Jump to content

நான் ஒரு இலக்கியவாதியே இல்லை-நேர்காணல்-சாத்திரி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

நான் ஒரு இலக்கியவாதியே இல்லை-நேர்காணல்-சாத்திரி

கோமகன் : அதென்ன சாத்திரி ………. ?

சாத்திரி : அது என்னுடைய நண்பன் ஒருவனின் புனை பெயர்தான். திருகோணமலை குச்சவெளி கரையோர கிராமத்தை சேர்ந்தவன். சிறந்த  மாலுமி. சிறந்த போராளி நிச்சயம் ஒரு சிறந்த சமையல்காரனாக இருப்பான் என்று சொல்வார்கள், அதே போல அவனும் சிறந்த சமையல்காரன். ஒரு கடல் விபத்தில் இறந்து போய் விட்டான். அந்த சம்பவமோ அவன் பெயர் விபரமோ வெளியே தெரிய வந்திருக்கவில்லை. அப்படிப் பலர் இருக்கிறார்கள். பின்னர் நான் எழுத தொடங்கியபோது அவனின் புனை பெயரை எனதாக்கிக் கொண்டேன்.

சாத்திரிஓவியம் : எஸ். நளீம் 

இன்னுமொரு காரணமும் உண்டு:

பொதுவாக எமது மக்கள்  ஒரு செயலை அல்லது நிகழ்வை செய்ய முன்னர் ஊரிலுள்ள சாத்திரியார் ஒருவரிடம் போய் நல்ல நேரமோ ஆலோசனையோ கேட்கும் பழக்கமுள்ளது. அவர் வாயில் வந்த எதை சொன்னாலும் அவர் சொன்னால் சரியாகத்தானிருக்கும் என்கிற ஒரு நம்பிக்கை மக்களிடமுண்டு. அதே போல கடுமையான என் கட்டுரைகள் வெளியாகும் போது சாத்திரியார் சொன்னா சரியாகத்தானிருக்கும் என்கிற மனோநிலைக்கு மக்கள் பொருந்திப்போய் விடுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கிருந்ததும் ஒரு காரணம்.

கோமகன் : எழுத்துப்பரப்பில் நீங்கள் ஒருகலகக்காரராகவே அறியப்பட்டிருக்கின்றீர்கள். கலகம் செய்வதில் அவ்வளவு விருப்பமா என்ன ?

சாத்திரி : நான் கலகம் செய்ய வேண்டுமென்று நினைத்து வீதியில் வந்து கம்பு சுத்துவதில்லை. சிறிய வயதில் என் நண்பியொருத்தி பாடசாலை சீருடை போடவில்லையென சாதியின் பெயர் சொல்லி ஆசிரியைஅடித்து பாடசாலையை விட்டு வெளியேற்றியதை பார்த்து தங்கையின் சீருடையைக்  களவெடுத்து நண்பிக்கு கொடுத்து வீட்டில் அடி வாங்கியதிலிருந்து, 83-ல் தெற்கில் கலவரம் நடந்தபோது அதுக்கு  எந்த சம்பந்தமும் இல்லாமல் அதனால் எந்த பாதிப்பும் இல்லாமல் மாணவனாக இருந்த நான் போராட போகவேண்டுமென்று முடிவெடுத்ததில் இருந்து, எல்லோரும் கண்டும் காணாமல் போகின்ற அசாதாரண சம்பவங்களை நின்று ஏன் என்று கேட்கிற அந்த உணர்வு எழுத்துகளிலும் வெளிப்பட்டிருக்கும். ஏன் எதுக்கு என்று கேட்கிற எல்லோருமே  மனித வரலாற்றில் கலகக்காரர்களாகவே அறியப்பட்டிருகிறார்கள். அதன் வரிசையில் ஏதோ என்னால் முடிந்தது. அது கலகமாக மற்ரவர்களுக்கு தெரியலாம்!

கோமகன் : நீங்கள் ஒரு இலக்கியவாதியே இல்லை என்று சொல்வோரும் உண்டு. இதுதொடர்பாக…………?

சாத்திரி : உண்மைதான். நானே சொல்லிக்கொண்டதில்லை. அதில் எனக்கு உடன்பாடும் இல்லை. காரணம், நெளிந்து போயிருக்கும் இலக்கியத்தை தட்டி நிமிர்த்துகிறேன் என்றோ, இலக்கியம்  ஒரு பக்கமாகவே காய்ந்து கொண்டிருக்கே அப்பிடியே நெம்பிக்  கிளப்பி மறுபக்கமும் காயப்போடுகிறேன் என்று சொல்லிக்கொண்டோ. தமிழைத் தண்ணியூற்றி  வளர்கிறேன் என்று சொல்லிக்கொண்டோ எழத வரவில்லை. எனக்கு தோன்றியதை எழுதினேன். எழுதுவேன் … அதனால் தான் தட்டையான உருண்டையான மேடு பள்ள விமர்சனங்களை சிரித்துக்கொண்டே கடந்து விடுகிறேன்.

கோமகன் : இலக்கை நோக்கி செல்பவரைத்தான் இலக்கியவாதி என்று சொல்வார்கள். ஆனால் உங்கள் கருத்தின்படி பார்த்தால், இலக்கு இல்லாதவர் எப்படி எழுத்தாளராக முடியும் ?

சாத்திரி : அதனால் தான் சொன்னேன் எனக்கு எந்த இலக்குமில்லை.  நான் இலக்கியவாதியுமில்லை என்று. எனவே நான் எழுத்தாளனுமில்லை. கிறுக்கி விட்டுப்போகும் கிறுக்கன் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

கோமகன் : யாழ் இணையத்தின் கருத்துக்களத்தின் நாங்கள் இருவரும் இணைந்திருந்தோம். இன்றும்கூட நீங்கள் அதில் மூத்த உறுப்பினராக இருக்கின்றீர்கள். அந்த வகையில் யாழ் இணையம் தொடர்பாக உங்கள் அனுபவங்கள் எப்படி இருந்தது ?

சாத்திரி : யாழ் களம் பலரைப்போலவே எனக்கும் கணனியில் தமிழை எழுதக் கற்றுக்கொண்ட இடம் மட்டுமல்ல கிறுக்கத் தொடங்கிய இடமும் கூட. வெளிநாடுகளில் எம்மவர்களின் சமூக அவலங்களை ‘ஐரோப்பிய அவலம்’ என்ற பெயரில் நான் எழுதி இயக்கிய நகைச்சுவை நாடகமாக்கியபோது பெரும் வரவேற்பை  பெற்றுக்கொடுத்த இடம் மட்டுமல்ல நிறைய நட்புகளையும் பெற்றுக்கொடுத்த இடம்.

2009-ல் ஏற்பட்ட தமிழரின் தோல்வியானது பொதுவாகவே எல்லோருக்கும் ஒரு ஏமாற்றத்தையும் சோர்வையும் கொடுத்திருந்தது. பலர் அன்றைய யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளமறுத்தார்கள். நான் உண்மை நிலவரங்களை எடுத்துச் சொல்ல முயன்றபோது முரண்பாடுகளே அதிகரித்தது. அந்த சோர்வு எனக்கும் வந்தபோது நானும் கொஞ்சம் கொஞ்சமாக யாழ் களத்தை விட்டு ஒதுங்கிக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனாலும் அதனை இன்றும் நன்றியோடு நினைவு கூருகிறேன்.

கோமகன் : ஆயுத எழுத்து நாவல் எழுதவேண்டிய முகாந்திரம் தான் என்ன?

சாத்திரி : பெரிய புரட்டிப்போடும் காரணம் எதுவுமில்லை. பொது வெளியில் அறியப்படாத எனக்குத் தெரிந்த சில விடயங்களை எழுதத் தோன்றியது. எனக்கும் நேரமிருந்தது, அவ்வளவுதான்.

கோமகன் : ஆயுத எழுத்து நாவல் ஏன் கேர்ணல் ஹரிஹரன் முன்நிலையில் வெளியீடு கண்டது?

சாத்திரி : ஹரிகரன் முன்னிலையில் வெளியிடஅவர் ஒன்றும் என் குலசாமியோ இனத்தலைவரோ அல்ல. நூல் விமர்சனத்துக்கு எல்லாத் தரப்பிலிருந்தும் ஏழுபேரை அழைத்திருந்தேன். அதில் இயக்குனர் வீ.சேகர் தீவிர தமிழ்தேசியவாதிகளின் அழுத்தத்தால் கலந்து கொள்ளவில்லை. திராவிட கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் அருள்மொழி ஹரிகரனுடன் ஒரே மேடையில் அமரமாட்டேன் என்று மறுத்து விட, தோழர் ஆதவன் தீட்சண்யா ,பத்திரிகையாளரும் இலங்கை பிரச்சனையில் நீண்ட அனுபவமும் கொண்ட  பகவான் சிங், மனிதவுரிமை செயற்பாட்டாளர் அக்கினி சுப்பிமணியம், இலங்கை யுத்தத்தில் நேரடி அனுபவம் கொண்ட கருணாகரன் இவர்களோடு கேணல் ஹரிகரனும் கலந்து கொண்டிருந்தார்.

கோமகன் : உங்கள் கருத்துப்படி பார்த்தாலும் மற்றையவர்களை தவிர்த்து  கேர்ணல் ஹரிகரன் இந்தியப்படை காலத்தில் உங்களுக்கு எதிர் முகாமில்  நேரெதிரில் யுத்தகளத்தில் சந்தித்த ஒருவர். அவரை நிகழ்வுக்கு அழைத்ததுதானே பலராலும் விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டது?

சாத்திரி : உண்மை. நான் அவரை விருந்தாளியாக அழைக்கவில்லை, விமர்சகராகவே அழைத்திருந்தேன். அடுத்து நேர் எதிரில் யுத்தம் செய்த இலங்கையரசோடும்  இந்திய அரசோடும் தான் புலிகள் பலதடவை பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார்கள். அதுவரை புலிகளுக்கு எந்த சிக்கலும் இருந்திருக்கவில்லை. ஆனால் மூன்றாம் தரப்பு உள்ளே வரும்போது அது உள்ளே வருபவருக்கே இலாபமாக அமையும். புலிகளுக்கும் அதுதான் நடந்தது. உள்வீட்டு பிரச்சனை தொடக்கம் உலகப்பிரச்னை வரை உள்ளே வரும். மூன்றாம்நபரே இலபமடைகின்றனர். அதனால்தான் பிரச்சனையில் சம்பந்தப்பட்ட  நாங்களே மனம்திறந்த ஒரு கலந்துரையாடலை நடத்துவது மட்டுமல்ல அரசியல் வாதிகளின் தவறான வழிகாட்டல்களால் இலங்கையில் இந்தியப்படைகளால் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதை  ஒதுக்கொண்டிருந்ததோடு அதுபற்றி விரிவாகவும் பேசியிருந்தார். எனக்கு கிடைத்த வெற்றியாகவே நான் அதனை கருதுகிறேன். மற்றும்படி சிலரின் வெற்றுக்கூச்சல்களை  நான் கவனத்திலெடுப்பதில்லை.

கோமகன் : ஆனால் ஜெயமோகன் போன்றோர் இந்திய அமைதிப்படை ஈழத்தில் ஒன்றுமே செய்யவில்லை என்று கற்பூரம் கொளுத்திச் சத்தியம் செய்கின்றார்களே?

