Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சான்றிதழ்.

அது ஒரு முன்னிரவு கூடிய மாலை நேரம். மலைநாட்டுக்கே உரிய குளிரும், குளிர்காற்றுடன் சாரலும் அடித்து கொண்டிருக்கு. பாதையும் படுத்திருக்கும் பாம்புபோல் வளைந்து நெளிந்து மேலே மேலே போகிறது.அதில் அந்த ஹையஸ் வண்டி கொண்டைஊசி வளைவுகளில் நிதானமாக ஊர்ந்து ஏறிக்கொண்டிருக்கு.அதன் ஹெட்லைட் இரண்டும் புலியின் கண்கள்போல் மினுங்கி கொண்டிருக்கு. இராகவன் மூன்றாவது கியரில் வண்டியை மிகவும் மெதுவாக செலுத்திக் கொண்டிருக்கிறான். வண்டியின் ஸ்டீரியோவில் சன்னமான குரலில் h.r  ஜோதிபால.......,

"ஆதர மல் பவண்னே 

ஆயன மே கமண்ணே 

ஹொய்தோ யன்னே 

கவுதோ என்னே 

துலீகா ....துலீகா ...... பாடிக்கொண்டு வருகிறார்.

அந்த இனிமையான சிங்களப் பாடல் செவியூடாக மனசில் வியாபிக்கிறது. அவனின் பல்லிடுக்கில் r .v .g .பீடி எரிய மூக்கினால் புகை வெளியேறுகின்றது. வண்டி சமதளத்தில் வருகின்றது. சற்று தூரத்தில் ஒரு பஸ் தரிப்பிடம். அதில் வீதியை பார்த்தபடி ஒராள் நிக்கிறார். அருகே வருகையில் அது ஒரு பெண் எனத் தெரிகின்றது. அவள் முகத்தில் வேதனையுடன் காலை உதறிக் கொண்டிருந்தாள். வண்டியை பார்த்ததும் தனது தாவணியை உருவி அசைத்து நிறுத்துமாறு சைகை செய்கின்றாள். வண்டி நிக்காமல் அவளைக் கடந்து செல்கின்றது. ஒரு நிமிஷம் யோசித்தவன்,தனக்குள் இந்த நேரத்துக்கு இனி இங்கு பஸ் வராது. கூட்டிக்கொண்டு போய் கடைகளுக்கு கிட்ட விடுவம் என நினைத்து றிவ்வார்ஸில் அவளருகே வருகின்றான். அவள் வலியுடன் பதட்டமாய் நிப்பதைப்  பார்த்து, வண்டியை சிறிது திருப்பி அந்த இடத்துக்கு வெளிச்சம் படுமாறு நிறுத்தி காண்ட் பிரேக் போட்டுவிட்டு இறங்கி அவளருகே வருகின்றான்.

இராகவன்: மொக்கத நோனா கோகேத யன்னே ....,( என்ன பெண்ணே எங்கு போகிறாய்).

பெண் : மாத்தையா, ஓயாட்ட  மட்ட உதவி கறன்ன புழுவந்த. யம் பழிபோதாக் கயி.....( ஐயா எனக்கு கொஞ்சம் உதவ முடியுமா, எதோ பூச்சி கடிக்குது ).

அவளது முகத்தையும் உடையையும் பார்த்தவன், நீங்கள் தமிழா. இங்கு யாரையாவது தேடி வந்திருக்கிறீர்களா. எங்கு காட்டுங்கள்.

ஓம் நான் தமிழ்தான். இங்கு கடிக்குது என்று காலை காட்டுகின்றாள். எடுக்க வருகுதில்லை.

பொறுங்க நான் பார்க்கிறன், என்று சொல்லி பார்த்தால் அவளது கணுக்காலுக்கு மேல் ஆடுதசையில் மலை அட்டை ஒன்று கடித்து இரத்தம் உறிஞ்சிக்கொண்டிருக்கு. இது மலை அட்டை  அசைய வேண்டாம் என்று சொல்லி வில்லுக் கத்தியை எடுத்து  அவளது சுடிதாரை வெட்டி விட்டு பார்க்க அது இரத்தம் குடித்து குண்டாகிக்  கொண்டிருக்கு. இராகவன் சற்றும் தாமதிக்காமல் பீடியின் நெருப்பை கிள்ளி எறிந்துவிட்டு அந்த பீடியை சப்பி அந்த ஜந்துவின் மேல் பொளிச் பொளிச் என்று துப்புகிறான்.அவளிடம் பேச்சு குடுத்துக் கொண்டே மீண்டும் மீண்டும் எச்சிலை உமிழ அது கடிப்பதை விட்டு தலையை உயர்த்துகிறது. அவனும் சுணங்காமல் கத்தியால் அதை வழித்து எடுத்து அப்பால் போட்டுவிட்டு அவளையும் ஏற்றிக்கொண்டு கடைகள் இருக்கும் இடத்துக்கு வருகின்றான். சில கடைகள் மட்டுமே அங்கிருக்கு.அங்கே அவளை இறக்கிவிட்டு செல்கிறான். அவனது கடையும் பேக்கரியும் அந்த வீதியின் கோடியில் இருக்கு.அங்கு வானை நிறுத்திவிட்டு உள்ளே போனவன் உறங்கி விடுகின்றான்.

சோதனை தொடரும்....!

 

 

  • Replies 66
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சான்றிதழ் .....!

அதிகாலை 3.00 மணியளவில் அவனது நண்பன் விமலதாஸ மோட்டார் சைக்கிளில்  அங்கு வருகின்றான். இருவரும் பாண் மற்றும் பனிஸ்  தயாரிக்கும் வேலையில் மும்மரமாய் இருக்கின்றார்கள். காலை 6:00 மணி.பொழுது கொஞ்சம் புலர்ந்து வருகுது.மலையகம் துயில் எழுகின்றது.விமலும் வேலைகளை முடித்துவிட்டு பாய்லரை தயார்பண்ணி இருவருக்கும் தேனீர்  போட்டு கொண்டுவந்து இருவரும் அருந்துகின்றனர்.அப்போது இராகவன் இரவு நடந்ததை சொல்லுகிறான். பின்பு விமல் தனது சைக்கிளில் கிளம்பிப் போகின்றான்.உடனே திரும்பி வந்து மச்சான் "ஏ கெல்ல இன்னவா. பாபய சம்பூர்ண அயிதயகி ". அந்த பொண்ணு அங்க இருக்கு.பாவம் நல்ல குளிர் தெரியுமா.

இராகவனும்  "ஒவ் மட்ட அமதக்க வுனா". ஓம் நான் மறந்திட்டன். "அபி யண்ணம்" போய் பார்ப்பம் வா. இருவரும் போன பொழுது அவள் குளிரில் நடுங்கிக் கொண்டு பெட்டியை அனைத்துக் கொண்டு இருக்கிறாள். விமல் பெட்டியை துக்க,  இருவருமாக அவளை அழைத்து வந்து கடையில் போறணைக்கு அருகில் அமர வைக்கின்றார்கள். விமல் தூக்கிவந்த பெட்டியை பக்கத்தில் வைத்துவிட்டு போகிறான். இராகவன் சுடச்  சுட தேநீர் போட்டு வந்து அவளிடம் தர அதை இரு கைகளாலும் பொத்திப் பிடித்து வாங்குகிறாள். அந்தசூடு கை வழியே உடலில் பரவி நடுக்கம் குறைகிறது. போறணையின் கதகதப்பும் அவளது ஆயாசத்தைப் போக்குகின்றது. அவன் போய் இரண்டு டிஸ்பிரினும், சித்தாலேப்பை புட்டியையும் கொண்டுவந்து அவளிடம் தந்து, களிம்பை அட்டை கடித்த இடத்தில் பூசச்சொல்கிறான். கடைக்கு ஆட்கள் வர பாண், தேநீர் வியாபாரம் சூடு பிடிக்கிறது. இடையில் ஒரு வேலையாள் வந்து பெட்டிகளில் இருந்த பொருட்களையெல்லாம் வானில் ஏற்றிக் கொண்டு செல்கின்றார். அவை ஆஸ்பத்திரி,பாடசாலைகள்,முதியோர் இல்லம்,சிறைச்சாலைக்கு எல்லாம் போகின்றது.

