Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு வருத்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆண்டு காலம் வேலை இல்லாமல் இருந்த எனக்கு இரண்டு நாள் வேலை அப்பத்தான் கிடைச்சிருந்தது. நானாகத் தேடித் போகாமல் தானாகக் கிடைச்ச வேலை என்பதும் மிகவும் சந்தோசமாக இருக்க முதல் நாள் வேலைக்குப் போய் வந்த சந்தோசத்தில் இருக்க, இரவு முழுதும் வயிற்றில் ஒருவித அவஸ்த்தை. என்னடா இது நாளை காலை வெள்ளண எழும்ப வேணுமே! இரவு தூங்க முடியாமல் இருக்கே என்று கவலைப்பட்டபடியே சாமம் தாண்டி இரண்டு மணிக்குக் கண்ணயர்ந்து காலை ஆறு மணிக்கு எலாம் சத்தம் கேட்டு எழும்பி இரண்டு கறி வைத்து சோறும் போட்டு மனுசனுக்கும் எனக்கும் சாப்பாட்டைக் கட்டி முடித்து குளித்து வெளிக்கிட்டு நானும் வெறும் வயிற்றுடன் போகக் கூடாது என்று தானியங்கள் சேர்ந்த கஞ்சி ஒன்றுடன் வேலைக்குப் போய்ச் சேர மீண்டும் அந்த வயிற்று வலி ஆரம்பித்தது. என்னடா இது வேலைக்குச் சேர்ந்த இரண்டாம் நாளே இப்பிடி என்று எண்ணி ஒருவாறு சமாளித்துக்கொண்டு வேலை செய்தால் மதியத்துக்குப் பிறகும் உண்டபின் வலி அதிகரிக்க ஒரு பரசிற்றாமல் போட்டுக்கொண்டு மாலை ஆறு மணிவரை சமாளிச்சு முடிஞ்சு வீட்டுக்கு வந்தால் அப்பத்தான் வேலையால வந்த மனிசன் ஒரு நல்ல டீ போடு என்கிறார்.

வாயில வந்ததை அடக்கிக்கொண்டு பால்த் தேனீர் போட்டுக்கொண்டு போய் அவருக்கும் குடுத்து நானும் இருந்து குடிக்கிறன்.

ஒரு வருஷம் சும்மா இருந்து சாப்பிட்டுட்டு வேலைக்குப் போனது களைப்பாக்கும்

வழமையான மனிசனின் எள்ளல் கதைக்கு எரிச்சல் வந்தாலும் ஏனோ அடக்கிக்கொண்டு சரியான வயிற்று நோ என்கிறேன்.

கடையில ஏதும் வாங்கிச் சாப்பிட்டிருப்பாய்

சொல்லி மனிசன் சிரிக்க வந்த கடுப்பில் நான் கடையில சாப்பிட்டிட்டன். இரவுக்கும் சோறுதான் சாப்பாடு. நான் படுக்கப் போறன் என்றபடி ஏழு மணிக்கே போய்ப் படுத்தாச்சு.

அடுத்தநாள் காலை ஆறு மணிக்கு எழும்பினால் சாடையான தலை சுற்றல். என்னடா இது நல்ல காலம் இன்று வேலை இல்லை என்று எண்ணியபடி பல்விளக்கச் சென்றால் சிறுநீர் ஒரேஞ் நிறத்தில் போகுது. நான் வேலை செய்யும் இடம் கடையுடன் சேர்ந்த அஞ்சல் நிலையம். ஆதலால் ஏதும் சிறுநீர் தொற்று அங்கு ஏற்பட்டிருக்குமோ என்ற எண்ணத்துடன் சரி இண்டைக்கு முழுதும் பாப்பம் என்றபடி மற்ற வேலைகளைப் பார்க்கிறேன். சாப்பிடட பிறகு மீண்டும் மேல் வயிற்றுப்பக்கம் நோ அதிகமாக வயிற்றினுள் வாயுத் தொல்லையோ என்று எண்ணியபடி ன்னிடம் இருந்த Omeprazole என்னும் மாத்திரையைப் போடுகிறேன். அன்று மதியம் சிறிது குணமானதுபோல் இருந்தாலும் சிறுநீரின் நிறம் மாறிக்கொண்டே வர நாளை கட்டாயம் வைத்தியருக்குக் கதைக்கவேண்டும் என்று எண்ணியபடி வேலை ஒன்றும் செய்யாது படுத்தே இருக்கிறேன்.

