Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இறுதி நாட்களும் எனது பயணமும் 5

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என் கண்ணால் கண்ட காட்சிகளை அப்போதிருந்த என் மனதின் உணர்வுகளோடு இங்கே பதிவுசெய்கிறேன். வரலாற்றில் வாழவேண்டிய தமிழர்களின் கண்ணீர் கதைகளாக இருக்கட்டும் என்பதால் இயன்றவரை எழுதுகிறேன். உண்மையைச் சொன்னால் இவற்றை எல்லாம் எழுத எனக்கு உண்மையிலேயே விருப்பமில்லை. ஏனெனில் இதன் ஒவ்வொரு வரியையும் எழுதும்போது மீண்டும் மீண்டும் செத்துப்பிழைக்கிறேன்.

நினைக்காமல் இருந்துவிட விரும்பும் சில காட்சிகளை நினைத்து நினைத்து எழுதவேண்டி இருப்பதில் எவருக்கும் விருப்பம் இருக்காதல்லவா? நானே நினைக்கத் தயங்கும் விடயங்களை பிறருக்கு படிக்கத்தருவதா என்ற தயக்கமும் எனக்குண்டுதான். எனினும் இந்த அவலங்களும் மரணங்களும் தழிழர்களின் வரலாறு என்பதால் எழுதுகிறேன்.

இனி……

புளியங்குளத்திலும் முகமாலையிலும் மணலாறிலும் சிறிலங்கா படையினர் நிலைகொண்டிருந்த நாட்கள் அவை. எனினும் யுத்தம் வன்னி மண்ணை உலுப்பி எடுத்துக்கொண்டிருந்தது. நாலாபுறமிருந்தும் மாறிமாறி யுத்தமுனைச்சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருந்தன. முடுக்கிக்கொண்டு கிளம்பும் படையினரும் அவர்களின் கொடுக்குகளை முறித்தெறியும் போராளிகளும் ஊடகங்களில் நாளாந்தச் செய்தியாகினர்.

விடமாட்டோம் விடமாட்டோம் என்ற முயற்சிகளில் களமுனைகள் எரிந்து கருஞ் சாம்பலாகிக் கொண்டிருந்தன. படையினரின் எந்தப்பெரிய முன்னேற்ற முயற்சிகள் எனினும் அது ஒரிருநாட்களிலேயே முடக்கப்பட்டன.

நாலாபுறமும் அனல்பறக்கும் சண்டைகள் அடிக்கடி நடந்தன. எந்த முறியடிப்புத் தாக்குதலில் போராளிகள் மும்மரமாக ஈடுபட்டு தம்மை தாரைவார்த்து தடுத்துநிறுத்தினாலும் அவை எழுந்துநின்ற கிளிநொச்சி மாநகரை பெரிதாகத் தாக்கவில்லை.

வன்னி முழுவதிலும் வீரச்சாவு நிகழ்வுகள் நாளாந்தம் நடக்கத்தொடங்கின. கிளிநொச்சியின் கனகபுரத்திலும் முல்லைத்தீவின் முள்ளியவளையிலும் விசுவமடுவின் தேராவிலிலும் அமைந்திருந்த துயிலும் இல்லங்கள் நாளாந்தம் சோக இசையில் மூழ்கின.

கல்லறை வரிசைகள் வேகமாக நிறையத்தொடங்கின. கல்லறையில் விதைக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் களமுனையில் எதிரிப்படையோடு மூர்க்கமாய் சண்டையிட்டுத்தான் மடிந்தார்கள்.

பதிலுக்குப்பதில் படையினரும் செத்து மடிந்தனர். எனினும் படையினர் எல்லாவழிகளாலும் முன்னேற தலைப்பட்டுக்கொண்டிருந்தனர். எல்லாவற்றையும்விட முகமாலை நாகர்கோயில் பகுதியை ஊடறுத்து எ-9 வீதியூடாக கிளிநொச்சியை கைப்பற்றிவிடவே அதிகம் விரும்பியது படைத்தரப்பு. அதனால் பாரிய முன்னகர்வுகளை அதிகம் மேற்கொண்டனர் படையினர். எனினும் அது அன்று முடியாத காரியங்களாகிப்போயின.

கிளாலி கடற்கரை தொடக்கம் முகமாலை அடங்கிய நாகர்கோவில் கடற்கரை வரையிலான வடபோர்முனையில் போராளிகளின் காவல்வேலி மிகப்பலமாய் இருந்தது.

சதாகாலமும் விழிப்புடன் இருந்தபோராளிகளால் படையினரின் சின்னச்சின்ன முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன. சாதாரண வேவு நடவடிக்கைகூடச் செய்யமுடியாத நிலையில் எதிரியை தடுத்து வைத்திருந்தார்கள் விடுதலைப்போராளிகள்.

படையினரின் எந்தப்பெரிய படைமுன்னெடுப்பாக இருந்தாலும் மூன்றுநான்கு மணித்தியாலங்களுக்குள் அல்லது ஒரே நாளைக்குள் முறியடிக்கப்பட்டுவிடும். சண்டையின் முடிவிலும் படையினரின் நூற்றுக்கணக்கான ஆயுதங்களையும், சடலங்களையும் அள்ளிவந்து கிளிநொச்சியின் விளையாட்டு மைதானத்தில் குவித்தார்கள் விடுதலைப் போராளிகள்.

ஆனால் ஏனைய போர்முனைகள் அப்படி இருக்கவில்லை, இருக்கவும் முடியாது. காடுகரம்பையெங்கும் பரந்துநீண்ட ஏனைய களவரிசைகளில் படையினரின் ஆதிக்கமே கோலோச்சியது.

எத்தனைதான் வீரத்தோடு போராளிகள் நின்றாலும் அவர்களால் எதிரியோடு நேருக்குநேர் சண்டையிட முடியவில்லை. ஏனெனில் எதிரி நேருக்குநேராக சண்டையிட வருவதில்லை. அவர்களுடைய ஆயுதங்களே சண்டையிட்டன.

எல்லா வழிகளிலும் போராளிகளின் காவல் வேலிகளை உடைத்துக்கொண்டுவர எத்தனித்த படையினருக்கு மேற்குப்பகுதியே முதலில் இடம் கொடுத்தது. மன்னாரின் அடம்பன், பாலைக்குழி, மடு வழியாக திறந்த பாதைகள் படையினரை தங்குதடையின்றி முன்னேற வைத்தது. அதன் பிறகே கிளிநொச்சி நகரமும் கிபிர்களின் பேரிரைச்சலால் அதிரத்தொடங்கியது.

சிறிலங்கா வான்படையின் யுத்தச்சன்னதங்கள் தமிழ் மக்களால் வாழ்நாளிலும் மறக்க முடியாதவை. காலத்துக்குகாலம் மறக்க முடியாத வடுக்களை ஏற்படுத்தியவை. உலக நாடுகளால் மனதார கொடுக்கப்பட்ட பலவகைப்பட்ட போர்விமானங்கள் போர்க்களத்தையும் மீறிவந்து கோயில்களையும் குடியிருப்புகளையும் சிதறடித்துச் சென்றன.

ஊர்களுக்குள் அமைந்திருந்த போராளிகளின் தங்குமிடங்களை இலக்குவைத்தும் குண்டெறிவதுண்டுதான். ஆனால் போர்விமானங்களின் கண்மூடித்தனமான தாக்குதல்களில் எண்ணிறைந்த பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.

காலையில் எழும் விமானிகள் தேநீர்தன்னும் குடிப்பார்களோ இல்லையோ குண்டுகளோடு விமானங்களை கிளப்பிக்கொண்டு வந்துவிடுவார்கள். கிளிநொச்சியின் மூலைமுடுக்குகளில் இருந்த போராளிகளின் முகாம்கள் நாளாந்தம் குறிவைக்கப்பட்டன.

கிபிர்கள், மிக் விமானங்கள் என்பன வீசிய பலநூறு குண்டுகளால் கட்டிடங்கள் அழிந்தன. உயிர்களும் கருகின. விமானத் தாக்குதல்கள் பற்றிய செய்தி வராமல் ஈழநாதம் பத்திரிகை வெளிவந்த நாளில்லை எனலாம்.

காயப்பட்டவர்களதும் உறவினர்களதும் கண்ணீர் கதறல் போராளிகள் ஒலிபரப்பிய புலிகளின்குரல், தமிழீழவானொலி மற்றும் தமிழீழ தேசிய தொலைக்கட்சியில் அடிக்கடி அழுதன.

ஒரு மனிதன் காலையில் திருப்தியாக காலைக்கடன் கழிப்பதைப்போல விமானிகளும் தம் கடைமைகளைச் செய்துமுடித்த போதுகளில், ஊரெல்லாம் சாவும் அழிவும் ஓலமும் ஒப்பாரியும்தான்.

மரணதேவன், இழுத்துக்கட்டிய கச்சையோடு அகோரத்தாண்டவம் ஆடத்தொடங்கிவிட்டான். விளைவு கிளிநொச்சி மாநகரமும் சின்னாபின்னமாகத் தொடங்கியது.

மக்கள் வீடு வளவுகளைவிட்டு கிளம்பத்தொடங்கினார்கள். இடப்பெயர்வு அவலம் தொடர்ந்தது. வீட்டுக் கூரைகளை பிரித்துக்கொண்டு புறப்பட்டார்கள். மன்னார் தொடக்கம் பளை மற்றும் புளியங்குளம் என நாலாபுறத்திருந்தும் புறப்பட்ட மக்களும் கிளிநொச்சியில்தான் தற்காலிக தங்குமிடங்களில் இருந்தார்கள்.

இப்போது இடம்பெயர் மக்களின் தொகை அதிகரித்துவிட எஞ்சிய கிராமங்களும் நிரம்பி வழியத்தொடங்கின. ஒரு குடிசை போடுமிடத்துக்குக்கூட போட்டி வரத்தொடங்கியது. மக்களின் அகோர தேவையை கொஞ்சமாவது பூர்த்திசெய்ய எந்தத் தொண்டு நிறுவனங்களும் உதவவில்லை.

சில அத்தியாவசியத் தேவைகளை தமிழர் புனர்வாழ்வு கழகம் செய்து கொடுத்துத்தான் பார்த்தது. ஆனால் அதன் கையையும் மீறிய, மிதமிஞ்சிய தேவையாளர்கள் சேவைபெற காத்துக்கிடந்தனர்.

சாவையும் அழிவையும்பற்றி புலம்பவும் பண உதவி கோரவுமாக நூற்றுக்கணக்கான மக்கள் தொலைபேசி நிலையங்களில் குழுமினார்கள். ஓரிரு தொலைபேசி நிலையங்களே இயங்கியதால் தொடர்பாடல் செய்வது பெருத்த சவாலானது.

ஐந்தே நிமிடங்கள் கதைப்பதற்காக ஐந்து மணித்தியாலங்களுக்கு மேலாக காத்திருக்கவேண்டியதானது. சின்னச்சின்னத் தேவைகளை நிறைவேற்றக்கூட நீண்டநேரத்தையும் நிறையப் பணத்தையும் செலவழிக்கவேண்டியிருந்தது.

எத்தனை தொலைபேசிகள் இருக்கின்றனவோ அத்தனை வரிசைகள் நகர்ந்தன. அவ்வரிசைகளில் எப்போதும் குறையாத சனநெரிசலும் சலசலப்பும்தான்.

அதற்குமுன்பான காலங்களில் வெடிச்சத்தங்களை கேட்டவுடன் இடம்பெயர்ந்த மக்கள் இப்போது குடியிருப்புகளே குதறப்படும்போதுதான் குடிபெயர்ந்தார்கள். இரண்டாயிரத்து ஏழாமாண்டில் மன்னாரின் அடம்பன் பகுதி மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அதற்குமுன்பும் அவர்கள் எத்தனையோ தடவைகள் இடம்பெயர்ந்தவர்கள்தான். ஊரைவிட்டு கிளம்புவதும் திரும்பி வருவதுமாக அவர்கள் பட்ட அவலங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இதுவே அவர்களது வாழ்வில் அமையப்போகும் மிகநீண்ட இடப்பெயர்வு என்று அன்று அவர்களுக்குத் தெரியாது.

பாலைக்குழி, இத்திக்கண்டல், சகாயவீதி, காத்தான்குளம், கருக்காய்குளம், வட்டக்கண்டல், ஆண்டான்குளம், கன்னாட்டி, அடம்பன் சாலம்பன் போன்ற பகுதிகளையுடைய மக்கள் முதல் இடப்பெயர்வைத் தொடங்கியபோது தாம் வட்டக்கச்சியையும் தாண்டி செல்லவேண்டிவரும் என்று கனவிலும் நினைக்கவில்லை.

எப்போதும் போல மடுவில் இருந்துவிட்டு திரும்பலாம் என்றிருந்த அவர்கள் மடுவையும் விட்டுவிட்டு இடம்பெயரவேண்டி ஏற்பட்டுவிட்டது. மெல்ல மெல்ல இடம்பெயர்ந்த அவர்கள், வந்த வெள்ளம் இருந்த வெள்ளத்தையும் அடித்துக்கொண்டு செல்வதைப்போல அவர்கள் தங்கியிருந்த இடங்களிலிருந்த மக்களையும் சேர்த்துக்கொண்டு கிளம்பிக்கிளம்பி வட்டக்கச்சியின் பெரிய பெரிய வளவுகளில் சின்னச்சின்னக் குடிசைகளைப் போட்டுக்கொண்டு குந்தினார்கள்.

எனினும் அந்த இருத்தலும் நீடிக்கவில்லை. வட்டக்கச்சியின் சின்னச்சந்தையடியில் விழுந்த எறிகணைகள் பலரது உயிர்களைக்குடித்து, இண்டு இடுக்கற்று நிறைந்திருந்த மக்களை மீண்டும் விரட்டத் தொடங்கின.

இப்போது அந்த மக்கள்திரள், சிறிலங்கா அரசு, பாதுகாப்பு வலயம் என்று அறிவித்த பகுதியான முல்லைத்தீவு மாவட்டத்தைச்சேர்ந்த உடையார்கட்டு, விசுவமடு வள்ளிபுனம், இரணைப்பாலை ஆகிய பகுதிகளுக்கு நகரத்தொடங்கியது.

இடப்பற்றாக்குறை மற்றும் உணவுத்தட்டுப்பாடு காரணமாக மக்களுக்குள் நாளாந்தம் பிரச்சினைகள் அதிகரித்தன. ஓவ்வொரு இடப்பெயர்வும் ஒவ்வொருவருக்கும் பெருஞ்சவாலாக இருந்தது. அது பொதுமக்களுக்கு மட்டுமல்ல போராளிகளுக்கும்தான். பெருந்தொகையென கிளம்பிய அத்தனைபேரும் எங்கேதான் செல்வது? எப்படிச்செல்வது? சினமும் துயரமும் பொங்கினாலும் எங்கேயாவது சென்றுதானே தீரவேண்டும்.

வட்டக்கச்சியிலிருந்து மக்கள் இடம்பெயர இடம்பெயர, கையோடு தர்மபுரம், விசுவமடு மக்களும் மூட்டைமுடிச்சுகளை கட்டத்தொடங்கினார்கள். எறிகணைகளே ஊர்முழுவதையும் உழுது எறியப்போதுமானவையாக இருந்தாலும் மிகையொலி விமானங்களும் ஊர்களைக் குற்றி உமிகளாக்கின.

கொஞ்சம் பாத்துப்போவம்.’ என்று வட்டக்கச்சியின் கல்மடுவில் தாமதித்த பலர் உயிர்களை இழந்தார்கள். பலர் உடுத்த உடைகளோடுமட்டும் உயிர்தப்பி வந்துசேர்ந்தார்கள். யுத்தம் ஒவ்வொரு குடும்பத்திலும் புகுந்துவிளையாடியது. அதன் எக்காளச்சிரிப்பில் மக்கள் அரண்டு போனார்கள்.

