Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பும் வரலாறு: நாசிகள்

அண்மைக் காலமாக "திரும்பும் வரலாறு" (repeat of history or historic recurrence) என்பது பிரபலமான ஒரு சொற்றொடராக மாறியிருக்கிறது. வரலாறு மீள மீள நிகழ்வதற்கு பிரதான காரணம் வரலாற்றிலிருந்து தலைவர்களும், தலைவர்களைத் தேர்வு செய்யும் மக்களும் பாடங்கள் கற்றுக் கொள்ளாமை தான் என்பது ஒரு தெளிவான அவதானம். எனவே, வரலாற்றின் மைல் கற்களாக விளங்கிய சம்பவங்கள், நபர்கள் பற்றிய தரவுகளைப் பதிவு செய்யலாம். முதலில் ஹிற்லர், நாசிகள் பற்றி ஆரம்பித்து, இரண்டாம் உலகப் போர், ஸ்ராலின், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் என்று ஒரு சுற்று வரலாம். ஆர்வமுடையோர் இணைந்திருங்கள். மூலங்கள் பற்றிய தகவல்களை ஒவ்வொரு பகுதியும் நிறைவுறும் போது தருகிறேன். ஆனால், விக்கிபீடியா மூலமாகப் பயன்படுத்தப் படவில்லை என்பதை உறுதி செய்கிறேன்!

 

ஹிற்லர் எப்படிப் பதவிக்கு வந்தார்?

முதலாம் உலகப் போர் 1918 இல் முடிவுக்கு வந்த போது ஐரோப்பாவின் எல்லைகள் பாரிய மாற்றங்களையடைந்தன. முதல் உலகப் போரின் போது கடல் வழியிலும், தரைவழியிலும் ஜேர்மனியின் படைகள் விளைவித்த மனிதப் பேரழிவு அளப்பரியது (முதலில் நீர்மூழ்கிக் கப்பல்களை  பெருமளவில் பாவித்த நாடாக ஜேர்மனி இருந்தது, அனேக தாக்குதல் இலக்குகள் சிவிலியன் போக்கு வரத்துக் கப்பல்களாக இருந்தன!). ஜேர்மனி தோல்வியடைந்த போது வெர்சை உடன்படிக்கையின் வழியாக கடுமையான தண்டனைச் சுமைகள் ஜேர்மனி மீது சுமத்தப் பட்டன. 33 பில்லியன் டொலர்கள் வரையான போர் நட்ட ஈடு, காலனிகள் உட்பட்ட பல நிலப் பரப்பின் இழப்பு, இராணுவ ஆளணிக் குறைப்பு, ஆயுதங்கள் வாங்க, உற்பத்தி செய்வதற்கான கட்டுப் பாடுகள், என்பன ஜேர்மனியின் தண்டனைகளில் அடங்கின. இந்தப் போரில் காயமடைந்து மீண்ட படையினனான ஹிற்லர் ஆரம்பித்த கட்சி தான் "தேசிய சோசலிஸ்ட் கட்சி" எனப்பட்ட நாசிக் கட்சி. நாசிக் கட்சியின் நோக்கம் ஆட்சியைப் பிடிப்பது. இதற்கு உகந்த நுட்பமாக அவர்கள் தேர்ந்து கொண்டது, அண்மைய வரலாற்றில் ட்ரம்ப், பொல்சனாரோ, மோடி, ப்றெக்சிற்றின் தலைமைச் சிற்பியான நைஜல் பரார் போன்றோர் தேர்ந்து கொண்ட அதே ஜனத்திரள்வாத முறை. ஜனத்திரள் வாதம் நேர்மையான விடயங்களால் பலம் பெறுவதை விட மறைத்தன்மையான மனித உணர்வுகளால் பலம் பெறுவது தான் வரலாற்றில் அதிகம் நிகழ்ந்திருக்கிறது. நாசிக் கட்சி தங்கள் ஜனத்திரள் வாத வெற்றிக்காகத் தேர்ந்து கொண்ட அந்த மறைத்தன்மையான உணர்வு யூதர்கள் மீதான சந்தேகமும், எதிர்ப்புணர்வும்.

 

ஏன் யூதர்கள் மீது எதிர்ப்புணர்வு?

ஏனெனில், ஜேர்மனியில் அந்தக் காலப்பகுதியில் வசித்த வேற்றினத்தவர்களுள், யூதர்கள் தான் பல வழிகளில் பிரபலமான இனக் குழுவாக இருந்தனர். பொருளாதார நடவடிக்கைகளில் மேலாண்மை மட்டுமன்றி, அரசியல் கலாச்சாரப் பரப்பிலும் யூதர்கள் முன்னணி வேற்றினத்தவராக இருந்தனர். கால் மார்க்ஸ் ஒரு யூதர், ஜேர்மனியுட்பட பல ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிசக் கட்சிகளின் தலைமையில் அதிகம் யூதர்கள் இருந்தனர். விஞ்ஞானத் துறையிலும் (ஐன்ஸ்ரைன் சிறந்த உதாரணம்) அவர்களுக்கு தனியிடம் இருந்தது. இவ்வாறு ஜேர்மன் மக்கள் ஏற்கனவே உணர்ந்திருந்த ஒரு "யூத மேலாண்மை பற்றிய அச்சம்" நாசிக் கட்சியின் மக்கள்திரள்வாத ஆயுதமாயிற்று!  

ஆனால், யூதர்களுக்கு மேலதிகமாக, ஏனைய மத, இனக்குழுக்கள், ரஷ்யாவின் சிலாவிக் இன மக்கள் ஆகியோரும் நாசிக்கட்சியின் வெறுப்பிலக்குகளாக விளங்கினர். இந்த சிலாவிக் இன மக்கள் மீதான வெறுப்பிற்கு வளங்களைக் கொள்ளையடிக்கும் ஜேர்மனியின் நீண்ட கால இலக்கும் ஒரு காரணமாக இருந்தது. ஆரிய இனமான நீலக் கண்ணும், வெள்ளைத் தோலும் கொண்ட ஜேர்மனியர்கள், லூதரன் கிறிஸ்தவ நெறிப்படி குடும்பங்களில் நிறையப் பிள்ளைகள் பெற்றுப் பெருகும் போது, அவர்கள் வாழ அவசியமான நிலம், சோவியத் ரஷ்யாவிடமிருந்து பறிக்கப் பட வேண்டுமென்பது நாசிக் கட்சியின் கொள்கை. எனவே, சிலாவிக் மக்கள், "மனித இனத்திற்குக் கீழானவர்கள்" என்ற வெறுப்புணர்வை நாசிக் கட்சியினர் பரப்பத் தயங்கவில்லை. இந்தக்கீழ்மனிதர்களான” சிலாவிக் மக்களை விடக் கீழான நிலையில் தான் யூதர்கள் வைத்துப் பார்க்கப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.     

