Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உசன் மிருசுவில் : தடங்கள்

Featured Replies

ஊரடங்கிய நடுநிசி. புளிய மரம் இருந்த இடம் தெரியாது அழிக்கப்பட்டிருக்கிறது. அது பிரசவித்த அனைத்துப் பேய்களதும் தடங்கள் காற்றில் பதிந்திருக்கிறது. முடக்கு வருகிறது. உரப்பையில் துவக்கை மறைத்து, ஏசியா துவிச்சக்கர வண்டியில் கோடன் சேட்டும் சாரமும் கட்டிப் பயணித்த பதின்வயது முகங்களின் சிரிப்பு அப்படியே அந்த முடக்கில் கண்ணிற்குப் புலப்படாத உணர்வாய் உறைந்திருக்கிறது. ஐபோன் ஆறு எஸ்சின் மூன்று பரிமாணத் தொழில்நுட்பம் போன்று, உறைந்த படத்தை அழுத்திப் பிடித்தால் உள்ளுர அது காணொளியாகி மறைகிறது. கடந்து நடக்கிறேன். சந்திக் கடையில் நின்று கதைபேசியவர் தடங்கள். காதிற்குள் ஒலி ஏறாத போதும் அவர்கள் உதட்டசைவை வாசிக்க முடிகிறது. கடந்து போகக் கோவில் வருகிறது. குஞ்சம்மா மூதாட்டி வழமை போல் ஜன்னலூடு கும்பிட்டு நிற்கின்றார். நந்தனார் கதையின் நடைமுறை உதாரணம் அவர். அந்தக் கோயிலின் அந்த ஜன்னல் இன்னமும் இருப்பதனால் காற்றில் அவள் உருவம் நிற்குமிடத்தைக் கூர்ந்து பார்க்க முடிகிறது.

மதில்களில் தொடர்பற்ற பாத்திரங்கள் தொடர்புபடுத்தப்பட்டிருந்தமை அவசரமாக அழிக்கப்பட்டிருந்தும், மதில்கள் இடித்துக் கட்டப்பட்டிருந்தபோதும், தடம் உணர முடிகிறது. 'பலாப்பழம்' இன்னமும் மீன் விற்றுச் செல்லுகிறார். காலையில் வியாபாரம் மாலையில் மேடையில் பிரச்சாரப் பேச்சென்று வாழ்ந்தவர் வாயில் அவர் பேசிய அனைத்துப் பேச்சுக்களினதும் தடங்களை வாசிக்க முடிகிறது. அவரது மீன் சைக்கிள் அதே ஒலி எழுப்பிக் கடந்து போகிறது. கூலி வேலையிலும் சுதந்திரமாய் வாழ்ந்த மரியநாயகம் அண்ணை. காலை மணி பத்தரையானால் வேலியடைப்பை நிறுத்துவதற்கு எவரையும் அவர் கேட்டதில்லை. கள்ளுத் தவறணை, சந்தையில் கொஞ்சம் மீன் கொண்டு சென்று குடித்துத் தின்றுவிட்டு நிறைமாதக் கர்ப்பிணி கூட பஸ்சில் இவரிற்கு எழுந்து இடம்குடுக்கும் வகை அமைந்திருந்த தனது கள்ளுத் தொந்தியினைத் தள்ளியபடி வருவார். ஒரு தடவை பேய் ஒன்று மாட்டு வண்டியில் தன்னை ஏற்றிப் போனதாய் அவர் சொன்ன தத்ரூபமான கதை நினைவில் வந்து போகிறது.

