உங்களால் முடியும் !
சோம.அழகு
நானும் வாழ்க்கையில் ‘தன்னம்பிக்கை’ கட்டுரைகள், ‘சுய முன்னேற்ற’ கட்டுரைகள் எல்லாம் வரைவேன் என்று தப்பித்தவறி கூட கனவு கண்டதில்லை. But here we are மக்களே! இக்கட்டுரை விளிம்பு நிலையில் அல்லாத அனைத்து மனித உயிர்களுக்குமானது. ‘வாழ்வில் உருப்பட வேண்டுமா? இக்கட்டுரையை உடனடியாக வாசியுங்கள்’ என்றெல்லாம் கூவி அழைப்பது சற்றே மிகையாக இருக்கும்.
இக்கட்டுரை சிலரைச் சிந்திக்க வைக்கலாம்; ஆமோதிக்க வைக்கலாம்; இன்னும் சில பெருந்தகைகளைக் கூனிக் குறுகி நாண வைக்கலாம்; வேறு சிலரைத் துணுக்குறச் செய்யலாம்….. அல்லது இதன் சாரத்தைத் தூசியைப் போலத் தட்டி விட்டு மீண்டும் தமது வழக்கத்தைத் தொடரவும் வைக்கலாம். இவற்றில் ஏதோ ஒன்றை நிச்சயமாகச் செய்யும். ஏனெனில்… இவ்வளவுதானே சாத்தியக் கூறுகள்!
அதி முக்கியமான பழக்கம் ஒன்றைக் கற்றுக் கொடுப்பதே இவ்வெழுத்தின் நோக்கம் - ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்குவது, அதுவும் காசு கொடுத்து. அக்’குறிப்பிட்ட’ பொருளை உருவாக்கியவரிடமே நேராகச் சென்று ‘எனக்கு ஒன்று வேண்டும்’ (உட்பொருள் : இலவசமாக) எனக் கூச்சமில்லாமல் மானமில்லாமல் கேட்டு வைப்பதற்குப் பதில் இன்னொரு உன்னதமான மரியாதையான வழியின் மூலம் அப்பொருளை அடையலாம். அதற்கான கையேடுதான் இக்கட்டுரை.
இதற்கு இரு வழிகள் உள்ளன. ஒன்று அதற்கே உரித்தான பிரத்யேகக் கடைக்குச் செல்லலாம்; அல்லது இணையத்தில் பணிப்பை(order) கொடுக்கவும் செய்யலாம். அடுத்த கட்ட வழிமுறைகளைப் படிப்படியாகக் கடக்க ஓரளவு என்னால் இயன்ற வரை உதவுகிறேன். ஆரம்பிக்கலாங்களா?
வேண்டிய அப்பொருளைத் தேர்வு செய்த பின், (ஆண்கள் எனில்) காற்சட்டையின்/ (பெண்கள் எனில்) கைப்பையின் எந்தப் பகுதியில் பணப்பை(wallet/purse) இருக்கிறது என்று அய்யனாரிலிருந்து அல்லா வரை அனைத்து தெய்வங்களையும் ஒரு முறை கும்பிட்டுவிட்டு இடது வலது மூளைகளைக் கசக்கிப் பிழிந்து யோசிக்கவும். விடையைக் கண்டெடுத்துத் தந்த அதே மூளையிடம் நமது கையை அத்திசையில் கொண்டு செல்ல வேண்டி ஆணையிடவும். பலிக்கவில்லை எனில் இறைஞ்சி மன்றாடவும். அதற்கும் மசியவில்லை எனில், ‘மூளையை மீறிச் செயல்பட முடிகிறதா?’ (overriding brain mechanisms) என்பதைப் பரிசோதித்துப் பார்க்கும் வகையில் கையைப் பணப்பையை நோக்கிக் கொண்டு செல்லவும். பின்னர் ஒரு நொடி நம்மை நாமே ஜெல்லி மீனாக நினைத்து எதையும் யோசிக்காமல் பணப்பையைத் தொட்டு விட வேண்டும். இப்போது உடல் முழுக்க மின்சாரம் பாய்ந்ததைப் போன்றதொரு உணர்வு வரும். அந்தக் கற்பனையான மின் அதிர்ச்சியிலிருந்து மீண்டு அடுத்த கட்டத்துக்கு நகர்வோமாக….
அந்தப் பொருளை…. ஓ! அது எந்தப் பொருள் என்று சொல்லாமலேயே ஊக்கப்படுத்திக் கொண்டிருந்திருக்கிறேனா? அதுதான்…. புத்தகம், நூல், ஏடு எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் அப்’பொருள்’தான்.