1921 அளவில், நாசிக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ஹிற்லர் வெளிப்படையாக இந்தக் கொள்கைகளைப் பேசி வந்திருக்கிறார். சாதாரண அரசியல் கட்சிகள் போலல்லாது, நாசி கட்சிக்கு ஒரு ஆயுதப் படையும் இருந்தது. Storm troopers என்று அழைக்கப் பட்ட இந்தப் படையில், ஹிற்லர் போலவே முதல் உலகப் போரிலிருந்து அவமானத்துடன் திரும்பி வந்த முன்னாள் படையினர் இருந்தனர். பல்லாயிரம் உறுப்பினர்கள் கொண்ட இந்த படை, பவாரியாவின் மாநில அரசைக் கவிழ்க்க முயன்று தோற்ற போது தான் ஹிற்லர் மற்றும் நாசிக் கட்சி பற்றிய முதல் எச்சரிக்கை ஜேர்மன் அரசுக்குக் கிடைத்தது. ஜேர்மன் அரசினால் ஒரு வருடம், இதற்காக சிறை வைக்கப் பட்ட போது தான் ஹிற்லர் தனது ஜனத்திரள்வாத, இனவெறிக் கொள்கைகளை நூலாக (Mein Kampf) எழுதினார். இந்த நூல், 1932 இல் ஜேர்மன் பாராளுமன்றத்தில் மிகப் பெரிய கட்சியாக நாசிக் கட்சி விளங்க ஒரு முக்கிய காரணியாக இருந்தது. இதனால், ஜேர்மன் ஜனாதிபதியினால், ஹிற்லர் வேந்தராக நியமிக்கப் படும் நிலையும் உருவானது.

 

ஜேர்மன் மக்கள் என்ன நினைத்தனர்?

தீவிர இனவெறிக் கொள்கை கொண்ட ஹிற்லரையும், நாசி கட்சியையும் 1932 பொதுத் தேர்தலில் ஜேர்மன் வாக்காளர்கள் ஆதரித்துப் பெரும்பான்மை வழங்க பல காரணங்கள் அப்போது இருந்தன. ஜேர்மனி முதல் உலகப் போரில் மிகவும் அவமானப் படுத்தப் பட்டதாக ஜேர்மனிய மக்களில் பெரும்பகுதியினர் உணர்ந்தனர். அதன் பின்னான தண்டனைகளால் ஜேர்மனியின் பணவீக்கம், வேலையில்லாதோரின் வீதம், என்பன கட்டுக்கடங்காமல் அதிகரித்தன. ஜேர்மன் ஜனாதிபதியாக இருந்த வொன் ஹிண்டன்பேர்க் வயசாளி, நோய்வாய்பட்ட நிலையில் தனது ஓய்வு வாசஸ்தலத்தில் இருந்தவாறே, கீழதிகாரிகளூடாக ஆட்சி செய்து  கொண்டிருந்தார். இந்தப் பின்னணியில், மூன்று இளமையும், துடிப்பும் கொண்ட அரசியல் தலைவர்கள் மக்கள் முன் வலம் வந்தனர்: ஹிற்லர், ஹெஸ், கோயபல்ஸ் ஆகிய மூவரும் தான் அந்த "ஜனத்திரள்வாத" இளம் தலைவர்கள். எனவே, ஒரு நம்பிக்கையான எதிர்காலம் வேண்டி, ஜேர்மன் வாக்காளர்கள்  நாசிக் கட்சிக்கு வாக்களித்தனர். இந்த மானசீகமான ஆதரவோடு, நாசிக் கட்சியின் ஆயுதப் படையினர் நாசிக் கட்சி எதிர்ப்பாளர்களுக்குக் கொடுத்த வன்முறை அச்சுறுத்தலும் சேர்ந்து தான் நாசிக் கட்சியும், ஹிற்லரும் ஜேர்மனியின் ஆட்சியைப் பிடித்தனர்.  

பதவிக்கு வந்த பின்னர் ஹிற்லரின் நடவடிக்கைகள்

ஹிற்லர் வேந்தராகப் பதவியேற்று சில மாதங்களில், ஜேர்மன் பாராளுமன்றம் தீயூட்டப் பட்டது. இந்த எரியூட்டலுக்கு ஜேர்மன் கம்யூனிஸ்டுகள் காரணமெனப் பிரச்சாரம் செய்த நாசிகள், ஒரு ஒல்லாந்து நாட்டு கம்யூனிஸ்டைக் கைது செய்தனர். ஹிற்லரின் விமானப் படையைப் பின்னாளில் கட்டியெழுப்பிய தீவிர நாசியான ஹேர்மன் கோறிங் நேரடியாக நீதிமன்றம் சென்று, கைது செய்யப் பட்ட ஒல்லாந்துக் கம்யூனிஸ்டின் மரண தண்டனையை உறுதி செய்தார். அதே நேரம் மிக முக்கியமான இன்னொரு விடயமும் நாசி ஜேர்மனியின் எதிர்காலப் போக்கை நிர்ணயித்தது: பாராளுமன்றம் எரிக்கப் பட்ட சம்பவத்தைக் காரணம் காட்டி, ஹிற்லர் ஜேர்மன் ஜனாதிபதியை அவசரகாலச் சட்டத்தை அமல் படுத்தத் தூண்டினார். இதனால், சகல அரசியலமைப்பு வழியான மக்கள் உரிமைகளும் ஒரே இரவில் ரத்துச் செய்யப் பட்டன. இந்த உரிமைகள் ரத்தினால், நாசிகளை ஆதரித்த ஜேர்மனியர்களுக்கு ஒரு பாதிப்பும் வரவில்லை- ஆனால், யூதர்கள், கம்யூனிஸ்ட்டுகள், நாசி எதிர்ப்பாளர்கள், ஊடக சுதந்திரம் என்பன நன்கு பாதிக்கப் பட்டன. ஹிற்லரின் கட்சிக் கொள்கைகள் செயல் வடிவம் பெற ஆரம்பித்தன!

