Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலையினுள் புத்தர் சிலை : எதிர்த்த தமிழ் மாணவர்களுக்கு விசாரணை !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

02 AUG, 2023 | 04:12 PM
image
 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், செவ்வாய்க்கிழமை (01) போயா தினத்தை முன்னிட்டு பௌத்த கொடிகள் கட்டி, புத்தர் சிலை வைத்து வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.


பௌத்த கொடிகள் பல்கலையினுள் கட்டிக்கொண்டிருந்தபோது அதனை தடுப்பதற்கு கலைப்பீட 3ஆம் ஆண்டு தமிழ் மாணவர்கள் அங்கு சென்றவேளை, அங்கு வந்த ஒழுக்காற்று விசாரணை அதிகாரி மாணவர்களை அங்கு செல்ல வேண்டாம் என தடுத்துள்ளார்.

அதனையும் மீறிச் சென்ற மாணவர்கள் கொடிகள் கட்டுவதை தடுத்தனர். அதனைத் தொடர்ந்து விஞ்ஞான பீடத்தின் பின்புறத்தினூடாக புத்தர் சிலை எடுத்து வரப்பட்டது. இதன்போது ஒரு கறுப்பு நிற மர்ம வாகனமும் பல்கலையினுள் நுழைந்தது.


இதன்போது குறுக்கிட்ட கலைப்பீட தமிழ் மாணவர்கள், புத்தர் சிலையை பல்கலைக்கழக வளாகத்தினுள் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன்போது அவ்விடத்திற்கு வந்த பிக்கு ஒருவர் மாணவர்களை காணொளி மற்றும் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.


இந்த சந்தர்ப்பத்தில் புத்தர் சிலையை எடுத்து வந்த பெரும்பான்மையின மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பெற்ற அனுமதி கடிதத்தை காண்பித்து, "நாங்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுத்தான் புத்தர் சிலையை கொண்டு வருகின்றோம்" என்றனர்.


அதனையும் மீறி தடுக்க முடியாத கலைப்பீட தமிழ் மாணவர்கள் அங்கிருந்து அகன்றனர். ஆனால் அந்த மர்ம வாகனத்தில் வந்தது யார்? எதற்காக அந்த மர்ம வாகனம் பல்கலைக்கழகத்தினுள் வந்தது? என்ற எந்தவிதமான தகவல்களும் தெரியவரவில்லை.


இந்நிலையில் சட்ட நிறைவேற்று அதிகாரி மற்றும் ஒழுக்காற்று விசாரணை அதிகாரி ஆகியோர், நேற்றையதினம் புத்தர் சிலை வைத்து வழிபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த கலைப்பீட தமிழ் மாணவர்களை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.


தமிழர்களது நிலங்கள் பறிபோகின்ற சந்தர்ப்பத்தில், பல்கலைக்கழகத்தையும் பறி கொடுப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முயல்கிறதா என சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.


அத்துடன் பல்கலைக்கழக நிர்வாகமானது தமது கதிரைகளை தக்க வைப்பதற்காக அடுத்தடுத்த கட்டங்களில், பல்கலைக்கழக வளாகத்தில் புத்தர் சிலையை வைத்துவிட்டு விகாரை கட்டுவதற்கும் அனுமதி கொடுக்கும் என பல தரப்பினரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/161493

  • கருத்துக்கள உறவுகள்

இது தவறு என்று சொல்ல முடியாதே. சிங்கள மாணவர்கள், தமது வணக்கத்துக்காக வைக்கிறார்கள்.

பேராதனையில், குறிஞ்சிக்குமரன் வைத்து வணங்குகிறார்கள் தமிழ் மாணவர்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்+
2 minutes ago, Nathamuni said:

இது தவறு என்று சொல்ல முடியாதே. சிங்கள மாணவர்கள், தமது வணக்கத்துக்காக வைக்கிறார்கள்.

பேராதனையில், குறிஞ்சிக்குமரன் வைத்து வணங்குகிறார்கள் தமிழ் மாணவர்கள்.

ஆனால் குறிஞ்சிக்குமரனை இப்பிடி பல்கலைக் கழகத்துக்குள்ள ஊர்வலமாக கொண்டுவரேலையே, நானறிந்தவரை!

