Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணான கண்ணே ......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

https://i.pinimg.com/originals/10/ba/0d/10ba0dccbd9a5ccc78ddfb9d930ad8ca.jpg

 

கண்ணான கண்ணே ......

'கண்ணான கண்ணே கண்ணான கண்ணே
என்மீது சாய வா
புண்ணான நெஞ்சை பொன்னான கையால்
பூப்போல நீவ வா....
ஆராரிராரோ.... ஆராரிராரோ....ஆராரிராரிரோ......'

கடந்த சில மாதங்களாக ஆதவன் தன் செல்ல மகள் ஆரதிக்காகப் பாடிப்பாடி ஆரதிக் குட்டிக்கு பிடித்துப்போன இப் பாடலை இன்று ஆரதி தன் அன்புத் தந்தைக்காகப் பாட நேரிடும் என்று கனவில்கூட எண்ணியிருக்க மாட்டாள்.
அவளது கொஞ்சும் குரலில் செல்லச் சிணுங்கலாய் ஆதவனின் காதுகளில் பாடல் புகுந்து அவனைப் பரவசப் படுத்திக்கொண்டிருந்தது.
அப்பரவசத்தினோடே அவனது உடலின் அசைவுகளும் இதயத்தின் துடிப்பும் மெல்ல மெல்ல அடங்க அவனது அன்பு மனைவி அபிராமியும் மகள் ஆரதியும் கையசைத்து விடைகொடுப்பதான பிரேமையுடன் இரு காதோரங்களிலும் இருசொட்டுக்கண்ணீர் வழிந்தோட எங்கோ மேலே மேலே மிதக்கத் தொடங்கினான்.
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