 

-இன்னும் வரும்

ஜஸ்ரின்

  • Replies 80
  • Views 6.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • திரும்பும் வரலாறு - பாகம் 3 – நாசிகள். fபிரிட்ஸ் ஹேபர் (Fritz Haber) ஒரு வித்தியாசமான பேர்வழி. பயிர்கள் வளர நைதரசன் அவசியம். ஆனால், காற்றில் நிறைந்திருக்கும் நைதரசன் வாயுவை எல்லாப் பயிர்களாலும்

  • இணைந்திருக்கிற எல்லோருக்கும் நன்றி - தனித்தனியாக  வந்த கேள்விகளுக்கு பின்னர் பதில் எழுதுகிறேன். ஆனால், கோசானின் கருத்துக்கு இப்பவே எழுத வேண்டும்: உடைந்த றெக்கோர்ட் போல 5 வருடங்களாக போலிச் செய்த

  • உலக நாடுகள் என்ன செய்தன? ஹிற்லரின் நாசிக் கட்சியின் ஆட்சியில் ஜேர்மனி வந்த காலப் பகுதி ஒரு அசாதாரணமான உலகக் சூழல் நிலவிய காலம். முதல் உலகப் போரினால் ஒரு லட்சம் இளைஞர்களையும், அதே காலப்பகுதியில் ஐ

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நேரத்துக்கு

தொடர்ந்து எழுதுங்கள் சகோ 

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்.

சரித்திரம் அறிய ஆவல்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக எழுதுகிண்றீர்கள் ........தொடருங்கள் .........ஜெர்மனியின் அவ்வளவு நீர்மூழ்கிக் கப்பல்களுக்கும் என்ன நடந்தது.......!   👍

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரின் அண்ணை வரலாற்று பதிவுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

||இன்னும் வரும்

 

ஜஸ்ரின்||
 

ஆவலுடன் ……….

  • கருத்துக்கள உறவுகள்

அபாரம்….

காலத்துக்கு தேவையான எழுத்து….

பட்டுக்கோட்டை எழுதி இருப்பார்…

உப்புகல்லை வைரம் என்று சொன்னால்…

நம்பி ஒப்பு கொள்ளும் மூடருக்கு முன்னால்…

நாம் கதறி என்ன? குழறி என்ன

ஒன்றுமே நடக்கவில்லை தோழா

ரொம்ப நாளா….

உங்களுக்கும் பல இடங்களில் இது பொருந்தும் 🤣.

ஆனால் கதறுவதை கை விட வேண்டாம்👏🏾

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Justin said:

இன்னும் வரும்

 ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எழுதும்போது ஏனோ நவீன நாசிகள் கண்முன் வருவதை தவிர்க்கமுடியவில்லை.

வரலாறு தந்த பாடத்தை படிக்காமல் போனால் என்ன நடக்கும் என்பதையும் திரும்ப திரும்ப வரலாறே படிப்பிக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணைந்திருக்கிற எல்லோருக்கும் நன்றி - தனித்தனியாக  வந்த கேள்விகளுக்கு பின்னர் பதில் எழுதுகிறேன். ஆனால், கோசானின் கருத்துக்கு இப்பவே எழுத வேண்டும்:

20 hours ago, goshan_che said:

 

 

🤣

ஆனால் கதறுவதை கை விட வேண்டாம்👏🏾

உடைந்த றெக்கோர்ட் போல 5 வருடங்களாக போலிச் செய்திகள், சதிக் கதைகள், திரித்த வரலாறுகளின் பின் செல்லுதல் ஆகியவற்றால் வரக் கூடிய தீமைகளைச் சொல்லி வந்தும் அதனால் எவ்வளவு பயன் விளைந்தது எனத் தெரியவில்லை. சலிப்பு வந்தாலும், என் பிள்ளை வாழப் போகும் உலகை இப்படியே விட்டுப் போக முடியாது என்பதால் ஒரு சிறு முயற்சி, கடைசி முயற்சி என்று கூடச் சொல்லலாம்.

இதை நான் ஆரம்பிக்க 2 முன்மாதிரிகள் அல்லது ஊக்கிகள்:

1. மரியோ லிவியோ, ஒரு அமெரிக்க பௌதீகவியலாளர், விஞ்ஞான மறுப்பிற்கெதிராகச் செய்லபடும் ஒரு எழுத்தாளர். அவர் கருத்தின் படி இளம் வயதினர் (impressionable age? யாழை வாசிப்போரில் இவர்கள் எத்தனை வீதமென அறியேன்!) விஞ்ஞானத்தையும், வரலாற்றையும்  அறியச் செய்தால் 10 வருடங்களில் உலகம் இப்போதிருப்பதை விட முன்னேற்றகரமாக இருக்கும் என்கிறார்.

2. யாழ் கள ரஞ்சித்தும் நன்னியரும்: சளைக்காமல் எங்கள் இனம் பற்றிய பதிவுகளைத் தொடராகப் பதிவதில் அவர்கள் காட்டும் உழைப்பும் ஆர்வமும் மெச்சத்தக்கவை. இவர்களின் உழைப்பு எனக்கு வராதெனினும், தொலைவிலாவது பின் தொடர முனைகிறேன்.       

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 6/2/2023 at 11:54, suvy said:

நன்றாக எழுதுகிண்றீர்கள் ........தொடருங்கள் .........ஜெர்மனியின் அவ்வளவு நீர்மூழ்கிக் கப்பல்களுக்கும் என்ன நடந்தது.......!   👍

சுவியர், 1,100 வரையான நீர்மூழ்கிகளை இரண்டாம் உலகப் போர் காலத்தில் நாசி ஜேர்மனி வைத்திருந்தது. இவற்றுள் 700 வரையானவை எதிரிப் படைகளால் அல்லது விபத்துக்களால் மூழ்கடிக்கப்  பட்டன (ஆனால், எதிரி நாடுகளின் 3000 வரையான கடற்கலங்களை நாசி நீர்மூழ்கிகள் மூழ்கடித்தன!).

எஞ்சிய நூற்றுக் கணக்கானவை ஜேர்மனி சரணடைவதற்கு முன்னராக நாசிகளால் அழிக்கப் பட்டன. சில சரணடைந்தன அல்லது கைப்பற்றப் பட்டன. அவ்வாறு அமெரிக்காவினால் கைப்பற்றப் பட்ட ஒரு ஜேர்மன் நீர்மூழ்கி இன்னும் சிக்காகோவில் பார்வைக்கு இருக்கிறது.

https://www.msichicago.org/press/press-releases/u-505-submarine/

நாசிகளின் ஜேர்மன் நீர்முழ்கிகள்  பற்றி அறிந்து கொள்ள "Das Boot" (The Boat) என்ற திரைப்படத்தைப் பார்க்கலாம்.

