Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓர் போராளியின் வாக்குமூலம் ( கற்பனைக் கதை அல்ல)

Featured Replies

யாழில் வாசித்துக் கொண்டிருக்கும் ஒரு முன்னை நாள் போராளிக்கு மேற்கின் சிந்தனையாளர்களைப் புகழ்வதாகத் தொனிப்படும் எழுத்துக்கள், அறிந்தோ அறியாமலோ உள் நுழையும் ஆங்கில வார்த்தைகள், கல்வி மற்றும் பல்கலைக்கழகம் சார்ந்த உரையாடல்கள், தாம் இழந்து போன சந்தர்ப்பங்களை நினைவு படுத்தும். அதுவும் இன்று இலக்கின்றி நிற்கையில், இவ்வாறான தலைப்புக்கள் அருவருப்பும் ஆத்திரமும் சேர்ந்து வரப்பண்ணும்.

நான் அப்போது அகதியாய் இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தில கொக்குவிலில இருந்தன். அது போர் உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டு இருந்த காலம். அன்று ஒரு நாள் பிரவுன் வீதியால யாழ்நகர் நோக்கி துவிச்சக்கரவண்டியில போய்க்கொண்டு இருக்கேக்க எதிராக இன்னுமோர் துவிச்சக்கரவண்டியில சென்ற ஒருத்தன் திடீரெண்டு என்ர பெயரைச் சொல்லி கூப்பிட்டான். நானும் ஆச்சரியப்பட்டு யார் என்று திரும்பிப் பார்த்தன்.

அது எனது பழைய நண்பன். முந்தி பாடசாலைக்கு நாங்கள் இரண்டுபேரும் ஒன்றாய் போவம். வகுப்பிலையும் பக்கத்தில பக்கத்திலதான் இருக்கிறது. ஆரம்பத்தில அவன் எனக்கு உயிர் நண்பன் மாதிரி. ஆனால்.. நாங்கள் நாலாம் வகுப்பு படிக்கேக்க இரண்டுபேருக்கும் ஒரு சண்டை. அவன் எனக்கு அடிச்சுப்போட்டான். அதுக்கு பிறகு நாங்கள் ஆளோட ஆள் இரண்டு வருசமாய் கதைக்கிறது இல்லை. பிறகு எப்படியோ மீண்டும் நல்ல நண்பர் ஆகினம். திரும்பவும் எட்டாம் வகுப்பில மீண்டும் இரண்டு பேருக்கும் சண்டை. அவனுக்கு மூக்கில அடிச்சால் சரியான கோவம் வரும். ஏதோ பிரச்சனையில எனக்கு அடிச்சான். நானும் திருப்பி அடிச்சன். அப்ப அவனுக்கு நான் மூக்கில குத்திப்போட்டன். அதுக்கு பிறகு பல வருசங்கள் கடந்து, இன்று அவன் என்ரை பெயரை சொல்லிக்கூப்பிடும் வரைக்கும் நாங்கள் இரண்டுபேரும் ஒருத்தரோட ஒருத்தர் கதைக்கிறது இல்லை. பழைய கோபம், நாங்கள் பெரிய கோவக்காரர் என்று எல்லாம் இல்லை. இருவருமே நாங்கள் செய்த தவறுக்காய் வருந்தினம். மீண்டும் நண்பர்களாய் இருக்க உள்ளார விரும்பினம். ஆனாலும், யார் முதலில கதைச்சு நேசம் போடுறது எண்டு ஒரு பிரச்சனை, வெக்கம் வேற. இதனால நட்பை சின்னனில மீண்டும் புதுப்பிக்க முடிய இல்லை.

சரி அப்ப என்ன என்றால்... நான் எட்டாம் வகுப்பு முடிய இஞ்சால யாழ் நகரத்து பள்ளிக்கூடம் ஒன்றுக்கு மாற்றலாகி வந்திட்டன். அவன் படிப்புக்கு கொஞ்சம், கொஞ்சமாய் முழுக்கு போட்டுட்டு கூலி வேலை செய்கிறதில அதிக ஈடுபாடு காட்டத்தொடங்கினான். அவன் படிப்பில நல்ல கெட்டிக்காரன். ஆனால், வீட்டில வறுமை. அவன் சிறுவயதில இருந்தே கூலி வேலைகளுக்கு போறது. இப்படி நிலமை இருக்கேக்க.. கொஞ்சக்காலத்தால இவனும் இயக்கத்துக்கு போயிட்டான் என்று ஊர்ப்பெடியங்கள் எனக்கு சொன்னாங்கள். அங்கை என்ன செய்கிறான் என்று ஒரு தகவலும் தெரியாது. எங்கை இருக்கிறான் என்றும் தெரியாது.