அந்தப் பெண் அங்கேயே நிலத்தில் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறாள். நினைவுகள் பின்னோக்கி.....!

    தெய்வநாயகியின் குடும்பம் இலங்கையின் குறிப்பிடத்தக்க கோடீஸ்வரர்களில் ஒன்று. அவர்களின் வியாபாரம் இரத்தின கற்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் கொள்வனவு மற்றும் ஏற்றுமதி. உலகளாவிய ரீதியில் ஐந்து நட்ச்சத்திர ஹோட்டல்கள், விமான நிலையங்கள் போன்றவற்றில் அவர்களின் ஷோரூம்கள் இருக்கும். தெய்வநாயகியின் ஒரே மகன் சித்தார்த். அப்பா சில வருடங்களின் முன்பு காணாமல் போன விமானத்தில் போய் காணாமல் போய்விட்டார். ஹேமா அங்கு வேலைக்கு வந்த பெண். பட்டதாரி. மிகக்  குறுகிய காலத்திலேயே அந்த வியாபாரத்தின் நெளிவு சுளிவுகள்  நுணுக்கங்கள் எல்லாம் அத்துப்படி. ஒரு கல்லை பார்த்ததுமே அதன் காரட், பெறுமதி உள்ளுரில் மற்றும் வெளிநாட்டில் அதன் பெறுமதி எல்லாம் கணக்கு போட்டு விடுவாள்.  சித்தார்த் அவளை விரும்பி பின் பெற்றோர்களின் சம்மதத்துடன் அவளைத் மணமுடித்திருந்தான். அவர்களது திருமணத்துக்கு நாட்டின் பிரதான அமைச்சர்கள், பிரபலங்கள் எல்லோரும் வந்திருந்து வாழ்த்தினார்கள். தெய்வநாயகியும் மருமகளுக்கு  பெறுமதியான நீலவைரம் ஒன்றை பட்டுத்துணியில் வைத்து பரிசாகத் தந்திருந்தாள்.

அவர்களுக்கு இருந்த ஒரே குறை மணமாகி ஐந்து வருடங்களாகியும் பேர் சொல்ல பிள்ளை இல்லை. மாமியார் வாரிசுக்காக ஏங்குகிறாள். சித்தார்த் நல்லவன்தான் ஆனால் முன்கோபக்காரன்.ஒழுக்கங்களும் சரியில்லை. ஒருமுறை அவனது அலுமாரியை துப்பரவாக்கும் பொழுது அவனது அத்தனை பாடசாலை சான்றிதழ்களும் அங்கு குப்பையாக கிடந்தன.அவற்றை ஒழுங்காக அடுக்கும்போது பார்க்கிறாள், எல்லாப் பாடங்களிலும் சிறப்பான பெறுபேறுகள் பெற்றிருக்கின்றான். ஆனால் ஒழுக்கம் என்ற இடத்தில் மட்டும் அத்தனை சான்றிதழ்களிலும் குறைவு, திருந்தவேண்டும் என்றே குறிப்பிடப் பட்டிருந்தன.அது தெரிந்ததுதானே என்று தனக்குள் சொல்லிக் கொண்டே அடுக்கி வைக்கிறாள்.

அவன் போகும் பார்ட்டிகளுக்கு எல்லாம் கட்டாயம் அவளும் போயாக வேண்டும். மது அருந்த வைத்து நடனம் எல்லாம் ஆடவேண்டும். முதலில் வெறுப்பாக இருந்தாலும் பின் அதுவே பழக்கமாகி விட்டது. இரண்டு வருடங்களுக்கு முன் இருவரும் வைத்தியரிடம் சென்று ஆலோசனை பெற்றபோதும் இருவரிடமும் ஒரு குறையும் இல்லை. மேலும் இரு வருடங்களாகி விட்டன. இந்த திரண்ட சொத்துக்களுக்கு ஒரு வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்று தெய்வநாயகிக்கு கவலையாகி விட்டது. அதுக்காக அவளை விவாகரத்து செய்துவிட்டு அவனுக்கு வேறு மணம் புரியம் முயற்சிகளில் ஈடுபடுகின்றார்கள்.அதுவும் அவளுக்கு முன்னாலேயே ஏற்பாடுகள் நடக்கும்போது ஹேமா வெறுமையை உணருகின்றாள். அவள் யோசித்து பார்க்கிறாள், தங்களது தாம்பத்திய உறவுகள் ஒருபோதும் சீராக நடந்ததில்லை. மேகங்கள் திரண்டுவந்து திவலை நீர் கூட பூமிக்கு தராமல் களைந்து போவதுபோல்தான் அந்த உறவுகள் இருந்திருக்கின்றன.எதையும் நிதானமாய் உணர்வதற்கு அவனது முன்கோபம் விடாது.அவள்மீது பழியை போட்டுவிட்டு தன்பாட்டுக்கு போய்விடுவான்.தாயும் தன் பிள்ளையை விட்டுக்கொடுக்க மாட்டாள்.அதனால் மருமகள் மீது கோபப்படுவதும் வாடிக்கையாகி விட்டது. 

சோதனை தொடரும்.....!

 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, suvy said:

சோதனை தொடரும்.....!

 

சுவியர் வழமை போல தொடர் எழுத ஆரம்பித்துள்ளீர்கள்.இம் முறை நான் சிங்களத்திலும் குறைந்தவனல்ல என்று மார்தட்டி நிற்கிறது தெரிகிறது.  

மிகுதிக்கும் ஆவலாக இருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
  1. விறுவிறுப்பான தொடர் கதை ஆரம்பித்துள்ளார் சுவி. என்ன  சிங்களத்திலும் புலமை மிக்கவரா நீங்கள்?  தொடருங்கள் காத்திருக்கிறோம்
  • கருத்துக்கள உறவுகள்

அட நீங்கள் முதலே கதையை ஆரம்பிச்சாச்சா????நான் தான் கவனிக்கவில்லை. ஆவலுடன் மிகுதிக்காக காத்ருக்கிறோம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சான்றிதழ்......!

அவர்களாகவே ஹேமாவுக்கும் ஒரு வக்கீலை நியமித்து சில கோடிரூபாய் பணமும்,வெள்ளவத்தையில் ஒரு வசதியான அப்பார்ட்மென்டும் தந்து, அவள் விரும்பினால் அந்த வேலையில் அவள் தொடரலாம் என்றும் சொல்லி சுமூகமாய் விவாகரத்தை முடித்து விட்டார்கள். இந்த இடைப்பட்ட  காலத்தில் ஹேமாவும் மனதளவில் தயாராகி இருந்தாள். கோர்ட்டில் விவாகரத்து முடிந்ததும் தான் அந்த வேலையில் தொடரப்போவதில்லை என்பதை பதிவுத்தபால் மூலம் தெரிவித்து இருந்தாள். ஒரு ஏஜென்ஸியைப் பிடித்து அந்த அப்பார்ட்மெண்டை வாடகைக்கு விட்டு பணம் தனது வங்கிக்கணக்கில் வரும்படி செய்திருந்தாள்.மேலும் வங்கியில் ஓர் லாக்கர் திறந்து அதில் தனது முக்கியமான பாத்திரங்கள்,விசாகார்ட், காசோலை, போன்,சிம், எல்லாவற்றையும் வைத்து பூட்டிவிட்டு வங்கியை விட்டு வெளியில் வந்து சில துணிமணிகளுடன் பெட்டியை எடுக்கும்போது அதில் அந்த நீலவைரம் இருக்குது.பரவாயில்லை இருக்கட்டும் என்று விட்டு பொட்டியை எடுத்துக்கொண்டு ஒரு பொது டெலிபோனில் இருந்து தன்கூட வேலைசெய்தவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு, தனது ஆருயிர் சிநேகிதி வந்தனாவிடம் "வந்தனா நான் கொழும்பை விட்டு வெகு தூரம் போகின்றேன். எங்கே போகின்றேன் என்று எனக்கு தெரியவில்லை,எங்காவது நான் நிலைப்பட்டபின் தொடர்பு கொள்கிறேன்."என்று கண்கலங்க விடைபெற்றுக்கொண்டு  குறைந்தது 10 வருடங்களாவது என்னுடைய எந்த அடையாளமுமின்றி கண்காணாத இடத்தில் வாழவேண்டும் என சங்கல்பம் எடுத்துக்கொண்டு முன்னாள் வந்த பஸ்ஸில் ஏறிக்கொண்டாள்.