Poster for Das Boot

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி jastin விளக்கத்துக்கு......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்று பதிவு சிறப்பாக உள்ளது.  பல புதிய விடயங்களை தெரிந்து கொண்டுள்ளோம். நன்றிகள். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

இணைந்திருக்கிற எல்லோருக்கும் நன்றி - தனித்தனியாக  வந்த கேள்விகளுக்கு பின்னர் பதில் எழுதுகிறேன். ஆனால், கோசானின் கருத்துக்கு இப்பவே எழுத வேண்டும்:

உடைந்த றெக்கோர்ட் போல 5 வருடங்களாக போலிச் செய்திகள், சதிக் கதைகள், திரித்த வரலாறுகளின் பின் செல்லுதல் ஆகியவற்றால் வரக் கூடிய தீமைகளைச் சொல்லி வந்தும் அதனால் எவ்வளவு பயன் விளைந்தது எனத் தெரியவில்லை. சலிப்பு வந்தாலும், என் பிள்ளை வாழப் போகும் உலகை இப்படியே விட்டுப் போக முடியாது என்பதால் ஒரு சிறு முயற்சி, கடைசி முயற்சி என்று கூடச் சொல்லலாம்.

இதை நான் ஆரம்பிக்க 2 முன்மாதிரிகள் அல்லது ஊக்கிகள்:

1. மரியோ லிவியோ, ஒரு அமெரிக்க பௌதீகவியலாளர், விஞ்ஞான மறுப்பிற்கெதிராகச் செய்லபடும் ஒரு எழுத்தாளர். அவர் கருத்தின் படி இளம் வயதினர் (impressionable age? யாழை வாசிப்போரில் இவர்கள் எத்தனை வீதமென அறியேன்!) விஞ்ஞானத்தையும், வரலாற்றையும்  அறியச் செய்தால் 10 வருடங்களில் உலகம் இப்போதிருப்பதை விட முன்னேற்றகரமாக இருக்கும் என்கிறார்.

2. யாழ் கள ரஞ்சித்தும் நன்னியரும்: சளைக்காமல் எங்கள் இனம் பற்றிய பதிவுகளைத் தொடராகப் பதிவதில் அவர்கள் காட்டும் உழைப்பும் ஆர்வமும் மெச்சத்தக்கவை. இவர்களின் உழைப்பு எனக்கு வராதெனினும், தொலைவிலாவது பின் தொடர முனைகிறேன்.       

தொடர்ந்து எழுதும் போது எனிக்மா இயந்திரம் பற்றியும், அலன் டூரின் பற்றியும் தொட்டு செல்வீர்கள் என நம்புகிறேன்.

ஓரின சேர்க்கயாளரை (தன் உள்ளக ஓரின சேர்க்கை உந்தலால் என்கிறனர்) வெறுத்த, அழித்த ஹிட்லரின் கோட்டை என்கிற யானையின் காதில் புகுந்த (ஓரின சேர்க்கையாளர்) எலி டூரின்.

ஹிட்லரின் கோட்டை சரிய டூரின் ஆற்றிய பங்கு poetic justice.

ஆனால் அதே டூரினை, தற்கொலை வரை தள்ளிய அன்றைய பிரிதானிய அமைப்பு - இந்த நூற்றாண்ட்டின் வெட்கக்கேடு.

முன்பும் டூரின் பற்றி எழுதியுள்ளீர்கள் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 6/2/2023 at 02:41, Justin said:

திரும்பும் வரலாறு: நாசிகள்

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் போர் அழிவுகள் இனியும் வேண்டாம் என பாராமுகமாக இருந்த ஜேர்மனி மீண்டும் ஆயுதங்களை தூக்க ஆரம்பித்து விட்டது.

எனினும்  ஆங்கிலேயர்களின் அட்டூழியங்களை விட நாஷிகள் எதுவுமே பெரிதாக செய்து விடவில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பச்சை போட்டு விட்டு காத்திருக்கிறேன் ஜயா..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக நாடுகள் என்ன செய்தன?

ஹிற்லரின் நாசிக் கட்சியின் ஆட்சியில் ஜேர்மனி வந்த காலப் பகுதி ஒரு அசாதாரணமான உலகக் சூழல் நிலவிய காலம். முதல் உலகப் போரினால் ஒரு லட்சம் இளைஞர்களையும், அதே காலப்பகுதியில் ஐந்து லட்சம் வரையான மக்களையும் இன்புழுவன்சாப் பெருந்தொற்றினால் இழந்த அமெரிக்கா, 1929 இல் உருவான பொருளாதார மந்த நிலையினால் கடுமையாகப் பாதிக்கப் பட்டது (இந்த மந்த நிலை- Great depression, ஏதோ ஒரு வகையில் 1939 வரை நீடித்தது). எனவே அமெரிக்கா ஒரு உலக சக்தியாக யாருக்கும் தோன்றவில்லை அப்போது. ஆனால், தங்கள் காலனிகள், சக்தி மிக்க கடற்படைகள் என்பவை காரணமாக பிரிட்டனும், பிரான்சும் இராணுவ ரீதியில் பலமாக இருந்த காலம் அது.

நாடுகளின் சங்கம் (League of Nations) என்ற .நாவின் முன்னோடியான அமைப்பு அமெரிக்காவினால் முன்னின்று உருவாக்கப் பட்டாலும், அமெரிக்கா அந்த அமைப்பில் நிரந்தர உறுப்பினராகவில்லை. மாறாக, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் ஆகிய நிரந்தர உறுப்பினர்களோடு, சில டசின் நாடுகளை உறுப்பினர்களாக வைத்துக் கொண்டு "கூட்டுப் பாதுகாப்பு (collective security)" என்ற அடிப்படையில் நாடுகளின் சங்கம் இயங்கியது. ஆனால், செயல் திறன், அமலாக்கல் சக்தி என்பன குறைந்த ஒர் அமைப்பாக இருந்ததால் உண்மையிலேயே உலகின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான பிரச்சினைகளை நாடுகளின் சங்கத்தால் தீர்க்க இயலவில்லை. உதாரணமாக, நிரந்தர உறுப்பினரான ஜப்பான், சீனாவின் மஞ்சூரியாப் பகுதியை ஆக்கிரமித்த போது, நாடுகளின் சங்கத்தினால் கண்டனம் மட்டுமே தெரிவிக்க முடிந்தது - இந்தக் கண்டனமே ஜப்பான் தனது உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளக் காரணமாக இருந்தது. ஜேர்மனி கூட ஒரு குறுகிய காலப்பகுதியில் நாடுகளின் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப் பட்டது. ஹிற்லர் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் காரியங்களில் ஒன்றாக அந்த அமைப்பில் இருந்து ஜேர்மனியை விலக்கிக் கொண்டார். இதன் மூலம், உலகப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக வரப் போகும் இரு நாடுகள் நாடுகளின் சங்கத்தைப் புறக்கணிக்கும் வசதி வாய்ப்பு அமைந்தது.  இப்படி உலக நாடுகள் - குறிப்பாகப் பலம் பொருந்திய நாடுகள்- தங்கள் உள்விவகாரங்களுக்கு முன்னுரிமை கொடுத்த காலப்பகுதி (isolationism என்பார்கள்)ஹிற்லருக்கும், கிழக்கில் ஜப்பானியர்களுக்கும் மிக வாய்ப்பான காலமாக இருந்தது.