அவன் இயக்கத்துக்கு போனபிறகு இண்டைக்குத்தான் திரும்பவும் காணுறன். "டேய், எப்பிடி மச்சான் சுகங்கள்" என்று தான் இப்ப இயக்கத்தில இருக்கிற விசயம் முதற்கொண்டு எல்லாம் சொல்லி, என்னை பற்றி, மற்றைய நண்பர்கள், ஊர் ஆக்கள் எல்லார் பற்றியும் விசாரிச்சு, எனது வீட்டு முகவரியையும் கேட்டு சென்றான். அவன் ஒரு காலில பெரியதொரு காயம். கட்டுப் போடப்பட்டு இருந்திச்சிது. கெந்திக்கெந்தித்தான் நடப்பான். இன்னொரு பெடியன் அவனை துவிச்சக்கரவண்டியில ஏத்திவந்தான். அன்றைக்கு சுமார் கால் மணித்தியாலம் தெருவிலையே ஓரமாய் நின்று கதைச்சுப்போட்டு போயிட்டம்.

சில கிழமைகளின் பின்னர் அவன் தனியாக என்ர வீட்டுக்கு வந்தான். சுமார் இரண்டு மணித்தியாலங்கள் சொச்சம் என்னோட பல்வேறு விசயங்கள் பற்றி மனம் திறந்து கதைச்சான். பிறகு மீண்டும் வந்தான். அடிக்கடி வந்தான். மணித்தியாலக்கணக்கில என்னோட கதைச்சு தனது மனச்சுமைகளை இறக்கிக்கொண்டான். தான் கெதியில இயக்கத்தை விடப்போவதாய் சொன்னான். என்னை மாதிரி தானும் படிச்சு நல்லாய் வரவேணும் எண்டு ஆசைப்படுவதாய் சொன்னான். என்னட்ட படிக்கிறதுக்கு உதவிகள் கேட்டான். நான் பல்கலைக்கழகத்துக்கு அருகில இருந்த ஓர் மடத்தில கிழமையில சில நாட்கள் விஞ்ஞானம், கணிதம் பாடங்களை படிப்பிச்சு அவன் ஆசை பூர்த்தி செய்யப்படுகிறதுக்கு என்னால முடியுமான உதவிகளை செய்தன். கடைசியில அவன் இயக்கத்தில இருந்துகொண்டே ஒரு மாதிரி க.பொ.சா சோதனை தேர்ச்சி பெற்றுட்டான்.

பிறகு க.பொ.உயர்தரம் உயிரியல் படிக்கத் தொடங்கினான். எனது இன்னோர் நண்பனிண்ட அப்பா ஓர் இரசாயனவியல் ஆசிரியர். என்னைப்போலவே எனது மற்றைய நண்பன், அவன் அப்பா, அவன் குடும்பத்தினர் அனைவருமே அவனுக்கு தங்களாலான உதவிகள் செய்வதாய் சொன்னார்கள், செய்தார்கள். இவன் படிக்கிற விசயங்கள், இவன் இயக்கத்தை விடப்போற விசயங்களும் எங்களை தவிர வேற ஒருவருக்கும் தெரியாது. இவன் அப்போது இயக்கத்தில மருத்துவ துறையில முக்கியமான பொறுப்பில இருந்தான். இவனுக்கு இயக்கத்தில இருந்த அதிகாரங்கள் காரணமாய் இரகசியமாக இவனால படிக்ககூடியதாய் இருந்திச்சிது, அத்தோட விருப்பமான நேரங்களில எங்களிட்டை சுதந்திரமாய் வந்துபோகக்கூடியதாயும் இருந்திச்சிது.

நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளிக்கிட்ட பிறகு அவன் என்ன ஆனான் என்று தெரியாது, அவன் தொடர்பும் ஒன்றும் இல்லை. அவன் இப்ப எங்க இருக்கிறான், உயிரோட இருக்கிறானோ என்றும் தெரியாது. தான் இயக்கத்தைவிட்டு விலகியபின் தொடர்ந்து படிச்சு ஓர் மருத்துவராக வரவேணும் என்று அவன் ஆசைப்பட்டுக்கொண்டு இருந்தான். தான் ஏற்கனவே ஐந்து வருசங்களுக்கு மேல இயக்கத்தில பணியாற்றி இருக்கிறதால இயக்கத்தை விட்டு விலகுறது கடினமாக இருக்காது என்று எனக்கு சொன்னான். ஆனாலும், இயக்கத்தை விட்டு விலகப்போவதாய் கடிதம் கொடுக்கேக்க அப்போது அவ்வாறான போராளிகளுக்கு வழமையாக கொடுக்கப்படுகிற தண்டனையான (punishment) ஆறுமாதம் கோட்டையில சுவர் இடிக்கிற வேலையை தான் செய்ய ஆயத்தமாய் இருக்கிறதாய் அவன் சொன்னான்.

சரி இவன் இயக்கத்தில என்ன என்ன வேலை செய்துகொண்டு இருந்தான்? அவன் எனக்கு சொன்ன விசயங்கள் எவை? இவனது உள்ளுணர்வுகள் எவை?