வழமைக்கு மாறாக அன்றைக்குப் பார்த்து Purseல் இருக்கும் zip கடுமையாகச் சிக்கிக் கொண்டிருக்கும் என்பதால் அதைப் பொறுமையாகத் திறக்க முயல வேண்டும். Walletல் உலகின் சக்தி வாய்ந்த பசை ஒட்டியிருப்பதால் அதுவும் கூட பிரிந்து திறந்து கொள்ள மறுக்கும். இரண்டையும் கிழித்தாவது ‘திறந்திடு சீசே’ செய்ய வேண்டும். பணப்பை கிழிந்தால்தான் என்ன? ‘நூல்’தானே வாங்குகிறோம்? தைத்துக் கொள்ளலாம். விடா முயற்சி விஸ்வரூப வெற்றி! முயற்சி தன் மெய்வருத்தக் கூலியைத் தந்தே ஆக வேண்டும் ஆதலால் நமது இடையராத உழைப்பின் விளைவாக பை தன் வாயைப் பிளந்து நம்மைப் பாவமாகப் பார்க்கும். அல்லது அது அப்படிப் பார்ப்பதாக நமக்குத் தோன்றும். அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நம் மனதை இரும்பாகவோ டங்க்ஸ்டனாகவோ டைட்டானியமாகவோ மாற்ற வேண்டிய பொழுது இது.
நம் மொத்த ஆற்றலையும் பயன்படுத்தி ரூபாய்த் தாள்களை எடுத்துக் கடைக்காரரிடம் நீட்ட வேண்டும். மிகச்சரியாக இத்தருணத்தில் வாதம் தாக்கி கை செயலிழந்தது போகலாம்; நரம்புத் தளர்ச்சியால் கை நடுக்கம் ஏற்படலாம். துவண்டு போய்விடக் கூடாது! Come on, உங்களால் முடியும். உங்களால் நிச்சயம் முடியும். உலகின் சர்வ வல்லமை பெற்றவராக உங்களை இப்போது கருதிக் கொள்ள வேண்டும். கைகளைக் கம்பீரமாக வலுக்கட்டாயமாகப் பிடிவாதமாக நீட்டிக் காசைக் கொடுத்து விடவும். மூச்சுப் பயிற்சியில் ஈடுபட்டு நரம்பு மண்டலத்தை சாந்தப்படுத்தியவாறே பொருளைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்தப் படிநிலைகளும் இன்னல்களும் பணப்பைக்குப் பதில் செயலியின் மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய விரும்பும் அலைபேசியினருக்கும் பொருந்தும். ஆயிரக் கணக்கில் செலவழித்து வாங்கிய அலைபேசியில் அப்பொருளுக்கான இருநூறு ரூபாயைச் செலுத்துவதற்கு உண்டாகும் மனத்தடையை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லையென்றாலும் அந்த மனப்போராட்டத்தைப் பச்சாதாபத்தோடு அணுகும் கடமை… அடக் கண்றாவியே! அதுவும் முடியவில்லை. என்ன மாதிரியான மனநிலை அது? என்னவோ ஒண்ணு… நமது மங்காத மனவலிமையினால் அவ்வளவு பெரிய ரொக்கத்தை அனைத்துத் தடுமாற்றங்களையும் தயக்கங்களையும் கடந்து செலுத்திய பின் ‘க்ளியாங்க்’ என்னும் சத்தத்துடன் ‘பெறப்பட்ட தொகை…. இருநூறு ரூபாய்’ என்னும் குரல் நாராசமாய் ஒலிப்பதாகக் கூட உணர வாய்ப்புண்டு.
முதல் முறை காசு கொடுத்து வாங்கும் போது அப்படித்தான் இருக்கும். கை கால் வெடவெடவென உதறலெடுக்கும். அவ்வளவு பெரிய தொகை ஒரேடியாகக் கையை விட்டுப் போகிறதே என்ற சோகம் கவிந்து கொள்ளும். இப்படி ஒரு மாபெரும் தெண்டச் செலவு வாழ்க்கையில் செய்தே இருக்க மாட்டோம் ஆகையால் அச்சோகம் நம்முள் ஒரு குமுறலாகக் கூட மாறலாம். கவலை வேண்டாம்! இதுவும் கடந்து போகும். இதிலிருந்து மீள்வதற்கான உள வலிமையை நிச்சயம் அந்த உப்பிலியப்பன் உரித்தாக்குவாராக. உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் - யோவான் 16:20, சங்கீதம் 30:5, 126:5, ஏசாயா 61:3 ஆகியவையும் அதையே அருளுகின்றன.
**********************************
‘ஒரு (துவக்க நிலை) எழுத்தாளரின் புத்தகத்தை நான் வாசிப்பதே அவருக்குச் செய்யும் பெரிய உபகாரம். நேரத்தையும் ஆற்றலையும் வீணாக்கி(!) வாசித்தலை மேற்கொள்வது எனது பெருந்தன்மையை எடுத்துரைக்கிறது’ – இப்படியெல்லாம் அதி மேதாவித்தனமான சிந்தனைகளுடன் வலம் வருவதால்தான் எழுத்தாளரிடமே சென்று “புத்தகம் இன்னும் எனக்கு வரல” என்று தடித்தனமாகக் கேட்க முடிகிறது. “உங்க புத்தகம் எங்கே கிடைக்கும்?” என்று கூட நாகரிகமாகக் கேட்கலாம். நாவுக்கு ஒரு சேதமும் வராது.