நெடும் பயணத்துக்கு பின் பஸ்ஸைவிட்டு இறங்கி கால்போன போக்கில் நடந்து இருட்டில் அந்த தரிப்பிடத்தில் அட்டைக்கு ரத்தம் குடுத்து இப்பொழுது எங்கோ ஒரு மூலையில் பேக்கரியில் கொட்டிக் கிடைக்கும் கோதுமை மா மீது கோலம் போட்டபடி படுத்திருக்கிறாள். அருகே மாக்குழைக்கும் பெரிய நீள்சதுர மேசை, அதன்மேல் நீண்ட தடி இரு முனையிலும் கயிறு கட்டி தொங்க விட்டிருக்கு, அருகே ஒரு குமிழ் பல்பும் மேசையில் இருந்து ஒரு மீட்டர் உசரத்தில் தொங்குது. பல வருடங்களுக்கு பிறகு எந்தவித மனஅழுத்தங்களும் இல்லாமல் ஒரு நிம்மதியான ஆழ்ந்த உறக்கமாய் அது இருக்கு.

        அப்பப்ப வேலைக்கு நடுவே அங்கு வந்து பார்த்த இராகவன் அவளது நித்திரையை குழப்ப மனமின்றி தானாக எழும்பட்டும் என்று விட்டிருந்தான். கடையிலும் கூட்டமில்லை. இனி பின்னேரம்தான் ஆட்கள் வருவினம். மதியம் 2:00 மணிக்குமேல் அவள் எழும்புகிறாள்.காலில் வலி இல்லை. பின்பக்கம் போகிறாள். அங்கு ஒரு கிணறு, கக்கூசும், மூட்டைகள், விறகு,கரி போன்றவை வைக்க ஒரு கொட்டிலும் சற்று தள்ளி  தாமரை குளம் ஒன்றும் நிறைய பூக்களுடன் இருக்கு.கைகால் முகம் கழுவி பழைய உடுப்பை மாற்றி ஒரு மினிஸ்கர்ட்டை  உடுத்திக்கொண்டு அவள் வர மேசைமேல் சுடச்சுட கிரிபத்தும் கருவாட்டு குழம்பும் தயாராய் இருக்கு. வானொலியில் "சுந்தர லோவட்ட மல் வெகனா" நல்ல சிங்கள பாடல் ஒன்று போய்க் கொண்டிருக்கு.

அவன் சாப்பிட சொன்னதும் அந்த அகோர பசியிலும் நாசூக்காக  கிள்ளி கிள்ளி சாப்பிடுகிறாள். விக்கல் எடுக்க தண்ணி கிளாஸை அவளருகே அரக்கி வைக்கிறான். உன் பெயரென்ன என்று கேட்க அவள் ஹேமா என்கிறாள். எங்கிருந்து வருகிறாய், இனி எங்கு போகிறாய்  சொன்னால் முடிந்த உதவி செய்கிறன் என்று சொல்ல, ஹேமாவும் தான் கொழும்பில் ஒரு வீட்டில் வேலை செய்ததாகவும் அந்த முதலாளி தன்னை மோசமாக நடத்தியதால் தான் அங்கிருந்து கிளம்பி விட்டதாகவும், இப்போது எங்காவது ஏதாவது ஒரு வேலை தேடவேண்டும். கௌரவமாய் வாழவேண்டும் என்கிறாள். இது ஒரு சின்னஞ் சிறிய கிராமம் ஹேமா. இங்கு நீ வேலை எடுப்பது சிரமம்.விரும்பினால் இன்றிரவு நீ இங்கு தங்கிவிட்டு நாளை காலை முதல் பஸ் பிடித்து கண்டிக்கு போனால் அங்கு உனக்கு வேலை கிடைக்கலாம்.அவளும் சரி என்று சொல்லிவிட்டு சாப்பிட்ட இலையை  தொட்டிக்குள் போட பின்னால் போகிறாள். அங்கு ஒரு யானை நிற்பதைக் கண்டு அச்சத்துடன் பின்வாங்க, அது ஒன்றும் செய்யாது பயப்பிடாதை, பக்கத்து தஹநாயக்காவின் யானை குளத்திலே குளிக்க வந்திருக்கு என்கிறான் பின்னால் வந்த இராகவன். அப்போது தஹநாயக்காவும் பிள்ளைகளும் வந்து அதை குளத்துக்கு கூட்டிப்போகின்றார்கள். இவர்கள் வசதியானவர்கள் போல யானை எல்லாம் இருக்கு என்று அவள் சொல்ல, அப்படி இல்லை அதுதான் இவர்களுக்கு சாப்பாடு போடுது. விகாரை விழாக்கள், வீட்டு விசேஷங்களுக்கு கூட்டிப்போய் கூட்டி வருவார்கள். 

சோதனை தொடரும்.....!

 

அனேகமான யாழ் உறவுகளுக்கு பரிச்சயப்படாத சிங்கள ஊர் ஒன்றின் சூழலை பின்புலமாக கொண்டு கதையை கொண்டு செல்கின்றீர்கள். ஒவ்வொரு இடத்தின் சூழலை வருணிப்பது கதைக்குள்ளும் அது இடம்பேரும் களத்துக்குள்ளும் கொண்டு செல்கின்றது.

அது சரி அதென்ன "சோதனை தொடரும்" ? ஹேமாவுக்கா, இராகவனுக்கா ?

  • கருத்துக்கள உறவுகள்

இதே மூச்சோட எழுதி முடிச்சுப் போடவேணும் சொல்லீட்டன் அண்ணா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சான்றிதழ்......!

பின்பு இராகவனும் வானில் பாண் பெட்டிகள் எல்லாவற்றையும் டிலிவரி செய்வதற்காக ஏற்றிவிட்டு தயாராய் வருகின்றான். சாதாரணமாக அவன் வெளியே போகும்போது கடையை பூட்டிவிட்டு செல்வான். நிக்கும்போது கடையும் திறந்திருக்கும். அவன் தன்னை இங்கு விட்டு போக தயங்குகின்றான் என நினைத்த ஹேமா, அவனிடம் வந்து நீங்கள் கடையை பூட்டி விட்டு செல்லுங்கள். நீங்கள் வரும்வரை நான் வெளியே வாங்கில் இருக்கிறேன் என்று சொல்ல, இஞ்சால கொஞ்சம் வாருங்கள் என்று அவன் வெளியே அழைக்க, பொறுங்கள் என் பெட்டி  உள்ள இருக்கு என்று "சோடிச்செருப்பு வாங்கிக்கொண்டு ஓடின பெட்டைமாதிரி"பாய்ந்தடித்து போய் எடுத்து வருகிறாள். அவனும் சிரித்துக்கொண்டு அருகில் சுவரில் சாத்தியிருந்த பலகைகளை ஒவ்வொன்றாய் எடுத்து லாகவமாக பொருத்திக் கொண்டு வருகிறான்.நடுப் பலகையையும் பொருத்திவிட்டு அதில் இருந்த இரும்புச்சட்டத்தை கொழுவி பெரிய ஆமைப்பூட்டை போட்டுப் பூட்டுகிறான். அந்தப்பலகைகள் ஒவ்வொன்றிலும் வரிசையாக இலக்கங்கள் இடப்பட்டு இருக்கின்றன.அந்தக் கதவும் பூட்டும்கூட அவளுக்கு புதுமையாக இருக்கின்றது. இப்பொழுது அந்தமாதிரி அமைப்பை காண்பது அரிது. சற்று தள்ளி நிண்டு பார்த்தால் அவற்றில் சிங்களத்தில் "ஹேமமாலினி கபே"  என்று பலகைக்கொரு எழுத்தாக கரிக்கட்டியால் எழுதி இருக்கின்றது. பெயர் அழகாய் இருக்கு என்கிறாள்.