அன்றைய நாட்களில் பெரும்பாலும் மறிப்புச்சண்டைகள் நடக்கவே இல்லை. சில நேரங்களில் சில பகுதியில்தான் போராளிகள் சண்டையிட்டார்கள். மற்றும்படி படையினர் பொடிநடையாய் முன்னேறிக்கொண்டிருந்தார்கள். ஏனென்றால் அவர்கள் முன்னேறிய பாதைகளில் இருந்த அத்தனை தடைகளையும் எறிகணைகளாலேயே துடைத்தெறிந்தனர்.

போர்ப்பணியில் இணைக்கப்பட்ட புதிய போராளிகள்கூட வெஞ்சினங்கொண்டு எதிரியோடு சண்டையிட்டு வீரச்சாவடைந்தார்கள்.

எந்தக்காப்பரணுக்குள் இருந்தாலும் மரணம் தங்களைத்தேடிவரும் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது. எதிரியை நேரே சுடமுடியாத சூழலில்நின்று வீணே எதற்காக சாகவேண்டும் என்று நியாயம் கேட்டவர்களும் இருக்கத்தான் செய்தார்கள்.

போதியளவு சண்டைப்பயிற்சிகளை வழங்க போராளிகளிடம் நேரமோ பயிற்சித்தளங்களோ இருக்கவில்லை. களமுனைகளே பயிற்சிபெறும் இடங்களாகின. நேரடிப் பயிற்சி. ஆனால் அவர்கள் சுட்டுப்பழக எந்த எதிரியும் எதிரே தெரிவதில்லை. எதிரி ஏவும் குண்டுமழை மட்டுமே போராளிகளின் களவரிசைகளை முழுதுமாய் துடைத்தெறியும்.

வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்காக என ஆரம்பிக்கப்பட்ட போர்ப்பணி எல்லோருமே வாருங்கள் போராடுவோம் என மாற்றமடைந்தது. ஏனென்றால் அந்தளவுக்கு களவரிசையில் பாரிய வெற்றிடங்கள் ஏற்பட்டன.

போராளிகளின் இருப்பிடங்கள் விமானங்களாலும் எறிகணைகளாலும் தாக்கப்படுவதன் காரணமாகவும் நிமிடத்துக்கு நிமிடம் சாவு நடந்தது.

படையினரின் கண்மூடித்தனமான தாக்குதல்களால் ஊர்கள் எரிந்தாலும் எரிப்பவனை எதிர்க்கும் எண்ணம் பெரும்பாலானவர்களுக்கு எழவில்லை என்பது அதிசயமே.

போரில் தொடர்ந்தும் தோல்வியும் இழப்பும் வந்தபோது போராட்டத்தை கடுமையாக விமர்சிக்கதொடங்கினார்கள். எனினும் காயப்பட்டுவரும் போராளிகளுக்கு குருதிகேட்டால் கொடுக்காமல்விட மனதில்லை அந்த மக்களுக்கு. அவர்களது அடிமனதிலிருந்த உண்மையான பற்றும் தனியரசின் மீதான விருப்பமும் இல்லாது போகவில்லை.

அந்நியர்களின்கீழ் அடிமையாக வாழ்வதைவிட சுயவிருப்பு வெறுப்புகளோடு வாழக்கூடிய ஒரு நாடு தமக்குவேண்டும் என்பதாலும் போராட்டம் வெல்லும் என்ற நம்பிக்கையாலும் அந்தமண்ணோடு இணைந்துநின்றார்கள்.

ஆளிணைப்பு போராளிகளை மண்ணை வாரியிறைத்துச் சபித்தார்கள். ஆனால் களமுனையில் நின்று களைத்து வந்தவர்களை வீட்டுக்குள்வைத்து சோறூட்டி உபசரித்தார்கள்.

பல வீடுகளில் போராளிகளுக்காக உலையேறும் அடுப்புகள் இருந்தன. தமக்கில்லாது விட்டாலும் போராளிகளுக்கு வயிறுநிறைய கொடுக்க விரும்பிய மக்கள் தாராளமாக இருந்தார்கள்.

எனினும் அந்தத் துயரமும் கடினமும் நிறைந்த, கத்திமுனையில் நடக்கும் வாழ்க்கையை தாக்குப்பிடிக்க முடியாதென முடிவெடுத்தவர்கள் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வரவே விரும்பினர்.

களச்சாவுகளைவிட ஊருக்குள் விழுந்த எறிகளைகளால் ஏற்பட்ட அவலச்சாவுகள் நாளுக்கு நூறை தாண்டத்தொடங்கின. படையினர் விசுவமடுப்பகுதியையும் கடக்கத் தொடங்கியபோது மனிதர்கள் நடமாட வீதிகளில் இடமே போதவில்லை.

பாரிய வாகனங்களும் சைக்கிள்களும் மோட்டார் சைக்கிள்களும் வீதி முழுவதையும் அடைத்து நிறைத்துவிட்டன. மூட்டை முடிச்சுகளை தலைகளில் சுமந்த மக்கள்வேறு இடித்துப்பிடித்துக்கொண்டு நகர்ந்தார்கள்.

ஒரேயொரு பாதையாக இருந்த தேராவில் பாதையை மூடி வெள்ளம் பாய்ந்தது. மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்ததுபோல என்பார்களே அப்படியானதாகத்தான் சனங்களின் நிலையும் இருந்தது.

உடனடியாகவே தேராவில் தேக்கங்காட்டின் ஊடாக பாதையொன்றை அமைத்தார்கள். கொட்டும் மழை புதிதாக காட்டைவெட்டி அமைத்த அந்தப்பாதையையும் சேற்றுக்கூழாக்கியது. சேறுஞ்சகதியுமான அப்பாதையால் நெருக்கியடித்துக்கொண்டு நகர்ந்த மக்களில் எரிச்சலும் சினமும் மேலோங்கி ஒரே சண்டையையும் சச்சரவைவயும் ஏற்படுத்தியது.

அதுவரை இருப்பதுகூட தெரியாமல் கிடந்த சாதாரண மருத்துவ நிலையங்கள்தான் பாரிய செயற்பாடுகளைக்கொண்ட மருத்துவமனைகளாக மாறத்தொடங்கின.

அரசுக்கு எல்லா நாடுகளும் ஆயுதங்களை வழங்குகின்றன என்று மக்கள் எல்லோருக்குமே தெரிந்தாலும் அவர்களாலும் எப்படி இப்படி தண்ணீரைப்போல கொட்டித்தள்ளும் அளவுக்கு எறிகணைகளையும், குண்டுகளையும் வாரியிறைக்க முடிகிறது என்றுதான் மூக்கின்மேல் விரல்வைத்தார்கள். அந்தளவுக்கு படையினர் எறிகணைகளை மழைபோல பொழிந்தார்கள். மணித்தியாலத்திற்கு ஆயிரம் இரண்டாயிரம் என்று ஊர்மனைகளுக்குள் விழுந்த எறிகணைகளில் பத்து எறிகணைகளாவது நூறு நூற்றைம்பதுபேரை கீறிக் கிழித்துப்போட்டன.

தொட்டிலில் கிடந்த குழந்தைக்கும் உடல் சிதறும். தாயின் முலையில் பாலருந்திக் கொண்டிருக்கும் மழலைக்கும் தலை பறக்கும். சோற்றை அள்ளி வாயில் வைக்க போனவரின் கை துண்டாடப்படும். பதுங்கு குழிக்குள் பாயும் சிறுமி காலை இழப்பாள் என்றெல்லாம் மனிதர்களின் அங்கங்கள் சிதறுதுண்டுகளால் அறுத்தெறியப்பட்டன.

சாவு நடக்காத குடும்பம் எதுவும் இருக்கவில்லை. கதறல் ஒலி கேட்காது நேரம் கழியவில்லை. எந்த நேரமும் எல்லோருக்கும் அடி விழுந்தது. அனைவரும் வலியால் துடித்தனர். பொதுமக்கள் போராளிகள் என்ற வேறுபாடின்றி எல்லோருமே ஓடிக்கொண்டிருந்தார்கள். நின்று நிதானித்த ஒவ்வொருவரும் உடலின் பாகங்களையோ உயிர்களையோ இழக்கவேண்டி இருந்தது.

பயணம் தொடரும்……………

நன்றி : ஆனதி ஈழநேசன்

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தொடரை படிக்கும் போது எம்மை அந்தகளத்துக்கு அழைத்து செல்கின்றது குறிப்பாக முகமாலை அரங்கில் நானும் இருந்துள்ளேன் எனக்கு நன்கு களநிலை புரியும்

என்னை பொறுத்தவரை மக்கள் முழுமையாக பங்களிப்பு

இருந்து இருக்கவில்லை அவர்கள் எல்லாவற்றையும் புலிகள் பார்ப்பார்கள் என விட்டு விட்டு சுயநலத்துடன் சிலர் இருந்ததன் விளைவே இன்றையநிலையாகும் ஆனால் இப்போது பலரிடம் பேசும் போது இப்படி நிலை வரும் என்று முன்பே தெரிந்திருந்தால் போராடியிருப்போம் என்று கூறுகிறனர் கண் கேட்ட பின் சூரிய நமஸ்காரமா ?

  • கருத்துக்கள உறவுகள்

எமது கனவுகள் எல்லாம், வெறும் நினைவுகளாக மாறிவிட்ட போதும், பழைய சம்பவங்கள் இன்னும் வலிக்கின்றன!

தொடருங்கள், ரதி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த தொடரை படிக்கும் போது எம்மை அந்தகளத்துக்கு அழைத்து செல்கின்றது குறிப்பாக முகமாலை அரங்கில் நானும் இருந்துள்ளேன் எனக்கு நன்கு களநிலை புரியும்

என்னை பொறுத்தவரை மக்கள் முழுமையாக பங்களிப்பு

இருந்து இருக்கவில்லை அவர்கள் எல்லாவற்றையும் புலிகள் பார்ப்பார்கள் என விட்டு விட்டு சுயநலத்துடன் சிலர் இருந்ததன் விளைவே இன்றையநிலையாகும் ஆனால் இப்போது பலரிடம் பேசும் போது இப்படி நிலை வரும் என்று முன்பே தெரிந்திருந்தால் போராடியிருப்போம் என்று கூறுகிறனர் கண் கேட்ட பின் சூரிய நமஸ்காரமா ?

தமிழரசு நீங்கள் போராளியாக இருந்தீர்களா?

கொஞ்சம் தள்ளி இருந்தவர் போலிருக்கு எழுத்தைப்பார்க்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறுதி நாட்களும் எனது பயணமும்-2

உடையார்கட்டு தொடக்கம் முல்லைத்தீவின் பல பகுதிகளும் சனநெரிசலால் திக்குமுக்காடிக் கொண்டிருந்தன. மனிதர்களின் ஆக்கிரமிப்பு அனர்த்தங்கள் போதாதென்று இயற்கையும் மக்கள்மீது சீறி விழுந்தது. காற்றும் மழையும் வந்து மக்களின் தறப்பாள்களை குதறி எறிந்தன. பகலும் இரவுமாக கொட்டிய மழை பெருவெள்ளமாகி குடிசைகளை எல்லாம் அடித்து விழுத்திக்கொண்டு பாய்ந்தது.

போகிற நான் ஏன் சும்மா போகவேண்டும் என்ற குருட்டு நியாயத்துடன் வீதியோரம் ஒதுங்கிய மனிதர்களைக்கூட வாரியிழுத்து வீழ்த்தி தனக்குள் சுருட்டிக்கொண்டு பாய்ந்தது. பலபத்துப்பேர் வெள்ளத்திலும் மாண்டுபோனார்கள். பாரிய மரங்கள்கூட வேரோடு பாரி வீழ்ந்தன. அதுவும் தன் பங்குக்கு சிலரை கொன்றுபோட்டது.

உலகமே சேர்ந்துநின்று கொல்லும் இனத்தில் தானும் ஒன்றிரண்டு பேரை கொன்றால் என்ன குறைந்தாவிடும் என்று இயற்கையும் நினைத்ததுபோலும். எங்கும் சா மயம்.

அன்றைய நாட்களில் ஈழநாதம் பத்திரிகையின் பக்கங்களை

முழுவதுமாக நிறைத்தவை சாவுச்செய்திகள் மட்டும்தான் என்றால் அது மிகையாகாது.

உடையார்கட்டு இருட்டுமடு பகுதிகளுக்குள்ளும் திடுதிப்பென எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. சரசரவென சனங்கள் கொட்டில்களைவிட்டு வெளியில் பாய்ந்தனர். பலர் உடுத்திய உடைகளோடும் சிலர் சில பைகளோடும் வீதிக்கு வந்தனர். போகவர முடியாத மக்கள் வெள்ளத்தால் வீதி திமிலோகப்பட்டது. வீதியோரம் முழுவதையும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நிறைந்து நின்றன. பயணிக்க இடைவெளியின்றி, தங்கிடங்களாகிய, கழிப்பிட மறைவாகிய, எரிந்து கருகிய, பூட்டுகள் தொங்கிய இன்னோரன்ன வாகனங்கள் நின்றன.

உடையார்கட்டு, இருட்டுமடு இடம்பெயர்வின் கையோடுதான் கோடிப்பெறுமதியான சொத்துக்களை கைவிட்டுவிட்டு உயிருள்ள மாந்தர்கள்மட்டும் ஓடத்தொடங்கினர். என்னுடைய குடும்பமும் இதன்பின்னரே மிகமோசமாக அலைமோதித் தவித்தது. என் வயோதிப தாய்தந்தைக்கு உதவ முடியவில்லையே என்ற ஏக்கம் என்னை வதைத்தது. என்னுடைய தங்கை மட்டுமே என் குடும்பத்தின் முழுப்பாரத்தையும் தன் தோள்களில் சுமந்தாள். என் குடும்பத்தின் நிலையை நினைக்கும்போதெல்லாம் எனக்கு அழுகை வரும்.

எனினும் நான்காணும் நூற்றுக்கணக்கான துயரங்களையும் நினைத்து அவர்களது நிலையைவிட என் குடும்பத்தின்நிலை பறவாயில்லை என்று தேறிக்கொள்வேன். எனினும் அடுத்த நிமிடமே தடுமாறும் நடையுடன் என் தந்தை சனக்கூட்டத்தில் நெரிபடுவது என் நினைவில் வந்து வலியை ஏற்படுத்தும். இலகுவில் களைப்படைந்து விடக்கூடிய என் வயதான தாயார் என்னவென்று இந்த நடைப்பயணத்தை சமாளிக்கின்றாரோ என்ற எண்ணமுன் கண்களில் நீர் வழியும்.பாவம் தங்கை, அவள் சம்பாதித்துச்சேர்த்த அனைத்து சொத்துகளையும் இழந்துவிட்டாள்.

வள்ளிபுனம், தேவிபுரம் பகுதிகளிலும் குடியிருப்பதும் கேள்விக்குறியானது. புதுக்குடியிருப்பின் இரணைப்பாலை நிரம்பிவழிந்தது. புதுக்குடியிருப்பின் மையப்பகுதியோ சுடுகாடுபோல கிடந்தது. அங்கு தாக்குதல் நடவடிக்கைக்குரிய போராளிகள் மட்டுமே நடமாடினார்கள். ஆனால் அதையண்டி கூப்பிடுதூரத்தில் இருந்த இரணைப்பாலையோ சன வெள்ளத்தால் பிதுங்கியது.

