்ளது!

கடும் இரத்த அழுத்தமான நிலையிலும்.....துயர் தோய்ந்த...ஆஸ்பத்திரியின் வெளி நோயாளர் பகுதியிலும்...அழகிய பெண் முகங்களைத் தேடும்..ஆணின் மனது அப்படியே....எந்த ஒளிவு மறைவுமில்லாது...அப்படியே விபரிக்கப் பட்டிருப்பது...கதையின் சிறப்பென்பேன்!

பீற்றர் போன்றவர்கள்..எம்மிடையே நிறையவே வாழ்கின்றார்கள்! நாங்கள் தான்...அவர்கள் போன்றவர்களைக் கணக்கில் எடுக்காதவாறு..எமது மூளைகளைப் பழக்கப் படுத்தி...வைத்திருக்கிறோம்!

சில...மணித்துளிகளுக்குள்...பீற்றரின்....நிலைக்கு நாம் வந்து விடக்கூடும் என்பதை..நாம் ஒரு போதும்...கணக்கில் எடுப்பதில்லை!

அண்மையில் எடுக்கப் பட்ட ஒரு கணக்கெடுப்பில்...அவுஸ்திரேலியாவில்...அறுபது வீதமானோருக்கு...மனநோய் பிரச்னை உள்ளது! இது தொடர்ந்தும் அதிகரித்தப் படியே செல்கின்றது!  மனித மனம் என்பது....ஒரு தளமான தரையில் உள்ள பந்தைப் போன்றது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்! ஒரு மெல்லிய அசைவு..கூட...அந்தப் பந்தை..நிலை தடுமாறச் செய்து விடுமாம்!

பீற்றர் கொஞ்சம்.....மன நோயின்...தாக்கங்களை..வெளிப்படுத்தும் நிலைக்கு வந்துள்ளார்! ஆனாலும்...ஒருகாலத்தில்..நல்ல தூய்மையான வாழ்வை ..வாழ்ந்தவராக இருக்கும் போல உள்ளது!

தொடர்ந்தும் ..எழுதுங்கள்...நிழலி!

இங்கு வீடற்றவர்கள் மேல் அநேகமானோர் கொண்டுள்ள பொது புத்தி 'உழைக்க விரும்பாத போதை பொருள் பாவனையால் தெருவுக்கு வந்த பேர்வழிகள்' என்பதாகதான் இருக்கு.

அண்டைக்கு ஒரு நாள் மகனை வைத்து கொண்டு காரில் போகும் போது ஒரு வீடற்றவர் பணம் இரந்து கொண்டு இருந்தார். அவரை சுற்றி இன்னும் சில வீடற்றவர்கள். நான் மகனுக்கு கூறியது

"...இங்கு இருப்பவர்கள் ஒரு காலத்தில் தாம் இப்படி ஆவோம் என்று கற்பனை கூட செய்து இருக்க மாட்டார்கள் ... வாழ்க்கை ஒரு நொடியில் எல்லாவற்றையும் மாற்றி விடும்... . ' இவர்களுக்கு நீ வளர்ந்த பிறகு  உதவாமல் விட்டால் கூட பரவாயில்லை ஆனால் மதிக்காமல் விட்டு விடாதே' என்று

வீடற்றவர்களாக ஆவதற்கும் மனம் குழம்பி போவதற்குமான அனைத்து  குழிகளையும் அருகருகே வைத்து  கொண்டு தான் எம் வாழ்வு போகின்றது. தடுக்கி விழவும் தள்ளி விடப்படவும் சந்தர்ப்பங்கள் ஏராளம்

---

வெர்ட்டிக்கோ

இது நிகழ்ந்தது இரு வாரங்களுக்கு முன். Emergency இற்கு போய் வந்த பின் மீண்டும் இந்த நிமிடம் வரைக்கும் வரவில்லை. ஒரு மருந்தும் தேவையில்லை.  இது எவருக்கும் நிரந்தரமாக உறையும் பிரச்சனை அல்ல. ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் தானாக சரியாக வேண்டும். இல்லையெனில் வேறு பிரச்சனை ஒன்றின் ஆரம்ப அறிகுறியாக இருக்கும்

https://www.nhsinform.scot/illnesses-and-conditions/ears-nose-and-throat/vertigo

  • கருத்துக்கள உறவுகள்

வேர்ட்டிகோ இருப்பது இனிமேல் நிழலியானந்தவுக்கு ரொம்பவும் கை கொடுக்கும்.பொது இடங்களிலோ அல்லது பேரூந்து தொடரூந்திலோ போகும் போது பக்கத்திலுள்ள பெண்ணின் மீது சாய்ந்து ஏதாவது பிரச்சனை வந்தால் வேர்ட்டிகோ சொல்லியே தப்பித்துக் கொள்ளலாம்.