காலை எட்டு மணிவரை காத்திருந்து வைத்தியருடன் கதைக்கவேண்டும் என்கிறேன். 10 மணிக்கும் 2 மணிக்கும் இடையில் வைத்தியர் போன் செய்வார் என்று கூறுகிறார் அங்கிருக்கும் பெண். சரி என்று கூறிவிட்டு காலை உணவாகப் பானை உண்டு சிறிது நேரத்தில் மீண்டும் தலை சுற்றலுடன் வயிற்றையும் பிரட்டுவதுபோலும் இருக்கிறது. அதற்குள்ளும் அந்த மனிசன் இந்த வயதில வயித்தில பிள்ளை எண்டு குண்டைத்தூக்கிப் போட்டுடாதை என்றுவிட்டுப் போக நேரகாலம் தெரியாத எழிய மனிசன் என்று வாய்விட்டே திட்டுகிறேன்.

பிள்ளைகள் எல்லாரும் வீட்டில் என்பதுடன் பெரியவர்கள் என்பதால் மனிசனைத் தவிர ஆலவட்டம் பிடிக்கவேண்டிய தேவை இல்லை என்பதால் போய் மீண்டும் கட்டிலில் படுக்கிறேன். தமிழ் வைத்தியர் ஒரு மணிக்கு போன் செய்கிறார். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு சிலவேளை யூரின் தொற்றாக இருக்கலாம். எதுக்கும் இண்டைக்கு வந்து டியூப் வாங்கிக்கொண்டு போய் நாளைக்கு காலையில சிறுநீர் எடுத்துக்கொண்டு வந்து தாங்கோ. நானே டெஸ்ட் செய்து பாக்கிறேன் என்கிறார். மகள் அவரிடம் சென்று டியூப் வாங்கி வர அடுத்த நாள் காலை வரை வேறு வழியின்றி எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு மாத்திரை போட்டு சிறிது தணிந்ததாக எண்ணிக்கொண்டு கட்டிலே கதியாகக் கிடக்க, உணவு தேநீர் எல்லாம் கட்டிலுக்கே வர நீண்ட நாட்களின் பின்னர் ஒரு மகிழ்வும் எட்டிப் பார்க்கிறது.  

அடுத்தநாட் காலை சிறுநீரைச் சேகரித்துக் கொடுக்க மகள் கொண்டு சென்று கொடுத்துவிட்டு வருகிறாள். எனக்கோ தலை சுற்றலும் வாந்தி வருவதுபோன்ற நிலையம் வயிற்று நோவும் அதிகரிக்கிறது. மதியம் வரை வைத்தியர் தொடர்புகொள்ளவில்லை. நானே போன் செய்து பார்க்கிறேன். அவர் மாலை மூன்றுக்குத்தான் வருவார். அதன் பின் தொடர்பு கொள்வார் என்கிறார் அங்குள்ள பெண். நான் மீண்டும் படுத்துத் தூங்கிவிடுகிறேன். தொடர்ந்து போன் அடிக்கும் சத்தத்தில் எழுந்தால் வைத்தியர் தான்.

நடந்ததை அவருக்கு விபரித்தவுடன் சிறுநீர் கழிக்கும்போது எரிகிறதா என்கிறார். இல்லை என்றவுடன் நான் வீடியோவில் உங்களை பார்க்கலாமா என்றவுடன் நான் பதைபதைத்து இப்பவோ??? நான் நேற்றுத்தொடக்கம் தலைகூட இழுக்கவில்லை ..... என்கிறேன். சரி நான் ஐந்து நிமிடத்தில் திரும்ப வீடியோ கோலுக்கு வாறன். பவுடர் பூசி லிப்ஸ்டிக் எல்லாம் போட்டு ரெடியா இருங்கோ என்றுவிட்டு வைத்துவிட. நான் எழுந்து தலையை மட்டும் இழுத்துவிட்டு மீண்டு கட்டிலில் வசதியாக அமர்ந்துகொள்கிறேன்.