இவன் இயக்கத்துக்கு போனதுக்கு பின்னால வறுமை ஓர் மிக முக்கிய காரணம். இவன் படிப்பில நல்ல கெட்டிக்காரன். ஆனால் வறுமை காரணமாய் கல்வியை தொடர முடிய இல்லை. ஆனால் இயக்கமோ அங்கு சேர்ந்தபிறகு இவனது திறமைகளை, கல்வியில இவனுக்கு இருக்கிற ஆர்வத்தை கண்டு கொண்டிச்சிது. இவன் இப்போது இயக்கத்தில மருத்துவராக இருந்தான். யாழ்ப்பாணம் தொடக்கம் மன்னார் வரை நடைபெற்ற பல்வேறு தாக்குதல் சம்பவங்களின்போது இவன் மருத்துவராக பணியாற்றிக்கொண்டு இருந்தான். அவன் உண்மையில மருத்துவன். ஆனாலும் அவனுக்கு பல்கலைக்கழகம் போய் மருத்துவனாக வரவேணும் என்று ஆசைப்பட்டான்.

தாக்குதல்கள் நடைபெறும்போது எப்படி போராளிகள் காயப்பட்டு வருவார்கள், எப்படி அவர்களுக்கு சிகிச்சை கொடுக்கப்படும் என்பவை பற்றி சொன்னான். ஒரு முறை மன்னாரில ஒரு தாக்குதல் நடைபெற்றிச்சிதாம். நல்லாய் மழை பெய்துகொண்டு இருக்கேக்க வெள்ளம் அடிக்க... அந்த வெள்ளத்தில பதினைந்து, இருபது காயப்பட்ட போராளிகளை தான் தனிய நின்று காப்பாற்றவேண்டி இருந்திச்சிது என்று சொன்னான். அவையிண்ட காயங்களில இருந்து வாற இரத்தம் வெள்ளத்தில கலந்து அந்த இடமே இரத்தமாய், இரத்த வெள்ளமாய் இருந்ததாய் சொன்னான். "அண்ணை என்னைப்பாருங்கோ அண்னை என்னைப்பாருங்கோ" என்று காயப்பட்டவர்கள் வேதனையில கெஞ்சிக்கெஞ்சி முணகல் செய்வதுகொண்டு, ஆக்களிண்ட உடல் உறுப்புக்களை நூலினால வெட்டி அகற்றுவது, அட இவனா அட இவனா என்று இறந்த போராளியின் உடலை முதலாவதாய் பார்த்து அதிர்ச்சி அடைகிற மரணங்கள் வரை சகல சம்பவங்களையும் பற்றி விபரிச்சான்.

நான் கேட்டன் காலை கையை எப்படி நீக்குவீங்கள், அவையுக்கு நோகாதோ என்று.. அவன் சொன்னான்... "எங்களுக்கு ஊசியால சும்மா குத்தினாவே எப்பிடி கத்துவம்..! உயிரோட இருக்கிற ஒருத்தனிண்ட கையை காலை அவன் பார்த்துக்கொண்டு இருக்கேக்கையே நாங்கள் வெட்டி அகற்றினால் எப்பிடி அவனுக்கு இருக்கும்?"

எனது நண்பன் ஒருத்தன் உயிர்நீத்த தாக்குதலிலையும் இவன்தான் மருத்துவராக பணியாற்றி இருந்ததாய் சொன்னான். அந்த நண்பன் இடுப்பு அடியில ஷெல் பட்டு இரத்தப்போக்கு காரணமாய் மரணித்து இருந்தான். அந்த நண்பன் இவனோட நல்லாய் பழகி இவனுக்கும் ஏற்கனவே நல்ல நண்பனாய் இருந்ததாய் சொன்னான். இயக்கத்தில இருக்கிற சகலருமே தன்னோட பரிவுடன் இருந்ததாய் சொன்னான். ஏன் என்றால், அவர்கள் எல்லாருக்கும் தெரியும் இவனே அவர்கள் காயப்படும் நேரங்களில அவர்களை காப்பாற்ற வேணுமாம் என்று. எனது அந்த நண்பன் கண்ணை மூடிக்கொண்டு சப்பாணி கட்டிக்கொண்டு இருந்ததாயும், தான் அவன் காயப்பட்டதை பார்த்து உடனடியாய் அவனை வாகனத்தில ஏற்றி அனுப்பி வைத்ததாயும் ஆனால் அவன் இரத்தப்போக்கு காரணமாய் வைத்தியசாலையில உயிர்நீத்ததாயும் சொன்னான்.

வேறு என்ன சொன்னான்? தாங்கள் அழைக்கப்பட்டு தலைவர் தங்களுடன் உரையாடுவதாய் சொன்னான். தாங்கள் சுற்றிவர இருக்க.. தலைவர் பல்வேறு விசயங்கள் பற்றி பேசுவார் என்று கூறினான். ஏதாவது தாக்குதல் சம்பவத்துக்கு மருத்துவ பணியாற்ற அவனை கூட்டிக்கொண்டு போகும்போது அவனை "உடன இப்ப வா" என்று சொல்லி கூட்டிக்கொண்டு போவீனம். வேறு எதுவித தகவலும் கூறப்படுவது இல்லை. அங்கை போனபிறகுதான் எந்த இடத்தில நிக்கிறன் என்று தெரியும் என்று சொன்னான்.