ஓம் இங்கு பக்கத்தில் ஒரு தாத்தா இருக்கிறார். அப்பப்ப கடையை பார்த்து கொள்வார்.அவர் நடிகை ஹேமமாலினியின் தீவிர ரசிகர்.அவவின் படத்தை பார்த்தாலே பாலபிஷேகம் செய்யுமளவு வெறியர் என்றுகூட சொல்லலாம்.அவர்தான் இதை எழுதியவர்.இதற்காக அவர்கூட சண்டையும் போட்டிருக்கேன்.ஆனால் இப்ப இந்தப் பெயரே இங்கு பிரபல்யமாகி விட்டது. அப்படியே அவளை கடையின் ஓரமாய் அழைத்துச்சென்று பின் கொட்டிலுக்கு அருகால் செடிகளை விலக்கி வளவுக்குள் வந்து இனி நீ இங்கு இருந்துகொள் நான் போயிட்டு வருகின்றேன் என்கிறான். முன்னுக்குத்தான் பூட்டு எல்லாம். பின்னால கடை முழுதும் போய்வரலாம்.அவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரிக்கிறாள், கணநாளைக்கப்புறம் மனம் விட்டு சிரிக்கிறாள். என்னத்தை கண்டு நீ இப்ப சிரிக்கிறாய்......, இல்லை நீங்கள் அதி உச்ச பாதுகாப்புடன் கடை வைத்திருக்கிறீர்கள். அப்படியல்ல இதுவரை இங்கு திருடர் யாரும் வந்ததில்லை என்று சொல்லிக்கொண்டே போகிறான்.

ஹேமா அங்கிருந்த தாமரை குளத்துக்கு வந்து கல்லில் அமர்கிறாள். குளம் நிறைய பூக்களாலும், மொட்டுக்கள், இலைகளாலும் நிரம்பிக் கிடக்கு. இவள் வந்ததும் கரையில் காற்று வாங்கிக் கொண்டிருந்த தவளைகள்,தேரைகள் எல்லாம் குளத்தில் குதித்தோடுகின்றன.தண்ணீர் சலனப்படுகின்றது. சுற்றுசூழல் மிகவும் ரம்மியமாக இருக்கின்றது. இப்ப குளம் தெளிந்து கீழே அசையும் மீன்கள்,குஞ்சுகள் எல்லாம் நன்றாக தெரிகின்றன. தாமரை இலையில் இருந்த தவளையொன்று ஒரு முழ நிலத்துக்கு நாக்கை நீட்டி ஒரு பூச்சியை சடடென்று பிடித்து விழுங்கி விடுகின்றது. அழகும் ஆபத்தும் தூரமாய் இல்லை, அருகருகேதான்.....! எழுந்து கடைக்குள் வந்தவள் ஏதாகிலும் வேலை செய்வம் என நினைத்து, தனக்கு தெரிந்தளவு கூட்டி மேசைகளைத் துடைத்து பாத்திரங்களை அலம்பி வைக்கிறாள். வான் வந்து வாசலில் நிக்கும் சத்தம் கேட்க இராகவனும் கடையை திறந்துகொண்டு வருகிறான். அவனிடம் ஒரு பதட்டம் தெரிகின்றது. 

என்ன பரபரப்பாக இருக்கிறியள், ஏதும் பிரச்சினையா.... ஓம் என் நண்பன் விமல் மோட்டசயிக்கிளுடன் சிறு விபத்தில் மாட்டிக் கொண்டான். காலில் பலமான அடி. அதனால் சில நாட்களுக்கு அவனால் வேலை செய்ய முடியாது. போன் எடுத்து யார்யாரோடோ கதைக்கிறான்.....!

சோதனை தொடரும்......!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சான்றிதழ்.......!

   காலையில் எல்லா இடத்துக்கும் பாண் சப்ளை செய்ய வேணும். யாரும் லைன்னில  வருகிறார்களில்லை அதுதான் யோசிக்கிறன்....!

ஹேமா: உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் நீங்கள் சொல்லும் வேலைகளை நான் செய்கிறேன். ஆனால் எனக்கு இந்த வேலை ஒன்றும் சுத்தமாய் தெரியாது.

இராகவனும் அப்பத்தான் கடையை பார்க்கிறான்.எல்லா இடமும் மிகமிக சுத்தமாய் இருக்கு......, நீயாகவே இங்கு நல்ல வேலைகள் செய்திருக்கிறாய்.நன்றி.முடிந்தால் நீ எனக்கு கொஞ்சம் உதவி செய்.அது எனக்கு பெரிய ஆறுதலாய் இருக்கும். இருவருமாக சேர்ந்து அடுத்த குடிசையில் இருந்து மா மூட்டைகள் விறகுகள் எல்லாம் கொண்டுவந்து போறணைக்கு அருகில் அடுக்குகின்றனர். பின் அந்த நீளமான மேசையில் மாவை கொட்டி அதன் நடுவே பெரிய பாத்தி கட்டி அதில் முட்டைகள், உப்பு,சீனி எல்லாம் அளவளவாக சேர்த்த தண்ணீர் விடுகின்றான். ஹேமாவும் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு தண்ணீர் ஓடாமல் மாவால் அணை கட்டிக்கொண்டு நிக்கிறாள். அவன் இருகால்களிலும் பொலித்தீன் பைகளை கட்டிக்கொண்டு வந்து மேசைமேல் ஏறி மேலே தொங்கும் கம்பை  பிடித்துக்கொண்டு உழக்கி உழக்கி மாவை குழைக்கிறான். ஹேமாவும் அதிர்ச்சியுடன் இப்படித்தான் பாண் செய்வார்களா என நினைத்துக்கொண்டு மாவை நடுநடுவே தள்ளி விடுகிறாள்.அவள் முகநெளிப்பில் இருந்து அவளின் மனவோட்டத்தை புரிந்து கொண்டவன், இப்பவெல்லாம் மாக்குழைக்க எலக்ட்ரிக் மிசின்கள் வந்து விட்டன. நானும் ஒன்று ஓடர் பண்ணியிருக்கிறேன். அது வந்தால் நேரமும் மிச்சமாகும் வேலையும் சுலபமாகும். அவனது வேகத்துக்கு அவளால் மாவை தள்ள முடியவில்லை. முகத்தில் இருந்து மேல் முழுதும் ஓடும் வியர்வையை தோளில் கிடக்கும் துண்டால் துடைத்து கொள்கிறான். ஹேமா,உன்னால் மேலிருந்து உழக்க முடியுமா எனக்கேட்க அவளும் சரி என்கிறாள்.