சாத்திரி : யுத்தத்தில் நேரடியாக பாதிக்கப்பட்ட என் போன்றோர் நீண்ட காலமாகவும் சம்பத்தப்பட்ட இராணுவத் தளபதிகளும் அதிகாரிகளும் காலம் தாழ்த்தியாவது உண்மைகளை ஒத்துக்கொண்ட பின்னரும் ஜெமோ போன்றவர்கள் அடித்து சத்தியம் செய்வதுக்கான காரணம், அவர்களே இந்திய தேசியத்தை தோளில் தூக்கி சுமப்பது போலவொரு கற்பனையில்  வாழ்கிறவர்கள். அவர்கள் உண்மையை ஒத்துக்கொண்டால் அந்த வினாடியே இந்திய தேசியம் சுக்குநூறாய்  சிதறிவிடும். அது மட்டுமில்லை அவர் கற்பூரம் கொளுத்த தீபெட்டி, தீ குச்சு எடுத்துக்கொடுத்து விட்டு பயபக்தியோடு அவரின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கி நிக்கும் எங்கள் இலக்கியச் செம்புகளும் ஒரு காரணம்.

கோமகன் : ஆயுத எழுத்து நாவலில் நீங்கள் சொல்ல நினைத்தது அத்தனையும் சொல்லி முடித்துவிட்டீர்களா?

சாத்திரி : இல்லை. முதலில் அது நாவலா இல்லையா என்பதை படிப்பவர்கள் தீர்மானிக்கட்டும். அடுத்து, நான் சொல்ல நினைத்ததில் நாற்பது வீதம்தான்  சொல்லியிருக்கிறேன் என நம்புகிறேன். முக்கியமாக, எல்லோராலும் ‘சகோதர படுகொலை’ என்று அழைக்கப்பட்ட டெலோ மீதான தாக்குதல். யாழில் முஸ்லிம்களின் வெளியேற்றம் என்பன. இந்த இரண்டு தரப்புமே புலிகள் மீதான வசைபாடலையும் ஆதங்கத்தையுமே கொட்டித் தீர்த்தனரே தவிர யாரும் சரியான முறையில் அதனை பதிவு செய்திருக்கவில்லை. இவையிரண்டையும் நான் ஆயுத எழுத்தில் பதிவு செய்திருக்கிறேன் என்கிற திருப்தி எனக்குண்டு.

கோமகன் : ஆனால் நீங்கள் புலிப்பார்வையில் தான் ஆயுதஎழுத்தை முன்னெடுத்திருப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கின்றதே ?

சாத்திரி : நான் என் கண்னால்தானே பார்க்க முடியும். அப்படியே எனக்கு இன்னொருவர் கண்தானம் செய்திருந்தாலும் என் மூளை மடிப்புகளில் இருந்தவைதானே வெளியே வரும்.

கோமகன் : அப்போ மீதி அறுபது வீதம் எப்போ உங்கள் எழுத்தில் வருமென எதிர்பார்க்கலாம் ?

சாத்திரி : அது தேவையில்லை என நினைக்கிறேன். ஏனென்றால் உலகில் யுத்தங்களை சந்தித்து தோற்றுப்போன அத்தனை நாடுகளும் அத்தனை இனங்களும் அதிலிருந்து பாடங்களை கற்று பிழைகளை சரி செய்து  தங்களை சுயவிமர்சனத்துக்கு உட்படுத்தி வேகமாக முன்னேறியிருக்கின்றன. ஆனால்  முப்பது வருடங்கள் கொடுமையான யுத்த அனுபவங்களை கொண்ட நம்மவர்கள் யுத்தம் முடிந்த பின்னர் மிக வேகமாக ஐம்பது வருடங்கள் பின்னோக்கி சென்றிருகிறார்கள். சாதியம், சீதனம், பெண்ணடிமை, வன்முறை, போதைப்பொருள் பாவனை என்று புலிகள் காலத்தில் புதைக்கப்பட்டிருந்த அத்தனையையும் தோண்டியெடுத்து புளி போட்டு மினுக்கிப் பூசை செய்துகொண்டிருகிறார்கள். கடந்தகால அனுபவங்களோ எழுத்துக்களோ எம்மவர்களை வழிப்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு அற்றுப்போய் விட்டதால் அனுபவங்களை எழுதுவதால் பிரயோசனமில்லை என்கிற முடிவுக்கு வந்து விட்டேன்.

கோமகன் : பாரிஸில் இடம்பெற்ற ஆயுத எழுத்து வெளியிட்டு நிகழ்வில் என்னதான் நடந்தது ? 

சாத்திரி : பாரிஸில் தமிழ் இலக்கியத்தை ஏகபோக குத்தகைக்கு எடுத்து வைத்திருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கும் நடிகரும், எழுத்தாளரும், தலித்திய வேடம் போடும் கத்தோலிக்க வெள்ளாளருமான சோபாசக்தி என் நிகழ்வை குழப்ப சிலரோடு சேர்ந்து ஒரு முயற்சியை எடுத்தார். அந்த முயற்சி பற்றிய உரையாடல் பதிவு எனக்கு கிடைத்திருந்தது. இப்போதும் என்னிடமுள்ளது. அது எனக்கு தெரிந்து விட்டது என்றதும் முக நூலில் என்னை தடை செய்து விட்டு ஒடிவிட்டார். இப்போதும் எங்காவது கருத்துரிமை, பேச்சுரிமை பற்றி வகுப்பெடுதுக்கொண்டிருப்பர் என நினைக்கிறேன். ஆனாலும் நிகழ்வு நல்லபடியாகவே நடந்து முடிந்தது.

கோமகன் : சமகால இலக்கிய செல்நெறி குறித்து உங்கள் அவதானிப்புகள்தான் என்ன?

சாத்திரி : வளர்ந்து விட்ட நவீன தொழில் நுட்பம் நிறையப்பேரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அவரவர் தாங்கள் நினைத்ததை உடனேயே எழுதிவிடலாம். அண்மையில் கூட ‘சாவு குருவி’ என்றொரு கதை படித்திருந்தேன். யாரோ சிந்துஜன் என்பவர் எழுதியிருந்தார். அதன் பாதிப்பிலிருந்து வெளியேற சிறிது நேரமெடுத்து. அப்படி வித்தியாசமான எழுத்து நடையோடு பலர் வருகிறார்கள். ஒரு நல்லது இருக்கும்போது ஒரு கெட்டது இல்லாமல் எப்படி? அது என்னவென்றால்: எழுத்தாளர் என சொல்லிக்கொள்ளும் சிலர் நீட்டி நிமிர்ந்து படுக்க முடியாமல் குப்புறவே படுத்திருப்பார்கள் என நினைகிறேன். ஏனென்றால் ஒரு கதையை அல்லது நாவலை எழுதி விட்டு நண்பர்கள் நாலுபேரை வைத்து மாறி மாறி முதுகு சொறிந்து கொண்டேயிருப்பது. முதுகு புண்ணாயிடாது……..?

கோமகன் : ஒரு பிரதிக்கு அழகியல் தேவையில்லை என்று எனக்கு முன்பு ஒருமுறை சொல்லியிருந்ததாக நினைவு உண்டு. அழகியல் இல்லை என்றால் அது ஒரு கட்டுரையாக வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதே ?

சாத்திரி : அழகியல் தேவையில்லை என்று முற்றாக மறுக்கவில்லை. முன்பு போல அதிக வர்ணிப்புகள் தேவையில்லை என்று தான் சொல்லியிருந்தேன். ஒரு முப்பதாண்டுகளுக்கு முன்னர் பாரிஸில் நடப்பது போன்றதொரு சிறுகதையை எழுதுவதானாளால் பாரிஸ் நகரம் அதன் சூழல் எப்படியிருக்கும் என்கிற விபரிப்பே பாதிக்கதையில் இருக்கும். சொல்லவந்த கதையின் விடயம் பாதியில்தான் வரும். இப்போ அதே பாரிஸ் நகரத்தில் கதை தொடங்குகிறது என்றதும் வாசகன் கூகிளில் பாரிஸ் நகரத்தை ஒரு வட்டமடித்துவிட்டு கதையை வாசிக்கத் தொடங்கி விடுவான்.

இன்னொரு உதாரணம்: “காலை கதிரவன் மெல்ல கண்விழிக்க, மெல்லப்படிந்திருந்த பனியை உதறி எழுந்த சேவலின் கொக்கரக்கோ கூவலும், குருவிகளின் பாடலும் ,யாரோ முற்றத்தை கூட்டும் விளக்குமாற்று ஈக்கின் கீறல் சத்தமும் என்னை கண் விழிக்க வைத்தது.” என்று எழுதுவதுக்கு பதிலாக : “காலை கண் விழித்தேன்.” என்று தொடக்கி சொல்ல வந்த விடயத்தை  சொல்லி விடலாமென நினைப்பவன் நான். என் எல்லா கதைகளும் அப்படியே எழுதியிருக்கிறேன். என் எழுத்தின் குறை நிறை இரண்டுமே அதுவாகவுமிருக்கும்.

கோமகன் : இப்பொழுது எழுதிக் கொண்டிருப்பவர்களில் உங்களை யாராவது பாதித்து இருக்கின்றார்களா?

சாத்திரி : இந்தக்கேள்வியை இரண்டு விதமாக எடுக்கலாம். என்ன எழுதியிருக்கிறார்கள் என்று விளங்காமல் தலையை சொறிய வைக்குமளவுக்கு மிக மோசமாக சிலர் பாதித்திருக்கிறார்கள். அவர்கள் காணமல் போய் விடுவார்கள் அல்லது  திருத்திக் கொள்வார்கள். நன்றாக எழுதும் புதியவர்கள் பலர் வந்திருக்கிறார்கள். அவர்களின் பெயர்களை சொல்லி நானே முதுகு சொறிந்து விடாமல் அவர்களாகவே வெற்றி பெறுவார்கள் என எண்ணுகின்றேன்.

கோமகன் : எழுத்துலகில் உங்கள் ஆசான் அல்லது நீங்கள் விரும்பிப் படித்தது யாருடைய எழுத்துக்களை?

சாத்திரி : டால்ஸ் டாய், மார்சிம் கார்க்கி ,வோல்தேயர்,மார்க் ட்வைன் என்று அடித்து விடத்தான் ஆசை. ஆனால் என்ன செய்ய? நான் அதிகம் படித்தது எஸ் போ வையும், செங்கை ஆழியன், மாத்தளை சோமு, சட்டநாதன் இவர்களோடு நிச்சயமாக கல்கி, சுஜாதாவை படிக்காமல் யாரும் இருக்க முடியாது.

கோமகன் : நீங்கள் எழுதிய திருமதி செல்வி சிறுகதையைக் கிழித்து தொங்கப்பட்டிருந்தார்கள். அப்படி என்னதான் வில்லங்கமாக அதில் எழுதினீர்கள்? ஏன் அப்படியொரு விமர்சனங்களை அது சந்திக்க வேண்டி வந்தது ?

சாத்திரி : ஒரு உண்மை சம்பவத்தை கதையாக்கியிருந்தேன். யுத்தம் ஒரு பெண்ணை எப்படியெல்லாம் பந்தாடுகிறது என்பது தான் அந்தக் கதை. எப்போதும்போலக் கலாச்சாரக் காவலர்கள் கம்பு சுத்தினார்கள்  அவ்வளவுதான். வழமைபோல அவர்கள் சுற்றிய சுற்றில் எனக்கு நல்ல காற்று வந்தது.

கோமகன் : நீங்கள் தயாரித்த ஐரோப்பிய அவலங்கள்  நாடகத்தொடர் பல விமர்சனங்களையும் வெற்றியையும் உங்களுக்கு ஈட்டித்தந்தது. அதனை ஏன் உங்களால் தொடர முடியவில்லை?

