Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"இரும்பு கம்பியால் ரத்தம் வரும் வரை அடித்தனர்" - சாதி மறுப்பு திருமணங்கள் தமிழ்நாட்டில் இன்றும் ஏற்க மறுக்கப்படுவது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"இரும்பு கம்பியால் ரத்தம் வரும் வரை அடித்தனர்" - சாதி மறுப்பு திருமணங்கள் தமிழ்நாட்டில் இன்றும் ஏற்க மறுக்கப்படுவது ஏன்?

கீர்த்தி மற்றும் செளந்தர்
கட்டுரை தகவல்
  • எழுதியவர்,விஷ்ணுப்ரியா ராஜசேகர், பிபிசி தமிழ்
  • பதவி,நித்யா பாண்டியன், தி நியூஸ்மினிட்
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

“என் அம்மா என்னை கடுமையாக அடித்தார். என் காலில் சூடு வைத்தனர். எனது தந்தை அரிவாள்மனையைக் கொண்டு என்னை கொல்ல வந்தார்.”

கீர்த்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பட்டியலினத்தைச் சேர்ந்த செளந்தரை(பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருமணம் செய்ய தான் விரும்புவதாக தனது பெற்றோரிடம் சொன்ன பிறகு அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பதை விவரித்தபோது அவரது குரல் தழுதழுத்தது.

கீர்த்தி வன்னியர் சாதியை சேர்ந்தவர். 2018ஆம் ஆண்டு கிட்டதட்ட ஆறு மாத காலம் அதீத துயரங்களை கீர்த்தி தாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

தனது பெற்றோரால் இவ்வாறு நடத்தப்படுவோம் என கீர்த்தி கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை.

 

கீர்த்தி மற்றும் செளந்தரின் காதலுக்கு சம்மதம் பெற செளந்தர் கீர்த்தியின் வீட்டிற்கு வந்த பிறகு நிலைமை மேலும் மோசமானது.

“நான் செய்தி சேனல்களை பார்ப்பேனா? என கீர்த்தியின் தந்தை என்னிடம் கேட்டார்” என்கிறார் செளந்தர்.

ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு சாலையில் ரத்த வெள்ளத்தில் அல்லது ரயில்வே டிராக்கில் தானும் இறந்து கிடப்போமா என செளந்தர் எண்ணினார்.

கீர்த்தி மற்றும் செளந்தர்

கீர்த்தியின் வீட்டிலிருந்து அவர் சென்றபோது செளந்தர் மற்றும் அவரின் பெற்றோர் அமர்ந்திருந்த நாற்காலிகளை வெளியே வீசச் சொன்னார் கீர்த்தியின் தந்தை. அவர்கள் வாங்கி வந்த பழங்கள், இனிப்புகள், பூ என அனைத்தும் குப்பையில் வீசப்பட்டன.

அதற்கு பிறகு கீர்த்தியை தற்கொலை குறிப்பு எழுதச் சொல்லி வற்புறுத்தினர் கீர்ததியின் பெற்றோர்.

“பிரச்னை ஏதும் வந்தால் அந்த குறிப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என எனது பெற்றோர் நினைத்தனர்,” என்கிறார் கீர்த்தி.

“திருமணம் செய்து கொள்வது மட்டுமே எங்களின் உயிரைக் காப்பாற்றும் என கீர்த்தி நம்பினார்” என நினைவுகூர்கிறார் செளந்தர்.

அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் என்பது நிதர்சனத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

இந்தச் செய்தி தி நியூஸ்மினிட் செய்தி ஊடகத்துடன் இணைந்து மகளிரிடம் சிறந்த இதழியலை கொண்டு செல்ல BBCShe எடுத்த முன்னெடுப்பு.

கீர்த்தி மற்றும் செளந்தர்
 
படக்குறிப்பு,

கீர்த்திக்கும் செளந்தருக்கும் திருமணம் நடந்து நான்கு வருடங்கள் கடந்துவிட்டன

கெளரவம் என்ற பெயரில் நடக்கும் ஆணவ கொலைகள்

2006ஆம் ஆண்டில் உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற லதா சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு கவனிக்கத்தக்க தீர்ப்பை வழங்கியது.

“ஆணவப் படுகொலைகளில் எந்த கெளரவமும் இல்லை. ஆணவப் படுகொலை என்பது கொடூரமான, ஆதிக்க மனப்பான்மை கொண்ட மனிதர்களால் செய்யப்படுவது. இதற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.” என அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினரை மிரட்டினாலோ அவர்களை துன்புறுத்தினாலோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

17 வருடங்களுக்கு பிறகும், சாதி மறுப்பு தம்பதியினரை நோக்கிய அச்சுறுத்தல்கள், கொடூரமான வன்முறைகள் நாடு முழுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

தங்களை காத்துக் கொள்ள கீர்த்தியும் செளந்தரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். பின்பு எப்போதும் போல இருவரும் அவரவர் பணியை கவனிக்கத் தொடங்கினர்.

ஆனால் அவர்களின் பெற்றோருக்கு பதிவுத் திருமணம் குறித்து தெரியவந்தது. அதன்பிறகு துன்புறுத்தல் மேலும் அதிகரித்தது.