18 hours ago, நிழலி said:

ஒரு சோடி தம்மை மறந்து முத்தமிட்டுக் கொண்டு இருந்தனர். அதில் இருந்த பெண்மணி இடைக்கிடை தான் முத்தம் கொடுப்பதை மற்றவர்கள் பார்க்கின்றனரா என்று நோட்டம் வேறு விட்டுக் கொண்டு இருந்தார்.

முத்தமிடுவதை விட முத்தமிடுவதை பார்த்துக் கொண்டிருப்து கூடுதல் இன்பம் என்கிறார்கள்.

தொடர்ந்தும் வாசிக்க கூடியதான உங்கள் எழுத்துநடை மிகவும் பாராட்டத் தக்கது.

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு  கரு

கன  காலத்துக்கு  பின்னர் நிழலியின் கதை

தூண்டிய நண்பருக்கு நன்றிகள்

என:னையும் இக்கதை  தூண்டியிருக்கிறது

ஒரு கரு இருக்கிறது

விரைவில் பதிகின்றேன்

 

உங்கள்  உடல்நிலை  சார்ந்து..

கவனமாக  இருங்கள்

நித்திரை  முக்கியம்

நித்திரையால் எழும்பும் போது சிறு அவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள்

இதற்கு மருந்து உங்கள்  அமைதியில் தான்  இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

பைத்தியம் பிடித்தவர்களுக்குத்தான் சுத்தம் பிடிக்கிறது. நிழலி உங்கள் சின்னக்கதை அருமை. அழகான எழுத்து நடை.

சின்னக்கதையில் இரண்டு தடவை பத்துமணி வருகிறது. ஒன்று நடு இரவில், இதில் ‘நடு’ வை தவிரத்திருக்கலாம். மற்றது பகல் பத்துமணி. பகலை,  காலை ஆக்கியருக்கலாம். தவறு என்றல்ல அது வெர்ட்டிகோவால் (Vertigo) வந்த பிரச்சனை.??

  • கருத்துக்கள உறவுகள்

நிழலிக்கே உரிய எழுத்து நடை. சூழலை அவதானித்து மிக யதார்த்தமாக நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். இந்த வேட்டிக்கோ என்னையும் ஒரு முறை பதம் பார்த்தது. காலடியில் உலகமே தட்டாமாலை சுற்றுவதுபோல் சுழன்றது. இந்த நேரத்தில் வாகனம் ஓட்டுவது மிகவும் ஆபத்தானது. இதற்குரிய மாத்திரைகளை சிறிது நாளைக்கு ஒழுங்காக எடுத்ததால் சுகமடைந்தேன். 
பீட்டர் போல் சிலர் மனநிலை பாதிக்கப்பட்டாலும் சமூகத்திற்கு உதவியாக இருக்கிறார்கள். நல்லதொரு கதை. கதை எழுத வைத்த அவசர சேவைப் பிரிவுக்கு நன்றி.

  • தொடங்கியவர்
22 hours ago, ஈழப்பிரியன் said:

வேர்ட்டிகோ இருப்பது இனிமேல் நிழலியானந்தவுக்கு ரொம்பவும் கை கொடுக்கும்.பொது இடங்களிலோ அல்லது பேரூந்து தொடரூந்திலோ போகும் போது பக்கத்திலுள்ள பெண்ணின் மீது சாய்ந்து ஏதாவது பிரச்சனை வந்தால் வேர்ட்டிகோ சொல்லியே தப்பித்துக் கொள்ளலாம்.

 

 

 

குருவே...! பிரமாதமான யோசனை ஒன்றை கூறியுள்ளீர்கள். அப்படியே ஆகட்டும்.