சாத்திரி : ஐரோப்பிய அவலங்கள் நாடகம் நல்ல வரவேற்பை பெற்றது உண்மைதான். பதின்மூன்று நாடகங்கள் எழுதி இயக்கியிருந்தேன். அது என் நண்பர்களுடனான ஒரு கூட்டுத் தயாரிப்பு. பல்வேறு சிந்தனையும் திறமையும் உள்ள சிலர் இணையும்போது அப்படியான படைப்புகள் இலகுவாக கொடுக்கலாம். அந்த  கூட்டிலிருந்து ஒருவர் பிரிந்து போகும்போது வருகின்ற சலிப்பு ஏமாற்றம் ஒரு இடைவெளியை ஏற்படுத்தி விடுகிறது. மீண்டும் புதிய நபர்களோடு அதை முயற்சி செய்ய முயலும்போது கால இடைவெளியும் சேர்ந்து முன்பைப் போல ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் போய் விடுகிறது. அதோடு காணமல் போய்விடுகிறோம். இது பல வெற்றிகளை கொடுத்த சினிமா கூட்டணிகள் தொடக்கம் ஐரோப்பவில் எம்மவர்களிடம்  பெரும் வரவேற்பை பெற்ற ‘படலைக்கு படலை’ நாடகம் வரை பொருந்தும்.

கோமகன் : ஏறத்தாழ 2005/06 என எண்ணுகின்றேன். நீங்கள், சயந்தன், சபேசன், ரவி எனநால்வர் கூட்டணி ஊடகத்துறையில் கோலாச்சியிருந்தீர்கள். பின்னர் ஆளுக்கொரு திசையாகப்பிரிந்து போனீர்கள். இந்தப் பிரிவுக்கு ஏதாவது காரணங்கள் இருந்ததா ?

சாத்திரி : ஊடகத் துறையில் நான்கோலேச்சினேன் என்று சொல்ல முடியாது. சில கட்டுரைகள் பெரும் சர்ச்சைகளை  கிளப்பியது உண்மை. அதே நேரம் சாத்திரி என்றொரு நபரை பலரும் அடையாளம் கண்டு கொண்டனர். மற்றும்படி நாங்கள் சேர்ந்தோ பிரிந்தோ போகவில்லை. அவரவர் பாட்டுக்கு போய்க்கொண்டிருக்கிறோம் அவ்வளவுதான்.

கோமகன் : எப்படியான சர்ச்சைகளைக் கிளப்பியது ?

சாத்திரி : நிறைய கட்டுரைகள் சர்ச்சையை கிளப்பியிருந்தது. அதில் முக்கியமானது  21,05,2009 அன்று பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்திய பின் நான் அவருக்கு எழுதிய அஞ்சலிக்கட்டுரை தீவிர தமிழ்த்தேசிய வாதிகளையும் புலிகளில் பெயரால் வாழ்ந்து கொண்டிருந்தவர்களையும் கடும் கோபத்துக்குள்ளாக்கியது. அடுத்ததாக புலிகளின் சொத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட முரணில் பாரிஸில் புலிகளின் பொறுப்பாளர் சுட்டுக்கொல்லப் பட்டதை விபரமாக ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இவற்றால் ஏகப்பட்ட மிரட்டல்கள் அவதூறுகளை சந்தித்தேன். எல்லோருமே இப்போ காணாமல் போய் விட்டார்கள். நான் எழுதிக்கொண்டே  தான் இருக்கிறேன்.

கோமகன் : பிரான்சிலும் சரி வேறு எந்த இடங்களிலும் சரி, சாத்திரி குழுமம் ஷோபாசக்தி குழுமம் என்று இலக்கியப்பரப்பு பிரிந்து போய் இருப்பதாக சொல்கின்றார்களே……. இது உண்மையா ? உண்மையானால் ஏன் இப்படியான ஒரு நிலை வந்தது ?

சாத்திரி : மற்றையவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. எனக்கு குழு என்று எதுவும் கிடையாது. என்மீது எனக்கு நம்பிக்கையுண்டு. எப்போதும்  தனியாகவே தான் இயங்கிக்கொண்டிருகிறேன். மற்றும்படி எப்போதும்போல ஒரு நண்பர் கூட்டம் என்னோடிருக்கும்.

கோமகன் : ஒருமுறை ஷோபாசக்தி என்னிடம் உங்களைப்பற்றி காட்டமான முறைப்பாடுகள் செய்து கொண்டிருந்த பொழுது, அவரை உங்களுடன் பொதுவிவாதத்திற்கு அழைப்பு விடுத்தேன். அப்பொழுது சயந்தன் உடன் இருந்தார். அது இற்ரை வரை நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக …………..?

சாத்திரி : நான் எப்போதும் எவருடனும் பகிரங்கமாக விவாதிக்க தயாராகவே உள்ளேன். முகநூலிலேயே கருத்தாட முடியாமல் தடை செய்துவிட்டு போன ஒருவரோடு எப்படி பகிரங்கமாக விவாதிக்க முடியும்? ஓடுபவரை கலைதுப்பிடித்து விவாதிக்க முடியாதே…………!

கோமகன் : லண்டனில்  இடம்பெற்ற 40 ஆவது புலம்பெயர் இலக்கியசந்திப்பில் உங்களது அனுபவங்கள் எப்படி இருந்தது?

சாத்திரி : முதன் முதலாக பொதுவெளியில் கலந்துகொண்ட ஒரு கூட்டம் என்பதை தவிர புதுமையான அனுபவங்கள் ஏதுமில்லை. ‘ஒழித்திருந்து எழுதுகிறவன்’ என்று நீண்ட காலமாகவே ஒரு அவப்பெயர் இருந்தது. அதையும் கழுவித் துடைக்க ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டேன்.

கோமகன் : அந்தப் புலம்பெயர் இலக்கியசந்திப்பில் என்ன காரணத்துக்காக இலக்கியப்பிதாமகர்கள் ‘ என்று சொல்லிக்கொள்வோர்கள் உங்களை மறுதலிப்பு செய்ய வேண்டிவந்தது ?

சாத்திரி : என் எழுத்துக்களைத் தவிர வேறென்ன காரணம் இருக்கக் கூடும்? சுற்றி நின்று மன்னிப்புக் கேள் என கூச்சல் போட்டார்கள். நான் எப்போதும்போல கூச்சல்களை கவனதிலெடுக்கவில்லை.

கோமகன் : இந்தப் புலம்பெயர் இலக்கிய சந்திப்புகள் ஏறத்தாழ 49 பாகங்களாக உலகில் பல இடங்களில் நடந்து இருக்கிறது. இந்த சந்திப்புகள் எழுத்துப் பரப்பில் ஏதாவது மாற்றங்களை/ அல்லது புதிய கோட்பாடுகளை உருவாக்கி இருக்கிறதா ?

சாத்திரி : உண்மையில் இந்த புலம்பெயர் இலக்கிய சந்திப்பானது பரந்துபட்ட அனைவருக்குமான ஒரு சந்திப்பு அல்ல. இது ஒரு குழுச்சந்திப்பு. குறிப்பிட்ட ஒரு சிலரே எல்லா நாடுகளிலும் ஓன்று கூடுவார்கள். அவர்களின் நிகழ்ச்சி நிரலிலேயே எல்லாம் நடக்கும் ஓன்று மட்டும் நிச்சயாமாகச்  சொல்வேன், இந்த இலக்கிய சந்திப்பானது மாறி மாறி முதுகு சொறிதலையும் .புதிய புதிய முரண்களையுமே இதுவரை வளர்த்துள்ளது . ஒரு  படைப்பாளியோ படைப்போ சரியான முறையில் அறிமுகப்படுதவோ கௌரவிக்கப் படவோ இல்லை. எறியப்படும் மீன்கழிவுக்காக சந்தையோரத்தில் அடிபடும் நாய்களைப்போலவே ஒவ்வொரு சந்திப்பும் முடிந்திருக்கிறது.

கோமகன் : போர் முடிந்து 11 வருடங்களை கடக்கப்போகின்றோம். இன்றும் கூடஇடர்காலங்ளில் மட்டும் விளிம்பு நிலையில் இருக்கின்ற மக்களை உயர்த்துகின்றோம். என்றுகூறியவாறு ஒரு பகுதியினர் தாயகத்தில் அலைகின்றார்கள். அதற்கு டயபோராஸ் பங்களிப்புசெய்ய வேண்டும் என்றும் சொல்கின்றார்கள். இவ்வளவு காலம் சென்றும் தாயகத்தில் ஒருநிலையான பொருண்மியப் பொறிமுறையை ஏன் செயல்படுத்த முடியாதுள்ளது ?

சாத்திரி : இறுதி யுத்தம் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில் ‘நேசக்கரம்’ என்கிற உதவி அமைப்பு ஒன்றோடு சேர்ந்து இயங்கிய அனுபவத்தின் அடிப்படையில் சிலவிடயங்களைச் சொல்கிறேன்: யுத்தம் முடிவடைந்து முகாம்களில் இருக்கிறவர்களுக்கு பின்னர் அதிலிருந்து வெளியேறியவர்களுக்கு உடனடி அடிப்படைத் தேவைகள் என்பது முக்கியமே. ஆனால், மோசமாகக் காயமடைந்த மாற்று திறனாளிகளைத் தவிர்த்து மற்றையவர்களுக்கு அன்றாடத் தேவைகளைச் தொடர்ச்சியாகக்  கொடுப்பது அந்த மக்களையே சோம்பேறிகளாக்குவதாகவே இருக்கும். அதே நேரம் உதவி கொடுப்பவர்களுக்கு பெறுபவர்களுக்குமிடையில் உள்ள இடைத் தரகர்களின் மோசடிகளும் நிறையவே நடக்கின்றது. எனக்குச் சொந்த அனுபவம் கூட இதில் உண்டு.

புலம்பெயர் தமிழர்களின் பெரும் நிதிபலம் இருந்தும் நிலையான பொருண்மிய பொறி முறை உருவாகாமல் போனதன் முழுக்காரணமும் இடைத் தரகர்களால் தொடர்ச்சியாக உதவி கொடுத்தவர்கள் ஏமாற்றப்பட்டதும். அதையும் மீறி நேரடியாகவே பொருண்மிய திட்டங்களோடு சென்றவர்களுக்கு அங்குள்ள தமிழ் அரசியல் தலைமைகள் சரியான ஒத்துழைப்பு கொடுக்காததுமே முக்கிய காரணம். அப்படி திட்டங்களோடு சென்றவர்களிடம் அதனை நிறைவேற்ற அதிகளவு கையூட்டு கேட்டதால் மனம் நொந்துபோய் திரும்பி வந்த பலரை எனக்கும் தெரியும்.

கோமகன் : தமிழகத்தில் உங்களுக்கு நிறையவே இடதுசாரி நண்பர்கள் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அனால் நீங்கள் ஈழம் தொடர்பாகவோ அல்லது விடுதலைப்புலிகள் பற்றியோ அவர்கள் வைக்கின்ற கடும் விமர்சனங்களுக்கு பதில்களை சொல்லாது இந்தநேர்காணலின் உடாகக் கடந்து செல்வதாகச் சொல்கின்றேன் ………. 

சாத்திரி : தமிழகத்தில் எனக்கு நிறைய இடதுசாரி நண்பர்கள் இருப்பதும் அவர்கள் ஈழம் புலிகள் பற்றி விமர்சனங்கள் வைப்பதும் உண்மை. அவர்களின் விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை. காரணம், ஈழப்போராட்ட கோரிக்கைகள் தொடர்பாக ஆயுதப்போராட்டம் தொடங்கிய ஆரம்பத்திலேயே இலங்கைத் தீவை பிரிக்கும் ஈழவிடுதலைப்போரட்டதுக்கு தங்கள் ஆதரவில்லை. சமஸ்டி முறையிலான தீர்வை பேச்சுவார்த்தை மூலம் பெற்றுக்கொள்ள இந்திய அரசும் அழுத்தம் கொடுக்க வேண்டும். எந்த ஈழ ஆயுதக்குழுவுக்கும் எமது ஆதரவில்லை என்பதைத் தெளிவாக அறிவித்து விட்டிருந்தனர்.