வைத்தியர் மீண்டும் வீடியோ கோலில் வந்து நான் உங்கள் வயிற்றை வீடியோவில் பார்க்கலாமா என்று கேட்கிறார். வீடியோவில் பார்த்து எதைக் கண்டுபிடிக்கப் போகிறார் என்று மனதுக்குள் எண்ணிக்கொள்கிறேன். பிள்ளைகள் யாரையும் கூப்பிடுங்கள் என்கிறார். எதற்கு என்றுநான் கேட்க உங்களுக்கு ஒரு மாதிரி இருக்கும் என்று கேட்டனான் என்கிறார். எனக்கு ஒன்றும் இல்லை. உங்களுக்கு ஒருமாதிரி இருக்கோ என்று நான் கேட்க இல்லை இல்லை என்று அவசரமாகச் சொல்லிவிட்டு, நான் உங்கள் வயிற்றைப் பார்க்கலாமா என்கிறார். சரியென்று நான் மேலாடையை சிறிது உயர்த்துகிறேன்.

"என்ன உங்கள் வயிறு வீங்கி இருக்கா"

"இல்லையே. எனக்கு கொஞ்சம் வயிறு இருக்குத்தான்"

"நல்லாச் சாப்பிடுவீங்களா"

"இல்லை மூன்றுநேரம் மட்டும் சாப்பிடுவன்"

"உங்களுக்கு எரிச்சல் இல்லை எண்டபடியா நான் உது வேறை வருத்தம் எண்டுதான் யோசிக்கிறன்."

"என்ன வருத்தம்"

"வயிற்றிலே எந்தப்பக்கம் நோ உங்களுக்கு "

"மேல் வயிறும் வலப்பக்கமும் அதிக நோ"

"தொடர்ந்தும் சத்தி, வயிறு நோகுது ஏண்டா உடனடியா கொஸ்பிற்றல் போங்கோ"

"என்ன வருத்தமாய் இருக்கும் எண்டு நீங்கள் சொல்லவேயில்லையே"

"நான் ஒரு கிழமைக்கு அன்டிபயோரிக் எழுதிவிடுறன். பிள்ளையள் வந்து எடுப்பினம் தானே"

"ஓம். நான் பயப்பிட மாட்டன். என்ன வருத்தம் எண்டாலும் சொல்லுங்கோ"

"உங்கள் அறிகுறிகளைப் பார்த்தால் நான் நினைக்கிறன் உங்களுக்கு Bladder Cancer ஆய் இருக்கலாம். பயப்பிடாதேங்கோ"

"நான் பயப்பிடேல்லை"

"ஒரு ஸ்பெஷல் ஸ்கானிங்குக்கு போட்டிருக்கிறன். மூண்டு கிழமைக்குல்ல கூப்பிடுவாங்கள்"

" அதுக்குள்ளே ஒண்டும் சீரியசா நடக்காதே"

" சீச் சீ. அப்பிடி ஏதும் வலி அதிகமானா உடன ஹாஸ்பிட்டல் போயிடுங்கோ"

" சரி "

வைத்தியர் போனை வைத்தவுடன் மனதெல்லாம் எதோ வெறிச்சோடியது போல் இருக்கு. "இந்த உலகத்தில இத்தனை நாள் வாழ்ந்தது போதும்தான். என் நோய் பற்றி மனிசனுக்கோ பிள்ளையளுக்கோ சொல்லக் கூடாது. 2 லட்சம் பவுண்ட்ஸ் என் பேரில் life இன்சூரன்ஸ் இருக்கு. ஒவ்வொருத்தரும் 50 ஆயிரம் படி எடுங்கோ எண்டு எழுதி வைப்பமோ? சீச்சீ மனிசன் எல்லாம் பாத்துக்கொள்ளுவார். என்ன இன்னும் சில நாடுகள் பாக்கவேணும் எண்ட ஆசைதான் நிறைவேறாமல் போகப்போகுது" என்று எண்ணியபடி மகளைக் கூப்பிட்டு மருந்தைப் போய் எடுத்து வரும்படி சொல்லிவிட்டு மீண்டும் கட்டிலில் படுக்கிறேன்.