தாக்குதல்கள் முடிந்ததும் தாங்கள் காயப்பட்ட, இறந்த போராளிகள், ஆயுதங்களை தூக்கிக்கொண்டு நடக்கவேணும் என்று சொன்னான். அப்போது விரைவாக நடக்காத ஆக்களுக்கு பெரிய பொல்லினால மாடுகளுக்கு அடிக்கிறது போல அடி விழும் என்று சொன்னான். நான் கேட்டன் களைப்பு நடக்க கடினம் என்றால் என்ன செய்வாய் என்று.. அவன் சொன்னான்.. "மாடு வண்டில் இழுக்கேக்க.. அது களைச்சுப்போய் ஏலாமல் இருந்தாலும் மாட்டிண்ட முதுகில பிரம்பால அடி விழேக்க மாடு என்ன செய்யும்?"

சரி, தமிழீழம்.. அடிபட்டு தமிழீழம் அமைக்க முடியுமா என்று கேட்டன். என்னை வடிவாய் முறைச்சுப்பார்த்தான், கொஞ்ச நேரம் யோசிச்சான். "இல்லை" என்று சொன்னான். அரசியல் தீர்வு ஏதாச்சும் வந்தால் ஒழிய அடிபாடு மூலம் ஒரு தீர்வு வரப்போவது இல்லை என்று அவன் தெளிவாய் சொன்னான்.

தாங்கள் மாதக்கணக்கில காப்பரண்களில படுத்து எழும்புவதாயும், பல்லு மினுக்கவே, முகம் கழுவவே, உடுப்பு மாத்தவே சந்தர்ப்பங்கள் கிடைக்கிறது இல்லை என்றும் ஆனால்.. ஒன்று இரண்டு நாள் விடுமுறை கிடைக்கேக்க.. நல்லூர் கோயில் பக்கம் போனால் தனக்கு சரியான ஆத்திரமாய் இருக்கும் என்றும் சொன்னான். நாங்கள் முழுவிசரன்கள் மாதிரி வாழுற அதேசமயம்.. இஞ்ச ஆக்கள் நல்லாய் உடுத்து, முசுப்பாத்திகள் செய்து, கலகலப்பாய் இருக்கிறதை பார்க்க தங்களுக்கு பத்திக்கொண்டு வரும் என்று சொன்னான். "நாங்கள் போராடி மாயுறம், நீங்கள் சந்தோசமாய் இருங்கோ."

சண்டை நடைபெறேக்க... யார் என்ன ஆயுதம் பாவிக்கிறீனமோ அந்த ஆயுதத்தாலதான் அவையள் சாவீனம் என்று சொன்னான். "ஏகே47 பாவிக்கிற போராளிக்கு ஏகே47 சன்னம் துளைக்கும்." தான் ஒரு தடவை மாவட்ட பொறுப்பாளர் ஒருவருடன் நடந்து சென்றபோது ஓர் ஷெல் வந்து வீழ்ந்ததாயும், அதில தன்னோட வந்த மாவட்ட பொறுப்பாளர் உட்பட அனைவரும் இறந்ததாகவும் தான் தெய்வாதீனமாக காயங்கள் இன்றி தப்பியதாயும் கூறினான். "கடவுள் நான் வாழவேணும் என்று என்னை விட்டு வச்சு இருக்கிறார் போல!"

அவன் மிக நன்றாக யோகாசனம் செய்வான். யாழ்ப்பாணத்தில யோகாசன வகுப்புக்களுக்கு சென்று வந்தான். ஒவ்வொரு நாளும் காலை நான்கு அரைக்கு நித்திரையால எழும்பி சுமார் ஒரு மணித்தியாலம் யோகாசனம், தியானம் செய்வதாய் சொன்னான். தவிர, வயலினும் கற்று வந்தான். போராளிகளுக்கு மாதா மாதம் சிறு தொகை வைப்பில இடப்படும் என்றும், காசு சேர்ந்ததும் விருப்பமான பொருளை கேட்கும்போது இயக்கம் வாங்கிக்கொடுக்கும் என்றும் சொன்னான். இந்த வகையில தான் வயலின் வாங்கினதாய் சொன்னான்.