கீர்த்தி மற்றும் செளந்தர்

“எனது தந்தை என்னை இரும்புக் கம்பியால் தாக்கினார். தரை எங்கும் ரத்தம் சிந்தும் அளவுக்கு எனக்கு காயம் ஏற்பட்டது” என தனது வலியை நினைவு கூர்ந்தார் கீர்த்தி.

கீர்த்தியும் செளந்தரும் செய்து கொண்ட திருமணம் நிச்சயம் நிலைக்கப்போவதில்லை என கீர்த்தியின் பெற்றோர் உறுதியாக நம்பினர். அவ்வாறே நடக்க பல சாபங்களையும் வழங்கினர்.

தங்களின் சொத்துக்களுக்கு கீர்த்தி உரிமை கோரக் கூடாது என்றும் எழுதி வாங்கி கொண்டனர்.

இறுதியாக உடம்பில் காயங்களுடன், வாங்கிய அடிகளால் கிழிந்த ஆடையுடன் கையில் வெறும் 100 ரூபாயுடன் கீர்த்தி வீட்டை விட்டு வெளியே துரத்தப்பட்டார்.

ஆனால் கீர்த்தி மற்றும் செளந்தர் இருவரிடமும் அரசாங்க வேலை இருந்தது. எனவே அவர்களின் வாழ்வை தொடங்குவதற்கு அது பெரும் உறுதுணையாக இருந்தது. எப்படியோ இருவரும் உயிரோடு தப்பி விட்டனர்.

இதன் காரணமாக, கண்ணகி முருகேசன், விமலா தேவி, சங்கர், இளவரசன் என “சாதிய பெருமை” என்ற பெயரில் கொல்லப்பட்டோரின் நீண்ட பட்டியலில் இவர்களின் பெயர்கள் இடம் பெறாமல் போயின.

பெரும்பாலும் சாதி மறுப்பு திருமணங்களில் ஒருவர் தலித் சமூகத்தை சேர்ந்தவராக இருந்தால் அங்கு அச்சுறுத்தல்களும் வன்முறைகளும் எழுகின்றன.

சுய மரியாதை இயக்கம் வேரூன்றிப் போன தமிழ்நாட்டில் சாதிய வன்முறைகள்

தமிழ்நாட்டை பொறுத்தவரை சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்வோரின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிக குறைவாக உள்ளது.

2015ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வில், தமிழ்நாட்டில் வெறும் 3 சதவீத அளவில் மட்டுமே மாற்று சாதி திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இது தேசிய அளவில் 10 சதவீதமாக உள்ளது.

தமிழ்நாட்டில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக சுய மரியாதை இயக்கத்தை முன்னெடுத்த பெரியாரின் முயற்சிகளுக்கு பிறகும் இந்த நிலையே தொடர்கிறது.

சுயமரியாதை இயக்கம், சாதியை ஒழிக்க சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்கிறது. தமிழ்நாட்டில் 1968ஆம் ஆண்டு அண்ணாவின் அரசாங்கத்தில் இந்து திருமண சட்டத்தின்படி சுயமரியாதை திருமணம் சட்டபூர்வமானது.

இன்றும் பிராமணர்களின் சடங்கு சம்பிரதாயங்களை விடுத்து பலர் சுய மரியாதை திருமணம் செய்து கொள்கின்றனர் ஆனால் இம்மாதிரியான முயற்சிகள் சாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பதற்கு போதுமானதாக இல்லை.

வழக்கறிஞரான ரமேஷ் சாதி மறுப்பு திருமணங்களை பதிவு செய்ய உதவி வருகிறார். பல நேரங்களில் மாற்று சாதியில் திருமணம் செய்து கொள்பவர்கள் தங்களின் திருமணத்தை சட்டபூர்வமாக பதிவு செய்ய தவறுவதால் அவர்கள் பிரிக்கப்படுகின்றனர்.

சாதி மறுப்பு திருமணங்களுக்கான திருமண பதிவு சேவை

ரமேஷ்
 
படக்குறிப்பு,

இதுவரை 200க்கும் மேற்பட்ட சாதி மறுப்பு திருமணங்களை பதிவு செய்ய உதவி செய்துள்ளார் ரமேஷ்

சாதி மறுப்பு திருமணங்களை பதிவு செய்வது அத்தனை எளிதாக இல்லை. பதிவு அலுவலகங்களில் திருமணம் செய்ய வருவோர் தங்களின் பெற்றோரின் சம்மதம் பெற்று வருகின்றனரா என கேட்கப்படுகிறது. ஆனால் எந்த திருமண சட்டத்தின்படியும் அது அவசியம் இல்லை என்கிறார் ரமேஷ்.

எனவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்றோரின் சம்மதம் தேவையில்லை என்ற தகவலைப் பெற்று திருமணங்களை நடத்தி வருகிறார் ரமேஷ்.

ஆனால் சாதி மறுப்பு தம்பதிகளை பாதுகாப்பதற்கான ஒரு சிறிய நகர்வுதான் இது.

