Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணையத்தள நண்பர் வட்டம்: சில எண்ணப்பகிர்வுகள்

Featured Replies

இணையத்தள நண்பர் வட்டம்: சில எண்ணப்பகிர்வுகள்

வணக்கம்,

நாங்கள் அண்மையில யாழ் மூலம் அறிமுகம் ஆகின சில உறவுகள் டொரண்டோ - கனடாவில ஓர் ஒன்றுகூடலை நிகழ்த்தி இருந்தம். இதுபற்றிய ஓர் பதிவை யாழில போடச்சொல்லி பலர் என்னை ஆர்வத்தோட கேட்டு இருந்திச்சீனம். எமது இணையத்தள நண்பர் வட்டத்தின் நட்புறவுக்கு நான் எழுதும் பதிவு மூலம் களங்கம் ஏற்படக்கூடாது என்பதற்காக நான் இதுபற்றி எழுதுவதை தவிர்ச்சு இருந்தன். ஆயினும், பலருக்கு இந்த ஒன்றுகூடல் ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டதாலையும், இந்த ஒன்றுகூடல்பற்றிய திரிவுபடுத்தப்பட்ட பல செய்திகள், நையாண்டிகள் வலையில தாராளமாக கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளதாலையும் அண்மையில நடைபெற்ற இணையத்தள நண்பர் வட்ட ஒன்றுகூடல் பற்றிய எனது சில எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறன்.

ஆரம்ப முயற்சி:

'கனடா ஒன்றாரியோ மாகாணத்தில் வாழும் யாழ் உறவுகள் ஓர் நண்பகலை நமதாக்கலாமா?' எண்டு கேட்டு சகாரா அக்கா யாழில ஓர் பதிவை ஆரம்பிச்சு இருந்தா. என்னிடமும் தனிமடலில ஒன்றுகூடலில வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டு அழைப்பும் விடுத்து இருந்தா. முன்பு யாழ் தூயவன், குளக்காட்டான் ஆகியோர் டொரண்டோவில இவ்வாறான சந்திப்புக்களை மேற்கொள்ள அழைப்புவிடுத்து இருந்திச்சீனம். அப்போது எனக்கு இருந்த வசதியீனங்கள் காரணமாக அவற்றில கலந்துகொள்ள முடியவில்லை. தவிர, கருத்தாடல் தளத்தில கண்டதையும் எழுதி கருத்தாடல் செய்பவர்களை எப்படி முகத்துக்கு முகம் நேரில சந்திக்கிறது என்பதில எனக்கு கொஞ்சம் தயக்கமும் இருந்திச்சிது.

இந்தவகையில சகாரா அக்காவின் அழைப்பையும் என்னால ஆரம்பத்தில ஏற்றுக்கொள்வதோ இல்லாட்டிக்கு நானும் கலந்து கொள்வனா என்று வாக்குறுதி கொடுக்கிறதோ கொஞ்சம் சிரமமாக இருந்திச்சிது. ஆனாலும், சகாரா அக்காவுடன் தொலைபேசியில கதைச்சபிறகு, சில விசயங்களில தெளிவு ஏற்பட்டபிறகு ஒன்றுகூடலில கலந்துகொள்ள நான் சம்மதம் தெரிவிச்சன். தவிர, வல்வை அண்ணாவுடன் எனக்கு நல்ல அறிமுகம் இருந்திச்சிது. இதேபோல தமிழ்தங்கையும் எனக்கு நல்லதொரு நண்பி. இவர்களின் ஆர்வமும், அத்தோட இணையம் மூலம் இணைஞ்ச தம்பதி - {மணிவாசகன் + ரசிகை} இவர்களும் ஒன்றுகூடலுக்கு வரக்கூடும் என்கிற எதிர்பார்ப்பும் ஒன்றுகூடலில நான் கலந்துகொள்ள என்னை ஊக்குவிச்சிது.

ஒன்றுகூடலில கலந்துகொள்ள நானும் ஆரம்பத்தில பின் நின்றதற்கான காரணங்கள்:

முதலாவது விசயம் அந்தரங்கம். நாங்கள் ஏதாவது குற்றம் செய்து இருந்தால்தான் இல்லாட்டிக்கு பெரிய வி.ஐ.பி ஆக இருந்தால்தான் இப்படி ஒன்றுகூடலில கலந்துகொள்ள அழைப்புவிடப்படும்போது அதை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டவேணும் எண்டு இல்ல. எங்கள் ஒவ்வொருவருக்கும் என்று ஓர் அந்தரங்க தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிது. வலைத்தளத்தில எதையும் எழுதலாம். ஆனால் நடைமுறை வாழ்வில பல கட்டுப்பாடுகள், பொறுப்புக்கள், வரையறைகள் எல்லாம் எங்களுக்கு இருக்கிது. குறிப்பாக எங்கட சமூகத்தில ஒருவர்பற்றி அரைகுறையாக அறிஞ்சுபோட்டு அவரை - அவரது தனிப்பட்ட வாழ்வை நாறடிக்கிறது - விமர்சனம் செய்யுற சம்பவங்கள் நடைபெறுவது அதிகம். எனது தனிப்பட்ட வாழ்க்கை என்றால் ஓர் உதாரணத்தை சொல்லமுடியும். என்னைப்பற்றி எம்.எஸ்.என் மெசஞ்சர் மூலம் சிலர் அறைகுறையாக எதையோ அறிஞ்சுவிட்டு பின்னர் அதைவைத்து யாழில என்னை தனிப்பட தாக்கி கருத்து எழுதப்பட்ட சம்பவங்கள் நடைபெற்று இருக்கிது.

இப்படியான சிக்கல்கள் இருந்ததால நான் எனது முகத்தை - நான் யார் என்று இனம்காட்டிக்கொள்வது கொஞ்சம் சிக்கலான விசயமாக இருந்திச்சிது. அடுத்தவிசயம் யார் யார் ஒன்றுகூடலுக்கு வருவார்கள் என்கின்ற யோசனை. ஏன் என்றால் கண்டவர்களும் - அதாவது யாழ் மூலம் ஏற்கனவே எங்களோட கருத்தாடல் செய்து அறிமுகம் ஆகாதவர்கள் - மற்றும் வெளி ஆக்கள் ஒன்றுகூடலுக்கு வந்து எமது தனிப்பட்ட விசயங்களை அறிவதோ இல்லாட்டிக்கு தகவல் சேகரிப்பதோ எனக்கு ஓர் பிரச்சனையாக தெரிஞ்சிது. புதினம் - விடுப்பு பார்க்கிறது நம்மவர்களுக்கு ஓர் கைவந்த கலை அல்லது பொழுதுபோக்கு. ஆனால் அதன் கருப்பொருள்களில ஒன்றாக நானும் அமைஞ்சுகொள்ள எனக்கு விருப்பம் இருக்க இல்லை. ஓர் உதாரணத்துக்கு சொன்னால்... ஒன்றுகூடலில ஆக்களோட ஆக்களாக கலந்துபோட்டு பிறகு எம்மைப்பற்றிய தவறான ஓர் தகவலை யாராவது வலைப்பூவில இல்லாட்டிக்கு ஊடகங்களில தூவிவிட்டால் அதன்மூலம் பலவிதமான பிரச்சனைகளை நாங்கள் எங்கட தனிப்பட்ட வாழ்வில எதிர்கொள்ள வேண்டிவரும்.

அதாவது சுருக்கமாக சொன்னால்... வலைத்தளத்தில நடக்கிற பிடுங்குப்பாடுகளை எனது வீட்டுக்கதவை தேடிவந்து தட்டும் அளவுக்கு கொண்டுவர நான் விரும்பவில்லை. இப்படியான குழப்பங்கள் எனக்கு நிலவியநேரத்தில சகாரா அக்கா எனது பல்வேறு சந்தேகங்களையும் போக்கி, 'நண்பர்களின் சந்திப்பு' என்கின்ற சாரம்சத்தையும் விளங்கப்படுத்தி நானும் ஒன்றுகூடலில கலந்துகொள்ள பச்சைக்கொடி காட்டுவதற்கு வழிவகை செய்தா.

ஒன்றுகூடலை நடாத்துவதற்கு நானும் ஆர்வம் காட்டியதற்கான காரணங்கள்:

ஆரம்பத்தில நான் முரண்டுபிடிச்சு இருந்தாலும்... பின்னர் ஒன்றுகூடல் நடைபெறுவதற்கு ஆக்கபூர்வமாக பணியாற்றிய, அத்தோட இணையத்தள நண்பர் வட்டம் ஆக்கபூர்வமான முறையில நட்புறவை பேணி தனது பயணத்தை தொடர உழைத்த, உழைக்கின்ற பலரில எனது சிறிய பங்களிப்பும் இருந்திச்சிது.