கட்டுவரம்பில் போன இறுதி ஊர்வலங்கள். முகங்கள் தெரியாது பதிவாகியிருந்த தடங்களில் இன்று முகங்களைப் பார்க்க முடிகிறது. என்னைத் துரத்திய எத்தினை நாய்கள், இப்போதும் கலைத்து வருகின்றன ஆனால் அவற்றால் பல்லுப் பூட்ட முடியவில்லை. அதனால் நின்று நிதானமாய் அவற்றின் உடலசசை உற்று நோக்கிப் பிரமித்துப் போகிறேன். பரமேஸ்வரியக்காவின் நாய் இப்போதும் சற்றுப் பயப்படுத்தவே செய்கிறது. காதில் இரைச்சல் சற்றும் குறையாது தொடர்கிறது. அவதானிக்கத் தவறிய ஒலிகளையும் அவதானிக்க முடிகிறது. இரைச்சல் சுதியாகி எத்தனையோ சங்கதிகள் நேரம் மாயை என்பதாய் இன்றைய உடலிற்குள் அன்றைய காட்சிகளை அவிழ்த்துக் கொண்டிருக்கின்றன.

புவனேஸ்வரிச் ரீச்சரும் ராசேஸ்வரிற் ரீச்சரும் ஒன்றாகவே பள்ளிக்கு நடந்து வருகிறார்கள். அசோகன் அண்ணா, மருத்துவபீடம் கிடைத்திருந்தும் சந்தையில் மாம்பழம் விற்று மீண்டுகொண்டிருக்கிறார். றுக்மன் அண்ணாவின் ஜேர்ணி மினிபஸ் இன்று பிந்திப் போய்க்கொண்டிருக்கிறது. சிவப்பிரகாசமண்ணை திருஞான சம்பந்தரோ என்று பார்ப்பவர் எண்ணும் வகை புட்போட்டில் நிற்கிறார். செல்வம் அண்ணை, இவர் வேகமாய் வண்டியோட்டுவாரா என்று பார்ப்பவர் நினைக்கும் ஒரு அப்பாவி முகத்தோடு இப்போதைக்கு மெதுவாய் ஓட்டிக்கொண்டிருக்கிறார். கொடிகாமத்தில் 'எண்ணாயிரத்து நூறு' இவர் போற நேரத்திற்கு வெளிக்கிட்டால், கதை பிறகு வேற மாதிரிப் போகும். ஜோசப் மாஸ்ற்றர் பெடியளின் தலையில் குட்டுவதற்கு ஒருகையினைத் தயார்ப் படுத்தி வைத்தபடியே சைக்கிளைக் கட்டுவரம்பில் ஏற்றுகிறார். 

ஹெட்-ரீச்சர் குடையினை மறக்காது எடுத்தபடி பள்ளிக்குக் கண்டி வீதியால் நடந்து போய்க்கொண்டிருக்கிறார். மிருசுவில் றோமன் கத்தோலிக்க மகாவித்தியாலத்திற்குள், இலங்கநாயகம் ரீச்சரின் வகுப்பு என்றைக்கும் போல சுவர்க்கமாய் நடந்து கொண்டிருக்கிறது. பக்கத்தில் உமையம்மா ரீச்சரின் வகுப்பில் நரகம் அப்படியே இருக்கிறது. ஏகாம்பரண்ணை கடையைத் திறக்கிறார். பெயர் எனக்கு மறந்துபோன ஒருவர் பாண் வாங்கிப் போகிறார். காட்டுக் கொய்யா மரத்தில் பழுத்த பழம் கொந்தப் படாது கிடைப்பது அபூர்வம். அப்டி ஒரு அபூர்வ பழத்தினை எனக்கு ஒரு முறை தந்த அந்தக் கொய்யா மரம், போஸ்ற் ஆபீசுக்குப் பகத்தில் நின்று தலையசைக்கிறது. ட்றெயின் ஸ்டேசனைக் கடந்து அரசரட்ணம் அண்ணையின் வீட்டு வேலியில் சீமைக்கிழுவை பூத்துக் குலுங்குகிறது. அந்தப் பூவின் நறுமணத்தின் பிரமிப்பு எப்போதும் போல் என்னைச் சிலிர்க்கச் செய்கிறது. சீடி track மாறியதுபோலத் திடீரென அரசரட்ணம் அண்ணை வீட்டிற்குள் காலம் ஒரு தசாப்தம் பின்னால் செல்கிறது. ஒரு குழந்தை முற்றத்தில் காலைக்கடன் கழித்துக் கொண்டிருக்கிறது. ஒரு மலையக பணிப்பெண் தேமா இலை கொண்டு அது கழித்ததை எடுத்துக் குப்பைக்குள் போடுகிறாள். ஒரு கார் விரைந்து வருகிறது. குளத்தில் தாமரைக் கொடியில் சிக்கி உயிர் நீத்த ஜனா அண்ணாவின் உடல் வெளியே எடுக்கப்படுகிறது.