சனம் சனம் சனம். எங்கும் சனக்கூட்டம். ஒருவர் முகத்தில் ஒருவர் மூச்சுவிடும் நெரிசல். காணும் இடமெல்லாம் தறப்பாள் கொட்டில்கள் முளைத்தன. பின் எரிந்து, கிழிந்து, மிஞ்சியவை பிடுங்கி……. சே. என்னடா வாழ்க்கை என்றானது. இந்தப்பூமியே பிளந்து எங்களை விழுங்கிவிடக் கூடாதா என்று வெறுத்துப்போனது. அடுப்பில் உலை ஏற்றுவதே பிரச்சினை ஆகிவிட்டது. உடுத்த உடுப்பில்லலை. குடிக்க நீரில்லை. உண்ண உணவில்லை. இருக்க இடமில்லை. படுக்க நேரமில்லை என்ற இல்லாமைகளே நிறைய இருந்தன.

இரணைப்பாலை, ஆனந்தபுரம் போன்ற பகுதிகளும் இராணுவ சன்னதங்கொண்டு குதறப்படத் தொடங்க இலட்சக்கணக்கான மக்களின் இடம்பெயர் அவலம் தொடர்ந்தது. மாத்தளன் பகுதி நிரம்பியது. சொத்து சுகமில்லாத வெற்று மனிதர்களே இடத்தை முழுதுமாக நிறைத்தனர். சின்னஞ்சிறு பாடசாலை ஒன்றே பென்னம்பெரிய மருத்துவமனையானது. ஈவிரக்கம் பார்க்கும் குணங்களை கழற்றிவைத்துவிட்டதைப்போன்ற மருத்துவர்களும் மருத்துவத் தாதிகளும் கடமையாற்ற முடிந்தது. காயங்கள் மலிந்து போயின. மண்டபங்களையும் விறாந்தைகளையும் நிறைத்து அடுக்கிப்போட்டும் நோயாளிகளைக் கிடத்த அங்கே இடம்போதவில்லை. தெருவோரப் பிச்சைக்காரர்களைப்போல நடைபாதைகளில் குருதிவழிய கிடந்தார்கள்.

பிச்சைக்காரரே இல்லாத நாட்டை விரும்பிய மக்கள் அனைவருமே இப்போது பிச்சைக்காரர்களைப்போல ஆகிவிட்ட துயரம் எல்லோரிலும் தெரிந்தது.

ஏற்கெனவே எரிந்து சுடுகாடாகிப்போன புதுக்குடியிருப்பின் ஆனந்தபுரப்பகுதியில் தாக்குதலணிப் போராளிகள் நிலை கொண்டிருந்தார்கள். ‘நகரக்கூடாது’ என்ற பிடிவாதத்துடன் நிலைகொண்ட போராளிகள் படையினருடன் கடுமையாக போரிட்டனர். ஆகவே படையினரால் முன்னரைப்போன்று இலகுவாக நகர முடியவில்லை. முக்கியபல தளபதிகள் நின்றுகொண்டிருந்த அக்களமுனையில் எதிரி கடுமையாக போரிட வேண்டியிருந்தது.

நடந்தே களைத்துப்போயிருந்த படையினருக்கு எறிகணைகளும் கிபிர்களும், டாங்கிகளும் கைகொடுத்தன. படை வீரர்களே போராளிகளை தேடிச்சுடவேண்டிய அவசியமெல்லாம் அவர்களுக்கு இருக்கவில்லை. டாங்கி ஒன்றை நிறுத்தி வைத்து சுழற்றி ஒரு பிடி பிடித்தால் நான்கைந்து தலைகள் ஒன்றாக விழுந்துவிடும். ஒரேயொரு கட்டளையில் நாற்பது, அறுபது என பாயும் பல்குழல் பீரங்கிகளை மணிக்கு ஐந்தாறு தடவைகள் இயக்கினால் குறைந்தது, நூறு போராளிகளாவது களமுனையில் இருந்து அகற்றப்படுவார்கள்.

படையினர் எந்த இலக்கையும் இனங்காணாமல் குருட்டுத்தனமாக எறிகணைகளை ஏவிக்கொண்டே இருந்தார்கள். அவைகூட நாளாந்தம் சிலபத்துப்பேரை அப்புறப்படுத்திக்கொண்டிருந்தன. போதாததற்கு கிபிர்களையும் அழைத்து குண்டுகளை வீசினார்கள். ஒரு பத்து மீற்றர் பாதை திறப்பதற்கு உதவக்கூட நான்கைந்து போர்விமானங்கள் வந்து உடைத்துக்கொடுத்தன. எனினும் ஆனந்தபுரத்தில் போராளிகள் சண்டையிட்டுக்கொண்டேதான் நின்றார்கள். மக்கள் இடம்பெயரத்தொடங்கிய நாட்களிலேயே சுடுகாடாகத் தொடங்கிவிட்ட இரணைப்பாலை வெறும் பொட்டல் வெளியாகிவிட்டது. அங்கு பேராளிகளை கூண்டுக்குள் அடைத்து வைத்திருப்பதைப்போன்று வியூகம் அமைத்து படையினர் சுற்றிநின்று தாக்கினார்கள்.

ஆனந்தபுரத்தைவிட்டு வெளியேற மாட்டேன் என்று தலைவர் உறுதியாகச் சொல்லியிருக்கிறார். போராளிகள் அங்கேயே செத்து மடிவார்களேதவிர ஒருபோதும் அவ்விடத்தை விட்டுவிட்டு வரமாட்டார்கள் என்று ஊரெல்லாம் கதைத்தது. அது படையினருக்கு தெரியுமோ தெரியாதோ உண்மையோ பொய்யோ என்று எவரும் அறிந்திருக்கவில்லை

ஆனந்தபுரம், கணமும் தவறாமல் பாரிய குண்டுச்சத்தங்களால் அதிர்ந்துகொண்டே இருந்தது ஊருக்கே கேட்டது. நாளுக்கு நான்கைந்து தடவைகள் வந்து விமானங்கள் குண்டுகளை வீசுவதையும் கரும்புகையும் நெருப்பும் கிளம்புவதையும் மக்கள் எல்லோரும் கண்டார்கள். மாத்தளன் பகுதிக்குள் வந்தபின்னும் தேங்காய், மாங்காய், விறகுகள் பொறுக்க என இரணைப்பாலை பக்கமாக போய்வந்த சனங்களும் தம் பயணத்தை நிறுத்திவிட்டர்கள். ஏனெனில் அங்கே தென்னை, பனை உட்பட எந்தவொரு பச்சை மரமுமே இருக்கவில்லை. அத்தனையும் எறிகணைகள் சீவிச்சரித்தன. ஒட்டுமொத்த புதுக்குடியிருப்பும் புகைபடிந்த பொட்டல் வெளியானது.

ஆனந்தபுரத்தில் படையினர் பல நாட்களாக போரிடவேண்டி இருந்தது. அதனால் மாத்தளன், வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் தறப்பாள்களை விரித்துக்கட்டிய மக்கள் கொஞ்சம் ஆசுவாசப் பெருமூச்சை விட்டபடி அரிசி பருப்பை தேடத்தொடங்கினர்

மருத்துவமனை வளாகங்களிலும் ஏனைய எறிகணைகள் விழுகின்ற இடங்களிலும் கிடந்த பிணங்களை அள்ளிச்செல்லும் பாரிய பொறுப்பை தமிழர் புனர்வாழ்வு கழகம் செய்தது. உறவுகளால் கைவிடப்பட்டோ அடையாளம் காணப்படாமலோ வெளியிடங்களில் கிடக்கும் பிணங்களை அள்ளிச்சென்று எங்கேயாவது புதைக்க வேண்டுமே. மருத்துவமனைக்கான தறப்பாள் கொட்டில்களில்கூட ஒருவரை ஒருவர் நெருக்கிக்கொண்டுதான் கிடந்தனர். அப்படி இருக்க பிணங்களை அடையாளம் காணும்வரை அடுக்கிவைத்துக்கொண்டு இருக்க முடியுமா? சிலவேளை அடையாளம் கண்டுவிட்டவர்களும் அதிலேயே அழுதுவிட்டு போகவேண்டியதுதான். அது தனது குழந்தையின் பிணமேதான் என்றாலும் தூக்கிச்செல்ல முடியுமா? எங்கே கொண்டுபோய் புதைப்பது?

ஒருவரை புதைக்கவே இடமில்லை என்று திண்டாடினால் உழவியந்திரத்தில் பெட்டி பெட்டியாக அள்ளிச்செல்லும் பிணங்களை எங்கே கொண்டுபோய் கொட்டிப் புதைப்பது? வீதியில் இடைவெளியே இல்லாமல் ஆமையாய் ஊரும் வாகனங்களுக்கிடையே பிணங்கள் குவிக்கப்பட்ட உழவூர்திகளும் நகரும். பெட்டிமுழுவதிலும் தாறுமாறாக கிடக்கும் பிணங்கள் உயிருள்ளவர்களை அச்சுறுத்தும்.

ஒரு கொத்துக்குண்டு விழுந்தாலே பத்து இருபது என்று சனங்கள் காயப்பட்டு விழுந்தார்கள். குடும்பங் குடும்பமாய் செத்தார்கள்.

பிணங்களைப் புதைப்பது ஒரு பிரச்சினை என்றால் காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்வதும் அவர்களது உயிர்களை காப்பாற்றுவதும் அதைவிட பிரச்சினை ஆனது.

அந்த இடத்தில் மட்டும் எல்லோரும் ஒருமித்துச்செயற்பட்டார்கள். யார் எவர் என்றில்லை. காயப்பட்டுவிட்டால் அவர்களை அவசர அவசரமாக தூக்கி வாகனங்களில் ஏற்றி மருத்துவமனைகக்கு அனுப்பிவிடுவார்கள். எந்த வாகனத்திலிருக்கும் சாரதியும் மாட்டேன் என்று ஒரு வார்த்தை சொல்வதில்லை.

எவர் காயப்பட்டாலும் எவராவது தூக்கிச்சென்று மருத்துவமனையில் சேர்த்துவிடுவார்கள் என்று நம்பலாம். அந்த மனிதாபிமானம் எல்லோருக்கும் இருந்தது. ஆனால் மருத்துவமனையில்தான் மருந்துகள் இல்லாமல் போய்விட்டன.

காயப்பட்டவர்களை கொண்டுசெல்ல மட்டும் எப்படித்தான் வீதியில் இடம் கிடைக்குமோ தெரியாது. அம்புலன்ஸ்களின் அலறலும் அதன்பின்னே அணிவகுக்கும் வாகனங்களின் பாய்ச்சப்பட்ட ஒளியும் ஒலியும் மனிதர்களை பாதையிலிருந்து அப்புறப்படுத்தி விடுகின்றன. ஓன்று, இரண்டு, மூன்று எண்ணி களைத்துவிடுமளவுக்கு வாகன பேரணியே காயப்பட்டவர்களை ஏற்றிச்செல்லும் சம்பவங்களும் நடந்தன.

அந்தளவுக்கு தொகையான மக்கள் காயப்பட்டார்கள். அடிக்கடி ஆகாயத்தில் விரியும் கொத்துக்குண்டுகள் அந்த கைங்கரியங்களை செய்தன. எல்லா வாகனங்களில் இருந்தும் வழியும் குருதி வீதியை சேறாக்கின. அந்த வாகனங்கள் கடந்துசென்ற பின்பும் அழுகை ஒலியும் அலறல் ஒலியும் கேட்பவர்களது காதுகளுக்குள்ளேயே நிற்கும்.

என்னுடைய குடும்பத்துக்கும் பாரிய இழப்பு. ஆட்லறி எறிந்த ஒற்றை எறிகணையிலேயே எனது சின்னக்காவும் பதினான்கு வயது மகனும் பத்து வயது மகளும் ஒன்றுவிட்ட சகோதரர்கள் இருவரது துணைவியர் உட்பட உறவினர்கள் ஐந்துபேர் உடல்சிதறி செத்தனர்.

எனது தாய் தங்கை உட்பட உறவினர்கள் ஆறேழுபேர் காயமடைந்தார்கள். சம்பவமறிந்து நான் வலைஞர் மடத்திற்கு ஓடோடிச் சென்றபோது சன்னங்களும் எறிகணைகளும் என்னுயிரை குடிக்கவும் துரத்தின. எனினும் எப்படியோ உயிர்பிழைத்து நான் அங்கு சென்றபோது எஞ்சிய சிலர் மட்டுமே பிணங்களின் முன்னால் கிடந்து கதறினார்கள்.

மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டவர்கள் இரண்டு பிணங்களோடு அதே வாகனத்தில் திருப்பி கொண்டுவரப்பட்டார்கள். இறந்தவர்களை புதைக்கும் அலுவல்களை உடனடியாக பார்த்தோம். என் அம்மாவுக்கு தலையிலும் முதுகிலும் ஐந்தாறு காயங்கள். இறந்தவர்களின் உடலங்களை பொலித்தீன் பைகளில் முடிச்சுகளாகக் கட்டி அப்புறப்படுத்திய கையோடு நான் உடனடியாக என் தாயாரை ஏற்றிக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு சென்றேன். ஏனையவர்கள் முள்ளிவாய்க்காலில் இருந்த உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார்கள்.

அந்த நாட்களில் மாத்தளனில் இயங்கிய மருத்துவமனை ஊடாக காயமடைந்தவர்கள் கப்பலில் அனுப்பப்பட்டார்கள். எனினும் கப்பலுக்கு பதிவது என்பது சாதாரணமான விடயமாக இருக்கவில்லை. அதுவே பெரும் போராட்டமானது. மூச்சுவிடவே திண்டாடிக்கொண்டிருக்கும் தாயாருக்கு பயண அனுமதி எடுக்க இரவும் பகலுமாக நான் அங்கேயே அலைந்துகொண்டு திரிந்தேன். பெற்றுவளர்த்த என் தாயாரை அந்தநிலையில் தன்னந்தனியே அனுப்புவதில் இருந்த துயரத்தை என்னால் தாங்க முடியவில்லை.

வயது கட்டுப்பாடு என்று தங்கை பயணத்துக்கான அனுமதி மறுக்கப்பட்டாள். அவளும் காயப்பட்டவள் என்பதால், ஏற்கெனவே எனது குடும்பத்தில் பலர் இறந்துவிட்டார்கள் என்பதால், அல்லது நான் போராளி என்பதால், அல்லது அவள் ஒரு மாவீரனுடைய தங்கை என்பதால் அனுமதித்து இருக்கலாமே என்று உறவுகள் என்னிடம் சண்டையிட்டார்கள். அந்தச் சூழ்நிலையில் நானும் ஒரு கையாலாகதவளைப் போலவே நின்றேன். ஏனெனில் எனது தங்கையைவிடவும் எனது குடும்பத்தைவிடவும் பாதிக்கப்பட்ட எத்தனையோபேர் பயணத்துக்காக காத்துக்கிடந்தார்கள்.

கையில் ஒரு ஒற்றை சொப்பிங் பையும் ஆயிரம்ரூபா பணமுமாக அம்மாவை கடற்கரைக்குச்செல்லும் மருத்துவமனை வாகனத்தில் ஏற்றிவிட்டோம்.

அம்மாவை அனுப்பிவிட்டு நான் வீட்டுக்கு வந்தபோது பிய்ந்து கந்தலாகிப்போன தறப்பாள் கொட்டிலோரம் குந்திக்கொண்டிருந்த தந்தைக்கு தலைதடவி ஆறுதல் சொல்ல என்னிடம் எந்த வார்த்தைகளுமே இருக்கவில்லை. ஏனெனில் அவர் தன் மகளின் குடும்பம் உடல்சிதறி கிடந்த காட்சியை நேரே பார்த்தவர். என்னைப்போல் நிறைய பிணங்களை அவர் இதற்குமுன் கண்டவரில்லை. கூழாகிப்போன உடலையும் தனித்தனியே சிதறிக்கிடந்த உடலின் பாகங்களையும் பொறுக்கிப்போட்ட காட்சிகளை கண்டதால் சுயநிலையை இழந்தவரைப்போல இருந்தார். அவரது கண்களில் இருந்து கண்ணீர் இடைவிடாமல் வழிந்துகொண்டிருந்தது. என் மனவேதனையை அவரிடம் பகிர்ந்துகொள்ளவும் எனக்கு விருப்பமில்லை. பிய்ந்த குடிசைக்குள் நுழைந்தேன்.