எனக்கு ஒருநாளும் உடல் சூடாக்கிக் காச்சல் வருவதில்லை. குளிர் காச்சல் தான் வரும். அந்த நேரங்களில் இரண்டு போர்வையை போர்த்துக்கொண்டு படுத்தால் ஒரு மணி நேரத்தில் வேர்த்து ஒழுக மீண்டும் போர்வையை உதறிவிட்டுப் படுக்க வருத்தம் அதோட நின்றுவிடும்.

இன்று சரியான குளிர் குளிர இரண்டு போர்வையுடன் படுத்தால் குளிர் குறைவதாய்க் காணவில்லை. கடைசி மகளைக் கூப்பிட்டு என் முதுகுடன் ஒட்டியபடி படுக்கச் சொல்கிறேன். அவள் அரை மணிநேரம் படுத்தபின் தனக்கு zoom வகுப்பு ஆரம்பிக்கப்போகுது என்று எழ குளிர் சரியாக அதிகரிக்கிறது. இதற்குமுன்னர் இத்தனை அதிகமாக சினோவுக்குள் நடக்கும்போது கூடக் குளிரவில்லை என்பதும் மனதுக்கு நெருடலாக இருக்கிறது. மூத்தவள் இரண்டு பரசிர்ராமலைக் கொண்டுவந்து போட்டுவிட்டுப் படுக்கும்படி கூட அதையும் போட்டுக்கொண்டு அவள் இன்னும் இரண்டு போர்வைகளைக் கொண்டுவந்து  போர்த்துவிட நான்கு போர்வைகளும் பாரமாக இருந்தாலும் குளிர் குறைந்ததுபோல் உணர அப்படியே தூங்கிப்போகிறேன். மூன்றரை மணிநேரம் நல்ல தூக்கம். அத்தனை போர்வை போர்த்தும் எனக்கு இம்முறை வியர்க்கவே இல்லை என்பது மனதில் வந்து கான்சர் வந்தால் இப்பிடித்தான் இருக்குமோ என்று எண்ணுகிறது மனம்.

அம்மா அம்மா என்று மகள் அருட்டத்தான் எழுகிறேன்.

"சாப்பிடேல்லையோ அம்மா"

"சாப்பிடத்தான் வேணும். என்ன சமைச்சியள்"

"இடியப்பம் இருக்கு.

"சரி இரண்டு இடியப்பம் கொண்டு வாங்கோ. மருந்தையும் தாங்கோ"

உண்டு முடியத் தேநீரும் வருது.

"அப்பா வேலையால வந்திட்டாரா"

"ஓம் டிவி பாக்கிறார் "

"பாரன் வேலையால வந்தவர் என்னை ஒன்றுமே கேக்கேல்லை"

"நீங்கள் நித்திரை எண்டதால எழுப்பேல்லை"

மகள் கீழே செல்ல நான் சென்று கையைக் கழுவிவிட்டு மருந்தையும் உண்டுவிட்டுப் படுக்கிறன். உணவு உண்ட பிறகு மீண்டும் வயிற்று நோ ஆரம்பிக்கிறது. எதுக்கு மூன்று வாரங்கள் வரை பொறுக்க வேணும். கான்சர் இருக்கோ இல்லையோ எண்டுறது வேறை என்று எண்ணியபடி இரவு பதினோரு மணிபோல மனுஷனை எழுப்பி எனக்கு ஏலாமல் இருக்கு என்று சொல்ல அவரும் தயாராகி வருகிறார். சாமமென்பதனால் வீதிகள் வெறிச்சோடி இருக்க ஐந்தே நிமிடத்தில் மருத்துவமனைக்குச் சென்று இருவரும் A&E இக்குப் போகிறோம். கோவிட் என்பதனால் உள்ளே எல்லோரையும் அனுமதிக்கமுடியாது என்று வாசலில் கூற, "எதுக்கும் நீங்கள் வீட்டுக்குப் போங்கோ. எப்பிடியும் இரண்டு மணிநேரமாவது செல்லும். முடிஞ்சதும் போன் செய்கிறேன் என்றவுடன் கணவர் திரும்பிச் செல்ல நான் சென்று என் விபரங்களைக் கூறிவிட்டு வரவேற்பில் அமர்ந்துகொள்கிறேன். சாமம் என்றாலும் 20, முப்பதுபேர் இருக்கும் A & E  இல் ஐந்து பேர் மட்டுமே இருக்கின்றனர்.

