Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு அவுஸ்திரேலிய பூர்வீகக் குடிமகளின் கதை...!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

location-ayers-rock.jpg

 

பகுதி - 1

 

அன்றைய காலைப் பொழுதின் விடியலிலேயே , பாலைவனமொன்றின் சகல குணாதிசயங்களும் கலந்திருந்தன. கண்களைத் திறந்து பார்க்கக் கூட இயலாத அளவுக்கு, அதன் பிரகாசம் இருந்தது. நீண்ட ஒரு கருநிற மலைப்பாம்பொன்றின் வளைவுகளுடன், அந்த நெடுஞ்சாலை நீண்டு கிடந்தது. முதல் நாள் இரவின் ‘கடுங்குளிர்', மெல்லிய நீர்ப்படலமொன்றை, அந்த வீதியின் மீது தடவியிருந்தது. வரப்போகும் ‘வெயிலின்' கடுமையுணர்ந்த கங்காருக்கள், வீதியின் இரு பக்கங்களிலும் பரந்திருந்த, மஞ்சள் நிறமான கோரைப்புற்களின் மறைவுகளிலிருந்து, வீதியில் படிந்திருந்த நீரைத் தங்கள் நாக்குகளினால், மெல்ல மெல்ல நக்கி எடுப்பதற்காக வந்து கொண்டிருந்தன. அந்தச் சந்தர்ப்பத்தை விட்டால், அன்றைய பொழுது தாகத்துடனேயே கழிந்து விடக்கூடும். முந்திய இரவுகளில், அந்த நெடுஞ்சாலையைக் கடக்கும் போது, வாகனங்களினால் கொல்லப்பட்டு வீதியோரங்களில் கிடந்த தங்கள் உறவுகளுக்காக, ஒரு நிமிட அஞ்சலி செலுத்தவும் நேரமில்லாத ‘அவசரம்' அவற்றுக்கு இருந்தது! அந்த இறந்து போன, கங்காருகளின் ‘கருப்பைப் பைகளில்’ சில ‘குட்டிகள்' இன்னும் குற்றுயிருடன் இருக்கவும் கூடும்!   

 

அந்தப் பாதையில் தான் ‘மாயா' (Maya) தனது காரில் பயணித்துக் கொண்டிருந்தாள். ‘கார்' என்ற வகையினுள் அதனை ‘அடக்கி விட' முடியாது. இப்பகுதியில் 'கார்' என்று அழைக்கப்படுவது நான்கு சில்லுகளும், ஆகக்குறைந்தது இரண்டு கதவுகளையுமாவது கொண்ட, வீதியில் ஓடக்கூடிய ஒரு 'வாகனம்' என்பது தான் அதிகமாகப் பொருந்தும் .பொதுவாக ஒரு தேசத்தின் வீதிக் கட்டுப்பாடுகளையும், சட்டங்களையும் நடை முறைப்படுத்துபவர்கள் போக விரும்பாத பகுதி அது. வெளியே தெரியும் ஒய்யாரக் கொண்டைகளையும், தாழம்பூ வாசனைகளையும் தாண்டி, உள்ளே இருக்கின்ற ஈர்களையும், பேன்களையும் பற்றி எவரும் கவைலப்படுவதில்லை. அதனை ஆங்கிலத்தில் ‘காம்ப்' என்னும் நவீன வார்த்தைகளுக்குள் அடக்கி விட்டு, வாரா வாரம் அவர்களுக்கான ‘ கொடுப்பனவைக்' கொடுத்துவிடுவதுடன், தனது ‘கடமை' முடிந்து விடுவதாகத் தான் சராசரி, அவுஸ்திரேலியக் குடிமகன் நினைத்துக் கொள்வதுண்டு. தற்செயலாகத் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக, அந்தப் பகுதிக்குள் போக நேரிட்டால், கறள் கட்டிய தகரக்கூரைகளும், உடைந்து போன கண்ணாடிகளைக் கொண்ட ‘ஜன்னல்களும்', வீதியெங்கும் சிதறிக்கிடக்கும் உடைந்து போன, பியர்ப் போத்தல்களும், மூக்குச் சிந்திய படியே விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்களும், கட்டாக்காலி நாய்களுடன் கட்டிப்பிடித்தபடி படுத்திருக்கும் முதியவர்களும் அவர்களது கண்களையும், மனச்சாட்சியையும் உறுத்துவதுண்டு. எனினும், எப்படி முயன்றாலும் இவர்களை மாற்றமுடியாது என்று தங்கள் மனச்சாட்சிகளை, அவர்களே சாந்தப்படுத்தி விடுவதுண்டு!