ஆதவன் கொழும்பிலேயே பிறந்து வளர்ந்தவன். பெற்றவர்களுக்கு ஒரே பிள்ளையான அவன் மிகவும் பிரியமாக வளர்ந்தான். அதவன் வளர வளர பெற்றவர்கள் அவனது படிப்பிலும் நல் ஒழுக்கத்திலும் மிகவும் அக்கறையுடன் பேணி வளர்த்தனர். ஆதவனும் பெற்றவர்களுக்கு பெருமை சேர்ப்பவனாய் ஆசிரியர்களும் அயலவர்களும் பாராட்டக்கூடிய வகையில் படிப்பிலும் விளையாட்டிலும் பண்பிலும் சிறந்து விளங்கினான்.
படித்து முடிந்ததும் அவனுக்கும் நண்பர்களைப்போல் வெளிநாட்டுக்கு போக வேண்டுமென ஆசை அரும்பியது. அப்பொழுது அவனது நண்பனின் சகோதரன் வெளிநாட்டு கப்பலுக்கு ஆட்களை அனுப்ப ஆட்களை பதிவு செய்வதாக அறிந்தான். எனவே அவனும் நண்பன் ரவியுடன் கப்பல் ஏறி வெளிநாடொன்றில் இறங்கலாம் என்று திட்டமிட்டான்.
அம்மாவோ' ஆதவன் எங்களுக்கு இருக்கிறது நீ ஒருவன்தான். உனக்கும் வேறு பொறுப்புக்கள் இல்லை. நானும் அப்பாவும் உன்ர திருமணத்தை பார்க்க வேணும்'என்று தன் ஆசையை சொல்லவும் 'என்னம்மா நான் அங்கு போய் இறங்கி வேலை செய்து அதற்குப்பிறகு அதைப்பற்றி யோசிக்கலாம்' எதையாவது சொல்லி இப்போதைக்கு கட்டிக் கழிக்க முற்பட்ட ஆதவனை அம்மா விடுவதாக இல்லை. ' ஆதவன் சொன்னாக் கேளு' அம்மாவுக்கு உள்ளுற பயம். இப்பிடி தனக்குத் தெரிந்த எத்தனை பேரின் பிள்ளைகள் வெளிநாடு போய் பெற்றவர்களுக்குத் தெரியாமல் வேற்றினப் பெண்களை மணந்து கொண்ட கதைகளைக் கேள்விப்பட்டிருக்கிறாள்.
'ஆதவன் நீ கலியாணம் கட்டிப்போட்டு எங்களோட அந்தப் பிள்ளையை விட்டிட்டுப் போனால் அது அங்கு வருமட்டுமாவது உன்ர பிரிவு தெரியாமல் நாங்க இருப்பம்.' அம்மாவும் அப்பாவும் மாறிமாறி பேசவும் ஆதவன் மனதில் அபிராமியின் முகம் வந்து போனது.
சில ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்திலிருந்து குடிபெயர்ந்து கொழும்புக்கு வந்து தமது வீட்டிற்கு அண்மையில் குடியிருந்த அபிராமியின் குடும்பம் இப்பொழுது அவர்களது குடும்ப நண்பர்களாகி இருந்தனர். சின்னஞ்சிறு பெண்ணாக இருந்த அபிராமி இப்பொழுது பருவப் பெண்ணாக அழகும் அமைதியும் நிறைந்தவளாய் திகழ்ந்தாள். ஆதவனின் அம்மா அப்பாவுக்கும் அபிராமியை பிடிக்கும். தமக்கு இப்படி ஒரு பெண்குழந்தை இருந்தால் என்ற ஏக்கமும் மனதில் எழுவதுண்டு. ஆரம்பத்pல் இருந்தே ஆதவனுக்கும் அபிராமியைப் பிடிக்கும். அவள் பள்ளிச் சீருடையில் பாடசாலை போகும் காலம் தொடக்கம் இப்பொழுது அழகிய உடைகளுடன் கணனி வகுப்புக்கு போகும் நேரங்களிலும் அவளது அழகான தோற்றம் அவனது மனதில் பதிந்துபோய் இருந்தது. அவளுடன் நேரடியாகப் பேசிப் பழகா விட்டாலும் பார்த்து புன்னகைப்பான். அவளும் பதிலுக்கு புன்னகைக்கத் தவறுவதில்லை.
அவனுக்கு அபிராமியில் நல்ல அபிப்பிராயம் இருப்பது பெற்றவர்களுக்குத் தெரியும். அவர்கள் மனதிலும் அபிராமியை மருமகளாக்கினால் நல்லது என்ற எண்ணம் உருவாகி இருந்தது.
பெற்றவர்களுடன் நண்பர்கள் உறவினர்களும் உசுப்பேத்த அவனும் சரி என்ற பச்சைக் கொடி காட்டினான். பிறகென்ன அம்மா அப்பாவுக்கு கால் நிலத்தில் நிற்குமா? அபிராமி வீட்டாரும் தமக்கு நன்கு பரிச்சயமான இடம் என்பதாலும் அபிராமிக்கும் பிடித்த இடம் எனவே திருமணத்திற்கு சந்தோசமாக ஒத்துக்கொண்டனர்.
அடுத்த மாதத்திலேயே திருமணம் ஒரு குறையுமின்றி மிக விமரிசையாக நடைபெற்றது. ஆதவனும் அபிராமியும் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்குமாக விருந்துகளும் மகிழ்சியான பொழுதுகளுமாக நாட்கள் விரைவாக ஓடியது.