ஈழ விடுதலை அமைப்புக்கள் புலிகள் உட்பட தங்களை சோஷலிச அமைப்புகள் என்று கூறிக்கொண்டாலும்  தீவிர இடதுசாரி கொள்கைகளோடு இயங்கிய E.P.R.L.F  மற்றும் .E.R.O.S  அமைப்புகளுக்கு கூட அவர்கள் ஆதரவு கொடுக்கவில்லை. ஆனாலும் சி.மகேந்திரன் போன்றோர் தங்கள் தனிப்பட்ட ஆதரவினைக்  கொடுத்திருந்தார்கள் என்பதனையும் இங்கு மறுப்பதற்கில்லை. ஆகவே ஈழம், புலிகள் அமைப்புக்கு ஆதரவில்லாதவர்கள் என்று தெரிந்து கொண்டே அவர்களோடு எனக்கு நட்பு இருக்கின்றதென்றால் நிச்சயமாக அது கட்சி கொள்கை சாராத தனிப்பட்ட நட்புகளே. அதானால் தான் நானும் கட்சி அரசியல் சார்ந்த விமர்சனங்களுக்கு நான் பதிலளிப்பதில்லை.

கோமகன் : ஆனால், முன்னர் ஈழ விடுதலையையும் புலிகளையும் தீவிரமாக ஆதரித்த தி மு கட்சியை சேர்ந்தவர்கள் கூட புலிகள் மீதும் அதன் தலைவர் பிரபாகரன் மீதும் கடும்விமர்சனங்களை வைக்கிறார்களே.. அவற்றுக்கு கூட நீங்கள் எந்தவிதமான பதிலையும் தரத்தயாராக இல்லை என்ற மாதிரியல்லவா சொல்கின்றார்கள் ? 

சாத்திரி : உண்மையும் அதுதான். இப்போ சமூகவலைத்தளங்களில்  அப்படி எழுதுபவர்கள் எல்லோருமே இளைய தலைமுறையினர். அவர்களுக்கு  தி மு க கட்சிக்கும் ஈழ விடுதலை இயக்கங்களுக்கும் குறிப்பாக  விடுதலைப்புலிகளுக்கும் இருந்த தொடர்புகள் மற்றும் நெருக்கங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுக்கு பல ஆயிரம் உதாரணங்களை சொல்லலாம். உதாரணத்துக்கு ஓன்று மட்டும்:

ஈழத்தில் இந்தியப்படை காலம்  புலிகள் அமைப்பானது அதன் தலைவர் உட்பட இந்தியப்படைகளால் மணலாற்றுக் காட்டுப்பகுதியில் சுற்றி வளைக்கப்பட்டிருந்த நேரம். வெளியே இருந்து தரை வழியாக எந்தப் பொருளும் உள்ளே போகமுடியாத இறுக்கமான நிலைமை. துப்பாக்கி சத்தங்களால் அந்தப் பகுதி விலங்குகளும் பறவைகளும் கூட அந்த இடத்தை விட்டு வெளியேறிய நிலையில் மிகுதியிருந்த விலங்குகளும் புலிகள் அமைப்பால் வேட்டையாடி முடிந்த நிலை. உணவுக்கு பெரும் தட்டுப்பாடு.

கையிருப்பில் இருந்த அரிசியை வைத்து அதில் இலைகளைப் போட்டு கஞ்சி காய்ச்சிக் குடித்தவாறே சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த அரிசியும் முடிந்து போகும் நிலை வந்ததும் உடனடியாக அரிசி அனுப்பும்படி தமிழகத்துக்கு செய்தி அனுப்பப் பட்டிருந்தது. தமிழகத்தில் புலிகளின் வழங்கல் பிரிவுக்கு அப்போ கிருபன் என்பவர் பொறுப்பாக இருந்தார் (இவர் பின்னர் மாத்தையா பிரச்சனையில் புலிகளால் கொல்லப்பட்டார்.)

கிருபன் வேதாரணியம் பகுதியிலேயே இருந்து இயங்கிக்கொண்டிருந்தார். அப்போ அவரிடம் கையில் பணமும் இருக்கவில்லை. தகவல் கிடைத்ததும், ஆறுகாட்டுத்துறை பகுதில் புலிகள் ஆதரவாளர் ஒருவரிடம் போய் விடயத்தை சொல்லி உதவி கேட்டார். அவர் ஒரு தி மு க உறுப்பினர் என்பதால் உடனே ஒரு கடிதத்தை எழுதி கிருபனிடம் கொடுத்து அதனை கொண்டுபோய் தி மு க முக்கிய புள்ளி ஒருவரிடம் கொடுக்கும் படியும் அவர் வேண்டிய உதவிகள் செய்வார் என சொல்லி அனுப்பி வைத்தார்.

கிருபனின் கடிதத்தை படித்த அந்த முக்கிய தி மு க உறுப்பினர் கிருபனுக்கு வேண்டிய அரிசி மூட்டைகளை கொடுத்தனுப்பி விட்டிருந்தார். கிருபன் போன பின்னர்தான் “வெறும் அரிசியை கொண்டுபோய் பையன்கள் என்ன பண்ணுவாங்கள்?” என யோசித்தவர் மீண்டும் கிருபனை தொடர்பு கொண்டவர்,

“தம்பி வெறும் சோற்றை மட்டும் தின்று விட்டு சண்டை பிடிக்க முடியுமா ? வந்து மீதி பொருளையும் எடுத்துப்போங்க………….” என செல்லமாய் கடிந்தபடியே பருப்பு,பயறு,கடலை என அனுப்பி வைத்தார். அவை வன்னிக்கு போய் சேர்ந்ததும் பொருட்களை பார்வையிட்ட பிரபாகரன்,

“அரிசி கேட்டால் பருப்பும் சேர்த்து அனுப்பியிருக்கிறாங்கள்”. என்று சொல்லி சிரித்த படியே உடனடியாக அனைத்து அணிகளுக்கும் பிரித்து அனுப்புமாறு கட்டளையிட்டார்.

இந்த சம்பவத்தை பின்னைய காலங்களில் கடற்புலித் தளபதி சூசை, பொட்டம்மான் ஆகியோர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நினைவு கூர்ந்திருந்தனர். ஆனால் பொருட்களை கொடுத்துதவிய அந்த நபர் யாரென பெரிதாக வெளியே யாருக்கும் தெரியாது. அவர் வேறு யாருமல்ல தஞ்சையை சேர்ந்த கோ. சி . மணி அவர்கள். அடுத்தது, அப்படி அவர்கள் எழுதுவதுக்கு  முழுக்காரணமும்  நாம் தமிழர் கட்சியுடனான கருத்து மோதல்களே தவிர  ஈழத் தமிழர்கள் அல்ல. அவர்கள் புலிகளின் பெயரால் இறந்து விட்ட  கலைஞரை திட்ட, இவர்கள் இவர்கள் பதிலுக்கு இறந்து விட்ட பிரபாகரனையும் இல்லாத புலிகள் அமைப்பையும் திட்டுகிறார்கள். இரண்டுமே ஒருவித முட்டாள்தனம் என்பதால் அதை கடந்து போய் விடுவதே நல்லது.

அடுத்து நான் முக்கியமான இன்னொரு விடயத்தையும் சொல்லியே ஆக வேண்டும்:  ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதும் அதன் முழுப்பழியும்  தி மு க  வின் மீதே விழுந்தது. சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்த ஜெயலலிதாவுக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போன்றதொரு சந்தர்ப்பம் அப்பொழுது கிடைத்தது. திமுக வினர் கலைத்துக் கலைத்து வேட்டையாடப்பட்டனர். காவல் நிலையங்களிலும் சிறைகளிலும் அடித்து உதைக்கப்பட்டு அவர்களும் சொத்துக்களும் சூறையாடப்பட்டது. எது வித எதிர்பார்ப்புகளுமின்றி தமிழன்  என்கிற உணர்வால் மட்டுமே உதவியவர்கள் உதைபடும்போது எம்மால் கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. ஆகவே அவர்கள் இப்போ திட்டும் போதும் கை கட்டியிருப்பதை தவிர வழியில்லை.

அதே நேரம், பெங்களூர் மட்டுமில்லை  கர்நாடகத்தின்  கடைக்கோடியிலிருந்த  ஹுப்ளி , பெல்கம் நகரங்களில் வாழ்ந்த தமிழர்கள் கூட தாக்கப்பட்டு துரத்தப்பட்டார்கள். உயிர் தப்பினால் போதுமென்று தமிழ்நாட்டுக்கும்  மும்பைக்கும் குடிபெயர்ந்த குடும்பங்கள் ஏராளம். அவர்கள் ஈழம், புலிகள், பிரபாகரன்  என்கிற பெயர்களே கேள்விப்படாதவர்கள். அவர்கள் தாக்கப்பட்டத்துக்கு தமிழர் என்கிற காரணத்தை தவிர வேறென்ன இருக்க முடியும்? அவர்களுக்கெல்லாம் எம்மால் என்ன செய்ய முடிந்தது?

கோமகன் : ஆனால், ஈழத்தின் இறுதி யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது மத்தியில் காங்கிரசோடு கூட்டு வைத்து தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கலைஞரால் அந்த யுத்தத்தை நிறுத்தமுடியவில்லை என்பது தானே இன்றுவரை அவர் மீதுள்ள குற்றச்சாட்டாகப் பார்க்கின்றேன். கலைஞரால் அந்த யுத்தத்தை நிறுத்தியிருக்க முடியுமா என்ன  

சாத்திரி : நிச்சயமாக இல்லை. இன்றுவரை கலைஞரை திட்டித்தீர்ப்பவர்களும் இருக்கிறார்கள். இறுதி யுத்தம் நடந்தபோது தமிழர்கள் அனைவருமே, நான் உட்பட வெறும் உணர்வுகளால் மட்டுமே நிரம்பியிருந்தோம்.   ஏதாவதொரு அதிசயம் நடந்து விடாதா என அனைவருமே ஏங்கியிருந்த நேரம் அது. அப்பொழுது யுத்தத்தை நிறுத்த உண்ணாவிரதமிருந்த கலைஞர் மீது எனக்கு கூட கோபம்  இருந்தது. ஆனால், இந்திய தேசம் என்பது 29  மாநிலங்களையும் 07 யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கிய ஒரு துணைக்கண்டம். அதில் ஒரேயொரு மாநிலமான தமிழ்நாட்டு முதலமைச்சரால், அது யாராகவிருந்தாலும் தனது அதிகாரங்களை தாண்டி அடுத்த நாட்டில் நடக்கும் உள் நாட்டு யுத்தத்தை நிறுத்திவிட முடியாது. அவரது அதிகாரம் எல்லாம் சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றலாம். மத்திய அரசுக்கு கடிதமெழுதலாம். அறிக்கை விடலாம். அவ்வளவுதான் அவர்களால் முடிந்தது.

ஈழத் தமிழர் விடயத்தில் காலங் காலமாக அனைத்து தமிழ் நாட்டு முதலமைச்சர்களும் இதைத்தான் செய்தார்கள், இனிமேலும் இதைத்தான் செய்ய முடியும். அது மட்டுமல்ல; மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரசே நினைத்திருந்தாலும் யுத்தத்தை நிறுத்தியிருக்க முடியாது. ஏனெனில் உலககின் முக்கிய 32 நாடுகள் இணைந்து  இலங்கைத்தீவில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முடிவெடுத்து 2001 ம் ஆண்டிலிருந்தே மிக நுணுக்கமாக திட்டமிட்டு காய்களை நகர்த்தத் தொடங்கியிருந்தார்கள். பேச்சு வார்த்தை தொடங்கும் போதே பிரிக்காத இலங்கைக்குள் ஒரு தீர்வை புலிகளின் சம்மதத்தோடு ஏற்படுத்துவது. அவர்கள் மறுத்தால் ஒட்டுமொத்தமாக அவர்களை அழித்து ஆயுத மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவது என்கிற திட்டம் மேற்குலகால் முடிவு செய்யப்பட்டு விட்டது. எனவே இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்தாலென்ன பா ஜ க ஆட்சியிலிருந்தாலென்ன எல்லாம் ஒன்றுதான்.