 

மாயா தனது காரைப் பிரதான வீதியிலிருந்து, ‘உலுறு' நோக்கிச் செல்லும், சிறு செம்மண் பாதையொன்றில் செலுத்திக்கொண்டிருந்தாள். வெயில் வருவதற்கு முன்பு, அவள் ‘உலுறுவை' அடைந்து விடவேண்டும் என்பது தான் அவளது திட்டமாக இருந்தது. மத்திய வயதில் பயணித்துக் கொண்டிருக்கும் மாயா, இப்போதெல்லாம் ‘உலுறுவுக்கு' அடிக்கடி வர விரும்புகின்றாள். ‘உலுறு' என்பது வேறு ஒன்றுமல்ல. அவுஸ்திரேலியாவின் நடுவே பரந்து கிடக்கும் சிவந்த மண்ணின் பரப்பில், விரிந்து கிடக்கும் ஒரு பாரிய ‘பாறைத்தொடர்' தான்.

 

உலகத்திலேயே மிகவும் பெரிய ‘தனிக்கல்' இதுவென்று சொல்லப்படுகின்றது. வெளியே பல தலைகளைக் கொண்ட ‘ஒரு அரக்கன்' படுத்திருப்பது போலத் தோன்றினாலும், நிலத்தின் கீழேயே, இதன் அரைவாசிக்கும் மேற்பட்ட பகுதி, தனிக்கல்லாகப் புதைந்து போய்க் கிடக்கின்றது என்று கூறுகிறார்கள். இதற்கு ‘வயிற் பெல்லாஸ்' (White Fellows) வைத்த பெயர் ‘ அயர்ஸ் றொக்' (Ayers Rock) எனினும், மாயாவுக்கு அந்தப் பெயரால், அதை அழைக்க ஏனோ விருப்பமில்லை. அவளைப் பொறுத்தவரையில், அந்த ‘கற்குன்றைப்' பற்றி ஏராளமான கதைகள் இருக்கின்றன. அவளது மூதாதைகளின் ‘கனவுக் காலங்களில்' (Dream Times), இதைப்பற்றிப் பலவிதமான ‘கர்ண பரம்பரைக் கதைகள்' உள்ளன. அநேகமானவை, மலைப்பாம்புக்கும், நச்சுப்பாம்புக்கும் நடந்த போராட்டத்தை நடுநிலைப் படுத்த, மற்றையவை அரணை, ஓணான், தீக்கோழி, கங்காரு, முதலை போன்றவற்றை முன்னிலைப்படுத்தி நிற்கின்றன.  எது எப்படி இருந்தாலும், இந்த கற் குன்றுக்கு' அண்மையில் வரும்போது, தனது மூதாதையரின் ‘ஆவிகள்' வந்து தன்னை, அரவணைப்பதாகவும், ஆறுதல் சொல்வதாகவும் அவள் உணர்கிறாள்.

 

அண்மையில் நடந்த ஒரு சம்பவமொன்று, அவளை இந்த இடத்திற்கு, இப்போதெல்லாம் அடிக்கடி அழைத்து வருகின்றது !

 