மற்றது இவ்வாறு புத்தரைக் கொண்டுவருவது வேண்டுமென்றே செய்யப்படுகிறது என்பது வெள்ளிடமலை.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நன்னிச் சோழன் said:

ஆனால் குறிஞ்சிக்குமரனை இப்பிடி பல்கலைக் கழகத்துக்குள்ள ஊர்வலமாக கொண்டுவரேலையே, நானறிந்தவரை!

மற்றது இவ்வாறு புத்தரைக் கொண்டுவருவது வேண்டுமென்றே செய்யப்படுகிறது என்பது வெள்ளிடமலை.

நான் படிக்கும் வரை மொறட்டுவில் இப்படி புத்தர் உள் வரவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் முடிவோடு தான் செயல்படுகிறார்கள்.

அனுமதி பெற்றவர்கள் ஏன் புத்தரை பின் கதவால் கொண்டுவ்ர வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

ஆனால் குறிஞ்சிக்குமரனை இப்பிடி பல்கலைக் கழகத்துக்குள்ள ஊர்வலமாக கொண்டுவரேலையே, நானறிந்தவரை!

மற்றது இவ்வாறு புத்தரைக் கொண்டுவருவது வேண்டுமென்றே செய்யப்படுகிறது என்பது வெள்ளிடமலை.

 

1 hour ago, உடையார் said:

நான் படிக்கும் வரை மொறட்டுவில் இப்படி புத்தர் உள் வரவில்லை

 

40 minutes ago, nunavilan said:

சிங்களம் முடிவோடு தான் செயல்படுகிறார்கள்.

அனுமதி பெற்றவர்கள் ஏன் புத்தரை பின் கதவால் கொண்டுவ்ர வேண்டும்?

பௌத்த ஆட்கள் இல்லாத இடங்களில், குருந்தூர், தையிட்டி போன்றவைகளுடன் ஒப்பிடும்போது, இது பரவாயில்லையே, இருந்து படிக்கும் மாணவர்களுக்கு, ஆன்மிக தேவை இருக்கும் என்ற கருத்தில் சொன்னேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நாதம் சொல்வது சரி தானே?

பௌத்தர்கள் பாரம்பரியமாக வாழாத இடங்களில் விகாரை என்பது வேற விடயம். பௌத்த மாணவர்கள் தற்காலிகமாகத் தங்கிப் படிக்கும் ஒரு நிறுவனத்தில் தம் வழிபாட்டுக்கு புத்தர் சிலையை வைத்தாலோ, ஊர்வலமாகக் கொண்டு சென்றாலோ நிர்வாகம் ஒன்றும் செய்ய முடியாது. அதனால் தான் அனுமதியைக் கொடுத்து விட்டுப் பேசாமல் இருந்திருக்கிறார்கள்.

கலைப்பீட மாணவர்கள் அவசரப் பட்டு விட்டார்களென நினைக்கிறேன்.

பி.கு: ஊர்வலமாக மத அடையாளங்களை எடுத்துச் செல்வதற்கு எதிராக ஏதாவது சட்டம் இருக்கிறதா? நான் அறியவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் ஆடி வேல் என்று ரொக்ஸி தியேட்டர் முதல் மயூரபதி அம்மன் வரை ரோட்டை மறித்து நாம் செய்யும் கூத்தை விட இது ஒன்றும் பெரிதல்ல.

யாழ் பல்கலைகழகம் தமிழ்-நீக்கம், சிங்கள-மயமாதலைத்தான் நாம் எதிர்க்க வேண்டும்.

அதே போல் யாரும் இல்லாத தமிழ் ஊர்களில் அடாத்தாக புத்தர் குடியேறுவதை, இருக்கும் இந்து வழிபாட்டு தலங்களை பெளத்த சின்னம் என அறிவிப்பதையும் நாம் எதிர்க வேண்டும்.

தங்கி படிக்கும் சிங்கள மாணவர் தமக்கு என ஒரு சிறு சிலையை நிறுவுவதை அல்ல.

இதுதான் கொள்கை நிலை. நடைமுறையில் புத்தர் சிலையே ஆக்கிரமிப்பின் அடையாளமாகி போன நாட்டில் கலைப்பீட மாணவர் செயல், உணர்வு புரிந்து கொள்ள கூடியதே.

பிகு

விரைவில் யாழில் பெளத்த, சிங்கள கலைப்பிரிவு ஒன்று திறப்பார்கள் என எதிர்வுகூறுகிறேன்.