கோமகன் : சரி ஒரு கேள்வி உங்களிடம் கேட்கவேண்டும் என எண்ணுகின்றேன். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வரலாற்று ஆவணப்படம் என்று சொல்லப்படும் ‘மேதகு’ பார்த்து விட்டீர்களா? அது பற்றி உங்கள் கருத்து என்ன?

சாத்திரி : இதுதான் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு என்று எடுத்தவரே சொல்லக் கூடாது. இதனை ஏன் சொல்கிறேன் என்றால், ஈழத் தமிழர் பற்றியோ அவர்கள் போராட்ட வரலாறு பற்றியோ ஒரு இந்தியரால், ஏன் அவர் தமிழ் நாட்டுக்காரராக இருந்தாலும் சரி ஒரு போதும் இரத்தமும் சதையுமாக உணர்வோடு கலந்து ஒரு திரைப்படத்தை எந்தக்காலத்திலும் எடுக்க முடியாதென்கிற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருப்பவன் நான். கடந்த காலங்களில் ஈழம் பற்றி வெளிவந்த அத்தனை திரைப்படங்களும் அதனை நிரூபித்திருக்கின்றது. அடுத்தது அந்தப் படத்தைப் பார்த்துத்தான் பிரபாகரனின் வரலாற்றை தெரிந்து அளவுக்கு வரலாறு பற்றிய வறட்சி எனக்கில்லை .

கோமகன் : நீங்கள் சொல்வது போல உணர்வோடு கலந்த வரலாற்றை ஈழத் திரைப்பட இயக்குனர்களால் எடுக்க முடியுமென்று நினைக்கிறீர்களா?

சாத்திரி : அதுக்கான சூழல் நிச்சயமாக அங்கில்லை. ஆனால், அப்படியொரு வரலாற்றை படமாக்கும் வசதியும் வளங்களும் புலிகள் காலதில் அவர்களிடமிருந்தது. இனிவரும் காலங்களில் அதுக்கான சாத்தியங்கள் குறைவே .

கோமகன்: நீங்கள் சொல்கின்ற வசதியும் வளங்களும் அதுக்கான சூழலும் புலம் பெயர் தமிழர்களிடம் ஏராளமாக இருக்கின்றதே, அவர்கள் நினைதால் செய்யலாமே?

சாத்திரி: இந்தக் கேள்விக்கு சத்தகமாக சிரிப்பதை தவிர என்னிடம் வேறு பதிலில்லை நன்றி வணக்கம் .

கோமகன் : இப்பொழுது வந்திருக்கின்ற கொரோனா காலத்து உலக ரீதியிலான  ஓய்வுகள் என்ன விதமான படிப்பினைகளை சனங்களுக்கு கொடுத்திருக்கின்றது ? மீண்டும்  ஒருமுறை உலக ஒழுங்குகள் மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றதா ?

சாத்திரி : கொரோனா காலம் பொதுவாக சனங்களுக்கு என்ன படிப்பினை கொடுத்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால், ஐரோப்பாவாழ் தமிழர்களுக்கு எனக்கு உட்பட வாழ்க்கை வெறுத்து விட்டது.  ஊரில் போயிருக்கலாம் என்கிற ஒரு உந்துதல் எல்லோருக்குள்ளும் வந்துவிட்டது. மற்றபடி உலக ஒழுங்கு என்று பார்த்தால் உலகம் முழுவதுமே இதோடு சிறு தொழிலாளிகள் காணமல் போகும் அபாயம் ஒன்று உண்டு. இனி வருங்காலத்தில் நடுத்ததர வர்க்கமும் காணாமல் போய் ஏழை பணக்காரன் என்று இரண்டு வர்க்கம் மட்டுமே இருக்கும் சாத்தியமே அதிகம். உலக வல்லரசு என்று மார் தட்டிக்கொண்டிருந்த நாடுகளுல்லாம் உலக வைரஸ் நாடுகளாகி விட்டன இந்த வல்லரசு ஒழுங்கும் மாறலாம்.

கோமகன் : ஒரு போராளி என்ற வகையில் மௌனிக்கப்பட்ட யுத்தம் எங்கள் சனத்தை மாற்றியிருக்கின்றதா? அதில் இருந்து ஏதாவது படிப்பினைகளை பெற்று இருக்கின்றார்களா?

சாத்திரி: யுத்தம் இல்லை. குண்டுச் சத்தம் ஓய்ந்திருக்கின்றது. அச்சம் இல்லை. உயிர் உடமை இழப்புகள் இல்லை. பொருளாதார தடையில்லை. தங்கு தடையில்லாத போக்குவரத்து எல்லாப் பொருள்களும் எல்லா இடமும் கிடைக்கின்றது. ஆனால், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், பெருகி விட்ட போதைப்பொருள் பாவனை, அதனால் நடக்கும் அன்றாட வன்முறைகள். நிருவாக சீர்கேடு. இவை  எதையும் வெளியிலிருந்து யாரும் வந்து செய்யவில்லை. அனைத்துமே உள்ளுரில் இருப்பவர்களால் தான் நடகின்றது. எல்லாவற்றுக்குமே எல்லோருமே இசைந்து வாழப் பழகிக் கொண்டு விட்டார்கள். இவைகளையே மக்கள் பெற்ற படிப்பினையாக பார்கிறேன்.

சாத்திரி பற்றிய சிறுகுறிப்பு : 

புலம்பெயர் தமிழ் எழுத்துப்பரப்பில் கலகக்காரராகவே தன்னை முன்நிறுத்தியவர் சாத்திரி . இவருடைய அதிரடி எழுத்துக்களுக்காகவே இவர் பலத்த விமர்சனங்களையும் பெரும் வாசகர் வட்டத்தையும் கொண்டவர். இதுவரையில் ஆயுத எழுத்து என்ற நாவலையும் ஐரோப்பிய அவலங்கள் என்ற சிறுகதை தொகுப்பையும் அன்று சிந்திய இரத்தம் என்ற கட்டுரைத்தொகுப்பையும் இலக்கியப்பெருவெளிக்கு தந்திருக்கின்றார்.

02 ஆடி 2021

கோமகன்-பிரான்ஸ்

 

https://naduweb.com/?p=17306

சில எழுத்துப்பிழைகள் திருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 

யாழ் இணையத்தின் கருத்துக்களத்தின் நாங்கள் இருவரும் இணைந்திருந்தோம். இன்றும்கூட நீங்கள் அதில் முத்த உறுப்பினராக இருக்கின்றிர்கள். 😘 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார் தமக்கே உரிய பாணியில் (சுத்தி வளைக்காமல்) நேரடியாகவும் அதிரடியாகவும் பதில்களைத் தந்திருக்கிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருவரும் தம்மை செதுக்கி நிலைநிறுத்திக் கொண்டது இதே யாழ்களம்.

ஆனாலும் இப்போ இருவருமே வெளியில்.

Link to comment
Share on other sites

இவ்வளவு அரசியல் தெளிவுடன் கேட்ட கேள்விகளுக்கு நேர்மையுடன் பதிலளித்துள்ளார் சாத்திரி. அவரது நேர்மையான கருத்துக்களை சரியாக புரியாது அவரை தவறாக பார்தத காலமும் உண்டு. அதற்காக வருந்துகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாரின் பேட்டி சரவெடி 💥💥💥

1. வழமை போல் கேள்விகளுக்கு பதிலால் தெறிக்கவிட்டுள்ளார். அதுவும் சோபா சக்தி, புளித்தமாவு, அவரின் இலக்கிய சொம்புகள் பற்றிய கமெண்ட் 👌.

2. யாழில் ஏன் எழுதுவது குறைந்து விட்டது என்பதற்கான விளக்கம் நிதர்சனமானது. யாழில் நான் வாசகனாக இருந்த போது இவர்கள் (கோமகன், சாத்திரி) எழுதி கொண்டிருந்தார்கள். இப்போ யாழில் கருத்து பரிமாற்றம் அறவே இல்லாமல் போய், இலங்கையை திட்டுவது, டக்லசை திட்டுவது, உலக நாடுகளை திட்டுவது இல்லாவிட்டால் சக கருத்தாளரை திட்டுவது என்று ஏதோ ஆற்றாமை ஆற்றும் நிலையம் போல, யாழ் ஆகி வருவதாக படுகிறது. நானே பல கருத்துக்களை எழுத நினைத்து விட்டு…” ஏன் வீண் வம்பு” என விலகி போகிறேன். ஆகவே சாத்திரி போன்றோருக்கு இங்கே இன்னும் மல்லு கட்டும் பொறுமை இல்லை என்பது விளங்க கூடியதே.

5 hours ago, கிருபன் said:

2009-ல் ஏற்பட்ட தமிழரின் தோல்வியானது பொதுவாகவே எல்லோருக்கும் ஒரு ஏமாற்றத்தையும் சோர்வையும் கொடுத்திருந்தது. பலர் அன்றைய யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளமறுத்தார்கள். நான் உண்மை நிலவரங்களை எடுத்துச் சொல்ல முயன்றபோது முரண்பாடுகளே அதிகரித்தது. அந்த சோர்வு எனக்கும் வந்தபோது நானும் கொஞ்சம் கொஞ்சமாக யாழ் களத்தை விட்டு ஒதுங்கிக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனாலும் அதனை இன்றும் நன்றியோடு நினைவு கூருகிறேன்

 

ஆனால் அந்த சிறுகதையை அந்த உருவகங்களோடு சாத்திரி எழுதி இருக்க கூடாது என்பது என் கருத்து. அதில் என்றும் மாற்றம் இல்லை. அதை ஒரு காலத்தில் அவரும் ஏற்பார் என நம்புகிறேன். கலாச்சாரக் காவலர்கள் என்பதையும் தாண்டி அதில் சில விடயங்கள் உள்ளன.

கருணாநிதியின் அதிகாரம் மட்டுபட்டது என்பதை ஏற்கும் அதேவேளை - அவர் நிச்சயம் கூட்டணி விலகல் ஆயுதத்தை கையில் எடுத்திருக்கலாம். அதன் பெறுபேறு எப்படியாக இருந்திருந்தாலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒப்பந்தம் ஏன் உலக நாடுகளால் ஏற்படுத்தபட்டது, இப்போ பிரபாகரன் v கருணாநிதி என நடக்கும் சமூகவலை அக்கப்போர் பற்றிய பார்வைகள் 👌.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, goshan_che said:

ஒப்பந்தம் ஏன் உலக நாடுகளால் ஏற்படுத்தபட்டது, இப்போ பிரபாகரன் v கருணாநிதி என நடக்கும் சமூகவலை அக்கப்போர் பற்றிய பார்வைகள் 👌.

குணாவின் பதிவில் விளக்கியுள்ளார்.

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி  கிருபன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பல புனைபெயரில் இருந்தும்.. சாத்திரி மட்டும் எப்படி பிரபல்யமானது... என்ற கேள்வியை ஏன் கேட்கவில்லை.. ரகசியமா கோல் போட்டுச் சொல்லியிருப்பாங்க போல.

யாழும்... ஓசிப் பேப்பர்களும் தானே தவிர.. இவர்களின் தாறுமாறான எழுத்துக்கள் மூலம் அல்ல. இவர்களின் சுயபுளுகுகள் எல்லாம்.. இலக்கியமும் அல்ல.. உண்மையான ஈழ வரலாறும் இல்லை.

ஹரிகரன் இப்ப குந்தி எழும்பாத இடமில்லை. காரணம்.. பேச அவருக்கும் விசயமில்லை.. யாரும் மதிக்கிறாங்களும் இல்லை.. 2009 க்குப் பின். 