அம்மா பணப்பையாக பாவித்த பழைய வெற்றிலைப்பெட்டியை தேடினேன். மருத்துவமனையில் வைத்து அம்மா என்னிடம் சொன்னார் ‘வெத்திலப் பெட்டிக்க சில்லறை இருக்கு. அதை செலவுக்கு எடுத்துக்கொள்’ என்று. வெற்றிலை, பாக்கு கிடைக்காத காரணத்தால் காசுப்பெட்டியான அந்த சிறிய பெட்டி, தடித்த சில்வரால் ஆனது. 1985 ஆம் ஆண்டின் இடப்பெயர்வில் இந்தியாவின் அகதிமுகாமில் இருந்தபோது வாங்கிய பெட்டி அது. அதனை மட்டுமே அந்தக்கால நினைவுப்பொருளைப்போல அம்மாவாலும் போகுமிடமெல்லாம் கொண்டுபோக முடிந்தது.

கிழித்தெறியப்பட்ட தறப்பாள் துகள்களால் மூடப்பட்ட நிலையில் மூலையில்கிடந்த பெட்டியை எடுத்து திறந்தேன். உள்ளே இரண்டு இரும்புத்துண்டுகளும் இரண்டு ஐந்நூறு ரூபா என அடையாளம் காணக்கூடிய பணத்தும்பும் கந்தலாகிய சில பத்திருபது ரூபாக்களும் நெளிந்துபோன சில ஐந்து ரூபா குற்றிகளும் கிடந்தன. பெட்டியை துழைத்து உள்நுழைந்த சிதறுதுண்டுகள் இரண்டும்தான் அந்த பணத்தை கடைந்து விட்டிருந்தன.

தூசும் துகளுமாகக் கிடந்த பைகளை திறந்து சில பொருட்களை சேகரித்தேன். அம்மாவின் சேலையொன்று தங்கையின் உடையொன்று தவிர ஏனைய அனைத்து உடைகளும் தும்புதுகள்களாக கிடந்தன. எந்தப்பையும் உபயோகிக்கக்கூடிய நிலையில் இருக்கவில்லை. அம்மா அடுப்பிலே ஏற்றிய சோற்றுலை சரிந்துகிடந்தது. சில விறகுகளும் சிறிதளவு உணவுப் பொருட்களும் கிடந்தன. அவற்றையெல்லாம் தூக்கி பக்கத்துவீட்டு குடிசையில் வைத்தேன்.

வலைஞர்மடத்தில் சேலைகளில் தைத்து அடுக்கிய மண்ணணைகளுக்கு இடையே இயங்கிய தொலைபேசியில் காத்துக்கிடந்து அக்கா வீட்டுக்கு தொடர்பெடுத்தேன். என் மூத்த சகோதரியான அவர் வவுனியாவில் வாழ்ந்தார். அவரிடம் விபரம் சொன்னேன். இனி அம்மாவை அவர் தேடிப்பிடித்து கூட்டிச்செல்லவேண்டும். அறிவித்துவிட்ட நிம்மதியுடன் வீடு திரும்பினேன்.

இதற்குள் ஆனந்தபுரத்தை படையினர் கைப்பற்றிவிட்டனர் என்ற செய்தி வந்தது. அச்செய்தி எல்லோர் மனதிலும் நெருப்பை அள்ளிக்கொட்டியது. காரணம் இனியும் இடம்பெயர்ந்து செல்ல போக்கிடமே இருக்கவில்லை. இனியும் உயிர்பிழைப்பதென்றால் அது தெய்வச்செயல்தான்.

எனக்கு தலைவலிக்குமேல் தலைவலியானது. ஏனெனில் ஆனந்தபுரத்தில் போராளிகள் இல்லை என்றால் மாத்தளனில் மக்கள் இருக்க முடியாது. உடனே அப்பாவையும் அனுப்பிவிட வேண்டும் என்று தீர்மானித்தேன். தங்கை எப்படியும் சமாளித்துக்கொள்ளட்டும். தங்கைக்கும் காயம் ஆறவில்லை. வயோதிபத் தந்தையையும் கூட்டிக்கொண்டு எங்கலைவாள். அதனால் வயோதிபர் இல்லத்தை நாடினேன். தந்தையை அவர்களிடம் ஒப்படைத்தேன். ஒருவாரகால நாளாந்த அலைச்சலின்பின் அவரது பெயரும் பயணத்துக்கான அனுமதி பெற்றது. அடுத்த வாரத்தில் அப்பாவும் கப்பலில் ஏறினார். எங்கள் குடும்பத்தின் தொடர்பிலிருந்து அவர் காணாமல் போனார். மாத்தளன் பகுதி படையினர் வசமானபோது வலைஞர் மடத்திலிருந்த மக்களும் இடம்பெயர்ந்து முள்ளிவாய்க்காலுக்கு ஓடினர்.

முள்ளிவாய்க்கால் தொடக்கம் வட்டுவாகல் வரையான மிகக்குருகிய பகுதிக்குள் இலட்சக்கணக்கான மக்கள் குழுமினார்கள். காடு கரம்பைகளெல்லாம் காணாமல்போய் தறப்பாள் காடுகளே முழு இடத்தையும் நிறைத்தன. இயற்கை உபாதைகளை கழிக்கக்கூட இடமற்றுப்போனது. பிணங்களை கடலில் வீசிவிடக்கூட முடியாத நிலை. மக்கள் கையிருப்பு எல்லாவற்றையும் இழந்தார்கள். பலரிடம் எதுவுமே இருக்கவில்லை. விளைவு, பலர் பட்டினியால் மாண்டனர். வயிறுவற்றி செத்த பிணங்களைகூட தூக்கிப்போட சக்தியற்ற உறவுகள் அவற்றை தெருவோரங்களிலேயே விட்விட்டுச் சென்றனர்.

பயணம் தொடரும்……………..

நன்றி ஆனதி ஈழநேசன்

Edited by ரதி

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போதல்லாம் மாண்டவர்களுக்காக அழுவதற்கு எவரும் தயாரில்லை. சாவு வந்தால் வரட்டும் என்று சும்மா இருந்தார்கள்… எல்லாத்தறப்பாள்களின் கீழேயும் பதுங்குகுழிகள் வெட்டப்பட்டிருந்தன. ஆயிரம் நூறாயிறமாய் காப்பகழிகள் நிலமெல்லாம் முளைத்தன.

எல்லாக் குழிகளிலுமே தம் வாழ்வைத்தொலைத்த, உறவுகளை இழந்த மனிதர்கள், பசித்த வயிறுகளோடும் புளுங்கிய மனங்களோடும் குந்திக்கொண்டிருந்தார்கள். பாலிலும் தயிரிலுமாக வாழ்ந்த எத்தனையோ பேர் கஞ்சிக்குக்கூட வழியற்றுக்கிடப்பதை பார்க்கும் போது வேதனையாக இருந்தது.

குழந்தைகள் பசியால் மயங்கி விழுந்தனர். அதை ஒரளவாவது தாங்கும் திட்டமாக சந்திகளில் கஞ்சிக்கொட்டில்கள் முளைத்தன. போராளிகளேதான் அந்த கஞ்சிக்கொட்டில்களை நடத்தினார்கள்.

இப்போதைக்கு பட்டினிச்சாவை தடுத்தால் போதும் என்று நினைத்தார்கள். தமிழர் புனர்வாழ்வுக் கழகம், பெண்கள் புனர்வாழ்வு நிறுவனம், அரசியல்துறை போன்றவற்றால் இயக்கப்பட்ட கஞ்சிக்கொட்டில்கள் போதவில்லை என்று படையணிப் போராளிகள்கூட தத்தமது இருப்பிலிருந்த அரிசியில் கஞ்சிகாய்ச்சி ஊற்றினார்கள். மூன்று வேளையும் கஞ்சி வழங்கப்பட்டது.

வரிசையில் நின்று பாத்திரங்களில் கஞ்சி வாங்கிக்குடித்த மக்களைப் பார்த்து, எங்கள் மக்களுக்கா இந்தநிலை என்று நெஞ்சம் கொதிக்க போராடிய போராளிகளில் சிலர் படையினருடன் உக்கிரமாகப்போரிட்டு மாண்டனர்.

மரணம்கூட அழைக்க மறுத்தவர்கள் கண்ணீரில் கரைந்தனர். மாலை நேரங்களில் குழைத்த மா உருண்டை ஒன்றும் ஒரு குவளை பாலும் சிறுவர்களுக்காக வழங்கப்பட்டது. கஞ்சி கொட்டில்களில் அதற்காக குவிந்தது சிறுவர் பட்டாளம்.

வரிசை வரிசையாக நின்ற சிறுவர்கள் தத்தம் குடும்ப அட்டைகளை காட்டி அவற்றை பெற்றுக்கொண்டார்கள். அரசியல்துறை பெண்கள் பிரிவினர் வாய்ப்பன் தயாரித்து கொடுக்கும் நடைமுறையை கொண்டு வந்தனர்.

வெறும் கோதுமை மாவை பிசைந்து எண்ணெயில் பொரித்தெடுக்கப்பட்ட வாய்ப்பனுக்கு ஏகமாய் வரவேற்பு இருந்தது. அவை பசியை ஓரளவு கட்டுப்படுத்த கூடியன. மாவும் எண்ணெயும் கொடுத்து, இவ்வளவிலும் இத்தனை வாய்ப்பன்கள் செய்யவேண்டும். அத்தனையையும் இந்த விலையில் மட்டும்தான் விற்கவேண்டும். அதன் வருமானம் மட்டும்தான் உங்களுக்கான கூலி. இந்தாருங்கள் மாவும் எண்ணெயும். சட்டியும் விறகும் நீங்கள் கொண்டுவந்து சுட்டுவிட்டு, விற்பவரிடம் கொடுத்துவிட்டு உங்கள் கூலியை பெற்றுக்கொண்டு போங்கள், என்று சில பெண்களிடம் பொறுப்பை கொடுத்தார்கள்.

வாய்ப்பன் தயாரிப்பதும் போசாக்கு அளிப்பதுமான இந்த செயற்பாடு நடைமுறைக்கு வந்து வாரம் ஒன்றுகூட ஆகவில்லை. இருந்த இடங்கள் எல்லாம் பற்றிக்கொண்டு எரிந்தன. இரவுபகல் என்றில்லாத எறிகணைவீச்சில் கொத்துக்கொத்தாய் குலை குலையாய் உயிர்கள் உருவப்பட்டன.

பிணங்கள் குவிந்தன. மரணதேவன் தன் கொடூர வலையை அடிக்கடி வீசினான். பலநூறு தடவைகள் வீசிவீசி கிழிந்துபோன அந்த மரண வலையின் கிழிசல்களின் ஊடாக பல்லாயிரம் பேர் உயிர்தப்பி ஓடிவர பல்லாயிரம்போர் மூச்சு திணறியோ உடல் சிதறியோ இதயம் வெடித்தோ செத்துப்போயினர்.

எரிக்கவோ புதைக்கவோ ஆட்களின்றி பிணங்கள் ஆங்காங்கே வாய்பிளந்து கிடந்தன. தூக்கவும் சிகிச்சையளிக்கவும் முடியாதளவு காயமடைந்தவர்கள் குற்றுயிரும் குலையுயிருமாய் கிடந்து துடித்துச் செத்தார்கள்.

மரணம் மனிதர்களை பலவந்தப்படுத்தி இழுத்துக்கொண்டிருந்தது. தமது எல்லாக் குழந்தைகளும் செத்துவிட எஞ்சிய கணவனும் மனைவியும், பெற்றோர் இறந்துவிட மிஞ்சிய பிள்ளைகளும், கணவனை இழந்த மனைவியும் துணைவியை இழந்த துணைவனும், தாய்மாரை இழந்த ஒருமாத, ஒரு வார குழந்தையும் என எங்கும் அவலம். மனித பேரவலம். நடைப்பிணமான வாழ்க்கையின் துயரப்பயணம் மட்டும் முடிந்ததாய் தெரியவில்லை.

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர் பெரும் சவால்களுக்கு மத்தியில் கப்பலை முள்ளிவாய்க்கால் கடற்கரைக்கு கொண்டு வந்தார்கள். ‘அந்த கப்பலில் பயணமா?’ என்றுதான் எவ்வளவு அஞ்சவேண்டி இருந்தது.

ஏனெனில் ஆரம்பத்தில் தனியே வந்த கப்பல்கள் இப்போது சுற்றிவர சிறிலங்கா கடற்படையின் டோறா படகுகளோடு நின்றது. கடற்படையினரும் படகுகளில் வந்து கனோன்வகை ஆயுதங்களால் ஊருக்குள் ஆபத்தை விளைவிப்பதுண்டு.

காதுக்குருத்துகளை கிழித்தெறியவல்ல கணீர் என்ற சத்தத்துடன் வந்து ஊரை கருக்கும் கனோன் அடியின் ஒலியில் இதயங்கள் உறைந்துவிடும். அதை நினைத்தாலே நெஞ்சம் படபடக்கும். அந்த ஒலியும் அதனால் ஏற்படும் படுகாயங்களும் அச்சத்தை உண்டுபண்ணக்கூடியன. காயத்தை ஏற்படுத்தும் சிதறுதுண்கள் மிகுந்த எரிவை ஏற்படுத்துவதோடு குருதியில் நச்சுத்தன்மையையும் பரப்பக்கூடியன.

ஈவிரக்கமின்றி மக்களின் உயிர்பறிக்கும் கனோன் அடிக்கும் கடற்படையின் டோறாக்கள் கப்பலின் பாதுகாப்பில் எங்கள் கரையருகே வந்துநின்றன. சனங்கள் பாதுகாப்பு அரண்களுக்குள் பதுங்கிக்கொண்டார்கள்.

வீதிகள் வெறிச்சோடின. நீண்டநேரம் மருத்துவமனைக்குரிய எல்லாச்செயற்பாடும் ஸ்தம்பிதமாகிவிட்டன. டோறாக்கள் தரையிறங்கிவிடுமோ என்ற அச்சம் கேள்வியாகிக் குடைந்தது.

பின்பு வாகனங்களில் நோயாளிகள் ஏற்றப்பட்டார்கள். அவர்களும் பயந்துகொண்டேதான் சென்றார்கள்.

அன்றைய நாட்களில் கப்பலால் செல்வதற்காக மக்கள் துடியாய் துடித்தார்கள். நான் நீ என்று போட்டிபோட்டுக்கொண்டு நிற்பவர்களில் எவரை அனுமதிப்பது எவரை தவிர்ப்பது என்ற திண்டாட்டம் மருத்துவர்களுக்கு இருந்தது. காயப்பட்டவர்கள் மட்டும்தான் கப்பலில் செல்லலாம் என்ற கட்டாயம் ஒன்றும் இல்லையே.

காயப்பட போகிறவர்களும் முற்கூட்டியே ஏறிவிட்டால் காயங்களை தவிர்த்துக்கொள்ளலாம் அல்லவா? ஆகவே பயண அனுமதி பெறுவதிலும் ஒரே சண்டையும் சச்சரவுமானது. எப்படியோ எல்லோருமே அந்த பாழும் பிணக்குழியை விட்டு வெளியேறிவிடவே துடித்தார்கள்.

மாறிமாறிவந்த கப்பல்களில் எத்தனை தடவைகள்தான் ஏற்றிச்சென்றாலும் காயமடைந்தவர்கள் நிரம்பி வழிகின்றார்களே தவிர குறைந்தபாடில்லை. வயோதிபர்களும் சிறுவர்களும் கர்ப்பிணிகளும் செல்வதற்கான அனுமதி பெரும்பாலும் கிடைத்தது. மற்றவர்கள்தான் அதிக விசாரிப்புகளின்பின் அனுமதிக்கப்பட்டார்கள்.