அவளது தாயாரான 'பின்டிக்கும்' (Bindi), யாரோ ஒரு ‘வயிற் பெல்லா' வுக்குமிடையில் ஏதோ ஒரு வகையில், ஒரு விதமான ‘தொடர்பு' ஏற்பட்டு விட்டது. அதற்குக் காதல் என்று பெயர் வைத்து அந்தப் புனிதமான வார்த்தையை மாசு படுத்த மாயா விரும்பவில்லை. பின்னர் அந்த ‘வயிற் பெல்லா' தனது பயணத்தைத் தொடர்ந்து சென்று விட,  அவர்களின் தொடர்பின் விளைவாக மாயாவின் அம்மா ‘பின்டி' (Bindi)  கர்ப்பமானாள். நல்ல வேளையாக, அவளுக்குப் பிறந்த குழந்தை, எந்த விதமான ‘வயிற் பெல்லா' வின் வெளிப்படையாகத் தெரியக்கூடிய எந்த அடையாளங்களும், குணாதிசயங்களும் கொண்டு பிறக்கவில்லை. அதனால் ‘மாயாவை' அவளது ‘இனத்தவர்' ஒதுக்கியோ, விலக்கியோ வைக்கவில்லை. அதனால் அவளும், இன்னுமொரு 'பூர்வீகக் குடி மகளாக' அவளது தாய் வழிப் பாட்டியால், அந்தக் 'காம்புக்குள்ளேயே' வளர்க்க்கப்பட்டாள். ஒருவேளை மாயாவை, அவளது அம்மம்மா ஒருவருக்கும் தெரியாமல் மறைத்தும் வைத்திருந்திருக்கலாம். ஆனால் மாயாவின் அம்மாவை, அவளது இனத்தவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படியான கலப்புத் திருமணங்களில் ஈடுபட்டவர்களை, பூர்வீகக் குடிகள் என்றைக்குமே, தங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்வதில்லை. ஈவிரக்கம் இல்லாது, பரந்த வெளிகளில் அவர்கள் துரத்திவிடப்படுவார்கள். இல்லாவிட்டால், உறவினர்களால் தயவு தாட்சண்யம் இன்றிக் கொல்லப்படுவார்கள். இப்படியான உறவுகளின் விளைவாகப் பிறக்கும் குழந்தைகள், எப்போதும் அவர்களது சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அதனால் பின்டி  ‘களவெடுக்கப்பட்ட தலைமுறையினரில் ' (Stolen Generation) ஒருவராக வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதை விடவும், இவ்வாறு துரத்தப்பட்டவர்கள், மாட்டுமந்தைகளை வளர்க்கும் ' மிகப்பெரிய நிலப்பரப்பிலான மந்தை பராமரிப்பு நிலையங்கள்"  (Cattle Stations) போன்றவற்றைச் சுற்றி அலைவது வழக்கமாகும். இத்தகைய நிலையங்கள், பெரும்பாலும் வெள்ளையர்களாலேயே நடத்தப்பட்டதுடன், இவ்வாறு 'சமூகத்தால் விலக்கப்பட்ட பெண்களுக்கு,  நல்ல 'வரவேற்பும்' இருந்தது. ஏற்கெனவே மனமுடைந்து போயிருந்த பின்டிக்கு, மரத்தால் விழுந்தவளை மாடு  ஏறி மிதிப்பது போன்றதொரு வாழ்வில் வெறுப்பே ஏற்பட்டது. அத்துடன், தனது மகளை' ஒருநாளாவது திரும்பவும் பார்க்கவேண்டும் என்ற ஒரு தாயின் சாதாரண 'எதிர்பார்ப்பும்' அவளுக்குத் தான் உயிரோடு வாழவேண்டும் எனும் உந்துதலை அளித்தது.

 

இதனால் மரணத்தைப் பின் தள்ள விரும்பிய அவள், அங்கிருந்து மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு கிறீஸ்தவ ‘திருச்சபைகளால் நடத்தப்படும் சீர்திருத்த விடுதியொன்றுக்குத் தானாகவே போக முன்வந்தாள். இப்படியான விடுதிகளுக்கு, பூர்வீகக் குடிகளிலிருந்து 'இளம் வயதினரும், குழந்தைகளும், அவர்களின் விருப்பத்துக்கு மாறாகப் பிடித்துச் செல்லப்படுவது வழக்கமாக இருந்தது. இப்படியானவர்களையே 'களவெடுக்கப்பட்ட தலைமுறை' (Stolen Generation) ஐச் சேர்ந்தவர்கள் என்று அழைப்பார்கள். அவள் அவ்வாறு கொண்டுபோகப்பட்டது கூட, அவளது பாட்டியார் சொல்லித் தான் மாயாவுக்கே தெரியும். தனது அம்மாவைப் பார்க்கவேண்டும் என்ற ‘தாபம்' மாயாவின் மனதில் அடிக்கடி தோன்றி மறைந்தாலும், அதனை வெளியே எவரிடமும் சொல்லும் ‘துணிவு' அவளுக்கு ஏற்படவே இல்லை.

 

(வாசகர்கள் விருப்பத்தைப் பொறுத்து, இன்னுமொரு ‘பகுதி ' மட்டும் வரும்..! :rolleyes: )

 

அடுத்த பகுதியைப்பார்க்க, பின்வரும் இணைப்பில் 'கிளிக்கவும்' !

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=137207&hl=

 

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஆவலுடன்   காத்திருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ புங்கை....வாசகர்கள் நாங்கள் ரெடி வாசிப்பதற்கு

காத்திருக்கிறோம் புங்கை..