ஏன் நீங்கள் புலிகளால் இயக்கத்தை விட்டு விரட்டி அடிக்கப்பட்டீர்கள் என்ற கேள்வியையும் கேட்கவில்லை... கேட்டால்.. கெட்ட கோபம் வந்து தாறுமாறாகத் திட்டிவிட்டால்...??1

அதற்கு பழிதீர்க்க.. தேசிய தலைவருக்கு அஞ்சலி செய்வதாக படம் காட்டி.. சிறுமைப்படுத்துபவர் இவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/7/2021 at 18:03, goshan_che said:

யாழில் நான் வாசகனாக இருந்த போது இவர்கள் (கோமகன், சாத்திரி) எழுதி கொண்டிருந்தார்கள். இப்போ யாழில் கருத்து பரிமாற்றம் அறவே இல்லாமல் போய், இலங்கையை திட்டுவது, டக்லசை திட்டுவது, உலக நாடுகளை திட்டுவது இல்லாவிட்டால் சக கருத்தாளரை திட்டுவது என்று ஏதோ ஆற்றாமை ஆற்றும் நிலையம் போல, யாழ் ஆகி வருவதாக படுகிறது. நானே பல கருத்துக்களை எழுத நினைத்து விட்டு…” ஏன் வீண் வம்பு” என விலகி போகிறேன்.

இதை வாசிச்சு போட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறன் கோஷான் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nedukkalapoovan said:

அதற்கு பழிதீர்க்க.. தேசிய தலைவருக்கு அஞ்சலி செய்வதாக படம் காட்டி.. சிறுமைப்படுத்துபவர் இவர். 

சில கேள்விகளுக்கு பதில்  அளிக்காமல் கடந்து சென்று விடுவார் .

 

On 18/7/2021 at 17:03, goshan_che said:

யாழில் நான் வாசகனாக இருந்த போது இவர்கள் (கோமகன், சாத்திரி) எழுதி கொண்டிருந்தார்கள். இப்போ யாழில் கருத்து பரிமாற்றம் அறவே இல்லாமல் போய், இலங்கையை திட்டுவது, டக்லசை திட்டுவது, உலக நாடுகளை திட்டுவது இல்லாவிட்டால் சக கருத்தாளரை திட்டுவது என்று ஏதோ ஆற்றாமை ஆற்றும் நிலையம் போல, யாழ் ஆகி வருவதாக படுகிறது. நானே பல கருத்துக்களை எழுத நினைத்து விட்டு…” ஏன் வீண் வம்பு”

ஏன் அவ்வாறு என்று சிந்தியுங்கள் மனதில் உள்ளதை இங்கு எழுதலாமா ? முக்கியமாய் 2009க்கு முன்பும் கருத்துக்கள் எழுதினார்கள் இப்பவும் கருத்துக்கள் எழுதினால் இங்கு இருக்குமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, குமாரசாமி said:

இதை வாசிச்சு போட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறன் கோஷான் 🤣

🤣 கோஷான் கருத்தெழுதினாலும் அதில் ஒரு மருத்துவ குணம் இருக்கும்🤣.

வாய் விட்டு சிரித்தால்….

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, பெருமாள் said:

ஏன் அவ்வாறு என்று சிந்தியுங்கள் மனதில் உள்ளதை இங்கு எழுதலாமா ? முக்கியமாய் 2009க்கு முன்பும் கருத்துக்கள் எழுதினார்கள் இப்பவும் கருத்துக்கள் எழுதினால் இங்கு இருக்குமா ?

நிர்வாகம் வெட்டுவது அம்மா தலையில் செல்லமாக கொட்டுவது போல 🤣. உடனே கடுப்பாகும். ஆனால் பிறகு சரி என்று உறைக்கும்.

நேற்று மட்டும் நான் எழுதி வெட்டு வாங்கின சேர்த்தா ஒரு அந்தியேட்டி புத்தகம் சைசில ஒரு புத்தகம் போடலாம்🤣.

ஆனால் எனக்கு யாழில் எழுத சோர்வை தருவது ( என்னை பொறுத்த மட்டில் ) நிர்வாக நடவைக்கைகள் அல்ல.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

நிர்வாகம் வெட்டுவது அம்மா தலையில் செல்லமாக கொட்டுவது போல 🤣. உடனே கடுப்பாகும். ஆனால் பிறகு சரி என்று உறைக்கும்.

நேற்று மட்டும் நான் எழுதி வெட்டு வாங்கின சேர்த்தா ஒரு அந்தியேட்டி புத்தகம் சைசில ஒரு புத்தகம் போடலாம்🤣.

ஆனால் எனக்கு யாழில் எழுத சோர்வை தருவது ( என்னை பொறுத்த மட்டில் ) நிர்வாக நடவைக்கைகள் அல்ல.

 

நான் சொல்ல வருவது உங்களுக்கு புரியவில்லை போல் உள்ளது சில அருமையான கருத்துக்கள் உள்ள திரிகள் இடையில் எழுதியவர்கள் சிலரால் அவர்களை அறியாமலே பூட்டப்பட  வேண்டி வந்தது இன்னும் சில திரிகள் அற்புதமான அரசியல் சித்தாத்தங்களை கொண்டது எங்களை ஒற்றுமை படுத்துவது பற்றியது என்னமோ தெரியலை ஆரம்பத்திலே மூடிக்கொண்டார்கள் அப்படியான நடவடிக்கைகள் தமிழக கருத்தாளர்களை இங்கு வருவதுக்கு தடங்கலாகியது என்பதை அவர்கள் உணரவில்லை இது என்னுடைய பார்வை சிலவேளை மற்றவர்களுக்கு என்போல் சிந்தனை இல்லாமல் இருக்கலாம் நமது எண்ணம் யாழ் என்பது தமிழ் கூறும் நல்லுலகில் தவிர்க்க முடியாத சமூக ஊடகவியல் தளமாக  மாறனும் என்பது என் அவா அவ்வளவே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//சாத்திரி : இதுதான் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு என்று எடுத்தவரே சொல்லக் கூடாது. இதனை ஏன் சொல்கிறேன் என்றால்இ ஈழத் தமிழர் பற்றியோ அவர்கள் போராட்ட வரலாறு பற்றியோ ஒரு இந்தியரால்இ ஏன் அவர் தமிழ் நாட்டுக்காரராக இருந்தாலும் சரி ஒரு போதும் இரத்தமும் சதையுமாக உணர்வோடு கலந்து ஒரு திரைப்படத்தை எந்தக்காலத்திலும் எடுக்க முடியாதென்கிற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருப்பவன் நான். கடந்த காலங்களில் ஈழம் பற்றி வெளிவந்த அத்தனை திரைப்படங்களும் அதனை நிரூபித்திருக்கின்றது .//

தமிழகத்தமிழரால் மட்டும் அல்ல தொண்ணூறுகளின் பிற்பகுதியில் இருந்து ஈழத்தில் பிறந்த தலைமுறயாலும்  வெளிநாட்டில் பிறந்த எமது பிள்ளைகளாலும் கூட அதை ரத்தமும் சதையுமாக ஒரு போதும் பதிவு செய்யமுடியாது.. புலம்பெயர்ந்த எம்மவர்களின் பிள்ளைகள் சிலர் வெளிநாட்டுக்காரருக்கு எமது பிரச்சினையை பத்தி விளங்கப்படுத்திய வீடியோக்கள் பாத்து தலையில் அடித்திருக்கிறேன்.. அந்த வரலாற்றை பதிவு செய்யவேண்டியது அதற்குள் வாழ்ந்த எமது கடமை.. இல்லையேல் இந்த வரலாறு இருக்காது பின்வரும் தலைமுறை அறிந்துகொள்ள..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

தமிழகத்தமிழரால் மட்டும் அல்ல தொண்ணூறுகளின் பிற்பகுதியில் இருந்து ஈழத்தில் பிறந்த தலைமுறயாலும்  வெளிநாட்டில் பிறந்த எமது பிள்ளைகளாலும் கூட அதை ரத்தமும் சதையுமாக ஒரு போதும் பதிவு செய்யமுடியாது..

முன்பு இலங்கையில் இருந்த  சீனியர் ஒருவரிடம் நான் கேட்டபோதும் இது மாதிரி தான் சொன்னார். படத்தில் பல கற்பனைகள் செருகபட்டுள்ளதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

தமிழகத்தமிழரால் மட்டும் அல்ல தொண்ணூறுகளின் பிற்பகுதியில் இருந்து ஈழத்தில் பிறந்த தலைமுறயாலும்  வெளிநாட்டில் பிறந்த எமது பிள்ளைகளாலும் கூட அதை ரத்தமும் சதையுமாக ஒரு போதும் பதிவு செய்யமுடியாது.. புலம்பெயர்ந்த எம்மவர்களின் பிள்ளைகள் சிலர் வெளிநாட்டுக்காரருக்கு எமது பிரச்சினையை பத்தி விளங்கப்படுத்திய வீடியோக்கள் பாத்து தலையில் அடித்திருக்கிறேன்.. அந்த வரலாற்றை பதிவு செய்யவேண்டியது அதற்குள் வாழ்ந்த எமது கடமை.. இல்லையேல் இந்த வரலாறு இருக்காது பின்வரும் தலைமுறை அறிந்துகொள்ள..

இலங்கை அரசுக்கோ அல்லது ஹிந்தியர்களுக்கோ புலிகள் பிரச்சனை அல்ல புலிகளின் சித்தாந்தங்கள் அடுத்த தலைமுறைக்கும் போக கூடாது என்பதுவே அவர்களின் முக்கிய நோக்கம் இங்கு கூட அடுத்த தலைமுறைக்கு கந்தன் கருணை கொலை தெரியணும் என்று ஒத்தைக்காலில் நிற்பவர்கள் யாரின் ஆட்கள் என்பது சொல்லியா தெரியணும் ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

இன்னும் பல புனைபெயரில் இருந்தும்.. சாத்திரி மட்டும் எப்படி பிரபல்யமானது... என்ற கேள்வியை ஏன் கேட்கவில்லை.. ரகசியமா கோல் போட்டுச் சொல்லியிருப்பாங்க போல.

யாழும்... ஓசிப் பேப்பர்களும் தானே தவிர.. இவர்களின் தாறுமாறான எழுத்துக்கள் மூலம் அல்ல. இவர்களின் சுயபுளுகுகள் எல்லாம்.. இலக்கியமும் அல்ல.. உண்மையான ஈழ வரலாறும் இல்லை.

ஹரிகரன் இப்ப குந்தி எழும்பாத இடமில்லை. காரணம்.. பேச அவருக்கும் விசயமில்லை.. யாரும் மதிக்கிறாங்களும் இல்லை.. 2009 க்குப் பின். 

ஏன் நீங்கள் புலிகளால் இயக்கத்தை விட்டு விரட்டி அடிக்கப்பட்டீர்கள் என்ற கேள்வியையும் கேட்கவில்லை... கேட்டால்.. கெட்ட கோபம் வந்து தாறுமாறாகத் திட்டிவிட்டால்...??1

அதற்கு பழிதீர்க்க.. தேசிய தலைவருக்கு அஞ்சலி செய்வதாக படம் காட்டி.. சிறுமைப்படுத்துபவர் இவர். 

நேர்காணலுக்கு பதில் எழுதாமல் நேர்காணல் நடத்திய நபர்கள் மேல் காழ்ப்புணர்ச்சியில் எழுதியது போல இருக்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

நேர்காணலுக்கு பதில் எழுதாமல் நேர்காணல் நடத்திய நபர்கள் மேல் காழ்ப்புணர்ச்சியில் எழுதியது போல இருக்கு..

உங்களுக்கு அப்படியா தெரியுது ?

 

4 hours ago, nedukkalapoovan said:

இன்னும் பல புனைபெயரில் இருந்தும்.. சாத்திரி மட்டும் எப்படி பிரபல்யமானது... என்ற கேள்வியை ஏன் கேட்கவில்லை.. ரகசியமா கோல் போட்டுச் சொல்லியிருப்பாங்க போல.