'ஏஸ்' அண்ணை வெள்ளை ஜீன்சும் வெள்ளைச் சேட்டும் போட்டு கிளீன் சேவெடுத்துச் சைக்கிளில் சந்திக்கு வந்து சைக்கிளைப் பூட்டிவிட்டு சென்பற்றிக்ஸ் செல்ல பஸ்சுக்குக் காத்திருக்கிறார். வசந்தன் அண்ணையும் பயஸ் அண்ணையும் வௌ;வேறு பாசறைகளால் விடுமுறையில் வந்திருக்கிறார்கள். விலாசம் அண்ணை இப்போதைக்குச் சென்றல் கல்லூரிக்குப் போய் வருகிறார். கேடி அண்ணையின் வங்கி வாகனம் காற்றாய்ப் பறந்து மறைகிறது. இந்த அண்ணை மாரின் வயதொத்த அக்காமார். த்திரிசா, நயன்தாரா, இலியான, சிறீதிவ்வியா எல்லாம் பிச்சை வாங்க வேண்டிய பிரமாத படைப்புக்கள் எத்தனை எத்தனை. அவரவரிற்கே உரிய தனித்துவமான திமிரிடுடன் அவர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள். மீராக்கா பாங் வேலைக்குப் போய்க்கொண்டிருக்கிறார். சிவா அண்ணை எங்கையோ அவசரமாய் ஹொண்டா 200ல் போகிறார். தாசன் அண்ணையின் ற்றாக்ற்றர் பெட்டியிருந்தும் புலிபோல் பாய்கிறது—அவர் கறுத்த முகத்தின் சிவந்த கண்ணகள் எப்போதும் போல் ரெத்தச் சிவப்பாய் இருக்கிறது. ரஞ்சன் அண்ணையும் பகீரதனும் ஓல்ட்பார்க் முதல் பச்சில் பயிற்ச்சி எடுப்பதற்கு இன்னமும் சற்று நாளிருக்கிறது. இப்போதைக்கு மிருசுவிலில் புளொட்டும், உசனிற்குள் புலிகளும், அங்கங்கே ரெலோவும், போக்கட்டியில் மட்டும் கொஞ்சம் 'ரெலா'வுமாக இயக்கம் தெரிகிறது. 

கே.எஸ்.றாஜா வந்து நிகழ்ச்சி செய்கிறார். பபி அக்கா 'அன்னை என்னும் ஆலயம்' பாடல் பாடி இறங்குகிறார். உசன் கந்தனிற்குக் கொடியேற்றத் தெல்லிப்பளையில் இருந்து சுந்தர் ஐயா வந்திருக்கிறார். சபா மழலை மாறாது மந்திரம் சொல்லிப் பக்த்தகோடிகளிற்கு மலைப்பேற்படுத்துகிறான். அதற்குள் தீர்த்தம் வந்துவிடுகிறது. கேதி ஐயா உடல் நடுங்கக் கும்பம் சுமந்து செல்லுகிறார். கானமூர்த்தி பஞ்சமூர்த்தி, பஞ்ஞாபிகேசன், கைதடிக் கூட்டம் என்று மேழமும் நாதசுரமும் வானைப் பிழக்கிறது. கட்டாக்காலி காலமாதலால் வயலில் கிறிக்கெட்டும் விளையாடப்படுகிறது. வரதன் அன்ணையும் முகுந்தன் அண்ணையும் கன்னைத் தலைவர்களாக ஊர்ப்பெடியளைப் பிரித்து விளையாடுகிறார்கள். ரெலோவும் புலியும் என அத்தருணத்தில் அந்தக்கன்னைகள் அழைக்கப்படவில்லை. வரதன் அண்ணை அடித்த பந்தை பவுண்டரி லைனில் பிடித்து ஸ்ரம்சை நோக்கிக் குறிபார்த்து எறிந்து வரதன் அண்ணையினை றண்ணவுட் ஆக்கிவிட்டு முகுந்தன் அண்ணை தன்னைத் தானே ரசித்தபடி வயலிற்குள் சிரித்தபடி விலாசம் காட்டிக் கொண்டிருக்கிறார்.