நான் போனை மட்டும் வைத்திருந்தாலும் அதை வெளியே எடுக்காமல் சும்மா இருக்கிறன். ஒரு அரை மணி நேரத்திலேயே என்னைக் கூப்பிடுகிறார்கள். நான் நடந்ததைக் கூறுகிறேன். முதலில் இரத்தப்பரிசோதனை செய்து பார்ப்போம் என்று கூறி ஆறு டியூப்பில் இரத்தம் எடுத்துவிட்டு என்னை அங்குள்ள ஒரு தற்காலிக இடத்தில் அமர வைக்கிறார்கள். பரிசோதனை முடிவு வர இரண்டுமணிநேரம் ஆகும் என்றுவிட்டுச் செல்கின்றனர். இரவு என்பதனாலும் அதிகப்பேர் இல்லை என்பதனாலும் எனக்கு ஒரு பயம் வருது. போனை எடுத்து முகநூலைப் பார்த்து நேரத்தைப் போக்குவோம் என்றால் உள்ளே போன் வேலை செய்யுதில்லை. கையைத் தலைக்கு முண்டு கொடுத்தபடி எவ்வளவு நேரம் தூங்கினேனோ தெரியாது. யாரோ வந்து எழுப்புகின்றனர்.

ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும் பெண்ணும் நிற்கின்றனர். என்னை வா என்று கூட்டிக்கொண்டு சென்று தாங்கள் படித்துக்கொண்டு இருக்கும் மருத்துவர்கள். உன்னை செக் பண்ணலாமா என்று கேட்க ஓம் என்று தலையாட்டுறன். அங்கு சென்றதும் என் நோய் பற்றி அவர்கள் கேள்விகளுக்கு பதில் கூறவே எனக்கு ஏலாமல் இருக்கு. நான் இதில் படுக்கட்டா என்று கேட்க ஓம் என்கின்றனர். நான் படுத்தபடி அவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறேன். இன்னொருதடவை இரத்தம் எடுக்கப்போகிறோம் என்கின்றனர். ஏற்கனவே எடுத்ததே. அதன் முடிவு என்ன என்று கேட்க, அதை வேறு ஒரு வைத்தியர் வந்து கூறுவார். அவர் இப்ப பிசியாக இருக்கிறார். இது நாங்கள் வேறு பகுதி என்கின்றனர்.

இவர்கள் வேறு ஆறு டியூப்பில் எடுக்க, என் உருவத்தைப் பார்த்திட்டு எவ்வளவும் எடுக்கலாம் என்று எண்ணுகின்றனரோ என மனதில் எண்ணியபடி இருக்க, நீ இங்கேயே படுத்திரு. மற்ற வைத்தியர் வருவார் என்றபடி போய்விட நான் படுத்து நல்ல நித்திரை கொண்டிட்டன். யாரோ என்னைத் தொட்டு உலுப்பக் கண் விழிக்கிறேன். ஒரு தாதி என்னை எழுப்புகிறார். எழும்பு  உன்னை வேறு இடத்துக்கு அழைத்துப் போகிறேன் என்கிறார். நான் கீழே இறங்க " என்ன ஒன்றுமே விரிக்கவில்லை. இதிலா படுத்திருந்தாய் என்கிறார். அப்போதுதான் பார்த்தால் அது தற்காலிகமாக நோயாளிகளைப் பார்க்குமிடம். வெள்ளைத்தாள்களைத்தான் இழுத்து விரிப்பார்கள். அவர்களும் விரிக்கவில்லை. நானும் அதைக்கவனிக்காமல் தூங்கிவிட்டேன். எத்தனை நோயாளிகள் இதில் வந்து இருந்து, படுத்துச் சென்றார்களோ??? ஆருக்கு கொரோனா இருந்ததோ என்ற எண்ணம் மனதில் ஓடினாலும் அதைப் பற்றி மனம் பெரிதாகக் கவலை கொள்ளாது அவரைப் பின்தொடர்ந்து. இத்தனைக்கும் வின்டர் யக்கற் போட்டபடிதான் எல்லாம். 