மொத்தத்தில், ஜேர்மனியின் புதிய நாசி அரசை உலக நாடுகள் வித்தியாசமாகப் பார்க்கவில்லை என்று தான் பின்னர் வெளி வந்த இராஜதந்திரப் பரிமாற்றங்கள் சுட்டிக் காட்டுகின்றன. மாறாக, அரவணைத்துச் செல்லும் (appeasing) முயற்சி கூட 1932 முதல் ஆரம்பித்து விட்டது. உதாரணமாக, அமெரிக்கா, வெர்சை உடன்படிக்கையின் படி ஜேர்மன் மீது விதித்த பொருளாதாரத் தண்டனைகளை ஈடு செய்ய, குறுகிய காலக் கடன்களை வழங்கியிருந்தது. 1932 இல், ஜேர்மனியின் பொருளாதரப் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு அந்தக் கடன்களை வசூலிப்பதை தற்காலிகமாக ஒத்தி வைத்தது (debt moratorium - வட்டி மட்டும் கட்ட வேண்டிய நிலை). இதன் பின்னர், 1934 இல் ஹிற்லர் ஒரு சட்டத்தை இயற்றி, சகல வெளிநாட்டுக் கடன்களையும் ஒரு தலைப் பட்சமாக நிறுத்தி வைத்தார். இதனால், ஜேர்மன் பணம் நாட்டை விட்டு வெளியே செல்வது வெகுவாகக் குறைக்கப் பட்டது.

பொருளாதாரத்தில் ஒரு கண் வைத்திருந்த நாசிகள்

கடன்களின் சுமையில்லாமல் மூச்சு விடக் கிடைத்த இடைவெளியில் நாசிகள் ஜேர்மன் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் தீவிரமாக ஈடுபட்டனர். ஜேர்மன் மக்களின் தொழில் நுட்பத் திறமை, உயர்ந்த கல்வி மட்டம், அதிகாரத்திற்குப் படிந்து எதையும்செய்யும் நடத்தைப் போக்கு (இதை முறைப்பாடு செய்யாமல் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளும் stoicism என்றும் சொல்வார்கள் - இது  ஜேர்மன் தேசிய அடையாளங்களுள் ஒன்று என்று கூடச் சிலர் சொல்வர்!) என்பன நாசிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தன.

வேலையற்ற ஜேர்மனியருக்கு வேலை வழங்க, கட்டுமானத் திட்டங்கள் உருவாக்கப் பட்டன - உலகின் முதல் நெடுஞ்சாலை வலையமைப்பு ஆட்டோ பான் (Autobahn) என்ற பெயரில் ஜேர்மனியில் உருவானது. இரும்புப் பொருட்கள் உற்பத்தி, எண்ணை சுத்திகரிப்பு, செயற்கை இறப்பர், இரசாயனங்கள் என ஏராளமான பொருட்களின் உற்பத்தி அளவு ஒரிரு ஆண்டுகளிலேயே பல மடங்குகளால் அதிகரித்தது நாசிகளின் ஆட்சியில். அதே வேளையில், வேலையில்லாதோருக்கு சீருடைகளை அணிவித்து, புதிது புதிதாக ஆயுதப் படைப்பிரிவுகளை உருவாக்கும் வேலையும் நடந்தது. காக்கிச் சட்டைகள் (brown shirts) என்று அழைக்கப் பட்ட ஹிற்லர் இளைஞரணியும் ஒரு தனிப் படையாக வளர்க்கப் பட்டது. நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் அதிகரித்தது. நாசிகளை நம்பிக்கையுடன் ஆதரித்த மக்கள் "இது பொற்காலம்" என மகிழ்ந்து  அவர்களது கூட்டங்களில் மந்திர சக்தியால் ஆட்கொள்ளப் பட்ட பொம்மைகள் போலக் கலந்து குதூகலித்தனர், ஆர்ப்பரித்தனர்.

ஆனால், இந்த 1930 களின் நாசி ஜேர்மன் பொருளாதாரம் ஒரு போர்க்காலப் பொருளாதாரம் என்பது முன்னுரிமை வழங்கப் பட்ட துறைகளைப் பார்க்கும் போதே தெளிவாக யாருக்கும் தெரிந்து விடும். அதாவது, வெர்சை உடன் படிக்கையின் படி ஆயுதப் படைகளை நவீன மயப்படுத்தும் உரிமையை இழந்த ஜேர்மனி, மறைமுகமாக தன் இராணுவப் பற்களைத் தீட்டிக் கொண்டிருந்தது. இதனை எத்தனை உலக நாடுகள் புரிந்து கொண்டிருந்தன என்பதில் வரலாற்றியலாளர்கள் முரண்படுகின்றனர் - ஆனால், ஹிற்லர் தன்னைச் சுற்றி  வைத்திருந்த ருடோல்f ஹெஸ், ஜோசப் கோயபல்ஸ், ஹேர்மன் கோறிங் ஆகிய பெரிய தலைகள் ஜேர்மனியின் ஆயுத மயமாக்கலின் நீண்டகால நோக்கத்தை அறிந்திருந்தனர். உதாரணமாக, வெர்சை உடன் படிக்கையின் படி, ஜேர்மன் விமானப்படையொன்றைக் கட்டியெழுப்ப தடை இருந்தது. ஆனால், ஜேர்மனியில் பல சிவிலியன் விமான நிறுவனங்கள் முதல் உலகப் போர் காலத்திலேயே இருந்திருக்கின்றன. ஹெர்மன் கோறிங், இந்த சிவிலியன் விமான நிறுவனங்களின் திறமை வாய்ந்த விமானிகளை இரகசியமாக ஒன்று சேர்த்து, பயிற்சியளித்து ஜேர்மன் விமானப் படையை கண்காணிப்புக் குறைந்த ஜேர்மன் நாட்டுப் புறங்களில் கட்டியமைத்து வந்தார். இவ்வாறு உருவாக்கப் பட்ட ஜேர்மன் விமானப்படை (Luftwaffe), இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனுக்கு மிகுந்த சவாலாக விளங்கியது குறிப்பிடத் தக்கது. 