சிவலிங்கம், தான் பள்ளி விட்டு வீடு செல்லைகயில் வளியில் ஆட்காட்டி முட்டை எடுத்துக் குடித்துச் செல்வேன் என்கிறான். அவனது கதை, சாகசநாவலாய்ப் பதிகிறது. காலம் ஒரு தசாப்த்தம் முன்நோக்கிப் பாய்கிறது. சிவலிங்கத்தின் அண்ணை ஈ.பீ.ஆர்.எல்.எப் இயக்கதவர் என்பதனால் சுடப்பட, புலிகளிற்கு எதிராய் இந்திய இராணுவத்தோடு சேர்ந்து சிவலிங்கம் சாவகச்சேரியில் ஈ.பீ பேப்பர் விற்றுக்கொண்டிருக்கிறான். காட்சி கசத்ததால் நேரம் பிற்செல்கிறது. குலசிங்க மாஸ்ட்டர் அடித்தது தப்பென்று அவரிற்கு அடிப்பதற்காய் கஜந்தி அண்ணை கட்டுவரம்பில் காத்து நிற்கிறார். ஒருவாறு செல்வச்சந்திரன் மாஸ்ற்றரும் ஜோசப் மாஸ்ற்றரும் குலசிங்க மாஸ்ற்றரைக் காப்பாத்திக் கூட்டிச் செல்கின்றனர். வசந்தன் அண்ணைக்கும் பத்மாக்காக்கும் மீனில் ஆரம்பித்த சண்டை வாழ்வெட்டாய் மாறி ஒரு நாளைச் சாகசமாக்குகிறது. பற்றிமாக்காவின் மகள் தனது பிறந்த தினத்திற்கு என்று வகுப்பிற்கு சாக்கிளேட் கொண்டுவர, விரதம் என்று கூறி புனேஸ்வரிற்ரீச்சர் எடுக்கவில்லை. தொடர்ந்து வகுப்பில் முக்காவாசி மாணவர்கள் விரதம் என்று கூறி ஆசிரியரைப் பின்பற்றினர். எதனால் தனது பிறந்த தினத்திற்கு அத்தனை பேர் விரதமிருக்கிறார்கள் என்பது நிச்சயம் அந்தக் குழந்தைக்கு அன்று அதன் வீட்டில் புரியவைக்கப்பட்டிருக்கும். ஏழாம் வகுப்புப் படிக்கும் போதே கிருசாந்திக்குக் கலியாணம் செய்து வைத்துவிட்டார்கள். 