சிங்கள இனவாதிகள் எப்போதும் one step ahead சிந்திப்பார்கள். Proactive ஆக செயல்படுவார்கள். இராமநாதன் காலத்தில் இருந்து நாம் அவர்கள் செய்தபின் எதிர்வினையாற்றும் reaction மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இன்னுமொரு அதிர்ச்சி தகவலை யாழ் உறவுகளுக்கு சொல்ல போகிறேன் 🤣.

இலங்கையில் அரச மானியத்தில் இயங்கும் பல்கலைகழகத்தில் அல்ல, சில பிக்குகள் சேர்ந்து உங்கள் தலையில் புத்தர் சிலையை நிறுவினாலும் எதுவும் உங்களால் செய்ய முடியாது.

உச்ச நீதி மன்றே உங்கள் தலையில் இருக்கும் களிமண் - சங்கமித்தை வெள்ளரசு மரக்கிளையை பதியம் வைத்து கொணர்ந்த மண் என கூறி சிலை வைக்க அனுமதி கொடுக்கும்.

வரலாறு, தொல்பொருளியல், கலை, அரசியல், சட்டம் மேலும் வாழ்வின் அத்தனை துறைகளிலும் மகாவம்ச பொய்-புரட்டு கோலூச்சும் தேசம் இலங்கை.

இதை யாழ்களத்தில் எழுதி விளங்கவைக்கும் அளவுக்கு நமக்கு மறதி வந்து விட்டதா?

இதில் இருந்து நாம் விடுபட எமக்கு ஒரு அரை சுயநிர்ணய தீர்வாவது முக்கியம். அத்தியாவசியம்.

இந்த பெளத்த-சிங்கள ஆக்கிரமிப்பு இயந்திரத்தை வவுனியா தெற்கோடும், ஹொரவபொத்தான (குறவன் பொத்தனை), மன்னம்பிட்டிய (மன்னன் பிட்டி), யோடும் நிறுத்தி வைக்கும் அரிய வாய்ப்புகள் சிலதை, பேராசையால் தவற விட்டவர்கள் நாம்.

இப்போதும் இருப்பதை காக்கும் எந்த முயற்சியும் எடுப்பதாக இல்லை.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இது தவறு என்று சொல்ல முடியாதே. சிங்கள மாணவர்கள், தமது வணக்கத்துக்காக வைக்கிறார்கள்.

பேராதனையில், குறிஞ்சிக்குமரன் வைத்து வணங்குகிறார்கள் தமிழ் மாணவர்கள்.

புத்தர் ஆன்மீகத்தை ,அன்பைப் போதிக்கும் புத்தராக  வந்தால் அனுமதிக்கலாம் அதைவிடுத்து ஆக்கிரமிப்புப் புத்தராக, அதிகார வர்க்கத்தின் குறியீடாக பெரும்பான்மை எனும் இனத்துவேசத்துடன் வந்தால் அருவருப்பாகத்தான் இருக்கும். புத்தன் நல்லவராக இருக்கலாம் ஆனால் அவரைப் பின்பற்றுபவர்களை நினைத்தால் குமட்டல் எடுக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

பூசணிக்காயே போகுது, கடுகைப்பற்றி கவலைப்பட்டு பயன் என்ன?

மனோ கணேசன் சொன்னதை கவனித்தோமா? மிகப்பெரிய சிக்கல், வடபகுதி தமிழர்களின் வெளிநாட்டு மோகம் என்கிறார்.

அதன் அர்த்தம், மக்கள் தொகை குறைவு. பலத்தை இழந்தால் இடத்தை இழப்போம்.

யாழில், கோட்டல் ரிசப்சன் முதல், பிளமிங், எலக்ரிக்கல் வேலைகளுக்கு தென் இலங்கையர் வருகிறார்கள். யாரெண்டாலும் பரவாயில்லை, வேலை கெதியா, திறமா முடிய வேண்டும் என்று வெளிநாட்டுக் காசோட சனம்.

தின்னவேலியில் சிறப்பான சைவ ரெஸ்ரண்ட் லெவின் மனேஜர், சமையல்காரர்கள் தமிழகம். முதலாலி சிங்களவர்.  வெளிநாட்டு தமிழர்கள், ஆகா, ஓகோ என்று மிக அதிக விலை கொடுத்து சாப்பிட்டு கிளம்புகினம்.