இருளிரவின் ஆரம்பம்  

இவ்வளவு தொழில்நுட்ப, பொருளாதார, கல்வி மேலாண்மை கொண்ட ஜேர்மன் சமுதாயம், "ஆரியர்கள்" அல்லாத யூதர்கள், றோமா மக்கள் ஆகியோரையும், ஓரினச் சேர்க்கையாளர்களையும், லூதரன் கிறிஸ்தவர்கள் அல்லாத ஏனைய கிறிஸ்தவர்களையும் எப்படி ஒதுக்கி வைத்தது? ஒதுக்கி வைத்தது மட்டுமல்லாமல், அவர்களை எப்படி வகை தொகையின்றிக் கொன்றொழித்தது? இத்தகைய இருண்ட மாற்றங்கள் 1933 இலிருந்து ஆரம்பிக்கின்றன - ஹிற்லரின் பேச்சுக்கள் செயல் வடிவம் பெற்றன. சாதாரண ஜேர்மன் மக்களும், ஜேர்மனியில் வசித்த வெளிநாட்டவர்களும் கூட "நாசிகள் ஒன்றும் மோசமில்லை"😎 என்று சான்றிதழ் கொடுக்கும் அளவுக்கு எப்படி பொருளதாரம், கலாச்சார மேன்மை ஆகிய பொன்முலாம் கொண்டு நாசிகள் தங்கள் மிருகத் தனத்தை மறைத்தனர்?

 

இது தான் நண்பர்களே வரலாறு திரும்பும் ஒரு சிறந்த உதாரணக் கதையாக இருக்கிறது.

-இன்னும் வரும்

ஜஸ்ரின்      

     

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கள் யஸ்டின் வாசிக்க ஆவல் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 7/2/2023 at 17:51, goshan_che said:

தொடர்ந்து எழுதும் போது எனிக்மா இயந்திரம் பற்றியும், அலன் டூரின் பற்றியும் தொட்டு செல்வீர்கள் என நம்புகிறேன்.

ஓரின சேர்க்கயாளரை (தன் உள்ளக ஓரின சேர்க்கை உந்தலால் என்கிறனர்) வெறுத்த, அழித்த ஹிட்லரின் கோட்டை என்கிற யானையின் காதில் புகுந்த (ஓரின சேர்க்கையாளர்) எலி டூரின்.

ஹிட்லரின் கோட்டை சரிய டூரின் ஆற்றிய பங்கு poetic justice.

ஆனால் அதே டூரினை, தற்கொலை வரை தள்ளிய அன்றைய பிரிதானிய அமைப்பு - இந்த நூற்றாண்ட்டின் வெட்கக்கேடு.

முன்பும் டூரின் பற்றி எழுதியுள்ளீர்கள் என நினைக்கிறேன்.

நிச்சயமாக. இரண்டாம் உலகப் போரின் கதையை, பிரிட்டன், சேர்ச்சில், ப்ளெட்ச்லி பார்க், RAF இவையெல்லாம் குறிப்பிடாமல் எழுதவே முடியாது! - அலன் ரூரிங்கும் வருவார்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரும்பும் வரலாறு - பாகம் 3 – நாசிகள்.

fபிரிட்ஸ் ஹேபர் (Fritz Haber) ஒரு வித்தியாசமான பேர்வழி. பயிர்கள் வளர நைதரசன் அவசியம். ஆனால், காற்றில் நிறைந்திருக்கும் நைதரசன் வாயுவை எல்லாப் பயிர்களாலும் பயன்படுத்திக் கொள்ள இயலாது. ஹேபர், நைதரசனை அமோனியா உரமாக மாற்றும் வழியைக் கண்டு பிடித்தது உலக விவசாய உற்பத்திக்குப் பாரிய பங்களிப்புச் செய்தது. இந்தக் கண்டு பிடிப்பிற்காக அவருக்கு இரசாயனவியலில் நோபல் பரிசும் கிடைத்தது. ஹேபரின் அடுத்த கண்டு பிடிப்பு கொஞ்சம் விவகாரமானது. குளோரின் வாயுவை, வாயுவாகவே குடுவையில் வைத்திருக்கும் முறையை ஹேபர் கண்டு பிடித்த போது, முதலாம் உலகப் போர் முடிவிற்கு வந்து கொண்டிருந்தது. ஹேபர், பிரெஞ்சுப் போர் முனைக்கு தனது குளோரின் வாயுச் சிலிண்டர்களை ஜேர்மன் படையினரோடு சேர்ந்து எடுத்துச் சென்று பதுங்கு குழியில், காற்று பிரெஞ்சுப் படைகள் இருந்த பக்கம் வீசும் வரைக் காத்திருந்தார். காற்று வளமாக வந்த வேளையில் குளோரின் வாயுவைத் திறந்து விட்டார். காற்றோடு சேர்ந்து பிரெஞ்சுப் படைகளின் பக்கம் நகர்ந்த குளோரின் வாயு தான் முதலாவது இரசாயன ஆயுதம். தரையோடு சேர்ந்து பரவிய குளோரின் வாயு எதிரிகளின் பதுங்கு குழிகளுக்குள்ளும் இறங்கி அவர்களை மூச்சுத் திணற வைத்தது. குளோரின் வாயுவினால் உடனடியாக இறக்காதோர் கண் பார்வை, நுரையீரல் என்பன நிரந்தரமாகப் பாதிக்கப் பட்டு சில நாட்களில் இறப்பர்.   அந்த மரணம் வரை உடல் அனுபவிக்கும் உபாதை கொடூரமானது. இவ்வாறு ஒரு தடவையில் ஜேர்மனி பயன்படுத்திய குளோரின் வாயுவினால் மட்டும் ஆயிரத்திற்கு சற்று அதிகமான பிரெஞ்சு, கனேடியப் படைகள் இறந்தனர்.

 ஹேபருக்கு ஜேர்மனியில் மதிப்பு உயர்ந்தது, ஆனால் அவர் தனது விஞ்ஞான அறிவை இவ்வாறு பயன்படுத்தியதை அறிந்து அதிர்ச்சியடைந்த ஹேபரின் மனைவி தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இதில் சுவாரசியமான தகவல் என்னவெனில், ஹேபர் ஒரு ஜேர்மனிய யூதர்! ஆனால், ஜேர்மன் தேசபக்தி காரணமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, 1933 இல் ஹிற்லர் ஆட்சிக்கு வந்த வேளையிலும் மேலும் சில இரசாயனவியல் வாயுக்களைக் கண்டறிந்து ஜேர்மனியின் விஞ்ஞான வளர்ச்சிக்கு உதவிக் கொண்டிருந்தார். இவ்வாறு இவர் அடுத்துக் கண்டு பிடித்த வாயு, ஐதரசன் சயனைட் வாயு. சிக்லோன் (Zyklon) என்று அழைக்கப் பட்ட இந்த நச்சு வாயுவை இலகுவாக சில திண்மப் பொருட்களிலிருந்து தயாரிக்கும் வழியை ஹேபர் கண்டு பிடித்தார். இந்த நச்சு வாயுவை பூச்சி கொல்லியாகப் பாவிக்கும் நோக்கமே ஹேபரினுடையதாக இருந்தது. 