எனவே மாற்று சாதியில் திருமணம் செய்ய விரும்பும் நபர்களுக்கு ஒரு பாதுகாப்பான தளத்தை உருவாக்க விரும்பிய ரமேஷ் ‘மனிதம்’ என்ற திருமண பதிவு சேவையை இரண்டு மாதங்களுக்கு முன்னர் தொடங்கினார்.

இதுவரை 100க்கும் மேற்பட்டோர் இந்த தளத்தில் பதிவு செய்துள்ளனர்.

கீர்த்தி மற்றும் செளந்தர்
 
படக்குறிப்பு,

“வலுவாக கட்டமைக்கப்பட்ட சாதிய அமைப்பிலிருந்து வெளியே திருமணம் செய்ய மக்கள் விரும்புவதில்லை” - ஜெயராணி

ஒரு பரந்த பிரச்னையை நோக்கிய சின்னஞ்சிறு முயற்சிதான் இது.

பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் ஜெயராணி, தங்களின் சாதிக்குள் திருமணம் செய்வதை உறுதியாக மக்கள் கடைப்பிடிக்கின்றனர் என்கிறார்.

“அதன் ஒரு பகுதியாகவும், பிற சாதிகளில் திருமணம் செய்து கொள்வதை தடுப்பதற்கும்தான் மாமன் முறையில் உள்ளவர்களை திருமணம் செய்யும் வழக்கம் இங்குண்டு,” என்கிறார் ஜெயராணி.

“சாதிய கட்டமைப்புக்குள்ளிருந்து வெளியே வர விரும்பாத சமூக பழக்கத்தால், குடும்பத்தின் கெளரவம் என்ற பெயரால் பல கொலைகள் நடக்கின்றன” என்கிறார் அவர்.

ஆனால் இந்த குற்றங்களுக்கு எதிராக மிக குறைவான வழக்குகளே பதியப்பட்டுள்ளன. மாநில குற்றவியல் ஆவணக் காப்பகம், 2013ஆம் ஆண்டிலிருந்து வெறும் இரண்டே ஆணவக் கொலைகள் நடந்ததாக கூறுகிறது. அந்த இரண்டும் 2017ஆம் ஆண்டில் நடைபெற்றவை.

ஆனால் தலித் உரிமைகள் மற்றும் ஆணவப் படுகொலைக்கு எதிராக பணியாற்றி வரும் எவிண்டன்ஸ் என்ற அமைப்பின் தகவல்படி 2020 – 2022 ஆண்டுகள் காலக்கட்டத்தில் மட்டும் 18 சம்பவங்கள் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதிக்கான நெடும்பயணம்

பொதுவாக ஆணவப் படுகொலைகள் நடைபெற, தம்பதிகளுக்கு பாதுகாப்பான உறைவிடமும், அரசாங்க அதிகாரிகளிடமிருந்து போதுமான பாதுகாப்பு கிடைக்காததுமே காரணம் என்கிறார் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலர் சாமுவேல் ராஜ்.

2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தலித் சமூகத்தை சேர்ந்த திலிப் குமாரை திருமணம் செய்து கொண்ட கள்ளர் சமூகத்தை சேர்ந்த விமலா தேவி உயிரிழந்த பிறகு, சென்னை உயர் நீதிமன்றம் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு பிரிவுகள், 24 மணி நேர உதவி எண்கள், மொபைல் செயலிகள், ஆன்லைன் புகார் வசதி ஆகியவற்றை நிறுவ வேண்டும் என உத்தரவிட்டது.

இதை பரிசோதிக்க நான்கு மாவட்டங்களில் உள்ள உதவி எண்களை நாம் தொடர்பு கொண்டோம் ஆனால் எந்த பதிலும் இல்லை.

மாற்று சாதியில் காதலிக்கும் தம்பதிகளை காவல்துறையினரும் சரியாக நடத்துவது இல்லை என செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“பெற்றோர் காவல்துறையினரை அணுகியபிறகு, கட்டப் பஞ்சாயத்து செய்து அவர்கள் தம்பதியை பிரித்து விடுகின்றனர். உயர் சாதியை சேர்ந்த பெண்கள் பொதுவாக வீட்டிற்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர். ஆனால் பெரும்பாலும் அவர்கள் உயிருடன் தப்பிப்பதில்லை” என்கிறார் சாமுவேல் ராஜ்.

2014ஆம் ஆண்டு விமலா தேவி உயிரிழந்தார். இந்த வழக்கு இன்றும் நடைபெற்று வருகிறது. இது குறித்து விமலா தேவியை திருமணம் செய்த திலிப் குமாரை அணுகியபோது உயிரிழந்த தனது மனைவியின் இறப்புக்கு நீதி கிடைக்கும் என தான் நம்புவதாக தெரிவித்தார். இம்மாதிரியான வழக்குகளில் குறைந்த அளவிலேயே குற்றங்கள் நிரூபிக்கப்படுகின்றன.