திருமணமாகி நான்கு மாதங்கள் முடிவதற்குள் ஆதவன் கப்பல் ஏறுவதற்காக பம்பாய் செல்வதற்கான ஒழுங்குகள் நடைபெற்றன. இதுவரை பெற்றவர்களை பிரிந்து வாழாத ஆதவனுக்கு இப்பொழுது பிரியமான தன் மனைவியையும் பிரிவது மனதுக்கு மிகவும் கஸ்ரமாக இருந்தது. பயண ஆயத்தங்களுடன் விமான நிலையத்தில் அனைவரும் கூடி நிற்க பெற்றவர்களுடன் கண்கலங்கி நின்ற அபிராமியை அணைத்து சரி கவலைப்படாதேயும் நான் நல்ல இடத்தில் இறங்கியபின் விரைவில் உம்மை கூப்பிட முயற்சி செய்யிறன் என்று ஆறுதல் கூறி அனைவருக்கும் கை அசைத்து விடை கொடுத்தான்.
ஆதவனின் கப்பல் பம்மாயிலிருந்து புறப்பட்டு இரண்டு வாரங்கள் சென்ற நிலையில் தினமும் போனில் பேசும் அபிராமியின் அழைப்பு வராமலிருக்கவே என்னமோ ஏதோ என்று பெற்றவர்களுக்கு போன் எடுத்தான். அம்மாதான் போன் எடுத்தார். 'ஆதவன் இன்றுதான் அபிராமி டொக்ரரிடம் போய் வந்தார் ஒரு கிழமையாக ஆரதிக்கு ஒரே தலை சுற்று .இன்று டொக்ரர் நல்ல செய்தி சொல்லி இருக்கிறேர். ஏங்களுக்கு பேரக் குழந்தை கிடைக்க இருக்கு' என்று மகிழ்சியில் மூச்சு விடாமல் பேசி முடித்தார்.
ஆதவனுக்கு சந்தோசத்தில் வானில் பறப்பது போல இருந்தது. இதுவரை குழந்தையாக தன்னை எண்ணி பெற்றவர்களின் செல்ல மகனாக இருந்த எனக்கா குழந்தை பிறக்க இருக்கு. மகிழ்ச்சியுடன் உடனே அபிராமியை போனில் அழைத்து வாழ்த்து சொல்லவும் அவளும் சந்தோசமும் வெட்கமும் கலந்த குரலில் தான் தாயாகப் போகும் விடயத்தை கூறினாள். இந்த சமயத்தில் அவளுக்கு அருகிலிருந்து கவனிக்க முடியவில்லையே என்று ஆதங்கப் பட்டாலும் மனதை தேற்றிக் கொண்டு நண்பர்களிடம் சொல்லி மகிழ்ந்தான்.
ஆரம்ப நாட்களில் கப்பல் பிரயாணமும் வேலையும் மிகுந்த சிரமமாக இருந்தாலும் சிலநாட்கள் பழகியபின் பாரிய அலைகளின் நடுவில் கப்பலில் வேலை செய்வதும் அலைகளின் ஆட்டத்திலும் நடக்கவும் உண்ணவும் உறங்கவும் கூட பழகி விட்டது.
கப்பல் பல துறைமுகங்களைத் தாண்டி அமெரிக்கா புறப்பட்டது. அவனும் ரவியுமாக ரகசியமாக திட்டமிட்டு நாட்களை எண்ணிக்கொண்டிருந்தனர். ஒரு மாதத்தின்பின் கப்பல் அமெரிக்காவின் பொஸ்ரன் துறைமுகத்தை வந்தடைந்தது. வெளியே போவதுபோல் வெளிக்கிட்டு இருவருமாக அங்கிருந்து புறப்பட்டு நண்பனுக்கு தெரிந்த ஒருவரின் உதவியுடன் சில நாட்களின்பின் அகதி அந்தஸ்திற்காக விண்ணப்பித்தனர்.
காலம் உருண்டோடியது. அமெரிக்காவில் அகதியாக அவன் இருக்க ஆரதியோ இலங்கையில் அவனது செல்ல மகளாக பிறந்தாள். குழந்தையை நேரில் பார்க்கவோ தூக்கி கொஞ்சி மகிழவோ முடியாவிட்டாலும் ஸ்கைப்பில் தினமும் பார்த்து மகிழ்ந்தான். அவனது அகதி விண்ணப்பமும் ஒரு வருடம் இரண்டு வருடம் என்று இழுபட்டு ஆறு வருடங்கள் ஓடி மறைந்து விட்டன. குழந்தையின் மழலை மொழி காதில் விழும் நேரமெல்லாம் அவன் உள்ளுக்குள் நொந்து போனான். ஆரதியும் ஸ்கைப்பில் தோன்றி ஆடலும் பாடலுமாக அவனை மகிழ்விப்பாள். அபிராமியும் எத்தனையோ எதிர்பார்ப்புக்களுடன் காத்திருந்தாள். ஒருவாறு ஆதவனுக்கு வதிவிட உரிமை கிடைத்து விட்டது. ஸ்பொன்சர் வேலைகளும் ஆரம்பித்து விட்டன.
ஆறு வருடங்கள் காத்திருந்து களைத்த ஆதவனுக்கோ இப்போழுதெல்லாம் தூக்கமே வருவதில்லை. எந்த நேரமும் தன் அன்பு மனைவியையும் அருமைக் குழந்தையையும் பாசமுள்ள பெற்றவர்களையும் நினைவில் சுமந்தபடி நாட்களைக் கழித்தான்.
இடைக்கிடை தலைவலி வேறு பிரச்சினை கொடுத்தது. ஆரம்ப நாட்களில் தலைவலிதானே என்று உதாசீனமாக இருந்தவன் தொடர்ந்தும் தலைவலி மோசமாக இருக்கவே வைத்தியரை நாடினான். ஆரம்பத்pல் வைத்தியரும் சாதாரணமான தலைவலிஎன்றுதான் அதற்கான மருந்துகளை கொடுத்தார்.
ஆனால் தொடர்ந்தும் தலைவலி மட்டுமல்ல அடிக்கடி மயக்கம் பசியின்னை உடல் தளர்ச்சி என்ற உபாதைகள் அதிகரித்தபடி இருந்தன. அதன்பின் எக்ஸ்ரே ஸகேன் இரத்தபரிசோதனை என்று சிகிச்சைகள் தொடர்ந்தன. ஆதவன் தன் சுகவீனத்தை வீட்டிற்கு தெரிவித்து அவர்களை கவலைப்பட வைக்கக்கூடாது என நினைத்து சொல்லாமலே மறைத்து வைத்தான்.