எப்போதுமே பிரியும் உறவுகளால் கதறியது. கப்பலில் ஏறப்போனவர்கள்தான் அதிகமாய் அழுதார்கள். ‘உங்களை பயங்கரத்திற்குள் விட்டுவிட்டு நாங்கள்மட்டும் போகிறோமே’ என்றுதான் கதறினார்கள்.

மக்களின் கண்ணீர் பெருகி கடலோடு கரைந்தது. கேட்டு முடியாவிட்டால் எவர் காலிலாவது விழுந்து கெஞ்சிக்கூட கப்பலேற அனுமதி கிடைக்காவர்கள் அங்கேயே கிடந்து காயம் புழுத்து அழுகி செத்துப்போனார்கள்.

கொடுக்கும் அனுமதியையும் பயனள்ளதாக கொடுக்கவே மருத்துவர்களும் விரும்பினார்கள். காப்பாற்ற முடியாத பெரும் பாதிப்புகளை உடையவர்களையும் அடுத்த சில மணித்தியாலங்களுக்குள் இறந்துவிடக்கூடியவர்களையும் அவர்கள் கப்பலில் ஏற்றவில்லை.

மனிதாபிமானம் பார்த்து சில மருத்துவர்கள் சிலருக்கு சலுகை காட்டினார்கள்தான். எல்லோருக்குமே உதவக்கூடிய வழிகள் எவருக்குமே இருக்கவில்லை. வெட்டொன்று துண்டிரண்டாகப்பேசிய வைத்தியர்களையும் பொறுப்பதிகாரிகளையும் சனங்கள் கரித்துக்கொட்டினார்கள்.

சரி எது பிழை எது என்று நீதிநியாயம் கேட்காமல் தத்தமக்கு சரி என பட்டதையே எல்லோரும் செய்தார்கள். அனுமதி வழங்கினாலும்தான் கப்பலில் எத்தனைபேரை ஏற்ற முடியும். நாளுக்கு பத்துக்கப்பல்களா வந்தன. வாரத்திற்கு ஒன்றோ இரண்டோ என வரும் கப்பல்களில் இடைவெளியே இல்லாமல்தான் சனத்தை நிரப்பினார்கள். அங்கே எவரும் கெஞ்சி மன்றாடி எல்லாம் அனுமதி பெற்றுவிட முடியாது.

சாவுகளைபார்த்துப் பார்த்து பழகிப்போனாலும் சாப்பயம் மனிதர்களை விரட்டத்தான் செய்தது. முள்ளிவாய்க்கால், வெள்ளை முள்ளிவாய்க்கால், உண்டியல் சந்தியடி பகுதியெங்கும் எறிகணைகள் சரமாரியாய் விழுந்தன.

செய்திகள் பலவிதமாய் வந்தன என்றாலும் எல்லாமே ஒரே தகவலைத்தான் சொல்லின. ‘போராளிகளின்முக்கியதளபதிகளில்முக்கால்வாசிப்பேரும்ஆனந்தபுரத்தில்மரணமடைந்துவிட்டார்களாம். சிலருக்குநடமாடவேமுடியாதகாயங்களாம்” என்று. மக்கள் இப்போது கடுமையாக யோசித்தார்கள்.

எல்லாம் ஓய்ந்துவிட்ட கதை எல்லோருக்கும் புரிந்தது. மக்கள் சண்டை வரிசைகளை ஊடறுத்துக்கொண்டு தங்கள்மீது எறிகணைகள்வீசும் படையினரிடமே சரணடைந்துவிட துணிந்தார்கள். வேறு வழியெதுவும் இருப்பதாக அவர்களுக்கும் தெரியவில்லை.

சாப்பயம் அவர்களை எதிரியின் கால்களில் விழவைத்தது. மன்னாரிலிருந்து ஓடிஓடி வந்தவர்கள்கூட தம் அர்த்தமற்ற இழப்புகளுக்காக அழுதுவிட்டு சொப்பிங் பைகளோடு சரணடைய புறப்பட்டு விட்டார்கள்.

காலதேவனின் கருணையற்ற மாற்றத்தை கண்டு பலர் நெஞ்சம் குமுறினார்கள்.

மாட்டவேமாட்டன். என்ரகுமருகளகூட்டிக்கொண்டுஅவங்களிட்டபோகமாட்டன் என்று தாயொருவர் தன் தலையிலடித்துக்கொண்டு கதறியழுதார். அவரை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆறுதல்சொல்லத்தான் முடியவில்லை.

நள்ளிரவு. மணி பன்னிரண்டு. வீதிநிறைய சனக்கூட்டம் இடவலம் புரியாமல் திண்டாடிக்கொண்டிருந்தது. மெல்லிய நிலவு வெளிச்சத்தில் தம் உறவுகளை இனங்கண்டவர்கள் சேர்ந்துகொண்டார்கள்.

பலரும் தத்தம் உறவுகளை தொலைத்துவிட்டு தேடுபவர்களாகத்தான் இருந்தார்கள். அவலபபட்ட பலர் சந்திகளில் நின்று புலம்பினார்கள். அப்படித்தான் அந்த அம்மாவும் தடுமாறி அலைமோதிக்கொண்டு நின்றார். எனக்கு அவரை பார்க்கப் பார்க்க பரிதாபிமாக இந்தது. அருகில்சென்று அவரது கரம்பிடித்து அழைத்துவந்து எனக்கருகில் அமரவைத்தேன்.

நான்போகமாட்டனம்மா. எதிரியிட்டபோகமாட்டன். நான்அனுபவப்பட்டவள். குமருகள்அவனிட்டபட்டபாடுகளபாத்தவள். என்ரகுமருகள்ரெண்டையும்கூட்டிக்கொண்டுநான்அவனுகளிட்டஎப்பிடியம்மாபோவன். போகமாட்டன். அப்பிடிஇந்தபோராட்டம்தோத்தாலும்நான்போகமாட்டன். என்ரபிள்ளைகளஇழுத்துக்கொண்டுபோய்கடல்லவிழுந்துசாகுவன். சாகுவனம்மா. சாகுவன்.’ என்றெல்லாம் கதறும் அந்தத்தாயின் புலம்பலை கேட்க இதயம் வலித்தது.

மணலாறு மண்ணின் வேர் அவள். சுத்த வீரர்களின் சொந்தக்காரி. அவரது தாங்கமுடியாத வேதனை விம்மலாகி கண்ணீராயும் புலம்பலாயும் கொட்டிக்கொண்டிருந்தது.

எத்தனை விதமான மனித உணர்வுகள். எல்லோரும் எதையோ நம்புகிறார்கள். இனிமேலும் இங்கே இருக்க முடியாது என்று தெரிந்தும் படையினரிடம் போகமாட்டேன் என்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?

இப்போதுகூட உலகம் தம்மை பார்க்கும் தம் அவலத்தை பார்த்து நீதிபேசும் என்று கூட கதைத்துக்கொண்டார்கள். அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் அங்கே வாழும்வழியின்றி கிளம்ப வரத்தொடங்கிவிட்டார்கள். பலபேர் ‘இன்னமும்போராட்டம்முடியவில்லை. அதன்இறுதிநாள்உலகம்தீர்மானிக்கும்எமதுவிடிவுநாளாகஇருக்கும் என்ற எதிர்பார்ப்புகளோடு பதுங்குகுழிகளை தயாரித்தார்கள்.

இனிமேல் தங்கைக்காக என்று என் நேரத்தை செலவிட முடியாது. அடுத்து என்ன முடிவெடுப்பது என்று எவருக்குமே தெரியாது. பொதுவாக போராளிகள் குண்டுகளோடுநிற்போம்எதிரியோடுமோதியோதற்கொலைசெய்தோஎம்மைஅழித்துக்கொள்வோம் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்,.

அதுகூட நல்லதுதான். இத்தனைக்குப்பின்னும் போராளிக்கு சாவு வராதிருப்பது துயரந்தான். ஆகவே வலிந்தாவது சென்று சாவை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். தங்கையையாவது அனுப்பிவிட்டால் போதும் சாவதற்கு தயங்கத்தேவையில்லை.

ஆனால் தங்கையோ பிடிவாதமாக நின்றாள். ‘உங்கள விட்டிட்டு நான் போகமாட்டன்’ என்று. அவளது சம்மதமின்றியே மருத்துவமனைக்குச்சென்று மருத்துவரிடம் கதைத்தேன். அவளது உடல் நிலையையும் என் மனநிலையையும் எடுத்துச் சொன்னேன்.

என் பெற்றோர் மொத்தம் ஆறு பிள்ளைகளை பெற்றெடுத்தவர்கள். அவர்களின் ஆசை மகனை ஐவர்க்கும் சகோதரனை மண்ணுக்காக மாவீரனாக விலைகொடுத்தவிட்டார்கள். இரண்டு பிள்ளைகளை யுத்தம் தன் விளையாட்டில் விழுங்கிவிட்டது.

இழப்புகளின் தாக்கத்தால் துவண்டுபோய்விட்ட பெற்றவர்களுக்கு இரண்டு பிள்ளைகளாவது மிஞ்சட்டுமே என்றுதான் தங்கையை அவ்வளவு கட்டாயப்படுத்தி அனுப்பினேன். சிதறுதுண்டு உள்ளிறங்கிய மாறாத காயத்துடன் நிற்கும் அவளுக்கு ஒற்றை கையால் தூக்கக்கூடிய பையொன்றை கொடுத்து அனுப்பிவிட்டேன்.

சொத்துப்பத்துக்கு சொந்தக்காரியாய் இருந்தவளை இரண்டு உடைகளடங்கிய ஒற்றைப்பையுடன் அனுப்புவதை நினைக்க வேதனைதான். யாருமற்ற அநாதைபோல போகிறாளே என்ற கவலைதான்.

என்ன செய்வது இவளைவிட மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் இந்த நாட்டில் இன்னும் எவ்வளவுபேர் இருக்கிறார்கள். கலங்கிய கண்களுடன் தங்கையையும் பிரிந்தேன். எனினும் அவளை அம்புலன்சில் ஏற்றிவிட்டேன் என என்னால் நிம்மதிப்பெருமூச்சுவிட முடியவில்லை. காரணம் அவள் கப்பலில் கால்வைப்பாளா என்ற சந்தேகம்தான்.

முள்ளிவாய்க்கால் சந்தியில் இருந்த அரசினர் தமிழ் கலவன் பாடசாலைதான். அப்போது மாஞ்சோலை மருத்துவமனையாக இயங்கியது. பகல் மணி பன்னிரண்டை தாண்டப்போகிறது. இப்படியான நேரங்களில்தான் படையினர் கடலில் இருந்தும் எறிகணைகளை வீசித்தள்ளுவது வழமை. கப்பல் புறப்படும்நேரம் நெருங்குகிறது.

கப்பல் புறப்பட்ட ஐந்தாறு நிமிடங்களுக்குள் மருத்துவமனை வளாகத்தைவிட்டு வெளியே ஓடிவிடவேண்டும். அவள் கடைசியாகச்சென்ற அம்புலன்சில்தான் ஏற்றப்பட்டாள். இன்றைக்கென்று கப்பல் புறப்படமுன்பே தொடங்கிவிடுவானோ? தங்கை அதற்குள் கப்பலேறி விடுவாளோ மாட்டாளோ? அதற்குள் ஏதும் அசம்பாவிதங்கள் நடந்து தொலைந்துவிட்டால்? மீண்டும் காயம்பட்டு…… சே சே… அப்படியொன்றும் நடக்கக்கூடாது.

எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற பதற்றம் எனக்கு மட்டுமல்ல அங்குநின்ற அனைவரிலும் தெரிந்தது. காயமடைந்தோரை ஏற்றிய குறையிலும் கப்பல் புறப்பட்டுவிட்டதுண்டு. கரைவரை வந்து நங்கூரம் பாய்ச்சிவிட்டும் எவரையும் ஏற்றாமலேயே வெறுங்கப்பலாக திரும்பிச்சென்றதுமுண்டு.

கப்பல் வந்துவிட்டுச்செல்லும் நாட்களில் கட்டாயம் எறிகணைவீச்சு நடக்கும். சரமாரியாய் விழுந்து பலபேரை கொன்று குவிக்கும். அடுத்த காப்பலுக்கும் காயப்பட்டவர்களை தயார்படுத்த வேண்டுமல்லவா? ‘நீங்களாவராட்டிஎன்னநாங்களகூட்டிக்கொண்டுபோறம்பாருங்க. காயம்பட்டால்வரத்தானேவேணும்’ என்பதுபோல இருந்த படையினரின் செயற்பாட்டைபற்றி மக்களும் நன்கறிவார்கள்.

அதனால் எறிகணைவீச்சு நேரங்களில் காப்பகழிகளுக்குள் இருந்துவிடுவார்கள். முன்பானால் பதுலிக்குப் பதில் பறக்கும் எறிகணைகள். இப்போது படையினரின் கையே மேலோங்கி இருந்தது. ஆனந்தபுரத்திலிருந்து போராளிகளை மீட்பதற்காக கையிருப்பிலிருந்த எறிகணைகளையும் மோட்டார் பிரிவினர் எறிந்துதீர்த்துவிட்டனர். இப்போது படையினருக்கு எதிராக ஏவ போராளிகளிடம் எதுவுமே இருக்கவில்லை

நான் தொலைத்தெடர்பு நிலையத்தடிக்குச்சென்றபோது அங்கும் மக்கள் நிரம்பி வழிவதை கண்டேன். நான்கு கம்பிகளில் நான்கே நான்கு தகரங்கள் மாட்டப்பட்ட கூரையின்கீழ் அழுக்கடைந்த நான்கு தொலைபேசிகள் இருந்தன.

மக்களோ மிகநீண்ட வரிசைகளில் காத்துக்கிடந்தார்கள். இத்தனை அனர்த்தத்திற்குள்ளும் தொலைபேசிச்சேவை செயற்பட்டது அதிசயமே. என்ன, கதைப்பதில் ஒன்றுமே விளங்காது. விளங்கும் சில சொற்களை வைத்துக்கொண்டு தகவலை புரிந்துகொள்ள வேண்டியதுதான். இடையிடையே தொலைபேசிகள் இயங்கவும் மறுத்துவிடும். வரிசை மெதுமெதுவாய் அரக்கிக்கொண்டிருந்தது.

என் மனதிலோ தங்கையே நிறைந்துநின்றாள். பாவம் அவள் நான் தனித்துவிடக்கூடாது என்றுதானே மன்னாரிலிருந்து இத்தனை துயரங்களையும் தாங்கி இங்குவரை வந்தாள். இப்போது ஒவ்வொருவராய் என்னை விட்டுவிட்டுச் செல்கிறோமே என்ற வேதனைதான் அவளுக்கு.

போய்ட்டு வாறன் என்ற வார்த்தையைகூட அவளால் சொல்ல முடியவில்லை. எத்தனை தவிதவித்தாள். நான் அவளைப்பற்றியே நினைத்துக்கொண்டு வரிசையில் நின்றுகொண்டிருந்தேன். எறிகணை ஏவப்படும் ஒலி கேட்கும்போதெல்லாம் நிலத்தில் விழுவதும் பின்பு எழுந்து நிற்பதுமாக ஒரு அறுபடாத வரிசை அந்த தொலைபேசிகளை நோக்கி நகர்ந்தன. அந்த இணைணப்பு விடுபட்டுவிடாமல் நானும் நின்றேன்.

தொடரும்…………….

நன்றி ஆனதி

மட்டுறுத்தினருக்கு "இறுதி நாட்களும் எனது பயணமும் 3" இதை முதல் பாகத்துடன் தொடர்ந்து இணைக்குமாறு தயவு செய்து கேட்கிறேன்.

http://www.yarl.com/...showtopic=87968

பி;கு- படங்கள் இணைக்க எனக்கு விருப்பம் இல்லை

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள்.....