Quote

முத்தமிடுவதை விட முத்தமிடுவதை பார்த்துக் கொண்டிருப்து கூடுதல் இன்பம் என்கிறார்கள்.

இரண்டுமே கூடுதல் இன்பம்!

  • தொடங்கியவர்
22 hours ago, விசுகு said:

உங்கள்  உடல்நிலை  சார்ந்து..

கவனமாக  இருங்கள்

நித்திரை  முக்கியம்

நித்திரையால் எழும்பும் போது சிறு அவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள்

இதற்கு மருந்து உங்கள்  அமைதியில் தான்  இருக்கிறது

நான் ஒரு நாளைக்கு 8 மணித்தியாலம் சொலிட்டாக நித்திரை கொள்ற ஆளாக்கும். வேர்ட்டிகோ வருவதற்கு என்று ஒரு பிரத்தியோக காரணம் எதுவுமில்லை.

 

22 hours ago, Kavi arunasalam said:

பைத்தியம் பிடித்தவர்களுக்குத்தான் சுத்தம் பிடிக்கிறது. நிழலி உங்கள் சின்னக்கதை அருமை. அழகான எழுத்து நடை.

சின்னக்கதையில் இரண்டு தடவை பத்துமணி வருகிறது. ஒன்று நடு இரவில், இதில் ‘நடு’ வை தவிரத்திருக்கலாம். மற்றது பகல் பத்துமணி. பகலை,  காலை ஆக்கியருக்கலாம். தவறு என்றல்ல அது வெர்ட்டிகோவால் (Vertigo) வந்த பிரச்சனை.??

பீற்றரை பைத்தியம் என்று என்று குறிப்பிட மனம் தயங்குகின்றது. அவரது செயல்கள் எம் வழக்கமான  செயல்களிலிருந்து மாறாக இருக்கின்றது. எவருக்கும் கரைச்சல் தராத ஒரு சீவன் போல இருக்கின்றார்.

  • தொடங்கியவர்
17 hours ago, Kavallur Kanmani said:

நிழலிக்கே உரிய எழுத்து நடை. சூழலை அவதானித்து மிக யதார்த்தமாக நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். இந்த வேட்டிக்கோ என்னையும் ஒரு முறை பதம் பார்த்தது. காலடியில் உலகமே தட்டாமாலை சுற்றுவதுபோல் சுழன்றது. இந்த நேரத்தில் வாகனம் ஓட்டுவது மிகவும் ஆபத்தானது. இதற்குரிய மாத்திரைகளை சிறிது நாளைக்கு ஒழுங்காக எடுத்ததால் சுகமடைந்தேன். 
பீட்டர் போல் சிலர் மனநிலை பாதிக்கப்பட்டாலும் சமூகத்திற்கு உதவியாக இருக்கிறார்கள். நல்லதொரு கதை. கதை எழுத வைத்த அவசர சேவைப் பிரிவுக்கு நன்றி.

 

என்னுடன் வேலை செய்கின்றவர்களும் என் அனுபவத்தை அறிந்த பின் தமக்கும் ஒரு சில தடவையாவது இப்படி வேர்ட்டிகோ வந்து போயிருக்கு என்று சொல்கின்றார்கள். எனக்கு இப்படி ஒன்று இருப்பதை பற்றி இதற்கு முதல் அறிந்து இருக்கவில்லை. ஆனால் பலருக்கு இது பற்றி தெரிந்து இருக்கு,

பின்னூட்டத்துக்கு நன்றி அக்கா.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நிழலி said:

 

என்னுடன் வேலை செய்கின்றவர்களும் என் அனுபவத்தை அறிந்த பின் தமக்கும் ஒரு சில தடவையாவது இப்படி வேர்ட்டிகோ வந்து போயிருக்கு என்று சொல்கின்றார்கள். எனக்கு இப்படி ஒன்று இருப்பதை பற்றி இதற்கு முதல் அறிந்து இருக்கவில்லை. ஆனால் பலருக்கு இது பற்றி தெரிந்து இருக்கு,

பின்னூட்டத்துக்கு நன்றி அக்கா.

ஊரில சில பேர் பித்தம் கூடிவிட்டதென்று கையோட்டி சத்தியெடுப்பார்கள்.