இந்த ஆறு மாதங்களாக ஆதவனுக்கு பலவிதமான சிகிச்சைகள் நடைபெற்றன. முடிவில் மூளையில் கட்டி இருப்பதாகவும் அதை அகற்றுவது மிகவும் சிரமம் என்றும் அதனால் மருந்துகள் மூலம் அவனது வலிகளைக் குறைப்பதுதான் இப்போதைக்கு செய்யக்கூடியதென்றும் வைத்தியர்கள் கைவிரித்தனர்.
அவன் உள்ளுக்குள் உடைந்து போனான். அருகிலிருந்து ஆறுதல் சொல்லக்கூட யாரமற்ற தனிமையில் மனம் புழுங்கினான். குழந்தையின் மழலைமொழி காதில் விழும் நேரமெல்லாம்
இதற்கிடையில் உலகெங்கும் கொரோனா வைரசின் தாக்கத்தினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பல நாடுகளில் ஏற்பட்ட மரணங்களும் தொற்று அதிகரிப்பும் காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டன. போக்கு வரத்துக்கள் ஸ்தம்பிதமாயின. ஆதனால் அமெரிக்க தூதரகமும் இழுத்து மூடப்பட்டுவிட்டது.
இப்போது அவனது நோய் முற்றிய நிலையில் ஆதவன் மிகவும் வேதனைப்பட்டான். நாளடைவில் அவனால் எதுவுமே செய்ய முடியவில்லை. உதவிக்குக்கூட யாருமில்லை. கனடாவிலிருந்து அவனது நெருங்கிய உறவான சிறியதாயார்கூட எல்லைகள் மூடப்படுவதற்கு முன் அங்குசென்று இருண்டு நாட்களில் நாடு திரும்பவேண்டியதாய் விட்டது. அமெரிக்காவிலுள்ள ஆதவனின் நண்பன் ரவியும் தூரத்திர் வசித்ததனால் அங்கிருந்து  வந்து சில நாட்கள் தங்கி இருந்து கவனித்தான். கொரோனா பிரச்சனையால் அவன்கூட தொடர்ந்து தங்கி இருந்து கவனிக்க முடியாத இக்கட்டான நிலை.
ஆரம்பத்தில் ஆதவனின் நோய் பற்றி சீரியசாக எடுக்காத பெற்றவர்களும் அபிராமியும்கூட நோயின் தாக்கம் அதிகரித்திருப்பதை அறிந்ததும் பதறிப் போயினர். தலைவலிதானே அபிராமி அங்கு போனதும் குழந்தையையும் அவளையும் பார்க்கும் சந்தோசத்தில் எல்லாம் சரியாகிவிடும் என்றுதான் இதுவரை நம்பிக்கொண்டிருந்தனர்.
ஆபிராமிக்கு நோயின் தீவிரம் தெரியவந்ததும் அவளது மனக்கோட்டைகள் யாவும் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. யாரை நோவது? கடவுளையா? தன் விதியையா? யாரை நோவது?
விசா கிடைத்ததும் வந்து விடுவார்கள் என்று காத்து காத்து இந்த ஏழு வருடமாக பெற்ற மகளைக்கூட பார்க்கமுடியாத தன் துயரமான வாழ்க்கையை நினைத்து நினைத்து மனம் புழுங்கினான்.
யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? மணமாகி நாலே மாதங்கள் ஆதவனுடன் வாழ்ந்து இன்று ஏழுவயதை எட்டும் ஆரதியை மட்டுமே துணையாக வாழும் அபிராமிக்கு உலகமே இருண்டு விட்டது.
கண்காணாத தேசத்தில் நோயுடன் போராடும் கணவனைப் பார்க்கவோ அவனது துன்பமான நேரத்தில் அருகிருந்து பராமரிக்கவோகூட தனக்கு கொடுத்து வைக்காத கொடுமையான நிலமையை நினைத்து நினைத்து அழுதாள்.
ரவிதான் திரும்பவும் வந்து அவனுக்கு உதவியாக அவனுடன் தங்கி நின்றான்.