ஒரு தடவை இவனோட சண்டை செய்த ஓர் சக போராளி மரணம் அடைஞ்சுவிட்டதாயும், உடலை தாங்கள் எடுக்க முடிய இல்லை என்றும் தாக்குதல், நிலமை மிகவும் அகோரமாய் இருந்ததாயும் ஆனால்.. போராளியின் உடல் மீட்கப்படாதது கண்டு பொறுப்பாளர் சீற்றம் அடைஞ்சதாகவும், பின்னர் இதர போராளிகள் வந்து இப்படி சொல்ல "மச்சான் நீ இண்டைக்கு துளைஞ்சாய், நீதான் உடம்பை எடுக்கவேணுமாம், பொறுப்பாளர் உன்னை வரட்டாம்".. பின்னர் சுமார் இருபது அடி தூரத்தில இராணுவம் நிற்க மண்ணோடு மண்ணாக புதரோடு புதராக உருண்டு சென்று அந்த போராளியிண்ட உடலுக்கு கிட்டவாக சென்றதாகவும்.. குடல் முழுவதும் பிய்ந்து கொத்தாய் வெளிய இருந்ததாகவும் அதை தூக்கி திரும்பவும் உள்ளுக்கை போட்டபின்னர், உடலத்தின் தலைமயிரை பிடித்து மெல்ல மெல்ல இழுத்து தமது பகுதிக்கு கொண்டு வந்ததாகவும் கூறினான். தான் அப்போது எப்படி உயிர் தப்பினன் என்று தனக்கு தெரியாது ஆச்சரியமாய் இருக்கிது என்றான்.

மற்றைய போராளிகள் இவன் தற்போது பொறுப்பாளராக இருந்தும் எதுவித மாற்றமும் காட்டாது சாதாரண உடைகளை அணிந்துகொண்டு துவிச்சக்கரவண்டியில போய்வருவது கண்டு ஆச்சரியப்படுவதாகவும், தன்னிடம் ஏன் இப்படி விசறன் மாதிரி இருக்கிறாய் என்று கேட்பதாகவும் சொன்னான். தனது நிலைக்கு தான் நல்லதொரு வாகனத்தை தனது தேவைக்கு இயக்கத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் எனவும், நன்றாக உடையணிந்து அதிகாரத்துடன் போய்வர முடியும், காதலிக்க முடியும், திருமணம் செய்ய முடியும் என்றும்.. அத்தோட ஓர் பெண் போராளி தன்னை முன்னும் பின்னும் துரத்தி காதல் செய்வதாகவும்.. ஆனால் தான் அப்படி செய்வது இல்லை என்றும்.. தனக்கு அப்பிடி செய்வதில விருப்பம் இல்லை என்றும் சொன்னான். ஏன் என்றால்.. இப்படி கூறினான்;

"என்ரை இலக்கு அது இல்லைத்தானே. நான் நினைச்சால் இயக்கத்தில இன்னமும் பெரிய ஆளாய் வரலாம். அடுத்த *** பொறுப்பாளர் நான் என்று எனக்கு பயிற்சி நடக்கிது. இப்ப இருக்கிறவர் சொல்லிப்போட்டார் நான் செத்த பிறகு இனி நீதான் பொறுப்பாளர், உனக்கு எல்லாம் இப்பவே பழக்கவேணும் எண்டு. ஆனால்.. நான் அவருக்கு ஒத்துழைக்கிறது இல்லை. எனக்கு விருப்பம் இல்லை எண்டு சொல்லிப்போட்டன். நான் அப்பிடி வரப்போறதும் இல்லை. நான் உங்களை மாதிரி படிக்கவேணும். ஒரு டொக்டராய் வரவேணும்..."

Edited by மச்சான்

  • கருத்துக்கள உறவுகள்

வாக்குமூலத்தை பதிவு செய்த மச்சிக்கு நன்றிகள்.

என்னுடைய நண்பன் ஒருவனும் இப்படித்தான். இலட்சியத்திற்காகத்தான் இயக்கத்திற்குப் போனான். பல வருடங்கள் நாட்டுக்காக உழைத்துக் காயங்கள் நிறையப்பட்டு தன்னால் இயக்கத்திற்கு பாரம் வந்துவிடக்கூடாது என்று விலத்தி, ஒருமாதிரி சமாதானக் காலத்தில் பிரித்தானியா வந்து சேர்ந்துவிட்டான். உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாது ஒரு நொடிப்பொழுதையும் வீணாக்காமல் ஏதாவது செய்துகொண்டிருப்பான். ஆர்வம் இருந்தால் எதையும் செய்யலாம் என்பதை இயக்கம் தெளிவாகக் கற்றுக்கொடுத்திருக்கின்றது என்பதை அவனின் நடத்தைமூலம் புரிந்துகொள்ளமுடிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றி மச்சான் உங்கள் நண்பனின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு.

ஒவ்வொரு பகுதிகளையும் படிக்கும் போதும் உண்மையிலயே தாங்க முடியாதுள்ளது.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தோற்றதற்கான காரணமும் இந்த பதிவுக்குள் அடங்கியுள்ளது....

துயரமான ஆனால் காரமான பதிவு.

வினைத்திறனுடன் எழுதியுள்ளீர்கள். பதிவிற்கு நன்றி.