நத்தார் தாத்தா ஒருபுறமும் திருவெம்பா பஜனை ஒருமுறமுமாய் டிசெம்பரானதால் ஊரின் பெடியங்கள் எல்லாவீட்டுக்கும் போகிறார்கள். இடையில் ஊரில் இருந்த ஐந்திற்கும் குறைவான புரோட்டஸ்டாண்ட் குடும்பத்தவர் வேறு மத்தவரையும் சேர்த்துத் தமக்கும் ஒரு கரோலினை நடாத்தி முடிக்கின்றனர்.
ஜோன்பின்ளை மாஸ்ரரின் மகன் அசோகா ஹொட்டலிற்குள் தொண்டர் படைக்காக வலுக்கட்டாயமாய் பிடிக்கப்படுவதற்கு இன்னமும் நாளிருக்கிறது. இந்திரா அண்ணையின் புதிய வீட்டிற்கான அத்திவாரம் சிறீகாந்தன் மாஸ்ரரின் ரியூசன் மாணவர்களிற்குப் பலவகைகளில் உதவியாய் இருக்கிறது. ரியூசனில் சரஸ்வதி பூசை நடக்கிறது. 'மாமரத்துப் பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடவா' பாட்டு அப்போது பிரபலமாக இருக்கிறது. சிறீகாந்தன் மாஸ்ரரின் ரியூசன் கொட்டிலின் கூரையின் சிலாகையில் 'செல்டன் லவ் ..' என்று ஒரு பெண் பெயர் எழுதப்பட்டிருக்கிறது. சிறீகாந்தன் மாஸ்ரர் எடே அது 'செல்ட்டன் லவ்ஸ்' என்று வந்தாலே கிறமர் சரியாய் இருக்கும் என்று கூறி நக்கலாய்ச் சிரிக்கிறார்.

இன்றைய உசன் மிருசுவிலிற்குத் தெரியாத மேலும் எத்தனையோ கதைகளின் தடங்கள் அந்தக் காற்றில் இன்னமும் அப்படியே தடங்களாய் இருக்கின்றன. டி.வீ.டி ஒன்றினை பார்ப்பது போல அனைத்துக் கதைகளையும் பார்க்க முடிகிறது. உலகின் வானமனைத்தும் தொடுத்து நிற்பதால் பல்லாயிரம் மைல்கள் தொலைவில் இருந்தும் என்னால் இந்தத் தடங்களைப் பார்க்க முடிகிறது.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவனின் நினைவுத் தடங்கள் மறையாமல் அப்படியே இருப்பது பிரமீப்பூட்டுகின்றது.

  • தொடங்கியவர்

நன்றி கிருபன் மற்றும் நந்தன் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.

துருக்கிய எழுத்தாளர் ஓர்கான் பாமுக் ஓருமுறை பேட்டியொன்றில் குறிப்பிட்ட ஒரு விடயம் நினைவில் வர அதை இன்ஸ்ப்பிறேசனாக எடுத்து எழுதியது தான் இது. ஓர்கான் பாமுக்கின் கதைகளில் இஸ்த்தான்புல் நகரும் அதன் வாழ்க்கையும் அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேயப்பட்டிருக்கும். அவர் சொல்கிறார், தான் இருட்டில் தான் நகரத்தை வாசிப்பேன் என்று. ஊரடங்கிய பின்னர், தனியே நடந்து செல்வாராம். அன்றைய நாளின் தடங்களை தன்னால் இரவில் உணரக்கூடியதாய் இருக்கும் என்கிறார். அந்தவகையில், எனது குழந்தைப் பராயத்தின் எத்தனை பங்கு என்னில் பதிந்திருக்கிறது என்பதைப் பரிசோதிப்பதற்காகவே இதை எழுதினேன். எழுதிக்கொண்டிருக்கும் போது தான் எத்தனை பாத்திரங்கள் அவை ஒவ்வொன்றினதும் கதைகள் எத்தனை என்பது என்னை மலைப்பேற்றியது. 

ரசனை ஒரு போதை, வாழ்வு அளவின்றி இந்தப் போதைப்பொருளைக் கட்டவிழ்த்துக் கொண்டே இருக்கிறது. என்ன, வாழ்வுப் போராட்டம் பல நொடிகளை நமக்குப் பிடிக்காத விடயங்களில் செலவிடுவதை அவசியமாக்கி வைத்துள்ளது.