ஆதவனின் நிலை மோசமாக இருந்ததால் இப்பொழுதெல்லாம் அவனால் எழுந்து நடமாடக்கூட முடியாமல் படுக்கையிலேயே நாட்கள் கழிந்தன. கீமோ சிகிச்சையும் பயனளிக்கவில்லை. வைத்தியசாலையிலேயே அவனது நாட்கள் கழி;ந்தன. பெற்றவர்களும் தன் பிரிய மனைவியும் தன் இந்த நிலையைப் பார்க்கக் கூடாதென்ற எண்ணத்தில் ஸ்கைப்பில் கதைப்பதையும் தவிர்த்தான். நண்பனின் கட்டாயத்தால் போனில் சில வார்த்தைகள் பேசுவதோடு நிறுத்திக்கொள்வான்.
இந்த ஏழு ஆண்டுகள் இல்லறவாழ்வில் அபிராமி என்னத்தை அனுபவித்தாள். சில நாள் இன்பத்தை மட்டுமே கொடுக்க முடிந்த தன்னால் காலம் முழுவதும் கண்ணீரையும் வேதனையையும் கொடுக்கவா திருமணம் செய்தேன்?
தன் அருமை மகளை தொட்டுத் தூக்கி அவளது மழலைப் பேச்சைக் கேட்கவும் முடியாத அபாக்கியசாலியாகி விட்டேனே என்று மனதுக்குள் மறுகினான். அதனால் அவனுக்கு மனஅழுத்தமும் சோர்வும் வேதனையுமே மிஞ்சின.
இந்த ஒரு மாதமும் வேதனை மிகுந்த நாட்கள். கொரோனா தாண்டவம் ஒருபுறம். கொடிய நோயின் வேதனை தனது குடும்பத்தினரின் பிரிவு என்று அடுத்தடுத்து வேதனையே மிஞ்சின. வைத்தியர்களும் அவனது உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் இன்னும் ஒருமாதமே தம்மால் காலக்கொடு கொடுக்க முடியுமென்றும் கூறினர். ஆதவனால் நன்றாகப் பேசவும் முடியவில்லை. மூச்சு விடுவது உண்பது மருந்துகள் என்ற எல்லாமே குழாய்களின் மூலம்தான். இறுதி நாட்கள் அண்மித்து விட்டன. அஸ்தமனத்தின் ஒளிக்கீற்றுகள் அவனது நினைவுகளில் வந்து மாஜாயாலம் காட்டியது,
அவனது நண்பனும் அவனைப் பார்த்துவிட்டுப் போகத்தான் வந்திருந்தான். ஆனாலும் அவனது நிலையை பார்த்தபின் அங்கேயே தங்கவேண்டி வந்துவிட்டது. ஆதவன் கடைசியாக மகளின் பாடலைக் கேட்கவேண்டுமென்ற தன் விருப்பத்தைக் கூறி இருந்தான். அத்துடன் மகளுக்காக தான் இதுவரை செய்து வைத்த நகைகள் பணம் எல்லாவற்றையும் நண்பனிடம் கொடுத்து அபிராமியிடம் சேர்க்கும்படி கூறினான். அபிராமியும் அவனது பெற்றவர்களும் நண்பனிடம் தொடர்பு கொண்டு தாங்கள் எப்படியாவது ஆதவனை ஸ்கைப்பில் பார்க்க வேண்டுமென அழுகையும் விம்மலுமாக இறஞ்சிக் கேட்டனர். ஆதவனுக்கோ நினைவு மறையத் தொடங்கி இருந்தது. ரவியும் ;அபிராமியிடம் ஆதவன் ஆரதியின் பாடலைக் கேட்க விரும்பினான் என்று கூறி ஸ்கைப்பில் தொடர்பை ஏற்படுத்தினான். அபிராமி மகளை அழைத்து அப்பாவுக்காக அவனுக்கு விருப்பமான பாடலை பாடும்படி கேட்கிறாள். ஆரதியும் அப்பா கேட்கிறார் என்றதும் தமது மழலை கொஞ்சும் குரலால் பாடத் தொடங்கினாள். அபிராமியின் விம்மலும் பெற்றவர்களின் அழுகையும் இசையாக ஆரதி பாடிக்கொண்டிருந்தாள். இனி ஒருபோதும் அப்பாவை பார்க்கப் போவதில்லை என்றோ அப்பா தன்னை ஒருபோதுமே அணைத்து மகிழப்போவதில்லை என்றோ புரியாதவளாய் ஆரதி அப்பாவுக்காக ஆசைதீரப் பாடிக்கொண்டிருந்தாள்.