  • கருத்துக்கள உறவுகள்

அறிவியல் உலகத்தின் மறுபக்கமுள்ள அவலங்களைப் போக்குவதற்கு மனித மனங்களைப் பண்படுத்த முயலும் ஒரு பதிவு. நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்பது மனதில் பல வழிகளில் படர்ந்தாலும்.... அதனை உங்கள் எழுத்துகளின்மூலம் அறியவே அதிக ஆவல் ஏற்படுகிறது. தொடருங்கள், காத்திருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலிய பூர்வீக குடிகளைப்பற்றி அறியும் ஆவல் எனக்கு நிறைய உண்டு.
அதிலும்... உங்கள் எழுத்துக்களில், வாசிக்கும் போது... நிச்சயம் சுவராசியமாக இருக்கும்.
தொடர்ந்து... படங்களுடன், எழுதுங்கள் வாசிக்க காத்திருக்கின்றோம் புங்கை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஆவலுடன்   காத்திருக்கிறோம்.

தங்கள் சித்தம்......எனது பாக்கியம்......! :icon_idea:

தொடருங்கோ புங்கை....வாசகர்கள் நாங்கள் ரெடி வாசிப்பதற்கு

 

கேட்டதும் கொடுப்பவனே......கிருஷ்ணா...கிருஷ்ணா....!

 

கீதையின் நாயகனே........... கிருஷ்ணா.....கிருஷ்ணா......!

 

நீங்கள் ரெடி எண்டால்.....நானும் ரெடி....! :D

காத்திருக்கிறோம் புங்கை..

தங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றிகள், வேந்தன்!

 

தமிழ் நாடு தேர்தல் களம் சூடு பிடிக்கின்றது....!

 

உங்களிடம் நாங்களும் 'நிரம்ப' எதிர்பார்க்கிறோம்...! :D

தொடருங்கள் புங்கை!!!

உங்கள் கதை படிக்க ஒடோடி வந்த எங்களை எமாற்றி விடாதீர்.

பாடு சுசிலா பாடு :D

ச்ச்சீ எழுதுங்கோ புங்கை எழுதுங்கோ... ஈஈஈஈஈ :)

  • கருத்துக்கள உறவுகள்

மாயா அம்மாவைச் சந்தித்தாளா , அல்லது அம்மாவும் மாயமாகிட்டாளா ...! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடருங்கள் புங்கை!  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அறிவியல் உலகத்தின் மறுபக்கமுள்ள அவலங்களைப் போக்குவதற்கு மனித மனங்களைப் பண்படுத்த முயலும் ஒரு பதிவு. நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்பது மனதில் பல வழிகளில் படர்ந்தாலும்.... அதனை உங்கள் எழுத்துகளின்மூலம் அறியவே அதிக ஆவல் ஏற்படுகிறது. தொடருங்கள், காத்திருக்கிறோம்.

 

மண்ணில் ஏதாவது 'கொஞ்சமெண்டாலும்' இருந்தால் தானே, 'பண் படுத்தலும்' கொஞ்சமாவது வேலை செய்யும்!

 

ஆனால், கதையின் வரப்போகும் முடிவு, நீங்கள் எதிர்ப்பார்ப்பது போல , இருக்கமாட்டாது என்பதை மட்டும், இப்போதே சொல்ல முடியும்!

 

வரவுக்கு நன்றிகள், பாஞ்ச்!

அவுஸ்திரேலிய பூர்வீக குடிகளைப்பற்றி அறியும் ஆவல் எனக்கு நிறைய உண்டு.

அதிலும்... உங்கள் எழுத்துக்களில், வாசிக்கும் போது... நிச்சயம் சுவராசியமாக இருக்கும்.

தொடர்ந்து... படங்களுடன், எழுதுங்கள் வாசிக்க காத்திருக்கின்றோம் புங்கை.

உங்கள் கருத்தை வாசித்த பிறகு கொஞ்சம் நிதானமாக யோசித்துக்கொண்டிருக்கிறேன்! :o

 

கொஞ்சம் 'படங்களையும்' இணைத்துக் கதையைக் கொண்டுபோவது நல்லது போலவே தெரிகின்றது!

 

ஓரளவுக்கு, இந்த 'அதிசயமான மக்களின்' குணாதிசயங்களையும், வாழ்க்கை முறைகளையும் அறிந்த மாதிரியும் இருக்கும் தானே!

 

பிறகு, 'கதை தொய்ஞ்சு போச்சுது'...... புங்கை மாட்டைக்கொண்டுபோய் மரத்தில கட்டிப் போட்டு, மரத்தைப் பற்றி எழுதிக்கொண்டு போறார் எண்டு மட்டும் 'புறு புறுக்கக்' கூடாது! :icon_idea: 

 

வரவுக்கு நன்றிகள்..! 

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான உங்கள் கதை வாசிக்க நன்றாக இருக்குப் புங்கை. இன்னும் ஒன்றுடன் நிறுத்தாமல் எழுதுங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் புங்கை!!!

தொடருவோம்.. அலை...! நன்றிகள்...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதை படிக்க ஒடோடி வந்த எங்களை எமாற்றி விடாதீர்.