ஒருவேளை வெர்டிக்கோவா இருக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் ஆக்கம் நிழலி.

  • கருத்துக்கள உறவுகள்

பீற்றர் துடைத்துவிட்டுபோனது வராந்தாவை மட்டுமல்ல,நான்+நீங்கள்= நாம் என்று  எம்மைபற்றி நாமே உயர்வாய் நினைத்து எடுக்கும் வாந்திகளையும் சேர்த்து, சமூகத்தின்மேல் விழுந்த சாட்டையடி பதிவு!

  • கருத்துக்கள உறவுகள்

பகட்டும் பந்தாவுமாக முழு அழுக்கையும் சுமந்து வாழும்  மனிதர்களிடையே
பீட்டர் போன்றவர்கள் ஒளிந்திருந்தாலும் அவர்களின் அப்பழுக்கற்ற
செயல்களும் மனிதமும் ஒளிர்ந்துகொண்டேயிருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது அனுபவம் எங்களுக்கும் அனுபவம் மட்டுமன்றி பாடத்தையும் சொல்லியிருக்கு. நாலு பாட்டில்களில் இரத்தம் எடுப்பது ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியே அனுப்புவதற்கு. இல்லையென்றால் ஒவ்வொரு பாடத்துக்கும் ஒவ்வொரு வகுப்பறைக்கு செல்வதுபோல் நீங்களும் அந்தந்த செக்சனுக்கு சென்று இந்தா "பிடிச்சுக்கோ எடுத்துக்கோ "என்று தானம் பண்ண வேண்டி இருக்கும்.....!  tw_blush:

  • தொடங்கியவர்
On ‎2‎/‎17‎/‎2018 at 5:18 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நல்லதோர் ஆக்கம் நிழலி.

நன்றி சுமே

 

On ‎2‎/‎18‎/‎2018 at 12:16 PM, valavan said:

பீற்றர் துடைத்துவிட்டுபோனது வராந்தாவை மட்டுமல்ல,நான்+நீங்கள்= நாம் என்று  எம்மைபற்றி நாமே உயர்வாய் நினைத்து எடுக்கும் வாந்திகளையும் சேர்த்து, சமூகத்தின்மேல் விழுந்த சாட்டையடி பதிவு!

வாழ்க்கையில் இப்படி எத்தனையோ சாட்டையடிகளை வாங்கினாலும் அது தான் பழக்கப்பட்ட பாதையில் தான் திரும்பவும் போகின்றது.

பின்னூட்டத்துக்கு நன்றி வளவன் 

On ‎2‎/‎19‎/‎2018 at 6:36 AM, வாத்தியார் said:

பகட்டும் பந்தாவுமாக முழு அழுக்கையும் சுமந்து வாழும்  மனிதர்களிடையே
பீட்டர் போன்றவர்கள் ஒளிந்திருந்தாலும் அவர்களின் அப்பழுக்கற்ற
செயல்களும் மனிதமும் ஒளிர்ந்துகொண்டேயிருக்கும்

ஓம் வாத்தியார், இப்படியான முரண்பாடுகளை பல தடவை அவதானித்துள்ளேன்.

பின்னூட்டத்துக்கு நன்றி வாத்தியார்

On ‎2‎/‎19‎/‎2018 at 10:22 AM, suvy said:

உங்களது அனுபவம் எங்களுக்கும் அனுபவம் மட்டுமன்றி பாடத்தையும் சொல்லியிருக்கு. நாலு பாட்டில்களில் இரத்தம் எடுப்பது ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியே அனுப்புவதற்கு. இல்லையென்றால் ஒவ்வொரு பாடத்துக்கும் ஒவ்வொரு வகுப்பறைக்கு செல்வதுபோல் நீங்களும் அந்தந்த செக்சனுக்கு சென்று இந்தா "பிடிச்சுக்கோ எடுத்துக்கோ "என்று தானம் பண்ண வேண்டி இருக்கும்.....!  tw_blush:

பதிவை போட்டு முதல் இரண்டு மூன்று  நாட்கள்  எங்க ஆளை காணவில்லை என்று தேடினேன்.

பின்னூட்டத்துக்கு நன்றி சுவி அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் நல்லதோர் அனுபவத்தினை எங்களுடன் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள் நிழலி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.