நாங்கள் - எமது சமூகம் இப்போது வாழும் காலசூழ்நிலைகள் பலவிதமான பயப்பிராந்திகளை எங்கள் எல்லார் மனதிலயும் ஏற்படுத்தி பேதிவைத்தியம் செய்துகொண்டு இருக்கிது. போறவாற இடங்களில நாங்கள் தெரியாமல் குசுவிட்டாலும், ஆசனவாயுக்க அணுகுண்டை ஒளிச்சு வச்சு இருந்தம் எண்டு சொல்லி குற்றம் சாட்டப்பட்டு பயங்கரவாதி இல்லாட்டிக்கு பயங்கரவாத சந்தேகநபர் என்று முத்திரையும் குத்தப்பட்டு கேவலப்படுத்தப்படுகிற காலகட்டத்தில தமிழர் சமூகம் உலகெங்கும் வாழ்ந்துவருகிது. நாம் அறிஞ்சோ அறியாமலோ உலகில வாழுகின்ற தமிழர் எல்லோரையும் எத்தனையோ பல ஆவிகள் சுத்திச்சுத்திவந்து உளவுபார்த்துக்கொண்டு இருக்கிது. இதனால ஏனைய சமூகத்தவர்களுக்கு கிடைக்கின்ற நிம்மதி, மகிழ்ச்சி, சுதந்திரம் வெளிநாடுகளில கூட எங்களுக்கு கிடைப்பது குறைஞ்சுவருகிது. எமது சுய ஆற்றல்களை, திறமைகளை வெளிப்படுத்தவும் இது தடையாக இருக்கிது. ஒன்றுகூடலில நான் கலந்துகொள்ள எமக்கு எம்மவர்களாலும், வெளியாரினாலும் ஏற்படுத்தப்பட்டு இருந்த இந்த உளவியல் பூட்டை - பூச்சாண்டியை - வேலியை உடைக்கவேணும் இல்லாட்டிக்கு வெட்டி எறியவேணும் எண்டு நான் நினைச்சதும் ஒரு காரணமாக இருந்திச்சிது.

வலைத்தளம் என்பது ஓர் புதுவிசயம். ஒருவருக்கும் இது பற்றிய பழுத்த அனுபவம் இல்லை. நாங்கள் முகம் அறியாமல் - ஒருவரை ஒருவர் யார் யார் என்று தெரியாமல் வலைத்தளத்தில ஓர் கற்பனை உலகில சஞ்சரிச்சு கருத்தாடல் செய்துகொண்டு இருப்பது ஒருவிதத்தில எங்களுக்கு மிகவும் ஆபத்தானது என்றுகூட சொல்லலாம். ஆனால்.. ஒன்றுகூடல் மூலம் இப்படி ஒருவரை ஒருவர் நேரிலகண்டு அறிஞ்சு இருந்தால் வலைத்தளம் மூலம் எதிர்காலத்தில ஏதாவது பிரச்சனைகள் வரும்போது நாங்கள் ஒருமித்து ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்கமுடியும் எண்டுறதும் நான் ஒன்றுகூடலில ஆர்வம் காட்டினதுக்கு இன்னொரு காரணம்.

ஒன்றுகூடலை நாடாத்துவதில் எதிர்கொள்ளப்பட்ட சவால்கள்:

யாழ் இணையத்தில நான் இணைஞ்சு கருத்து எழுதத்துவங்கி ஆக இரண்டு வருசங்கள்தான் ஆகிது. அதற்கு முன்னம் சுமார் ஆறு வருசங்கள் சொச்சம் பார்வையாளனாக / வாசகனாக இருந்து இருக்கிறன். யாழினுள் முன்பு நடைபெற்ற குழப்பங்கள், சச்சரவுகள்பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஒன்றுகூடலை நாடாத்துவதில இரண்டுவிதமான பிரச்சனைகள் ஏற்படுத்தப்பட்டது.

ஒன்று பழைய மனக்கசப்புக்கள் - யாழில முன்பு நடைபெற்ற இழுபறிகள் - மனஸ்தாபங்கள் இதன் அடிப்படையில பழிவாங்கும் படலம் ஒருபக்கத்தால ஆரம்பிக்கப்பட்டு இருந்திச்சிது. இரண்டாவது ஒன்றுகூடலின்போது தாயகமக்களுக்கு ஆரம்பத்திலேயே பெருத்த எடுப்பில உதவிகள் ஏதாவது செய்யப்படவேணும் எண்டு ஏதிர்பார்க்கப்பட்டிச்சிது.

வழமையாக யாழ் கள உறவுகளிண்ட ஒன்றுகூடல் என்றால் அது ஓர் நகைச்சுவையாக்கப்பட்டு பிறகு கண்டபடி விமர்சனங்கள் செய்யப்பட்டு, தனிநபர் தாக்குதல்கள் செய்யப்பட்டு, இறுதியில பூட்டுப்போட்டு மூடுற அளவுக்கு இல்லாட்டிக்கு குறிப்பிட்ட கருத்தாடல் நிருவாகத்துக்கு நகர்த்தப்பட்டு மூடப்படுகின்ற நிலமைக்கு போவது வழமை. ஏன் என்றால் நான் அறிஞ்சவரையில முன்பு நடைபெற்ற யாழ் கள உறவுகளிண்ட ஒன்றுகூடல் சரியாக திட்டமிடப்பட்டு, நேர்த்தியான - ஆரோக்கியமான நிலையில நடைபெற்று, ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யப்பட்டு இருப்பதாக தெரிய இல்லை. இதன் காரணத்தால எமது ஒன்றுகூடலும் வழமைபோல ஓர் நகைச்சுவைக்குரிய விசயமாக - ஓர் முசுப்பாத்தியாக பலரால திரிவுபடுத்தப்பட்டிச்சிது. யாராவது ஓர் யாழ் களஉறவு குறிப்பிட்ட ஓர் நாட்டுக்கு இல்லாட்டிக்கு ஓர் பகுதிக்கு வரும்போது அவரை இதர யாழ்கள உறவுகள் சந்திக்கின்ற சந்திப்புக்களாக அல்லது உணவகங்களில, கோயில்களில, வேறு ஏதாவது நிகழ்வு இடம்பெறும் இடங்களில முன்புபல ஒன்றுகூடல்கள் நடைபெற்று உள்ளதே ஒழிய, ஓர் நாட்டில - ஓர் பகுதியில வாழ்கின்ற உறவுகள் - தாம் - தமக்கிடையே - ஓர் ஆரோக்கியமான சந்திப்பை ஏற்படுத்தி - நட்புறவு வட்டத்தை ஏற்படுத்தி இருக்கின்றார்களா என்று எனக்கு தெரியாது.

யாழில பல்வேறுவிதமான கருத்துக்கள் உள்ள ஆக்கள் இருக்கிறீனம். தாயக போராட்டம் சம்மந்தமாக சாதகமான கருத்துக்களை கொண்டு இருக்கிற ஆக்களுக்கையே பலவிதமான பிரிவினைகள் - மாற்றுக்கருத்துக்கள் எல்லாம் இருக்கிது. இப்படியான நிலமையில யாராச்சும் சிலர் யாழில நல்ல / ஆக்கபூர்வமான ஓர் விசயத்தை செய்தால்கூட அதை நையாண்டி செய்து - குறிப்பிட்டவர்களை சீண்டிப்பார்க்கிற தன்மை இருக்கிது. ஓர் கருத்தாடல் தளத்தில இப்படியான நிலமை இருப்பது தவிர்க்கமுடியாது. ஒன்றுகூடலில கலந்துகொள்கின்ற குறிப்பிட்ட ஒருவரை இல்லாட்டிக்கு அவருக்கு ஆதரவு தெரிவிக்கின்ற இன்னொருவரை மட்டம் தட்டுவதற்காக எழுதப்படுகின்ற காஞ்சோண்டி கருத்துக்களும் இருக்கிது.