“பொதுவாக ஒரு கொலை நடந்தால் பாதிக்கப்பட்டவரின் குடும்பம்தான் நியாயம் கேட்கும். ஆனால் சாதி ரீதியான கொலைகளை குடும்ப உறுப்பினர்களே நடத்துகின்றனர். எனவே இதில் தண்டனை கிடைப்பது இரண்டாம் பட்சம், முதலில் வழக்கு தொடர்வதற்கு யாரும் முன்வருவதில்லை” என்கிறார் சாமுவேல் ராஜ்.

கீர்த்தி மற்றும் செளந்தர்
 
படக்குறிப்பு,

சாதி மறுப்பு தம்பதியினரிடம் காவலர்களும் இணக்கமாக நடந்து கொள்வதில்லை என்கிறார் சாமுவேல் ராஜ்

2014ஆம் ஆண்டு விமலா தேவி உயிரிழந்தார். இந்த வழக்கு இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது குறித்து திலிப் குமாரை அணுகியபோது உயிரிழந்த தனது மனைவியின் இறப்புக்கு நீதி கிடைக்கும் என தான் நம்புவதாக தெரிவித்தார்.

“பொதுவாக ஒரு கொலை நடந்தால் பாதிக்கப்பட்டவரின் குடும்பம்தான் நியாயம் கேட்கும். ஆனால் சாதி ரீதியான கொலைகளை குடும்ப உறுப்பினர்களே நடத்துகின்றனர். எனவே இதில் தண்டனை கிடைப்பதை தாண்டியும் வழக்கு தொடர்வது என்பதை இயலாத ஒன்றாகத்தான் உள்ளது,” என்கிறார் சாமுவேல்.

கட்டுக்கதைகளும், நம்பிக்கையும்

கீர்த்தியும் செளந்தரும் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டபோது கீர்த்திக்கு 25 வயது. ஆனாலும் அவரின் பெற்றோர் திருமணம் குறித்து தங்களின் மகளால் முடிவெடுக்க இயலாது என்று நம்பினர்.

சாதி மீது அவர்களுக்கு இருந்த பற்றுதல், பல கட்டுக்கதைகளையும் தவறான தகவல்களையும் நம்புவதற்கும் வித்திட்டுள்ளது.

“என் திருமணத்திற்கு எதிராக முடிவெடுக்க, என் பெற்றோர் என்னை நச்சரித்து கொண்டிருந்த போது, தலித் இளைஞர்கள் சாதி இந்துக்களின் பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்று சபதம் எடுத்து கொள்வதாக எனது அம்மா என்னிடம் தெரிவித்தார். நான் இதுவரை கேட்டதில் மிக மோசமான விஷயம் அது. அதுவும் படித்த ஒரு ஆசிரியர் எப்படி அவ்வாறு பேசுவார் என எனக்கு ஆச்சரியமாக இருந்தது” என்கிறார் கீர்த்தி.

இது ஒரு நீண்ட, கடினமான போராட்டம்

2022 ஆம் ஆண்டு தலித் மனித உரிமைகள் பாதுகாப்பு வலையமைப்பு (சாதிக்கு எதிரான செயற்பாட்டாளர்கள் மற்றும் அமைப்புகளின் கூட்டமைப்பு), குடும்ப கெளரவம் என்ற பெயரில் நடைபெறும் குற்றங்களை தடுக்க வரைவு ஒன்றை வடிவமைத்தது.

அதில் ஆணவப் படுகொலையில் ஈடுபடுவோருக்கான தண்டனை மற்றும் பாதிக்கப்படுவோருக்கான இழப்பீடு குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கீர்த்திக்கு தற்போது 2 வயது குழந்தை உள்ளது. கடந்த நான்கு வருடங்களில் அவரின் அம்மா கீர்த்தியிடம் இருமுறை மட்டுமே பேசியுள்ளார். அதிலும் அவரின் பேரக் குழந்தை பிறந்த பிறகுதான்.

ஆனால் அவரின் தந்தையின் கோபம் சற்றும் குறையவில்லை. திருமணத்திற்கு பிறகு கீர்த்தியுடனான உறவை முற்றிலும் துண்டித்து விட்டார் அவரின் தந்தை.

தனது பெற்றோர் தனக்கு செய்த கொடுமையால் அவர்கள் மீது அதீத கோபத்தில் இருந்த கீர்த்தி, ஒரு கட்டத்தில் அவர்கள் தம்மிடம் மீண்டும் பேசுவார்கள் என எதிர்பார்க்கத் தொடங்கி விட்டார்.

“ஒருநாள் அவர் நிச்சயம் எங்களை புரிந்து கொள்வார்” என்கிறார் கீர்த்தி.

https://www.bbc.com/tamil/articles/cw4lw42jqw1o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
56 minutes ago, ஏராளன் said:

"இரும்பு கம்பியால் ரத்தம் வரும் வரை அடித்தனர்" - சாதி மறுப்பு திருமணங்கள் தமிழ்நாட்டில் இன்றும் ஏற்க மறுக்கப்படுவது ஏன்?

திராவிடம் ஏன் உருவாக்கப்பட்டது? திராவிடம் இதுவரை தமிழ்நாட்டில் சாதித்தது என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

திராவிடம் ஏன் உருவாக்கப்பட்டது? திராவிடம் இதுவரை தமிழ்நாட்டில் சாதித்தது என்ன?