 

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

மிருசுவில் ஞாபகம் வந்தது,கேடில்ஸ் ஞாபகம் வந்தது பெரிசில்லை....அத்தோடு சேர்த்து திரிசாவும்,நயனுமாம்[அந்தக் காலத்திலேயே]...எங்கேயோ இடிக்கேல்ல

 

சங்கரப்பிள்ளை ஏற்றத்தில் இறங்கி நடந்து வந்து படித்த மகளீர்திட்டம் உசன் எல்லா இடமும் திரிந்த ஒரு காலமும் நினைவில் வருகிறது. லக்சபானா டவர்களில் ஏறியும்  வயல் பிள்ளையார் (மருதடி) என ம்ம்ம் 

அந்த பேக்கரி எப்படி இருக்கோ ... 

 

உங்கள் மொழி கலைத்துப்போட்டு நன்றாக இருக்கிறது.

ஒரானின் என் பெயர் சிகப்பு நாவலை மூன்று தரம் வாசிக்க எடுத்து எடுத்து வைத்துவிட்டேன். இஸ்தான்புல் வாசிக்கணும்... 

நினைவுகளைத் தூண்டியமைக்கு நன்றிகள் 

Edited by நெற்கொழு தாசன்

  • தொடங்கியவர்

ரதி,
காட்சிகள் முன்னரே பதியப்பட்டுவிட்டன.  காட்சி பதியப்பட்டபோது சிறீதிவ்வியா சிறீதிவ்வியாவாக இருக்கவில்லை. ஆனால் பதியப்பட்ட பழைய காட்சியினை இன்று பார்க்கும் போது, இடையில் சிறீதிவ்வியாவையும் நாம் பார்த்திருந்ததால், ஒப்பீடு இயல்பானது. ஏனெனில் பார்வையாளன் பழைய காட்சிகளைப் புதிதாக (ஒரு அல்பம் பார்ப்பது போல்) திருப்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறான். 

எப்பவாவது பழைய அல்பங்களைப் புரட்டிப் பாhத்துக் கொண்டிருக்கும் போது இவ்வாறான அனுபவம் உங்களிற்கு ஏற்பட்டதில்லையா? நயனும் த்திரிசாவும் காட்சியில் பதியப்ட்டில்லை, பார்வையாளனின் கிரகிப்பின்போது மட்டுமே வந்து போனார்கள்.

நன்றி நெற்கொழுதாசன் உங்கள் ஞாபகங்களையும் பகிர்ந்துகொண்டமைக்கு.

இதை மண்மணம் அறியாத ஒருவர் வாசித்திருந்தால் பிதற்றுகிறான் என்றிருப்பார். ஆனால் பிதற்றல்கள் மனதின் பிளிறல்கள் என்பது வலிமிகுந்த எமது சமூகத்திற்கே உரியது.

தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள் 
 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
On ‎6‎/‎02‎/‎2016 at 10:28 AM, Innumoruvan said:

உலகின் வானமனைத்தும் தொடுத்து நிற்பதால் பல்லாயிரம் மைல்கள் தொலைவில் இருந்தும் என்னால் இந்தத் தடங்களைப் பார்க்க முடிகிறது.

காலவோட்டங்கள் கடந்தகாலம் பற்றிய கற்பனைகள் மனதுக்கு இதமானவை. அதே கடந்த காலத்திலும் துன்பியல் சம்பவங்கள் நடந்திருந்தாலும் மனம் selective processing செய்வது விசித்திரமானது.

எனது காதலி இலங்கையிலும் நான் அவுசிலும் இருக்கும்போது இலங்கையில் விடியுமட்டும் பார்த்துக் கொண்டிருப்பேன். பின்னர் அவளுக்குத் தொலைபேசி சொல்லுவேன் வெளியே வந்து சூரியனைப் பார் என்று. பின்னர் சொல்லுவேன் நான் பார்க்கும் சூரியனைத்தானே நீயும் பார்க்கிறாய் என்று. கிட்டத்தட்ட இருவரையும் இணைக்கும் சட்டலைட் போன்று சூரியன் எனக்குத் தோன்றியதுண்டு. உங்கள் வரிகளை வாசித்தபோது அந்த நினைவு வந்து போனது.