அடுத்த பகுதிக்குள் போனால் அது அறைபோல் இருந்தாலும் நோயாளிகள் தங்கும் நிரந்தர அறையில்லை என்று தெரிகிறது. அங்கே ஒடுக்கமான கட்டில்களைப் போட்டு திரைச் சீலைகள் போட்டு மறைத்திருந்தார்கள். இங்கே இரு. மருத்துவர் வந்து பார்ப்பார் என்றுவிட்டுப் போக எத்தனிக்க, எனக்குச் சரியான தாகமாக இருக்கு குடிக்க ஏதும் தேநீர் அல்லது கோப்பி தருகிறாயா என்கிறேன். எனக்கே அப்படிக் கேட்டது ஒருமாதிரி இருந்தாலும் நான்கு ஐந்து மணிநேரம் எதுவும் குடிக்காமல் இருந்தது மட்டுமன்றி அங்கே குளிரவும் ஆரம்பித்துவிட்டது. தண்ணீர் கொண்டு வரவா என்கிறார் அந்தப் பெண். எனக்கு குளிர்கிறது சூடாக எதுவும் குடித்தால் நல்லது என்கிறேன்.

சரி என்றுவிட்டுப் போன பெண்ணை அதன்பின் காணவே இல்லை. கட்டிலில் படுத்தால் திரும்பிப் படுக்க முடியாத சிறிய கட்டில். இங்கு சிலவேளை போன் வேலை செய்கிறதா என்று பாப்போம் என்று போனை எடுத்தால் கணவன் பிள்ளைகளிடம் இருந்து பல போன். சத்தம் கேட்காதவாறு நிறுத்திவைத்திருந்தபடியால்  எனக்குக்கேட்கவில்லை. காலை நான்கு மணி. போன் செய்து விபரத்தைக் கூறுகிறேன். எனக்கு மாற்று ஆடைகள் மற்றும் முக்கியமான பொருட்கள் அதைவிட முக்கியமான போன் சார்ஜர் எல்லாம் கொண்டுவரும்படி கூறுகிறேன்.

மீண்டும் படுத்தாலும் நித்திரையில் கீழே விழுந்துவிடுவேனோ என்ற எண்ண த்தில் தூக்கம் வரவில்லை. முழங்கையில் உள்ளே ஊசி ஒன்றை நிரந்தரமாக ஏற்றிவிட்டிருந்தபடியால் கையையும் வசதியாக வைத்துக்கொள்ள முடியவில்லை. தாதிகள் அங்கும் இங்கும் போய்வந்தாலும் என்னை யாரும் எதுவும் கேட்கவில்லை. காலை ஆறு மணியாகிவிட வேறு புதிய தாதியர்கள் வந்திருப்பதைக் கவனிக்கிறேன். ஒருவரை மறித்தது எனக்குத் தாமாக இருக்கு தேநீர் ஒன்று தர முடியுமா என்கிறேன் மீண்டும். பொறு உன் பைலைப் பார்க்கிறேன் என்றவர், உனக்கு ஸ்கானிங் இருக்கிறபடியால் நீ எதுவும் உண்ணவோ குடிக்கவோ கூடாது என்றுவிட்டுப் போய்விட மீண்டும் போனை எடுத்தால் மகளின் இலக்கத்திலிருந்து எட்டு போன் அழைப்புகள் வந்திருக்க மீண்டும் அவளுக்குப் போன் செய்கிறேன். அம்மா நானும் அப்பாவும் உங்கள் பொருட்களையும் கொண்டு வந்திருந்தோம். அவள் உங்கள் பெயரே அங்கு இல்லை என்கிறாள். ஒருவாறு கதைத்து உங்கள் பாக்கையும் விபரங்களையும் கொடுத்துவிட்டு இப்பதான் வீட்டை வந்தோம் என்கிறாள். 