அந்த நேரம்களில் கருத்து எழுதுபவர்கள் இன்ன ஐபியில் வந்து எழுதுகிறேம்  என்று எழுதும் அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது .

 

4 hours ago, nedukkalapoovan said:

யாழும்... ஓசிப் பேப்பர்களும் தானே தவிர.. இவர்களின் தாறுமாறான எழுத்துக்கள் மூலம் அல்ல. இவர்களின் சுயபுளுகுகள் எல்லாம்.. இலக்கியமும் அல்ல.. உண்மையான ஈழ வரலாறும் இல்லை.

இதுக்கு சாத்திரியார் அண்ட் கோமகன் பதில் அளிக்கணும் பதில்வருமா என்பது கேள்வி குறி .

 

4 hours ago, nedukkalapoovan said:

ஏன் நீங்கள் புலிகளால் இயக்கத்தை விட்டு விரட்டி அடிக்கப்பட்டீர்கள் என்ற கேள்வியையும் கேட்கவில்லை... கேட்டால்.. கெட்ட கோபம் வந்து தாறுமாறாகத் திட்டிவிட்டால்...??1

இதற்குரிய விளக்கம் இன்னும் வரவில்லை இங்கே பலமுறை கேட்டு களைத்து விட்டாயிற்று .

 

4 hours ago, nedukkalapoovan said:

அதற்கு பழிதீர்க்க.. தேசிய தலைவருக்கு அஞ்சலி செய்வதாக படம் காட்டி.. சிறுமைப்படுத்துபவர் இவர். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/7/2021 at 18:03, goshan_che said:

சாத்திரியாரின் பேட்டி சரவெடி 💥💥💥

2.

நீங்கள் சொன்ன 2. இருந்து பழைய வரலாறு அறிந்து கொள்ள உதவியாக இருந்தது.😎

Link to comment
Share on other sites

கோமகன், சாத்திரி அவர்களை மீண்டும் யாழ்களித்திற்கு கொண்டுவந்த கிருபனுக்கு மிக்க நன்றிகள்.!! பழமை என்றும் இனிமைதான். அது பாட்டாக இருந்தாலென்ன? பதிவாக இருந்தாலென்ன.??🙏🙌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தரமான வினாக்களும் தழும்பலில்லாத பதில்களும்.......நன்றி இருவருக்கும் கூட கிருபனுக்கும்.....!  🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/7/2021 at 20:17, கிருபன் said:

அவர் கற்பூரம் கொளுத்த தீபெட்டி, தீ குச்சு எடுத்துக்கொடுத்து விட்டு பயபக்தியோடு அவரின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கி நிக்கும் எங்கள் இலக்கியச் செம்புகளும் ஒரு காரணம்.

நம்ம குருவுக்கு நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

🤣 கோஷான் கருத்தெழுதினாலும் அதில் ஒரு மருத்துவ குணம் இருக்கும்🤣.

வாய் விட்டு சிரித்தால்….

 எழுத்துக்களில் மருத்துவ குணம் உள்ள தாங்கள் ஏன் ஆஸ்பத்திரி திறந்து சேவை புரியக்கூடாது?😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 எழுத்துக்களில் மருத்துவ குணம் உள்ள தாங்கள் ஏன் ஆஸ்பத்திரி திறந்து சேவை புரியக்கூடாது?😎

அதுதான் “ஆற்றாமை ஆற்றும் மன்றமாகிய” யாழ்களத்தில் எனது பார்வை நேரத்தை அதிகரித்துள்ளேனே🤣.