எத்தனை எத்தனை நினைவுகள். வாசிக்க வாசிக்க, வரிகளுக்கிடையில் என் ஊரின் காட்சிகளின் நினைவுப் படிமங்களும் எனக்குள் வந்து வந்து சென்று, வாசித்து முடிக்க நீண்ட நேரம் எடுத்தது.

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கப் பார்க்க மூளையைக் குடையும் பிக்காஸோ ஓவியம் போல் , இன்னுமொருவனின் எழுத்துக்கள் நின்று, நிறுத்தி,நிதானமாக வாசிக்க வைக்கின்றன. அதில்தான் சுவாரஸ்யத்தையும் கலந்து விடுகின்றீர்கள்...!

  • கருத்துக்கள உறவுகள்

அக்கரைப் பச்சையை நோக்கிய பயணம் நிறைவுற்ற பின்னர் இக்கரையைத் திரும்பிப் பார்க்க வைக்கின்றது.... இன்னுமொருவனின் தடங்கள்!

இப்போதெல்லாம் இக்கரை... அக்கரையிலும் பச்சையாகத் தோன்றுகின்றது!

எனினும் 'தடங்கள்' மறை பொருளாகவேனும் இன்னும் அழியாமல் இருக்கின்றன என்பது கண்டு மிக்க மகிழ்ச்சி!

நன்றி.. இன்னுமொருவன்! 

நல்லதொரு நினைவு மீட்பு .

வயது போக போகத்தான் பழைய நினைவுகள் குறிப்பாக பாடசாலை ,கிராமம் ,காதல்கள் எல்லாம் திரும்ப திரும்ப வருகின்றது .

படிப்பு ,வேலை ,கல்யாணம்,பிள்ளைகள் வளர்ப்பு என்று ஒருநிமிடம் நின்று நிதானிக்க வழியிலாமல் ஓடுவதால் எதையும் அசை போடக்கூட நேரம் கிடைப்பதிக்ல்லை .

சற்று ஓய்வு பெறும் நிலைக்கு வாழ்க்கை வரும்போது பழைய நினைவுகள் தான்  கனவிலும் நினைவிலும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னுமொருவன்! சுயசரிதை மாதிரி இருக்கின்றது. பழைய நினைவுகள் மனதை தாலாட்டும் போது அதன் சுகமே தனி...

உசன் மிருசுவில் ஒரு இடமா?

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான நினைவுப்பதிவு

"வயது போக போகத்தான் பழைய நினைவுகள் குறிப்பாக பாடசாலை ,கிராமம் ,காதல்கள் எல்லாம் திரும்ப திரும்ப வருகின்றது"

 "ழைய நினைவுகள் மனதை தாலாட்டும் போது அதன் சுகமே தனி"

அருமை

  • தொடங்கியவர்

சுவி,சுவைப்பிரியன், புங்கையூரான், சுபேஸ், தும்பளையான், அர்யுன், குமாரசாமி, கொளும்பான் மற்றும் நிழலி நன்றி உங்கள் கருத்துக்களிற்கு.

தும்பளையான் உங்கள் சூரியன் பற்றிய குறிப்பு அழகாய் இருக்கிறது—அலைவரிசை ஒத்திருப்பதை முன்னரும் அவதானித்துள்ளேன். துன்பியல் சம்பவங்களை மனது ஒதுக்கியிருப்பதாய்க் குறிப்பிட்டுள்ளீர்கள். அது பொதுவில் உண்மைதான் என்றபோதும், இப்பதிவில் போரைப் பேசாவிடினும் ஆகக்குறைந்தது எட்டுத் துன்பியல் சம்பவங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. முழுப்பதிவும் ஒரு பார்வையாளர் தொனியில் அதிகபட்சம் அனொட்டேசன்களை மட்டும் உள்ளடக்கி எழுதியதால் உணர்வுகள் மற்றும் கருத்துக்களை முன்வைக்கவில்லை. அவை வாசகரிடம் விடப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.