ஹேபரின் இந்தக் கண்டு பிடிப்புத் தான் அடுத்த 5 ஆண்டுகளில், சிக்லோன் - பி என்ற பெயரில் மில்லியன் கணக்கான யூதர்களை வாயு அறைகளில் அடைத்து வைத்துக் கரப்பான் பூச்சிகள் போல சில நிமிடங்களில் கொலை செய்யப் பயன் படுத்தப் பட்டது. ஆனால், இது நடப்பதற்கு முன்னரே ஹேபரின் யூத அடையாளம் காரணமாக அவரையும் ஜேர்மன் நாசிகள் ஒதுக்கி வைத்து விட்டமையும் நடந்தது.

திட்டமிட்ட யூத ஒதுக்கல்

முதலில், எடுத்தவுடனேயே நாசிகள் யூதர்களையும் ஏனையோரையும் கொலை செய்ய ஆரம்பிக்கவில்லை. உலக நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன, சர்வதேச வர்த்தகம், இராஜ தந்திர உறவுகள், 1936 பேர்லின் ஒலிம்பிக் என்பன இன்னும் ஜேர்மனியை படுகொலைகள் செய்ய விடாமல் தடுத்திருந்தது. ஆனால், சில திட்டமிட்ட நாசி நடவடிக்கைகள் யூதர்களைக் குறி வைத்தன

(இது முழுமையான பட்டியல் அல்ல!):

1.  யூதர்களின் வியாபாரங்களைப் புறக்கணிக்கும் படி கோரும் பிரச்சாரம் மூலம் யூதர்களின் பொருளாதாரம் முடக்கப் பட்டது. இது மட்டுமன்றி, புதிதாக ஆரம்பிக்கப் படும் வியாபரங்களில் யூதர்கள் முழு உரிமையாளர்களாக இருக்க முடியாத கட்டுப் பாடுகளும் உருவாக்கப் பட்டன.

2. வர்த்தக சங்கங்களில் யூதர்கள் அங்கத்துவராக இருக்க முடியாத சட்டங்கள் உருவாக்கப் பட்டன. நாசி ஆதரவாளர்களால் நிர்வகிக்கப் பட்ட தொழிற்சங்க அமைப்புகளே முன்னின்று இந்த ஒதுக்கல்களைச் செயல் படுத்தினர்.

3. சட்டத்தரணிகளாக, மருத்துவர்களாக, மருந்தாளர்களாக யூதர்கள் பணி செய்யும் அனுமதியை ஜேர்மன் நகரங்களும் மானிலங்களும் மறுத்தன.

4. ஒரு கட்டத்தில், ஜேர்மன் யூதர்களின் பிரஜாவுரிமையைப் பறித்து விடும் சட்டமொன்று வரைபாக சில மாதங்கள் விவாதிக்கப் பட்டது. இறுதியில், சர்வதேச எதிர்ப்பு வரலாமென்பதால் அதை நிறைவேற்றாமல் விட்டார்கள். ஆனால், 1938 அளவில் ஜேர்மன் யூதர்களின் கடவுச் சீட்டுகளைத் தற்காலிகமாகப் பறிமுதல் செய்து, அதில் "ஜெ" என்ற எழுத்தைக் குறித்துத் திருப்பிக் கொடுத்தார்கள். இந்த "ஜெ" என்ற எழுத்துக் குறித்த கடவுச் சீட்டுகளை ஜேர்மன் அதிகாரிகள் புதுப்பிக்க மறுத்ததால், நடைமுறையில் ஜேர்மன் யூதர்கள் தங்கள் குடியுரிமையை இழந்தனர்.  

5. ஜேர்மன் பாடசாலைகளில் யூதக் குழந்தைகள் சேர முடியாமல் தடை வந்தது. ஒரு கட்டத்தில் எல்லா யூதர்களையும் ஒன்று கூட்டி, பஸ்களில் ஏற்றி நகரின் ஒரு மூலையில் யூதர்களுக்கு மட்டுமே உரியதான ஒரு குடியேற்றத்தில் ஒதுக்கி வாழ வைத்தனர். நினைத்த நேரத்தில், ஜேர்மன் பொலிஸ், காக்கிச் சட்டைக் கும்பல் என்பன இங்கே நுழைந்து யாரையும் கைது செய்ய, தாக்க இந்தக் குடியேற்றங்கள் வாய்ப்பாக இருந்தன.

யூதர்கள் அல்லாதோருக்கும் சட்டரீதியான ஒதுக்கல்

முன்னரே குறிப்பிட்டது போல, றோமா எனும் ஜிப்சி மக்களும் கூட யூதர்களுக்கு இணையாகப் பாதிக்கப் பட்டனர். இன்னொரு விதமான கொடுமையான ஒதுக்கலையும் நாசிகள் சட்ட ரீதியாக்கினர்: 1933 இல், நாசிகள் உடற்குறைபாடுகள் தொடர்பான ஒரு சட்டத்தை இயற்றினர்: Law for the Prevention of Progeny with Hereditary Diseases. இந்தச் சட்டத்தின் நோக்கம், அப்பழுக்கற்ற ஆரிய இனமாக ஜேர்மனியர்களை மாற்றும் போலி விஞ்ஞான நோக்கமாக இருந்தது (Eugenics - இதை மனிதர்களில் செய்யவே முடியாதென்பது வேறு கதை). அடுத்த 8 வருடங்களில், ஹிற்லரின் கட்டளைப் படி, “ஒபரேஷன் T4” எனும் பெயரில் இரகசியமாக முன்னெடுக்கப் பட்ட திட்டத்தின் கீழ், மூன்று லட்சம் வரையான உடல், மன ஊனங்கள் உடையவர்கள் வாயுக் கூடங்களிலும், விஷ ஊசிகளாலும் கருணைக் கொலை செய்யப் பட்டனர். உண்மையில், யூதர்களைக் கொல்லப் பயன்படுத்தப் பட்ட சிக்லோன் பி விஷவாயு, இந்த உடல் ஊனமுற்றோரில் தான் பரீட்சித்துப் பார்க்கப் பட்டது. பின்னர், 1938 இல் இருந்து இதே முறை மூலம் யூதர்களும் கொல்லப் பட்டனர்.   