திருடர், வாள்வெட்டுக் கோஸ்டிகள், ஊழல்பொலீஸ் பார்ட்ணர்சிப் வேற.

ஆக... பிரச்சணையின்மூல வேர் வேறு.🥵

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

கொழும்பில் ஆடி வேல் என்று ரொக்ஸி தியேட்டர் முதல் மயூரபதி அம்மன் வரை ரோட்டை மறித்து நாம் செய்யும் கூத்தை விட இது ஒன்றும் பெரிதல்ல.

இங்கு வெளிநாடுகளில் நடத்துகின்ற கூத்துகளும் ஒன்றும் குறைந்தது இல்லை.

 

10 hours ago, உடையார் said:

நான் படிக்கும் வரை மொறட்டுவில் இப்படி புத்தர் உள் வரவில்லை

கொழும்பு பல்கலை கழகத்தில் படித்த ஒருவருடன் நான் இலங்கை சென்று திரும்பிய போது, பேசிய போது சொன்னார் தாங்கள் படித்த காலம் மாதிரி இப்போ இல்லை. தமிழ் சிங்கலவர்கள் முஸ்லிம் எல்லோருமே இப்போ பக்தி பரவசம் தான்.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்+
7 hours ago, Justin said:

நாதம் சொல்வது சரி தானே?

பௌத்தர்கள் பாரம்பரியமாக வாழாத இடங்களில் விகாரை என்பது வேற விடயம். பௌத்த மாணவர்கள் தற்காலிகமாகத் தங்கிப் படிக்கும் ஒரு நிறுவனத்தில் தம் வழிபாட்டுக்கு புத்தர் சிலையை வைத்தாலோ, ஊர்வலமாகக் கொண்டு சென்றாலோ நிர்வாகம் ஒன்றும் செய்ய முடியாது. அதனால் தான் அனுமதியைக் கொடுத்து விட்டுப் பேசாமல் இருந்திருக்கிறார்கள்.

கலைப்பீட மாணவர்கள் அவசரப் பட்டு விட்டார்களென நினைக்கிறேன்.

பி.கு: ஊர்வலமாக மத அடையாளங்களை எடுத்துச் செல்வதற்கு எதிராக ஏதாவது சட்டம் இருக்கிறதா? நான் அறியவில்லை!

ஐயனே, 

பண்பாட்டைக் கடத்துவது சரிதான்... ஆனால் சிங்கள மாணாக்கருக்கு இப்படிக் கொண்டு சென்றால் தான் தங்களின் பண்பாடு தெரியுமா என்ன?

மற்றது, இதே போன்று வேறெந்த பல்கலைக்கழங்களிலும் நடைபெற்றது இல்லை.  இதே போன்று சிங்களப் பல்கலைக்கழகங்களில் தமிழர் செய்யப் போவதுமில்லை, அவ்வாறு செய்ய சிங்களவர் அனுமதிக்கப்போவதுமில்லை. செய்தால் அரத்த ஆறே ஓடும், தமிழருக்கு! ஆனால், இங்கு இதை சிங்கள பேரினவாதம் வேண்டுமென்றே செய்கிறது என்பது தங்களுக்குத் தெரியவில்லையா? அல்லது தெரியாதது போலக் காட்டிக்கொள்கிறீர்களா?

ஊர்வலமாக எடுத்துச் செல்வது பிழையன்று... எவ்வாறெயினும், கல்வி கற்கும் இடத்தில் இது போன்று செய்வது பேரினவாத சிந்தனை. அதாவது தமிழரால் தங்களை ஒன்றும் செய்ய முடியாது, உங்கள் கோட்டையிலேயே நாங்கள் கொட்டமடிப்போம் என்பதையே உச்செயல் உணர்த்தி நிற்கிறது.

 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பில.. உலக அளவில் எங்கேயோ கடைக்கோடியில் இருக்கிற பல்கலைக்கழகம்.. இப்படி சிங்கள பெளத்தமயமாக்கலுக்கு உள்ளாவது வேதனை.

தென்னிலங்கையில்.. புத்தர் வாசம் செய்யாத பல்கலைக்கழகங்களில் பெளத்த மாணவர்கள் படிக்கவில்லையோ..????!