(யாவும் கற்பனையல்ல)

 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kavallur Kanmani said:

ஆரம்ப நாட்களில் கப்பல் பிரயாணமும் வேலையும் மிகுந்த சிரமமாக இருந்தாலும் சிலநாட்கள் பழகியபின் பாரிய அலைகளின் நடுவில் கப்பலில் வேலை செய்வதும் அலைகளின் ஆட்டத்திலும் நடக்கவும் உண்ணவும் உறங்கவும் கூட பழகி விட்டது.
கப்பல் பல துறைமுகங்களைத் தாண்டி அமெரிக்கா புறப்பட்டது. அவனும் ரவியுமாக ரகசியமாக திட்டமிட்டு நாட்களை எண்ணிக்கொண்டிருந்தனர். ஒரு மாதத்தின்பின் கப்பல் அமெரிக்காவின் பொஸ்ரன் துறைமுகத்தை வந்தடைந்தது.

எனது கப்பல் வாழ்வை அசை போட்டு பார்க்கிறேன்.
நல்ல கதை அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 வாசிக்கும் போதே கண்கள் கலங்குகின்றன. இப்படி ஒரு நிலை எந்தக் குழந்தைக்கும்
 வரக்கூடாது . . உண்மை கலந்த கதைபோல உள்ளது.  இன்று எவர் வாழ்வும் நிலையில்லை . யாருக்கு என்ன வகையில் விதி விளையாடும் எனவும் தெரியாது பிரிவு கொடுமையானது . . .

  • கருத்துக்கள உறவுகள்

இதில் யாருக்குப் பாவம் பார்ப்பது என்றே தெரியவில்லை. அருமை அக்கா.

இந்த கதையை வாசித்து முடிக்கும்போது இது ஒரு கற்பனையாக இருக்க வேண்டும் என்றுதான் மனம் ஏங்கியது. யாவும் கற்பனையல்ல என்ற இறுதிவரி அப்படியே நொருங்க வைத்துவிட்டது. இப்படி ஒரு நிலை யாருக்கும் வரவே கூடாது ...கடவுளே இது ஒரு கதையாக மட்டுமே இருந்திட வேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பிரான்ஸ் வந்து மகனுக்கு நான்கு வயதில்தான்  பார்த்தேன்..... மிகவும் மனக்கஷ்டமான காலங்கள் அவை.......பகிர்வுக்கு நன்றி சகோதரி......!  🤔 

  • கருத்துக்கள உறவுகள்

வலிகளும் சோகங்களும் வாழ்கையில் பிரிக்க முடியாதவை. உணரவைத்துவிட்டீங்கள் அக்கா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதையாக படித்துவிட்டு இறுதியில் யாவும் கற்பனையல்ல என்பதையும் வாசித்த போது நெஞ்சை ஒருமுறை வருடியது.

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ஈழப்பிரியன் said:

எனது கப்பல் வாழ்வை அசை போட்டு பார்க்கிறேன்.
நல்ல கதை அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

கப்பலில் வேலை செய்தீர்களா அண்ணா ? நெடுந்தூர கடல் பயணங்கள் நிறய அனுபவங்களை தந்திருக்குமே ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது பொய்யாக இருக்கவேண்டுமென மனம் விரும்பினாலும் சில மாதங்களுக்குமுன் உண்மையாக நடந்த நிகழ்வு.  கொரோனா காலமானதால் நெருங்கிய உறவுகள் கனடாவில் இருந்தும் இறுதி நிகழ்வுகளில்கூட கலந்து கொள்ள முடியாமல் மிகவும் வேதனைப்பட்டனர். படித்து கருத்திட்ட ஈழப்பிரியன் நிலாமதி சுமே நிகி சுவி முதல்வன் குமாரசாமி நில்மினி அனைவருக்கும் நன்றிகள். பச்சைப் புள்ளியிட்ட நிழலி எப்போதும் தமிழன் மற்றும் அனைவருக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Kavallur Kanmani said:

இது பொய்யாக இருக்கவேண்டுமென மனம் விரும்பினாலும் சில மாதங்களுக்குமுன் உண்மையாக நடந்த நிகழ்வு.  கொரோனா காலமானதால் நெருங்கிய உறவுகள் கனடாவில் இருந்தும் இறுதி நிகழ்வுகளில்கூட கலந்து கொள்ள முடியாமல் மிகவும் வேதனைப்பட்டனர். படித்து கருத்திட்ட ஈழப்பிரியன் நிலாமதி சுமே நிகி சுவி முதல்வன் குமாரசாமி நில்மினி அனைவருக்கும் நன்றிகள். பச்சைப் புள்ளியிட்ட நிழலி எப்போதும் தமிழன் மற்றும் அனைவருக்கும் நன்றிகள்

மிகவும் மனதை நெருடிய கதை, இப்படியொரு நிலை யாருக்கும் வரக்கூடாது.

கண் முன்னே காட்சிகள் விரிக்கின்றது துயரத்துடன், நானும் அனுபவித்துள்ளேன் பிரிவையும் அதன் தாக்கங்களையும்.

ஒவ்வொரு புலம் பெயர் தமிழருக்கு பின்னால் ஒரு சோக கதையிருக்கும், வாழ்நாளில் மறக்க முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

மனதை வருத்தினாலும் சில உண்மைகளை கூறிவிட்டு செல்லும் கதை.. இங்கே பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

சில கதைகள், சித்திரங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் என்பன சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏதோவொரு வழியில் வழங்கும் சாதனங்கள் என்பதால் நான், எனது தனிப்பட்ட கருத்தை கூறவிரும்புகிறேன். யாருடைய மனதையும் காயப்படுத்தும் எண்ணம் இல்லை..