தமிழில பழமொழி மாதிரி ஓர் விசயம் இருக்கிது. சின்னனில நான் விளையாடப்போற இடத்தில பெடியள் அடிக்கடி சொல்லுவாங்கள். பிறகு நானும் அவங்கள் மூலம் அதை சொல்ல பழகிக்கொண்டன். அது என்ன எண்டால் சிலரில காணப்படும் 'ஆடு அறுக்குமுன்னம் எனக்கு ***கு வேணும் ***கு வேணும்' எண்டு கத்திக்கொண்டு நிக்கிற பழக்கம். அதாவது அத்திவாரம் வெட்டி, ஒவ்வொரு செங்கல்லாக அடுக்கி அவதானமாக கட்டினால்தான் நல்ல ஓர் வீடு உருவாகும். நீண்டகாலமும் நிலைச்சு இருக்கும். அப்பிடி இல்லாமல் அவசரப்பட்டு - நிதானம் இல்லாமல் செய்கின்ற செயல்கள் நன்மைகளைவிட தீமைகளையே நீண்டகால நோக்கில உருவாக்கும். நான் ஏன் இதுகளை சொல்லிறன் எண்டால்... எமது இந்த ஒன்றுகூடலில தாயக மக்களுக்கு உதவுவதற்கு பணம் சேகரிக்கப்படவேணும், மற்றது நாங்கள் அடுத்த Air Canada Flight இல ஏறி Zurichக்கு போய் அங்கை இருந்து SriLankan Airlines இல ஏறி வன்னியுக்கு போய் வன்னியில அவலப்படும் மக்களுக்கு உதவிசெய்யவேணும் என்பது எல்லாம் போன்ற கருத்துக்கள் எதிர்பார்ப்புக்கள் - பிரமைகள் இருந்திச்சிது.

தாயகத்தில பல்வேறு அவலங்களை சந்திச்சு இருக்கிற மக்களுக்கு நாங்கள் உதவி செய்யவேணும், தாயக போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு கொடுக்கவேணும், எங்களுக்கு தாயகத்தில விடுதலை - சுதந்திரம் கிடைச்சால்தான் நாங்கள் வெளிநாடுகளிலையும்கூட நிம்மதியாக வாழமுடியும் என்பதில எங்களுக்க மாற்றுக்கருத்து இருக்கவில்ல. ஆனால்.. எடுத்த எடுப்பில ஆளையே யார் யார் என்று தெரியாத நிலையில ஒவ்வொருத்தரும் முகமூடிகளை போட்டுக்கொண்டு வலைமூலம் பழகிவிட்டு பிறகு திடீரெண்டு எங்களிண்ட நிஜமுகங்களை காட்டி நேரில சந்திக்கேக்க இப்படியான தூரநோக்கில செய்யவேண்டிய விசயங்களை ஆரம்பத்திலேயே போட்டு உடைச்சு ஆளுக்க ஆள் குழம்பிக்கொள்ளுறது - பிரிஞ்சு நிக்கிறது சரியாகப்படவில்லை.

ஒன்றுகூடலின் சிறப்பு அம்சங்கள்:

யாழில இருக்கிற பெண்களை கிண்டல் செய்வது, அவர்கள் எதற்கும் கையாளாகாதவர்கள் என்று ஒதுக்கிவைக்கிறது வழமையாக நடைபெறுகின்ற ஓர் விசயம். ஆனால், யாழில இருக்கும் பெண்கள் நடைமுறை வாழ்வில வலைத்தளத்துக்கு வெளியில திட்டமிட்டு நேர்த்தியாக கனதியான ஓர் செயலை செய்யக்கூடியவர்கள் எண்டுறதுக்கு இந்த ஒன்றுகூடல் ஓர் எடுத்துக்காட்டு. பல்வேறுவிதமான விமர்சனங்களையும், சீண்டல்களையும், நக்கல்களையும் தாங்கியபடி, அதுவும் தற்போது நாங்கள் வாழ்கின்ற சூழ்நிலையில, அதுவும் வலைத்தளம் மூலம் அறிமுகமாகிய முகம் அறியாத உறவுகளின் சந்திப்பை மேற்கொள்வது எண்டுறது சாதாரண ஓர் விசயம் இல்லை. இதன்பின்னால் இருக்கக்கூடிய ஆபத்துக்கள் எண்டுறதும் சாதாரண விசயம் இல்லை.

சந்திப்பில கலந்துசிறப்பித்த பதின்நான்கு பேரில எட்டுப்பேர் பெண்கள். இவர்களில ஆறுபேர் யாழ் மூலம் கருத்தாடல் செய்து அறிமுகமாகிய உறவுகள். மிகுதி ஆறுபேர் ஆண்கள். அதாவது 50:50 விகிதாசாரத்தில யாழ் ஆண்களும், பெண்களும் ஒன்றுகூடலில கலந்துகொண்டது ஓர் சிறப்பம்சம். அத்தோட பெண்கள் முன்னின்று நடாத்திய ஒன்றுகூடல் எண்டுறது இன்னொரு சிறப்பம்சம்.

ஒன்றுகூடலில கலந்துகொண்டவர்களில என்னைத்தவிர மிகுதி எல்லோரும் ஏற்கனவே தாயக மக்களின் அவலங்களை போக்க கடுமையாக பாடுபட்டு இருந்தார்கள், பாடுபட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். பல்வேறுவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தாயக மக்களிற்காக அவர்கள் ஏற்கனவே செய்து இருந்தார்கள், செய்துகொண்டு இருக்கிறார்கள் எண்டுறது ஒன்றுகூடலிண்ட இன்னொரு சிறப்பம்சம். பலர் தாயகம் மீது தாங்கள் வைத்துள்ள பற்றை, தாயக மக்களுக்கான தங்கட தனிப்பட்ட சேவைகளைப்பற்றி மற்றவர்களும் அறிஞ்சு இருப்பதை விரும்பவில்லை என்றாலும்... இந்த ஒன்றுகூடலில கலந்துகொண்டவர்கள் பற்றிய பல கீழ்த்தரமான கருத்துக்கள் வலைத்தளத்தில வைக்கப்பட்டு இருந்ததால நான் இதை இதில சொல்லவேண்டி இருக்கிது.

எனக்கு எமது ஒன்றுகூடல் பற்றி முன்பு கடுமையாக பலர் விமர்சனம் செய்தபோதும், பின்னர் ஒன்றுகூடலில கலந்துகொண்டபின்னர் அவர்கள் கூறிய கருத்துக்களை இப்போது மீட்டுப்பார்க்கின்ற போதும் தோன்றுகின்ற எண்ணம் என்ன என்றால்... இவர்கள் குயில்கள் கூவாது எண்டு கவலைப்பட்டு - ஒப்பாரி வச்சு - குயில்களுக்கு அழகாகக்கூவி இராகம் இசைக்கிறது எப்பிடி எண்டு பாடம் நடாத்த முயற்சி செய்து இருக்கிறீனம் எண்டு சொல்லத்தோன்றுது. குயில்களையும், ஆந்தைகளையும் இவர்களால வேறுபடுத்தி அறியமுடியவில்லை எண்டுறதை நினைக்கும்போதும் கொஞ்சம் கவலையாக இருக்கிது (குயில்களுக்கு பாடம் நடாத்த முயற்சித்தவர்கள் உண்மையில குயில்களா இல்லாட்டிக்கு ஆந்தைகளா எண்டு எனக்கு தெரியாது).

நிகழ்ச்சி நிரலில் என்னால் ஏற்படுத்தப்பட்ட குழப்பம்:

நாங்கள் உணர்வுகளால நிரப்பப்பட்ட உள்ளங்களை கொண்ட சாதாரண மனுசர்கள். எந்த ஓர் விசயம் என்றாலும் அதில ஓர் சுவாரசியம் இருந்தால் தான் குறிப்பிட்ட அந்த விசயத்தை செய்து முடிப்பதில ஓர் ஆர்வம் - பிடிப்பு ஏற்படும். நாங்கள் உணர்வுகளை தூக்கி எறிஞ்சுவிட்டு - உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் வெற்று இயந்திரங்களாக எங்கட வாழ்க்கையை அமைச்சுக்கொண்டால் அது விரைவில எங்கட மேல்மாடியை பழுதடையச் செய்து வாழ்க்கையை சூனியம் ஆக்குறதுக்கே உதவும்.

எமது ஒன்றுகூடல் சுவாரசியமாக இருப்பதற்காக நான் சில விசயங்களை செய்யயோசிச்சன். ஒன்றுகூடல் என்று சொன்னதும், இந்த ஒன்றுகூடலில என்ன நடைபெறப்போகிது எண்டு ஆரம்பத்தில பல குழப்பங்கள் நிலவிச்சிது. இதனால... நான் முதல் அம்சமாக சகாரா அக்கா கேட்டுக்கொண்டதற்கிணங்க ஓர் அழைப்பிதழை கொஞ்சம் நகைச்சுவை பொருந்தியதாக செய்தன்.