அவளை மேசைமீது இருத்தி கால்களில் புதிய பைகளை கட்டி விடவும் அவள் எழுந்து மாவின் மேல் நடந்து நடந்து மிதிக்கிறாள். அவள் கால்களில் மாவும்,நீர்க்கலவையும் தெறிக்க எதேட்சையாய் கையால் துடைத்து துடைத்து வேகமாய் மேலே தடியை பிடித்தபடி உழக்கி நடக்கிறாள். தொங்கும் மின்விளக்கின் வெளிச்சத்தில் கால்கள் பூராவும் பிக்காஸோவின் ஓவியங்களை பிச்சு பிச்சு ஒட்டியதுபோல் விரவிக் கிடக்கு. திடீரென அவளுக்கு தோன்றுகிறது, அடடா இந்த நேரம் பார்த்து நான் இந்த மினிஸ்கேர்ட்டை  போட்டுக்கொண்டு தைய தக்க என்று குதிக்கிறேனே ஓரக்கண்ணால் கீழே அவனைப் பார்க்கிறாள்.அவனோ எதைப்பற்றியும்  அலட்டிக்காமல் வேலையை கெதியாய் முடிப்பதிலேயே கருத்தாய் இருக்கின்றான்.குழைத்த மாவை அதனதன் அச்சுகளில் இருவருமாய் போட்டு பொங்க விடுகிறார்கள்.

  இனி விடியப்பறம் 2:00 மணிக்கு எழுந்து போறணையை மூட்டி சுடவைத்து எடுத்தால் போதும். பின்பு கைகால் கழுவி கதைத்துக்கொண்டே சாப்பிடுகிறார்கள்.நீங்கள் கனகாலமாய் இந்த கடையை வைத்திருக்கிறீர்களா.

ஓம்....ஆறு... ஏழு வருடங்கள் இருக்கும்.

அதற்கு முன் என்ன செய்தீர்கள். என்று கேட்க 

சிறையில் இருந்தேன்.

சிறையிலா, அப்படி என்ன குற்றம் செய்தீர்கள்.

ஒரு குற்றமும் செய்யாததால்தான் சிறையில் இருந்தேன்.யாழ்ப்பாணத்தில் ஒரு கிராமம் எனது ஊர். அப்ப எனக்கு பதினெட்டு வயது. அங்கே இரண்டு கோஷ்டிகள் ஆயுதங்களுடன் சண்டை போட்டு கொண்டிருந்தார்கள்.நான் அம்மா தடுக்கவும் கேளாமல் விடுப்பு பார்க்க போய் இருந்தேன்.அந்த சண்டையில் பலருக்கு வெட்டுக்காயங்களும் இருவர் இறந்தும் போனார்கள்.போலீஸ் வந்தது.எல்லோரும் ஓட நான் திகைத்து நின்ற ஒரு நொடியில் அவர்களிடம் அகப்பட்டுக் கொண்டேன்.எனது ஆடைகளில் தெறித்த இரத்தக்கறை வேறு இருந்தது.வழக்கு நடந்து தீர்ப்பு வந்தது. எனக்கு 8 வருடங்கள். ஜெயிலில் நிறைய படித்தேன்.எல்லா வேலைகளும் கற்றுக்கொண்டேன்.அம்மாவும் சில தடவை வந்து பார்த்தா. வசதியும் இல்லை.வயசும் போட்டுது.நான் ஜெயிலில் இருக்கும்போதே அவ இறந்திட்டா. போலீஸ் காவலுடன் போய் கொள்ளி போட்டுவிட்டு வந்தேன்.சிறிது மௌனம்....... .கண்கள் கலங்கி துளி கண்ணீர் கீழே இலையில் விழுகிறது. நான் உங்களை கஷ்ட படுத்தி விட்டேனா, மன்னிச்சுக்கொள். இல்லை இப்ப சொல்லும்போதுதான் மனசின் பாரம் குறையுது. அதற்காக உனக்கு நன்றி.  

பின்பு வெலிக்கடைக்கு அனுப்பினார்கள். அது ஒரு நரக வேதனை.மற்ற கைதிகள் சொல்லும் எல்லா வேலையும் செய்யவேண்டும்.கூடப் படுக்க வேண்டும்.மறுத்தால் குழுவாக சேர்ந்து அடிப்பார்கள்.அந்நேரத்தில் நல்ல ஜெயிலர் வந்தார்.அவர் வந்த சில நாளிலேயே நான் ஒரு குற்றமும் செய்யாமல் தண்டனை அனுபவிக்கிறேன் என்பதை புரிந்து கொண்டார்.பின் எனக்கு நிறைய சுதந்திரம் குடுத்தார்.நூலகங்களுக்கு போவேன். மூன்று பாஷைகளும் நன்றாக கற்றுக்கொண்டேன்.அங்கு பலதரப்பட்ட நல்ல மனிதர்கள், படித்தவர்கள் எல்லோரும் வருவினம்.அவர்களிடம் நிறைய கற்றுக்கொண்டேன். அந்த ஜெயிலரின் முயற்சியால் எனது நன்னடத்தைக்காக இரு வருடங்கள் குறைத்து ஒரு குடியரசு தினத்தில் விடுதலையாகி வந்தேன். ஊரில் யாரும் இல்லை.அதனால் போக விரும்பவில்லை.வெளியே வரும்போது நிறைய பணமும் புனர்வாழ்வுக்கான உதவிகளையும் அந்த ஜெயிலர் செய்து தந்தார்.அதில்தான் இந்த இடத்தை வாங்கி பேக்கரி போடவும் உதவி செய்தார்கள். எனக்கும் இந்த அமைதியான இடம் மிகவும் பிடித்து இருந்தது. ஆரம்பத்தில் சில ஓடர்கள் எல்லாம் அவரே எடுத்து தந்தவர்.நானும் தரமான பாண்,பணிஸ், பிஸ்கட் எல்லாம் செய்து தருவதால் பின்பு ஓடர்கள் தேடி வரத்தொடங்கின.விமலையும் இங்குதான் பழக்கம். என்று கதைத்தபடியே ஆங்காங்கே படுத்து கொள்கிறார்கள்.

சோதனை தொடரும்....!

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு வேகமாக எழுதுகிறீர்கள். சந்தோசம்  அண்ணா.

7 hours ago, suvy said:

சான்றிதழ்......!

பின்பு இராகவனும் வானில் பாண் பெட்டிகள் எல்லாவற்றையும் டிலிவரி செய்வதற்காக ஏற்றிவிட்டு தயாராய் வருகின்றான். சாதாரணமாக அவன் வெளியே போகும்போது கடையை பூட்டிவிட்டு செல்வான். நிக்கும்போது கடையும் திறந்திருக்கும். அவன் தன்னை இங்கு விட்டு போக தயங்குகின்றான் என நினைத்த ஹேமா, அவனிடம் வந்து நீங்கள் கடையை பூட்டி விட்டு செல்லுங்கள். நீங்கள் வரும்வரை நான் வெளியே வாங்கில் இருக்கிறேன் என்று சொல்ல, இஞ்சால கொஞ்சம் வாருங்கள் என்று அவன் வெளியே அழைக்க, பொறுங்கள் என் பெட்டி  உள்ள இருக்கு என்று "சோடிச்செருப்பு வாங்கிக்கொண்டு ஓடின பெட்டைமாதிரி"பாய்ந்தடித்து போய் எடுத்து வருகிறாள்.