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ரதி பகிர்விற்க்கு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ வாசித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...நீங்களாவது வாசிக்கிறீர்களே அதற்காக நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

Hmm... Enna seiyah.....

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வாசித்ததை எம்முடன் பகிர்ந்தமைக்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://imageshack.us/photo/my-images/856/94957610.jpg/ “கப்பல் வெளிக்கிட்டிட்டு பிரச்சினையில்ல. இனி போயிரும்” என்று தொலைத்தொடர்பிடத்தில் நின்ற மக்கள் பேசிக்கொண்டார்கள். அந்த வரிசை ஆமைவேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. எனக்கு என் குடும்பத்தை தவிர அப்போது வேறு எதையும் நினைக்க தோன்றவில்லை.

இப்போது அம்மா பறவாயில்லை. அக்காவின் தொடர்பு அவருக்கு கிடைத்துவிட்டது. அப்பாதான் எந்த முகாமில் நின்று திண்டாடுகிறாரோ தெரியவில்லை. பாவம் அக்காவும் அத்தானும்தான் அவரை முகாம் முகாமாக தேடி அலைவார்கள்.

இப்போது கதைத்தால்தான் அப்பாவை கண்டுபிடித்துவிட்டார்களா இல்லையா என்று தெரியும். அப்பாவால் தனியே தன்னை சமாளித்துக்கொள்ள முடியாது. அம்மாதான் அப்பாவுக்கு எல்லாம்.

சரி இதோ வரிசையில் தொலைபேசிக்கு அருகே நெருங்கி வந்தாயிற்று. அடுத்த ஐந்தாவது ஆளாக நானே நிற்கிறேன். கதைத்தால் பெற்றோரின் நிலைவரம் தெரிந்துவிடும். தங்கையும் வருகிறாள் என்று அறிவித்துவிட்டால் போதும். இனிமேல் அக்கா அவர்களை பார்த்துக்கொள்ளட்டும்.

“போன் வேலை செய்யுதில்லை. போயிட்டு பிறகு வாங்கோ” என்றான் ஒழுங்கு செய்து கொடுத்துக்கொண்டிருந்த பையன். எனக்கு அழுகையே வந்துவிட்டது. மணித்தியாலக் கணக்காய் காத்திருந்து கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போனமாதிரி அல்லவா ஆகிவிட்டது. வரிசையில் நின்றவர்கள் ஒவ்வொருவராய் செல்லத் தொடங்கினார்கள்.

நான் அந்த பையனிடம் சென்று, ‘தம்பி எனக்கொரு உதவி செய்விங்களா ?’ என்றேன்.

‘சொல்லுங்க அக்கா’ என்றான் சிநேகப்புன்னகையுடன். ‘இந்த இலக்கத்துக்கு எடுத்து இண்டையான் கப்பலில இந்திரா வாறா எண்டு அறிவிச்சு விடுறிங்களா?’

‘சரியக்கா. பேரையும் இலக்கத்தையும் எழுதி தந்திட்டு போங்க. லைன் கிடைச்சால் அறிவிச்சு விடுறன் என்றான்.’

நன்றி தம்பி. சரியாய் செல்லடிக்கிறான். சிலவேளை என்னால இன்னொருக்கா வரமுடியாமலும் போகலாம். அதான்.’ என்றபடி தகவலை எழுதி நீட்டினேன். அந்த பையன் வேதனைச்சிரிப்போடு தலையை ஆட்டினான். சின்னப்பையன்தான். ஆனாலும் மனித உணர்வுகளை புரிந்து கொள்கின்றான்.

http://imageshack.us/photo/my-images/822/41754911.jpg/

வலைஞர்மடத்தில் வைத்து சின்னக்காவின் சாவுச்செய்தியை பெரியக்காவிற்கு அறிவிக்கப்போனபோதும் இந்தப்பையன்தான் தொடர்பெடுத்து தந்தான். ஆனால் என்னிடம் கதைக்காமலேயே என் நிலையை விளங்கிக்கொண்டான் போலும்.

பலவாறும் சிந்தித்துக்கொண்டு தறப்பாள் விரிப்புகளை விலக்கிக்கொண்டு வீதியில் ஏறிய நான் திடீரென்று நிலத்தில் வீழ்ந்தேன். விழுந்துகிடந்த என்னைச்சுற்றிலும் சிதறுதுண்டுகள் பொலபொலவென கொட்டின. முகத்தை கையால் மூடிக்கொண்டு குப்புறக்கிடந்த எனது முதுகு கூசியது.

அடுத்த எறிகணை ஏவப்படுவதற்குள் தவழ்ந்தேன். வீதியோரம் நின்ற உழவியந்திர பெட்டியொன்றின் கீழ் ஊர்ந்து அதன் சில்லுகளுக்கிடையே படுத்துக்கொண்டேன். அந்தச் சுற்றயலிலேயே தொடர்ந்து விழுந்த ஐந்தாறு எறிகணைகளில் அன்று நான் உயிர்தப்பியது அதிசயமே.

http://imageshack.us/photo/my-images/713/18388423.jpg/

அவ்விடத்தில் செத்திருந்தாலும் அனாதை பிணமென்று என்னை தூக்கி ஒரு ஓரத்தில்தான் எறிந்திருப்பார்கள். ஏனெனில் அந்த வீதியில் மக்கள் புழக்கம் மிகக்குறைந்திருந்தது. எல்லோரும் இடம்பெயர்ந்து சென்றுவிட்டிருந்தார்கள்.

கால நேரமின்றி படையினர் எறிகணைகளை எறிந்துகொண்டேதான் இருந்தார்கள். அவை அடிக்கடி வானத்தை இருட்டாக்கி மறைத்துக்கொண்டிருந்தன. கடலில் இருந்து சீறிப்பாயும் கனோன்கள் நிமிடத்திற்கு நிமிடம் தமிழர்களின் உடல்களை குதறிக்குதறி எறிந்துகொண்டிருந்தன.

மரங்களுக்கெல்லாம்இலையுதிர்காலம்என்றுஒன்றுஇருப்பதைப்போலதமிழர்களுக்கும்இதுஉயிருதிர்காலம்போலும். பார்த்துக்கொண்டிருக்கமனிதர்கள்பிணங்களாய்சரிந்தார்கள். நிமிடத்திற்குநிமிடம்சாவுச்செய்திகளைகேட்டுக்கேட்டுவாழ்க்கைசுரத்தற்றுப்போனது.

போரில் இனி வெல்லமுடியும் என்று தோன்றவில்லை. ஆனால் இந்த படுபயங்கரமான கொலைக்களத்தை பார்த்தாவது சர்வதேசம் தலையிடும் என்ற நம்பிக்கையோடு பலரும் தம் பசித்த வயிறுகளை தடவிக்கொண்டு பதுங்கு குழிகளுக்குள் கிடந்தார்கள்.

மழையெனப்பொழியும் சன்னங்களும் எறிகணைகளும் சிறிது ஓய்ந்தால்போதும் நானும் என் தோழிகளும் மக்களை தேடி அவர்களின் பதுங்குகுழித் தங்கிடங்களுக்கு சென்றுவிடுவோம்.

http://imageshack.us/photo/my-images/27/30368310.jpg/

எல்லாவற்றையும் இழந்து கிடக்கும் அவர்களோடு கதைப்போம். பலவிதமான உணர்வுகளை அவர்கள் வெளிப்படுத்துவார்கள். ஆளாளுக்கு ஏறியிறங்கும் நியாயங்கள், கோபங்கள். எரிச்சல்கள்.

முன்பின் தெரியாத ஆயிரமாயிரம் முகங்களின் வேதனைகளையும் நம்பிக்கையீனத்தையும் பார்த்தபடி வீதியால் சென்றுகொண்டிருந்தேன்.

எதையெதையோ தேடி, எவர் எவரையோ தேடி வீதி முழுவதையும் நிறைத்தபடி அலைந்துகொண்டிருந்த மனிதர்கள் நடைப்பிணங்களாய்த்தான் தெரிந்தார்கள். மிளகாய் வெங்காயம் எல்லாம் எப்படி இருக்குமென்று மறந்துவிட்ட மக்கள், வெறும் பருப்பில்தான் வடை சுடுகிறார்கள்.

கடலை பருப்பை மட்டும் நசித்து உருட்டி, பொரித்த, எண்ணெய் வழியும் வடையை ஒன்று ஐம்பது ரூபாய் என்று விற்கும் வியாபாரியைகூட அதிசயமாகத்தான் பார்க்கமுடிந்தது. இந்த மீள்தல் உணர்வு தமிழர்களுடன் கூடப்பிறந்த ஒன்றுபோலும்.

சமாதான குலைவின் ஆரம்பநாட்களில் புதுக்குடியிருப்பு பாடசாலைமீது ஒருநாள் சிறிலங்கா விமானப்படையினர் குண்டுகளை வீசினர். அதன்போது எதிரே இருந்த ‘குமரன்’ காகிதாதிகள் விற்பனை நிலையமும் நொருங்கி தரைமட்டமாகிப்போனது. ஆனால் அடுத்த நாள் விடிந்தபோது அந்த கடை இருந்த இடத்தின் கருகிய சாம்பல்மேட்டின் முன்னாலேயே அக்கடையின் உரிமையாளர் ஈழநாதம் பத்திரிகையை விற்றுக்கொண்டிருந்தார்.

‘பத்திரிகையை எதிர்பார்த்து என்னிடம் வரும் வாடிக்கையாளரை நான் ஏமாற்றக்கூடாதுதானே’ என்றார். பொதுவாக வன்னி மாந்தர்கள் இப்படித்தான் இருக்கின்றார்கள். அகோர வீழ்ச்சியையும் தாங்கிக்கொள்ளும் சக்தியை அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.

http://imageshack.us/photo/my-images/7/48006410.jpg/ இதோ ஒரு வடையை ஐம்பது ரூபாய்க்கு விற்கின்ற வியாபாரி இதை தயாரிப்பதற்காக எத்தனை சவால்களை எதிர்கொண்டிருப்பார். நான்கு விறகுகளை சேகரிப்பதே எத்தனை கஸ்ரமானது. சீறிவரும் சன்னங்களையும் கூவிவரும் எறிகணைகளையும் பொருட்படுத்தாமல் வெளியே அலைந்துதிரிந்து ‘தேடினால்தான் பொருள்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இயந்திரம்போல இயங்கினால்தான் பணம்பண்ண முடியும். என்றாலும் இதுவுமொரு சேவைதான். மிளகாய் வெங்காயம் அறியாத வெறும் பருப்பு உருண்டைக்கே சனம் என்னபாடு படுகிறது. சுட்ட வடையை ஒரு மணித்தியாலத்திற்குள் விற்றுவிடலாம். அதற்குள் சனம் அடிபட்டு வாங்கிவிடுகிறது.

நித்தியா என்ற என் தோழி முதல் நாள் இரவு சொன்ன கதை வீதியில் சென்ற எனக்கு நினைவில் வந்தது. நித்தியா அவளின் வீட்டாரை சந்திக்க சென்றபோது தன் அக்காவின் மகளை தூக்கி கொஞ்சினாளாம்,

என்ரதங்ங்ங்கச்செல்லமேஎன்று. அவள்குழந்தையைமுத்தமிடஅவளின்அக்காசொன்னாளாம், ‘அடியேய்என்ரபிள்ளையதங்கமேபவுணேஎன்டெல்லாம்கொஞ்சாதையடி. அதெல்லாம்எங்களிட்டதாராளமாய்இருக்கு. பச்சைமிளகாயேவெங்காயமேஎன்றுகொஞ்சுஎன்று.

அந்தக்கதையை கேட்டு காப்பரணுக்குள் கிடந்த எல்லோருமே சிரித்தோம். உண்மைதான். என்ர மண்வெட்டியே, என்ர உரைப்பையே, என்ர சாக்கே என்று கொஞ்சினால்கூட அதிசயப்படுவதற்கில்லை. அருமைபெருமையானவற்றை சொல்லித்தானே குழந்தைகளை கொஞ்சுவார்கள். அத்தனை அவசியமான பொருட்களல்லவா மண்வெட்டி உரைப்பைகள்.

பதுங்குகுழிகள் அமைத்து அமைத்தே உரைப்பைகள், சாக்குகள், பனங்குற்றிகள் எல்லாம் அழிந்துவிட்டன. உடுக்கும் சேலைகளை நான்காக வெட்டி, பைகள்போல தைத்துவிட்டு அதில் மண்ணை நிரப்பி அடுக்கினால் அது மண்ணணை மறைப்பாகி விடும்தானே.

வட்டுவாகல் மண்ணணை மறைப்புகள் பல்லாயிரக்கணக்காய் முளைத்தன. முள்ளிவாய்க்கால் பகுதிகளெங்கும் சேலைகளில் தைக்கப்பட்ட பைகளாலான மண்ணணைகள் பல்லாயிரக்கணக்காய் முளைத்தன. பட்டுச்சேலைகள்கூட மண்ணணையாகின. கல்யாண வேட்டிகளும் கூடத்தான்.

http://imageshack.us/photo/my-images/853/81846834.jpg/

மூலைக்குமூலை தையல் இயந்திரங்கள் கிடந்தாலும் அவை ஓயாமல் இயங்கிக்கொண்டுதான் இருந்தன. தையல் இயந்திரங்களை சொந்தமாய் வைத்திருந்தவர்களுக்கு தாராளமாய் உழைப்பு கிடைத்தது. ஆனாலும் ஓய்வொழிச்சல் இல்லாத சேவைபோலவே தைப்பவர்களும் செயற்படவேண்டி இருந்தது.

வீதியோரம் பிணமொன்று கிடந்தது. இப்போதொல்லாம் பிணங்களை தூக்கிச்சென்று புதைக்க எந்த வண்டியும் வருவதில்லை. எவருக்கும் நேரமிருக்கவுமில்லை. புதைக்க இடம் இருக்கவுமில்லை. சிலர் மட்டும் உறவுகள் இறந்துவிட்டால் தமது பதுங்குகுழிகளிலேயே போட்டு மூடிவிட்டு இடம் மாறினார்கள். புதைக்கத்தான் வேண்டும் என்ற அவசியமும் இருக்கவில்லை. அதுதான் பிணம் நாற்றமெடுக்கமுன் அவ்விடத்தைவிட்டே விரட்டியடிக்கப்பட்டு விடுவார்களே. வலிமிகுந்த உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட்டவளாய் சென்றுகொண்டிருந்தேன் நானும்.

‘தங்கச்சி தங்கச்சி’ என்ற குரல் என்னைத்தான் அழைக்கிறது என்று உணர்ந்து திரும்பிப்பார்த்தேன். நொந்து நூலாகிவிட்ட ராசகிளி அண்ணன் ஓட்டமும் நடையுமாக வந்தார். பாலும் தேனும் பணமும் வயலும் விளைந்துகிடந்த பரம்பரை பணக்காரர் அவர்.

‘சொல்லுங்கண்ணா. எவடத்தில இருக்கிறிங்க?’ என்றேன் பொதுவாக. ‘அந்தா வயலுக்க தெரியிது. அந்த தறப்பால்தான்.’ எனக்கொரு உதவி செய்வியாம்மா?’ என்றார்.

என்னால் உதவமுடியும் என்று அவர் நம்புகிறார். ‘ஏலுமென்டால் செய்யிறன் அண்ணா. சொல்லுங்க’ என்றேன். உள்ளே இதயம் படபடத்தது. எதை அவர் என்னிடம் கேட்டுவிடக்கூடாது என்று நினைத்தேனோ அதையே அவர் கேட்டார்.