உங்களுக்கு யாழ்ப்பாணத்தில புகழ்பெற்ற சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் பொன்னம்பலம் (சிலது எழுத்துப்பிழை இருக்கலாம்) அவர்களை தெரிஞ்சு இருக்கும். எனது நண்பன் ஒருத்தன் முன்பு அவரை ஓர் பத்திரிகை சார்பாக பேட்டி கண்டு இருந்தான். அப்போது ஒரு கேள்விக்கு பதில் அளிச்சபோது அவர் சொன்னார்... தான் தீவிரமாக சத்திரசிகிச்சைகளை செய்யும்போது வாயில கர்நாடக சங்கீதத்தை முணுமுணுத்தபடி செய்வாராம் எண்டு. இவர்போல பலரும் இப்பிடித்தான் பெரிய பெரிய காரியங்களை ஆற்றும்போது - சத்திரசிகிச்சைகள் செய்துகொண்டு இருக்கும்போது பகிடிவிட்டுக்கொண்டு, ஏதாவது பாடலை வாயில முணுமுணுத்துக்கொண்டு இருப்பீனம்.

அதாவது மன இறுக்கங்கள் எங்கட ஒன்றுகூடலில இருப்பதை குறைக்கிறதுக்காகவும், மற்றது மற்றவர்கள் தங்கட கூச்சங்களை களைஞ்சு ஒவ்வொருத்தரும் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்வதை ஊக்குவிக்கிறதுக்காகவும் நான் பாடல்கள் பாடப்போறதாயும், மற்றவர்களும் என்னோட சேர்ந்து பாடலாம் எண்டும், இத்தோட Keyboard (எழுதுறது இல்ல, வாசிக்கிறது) ஒண்டையும் நிகழ்வுக்கு கொண்டு வரப்போவதாயும் சொல்லி இருந்தன். கொஞ்சம் சுவாரசியமாக இருப்பதற்காக யாழில இருக்கிற பிரபல படைப்பாளி தமிழ்வானம் (நோர்வே வசீகரன்) அவர்களிண்ட பெண்கள் இல்லாத உலகினில் பாடல், மற்றையது ஏஜென்சிகாரன் பாடல் ஆகியவற்றை தமிழ்தங்கை, வல்வை அண்ணாவோட சேர்ந்து பாடப்போவதாய் சொல்லி இருந்தன். எனக்கு ஆக்களுக்கு முன்னால பாடுறது தவிர பேசுவதிலையோ இல்லாட்டிக்கு வேற ஏதாச்சும் செய்வதிலையோ அனுபவம் இருக்க இல்லை. என்னால முடியுமானதைதானே நான் செய்யமுடியும்? முகமூடிகள் முதன்முதலாக முகம்காட்டும் நிகழ்வு எப்படி அமையும் அமையவேண்டும் எண்டுறதில பல சிக்கலுகள் இருந்திச்சிது. யார் எண்டு தெரியாமல் கண்டதையும் கதைக்கவும் ஏலாது. விவாதங்கள் செய்து முதல் சந்திப்பையே சத்திய சோதனை ஆக்கவும் ஏலாது. இதால நான் ஓர் இனியபொழுதாக இது அமைவதையே ஆரம்பத்தில விரும்பி இருந்தன்.

அத்தோட ஒன்றுகூடலிண்ட நிகழ்ச்சி நிரலில எவை உள்ளடங்கி இருக்கவேணும் எண்டு மற்றவர்களை கேட்டும், இதுவரை எனது மூளையுக்க சிக்குப்பட்டவை எண்டு சொல்லியும் ஓர் 'மாதிரி நிகழ்ச்சி நிரலை' போட்டு இருந்தன். ஆடலும், பாடலும் தமிழனிண்ட இரத்தத்தோட கலந்தவை. சங்ககாலத்திலயே எவ்விதமான ஆடல், பாடல் எல்லாம் நடந்து இருந்திச்சிது எண்டு நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. ஆடல் எண்டுறது பலர் முன்னிலையில ஏற்படுற கூச்சம் தெளியுறதுக்கு உதவுது. நீண்ட நேரமாய் ஓர் இருக்கையில இருந்தால் ஏற்படக்கூடிய உடல் உபாதைகளை - உடல் + மன அழுத்தங்களை ஆடல் குறைக்கக்கூடியது. சாப்பிட்டுபோட்டு சக்கைப்பாணியாக இல்லாமல் சிறிது ஆடி அசைஞ்சால் அது உடலுக்கு நல்லதொரு உடற்பயிற்சி. இனியபொழுது எண்டுறது தவிர பலவிதமான நன்மைகள் இந்த ஆடல், பாடல் மூலம் கிடைக்கும். இந்தவகையில யாராவது விரும்பினால் நிகழ்விண்ட இறுதியில ஆடவும் முடியும் எண்டு சொல்லி இருந்தன். இவ்வளவும் 'மாதிரி' நிகழ்ச்சி நிரலிலதான் சொல்லி இருந்தன். இது 'இறுதி நிகழ்ச்சி நிரலாக' இருக்க இல்லை.

ஆனால் என்ன நடந்திச்சிது எண்டால்... பல விசயங்களை அரைகுறையாக விளங்கிக்கொண்டு - அத்தோட எம்மை மட்டம் தட்டும் நோக்கோட சிலர் எமது ஒன்றுகூடலை நல்லாய் கொச்சைப்படுத்தி விட்டார்கள். 'டொரண்டோவில நாங்கள் Dating செய்யப்போகிறமாம்' எண்டு ஒருத்தர் சொல்லி எள்ளி நகையாட, இன்னொருத்தர் வந்து 'ஆச்சிகளிண்ட ஒன்றுகூடல்' எண்டு சொல்லி மல்ரிபரல் அடிக்க... இன்னொருத்தர் வந்து 'வசதி குறைஞ்சவர்கள் வாழைப்பழமும், வடையும் சாப்பிடப்போறமாம்' எண்டு சொல்ல.. இப்படியே ஆளாளுக்கு தங்கட நையாண்டிகளை தாராளமாக அவிழ்த்து விட்டார்கள்.

உண்மையில ஒன்றுகூடலிண்ட நிகழ்ச்சி நிரலாக நடந்தவை:

1. மணிவாசகன் + ரசிகை தம்பதியாக மங்களவிளக்கு ஏற்றினார்கள்.

2. மக்களுக்கும், மாவீரருக்கும் அஞ்சலி / அகவணக்கம் செலுத்தப்பட்டது.

3. தமிழ்தங்கை தமிழ்த்தாய் வாழ்த்து பாடினா.

4. நான் கனேடிய தேசிய கீதத்தை இசைத்தேன்.

5. சகாரா அக்கா வரவேற்பு உரை நிகழ்த்தினா.

6. ஓர் நான்கு வயது மழலை 'ஆண்டாண்டு காலமதாய் நாம் ஆண்டுவந்த பூமி' எனும் விடுதலை கானத்தை மிகஅழகாக பாடினா.

7. வல்வை அண்ணா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் சிறிதுநேரம் தங்களை அறிமுகம் செய்து உரையாற்றினார்கள். தாயகம், தமது தனிப்பட்ட வாழ்வு, யாழ் இணையம், மற்றும் பொதுவான பல விசயங்கள், பிரச்சனைகள் சம்மந்தமாக ஒவ்வொருவரும் தமது கருத்துக்களை கூறினார்கள். ஒன்றுகூடலில தாங்கள் கலந்துகொள்வதுபற்றி தாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாக அனைவருமே சொல்லி இருந்தார்கள்.

8. மணிவாசகனும், தமிழ்தங்கையும் தாயகம் - எங்கட பிரச்சனைகள் பற்றி அழகிய கவிதைகளை வாசித்தார்கள்.

9. ஒன்றுகூடலில சிற்றுண்டி பரிமாறப்பட்ட நேரத்தில 'மாவீரர் புகழ் பாடுவோம்' என்கின்ற விடுதலை கானத்தை நான் பாடினன்.

10. அனைவரும் கூடி கனதியான பல விசயங்கள் பற்றி, எமது நண்பர் வட்டம் மூலம் செய்யப்படக்கூடிய, செய்யப்படவேண்டிய ஆக்கபூர்வமான விசயங்கள் பற்றி பல்வேறுவிதமான ஆலோசனைகளை, கருத்துக்களை தெரிவித்தார்கள்.

11. சிறு குழுக்களாகவும் கருத்துப்பரிமாற்றம் நடைபெற்றிச்சிது. இருவராகவும் மூவராகவும் நால்வராகவும் சேர்ந்து பலப்பல விசயங்களைப்பற்றி எமது எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்தினம்.