 

ஆகா சிரித்து முடியவில்லை.tw_blush:tw_blush:

கதை சூப்பராக போகுது. கிளுகிளுப்புக்கு கிட்ட சில வரிகள் போனாலும் பின் அதை விட்டு விலகி ஓடுது

3 hours ago, suvy said:

 ஜெயிலரின் முயற்சியால் எனது நன்னடத்தைக்காக இரு வருடங்கள் குறைத்து ஒரு குடியரசு தினத்தில் விடுதலையாகி வந்தேன்

 

இலங்கையின் குடியரசு தினம் மே 22. நான் அறிய  இந்த தினத்தை அங்கு எவரும் கடைப்பிடிப்பது இல்லை. விடுமுறை நாளும் இல்லை. சுந்தந்திர தினத்தை தான் கடைப்பிடித்து கைதிகளையும் விடுதலை செய்வர்

8 hours ago, suvy said:

 ஹேமமாலினியின் தீவிர ரசிகர்.அவவின் படத்தை பார்த்தாலே பாலபிஷேகம் செய்யுமளவு வெறியர்

 

3 hours ago, suvy said:

ஹேமா,உன்னால் மேலிருந்து உழக்க முடியுமா எனக்கேட்க அவளும் சரி என்கிறாள்.

என் மனசு மட்டும் ஏன் இந்த வரிகளை வாசிக்கும் போது க்ளுக் என்று கள்ளமாக சிரிக்குது tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கத்துக்குட்டியை ஊக்குவிக்கும் அத்தனை அன்புள்ளங்களுக்கும் நன்றி....! பின்பு தனியாக எல்லோரையும் சந்திக்கிறேன்.....!  tw_blush:

அடடா இப்ப சுதந்திரத்தினத்துக்கு மாத்திட்டாங்களா நிழலி.....!  tw_blush:

 

  • கருத்துக்கள உறவுகள்

அடடா இந்த நேரம் பார்த்து நான் இந்த மினிஸ்கேர்ட்டை  போட்டுக்கொண்டு தைய தக்க என்று குதிக்கிறேனே ஓரக்கண்ணால் கீழே அவனைப் பார்க்கிறாள்

 

மினிஸ்  ஸ்கேர்ட் போட்ட் பெண்ணை மேசையின் மேல் ஏற்றியதற்கு ...வன்மையாக கண்டிக்கிறேன் tw_blush:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணா எழுதும் வேகத்திற்கு வாசிக்க நேரம் கிடைக்கவில்லை. இதுவரை வந்த சோதனைகளை ஒரே மூச்சில் தாண்டிவிட்டேன். 

ஹேமா ஹேமமாலினி கபேயில் பாணுக்கு மாக்குழைத்ததை ஒற்றை வரியில் தாண்டியதற்கு வன்மையான கண்டனங்கள்?

 எனக்கு வந்த சோதனை, கதையில் ஒரு வரி கூடத் தவற விடாமல் வாசிக்க வேண்டி வந்தது. சோதனையைத் தொடருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

கன காலத்துக்குப் பிறகு....ஒரு மணித்தியாலத்துக்கு உள்ளே....நாற்பது...புள்ளடி போடுற சோதினைக்குப் போறது போல கிடக்குது..!

வாசிச்ச பிறகு தான்....கருத்தெழுத யோசிச்சிருக்கிறன்!

கதை நல்லாகப் போகின்றது!

நன்றி....சுவியர்!

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தில் என்னவொரு வேகம் .எங்களுக்கு இந்த வேகத்தில் வாசிக்கத்தான் நேரம் போதாமல் உள்ளது. கதை நன்றாகத்தான் போகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 22/02/2018 at 1:22 AM, suvy said:

மேகங்கள் திரண்டுவந்து திவலை நீர் கூட பூமிக்கு தராமல் களைந்து போவதுபோல்தான் அந்த உறவுகள் இருந்திருக்கின்றன

சுவியர்...எவ்வளவு நாசூக்காக ....ஒரு பெரிய விசயத்தைச் சொல்லி இருக்கிறீர்கள்!

தொடருங்கள்.....!

என்ன சொல்ல இருக்கு... கதை அந்த மாதிரி போகுது..தொடருங்கள்.

இதுக்குள் ஒருத்தர் ஹேமாவுக்கு அடைக்கலம் கொடுக்க ஓடி திரிகிறார்..:grin:

அவருக்கு விளங்கும் நான் யாரை சொல்கிறேன் என்று

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சான்றிதழ்.....!

மறுநாள் பொருட்கள் எல்லாவற்றையும் வானில் ஏற்றி அனுப்பிவிட்டு இராகவன் வர விமலும் ஒரு ஆட்டோவில் வந்து இறங்கி தடியூன்றிக் கொண்டு வந்து வாங்கில் அமருகின்றான். வானொலியில் நல்ல பாடல்கள் போகின்றது. அவனிடம் இராகவனும் விமல், ஈயே எயா மட்ட கொடாக் உதவு காலா. (நேற்று ஹேமாதான் தனக்கு எல்லா வேலைகளிலும் மிகவும் உதவியாக இருந்தாள்).ஏய ரக்கியாவக் அவசயி (அவளுக்கு எங்காவது ஒரு வேலை எடுத்து குடுக்க முடியுமா), சிங்களத்தில் சொல்கிறான். விமலும் ஒவ் ராகவ் மம அகென்னே.(ஓம் நான் விசாரித்து பார்க்கிறேன்). ஹேமாவும் சமையலை முடித்துவிட்டு சிறு புன்னகையுடன் மூவருக்கும் தேநீரோடு வருகிறாள்.

ஆயுபோவன் சகோதரய... ஹேமா.(வணக்கம் தம்பி) 

ஆயுபோவன் அக்கே .....விமல்.

கக்குலயே தெடி துவலயக்.(காலில் பலமான காயமோ).

ஒவ் தின ஹிப்பியாக் ஹொந்தாய்.( ஓம் சில நாளில் சரியாயிடும்).

அப்படியே கதைத்து கொண்டிருக்கினம். இராகவன் சில பாண் துண்டுகளை உளுத்திக்கொண்டு பின் பக்கம் வருகிறான். அவற்றை முற்றத்தில் வீச பறவைகளும் பூனை நாய் எல்லாம் சாப்பிடுகின்றன. நாய்தான் தானும் தின்னாமல் பறவைகளை விரட்டி விரட்டி குலைக்குது. நாய்தானே. இராகவன் இவற்றை ரசித்தபடி அருகில் நின்ற ட்ரக்ட்டரில்  இருந்து பீடி வலித்துக் கொண்டிருக்கிறான். இரு மூக்காலும் புகை போய்க்கொண்டிருக்கு.அதை பார்த்த ஹேமா அந்த டிராக்ட்டர் சைலன்சர் போல இவருக்கும்  மூக்கு மேல்நோக்கி இருந்தால் நன்றாய் இருக்கும் இல்லையா விமல்.விமலுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை நோவை மறந்து சிரிக்கிறான்.இராகவன் திரும்பி பார்த்து விட்டு பிஸ்சு தெக்க(விசருகள் இரண்டும்) தன் வேலையை செய்கிறான்.

ஹேமா இராகவனை பார்த்து இனி நான் இங்கிருந்த கிளம்பலாமா எனக் கேட்க்கிறாள். நானும் அதைத்தான் யோசித்து கொண்டு இருக்கிறன்.இப்ப இவன் இருக்கும் நிலையில் எனக்கும் ஆள் தேவையாய் இருக்கு.உனக்கு விருப்பமென்றால் நீ ஒரு மாதம் இங்கு தங்கலாம்.விரும்பியபோது நீ செல்லலாம்.விமல் ஒப மொணவத கியன்னே (நீ என்ன சொல்லுறாய் விமல்).அவன் எதுவானாலும் விமலிடம் கேட்டே செய்வான். ஒவ் எயா ஹொந்த அதகசகி.ஏகேன் அசன்னா (ஓம் அது நல்லது,அவளிடம் கேட்டுப்பார்). ஹேமாவும் எனக்கும் போவதற்கு முன் கொஞ்சம் நிதானிக்க அவகாசம் வேண்டும்.ஆனால் நான் இங்கு எங்கு தங்குவது.

இராகவன்: நீ அதைப்பற்றி யோசிக்க வேண்டாம். இப்பவே எல்லாவற்றையும் சரியாக பேசிக்கொள்ளுவோம், பிறகு பிரச்சினை படக்கூடாது என்ன.