இறுதித் தீர்வு  - “Final Solution”

1938 நவம்பர் 9 ஆம் திகதி "உடைந்த கண்ணாடி இரவுகள்" (Kristallnacht) என அழைக்கப் படுகிறது. அந்த இரவில் தான், கும்பலாக நாசி ஆயுததாரிகளும், காக்கிச் சட்டைகளும் ஜேர்மன் யூதர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு சில நூறு யூதர்களைக் கொன்றனர். ஆயிரக் கணக்கான யூதர்கள் கைது செய்யப் பட்டு, புச்சன்வால்ட் வதை முகாமிற்கு அனுப்பப் பட்டனர் - இவர்களுள் பெரும்பாலானோர் நச்சு வாயு அறைகளில் பின்னர் கொல்லப் பட்டனர். இதே ஆண்டில், நாசிகள் ஆஸ்திரியாவையும், பின்னர் செக்கோஸ்லோவாக்கியாவையும் எதிர்ப்பின்றிக் கைப்பற்றி, அங்கே வாழ்ந்த யூதர்களையும் வெவ்வேறு வதை முகாம்களில் அடைத்தனர். ஜேர்மனிக்கு வெளியே, போலந்தில் இருந்த ஆஸ்விற்ஸ் வதை  முகாம் தான் அதிக கிழக்கு ஐரோப்பிய யூதர்களைப் பலி கொண்ட கொலைக்களம். ஆனால், வதை முகாம்களில் மட்டுமன்றி சில இடங்களில் திறந்த வெளிகளிலேயே யூதர்கள் பெருந்தொகையாகக் கொல்லப் பட்டனர். இத்தகைய திறந்த வெளிக் கொலைக்களங்களில் முக்கியமானதாக உக்ரைன் தலைநகர் கியேவிற்கு அண்மையில் இருக்கும் பாபி யார் (Babi Yar) பள்ளத் தாக்கு விளங்குகிறது. இந்தப் பகுதியை இயற்கைப் புதைகுழியாகப் பயன்படுத்தி, சுமார் 34,000 யூதர்களை நாசிகள் சில நாட்களில் இயந்திரத் துப்பாக்கிகளால் சுட்டே கொன்றொழித்தனர். இந்த பாபி யார் படுகொலையில் அந்தக் காலப் பகுதியில் சோவியத் எதிர்ப்பாளர்களாக இருந்த உக்ரைனிய ஆயுதக் குழுக்களும் பங்கு கொண்டிருந்தன.

1938 முதல் 1945 வரையான காலப்பகுதியில் மூன்றுக்கு மேற்பட்ட வதை முகாம்கள், ஏனைய திறந்த வெளிக் கொலைகளங்களில் கொல்லப் பட்ட யூதர்களின் எண்ணிக்கை மட்டும் 6 மில்லியன்கள். இதை விட மேலதிகமாக நாசிகளால் கொல்லப் பட்ட ஏனையோர் 4 மில்லியன் வரை இருப்பர்.

இப்படி, செறிவான, வினைத்திறனான மனிதக் கொலையே முழுமூச்சாக இயங்கிய ஒரு அரச நிர்வாகத்தை அது வரை உலகம் கண்டிருக்கவில்லை.  

“மிகுந்த வீரரான” 😎ஹிற்லர், இத்தனை படுகொலைப் பழிக்குப் பின்னரும் பொறுப்பை முன்வந்து ஏற்றுக் கொள்ள முடியாமல், தன் காதலியோடு தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அவரது குற்றத்தில் பங்கு கொண்ட பலர் பிடிக்கப் பட்டு மரண தண்டனைக்குள்ளாகினர். இஸ்ரேல் சில நாசிகளை, தென்னமெரிக்கா வரைப் பின் தொடர்ந்து துரத்திச் சென்று பிடித்து வந்து இஸ்ரேலில் வைத்துத் தூக்கில் போட்டது சுவாரசியமான கதை.

 

ஆனால், ஹிற்லர் இருக்கும் போதே அவருக்குத் தண்ணி காட்டிக் கலங்கடித்த ஒரு கதாநாயகனும் இருந்தார்: அவர் அக்கால பிரிட்டன் பிரதமர் வின்ஸ்ரன் சேர்ச்சில்!

சேர்ச்சிலின், அவர் தலைமையில் நாசிகளுக்கு சவால் விட்ட பிரிட்டனின் கதை நாசிகளின் நரவேட்டையை விட உரத்துச் சொல்லப் பட வேண்டிய வெற்றிக் கதை!

- வெற்றிக் கதை தொடரும்-

-ஜஸ்ரின் 

  • கருத்துக்கள உறவுகள்

பல வாசிப்புக்களாலும், திரைப் படங்கள் பார்த்ததாலும் தெளிவில்லாமல் அறிந்திருந்த வரலாறு, உங்கள் பதிவுகளை வாசித்த பின்னர் ஒரு தொடுவையாக அமைகின்றது…!

தொடருங்கள், ஜஸ்ரின்…!

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஜஸ்டின்........!

அன்று அழிவின் எல்லையில் இருந்த யூதர்கள்தான் இன்று உலகை ஆட்டிப் படைக்கின்றனர்.....அன்றைய தமது நிலையை மறந்து இன்று இலங்கை அரசுடன் கை கோர்த்துக் கொண்டு எம்மினத்தை அழிக்கவும் வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர்.......! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 16/2/2023 at 03:42, suvy said:

தொடருங்கள் ஜஸ்டின்........!

அன்று அழிவின் எல்லையில் இருந்த யூதர்கள்தான் இன்று உலகை ஆட்டிப் படைக்கின்றனர்.....அன்றைய தமது நிலையை மறந்து இன்று இலங்கை அரசுடன் கை கோர்த்துக் கொண்டு எம்மினத்தை அழிக்கவும் வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர்.......! 

"புத்தியுள்ளவனுக்கே உலகம் சொந்தம்" என்று யூதர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த எளிய விளக்கத்தை ஒதுக்கி விட்டு "யூதர்கள் உலகை ஆட்டிப் படைக்கிறார்கள்" என்ற சதிக் கோட்பாடு கலந்த ஒரு கருத்தை சிலர் பரப்பி வருவது உண்மை. "தகுதியே இல்லாமல் யூதர்கள் ஜேர்மனியில் மேலாண்மை செய்கிறார்கள், எனவே அழிக்க வேண்டும்!" என்று முழுமையான சதிக் கோட்பாட்டை வைத்துத் தான் நாசிகள் யூதப் படுகொலையை நியாயப் படுத்தினர்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஜஸ்ரின்

இதே யூத இனம் மாதிரி எமது தமிழ் சமூகமும் வரக் கூடிய சந்தர்ப்பங்கள் நிறையவே இருந்தன.

பல காரணங்களால் இப்போதைக்கு முடியவில்லை என எண்ணுகிறேன்.

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.