முன்பெல்லாம் ஒரு கனவு அப்பப்போ வரும். ஏதோ ஒரு பாடத்தின் பரீட்சை வந்துவிட்டதாயும் ஆனால் நான் இன்னமும் அதற்குத் தயாராகவில்லை என்றோ அல்லது அந்த வகுப்பிற்கே செல்லாது இருந்து விட்டேன் என்றோ படும். சில நேரங்களில் வியர்க்க விறுவிறுக்க எழுந்திருந்த அனுபவம் உண்டு;. இவ்வாறான உளவியல் வெளிப்பாடுகள் பலரிற்கும் வந்திருக்கும். இப்போதெல்லாம் இந்தக் கனவு வருவது நின்றுவிட்டது, ஆனால் முன்னர் கனவு வரும் சந்தர்ப்பங்களில் யோசிப்பதுண்டு: பாசறையில் படுத்திருக்கும் ஒரு போராளி இவ்வாறு கனவு வந்து எழும் போது, இது கனவு தான் என்று என்னைப்போல் அவனால் ஆறமுடியாதிருக்கும்! அவர்களது கஸ்ரங்களோடு ஒப்பிடுகையில் இது ஒரு சிறு விடயம் போல் தெரியும். ஆனால் இவ்வாறான சிறுவிடயங்களின் தாக்கம் சில சமயங்களில் உணவின்றி இரு நாள் சுமையுடன் நடப்பதைக் காட்டிலும் கனமாய் இருக்கும்.

ஆனால், கிருபன் கூறியதைப்போன்று, இயக்கத்தில் சேர்ந்ததன் பின்னர் அவர்களது மனம் பல வகையில் எம்மால் உணரமுடியாத அளவிற்குப் பக்குவப்பட்டுவிடுவது உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் போராளிகளுடன் கதைத்தால் சாதாரணமானவர்களை விட சிந்தித்து சுருக்கமாக மிகவும் தெளிவாக கதைப்பார்கள்.கிருபன் சொன்னது போல் எந்த நேரமும் மிகவும் உற்சாகமாகவே இருப்பார்கள்.

சிலவேளை இந்த செயல்களே அவர்களை காட்டிக் கொடுத்துவிடும்.

வேண்டாம் வேண்டாம் ..ஆயுதம் வேண்டா..உரிமையும் வேண்டாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம் ..எம்மைபோல் அவர்களையும் வாழ விடுவோம்..

  • கருத்துக்கள உறவுகள்

மச்சானுக்கு நன்றி. நானும் பெருந்தொகையான போராளிகளோடு பேசியும் நேர்கண்டுமிருக்கிறேன். ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்ற பதிவு. இத்தகைய பதிவுகளை திரட்டி புத்தகமாக வெளியிட யாராவது முன் வந்தால் நிச்சயம் நல்ல பதிப்பாளரைத் தேட உதவிகளை செய்வேன். உண்மைகளை தேடுவதன்மூலம்தான் பிழைகலைத் திருத்தி முன்ன் செல்வது சாத்தியம்.

பேச்சு வார்த்தையில் திரு அன்ரன் பாலசிங்கத்தின் ஆலோசனைகலைக் கேட்டிருந்தால் இந்த பேரழிவு தவிர்க்கப் பட்டிருக்கும்

.

பேச்சு வார்த்தையில் திரு அன்ரன் பாலசிங்கத்தின் ஆலோசனைகலைக் கேட்டிருந்தால் இந்த பேரழிவு தவிர்க்கப் பட்டிருக்கும்

போயட், தமிழீழம்தான் முடிந்த முடிபு என்று போராளிகளுக்கு சொல்லி வளர்த்த தளபதிகளால் எப்படி அன்டன் பாலசின்கத்தின் பேச்சை கேட்க முடியும்.அப்படி கேட்டிருந்தால் அது மாவீரர்களுக்கு செய்யும் துரோகம் என்று நினைத்திருக்ககூடும் .அதுதான் அவர்களும் மாவீரர்கள் ஆனார்களோ தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் ஜில். அன்ரன் பாலசிங்கத்துடன் முரண்பட்டவர்களால் போராளிகளுக்கு நிறைய தப்புத் தப்பான சமிக்ஞைகள் கொடுக்கப் பட்டுள்ளது. இவை பற்றி முழுமையாக ஆராயப் படவேண்டும். முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இயக்கத்தின் இறுதி கட்ட செயல் பாடுகள் தொடர்பாக மக்கள் மத்தியில் நிலவும் பல்வேறு கருத்துக்கள் பற்றி முழுமையாக ஆராய்ந்து அறியாமல் புலம் பெயர்ந்த தமிழர்களால் வரலாற்றுப் பங்களிப்பு எதையும் செய்ய முடியாது. அரசியல் விரக்தியின் மத்தியில் ஒதுங்கியவர்கள்போக வாக்களித்தவர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நிராகரித்ததன் மூலம் சொல்லிய சேதி என்ன என்கிற கேழ்விக்கான பதிலை புலம் பெயர்ந்த தமிழர்கள் தேடி கண்டடைய வேண்டும்.

Edited by poet

  • தொடங்கியவர்

உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகள். இப்போது தாயக விசயங்கள் சம்மந்தமாய் ஏதும் எழுதிறதுக்கு மனம் வருகிறது இல்லை. சும்மா என்னத்தையும் எழுதி ஏன் ஆக்களுக்கு சும்மா கடுப்பை கிளப்புவான் என்று பேசாமல் இருக்கிறது. இதை எழுதும்போது என்ன வில்லங்கம் வருமோ என்று ஒரு யோசிச்சுக்கொண்டுதான் எழுதினது. வேற என்னத்தை சொல்லிறது.