‘எப்பிடியாவது எனக்கொரு ரெண்டு கிலோ அரிசி வாங்கித்தாம்மா. எவ்வளவு காசு வேணுமெண்டாலும் தாறன்’ என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவரே சொன்னார்,

‘என்னட்ட காசு இருக்கம்மா. நிறைய இருக்கு. ஆனா காசை தின்ன ஏலாதே.’ அவர் அதை சொல்லி முடிக்கமுன் அவரது குரல் உடைந்தது.

http://imageshack.us/photo/my-images/829/45083783.jpg/

"வாங்கண்ணா. எல்லாரையும் பாத்திட்டு போறன். அதுசரி உங்கடையாக்கள் யாருக்கும் காயமா? அண்டைக்கு ஆஸ்பத்திரில நிண்டிங்களே.’ என்றேன்.

‘ஓமம்மா எங்கட குடும்பத்தில காவாசிப்பேர் சரி. அப்ப நீ வீட்ட வாறியாம்மா? வா வா வந்து எங்கட கோலத்தை பார்’. என்றபடி நடந்தார். குடும்பத்தின் கால்வாசிப்பேர் செத்துவிட்டதைகூட சாதாரண சம்பவம்போல சொல்வதற்கு அவராலும் முடிகிறதுதான் என்று நினைத்துக்கொண்டு நானும் அவர்பின்னால் நடந்தேன்.

சேறும் சகதியுமாய் கிடந்த சிறிய வாய்க்காலொன்றை தாண்டினார். பள்ளமும் திட்டியுமான ஈரலிப்பான தரையில், கிழிந்த தறப்பாள் கொட்டில். அதன் உஷ்ணமான நிழலின்கீழ் சகதித்தரையில் துணியை விரித்துவிட்டு ஆளையாள் ஒட்டிக்கொண்டு பலர் நெருக்கமாக கிடந்தார்கள்.

பசி மயக்கமும் இயலாமையும் அவர்களை தள்ளிவிழுத்தி விட்டிருந்தன. அரைத்தூக்கத்தில் கிடந்த அவர்கள், ‘யாரு?’ என்று தலைகளை தூக்கிப்பார்த்தார்கள். என்னை கண்டதும் மீண்டும் தலையை தரையில் போட்டுக்கொண்டார்கள். அவர்கள் இருக்கும் மன நிலையை ராசகிளி அண்ணன் அறிவார். ஆத்திரப்பட்டு எதுவும் சொல்லிவிடக்கூடாதே என்ற அவசரத்தில் என்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

‘அது நம்மட வேலய்யாட மகள்தான்.’ என்று அவர் சொல்லி முடிக்கமுன் ஆளுக்காள் வாய் திறந்தார்கள்.

‘காசும் பணமுமிருந்தும் பட்டினியாய் கிடந்து சாகிறம் நாங்கள்.’

‘உங்கட்டத்தான் கனக்க ஆயுதங்கள் இருக்கே. எங்கள சுட்டு சாக்கொல்லுங்க. நாங்க ஒரேயடியா செத்துப்போறம்.’

‘எல்லாரும் கொஞ்ச இடத்துக்கதானே இருக்கிறம். பெரிய குண்டொண்டை போடுங்க. எல்லாரும் நிம்மதியா செத்துப்போறம்.’ என்று மாறி மாறி பொரிந்து தள்ளினார்கள்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு வசனத்தை சொல்லிவிட்டு நிலத்தில் சரிந்தார்கள். அவர்களால் நிதானமாக எழுந்திருக்கக்கூட முடியவில்லை.

அவர்களின் ஆற்றாமையின் தவிப்பு அது.

தொடரும்…………..

  • கருத்துக்கள உறவுகள்

ரதி பகிர்வுக்கு நன்றி.

94957610.jpg

41754911.jpg

18388423.jpg

30368310.jpg

81846834.jpg

45083783.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நூணாவிலான்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறுதி நாட்களும் எனது பயணமும்-5

http://imageshack.us/photo/my-images/847/41964233.jpg/ நானும்கூட காலையில் இருந்து எதுவும் சாப்பிடவில்லைத்தான். ஆனால் நிதானமாக இருந்து அவர்களது வார்த்தைகளை தாங்கினேன். அவர்களுக்கு இப்போது தேவை தங்கள் துயரத்தை கொஞ்சமாவது கொட்டிவிட ஏற்ற ஒருவர்தான். அவர்கள் எல்லோரும் மாறி மாறி புலம்புகிறார்களே என்ற ஆதங்கத்தில் ராசகிளி அண்ணன் சொன்னார்.

"இது நம்மட புள்ள. அதாலதான் கூட்டிக்கொண்டு வந்தன். அந்தப்புள்ளய கவலப்படுத்த வேணாம்" அவரது வார்த்தைக்கும் ஒருதடவை தூக்கிப்பார்த்த தலைகளை தரையில் போட்டுக்கொண்டு படுத்துவிட்டார்கள். அவர்களுக்கும் ஆறுதல் சொல்ல என்னிடம் யாதொரு வார்த்தையுமே இருக்கவில்லை, கொடுப்பதற்கு எதுவுமே இல்லாததைப்போலவே. பணம் இல்லை என்று சொல்லியிருந்தால் கொடுத்திருப்பேன். அது என்னிடமும் இருந்தது. ராசகிளி அண்ணன் சொன்னதுபோல பணத்தை தின்ன முடியாதே. அவர்களுடைய மன எரிச்சலில் கொஞ்சத்தை வெளியே கொட்ட உதவியிருக்கிறேன். அதுபோதும்.

அந்த கூட்டுக்குடும்பத்தின் சிறுவர்கள் நன்கைந்துபோர் கஞ்சி குவளைகளுடன் வந்து சேர்ந்தார்கள். அவர்களது முகங்களில் மகிழ்ச்சி தெரிந்தது. அது அவர்களது வயிறு நிறையப்போகிற மகிழ்ச்சி. நான் குழந்தைகளை பார்த்துக்கொண்டிருப்பதை அவதாணித்த ராசகிளி அண்ணனுக்கு வேதனையாக இருந்தது போலும்.

http://imageshack.us/photo/my-images/843/59562092.jpg/ "பாரம்மா. பார். என்ர

வயல்கள்ளயும் தோட்டத்திலயும் வேலை செய்தவர்களுக்கெல்லாம் வயிறுநிறைய சோறு போடுவனே. பாலும் மோரும் செம்புசெம்பாக குடுப்பனே. இப்ப என்ர பிள்ளைகள பாரன். மணிக்கணக்கா வேகாத வெய்யிலுக்க நிண்டு கஞ்சி வாங்கிக்கொண்டு வருகிதுகள். மோர் தயிர ஊருக்கே ஊத்தினவனம்மா நான். இண்டைக்கு உப்புக்கஞ்சிக்கே என்ர குஞ்சுகள் தெருவில நிக்கிதுகள். என்னம்மா வாழ்க்கையிது? இன்னும் எதுக்காக சாகாமல் இருக்கிறம் எண்டுதான் தெரியேல்ல" என்று குமுறினார். அவரது பிள்ளைகளோ என்னை பார்த்து புன்முறுவல் செய்தபடி கஞ்சியை பங்கிட்டு குடித்தார்கள். தவழ்ந்துசென்ற தம் குட்டித்தம்பிக்கு கஞ்சியிலிருந்த பருக்கைகளை எடுத்து ஊட்டிவிட்டார்கள்.

நான் விடைபெற்று வெளியே வந்தபோது ராசகிளி அண்ணணும் கூடவே வந்தார்.

"என்னம்மா அரிசி கொஞ்சம் கொண்டு வருவா தானே?" என்ற அவரது வார்த்தைகளில் கெஞ்சல். அரிசியும் நெல்லும் மூடை மூடையாக கொட்டிக்கிடக்கும் அவரது வீட்டின் விறாந்தை நினைவுக்கு வர எனக்கு பெருமூச்சுத்தான் கிளம்பியது.

"முயற்சிக்கிறன் அண்ணா. நானும் இனித்தான் தேடிப்பாக்கணும்" என்று விடைபெற்றேன். நானும்தான் அரிசிக்கு எங்கே போவேன்? யாரிடம் கேட்கமுடியும்? போராளிகளுக்கு என்று வரும் குருநெல் அரிசிச்சோற்றில் நூறு நெல்லும் அரைவாசி கல்லும் வரும்.

ஒரு பானையை அடுப்பில் ஏற்றிவிட்டே பத்துத்தடவை பாதுகாப்பு அகழிக்குள் பாய்ந்து பாய்ந்துதான் பானையை இறக்கவேண்டிய சூழலில் கல்லில்லாமல் சோறு கிடைக்குமா? காலை உணவுக்காக எங்களுக்கு வரும் கஞ்சியைவிட கொட்டில்களில் மக்களுக்காக கொடுக்கப்படும் கஞ்சி சுவையானது. அங்கு ஒரு பானைக்கு ஒருபை அங்கர் மா போடுவார்களாம்.

http://imageshack.us/photo/my-images/87/29721266.jpg/

சிறுவர்களைபோல தாமும் வரிசையில் நின்று கஞ்சிவாங்க ராசகிளி அண்ணனைப்போன்ற பெரியவர்களுக்கு மனசு இடம் கொடுக்கவில்லை.

ராசகிளி அண்ணனின் குரலும் வேதனையும் குழந்தைகளும் குடும்பமும் என்மீது சுமையென அழுத்தின. நானும் காப்பகழி காப்பகழியாகச்சென்று சனங்களின் வெப்பியாரங்களை என்மீது கொட்டிக்கொள்ளும் கடமையைத்தான் செய்தேன். ஒவ்வொரு காப்பரணோடும்சென்று குந்திக்கொண்டு அவர்களின் கண்ணீர் கதைகளை கேட்டேன்.

எத்தனை விதமான துயரம் அவர்களுக்கு. சடீர் படீர் என காற்றை கிழித்துவரும் துப்பாக்கிச் சன்னங்களிலிருந்து உயிர் தப்புவது எவரினதும் கெட்டித்தனத்தினால் அல்ல.

அப்போதெல்லாம் சாவது ஒரு அதிஸ்ரம்போலத்தான். வாழ்வதை துரதிஸ்ரம் என்று எல்லோரும் கதைத்துக்கொண்டார்கள். விரக்தியும் வேதனையுமாக போய்க்கொண்டிருந்த என் கண்களில் நீண்ட வரிசை ஒன்று தென்பட்டது. வீதிக்கு வீதி கஞ்சிக்கொட்டில்கள் இருப்பதால் அது கஞ்சிக்காக நிற்கும் வரிசையாக இருக்கலாம். என்று நினைத்தேன்.

சிலவேளை அரிசி விற்கவும் கூடுமே என்றது என்மனம். சே சே இருக்காது. அரிசியையெல்லாம் எவரும் இப்படிப்போட்டு விற்கமாட்டார்கள். விற்கக்கூடிய அளவு இருந்தாலும் இரகசியமாகத்தான் விற்பார்கள். அப்படி யாரேனும் விற்கிறார்கள் என்றால் நான்கூட அரிசிவாங்கி ராசகிளி அண்ணனுக்கு கொடுக்கமுடியும என்று யோசித்துக்கொண்டே வரிசையை நெருங்கினேன். திடீரென வரிசை அமளிதுமளிப்பட்டது. சிறுவன் ஒருவன் குளறிக்கொண்டு துள்ளினான்.

"என்னடா என்னடா" என்று பெண்ணொருத்தி பதறினாள். கதறிய பையனின் உடலிலிருந்து குருதி வழிந்தது. சனங்கள் விலகி ஓடத்தொடங்கினார்கள்.

"ஐயோ என்ர பிள்ளைக்கு காயம். என்ர பிள்ளைக்கு காயம்" என்று கதறத்தொடங்கிய பெண்ணை விலக்கிவிட்டு, யாரோ ஒருவர் சிறுவனை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு ஓடினார். நடு வீதியில் நின்று கதறும் சிறுவனும் பதறும் தாயும் அன்று முழுவதும் என் இதயத்தை வாட்டினார்கள். அந்த ஒருவன் மட்டும்தான் அந்தத் தாயிடமிருந்த செல்வமாகவும் இருக்கலாம். பத்துவயது மதிக்கத்தக்க சின்னஞ்சிறுவன் எப்படி அந்தப்பெரிய வலியை தாங்கப்போகிறான். இப்போதெல்லாம் வெடிக்கின்ற எறிகணைகளும் பாய்கின்ற சன்னங்களும் காய எரிவாலேயே அரை உயிரை பறித்துவிடக்கூடியன. அப்படிப்பட்ட வேதனைக்கு அளவு கணக்கில்லை என்றானது.

http://imageshack.us/photo/my-images/821/50607983.jpg/ திடுமென பலபத்து

எறிகணைகள் வீழ்ந்துவெடித்தன. நடக்கக்கூட இடமற்ற வீதியில் மக்கள் முட்டி மோதிக்கொண்டு நகர்ந்தார்கள். அடுத்தசில நிமிடங்களில் வழிவிடு வழிவிடு என்று அலறிக்கொண்டுவரும் வாகன வரிசையின் உறுமல்.

எல்லா வாகனங்களிலும் கதறலும் கண்ணீரும் குருதியும். விலக வழியின்றி தடுமாறும் சனங்களை வாகனத்தில் துணியை பிடித்துக்கொண்டு நின்ற மனிதர் அசிங்கமாய் திட்டினார். சனக்கூட்டத்தை பிரித்துக்கொண்டு செல்லும் அத்தனை வாகனங்களும் கப்பலடிக்குத்தான் செல்கின்றன. ஆனால் அத்தனை காயக்காரரும் காப்பாற்றப்படுவார்களா?

கப்பலில் ஏற்றப்படுவார்களா? அதுவெல்லாம் கேள்விதான். இனிமேல் கப்பலும் வராதாம் என்று கதைத்தார்கள். மனிதர்களினதும் வாகனங்களினதும் கதறல் ஒலியே என் மனதை ஆக்கிரமித்தது. கனக்கும் தலையை ஆட்டிக்கொண்டு மீண்டுவர முயற்சித்தேன். கடந்தசில மாதங்களாய் உறக்கத்தில்கூட காதுக்குள் கேட்பது இந்த அவல ஒலிகளைத்தானே. இப்படித்தானே எல்லோருக்கும் வலிக்கும் என்று நினைத்தபோது, மனம் பாரமெனக்கனத்தது.

என் உறவினர்கள் இருந்த காப்பரணுக்குள் சென்றேன். பிறந்த இரண்டே மாதங்களில் தாயை இழந்த குழந்தையை காப்பரணுக்குள் சென்று பார்த்தேன். அவர்கள் தமக்கெனச்சமைத்த மதிய உணவில் எனக்கும் பங்கிட்டுத் தந்தார்கள். அமைதியாகச் சாப்பிட்டேன். நினைவில் ராசகிளி அண்ணன் வந்து அரிசி கேட்டுக்கொண்டு நின்றார். உண்ணும் உணவு தொண்டைக்குழிக்குள் இறங்குவதே கடினம்போலத் தெரிந்தது.

தொடர்ந்த நாட்கள் முன்பைவிட கோரமாய் பயமுறுத்தின. சேலைகளை வெட்டித்தைத்து மண்ணரண் அமைப்பது கூட சாத்தியமற்றுப்போனது. எவர் கையிலும் எதுவும் இருக்கவில்லை. உடுத்த உடையோடு புறப்பட்டு விட்டார்கள். சிலர் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை மட்டும் தூக்கிக்கொண்டார்கள். எல்லோருமே வெள்ளை முள்ளிவாய்க்காலை நோக்கி நடையை கட்டினார்கள். பத்தே மீற்றர் தூரத்தை கடப்பதற்கு பதினைந்து நிமிடங்களை செலவழிக்கவேண்டி இருந்தது. இடையிடையே எறிகணைகள்வேறு விழுந்து கூட்டத்தை தள்ளிவிழுத்தின

http://imageshack.us/photo/my-images/10/96657587.jpg/ தன்

பிள்ளையின் தலைதான் காலில் இடறுகிறது என்றாலும் நின்றுபார்க்க அவகாசமற்றவர்கள் பதறியோடினார்கள். எறிகணை ஏவப்படும் சத்தம் கேட்டதும் எல்லோரும் தரையோடுதான் விழுந்தார்கள். விழுந்துகிடப்பது மட்டுமே ஓரளவு பாதுகாப்பானது. நின்றால் சன்னம் துளைக்கும், நடந்தால் உயிர் பறக்கும் என்ற நிலை.