12. நானும் தமிழ்தங்கையும் இணைந்து யாழில இருக்கும் சோழியன் அவர்கள் எழுதிய தாயகம் பற்றிய 'வன்னிக்காட்டு மண்ணினிலே வாடிநிற்கும் என்னுயிரே..' எனப்படுகின்ற அழகிய ஓர் பாடலை பாடினோம். நிலாமதி அக்கா ஓர் அழகிய பாடலை பாடினா.

13. மதிய போசணம் பரிமாறப்பட்டது. விதம் விதமாக பல்வேறு உணவுவகைகள் இருந்திச்சிது. சகாரா அக்கா பிரதான உணவை ஏற்பாடு செய்து இருந்தா. நிகழ்வுக்கு வந்திருந்தவர்கள் ஒவ்வொருவரும் விதம்விதமாக உணவுப்பண்டங்கள் கொண்டுவந்து இருந்திச்சீனம்.

14. மதிய போசணம் அருந்தி முடிந்ததும் சிறிதுநேரம் இளைப்பாறினோம் என்று சொல்லமுடியவில்ல. இந்த நேரத்தில நாங்கள் எல்லோரும் யாழ் இணையம் மூலம் அறிமுகம் ஆனவர்கள் எண்டுறதாலையும், யாழில இருக்கும் ஏனைய உறவுகளை உற்சாகப் படுத்துவதற்காகவும் யாழிலும் ஒவ்வொருவராக வந்து ஒன்றுகூடலில கலந்துகொள்வது பற்றி எமது மகிழ்ச்சியை தெரிவிச்சு யாழ் இணையத்தில கருத்துக்கள் எழுதினம்.

15. மீண்டும் சிறிதுநேரத்தில் கனதியான, ஆக்கபூர்வமான பல விசயங்கள், எமது இணையத்தள நண்பர் வட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் பற்றி ஆழமாக எண்ணப்பரிமாற்றம் செய்தம். நேரம் போனதே தெரிய இல்லை. சரியாக மதியம் பன்னிரண்டு மணிக்கு சொல்லிவைத்தபடி ஆரம்பிச்ச நிகழ்வு மாலை ஐந்து முப்பது வரை ஓர் தளர்வு, சோர்வு இல்லாமல் மிகவும் விறுவிறுப்பாக நகர்ந்து சென்றிச்சிது.

16. நானும் தமிழ்தங்கையும் இணைஞ்சு 'பெண்கள் இல்லாத உலகினில்' என்ற நோர்வே வசீகரன் அவர்களின் பிரபலமான பாடலை பாடினோம்.

17. ஒவ்வொருவரும் ஒன்றுகூடலில கலந்து கொண்டது பற்றி தமது மகிழ்ச்சியை தெரிவிச்சுக்கொண்டார்கள். பல்வேறு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை சொன்னார்கள்.

18. தமிழ்தங்கை நன்றியுரை நிகழ்தினா. நிறைந்த மனத்துடன், மகிழ்ச்சியுடன் அனைவரும் ஒவ்வொருத்தராக விடைபெற்றுச்சென்றார்கள்.

இணையத்தள நண்பர் வட்டத்தின் ஒன்றுகூடலில ஆராயப்பட்ட விடயங்கள்:

1. எங்கள் சிந்தனைகளை கூர்மைப்படுத்தி யாழ் இணையத்திலையும், மற்றும் தனிப்படவும், இதர வழிகள் மூலமும் காத்திரமான, எமது சமூகத்துக்கு பயனுள்ள பலவிதமான ஆக்கங்களை - படைப்பிலக்கியங்களை செய்தல்.

2. இணையத்தள நண்பர் வட்டத்தினரின் ஆக்கச்செயற்பாடுகளிற்கு ஊக்கம் கொடுத்தல். இணையத்தள நண்பர் வட்டத்தினர் படைப்புக்கள் செய்வதற்கு ஏதாவது உதவிகள் தேவைப்பட்டால் அதை செய்துகொடுத்தல். அவர்களுக்கு களம் அமைச்சு கொடுத்தல்.

3. தாயக மக்களுக்கு எம்மால் செய்யப்படக்கூடிய உதவிகள் பற்றி ஆராய்தல், உதவி செய்தல். கூடுதலாக பொருள் உதவி என்பதைவிட ஊடக உதவியாக - அதாவது அவர்களது அவலங்களை போக்குவதற்கு ஊடக ரீதியாக செய்யக்கூடிய உதவிகளை செய்தல் (பொருள் உதவி செய்வது பற்றியும் ஆராயப்பட்டது).

4. தாயக மக்களின் போராட்டம் சம்மந்தமான பொய்யான பரப்புரைகளை முறியடித்தல். தாயக மக்கள் போராட்டத்திற்கு படைப்பாளிகள் / ஊடகவியலாளர்களாக இருந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் செய்தல்.

5. இணையத்தள நண்பர் வட்டதின் மூலம் நீண்டகால நோக்கில நட்புறவை விருத்தி செய்தல். எதிர்காலத்தில இந்த நண்பர் வட்டம் விரிவடைஞ்சு செல்வதற்கு ஏற்றவகையில எமது நட்புறவை பேணுதல்.

6. பேச்சை குறைத்து செயலில் ஈடுபடுதல். சொல்லுக்கு முன்னம் செயல். இணையத்தள நண்பர் வட்டம் பற்றிய தேவைற்ற வீண் விவாதங்களை தவிர்த்தல். ஒன்றுகூடலின்போது அறிஞ்சுகொண்ட பொதுவான விசயங்கள் தவிர்ந்த குறிப்பிட்ட ஒருவரின் தனிப்பட்ட விசயங்களைப்பற்றி மற்றவர்களுடன் தகவல் பரிமாறுவதை அல்லது யாழில கருத்தாடல் செய்யும்போது அவர்பற்றிய தனிப்பட்ட விசயங்களை குறிப்பிடுவதை தவிர்த்தல்.

ஒன்றுகூடல் மூலம் நான் தனிப்பட பெற்ற நன்மைகள்:

1. முகம் அறியாமல் வலைத்தளத்தில கருத்தாடல் செய்தவர்களை நேரில சந்திச்சபோது மிகவும் சந்தோசமாக இருந்திச்சிது.

2. எனக்கு நீண்டகாலத்தின் பின்னர் ஓர் நண்பர் வட்டம் கிடைச்சிது. தாயகத்தில போரினால எனது வாழ்வும் சின்னாபின்னமாக்கப்பட்டு எனக்கு இருந்த நட்புறவுகள் எல்லாம் சீரழிக்கப்பட்டு இருந்திச்சிது. இப்போது மீண்டும் ஓர் நண்பர் குழாம் கிடைச்சு இருக்கிது.

3. எனது படைப்புக்கள், ஆக்கங்கள் பற்றி ஆக்கபூர்வமான பல பின்னூட்டல்கள், ஆலோசனைகள் கிடைச்சிது. நான் யாழில சும்மா பொழுதுபோக்காக எழுதுற விசயங்கள் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிது எண்டுறதை அறிஞ்சபோது மிகவும் சந்தோசமாக இருந்திச்சிது.

4. எனது கல்வி, தொழில் சம்மந்தமாகவும் பல தனிப்பட்ட தகவல்களை பரிமாறி பல்வேறு ஆலோசனைகளை, கருத்துக்களை அறியக்கூடியதாக இருந்திச்சிது.

5. என்னுடன் வலைத்தளத்தில கருத்தாடல் செய்பவர்களின்ட உண்மையான முகங்களை - வாழ்க்கை நிலைகளை கண்டறிஞ்சபோது - எனக்கு அவர்களுடன் மிகவும் பொறுப்பான முறையில கருத்தாடல் செய்யவேண்டியதன் - ஆக்கங்கள் படைக்கவேண்டியதன் முக்கியத்துவம் விளங்கிச்சிது. எங்கட ஒன்றுகூடலின் பின்னர் யாழில யாரோ கேட்டு இருந்திச்சீனம் 'அப்பிடி எண்டால் இனி நீங்கள் ஒருவரை ஒருவர் தாக்கி - கடுமையாக விமர்சனம் செய்து கருத்துக்கள் எழுதமாட்டீங்களோ' எண்டு. இதற்கு நான் கூறக்கூடிய எனது தனிப்பட்ட பதில் என்ன எண்டால் முகம் அறிஞ்சுபழகின 'எமது இணையத்தள நண்பர் வட்டத்தில இருக்கிறவர்களுடன் கருத்தாடல் செய்யும்போது எனது விமர்சனங்கள் எண்டுறது அவர்களுக்கான ஆக்கபூர்வமான பின்னூட்டல்களாகவே இருக்கும் (அதற்காக மற்றவர்களுக்கு கிறுக்குத்தனமான பதில் எழுதுவன் எண்டு நினைக்கக்கூடாது).