ஹேமா: ஓம் 

இராகவன்:உனக்கு ஓரளவு தெரிஞ்சிருக்கும்,இது அவ்வளவு பெரிய கடை இல்லை.விமல்கூட இங்கு பகுதிநேர வேலை செய்துவிட்டு பின்பு வேறு வேலைக்கு போய் விடுவான்.பெரிய சம்பளம் எல்லாம் எதிர்பார்க்க முடியாது.

ஹேமா குறுக்கிட்டு ஓம் எனக்கு விளங்குது.

இராகவன்: நான் உனக்கு ஐயாயிரம் ரூபாய் சம்பளம் தாருகிறன். அத்துடன் உனக்கு சாப்பாடு தங்குவதற்கு ரூம் கட்டில் எல்லாம் ப்ரி. அதுவே இரண்டாயிரம் வரும்.உனது விருப்பத்தையும் சொல்லு. (என்ன விமல் மம  கிவ்வே ஹரித மச்சான், நான் சொல்லுறது சரியா).

விமல்:ஒவ் மேயா ஹொந்தாய்.(ஓம் இது நல்லது).

ஹேமா:ஓம் எனக்கு நீங்கள் தரும் சம்பளம் ஐயாயிரத்துக்கு சம்மதம். சாப்பாடு, தங்குவதற்கு இரண்டாயிரம் என்று சொன்னீங்கள் அந்தக்காசை இந்தப்பணத்தில் கழித்துக்கொண்டு மிகுதியை தந்தால் போதும்.

இராகவன்: இஞ்ச பார் ஹேமா சாப்பாடும் ரூமும் உனக்கு நான் இலவசமாய் தருகிறான்.5000 ரூபாய் காசாக உன் கையில் தாறன். புரியுதா.

ஹேமா: புரியுது, எனக்கு சாப்பாடும் ரூமும் இலவசமாய்தர நீங்கள் என்ன என்ர அப்பாவா அல்லது புருஷனா...., அதொன்றும் தேவையில்லை எனக்கு. மனுஷர் எண்டால் உழைத்து சாப்பிடவேணும்.இலவசம் அவசியமில்லை.இல்லாட்டில் சொல்லுங்கோ இப்பவே நான் கண்டிக்கு போறன்.

இராகவன்: சரி...சரி ஓடாத நில்லு.( விமலுக்கு விளங்கப் படுத்துகிறான்). இந்நேரம் வானொலியில் h .r .ஜோதிபால துள்ளலுடன் பாடுகின்றார்.

எப்பாவுனத் ஹெட ஒன வே   ( இன்று வேண்டாம் என்கிறது நாளை தேவைப்படும்).

தாவத் ஓயாட்ட தரா கீதே      (கோபம் கூடாது)

ஆடப்பரவி நோவென்னவெ    (ஆடம்பரம் கூடவே கூடாது) 

அன்டான ருக்மி சிட்டின்னவே  ( அழ வேண்டி வந்துடும்)

உட பென்னவே வெட்டனவே  (மேடு பள்ளம் கொண்டதுதான் வாழ்க்கை)

கிதா மதா மே க்கியன்ன மங்....! (நல்லா யோசித்து சொல்லு)

நான் உனக்கு அப்படியே தாறன். விமலும் சரியான பிசு ஹெல்லா என்கிறான்.(விசர் பெட்டை)

இராகவனும் இவளுக்கு கணக்கு வழக்கு ஒன்றும் தெரியாது போல, ஐஞ்சாறு மாதமெண்டாலும் ஜெயிலுக்கு போயிருந்தால் நாலு எழுத்து, கணக்கு என்று படித்திருக்கலாம்.என்று சொல்கிறான்.

(ஹேமாவுக்கு இவர்களின் சம்பாஷணையை கேட்ட்தும் அவளின் M .A  எக்கொனமிக் டிப்பிலோம் சான்றிதழ் கண்முன்னே தூள் தூளாய் காற்றில் பறக்கிறது.

அங்கு கிடந்த பானை எடுத்து இருவருக்கும் எறிகிறாள். ( பாட்டு தொடர்கிறது).

ஒவ்வவ்வ ஹொந்த நே  ( உதெல்லாம் கூடாது)

அங்கட்ட குண நே   (உடலுக்கு கேடு)

கேனுங்கே நுவன ஹெடி.....!  (பெண் புத்தி பின் புத்தி ).

ஒரு நிமிடம் ஒருவரை ஒருவர் முழிசிப் பார்க்கிறார்கள். பின் மூவரும் சேர்ந்து சிரிக்கிறார்கள்.

சோதனை தொடரும்.....!

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சான்றிதழ்.....!

சிலநாட்களின் பின் ஒரு மதியம் போல் இராகவன் அவளிடம் அந்த கிழிந்த சுடிதாரை வாங்கி அதன் மற்ற காலையும் அதே அளவுக்கு வெட்டி அதன்மேல் பூ லேஸ் வைத்து தைத்துவிட்டு இனிமேல் மா குழைக்கும் போது இதை அணிந்துகொள் என்று கொடுக்கிறான். அட....!இவன் ஒரு அமசடக்கு கள்ளன்,அன்று ஒன்றும் தெரியாத பூனை போல இருந்து விட்டு.....ராஸ்கல்.....! முகம் சிவக்கிறது வெட்கத்தில். இப்போது அங்கு வேலைகள் எல்லாம் புரிந்துள்ளதால் அவனை எதிர்பார்க்காமலே அவள் பல வேலைகளையும் செய்கிறாள். தெரியாத வேலைகளை தயார் நிலையிலும் வைத்து விடுவாள். மதியத்துக்கு மேல், வானில் போன இராகவன் வரும்போது ஒரு கட்டில் மெத்தை துணிகள் எல்லாம் கொண்டுவந்து இறக்குகிறான். பின்பு கதையுடன் பின்னால் இருந்த விறாந்தையில் சாமான்களை ஒதுக்கி விட்டு அந்த கட்டில் , மெத்தை போட்டு துணிகளாலேயே திரைகள் போட்டு மறைப்பு ஏற்படுத்தி விட்டு அவளை கூப்பிட்டு ஹேமா உனக்கான அறை தயாராகி விட்டது. இனி நீ வசதியாய் தங்கலாம். அவள் அதை பார்க்கிறாள். எல்லாம் சிறைச்சாலை சாமான்கள், ஒரு கைதியின் அறைபோல் இருக்கு. திருடுபவர்கள்தான் ஜெயிலுக்கு போவார்கள்.நீங்கள் ஜெயிலையே திருடி கொண்டு வந்தாச்சுது போல....! ஏன்  இது உனக்கு பிடிக்கவில்லையா. கட்டிலை தவிர மெத்தை உட்பட எல்லாம் புதுத்துணிகள் தெரியுமா. உனக்கு பிடிக்கவில்லையா. அப்படியல்ல இதுவும் நல்லாத்தான் இருக்கு. அவளுக்கு அந்த அறையைவிட அவனின் அக்கறை பிடித்திருக்கு. சும்மாவா....இவற்றை வாங்க ஒரு பொல் அராக்கும் 4ஏசஸ் பைக்கட்டும் குடுத்தேன்.பெருமையாய் சொல்லியபடியே அவளிடம் ஒரு சின்ன டிரான்சிஸிடர் ரேடியோவும்(பேமெண்டில் வாங்கியது, சீன  தயாரிப்பு, ஐ போன் சைஸ்) கொடுக்கிறான் இதில் நீ தமிழ் பாட்டு கேட்கலாம். நன்றி இராகவன், இது எனக்கு உபயோகமாய் இருக்கும்.