சாதித்தது - மக்களின் பணத்தை கொள்ளையடித்தது

  • கருத்துக்கள உறவுகள்

சாதி என்பது பீனிக்ஸ் பறவை மாதிரி அழிக்க முடியாது......!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, உடையார் said:

சாதித்தது - மக்களின் பணத்தை கொள்ளையடித்தது

திராவிட போலி பற்றி பலவற்றை அல்ல சிலவற்றைக்கூட இங்கே எழுதமுடியாது உடையார். ஒவ்வொன்றையும் செய்தி போல் வாசித்துவிட்டு நகர்ந்து செல்லவேண்டியதுதான்.

கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் திராவிடம் என்கிறார்களோ தெரியவில்லை.:rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

திராவிடம் ஏன் உருவாக்கப்பட்டது? திராவிடம் இதுவரை தமிழ்நாட்டில் சாதித்தது என்ன?

அண்மையில்…. ஒரு பகுதி மக்கள் பாவிக்கும்  குடிநீர்த் தொட்டிக்குள் மலத்தை போட்டு விட்டு போனதும் திராவிடம்தான். 

அதுகும்… தீம்கா ஆட்சியில். 

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதாரம் வளர்ச்சி மாறுதலை கொண்டுவரும்.

பிரிட்டனில் கூட, ஒருகாலத்தில் தொழில் சார்ந்த வர்க்க பேதம் இருந்திருக்கிறது. இன்றும் கூட, waterman, ironsmith, goldsmith, miller ,carter, milkman, hunter, savage, dobbie, barber, என்று பண்டைய தொழில் சார் பெயர்களை வைத்துக்கொண்டு தொடர்கிறார்கள். ஆனால் வகுப்புவாதம் இல்லை.

நான் வேலை செய்த வங்கி ஒன்றில், ஒரு தமிழக இளைஞர், இஸ்லாமியர், இங்கே வேலை செய்ய வந்த இந்து தமிழ் பெண்ணை, காதலித்து மணந்து கொண்டார். இரு வீட்டாருக்கும் தெரியாது. இவர்களுக்கும் ஊருக்கு திரும்பும் ஐடியா இல்லை. இருவருமே கை நிறைய சம்பளம் பெரும் வேலை. ஆகவே, குடும்பம் குறித்த கவலை இல்லை.

அதுசரி, ஆந்திராவில், சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டி என்ற இருபெரும் சாதியில் இருப்பவர்கள் எப்படி முதல்வர் ஆகின்றனர் என்று பார்த்தால், அவர்கள் தெலுங்கர்கள் என்று மட்டுமே பார்க்கிறார்களாம்.

தமிழகத்தில், வாக்காளர்கள் மட்டும் சாதியாக பார்க்க சொல்லபட்டிருப்பதால், தமிழர் அல்லாதோர் ஆள்கின்றனர். இப்போது கல்வி, பொருளாதார உயர்வால், இளையோர் சிந்திக்கின்றார்கள். 

கேரளாவில், கம்யூனிச வரவால், கல்வி அறிவு கூடி, நம்பூதிரி, நாயர்களிடம் இல்லாமல், பின்தங்கிய சாதியாக கருதப்பட்ட, ஈழவர் சாதியில் இருந்து, முதல்வர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். 

Edited by Nathamuni

40 minutes ago, Nathamuni said:

 

அதுசரி, ஆந்திராவில், சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டி என்ற இருபெரும் சாதியில் இருப்பவர்கள் எப்படி முதல்வர் ஆகின்றனர் என்று பார்த்தால், அவர்கள் தெலுங்கர்கள் என்று மட்டுமே பார்க்கிறார்களாம்.

தமிழகத்தில், வாக்காளர்கள் மட்டும் சாதியாக பார்க்க சொல்லபட்டிருப்பதால்,

அப்படி என்றால் சாதி ரீதியில் குறைவான (இசை வேளாளர்) கருணாநிதி மற்றும் அவர் மகன் எவ்வாறு முதலமைச்சர் கள் ஆகின்றனர்?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நிழலி said:

அப்படி என்றால் சாதி ரீதியில் குறைவான (இசை வேளாளர்) கருணாநிதி மற்றும் அவர் மகன் எவ்வாறு முதலமைச்சர் கள் ஆகின்றனர்?

caste neutral !!

MGR மேனன் 
ஜெயலலிதா பிராமணர்

மண்ணின் மைந்தர் நாவலர் நெடும்செழியனை வரவிடாமல், கருணாநிதி வந்ததன் காரணம் MGR.
 

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

அப்படி என்றால் சாதி ரீதியில் குறைவான (இசை வேளாளர்) கருணாநிதி மற்றும் அவர் மகன் எவ்வாறு முதலமைச்சர் கள் ஆகின்றனர்?

முதலாவது தடவை அது அவரே கேட்டு வாங்கியதாம். அவரை விட மூத்த தலைவர்கள் இருக்க பிற்படுத்தப்பட்ட தான் வருவதே பொருத்தமானது என எம்ஜிஆரை துணையாக கொண்டு பதவியை பெற்றதாக வாசித்தேன்.