6. எனக்கு எங்கட சமூகத்தினருடன் குறிப்பிட்டு சொல்லும்படியாக எதுவித தொடர்பும் இல்லை. ஓர் சிறிய உறவினர் கூட்டம், ஊர் பள்ளி நண்பர்கள் தவிர வேறு ஒரு தொடர்பும் இல்லை. இதை நான் எண்ட திறமையாக சொல்ல இல்லை. எனக்கு ஏற்பட்ட பல்வேறு விதமான நெருக்கடிகள், பிரசனைகளால எம்மவர்களிடம் இருந்து விலகி கொஞ்சம் ஓரமாக ஒதுங்கி இருந்தன். இந்த ஒன்றுகூடல் எமது சமூகத்துடன் நான் கொஞ்சம் அதிக அளவில பழகி எமது சமூகத்துக்கு ஆக்கபூர்வமாக உதவிகள் செய்வதற்கு, நலிவடைஞ்சு போய் இருக்கிற மக்களுக்கு ஏதாவது பயன் உள்ளதாக ஏதாவது செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி தந்து இருக்கிது எண்டு சொல்லலாம்.

7. வல்வை அண்ணாவும், சகாரா அக்காவும் எனக்கு நெருக்கமான சகோதர, சகோதரியாகி இருக்கிறீனம். வலைத்தளம், விமர்சனங்கள், வழமையான பிடுங்குப்பாடுகள், பிரச்சனைகள் தவிர அதற்கு அப்பாலும் சென்று வாழ்க்கையில நல்லதொரு உறவுநிலைகள் கட்டி எழுப்பப்படுவதை நான் ஆரோக்கியமான விசயமாக நினைக்கிறன்.

சில சுவாரசியமான சம்பவங்கள்:

1. ஒன்றுகூடலுக்கு வந்து இருந்த சிலருக்கு ஏற்கனவே ஒருவரை ஒருவர் தெரிஞ்சு இருந்திச்சிது. சிலர் ஏற்கனவே சொந்தக்காரராகவும் இருந்திச்சீனம். சிலர் ஏற்கனவே யாழ் மூலம் அல்லாது வேறு வழிகளில தமக்குள் ஒருவரை ஒருவர் அறிஞ்சு நன்கு அறிமுகமாகி இருந்தார்கள்.

2. யாழ் இணையத்தில உறுப்பினராக இணைஞ்சு கருத்தாடல் செய்வதை தூண்டியதற்கு - பலர் யாழில இணைஞ்சதன் பின்னால் ஓர் சோகக்கதை இருந்திச்சிது. நான் முன்பு நினைச்சன் ஏதோ நான் மாத்திரம்தான் தனிப்பட்ட ஓர் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட வேதனையை குறைக்க யாழில இணைஞ்சு இருந்தன் எண்டு.

3. ஆரம்பத்தில எப்படி ஒருத்தரை ஒருத்தர் அறிமுகம் செய்யப்போறம் புனைபெயரை சொல்லிறதா இல்லாட்டிக்கு உண்மையான பெயரை சொல்லிறாதா எண்டு எல்லாம் குழப்பம் இருந்திச்சிது. இதனால வாயிலில ஓர் பதிவேட்டை - ஒன்றுகூடலில கலந்துகொள்பவர்கள் தமது பெயரை - கையொப்பத்தை போடக்கூடியமாதிரி ஏதாவது செய்வமா என்றும் ஆலோசிக்கப்பட்டது. சிலர் புனைபெயரை மாத்திரம் சொல்வதை விரும்பினார்கள். சிலர் புனைபெயரை சொல்லாது உண்மையான பெயரை மாத்திரம் சொல்வதை விரும்பினார்கள். ஆனால்... நடந்தபகிடி என்ன எண்டால் ஒவ்வொருத்தரும் நிகழ்வில கலந்துகொள்ள வந்தபோது தாமாகவே வாயிலில தமது யாழ் புனைபெயரை - தான் இவர் எண்டு சொல்லி தங்களை அறிமுகம் செய்தார்கள். இதனால நிகழ்வு ஆரம்பத்திலேயே களைகட்டி - ஆரவாரம் அடைஞ்சுவிட்டிது.

4. ஒன்றுகூடல் நடைபெறும் தினமன்று பனிப்புயல் அடிக்கக்கூடும் எண்டு சொல்லப்பட்டு இருந்திச்சிது. ஆனால், அன்றையதினம் இதமான காலநிலை அமைந்ததோட மட்டுமல்லாது குறிப்பிட்ட நாளும் சாதகமாய் அமைஞ்சு இருந்திச்சிது.

சில குறிப்புக்கள்:

1. ஒருவரை ஒருவர் நேரில சந்திச்சு இருந்ததால அத்துடன் அந்தரங்கம் (Privacy) பாதுகாக்கப்படவேணும் எண்டுறதால நிழற்படம் எடுக்க முயற்சிக்கவில்லை.

2. ஒன்றுகூடலினை ஒலிவடிவமாக ஒலிப்பதிவு செய்ய முயற்சித்தோம். சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக முயற்சி கைகூடவில்லை.

3. சில தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்குமுகமாக ஒன்றுகூடலில் கலந்துகொள்பவர்கள், அவர்களது நேரடி குடும்ப உறுப்பினர்கள் தவிர வெளியார் நிகழ்வில கலந்துகொள்வதற்கு அனுமதிக்கப்படவில்ல.

4. நாம் சுமார் முப்பது உறவுகள் நிகழ்வுக்கு வருவார்கள் என்று ஆரம்பத்தில எதிர்பார்த்து இருந்தோம். பலர் தனிப்பட்ட உபாதைகள் காரணமாக வரமுடியவில்லை. பலர் தமது முகமூடியை களைய விருப்பம் இல்லாமையால் அல்லது வேறு இடர்ப்பாடுகள் காரணமாக பின்வாங்கிக்கொண்டார்கள். ஆனால் இறுதியில் பதின்நான்கு பேர் மட்டுமே கூடி இருந்தாலும் பதின்நான்கு மாநிலங்கள் இணைஞ்சு ஓர் நாடு உருவாகுவதுபோல் அனைவரும் ஒருமித்த கருத்தை உடையவர்களாகவும், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டவர்களாகவும், நல்ல பண்பு நிறைந்தவர்களாகவும் காணப்பட்டார்கள்.

5. ஒன்றுகூடலுக்கு தேவையான ஒவ்வொருவிதமான வளங்களையும் எமது நண்பர் வட்டத்தினர் மூலமே பெற்றுக்கொள்ள வசதி இருந்தமையால் தனிப்பட்ட போக்குவரத்து செலவுகள், மற்றும் இதர கைச்செலவுகள் தவிர இந்த நிகழ்வின்போது பணம் ஒன்றும் வீணடிக்கப்படவோ அல்லது வீண்விரயம் செய்யப்படவோ இல்லை.

6. எமது அடுத்த ஒன்றுகூடலை 2009 கோடைகாலத்தில வைக்கலாம் என்று மேலோட்டமாக சிந்திச்சு இருக்கிறம். இதை இப்போது நடந்ததைவிட சிறப்பான முறையில செய்யலாம் என்றும் மேலோட்டமாக யோசிச்சு இருக்கிறம். எமது அடுத்த ஒன்றுகூடலில தாமும்கலந்து இணையத்தள நண்பர்வட்டத்தில நேரடியாக முகம் அறிஞ்சு இணைஞ்சுகொள்ள மேலும் பல யாழ் கள உறவுகள் விருப்பம் தெரிவிச்சு இருக்கிறீனம்.

7. எமது இணையத்தள நண்பர் வட்டத்தின் உருவாக்கம் - நோக்கம் யாழ் இணையத்தில பிரிவினைகளை ஏற்படுத்துவது அல்ல. யாழ் நேசக்கர அமைப்பு, மற்றும் இதர தனிப்பட்ட நண்பர் வட்டங்களில எங்களது நண்பர் வட்டம் ஆதிக்கம் செய்யவோ கட்டுப்படுத்தவோ மாட்டாது. எங்களது நண்பர் வட்டத்தை ஆரோக்கியமான முறையில கொண்டு செல்வது, வளர்ச்சி அடையச்செய்வது நண்பர் வட்டத்தில இருக்கிற எங்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பு. இதேபோல ஏனைய நட்புறவுகளிண்ட விருத்தி குறிப்பிட்ட அந்தந்த குழுமங்களில இருக்கின்ற உறுப்பினர்களின் பொறுப்பு.