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான், சிறந்த ஒரு பதிவைத் தந்திருக்கிறீர்கள். நிழலி அவர்கள் குறிப்பிட்டது போல, வாசித்த பின் உள்ளத்தில் ஒரு சுமை எழுகின்றது. சில உண்மைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளும் போதுதான் அடுத்த அடியைச் சரியான இடத்தில் வைக்கக்கூடும். நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு பதிவு.

பலபேருக்கு இந்த கதை பிடிக்காமல் கூட இருக்கலாம். இந்த கதையை எழுதியவரில் இருந்து யாரும் அவர்களின் உணர்வுகளை உண்மையில் புரிந்து கொள்ள முடியாது என்பதுதான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான்,

உங்கள் கதைக்குள் வாழ்ந்து முடிந்த பலரது வாழ்வு பதியப்பட்டுள்ளது. பலரை நினைவுபடுத்திச் செல்லும் இந்தப் போராளியின் வாக்குமூலம் வாசித்துமுடித்து 3நாட்களாகியும் இன்னும் அந்த மனிதர்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறார்கள். இயன்றவரை இத்தகைய வாக்குமூலங்களைப் பதிவு செய்யுங்கள். அடுத்து மிச்சமாய் வரப்போவது இத்தகையோரின் கதைகள்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மச்சான்,

உங்கள் கதைக்குள் வாழ்ந்து முடிந்த பலரது வாழ்வு பதியப்பட்டுள்ளது. பலரை நினைவுபடுத்திச் செல்லும் இந்தப் போராளியின் வாக்குமூலம் வாசித்துமுடித்து 3நாட்களாகியும் இன்னும் அந்த மனிதர்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறார்கள். இயன்றவரை இத்தகைய வாக்குமூலங்களைப் பதிவு செய்யுங்கள். அடுத்து மிச்சமாய் வரப்போவது இத்தகையோரின் கதைகள்தான்.

அதே நிலைதான் இங்கேயும்...எனது நண்பர் ஒருவரும் இதேமாதிரியான நிலையில் இருந்து வந்தவர்...அவர் ஒருநாள் சொல்லும்போது ஓம் ஓம் என்று கேட்டவை எல்லாம் இன்று எதிரொலிப்பது போல் உள்ளது...கிட்டத்தட்ட இதே கதை ஆனால் மருத்துவதுறை அல்ல ...வேண்டாம் தகவல்கள்...பிறகு விலத்தி வந்து மக்களுக்கு சேவை செய்கிற துறையை தெரிந்தெடுத்தார்..ஆனால் ஒரு வித்தியாசம் அவர் சொன்னவர் அவருடைய நண்பன்தான் தன்னை வெளியே வர சொன்னது என......

இத்தகைய பதிவுகள் அங்கே போராடின, மாவீரர் ஆன வீரர்களை குறைத்து சொல்லுவதாக சிலர் சொல்லாம்.அது அவர் அவர் மனநிலைகளை பொறுத்தது.ஆனால் இந்த கதைகள் தொடவேண்டும் என்ற எனது விருப்பம், அவர்களும் மனிதர்கள், அவர்களும் விதவிதமான மனப்பரங்க்களை தாங்கியே போராடினார்கள் என்பதொடுமட்டுமல்லாமல் பலவிதமான அழுத்தங்களுக்குள் தங்களால், சமூகத்தால் அழுத்தப்பட்டார்கள் என்ற உண்மைகளை சிறிதளவேனும் இந்தக்கதைகள் வெளிக்கொணரும் என்பதாலாகும்..

போராளிகளின் மறுபக்கத்தை பார்க்க மறந்த,விரும்பாத எமது சமூகம் இனியும் ஒன்றறையும் பெரிதாக காதில் போட்டுக்கொஅப்போவதில்லை.அது அவர்களின் விதியென்றோ அல்லது இழப்பும் தியாகமுமில்லாமல் விடுதலை இல்லை என்று தான் போகாமல் மற்றவனை தள்ளிவிடும். அதிலும் பெரிய சோகம் ஒரு குறிப்பிட்ட சிலரைத் தவிர இந்த இயக்கங்களுக்கு போனவர்கள் கதைகள் சொல்லி மாளாது.இன்றும் உலகெங்கும் பரந்துள்ள முன்னால் போராளிகள் பலர் குடிக்கு அடிமையாகி எங்கு போனாலும் திரும்ப திரும்ப அதே கதை.மற்றவர்கள் பாட்டிக்கு வருவார்கள் குடிப்பார்கள் அரசியலும் கதைப்பார்கள் பின்னர் சாப்பாட்டு பிளேட்டுடன் அரசியலையும் எறிந்து விட்டு போய்விடுவார்கள்.ஆனால் இவர்களால் அந்த பழைய தாக்கங்களில் இருந்து இன்னமும் விடுபடமுடியவில்லை.