#டொக்டரிண்ட எச்சிலும் மருத்துதானே🤣

#தெனாலி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
    • பிற்சேர்க்கை III வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா  அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது. ————— இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம். அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்.. முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”. இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார். அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள். ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில், ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும்.  அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம். இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள். இதில் நன்மை என்னவென்றால் - இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும். எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன். இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை).  ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள்.  ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன். டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது. எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன். கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார். என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே? ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன். உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர். 40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣. கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன். அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன். கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது. ———————- ஆவலோடு காத்திருங்கள்! பிற்சேர்க்கை IV வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்
    • 1994 இல் மயிலாப்பூர் சட்டமன்றத்துக்கும் இன்னுமொரு சட்டமன்றத்துக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது.  யாராவது MLA காலமானால் அல்லது வேறு சில காரணங்களுக்காக இடைக்கால தேர்தல் நடைபெறும். தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறாமல் ஒன்று இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதினால் முக்கிய தலைவர்களை இத்தொகுதிகளில் அடிக்கடி காணலாம். நான் அடையார் , Besant நகர் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு. அப்பொழுது பல தலைவர்களை பார்த்திருக்கிறேன். பாட்டாளி மக்கள் தலைவர் இராமதாஸ் சென்ற வாகனத்தில் மன்சூர் அலிகானை வந்திருந்தார். ‘ பிரபாகரன் கிரேட், இராவணன் கிரேட்’ என்று அவர் உரையாற்றினார்.  வைகோவுடன் எஸ் எஸ் சந்திரன் வந்திருந்தார்.  நடிகர் எஸ் எஸ் சந்திரன் மதிமுகவில் அப்பொழுது இருந்தார் கலைஞ்சர் கருணாநிதிஐக்கண்டதும் பல ஆதரவாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட சொன்னார்கள். ஒரு பிள்ளைக்கு ‘ கனிமொழி’ என்று பெயர் சூட்டினார். இன்னுமொரு பிள்ளைக்கு ‘இளவரசன்’ என்று பெயர் சூட்ட, ‘இவர் பெண் குழந்தை’ என்று குழந்தையின் தகப்பனார் சொல்ல ‘இளவரசி’,என்று கலைஞர் பெயர் சூட்டினார்.  ‘அவர்கள் லட்டினுள் மோதிரம் வைத்து குடுக்கிறார்கள் ( அதிமுக கட்சி) . வாங்குங்கள் . ஆனால் வாக்குகளை எமக்கு அளியுங்கள்’ என்றார். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தருகில் துவிச்சக்கரவண்டியில் வரும்போது காவல்துறையினர் என்னையும் சேர்ந்து பலரை மறித்து நிறுத்தினார்கள். சில நிமிடங்களில் ‘அதோ அந்த பறவை போல’  பாடலை Band குழு ஒன்று இசை அமைக்க வாகனம் ஒன்று வந்தது. பின்னால் வந்த இன்னுமொரு வாகனத்தில் ஜெயலலிதா அவர்கள் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படைகளுடன் வந்து உரையாற்றினார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டின் அருகே செல்லும் போது எப்போதும்கண்டும் காணாமல் மாதிரி செல்வார்.  ஆனால் தேர்தல் என்றதினால் கை குப்பி என்னை பார்த்து வணங்கினார். தமிழக பத்திரிகைகளில் தேர்தல் செய்திகள் வாசிப்பதுண்டு. இதனால் ஓரளவு ஆர்வம்
    • "மாற்றம்" [யாழ்ப்பாணத்து மருத்துவ மாணவனின் கதை]   துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தான். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தான். குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவன் மட்டுமல்ல; அவன் தனது தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்திற்காக ஒரு தீவிர சமூக உழைப்பாளியாகவும் இருந்தான். தமிழரின் வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று கதைகளிலும் மற்றும் இன்று நடைபெறும் அரசியல் அழுத்தங்களிலும் வளர்க்கப்பட்ட அவன், ஒரு அரசியல் 'மாற்றம்' தேவை என்பதை விரும்பியது  மட்டுமல்ல, தனது மக்களின் வாழ்வு மற்றும் செழிப்புக்கு அது இன்றியமையாதது என்றும்  நம்பினான். குறளரசன் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், இலங்கை வாழ் தமிழ் இளைஞர்களின், சமூகத்தின்  நம்பிக்கையின் விளக்காக நின்றது. இங்குதான் சிங்கள வம்சாவளியைச் சேர்ந்த, அனுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட,  முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியான ருவனிக்காவை [Ruwanika] அவன் முதல் முதல் சந்தித்தான். அவர்களின் நட்பு இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டி ஆழமான ஒன்றாக மலர்ந்தது. ஆனால் அவர்களின் பாசத்தின் அரவணைப்பில் கூட, குறளரசனால் அவர்களது சமூகத்தை ஆட்கொண்ட ஆழமான வேரூன்றிய பிளவுகளின் நிழலை மறக்க  முடியவில்லை. அவன் அதில் உறுதியாக நின்றான்.  குறளரசன் தனது படிப்பில் ஆழமாக இருந்தாலும், தன் இலங்கை மக்களின் வரலாற்றை சரியாக அறிவதிலும் முழுமையாக தன் கவனத்தை செலுத்தினான். தமிழ் சிறுபான்மை யினருக்கும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில், அரசாங்க தலைவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும், பின் அவ்வாற்றில் முக்கியமான ஒன்றையேனும் நிறைவேற்றாமல் உடைக்கப்பட்டு கிடங்கில் போட்டத்தையும் மற்றும் ஒவ்வொரு முறையும் தமிழர்களின் சுதந்திரம், கல்வி, உரிமைகள், காணிகள், வழிபாடுகள் மேலும் மேலும் பறிக்கப்படத்தையும், மறுக்கப்படத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் தொல்லைகளையும்  சிதைந்த கனவுகளையும் பற்றி அவன் அடிக்கடி சிந்தித்தான். 1957 பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்படிக்கையில் இருந்து தொடர்ந்து பல தசாப்தங்களில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான தோல்வியுற்ற முயற்சிகள் வரை, குறளரசன் காட்டிக்கொடுப்பு மற்றும் ஏமாற்றங்களின் தொடர்ச்சிகளைக் கண்டான்.  ஆனாலும், விரக்தியின் மத்தியில், புத்தரின் உண்மையான போதனைகளில் குறளரசன் ஆறுதல் கண்டான். ஞானம் பெற்றவர் போதித்த இரக்கம், சகிப்புத்தன்மை, புரிதல் ஆகிய கொள்கைகளை அவன் நம்பினான். இனம் மற்றும் மதத்தின் தடைகளைத் தாண்டி, இந்த விழுமியங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு சமூகத்திற்காக அவன் ஏங்கினான். நீண்ட காலமாக தனது மக்களை ஒடுக்கிய ஒரு மகாவம்சம் என்ற புராண கதையின் கனத்துடனும் போராடினான். குறிப்பாக புத்த சமயத்தை போதிக்கும் துறவிகள், உண்மையில் இலங்கையில் முறையாக பின்பற்றுகிறார்களா என்று தனக்குத் தானே கேள்வி கேட்டான்?   மகாவம்சம், பாளி மொழியில் எழுதிய, புத்தமதத்தை முன்னிலைப்படுத்திய வரலாற்றின் புராணக் கதையாகும். மகாவிஹரா துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், இலங்கையில் ஒரு சிங்கள இனம் என்று ஒன்றும் இருக்கவில்லை என்பது வரலாற்று உண்மையாகும். அதனை  முதல் வில்ஹெய்ம் கெய்கர் பாளி மொழியில் இருந்து ஜெர்மன் மொழிக்கும் பின்னர், 1912ல் ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்ப்பு செய்தனர், அதன் பின்பு தான் சிங்கள மொழிபெயர்ப்பு வந்தது, அதுவரை இலங்கையில் சிங்கள - தமிழ் வேறுபாடுகிடையாது, அதன் பின் தமிழருக்கு எதிரான கருத்துக்கள் தீவின் மீது நீண்ட நிழலைப் போட்டு இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றது. எனவேதான் குறளரசன் மற்றும் தமிழ் சமூகத்திற்கு, மகாவம்சம் ஒரு வரலாற்று புராண நூல் மட்டுமல்ல; அது ஒடுக்கு முறைக்கான ஒரு கருவி, ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப் பட்ட ஆயுதம் ஆக அது தென்பட்டது, அதனால் தான் பொய்யான புராண கதையில் இருந்து உண்மையான தொல்பொருள் மற்றும் வரலாறுச் சான்றுகள் கூடிய இலங்கை வரலாறு 'மாற்றம்' காணவேண்டும், உண்மையின் அடிப்படையில், இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் பேசி வாழும் இலக்கை தமிழர்களின் மேல் அரசு கொண்டு இருக்கும் நிலையில் 'மாற்றம்' வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக புத்தரின் போதனைகளை போதிப்பவர்கள், அவர் வழியில் தங்கள் வாழ்க்கையை அமைக்கும்  'மாற்றம்' தேவைப்படுகிறது. இந்த மூன்று மாற்றங்களையும் தான் குறளரசன் காணத் துடித்தான்.   சிறுவயதிலிருந்தே, மகாவம்சத்தின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் பல வரலாற்று உண்மைகளை கற்றுக் கொண்டான், உண்மையை மறைக்கும் கட்டுக்கதைகள் மற்றும் பிரச்சாரத்தின் அடுக்குகளையும் அது முன்வைக்கும் ஆபத்தான முறையில் தவறாக வழிநடத்தும், வெறும் பக்கச்சார்பான விவரிப்புகளையும் அறிந்தான். இது சிங்கள புத்த  தலைமுறைகளின் மனதை விஷமாக்கும் பொய்கள் என்பதை அவன் உண்மையான சான்றுகளுடன் அறிந்தான். அதனால்த் தான் 'மாற்றம்' உடனடியாகத் தேவை என்கிறான்!  ஆனால் மகாவம்சத்தின் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டது தமிழர்கள் மட்டும் அல்ல. இந்த வரலாற்று சூழ்ச்சிக்கு சிங்கள சாமானிய மக்களும் எப்படி பலியாகினர் என்பதை குறளரசன் இலங்கையின் இன்றைய நிகழ்வுகளில் நேரில் கண்டான். மற்ற சமூகங்களின் பங்களிப்புகள் மற்றும் இருப்பை அழிக்கும் அரசியல் மற்றும் மத தலைவர்களின் செயல்களில்! அது தான் 'மாற்றத்துக்காக' ஏங்குகிறான்!  புத்தர், ஞானம் பெற்றவர், இரக்கம் மற்றும் அகிம்சையின் செய்தியைப் போதித்தார், ஆனால் அவரது போதனைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்ய திரிக்கப்பட்டன. உலகளாவிய அன்பு மற்றும் புரிதல் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட ஒரு மதம், மற்றவர்களை ஒதுக்கி வைப்பதையும் ஒடுக்குவதையும் நியாயப்படுத்த எப்படி இன்று ஒத்துழைக்கப்பட்டது என்று குறளரசனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. குறளரசனும் ருவனிக்காவும்  தங்களின் உறவின் சிக்கல்களை சிலவேளை எதிர் கொள்ளவேண்டி இருந்தது. அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள தப்பெண்ணங்கள் மற்றும் பாரபட்சங்களை அடிக்கடி எதிர்கொண்டனர். கடந்த காலத்தின் பாவங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டு, திருத்தப்பட்டு, மன்னிப்பு கேட்டு, அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை, இவ்வாறான அதி முக்கிய 'மாற்றத்தை' இருவரும் எதிர் பார்த்தனர்.  "இருஇனம் வாழும் ஒரு நாட்டில்  இருக்கையை பிடுங்கி எடுத்து தனதாக்கி இறுமாப்புடன் வரலாற்றையும் திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? "  "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி  இணக்கம் கண்டு இதயம் பரிமாறி  இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு  இனியாவது மன்னிப்பு கேள் நாடுமுன்னேறும்! " இந்த 'மாற்றம்' தான் அவன் சுருக்கமாக எதிர்பார்ப்பது. எது எப்படியானாலும்,  அவர்களின் காதல் ஒரு இணக்கமான சகவாழ்வு சாத்தியம் என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது, கருத்து வேறுபாடு இலங்கையில் நிலவினாலும், அவர்களின் வாழ்க்கை என்ற கடலில், நம்பிக்கை கலங்கரை விளக்காக இருந்தது. வருடாந்த ஜெனிவா தலையீடுகள் குறளரசனுக்கும் அவரது சமூகத்திற்கும் ஒரு நம்பிக்கையை அளித்தன. இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் அமைப்பு ரீதியான அநீதிகளுக்கு தீர்வு காண சர்வதேச சமூகம் இங்குதான் கூடுகிறது. குறளரசன் அர்த்த முள்ள 'மாற்றத்திற்காகவும்', தனது கடமைகளை மதிக்கும் மற்றும் அனைத்து குடிமக்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் ஒரு அரசாங்கத்திற்காகவும் உருக்கமாக பிரார்த்தனை செய்தான். அவனுடன் அவனின் காதலி ருவனிக்காவும்  இணைந்து கொண்டாள். என்றாலும் குறளரசனும் ருவனிக்காவும் பாவத்தில் இருந்து இலங்கையை மீட்பதற்கான பாதை தடைகள் நிறைந்தது என்பதை உணர்ந்தனர். மேலும் 'மாற்றம்' எளிதில் வராது என்பது  குறளரசக்குத் தெரியும். அறியாமை மற்றும் தப்பெண்ணத்தின் தூக்கத்திலிருந்து ஒரு நாள் முழு சமூகமும் விழித்து, கடந்த கால தவறுகளை உணர்ந்து, நல்லிணக்கம் மற்றும் நீதியை நோக்கி ஒரு புதிய பாதையை உருவாக்குமா? அல்லது அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் அங்கீகரிக்கும் அதிகாரங்களை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகத்தின் இடைவிடாத அழுத்தம் தேவைப்படுமா?. அவன் மனம் அலை பாய்ந்தது. இந்த கவலையிலும், மற்றும் படிப்பாலும், அவன் சிலவேளை தனிமையை விரும்பினான். இதனால் அவன் ருவனிக்காவை சந்திப்பதும் குறையத் தொடங்கியது. இது அவளுக்கு ஒரு தவிப்பைக் கொடுத்தது.  ஒரு நாள் அவள், அவனின் காதில் விழக்கூடியதாக தன் தவிப்பை ஒரு சிங்கள பாடலை முணுமுணுத்து எடுத்துக் காட்டினாள். 'සිහිනෙන් වගේ ඇවිදින් ආයෙත් සැගවී හිටියේ කොහෙදෝ? මදකින්  පෙනී නොපෙනී ගියේ මේ ආදරේ හැටිදෝ  ?' 'නෙත සනසනා නුඹගේ සිනා මා රැය පුරා එය සිහි කලා නිදි දෙවු දුවත් අද නෑ ඇවිත් ඈතින් ඉදන් සරදම් කලා.'. 'නෙතු වෙහෙසිලා  දහවල  පුරා නුඹ සොය සොයා සිත දුර ගියා  මදකින්  පෙනී නොපෙනී ගියේ මෙ ආදරේ හැටිදෝ  ?'   குறளரசன் மௌனமாக கண்ணீர் சிந்தி, அதே பாடலை தமிழில் முணுமுணுத்தான். "மீண்டும் வருவாயோ கனவில் அணைப்பாயோ? எங்கே மறைந்தாய் ? எந்தத் தொலைவில் ? திடீரெனத் தோன்றுவாய்? சடுதியாக மறைவாய்? உண்மைக் காதலா?, வெறும் நாடகமா?" "சோர்ந்த கண்களுக்கு புன்னகை தைலம் இரவின் மடியில் முகத்தைக் காண்கிறேன்  இரவுதேவதை என்னைத் தழுவ மறுக்கிறாள்?  தூர விலகி கிண்டல் செய்கிறாள்?." "பகலில் கண்கள் சோர்வு அடையுதே  இதயம் அலைந்து உன்னைத் தேடுதே!  கண்ணுக்குள் அகப்படாதா காதலா இது? கணப்பொழுதில் கடக்கும் கனவின் மகிழ்ச்சியா ?" குறளரசன் தனது மருத்துவப் பயிற்சியின் இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அவன் நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையே கிழிந்துக் கொண்டு இருந்தான். முன்னோக்கி, செல்லும் நேரிய பாதை சவால்கள் நிறைந்ததாக இருந்தது, ஆனால் அவன் ஒரு சிறந்த நாளைய கனவுகளை என்றும் கைவிட மறுத்துவிட்டான். கல்வி, சுறுசுறுப்பு மற்றும் அன்பு ஆகியவற்றின் சக்தியை அவன் நம்பினான். பிளவு மற்றும் அவநம்பிக்கையால் பிளவுபட்ட சமூகத்தின் குழப்பங்களுக்கு மத்தியில் அவர்களின் காதல் மலர்ந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முற்றங்களில் மற்றும் மாலை நேர உலாக்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளில் ஆறுதலைக் கண்டார்கள், அவர்களின் காதல் வெளியில் வீசும் புயல்களிலிருந்து ஒரு தற்காலிக அடைக்கலமாக இருந்தது.  "மாலை நேர தென்றல் என்ன பாடுதோ என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ?" "பூ விரிந்த சோலை என்ன எண்ணுதோ இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு?" ஒரு சிங்கள குடும்பத்தின் மகளான ருவனிக்காவுக்கு, குறளரசனை நேசிப்பது என்பது பிறப்பிலிருந்தே அவளிடம் சூழ்நிலை காரணமாக வேரூன்றியிருந்த தப்பெண்ணங்கள் மற்றும் பக்கசார்புககளின் தாக்கங்களை கலையத் தொடங்கியது. குறளரசனின் தமிழ் மக்கள் சமூகத்தின் விளிம்புநிலையில் நலிந்தபோது, எழுபத்தி ஆறு ஆண்டுகளாக, சலுகை மற்றும் அதிகாரத்தால் பயனடைந்த ஒரு சமூகத்தைச் தான் சேர்ந்தவர் என்ற குற்ற உணர்வுடன் அவள் சிலவேளை மல்யுத்தம் செய்தாள். ஆனால் குறளரசனிடம், அவள் ஒரு காதலியாக மட்டுமல்ல, நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஒரு பங்காளியாகவும் இருந்தாள். ஒன்றாக, காதல் இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டிய எதிர்காலத்தை கற்பனை செய்யத் துணிந்தனர், அங்கு கடந்த கால பாவங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டன. அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் வாசலில் நிற்கும் போது, குறளரசனும் ருவனிக்காவும் ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டனர், அவர்களின் காதல் இருள் கடலில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. ஏனென்றால், அவர்களின் கூட்டணியில், மகாவம்சத்தின் எதிரொலிகள் மௌனமாகி, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் புரிந்துணர்விற்காக அழைப்பு விடுக்கும் குரல்களின் சேர்ந்திசையால் [கோரஸால்] பதிலீடு செய்யப்பட்ட எதிர்காலம் பற்றிய வாக்குறுதி இருந்தது. யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், குழப்பமான கடந்த காலத்தின் எதிரொலிகள் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தின் கிசுகிசுக்களின் மத்தியில், குறளரசன் தனது மக்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உயர்ந்து நின்றான். மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய அவனது அசைக்க முடியாத நம்பிக்கையில், ஒரு நாள், தமிழர்களின் குரல்கள் கேட்கப்படும், அவர்களின் கனவுகள் நனவாகும், 'மாற்றம்' கட்டாயம் நிகழும் என்ற நம்பிக்கை, மற்றும் இரவீந்தரநாத் தாகூரின் கீதாஞ்சலி பாடல் [“Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;] அவனின் போராட்டத்தைத் தொடர ஊக்கம் & கொடுத்தது.  வலிமையைக் கொடுத்தது. "இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே  உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ, வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ, விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ, அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம்  எங்கே பாழடைந்த பழக்கம் என்னும் பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ, நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும் இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ,  அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்!" [கீதாஞ்சலி / தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா] நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.