47 minutes ago, Nathamuni said:

caste neutral !!

MGR மேனன் 
ஜெயலலிதா பிராமணர்

மண்ணின் மைந்தர் நாவலர் நெடும்செழியனை வரவிடாமல், கருணாநிதி வந்ததன் காரணம் MGR.
 

உங்கள் முதல் கருத்தில் தமிழக மக்கள் சாதி அடிப்படையில் தான் முதலமைச்சர் களை தெரிவு செய்கின்றனர் என பொருள்பட எழுதியதாக தோன்றியது, அதனால் தாம் கேட்டேன்.

அறிஞர் அண்ணா வும் சாதி ரிதியில் குறைவானவர் என்பதால் தான் நீதிக் கட்சியில் இணைந்து அரசியலில் கால் பதித்தார் என வாசித்த ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

உங்கள் முதல் கருத்தில் தமிழக மக்கள் சாதி அடிப்படையில் தான் முதலமைச்சர் களை தெரிவு செய்கின்றனர் என பொருள்பட எழுதியதாக தோன்றியது, அதனால் தாம் கேட்டேன்.

அறிஞர் அண்ணா வும் சாதி ரிதியில் குறைவானவர் என்பதால் தான் நீதிக் கட்சியில் இணைந்து அரசியலில் கால் பதித்தார் என வாசித்த ஞாபகம்.

இல்லை, நான் சொல்லவந்தது, தமிழகத்தில் வாக்காளர்கள் தமக்கிடையே சாதி பார்த்து பிளவு பட்டு, caste neutral ஆன ஆட்களை தெரிவு செய்கிறார்கள்.

அதேவேளை, ஆந்திராவில், வேட்ப்பாளர்கள் சாதியமாக பிரிந்து நின்றாலும், வாக்காளர்கள் அதனை பொருட்படுத்தாமல், தெலுங்கர்கள் என்று மட்டுமே பார்ப்பதால், நாயுடுகளும், ரெட்டிகளும் முதல்வராக முடிகிறது.

அதாவது வாக்காளரிடையே பேதம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நிழலி said:

உங்கள் முதல் கருத்தில் தமிழக மக்கள் சாதி அடிப்படையில் தான் முதலமைச்சர் களை தெரிவு செய்கின்றனர் என பொருள்பட எழுதியதாக தோன்றியது, அதனால் தாம் கேட்டேன்.

அறிஞர் அண்ணா வும் சாதி ரிதியில் குறைவானவர் என்பதால் தான் நீதிக் கட்சியில் இணைந்து அரசியலில் கால் பதித்தார் என வாசித்த ஞாபகம்.

தமிழர்கள் தமிழர்களிடையே தான் இந்த வேற்றுமை. ஆனால் வேறு மாநிலங்களில் இருந்து இருந்து வருபவர்களுக்கு இது கிடையாது. எனவே கருணாநிதி எம் ஜி ஆர்.. ... விதி விலக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
On 22/3/2023 at 19:32, குமாரசாமி said:

திராவிட போலி பற்றி பலவற்றை அல்ல சிலவற்றைக்கூட இங்கே எழுதமுடியாது உடையார். ஒவ்வொன்றையும் செய்தி போல் வாசித்துவிட்டு நகர்ந்து செல்லவேண்டியதுதான்.

கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் திராவிடம் என்கிறார்களோ தெரியவில்லை.:rolling_on_the_floor_laughing:

நன்றாக சொன்னீர்கள் சர்வாதிகராத்தைப்பற்றி வெளிப்படையாக🙏

  • கருத்துக்கள உறவுகள்
On 22/3/2023 at 06:32, குமாரசாமி said:

கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் திராவிடம் என்கிறார்களோ தெரியவில்லை.:rolling_on_the_floor_laughing:

கடவுள் இல்லை என்று வெளியே சொன்னாலும்

சகல விடயங்களும் பூஜை செய்தே தொடங்குகிறார்கள்.

அவரவர் வீடுகளில் பெரிய பூஜை அறையும் வைத்திருப்பதாக கூறுகிறார்கள்.

இதுகளைப் பற்றி  @புரட்சிகர தமிழ்தேசியன் @ராசவன்னியன் போன்றோரே கருத்து சொல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் கண்டவரை தாய் கழகத்தில் ( தி.க ) உள்ளவர்கள் ஓரளவு கொள்கை உறுதியுடன் இருக்கின்றனர். பூசை அறை இருப்பதில்லை.. எட்டி பார்த்தே உறுதி செய்து கொண்டேன்.

ஆனால் அவர்களும் குல வழிபாட்டை விடுவதில்லை( மாட சாமி /முனீஸ்வரன்) .. கிடா வெட்டி சரக்கு போத்தல் வைத்து பொங்கல் பொங்கி வழிபடவே செய்கின்றனர்

அவர்களும் எதிர்ப்பது பெரும் தெய்வங்களைதான் குறிப்பாக வைஷ்ணவம் - ராமர்

periyar-srirangam.jpg

சைவம்-சிவனை அந்தளவுக்கு எதிர்ப்பதில்லை .தமிழுக்கு சைவத்தின் பங்கு பெரியது. அது அவலை நினைத்து வெறும் உலக்கையை இடிப்பது போலாகிவிடும் தமிழகத்தின் மிக பெரிய ஆதினங்கள் மதுரை, திருவாடுதுறை , திருபனந்தாள் ஆகிய எல்லாம் சைவ வெள்ளாளர்கள் கட்டுப்பாட்டிலே உள்ளன..