எழுத்தாளர் அன்பின் மிகுதியாலும் அளவு கடந்த மரியாதையாலும் தமக்கு நெருக்கமான சிலருக்குப் பிரியப்பட்டுத் தாம் எழுதிய புத்தகத்தைத் தருவார்/அனுப்பி வைப்பார். அவ்வாறாக அன்பளிப்பாகப் பெறும் உரிமையைத் தாமாக எடுத்துக் கொள்ளும் இன்னபிற வினோத வினோபா பாவேக்களின் வதனத்திற்கு நேரே ‘சட்டத்தைக் கையில் எடுக்காதீங்க சார்/மேடம்’ என்று ஒரு நாள் சொல்ல ஆசை.
இன்னும் சில அரிய பிறவிகள் இருக்கிறார்கள். நேரடியாக எழுத்தாளரிடம் சென்று இலவசமாகக் கேட்கக் கொஞ்சம் வெட்கம் ஒட்டிக் கொண்டிருக்கும் போலும். எழுத்தாளர் யாருக்கெல்லாம் விருப்பப்பட்டுக் கொடுத்தாரோ அவர்களில் ஒருவரைப் பிடித்து அவரிடம் இருந்து வாங்கிக் கொள்வார்கள். பிறகு அந்த மரியாதைக்குரிய நபர் எழுத்தாளரிடம் புது பிரதி ஒன்றை மீண்டும் ‘இனாமாக’ப் பெற்று மரியாதையை அனாமத்தாக இழப்பார். இங்கிதமற்று நடந்து கொள்ளும் ஓசி ஆத்மாக்கள் எல்லாம் நல்ல… நல்ல என்பதை விட பொருளாதாரத்தில் உயர் நிலையில் இருப்பவர்கள்.
இன்றைய காலத்தில் பதிப்பகம் நடத்துவது எவ்வளவு சவாலான விஷயம் என்பதைப் பெரும்பாலானோர் உணர்வதே இல்லை. தமது எழுத்து அதற்கான தளத்தைச் சென்று அடைய வேண்டுமெனில் ஓர் எழுத்தாளர் இப்படியெல்லாம் செலவு செய்தே ஆக வேண்டும் என எதிர்ப்பார்க்கும் சமூகத்தின் மேல் என்ன மரியாதை வரும்?
**************************
திடீரென இதை எழுதுபொருளாகக் கையிலெடுக்கக் காரணம் தேவா அண்ணாவும் அவரது மனைவி சத்யா அக்காவும் (ஒரு தம்பதியை இப்படி உறவுமுறை சொல்லி அழைக்கக் கூடாதுதான். ஆனால் இப்போது இந்த ஆராய்ச்சி இக்கட்டுரைக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாதது ஆகையால் கண்டு கொள்ளாமல் கடந்து செல்வீர்களாக!). புத்தகங்களைப் பொறுத்த வரை ‘அன்பின் பொருட்டு’ என்பதைச் சற்றும் ஏற்றுக் கொள்ளாதவர்கள் இவர்கள். “அட பரவாயில்லை! இருக்கட்டும்” என்று எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் பிடிவாதமாகக் காசு கொடுத்துதான் வாங்குவார்கள். போதாக்குறைக்கு தம்மைச் சார்ந்தவர் யாரேனும் நம்மிடம் புத்தகம் கேட்டு நாம் இலவசமாகக் கொடுக்கிறோம் என்றால் அதற்கும் காசு தந்து அநியாயத்திற்கு நியாயமாக நடந்து கொள்வார்கள். கையில் காசு வாங்க மறுத்தால் gpay செய்து நம்மை நெளிய வைப்பார்கள். இப்படிப்பட்ட நல்லோர் வாழும் இதே தொல்லுலகில்தான்…..
ஒரு நியாயமான கற்பனை : காசு கொடுத்து புத்தகங்கள் வாங்குவோர், எழுத்தாளர்களிடம் இருந்து உளப்பூர்வமாக இனாமாகப் புத்தகங்கள் கிடைக்கப் பெறுவோர் – இவர்களுக்கு மட்டுமே அப்புத்தகங்களில் உலகின் அத்தனை சுகந்தங்களும் பொதிந்திருக்கக் கடவதாக!
மற்றபடி கவர்தல் மூலம் புத்தகம் கிட்டும் அனைவருக்கும் அதிலிருந்து வரும் முடை நாற்றம் மூளையைத் துளைக்கட்டும்!
By
சுப.சோமசுந்தரம் ·
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.