ஆதவனுடைய பெற்றோர் போன்றவர்களை அடிக்கடி எங்கள் வாழ்க்கையில் பார்ப்போம். அவர்கள் ஒருதரம் சிந்தித்து இருந்தால் இன்று அபிராமியின் வாழ்க்கை இப்படி ஆகியிருக்காது. திருமணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. பிள்ளையில் நம்பிக்கை வைக்காது வேறு யாரிடம் நம்பிக்கை வைப்பீர்கள்?. அவர்கள் தங்களது நிலையை மட்டுமே யோசித்திருக்கிறார்கள். ஆதவன் ஒரு நிலைக்கு வந்து, திருமணத்தை செய்து கொடுத்திருந்தால் ஆரதிக்கு இந்த நிலை வந்திருக்காது, தனது தந்தையின் இறுதிகணங்களில் கூடவே இருந்திருப்பாள்.

ஆதவனைப்போன்றவர்கள்.. தான் ஒரு நிலைக்கு வரும்வரை பொறுத்திருந்தால் ஆரதிக்கு இந்த நிலை வந்திருக்காது. வாழ்க்கை என்பது, 100% நம்பிக்கையில் மட்டுமல்ல நாங்கள் எங்களை சுற்றி நடைபெறும் விஷயங்களிலும் தங்கியுள்ளது.. ஆதவன் ஒரு தரம் உணர்வுகளில் மயங்காமல் அறிவுபூர்வமாக, யதார்த்தமாக சிந்தித்து இருந்தால், தனது வாழ்வின் கடைசி நொடிகளில் அமைதியுடன் இறந்திருப்பார்.

அபிராமியை போன்ற பெண்கள் எங்களிடையே இருக்கிறார்கள ..கணவன் தன்னைவிட்டு இன்னொரு தேசத்திற்கு போவது, எதிர்காலம் பற்றிய கேள்விக்குறி இருக்கும் போது, குழந்தையை பெறுவதைப்பற்றி யோசித்திருக்கலாம் என்ற ஆதங்கம் மனதில் எழலாமல் இல்லை.. அபிராமி தனது எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்வார்?.. 

எல்லாவிடயங்களையும் விதி என்ற ஒன்றின் மேல் போடமுடியாது...எங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் இருந்தும் கற்றுக்கொள்ளவேண்டும் என பெரும்பலான நேரங்களில் நினைப்பதுண்டு. உணர்ச்சிகளை ஒதுக்கி யதார்த்தமாக சிந்தித்தால் அபிராமி போன்ற பெண்களின் நிலை தெரியவரும்.. 

யாருடைய மனதையும் நோகடிக்க வேண்டும் என கருத்தை கூறவில்லை ஆனால் அபிராமி போன்றவர்களை, துணையுடன் சேர்ந்து வாழமுடியாமல், எப்பொழுது குடும்பமாக வாழலாம் என்ற நிலையில் வெளியே சிரித்து உள்ளே அழுதபடி வாழும் அவர்களை சந்தித்து இருக்கிறேன்.. பார்த்திருக்கிறேன்.. 

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nilmini said:

கப்பலில் வேலை செய்தீர்களா அண்ணா ? நெடுந்தூர கடல் பயணங்கள் நிறய அனுபவங்களை தந்திருக்குமே ?

வணக்கம் நில்மினி.
கப்பல் வாழ்வு என் வாழ்நாளில் கிடைத்த ஒரு வரம்.
அதே தான் அமெரிக்கா வரவும் உதவியாக இருந்தது

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி அக்கா இந்த கதையை பதிந்து விட்டு போகும் போது, படித்து விட்டு ஒன்றுமே எழுத முடியாது போய் விட்டேன்..

20 hours ago, nige said:

இந்த கதையை வாசித்து முடிக்கும்போது இது ஒரு கற்பனையாக இருக்க வேண்டும் என்றுதான் மனம் ஏங்கியது. யாவும் கற்பனையல்ல என்ற இறுதிவரி அப்படியே நொருங்க வைத்துவிட்டது. இப்படி ஒரு நிலை யாருக்கும் வரவே கூடாது ...கடவுளே இது ஒரு கதையாக மட்டுமே இருந்திட வேண்டும்..

 

19 hours ago, குமாரசாமி said:

கதையாக படித்துவிட்டு இறுதியில் யாவும் கற்பனையல்ல என்பதையும் வாசித்த போது நெஞ்சை ஒருமுறை வருடியது.