அப்புறம் திமுக/ அதிமுக ..

கிச்சு கிச்சு மூட்டாதீங்க..போங்க தோழர் எப்பவுமே ஒரே டமாஸ்தான்..😊

14 hours ago, ஈழப்பிரியன் said:

கடவுள் இல்லை என்று வெளியே சொன்னாலும்

சகல விடயங்களும் பூஜை செய்தே தொடங்குகிறார்கள்.

அவரவர் வீடுகளில் பெரிய பூஜை அறையும் வைத்திருப்பதாக கூறுகிறார்கள்.

இதுகளைப் பற்றி  @புரட்சிகர தமிழ்தேசியன் @ராசவன்னியன் போன்றோரே கருத்து சொல்லலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நான் கண்டவரை தாய் கழகத்தில் ( தி.க ) உள்ளவர்கள் ஓரளவு கொள்கை உறுதியுடன் இருக்கின்றனர். பூசை அறை இருப்பதில்லை.. எட்டி பார்த்தே உறுதி செய்து கொண்டேன்.

தோழர் திமுக வின் உத்தியோக பூர்வவகொள்கை கடவுள் மறுப்பு இல்லையென வாசித்து அறிந்து கொண்டேன். அறிஞர் அண்ணா திமுக உருவான போது “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற கொள்கையையே அறிவித்தார். அதுவே திமுக அதை தொடர்ந்து அதிமுகவின் கொள்ளை அல்லவா? 

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நான் கண்டவரை தாய் கழகத்தில் ( தி.க ) உள்ளவர்கள் ஓரளவு கொள்கை உறுதியுடன் இருக்கின்றனர். பூசை அறை இருப்பதில்லை.. எட்டி பார்த்தே உறுதி செய்து கொண்டேன்.

ஆனால் அவர்களும் குல வழிபாட்டை விடுவதில்லை( மாட சாமி /முனீஸ்வரன்) .. கிடா வெட்டி சரக்கு போத்தல் வைத்து பொங்கல் பொங்கி வழிபடவே செய்கின்றனர்

அவர்களும் எதிர்ப்பது பெரும் தெய்வங்களைதான் குறிப்பாக வைஷ்ணவம் - ராமர்

periyar-srirangam.jpg

சைவம்-சிவனை அந்தளவுக்கு எதிர்ப்பதில்லை .தமிழுக்கு சைவத்தின் பங்கு பெரியது. அது அவலை நினைத்து வெறும் உலக்கையை இடிப்பது போலாகிவிடும் தமிழகத்தின் மிக பெரிய ஆதினங்கள் மதுரை, திருவாடுதுறை , திருபனந்தாள் ஆகிய எல்லாம் சைவ வெள்ளாளர்கள் கட்டுப்பாட்டிலே உள்ளன..

அப்புறம் திமுக/ அதிமுக ..

கிச்சு கிச்சு மூட்டாதீங்க..போங்க தோழர் எப்பவுமே ஒரே டமாஸ்தான்..😊

 

உங்கள் விரிவான தகவலுக்கு நன்றி புரட்சி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நான் கண்டவரை

தகவல்களுக்கு நன்றி புரட்சியர்! 

8 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அப்புறம் திமுக/ அதிமுக ..

கிச்சு கிச்சு மூட்டாதீங்க..போங்க தோழர் எப்பவுமே ஒரே டமாஸ்தான்..😊

மேலதிக விளக்கம் இல்லாமல் இதோடை நிப்பாட்டினதுக்கு மெத்தப்பெரிய உபகாரம் :beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

அதுவே திமுக அதை தொடர்ந்து அதிமுகவின் கொள்ளை அல்லவா

தெரிந்து தட்டச்சு செய்தீர்களோ தெரியாமல் எழுத்து பிழையோ..

101% உண்மை தோழர்..😊

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தெரிந்து தட்டச்சு செய்தீர்களோ தெரியாமல் எழுத்து பிழையோ..

101% உண்மை தோழர்..😊

இரண்டாகவும் இருக்கலாம். ஆனால் இந்தியா என்றால் அது அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் அல்லவா? என்னை பொறுத்தவரை சான்ஸ் கிடைக்காமல் இருப்பவன் மட்டும் தான் இந்திய அரசியலில் யோக்கியன். சான்ஸ் கிடைக்கும் வரை. 