இது பெளத்த திணிப்பு. ஆக்கிரமிப்பு திமிரின் வெளிப்பாடு. அதற்கு இடமளிப்பது ஆபத்தானதாக முடியும்.

ஏனெனில்.. இந்த பல்கலைக்கழகம் அமைந்திருப்பது தமிழ் மக்கள் வாழும் பிராந்தியங்களின் இதயப்பகுதியிலாகும். அதனையும் சிங்கள பெளத்த மயமாக்குவது.. இலங்கையில் தமிழர்களுக்கு என்று தனியே தனித்துவமான இடமில்லை என்பதாக வரலாற்றுத் திரிப்புச் செய்யவே இது உதவும். அதனை நோக்கி தான் இந்த நகர்வுகள் எல்லாமே.

தென்னிலங்கையில்.. தமிழர்கள் வாழ்ந்தாலும் சிங்கள பெளத்த மயத்துக்குள் தான் பிழைப்பு நடத்தனும். ஆனால்.. வடக்குக் கிழக்கு தமிழர் தாயகத்திலும் எனி அது தான் நிலை.. ஆக மொத்தத்தில்.. சொறீலங்கா சிங்கள பெளத்த நாடு என்பதை நிறுவும் வேலைத்திட்டம் எல்லாம் வகையிலும் எல்லா வடிவிலும் முன்னெடுக்கப்படுகிறது.

இதற்கு புலி அழிப்பு சர்வதேச சக்திகளும் உறுதுணை..! ஹிந்தியா உட்பட. 

  • கருத்துக்கள உறவுகள்

வெறுமனே பல்கலைக்கழகம் ஒன்றிற்குள் அங்கு படிக்கும் சிங்கள மாணவர்களுக்காக புத்தர் சிலையொன்றைக் கொண்டுவருகிறார்கள், அதிலென்ன தவறு என்று கடந்து செல்லமுடியாத விடயம் இது.

அரச அதிகாரம், இராணுவ பலம், சனத்தொகை என்று தமிழர் மீதான தனது மொத்த ஆதிக்கத்தையும் சிங்கள பெளத்தம் செலுத்திக்கொண்டிருக்கும் ஒரு நாட்டில் சிறுபான்மையின தமிழர்கள் கொழும்பில் தேர் இழுப்பதோ பேராதனையில் குறிஞ்சிக் குமரனைக் கும்பிடுவதோ சிங்களவர்களைப் பொறுத்தவரை தமிழர்கள் தமது நாட்டை ஆக்கிரமிக்கப்போகிறார்கள், கொழும்பையும் பேராதனையையும் தமிழ்ச் சைவ மயமாக்கப் போகிறார்கள் என்கிற பயம் ஒருபோதும் ஏற்படுத்தப்படப் போவதில்லை. ஏனென்றால், தமிழர்கள் ஆக்கிரமிக்கப்போவதில்லையென்பது அவர்களுக்குத் தெரியும்.

ஆனால், வடக்குக் கிழக்கில் நிலைமை வேறு. தமிழர்கள் தொடர்ச்சியான இராணுவ அழுத்தத்திற்கு மத்தியில், அரச ஆதரவுடனான சிங்கள பெளத்த மயமாக்கலினை எதிர்கொண்டு நிற்கிறார்கள். தமிழர் தாயகமெங்கும் புத்தர் சிலைகளும், புராதன காலத்து சின்னங்கள் என்கிற பெயரில் அவர்களின் தாயகம் சிறிது சிறிதாக காவுகொள்ளப்பட்டு வருகிறது. இதனைத் தடுக்கும் எந்தச் சக்தியுமற்று அநாதைகளாக தமிழர்கள் இன்று நிர்க்கதியாக்கப்பட்டிருக்கிறார்கள். பெளத்த சிலைகளே தமிழர் தாயகத்தில் சிங்கள மயமாக்கலின் ஆரம்பப்புள்ளியாக இருக்கின்ற இத்தறுவாயில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் புத்தர் சிலையொன்றினைக் கொண்டுவருவதும் குறிஞ்சிக் குமரனுக்கு பேராதனையில் கோயில் கட்டுவதும் சமமென்று பார்க்கப்பட முடியாது.