சரி என்று போனை வைத்துவிட்டு அங்கே நின்ற தாதியை அழைத்து விபரம் சொல்லிக்கொண்டிருக்க இன்னொரு பெண் எனது பொருட்கள் அடங்கிய பையைக் கொண்டு வருகிறார். இந்தக்கட்டிலில் படுக்க முடியாமல் இருக்கு என்கிறேன். இங்கு கட்டில்கள் எல்லாம் நிரம்பியிருக்கு. அதனால் நடக்கவே ஏலாதவர்களுக்குத்தான் முதலிடம். உனக்கு ஸ்கானிங்க் எல்லாம் முடிந்த பிறகுதான் அதுபற்றிமுடிவு செய்வார்கள் என்றுவிட்டுப் போய்விட நான் தூங்காமல் அருகில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்க்கிறேன். 

 

தொடரும் இன்னும்........

  

  • Replies 110
  • Views 14.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க மிகவும் கவலையாக இருக்குது சகோதரி, ஆனாலும் எழுத்தில் உங்களின் வழமையான லொள்ளுக்கு குறைவில்லாமலும் இருக்கு.....எதுவாய் இருந்தாலும் நீங்கள் சீக்கிரம் குணமாகி சந்தோசமாக குடும்பத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.....!  

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் உங்களை கன்டதில் மிக்க மகிழ்ச்சி.இப்ப குணம் அடைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நலம்  பெற வேண்டுகின்றேன்

இப்படியான உறவுகளுடனான கதைகளில்  கூட தொடரும் என்று  எழுதுவதை தவிர்க்கவும்:

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் குணம் பெற வேண்டுகிறேன்..💐

  • கருத்துக்கள உறவுகள்

சுமேயை கண்டதில் மிக்க மகிழ்ச்சி, எப்படி இருக்கின்றீர்கள், உங்களை காணாமல் யாழ்களம் கழையிழந்துவிட்டது

 
  • கருத்துக்கள உறவுகள்

நலமுடன் மீண்டு வர வேண்டுதல்கள் அம்மணி. தைரியமுடன் இருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் கண்டதில் சந்தோசம்.நலமோடு இருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தொடரும் கண்டு பிடித்த ஆள் யாரோ தெரிய வில்லை.சரி தொடருங்கோ...

நான் உங்களை பல வழிகளில் தேடினேன் ஒன்றுக்கும் பதில் இல்லை..உண்மையாக எங்கயோ ஊர் சுற்றி பார்க்க போய் விட்டீர்கள் என்று தான் நினைத்தேன்..எது எப்படி இருந்தாலும் மீண்டும் கண்டது சந்தோசம்.. மறுபடியும் சொல்கிறேன் கண்டதையும் ஆக்கி சாப்பிடாதீங்கோ..

  • கருத்துக்கள உறவுகள்

நலமடைய வேண்டுகிறேன் 
இப்போ சுகமாக இருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்

சுமே அக்கா சுகமாகியிருப்பீர்கள் என நம்புகிறேன், நீங்கள் பல்லாண்டு நலமோடு வாழுங்கள்.

சுமே,  மீண்டும்  உங்களைக் கண்டதும்  மகிழ்ச்சியாக இருக்கின்றது.  நீங்கள் நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன். 

உங்களை மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி.வாசிக்கும்போதே கண் பனிக்கிறது.இப்போது சுகமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களிற்காக நான் இறைவனை பிரார்த்த்திக்கிறேன்..