 அதை விட  எம் ஜி ஆர் ஈழப்போராட்டத்துக் அள்ளிக்  கொடுத்த வரலாறு தெரியும். அன்ரன் பாலசுங்கம் அவர்கள் எழுதிய விடுதலை கட்டுரை தொடரில் படித்தது. 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, island said:

இரண்டாகவும் இருக்கலாம். ஆனால் இந்தியா என்றால் அது அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் அல்லவா? என்னை பொறுத்தவரை சான்ஸ் கிடைக்காமல் இருப்பவன் மட்டும் தான் இந்திய அரசியலில் யோக்கியன். சான்ஸ் கிடைக்கும் வரை.

100க்கு 70%- 30% அதாவது 100%  யாரும் யோக்கியன் இல்லை..

வீதி புனரமைப்புக்கு வருவம்

100 பெர்சன்ட் வேலைக்கு 70% க்கு வேலை செய்து 30% பொக்கற்றில் விடுபவன் பரவாயில்லை யோக்கியன்

100%மே  புனரமைப்பு செய்தாக கணக்கு காட்டி பொக்கற்றில் விடுபவன் அயோக்கியன் 

டிஸ்கி

கட்சி நடத்த / தேர்தல் செலவுக்கு வாக்காளர்க்ளுக்கு கையுட்டு கொடுக்க ..பணம் வானத்தில் இருந்து வருவதில்லை..

ஆனாலும் அடிப்பதில் கொஞ்சமாவது நியாய தர்மம் வேண்டும். என்பதே நிலைப்பாடு.😊 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

100க்கு 70%- 30% அதாவது 100%  யாரும் யோக்கியன் இல்லை..

வீதி புனரமைப்புக்கு வருவம்

100 பெர்சன்ட் வேலைக்கு 70% க்கு வேலை செய்து 30% பொக்கற்றில் விடுபவன் பரவாயில்லை யோக்கியன்

100%மே  புனரமைப்பு செய்தாக கணக்கு காட்டி பொக்கற்றில் விடுபவன் அயோக்கியன் 

டிஸ்கி

கட்சி நடத்த / தேர்தல் செலவுக்கு வாக்காளர்க்ளுக்கு கையுட்டு கொடுக்க ..பணம் வானத்தில் இருந்து வருவதில்லை..

ஆனாலும் அடிப்பதில் கொஞ்சமாவது நியாய தர்மம் வேண்டும். என்பதே நிலைப்பாடு.😊 

உண்மை தோழர். எமது மூன்றாம்  உலக நாடுகள் என்று அழைக்கப்படும் நாடுகளின் பொதுவான தலையெழுத்து  இது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 23/3/2023 at 19:46, ஈழப்பிரியன் said:

கடவுள் இல்லை என்று வெளியே சொன்னாலும்

சகல விடயங்களும் பூஜை செய்தே தொடங்குகிறார்கள்.

அவரவர் வீடுகளில் பெரிய பூஜை அறையும் வைத்திருப்பதாக கூறுகிறார்கள்.

இதுகளைப் பற்றி  @புரட்சிகர தமிழ்தேசியன் @ராசவன்னியன் போன்றோரே கருத்து சொல்லலாம்.

சில கொடூரங்களையும், கொலைகளையும், அழிவுகளையும் பார்க்கும்போதும் (முக்கியமாக ஈழத்தில் நடந்தவை) கடவுள் இல்லையென்றே தோன்றும். அதே சமயம் சில அதிசயங்களையும், மனிதனின் சக்திக்கு அப்பால் நடக்கும் இயற்கையின் செயல்களை பார்க்கும்போது ஏதோ ஒரு சக்தி இருக்கிறதென சடுதியில் உறைக்கும். வாழ்க்கை முழுவதும் இந்த தளும்பு நிலை இருந்துகொண்டே இருக்கிறது.

எனது வீட்டிலும் பூசை அறை இருக்கிறது, அது இல்லாளின் கட்டுப்பாட்டில். நான் அதிகம் செல்வதில்லை.  பெரியாரின் கொள்கைகள் பல பிடிக்கும், ஆனால் கடவுள் மறுப்பில், மேலே சொன்னபடி மனம் இன்னும் தளும்பு நிலைதான்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ராசவன்னியன் said:

சில கொடூரங்களையும், கொலைகளையும், அழிவுகளையும் பார்க்கும்போதும் (முக்கியமாக ஈழத்தில் நடந்தவை) கடவுள் இல்லையென்றே தோன்றும். அதே சமயம் சில அதிசயங்களையும், மனிதனின் சக்திக்கு அப்பால் நடக்கும் இயற்கையின் செயல்களை பார்க்கும்போது ஏதோ ஒரு சக்தி இருக்கிறதென சடுதியில் உறைக்கும். வாழ்க்கை முழுவதும் இந்த தளும்பு நிலை இருந்துகொண்டே இருக்கிறது.

எனது வீட்டிலும் பூசை அறை இருக்கிறது, அது இல்லாளின் கட்டுப்பாட்டில். நான் அதிகம் செல்வதில்லை.  பெரியாரின் கொள்கைகள் பல பிடிக்கும், ஆனால் கடவுள் மறுப்பில், மேலே சொன்னபடி மனம் இன்னும் தளும்பு நிலைதான்.

உண்மை தான் வன்னியர்.
இந்தப் பிரச்சனை எல்லோருக்குமே உண்டு.
தகவலுக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.