8. ஏகோபித்த ஆதரவை பெற்ற சில குறிப்பிட்ட விதிமுறைகள் - உதாரணமாக அந்தரங்கம் பேணுதல் - இவை போன்றவை தவிர எங்கள் நண்பர் வட்டத்தில இருப்பவர்களுக்கு எதுவித கட்டுப்பாடுகளோ அல்லது எங்கள் நட்புள்ளங்களுக்கு ஏதாவது விதிமுறைகளோ இல்லை. நட்புறவு மூலம் நாங்கள் எல்லோரும் இணைஞ்சு இருக்கின்றோம் என்பது தவிர மிகுதி நாம் அனைவரும் சுதந்திரப் பறவைகள். ஒன்றாக சேர்ந்து பறப்பதும், பிரிந்து சென்று பறப்பதும் அவரவர் விருப்பம்.

சாரம்சம்:

புள்ளிகளை இணைச்சு கோலம் போடுவார்கள். இதுபோலவே வாழ்க்கையில வெவ்வேறு சூழ்நிலைகளில இருக்கிற வெவ்வேறு புள்ளிகளான நாங்கள் இணையத்தள நட்புறவு மூலம் இணைக்கப்பட்டு 'நண்பர் வட்டம்' எனப்படுகின்ற ஓர் செயல் உருவத்தை ஏற்படுத்தி இருக்கிறம். வாழ்க்கையில எங்கள் ஒவ்வொருவருக்கும் வீடு, பாடசாலை, வேலைத்தளம், கோயில், சமுக அமைப்புக்கள், விளையாட்டுக்கழகம், இலக்கிய வட்டங்கள் எண்டு பல்வேறுவிதமான பிணைப்புக்கள் இருக்கிது. இந்த ஒவ்வொருவிதமான பிணைப்புக்கள் மூலம் எங்கட வாழ்க்கையில பல்வேறு கருமங்களை நாங்கள் ஆற்றி வருகின்றம். இந்தவகையில 'இணையத்தள நண்பர் வட்டம்' எண்டுறது எங்கட வாழ்க்கையில அண்மையில ஏற்பட்ட இன்னுமோர் புதிய இணைப்பு.

அனைவருக்கும் நன்றி:

1. இணையத்தள நண்பர் வட்டம் உருவாகுவதற்கு களம் அமைத்துத்தந்த யாழ் இணையம் + நிருவாகம்.

2. நண்பர் வட்டம் உருவாகுவதற்கு உற்சாகம் தந்த உறவுகள்.

3. ஒன்றுகூடலில் கலந்து சிறப்பித்து நண்பர் வட்டத்தில் இணைந்துகொண்ட நட்புள்ளங்கள்.

4. ஒன்றுகூடல் சிந்தனையை உருவாக்கி அதை செயலிலும் செய்து காட்டிய சகாரா அக்கா.

5. என்னை இந்த குளிருக்கை 'சதக் பொதக்' எண்டுற சறுக்கல் தெருவில இழுத்துக்கொண்டு திரிஞ்சு நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற பல்வேறு உதவிகள் செய்த வல்வை அண்ணா.

6. மனம் நிறைந்த அதேவேளை எங்கள் வயிறும் நிறைவதற்கு பல்வேறு உணவுப்பண்டங்களை கொண்டுவந்த நட்புள்ளங்கள்.

7. சில தனிப்பட்ட உபாதைகள் காரணமாக இறுதியில கலந்துகொள்ளாவிட்டாலும் ஒன்றுகூடலில தாமும் கலந்துகொள்ள முயற்சித்த உறவுகள்.

8. அழகிய ஓர் பாடலை நிகழ்வில இசைத்த நான்கு வயது குழந்தை.

9. ஒன்றுகூடலிற்கு பல்வேறு விதமான உதவிகள் செய்த - இதில குறிப்பிட்டு பெயர் சொல்லமுடியாத உள்ளங்கள்.

10. தெரிஞ்சோ, தெரியாமலோ - விரும்பியோ, விரும்பாமலோ எமது ஒன்றுகூடலை இலவசமாக விளம்பரம் செய்தவர்கள், விமர்சனம் செய்தவர்கள், பரபரப்பு அடையச் செய்தவர்கள், அத்தோட ஆரோக்கியமான ஆலோசனைகள் சொன்னவர்கள்.

11. நாங்கள் ஒன்றுகூடலில கலந்துகொள்ள ஆதரவுதந்த எங்கள் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட குடும்ப உறவுகள். எனக்கு எனது அம்மா, அப்பாவிண்ட ஆதரவு. இதேபோல சிலருக்கு கணவன் / மனைவி / பிள்ளைகளிண்ட ஆதரவு இருந்தபடியாலதான் ஒன்றுகூடலில கலந்து கொள்ளக்கூடியதாக இருந்திச்சிது.

12. இங்கு நன்றிகூற தவறவிடப்பட்டவர்கள் மற்றும் இவ்வளவத்தையும் பொறுமையுடன் வாசிக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றிகள்!

நன்றி! வணக்கம்! :D

Edited by முரளி

  • Replies 54
  • Views 9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எமக்கும் அறியத்தந்தமைக்கு நன்றி

நான் ஊரில் இல்லாத நேரத்தில் இப்படியொரு ஒன்றுகூடலை நடத்த உங்களுக்கு எப்பிடி மனசு வந்தது :-(...மாப்ஸ் ரசி அக்கா யு ருருருருருருரு

  • கருத்துக்கள உறவுகள்

நான் கண்ட முரளிக்குள் , இவ்வளவு ஆழமான ஆறு போன்ற புலமை ,எழுத்தாற்றல் ,வகைப்படுத்துதல் ,இருக்கிறதென்று வாசித்து பிரமித்து போனேன். பள்ளி வாழ்கையில் நன்றாக ஒப்படை (assessment ) செய்து இருப்பார் போல இருக்கிறது. சந்தித்து ஆறுமணி நேர காலம் என்றாலும் இப்படி ஒரு ஆறு பிரவாகமேடுப்பது கண்டு ஆச்சரியப்பாடு போனேன். சிலர் தம்பட்டம் அடிப்பார்கள் சிலர் அமைதியாக இருந்து சாதிப்பார்கள். அதில் முரளி நம்ம முரளி இரண்டாவது வகை. ஒரு சில கால ஆசிரிய அனுபவத்தில் சொல்கிறேன்.( excellent .)..............நன்றி. நிலாமதி அக்கா.

Edited by nillamathy

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறியத்தந்தமைக்கு நன்றி உங்கள் பணி தொடரட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நேர்த்தியாக நடந்த ஒன்றுகூடலைப் பற்றி அதைவிட நேர்த்தியாக அறியத்தந்த முரளி எனும் கலைஞனுக்கு வாழ்த்துக்கள்..

இணையத்தள நண்பர் வட்டம் தங்கள் முயற்சிகளில் வெற்றிபெற்று மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வது மகிழ்ச்சியே..

  • கருத்துக்கள உறவுகள்

சகாராவின் தனிமடல் எனக்குக் வாசிக்கக் கிடைத்த போது ஒன்று கூடல் முடிந்து விட்டிருந்தது. இருந்தாலும் வந்திருக்க முடியாது. மனைவியும் வெளியூர் போய் விட்டார். 2009 பட்ஜெட்டில் வெளிநாட்டுப் பயணம் இல்லை. அதனால் 2010 இல் நடக்கும் ஒன்று கூடலில் நானும் கலந்து கொள்வேன். :D

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் ஒன்று சேர்ந்து முரளிக்கு கலைஞன் என்ற பெயரையே வைக்க வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்பின் முரளி,

உங்கள் எண்ணப் பகிர்வு மிகவும் சுவராஜியமாக இருந்தது.

நான் உங்கள் கருத்துக்களையும் ஆக்கங்களையும் விரும்பி வாசிக்கும் ஒரு அபிமானி.

"எனது மூளையில் இப்போது நினைவில் நிற்பவை" என்றும் "இப்போது ஒன்றும் சரியாக ஞாபகமில்லை" என்றும் எழுதுவதைத் தவிர்ப்பீர்களேயானால் நீங்கள் சொல்லும் விடயங்கள் அனைத்தும் பசுமரத்து ஆணிபோல் ஏறும்.