கடவுளின் அருளால்  இப்போது சுகமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களிற்காக நான் இறைவனை பிரார்த்த்திக்கிறேன்..

சுமே அக்கா உசாராக எழுதுவதால் இப்போது குணமடைந்து விட்டீர்கள் என்ன நினைக்கிறேன். மகிழ்ச்சி. தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சுமே நீங்கள் பயந்தது போல் இல்லாமல் பூரண சுகமடைந்து யாழிற்கு வந்து உங்கள் அனுபவங்களைப் பதிர்ந்து உள்ளீர்களென நம்புகின்றேன். நலம் வாழ வாழ்த்துக்கள். இறைவனுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் அக்காவை காண்பதில் மகிழ்ச்சி  
நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுமே அக்கா,
வழக்கமான பாணியில் ஏதாவது குண்டக்கா எழுதி இருப்பீர்கள் என்று தான் வாசிக்கத்  தொடங்கினேன் ...
2, 3 பந்தி கடந்ததும் மனது சஞ்சலப்பட , கடவுளே இவை யாவும் கற்பனை என்றே முடியவேண்டும் என்ற வேண்டுதலோடு மிகுதியையும் வாசிக்கிறேன்...
உங்கள் நலனிட்கு இறைவனை வேண்டுகிறேன். 🙏🥺

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ அன்டி மீண்டும் கண்டது மகிழ்ச்சி 

நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

சுமே ஆன்ரியை மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி. கஷ்டங்களில் இருந்து மீண்டுவிட்டார் என்று நினைக்கின்றேன். டொக்டரின் கதை மிகவும் பரிச்சயமாக இருக்கின்றது!

வணக்கம். மற்றய உறவுகள் எழுதியதைப் போலவே  உங்களை தாக்கிய நோயிலிருந்து நீங்கள் மீண்டுவிட்டீர்கள் என்ற நம்பிக்கை உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது. வாழ்த்துக்கள். உடல் நலத்தை கவனித்து கொள்ளுங்கள். 🥦🍒🍅🥒🍊🍏

நோயில் இருந்து சுகமாகி மீண்டும் வந்தது மகிழ்ச்சி சுமோக்கா.

சுகத்தை கவனித்துக்கொள்ளுங்கள். இந்த வருடம் ஏன் தான் வந்ததோ என்று நினைக்குமளவிற்கு கவலையான செய்திகள் தான் அதிகம் வருகின்றது :(

எல்லோரும் நலத்துடன் வாழ இறைவனை வேண்டுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்ரி,

உங்களுக்கு முன் நோயாவது பேயாவது!

மீண்டு வந்தது, மீண்டும் கண்டது சந்தோசம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, suvy said:

ஆனாலும் எழுத்தில் உங்களின் வழமையான லொள்ளுக்கு குறைவில்லாமலும் இருக்கு....

அது இரத்தத்திலை ஊறினது....கொத்தாரும் லொள்ளுக்கு குறைஞ்ச ஆள் இல்லைப்போலை கிடக்கு 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை எழுதியிருக்கும் உறவுகள் சுவி அண்ணா, சுவைப்பிரியன்,விசுகு அண்ணா, புரட்சிகரத் தமிழ்த் தேசியன், உடையார், ராசவன்னியன் அண்ணா, குமாரசாமி,யாயினி,மருதங்கேணி ஏராளன், ஜெகதா துரை, நிகே, அபராஜிதன்,இணையவன், கண்மணி அக்கா, தனிக்காட்டு ராஜா,சசிவண்ணம், வாதவூரன், கிருபன், துல் ப்பன், தமிழினி,கோசான் ஆகியோர்க்கு மிக்க நன்றி. நான் நோயிலிருந்து மீண்டுவிட்டேன். 

Just now, குமாரசாமி said:

அது இரத்தத்திலை ஊறினது....கொத்தாரும் லொள்ளுக்கு குறைஞ்ச ஆள் இல்லைப்போலை கிடக்கு 😁

அத்தாரை லொள்ளுக்குக் குறைவில்லை. ஆனாலும் சிலநேரம் எரிச்சல் தான் வரும்.🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.