அடக்குமுறைக்குள் வாழும் ஒருவனின் வீட்டில் அவனை அடக்குபவன் தனது அடையாளங்களைக் கொண்டுவருவதற்கும், அடக்குமுறையாளன் ஒருவனின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அடிமைகள் தமது அடையாளத்தை வைத்து வழிபடுவதற்கும் இடையே நிறைய வேறுபாடு இருக்கிறது. ஏனென்றால், அடக்குமுறையாளன் இனி என்ன செய்வான் என்பதை அடிமை அறிவான். அதேபோல‌, அடிமையால் குறிஞ்சிக் குமரனை வழிபடுவதைத்தவிர வேறு எதனையும் செய்யமுடியாது என்பதை அடக்குமுறையாளன் அறிவான். இதுதான் அந்த வித்தியாசம்.

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நன்னிச் சோழன் said:

ஆனால் குறிஞ்சிக்குமரனை இப்பிடி பல்கலைக் கழகத்துக்குள்ள ஊர்வலமாக கொண்டுவரேலையே, நானறிந்தவரை!

மற்றது இவ்வாறு புத்தரைக் கொண்டுவருவது வேண்டுமென்றே செய்யப்படுகிறது என்பது வெள்ளிடமலை.

பேராதனை பல்கலையில் இந்துக்களுக்கு குறிஞ்சி குமரன், பவுத்தர்களுக்கு பன்சலை, இஸ்லாமியருக்கு பள்ளி, கத்தோலிக்கர் , கிறிஸ்தவர்களுக்கு என வேறு ஆலயங்கள் இப்படியாக உருவாக்கி இருக்கிறார்கள்.

வெள்ளிக்கிழமையிகளில் இந்து மாணவர்கள் ஆலயத்துக்கு போய் திரு நீறு பூசி சந்தோசத்துடன் வருவார்கள். பொதுவாக பொறியியல் பீட மாணவர்கள் மிகவும் சந்தோசத்துடன் வருவார்கள். அங்கு படித்தவர்களுக்கு அதன் காரணம் விளங்கும்.

யாழில் அப்படி எல்லா சமயத்தவருக்கும் ஆலயங்கள் இருக்குதா என்று தெரியவில்லை. அப்படி இருக்குமாயின் இப்படியான சந்தர்ப்பங்கள் உருவாகுவதை தவிர்க்கலாம். எப்படி இருந்தபோதிலும் இது இங்கு பிரச்சினையை உருவாக்குவதட்கு செயட்படடதை போலவே தெரிகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று கிமீ தூரத்தில் உள்ள நாகா விகாரையில் புத்தர் அமர்ந்து அருள்பாலிக்க பக்தர்களை தேடிக்கொண்டிருக்கிறார் .இந்த சோம்பேறி பயல்கள் இ அங்கே போகாமல்,  லெக்சருக்கு போறவழியில அருள் எடுத்துக் கொண்டு போக எண்டு புத்தருக்கு அலுப்படிக்க நிக்கிறாங்கள்.

 நாங்கள் படிக்கிற நேரம் ஏழு கிமீ தொலைவில் இருந்த குறிஞ்சிக்கு தானே போய் வந்தனாங்கள். 

சுவாமியை தேடித் போய் கும்பிடுங்கோ ,  பலன் நிச்சயம் ….

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் கும்பிடும் நோக்கமல்ல, தமிழரை புண்படுத்தும், ஆக்கிரமிக்கும் செயல். வடக்கு சிங்கள மயமாக்கும்வரை ஐ நாவும் வேடிக்கை பாக்கும், பேச்சுவாத்தையும் இழுபடும். அதன்பிறகு இதெல்லாம் தேவையற்றது.  நாங்கள் ஆயுதப்போராட்டதை ஆதரிக்கவில்லை என்று அறிக்கை விட்டவர்கள் என்னத்தை சாதித்தார்கள்? இப்போவாவது தமிழ் இளைஞர் ஏன் ஆயுதம் ஏந்தினர் என்று புரியுமோ இவர்களுக்கு? இனிமேல் தெய்வங்களாய் ஏதாவது செய்தாற்தானுண்டு நமக்கு! இங்கு விகாரைகளை எழுப்ப, அங்குள்ளவர்கள் விகாரையை விட்டு விலகவேண்டியும் ஏற்படலாம். பௌத்தம் இலங்கையில் அழிவை நோக்கி நகருகிறது.     

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.