பாடு சுசிலா பாடு :D

ச்ச்சீ எழுதுங்கோ புங்கை எழுதுங்கோ... ஈஈஈஈஈ :)

அதாரது....ஓ.. ராஜன் தம்பியா?  :lol:

 

உங்கட நினைவுகளிலும் பார்க்க, எங்கட நினைவுகள் இன்னும் பசுமையா இருக்குது போல...!

 

பாடு.... சாந்தா... பாடு...!

 

வரவுக்கும், கருத்துக்கும் நன்றிகள்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

கத விட்டது காணும் மிச்சத்த எழுதுங்கோ.

அவுஸ்ரேலியாவின் பூர்வீக குடிமக்கள் சிலரை மேற்கு அவுஸ்ரேலியாவிலுள்ள டேர்ஃபி(Derby) பகுதியில் பார்க்கும் சந்தர்ப்பம்  கிடைத்திருந்தது.தோற்றத்தில்.... பார்க்கிறதுக்கு அப்படியே எங்கள் தமிழ்மக்களைப் போன்றே இருந்தார்கள். அவ்வளவு வித்தியாசம் ஒன்றையும் நான் காணவில்லை. அவர்களது வரலாறு பற்றியும் கொஞ்சம் படித்து, கேட்டு தெரிந்திருக்கின்றேன். அவர்களுக்கும் எங்களுக்கும் பல தொடர்புகள் இருப்பதாகவே பல ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.

அது இருக்கட்டும் புங்கை...

உங்கள் மீதிக் கதை எங்கே... தொடருங்கள்! ஆவலுடன் காத்திருக்கின்றோம்!:)

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் புங்கையூரான்

இன்றுதான் வாசித்தேன்.. பகிர்வுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

அன்றைய காலைப் பொழுதின் விடியலிலேயே , பாலைவனமொன்றின் சகல குணாதிசயங்களும் கலந்திருந்தன. கண்களைத் திறந்து பார்க்கக் கூட இயலாத அளவுக்கு, அதன் பிரகாசம் இருந்தது. நீண்ட ஒரு கருநிற மலைப்பாம்பொன்றின் வளைவுகளுடன், அந்த நெடுஞ்சாலை நீண்டு கிடந்தது. முதல் நாள் இரவின் ‘கடுங்குளிர்', மெல்லிய நீர்ப்படலமொன்றை, அந்த வீதியின் மீது தடவியிருந்தது. வரப்போகும் ‘வெயிலின்' கடுமையுணர்ந்த கங்காருக்கள், வீதியின் இரு பக்கங்களிலும் பரந்திருந்த, மஞ்சள் நிறமான கோரைப்புற்களின் மறைவுகளிலிருந்து, வீதியில் படிந்திருந்த நீரைத் தங்கள் நாக்குகளினால், மெல்ல மெல்ல நக்கி எடுப்பதற்காக வந்து கொண்டிருந்தன. அந்தச் சந்தர்ப்பத்தை விட்டால், அன்றைய பொழுது தாகத்துடனேயே கழிந்து விடக்கூடும். முந்திய இரவுகளில், அந்த நெடுஞ்சாலையைக் கடக்கும் போது, வாகனங்களினால் கொல்லப்பட்டு வீதியோரங்களில் கிடந்த தங்கள் உறவுகளுக்காக, ஒரு நிமிட அஞ்சலி செலுத்தவும் நேரமில்லாத ‘அவசரம்' அவற்றுக்கு இருந்தது! அந்த இறந்து போன, கங்காருகளின் ‘கருப்பைப் பைகளில்’ சில ‘குட்டிகள்' இன்னும் குற்றுயிருடன் இருக்கவும் கூடும்!   ................................

 

இப்படி எவராவது தொடங்கினால்

தூர  ஓடி  பழகிவிட்டது :D 

இதையும் முதலில் கண்டு ஒடிவிட்டேன்

பயங்கரமாக  இழுக்கப்போகுது என்று...... :lol: 

 

இன்று மீண்டும் வந்து முதலில் கடைசிவரிகளைப்படித்தேன்

அப்பாடா

இறைவன் காப்பாத்தினார்.. :D 

தொடருங்கள்

(ம்ம்ம் - நான் அடுத்த பக்கத்துக்கு   போகின்றேன் :icon_idea: )

  • 3 weeks later...

கதை நன்றாக இருக்கின்றது . உங்கள் சொல்லாட்சியில்  ஒருவித உலர்தன்மை இருப்பதாக உணர்கின்றேன் . தொடருங்கள் புங்கை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.