எழுதும் விடயத்தை சீராக ஞாபகப் படுத்திக்கொண்டு எழுதுங்கள் அத்துடன் நீங்கள் ஒரு மறதிக்காரராக இருப்பீர்களோ? என்று வாசகர்கள் உங்களைச் சந்தேகப்படும்படி வைக்காமல் பார்த்துக்கொண்டால் நல்லது என்பதும் எனது தாழ்மையான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

முரளி, நேரில் வந்த பிரமையை எற்படுத்தியது உங்கள் நேர்முக வர்ணணை. மிக பயனுள்ள இது போன்ற ஒன்றுகூடல்கள் வருங்காலத்தில் இடம்பெற வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களின் எண்ணப் பகிர்வு, ஒன்றுகூடலுக்கு வந்திருந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தி மகிழ்வித்தது.

பாராட்டுகள்.

ஒன்று கூடலைப் பற்றி அறியக் கிடைத்தது. நன்றிகள். ஆக்கபூர்வமான முறையில் நடந்த ஒன்று கூடலும் அதை நேர்த்தியாக எழுதிய விதமும் மகிழ்வை தருகின்றது.

முரளி

கனடாவில் நடந்த சந்திப்பு மிக மிக அருமையாக உள்ளது. அதனை நீங்கள் தந்த விதம் அழகுடன் கூடிய அருமை. வாழ்த்துகள். தொடருங்கள்.

Edited by Vasampu

நன்றி முரளி உங்களுடைய எண்ணப்பகிர்வுக்கு. கலந்துகொள்ளமுடியாமைக்கு வருத்தமாத்தான் இருக்கு :D

ஆ...... நாமதான் தவற விட்டுட்டமோ... சே கவுரவம் பாராமல் போயிருக்கலாம்.

இப்ப வாற அறிவு அப்ப வரேல்லையே.... சரி.. சரி அடுத்த முறை பாப்பம். மாப்பு உங்களுக்கு இப்பிடியும் எழுத வருமா?

என்னவிருந்தாலும் முரளிமாமாவுடன் சேர்ந்து பாடும் சந்தர்ப்பத்தை நழுவ விட்டிட்டன்;

உங்களது இந்த பதிவு, ஒன்றுகூடலிலை, நேரை வந்தமாதிரி ஒரு உணர்வைக்கொடுக்கின்றது.

பாராட்டுக்கள் முரளிமாமா!

தங்கையும் நல்லாத்தான் பாடி கலக்கியிருக்கா போலை, சகாராக்கா நீங்க என்ன பாட்டுப்பாடீனீங்க?

  • கருத்துக்கள உறவுகள்

முரளி மிகவும் அழகாக விபரித்துள்ளீர்கள். வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி :(

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ஒரு படம் பார்த்த மாதிரி ஒரு நிறைவு.பின்னீட்டீங்கள் மாப்பு.என்ன இந்த சாப்பாட்டுக் கதையை அடிக்கடி ஞாபகப்படுத்தி நாவூறச்செய்யிறீங்கள் :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி முரளி அண்ணை, எங்களோடு பகிர்ந்துகொண்டமைக்கு. : )

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஊரில் இல்லாத நேரத்தில் இப்படியொரு ஒன்றுகூடலை நடத்த உங்களுக்கு எப்பிடி மனசு வந்தது :-(...மாப்ஸ் ரசி அக்கா யு ருருருருருருரு

அந்தத் துணிவில் தான் நடத்தினாங்க அம்மணி... :(:(:o

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் முரளி .

  • தொடங்கியவர்

உற்சாகமாக கருத்துக்கள் சொன்ன கறுப்பி, நிலாமதி அக்கா, புஸ்பாவிஜி, கிருபன், ஜஸ்டின், ஈழப்பிரியன் அண்ணா, நுணாவிலான், ஆசிரியர் செல்வமுத்து, சுகன், வசம்பு, ஆதி, விதுஷா, சபேஸ், முனிவர் ஜீ, சஜீவன், டைகர்பிளேட், தூயவன், ரதி அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்! :D

நான் ஊரில் இல்லாத நேரத்தில் இப்படியொரு ஒன்றுகூடலை நடத்த உங்களுக்கு எப்பிடி மனசு வந்தது :-(...மாப்ஸ் ரசி அக்கா யு ருருருருருருரு

அடுத்த ஒன்றுகூடலில நீங்களும் கலந்து சிறப்பிச்சுவிடுங்கோ சினேகிதி. சினேகிதியிண்ட கவிதை, கதை, பாட்டுக்கள் எண்டு நிறைய விசயங்களை அடுத்த ஒன்றுகூடலில எதிர்பார்க்கிறம். :D

அன்பின் முரளி,

உங்கள் எண்ணப் பகிர்வு மிகவும் சுவராஜியமாக இருந்தது.

நான் உங்கள் கருத்துக்களையும் ஆக்கங்களையும் விரும்பி வாசிக்கும் ஒரு அபிமானி.

"எனது மூளையில் இப்போது நினைவில் நிற்பவை" என்றும் "இப்போது ஒன்றும் சரியாக ஞாபகமில்லை" என்றும் எழுதுவதைத் தவிர்ப்பீர்களேயானால் நீங்கள் சொல்லும் விடயங்கள் அனைத்தும் பசுமரத்து ஆணிபோல் ஏறும்.

எழுதும் விடயத்தை சீராக ஞாபகப் படுத்திக்கொண்டு எழுதுங்கள் அத்துடன் நீங்கள் ஒரு மறதிக்காரராக இருப்பீர்களோ? என்று வாசகர்கள் உங்களைச் சந்தேகப்படும்படி வைக்காமல் பார்த்துக்கொண்டால் நல்லது என்பதும் எனது தாழ்மையான கருத்து.

மிக்க நன்றி வணங்காமுடி. நான் குறிப்புக்கள் எடுப்பது இல்லை / குறைவு. இந்தக்கூடாத பழக்கம் பல்கலைக்கழக படிப்பிலயும் தொடர்ந்திச்சிது. நான் அதிக அளவில எண்ட மூளையில குறிப்புக்களை போடுவதைதான் விரும்புறது. இது பாதுகாப்பானதும் கூட. எண்டாலும் பல விசயங்கள் இதனால தவறவிடப்பட வாய்ப்புக்கள் இருக்கிது. நீங்கள் கேட்டதற்கிணங்க அந்த வரியை நீக்கி இருக்கிறன். நன்றி!

நன்றி முரளி உங்களுடைய எண்ணப்பகிர்வுக்கு. கலந்துகொள்ளமுடியாமைக்கு வருத்தமாத்தான் இருக்கு :(

அடுத்த ஒன்றுகூடலில கலந்து சிறப்பிச்சுவிடுங்கோ செவ்வந்தி. யாராவது கழுத்துப்பட்டி கட்டுவதற்கு உதவிகேட்டால் நீங்கள்தான் சிரமத்தை பார்க்காது கட்டிவிடவேணும் சொல்லிப்போட்டன். :icon_mrgreen:

Edited by முரளி

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தள நண்பர்வட்ட எண்ணப்பகிர்விற்கு நன்றி முரளி . :icon_mrgreen:

அத்துடன் , களத்தில் எழுதும் உறவு ஒருவரின் படத்தை மனதில் பதிந்திருப்பீர்கள் , அதே உறவை நேரில் கண்டபோது , நீங்கள் நினைத்த படம் சரியாக இருந்ததா ?

ஏனென்றால் ..... நானும் ஒவ்வொரு உறவும் இப்படி இருப்பார் என்று கணிப்பதுண்டு .

பல பொய்ப் பரப் புரைகளுக்கு மத்தியிலும் தனி மனித சேறடிப்புக்களுக்கு மத்தியிலும் தளராது துணிவுடன் சிறப்பாகத் திட்டமிட்டு இந்த நிகழ்வை நாடத்திய உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.முரளியின் நிகழ்வு பற்றிய அறிக்கையில் நீங்கள் மிகத்

தெளிவாகச் சிந்தித்து துணிவுடன் செயலாற்றி இருப்பது தெரிகிறது.உங்களைப் போன்ற வினைதிதிறனும் ஆளுமையும் மிக்கவர்காளால் தான் உருப்படியாக எதையாவது செய்ய முடியும் என்பது எனது அனுபவம்.தொடர்ந்து இந்த வட்டம் வளர்ந்து மற்றவர்களுக்கும் யாழ்க்களத்தில் முன்மாதிரியாகச் செயற்பட மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.