சிலர் தாங்கள் விட்ட பிழைகளில் இருந்து மீளமுடியாமல் தவிக்கின்றார்கள்,சிலர் தாங்கள் அனுபவித்த கொடுமைகளில் இருந்து மீள முடியாமல் தவிக்கின்றார்கள். இந்த மன அழுத்தங்களூக்கு ஆட்பட்டிருக்கும் இவர்களை புரிந்து கொள்ளாமல் எமது சமூகம் குடியில் அலம்புகின்றான் என சிரிக்கின்றது.(இது போருக்கு போன சகல மனிதர்களுக்கும் பொருந்தும்.அண்மையில் ஈராக் சென்றுதிரும்பிய அமெரிக்க தளபதி தங்கள் படைவீரர்கள் பலருக்கு இதே நிலைமை என்று சொன்னார்)

எமது சமூகத்திற்கு இதை பற்றிய அக்கறை எதுவும் இல்லை பாதிக்கப் பட்ட சனத்திர்கே உதவி செய்யாமல் அடுத்த கட்டதிற்கு பணம் சேர்க்க வெளிக்கிட்டு விட்டது.கேடு கெட்ட இந்த இனம்.

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் உண்மையாக நடந்ததை கதை போல எழுதியுள்ளீர்கள்...வழமையாக உங்களது ஆக்கங்களை படித்த உடன் கருத்து எழுதுற நான் ஆனால் இதற்கு பதில் எழுத மனம் வரவில்லை...நாங்கள் சின்ன வயதில் மட்டக்களப்பிற்கு போய் விட்டோம் அங்கு நாங்கள் இருந்த காலத்தில் எங்களுக்கு பக்கத்தில் புலிகளின் முகாம் இருந்தது அதில் புதிதாக புலிகளில் இணைந்தவர்களுக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்...புதிதாக இணைந்தவர்கள் எதற்காக இணைந்தார்கள் என்ற கதையை கேட்டால் சிரிப்பாகவும் ஒரு பக்கத்தில் கவலையாகவும் இருக்கும்...முதலாவது காரணமாக வறுமை இருக்கும்...பக்கத்து வீட்டு அக்காவுக்கு அப்பா ஸ்கூட்டர் ஓடக் கொடுக்கிறார் எனக்குத் தரவில்லை...அப்பாவின் சைக்கிள் எடுத்து ஓடி உடைத்து விட்டேன் அப்பா வீட்டை வந்தால் அடிப்பார் அதனால் ஓடி வந்து விட்டேன்...இப்படிப் பல காரணங்கள் உண்மையாகவே போராடப் போனவர்கள் குறைவு.

  • 2 months later...

உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி காவாலி, குமாரசாமி அண்ணை, பொய்கை, சாந்தி அக்கா, எரிமலை, அர்ஜுன், ரதி.

  • கருத்துக்கள உறவுகள்

.

வாசித்த பின் நீண்ட பெருமூச்சுத்தான் விட முடிகின்றது.

.

  • 2 months later...
  • தொடங்கியவர்

உங்களிற்கு உள்ளத்தில் ஈரம் உள்ளதனால் பெருமூச்சுவிடுகின்றீர்கள் சிறீ.

  • கருத்துக்கள உறவுகள்

கரும்பு, முன்பு சிங்களச்சிறைச்சாலையில் உங்களது அனுபவங்களை சொல்லியிருந்தீர்கள். அதற்குப்பிறகு நீண்டகாலமாக உங்களின் ஆக்கங்களைப் படிக்கவில்லை. இன்று தான் இக்கதையினைப் படித்தேன். வாசித்தபின்பு மனம் பாரமாக இருக்கிறது.

  • தொடங்கியவர்

பல விடயங்களைப்பற்றி நிறைய எழுதவேண்டும் என்று நினைப்பது கந்தப்பு.. ஒன்றில் நேரம் பொருத்தமாக வருவது இல்லை. நேரம் பொருத்தமாக வந்தால் உளநிலை பொருத்தமாக வருவது இல்லை. ஒவ்வொருவரும் வாழ்க்கையில் எடுக்கும் சில முடிவுகளில் மற்றவர்களின் அனுபவப்பகிர்வுகளும் இடம்பெறுகின்றன. அப்படியானவற்றில்.. நூல், ஊடகங்கள் என்பதாக அமையாது விடயங்களை நேரடியாக பார்த்தால் - நேரடியாக அனுபவம் உள்ளவர்களுடன் உறவாடுதல் என்பது முக்கியத்துமானது. வாழ்க்கையில் சில விடயங்கள் பற்றிய எனது சிந்தனையோட்டத்தை தீர்மானித்ததில் மேற்கண்டது போன்ற பல விடயங்கள் அதிக செல்வாக்கை செலுத்தின.

  • 2 years later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தம்பி,பெயர் தெரியவில்லையே?
சொந்த இடம் தெரிந்தாலும் பரவாயில்லை.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.