எனக்கும் இதே உணர்வுதான்...வாசித்துவிட்டு ஒன்றுமே எழுத முடியாமல் இருந்தது. எனக்கும் மகள் இருப்பதும் அவளுக்கும் இப் பாடல் விருப்பமான பாடல் என்பதால் ஆரதியின் உணர்வுகளை நெருக்கமாக உணர முடிந்தது....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படித்து கருத்திட்ட உடையார் பிரபா யாயினி நிழலி அனைவருக்கும் நன்றிகள். வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் என்று ஒரு கவிஞன் பாடியுள்ளான். என்னதான் நாம் திட்டமிட்டாலும் யார்யாருக்கு  என்ன நடக்க வேண்டுமென இருக்கோ அதை மாற்றுவது எளிதல்ல. மரணத்தை யாரால் வெல்ல முடியும்.  விரிவாகக் கருத்திட்ட பிரபாவுக்கு நன்றிகள் .

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் நில்மினி.
கப்பல் வாழ்வு என் வாழ்நாளில் கிடைத்த ஒரு வரம்.
அதே தான் அமெரிக்கா வரவும் உதவியாக இருந்தது

இப்படியான நல்ல மகிழ்ச்சி தரக்கூடிய அனுபவங்கள்தான் உண்மையில் வாழ்க்கை. அந்த வகையில் நீங்கள் அதிஷ்டசாலி அண்ணா. 

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கும் போதே கண்கள் கலங்குகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த ஒரு தம்பிக்கும் பிரேயின் டியூமர் இருந்தது ...அவர் புலம் பேர் நாடு ஒன்றில் தனியாக இருந்தார் ...பெற்றோர் ஊரில்...அவருக்கு கேள் பிரண்ட் இருந்தவ.தமிழ்ப் பெண் ...ஒரு அறிகுறியும் இல்லாமல் திடிரென்று மயங்கி விழுந்தவர் ...ஆஸ்பத்திக்கு கொண்டு போனவுடன் கண்டு பிடித்து விட்டார்கள் ...தலையிடி இருந்தும் கணக் எடுக்காமல் விட்டாரோ தெரியாது ...ஆள் ஒரு மாதிரி தப்பி விட்டார் ...கண காலம் நினைவு தப்பி இருந்தார் ...கேள் பிரண்ட் விட்டுட்டு போய்ட்டா ...அவாவிலும் பிழையில்லை ...இப்ப அவர் திருமணம் முடித்து ஒரு பிள்ளை இருக்குது ...மனைவியை, சொந்தங்கள் ஏமாத்தி கட்டி கொடுத்து விட்டினம்...சுமாராக அவர்களது வாழ்க்கை போகிறது 
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படித்து  கருத்திட்ட சுவைப்பிரியன் ரதிக்கும் விருப்பிட்ட அபராஜிதனுக்கும் நன்றிகள். 
நில்மினி கப்பலில் வேலை செய்வது மகிழ்ச்சியான அனுபவம் என்று எழுதியுள்ளீர்கள். நான் நினைக்கிறேன் அது குடும்பத்தை பிள்ளைகளை பெற்றவர்களை விட்டுவிட்டு தனிமையான மிகக் கொடுமையான அனுபவமென்று. மாதக் கணக்காக கரையே தெரியாத கடலில் சுழற்காற்றில் மிகக் கடுமையான வேலை. திரும்ப ஊருக்கு வந்தால் கப்பல்காரன் என்ற மவுசு. ஈழப்பிரியனுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். கருத்துக்கு நன்றிகள். 

  • கருத்துக்கள உறவுகள்

கப்பல் மூலம்  அமெரிக்காவுக்கு வந்தமையைக்  குறிப்பிட்டுள்ளார்  நில்மினி என நினைக்கிறேன் . ஆனால் நீங்கள் குறிப்பிட்ட் படி   குடும்பத்தை பிள்ளைகளை பெற்றவர்களை விட்டுவிட்டு தனிமையான மிகக் கொடுமையான அனுபவமென்று. மாதக் கணக்காக கரையே தெரியாத கடலில் சுழற்காற்றில் மிகக் கடுமையான வேலை.. நானும் உணர்ந்தது  உண்டு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுதாவது செல்போன் ஸ்கைப் லப்ரப் என்று எல்லா வசதிகளும் உண்டு. அன்றைய நாட்களில் மாதக்கணக்காய் கடிதம் ஒன்றுதான் தொலைத்தொடர்புச் சாதனம். மிகக் கொடுமையான நாட்கள். கருத்துக்கு நன்றிகள் நிலாமதி.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி எங்கள் வாழ்க்கையில் நிறையப் பேரைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. என்ன செய்வது ஒரு பக்கம் போரில் ஏற்பட்ட இழப்புகள், இன்னொரு பக்கம் கொடிய நோய்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.