ஒரு மாதத்துக்கு மேலாகி விட்டது.விமலும் தேறி வருகின்றான்.அருகில் இருக்கும் சுமணாவின் மருத்துவ விடுதியில் தினமும் பத்து போட்டு என்னை பூசி நாட்டு வைத்தியம் செய்து வருகின்றான். பெரும்பாலும் கடை வியாபாரத்தை அவளே கவனித்து கொள்கிறாள்.கடையிலும் தின்பண்டங்கள் அதிகமாய் இருக்கின்றன.மாலுபனீஸ், புழுபனிஸ், பிசுக்கோத்துகள்ரஸ்க்குகள்,பழக்குலைகள், இளனிவகைகள் என்று.விமலும் வேலைகள் செய்ய தொடங்கிட் டான். 

அன்று ஹேமா சிறிதும் எதிர்பார்க்காத சம்பவம் ஒன்று நடந்தது. சாமான்கள் எடுப்பதற்காக அவள் அந்த சாமான்கள் இருக்கும் குடிசைக்கு போகிறாள். அங்கு இராகவனும் விமலும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி, முகத்தின் வியர்வை முதுகில் விழுந்து தெறிக்கிறது. .......நெஞ்சு படபடக்க நிண்டு நிதானித்தவள் திரும்பி வந்து கல்லாவில் அமருகின்றாள். சிறிது நேரத்தில் குளித்து வெளிக்கிட்டு வந்த விமல் வீதியை பார்த்தபடி அவளிடம் அக்கே, நீங்கள் அங்கு வந்ததை நான் பார்த்தேன். ஆனால் பயப்பிட வேண்டாம் கொஞ்ச காலமாய் நாங்கள் இருவரும் இப்படித்தான் அன்பாய் இருக்கிறோம்.என்று சிங்களத்தில் சொல்லிவிட்டு வெளியில் போகிறான். விமல் இங்க வா... அவன் அங்கிருந்தே என்ன என்று பார்க்க இராகவனும் என்ன பார்த்தானா  என்று கேட்கிறாள். தெரியாது என்று சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்து கொண்டு போகிறான். அவள் யோசிக்கிறாள் இராகவனுக்கு தெரியாது என்று சொல்கிறானா அல்லது அது தனக்கு தெரியாது என்று சொல்கிறானா, அவளுக்கு ஒரே குழப்பமாய் இருக்கு.

சிறிது நேரத்தின் பின் யோசித்து பார்க்கும்போது அதுவும் பெரிய தப்பாக தோன்றவில்லை. ஏற்கனவே அவள் சித்தார்த்துடன் இரவுப் பார்ட்டிகளுக்கு சென்ற போதெல்லாம் அந்த கிளப்புகளில் மங்கிய ஒளியில் மதுவின் போதையில் வெறியூட்டும் இசையில் சில ஜோடிகள் ஆண் ஆணோடும் ,பெண் பெண்ணோடும் பிணைத்து ஓரினமாக ஆடுவதை பார்த்திருக்கிறாள். அன்று இராகவனும் சொன்னானே சிறையில் அந்த மாதிரி....! என்றாலும் சகஜநிலைக்கு வர சிறிது நேரமாகியது. ம்....அருவி அங்கால பாய்வதால்தான் இருவருக்கும் இஞ்சால  இன்ரஸ்ட் இல்லாமல் இருக்கிறார்கள். அதுவும் நல்லதுதான்.நான் பாதுகாப்பாய் இருக்கலாம்.

சோதனை தொடரும்.....!

அருவி எப்ப ஹேமா பக்கம் பாயும் என்று பார்த்து இருந்தன் உது சரிவராது. இனி நான் தான் ஹேமாவுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் என நினைக்கின்றன். 

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி, இவ்வளவு தொடராக , சலிப்பூட்டாதவாறு,  கதையோட்டமும் இடையிடையே அழகான வர்ணனையும் கலந்து எழுதி தள்ள முடிகிறது?

கதை.. வெவ்வேறு பாசைகள் பேசும் இரு இனங்களின் சேர்க்கை என்று நினைத்தேன்,

இறுதியில் ஓரு இன சேர்க்கையை தொட்டு நிற்குது...

  இந்த கடைசி பகுதியுடன் தொடருங்கோ,தொடருங்கோ என்று ஒற்றைக்காலில் நின்ற மாதர் அணி உறுப்பினர்கள் ,மெளனமாகி நின்று வாசிப்பார்கள் என்று நினைக்கிறேன்,

ஏனெனில் நம்மவர்களுக்கு கொஞ்சம் தூரத்தில் இருக்கும் கதைக்களம், பலர் தொட தயங்கும் கதைகளம்,ஆனால் யதார்த்தம் ...அதனால்!

யாழ்க்களத்தின் தேர்ந்த எழுத்தாளர் என்று அல்ல, யாழ்மண்ணின் கைதேர்ந்த எழுத்தாளர் நீங்கள் என்றும் தயங்காமல் கூறலாம்..தொடருங்கள்.!

50 minutes ago, நிழலி said:

அருவி எப்ப ஹேமா பக்கம் பாயும் என்று பார்த்து இருந்தன் உது சரிவராது. இனி நான் தான் ஹேமாவுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் என நினைக்கின்றன். 

அருவி ஹேமா பக்கம் பாயபோகுதெண்டு எல்லோரும் நினைச்சிருக்க அது ஹோமோ பக்கம் பாய்ஞ்சிட்டுதுபோல..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, valavan said:

அதெப்படி, இவ்வளவு தொடராக , சலிப்பூட்டாதவாறு,  கதையோட்டமும் இடையிடையே அழகான வர்ணனையும் கலந்து எழுதி தள்ள முடிகிறது?

கதை.. வெவ்வேறு பாசைகள் பேசும் இரு இனங்களின் சேர்க்கை என்று நினைத்தேன்,

இறுதியில் ஓரு இன சேர்க்கையை தொட்டு நிற்குது...

  இந்த கடைசி பகுதியுடன் தொடருங்கோ,தொடருங்கோ என்று ஒற்றைக்காலில் நின்ற மாதர் அணி உறுப்பினர்கள் ,மெளனமாகி நின்று வாசிப்பார்கள் என்று நினைக்கிறேன்,

ஏனெனில் நம்மவர்களுக்கு கொஞ்சம் தூரத்தில் இருக்கும் கதைக்களம், பலர் தொட தயங்கும் கதைகளம்,ஆனால் யதார்த்தம் ...அதனால்!

யாழ்க்களத்தின் தேர்ந்த எழுத்தாளர் என்று அல்ல, யாழ்மண்ணின் கைதேர்ந்த எழுத்தாளர் நீங்கள் என்றும் தயங்காமல் கூறலாம்..தொடருங்கள்.!

அருவி ஹேமா பக்கம் பாயபோகுதெண்டு எல்லோரும் நினைச்சிருக்க அது ஹோமோ பக்கம் பாய்ஞ்சிட்டுதுபோல..

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி வளவன். நான் இந்த கதையில் பெண்கள் எல்லோரும் வாசித்து சுதந்திரமாய் தங்கள் கருத்தை எழுத வேண்டும் என்பதற்காகத்தான் கவர்ச்சியான இடங்களில் எல்லாம் கவுச்சி மணம் இல்லாமல் கவனமுடன் எழுதுகிறேன். இன்று சாதாரணமான கதைகளில் காணப்படும் விரசங்கள் கூட இதில் வராமல் இருக்க முயல்கிறேன்.மீண்டும் சொல்கிறேன், நான் ஒரு எழுத்தாளன் அல்ல, அதனால் ஆங்காங்கே தவறுகள் இருந்தால் பொறுத்து கொள்ள வேண்டும்.முதற்கண் யாழ் இணையத்தை. சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.நேரமிருந்தால் துருசாமியை வாசிக்கவும்.அதுவே இறுதியில் சிறிது அடக்கி வாசித்ததுதான்.....!  tw_blush:

Edited by suvy
எழுத்து பிழை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.