மனிதர்கள் பைத்தியகாரர்களைப்போல நடந்துகொண்டார்கள். எந்தப் பிணத்தையும் எவரும் உரிமை கோரவில்லை. நெருப்பும் புகையும் வானத்தை தொடுமளவுக்கு கிளம்பின. சனம் ஓட்டமும் நடையுமாக வட்டுவாகலை நோக்கி சென்றனர்.

கடைசியாய் கையிலிருந்த எல்லாவற்றையும் இழந்த சிலர் நந்திக்கடலுக்குள்ளால் விழுந்தடித்துக்கொண்டு படையினரிடம் சரணடைந்தார்கள். அதைத்தவிர அவர்களுக்கும் வேறெந்த வழியும் இருக்கவில்லை. ஒரே ஒரு பாதையாய் இருந்த வட்டுவாகல் வீதியில் சுமார் இரண்டு இரண்டரை கிலோ மீற்றர் தூரத்திற்குள் நின்ற இலட்சக்கணக்கான மக்கள் கூட்டம் திமிலோகப்பட்டது. மனிதவெள்ளம் அலைமோதிய, அப்பகுதியில் ஆங்காங்கே மனித பிணங்களும் செத்த நாய்களும் புளுத்து நாறின.

கட்டக்கடைசிநாள் இதுதான் என்றெண்ணிய சனங்களில் சிலர் தம் இருப்பில் மேலதிகமாக இருந்த பொருட்களை விற்கத்தொடங்கினர். சீனி, அரிசி, மா, பேணிமீன், செத்தல் மிளகாய், சவர்க்காரம் போன்றவற்றை கண்குளிர கண்குளிர காணமுடிந்தது. மக்கள் அனைவருமே போரின் நிலையைப்பற்றி புரிந்து கொண்டார்கள். எனினும் பலராலும் நம்பமுடியவில்லை.

நானும் பதுங்குகுழிக்குள் நின்றபடி பலமாக யோசித்தேன். என்ன செய்வதென்றே புரியவில்லை. அடுத்தடுத்த பதுங்குகுழிகளில் இருந்தவர்களை பெயர்சொல்லி அழைத்து சொன்னேன்:

"நீங்க சனத்தோட சனமா போங்க. எங்களை பாத்தவுடன அடையாளம் தெரியும். நாங்க குப்பி கடிக்கிறதத்தவிர வேற வழியில்ல. இனி எதைப்பற்றியும் யோசிக்க வேணாம்" என்று சொல்லி அனுப்பியும் விட்டேன்.

அங்கமிழந்தவர்கள் மட்டுமே பதுங்குகுழிகளில் நின்றோம். கடந்த பதினெட்டு ஆண்டுகளாக என் கழுத்தில் தொங்கிய சயனைட் வில்லைக்கு இனித்தான் கடமை வரப்போகிறது என்று எண்ணியபடி என் குப்பியை பிடித்து முத்தமிட்டேன். என்னைப்போலவே என்னுடன் நின்றவர்களும் உணர்கிறார்கள் என்பதை அவர்களும் குப்பியை தடவிக்கொள்வதை வைத்து புரிந்துகொண்டேன்.

http://imageshack.us/photo/my-images/13/27318097.jpg/ பொழுது

புலரத்தொடங்க அயலில் இருந்த போராளிகள் பலரும்சாதாரண உடைக்கு மாறினார்கள். சிலர் போகிறோமென சொல்லிவிட்டு போனார்கள். சிலர் சொல்லாமலேயே போனார்கள். சிந்திக்க ஏதுமற்றதுபோன்ற மன வெறுமையுடன் நின்றுகொண்டிருந்த எனக்கருகில் கால்களை இழந்த இருவர் நின்றனர். அந்த பனங்கூடலுக்குள்ளால் மக்களும் போராளிகளும் எங்களை கடந்து போய்க்கொண்டே இருந்தார்கள்.

காப்பகழிக்குள்ளேயே நின்ற எங்களிடம் சிலர் தம் பிள்ளைகளை விசாரித்தார்கள். "பிள்ள, சோதியா படையணிப்பிள்ளைகள் எதிலயம்மா இருக்கினம்?" என்றார் ஒரு தாயார்.

"மாலதி படையணி மெடிசின் எவடத்திலயம்மா இருக்கு?" என்றார் இன்னொரு தாயார்.

"பிள்ளையள் இந்தப்படத்தில இருக்கிற பிள்ளைய தெரியுமா அம்மா? இவ என்ர மகள்தான். எல்லாரையும் போகச்சொல்லியாச்சு தானேம்மா. என்ர பிள்ள எங்க நிக்கிறாவெண்டு தெரிஞ்சால் சொல்லுங்கம்மா" என்று மன்றாடினார் ஒரு தந்தை.

"அக்காக்கள், என்ர தங்கச்சிய கண்டனிங்களா அக்காக்கள்? இந்தப்படத்த பாத்து சொல்லுங்க அக்காக்கள்" என்று கெஞ்சினான் ஒரு அண்ணன்.

"எல்லாமே முடிஞ்சிது. நீங்க ஏனம்மா நிக்கிறிங்க? எங்களோட வாங்க" என்றார்கள் மக்கள்.

பெற்றோர்களும் சகோதரர்களும் தங்கள் பிள்ளைகளையும் உடன் பிறந்தவர்களையும் தேடி அலைந்தார்கள். தம் பிள்ளைகளை கண்டுவிட்டால் அவர்களின் கைகளைபிடித்து இழுத்துச்சென்று சட்டைகளை மாற்றச்சொல்லி கெஞ்சினார்கள்.

ஆண்டுக்கணக்காய் அழகு பார்த்துக்கட்டிய மிடுக்கான தலைப்பின்னலை பிரித்து கட்டும்போது பிள்ளைகள் அழுதார்கள். அவர்களது விம்மலில் வேதனை தெரிந்தது. தலைமுடி வெட்டப்பட்ட பிள்ளைககளின் தலைகளில் அம்மாக்கள் அச்சத்துடன் துணிகளை போர்த்தினார்கள். பிள்ளைகளை தேடியும்கிடைக்காத பெற்றோர்கள் சிலர் அழுதுகொண்டே தேடியலைந்தனர்.

தந்தையொருவரின் குரல் அப்பகுதியை முழுதாக நிறைத்து சிறிய பனங்கூடலை அதிரச்செய்தது.

"அம்மாச்சி…. என்ர செல்லம். நீ எங்கயம்மா இருக்கிறாய்? அப்பா தேடுறனம்மா. ஓடி வாம்மா அப்பாட்ட…… ஓடிவந்திரு என்ர மகளே" என்ர கேவலுடன் ஒவ்வொரு பதுங்குகுழிகளாய் பார்த்தார். அந்த வயோதிப தந்தை காப்பகழிக்குள் நின்ற எங்களுக்குள் தன் மகள் இல்லை என்ற ஏமாற்றத்துடன் திரும்பியபோது அவரது முகத்தில் நான்கண்ட வேதனையை இங்கு வார்த்தைகளால் வடித்துவிட முடியாது.

அவரது சொல்லும் செயலும் எனது மனதை ரம்பமாய் அறுத்தன. இப்படி எத்தனை அப்பாக்களும் அம்மாக்களும் அண்ணன்மாரும் தேடி அலைகிறார்கள். இத்தனை குண்டு சிதறல்களுக்குள்ளும் தமது பாதுகாப்பைப்பற்றி சிந்திக்காமல் தேடியலையும் பாசத்தின் வலியை ஆழமாக உணர்ந்தேன்.

தொடரும் …………….

நன்றி ஆனதி

இந்தக் கதையில் எல்லோருமே ஒருவகையில் பங்காளிகளே . அதேவளையில் , அதை இரைமீட்பதற்கு ஒரு சிலர் தயங்குவதும் யதார்த்தமே . இந்தக்கதையை நான் மௌனசாட்சியாகவே வாசித்துக்கொண்டிருக்கின்றேன் . நன்றிகள் ரதி இணைப்பிற்கு :) :) :) .

ரதி பகிர்ந்து கொண்டதிற்கு நன்றி.இது எங்கே வெளியிடப்பட்டது? இதை எழுதியவர் இதனை ஒரு நூலாக வெளியிட்டு ஆவணப்படுத்த வேண்டும்.அவரை உங்களுக்குத் தெரிந்தால் அறியத் தரவும், அதற்கான முயற்சிகளைச் செய்யலாம்.

ரதி பகிர்ந்து கொண்டதிற்கு நன்றி.இது எங்கே வெளியிடப்பட்டது? இதை எழுதியவர் இதனை ஒரு நூலாக வெளியிட்டு ஆவணப்படுத்த வேண்டும்.அவரை உங்களுக்குத் தெரிந்தால் அறியத் தரவும், அதற்கான முயற்சிகளைச் செய்யலாம்.

இதனை ஆவணப்படுத்தி என்ன ஆகபோகுது நாரதர் அண்ணா?

ஆதாரம் ஏதுன்னு கேப்பாங்களே!

இன்னுவரை வன்னில நடந்த கொடூரத்தை , ஒளிப்பட ஆதாரங்களா /ஆதாரபூர்வமா .. காட்டிய , சனல் -4 எடுத்த முனைப்புக்களையே யாரும் அக்கறையோடு பார்க்க முற்படல்ல... ஐ.நா..உட்பட ! :rolleyes:

இன்று தம்மைப் போராளிகள் என்று சொல்லிக் கொண்டு பல கதைகளை பலர் எழுதிக் கொண்டு இருகிறார்கள் புனைவுகளுடன்.மேலுள்ள எழுத்து ஒரு மானிடத்தை நேசித்த உண்மையான ஒருவரில் இருந்து வருவதாக எனக்குத் தெரிகிறது.இது கட்டாயம் ஆவணப்படுத்தப்பட்டு மொழி பெயர்க்கப் பட வேண்டும்.இதனை யாழ்க் கள அங்கத்துவர்கள் கூட்டாகச் சேர்ந்து ஒரு செயற்திட்டமாக யாழ்க் கள வெளியீடாக வெளியிடலாமே? இதன் மூலம் பலருக்கும் நாம் உண்மைகளை எடுத்துச் செல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நரதர் இத் தொடரை ஈழநேசன் வெப் ல் தொடர்-16 வரை வெளியிட்டுவிட்டார்கள், அவர்களிடம் தொடர்பு கொண்டால் அனுமதி கிடைக்கும்,

நான் அதில் தொடர்ந்து வாசித்துக்கொண்டுவருகிறேன், நல்லதொரு பதிவு, புத்தகமாக வெளியிட்டால் பலரை சென்றடையும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரதி பகிர்ந்து கொண்டதிற்கு நன்றி.இது எங்கே வெளியிடப்பட்டது? இதை எழுதியவர் இதனை ஒரு நூலாக வெளியிட்டு ஆவணப்படுத்த வேண்டும்.அவரை உங்களுக்குத் தெரிந்தால் அறியத் தரவும், அதற்கான முயற்சிகளைச் செய்யலாம்.

ஈழநேசன் இணையத்தில் இருந்து தான் ஒவ்வொரு கிழமையும் இணைக்கிறேன்...இத் தொடர் என்னும் முடியவில்லை அவர் தொடர்ந்து எழுதிக் கொண்டு இருக்கிறார்...நான் எல்லாவற்றையும் கொண்டு வந்து ஒரே தரத்தில் இங்கு இணைத்தால் வாசிக்க மாட்டார்கள் என்பதற்காகத் தான் கிழமைக்கு ஒருக்கால் இணைக்கிறேன்...எழுதுபவரை தனிப்பட எனக்குத் தெரியாது

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தம்மைப் போராளிகள் என்று சொல்லிக் கொண்டு பல கதைகளை பலர் எழுதிக் கொண்டு இருகிறார்கள் புனைவுகளுடன்.மேலுள்ள எழுத்து ஒரு மானிடத்தை நேசித்த உண்மையான ஒருவரில் இருந்து வருவதாக எனக்குத் தெரிகிறது.இது கட்டாயம் ஆவணப்படுத்தப்பட்டு மொழி பெயர்க்கப் பட வேண்டும்.இதனை யாழ்க் கள அங்கத்துவர்கள் கூட்டாகச் சேர்ந்து ஒரு செயற்திட்டமாக யாழ்க் கள வெளியீடாக வெளியிடலாமே? இதன் மூலம் பலருக்கும் நாம் உண்மைகளை எடுத்துச் செல்லலாம்.

நாரதர் இந்தத் தொடரை சுதந்திரப் பறைவைகள் அமைப்பில் இருந்த ஒருவரே ஆனதி என்கிற புனை பெயரில் ஈழநேசன் இணையத்தில் தொடராக எழுதி வருகிறார். இந்தத் தொடர் புத்தகமாகவும் வரப்போவதாக அறிந்தேன். ஆனால் இதனை எழுதுபவர் அண்மையில் கதைத்தபொழுது தனக்கு கஸ்ரமாக இருப்பதாகவும் தனக்கு உதவும் படியும் கேட்டிருந்தார். அவரிற்கு உதவ விரும்பினால் சொல்லுங்கள் தனிமடலில் விபரம் போட்டு விடுகிறேன். நேரடியாக அவருடன் கதைத்து விட்டு உதவலாம். இது மட்டுமல்ல இன்னொரு பெண்ணும் இறுதி நாட்கள் பற்றிய விபரங்களை தொடராக எழுதிக்கொண்டிருக்கிறார். விரைவில் வெளிவரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாரதர் இந்தத் தொடரை சுதந்திரப் பறைவைகள் அமைப்பில் இருந்த ஒருவரே ஆனதி என்கிற புனை பெயரில் ஈழநேசன் இணையத்தில் தொடராக எழுதி வருகிறார். இந்தத் தொடர் புத்தகமாகவும் வரப்போவதாக அறிந்தேன். ஆனால் இதனை எழுதுபவர் அண்மையில் கதைத்தபொழுது தனக்கு கஸ்ரமாக இருப்பதாகவும் தனக்கு உதவும் படியும் கேட்டிருந்தார். அவரிற்கு உதவ விரும்பினால் சொல்லுங்கள் தனிமடலில் விபரம் போட்டு விடுகிறேன். நேரடியாக அவருடன் கதைத்து விட்டு உதவலாம். இது மட்டுமல்ல இன்னொரு பெண்ணும் இறுதி நாட்கள் பற்றிய விபரங்களை தொடராக எழுதிக்கொண்டிருக்கிறார். விரைவில் வெளிவரும்.

ஆனதி ஒரு பெண்...அவர் கடற்புலியில் இருந்தவர் என நினைக்கிறேன்...இந்த தொடரில் அது பற்றி அவர் சொல்லி இருந்தார்

  • கருத்துக்கள உறவுகள்

ஆனதி ஒரு பெண்...அவர் கடற்புலியில் இருந்தவர் என நினைக்கிறேன்...இந்த தொடரில் அது பற்றி அவர் சொல்லி இருந்தார்

ஆனதி அரசியல்பிரிவில் நீண்டகாலம் தமிழினியின் அணியில் இருந்தவர். புலிகளின்குரல் , சுதந்திரப்பறவைகள், மகளீர் வெளியீடுகளில் இருந்தவர். அதிகம் ஊடகத்தில்தான் பணியாற்றியவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.